01. முதல் நாளுக்கு முன்னைய நாட்கள்
சில கிழமைகளுக்கு முன்னர் காலியில் உள்ள ருமசலவிற்கு சென்றிருந்தேன். காடுகள் மலைகளின் நடுவே அமைந்த அழகிய கடற்கரை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் உப்புத்தண்ணீரில் ஊறினேன். அதிகளவான கூட்டம் இல்லாத கடற்கரை. அதே நாளில் தான் கொழும்பு உட்பட மேற்குப் பக்கம் தாழ் அமுக்கமும் கடும் மழையுமாக இருந்தது. இது எதுவுமே அறியாமல் பளிங்கு நீரின் மேல் நீந்தத் தெரியாமல் மிதந்துகொண்டிருந்தேன். அதற்கு அடுத்ததாக இந்த மாதம் 26 , 27களில் பலாங்கொடைக்கு அடுத்திருந்த நன்பெரியல் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். நன்பெரியல் செல்லுவதற்கான திட்டம் ருமசல போய்த் திரும்பும் வழியிலேயே முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனியான வாட்சப் குழுக்கள் திறந்து தீவிரமாக திட்டங்கள் தீட்டினார்கள். துரதிஷடவசமாக எனக்குச் சிங்களம் தெரியாததால் அவற்றில் பங்குபற்ற முடியவில்லை. கூடவே திட்டமும் விளங்கவில்லை. 25, 26 என்றிருந்தது பின்னர் 26, 27 ஆக மாற்றினார்கள் என்று அறியத்தந்தார்கள். பொருட்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு வீட்டிலிருந்து 25ஆம் திகதி இரவு கொழும்பு புறப்பட்டு அடுத்த நாட் காலை பெட்டா புகையிர நிலையத்தில் இறங்கி பின்னர் மஹரகம சென்று அங்கிருக்கும் சில நண்பர்களோடு நேராக பலாங்கொடை பயணிப்பதே திட்டம். வவுனியாவிலிருந்து பலாங்கொடைக்கு தனியாக பேரூந்து அல்லது புகையிரம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்த் தான் இப்படியான சுற்றுப் பாதை.
எப்போதும் போல இரவு பத்தே முக்காலுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்ற குளிரூட்டப்பட்ட பேரூந்தில் வவுனியாவில் நின்று ஏறுவதாக திட்டம். சாதாரண பேரூந்தில் அல்லது புகைவண்டியில் அதிக தூரம் பிரயாணம் செய்வது எனக்கு மிகவும் கஷ்டம். தினகரன் பேரூந்திற்கு முன்கூட்டியே தொலைபேசியில் அறிவித்துவிட்டு பத்தே முக்காலுக்காக காத்திருந்தேன். சரியாக நான் ஏறுகின்ற இடத்திற்கு பத்தே முக்காலுக்கு வந்துவிடும். நான் அவ்விடத்திற்கு பத்தரைக்குச் சென்றுவிடுவேன். பத்து இருபது போல பேரூந்து நடத்துனர் தொலைபேசியில் தாண்டிக்குளத்தைக் கடந்துவிட்டதாகச் சொன்னார். தாண்டிக்குளத்திற்கும் நான் ஏறுகின்ற இடத்திற்கும் இடையில் இரண்டு கிலோமீட்டர் தூரம். நெஞ்சு முழுக்க படபடக்கத் தொடங்கியது. எவ்வளவு வேகமாச் சென்றாலும் பிடித்துவிடமுடியாது. போய் விட்டது என்றால் சாதாரண பேரூந்திற் தான் போகவேண்டும். அவசர அவசரமாக விடைபெற்று மாமாவுடன் ஏறுகின்ற இடத்தை அடைத்தேன். அங்கே எப்போதும் போல சிலர் பேரூந்துகளுக்காக காத்திருந்தார்கள். அவற்றுள் எனது பாடசாலை நண்பனும் அம்மாவோடு நின்றான். பதபதைப்போடு இறங்கி அவனிடம் நலம் கூட விசாரிக்காமல் தினகரன் போய்விட்டதா என்றேன். இல்லை என்றான். நிம்மதியாக இருந்தது. ஒரு வேளை அவன் கவனிக்கத் தவறிய கணம் ஒன்றில் மின்னல் வேகத்தில் கடந்திருந்தால்? இருக்காது. அவனிடமோ அம்மாவிடமோ பேசச் சந்தர்ப்பதைத் தராமல் பேரூந்து வந்து சேர்ந்தது இரண்டு மூன்று நிமிடங்களில். பத்து முப்பத்தைந்து வரும். இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். குறிப்புகள் எடுக்கவும் சரியான ஒழுங்கில் நிகழ்வுகளைக் குறிக்கவும் குறிப்புப் புத்தகம் ஒன்றைக் காவிச்சென்றேன். ஆனால் எழுத ஒன்றும் கொண்டுபோகவில்லை. அங்கே கடைகளிலோ நண்பர்களிடமோ வாங்குவது கடினமான காரியம் இல்லை. இருந்தும் வாங்கவில்லை. அதனால் அங்கங்கே சிதறியும் உருக்குலைந்து குறிப்புகள் வரலாம்.
பேரூந்து ஓட்டுநர் வழமையானவர் இல்லை. ஒருவேளை ஓமந்தையை தாண்டிக்குளம் என்று நினைத்துச் சொல்லியிருப்பாரோ? ஓமந்தை தாண்டிக்குளத்திலிருந்து 11 கிலோமீட்டர் முன்னால் இருக்கின்றது. நான் பின்னால் இருந்த இருக்கை ஒன்றிற்ப் போய் இருந்து குளிர்ச்சட்டையையும் தலைக்குள்ளவையும் அணிந்தேன்.
02. மாற்றுத் திறனாளிகளும் நம்பிக்கைத் துரோகமும்
பேரூந்தின் கடைசி ஐந்து இருக்கைகளிலும் சாவகாசமாக நித்திரை கொண்டபடியே அடுத்தநாட் காலை மூன்று முப்பதிற்கு பெட்டா புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். கொழும்பு நகரிற்குள் பெரும்பாலும் பேருந்துகளில் சன நெரிசலாகவே இருக்கும். ஆனால் அதிகாலைப்பொழுதில் அப்படியில்லை. இரண்டு மூன்று முறை மொறட்டுவைக்கு அதிகாலையிற் போன அனுபவம். 138ற்க்காக காத்திருந்தேன். நினைத்ததை விட புகையிர நிலையத்தில் சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. என்னிலிருந்து சிறிய தூர இடைவெளியில் வாய்பேசாத காது கேட்காத ஐவர் சைகைகள் மூலம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் வித்தியாசமான முறையில் உடுத்தியும் தலைமுடியை நிறம் தீட்டியுமிருந்தார்கள். என்னருகில் அழகான இளம் பெண்ணொருவர் தனது பயணப் பையுடன் உறவினருக்காக காத்திருந்தார். அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் மூலம் அரை குறையாக விளங்கிக்கொண்டேன். ஐவரும் எனக்கருகில் வந்து மெதுவாக சைகைகள் மூலம் அருகில் நின்ற பெண்ணை வம்பிழுக்கத் தொடங்கினார்கள். அப்பெண்ணின் கண்களில் பயம் தெரிந்ததது. அதைவிட அதிகமாக எனக்குப் பயமாக இருந்தது. என்னைப் பார்த்து உதவுமாறு வேண்டுவதாக கண்கள் பேசின. என்னை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கினார். அதற்குள் காலி – கொழும்பு பேரூந்து வர ஐவரும் பாய்ந்து ஓடி ஏறினார்கள். அவர் குனிந்து பயணப்பையை நிமிர்த்திய போது தான் உணர்ந்தேன் – போகும் போது அந்தக் காவாலிகள் அவரின் பயணப்பையை எத்திவிட்டு ஏறியிருக்கிறார்கள். நான் மன்னிப்புக்கூற அவரை நோக்கித் திரும்பினேன். அவரின் கண்கள் பணித்திருந்தன.
03. கலையும் பிச்சைக்காரனின் காரும்
மஹரகமவிற்கு என்று தனியாக பேரூந்துத் தரிப்பிடம் கிடையாது. பெயரில் ” கம ” என்று இருப்பதனாலோ என்னவோ. இரண்டு வீதிகளுக்கு இடையில் ஓடை ஒன்றிற்குற் தான் பேரூந்துகள் நிறுத்தப்படும். இப்போது கூகிள் வரைபடம் வேலை செய்தது. வீதியோரங்கள் ஓடைகள் என்று எல்லா இடங்களிலும் சாலையோரக் கடைகள். குறிப்பாக உடுப்புகள் விற்கின்ற கடைகள் ஏராளமாக காணப்பட்டது. இறங்கி மஹரகமவிலிருந்து என்னோடு இணைந்து வருகின்ற நண்பனுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன். நேரம் நான்கு மணியிருக்கும். அவன் ஐந்து முப்பதளவில் வருவதாகக் கூறினான். ஒன்றரை மணித்தியாலம் மீதமிருந்தது. மீண்டும் இங்கே தான் வந்து சந்திக்க வேண்டும். மஹரகமவைச் சுற்றிப்பார்க்க நடக்கத் தொடங்கினேன். முக்கால்வாசிக்கு மேல்ப் பெண்கள் தான் நின்றார்கள். பலர் ஏற்கனவே மரமேசையில் உடுப்புகளை விரித்திருந்தார்கள். பெரும்பாலானவை உள்நாட்டில் தைக்கப்பட்டவை. ஆண்கள் உடைகள் பெண்கள் உடைகள் குழந்தைகளினுடையவை என்று எல்லாவகையான உடுப்புகளும் இருந்தன.நான்கு மணிக்கு முன்னரே வியாபாரத்தைத் தொடங்கியிருந்தார்கள். தலையைக் குள்ளாக்கள் கவ்வியிருந்தன. குளிர் அங்கி அணிந்திருந்தார்கள். அவர்கள் எவரின் முகத்திலும் சோம்பலையோ நித்திரைக் கலக்கத்தையோ காணவில்லை. பெரும்பாலும் அவர்களின் வியாபாரத்திற்கென நிரந்தர இடம் இருக்காது. முன்னால் வருகின்றவர்கள் இடங்களைப் பிடித்துக்கொள்வார்கள். சிலர் தமது வாகனங்களில் வந்து இடைவெளிகளில் உடுப்புகளை வேகமாக இறக்கி தமக்கான வியாபார இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மந்தமான வெளிச்சத்தில் மஹரகமவின் வியாபாரம் தொடங்கியது.
நான் நண்பனுக்காக காத்திருக்கவேண்டிய இடம் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால். கூகிள் வரைபடத்திற் தேடி நடக்க ஆரம்பித்தேன். வியாபாரம் நேரத்துடன் அதிகரித்தது. ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சன நடமாட்டம் அதிகமான இடமாக விரைவாக மாறியது. வரைபடத்தைத் தொடர்ந்து நடந்தேன். நான் கண்ட பல பெண்கள் தமது காரிலேயே உடுப்புகளைக் கொண்டுவந்து – எடுத்து – அடுக்கினார்கள். எனக்கு மனதிற்குள் மெலிதாக சில எண்ணங்கள் தோன்றின. அவர்கள் வசதியானவர்கள். உடைகளை விற்பதை வியாபாரமாக இல்லாமல் மனநிறைவாகப் பார்க்கின்றார்கள். தாமே தைத்து எடுத்துவந்த ஆடைகள் விலைப்படும் போது அவர்கள் சந்தோஷிக்கின்றார்கள். தமக்கான அங்கீகாரம் கிடைப்பதாக உணர்கிறார்கள். இவை எல்லாம் தான் குளிரின் மத்தியில் இந்த அதிகாலையில் அத்தனை செழிப்பாக அவர்களை வைத்திருக்கின்றது. அவர்கள் இதைக் கலையாக உணர்கிறார்கள்.
ஒருவழியாக தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால் வந்து நின்று பார்த்து திகைத்துப்போனேன். அவ்விடம் நான் முதலில் பேருந்திலிருந்து இறங்கிய இடத்தின் எதிர்ப்பக்கம். நிதானமாக யோசித்துப்பாருங்கள். இரண்டு பெரிய வீதிகள் இடையில் ஒரு வெற்றிடம். அது தான் மஹரகமவின் பெயரிடப்படாத பேரூந்து நிலையம். இறங்கியது ஒரு பக்கம் – இப்போது நிற்பது எதிர்ப்பக்கம். இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மேலே நேரம் மீதமாக இருக்கிறது. கடை ஒன்றிற்குள் நுழைந்து நெஸ்கோப்பி ஒன்றும் மீன் பணிஸ் ஒன்றும் சாப்பிட்டேன். மீண்டும் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு அருகில் நடந்துவந்து லொத்தர் சபை ஒன்றின் கூடாரத்திலிருந்த மரப் பலகையிலாலான இருப்பதற்கு ஏற்ற குற்றி ஒன்றிலிருந்தேன். அருகில் லொத்தர் போட்டியில் வெற்றி பெற்றால் கொடுப்பதற்காக கார் ஒன்று புதிதாக நிற்பாட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் யாருமில்லை. குற்றியிலிருந்தபடி வியாபாரம் நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன்.
சிறிது நேரத்தில் வயது போன ஒருத்தர் என்னை நோக்கி நடந்துவந்தார். பார்க்க மிகவும் ஏழையாகத் தெரிந்தார். கந்தலான உடுப்பே அணிந்திருந்தார். என்னைச் சுற்றி வந்து அங்கு நின்ற காரின் பின் கதவைத் திறந்து கையில் பற்தூரிகையுடன் வெளியே வந்தார்.
04. வித்தியாசம்
நான் திகைத்துப்போய் ஸ்தம்பிதம் ஆனேன். அது ஒரு டொயாட்டோ கார். சுற்றி விளம்பரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த வயதானவர் பல்லை மினுக்கி முகமும் கழுவிக்கொண்டு துவாயையும் காருக்குள் இருந்தே எடுத்துத் துடைத்தார். அவர் தனது அறையைப்போல காரினைப் பயன்படுத்தினார். நான் பெரும் குழப்பமடைந்தேன். மிகவும் கேவலமான உடை – டொயாட்டோ கார் – பெரும் முரண் ஒன்று. என்னிடம் சிங்களத்தில் ஏதோ சொன்னார். அவரின் சிங்களத்தில் நான் அறிந்த சிங்களம் எதுவும் இன்மையால் ஒன்றுமே புரியவில்லை. நான் சிரித்தபடியே பதிலளித்தேன். இருந்தும் குழப்பம் தீரவே இல்லை. சாத்தியமற்ற நிகழ்வு. இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது, மஞ்சள் கோட்டில் வயதானவர் ஒருத்தர் கால்களை அரக்கி அரக்கி வீதியைக் கடந்தார். அவரால் சிறிது நேரம் வாகனக் குளறுபடி ஏற்பட்டது. எனக்குப் பின்னால் நின்ற அதிசயமான மனிதர் – அந்த வயதானவரைப் பற்றி என்னிடம் நக்கலாகச் சிரித்துக்கொண்டு ஏதோ சொன்னார். அது பெரும்பாலும் அந்த வயோதிபரின் நடையைப் பற்றியதாகவே இருக்கும். அவருக்கு நடை வித்தியாசமாக இருந்திருக்கலாம் – எனக்கு நீங்களே வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று சொல்ல மொழி தெரியவில்லை.
நான் குற்றியில் இருக்க நண்பன் வந்து சேர்ந்தான். தனித்திருந்த பொழுதுகள் நிறைவுற்றன. மெலிதாக வானம் வெளிக்கத்தொடங்கியது. இருட்டிற்குள் தனியாக அலைந்து திரிந்தது ஒன்றை உணர்த்திச் சென்றது. நான் நினைப்பது போல மனிதர்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் இல்லை.
05. இரண்டு சுவரொட்டிகள்
என்னோடு சேர்த்து ஆறு பேர் மஹரகமவிலிருந்து பதுளை புறப்படுகின்ற பேரூந்தில் ஏறினோம். பதுளைக்குச் செல்லுகின்ற வழியிற் தான் பலாங்கொடை. பலாங்கொடையிலிருந்து அடுத்த இடம் நான்பெரியல். சரியாக பலாங்கொடையை அடைய மூன்று அரை மணித்தியாலங்கள் எடுக்கும். தொங்கல் இருக்கைகளில் யன்னற் பக்கமாக அமர்ந்துகொண்டேன். இது குளிரூட்டப்பட்ட பேரூந்து அல்ல என்பதால் மனம் மெதுவாக சஞ்சலப்பட்டது. பயணம் தொடங்கியது. நேரம் ஆறு மணியிருக்கலாம். குளிர்ந்த காற்றின் மெல்லிய வருடலோடு அயர்ந்து தூங்கினேன். இதனைத் தூக்கம் என்று சொல்வது மிகச் சரியாக இருக்காது. குறுகிய நேரத்திற்கு ஒரு முறை ஏற்படுகின்ற பெரிய குழுக்களில் விழித்துக்கொள்வேன். பயணத்தின் போது வெளிச்சம் பரவியதே ஒழிய சூரியனைக் காணவில்லை. சாப்பிட ரத்னபுரியில் இறங்கினோம். மற்றபடி தொடர் குலுக்கல்களும் நித்திரையும் தான். கண்விழித்துப்பார்க்கின்ற இடங்களில் எல்லாம் இரண்டு விடயங்களைத் தவறாமல் கண்டேன். ஒன்று தேர்தல் சுவரொட்டிகள். மற்றையது பிரத்தியோக வகுப்பின் சுவரொட்டிகள். இரண்டு வகையான சுவரொட்டிகளும் ஒரே பாணியில் இருந்தன. அரசியல்வாதி யார் ஆசிரியர் யார் என்பதே தெரியவில்லை. பெருமபாலான சுவரொட்டிகளில் இருக்கின்ற சின்னங்களை வைத்தே பிரித்தறிந்துகொண்டேன். அதிலும் சில சின்னங்கள் அலங்காரப்பொருட்கள் மாதிரித் தெரிந்தன. ஆசிரியர் காதுகளில் கேட்பொறியும் மாக்கர்களுமாக நின்றார்கள். வர்த்தகப்பொருள்களின் விளம்பரங்கள் கூடக் கண்களுக்கு அகப்படமுடியாத அளவு வகுப்புகளுக்கான விளம்பரங்கள் யுத்தியாக ஒட்டப்பட்டிருந்தன. இந்தக் கலாசாரம் வவுனியாவில் இல்லை என்பது ஓரளவு சந்தோசம். அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் கூட ஆசிரியர்களின் அளவு நுட்பமாக எடுக்கப்படவில்லை. பலாங்கொடை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அண்மையில் இறங்கி பலாங்கொடையில் வசிக்கின்ற நண்பன் வீட்டிற்கு செல்ல தயாரானோம். நண்பனின் வருகைக்காக ஒரு கார் திருத்தும் கடை அருகில் இறக்கப்பட்டிருந்த ஷெட் ஒன்றின் கீழ் நின்றோம். அங்கிருந்த கார்கள் முதலிற் பார்த்த டொயாட்டோ காரையும் பல்லுவிளக்கிய அதிசய மனிதனையும் மீண்டும் ஞாபகப்படுத்தின.
06. பத்
சிறிது நேரத்திற்குள் நண்பன் காரில் வந்து சேர்ந்தான். எல்லோருக்கும் இடம் போதாமையால் முச்சக்கர வண்டி ஒன்றையும் பிடித்துக்கொண்டோம். பதுளை செல்லுகின்ற வீதியில் கிளை வீதியாக அல்லது தெருவாக குத்தன எழுந்து போகின்ற தெருவின் கடைசி வீடு அவனது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணிநேர பிரயாண அலுப்பு. தலை கழுத்து கை கால் என்று உடெல்லாம் தூக்கிப்போட்டது. அவனது வீட்டிலேயே குளித்துவிட்டு காலை உணவை எடுத்தோம். சிறிய நேர இடைவெளிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேரவேண்டியவர்களும் வந்து சேர்ந்தார்கள். எல்லோருமாக காலை உணவை எடுத்தோம். எமது வீடுகளில் காலை உணவாக பிட்டோ இடியாப்பமோ தோசையோ ரொட்டியோ அல்லது பாணோ சமைப்பார்கள். ஆனால் முழுப்பிராயணத்திலும் ஆறுவேளை சாப்பிட்டேன். ஆறு வேலையும் ” பத் ” தான். அவர்களுக்கு சோறு பிசா போலத் தெரிகிறது. வீட்டில் ஒரு வேலை சோறு சாப்பிடுவதே பெரிய விடயம். ஆறுவேளை தொடர்ந்து சோறு என்றால். சிங்களவர்கள் பழக்கப்பட்டிருந்தார்கள். இரண்டாவது நாளின் இரவுச்சாப்பாட்டை வெளியில் எடுக்கவேண்டியதாகப் போயிற்று. இரண்டு பேர் சாப்பாடு எடுத்துவருகிறோம் என்று வெளிக்கிட்டார்கள். நானும் இப்போதாவது பாராட்ட, கொத்து என்று ஏதாவது கொண்டுவருவார்கள் என்று பார்த்தால் அப்போதும் பத் தான். ஆனால் ஒன்று ஒவ்வொரு வேளை பத்துடனும் கோழிக்கறியும் கருவாடும் நன்றாக சமைத்துத் தந்தார்கள். இரண்டாம் நாள் காலை மலை ஏறுவதற்காக காலை மற்றும் மதிய உணவுகளைக் காவிக்கொண்டு போகவேண்டும். மலையில் ஏறும்போது எமது உடலைக் காவுதலே பெரும்பாடு இதில் இரண்டு வேளை சாப்பாட்டையும் காவுதல் மெத்தக் கஷ்டமான விஷயம். எப்படியும் மதியம் சோறு தான். காலைக்கு இடியாப்பமோ பணிசோ பாரமற்ற சாப்பாட்டை எடுத்து சென்றிருக்கலாம். ம்ஹிம் – அப்போதும் பத் தான். சரி சாப்பாட்டைப் பற்றிச் சொல்லியதால் இன்னமும் தொடர்வோம்.
07.குளிர் காற்று
நாங்கள் தங்கியிருக்கப் போகின்ற கொட்டகைகள் வீதியிலிருந்து உள் நோக்கி 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தன. எங்கள் வருகைக்கு முன்னரே கொட்டகைகள் எல்லாம் அடித்து தயாராக வைத்திருந்தார்கள். எல்லோரும் ஆமி. அவர்களே எல்லா வேலைகளையும் செய்தார்கள். எங்களை மாத்தையா என்றே அழைத்தார்கள். நாங்கள் தங்கியிருக்கும் கொட்டைகைகளுக்கு மற்றப் பக்கம் ஒரு பெரிய மரத்தடியினை குத்தி வைத்து அதைச்சுற்றி சிறிய மரக்கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தார்கள். எங்களை அன்புடன் வரவேற்றார்கள். நாங்கள் எங்கள் உடைமைகளை கொட்டகைக்குள் வைத்துவிட்டு குளிப்பதற்காக மாற்று உடுப்புகளுடனும் கரப்பந்துடனும் நடக்கத்தொடங்கினோம். அப்போது நேரம் இரண்டு அல்லது மூன்று மணியிருக்கும். குளிப்பதற்காக ஆறிற்கு செல்லவேண்டும். ஆறு நாமிருக்கின்ற இடத்திலிருந்து 500மீட்டர் மேல்நோக்கியிருக்கிறது. நாங்கள் கதைத்துக்கொண்டே நடந்தோம். வீதியின் கரைகளில் நின்ற மரங்களுக்கு சிங்களத்தால் பெயர்பலகையிட்டிருந்தார்கள். அவற்றை உச்சரித்தபடியே நடந்தேன். எங்களைக்கடந்து வாகனங்கள் போகவும் வரவும் பார்த்தோம். எதிரே வீதி இரண்டாகப் பிரிந்தது. நாங்கள் ஒடுங்கிய பாதையை தெரிவு செய்து வாகனங்கள் தரிப்பிடத்தைத் தாண்டி நடக்க கரப்பந்தாட்ட மைதானம் தெரிந்தது.
ஏற்கனவே இருபது பேர் அளவில் அங்கங்கே குளித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பாறையின் வழி கீழே இறங்கி ஆற்றின் மற்றப் பக்கத்தை அடைந்தோம். ஆற்றின் வழியெங்கும் பாறைகள் தென்பட்டன. இரண்டு அல்லது மூன்று கற்களின் இடுக்குகளினூடாக தூய்மையான தண்ணீர் பீச்சிக்கொண்டு பாய்ந்தது. உள்ளங்கால் நீரில் பட உடெல்லாம் சிலிர்த்தது. ஆற்றுப் படுக்கையினூடாக சிதறியிருந்த குறுகிய பெரிய பாறைகளைக் கடந்து 100 மீட்டர் அளவில் நடந்தும் அரக்கியும் ஊர்ந்து சென்று குளிப்பதற்கான சரியான இடத்தைக் கண்டு பிடித்தோம். அதில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையினூடாக தூய்மையான நீர் வேகமாகப் பாய்ந்து வந்தது. பின்னர் ஒரு சமதரையான இடம். நான் முதலில் வேகமாகப் பாய்ந்து வருகின்ற நீரில் முதுகை ஒத்தியவாறு அமர்ந்து ஆற்றின் முழுகுளிரையும் என்னுள்ளே இழுத்தேன். தண்ணீர்த் துளிகள் முதுகில் பட்டு கழுத்தின் இருபுறமாகவும் பாய்ந்தது. ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள். எங்களுக்கென நிரந்தமான இடம் என்று ஏதும் இல்லாமல் அங்கும் இங்கும் நகர்ந்து குளிரினை வாங்கிக்கொண்டோம். மற்றவர்களுக்கு சலிக்காமல் குளிரினைக்கொடுத்தோம். தண்ணீரினை ஏத்தி ஏத்தி விளையாடினோம். பளிங்கு போன்ற தண்ணீரின் நிறம் எப்போதும் மாறவில்லை.
ஆ அந்த கொட்டகைகள் தாயாராகியிருந்த இடத்தின் பெயர் “கெமுனு வாச்”.