திருக்குறள் பக்கம் 12

இன்றைய சமூகம் இப்படி இருக்கலாம், இன்றைய அரசியலை இப்படி மாற்றலாம் , இன்றைய பொருளாதார முறைமைகளை இவ்வாறு சீர்செய்யலாம் , மனதை இதன் மூலம் தூய்மைப்படுத்தலாம் , இப்படித்தான் எழுதவேண்டும் , இதைத்தான் செய்ய வேண்டும் , இன்னும் இதை சேர்த்திருக்கலாம் என்று எண்ணற்ற கருத்துக்களை கொண்டோரை கொண்டமைந்தது தான் எமது சமூகம். பணக்காரன் ஏழை மத்தியஸ்தன் என்ற பேதமே இல்லாமல் எல்லோரும் ஆளுகின்ற சொத்துதான் இந்த இ னாவில் தொடங்கும் இம்சைகள். உலக அரசியலில் இருந்து ஆழ்மன சிருஷ்டிகள் வரை உள்ள பிரச்சனைகளுக்கும் நிதர்சனங்களுக்கும் எம்மவரிடம் மருந்து இருக்கும். உந்திவிட சொற்கள் இருக்கும். விசை இருக்காது.

எங்களை மாற்றிஅமைத்துக் கொள்ள அவர்களிடமும் எல்லா விதமான கருதுகோள்களும் இருக்கும். மிக வேகமான மிக இலகுவாக எங்கள் இலக்குகளை அடைய அவர்களிடம் சமன்பாடுகள் கொட்டிக்கிடக்கும். எம்மை புத்தனாக்கும் தத்துவாந்தங்கள் அவர்களிடம் விரிந்துபோய் இருக்கும். இது எல்லாமே சொற்களாய் காற்றிலும் காகிதத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
காற்றோ காகிதமோ சமன்பாடுகளைத்தான் சொல்லும், பிரதியீடுகளை அல்ல. உந்த விசை சொல்லில் இருக்கும் ஊதக்கூட முடியாத அவர்களின் சொற்களை கேட்டல் எளிது தீர்த்தல் கடிது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். ( குறள் 664 )
வாய்ச்சொல்லில் வலிதாவதெல்லாம் செயலில் நிறைவுறுவது எளிதல்ல.

திருக்குறள் பக்கம் 11

இன்று ஆனந்த விகடனில் வந்திருந்த ஜெமோ எழுதிய அசோகமித்திரன் பற்றிய அனுபவ பகிர்வுபோன்றதொரு கட்டுரையை வாசித்தேன். எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஒரு மனிதன் இவ்வளவு அவா வைக்கமுடியுமா என்று என்னை அசோகமித்திரன் என்னும் ஆளுமை வியப்படைய செய்திருந்தார். இந்த அவா கொடிய வறுமையையும் கண்டுகொள்ளாமையையும் தாண்டி பயணித்திருந்ததை எண்ணும் போது இலக்கியத்தில் இன்புறல் என்பது எவ்வளவு இனிமை என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
” போறச்சே ….. நர்மதா பதிப்பகம் போய் ‘இன்று’ நாவல் ஒரு காப்பி வாங்கிட்டு போங்க . யாருமே வாங்கிறதில்லேன்னு ராமலிங்கம் வருத்தப்பட்டார்.” – அசோகமித்திரன் ஜெமோக்கு.

அமி மறைந்த நாள் அன்று “நிறங்கள் குருட்டுத்தனமுள்ளவை.” என பதிந்திருந்தேன்.அவரின் வண்ணங்கள் எதுவுமே பணத்தை பார்த்தவை அல்ல.
எழுத்தாளருக்கு என்று மட்டுமல்ல அனைத்து துறை சார் வல்லுனர்களும் அப்படித்தான். சமாந்தர ஊதியம் தரும் ஆதாயம் இல்லை என்றால் வாழ்வு துன்பியல் தான்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. ( குறள் -374 )
ஏதோ ஒரு வண்ணம் எஅதோ ஒரு குருட்டுத்தனம் உடையது தான்.

திருக்குறள் பக்கம் 10

எங்கள் சமூகம் இப்படிகட்டமைக்கப்பட்டிருந்தது. உழவர்களை உயர் ஜாதியாக கொண்ட அமைப்புமுறை, மற்றையோரின் தேவை உழவனின் உழைப்பாக இருந்தது. அதனால் உழவனைக் கொண்டாடிய வாழக்கை முறை வழிவந்தவர்கள் நாம். உழவனை உயர் ஜாதிக்காரன் என்பதை சமூகப்பிரிவினை வாதத்தின் அடிப்படை என்று கூச்சல் இட்டால் அதில் உள்ள மடைமைத்தனம் தான் இன்றைய பிளாஸ்டிக் அரிசி பாவனைக்கு காரணம். உழவனை பின் தொடர்ந்தல் தான் மிக நிதர்சன தேவையாகும். பின் தொடர்ந்தல் என்றால் அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். முக்கியத்துவம் என்றவுடன் பத்திரிகையில் விவசாயி தூக்கில் தொங்கி பலி என முதல் பக்கத்தில் இடுவதோ விவசாயி சொல்லும் விவசாயம் என்று ஆய்வுக்கட்டுரை போடுவதோ அல்லது மட்டைகளை தூக்கிக்கொண்டு எதுக்கும் பிரயோசனம் இல்லாத போராட்டங்களில் இறங்குவதோ இல்லை. இன்றைய தமிழர்கள் எல்லாத்துறைகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கின்றோம். புறக்கணிக்கப்படுகின்றோம், என்ற கோஷம் இருந்தாலும் அடையவேண்டிய இடங்களை தாராளமாகவே அடைந்து விட்டோம். மாற்றங்களை எங்கோ தேடிக்கொண்டு இன்னும் பல்லுக்குத்தியவாறு அனைத்தையும் குறைகூறுகின்றோம்.

நான் சொல்லும் பின்தொடர்ந்தல் அதிகாரத்தால் செய்யப்படவேண்டும். இது ஒன்றும் கஷ்டமானது அல்லவே. நாங்கள் உதாசீனப்படுத்துகின்றோம்.
உலகின் வறிய சமூகம் விவசாய உற்பத்தியற்ற சமூகமே. எவ்வளவு காலம் இறக்குமதிசெய்யலாம்? ஏற்றுமதி செய்யும் நாடு தன்னிறைவு உற்பத்தியிலிருந்து தளர்வுறும் வரை. அதன் பின் ஏற்றுமதியும் இல்லை இறக்குமதியும் இல்லை.எந்த சமூகமும் உழுதுண்டு வாழ்வோரின் பின் தான்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.( குறள் 1033 )
உழவனின் பின்னே செல்ல வேண்டிய வாழ்வுதான் அர்த்தமானது.

திருக்குறள் பக்கம் 09

இன்றைய சமுதாயத்தில் ஒரு வித மனநோய் பரவலாக காணப்படுகின்றது. உலகில் உள்ள எல்லா மனிதர்களுமே சமமான படைப்புக்கள். யாரும் தங்கத்திலிருந்தோ வானத்தில் இருந்தோ அல்லது புத்தகங்களில் இருந்தோ பிறந்து வந்தது கிடையாது. உங்களுக்கு ஒரு இடத்தில் இருக்கின்ற உரிமை மற்றைய எல்லாருக்குமே இருக்கின்றது. இங்கு ஆண்டாள் அடிமை ஆட்சி நடக்கவில்லை. யாருமே யாருக்கும் பயந்தோ அடிபணிந்தோ செல்லத்தேவை இல்லை. உங்கள் எல்லாரின் உரிமைகளும் மீட்டு எடுக்கப்பட்டுவிட்டன. நாடுகளுக்கு இடையில் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாமை அல்லது போதாமல் இருக்கக்கூடும். அது அவரவர் வாழ்க்கைமுறை சம்பந்தமானது. நாட்டு பிரிவினையே இனப்பிரிவினையோ தனிமனித செயற்பாடுகளை பாதிக்கும் அளவு குறுகியது. ஆனால் ஒரே சமூகத்துக்குள் அதுவும் கற்றுஅறிந்த சமூகத்துக்குள் காணப்படுகின்ற பிரிவினைப்போக்கு மிக ஆபத்தானது. தனிமனித செயற்பாடுகளை முடக்கும் அளவு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. எங்கள் சமூகம் கல்வியியலாளர்களை பின்பற்றும் சமூகம். அவர்களின் முடிவுகளில் செயற்படுகளிலும் அளவுகடந்த நம்பிக்கையை உருவாக்கிக்கொண்ட சமூகம். அவர்களின் அனைத்து தேவைகளும் கல்வியியலாளர்களினூடு தான் நிறைவேற்படுகின்றது. சரியோ பிழையோ அவர்களையே நம்புகின்ற கட்டமைப்புக்குள் வந்துவிட்டோம். இந்த போக்கை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
மாறுதலாக மாறவேண்டியது வழிநடத்தும் சமூகமே.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (குறள் 997 )
அறமற்ற அறிவார்ந்தோர் அஃறிணைகள் தான்.

திருக்குறள் பக்கம் 08

தங்கி வாழும் முறை தான் அனைத்து உயிரினங்களினதும் வாழ்க்கை முறையாக இருந்துகொண்டிருக்கிறது. நான் யாரையும் சாராதவன் என்று யாராவது சொன்னால் அது அவர்களின் மூடத்தனத்தின் உச்சம். உலகில் எந்த சக்தியும் தனிமையானது அல்ல. பௌதீக உலகின் சக்திகள் எல்லாமே சோடியாக்கப்பட்டவை. மனித சக்தியும் அவ்வாறே. படைக்கப்பட்டபோதே சோடியாக படைக்கப்பட்டதன் சூட்சுமம் மனிதன் தனிமையை எதிர்கொள்ளமாட்டான் என்பதுவே. பலர் தாங்கள் தனிமையில் உழல்வதாக கூறுகின்றார்கள். அவர்களது தனிமை என்ற சொல் ஒதுங்கி என்ற பொருள் கொள்கிறதே ஒழிய தனிமை என்ற நிஜப்பொருளில் வருவதில்லை.

உலகத்தில் உள்ள எல்லோரும் எல்லோரிலும் தங்கியிருக்கிறோம். தனிமைப்பட்ட யாருமே இல்லை. தங்கியிருத்தலில் மிக அதிகமாக தாக்கம் செலுத்துபவர்கள் அவரவர் குடும்பத்தினர். அடுத்தது நண்பர்கள் பின்னர் உறவினர்கள் என விரித்துக்கொள்ளலாம். தங்கியிருத்தல் என்ற நிலையில் பிரச்சனைகளும் உருவாக்கிக்கொள்கிறது. உருவாக்கிக்கொள்கிறோம். அந்த சிறு விரிசல் பகைவர் என்று சிலருக்கு முகமூடி போட்டு அவர்களிலும் எங்களை தங்கவைத்து கொள்ள செய்கிறது. அவர்களது முகமூடியில் ஒரு கொடூரனின் படமோ அல்லது அழுக்கின் படமோ வரையப்பட்டிருக்கும். இந்த விரிசல் நமக்கு தெரிந்ததே. இதனால் அவர்களிடம் இருந்து விலத்தியும் நாம் சாரும் அளவை குறைத்தும் கொள்வோம். அவர்களது நடவடிக்கைகள் எமக்கு முக்கியமாகிப்போகும். இருந்தும் நாம் அவர்களிடம் தங்கியிருப்போம்.
சில விரிசல்கள் எங்கள் கண்களுக்கு புலப்படாது. ஊசியளவு விரிசல் தான் மெல்லியது , கூர்மையானது. எம்மால் அதை இலகுவாக விலத்திக்கொண்டு வந்துவிட முடியும்.ஆனால் அந்த குண்டூசியளவு விரிசல் எம்மை பின்தொடர்ந்துகொண்டே இருக்கும். தன்னை இன்னும் இன்னும் கூர்மையாக்கிக்கொண்டு. அவர்கள் முகமூடிஅணிந்து இருப்பார்கள். நிஜ முகத்திலேயே. நாம் அவர்களை அதிகமா சார்ந்திருப்போம். அவர்களின் செயல்கள் எல்லாமே நம்மை வலிமைப்படுத்துவதாகவே தெரியும். அவர்கள் வலைவிரித்துக்கொண்டிருப்பார்கள்.
நேற்று மாலை சிகை அலங்கரிக்கும் இடம்,- இனி சலூன் க்கு சென்றிருந்தேன். அங்கு எனக்கு நேரே தொலைக்காட்சியில் கவண் திரைப்பட விளம்பரம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சவரம் செய்துகொண்டிருந்த தொழிலாளி என்னிடம் கே வி ஆனந்த் படங்களில் பெரும்பாலும் கூட நாயகனுடன் கூட இருப்பவர்கள் தான் வில்லனாகிறார்கள் என்றார். நான் உடனே நிஜத்திலும் அது தானே என்று பேச்சை முடித்துக்கொண்டேன். ஏன் என்றால் என் உயிர் அவர் சவர கத்தி விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. இந்த உரையாடல் அப்போது பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் கழித்து இதை யோசித்து பார்த்தேன். நிஜமும் அது தானே.
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.( குறள் 882 )
பகைவன் முன் முதுகை காட்டியாவது உறவினர் முன் நெஞ்சை காட்டு, விழித்திரு.

திருக்குறள் பக்கம் 07

நிலைத்து நிற்றல் அல்லது முன்னேறல் என்பதற்கு இரு விடயங்கள் ஆதாரமானவையாக இருக்கின்றது. ஒன்று தன்னிலை மற்றது தளம். ஒன்றன் மீது ஒன்று வலிய பிணைப்பை கொண்டவை. முன்னேற்றம் என்பது இரண்டு எருது கட்டி இழுக்கும் உருள் வண்டி போன்றது. ஒரு எருது முன்னேறி மற்றது வில்லங்கப்படுத்தியது என்றால் வண்டி உருளாது. எவ்வளவுதான் தன்னிலையில் நின்று உந்தினாலும் முன்னேற்றம் வராது. அதையும் மீறி தளத்தின் பக்குவம் அறியாமல் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியும் வீழ்ச்சிக்குரிய அடிகளே. வலிமையான தளத்தை தேர்வுசெய்தல் என்பதும் இங்கே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. தனிமனித ஆளுமை எவ்வளவு வீரியமாகவும் உள்ளடக்கம் மிக்கதாகவும் இருந்தாலும் அதை தாங்கும் தளத்தின் மீது தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. மரமேறும் மிருகங்களுக்கு ஒரு குணமுண்டு , மரத்தின் கிளைகளில் வலிமையான கிளையை பிடித்தே தங்கும். அவை தளத்தின் மீது நேர்த்தியானதும் ஆழமானதுமான பார்வை கொண்டவை. மனிதன் அவ்வாறான ஒரு பார்வையை தன் தளத்தின் மீது வைக்க தவறிவிடுகிறான். இதுவே அவள் நோக்கங்களை அடைய தவறுவதற்கும் ஒரு காரணம். ஒரு தளத்தின் கொள்ளளவுக்கு மீறிய உட்செலுத்தல் விரயமானதே. வெற்றியடைந்தவர்கள் தாங்கள் தங்கும் தளத்தினை விவரமாக உற்றுநோக்கியவர்கள்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். ( குறள் – 476 )
முன்னேறுவதற்கு பாதை அமைக்காமல் முன்னேற முயல்வது அசாத்தியமான செயலாகும். விளைவுகளும் சீற்றமுடையதாய் இருக்கும்.

திருக்குறள் பக்கம் 06

ஒரு நாள் அந்தியில் தொடங்கியிருந்தது அந்த விவாதம். இத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் யாருமே அறிந்திருக்கவில்லை. புத்தியீவிகள், விஞ்ஞானிகள் , எழுத்தாளர்கள் , பாமரர்கள் , குழந்தைகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் மேட்குலம் கீழ்குலம் என்ற பேதமே இல்லாமல் கலந்துகொண்டார்கள். மரங்களும் விலங்குகளும் , அஃறிணைகளும் கூட. தத்துவங்களும் விஞ்ஞான முடிவுகளும் சித்தர்தாமும் மதமும் அனுபவங்களும் எல்லாமே கொண்டுவரப்பட்டு தத்தம் பக்க சார்பான கருத்துக்களை அள்ளி எரிந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் முடிய இன்னொருவர் , அவரைத்தொடர்ந்து வேறுவர் என நிறுத்தம் இல்லாத யுத்தம் நடந்துகொண்டிருந்தது. நாள் செல்ல செல்ல குரல்களின் வலிமை குன்றியது, பொருட்செறிவும் கூட. வன்மம் குடிகொண்டது. கைகளும் பின்னர் ஆயுதங்களும் பேச தொடங்கின. எல்லாம் முடிந்து ஓய்ந்து போயிருந்த நாள் அது. மழையின் பின்னான சாரலைப்போல முணுமுணுத்துக்கொண்டு எல்லோரும் பிரிந்து சென்றார்கள். கொஞ்ச நாட்களில் அவர்கள் இதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாட்கள் ஓட ஓட அவர்கள் இந்த நிகழ்வையே மறந்து பொய் விட்டார்கள். வரலாறும் ஆன்மாவின் இறுதி நிலை ஆரூபமா உருவமா என்ற விவாதத்தை மறந்து போனது. ஆனால் அவ்விவாதத்தில் எடுபடா பேச்சாயிருந்த ஒருத்தனின் குரல் மட்டும் இதுவரை ஒலித்துக்கொண்டிருந்தது.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. ( குறள் 336 )
இதுவும் அழிந்து போகும் , படைக்கப்பட்ட எல்லாமே , படைப்பாளியும்.

திருக்குறள் பக்கம் 05

கோபம் என்பதை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல் வேறு எதையும் வெளிப்படுத்துவதில் உள்ளதை விட கஷ்டமானது. பொதுவாகவே உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருத்தல் என்பது எல்லோராலும் செய்துவிடமுடியாத ஒரு செயல். எளிதானதும் இல்லை. எந்த உணர்வையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமா என்றால் இல்லை. கட்டுக்குள் வைத்திருத்தல் , குளக்கட்டை எடுத்து கொள்ளவோம். குளத்திற்குள் நீர் தேங்க தேங்க கட்டு கட்டுப்படுத்திக்கொள்ளும், ஒரு எல்லை வரை. எல்லையை தாண்டிய பிறகு நீர் பாய்ந்து ஓட்டிச்செல்லும். இது கட்டை தாண்டிய நிலை. குளத்து நீர் கட்டிற்குள் நிற்கும் வரைதான் வெள்ளாண்மைக்கோ பயனைப்பெறக்கூடிய எதோ நல்ல விடத்திற்கோ. கட்டை தாண்டிய நிலையில் ஒன்றுக்கும் உதவாத கடலுக்குள் அடங்கி போகும். எதுவுமே கட்டுக்குள் இருக்கும் போது தான் சிறப்பு.
நீரின் அழகே கட்டைத்தாண்டிய பிறகு கெட்டு விடும் என்றால் உணர்வுகள் , உணர்வுகளை தாங்குகின்ற மனிதன், உணர்வுகளும் கட்டுக்குள் இருக்கும் போது தான் உயர்வு.  உணர்வுகளில் மனிதனை மீறிய ஒரு நிலையை அடையவைக்கும் சக்தி கோபத்துக்கு இருக்கிறது.  விஞ்ஞான ரீதியில் மனித மூளைக்கோளத்தில் amygdala என்ற உறுப்பு உணர்ச்சிகள் , அதன் நடவடிக்கைகள், அதற்கான ஊக்கம் என்பவற்றை உருவாக்குகிறது. இந்த செயன்முறையின் போது ஏற்படுகின்ற உணர்வு பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக சுரக்கின்ற epinephrine மற்றும்  norepinephrine  நொதியங்கள் இரத்தத்தை போக்கை அதிகரிக்கின்றது. இரத்தம் வேகமாக முகம் போன்ற பகுதிகளுக்கும் முக்கியமாக ப்ரீஃபிரன்டல் புறணி (இடது கண்ணின் மேல் என்று மூளையின் பகுதி)  இடத்திற்கு விரையும். இப்பகுதியின் செயற்பட்டு முடிவுகளை கட்டுப்படுத்தவும்  கோபத்தில் இருந்து நம்மை விலக்கவும் உதவும்.  இச்செயற்பாடுகள் அனைத்தும் இரண்டு செகண்ட்களுக்குள் நடைபெற்று முடிந்துவிடும் . இந்த இரண்டு செகண்ட்களுக்குள் உந்தப்படும் நாம் விபரீதமான செயல்களை செய்துவிடுகிறோம். இதனால் தான் கோபம் வரும் போது தண்ணீர் குடிக்கவோ அல்லது பத்துவரை எண்ணவோ கூறுகின்றார்கள் பெரியவர்கள்.
கோபம் எல்லாருக்கும் வரும். அதை சரியான வழியில் திசைப்படுத்த தெரியாதோர் தான் அதிகம். தவறான திசைப்படுத்தல் பலவழிகளில் நடந்தேறுகிறது. அதில் மிக கொடிய வழி வன் சொற்பிரயோகம். கோபத்தை நிர்வகிக்க முடியாமல் பல வழிகளில் வெளிப்படுத்துவோரில் ஆக கொடிய வழியை தெரிவு செய்வோர் கடுஞ்சொற்களை பிரயோகிக்க எத்தணிப்போர், பிரயோகிப்போர். கோபத்த்தால் சொல்லப்படுகின்ற சொற்கள் சூடு தழலை போன்றது. சொல்லுகின்ற சந்தர்ப்பம் சரியோ பிழையோ சொற்களை உள்வாங்கியவர் உகந்தவரோ இல்லையோ ,சொல்லப்பட்ட சொற்கள் மற்றவரை அடையும் போது அதன் வலிமையான தாக்கம் பலகாலம் ஆனாலும் மாறாத வடுவாக இருந்துகொண்டே இருக்கும்.  அவர்களின் நியாயம் இப்பிடி இருக்கும், கோபத்தில் தன்னிலை அறியாமல் பேசிவிட்டேன். இதை எல்லாவற்றையும் விட கொடுமை பின் நவீனத்துவம் என்ற பெயரில் சரளமாக உச்சரிக்கப்படுகின்றதும் எழுதப்படுகின்றதுமான கடும் சொற்கள். அந்த சொற்களின் அசாத்திய வலிமை தெரியாமல் பேசப்பட்டு விடுகின்றன. நண்பர்களுக்குள் என்றும் , இது தான் இலக்கிய மொழி என்றும் இன்று சகஜமாகிப்போன கடும்சொற்பிரயோகம் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். ( குறள் 139 )

மறந்தேனும் கூறிய கடும் சொற்கள் , நல்ஒழுக்கத்திற்கு எதிரானது. நல் ஒழுக்கம் உள்ளோர் மறந்தும் அதை பாவிக்கார்.

திருக்குறள் பக்கம் 04

எல்லாருக்குமே உண்மையாக இருக்கவேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். இருந்தும் சந்தர்ப்பங்கள் இந்த ஆசையை தொடர்ந்து பேண உறுதுணையாக இருப்பதில்லை. அதை எதிர்த்து உண்மையாகவே இருந்துவிட்டாலும் நிறைவேற்றவேண்டியவற்றை நிறைவாக முடிக்க முடியாத அல்லது உரிய காலத்துக்கு முடிக்க முடியாத நிலை ஏற்படும். கைக்கொண்ட காரிய செம்மை குறைவுறும்.இதனால் உண்மையாக இருத்தல் என்பதை  சில முக்கிய தேவையான இடங்களில் தளர்த்துதல் குற்றம் என்பதை மீறி அத்தியாவசியம் ஆகிறது. ஆனால் அளவுக்கு மீறிய தளர்த்தல் பிரச்சனைகளையும் உருவாக்கும். உலகின் மிக முக்கியமான அழிவுகளுக்கும் அதே போல் மிக முக்கியமான வெற்றிகள் கண்டுபிடிப்புகளுக்கும் சிறிய மெய்ப்பிறழ்வுகளே காரணம். நீங்கள் சொல்லும் பொய் எதைநோக்கியது என்பதைப்பொறுத்து தான் அழிவோ ஆக்கமோ.
உங்கள் நிலை  அந்த சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளவேண்டிய முறை என்பன தான் உங்கள் சொற்களை தீர்மானிக்கும். தளர்வுற்ற வாய்மை -அதுவே பொய் , குற்றம் இல்லாத நம்மையே ஏற்படுத்துமாயின் அதுவும் வாய்மையே என்கிறார்கள்.இருளைத்தாண்டித்தான் ஒளியென்றால் , இருளை கடந்து செல்லல் குற்றம் இல்லை.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். ( குறள் 292 )
பொய் , உண்மையை நிலைநாட்டுவதாயின் அதுவும் மெய்யே.

திருக்குறள் பக்கம் 03

சேமிப்பு என்பது செலவழிப்பு என்பதன் முன்னாயத்தம் ஆகும். உலகில் எல்லோரும் ஒரு காரணத்துக்காய் சேமிக்கின்றோம். எதை எல்லாம் சேமிக்கின்றோம் , பணம் ,பொருள், பதவி ,அன்பு ,ஆசை ,பழி , அறிவு, உறவு . இதில் பெரும்பாலான சேமிப்பின் இலக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுதல் என்பதாகவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியாக இருந்துவிட முடிகிறதா? சேமித்த எல்லாம் உங்கள் வாழக்கை முழுவதையும் மகிழ்ச்சியாக நிரப்ப வழி செய்கிறதா ? என்றால் இல்லை.  மாளிகையில் இருப்பவன் மடத்தில் இருக்கும் அமைதியையும் தனிமையையும் பார்த்து ஏங்குகிறான்,- இல்லாமலும் இருக்கலாம். அங்கு அவன் சேமித்துவைத்த அனைத்தும் பொய்த்து போகிறது. ஏழையாக இருப்பவன் மாளிகையில் இருப்பவனின் ஆடம்பரத்தை பார்த்து வியந்து போகிறான். அங்கேயும் எல்லாமே பொய்த்து கொள்கிறது. அப்போது ஒரு சாரார் சேமித்த பணம் பொருளும் மாரு சாரார் சேமித்த அன்பும் உறவும் வெற்று சேமிப்பு தானே. பருப்பு இல்லா வெறும் கச்சான் கோது.
இரண்டு பெரிய செல்வந்தர்கள் உலகை இரு வெவ்வேறு திசைகளில் சுற்றிவருவதற்க்காக பணம் பொருள் எல்லாவற்றோடும் புறப்படுகிறார்கள். இருவரது செல்வமும் பாதிவழியிலேயே செலவழிந்து விடுகிறது. ஒருவர் செல்வமெல்லாம் இழந்து வறுமையிலும் நோயிலும் வாடி இறந்து போனார்.மற்றவர் அவரின் சமாதிக்கு ஒரு பெரும் தாராள மக்களுடன் வந்து சேர்கிறார். அந்த சம்மதியில் இருந்து எழுந்த குரல் , எப்படி நீ மட்டும் தப்பினாய் என்று கேட்டது. அதற்கு அவர் நான் கொண்டு சென்ற செல்வமெல்லாம் பாதியில் ஒழிந்தது. நான் அங்கே சேர்த்துவைத்த செல்வங்கள் மட்டுமே என்னை இங்கு வரை அழைத்துவந்து இனியும் அழைத்து செல்லும் என்று கூறினார்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. ( குறள் -39 )
அறம் செய்வதால் வருவதே நிறைந்த செல்வம் , மகிழ்ச்சியின் ஆதாரம். மற்றன எல்லாம் வெறும் பருப்பற்ற கோதுகளே.