திருக்குறள் பக்கம் 02

வாகனங்களை உதாரணப்படுத்தல் என்பது மிக எளியவகை வெளிப்பாட்டுக்கான ஒரு யுக்தி ஆகும். வாகனங்களில் சொகுசு கார் பயணம் தான் மிக அருமையானது. பயணத்தில் இருவகையானோர் பங்குபற்றுகின்றனர். காரை ஓடுபவன் , அருகில் இருப்பவன். இருவர்க்கும் பௌதீக ரீதியில் அருகாமை என்ற ஒற்றுமை இருந்தாலும், மனதளவில் நீண்ட காத தூர இடைவெளி உண்டு. இதை இருநிலைகளிலும் இருந்து அனுபவித்தவர்களுக்கு புரியும். ஓட்டுநர் தனது ஐம்புலன்களையும் அடக்கி பாதுகாப்பு என்ற ஒரே அரணை தன்னை சுற்றி அமைத்து, தரிப்பிடம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். புலன் சிதறினால் கார் சிதறிவிடும், பின்னர் ரத்தம், உயிர் , அடுத்தவன் உடைமை என்று பலதும் சிதறும். எந்த கவனக்கலைப்பானிலும் மாட்டிக்கொள்ளாமல் பயணிக்கவேண்டும். ஓட்டுநர் செய்வது தவம். இன்பமான நாளாக இருந்தாலும் துன்பமான நாளாக ஒரே மனநிலைதான். தவக்கலைப்பு உயிர்ச்சேதம்.

ஆனால் அண்மையில் , ஒரு அடிதூர அருகில் இருக்கும் நபரின் எண்ணங்களும் பார்வைகளும் அப்பிடியே வித்தியாசமானது. அவன் சொர்க்க வாசி. எந்த மனப்பாரமும் இல்லாமல் , தன்னுயிர் இன்னொருவன் கையில் என்ற எண்ணம் கூட இல்லால் – எப்போதாவது நாம் யோசித்ததுண்டா ? , காரின் சொகுசுத்தன்மையையும் உலகின் சுந்தரத்தையும் சமாந்திரமாக ரசித்துகொண்டுவருவான். வீதியில் ஒரு மழலையின் சிரிப்பை கண்டோ அல்லது ஊனமுற்றஒருவர் திருவோட்டோடு அளவைத்தையோ கண்டு அவனின் மனம் சஞ்சலப்படப்போவதில்லை. அப்பிடியே பட்டாலும் நீடித்து இருக்கப்போவதில்லை. ஏன் என்றால் அந்த இருக்கை அப்பிடி. அவன் மேல் ஒரு சுமை கிடையாது.
இருவருக்குமான முரண் சுமை – இது அவர்களின் ஆசனத்தில் தங்கியுள்ளது.
நல்லவழி தீயவழி என்ற பாதைப்பிரிவும் இதை ஒத்ததே.
வாழ்க்கையோடு ஓட்டுனரையும் அருகில் உள்ளவரியும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் உங்கள் ஆசனத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியே தீர்மானிக்கிறது என்பது திண்ணம்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. ( குறள் 37 )
உன் ஆசனம் உன் வழியில் தங்கியுள்ளது.

திருக்குறள் பக்கம் 01

நாம் எல்லாரும் தேவைகளுக்கு உட்பட்டவர்கள். தேவைகள் என்றால் நிரந்தர தேவை தற்காலிக தேவை என்று விடலாம். இது வெளிப்படையான வாதம். மறுப்பில்லை. தேவைகளை நான் இப்படி பார்க்கிறேன் அல்லது வகைப்படுத்துகிறேன். உடனடி தேவை ஒன்று காலம் தாழ்த்தி நிறைவேற்றக்கூடிய தேவை மற்றொன்று. உடனடித்தேவைகளை நிறைவேற்றும் ஊடகம் எது என்பதெல்லாம் எமக்கு பொருட்டல்ல. உடனடித்தேவை கால அவகாசத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டியதொன்று. உதாரணமாக என்னிடம் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஒன்று உள்ளது. காரின் நிலை இன்றைய பொருளாதாரத்தை போன்றே. நிற்க மட்டுமே தகுதியுடையது. முன்னேற இல்லை. சில வேளைகளில் நிற்கும் போதே பஞ்சர் ஆகிவிடுவதும் உண்டு. ஒரு முறை என் ஊருக்கு அவசரமாக செல்லவேண்டிய கட்டாயம். அம்பாசிடரை அழுத்தி உதைத்து இழுக்க பண்ணிவிட்டேன். அம்பாசிடர் வேகம் அதீதமாக இருந்தது. தெரிந்தே பயணத்திற்கான நேர தேவையை விட ஒரு மணிநேரம் முன்னதாக ஆயத்தம் ஆகிவிட்டேன். நினைத்தது வழியில் நிறைவேறியது. அம்பாசிடர் உடன் நான் வீதியில் நாதியற்று போய் பஞ்சரான பின் சில்லை தனியாக மாற்றிக்கொண்டு , ஊருக்கு கொஞ்ச நேரம் தாமதமாக போய் சேர்ந்தேன். வழியில் எப்பிடியாவது ஒரு தரமான புதிய கார் வாங்கிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே மெதுவாக செலுத்தியதால் அந்த தாமதம். சரி விடயத்துக்குள் வருவோம் இந்த சந்தர்ப்பத்தில் எது உடனடி தேவை ? எது காலம் தாழ்த்தி செய்யப்படவேண்டிய தேவை ? சில்லை மாற்றவேண்டியது முதலாவது வகை , காரையே மாற்றவேண்டியது இரண்டாம்வகை. சில்லை மாற்றவேண்டிய உடனடித்தேவைக்கு காரை மாற்றியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து கொண்டு உதிரி சக்கரம் எடுக்காமல் வந்திருந்தால் என்ன நிலை. உடனடித்தேவைகளுக்கு நாங்கள் எங்களை தயார்நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிறிதோருக்கு கருத்துக்காக ஒரு உதாரணம். நான் வாழும் இடம் ஒரு பின்தங்கிய கிராமம். நகரத்துக்கோ கடைத்தெருவுக்கோ செல்லவேண்டும் என்றால் பலமணிநேரம் பயணிக்கவேண்டும். நான் ஒரு நோஞ்சான்.நான் தினமும் ஆஸ்துமா குளுசைகள் பாவிப்பவன். என் பொறுப்பின்மை நேற்றோடு மாத்திரைகள் முடிந்ததை நினைவுபடுத்திக்கொண்டு அதை வாங்கவில்லை. இன்று காலை அதிகமாக இழுக்க தொடங்கிவிட்டது. எங்கள் கிராமத்தில் இருக்கும் ஒரேயொரு பார்மசிக்கு என் அப்பாவை அனுப்பி மாத்திரை வாங்கிவரச்சொன்னேன். அவர் வெற்று கையுடன் திரும்பினார். அந்த பார்மசியில் எல்லாமே இருப்பதாகவும் அந்த மாத்திரை மட்டும் முடிந்துவிட்டதாகவும் கூறினார். பின்னர் நான் அயல் கிராம நோஞ்சானான என் நண்பனிடம் அனுப்பி வாங்கிக்கொண்டேன் என்பது வேற கதை.
இந்த இரண்டு கதைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரண்டு நுட்பமான கருத்துக்களை காவிச்செல்லுகின்றன.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. ( குறள் 13 )
உன் அவசர தேவையை நிறைவு செய்யாத ஒன்று உலகளவு இருந்தும் நீ பீடிக்கப்படுவாய்.