கல்வி – தாகம் – வாழ்வு

’தம்பி டேய் இன்னொன்டு கொண்டு வா..’ ,
அவன் மீதிருந்த பயத்தால் அதற்கும் பார் கடை சர்வர் தலையாட்ட வேண்டியதாய் போயிற்று. தெருவின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது லாகன் பார் கடை. ஆரம்பத்தில் விசேட மது சோலை என்றிருந்த கடை தான் கால ஓட்டத்தில் மூன்றாம் தலைமுறை உரிமையாளரால் லாகன் பார் என மாற்றப்பட்டது.
‘ இதோட எத்தினயாவது, இவன் ஓசில குடிக்கிறதுக்கு என்ன இது மெயின் ரோட்டு டியூப் வெல்லா? அவனுக்கு இனி கிடையாது. ஊத்தினதுக்கு காச வாங்கிட்டு ஆள வெளிய அனுப்பு.’ , இதற்கு பழைய பலசரக்கு கடை வேலையே மேல் என்று மனதிற்குள் நொந்து கொண்டே மேசைக்கு வெறுங்கையுடன் சென்றான்.
அந்த குடிகாரன் எந்த தெரு மதுக்கடையையும்  விட்டு வைத்ததில்லை. எல்லா கடையிலும் நிறைய கடன் , நிறைய சிகரட் கட்டைகள் , நிறைய பேச்சுக்கள், நிறைய மோதல்கள், கொஞ்ச அடிகள் அது தான் அந்த குடிகாரன் வைத்திருந்த சொத்து.
‘எங்கடா போத்தல்? தரமாட்டன் எண்டானா? சொல்லுடா சொல்லு, நான் யாரண்டு இவனுகளுக்கு தெரியாட்டியும் அவனு…………’ இது சர்வருக்கு சகஜமாக போன கதையாகி விட்டது.
‘ ஆமா இவன் பெரிய பட்ஸ்மான் ,பெரிய வ்லாஸ்பாக் இவன்ட கதய கேக்குறதுக்கு அடுத்த கஸ்டமர கவனிச்சா துட்டாவது தேத்தலாம்.’ என்று முணுமுணுத்தபடி பார்வையை அடுத்த மேசைக்கு திருப்பினான்.
கடையின் மேலே சிகரட் தூசு படிந்த மூலையில் ஆயிரத்து தொள்ளாயிரங்களில் வாங்கிய தொலைக்காட்சி பெட்டி அதே பழைய பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
அடுத்த மேசைக்காரன், ‘ தம்பி ஒரு பக்கட் சிகரட்.’ என்றவுடன் அவன் திரும்பி ,’ இப்ப தாரன் அண்ணா. வேற ஏதும்?’
பார்வை வேண்டாம் என்றது.
அவன் மீண்டும் திரும்பி உளறிக்கொண்டிருந்த குடிகாரன் மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்து பொத்தான்களை அமத்தினான்.
“Thats out , great bowling from Stoac , Kali goes for a duck , and deep silence at Eden garden….”
அமைதியாக அவனும் திரும்பினான்.
சட்ட்ட்………….
அவன் அமைதி குலைந்துக்கொண்டது. அவன் நின்ற இடமெல்லாம் சிவப்பு நிற திரவம் கண்ணாடி உடைசல்களில் தக தக என்று ஜொலித்தது. தன் கதையை அலட்சியபடுத்தியதால் அந்த குடிகாரன் தான் குடித்த கால் போத்தலால் சர்வரின் நடுத்தலை பிளந்தான்.
அவன் மீண்டும் திரும்பி உளறிக் கொண்டிருந்த குடிகாரன் மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்து பொத்தான்களை அமத்தினான்.
இவன் தன் பேச்சை கேட்பதாய் இல்லை , ‘ எவ்வளவு பெரிய மனுசன் நான் , நான் லூசன் மாரி அலம்பிட்டு இருக்கன் இவன் டீவிய புடுங்கிட்டு இருக்கான். இவன…’ என்று கொண்டு தான் குடித்து முடித்த கால் போத்தலை கைகளால் இறுக்கினான்.
“Thats out , great bowling from Stoac , kali goes for a duck , and deep silence at Eden garden….”
அமைதியாக அவனும் திரும்பினான்.
சட்ட்ட்………….
போத்தல் வாய் மட்டும் கைக்குள் பிடிபட்ட நிலையில் கொஞ்சம் தரையிலும் கொஞ்சம் சர்வர் தலைக்குள்ளும் சிதறிப்போய் இருந்தன. மதுவுடன் கலந்த ரத்தம் சிதறியதால் தரையும் , சர்வரும், குடிகாரனும் தள்ளாடி சிவந்த கண்ணாடி துகள் மேல் விழுந்தனர்.
சர்வரின் முகம் ரத்ததில் சிவந்திருந்தது. உயிர் கலியை போல பவிலியன் திரும்பிக் கொண்டிருந்தது எதுவும் சாதிக்காமல்.
சர்வர் இப்போது உளற ஆரம்பித்தான்,
“நான் யாரண்டு இவனுகளுக்கு தெரியாட்டியும் அவனுக்கு நல்லா தெரியும். நான் உன்ன இங்க வேலைக்கு விடேக்கயே சொன்னான் என்ர மோன் இங்க சம்பாதிக்கிற ஒவ்வொரு சல்லி காசும் என்ர குடிக்கு மட்டும் தான் என்டு. இப்ப உன்ர சம்பளத்த ஒளிச்சு வச்சுக்கொண்டு எனக்கு ஊத்த மாட்டன் என்றானோ.. அதானே அப்பா. என்ர சம்பளத்த இந்த முறை நான் எடுத்து எட்டாம் ஆண்டு திரும்பி படிக்க பள்ளி கூடத்துக்கு நன்கொடையா குடுத்துட்டன் அப்பா. இல்லாட்டி சேக்க மாட்டினமாம். வெறிக்குட்டிட பொடியன் என்டுறதால நம்புறாங்க இல்லப்பா. அது தான் அதிபர்டயே கொண்டு போய் குடுத்துட்டன். அப்பா தலை நோகுதப்பா. அம்மா கூப்பிடுற மாரி இருக்கப்பா. அப்பா அப்ப….”
மது , இரத்தம் , கண்ணீர் இவற்றால் கரைந்து போனது சர்வர்-கஸ்டமர் என்னும் புனித உறவு.
மது – இரத்தம் – கண்ணீர்
கல்வி – தாகம் – இறப்பு

Leave a Comment