விடுவிக்கப்படாத வளவின் வேலிகளின் மேலிருந்து ஒரு பாடல்

என்னிடமிருக்கும் எல்லா ஞாபகங்களையும் இலகுவாக வீடொன்றிக்குள் அடைத்துவிடலாம். அல்லது என் ஞாபகங்கலெல்லாம் ஒரு வீட்டிற்குளிருந்தே உருப்பெறுகின்றன. செவ்வக தீப்பெட்டிகள் முறையற்று அடுக்கப்பட்டு வெவ்வேறு நிறமிடிட்டிருப்பதைப்போல அங்கங்கே முளைத்திருக்கும் வீடுகளின் நடுவில் உடல் முழுக்க ரவைகளால் துளைக்கப்பட்டு உலகை ஆயிரம் கண்கள் கொண்டு பார்க்கும் ராணுவக் குடியிருப்பொன்றே என் ஞாபகங்களின் இருப்பிடம் – வீடு. ஈரமான செம்மண் தரையில் உருளும் நான்கு சக்கரங்களின் கண்ணாடி யன்னல் வழி ஊதா நிற புகையாய் மிதந்தெழுகின்றன ஒன்றுக்கொன்று முரணான பார்வைகளும் ஞாபகங்களும். பெயர்த்தெடுக்கப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் என் நகரக் குடியிருப்பின் கீழ்க்கட்டடத்தின் முதிர்ந்த கதவு நிலையிலிருந்து தோன்றிய அந்துப்பூச்சி ஒன்று என் எதிரே ஆடும் நிழல் வெளியில் நின்று தன் சுதந்திரம் பற்றிப் பாடத்தொடங்கியது.

என்னால் நிச்சயமாக அந்தப்பாடலை செவிமடுக்க முடியாது. அவை என் மௌனமான இருப்பின் வயல் வெளிகள் தொலைவில் தொங்கும் லாம்பிலிருந்து மறைந்துபோன ஒளி பற்றிய பாடல். அவை மொழியற்று சொற்களற்று இசையற்று விரிந்துகொண்டிருந்தன. சதுரமான நிழல்வெளியை இன்னும் ஆழமாக உற்றுப்பார்க்கிறேன். அவ்வெளி உள்நோக்கி விரியும் ஆயிரம் அந்துகளின் அசைவிலிருந்து தூண்டப்படுகின்றது. என் நிலமே என்று உரத்துக்கத்துகிறது வயதுமுதிர்ந்த அந்தொன்று. தன் தோலின் சொரசொரப்பெல்லாமிழந்து விடுவிக்கப்படாத நிலத்தினைச் சுற்றி கொமாண்டோக் கம்பிகளின் மேல் நின்று விலாசமான விறாந்தையில் வரிசையாக அடுக்கப்பட்ட ஈரமான ராணுவக் காலணிகளைப் பார்க்கிறது. ராக்கைகளில் உதிர்ந்து கிடக்கும் ரவையையும் சுவர்களில் பூசப்பட்ட கரும்பச்சை சாயத்தையும் மாமரத்தின் மேல் அத்துமீறி இணக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் குடிலையும் பார்க்கிறது. தன் நிலத்தைக் காவல் செய்யும் அந்நியர்களைப் பார்க்கிறது. தன்னுடலைக் கிழித்தழித்த துப்பாக்கிகளை தானே காவல் செய்யும் உருக்குலைந்த வீட்டையும் பார்க்கிறது. ஆயிரம் கண்களிருந்தும் அழமுடியாத சுவர்களுக்காய் வயது முதிர்ந்த அந்து தன்னுள் அனலுகிறது. அவற்றின் கண்களிலிருந்து கிளர்ந்த வெப்பம் கூர்மையான ஊசியாய் காற்றைக்கிழித்து எதிரில் கம்பீரமாக நிறுத்திவைப்பட்டிருந்த துப்பாக்கியின் மரச்சட்டகத்தைக் கிழிக்க அந்தின் சுதந்திரம் பற்றிய பாடலின் முதற் கணம் தோன்றியிருக்கும்.

நிழல்வெளி ஒரு கணம் அணைகிறது. எல்லா அந்துக்களும் அவற்றுக்குப் பழக்கப்பட்ட இருட்டுக்குள் மூழ்கிப்போயின. ஒவ்வொரு ஒளிக்கீற்றிலும் கனமான ரேகைகளின் வலையமைப்பு கண்களுக்குள் படர்ந்தது. சேர்தலும் விலகுதலும். புகையும் சதையும் கலந்த திரட்சியொன்றிலிருந்து என் ஞாபகங்களின் விலகுதலுக்கான நாள் ஒன்றை நோக்கி விரைகிறேன். இறுக்கமும் கோபமும் நிறைந்த வெப்பமான பகல் பொழுதுகளையும் கண்ணீரும் விரக்தியுமான பனிக்கால இரவுகளையும் தடித்த நாவல்களையும் அணுகுகிறேன். உடலைச்சுற்றி தனிமையை மட்டுமே இருத்திக் கொண்டு உயிரை தலைக்கு மேல் எட்டமுடியாத அந்தரத்தில் வைத்துத் தூங்கிய விலக்குதலுக்கான நினைவுகள். விலகிய பின் பெயர் உருவம் அறியாத உயிரினங்களால் சூழப்பட்ட அந்நிய நிலத்தின் வெறுப்பான பார்வைக்கும் ஏளனமாக யோசனைகளுக்கும் கறுத்த திட்டான கழிவு வாய்க்காலுக்கும் நடுவில் ஒரு சிறிய ஒழுங்கற்ற கட்டிலின் மேல் மழைக்கால போர்வைக்குலிருந்து மீண்டும் வீடு சேர்வதற்கான நினைவுகள். வீடு சேர்த்தலுக்கும் விலகுதலுக்குமான கூடு. இருப்பவற்றாலும் இல்லாதவற்றாலும் நிறைவுற்றிருக்கும் அமைப்பு. மனிதர்கள், மிருகங்கள், தளபாடங்கள், உரையாடல்கள் என்று எல்லா அந்நியத்தையும் அகற்றிவிட தனித்திருக்கும் வீட்டிற்கென்று சில குணங்கள் இருக்கின்றன. அது சுவர்களின் அமைவுகளுக்கும் என் தனிமைக்குமான தொடர்பு. காற்றோட்டப்பாதைக்கும் என் சிந்தனைகளுக்கமான தொடர்பு. ஈரலிப்பான நிலத்திற்கும் என் வெற்று முதுகிற்குமான தொடர்பு. வீட்டின் ஒழுங்கும் என் ஒழுங்கின்மையும் மகிழ்ச்சியற்ற இசையாலான தடித்த வேர்களால் திரண்டிருக்கிறது. நிழல்வெளி தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் எவையும் மாறவில்லை. அதே வயதான அந்து அதே கொமாண்டோ கம்பியின் மேலிருந்து இன்னொரு அளவிலான ராணுவக் காலணிகளைப் பார்த்தபடியிருக்கிறது. அந்தப் பாடல் நிறைவுறுவதாயில்லை. அவற்றின் ஏக்கம் முதிர்வதாயில்லை.

அந்தின் இறக்கைகளுக்குப் பின்னிருந்த கண்ணாடி யன்னலை வெறித்தபடி நானிருந்தேன். என்னைச்சுற்றி திரும்புதல் பற்றிய ஏக்கம் இருந்தது. மீண்டும் நீலப் பூச்சிட்ட வீட்டையும் அதனுள்ளிருக்கும் எனக்கேயான இருட்டுக்குள்ளும் திரும்ப விரும்பினேன். என்றைக்கும் என்னை வெறுக்காத மௌனத்திற்குள்ளும் என்னைவிட குழப்பங்கள் நிறைந்த ஒழுங்கீனத்திற்குள்ளும் வாழ்க்கை பற்றிய எந்தப் புரிதலும் தேவையற்ற என் சூன்ய வெளிக்குள் திரும்புதல் பற்றிய எண்ணம் எனக்குள் ஊறத்தொடங்கியது. என்றைக்கும் திரும்ப முடியாதென்று தெரிந்தும் காத்திருக்கும் அந்தின் உருவம். பலமுறை திரும்பியும் என்றைக்கும் கிடைக்காத என் சூன்யவெளி. நிழல்வெளி எனக்குள் தொடர்ச்சியாக மிதந்தும் அமிழ்ந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னர் வேலியிடப்பட்ட வீட்டை நோக்கிய எனது பாடல் கண்முன்னே உடையும் நீர்குமிழிக்குள்ளிருந்து வெடித்துப்பரந்தது.