கலகக் குரலின் ஆன்மீகம். – குற்றம் கடிதல்.

கலகக் குரலின் ஆன்மிகம் என்ற தலைப்பில் கத்தார் பற்றிய குறிப்புக்களோடு இரா. திருநாவுக்கரசு காலச்சுவடு மே 2017 இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதில் கோவிலுக்கு செல்வதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதும் மத சார்பின்மை என்றவாறு கட்டுரையை நகர்த்தியிருப்பார். இது எவ்வளவு சதவீதம் உண்மை?
 
கடவுள் என்ற சக்தியின் திணிப்பு பிறந்தது முதலே எமக்குள் ஊட்டபடுகிறது. இன்று நாத்திகன் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் ஏதோ ஒரு காலத்தில் ஆத்திகராக இருந்து மாறியிருகிறார்கள். இது ஒரு நீண்ட புரிதலால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது குறுகிய வெறுப்பினால் ஏற்பட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும் தன் சுய விருப்பு வெறுப்பின் பெயரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அனுபவங்களின் முதிர்ச்சியே ஒருத்தனை ஆத்திகன் நாத்திகன் என்று வேறு பிரிக்கக் கூடிய ஒரே பொருள். எல்லோருக்கும் மேலும் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி ஏதோ ஒருவகையில் உலக இயக்கத்தில் பங்காற்றுகிறது என்பதையும் நம்புகிறோம். பிறப்பின் போதும் இறப்பின் போதும் உயிரின் உண்மையினை புரிந்துகொள்கிறோம். இவை எல்லாவற்றையும் ஒரு சக்தி இயக்குகிறது. அது இயற்கையோ கடவுளோ. ஒன்று உள்ளது.
 
ஒரு வேலைத்தளத்தில் மேலதிகாரிக்கு ஏதோ ஒரு வகையில் நாம் வணக்கம் செலுத்துகிறோம். அவரின் நிலை அதிகாரத்திற்கு மதிபளிக்கிறோம். அதே சமயம், அவற்றை கருத்தில் கொள்ளாது நடக்கின்ற ஊழியர்களும் இருப்பார்கள். ஆனால் இருவருமே ஒரே அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்த் தான் இயங்குவார்கள். இதில் முதலாமவர் ஆத்திகர் மற்றவர் நாத்திகர்.
ஆதிகால மனிதன் கல்லையும் மரத்தையும் இடியையும் மின்னலையும் இயற்கையையும் வணங்கினார்கள். கற்கள் காலம் செல்லச் செல்ல உருவங்களாக மாறத்தொடங்கின. தமக்கு ஏற்றவாறு கற்களை செதுக்கினார்கள். உருவம் கொடுத்தார்கள். வர்ணம் தீட்டினார்கள். அவர்களை மீறிய சக்தியை கொண்டாடினார்கள். அதுவே மதமானது. மனிதனின் சிந்தனை வளச்சியில் சிந்தனைகள் வேறுபட மார்க்கங்கள் பிரியத்தொடங்கின. பொதுமை மதம் பிரிவுக்குள்ளானது. மதங்கள் உருவாகின. மனிதனின் சிந்தனை இன்னமும் வேறுபட மதங்களை நிராகரித்தான். பின்னர் மதங்களின் உருக்களான தெய்வங்களை நிராகரித்தான். நாத்திகன் ஆனான். அவ்வளவே. இருப்பு இல்லை என்பது அவரவர் சிந்தனை வழியே.
 
இதில் ஆத்திக அடையாளபடுத்தல் என்றொரு விடயம் இருக்கின்றது. ஆத்திகனாக தன்னை பிரகடனபடுத்தியவன் அவனுக்குரிய மார்க்க அடையாத்தை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. அதை அவன் கட்டயப்படுத்துகிறான். இந்த நிகழ்வின் பின்னணி ஒரு மத பரப்பு கொள்கையாகவும் இருக்கலாம். கூட்டம் சேர்க்கும் நோக்கமாகவும் இருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவனுக்கு அடையாளபடுத்தல் அவசியமாகிறது.
 
கத்தாரின் கோவில் பிரவேசமும் அப்படியே.
 
 
கட்டுரையை வாசிக்க
இங்கே சொடுகவும்.

அடங்கிப்போகும் சலசலப்புகள் – கவிதா பாரதி

( 5.4.17 ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதா பாரதியின் கட்டுரைக்கான விமர்சனம்)
தலைப்பை பார்த்தவுடனேயே வாசித்துவிடவேண்டும் என்ற எண்ணம் உள்ளூறியது. “ஆண்பால் பெண்பால் அன்பால் ” என்று வெள்ளை , கறுப்பு , வெள்ளை என்ற வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது தலைப்பு. இந்த குறியீடு பெண்ணியத்தின் இருள்மையை நோக்கிய வழமையான கட்டுரை என்ற சலிப்பையும் ஏற்படுத்தவே செய்திருந்தது, பழக்கப்படாத எழுத்தாளர் வேறு – கவிதா பாரதி.
கதையையும் கருத்தையும் பின்னணியையும் தேக்க நிலை பெண்ணியத்தையும் அதன் தீர்வுகளையும் ஒரு சலனமற்ற நீரோட்டம் போல பின்னி பின்னி குழைத்து தந்திருக்கின்றார் கவிதா பாரதி. பாரதியையும் வள்ளுவனையும் உதாரணமாக ஆரம்பத்தில் எடுத்தாளப்படும் போது காலம் கடந்த இலக்கிய கட்டுரையோ என்றிருக்கும் போது அப்படியே சமகாலத்துக்குள் குதித்தது முகவுரை. மூத்த ஆண்மகனாக தன்னை சித்தரித்து கொள்ளும் சுய அனுபவக்கதையினூடு கட்டுரை விரிகின்றது. கிராமத்தில் காணப்படுகின்ற ஆண் பெண் சமத்துவமின்மை , ஒரு மூத்த ஆண்மகனை எப்படியெல்லாம் அல்லலுறச்செய்யும் என்ற நிதர்சன நோக்கு பாராட்டுக்குரியது. அந்த ஆணின் மனநிலை பிறழ்வுகள் என்பதை விட மனநிலை விரிவுகளை கூறும் இடங்களில் வாசகனின் தன்னிலை சார் உணர்வுகள் தூண்டப்படுகிறது. வாசிப்பில் என்னை படம்போட்டு கட்டிய உணர்வுநிலை தொடர்பை அது ஏற்படுத்தி இருந்தது.
பால்யத்தில் ஏற்படுகின்ற முதல் காதலையும் அதன் விறுவிறுப்பையும் பற்றிக்கொண்டு நகர்கின்ற கதையோட்டம் வழமையான காதல் கதைகள் கொடுக்கின்ற இழுவை நிலையை ஏற்படுத்தியது. இருந்தும் முடிவாக கூறவிழைந்த கரு மிக முக்கியமானது.
” காதலிக்கும் போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப்படுத்தினீங்க. அதுக்கு பிறகு அவன் வாழ்க்கையைத் தேடிப்போகும் போது அவனைக்கையை பிடிச்சு கூட்டிட்டு போகலேயே. தோற்றுப்போன மைதானத்துல அப்பிடியே விட்டுட்டுபோய்ட்டிங்களே ” என்று இறந்த நண்பனின் முன்னாள் காதலி அவளை சந்திக்கும் கதைசொல்லிக்கு கூறுவதை உலகத்துக்கு சில நுண்ணிய பொருட்செறிவுள்ள கருத்துக்களை விட்டு செல்கிறாள். இதில் வெளிப்படையான கருத்துக்களை விட உள்ளூர ஓடுகின்ற தன்னிலை நியாயப்படுத்தலும் நண்பர்கள் என்ற சக்தி தடப்பிறழ்வான நிலையை எதிர்கொள்ளும் பிழையான வழிப்படுத்தலுமே தென்படுகின்றது. துண்டாக ஒன்றை கூறுகின்ற படிம நிலையை அந்த கூற்று ஏற்படுத்துகிறது. தனிமையில் விளைகின்ற தூண்டுதலின்றிய எந்த உணர்வுக்கும் , சரியான தன்னிலை மருந்து கட்டாயம் இருக்கும் என்பதாகும்.
கதை சொல்லலில் ஏற்பட்ட சலிப்பை இந்த கரு ஓரளவு தாழ்த்திவிடுகிறது. காதலர்களை விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும் தன்மை ரசிக்கக்கூடியவாறு உள்ளது. பின்னால் அவள் கூறுகின்ற தன்னிலை நியாயப்படுத்தல்கள் இந்தியாவின் சமூக பின்னணியை காரணம் காட்டியும் பெண்மையின் விநோதங்களை காரணம் காட்டியும் தன்னை தப்பித்துக்கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டவை போல தென்படுகின்றது. தலைப்பை தாக்குகின்ற போக்கினை உண்டுபண்ணுகின்றன.
கதைசொல்லி அப்படியே தன்வயதினை குறைத்து கொண்டு அடுத்த அனுபவத்திற்குள் செல்லுகிறார். அதே வழமையான பேயோட்டும் கிராம பின்னணியில் கதை நகர்கிறது. கதை நகர்தலில் பாவிக்கப்படுகின்ற மொழியின் தன்மை வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான எந்த விரிசலையும் ஏற்படுத்தாமல் கூட்டிசெல்கின்றது.
” பிடிப்பவளாகவும் பிடிக்கப்பட்டவர்களாகவும் அவற்றை ஓட்டுபவர்களாகவும் பெண்களே இருந்தனர். ”
” சொல்லப்போனால் இன்றைய தேதியில் விரட்டப்படவேண்டிய பேய்கள் எல்லாம் வாழ்வது, கத்தியும் ஆசிட் பாட்டிலுமாக திரியும் ஆண்களின் உடல்களில் தான்.”
என்னதான் இருந்தாலும் இதில் பெண்களின் அடக்குமுறையிலிருந்து அவர்கள் மிகச் சரியாக மீள்வதாக கூறுகின்ற இடங்கள் உரசிப்பாக்க வேண்டியவை. இலங்கையில் ஏற்படுகின்ற பெண் தற்கொலைகள் எல்லாம் சரியான முடிவுகள் தானா என்று வாதம் உருவாக்குகின்ற போது எதிர்த்து ஆண் தற்கொலைகளை முன்வைப்பவர்கள் இரு பால் தற்கொலைக்கான பின்னணியை ஆராய்தல் உசிதமாகும்.
கட்டுரை ஒன்றின் உயிர்ப்பு புள்ளி தான் கட்டுரையின் தரத்தை தீர்மானிக்கும் என்பது எனது கருதுகோள். அந்த வகையில் இருவேறுபட்ட உணர்வுகளோடு ஒரே களத்தில் சலசலத்துக்கொண்டிருந்த இரு கோண பெண்ணிய நோக்கு போராட்டம் என்ற கடலுள் சேரும் போது அதன் சலசலப்பு அற்றுப்போய் , அது கொண்டுவந்த கருத்துக்குவியல்கள் சிதறடிக்கப்படுகின்றன. ஈழப்போரினை அனுதாப குறியீடாக்கி அதில் பள்ளி கொள்ளும் சமகால ஈன இலக்கிய பதிவுகளுள் பெண்ணிய போராட்டத்தை நிர்வகிக்கும் பெண் போரளிகளை மையப்படுத்திய நகர்வு கட்டுரையின் உயிர்ப்பு புள்ளியாக அமைந்துவிடுதல் சிறந்த கட்டுரைக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்துகிறது. முன் இரு கதைகளிலும் ஏற்பட்ட தொய்வு குறித்த விமர்சனத்திற்கு பதிலளிப்பது போல, முன் கதைகள் விறுவிறுப்பிற்காக எழுதப்பட்டவை அல்ல என்ற புரிதலை உருவாக்குகின்றன. காதல் , பற்றுதல் , போராட்டம் என மூன்று மனநிலை பதிவுகளையும் வரலாறுகளாக சுமந்துகொண்டு சமகாலத்துக்குள் நுழைகிறது நிறைவுரை.
சமகால போராட்டங்களுள் பெண்ணின் பங்கினை மரீனா போராட்டத்திலும் சாந்தன், பேரறிவாளன் , முருகன் மரணதண்டனை ரத்து சம்பந்தமாக கோயம்பேடு கல்லூரிமாணவிகள் போராட்டங்களை உதாரணப்படுத்தி உறுதிசெய்துகொள்கிறார். பெண்கள் இன்று இன்னும் போராட்டக்குணம் அதிகரித்தவர்களாக காட்டுகிறர். அப்படியே தலைகீழாக்கி பெண்ணின் பாதுகாப்புக்குள் ஒரு தந்தையாக தன மனநிலையை வெளிப்படுத்தி கட்டுரையை முடித்துக்கொள்கிறார்.
” இதே நேரம் திருவனந்தபுரத்தில் ஏதேனு ஒரு சாலையை கடக்கத் தயங்கும் என் மகளை , இதேபோல் பத்திரமாக அனுப்பிவைக்கும் ஒரு வாகன ஓட்டிக்கு செய்யும் பதில் மரியாதையாகவே இதை நான் கருதுகிறேன்.”
கூடவே அங்கங்கே இருக்கிற கவிதை வரிகள் என்பதை விட உணர்வெழுத்துக்கள். கட்டுரையின் போக்குக்கு இடையூறு தராத தகுதியான வரிகளை எழுத்தாளர் சேர்த்திருப்பது வாசிக்க பொருந்துதலாகின்றது. கப்டன் வானதி எழுதிய எழுதுங்களேன் என்ற கவிதை என்னை மிக பாதித்தது. அதிலும் இந்த வரி கூறும் துயரம் உச்சரிப்புகளை ஈரமாக்குகின்றன.
“ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வரமுடியவில்லை
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால் ”
கட்டுரையை முழுமையாக வாசித்த பிறகு கவிதா பாரதியின் எழுத்தின் மீதான பற்றுதல் உண்டாகிறது. வாசகனை வழிப்படுத்தி கருத்தை கொடுக்கும் பாணியை கைவரப்பெற்றிருக்கிறார். தொய்வுகள் அங்கங்கே தலைதூக்கினாலும் விடயப்பரப்பை சரியாக கையாண்ட விதம் அமர்த்திக்கொள்கிறது. நலமான விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய சிறு சிறு கருக்களை கட்டுரையெங்கும் சிதறவிடுகிறார்.சமத்துவ நிலை கட்டுரையாக இல்லாவிட்டாலும் பெண் என்ற தனி மனநிலை சித்திரமாக , அந்த தனி மனநிலை ஆழமான ஊடுருவல்கள் செய்ததில் கவிதா பாரதியின் ஆண்பால் பெண்பால் அன்பால் வாசிக்க சுவைக்கிறது.
04.04.2017