நன்பெரியல் குறிப்புகள் 01 – 08

01. முதல் நாளுக்கு முன்னைய நாட்கள்

சில கிழமைகளுக்கு முன்னர் காலியில் உள்ள ருமசலவிற்கு சென்றிருந்தேன். காடுகள் மலைகளின் நடுவே அமைந்த அழகிய கடற்கரை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் உப்புத்தண்ணீரில் ஊறினேன். அதிகளவான கூட்டம் இல்லாத கடற்கரை. அதே நாளில் தான் கொழும்பு உட்பட மேற்குப் பக்கம் தாழ் அமுக்கமும் கடும் மழையுமாக இருந்தது. இது எதுவுமே அறியாமல் பளிங்கு நீரின் மேல் நீந்தத் தெரியாமல் மிதந்துகொண்டிருந்தேன். அதற்கு அடுத்ததாக இந்த மாதம் 26 , 27களில் பலாங்கொடைக்கு அடுத்திருந்த நன்பெரியல் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். நன்பெரியல் செல்லுவதற்கான திட்டம் ருமசல போய்த் திரும்பும் வழியிலேயே முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனியான வாட்சப் குழுக்கள் திறந்து தீவிரமாக திட்டங்கள் தீட்டினார்கள். துரதிஷடவசமாக எனக்குச் சிங்களம் தெரியாததால் அவற்றில் பங்குபற்ற முடியவில்லை. கூடவே திட்டமும் விளங்கவில்லை. 25, 26 என்றிருந்தது பின்னர் 26, 27 ஆக மாற்றினார்கள் என்று அறியத்தந்தார்கள். பொருட்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு வீட்டிலிருந்து 25ஆம் திகதி இரவு கொழும்பு புறப்பட்டு அடுத்த நாட் காலை பெட்டா புகையிர நிலையத்தில் இறங்கி பின்னர் மஹரகம சென்று அங்கிருக்கும் சில நண்பர்களோடு நேராக பலாங்கொடை பயணிப்பதே திட்டம். வவுனியாவிலிருந்து பலாங்கொடைக்கு தனியாக பேரூந்து அல்லது புகையிரம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்த் தான் இப்படியான சுற்றுப் பாதை.
எப்போதும் போல இரவு பத்தே முக்காலுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்ற குளிரூட்டப்பட்ட பேரூந்தில் வவுனியாவில் நின்று ஏறுவதாக திட்டம். சாதாரண பேரூந்தில் அல்லது புகைவண்டியில் அதிக தூரம் பிரயாணம் செய்வது எனக்கு மிகவும் கஷ்டம். தினகரன் பேரூந்திற்கு முன்கூட்டியே தொலைபேசியில் அறிவித்துவிட்டு பத்தே முக்காலுக்காக காத்திருந்தேன். சரியாக நான் ஏறுகின்ற இடத்திற்கு பத்தே முக்காலுக்கு வந்துவிடும். நான் அவ்விடத்திற்கு பத்தரைக்குச் சென்றுவிடுவேன். பத்து இருபது போல பேரூந்து நடத்துனர் தொலைபேசியில் தாண்டிக்குளத்தைக் கடந்துவிட்டதாகச் சொன்னார். தாண்டிக்குளத்திற்கும் நான் ஏறுகின்ற இடத்திற்கும் இடையில் இரண்டு கிலோமீட்டர் தூரம். நெஞ்சு முழுக்க படபடக்கத் தொடங்கியது. எவ்வளவு வேகமாச் சென்றாலும் பிடித்துவிடமுடியாது. போய் விட்டது என்றால் சாதாரண பேரூந்திற் தான் போகவேண்டும். அவசர அவசரமாக விடைபெற்று மாமாவுடன் ஏறுகின்ற இடத்தை அடைத்தேன். அங்கே எப்போதும் போல சிலர் பேரூந்துகளுக்காக காத்திருந்தார்கள். அவற்றுள் எனது பாடசாலை நண்பனும் அம்மாவோடு நின்றான். பதபதைப்போடு இறங்கி அவனிடம் நலம் கூட விசாரிக்காமல் தினகரன் போய்விட்டதா என்றேன். இல்லை என்றான். நிம்மதியாக இருந்தது. ஒரு வேளை அவன் கவனிக்கத் தவறிய கணம் ஒன்றில் மின்னல் வேகத்தில் கடந்திருந்தால்? இருக்காது. அவனிடமோ அம்மாவிடமோ பேசச் சந்தர்ப்பதைத் தராமல் பேரூந்து வந்து சேர்ந்தது இரண்டு மூன்று நிமிடங்களில். பத்து முப்பத்தைந்து வரும். இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். குறிப்புகள் எடுக்கவும் சரியான ஒழுங்கில் நிகழ்வுகளைக் குறிக்கவும் குறிப்புப் புத்தகம் ஒன்றைக் காவிச்சென்றேன். ஆனால் எழுத ஒன்றும் கொண்டுபோகவில்லை. அங்கே கடைகளிலோ நண்பர்களிடமோ வாங்குவது கடினமான காரியம் இல்லை. இருந்தும் வாங்கவில்லை. அதனால் அங்கங்கே சிதறியும் உருக்குலைந்து குறிப்புகள் வரலாம்.
பேரூந்து ஓட்டுநர் வழமையானவர் இல்லை. ஒருவேளை ஓமந்தையை தாண்டிக்குளம் என்று நினைத்துச் சொல்லியிருப்பாரோ? ஓமந்தை தாண்டிக்குளத்திலிருந்து 11 கிலோமீட்டர் முன்னால் இருக்கின்றது. நான் பின்னால் இருந்த இருக்கை ஒன்றிற்ப் போய் இருந்து குளிர்ச்சட்டையையும் தலைக்குள்ளவையும் அணிந்தேன்.

 

02. மாற்றுத் திறனாளிகளும் நம்பிக்கைத் துரோகமும்

பேரூந்தின் கடைசி ஐந்து இருக்கைகளிலும் சாவகாசமாக நித்திரை கொண்டபடியே அடுத்தநாட் காலை மூன்று முப்பதிற்கு பெட்டா புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். கொழும்பு நகரிற்குள் பெரும்பாலும் பேருந்துகளில் சன நெரிசலாகவே இருக்கும். ஆனால் அதிகாலைப்பொழுதில் அப்படியில்லை. இரண்டு மூன்று முறை மொறட்டுவைக்கு அதிகாலையிற் போன அனுபவம். 138ற்க்காக காத்திருந்தேன். நினைத்ததை விட புகையிர நிலையத்தில் சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. என்னிலிருந்து சிறிய தூர இடைவெளியில் வாய்பேசாத காது கேட்காத ஐவர் சைகைகள் மூலம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் வித்தியாசமான முறையில் உடுத்தியும் தலைமுடியை நிறம் தீட்டியுமிருந்தார்கள். என்னருகில் அழகான இளம் பெண்ணொருவர் தனது பயணப் பையுடன் உறவினருக்காக காத்திருந்தார். அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் மூலம் அரை குறையாக விளங்கிக்கொண்டேன். ஐவரும் எனக்கருகில் வந்து மெதுவாக சைகைகள் மூலம் அருகில் நின்ற பெண்ணை வம்பிழுக்கத் தொடங்கினார்கள். அப்பெண்ணின் கண்களில் பயம் தெரிந்ததது. அதைவிட அதிகமாக எனக்குப் பயமாக இருந்தது. என்னைப் பார்த்து உதவுமாறு வேண்டுவதாக கண்கள் பேசின. என்னை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கினார். அதற்குள் காலி – கொழும்பு பேரூந்து வர ஐவரும் பாய்ந்து ஓடி ஏறினார்கள். அவர் குனிந்து பயணப்பையை நிமிர்த்திய போது தான் உணர்ந்தேன் – போகும் போது அந்தக் காவாலிகள் அவரின் பயணப்பையை எத்திவிட்டு ஏறியிருக்கிறார்கள். நான் மன்னிப்புக்கூற அவரை நோக்கித் திரும்பினேன். அவரின் கண்கள் பணித்திருந்தன.

முன் கண்ணாடியில் பனி படர்ந்திருக்க 138 வந்தது. 138 இன் உள்ளே ஏறவே பெரும் கூட்டம் பாய்ந்துஅடித்து வந்தது. அடப்பாவிகளா இத்தனை நேரம் எங்கிருந்தீர்கள் என்று நினைத்துக்கொண்டு நெருக்கி ஏறினேன். இடமே இல்லாமல் மிகவும் நெருக்கமாக நின்றோம். அதிகாலையில் எப்போதுமே சில இருக்கைகள் காலியாக இருக்கும் என்ற மனஎண்ணத்தை மாற்றிக்கொண்டேன். மஹராகமவிற்கு ஒரு பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு கூகிள் வரைபடத்தை திறந்தேன். வேலை செய்யவில்லை. முன்னர் மஹரகமவிற்குப் போன அனுபவமும் இல்லை. வீதியில் பெரிய வெளிச்சமும் இல்லை. கடைகளின் பெயர்ப்பலகைகளும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு நடுவில் சிங்களப் பாட்டுக்கள் வேறு. சிறிது நேரத்திற்கு ஒருமுறை வரைபடத்தை பார்த்தேன். ம்ஹும் – வேலை செய்வதாய்த் தெரியவில்லை. மஹரகம பஸ்டாண்ட் பகிண்ட என்று குரல் கேட்க கூட்டத்தைப் பிய்த்துக்கொண்டு இறங்கினேன். கூகுளை நம்பிக் கேட்டது இது முதன்முறை அல்ல.

03. கலையும் பிச்சைக்காரனின் காரும்

மஹரகமவிற்கு என்று தனியாக பேரூந்துத் தரிப்பிடம் கிடையாது. பெயரில் ” கம ” என்று இருப்பதனாலோ என்னவோ. இரண்டு வீதிகளுக்கு இடையில் ஓடை ஒன்றிற்குற் தான் பேரூந்துகள் நிறுத்தப்படும். இப்போது கூகிள் வரைபடம் வேலை செய்தது. வீதியோரங்கள் ஓடைகள் என்று எல்லா இடங்களிலும் சாலையோரக் கடைகள். குறிப்பாக உடுப்புகள் விற்கின்ற கடைகள் ஏராளமாக காணப்பட்டது. இறங்கி மஹரகமவிலிருந்து என்னோடு இணைந்து வருகின்ற நண்பனுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன். நேரம் நான்கு மணியிருக்கும். அவன் ஐந்து முப்பதளவில் வருவதாகக் கூறினான். ஒன்றரை மணித்தியாலம் மீதமிருந்தது. மீண்டும் இங்கே தான் வந்து சந்திக்க வேண்டும். மஹரகமவைச் சுற்றிப்பார்க்க நடக்கத் தொடங்கினேன். முக்கால்வாசிக்கு மேல்ப் பெண்கள் தான் நின்றார்கள். பலர் ஏற்கனவே மரமேசையில் உடுப்புகளை விரித்திருந்தார்கள். பெரும்பாலானவை உள்நாட்டில் தைக்கப்பட்டவை. ஆண்கள் உடைகள் பெண்கள் உடைகள் குழந்தைகளினுடையவை என்று எல்லாவகையான உடுப்புகளும் இருந்தன.நான்கு மணிக்கு முன்னரே வியாபாரத்தைத் தொடங்கியிருந்தார்கள். தலையைக் குள்ளாக்கள் கவ்வியிருந்தன. குளிர் அங்கி அணிந்திருந்தார்கள். அவர்கள் எவரின் முகத்திலும் சோம்பலையோ நித்திரைக் கலக்கத்தையோ காணவில்லை. பெரும்பாலும் அவர்களின் வியாபாரத்திற்கென நிரந்தர இடம் இருக்காது. முன்னால் வருகின்றவர்கள் இடங்களைப் பிடித்துக்கொள்வார்கள். சிலர் தமது வாகனங்களில் வந்து இடைவெளிகளில் உடுப்புகளை வேகமாக இறக்கி தமக்கான வியாபார இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மந்தமான வெளிச்சத்தில் மஹரகமவின் வியாபாரம் தொடங்கியது.
நான் நண்பனுக்காக காத்திருக்கவேண்டிய இடம் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால். கூகிள் வரைபடத்திற் தேடி நடக்க ஆரம்பித்தேன். வியாபாரம் நேரத்துடன் அதிகரித்தது. ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சன நடமாட்டம் அதிகமான இடமாக விரைவாக மாறியது. வரைபடத்தைத் தொடர்ந்து நடந்தேன். நான் கண்ட பல பெண்கள் தமது காரிலேயே உடுப்புகளைக் கொண்டுவந்து – எடுத்து – அடுக்கினார்கள். எனக்கு மனதிற்குள் மெலிதாக சில எண்ணங்கள் தோன்றின. அவர்கள் வசதியானவர்கள். உடைகளை விற்பதை வியாபாரமாக இல்லாமல் மனநிறைவாகப் பார்க்கின்றார்கள். தாமே தைத்து எடுத்துவந்த ஆடைகள் விலைப்படும் போது அவர்கள் சந்தோஷிக்கின்றார்கள். தமக்கான அங்கீகாரம் கிடைப்பதாக உணர்கிறார்கள். இவை எல்லாம் தான் குளிரின் மத்தியில் இந்த அதிகாலையில் அத்தனை செழிப்பாக அவர்களை வைத்திருக்கின்றது. அவர்கள் இதைக் கலையாக உணர்கிறார்கள்.
ஒருவழியாக தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால் வந்து நின்று பார்த்து திகைத்துப்போனேன். அவ்விடம் நான் முதலில் பேருந்திலிருந்து இறங்கிய இடத்தின் எதிர்ப்பக்கம். நிதானமாக யோசித்துப்பாருங்கள். இரண்டு பெரிய வீதிகள் இடையில் ஒரு வெற்றிடம். அது தான் மஹரகமவின் பெயரிடப்படாத பேரூந்து நிலையம். இறங்கியது ஒரு பக்கம் – இப்போது நிற்பது எதிர்ப்பக்கம். இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மேலே நேரம் மீதமாக இருக்கிறது. கடை ஒன்றிற்குள் நுழைந்து நெஸ்கோப்பி ஒன்றும் மீன் பணிஸ் ஒன்றும் சாப்பிட்டேன். மீண்டும் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு அருகில் நடந்துவந்து லொத்தர் சபை ஒன்றின் கூடாரத்திலிருந்த மரப் பலகையிலாலான இருப்பதற்கு ஏற்ற குற்றி ஒன்றிலிருந்தேன். அருகில் லொத்தர் போட்டியில் வெற்றி பெற்றால் கொடுப்பதற்காக கார் ஒன்று புதிதாக நிற்பாட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் யாருமில்லை. குற்றியிலிருந்தபடி வியாபாரம் நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன்.
சிறிது நேரத்தில் வயது போன ஒருத்தர் என்னை நோக்கி நடந்துவந்தார். பார்க்க மிகவும் ஏழையாகத் தெரிந்தார். கந்தலான உடுப்பே அணிந்திருந்தார். என்னைச் சுற்றி வந்து அங்கு நின்ற காரின் பின் கதவைத் திறந்து கையில் பற்தூரிகையுடன் வெளியே வந்தார்.

04. வித்தியாசம்

நான் திகைத்துப்போய் ஸ்தம்பிதம் ஆனேன். அது ஒரு டொயாட்டோ கார். சுற்றி விளம்பரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த வயதானவர் பல்லை மினுக்கி முகமும் கழுவிக்கொண்டு துவாயையும் காருக்குள் இருந்தே எடுத்துத் துடைத்தார். அவர் தனது அறையைப்போல காரினைப் பயன்படுத்தினார். நான் பெரும் குழப்பமடைந்தேன். மிகவும் கேவலமான உடை – டொயாட்டோ கார் – பெரும் முரண் ஒன்று. என்னிடம் சிங்களத்தில் ஏதோ சொன்னார். அவரின் சிங்களத்தில் நான் அறிந்த சிங்களம் எதுவும் இன்மையால் ஒன்றுமே புரியவில்லை. நான் சிரித்தபடியே பதிலளித்தேன். இருந்தும் குழப்பம் தீரவே இல்லை. சாத்தியமற்ற நிகழ்வு. இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது, மஞ்சள் கோட்டில் வயதானவர் ஒருத்தர் கால்களை அரக்கி அரக்கி வீதியைக் கடந்தார். அவரால் சிறிது நேரம் வாகனக் குளறுபடி ஏற்பட்டது. எனக்குப் பின்னால் நின்ற அதிசயமான மனிதர் – அந்த வயதானவரைப் பற்றி என்னிடம் நக்கலாகச் சிரித்துக்கொண்டு ஏதோ சொன்னார். அது பெரும்பாலும் அந்த வயோதிபரின் நடையைப் பற்றியதாகவே இருக்கும். அவருக்கு நடை வித்தியாசமாக இருந்திருக்கலாம் – எனக்கு நீங்களே வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று சொல்ல மொழி தெரியவில்லை.

இப்படித்தான் லொத்தரிலும் குலுக்கல்களிலும் பரிசாக விழுகின்ற பொருட்கள் இருக்குமா? புதிதானது என்ற பெயரில் தரப்படுகின்ற பரிசில்கள் – இப்படி ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்தப்பட்டவையாக இருந்தால்.
நான் குற்றியில் இருக்க நண்பன் வந்து சேர்ந்தான். தனித்திருந்த பொழுதுகள் நிறைவுற்றன. மெலிதாக வானம் வெளிக்கத்தொடங்கியது. இருட்டிற்குள் தனியாக அலைந்து திரிந்தது ஒன்றை உணர்த்திச் சென்றது. நான் நினைப்பது போல மனிதர்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் இல்லை.

 

05. இரண்டு சுவரொட்டிகள்

என்னோடு சேர்த்து ஆறு பேர் மஹரகமவிலிருந்து பதுளை புறப்படுகின்ற பேரூந்தில் ஏறினோம். பதுளைக்குச் செல்லுகின்ற வழியிற் தான் பலாங்கொடை. பலாங்கொடையிலிருந்து அடுத்த இடம் நான்பெரியல். சரியாக பலாங்கொடையை அடைய மூன்று அரை மணித்தியாலங்கள் எடுக்கும். தொங்கல் இருக்கைகளில் யன்னற் பக்கமாக அமர்ந்துகொண்டேன். இது குளிரூட்டப்பட்ட பேரூந்து அல்ல என்பதால் மனம் மெதுவாக சஞ்சலப்பட்டது. பயணம் தொடங்கியது. நேரம் ஆறு மணியிருக்கலாம். குளிர்ந்த காற்றின் மெல்லிய வருடலோடு அயர்ந்து தூங்கினேன். இதனைத் தூக்கம் என்று சொல்வது மிகச் சரியாக இருக்காது. குறுகிய நேரத்திற்கு ஒரு முறை ஏற்படுகின்ற பெரிய குழுக்களில் விழித்துக்கொள்வேன். பயணத்தின் போது வெளிச்சம் பரவியதே ஒழிய சூரியனைக் காணவில்லை. சாப்பிட ரத்னபுரியில் இறங்கினோம். மற்றபடி தொடர் குலுக்கல்களும் நித்திரையும் தான். கண்விழித்துப்பார்க்கின்ற இடங்களில் எல்லாம் இரண்டு விடயங்களைத் தவறாமல் கண்டேன். ஒன்று தேர்தல் சுவரொட்டிகள். மற்றையது பிரத்தியோக வகுப்பின் சுவரொட்டிகள். இரண்டு வகையான சுவரொட்டிகளும் ஒரே பாணியில் இருந்தன. அரசியல்வாதி யார் ஆசிரியர் யார் என்பதே தெரியவில்லை. பெருமபாலான சுவரொட்டிகளில் இருக்கின்ற சின்னங்களை வைத்தே பிரித்தறிந்துகொண்டேன். அதிலும் சில சின்னங்கள் அலங்காரப்பொருட்கள் மாதிரித் தெரிந்தன. ஆசிரியர் காதுகளில் கேட்பொறியும் மாக்கர்களுமாக நின்றார்கள். வர்த்தகப்பொருள்களின் விளம்பரங்கள் கூடக் கண்களுக்கு அகப்படமுடியாத அளவு வகுப்புகளுக்கான விளம்பரங்கள் யுத்தியாக ஒட்டப்பட்டிருந்தன. இந்தக் கலாசாரம் வவுனியாவில் இல்லை என்பது ஓரளவு சந்தோசம். அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் கூட ஆசிரியர்களின் அளவு நுட்பமாக எடுக்கப்படவில்லை. பலாங்கொடை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அண்மையில் இறங்கி பலாங்கொடையில் வசிக்கின்ற நண்பன் வீட்டிற்கு செல்ல தயாரானோம். நண்பனின் வருகைக்காக ஒரு கார் திருத்தும் கடை அருகில் இறக்கப்பட்டிருந்த ஷெட் ஒன்றின் கீழ் நின்றோம். அங்கிருந்த கார்கள் முதலிற் பார்த்த டொயாட்டோ காரையும் பல்லுவிளக்கிய அதிசய மனிதனையும் மீண்டும் ஞாபகப்படுத்தின.
 

06. பத்

சிறிது நேரத்திற்குள் நண்பன் காரில் வந்து சேர்ந்தான். எல்லோருக்கும் இடம் போதாமையால் முச்சக்கர வண்டி ஒன்றையும் பிடித்துக்கொண்டோம். பதுளை செல்லுகின்ற வீதியில் கிளை வீதியாக அல்லது தெருவாக குத்தன எழுந்து போகின்ற தெருவின் கடைசி வீடு அவனது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணிநேர பிரயாண அலுப்பு. தலை கழுத்து கை கால் என்று உடெல்லாம் தூக்கிப்போட்டது. அவனது வீட்டிலேயே குளித்துவிட்டு காலை உணவை எடுத்தோம். சிறிய நேர இடைவெளிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேரவேண்டியவர்களும் வந்து சேர்ந்தார்கள். எல்லோருமாக காலை உணவை எடுத்தோம். எமது வீடுகளில் காலை உணவாக பிட்டோ இடியாப்பமோ தோசையோ ரொட்டியோ அல்லது பாணோ சமைப்பார்கள். ஆனால் முழுப்பிராயணத்திலும் ஆறுவேளை சாப்பிட்டேன். ஆறு வேலையும் ” பத் ” தான். அவர்களுக்கு சோறு பிசா போலத் தெரிகிறது. வீட்டில் ஒரு வேலை சோறு சாப்பிடுவதே பெரிய விடயம். ஆறுவேளை தொடர்ந்து சோறு என்றால். சிங்களவர்கள் பழக்கப்பட்டிருந்தார்கள். இரண்டாவது நாளின் இரவுச்சாப்பாட்டை வெளியில் எடுக்கவேண்டியதாகப் போயிற்று. இரண்டு பேர் சாப்பாடு எடுத்துவருகிறோம் என்று வெளிக்கிட்டார்கள். நானும் இப்போதாவது பாராட்ட, கொத்து என்று ஏதாவது கொண்டுவருவார்கள் என்று பார்த்தால் அப்போதும் பத் தான். ஆனால் ஒன்று ஒவ்வொரு வேளை பத்துடனும் கோழிக்கறியும் கருவாடும் நன்றாக சமைத்துத் தந்தார்கள். இரண்டாம் நாள் காலை மலை ஏறுவதற்காக காலை மற்றும் மதிய உணவுகளைக் காவிக்கொண்டு போகவேண்டும். மலையில் ஏறும்போது எமது உடலைக் காவுதலே பெரும்பாடு இதில் இரண்டு வேளை சாப்பாட்டையும் காவுதல் மெத்தக் கஷ்டமான விஷயம். எப்படியும் மதியம் சோறு தான். காலைக்கு இடியாப்பமோ பணிசோ பாரமற்ற சாப்பாட்டை எடுத்து சென்றிருக்கலாம். ம்ஹிம் – அப்போதும் பத் தான். சரி சாப்பாட்டைப் பற்றிச் சொல்லியதால் இன்னமும் தொடர்வோம்.

முதல் நாள் மதியமும் இரவும் மட்டும் தான் தங்கியிருந்த இடத்தில் சாப்பிட்டோம். நாம் தங்கியிருந்த இடம் பலாங்கொடையிலிருந்து சற்றுத் தூரத்திலிருக்கிறது. பதுளை வீதி தான். அதிலிருந்து பிரிகின்ற வீதி ஒன்றினூடாக ஒரு கிமீ பயணம் செய்தால் நன்பெரிய விடுதி வரும். நன்பெரிய விடுதி முழுக்க முழுக்க ஆமியால் நடத்தப்படுகிறது. அங்கே ஐந்து கொட்டகைகள் இறக்கப்பட்டிருந்தன. அதில் முதல் மூன்றும் எங்களுக்கு. கொட்டகைக்கு அருகில் இரண்டுமாடிக் கட்டடம். மேலே சாப்பிட்டு இடம் – கீழே குளியறைகள். இந்த சாப்பிடும் இடத்தில் தான் முதல் நாள் மதியமும் இரவும் மட்டும் சாப்பிட்டோம். அதை விட தேநீர் தந்தார்கள். அந்த கட்டடம் மலையின் இடையில் இருக்கின்ற சமவெளியில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து விழுந்தால் பரலோகம். அடுத்த நாட் காலை உணவை கடல் மட்டத்திற்க்கு மேலே 5000 அடியில் இருக்கின்ற பேக்கர்ஸ் வளைவிலிருந்து சாப்பிட்டோம். அப்போது சுற்றி எதுவுமே தெரியவில்லை. முழுக்க பனிமூட்டம். அந்த நாள் மதிய உணவை பங்களா என்று அழைக்கப்படுகின்ற கட்டடத்திற்கு கீழ் இருக்கின்ற ஒரு தமிழரின் வீட்டில் வைத்து சாப்பிட்டோம். பேக்கர்ஸ் வளைவு பற்றியும் பங்களா தமிழ் குடும்பங்கள் பற்றியும் பின்னர் எழுதுகிறேன். மதிய சாப்பட்டைச் சாப்பிட்டு விட்டு குப்பைத்தொட்டியை தேடினோம். அப்போது அந்த வீட்டு அம்மா குப்பைகளை எரிக்கவேண்டும் என்றும் கீழே எடுத்துச் செல்வதில்லை என்றும் கூறினார். அந்த நாளின் இரவு உணவை பலாங்கொடை நண்பனின் வீட்டில் சாப்பிட்டோம். சாப்பாடு என்றாலே பத் தான்.

 
07.குளிர் காற்று
நாங்கள் தங்கியிருக்கப் போகின்ற கொட்டகைகள் வீதியிலிருந்து உள் நோக்கி 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தன. எங்கள் வருகைக்கு முன்னரே கொட்டகைகள் எல்லாம் அடித்து தயாராக வைத்திருந்தார்கள். எல்லோரும் ஆமி. அவர்களே எல்லா வேலைகளையும் செய்தார்கள். எங்களை மாத்தையா என்றே அழைத்தார்கள். நாங்கள் தங்கியிருக்கும் கொட்டைகைகளுக்கு மற்றப் பக்கம் ஒரு பெரிய மரத்தடியினை குத்தி வைத்து அதைச்சுற்றி சிறிய மரக்கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தார்கள். எங்களை அன்புடன் வரவேற்றார்கள். நாங்கள் எங்கள் உடைமைகளை கொட்டகைக்குள் வைத்துவிட்டு குளிப்பதற்காக மாற்று உடுப்புகளுடனும் கரப்பந்துடனும் நடக்கத்தொடங்கினோம். அப்போது நேரம் இரண்டு அல்லது மூன்று மணியிருக்கும். குளிப்பதற்காக ஆறிற்கு செல்லவேண்டும். ஆறு நாமிருக்கின்ற இடத்திலிருந்து 500மீட்டர் மேல்நோக்கியிருக்கிறது. நாங்கள் கதைத்துக்கொண்டே நடந்தோம். வீதியின் கரைகளில் நின்ற மரங்களுக்கு சிங்களத்தால் பெயர்பலகையிட்டிருந்தார்கள். அவற்றை உச்சரித்தபடியே நடந்தேன். எங்களைக்கடந்து வாகனங்கள் போகவும் வரவும் பார்த்தோம். எதிரே வீதி இரண்டாகப் பிரிந்தது. நாங்கள் ஒடுங்கிய பாதையை தெரிவு செய்து வாகனங்கள் தரிப்பிடத்தைத் தாண்டி நடக்க கரப்பந்தாட்ட மைதானம் தெரிந்தது.

அருகில் நின்ற மரம் ஒன்றின் கீழே மாற்றுடுப்புகளை வைத்துவிட்டு பந்தை எத்தினோம். நான் முன்னரெல்லாம் விளையாடும் போது சில பிரச்சனைகள் தானாக வந்துவிடும். அவற்றை ஒன்று அணியினைப் பிரிப்பது. ஆனால் நாங்கள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் இரண்டாகப் பிரிந்தோம். பந்து வலையின் மேலாக மிதக்கத்தொடங்கியது. நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. இந்த வருட பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டியில் கரப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற அணி நாங்கள். சூரியனின் அனைத்து உஷ்ணமும் எங்கள் உடலுக்குள் சேர விளையாட்டு உக்கிரமானது. சிங்களத்தில் கர்ச்சித்தபடி பந்தை அடிக்கத்தொடங்கினோம். தலை முழுக்க வியரத்து கண்கள் எரியத்தொடங்கின. மேற்சட்டை வியர்வையில் தோய்ந்தது. மூன்று செட் விளையாடினோம். பின்னர் உடுப்புகளை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினோம். 100 மீட்டர் தூரத்தில் பெரிய பாறை ஒன்றைக் குடைந்து வழியை உருவாக்கியிருந்தார். உடலை மெல்லிய குளிர் காற்று அடித்துப்போட்டது. சுவாசக்காற்றில் ஈரம் தெரிந்தது. தண்ணீரின் சலசலப்பு கேட்டது. நாங்கள் ஆற்றின் ஒரு கரையை அடைந்திருந்தோம்.
08.குளிர்
ஏற்கனவே இருபது பேர் அளவில் அங்கங்கே குளித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பாறையின் வழி கீழே இறங்கி ஆற்றின் மற்றப் பக்கத்தை அடைந்தோம். ஆற்றின் வழியெங்கும் பாறைகள் தென்பட்டன. இரண்டு அல்லது மூன்று கற்களின் இடுக்குகளினூடாக தூய்மையான தண்ணீர் பீச்சிக்கொண்டு பாய்ந்தது. உள்ளங்கால் நீரில் பட உடெல்லாம் சிலிர்த்தது. ஆற்றுப் படுக்கையினூடாக சிதறியிருந்த குறுகிய பெரிய பாறைகளைக் கடந்து 100 மீட்டர் அளவில் நடந்தும் அரக்கியும் ஊர்ந்து சென்று குளிப்பதற்கான சரியான இடத்தைக் கண்டு பிடித்தோம். அதில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையினூடாக தூய்மையான நீர் வேகமாகப் பாய்ந்து வந்தது. பின்னர் ஒரு சமதரையான இடம். நான் முதலில் வேகமாகப் பாய்ந்து வருகின்ற நீரில் முதுகை ஒத்தியவாறு அமர்ந்து ஆற்றின் முழுகுளிரையும் என்னுள்ளே இழுத்தேன். தண்ணீர்த் துளிகள் முதுகில் பட்டு கழுத்தின் இருபுறமாகவும் பாய்ந்தது. ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள். எங்களுக்கென நிரந்தமான இடம் என்று ஏதும் இல்லாமல் அங்கும் இங்கும் நகர்ந்து குளிரினை வாங்கிக்கொண்டோம். மற்றவர்களுக்கு சலிக்காமல் குளிரினைக்கொடுத்தோம். தண்ணீரினை ஏத்தி ஏத்தி விளையாடினோம். பளிங்கு போன்ற தண்ணீரின் நிறம் எப்போதும் மாறவில்லை.

பாறைகளுக்கு மேலேறி நின்று குளிர்ந்த காற்றில் உடம்பில் ஒட்டியிருந்த நீர்த் திவலைகளைக் காயவைத்தோம். அப்படியான ஒரு கணத்தில் திசை தெரியாத பக்கத்திலிருந்து குளிர்த்தண்ணீர் வந்து நனைக்க மீண்டும் ஆற்றுக்குள் இறங்குவோம். இதை ஒன்றிரண்டு அல்ல பல முறை செய்தோம். விரும்பிய கோணங்களில் நின்று நீரோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் தண்ணீர் என்பதும் நீரோட்டம் என்பதும் காற்றைப்போல ஒன்றாகப் பழகிப்போனது. நேரத்தோடு ஆற்றின் ஓட்டமும் அதிகரித்தது. கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் நீரில் ஊறியிருக்க இருட்டத் தொடங்கியது. நீரின் வேகமும் அதிகரித்ததால் மேலும் நிற்காமல் மீண்டும் பழைய இடங்களிற்குச் சென்று உடைகளை மாற்றினோம். எல்லாம் சரியாகி வெளிக்கிடும் தருணம் கனத்த மழை பெய்யத்தொடங்கியது. கைகளில் யாரிடமும் குடைகள் இல்லை. எங்களை விட குளிக்கவந்த மாற்றிய எல்லோரும் பாறையின் கீழே வந்து ஒதுங்கிக்கொண்டார்கள். அப்போது ஐம்பது பேர்மட்டில் அதிகரித்திருந்தார்கள். சிலர் வேகமாக உடலை உலர்த்திக்கொண்டு குடைகளை கைகளில் ஏந்திக்கொண்டு நடந்தார்கள். நாங்கள் பொறுத்திருந்தோம். அரைமணிநேரம் பொருத்தலின் பின்னரும் விடாத மழையை வைதுவிட்டு கொட்டகைக்கு துவாய்களை தலையில் போட்டுக்கொண்டு ஓடினோம். அங்கே சுடச் சுட பால்த் தேநீர் காத்திருந்தது.
ஆ அந்த கொட்டகைகள் தாயாராகியிருந்த இடத்தின் பெயர் “கெமுனு வாச்”.

This slideshow requires JavaScript.

ஹட்டன் குறிப்புக்கள்.

ஹட்டன் குறிப்புக்கள்- 1
இலக்கிய சந்திப்புக்கு முதன்னாள் இரவு பத்து மணியளவில் A9 வீதியில் பயணம் தொடங்கியது. ஹட்டன் கொட்டகலையில் தான் இலக்கிய சந்திப்பு என்று அறிவித்தல் வந்த போது, கொட்டகலையின் பெயர் என்னுடைய அப்பாவோடு மிகவும் நெருங்கியதாக இருந்தது, இதுவே அவரைச் சம்மதிக்க வைக்கவும் செய்தது. அப்பா படித்த ஆசிரியர் கலாசாலை கொட்டகலையில் தான் இருந்தது. கிளம்புவதற்கு முதலே அப்பாவின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான லெனின் மதிவானம் அவர்களுக்கு நான் வருவதாக அறிவித்திருந்தார். அவருக்கென தேனும் ஒடியலும் பத்திரப்படுத்தி தந்தார். இலக்கிய சந்திப்பிற்க்கு செல்லவேண்டும் என்ற மனநிலை யதார்த்தனின் சிறுகதை தொகுப்பின் அறிமுக நிகழ்வு நடகின்றது என்பதனாலேயே ஏற்பட்டது. அது சோபிக்காமல் குறுக்கப்பட்டது வேறு விடயம். இலக்கியத்தில் சோபித்தல் நீட்சி போன்ற அலங்காரங்களை எதிர்பார்க்க முடியாது தானே. பத்து பன்னிரண்டு பஸ்களுக்கு பின்னர் ஹட்டன் யாழ்ப்பாணம் பஸ் வந்தது. பஸ்ஸின் முன்னால் நின்றவர் ஏறுங்கள் ஏறுங்கள் என்றபோது எதையும் யோசிக்காமல் ஏற முனைந்தேன். எதற்கும் “ஹட்டன் தானே?”, “கொழும்பு” அப்படியே பின்னோக்கி கையினை அசைத்து அனுப்பிவிட்டு, சரியாக பன்னிரண்டாவது பஸ்ஸில் மிகுந்த கவனத்துடன் ஏறினேன். முன்னாலே கிரிசாந்த் இருந்து சிரிக்க, தூக்கமுடியாமல் பயணப் பையினை தூக்கிக்கொண்டு கடைசி ஆசனங்களை வந்து அடைந்தேன். தெரிந்த முகங்கள் பாதி தெரியாத முகங்கள் மீதியென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். தேனும் ஒடியலும் பத்திரமாக பயணப்பைக்குள் இருப்பதை உறுதி செய்யுமாறு, பாதுகாப்பாக வைத்தேன்.
ஹட்டன் குறிப்புக்கள்- 2
குளிரும் என்பதை தவிர ஹட்டன் பற்றிய எந்த சித்திரமும் என்னிடம் இல்லை. ஹட்டனில் இருந்து எட்டாம் ஒன்பதாம் ஆண்டுகளில் நவீன் என்ற நண்பன், என்னோடு வவுனியாவில் எங்கள் பாடசாலையில் படித்தான். இந்த பயணம் முழுவதிலும் அவனைப் பற்றிய எண்ணமே வரவில்லை. எழுதத் தொடங்கியபோது தான் நினைவில் பளிச்சிட்டான். அவனின் ஓரிரு வார்த்தை, முடியுமானால் ஒரு சிறு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கலாம். சந்தர்ப்பம் நழுவிப் போய்விட்டது. சிறிது நேரம், கிட்டத் தட்ட ஒரு ஐந்து நிமிடம்.- இறுதி ஆசனத்தில் இருந்து பின்னர் முன்னோக்கி இரண்டு ஆசனங்கள் தாண்டி, உறுதியாக எனது இருப்பிடத்தை தெரிந்து கொண்டேன். இடது பக்கம் கலைமுகம் இலக்கிய இதழின் பிரதம ஆசிரியரும் வலது புறம் அறிமுகம் இல்லாத ஒருவரும் இடையில் நானும் அந்த மூன்று ஆட்கள் ஆசனத்தில் இருந்தோம். கலைமுகம் ஆசிரியருடன் அறிமுகமான போது, மனதில் மெல்லிய குற்றவுணர்வு ஏற்பட்டது. கலைமுகத்தின் ஒரே ஒரு இதழை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். உண்மையில் வைத்திருக்கிறேன். இரெண்டொரு கட்டுரைகள் வாசித்த ஞாபகம். அவர் கடைசி இதழை வாசித்தீர்களா? எப்படி இருந்தது? என்று குழந்தைத் தனமாக கேட்டபோது இன்னும் குற்றவுணர்ச்சி அதிகமானது. சிறு மௌனத்தின் பின்னர், நான் வாசித்த ஒரே ஒரு இதழின் அட்டை வண்ணத்தை ஞாபகத்திலிருந்து சொல்ல, அவர் அதற்கு பின்னர் இரண்டு இதழ்கள் வெளிவந்து விட்டதாக சொன்னார். சமகால இலக்கிய அவதானிப்பு இருந்தும் அவற்றை தவற விட்டதும், அவர் அருகில் அதற்கு பின்னர் எப்படி இருப்பது என்றும் கவலை தொற்றியது. அவர் வவுனியாவிற்கு இரண்டையும் தான் அனுப்பவில்லை என்றபோது கவலை விலகியது. கூடவே, இன்றைய நாட்களில் கலைமுகம் முன்னையதை விட அதிகமாக விற்பதாகவும், வாசகர் பரப்பு கூடியிருப்பதாகவும் சொன்னார். நான் கொஞ்சம் பூரித்துப்போனேன். அவர் “ நீங்க எங்களுக்கு எழுதுங்களேன்” , பூரிப்பு இருமடங்காகியது. அவரிற்கு மீண்டும் ஒரு மௌனத்தால் விடையளித்தேன். இரண்டு மௌனங்களும் வேறு வேறானவை.
ஹட்டன் குறிப்புக்கள்-3
வலது பக்கம் இருந்தவருக்கும், அவரின் இருக்கைக்கு முன்னால் இருந்தவருக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. பிரச்சனை ஜன்னல் திறப்பது சம்பந்தமானது. இவர் திறப்பதும் அவர் மூடுவதும் பின்னர் இவர், அவர் என்று நடந்துகொண்டே இருந்தது. இதிலிருந்து அவர் இலக்கிய சந்திப்பிற்கு வந்திருக்க மாட்டார் என்பதை யூகித்துக் கொண்டேன். உண்மையும் அதுதான். அவர் பக்கம் இருந்த நியாயம், அவரிற்கு எப்போதும் துப்பிக்கொண்டே இருக்கவேண்டும். அதனால் ஜன்னல் திறந்திருக்கவேண்டும். முன்னால் இருந்தவர் பக்க நியாயம், என்னருகில் இருந்தவர் ஜன்னலை திறந்தே வைத்திருக்க சம்மதம், ஆனால் அவர் கணத்துக்கு கணம் ஜன்னலின் அளவை மாற்றிக் கொண்டே இருப்பது அசௌகரியம். யார் பாக்க நியாயம்? இதில் குழப்பம் ஏதும் இருக்காது. ஆனால் ஹட்டனில் இருந்து திரும்பி வரும்போது, 27ஆம் இலக்க ஆசனம் அதுவும் நடு ஆசனம் தான். யாருமே இருபுறமும் இல்லை. பயணப்பையை ஆசனத்தில் வைத்துவிட்டு, சூடாக வடையும் கிழங்கும் சாப்பிட இறங்கினேன். 7.20 இரவு, சரியாக பஸ் எடுத்துவிடுவார்கள் என்பதற்காக ஐந்து நிமிடம் முன்னரே வந்து சேர்ந்து விட்டேன். பெரிய இருக்கையின் கரையில் என்னைப்போல ஒன்றரை மடங்கு பெரிய உருவம் கொண்ட ஒருத்தர் இருந்தார். நான் நடுவில். கிட்டத்தட்ட இரண்டரை ஆசனங்கள் நிரம்பி விட்டநிலையில், மூன்றாமவர் யார் என்ற ஆவல் கூடியது. பயமும். சற்றுப் பெருத்தவர்கள் 29ஆம் இலக்க இடத்தை நோக்கி வரவும், அதைத் தாண்டிச்செல்லவும் பயம் வருவதும் கடப்பதாகவும் இருந்தது. பின் ஆசனத்தில் இருந்த சதீஸ் அண்ணா, என்னை மிகவும் கவனித்தவராய் எனது இன்னல்களை சிலாகித்துகொண்டு இருந்தார். ஒரு இருபது நிமிடங்கள் அந்த ஆசனத்தில் என் பயணப்பை மட்டமே இருந்தது. இப்போது இடத்திற்கான குழப்பம் அதிகமானது. அதில் இப்போது தேனோ ஓடியலோ இல்லை. அதற்கு பதிலாக சில புஸ்தகங்களே நிரம்பியிருந்தன.
ஹட்டன் குறிப்புக்கள்- 4
வலப்பக்கம் அறிமுகம் இல்லமே கடைசிவரை போனது. நான் அறிமுகம் செய்துகொள்ள விரும்பவில்லை. அவருக்கு அறிமுகம் செய்துகொள்ள நேரம் இல்லை. சொன்னது போல நிமிடத்திற்கு பத்து முறையாவது கடைசி துப்பிக்கொண்டே இருந்தார். ரபான் சத்தம் மெதுவாக கேட்க தொடங்குகிறது. வவுனியாவில் என்னையும் சதீஷ் அண்ணாவையும் ஏற்றும் வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாடல் கேளிக்கைகள் ஆரம்பம் ஆகியது. அதோ அந்தப் பறவை போல என சதீஸ் அண்ணா ஆரம்பிக்க கிரிசாந், யதார்த்தன், நண்பர்கள் என சேர்ந்துகொண்டனர். சிங்களப் பாட்டு பஸ்ஸில் ஒலிக்க அதற்கு மேலாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பழைய பாட்டுகளும் பின்னணி முணுமுணுப்புகளும் என்று பஸ் வேகத்தைக் கூட்டியது. சிறிது நேரத்திலேயே மதவாச்சியில் இரவு உணவுக்காக நிறுத்தியது. பின்னர் மீண்டும் கிளம்பிய பஸ்ஸில் பாடிய நினைவோ ரபான் சத்தம் கேட்ட நினைவோ இல்லை. நித்திரை கண்டியில் தான் முறிந்தது. மனமெல்லாம் குளிர்ந்து. அருகில் இருந்தவர் அப்போதும் துப்பிக்கொண்டு தான் இருந்தார். நித்திரை கொண்டாரா? இல்லையா? நித்திரையிலும் துப்புவாரா? அல்லது சேமித்து எழுந்தவுடன் துப்புவாரா? இல்லை துப்புவதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறாரா? கையில் புத்தகமோ அல்லது காதில் ஹெட்ஃபோன்கள் போட்டிருந்ததையோ அல்லது தொலைபேசியை நோன்டிக்கொண்டதையோ நான் காணவில்லை. கண்டியிலிருந்து பஸ் ஹட்டனுக்கு புறப்பட்டது. நித்திரை. கண்டியிலேயே மழை ஆரம்பித்திருந்தது. ஹட்டனில் தொடர்ந்தது. அதிகமாவே இருந்தது. பின்னர் வட்டவளை என்கிற கூடிய மழைவீழ்ச்சி உடைய நகரம் அருகில் இருப்பதை தெரிந்துகொண்டேன். பஸ்நிலையத்தில் இறங்கி மழைக்குள் புஸ்தக கட்டுகளை தூக்கிக்கொண்டு, சூடான தேநீருடன், போகவிருந்த இடத்திற்கு டால்பின் ஒன்றினுள் நெருக்கமாக போய்ச்சேர்ந்தோம். ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரில் டால்பின் நின்றது. டொல்பினுக்குள் நெருக்கமாக இருந்ததால் ஹட்டனின் புறச் சூழலை அவதானிக்க முடியாமலே போனது. இருந்தும் அப்பா கொடுத்து விட்ட தேனும் ஒடியலும் கவனாமாக இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக்கொண்டேன். ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றர்.
ஹட்டன் குறிப்புக்கள்- 5
‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரில் இறங்கும் போதும் மழை தூறலாக பெய்தது. புஸ்தக கட்டுகளையும் பயணப்பைகளையும் டொல்பினில் இருந்து இறக்கி வைத்தோம். முதன் முதலாக ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரை இரண்டு கண்களையும் அகல விரித்து பார்த்தேன். குழந்தைகள் building blocksஐ அடுக்கி விளையாடியது போன்ற நிலதோற்றத்தை ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரும் சூழலும் கொண்டிருந்தது. ஆரம்பத்திலேயே உணவகமும் பின்னர் அருகாமையால் இறங்குகின்ற படிகளற்ற பாதையும் முடிவில் ஒரு வீடும், திரும்பி மீண்டும் இறங்கும் போது எதிரே நீண்ட பெரிய இரண்டு மாடி மண்டபமும் சிறிய சமவெளியும் இறக்கத்தின் வலது பக்கம் தடிகளால் அந்தரத்தில் செய்யப்பட்ட கதைப்போர் கூடமும், அதற்கு எதிரே சீமெந்து பூசப்பட்ட மீன் தொட்டியும் அதற்குள் மீன்களும், இறங்கி சமதரையை அடைந்தது நீண்டு கூர்மையாக வளர்ந்த பெயர் தெரியாத மரம், அதைத் தாண்டி பறந்து விரிந்த பச்சை நிற சாயம் வீசப்பட்ட தேயிலை மலையும் சமதரைக்கும் மலைக்கும் இடையில் மஞ்சள் நீரோடும் கால்வாயும் தெரிந்தது. கால்வாய் நீரின் சத்தம் ஆக்ரோசமான மக்கள் கூட்டம் எதற்காகவோ போராடுவது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது. மஞ்சள் நீரோடும் கால்வாய் என்று என்னால் அவதானிக்கப்பட்டது, சிறிது நேரத்தின் பின் பலதரப்பட்ட பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. முக்கியமாக அதை ஒரு நதி என்றும் கண்ணுக்கு எட்டும் தூரத்தி தெரிகின்ற சிறிய நீர்வீழ்ச்சி போன்ற தோற்றமுடைய அமைப்பிலிருந்து இறங்கி வந்து பாய்கின்றது எனவும் பேசப்பட்டது. சில மணித்தியாலங்களிலேயே மஞ்சள் நீர் தெளிவானது. ஓட்டமும் குறைந்தது. கடைசி வரையும் நின்று விடவில்லை. சிலர் நீர்வீழ்ச்சி போன்ற தோற்றப்பாட்டை உடைய இடத்தில் குளித்ததாகவும், இன்னும் சிலர் அந்த நீரை அருந்தி (தெளிந்த பிறகு) அதை புகைப்படமும் எடுத்து முகப் புத்தகத்தில் போட்டதாகவும் அறிந்தேன். இதன் மூலம் இதை நதி என்று முடிவு எடுத்துவிடுவதா? அல்லது சிறிய கால்வாய் தானா? ஹட்டனின் வேறு எங்கும் சென்றிறாததால் அந்த அமைப்பு கடைசி வரையும் மர்மமாகவே இருந்தது. இப்போது கூகிள் மப்பில் தேடிய போது அங்கு கால்வாய் இருந்ததாகவோ நதி இருந்ததாகவோ எந்த அடையாளமும் இல்லை. ஆனால் street view இல் பார்க்கும் போது தெரிகின்றது. இன்னும் அந்த மஞ்சள் கால்வாய் மர்மம் தான்.

ஹட்டன் குறிப்புக்கள்-6
இரண்டு மாடி மண்டபம், சமதரை அடுத்து நீண்ட இரண்டுமாடி தங்குமிடம். எமக்கான அறைகள் தரப்பட்டன. மொத்தம் மூன்று அறைகளை பயன்படுத்த முடியும் என்றார்கள். கடைசியில் ஆறு ஏழு அறைகளை பயன்படுத்தினோம். ஒரு அறையில் நான்கு கட்டில்கள். இரண்டு கீழே இரண்டு அதற்கு மேலே. ஜன்னலைத் திறந்தால் இரண்டடி தூரத்தில், உண்மையில் அருகில் மஞ்சள் நீர்க் கால்வாய் ஓடியது. கால்வாயையும் இடையில் இருந்த இரண்டடி சீமெந்து நிலத்தையும் அவதானித்தபோது தான் அட்டைகள் பற்றிய ஞாபகம் வந்தது. மலையகப் பகுதிகளில் அட்டைகள் இருக்கும் என்பதை நான் எட்டாம் வகுப்பில் படித்தபோது சென்றிருந்த சுற்றுலா ஒன்றின் மூலமாகவே அறிந்திருந்தேன். நாங்கள் சென்ற பஸ்ஸிற்குள்ளேயே அட்டைகள் ஏறின. கீழ் கட்டிலில் படுத்தால் எவ்வளவு நேரம் ஆகும் ஏற என மேல் கட்டிலையே தெரிவு செய்தேன். பயணப்பையை இறக்கி வைத்துவிட்டு கொண்டு வந்த புஸ்தக கட்டுகளை அவிழ்த்து ஈரம் பற்றியுள்ளதா என பார்த்தோம். புதிய சொல்லும் மேடுசாவும் பிரெஞ்சு புரட்சியும் கவனமாக இருந்தது. தேனும் ஒடியலும் கூட. முதலாவதாகவே முந்நூரு ரூபாய் கொடுத்து மெடுசாவின் கண்கள் முன்னே நிறுத்தப்பட்ட காலத்தின் ஒரு பிரதியை வாங்கி வைத்துக்கொண்டேன். விடியற்காலை ஏழைத் தாண்டியிருந்தது. குளிர் மிதந்து வந்து உடலெல்லாம் சூழ்ந்தது. உண்மையில் இத்தனை புதிய அனுபவங்களுக்கிடையில் யார் எம்மை முதலில் வரவேற்றார்கள் யார் வழிகாட்டினார்கள் என்று எதையுமே கவனிக்கவில்லை. முதலிலேயே குளிக்கசென்று நீரினால் துடைத்துக்கொண்டு வந்த யதார்த்தன், இனி குளிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார். இறுதியாக நான் துவாயையும் சவர்க்காரத்தையும் தூக்கிக்கொண்டு மண்டப முடிவில் இருந்த குளியல்அறைக்குள் சென்றேன். குளியலறையும் கழிப்பறையும் மிகவும் சுத்தமாக இருந்தது. இருந்தும் என்ன பயன் குளிக்க வேண்டுமே! குளித்தேன். முதலில் குளிர்ந்து, பின்னரும் கூட.
ஹட்டன் குறிப்புக்கள்- 7
அங்கு எனக்கு வியர்க்கவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் உணவகத்துக்கு ஏறும் போதும் மூச்சு வாங்கியது. பலகீனமானவனாகத் தெரிந்தேன். உண்மையில் புதிதாக அந்த சாய்வில் ஏறுபவர்கள் எல்லோருமே பலகீனமானவர்கள். 9.30ற்கு நிகழ்வுகள் தொடங்கும் என்றிருந்தது. உணவகத்திற்கு சென்று தேநீரும் உணவும் சாப்பிடவேண்டி உச்சிக்கு சென்றோம். அங்கே அனோஜன் முன்கூட்டியே வந்திருந்தார். எல்லோரும் சேர்ந்துகொண்டோம். எழுத்தாளர் கருணாகரனும் அங்கிருந்தார். வேறு எவரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தேனும் ஒடியலும் கொடுக்கவேண்டி கொண்டுவந்த லெனின் மதிவானம் அவரையும் பார்த்ததில்லை. உண்மையில் அங்கு அவர் வந்திருக்கவில்லை. உணவுகளை முடித்துக்கொண்டு அருகில் இருந்த பல்கனி போன்ற இடத்தில் நின்று ஒரு சில புகைப்படங்களை DSLR இல் எடுத்துக்கொண்டோம். நாகரிகதிற்காக ஒரு சில என்றேன். எக்கச்சக்கமாக எடுத்துக்கொண்டோம். கிரிசாந்த் பல எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டு வந்தார். எல்லோரும் வெகு விரைவாக பழகிக்கொண்டோம். பலரை நான் அண்ணா என்ற விகுதியுடன் அழைத்ததை விரும்பாதவர்களாக இருந்தார்கள். பெயரைச் சொல்லியே அழைக்கலாம் என்றார்கள். நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அண்ணா என்றே அழைத்தேன். அரை மணி நேர இடைவெளிக்குள்ளேயே எல்லோரும் எல்லா இடங்களும் பழக்கத்திற்கு வந்தது. தெரியாத அனைவரும் தெரிந்தவர்கள் ஆகிப்போனார்கள். ஒரே ஒரு அறிமுகம் தான் தேவைப்படுகிறது, அந்நியர்கள் நம்மவர்கள் ஆகுவதற்கு. அத்தனை அறிமுகத்திலும் தேனிற்க்கும் ஒடியலுக்கும் வேலை வரவே இல்லை.
ஹட்டன் குறிப்புக்கள்- 8
வழமை போலவே பத்து மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பித்தது. இலக்கிய சந்திப்பின் வரலாறு சொல்லப்பட்டது. நான் கட்டடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அது மரத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. சுவர், மேற்றளம் என்று எல்லாமே மரத்தினால் ஆனது. வைரமான மரத்தினால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஹட்டனில் நிற்கின்ற மரங்கள் எல்லாம் வவுனியாவில் இருக்கின்ற மரங்களைப்போல மூன்று நான்கு மடங்கானவை. உயரத்திலும் தடிப்பிலும். மூங்கில் மரங்கள் இங்கிருக்கும் தென்னையைப் போல தடிப்பாக இருந்தன. மிகவும் பெரிய மரங்களின் ஆயுட்காலம் என்னவாக இருக்கும்? அதன் வளர்ச்சி வெயில் பிரதேசங்களைப்போன்றனவா? என்ற கேள்விகள் எழுந்தன. சுய அறிமுகம் தொடங்கியது. ஒரு வரிசையாக அறிமுகம் செய்து கொண்டுவந்தார்கள். முழுமையாக அறிமுகம் முடிந்தது. எனக்குள் சந்தேகங்கள் எழத்தொடங்கியது. கிழக்கிலங்கை முஸ்லிம்களைத் தவிர வேறு யாருமே தாங்கள் செய்யும் தொழிலை மதித்து அறிமுகப்படுத்தியதாகவே தெரியவில்லை. இது எழுத்தாளன் வறுமையானவன் என்ற அடையாளத்தை பலப்படுத்தவா? செய்கின்ற தொழிலை விடுத்து அறிமுகம் செய்திருக்கலாமே. எழுத்தாளனாகவோ, வாசகனாகவோ, நலன்விரும்பியாகவோ, இலக்கிய விமர்சகராகவோ தங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே. அவர்களின் படைப்புக்களின் பெயர்களைச் சொல்லி ஆரம்பித்திருக்கலாம். இப்படி எத்தனையோ வழியிருக்க தம்மை கீழ்மைப்படுத்தி அறிமுகம் செய்வதற்கான நோக்கம் என்ன? இதன் பின்னுள்ள மனநிலை எவ்வாறானது?

ஹட்டன் குறிப்புக்கள்- 9
சுயஅறிமுகம் நடந்துகொண்டிருந்தது. ரியாஸ் குரானாவும் அவரின் நண்பரும் வந்து எனக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார்கள். அப்போது எங்களைத் தாண்டி மைக் போயிருந்தது. பின்னர் ரியாஸுக்கு அறிமுகம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இப்போது மட்டும் தான் அவருக்கு உத்தியோகப்பூர்வமாக மைக் கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறன். முதன் முதலில் அன்று தான் ரியாஸ் குரானாவை நேரில் பார்கிறேன். வெள்ளை ஜீன்சும் கறுப்பு மஞ்சள் – என்று நினைக்கிறன், மேற்சட்டையும் அணிந்திருந்தார். அறிமுக கூட்டத்தில் யாரோ ஒருத்தனை வலுகட்டயாமாக இழுத்துவந்தால் அவனது முகபாவனை எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவரின் பாவனைகள். அறிமுகத்திலேயே தன்னைக் கலகக்காரன் போல அறிமுகம் செய்தார். எனது மனதிற்கு மிகுந்த கறாரான மனிதராக தெரிந்தார். எல்லா அறிமுகங்களிலேயும் என்னை வியக்க வைத்த அறிமுகம் குமாரதேவன் ஐயாவினுடையது. “ நீங்கள் எழுதும் புலி பூனை பற்றிய கதைகளையெல்லாம் வாசிக்கும் வாசகன், தான்” என்று பெருமிதமாக சொல்ல அரங்கமே பாராட்டியது. இறுதி நாளின் கடைசி மணிநேரங்களில் நாங்கள் இருக்கின்றோம். மேலே அரங்கில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான், சதீஷ் அண்ணா, கிரிசாந்த், யதார்த்தன், மகி, மதுரன், ஸ்டான்லி மற்றும் வாசுதேவன் என்று பிரான்சில் இருந்துவந்த புலம்பெயர் எழுத்தாளர் ஒருவரும் கறுப்பி என்கிற புனைபெயர் உடைய சுமதியும் புலம் பெயர் எழுத்துகள் பற்றியும் இன்னும் கொடுக்கப்படாத தேநீர் பற்றியும் பேசிக்கொண்டு மஞ்சள் நதியின் சுவர்களில் சாய்ந்துநின்றோம். பேச்சின் நடுவில் கிரிசாந்த் எம்மை நோக்கி வருவது போன்று இருந்தது. எப்போது விலகிப் போனார் ஏன் விலகிப்போனார் என்று எதுவும் தெரியவில்லை. சிரித்துக்கொண்டே குமாரதேவன் ஐயா காரசாரமாக தன் கருத்துகளை வைத்திருப்பதாக சொன்னார். அந்த சமயம் நிகழ்வின் முடிவில் கருத்துகள் கேட்கப்பட்டுகொண்டிருந்தன. அதைப் பற்றி மேலும் பேச இடம் கொடுக்காமல் மேலிருந்து கொடுக்குப் புன்னகையுடன் மேலிரண்டு பொத்தான்கள் கழன்ற மேற்சட்டையும் சாரமுமாய் குமாரதேவன் ஐயா இறங்கிவந்துகொண்டிருந்தார். எம்மோடு சேர்ந்து தான் கூறிய கருத்துகளின் உள்ளடக்கத்தைச் சொன்னார். ஆரம்பத்திலும் முடிவிலும் குமாரதேவன் ஐயா என்னைக் கவர்ந்தவராகவே இருந்தார். இப்போது அந்த கறை படிந்த முன் பற்கள் தெரிய சிரித்த கொடுப்பு சிரிப்பும் படிகளில் இருந்து இறங்கிய விதமும் அவரை சாமானியராக பார்க்கத் தூண்டவில்லை.
ஹட்டன் குறிப்புக்கள்- 10
அறிமுகம் முடிந்தது முதல் அரங்கில் பங்குபற்றுவோர் அழைக்கப்பட்டனர். நிகழ்வு தொடங்குவதற்கு முதலே விஜி,- அப்படித்தான் ஞாபகம் இருக்கிறது, தனக்கு 10 நிமிடங்கள் தருமாறு அவையை கேட்டுவாங்கிக்கொண்டு, புலம் பெயர் எழுத்தாளர்களின் அரங்க இருப்பு சம்பந்தமான முக்கியமான கேள்வியை முன்வைக்கப்போவதாக கூறினார். பின்னிருந்த ரியாஸ் முன்னால் வந்து அருகில் இருந்த மைக்கை எடுத்து பேசுவதற்க்கான சந்தர்பத்தை எதிர்பார்த்தவராக நின்றார். பின்னர் நடந்தவை விவாதத்திற்கு உரியவை. ரியாஸ் கதிரை ஒன்றை எடுத்து அந்த இடத்திலேயே இருந்தார். ஏற்பாட்டுக்குழுவும் கேள்வி எழுப்பியவரும் பேசிக்கொண்டு தமக்குள்ள சமாதானம் அடைந்து கொண்டார்கள். ரியாஸிற்கு பேச சந்தர்ப்பம் வழங்கவில்லை. நாளின் இறுதியில் இவற்றை எல்லாம் வைத்துகொள்வோம் என்று கருத்துவர நிகழ்வின் இறுதிக்கு விவாதங்கள் ஒத்திபோடப்பட்டது. எடுத்த கதிரையை மீண்டும் பழைய இடத்தில் வைத்துவிட்டு ரியாஸும் நண்பரும் வெளிநடப்பு செய்தார்கள். நான் சிறிது நேரம் நிகழ்வுகளை பார்த்துகொண்டிருந்தேன். என்னோடு சதீஸ் அண்ணாவும் குமாரதேவன் ஐயாவும் இருந்தார்கள். எங்களைச் சுற்றி உள்நாட்டவர் புலம்பெயர்ந்தவர் என்று நிறையப் பெயர் பார்த்துகொண்டிருந்தார்கள். அவைக்குள் தொப்பியும் பிரெஞ்சு தாடியும் சில்க் மேற்சட்டையும் ஜீன்சுமாக உயரமாக ஒருவர் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார். முதலாவது உரையும் அவருடையதே. அவர் தான் லெனின் மதிவானம் என்று அறிந்துகொண்டேன். சிறிது நேரத்தில் நான் அறைக்குள் சென்றேன். அறைக்குள் ஒரு பெரும் கோட்டமே நடந்து கொண்டிருந்தது. நான் அங்கு செய்த முதல் இலக்கிய சந்திப்பு அது தான்.

ஹட்டன் குறிப்புக்கள்- 11
ரியாஸ் குரானாவும் அவரின் தோழர் மிஹாத்தும் கூடவே எங்கள் நண்பர்களுமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்த ரியஸா இது என்பது போல இருந்தது. சிரிப்பும் கலகலப்புமாக இருந்தார்கள். ரியாஸ் தன் பக்க நியாயங்களைக் கூறிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பல்வேறு விடயங்களைப் பற்றி கதைத்தோம். மதிய உணவிற்கான நேரம் வந்தது. முதல் முப்பது பேரும் மேலே உணவகத்திற்கு சென்றிருந்தார்கள். அதனால் நாங்கள் காக்கவேண்டியதாக இருக்கும் என்று நண்பர் ஒருத்தர் கூறியபோது, ரியாஸ் தான் வைத்திருக்கும் இரண்டு பாசலையும் பங்கிடலாமே என்றார். பின்னர் உணவகத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து மேலிருக்கும் வீட்டிற்கு எல்லோருமாக சென்றோம். இருக்கின்ற இரண்டு பாசலை நாங்கள் கிட்டத்தட்ட பத்து பேர் அளவில் பிரித்துகொண்டோம். அங்கு சில சம்பாஷனைகள் நடைபெற்றன. அது தான் எங்களுக்கு இடையிலான கடைசி சந்திப்பாக அன்று இருந்தது. கடைசி நேரத்தில் ரியாஸ் பேச ஒரு நிமிடம் வேண்டிப் போராடியதாகவும் பின்னர் கோபித்துக்கொண்டு 5.30 மணி பஸ்சிற்கு போய்ச் சேர்ந்ததாகவும் அறிந்தேன். நாங்கள் இரண்டாவது முறை மதிய உணவை சாப்பிட வீட்டிற்கு மேலிருந்த உணவகத்திற்கு சென்றோம்.
ஹட்டன் குறிப்புக்கள்- 12
உணவகம் தான் இரண்டாவது இலக்கிய சந்திப்பின் களம். தொப்பியை இன்னும் கழற்றாமல் லெனின் தனியாக சாப்பிட்டுகொண்டிருந்தார். நான் உணவுவை போட்டுக்கொண்டு அவர் அருகில் போயிருந்து நான் பிரிந்தன் கணேசலிங்கம் என்றேன். அவர் அளவு கடந்த சந்தோசத்தோடு என்னைப் பார்த்தார். அவர் அப்போது உண்டு முடிக்கும் தருணத்தில் இருந்தார். இருந்தாலும் எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கி விசாரித்தார். என் அப்பாவிற்கும் அவருக்குமான பழைய கதைகளை பற்றிப் பேசினார். என்னைப்பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டார். மீண்டும் கட்டாயம் சந்திக்கவேண்டும் உரையாடவேண்டும் என்றார். எழுத்து கைகழுவ சென்றபோது பேசத் தொடங்கும் போது பிசைந்த சோறையும் இறைச்சி துண்டையும் சாப்பிடத் தொடங்கினேன். எல்லாம் முடிந்து இறங்கும் போது அவர் யாருடனோ கதைக்கொண்டிருக்க நான் அவை சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தேனையும் ஒடியலையும் எடுத்துக்கொண்டுவந்து அவருக்கு கொடுத்தேன். தன்மேல் தான் எதையும் கொண்டுவரவில்லையே என்று கவலைப்பட்டார். நான் அப்போது எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. பின்னேரம் அறையிலேயே இன்னொரு கலந்துரையாடல். புத்திதாக அறிமுகானவர். மலையகத்தின் இன்னல்களை சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் மலையக உணர்ச்சி தெரிந்தது. அவர் அதற்காக தன்னாலான முயற்சிகளைச் செய்வதாகவும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் ஆதங்கப்பட்டார். மலையகத் தமிழர்கள், அரசியல்வாதிகள், தொழிற்ச்சங்கங்கள், பாடசாலைகள் என்று பலதரப்பு சம்பந்தமாக பேசிக்கொண்டோம். எங்களுடன் லதீபன் அண்ணாவும் இணைந்திருந்தார்.
ஹட்டன் குறிப்புக்கள்- 13
அன்றைய நாளின் பின்னேரம் நானும் லதீபன் அண்ணாவும் மஞ்சள் நதியின் சுவரில் இருந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். பலத்தைப் பேசினோம். ஹட்டன் முழுக்க மப்பும் மந்தாரமாகவுமே இருந்தது. இப்போது மஞ்சள் நதி தெளிந்திருந்தது. இரவு காமன் கூத்து. கூத்தின் ஒரு பகுதி. மேலிருந்த வீட்டின் முற்றத்தில் எல்லோரும் இருக்கவும் நிற்கவும் இருட்டில் அந்த இடமே நிறைந்திருந்தது. அதற்கு சற்று முதல் தான் மூன்றாவது இலக்கிய சந்திப்பு இடம்பெற்றது. படிகளில் நானும் கிரிசாந்தும் வீட்டிற்கு ஏறிக்கொண்டிருக்கும் போது முன்னாள் ஏறிக்கொண்டிருப்பவர் தெளிவத்தை ஜோசப். படிகளை கவனமாக பார்த்துக்கொண்டு அருகில் இருந்த படிப்பிடிகளில் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஏறிக்கொண்டிருந்தார். படிப்பிடிகள் இடையில் முடிய அவரும் தடுக்குற்றார். பின்னால் ஏறிய நான் அவரைப் பிடித்துகொண்டு வீட்டின் முற்றத்திற்கு ஏற்றிச் சென்றேன். DSLR உடன் ஏறிய கிரிசாந்த் அண்ணாவைக்கொண்டு ஒரு புகைப்படம் இருவரும் எடுத்துகொண்டோம். தெளிவத்தை ஜோசப். காமன் கூத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பெருத்த கனமான உடைகளுடன் முகத்தில் பூச்சுகளும் தலையில் சவரியும் கைகளில் ஆயுதங்களும் என தங்களை தயார்படுத்தியிருந்தார்கள். நான்கு ஐந்து வயது சிறுவர்களும் அதில் நின்றார்கள், பிள்ளையாராகவும் முருகனாகவும். வாத்தியார் ஒருவர், பாட ஒருத்தர், தப்பிசைக்க மூவர், ஒத்தாசைக்கு சிலர். நாமெல்லோரும் சுற்றி நின்றோம். இருள் ஏற காமன் கூத்து தொடங்கியது. ஒவ்வொருத்தராக வந்து அறிமுகம் செய்துகொண்டார்கள். அவர்களின் முகம் முழுக்க சோகமும் கவலையும் தோய்ந்திருந்தது. கண்களில் வெளிச்சமே இல்லை. கூத்தும் சோகத்தின் அடையாளமாகவே இருந்தது. அவர்களின் உடலின் எந்தப்பாகமும் சக்தியுடன் ஆடியதாக தெரியவில்லை. பாடல்கள் இழுவையான சோகத்தில் இருந்தன. சிறுவர்கள் கூட சிரிக்கப் பார்க்கவில்லை. இருட்டுத் தான் காமன் கூத்தா? இது தான் மலையகக் குறியீடா? , தப்பு மட்டும் ஆவேசமாக இருந்தது. தோலில் சவுக்கு வீசுவதனால் பொறுக்கமுடியாமல் தப்பு போட்ட கூச்சலா அது? அது அமாவாசையின் இருந்திருக்க கூடும்.
ஹட்டன் குறிப்புக்கள்- 14
முதல் நாள் இரவின் இறுதிப் பொழுதுகளைக் கழிக்க நான், யதார்த்தன், கிரிசாந்த்,லதீபன், மகி, மதுரன் மற்றும் சுமதி ஆகியோர் ஈழத்து, புலம்பெயர் திரைப்படங்கள் சம்பந்தமாக மேலோட்டமாக கதைத்துக்கொண்டிருந்தோம். இடையில் ஈழத்து திரைப்படங்களின் அடையாளம் எது என்ற கேள்வி என்னால் முன்வைக்கப்பட அது பெரிய விவாதப் பொருளானது. இலேசான தூறலுடன் மழை தொடங்கியிருக்க நாங்கள் படிகளுக்கு அருகில் அந்தரத்தில் இருந்த கதைப்போர் கூடம் போன்ற தோற்றமுடைய திறந்த தளத்திற்கு சென்றோம். கதிரைகளை அடுக்கிவிட்டு எல்லோருமாக மீண்டும் வாதிக்கத் தொடங்கினோம். எங்களோடு ஒவ்வொருவராக இணைந்து கொள்ளத் தொடங்கினார்கள். எழுத்தாளர் ஜீவமுரளி, எழுத்தாளர் கருணாகரன் அண்ணா என்று ஒன்றொன்றாகக் கூடிக்கொண்டே போனார்கள். காரசாரமான கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன. பலதரப்பட்ட கருத்து வேற்றுமைகளும் நீண்டு அகண்ட கருத்துநிலை உரையாடல்களும் இடம்பெற்றன. எல்லோருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. இரண்டு மணித்தியாலங்கள் நீண்ட ஆரோக்கியமான உரையாடல் முடிவிற்கு வந்தது. எல்லோரும் தத்தம் இடங்களுக்கு கலைந்து சென்றனர். இது நாங்கள் தங்கியிருக்கும் கட்டடத்தின் முதல் அறை. கிட்டத்தட்ட இரவு பதினொன்று பன்னிரண்டு வரும். நான், கிரிசாந்த், லதீபன், குமணன், மகி என்று வழமையானவர்களுடன் ஒரு புதிய முகம் சேர்ந்திருந்தது. புதிய முகம் என்றில்லை. எமக்கான முதல் அறிமுகம் அது தான். தமிழ் ஆசிரியர் ராமர் எங்களோடு இருந்தார். அன்றைய நாளின் முதல் அரங்கில் அவர் உரையாற்றியிருக்கிறார். காமன் கூத்தில் பாடியும் நடித்தும் தப்பிசைத்தும் இருக்கிறார். முக ஒப்பனைகளால் அவர் தான் என்பதை ஊகிக்க முடியாமல் இருந்தது. பெரும்பாலானோர் உறங்கியிருக்க குமணனின் புல்லாங்குழல் இசையிலும் டொலக்கின் மெல்லிய உரசலுடனும் மலையக பாடல்களை ராமர் அண்ணா பாடிக்கொண்டிருந்தார். இருட்டின் நிசப்தத்தில் அந்த இசையும் வரிகளும் குளிர்ந்த காற்றோடு கலந்து மஞ்சள் நதியின் சலசலப்பில் கலந்து மறைந்தன. தூக்கம் தொற்றியது.
ஹட்டன் குறிப்புக்கள்- 15
இரண்டாம் நாள் அதே குளிருடன் தொடங்கியது. இந்த முறை குளிப்பதற்கு கருணாகரன் அண்ணா இருந்த அறையின் குளியலறையை பயன்படுத்திக்கொண்டேன். அங்கே சுடுநீர் வந்தது. காலை உணவுடன் விழாக்கள் ஆரம்பமாகியது. எப்போதுமே மனிதன் முதலாவதைத் தான் நினைவில் அதிகம் வைத்திருப்பான். இரண்டாவது அரையும் குறையும் தான். முதன்நாள் இருந்த சுவாரஸ்ய தன்மையும் புதிதான மனிதர்களுடன் பழகப் போகின்றோமே என்கிற ஆவலும் இரண்டாம் நாள் தணிந்திருந்தது. இரண்டாம் நாள்தான் புத்தக அறிமுக நிகழ்வுகளுக்கான நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது. புதிய சந்திப்புக்கள் என்று எதுவும் இல்லை. நாங்கள் தனியாகவோ குழுவாகவோ எதையும் வாதித்துக்கொள்ளவில்லை. இரண்டாம் நாள் செழிப்பு அற்றதாகவே இருந்தது. மதிய உணவை லெனின் மதிவானம் உடனேயே சாப்பிட்டேன். கூடவே சில நினைவுப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன். சந்திப்புக்களை நினைவு கூற புகைப்படங்கள் இப்போது அவசியமாகிப் போகின்றன. பின்னேரப் பொழுது, சிறிது சுவாரஸ்யமாகப் போனது. எங்களிடம் மிகச் சிறந்த பாடல் புத்தகம் கிடைத்தது. அதற்கு நானும் ஸ்டான்லியும் குமணனும் இசை அமைத்துப் பாடினோம். இசை என்பதை விட விதம் விதமாகப் பாடினோம் எனலாம். வெகு நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக பாடினேன். மஞ்சள் நதியின் சலசலப்புக்கூட அதை விட இனிமையாக இருந்ததை நான் அறிவேன்.
ஹட்டன் குறிப்புக்கள்- இறுதி
ஹட்டன் இலக்கிய சந்திப்பு தொடர்பான கடைசிக் குறிப்பு இதுவாகத் இருக்கும். ஆழமாக பேச இரண்டாம் நாள் எதையும் மிச்சம் வைத்திருக்கவில்லை. இரண்டு முறை நாங்கள் ஏமாற்றப்பட்டு மூன்றாம் முறை புத்தக அறிமுகம் செய்ய வாய்ப்புக்கிடைத்தது. நாங்கள் கேட்டிருக்காவிட்டால் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம். அவை சரிக்கு சரி அரைவாசியாக இருந்து. அவை அரைவாசியானதிற்கு பொருத்தமான காரணங்கள் நிறைய இருகின்றன. சோர்வுற்றிருந்த சபைக்கு தேவை விடுதலை, அறிமுகம் அல்ல. அறிமுகத்தை அனோஜன் செய்திருந்தார். முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய நான் முன் இருக்கைகளில் அமர்ந்தேன். அறிமுகம் தொடங்கி இருபது செக்கன்கள் ஒளிபரப்பாகியிருக்கும். தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலையில் இருந்து இரண்டு முறை கேட்ட உரையை மூன்றாம் முறையாகவும் கேட்டேன். முதலிரண்டு முறையும் பேசுவதற்கு முன்னாயத்தமாக என்னிடம் பேசிக்காட்டினார். 7.20 ற்கு பஸ் கிளம்பும் என்றார்கள். ஆறு மணியவிலேயே டோல்பினுக்குள் திணிக்கப்பட்டோம். இரண்டாம் நாளின் குளிர் மிக வேகமாக கடந்து சென்றது. முதல் சந்திப்பில் இருக்கின்ற மாயம் ஏனோ இரண்டாம் சந்திப்பில் இருப்பதேயில்லை.