உதிர்ந்த இசைச்சொல்

(01)

 

பேகன் இறந்த இருபத்தாறாவது வருடத்தின் கனத்த பொழுதொன்றில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். உடல் முழுக்க ரத்தத்தைப் பாய்ச்சி அடிக்கும் வலிமையான இதயம் தனது வலிமையை இழந்துகொண்டிருக்கின்ற இந்தக் கணம் ஓவியங்களைப்பற்றி எழுதுவதொன்றும் இனிமையானதல்ல. அடுத்த தெருவில் இதயம் அடைத்து அதிகாலையில் இறந்து போன, தெரிந்தும் தெரியாததுமான ஒருவரின் ஆத்மா உடலிலிருந்து கிளம்பி இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கும் காலத்திற்குள் என்னால் எழுதுவதென்பது சாத்தியமற்ற ஒன்று. ஓவியம் மட்டுமல்ல, எந்தக் கலையைப் பற்றியும் அணுவளவும் தெரிந்திராத வதைக்கூடமொன்றுக்குளிருந்து எழுதுவது தண்டனை. சுய வெறுப்பைப் போல வேறெதுவும் கடினமானதல்ல என்றுணர்ந்த பொழுதில், அதன் அலைகள் கூட இன்னமும் அகன்றுபோகாத மென்மஞ்சள் வெயில் நாளொன்றில் பேகனைப் பற்றி எழுதி என்னாகிவிடப்போகிறது. சூரிய ஒளிக்கு கண்ணாடியைப்போல ஒளிர்ந்துகொண்டிருக்கும் பச்சை நிற இலைகளை ஒத்துக் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒன்றைத்தேடி உடைந்த மரச்சட்டகங்களும் கீலங்களாக கிழிக்கப்பட்டு குமித்துவைக்கப்பட்டிருக்கும் தடிப்பான மட்டைகளும் குத்திக் கிழிக்கப்பட்ட ஓவிய மிச்சங்களும் திண்மத் திட்டுகளாகிப்போன வண்ணக் கலவைகளுக்குள்  இறுகிப்போன தூரிகளும் கறுப்பும் பச்சையும் சாம்பலும் சிவப்பும் மண்ணிறமும் இன்னும் எத்தனையோ பெயர் அறியாப்பொருட்களும் நிறைந்திருந்த அந்தக் குப்பைக்கூடத்திற்குள் தெளிவற்று மங்கலாகிப்போன வட்டக் கண்ணாடியின் முன் பேகன் தன் முன்முடிகளை இடக்கையில் முதன்மூன்று விரல்களாலும் சீர்படுத்திக்கொண்டிருக்கும் அந்தக் கணம் நிர்வாணமான என் உடலை முன்னிறுத்தி பேகனின் தோளை அழுத்தமாகப் பிடித்துத் திருப்பினேன்.

 

என்னுடல் மீது கவிந்திருந்த இளங்கறுப்பும் அங்கங்கே மழிக்கப்படாமல் கற்றைகளாக வளர்ந்திருந்த முடிகளும் இறுக்கமற்றுப் போயிருந்த தசைகளும் முதற்பார்வையிலேயே பேகனுக்கு அருவருப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சிறிய பலாக்கொட்டைகளைப்போன்ற கண்களிரண்டையும் இளம்பெண்ணுக்குரிய நளினத்தோடும் வெறுப்போடும் சிமிட்டியபடி என்னைப் பார்த்தார். ஒரு கிழமைக்கு முன்னர் மழித்த கன்னங்களில் அரும்புகளாக முளைத்திருந்த தாடியைக் கூர்ந்து பார்த்த பின்னர் தன்னுடைய கண்களை மேல்நோக்கிச் செருகி மேலுதட்டைக் கீழ்வாய்ப்பற்களுக்குள் இழுத்தார். மையிட்டிருந்த என் கண்களின் மீது அதீதமான கவர்ச்சியை அவர் உணர்த்திருக்கக்கூடும். பருத்திருந்த என்னுடலில்  கவர்ச்சியைத் தரக்கூடிய ஒரே உறுப்பு கண்களாகத்தான் இருக்கும். நாளொன்றில் இரண்டு வேளைகள் கண்களுக்குக்  கருமையிட்டு அழகுபார்த்துக்கொள்வேன். நிர்வாணமான ஆணுடலின்  மீது எந்தக் கறையும் இருப்பதில்லை. ஆணுடல் வெளிப்படையானது. நேர்த்தியற்றது. ஒழுங்கற்ற குன்றைப்போன்றது. பிடிப்பான தசைகளும் வெண்மையான தேகமும் நிர்வாணத்தில் பெண்மையையும் வெளிப்படுத்தக்கூடிய உடலல்ல என்னுடையது. என் அழுத்தமான பிடிப்பினை அவர் விலக்கியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யவில்லை. சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தோம். எங்களால் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று மௌனமாயிருத்தல் மட்டுந்தான்.

 

(02)

 

” ஓரினச்சேர்க்கை அழகினால் மட்டுந்தான் ஏற்படுகிறது” என்று மௌனத்தை உடைக்கும் போது எனக்குள்ளிருந்த ஆண்மையை உணரத்தொடங்கினேன். பத்து வயது சிறுவனைப்போல பேகன் இதனைச் சொன்னார். வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கத் தெரியாமல் இரண்டு பூக்கள் காற்றில் மோதிக்கொள்வதைப்போல அந்தச் சொற்கள் சத்தமிட்டன. நாங்கள் மௌனித்திருந்த அத்தனை நேரமும் என்னையொரு பெண்ணாக உணர்ந்திருந்தேன். மௌனத்தில் காமம் அடர்ந்திருந்தது. ஓவியம் ஒன்றிலிருந்து வழிந்தோடும் வண்ணம் போல உருகி ஓடியது. பேகனின் வெளிறிய மஞ்சள் நிறக்கண்கள் என்னிலிருந்து விலகி ஓரத்திலிருந்த மென்நீலச்சட்டையின் மீது தாவியது. அத்தாவல் முதலுறவில் வெட்கித்துப்போன பெண்ணொருத்தியின் பார்வையைப்போல தூய்மையாயிருந்தது. அந்த மேற்சட்டையையும் அதற்கு அங்காலிருந்த நீளக் காற்சட்டையையும் எடுத்து நீட்டினார்.  என் நிர்வாணத்தில் நீண்டநேரமிருக்க பேகன் விரும்பவில்லை. நிர்வாணம் ஒரு போதையல்ல என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார். என்னுடல் பிதுங்கிப்போகும் அளவு இறுக்கமான ஆடைகளை வலிந்து அணிந்து கொண்டேன். யாருக்கும் எதுவும் சரியாய்ப் பொருந்திப்போவதில்லை. நாம் தான் அவற்றிற்குள் செருகிக்கொள்ள வேண்டப்படுகிறோம். பேகனுக்காக ஆடைகளுக்குள்  செருகிக்கொண்டேன். அணிந்த ஆடை பேகனின் பார்வையைப்போல இதமாக அழுத்தியது.

 

” வா இவற்றை அள்ளிக் குவிக்கலாம் ” என்று அறையெங்கும் பரவியிருந்த கீலங்களைக் காட்டினார். ஒவ்வொன்றும் ஆயிரம் வண்ணங்களின் சேர்கையாகத் தெரிந்தது. நிச்சயம் அவை அவரின் ஓவியங்கள் தான். புயலொன்றில் சிதைந்துபோன கவிதையைப்போல அவை புள்ளிகளாக மிதந்துகொண்டிருந்தன. இசைத்தட்டொன்றின் பின்புறத்திலிருக்கின்ற வண்ணங்கள் மாயாயாலம் செய்வதைப்போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணத்தில் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. தன் கால்களால் அவற்றைக் குவிக்கதொடங்கினார். பேகன் ஓவியங்களை நேசிக்கவில்லை. கண்ணீரைப்போல மலத்தைப்போல அத்துமீறிவளர்ந்த நகத்தைப்போல ஓவியங்களையும் பொருட்டில்லாத பாவனை செய்தார். நான் இறுக்கமான காற்சட்டை கிழிந்துவிடும் என்ற பயத்திலும் நெருக்கடியிலும்  மெதுவாக குனிந்து கைகளால் குவிக்கத்தொடங்கினேன். அவை ஒன்றின் மீது ஒன்று மருவும் போதும் அருகருகில் சென்று குவியும் போதும் ஒன்று ஒன்றிற்குள் மறையும் போதும் புதுப்புது ஓவியங்களாக மாறிக்கொண்டேயிருந்தன. ஒவ்வொரு கணமும் தம்மை புதுப்பித்துக்கொண்டன. தாங்கள் சிதைந்ததை  எண்ணிக் கவலையுறவில்லை. அவை சந்தர்ப்பங்களில் தனித்து நின்றும் சேர்ந்து நின்றும் ஓவியங்களை வரைந்தன. ஒவ்வொன்றிற்கும் தனித்த மனமிருந்தது. அது பேகன் கொடுத்ததோ நான் கொடுத்ததோ அல்ல. எல்லாக்கீலங்களும் மரச்சட்டகங்களும் ஒருமிக்கக்குவிந்து பிரமாண்டமான ஒளியொன்றாய் உருவாகின. நிறமில்லாத தூய ஒளி. அவை அழகின்மையிலிருந்து  உருவாகிய ஒவ்வொரு உயிரினதும் ஒளி. உலகத்தில் தனித்துவிடப்பட்ட எல்லா பொருட்களினதும்  ஒளி. கைவிடப்பட்டு உக்கிப்போன என் பதின்ம வயது சைக்கிளின் ஒளி. எழுதி எழுதி அடுக்கப்பட்டு பின்னர் கொடுக்கவே முடியாமல் கரையான் அரித்து பொட்டலமாகிப் போன கடிதங்களின் ஒளி. அந்த நிறமற்ற பேரொளியில் மறைத்துவைத்த ஞாபகங்கள் உயிர்தெழுந்துகொண்டிருந்தன. ஒளியாலான பெருங்குவியல்  வண்ணத்துப்பூச்சியின் ஒரு பக்கச் செட்டையைப்போல துடித்துக்கொண்டிருந்தது. மற்றைய செட்டை எந்தச் சலனமுமின்றி மீதமிருக்கின்ற சில கீற்றுக்களை ஒவ்வொன்றாக குவியலுக்குள் தள்ளிக்கொண்டிருந்தது.

 

தன்னறையின் ஓரத்திலிருந்த மதுப்போத்தல் ஒன்றையும்  நீண்ட கழுத்துக்களைக்  கொண்ட இரண்டு கண்ணாடிக் குவளைகளையும் தூக்கிக்கொண்டு ” இந்த மலத்தை நீயே அள்ளிக்கொண்டு வா” என்று முகம் அருவருக்கச் சொன்னார். ” ஒரு குவளை போதும்” என்றேன். காற்றில் பனி படர்வதைப்போல சொற்கள் உறைந்து விரிந்தன. ” நான் குடிப்பதில்லை, அதன் வாசனை நாக்கினை தடிக்கச்செய்து விடுகிறது. வலது கால் பெருவிரல் கூட அதன் புளித்த நாற்றத்திற்கு வீங்கி நடக்கமுடியாமற் போகிறது “என்று தொடர்ந்தேன். குழந்தை புதிய நிறமொன்றை ஆச்சரியமாகப் பார்பதைபோல உறைந்து போன என் சொற்களைப் பார்த்தார். எப்போதும் இரண்டிற்கு மேற்பட்ட குவளைகளை நிறைத்திருக்கக் கூடிய பேகன், ஒன்றை மட்டும் எடுத்துச்செல்வதில் விருப்பமற்று ” சரி உன் இஷ்டம் ” என்றார். ஆனால் இரண்டு குவளைகளையும் காவினார். நான் முடிந்தளவு பக்குவமாய்க் கீலங்களையும் மரச்சட்டகங்களையும் அள்ளிக்கொண்டுபோய் வாகனத்தின் பின்புறத்தில் குவித்தேன். மூன்று முறையில் முழுவதுமாக எடுத்துமுடித்தவுடன் வாகனத்தின் அருகில் புகைத்துக்கொண்டிருந்த  பேகனை பார்த்துத் தலையசைத்தேன்.

 

அந்தி சாயும் நேரத்தில் அவருருவம் ஒரு குட்டிப்பன்றியைப்போலத் தெரிந்தது. கறுப்பு நிற நீள மேலங்கியை முழங்கைக்கு மேல் இழுத்துவிட்டு வெகு லாவகமாகப் புகைத்துக்கொண்டிருந்தார். இன்னும் முகச்சுருக்கமே விழத்தொடங்கியிராத இவர் எப்படி இறந்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே அறையில் என்ன மீதமிருக்கிறது என்று கேட்டார். “ஒரு வண்ணமும் சில துளி கண்ணீரும்” என்றேன். ஆழமாக இழுத்த புகையை தன் முகம் முழுக்க பரவுமாறு ஊதித்தள்ளி ” தூரமாகப் போவோம்” என்றார். நாம் வாகனத்தில் ஏறியிருந்த நேரம் உலகத்து வண்ணங்கள் மறைந்து அவற்றின் இடத்திலெல்லாம் கரு-மை ஊறத்தொடங்கியது .பொருட்கள் இருட்டில் மறைந்துகொண்டிருக்க  நாங்களிருவரும் ஊருக்கு வெளிப்புறத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம். பேகன் இடைவிடாமல் புகைத்துக்கொண்டிருந்தார். அவரின் உதவுகளிரண்டும் நறுக்கிவைத்த ஆப்பிள் துண்டுகள் போல பொலிவாயிருந்தது எனக்குள் ஆச்சரியத்தைத் தந்தது. ஜன்னலுக்கூடாக கூரிய அம்புகளாக காற்று வாகனத்திற்குள் பாய்ந்தது .

 

(03)

 

நகருக்கு ஒதுக்குபுறமாக வழிந்துகொண்டிருந்த அகன்ற ஆழமற்ற ஆற்றின் கரையில் வண்ணங்கள் அனைத்தும் நெருப்பாகியிருந்தன. குளிர்ந்த இராக்காற்று நெருப்பின் அடர்த்தியினை அழித்தும் ஆக்கியும் விளைடாடிக்கொண்டிருந்தது. ஈரலிப்பு அதிகமான காற்று நெருப்பின் வெக்கையோடு கலந்து ஒரு வித போதையான சூட்டைத் தந்தது. பேகன் முதல் சுற்றுக்கு தயாரான நிலையில் என்னிடம் என்ன  இசைக்கோர்வைகள் இருக்கிறன என்று கேட்டார். நான் அமைதியாகப்போய் விட்னியின் நோ வுமனை இசைக்கச்செய்தேன். கண்களிரண்டையும் மூடி நீண்டநேரம் இசையைக் கேட்ட பின் தனது  முதல் சொட்டைப் பருகினார். அவ்விசை கண்ணாடியின் மேல் நீர் பரவுவதைப்போல மனதிற்குள் வழுக்கிக்கொண்டு சென்று நிறைந்துவிடும். மீண்டும் கூர்மையாக சில நொடிகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ” அற்புதம். என்னவொரு இசை, உடல் முழுக்க இனிப்பை கரைத்து ஊற்றியது போல சுவைக்கிறது” என்றபடி கைகளிரண்டையும் தோளளவிற்கு தூக்கி பெண்ணிற்குரிய எல்லா நளினத்துடனும் உடலை வளைத்து ஆடத்தொடங்கினார். ஒவ்வொரு நடன அசைவுகளிலும் மறந்திடாமல் இடுப்பை வட்டமாக அசைத்துக் கொண்டாடத்தவறவில்லை. ஆயிரக்கணக்கான கொண்டாட்ட  நடனங்களுக்குப் பழக்கப்பட்டவரைப்போல இசைக்கும் காற்றுக்கும் எந்த இடையூறுமின்றி நிதானமாக மதுவைப் பருகியபடி ஆடினார். எரி சுவாலையும் அவரின் உடலும் ஒருகணத்தில் ஒருங்கிசைந்து அசைந்தன. நடனம் விடுதலை என்று எனக்குள் தோன்றியது. தன் கைவசமிருந்த எல்லா ஓவியங்களையும் கருக்கி விட்டு அதிக போதை ஏறாத நிலையில் பேகன் ஆடுகின்ற நடனம் அவரின் விடுதலையை நோக்கியது. ஜான் இறந்த அறைக்குள் மீண்டும் ஒருமுறையிருந்து ஞாபகங்களை மறக்கமுடியாமல் வண்ணங்களால் கீறியபின்னரும், ஓயாமல் துரத்தும் கொடிய வேதாளம் போன்ற நினைவுகளை அழிக்க ஓவியங்களைக் கருக்கும் பேகனின் நடனம் வேறெந்த தேர்ந்த நடனக் கலைஞரின்  நடனத்தை விடவும் மேலான உயிர்ப்புடையது. நீண்ட சீத்தைத் துணிபோல மென்மையாக அசைந்துகொண்டிருந்த நதி பேகனின் அசைவில் தூண்டப்பட்டு சலங்கைச்சத்தம் போட்டவாறு குதித்துப் பாய்ந்தது. வியாபாரிக்கு மில்லியன்களும் எனக்கு கலையும் பேகனுக்கு மலமும் எரிந்துகொண்டிருந்தது. தான் செய்த காகிதக் கப்பலை தானே கல்லெறிந்து தாழ்த்தும் குழந்தையொன்றின் சந்தோசம் பேகனின் முகத்தில் தெரிந்தது.

 

தொடர்ந்து சாமுவேல் பார்பரின் அடகியோ போர் ஸ்ட்ரிங் இசைக்கத்தொடங்கியது. என் கைகளிரண்டையும் பிடித்திழுத்து பேகன் நெருப்பினருகிற் கூட்டிச்சென்றார். எந்த எதிர்ப்புமின்றி இசைந்தேன். அவரின் உள்ளங்கையில்  பற்றிக்கொண்ட  சதைத்துணுக்கு அகோர வெப்பத்திலிருந்து. எனக்கொரு நடனம் தேவைப்பட்டது. உண்மையில் விடுதலை. ஒரு மெல்லிய கோட்டைக் கடப்பத்தைப்போல சுலபமாகத்தெரிந்தாலும் யாராலும் காட்டிவிடமுடியாத விடுதலை. பேகன் ஆடத்தொடங்கிய கணமே எனக்குள்ளே துள்ளல் தொடங்கிற்று. பருத்த உடலாயினும் ஓரளவேனும் அசைவுகளோடு ஆடுவேன் என்ற நம்பிக்கை. பேகன் மற்றைய குவளைக்குள் மதுவை நிரப்பி கைகளில் நீட்டினார். மீண்டும் மறுப்பேதும் இன்றி வாங்கி ஊற்றினேன். வாய் நிறைய நுரைத்துக்கொண்டு உள்ளிறங்கியது. அடித்தொண்டை குளிர்ச்சியில் சிலிர்த்தது. முதல் குடிக்குரிய பரபரப்பேதும் இல்லாமல் கையில் குவளையை ஏந்தியபடி ஆடத்தொடங்கினேன். அது ஜொஹான் சபாஸ்டியனின் பக் இன் கம் ஸ்வீட் டெத். தீயைச் சுற்றி ஆடினோம். பெரும் அசைவுகள் ஏதுமின்றி எளிமையான முழுச்சுதந்திரத்தோடு நரம்புகளும் தசைகளும் அசைந்துகொண்டிருந்தன. பேகனின் கண்களில் போதையேறிய எந்த அறிகுறியும் தெரியவில்லை மாறாக நான் களைத்திருந்தேன், மயக்கத்திலிருந்தேன். இருந்தும் பேகனை முத்தமிடவேண்டும் போலிருந்தது. உடல் முழுமையாக வியர்வையிலூறி களைத்துப்போக பேகனின் அருகிற் சென்று தோள்களை கைகளால் அழுத்தி சிவந்த உதட்டோடு முத்தமிட்டேன். அது ” சுதந்திரத்தின்  முத்தம்”.

 

(04)

 

உடல் களைத்திருந்தது. இரவின் சுதந்திர நடனத்தில் தசைகள் இறுக்கமாகி வலித்தன. செவி மடல்களுக்குள் கண்ணாடி உடைசலைப்போல ஆற்று நீர் சலசலத்துக்கொண்டிருந்தது. இன்னும் விடிந்திருக்கவில்லை. கைக்கெட்டும் தூரத்துக்கு அப்பால்  உடல் முழுதும் சாம்பலை பூசியபடி பேகன் நிர்வாணமாகக் கிடந்தார். ஆற்றாமையில் அள்ளிப்பூசிக்கொண்ட சாம்பல் அது. முடிந்த இரவில் பிறை உச்சியைக் கடந்து நின்ற போது பாதி மயக்கத்தில் எழுந்திருந்தேன். என்னால் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. பேகன் ஆக்ரோஷமாக தண்ணீரைத் தலையிலும் உடல் முழுதும் அள்ளி ஏற்றிக்கொண்டது போலிருந்தது. இப்போது சாம்பல் பூசிய பேகனைக் காணும் பொழுது தான் அது தண்ணீரல்ல சாம்பல் என்று தெரிகிறது.  கழுத்து அசைக்கமுடியாமல் நொந்தது. தோள்பட்டை பற்றி சொல்லவே தேவையில்லை. மெதுவாக எழுந்து பேகன் அருகில் வலிமையற்று நகர்ந்தேன். அவர் இயல்புக்கு மீறி துவண்டுபோயிருந்தார். ஒரு சாம்பல் நிற பூனையைப்போல உடலை தனக்குள் சுருக்கிக்கொண்டு கிடந்தார். இரவிரவாக பாடி இன்னமும் ஓயாமல் ராபர்ட் ஸ்கமனின் ற்றமுறி இசைக்கத்தொடங்கியிருந்தது. மெல்லிய கீலமாக அதிகாலையின் மஞ்சளொளி ஆற்றுப்படுகையின் மீது தெறித்தது. எரிந்த குறையில் இரண்டொரு மரச் சட்ட்டகங்கள் ஆங்காங்கே கிடந்தன. பேகனைக் கைத்தாங்கலாக தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றினேன். கரையோரத்தில் அனாதையாகக் கிடந்த அவரது ஆடையை அணிவித்து மீண்டும் அவரின் ஓவியக்கூடத்திற்கு வாகனத்தைச் செலுத்தினேன். பேகன் அதுவரையில் இம்மியளவும் சுயநினைவாயில்லை. இரவு தீவிரமாக குடித்தும் ஆடியுமிருந்தார். பேகனின் உடல் பாரமற்றிருந்தது. ஒரு பலூனைப்போல மிதக்கின்றளவு பாரமில்லாமல். அந்த உடலின் எலும்புகளின் பாரத்திற்கும் தசைகளின் பாரத்திற்கும் அணுவளவும் பொருத்தமில்லாமல் பாரமற்றிருந்த உடலைக் காவியதில் எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.

 

(05)

 

பேகனை மீண்டும் சந்திக்கத் தோன்றவில்லை. அவரின் ஓவிய அறைக்குள் நுழைவதைவிட திரும்புவது சிரமாமாக இருந்தது. அந்த அறை மனித நிர்வாணத்தில் பெருங்கூடாகத் தெரிந்தது. அன்றைய இரவுக்குப் பின்னர் எனது நிர்வாணம் எனக்குள் பயத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. எல்லா மனிதர்களின் நிர்வாணமும் எனக்குள் வாழ்தல் பற்றிய அச்சத்தினை வலுப்படுத்த்திக்கொண்டே சென்றன. பேகனின் ஓவியங்களில் வாழ்வதற்கான கொச்சைக் காரணங்கள் கிடைக்கும். நேரமிருக்கும் போதெல்லாம் அவரின் கண்காட்சி கூடத்திற்குச் சென்றுவருவேன். கண்காட்சிக்கூடம் பல கண்ணாடிகள் பொருந்திய என்னுடைய குளியலறையைப்போல தோற்றமளிக்கும். எல்லா முகங்களும் உடல்களும் எனக்குரியதாகவும் அவற்றின் உணர்ச்சிகள் அனைத்தும் எனக்கேயானதாகவும் தோன்றும். நான் ஒவ்வொரு ஓவியமாகக் கூர்ந்து கவனிப்பேன். அது ஒரு மயக்கநிலை. மந்தமான போதையில் உருவங்கள் திரிந்து அங்கொன்றும் இங்கொன்றும் தனித்து அலைவதைப்போல ஓவியங்கள் முன்னோக்கியும் பின்னோக்கியும் ஆழமாகவும் மேலாகவும் மீனின் கண்களைப்போலவும் நீரின் தளம்பல் போலவும் ரத்தக்கறை போலவும் விதம் விதமாக தோன்றி மறையும். பெரும்பாலான ஓவியங்கள் அழுவதையே  கேட்டிருக்கிறேன். தன்னிலிருந்து வெட்டி அகற்றப்பட்ட பாகமொன்றிற்காக அவை வருத்தப்பட்டு அழுகின்றன. பேகனின் ஓவியங்கள் நிறைவுறுவதில்லை. அவை பார்க்க பார்க்க குறைந்துகொண்டே போய் ஒரு இரசம் பூசப்பட்ட கண்ணாடியாய் திரிந்து நிறைவுறும். கடைசியில் என் விம்பத்தை விரல்களின் நுனிகளால் உரசிப்பார்த்துவிட்டு திரும்புவேன். ஓவியம் நிறைவுறும் கணம் அது. அக்கணம் கண்ணாடிக்குள் இழுக்கப்பட்டு கரைந்துவிடுவதைப்போல உணர்வேன். என்னாலன்றி வேறு எவராலும் என்னை மீட்கமுடியாத நிலை வரும். அப்போது கண்காட்சிக்கூடத்தை விட்டு வலிந்து வெளியேறிவிடுவேன்.

 

(06)

 

நிறைபோதையில் பேகனின் அறைக்குள் நுழைந்த போது நான்கைந்து மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஆணொருத்தனின் முகத்தை வரைந்து முடிக்கும் நிலையிலிருந்தார். சிகரெட் புகையின் வாசமும் வண்ணக்கலவையின் நாற்றமும் புரைக்கேறும் அளவு தலைக்குளிறங்கியது. நாசித்துவாரங்கள் கரகரத்தன. ரத்தம் முழுக்க நாற்றம் பரவுவதை என்னால் சகிக்கமுடியவில்லை. உடல் குறுகுறுத்து தாடைகள் இறுகிக்கொண்டன. பேகன் தன்னிலை மறந்து வண்ணங்களைச் சேர்ப்பதில் தீவிரமாயிருந்தார். அருகில் அரைவாசி மீதமிருக்கின்ற மதுப்போத்தலும்  சிகரெட் துண்டுகளும் நிறைந்திருந்தன. பேகனின் பின்புறம் மட்டுமே தெரிந்தது. தலை முடி வியர்வையில் மினுங்கியது. மேற்சட்டையில்லை. உடல் வியர்த்துக் கண்ணாடியின் மேல் பனித்துகளிகள் வழிந்து ஓடுவதைப்போல் ஈரமாயிருந்து. அன்று பார்த்ததைவிட இரண்டுமடங்கு மரச்சட்டகங்களாலும்  ஓவியங்களாலும் அறை நிறைந்திருந்தது. அவை அன்றிருந்த மோசமான நிலையிலில்லை. உண்மையில் ஒழுங்காகவும் இல்லை. நாற்காலி ஒன்றையெடுத்து அவரிலிருந்து சற்றுத் தொலைவில் வைத்தேன். மேற்சட்டைப்பைக்குள்ளிருந்து சிகரட்டொன்றை எடுத்துப் புகைக்கத்தொடங்கினேன். நான் குடிக்கத்தொடங்கிய சில நாட்களில் புகைக்கவும் செய்தேன். பேகன் சிவப்பு நிற தூரிகையையெடுத்து அத்தனை நேரமும் கீறிக்கொண்டிருந்த ஓவியத்தின் இடப்பக்க மூலையில் எற்றினார். அதொரு கோபக்கார முதியவர் திடகாத்திரமான இளைஞனை தன் நடக்கும் பொல்லால் விளாசியது போலிருந்தது. எனக்கொருகணம் தலை விறைத்தது. ஓவியத்திலிருந்த முகத்தின் பாதி இரத்தத்தில் நனைந்தது.

 

சிகரெட்டொன்றைப் பற்றவைத்து மதுவும் ஒரு முரடு மென்றுவிட்டு மீண்டும் மெல்லிய கறுப்பு தூரிகையால் வரையத்தொடங்கினார். நிழலொன்றை அவதானிப்பதைப்போல அவரின் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றன்பின் ஒன்றாக பதினாறு சிகரெட்கள் தீர்ந்த பின்னர் பேகன் என்னை நோக்கித் திரும்பினார்.
காயமடைந்த பேகனின் முகத்தைப் பார்த்ததில் அதிர்ச்சியேதும் ஏற்படவில்லை. இடக்கண்ணில் பெரிய ரத்தக்கண்டல். முழி விகாரமடைந்திருந்தது. வாயோரம் சிறிய திட்டுப்போல சிவந்த காயம். அவர் ஓவியத்தில் இருந்தார். ஓவியமும் முகமும் ஒரே மனநிலையிலிருந்தன. நான் சிகரெட்டை கீழே போட்டு ” பேகன் என்னாயிற்று ” என்றேன்.
தன்னை கஷ்டப்படுத்தி செயற்கையாக சிரித்துக்கொண்டே ” கீறினேன் ” என்றார். நான் மௌனமாயிருந்தேன். அவரின் உடலிலிருந்து ஓயாமல் வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. அவரின் இடப்பக்க முகம் எந்தப் பாவனையும் செய்ய முடியாதளவு வீங்கியிருந்தது. அவர் முகத்தையும் உடலையும் பாவமாக வைத்துக்கொண்டு அடிவாங்கிய குட்டி நாயைப்போல தெரிந்தார். எனக்கு உண்மையில் அழுகை வந்தது. கண்களிரண்டும் முட்டி நின்றன. ” பேகன் உங்கள் முகத்திற்கு என்ன நடந்தது” என்றேன். வெளிப்படையாக சொல்லப்போனால் விம்மினேன்.

 

” மனிதர்கள் கறுப்பை விரும்பவும் வெள்ளையை வெறுக்கவும் செய்கிறார்களே. ஏன் ? ” என்றார்.
நான் எதுவும் பேசவில்லை, ஏன் கேள்வியைக்கூட சரியாக உள்வாங்கவில்லை. சிறிது நேரத்தில் ” கறுப்பில் எதுவும் கிடையாது; வெள்ளையில் எல்லாமிருக்கின்றன. மனிதர்கள் எதுவுமில்லாமற் போகவே விரும்புகிறார்கள்.” என்றார்.
மௌனம் ஒரு பாலைவனத்தைப்போல மிக வீரியமாகப் பரவியது. அந்த அறை வெறுமையில் தத்தளித்தது. நா வறண்டு என்னுடல் இயல்பாக வியர்க்கத்தொடங்கியது. மனிதர்கள் எதுவுமில்லாமற் போகவே விரும்புகிறார்கள் என்ற ஓசை காதுகளை மீண்டும் மீண்டும் அடைந்துகொண்டேயிருந்தன.  ஆயிரம் குண்டூசிகளின் முனைகளில் வார்த்தைகள் செருகி காதுப்பறையின் மேல் குத்திநின்றன. பேகன் எதுவுமில்லாற் போகத்தான் தன்னை வருத்திக்கொள்கிறார். ஓவியங்களை வரைகிறார். எரிகிறார். குடிக்கிறார். புகைக்கிறார். காயப்படுகிறார். நானும் அப்படித்தான். பேகனின் கண்களை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு கதிரையில் இருந்து எழுந்து நடந்தேன். மனிதர்கள் எதுவுமில்லாமற் போகத்தான் வாழ்கிறார்கள். ஹ்ம்! ஒன்றுமில்லாமற் போகத்தான்.

தற்கொலைப்பள்ளம்

(1)

எனது பின்னேரங்களை அந்தப் பாறையின் கீழ் அடுக்குகளில் தான் கழிப்பேன். அகன்ற இறுக்கமான பிடிப்புகளுடன் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொண்டிருக்கும் அந்த பாறைகள்அவ்வளவு நீளமானவை. மென்மையான துளைகளைக்கொண்ட வயல் மண்ணில் அந்தப்பாறைகள் எப்படி இவ்வளவு வீரியமாக பற்றிக்கொண்டிருக்கின்றன என்பது எனக்கு பெரும் வியப்பாக இருக்கும். சிறுவயதில் என் நண்பன் ஒருத்தன்பாறை மண்ணில் இல்லை, மண்தான் பாறையில் இருக்கிறது என்றான். அது பெரும் புதிரை உடைத்தது போல இருந்தது. அவன் எம்மளவில் பெரும் விஞ்ஞானியாக பேசப்பட்டான். சூரியன் தெற்கே மறைகின்ற நேரத்தில் அந்த அடுக்குகளில் இருந்து, அதனைத் தொடர்ந்து தொப்பென்று வீழ்கின்ற நிலசட்டகத்தை ஒருமுறையாவது எட்டிப்பார்த்து ரசித்து வராவிட்டால் அன்றைய இரவில் மிகக் கொடிய வெறுமை என்னைத் தொற்றிக்கொள்ளும். வெறுமையில் உழன்று போய், கால்கள் விறைத்துக் கைகள் நடுங்கிப் பார்வை இருட்டி,என்னை அந்த இரவு பாடாய்ப்படுத்திவிடும். அந்த இரவின் நீட்சி ஒரு பெருவெளியின் நீளம் போல விரிந்துகொண்டே போகும். எந்தப்பக்கம் திரும்பி நடந்தாலும் ஒரே பக்கமாகவே நடப்பது போல இருக்கும். கடிகாரத்தை சில மணி நேரம் முந்தி விட்டுக் கட்டிலின் விளிம்பில் சுவரோடு போர்வையை போர்த்திக்கொண்டு எங்கிருந்தோ வருகின்ற வெளிச்சத்தில் ஒளிர்கின்ற கடிகாரத்தை விறைத்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.கடிகார இயந்திர இயக்கம், வழமையினை விட மெதுவானதாக இருக்கும். இரண்டு முட்களும் காந்தத்தின் இரண்டு முனைகள் போல ஒன்றோடு ஒன்று ஒட்டி நகர விரும்பாமல் ஊரும். கண்களை விளித்துக்கொண்டே தான் இருப்பேன். ஆனால் கனவிலும் சஞ்சாரம் செய்வேன். கனவையும் நினைவையும் என்னால் அப்போது சரியாகப் பிரித்தறிய முடியாத நிலையிலிருப்பேன். எல்லோரும் காலையில் எழுந்து விட்டப் பிறகு போர்வையைச் சுற்றி போட்டு விட்டு முகம் கழுவுவேன்.

அந்தப் பள்ளத்தை எல்லோரும் தற்கொலைப் பள்ளம் என்றே அழைப்பார்கள். நிறையக் காலமாக மனதின் அலைச்சல்களைத் தாங்க முடியாதவர்கள் அங்கே சென்று தற்கொலை செய்துவந்தார்கள். மாதத்தில் ஒருமுறையாவது அவ்விடத்தில் ஒரு பிணம் கிடக்கும். சுற்றி நாலைந்து பேர் நின்று ஒப்பாரி வைத்துக்கொண்டு நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிறிது நேரத்தில் அவ்விடம் பழைய நிலைக்குத் திரும்பி விடும். அங்கு போலீசார் நின்று விசாரணை செய்வதை நான் பார்த்ததே இல்லை. ஆனால் மிக அருகாமையில் ஒரு போலீஸ் நிலையம் உண்டு. எனது பாட்டி இப்படியான தற்கொலைகள் ஒரு சடங்கு என்பார். அதைச் சொல்லும் போது அவரின் கைகள் தானாக மேல்நோக்கி கும்பிடும். அவர் அதை தெய்வத்திற்க்கான பலியாகவே எண்ணினார். தாத்தா இதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஆண்கள் பெரும்பாலும் அவ்விடத்தில் தற்கொலை செய்வதில்லை. தாத்தா தற்கொலை பற்றி பாட்டியுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் மிகவும் கர்வமாகப் பேசுவார். புருவங்களை உயற்றி, இடையிடையே தனது பெரிய மீசையை முறுக்கி மிடுக்காக பேசுவார். காலத்தோடு மெல்ல மெல்ல தற்கொலைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சிறிது காலத்தில் தற்கொலைகள் அறவே இல்லாமல் போனது. அதன் பின்னர் கொஞ்ச காலம் யாரும் அவ்விடத்தில் பெரிதாக உலாவுவது கிடையாது. நாய்களும் பருந்துகளுமே அங்காங்கே தெரிந்தும்மறைந்தும் கொண்டிருந்தன. நாட்செல்ல சனங்கள் குப்பைகளை மெதுவாக பள்ளத்திற்குள் எறியப் பழகிக் கொண்டனர். பின்னர் சிகரட் குடிப்பவர்கள் அவ்விடத்தை பயன்படுத்தினர். விளிம்பில் நின்று ஒருமுறை உள்ளெடுத்து ஊதித் தள்ளினால், புகை அகன்ற வெளியில் துமி துமியாக சென்று மறைந்து போகும். அவர்களின் துன்பமும் அப்படியே மறைந்து போய்விடுவதாக சிகரட் குடிப்பவர்கள் நினைக்கத்தொடங்கினார்கள். கொஞ்ச காலத்தில் அதுவும் மறைந்து போய் காற்று வாங்க வருபவர்களின் இடமாக மாறிப்போனது. கோபத்தில் வீட்டிலிருந்து பகட்டுக்காய் வெளியேறுவோர், அதிக வெக்கையை வீட்டிற்குள் உணர்வோர், நேரம் போக்க வழிதெரியாதோர் எனப் பலதரப்பட்டோரும் அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.என் அப்பா நாற்பதுகளில் சிகரட் குடிக்கப் போயிருக்கிறார். நான் இருபதுகளில் காற்று வாங்கப் போய்க்கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான் தற்கொலைப் பள்ளத்தின் கதை.

கண்கள் இரண்டையும் தெளிந்த நீரில் கழுவிட்டு கண்ணாடியில் முகம் பார்த்தேன். இரத்தத்தில் தோய்த்து எடுத்த உள்ளியைப்போல கண்கள் சிவந்திருந்தன. இரண்டு மூன்று முறை வாளிக்குள் உள்ள தண்ணீருக்குள் முகத்தை அமுக்கி, மூச்சை அடக்கி கண்களை வெட்டி வெட்டி திறந்தேன். ஓரளவு கண்களின் சிவப்பு குறைந்தவுடன் வேலைக்குச் செல்ல வேகமாக இயங்கினேன். கரும் புகை பரவ வண்டி கிளம்பியது. அப்போதெல்லாம் வேலைக்கு போவதென்றாலே பெரும்காரியம். பெரும்பாலும் மத்திம வயது ஆண்களை யாரும் வேலைக்கு அனுப்புவதில்லை. பெரும்பாலான மத்திம வயது ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். சமைத்தல், வீடு வாசல் கூட்டிக் கழுவுதல், துணி தோய்த்தல். இவை அனைத்தும் குறுகிய நேரத்துக்குள் முடிய மிகுதி நேரமெல்லாம் தூக்கம். இவற்றை என்னால் செய்யமுடியவில்லை. ஒரு துண்டு காணிக்குள் என் இளமை முடிந்து போவதை நான்விரும்பவில்லை. யுத்தம் தன் கூரிய பற்களால் எல்லோரையும் பலி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்இது போன்ற சிந்தனைகள் அபத்தமானவை தான். இருந்தும் எனது விஞ்ஞானி நண்பன் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் எழுத்துப்பிழை திருத்தும் பணியில்அவனின் சிபாரிசில் இணைந்து கொண்டேன். யாரிடமும் நான் என்ன வேலை பார்க்கிறேன், எங்கு வேலை பார்க்கிறேன் என்று சொல்லியதே கிடையாது. லீலாவிற்கும் தான்.

உப காதை

அன்று விடிந்தும் விடியாததுமாய் அலறி அழுகின்ற சத்தங்கள் கேட்டுகொண்டே இருந்தன. சத்தத்தின் வலிமை காதுப் பறைகள் இரண்டையும் கிழித்துவிடும் போல இருந்தது. லீலாவின் வீட்டிலிருந்து தான் வருகின்றது. அது லீலாவின் அம்மாவின் அலறல். அவளது அம்மாவின் குரல் விளையாட்டு பொம்மையின் குரலைப்போல தடித்திருக்கும். லீலாவினது அப்பிடியானது அல்ல. அவள் பேசுகின்ற வார்த்தைகள் மிக மென்மையாக காற்றின் இடைவெளிகளினூடாக கரைந்து போகும். அவளுடன் மணிக்கணக்கில் இருந்து பேசியதே இல்லை. சறத்தை சுற்றிக்கொண்டு நானும், அப்பாவும் வெளிக்கதவுக்கு அருகில் வந்தோம். லீலாவின் அம்மா மண் முற்றத்தில் தலைவிரி கோலமாய் இருந்து மண்ணை அள்ளி எற்றியெற்றி அழுதுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி நாலைந்து பேர் வாயில் கைவைதபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இதொன்றும் புதிதல்ல. எல்லாம் வயதானவர்கள். அவர்கள் சிறுவர்களாக இருந்த போது மாதம் ஒருமுறை பார்த்திருப்பார்கள். லீலாவின் அக்கா தற்கொலை பள்ளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துவிட்டார். தலை சிதறிப்போய் முக அடையாளமே இல்லாமல் பிணம் கிடந்தது. நானும் அப்பாவும் இடத்திற்கு போய் பார்க்க சில பெரியவர்கள் இறங்கி பிணத்தை சுற்றி துணியால் போர்த்தி வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஒரு மாதம் லீலா பாடசாலை வரவில்லை. அவள் அந்தக் காலங்களில் வீட்டை விட்டு வருவதும் கிடையாது. அப்போது பாடசாலையில் உயர்தரம் படித்தது நாமிருவர் மட்டுமே. அவர்கள் லீலாவின் அக்காவிற்கு அந்தியேட்டி கிரியையும் செய்யவில்லை. அவளின் அக்கா இறந்து இரண்டாம் மூன்றாம் மாதம் அப்பாவை இயக்கம் பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள். அன்றிலிருந்து இரண்டு கிழமைக்குள்ளேயே அம்மாவிற்கு புத்தி பேதலித்துப் போனது. நீண்ட காலத்திற்குப் பிறகு லீலாவின் அக்காவின் தற்கொலை தான் முதல் தற்கொலையாக இருந்தது. அதன் பின்னர் லீலாவின் வீடு இருண்டு போனது.

(11)

லீலா அவளின் வீட்டு வாசற்படியருகில் சிரித்த முகத்துடன் நின்றாள். அவளைத் தினமும் கடந்து செல்லும் போது கண்களாலே வழியனுப்பி வைப்பாள். அதில் துக்கம் நிறைந்திருக்கும். யாருமில்லா வீட்டில் புத்திபேதலித்த அம்மாவுடன் நித்தமும் வருந்துகின்ற அவள்ஏக்கமுடன் உதடுகளால் மட்டும் எனக்காக புன்னகைப்பாள். அவசரமாக அவளைக் கடக்கும் போது கூட, அவளின் வீட்டு வாசலினூடாக தூரத்து சுவரில் தொங்குகின்ற மாலையிடப்பட்ட அக்காவின் புகைப்படமும் அதன் கீழே சாய்வு நாற்காலியில் தலைவிரிகோலமாய் சிறுபிள்ளை போல ஆடுகின்ற அவளின் அம்மாவின் உருவமும் என்னைக் கலங்கடித்துவிடும். லீலாவின் வீட்டு முற்றத்தில் இருக்கின்ற நாற்காலிகளில் இருந்து நானும் அவளும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவளின் அம்மா அழுவது சிரிப்பது தன்னோடு தானே பேசிக்கொள்வதும் அவளின் அப்பாவை நினைத்து சாப்பாடு பரிமாறுவதுமாக இருப்பார். ஆரம்பத்தில் லீலா என் கைகளை பற்றி அழ செய்தாள், நாட்ச்செல்ல அவளுக்குப் பழகிப்போனது.

அப்போதைய கால கட்டத்தில் பத்திரிகைத் தொழில் எளிதானதானதல்ல. யார் பக்கம் நின்றும் எதையும் எழுதிவிடமுடியாது. ஆமிப்பக்கம் நின்று நான்கு வரி போட்டு இயக்கப் பக்கம் நின்று நான்கு வரி போட்டு பின்னர் மக்கள் பக்கமும் நின்று நான்குவரி போட்டால் உண்மைச் செய்தியும் சம்பவமும் திரிந்து புது வடிவில் வந்துவிடும். அதையும் பத்திரிகை ஆசிரியர் தனது எழுத்துவித்தையால் இன்னொரு செய்தியாக்கிவிடுவார். பக்கம் பக்கமாக பொய்களையும் மழுப்பல்களையும் அச்சடித்தே காகிதங்களை வீணாக்கிக்கொண்டிருந்தோம். இத்தனை பொய்க்கும் எழுத்துப்பிழை பார்க்கும் அற்ப வேலை எனக்கு. ஒரு முறை தலைப்புச் செய்தியை இப்படி அச்சடித்து விட்டோம்.

காகித விலை ஏற்றத்தால் நாளை முதல் பத்திரிகை அளவுக்குறுக்கம் செய்யபடுகிறது.”

அடுத்தநாள் காலை வேலைக்குச் சென்று பார்த்தால் இரண்டு இடங்களில் கிரினைட் எறிந்து தீய்ந்து போயிருந்தது. சில நாட்களின் பின்னர், முதலாவது இயக்கத்தால் எறியப்பட்டதாகவும் பின்னர் ஆமி தம் பங்கிற்கு மற்றொன்றை எறிந்ததாகவும் அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள். கிரினைட் எறிந்ததோடு பத்திரிகை வேலையை நிறுத்தி விடலாம் என்று முதலாளி முடிவு பண்ணியிருந்தார். ஆனால் அந்த இரவே அவர் வீட்டு சுவருக்கும் கிரினைட் எறியப்பட முடிவை மாற்றிக்கொண்டார். அன்று முதல் இருபது பக்க வார இதழ் முப்பது பக்கமாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு தரப்பிலிலும் மூன்று செய்திகள் அதிகமாக அச்சடித்து சமாளித்துக் கொண்டிருந்தோம். மொத்தத்தில் பத்திரிகை நடத்திக்கொண்டிருப்பது கிரினைட் பயத்தில் தான். மாவீரர் நாள் அன்று பத்திரிகை விசேடமாக அலங்கரிக்கவேண்டும் என்ற கோரிக்கையில் அதிகாமாக இரண்டு பக்கங்கள் மாவீரர்களுக்காக அச்சிடப்பட்டது. பத்திரிகை விநியோகிக்கும் வண்டி மாவீரர் நாள் அன்று காலை தீயில் கருகியிருந்தது. இப்படி எந்த நிலைப்பாடும் இல்லாமல் மொத்த பத்திரிகை தொழிலுக்கே அழுக்கு ஏற்படுத்தும் போக்கில் நான் வேலை செய்யும் பத்திரிகை செயற்பட்டுக்கொண்டிருந்தது.

(111)

தெளிவற்ற அவளின் முகத்திலிருந்த களங்கமற்ற புன்னகையைக் கடந்து பத்திரிகை அலுவலகத்தை அடைந்தேன்.எப்போதும் இல்லாதவாறு அன்றுதான் முதன் முதலாக தற்கொலைப் பள்ளம் சம்பந்தமாகவும் லீலாவின் அக்காவின் தற்கொலை சம்பந்தமாகவும் எழுதியிருக்கவேண்டும் என்று ஆசிரியரிடம் கூறினேன். அவருக்கு எல்லா விவரங்களும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் எதையுமே எழுதியிருக்கவில்லை. இனி எழுதப்போவதும் இல்லை என்ற முடிவில் நிச்சயமாக இருந்தார்.போர் சூழலில் இவ்வாறான சிறிய சம்பவங்கள் முக்கியத்துவம் இல்லாமல் போகின்றன, இது தகாத செய்தியென்று மூடி விட்டார்.

லீலாவின் வீட்டைத் தாண்டி ஒரு பத்துநிமிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்தால் தற்கொலைப்பள்ளம் வந்துவிடும்.சோர்வாக வேலையை முடித்துக்கொண்டு ,அவளின் அம்மாவின் விம்பங்கள் மனதின் அத்தனை மூலைகளிலும் தெறித்துக்கொண்டிருக்க அன்றைய நாளின் பின்னேரத்தை தற்கொலைப் பள்ளத்தின் பாறை இடுக்குகளில் சாய்ந்திருந்த வானத்து முகில்களை பார்த்துக்கொண்டிருந்தேன். முகில்கள் முன்னே நகர்வதும், காற்று திசை மாற பின்னே நகர்வதுமாக இருந்தன. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வருகின்ற இளம் பிஞ்சிலைகள் வேகமாக வீசிய காற்றில் சுழன்று வெளியில் அலைந்து அல்லல்ப்பட்டு பள்ளத்தினுள் விழுந்தன. இவற்றை எல்லாம் வியந்து பார்த்துக்கொண்டிருந்த விட்டு வீட்டிற்குத் தூங்கப் போனேன்.

இரவு இரண்டு மணியிருக்கும். ஜீப்களின் சத்தமும் வாகனங்களின் சத்தமும் நித்திரையைக் குழப்பிக்கொண்டு இருந்தன. கூடவே இரண்டொரு வெடிச்சத்தம் வேறு. முழுமையாக நித்தரை கலைந்து போனது. எனக்கு முன்னரே அம்மாவும் ,அவருக்கு முன்னரே அப்பாவும் எழுந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தம் சற்று உக்கிரமாக கேட்கத்தொடங்கியது. அது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து வருவதாகத் தெரியவில்லை. வானத்தின் மீது வெறுமையாகச் சுடுவது போல இருந்தது. இமை மடல்களில் பயம் பற்றிக்கொண்டது. மடல்கள் இரண்டும் கனக்கத்தொடங்கியது. ஒவ்வொரு கண் சிமிட்டலும் வலியை உண்டாக்கியது. பின்னர் காது மடல்கள், உதடு என்று மென்மையான பகுதிகள் ஒரு விதமான வலியை ஏற்படுத்தின. இயந்திரங்கள் மட்டும் இரவின் தூய்மையான காற்றினை கிழித்துக்கொண்டு, அவற்றின் மூர்க்கமான சொற்களின் மூலம் பேசிக்கொண்டிருந்தன. வாகனங்கள் வேகமாக அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருந்தன. இத்தனை வெளிப்படையான நடவடிக்கை என்றால் அது ஆமியினது தான் என்று அப்பா அடித்துகூறினார். இராத்திரி அந்த சலசலப்போடு முடிந்தது. காலையில் வெளியேசெல்ல அனைவருமே பயந்தோம். அப்பாவும் நானும் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்தோம், அம்மாவும் பாட்டியும் எங்களை பேசினார்கள். வானம் விடிந்திருக்கவில்லை. என்னதான் வெளிச்சமாக இருந்தாலும்; புகைபோல இருட்டு எங்களை சுற்றிக்கொண்டது. நாங்கள் கேற்றடிக்கு போக சந்திக்கடை சுகுமார் மாமா சறத்தை வண்டியில் இழுத்துக் கட்டிக்கொண்டு விறுவிறு என நடந்தார். அப்பா எதுவும் பேசாமல் அவரைத் தொடர்ந்து நடக்க நானும் பின்னால் நடந்தேன். சுகுமார் மாமா தற்கொலைப் பள்ளத்திற்க்குத் தான் நடக்கிறார் என்பதை நாமிருவரும் ஊகித்துகொண்டோம்.

பெரும்பாலும் எந்த வீட்டிலும் ஆட்களை வெளியே காணவில்லை. சிலர் தமக்குள்ள கிசுகிசுத்துப் பேசிக்கொண்டு, நாங்கள் செல்லும் பாதையிலேயே நடந்தார்கள். சில வீடுகளின் வாசற்படிகளில் வயதான ஆச்சிமார் தலையை சுவரில் சாய்த்தபடி மேல் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தூரத்திலேயே சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. பெரிய வாகனங்களின் சில் அடையாளங்கள் சேற்றுப் பாதையின் ஓரங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது. நெருங்க நெருங்க சன இரைச்சல் அதிகமாகிகொண்டிருந்தது. வருவதும் போவதுமாக சனங்கள் இருந்தார்கள். அங்கிருந்த பலரின் கண்கள் கண்ணீரால் முட்டியிருந்தது. அது இறப்பின் அறிகுறிதான். லீலாவின் அக்காவின் தற்கொலையில் கூட இத்தனை சனக்கூட்டம் இல்லை. எல்லோரும் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் எவருமே இல்லை. ஓரிரு கிழவிகள் மட்டுமே பெண்கள் பக்கம் நின்றார்கள். பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு அதைப்பார்க்கும் திராணியற்றவர்கள். இறப்பின் வாடை நாசிகளில் படரத் தொடங்கியது.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு போவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. யாருமே விரும்பி பார்த்துக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவராக தோளில் தொட்டு விலக்கும் போதும் அவர்களின் முகமும் கண்களும் வாயும் மூக்கும் சொக்குத் தசைகளும் கோபத்தாலும் கவலையாலும் வெளிப்படுத்தமுடியாத கலவையான உணர்ச்சிகளைக் காட்டின. அவர்களின் கண்கள் சிவப்பாக இருந்தன. அவர்களின் கால்கள் நிலையற்றுப்போய் இருந்தன. எவருமே தமக்கிடையே பேசிக்கொள்ளவில்லை. தமக்குத் தாமே பேசிக்கொண்டனர். எத்தனையோ தற்கொலைகளை கண்ட வயது போனவர்கள் கூட நொருங்கிப்போயிருந்தனர். எனக்கு முதல் சுகுமார் மாமாவும் அப்பாவும் எட்டிப் பார்த்துவிட்டு வர அவர்களின் முகத்தைப் பார்க்காமல் தற்கொலைப் பள்ளத்தை எட்டிப் பார்த்தேன்.

இரவில் கடிக்கின்ற நுளம்புகளைச் சிறுவர்கள் அடித்துக் கொன்று குவித்து வைப்பது போல, ஒரு குவியல் மனித நுளம்புகள் ரத்தசகதியில் ஊறிப்போயிருந்தன. உடம்பில் ஒரு துணிகூட இல்லால்ஆண்கள் பெண்கள் என்று எந்த பேதமுமே இல்லாமல் சமத்துவமாய், முகங்களின் ஒவ்வொரு தசை நார்களிலும் காயங்களுடன் உடம்பின் ஏதோ ஒரு பாகத்தில் துளைத்த சன்னத்தின் துளையுடன், சீவி எடுக்கப்பட்ட காதுடன் மூக்குடன் விரல்களுடன் , தலைமுடிகள் பிடுக்கப்பட்டது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய்பலர் ஏதோ சொல்லவந்ததைபோல வென்று வாயைத் திறந்தபடி நிசப்தமாக கிடந்தனர். கைகள் கால்களை இரண்டும் கட்டப்பட்டிருந்தன. சிலரின் ஒரு கை அவரின் ஒரு காலுடன் கட்டப்பட்டிருந்தது. ஓரிருவரின் கைகள் இன்னொருவரின் காலுடன் கட்டப்பட்டிருந்தன. ஒருத்தரின் கைகள் பின்னால் கட்டப்பட்டு கமக்கட்டு இடைகளுக்கூடாக விறகு செருகப்பட்டிருந்தது. இன்னொருத்தனின் கால்கள் இரண்டும் நேர்கோடு போல விரிந்திருந்தது. அவர்கள் எல்லோரும் ஒருவருக்குள் ஒருவர் செருகியிருந்தார். அதில் எவருமே நிர்வாணமாக இல்லை. அவர்களின் அந்தரங்கள் மறைப்பதற்கு இருக்கவில்லை. அரைகுறையாகவும் அடியோடும் சீவப்பட்டிருந்தன. பார்க்கின்ற எல்லோருமே நிர்வாணமாக நின்றோம். மறைக்கவேண்டியது எங்களின் நிர்வாணமாகவே இருந்தது. அவர்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எல்லோரினதும் இரத்தத்தின் வாடையும் ஒரு நாற்றமாகவே இருந்தது. அந்த நாற்றம் மூளைக்கு ஏறி ரத்த நாளம் ஒவ்வொன்றையும் விறைப்படையச் செய்தது. கிட்டத்தட்ட இருபது பேர் இருப்பார்கள். சரிக்குச் சரி பெண்கள். ஆண்களில் ஒரு சிலர் தாடியோடும் பலர் தாடி முளைக்காமலும் கிடந்தார்கள். பதினைந்து வயதிலிருந்து இருக்கலாம். ஒருத்தரின் முதுகுத் தோல் உரிக்கப்பட்டு ரத்தத்தில் ஊறி மெல்லிய சிவப்பாக இருந்தது. இன்னொருத்தியின் கையயொன்று கழுத்தின் பின்புறமாக சுற்றி முன்புறம் இழுக்கப்பட்டிருந்தது. சிலரின் ஒரு கண் குழிக்குள் இமை மடல் சென்றிருந்தது. ஆண்கள் பலரின் பின்பக்க தசைகளும் தோல்களும் அற்றுப்போயிருந்தது. பெருவிரல்கள் வாய்க்குள் திணிக்கப்பட்டு சிலர் கிடந்தார்கள்.

அவர்களின் உறவினர்கள் தலையை பாறையின் மீது முட்டி மோதி அழுதுகொண்டிருக்கிறார்கள். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருத்தன், வெறும் மேலுடன் கண்களில் கண்ணீர் வடிய பள்ளத்தை எட்டிப்பார்த்துக்கொண்டு நின்றான். அவனின் காற்சட்டையை ஒரு கையிலும் மயங்கிக் கிடக்கின்ற தாயின் கைகளை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு நடுவே கறுத்த பாவாடையும் நீல மேற்சட்டையும் போட்டிருந்த குழந்தை ஒன்று என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றது. அந்தப்பார்வை அவருடையது தான்லீலாவின் அம்மாவினுடையது. முதுகில் தட்டி அப்பா வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

அன்றிலிருந்து மூன்று நாட்கள் பத்திரிகை அலுவலகத்திற்குச் செல்லவில்லை. நான்காம் நாள் சென்று அவலம் நடந்த தின பத்திரிகைத் தலைப்புச்செய்தியைப் பார்த்தேன்.

சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகப் போகின்றன

சுடர்.

கடிதத்தை நீட்டிய போது அவன் வியப்படையவில்லை. காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து விட்டு வழமையான தனது கறுப்பும் சாம்பலும் கலந்த சீருடையை கொடியிலிருந்து எடுத்து இஸ்திரி போடும் பெட்டி உள்ள மேசைக்கு அருகில் நீளமாக இருந்த வரிசையில் அமர்ந்தான். சுற்றியிருந்த எல்லாருமே ஒவ்வொரு கையடக்க தொலைபேசிகளை வைத்து நோண்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் முகங்களும்  தொலைபேசி வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஒருத்தன் வேகமாக இரண்டு கட்டை விரல்களையும் திரையில் அமத்திகொண்டிருந்தான். இன்னொருத்தன் தொலைபேசியை கிடையாக மடியில் வைத்து யாருடைய பேட்டியோ அல்லது செய்தியோ பார்த்துகொண்டிருந்தான். பெரும்பாலனவர்கள் கைகளில் நவீனமான தொலைபேசிகளையே வைத்திருந்தார்கள். ஒருத்தன் கையில் மூடிவைத்திருந்த தொலைபேசியின் திரை விட்டு விட்டு மின்னியது. அதைப்பார்த்த போது அவனுக்கு சிறிய வயதில் கோவில் திருவிழாக்களின்  வண்ண விளக்குகளின் ஞாபகத்தில் வந்தது. அப்பாவின் கையையும் அம்மாவின் கையையும் பிடித்து தொங்கியபடியே பார்த்து முடித்த தேர் திருவிழாவும் அடுத்த நாள் தீர்த்தத்திற்கு வந்திருந்த அன்றைய பிரபல வழக்கறிஞ்சறின் மனைவிக்காக வைத்திருந்த குண்டில் அவன் அம்மா அகப்பட்டு இறந்து போனதையும் அந்த மின்னும் ஒளியின் பின்னணியில் மனம் படம் போட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதிரைகளில் இருந்தபடி தங்களின் அம்மாவிடமோ அப்பவிடமோ சகோதரங்களிடமோ மனைவியிடமோ உறவுகளில் யாரவது ஒருவருடனோ கதைத்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒவ்வொரு நாள் பயணமும் அடுத்த நாளின் விடிவை நிச்சயிக்க முடியாததாகவே இருக்கும். அவனோடு சேர்த்து வெகு சிலர் மட்டுமே இன்னும் பழைய நோக்கியாவை வைத்து காலம் தள்ளுகிறார்கள்.
மகிழன் தரம் ஆறு மட்டுமே படித்திருக்கிறான். அம்மா குண்டு வெடிப்பில் இறந்த பின்னர் தனது தந்தையுடன் தோட்டவேலைகளுக்கு போய்க்கொண்டிருந்தான். இருபது வயதுகளை அவன் நெருங்கும் போது மெலிந்த உயரமான தோற்றத்தையும் சுறுசுறுப்பான போக்கையும்  கொண்டிருந்தான். அவனின் கண்களில் யாரிடமும் இல்லாத தனிமை எப்பொழும் ஒட்டிக்கொண்டே இருக்கும். அதற்காக அவன் தனிமையில் இருப்பவன் என்று சொல்லி விடமுடியாது. அவனுக்கென நண்பர்கள்  இருந்தார்கள். அவனுடனே தரம் ஆறு மட்டும் படித்து பின்னர் சாதாரண தரம் வரை படித்த சுகந்தன் அவனுடைய நல்ல நண்பன். காலையிலும் மாலையிலும் பாத்திகளுக்கு தண்ணீர் கட்டும் வேளைகளையும் தவிர்த்து மற்றைய பொழுதை சுகந்தனுடனே கழித்து வந்தான். சுகந்தன் தனக்கென ஒரு சிறிய சாப்பாட்டு கடை வைத்திருந்தான். உரிமையாளனும் ஊழியனும் அவனே. சுகந்தனுக்கு ஒத்தாசையாகவும் தனது பொழுதை போக்கவும் சாப்பாட்டு கடையை மகிழன் அணுகினான். அங்கிருக்கும் பணிசையும் டீயையும் காலை உணவாகவும் பின்னேரம் சுகந்தன் போடுகின்ற சுடச் சுட அப்பத்தை இரவுக்கு தனக்கும் அப்பாவுக்கும் உணவாகவும் கட்டிக்கொண்டு போவான். மத்தியானங்களில் பெரும்பாலும் அப்பாவுடனே வீட்டில் சோறும் ஒரு கறியும் வைத்து இருவருமாக சாப்பிடுவார்கள். அப்பாவிற்கு வயதாவதை அவரின் சாப்பாடு மகிழனுக்கு காட்டிக்கொண்டே இருந்தது. சுகந்தனுடன் கதைக்கும் போதெல்லாம் அப்பாவையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளத்தக்க வேலை ஒன்றில் வெகு சீக்கிரம் சேர்ந்தாகவேண்டும் என்று கூறுவான். சுகந்தனுக்கும் ஒரு சத பிரயோசனம் இல்லாத சாப்பாட்டு கடையை மூடிவிட்டு நிரந்தர தொழில் ஒன்றில் சேரவேண்டும் என்று ஆசை இருந்தது. இருவரும் பலதடவைகள் வேலை வாய்ப்புகள் பற்றி பேசிக்கொள்வார்கள்.ஒரு தடவை மத்தியான நேரத்தில் மகிழன் பேச்சை தொடங்கினான்.
“ அடேய் , இண்டைக்கு காலம அப்பா காணிண்ட மூலையில இருந்த மரக்குந்து ஒண்ட வெட்ட கோடரியால ஒன்கியிருக்காரு. அது குந்துல பட்டு தெறிச்சு அப்பாட முழங்காலுக்கு கீழ நேர வந்து அடிச்சிட்டு. அவர் அய்யோ எண்டு கத்தேக்க தான் நான் பாத்தன். காலில பெரிய வீக்கம். பக்கத்தில இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போவம் எண்டா வேணாம் எண்டுட்டார்.”
“பேயா நீ எல்லோ கொண்டுபோயிருக்கணும், எலும்பு கிலும்பு முறின்சிட்டா என்ன செய்வா. “
“நான் எவளவோ கேட்டுட்டன்டா. அவர் வரவே மாட்டன் எண்டுட்டார். போய் ஏதோ இல குல எடுத்து கட்டி வச்சிருக்கார். “
“ அவருக்கும் அறுபதுக்கு மேல ஆயிடிச்சு, இனியும் கொத்தி குனிச்சு வேல செய்ய ஏலுமா? “
“என்னடா செய்வம் ? எனக்கெண்டா ஒண்டுமா விளங்கல”
“ பேசாம இயக்கத்தோட போய்டுவமாடா?”
“ உனக்கென விசரா, ஒரு கொஞ்ச காசும் வராது. ஆமியோட சேந்தா மாசம் மாசம் காசாவது வரும்”
“அதுக்கு உங்க அப்பா ஓமாம ? உன்ன அடிச்சே கொண்டு போடுவார் “
‘இனியும் பொறுக்க ஏலதுடா”
இருவருக்குமான  உரையாடலை நீட்டிக்கொள்ளாமல் மகிழன் எழுந்தான். மத்தியான சாப்பாட்டிற்கு வீட்டை நோக்கி புறபட்டான்.
மகிழன் தன்னுடன் கதைத்த வார்த்தைகள் அவனுக்கு உறுத்திக்கொண்டு இருந்தது. ஆமியில் சேர்வது என்னவோ சரியான வழிமுறைதான், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? இயக்கத்திற்கு போவது தானே வீரம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் தமிழுக்காய் இறப்பது தானே சிறப்பு. இங்கு வாண்டுகளில் இருந்து வயதானார்கள் வரை போராடுகிறார்களே. நமக்கு என்ன குறைச்சல். பக்கத்து வீட்டு ராஜன் வயது பத்தொன்பது தான். பதினேழு வயதில் இயக்கத்துக்கு போனான். இப்போது தனக்கென ஒரு அணியை வழிநடத்தில் செல்கிறான். அவனின் தாத்தா பாட்டி அப்பா அம்மா எல்லோரும் எவ்வளவு பெருமையாக பேசிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு வீரனாக அல்லவா இருக்க வேண்டும். உடல் முழுக்க சீருடையும் தலையில் கவசமும் மார்பில் கவசமும் கையில் உயர் ரக துப்பாக்கியும் கால்களில் பூட்சும் இடுப்பு பட்டியில் எறிவெடிகளும். ஒரு ஐந்து பேரை கூட்டிக்கொண்டு காட்டின் வழியே போர்டரை அடைந்து ஆமியின் தளம் ஒன்றை வெடிக்க செய்தால் எவ்வளவு மதிப்பு மரியாதை. வெடிப்பில் அங்கேயே இறந்தாலும் பறுவாயில்லை. பெயர் சுகந்தன் இல்லை! கப்டன் சுகந்தன்.
“தம்பி ஒரு டீ “
கதிரையில் அண்ணாந்து கிடந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். வாயிலிருந்து வழிந்திருந்த வீணீரை துடைத்து சின்க் அருகில் போய் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக்கொண்டான். அருகிலிருந்த கண்ணாடி குவளைக்குள் தண்ணீரை நிரப்பி ஒரு அலசு அலசி சின்க்இற்குள் ஊற்றி விட்டு பால்மா பெட்டியை திறந்தான்.
அப்போது சண்டை பெரிதாக ஆரம்பித்திருக்கவில்லை. ஊரில் இருந்த பல குடியினர் ஊரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டை தொடங்கபோவதை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு பக்கத்தாலும் பெரும் நெருக்கடி உருவாகிவிடும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். ஒரு பக்கம் ஆமி, மற்றப்பக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் சின்ன சின்ன குழுக்கள். வயது பால் பேதமின்றி தத்தம் அணிக்கு பலம் சேர்க்கும் ஆட்சேகரிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரில் எல்லோரும் இயக்கபக்கம் தான். எல்லோருக்குமே இயக்கம் வெல்லவேண்டும் தனி தேசியம் வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. அதற்காக குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களும் துப்பாக்கி ஏந்திய குடும்பமும் இருந்தது. இப்போது இல்லை. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இயக்கத்தை மதமாகவும் மொழியாகவும் செயலாகவும் சொல்லிகொடுத்தே வளர்த்து விட்டார்கள்.
வெயிலுக்குள் சென்றவனின் உச்சந்தலையில் சூடு பொக்கென இறங்கியது. போனதும் செருப்பை வீட்டு வாசலில் சுழற்றி விட்டு வெறுந் தரையில் கையிரண்டையும் தலைக்கு முட்டு கொடுத்து மல்லாக்காகப்படுத்தான். அப்பா சாப்பாட்டை பற்றி கேட்ட போது காலம் தாழ்த்தி சாப்பிடுவதாக சொல்லி விட்டான். அப்பா ஒரு காலை கதிரையில் வைத்து மட்டையால் விசிக்கியபடி சாய்ந்திருந்தார். வீடு முழுக்க புழுக்கம்.
“ அப்பா ஒரு பேன் வாங்கணும்”
அப்பா ஒண்டுமே சொல்ல வில்லை. விசிக்கி கொண்டே இருந்தார். மழையே இல்லாத வறண்ட காலநிலையால் வயலாலும் தோட்டதாலும் இலாபம் கிடையாது. இரண்டு மாதத்திற்கு முதல் விற்ற கெளப்பியால் கிடைத்த வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்திற்கு அதை வைத்து சமாளித்து விடலாம். அதற்கு பிறகு என்ன செய்வது? எங்காவது கூலி வேலை தான் செய்ய வேண்டும். வயதும் ஆகிவிட்டது. இனி எங்கே கூலி வேலைக்கு கூப்பிட போகிறார்கள். கூப்பிட்டாலும் எவ்வளவு நேரம் வேலை செய்ய முடியும். பேசாமல் இருக்கின்ற ஒரு தோட்டக்காணியை விற்று விடவேண்டியது தான். வேறு வழியில்லை. விற்று விட்டு எங்கேயும் ஒரு சிங்கள குடியேற்றமாய்ப்போய் இருந்து விட வேண்டியது தான். மகிழனுக்கு ஒரு சிறிய வேலையை எடுத்து குடுக்க வேண்டும். விற்று வருகின்ற பணத்தில் எப்படியும் இரண்டு வருடங்கள் தள்ளி விடலாம். அப்புறம் மகிழன் பார்த்து கொள்வான். அவன் என்ன சின்ன பொடியனா?
“ அப்பா நான் வேலைக்கு போகணும். உங்களுக்கும் உடம்புக்கு ஏலாம வந்திட்டு. இனி நீங்க கஷ்டப்பட முடியாது. நான் போறன், எங்கயாவது ஏதோ ஒரு வேலை பாக்கிறன்.”
அவர் இதற்கும் பதில் அளிக்க வில்லை. அவர் மனதில் நினைத்த எதையும் காட்டிக்கொள்ளாமல் மட்டையை  இன்னும் வேகமாக விசுக்கிகொண்டிருந்தார்.
பின்னேரம் மகிழன் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு சுகந்தனின் கடைக்கு போய் டீ ஒன்றை போட்டன். மேசைக்கு எடுத்துக்கொண்டுவந்து சுகந்தனுக்கு ஒன்று தனக்கு ஒன்றாக பிரித்து தனித்தனி கண்ணாடி குவளைக்குள் ஊற்றிவிட்டு காத்திருந்தான். சுகந்தன் எல்லாம் முடியும் வரை பாத்துகொண்டிருந்துவிட்டு எழுந்து வந்து மகிழனின் எதிரில் அமர்ந்தான். இருவரும் பேசிக்கொள்ளாமல் டீயை குடித்தார்கள். ஒவ்வொரு இழுவையின் பின்னும் ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொள்வது போல பார்த்தார்கள். மகிழனின் பார்வை சுகந்தனுக்கு கவலையின் குறியீடாகவே தெரிந்தது. சுகந்தனின் பார்வையை மகிழன் அறிந்து கொள்ளுமளவு நிதானத்தில் இருக்கவில்லை.
ஒவ்வொரு கைத்தொலைபேசியும் ஏதோ ஒரு வகையில் உறவுகளை மேம்படுத்திக்கொண்டே இருப்பதாக அவனுக்கு தோன்றியது. தனக்கு அருகிலும் முன்னாலும் இருந்தவனுக்கு அழைப்பு வர அவன் பெரு மகிழ்ச்சி பிரவாகத்தில்  எழுந்து யன்னல் ஓரத்தில் இருந்த இரும்பு வலைகளில் கை விரல்களை கோர்த்துக்கொண்டு கதைக்க தொடங்கினான். மகிழன் எழுந்து தனது சீருடையை எடுத்து மேசையில் வைத்து இஸ்திரி பெட்டியின் சூட்டை கூட்டி இழுக்க தொடங்கினான். கொலர், தோள், கை, வயிறு என்று ஒவ்வொன்றாக இழுக்கப்பட்டு கசங்கியிருந்த பகுதியெல்லாம் சீர் செய்யப்பட்டது. அடுத்து காற்சட்டை , இன்னும் இஸ்திரி பெட்டியின் சூட்டை அதிகரித்தான். முன்னதைப்போல இல்லாமல் வேகமாக இரண்டு இழுவை இழுத்துக்கொண்டு சூட்டினை வழமையான நிலைக்கு திருப்பி விட்டு அவனின் அறைக்கு திரும்பினான். திரும்பும் வழியில் தான் சுகந்தன் அந்த கடிதத்தை நீட்டினான். மற்றவர்களைப்போல அவனுக்கு யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை.அவன் அவசரப்படாமல் அந்த கடித்ததை வாங்கி இஸ்திரி போட்டு கொண்டுவந்த சீருடைகளோடு கையில் ஏந்திக்கொண்டு சுகந்தனோடு அவர்களின் அறைக்கு சென்றான். நேரம் ஆறைத்தாண்டி விட்டது.
சுகந்தன் ஏற்கனவே சீருடை உடுத்தவனாக நின்றான். இன்னும் பூட்ஸ் போடவில்லை. அதற்குள் மகிழனுக்கு கடிதம் வந்திருப்பதாக அறிவிக்கப்பட , மகிழன் குளித்துகொண்டிருந்தான். அதனால் சுகந்தானே சென்று கையொப்பம் இட்டு கடிதத்தை வாங்கிகொண்டான். இது ஒன்றும் முதல் முறையல்ல. மகிழன் அப்பாவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்து மாதா மாதம் அப்பா மறக்காமல் கடிதம் போடுவார். பதிலுக்கு இவனும் எழுதுவான். இடைக்கிடை தொலைபேசியில் நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொள்வார்கள். கடிதம் எழுதுவது வீண்வேலைதானே என்று மகிழன் அப்பாவிடம் சொல்லும் போதெல்லாம், தொலைபேசி எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி விடாது. ஆனால் எழுத்துக்கள் அப்படியில்லை, என்று உறுதியாக கடிதங்கள் எழுதுவதில் இருந்தார். மகிழனுக்கு அப்பாவின் கையெழுத்தை கடிதத்தில் பார்க்கும் போதெல்லாம் அவர் அருகில் இருப்பது போல இருக்கும். அதனால் அவனும் கடிதங்களை ஒரு வகையில் விரும்பினான்.அப்பாவின் கையெழுத்துக்கள் அவரைப்போலவே வர வர நோய்வாய்ப்பட்டுக்கொண்டே வந்தன. மகிழன் சீருடையை மேசையின் மீது வைத்து விட்டு, போட்டிருந்த காற்சட்டையை கழற்றி உள்ளாடைகளையும் சீருடையையும் அணிந்தான். அவனின் மெல்லிய உடம்பிற்கு சீருடை தொழ தொழ என்றிருந்தது. அவனின் சகபாடிகள் எல்லோரும் இதை பலமுறை கிண்டல் செய்துள்ளார்கள்.
அவன் சீருடையில் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துகொண்டான். கண்ணாடியில் சீருடையின் மங்கிய விம்பம் பிரதிபலித்தது. அதற்குள் சுகந்தன் பூட்ஸ் போட்டுக்கொண்டு வந்து விட்டான். சுகந்தன் ஆரம்பித்தான்,
“ என்ன மாப்பிள்ளை மாரி நிக்கிற, அடுத்த வருஷம் எப்பிடியும் புது மாப்பிளை தானே, இந்த கடிதமும் அது சம்பந்தமா தான் இருக்கும்.”
“ அப்பிடித்தான் நினைக்கிறன், இந்த ஏலாதவயசிலையும் அப்பா பண்ற வேலைய பாரடா”
“அப்பா எண்டா அப்பிடித்தான்”
“அதுக்காக சேந்த நாலு மாசத்திலேயா ?”
“வயசுக்கு தெரியுமா வேலை பத்தி “
“மனசுக்கு தெரியுமே “
தனது கட்டிலின் கீழிருந்த பூட்சை எடுத்து சொக்சால் பூட்ஸின் மேல்பக்கங்களை தட்டி விட்டு சொக்சை இரண்டு காலிலும் போட்டு விட்டான் மகிழன் பேசியபடியே.
“அப்பா தனிய தான் இருக்கார் , சமச்சு கொடுக்க ஒருத்தி வேணும் அதுக்காகத்தான் ஒம் என்டன்”
“சரி கடிதத்த பிரி “
“இல்ல இருக்கட்டும் வந்து பாப்பம் , நேரமாச்சு . எப்பிடியும் ஒருத்திய முடிவு பண்ணிட்டு தான் கடிதத்த போட்டிப்பார், வேணுமெண்டால் பாரன்” என்று சிரித்துக்கொண்டே கட்டிலிருந்து எழுந்து நிலத்தில் ஒரு துள்ளு துள்ளி மகிழன் எழுந்து நின்றான்.
சுகந்தனுக்கு இது புதுசாக இருந்தது.
மகிழனின் அப்பா மேசையில் அரசாங்க முத்திரை குத்திய சில கடதாசிகளை வைத்திருந்தது பற்றி அப்பாவிடம் முகிழன் எதுவும் பெரிதாக கேட்டு கொள்ளவில்லை. அந்த தாள்கள் வீட்டினதும் தோட்ட காணியினதும் என்று அவனால் ஊகித்துகொள்ளக்கூடியதாகஇருந்தது. அப்பா, முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார் என்பது மட்டுமல்ல மகிழனுக்கும் ஒரு காரணத்தேவை இருந்தது. அடுத்தநாளே பத்திரங்கள் ஒப்பமிடப்பட்டது. வந்திருந்தவர்களுக்கு டீயினை சுகந்தன் கடையிருந்து மகிழன் வாங்கிகொண்டுவந்ததை பார்த்தவர்கள் வீட்டிற்க்கு ஒரு பெண்ணாவது வேண்டும் என்று அப்பாவிற்கு சாடமாடையாக சொன்னார்கள். மகிழனின் அப்பாவிற்கு அது முக்கிய சொற்களாக பட்டது. காணியிலிருந்து இருவரும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கிளம்பிவிட்டர்கள். சுகந்தன் தான் கட்டில் அலமாரி எடுத்து ட்ரக்டரில் ஏற்றுவதற்கு ஒத்தாசையாக நின்றான்.அவனுக்கு மகிழன் எந்த தேசம் போனாலும் டீ குடிக்க அவனின் காடைக்கு வந்தே தீருவான் என்று ஆழமான நம்பிக்கை வைத்திருந்தான். சுகந்தன் மிக நிதானமாக சாமான்களை பெட்டியில் அடுக்குவதிலும் பின்னர் புது வீட்டில் இறக்கி ஒழுங்குபடுத்துவதிலும் மும்முரமாக வேலை செய்தான். மகிழனுக்குத் தான் சங்கடமாக இருந்தது, அவனை விட்டு பிரிந்து போகபோகின்றோமே என்று மனதுக்குள்ளே கவலைபட்டுக்கொண்டான். எல்லாக்கவலையும் இருவரும் கூம்இற்கு போகும் மட்டும் தான் இருந்தது.
கூம் ஒரு மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம். தனியார் நிறுவனம் என்றால் சம்பளம் அதிகம். வேலைப்பழு அதிகம் தான் ஆனால் அதற்கு ஏற்ற சம்பளம் ஆகிற்றே. கூம் இலங்கையில் ஆரம்பித்து சில வாரங்களே என்பதால் பெரும் திரளான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அவர்களுக்குள் மகிழனும் சுகந்தனும் இணைந்து கொண்டார்கள். சுகந்தன் அந்த டீ கடையை மூடிவிட்டான். முதல் இரண்டு மாதம் பயிற்சி, பின்னர் வேலை.இப்போது நான்கு மாதங்களாகி விட்டது. மகிழனின் அப்பா அவனுக்கு பெண் பார்க்க தொடங்கியும் ஆறு மாதங்கள் ஆகின்றது.
கூமைபற்றி இருவரும் ஆரம்பத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களது எண்ணங்கள் எல்லாம் இயக்கத்திலும் ஆமியிலும் மட்டுமே இருந்தன. இளைஞர்கள் பெரும்பாலானோர் இயக்கதிற்க்கே சென்று கொண்டிருந்தனர். வெகு சிலர் வேறு தனியார் குழுக்களுக்கும் சென்று கொண்டிருந்தனர். எழுந்து நடக்க தெரிந்தால் போதும் ஏதாவது ஒரு படையில் சேர்ந்துகொள்ள. மகிழனின் அப்பாவிற்கு சண்டைக்குள் மகனை விட விருப்பமே இல்லை. எங்காவது ஒரு சிறிய வியபாரமாவது அவன் செய்தால் போதும் என்று நினைத்துகொண்டிருந்தார். அவ்வேளை தான் இந்த கூமிற்கு ஆக்கள் சேர்க்கும் நடவடிக்கை மெதுவாக தொடங்கியது. மூவருக்கும் கூம் பாதுகாப்பானதாக தோன்றியது.
இருவரும் ஒன்றாகவே அவர்களின் வீடுகளுக்கு திரும்புவார்கள். இந்த ஆறு மாதங்களில் இருவரும் மூன்றுமுறைதான் வீடுகளுக்கு போயிருக்கிறார்கள். மூன்று முறை தான் அவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது. இன்று நான்காவது முறை.
அவசரம் அவசரமாக அறைக்கு வந்த மகிழனும் சுகந்தனும் அவர்களது நீண்ட காலுறையை கழற்றி கட்டிலின் கீழே போட்டு விட்டு இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளையும் பேஸ்ட் பிரஷ் சோப் என்பவற்றையும் பைகளுக்குள் உருட்டி திணித்தனர். எல்லா அறைகளிலும் இந்த நிகழ்ச்சி சமாந்தரமாக நடந்துகொண்டிருந்தது. மேசையில் இருந்த கைபேசியையும் வண்டி திறப்பையும் மகிழன் எடுத்துகொண்டு சுகந்தனை வேகப்படுத்தினான்.
“ எடுடா எடுடா ஏற்கனவே நேரமாகீற்று “
“அப்பவே சொன்னான் தானே, கடைல மினகடதா எண்டு “
“என்னடா செய்ய வாங்க வேண்டியதா போயிற்று”
“ சரி கதைய குடுக்காம இரு, லெட்டர் எடுத்திட்டியா ?”
“ இல்லடா பாத்தியா , இன்னும் பிரிக்க கூட இல்ல “
மகிழன் அவசரம் அவசரமாக அவனின் மடித்து வைக்கபட்டிருந்த உடைகளை கிளறினான்.
“ எடுத்திட்டியா ?”
“ இல்லடா நீ வெளிக்கிட்டியா ?”
“ ஓமடா “
“அப்ப வா போவம், எப்பிடியும் இண்டைக்கு அவர நேர்ல பாக்க தானே போரம் “
“சரி சாவி எடுத்தியா “
மகிழன் திறப்பை உயர்த்திக்காட்ட சுகந்தன் சிரித்துக்கொண்டே முதுகை தட்டினான்.
மணி 11 ஐ தாண்டிய நிலையில் தார்வீதிகளில் இருந்து வண்டி மண் வீதிக்கு இறங்கியது. சனநடமாட்டமே இல்லாத இருண்ட வெளியாக இரவு இருந்தது. காற்று வேகமாக இன்னும் வேகமாக வண்டியின் வேகத்திற்கு இணை கொடுத்து ஜக்கெட்டுகளை கிழித்தது. தென்னை இடுக்குகளில் இருந்த சந்திரன் வெட்ட வெளிக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தான். உலகில் எதுவுமே தூய்மை இல்லை என்பது போல இருட்டின் கனதி மிக அதிகமாக இருந்தது. பகல் முழுக்க வேலை செய்த அயர்ப்பும் காகிதத்தில் என்ன இருக்கும் என்ற யோசிப்பும் மகிழனை ஒரு முறை உலுப்பியது. மகிழன் மெதுவாக வண்டியின் வேகத்தை குறைத்து சுகந்தனிடம் பேச்சை கொடுத்தான்.
வண்டி மண் வீதியின் ஏற்றதில் ஏறி இறங்கியது.
பேச்சு கொடுக்க திரும்பிய மகிழன் தூரத்தில் நான்கைந்து வட்ட மஞ்சள் ஒளிபொருந்திய சில வண்டிகள் எதிர்த்துக்கொண்டு வருவதை கண்டான். பேச்சை கொடுக்காமல் திரும்பி வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.பொதுவாக இந்த நேரத்தில் யாரும் கூட்டமாக பயணம் போகமாட்டார்கள். தனியாகவே செல்லுவார்கள். இப்படி ஒரு குழுமமாக வண்டிகளை பார்த்ததும் மகிழன் சுகந்தனை தயார்படுத்தினான். சுகந்தனுக்கு இந்த வீதிக்கு கிளை வீதிகள் எதுவுமே கிடையாது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. இருந்தும் ஒன்றாவது உருவாகியிருக்க கூடாத என்று கடவுளிடம் கெஞ்சி கேட்டான். அவர்களிடம் கூமில் வேலை செய்யும் அடையாள அட்டை இருந்தது. அப்படி மறித்தால் அதைக்காட்டி சென்று விடலாம் என்று இருவரும் பேசிக்கொண்டார்கள். வெளிச்சங்களை நெருங்க நெருங்க அங்கிருந்து எந்த அசைவும் தெரியவில்லை. இன்னும் நெருங்க வாகனங்கள் சில நகராமல் வெளிச்சத்தை மட்டும் பாய்ச்சிய வண்ணம் நின்றது. கட்டாயம் அது ஆமியோ போலிசோ கிடையாது. சில நேரம் உளவுத்துறையாக இருக்குமோ?
நன்கு வளர்ந்த பருமனான ஒருவன் கைகளை காட்டி இறங்க சொன்னான். வண்டி முழு வேகத்தையும் குறைத்து படபடப்புடன் அவர்கள் இறங்கி பின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு பேர்செய் திறந்து அடையாள அட்டைகளை எடுத்து காட்டினார்கள். அவன் அடையாள அட்டைகளை வாங்கி கொண்டு போய் அங்கிருந்த இருவரிடம் நீட்டினான்.
அவ்விடத்தில் இரண்டு ஆட்டோக்களும் ஒரு மோட்டார் வண்டியும் நின்றது. சிவப்புநிற ஆட்டோக்கள் தான் இரண்டும். வெளிச்சத்தில் அங்கிருந்த எட்டு பேரின் முகத்தையும் உடல் வாகுவையும் மகிழனால் அறிய முடிந்தது. கைத்தொலைபேசியில் இருந்து வந்த ஒளியில் மின்னிய அவனின் தோழர்களின் முகங்களை போல வாகன வெளிச்சத்தில் இவர்களின் முகமும் ஒரு இறுக்கமான பிடியுடன் தெரிந்தது. எல்லோரது முகங்களிலும் நெடுநாளாக மழிக்காத தாடியும் மீசையும் அழுக்காக படிந்திருந்தது. யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் சிங்களவர்கள் அல்ல.
இவை அனைத்தையும் கவனிக்க முன்னரே அவர்கள் மகிழனையும் சுகந்தனையும் சுற்றி கொண்டார்கள். இருவர் ஆட்டோக்குள் சென்று ஒரு பெரிய லாரி டயரை தூக்கிக்கொண்டு வந்தார்கள். சுற்றிருந்தவர்களில் ஒருத்தன் கைகளில் கயிறுடன் வந்தான், இன்னொருத்தன் ஒரு கானுடன் வந்தான். சுற்றியிருந்தவர்கள் இருவரையும் நெருங்க மகிழனும் சுகந்தனும் மிக சத்தமாக தம்மை விடும் படி அலற ஆரம்பித்தார்கள். சுற்றி எங்குமே வீடில்லாத வீதியில் அவர்களின் குரல் காற்றோடு கலந்து நிசப்தமாய் போனது. மகிழன் ஒரு முறை திமிறி அவர்களின் பிடியிலிருந்து விலக எத்தனித்தான். அவர்களின் பிடியிலிருந்து அணுவும் விலக முடியவில்லை. இன்னும் சத்தாமாக கத்தினான். சுகந்தன் மெதுவாக முனகினான். மகிழன் உரத்தை கூட்டி கத்தினான். அடித்தொண்டையின் வளை அதிருமாறு தலையை மேலும் கீழும் ஆட்டி திமிறியவாறு கால்களை நிலத்தில் குத்தி எம்பி எழ எத்தனித்து கத்தினான். சுற்றியிருந்தவர்காளால் அவனின் அலறலை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒருத்தன் விறகு குற்றி ஒன்றை கொணர்ந்து மகிழனின் வாய்க்குள் அடித்து இறுக்கினான். விறகின் சிராய்கள் வாய்களின் புறங்களை கிழித்து ரத்தம் சீறி பாய்ந்தது. மகிழன் வலியால் கண்களாலும் காதுகளாலும் மூக்காலும் முனகினான். வாயிலிருந்து ரத்தம் அவனின் மார்பெல்லாம் வழிந்தது.
கையில் கயிறுடன் நின்றவன் இருவரையும் இணைத்து கைகளை மடக்கி கால்களையும் சேர்த்து கால் வயிறு கைகள் கழுத்து என மகிழனையும் சுகந்தனையும் இறுக்கி ஒன்றாக கட்டி விட்டான். அவர்களில் இன்னொருத்தன் மற்றவர்களின் பிடிகளை தளர்த்தி விட்டு தன் கால்களால் இருவரையும் அழுத்தமாக உதைந்தான். இருவரும் மண்ணின் மீது ஒன்றாக கவிழ்ந்தார்கள். விறகு கட்டை மகிழனின் வாயினை இன்னும் ஆழமாக தாக்கியது. மகிழன் மயங்கி போனான். சுகந்தன் சுயநினைவை இழந்து போய் இரண்டு சடலாங்களாகி போனார்கள்.
இருவரையும் சிலர் இழுத்துக்கொண்டு வந்து அருகில் இருந்த நீரோடாத வாடிப்போன வாய்க்காலுக்குள் தள்ளி விட டயரை இருவர் கொணர்ந்து இருவரின் மேலே போட்டார்கள். கொணர்தவர்களின் கண்களில் எந்த சலனமும் இல்லை. நடந்து திரிகின்ற பிணங்கள் போலவே அவர்களும் இருந்தனர். இதுவரை அவர்கள் எவரும் பேசிக்கொண்டாதாய் இல்லை. அவர்களின் உடலும் இயக்கமும் எந்திரதனமாக இருந்தது. நள்ளிரவிலும் அவர்களின் நேர்த்தியான முனைப்பும் இறுக்கமும் உறுதியாக இருந்தது.
அடுத்தவன் கானிலிருந்த மஞ்சள் திரவத்தை அவர்களின் மேலே ஊற்றினான். ஒரு கடவுளுக்கு பாலாபிசேகம் செய்வதை போல மிக மெதுவாக எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றினான். அவர்களில் யாருமே ரசித்ததையும் வெறுத்ததாயும் தெரியவில்லை. மஞ்சள் ஒளியின் மங்கிய பிரகாசத்தில் திரவம் மினுக்கம் கட்டியது. ஒருத்தன் கட்டிபோட்ட இருவரின் அருகிலும் வந்து அவர்களின் அடியாள அட்டைகளை அவர்கள் மீது எறிந்தான்.
மற்றையவன் தனது பின் ஜீன்சுக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்து சுகந்தனின் தலைக்கு குறிவைத்து சன்னத்தை பாய்ச்சினான். துப்பாக்கி முனை ஒரு கணம்  இருட்டில் பற்றி பிடித்து அணைந்தது போல இருந்தது.
குபுக்கென பற்றிக்கொண்டு எரிந்தது டயர், கூடவே இரண்டு பிண்டங்களும்.அந்த வீதி முழுக்க ஒளி அவ்வளவு பிரகாசமாக பரவியது. முனுமுனுத்துக்கொண்டே இருந்து அவர்களின் இறுதி நேரத்து சொற்கள் எல்லாம் வெளிச்சத்தில் கலந்து காத தூரம் போய் அடையாளங்கள் அற்று மறைந்து போயின. தண்ணீரே படாத மண்வீதியின் வாய்கால் திரவத்திலும் ரத்தத்திலும் உறைந்து போனது. டயருடன் மகிழனும் சுகந்தனும் கருகிப்போனார்கள்.
அவ்வளவு நேரம் எரித்தவர்கள் நிற்கவில்லை. அவர்களுக்கு கட்டளையும் அப்படி வழங்க படவில்லை.சன்னம் பாய்ந்த அடுத்த நிமிடம் அவர்களும் வண்டிகளில் பாய்ந்து விட்டார்கள். அவர்களுக்கு இது வெறும் தொழிலே. கொள்கைகள் இல்லாமல் சுற்றித்திரிந்த அவர்கள் தெரிந்தெடுத்த பிழையான பாதையினால் மிக சரியாக குழிக்குள் விழுத்தப்பட்ட நிலையே அவர்களது.
ஒரு வாய்க்காலுக்குள் இரண்டு புழுக்கள் நெளிவதைப்போல முடிந்து போனது அந்த இரவும் முகிழன் சுகந்தன் இருவரின் வாழ்கையும்.
மகிழனின் வண்டிக்கு பின் கட்டியிருந்த இருவரது பைகளுக்குள் மகிழனின் பைக்குள் இருந்த  திணித்த உடைகளுக்குள் கண்ணீர் வழிய அப்பாவின் கடிதம் எல்லாவற்றியும் மௌனமாக பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தது.
 

அஞ்ஞாதம். – சிறுகதை.

கண்கள் தான் அவளின் முகம். மேகலா என் சிறுவயது முதலே நல்ல நண்பி. அன்றிலிருந்து இன்று வரை எது வாங்கினாலும் பகிர்ந்துகொள்ளும் மனப்பக்குவம் எங்களிடம் இருந்தது. ஊர்த் தேர் திருவிழாவில் நான் வாங்கிக் கொடுத்த தஞ்ஞாவூர் பொம்மையை இன்றும் தான் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லிக்கொள்வாள். இரட்டை குடும்பி போட்டு ஒன்று முன்னே மற்றது பின்னே கழுதைக் காது போல சிறிதாக ஆடிக்கொண்டு திரியும் வயதிலிருந்து மேகலாவை நான் அவதானித்து வந்திருக்கிறேன். ஒன்றன் மீது அவள் ஆசையை வைத்துவிட்டாள் என்றால் உயிரே போனாலும் அதை அடையாமல் விடமாட்டாள். அடம்பிடித்து வீட்டு முற்றத்தில் வெறும் மேலோடு உச்சி வெயிலில் நின்று அப்பாவிடம் சைக்கிள் வாங்கினாள். அதைப் பெருமையாகவும் கருதினாள். அந்த சைக்கிளில் ஊர் உலகமெல்லாம் சுற்றித் திரிவாள். அவளின் அசட்டுத்தனமான தைரியம் ஒருமுறை என்னையும் அவளையும் ஆளில்லா கட்டில் தனியாக விட்டுவிட்டது. சைக்கிளோடு உச்சி வெயிலுக்குள் காட்டுக்குள் புகுந்த இருவருக்கும், களைப்பு மிகுந்ததால் ஓங்கி வளர்ந்திருந்த ஆல மரத்தின் கீழே நில வேர்களை தலைக்கு வைத்து நித்திரை கொண்டுவிட்டோம். களைப்பு அதிகமாக இருந்ததால் நேரம் காலம் போவது அறவே தெரியவில்லை. அவள் தான் என்னை வேகமாக தட்டி எழுப்பினாள். இருட்டில் அவள் யார் என்றே தெரியாமல் போனது. அலறியடித்துக்கொண்டு இருவரும் கைகளை கோர்த்து வீட்டுக்கு திரும்ப பாதையை தேடினோம். சைக்கிளில் தடக்குப்பட்டு குப்புற மூக்கு அடிபட நான் விழுந்தது தான் மிச்சம். இருவரும் சைக்கிளை கட்டிப்பிடித்துக்கொண்டு இரவை விளிப்போடே கழித்தோம். காலையில் வீட்டிற்கு போக, வீடு செத்தவீடு போல இருந்தது. என்னையும் மேகலாவையும் கண்ட ஊர் பெரியவர் ஒருவர் கொலை இழுவையாக இழுத்துக்கொண்டுவந்து வீட்டில் விட்டார். அன்றிலிருந்து மேகலா வெளியே எங்கேயும் போவது கிடையாது. அவளின் சைக்கிளும் பரணில் எறியப்பட்டது.
 
பின்னேரங்களில் அவளின் வீட்டிற்கு அம்மாவோடு போவேன். அவள் ஒரு சின்ன கதிரையில் இருந்து சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பாள். நான் அவளின் அருகில் போய் உட்காந்து , உகரம் எழுதும் போது சுழியை உள்ளங்கையால் அழித்து விடுவேன். அவள் என்னை அப்போது தான் திரும்பிப் பார்ப்பாள். அவளின் தனிமையை, அதனால்  உண்டான வெறுமையை அவளின் கண்களில் பார்த்திருக்கிறேன். அடுத்தமுறை அழித்து விடக்கூடாது என்று உறுதியாகச் செல்வேன். ஆனால்அவளின் எழுத்துக்களில் இருக்கின்ற சுழி, அவளைவிட நளினமாக தெரிவதால் மீண்டும் அழித்து விடுவேன். எப்போதும் அம்மாவால் துணைக்கு வர முடியவில்லை. நான் தனியாக செல்வதை விரும்பவில்லை. அவள் பூப்படைந்து இரண்டு வருடங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போய் விட்டாள்.
 
இரண்டு மாதங்களுக்கு முதல் தான் அவளை லண்டன் அல்லங்காடி ஒன்றில் சந்தித்தேன். அதே இரட்டை பின்னல் ஒன்று முன்னே மற்றையது பின்னே, மாட்டின் வாலைப்போலே நீளமாக கரும்பின் தாளைபோல அகலமாகவும் கரிய நிறமாகவும் இருப்பதை வைத்தே அவளை மட்டுப்பிடித்து விட்டேன். கணவருடன் சந்தோசமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். இடுப்புயர குழந்தைகள் இரண்டு. மேகலா நீங்கள் தானே என்பதற்குள் அவள் என்னை கண்டுபிடித்து விட்டாள். கண்களில் முன்னைய தனிமையும் வெறுப்பும் இப்போது இல்லவே இல்லை. அவளின் கணவனின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாள். அவளது கணவன் என்னைப்பார்த்த போது பல ஆண்டு பழகிய நண்பனைப்போல வாயை அகலமாக விரித்து அசட்டுத்தனமாக சிரித்தார். அவரின் புன்னகைக்கும் அவளின் கண்களின் தணிப்பிற்கும் இருந்த உறவை என்னால் அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர் என்கைகளை இறுக்கமாக குலுக்கி வீட்டில் இன்னும் அவள் பொம்மையை பத்திரமாக வைத்திருப்பதை மகிழ்ச்சியாக சொன்னார். அவளின் கண்கள் வேட்கத்தால் சுருங்கிப்போனதை என்னால் மட்டுமே உணரமுடிந்தது. அவளின் பையன்கள் கைகளை பிசைந்து கொண்டு இருவருக்கும் இடையில் கடக்கமுடியாத தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு நிற்பது போல உணர்வுகள் குவிந்து கொண்டிருக்கும் அங்காடியில் நீண்ட நேரம் நிற்கமுடியவில்லை.
 
சாலையின் இரண்டு புறங்களிலும் பனியை குவித்துக்கொண்டிருந்தது வாகனங்கள்.பொடி நடையாக ஐவரும் நடந்து சென்றோம். அவள் கைகளை கணவனின் கைகளோடு கோர்த்து விலாசமாக விசுக்கி விசுக்கி நடந்தாள். இப்பொது தலைக்கு குளிர் குல்லா ஒன்று போட்டிருப்பதால் பின்னல்கள் ஆடுவதை அவதானிக்கமுடியாமல் போனது. கதைகளின் இடைகளில் எல்லாமே அவள் சந்தோசமாக இருப்பதாக சொன்னாள். அவளின் கண்கள் அப்போதெல்லாம் மிகப் பிரகாசமாக மின்னியது.பையன்களுக்கு பழக்கபட்ட வீதிகளின் புறங்களில் குவிந்திருந்த பனியின் விளிம்புகளை தமது சப்பத்துக்களால் உதைந்து கொண்டே வந்தார்கள். மேகலா என்னை இராப்போசனம் கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பவேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தாள். வீட்டிற்குள் புக முதலே போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் அடிப்படையிலேயே உள்ளே நுழைந்தேன். நுழைந்ததும் உட்காராமல் நேரே புகைப்படங்கள் தொங்கவிட்டிருக்கும் சுவரை நோக்கி நடந்தேன். முதலில் பையன்கள் இருவரும் சிறு வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படம். அதில் ஆளுக்கொருவர் அவர்களின்  சட்டைக்கலரில் ஒவ்வொரு சைக்கிள் வைத்திருந்தார்கள். அடுத்த புகைப்படம் இவர்கள் இருவரது திருமணம். ஜோடியாக கைகளில் பூக்கொத்துடன் நின்றனர். மேகலாவின் பார்வை அப்போது வெறித்தபடியே இருந்தது. புகைப்படம் எடுத்த பெரியவருக்கே அது தெரிந்திருந்தது. மேகலாவின் சம்மதம் இல்லாமலே தான் திருமணம் நடந்தது. அவள் கணவனின் புகைப்படம் கூட பார்க்கவில்லை.வீட்டின் பெரியவர்கள் பார்தார்காளா என்று கூட தெரியவில்லை. அடுத்து முதல் பையனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம். பையன் அழுதபடியும் மேகலா சிரித்தபடியும் இருக்க கணவன் மேகலாவின் ஒரு தோளில் கையை இறுக்கமாக பிடித்திருக்க மேகலா அவரை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் மேகலாவிற்கு அவளின் கணவனை அதிகம் பிடித்திருக்க வேண்டும். கல்யாணமாகி இரண்டாம் நாள் மேகலாவின் வீட்டிற்கு சந்தோசமாகத்தான் வந்திருந்தாள். அப்போது தான் முதன் முறை மேகலாவை பெரிய பெண்ணாக பார்த்தேன்.  அடுத்தது இரண்டாவது மகனை தூக்கி வைத்திருக்கும் இருவரது தனிப்படம். முதலானவன் முகம் முழுக்க பௌடர் அடித்துக்கொண்டு கையில் கார் ஒன்றை வைத்திருந்தான். வரிசையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டு சென்று முடிவில் இருந்த கதிரையில் அமர்ந்தேன். மேகலாவின் கணவன் கையில் தஞ்ஞாவூர் பொம்மையுடன் சிரித்தபடியே வந்தார். அவரின் சிரிப்பில் மேகலாவின் சந்தோசமான வாழ்க்கை தெரிந்தது.
 
இன்று மதியம் மூன்று மணியளவில் தொலைபேசி மூலம் செய்தியறிந்தேன். விறுக்கென எழுந்து காரை எடுத்துக்கொண்டு மேகலாவின் வீட்டிற்கு புறப்பட்டேன். பாதையெங்கும் சூரியனின் வெளிச்சம். லண்டன் வாசிகள் எல்லாம் அரைகுறையாக நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். லண்டன் வெய்யில் காலங்களில் தான் அழகாகத் தெரியும். கடைகளில் எல்லாம் மட்டைகளும் தோரணங்களும் நீக்கமற நிறைந்திருக்கும். இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்தவர்களுக்கு லண்டனின் வெய்யிலையும் அழகையும் ரசிக்க கொடுத்துவைத்திருக்காது. அவர்களுக்கு இது தான் இலங்கைக்கு போக சரியான காலம். ஒவ்வொரு ஜோடியும் கைகளை கோர்த்து விலாசமாக விசுக்கி நடக்க, மேகலா என்னை ஞாபகப்படுத்தினாள்.
 
என்னையறியாமல் கண்கள் எல்லாம் கண்ணீரால் முட்டிப் போயிருந்தன.வாசல் கதவைத்திறந்து  வேகமாக விறாந்தைக்குள் நுழைந்தேன். ஒரு மூலையில் மேகலா கதிரைபோட்டு சுவரைபார்க்க திரும்பி இருந்தாள். பையன்களில் ஒருவன் என் கால்களைப்பிடித்து தலையை தொடையில் முட்டிக்கொண்டான். அவனை தூக்கிக்கொண்டு மேகலாவை நோக்கி நடந்தேன். அவள் அதை உணர்ந்திருக்க முடியாது. அவளின் தலைமுடி குலைந்து அசிங்கமாக இருந்தது. வீடே இருட்டி இருந்தது. யன்னல்கள் சூரியக்கதிர்களை தடுத்துவைத்திருந்தன.
 
அவளின் தோளில் மெதுவாக சென்று கையை வைத்தேன். கண்கள் சிவந்து வீங்கி ரத்த நாளம் எல்லாம் கண்களுக்குள் புடைத்துப்போய் முன்முடி கொஞ்சம் கீழே படர என்னை வெறித்து பார்த்தாள். அதே பார்வை அவளின் உகரத்தில் இருந்து நளினத்தை அழித்தபோது அவள் பார்த்த அதே பார்வை.

தேவதைக்கதை. – சிறுகதை.

வீட்டு விறாந்தையின் கிழக்கு மூலையில் இருந்த மரக்கட்டில், இன்று விறாந்தையின் நடுவிற்கு கொண்டுவரப்பட்டது. நல்ல திடமான முதிரை மரத்தால் சீவி செய்யபட்டிருந்தது. அப்பப்பா சொன்னதன் படி இந்த கட்டில் என் பூட்டப்பாவின் அப்பா முதன் முதலில் பயன்படுத்தியிருந்தார். சந்ததி சந்ததியாக இந்த கட்டில் குடும்பத்தின் தலைவர்கள் வசமே இருந்தது . இந்த கட்டிலில் பெண்கள் ஏறக்கூடாது, தொடக்கூடாது என்பது வழக்கம். அவ்வாறு மாறி தொட்டால் கூட அது பெரும் இழுக்காகவே கருதப்படும். அதனால் நானோ என் அம்மாவோ பாட்டியோ அதற்கு அருகில் கூட செல்வதில்லை. பாய், தலையணை, போர்வையையும் பாட்டி , அப்பப்பாவிடம் சொல்லித்தான் சுருட்டி வாங்குவார். ஒருக்கால் அப்பப்பா கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுகொண்டிருக்கும்போது  ,பாட்டி மூலிகைத்தண்ணீர் கொண்டு போய்க் கொடுக்க அருகே வரதே என்று காலால் கோப்பையையும் பாட்டியையும் உதைந்து தள்ளியது இன்னும் மனக்கண் முன் நிற்கிறது. பாட்டி எந்த சலனமும்  இல்லாமல் கோப்பையை எடுத்துக்கொண்டு குசுனிக்கு போய் முடிய அப்பப்பா என்னை கூப்பிட்டு “ கொஞ்சம் தேதண்ணி தா மோனை “ என்று கேட்டது அடுத்த உதை எனக்கோ என்ற பயத்தை தூண்டியது.
 
என்னதான் நான் ஆம்பிள்ளையா இருந்தாலும் அந்த கட்டிலுக்கு கிட்ட போக செரியான பயம். எனது அப்பா எப்போதும் அப்பப்பா பற்றி சொல்லும் போது நல்ல கதை சொல்லி என்று பாராட்டுவார். அந்த கட்டிலில் அவரின் மடியில் தலை வைத்து அரைஞான்கொடியை  கையில் வைத்து இழுத்துக்கொண்டே அவரின் பால்யம் முடிந்ததாக கூறும் போதெல்லாம் எனக்கும் ஒரு வித ஆசை உண்டாகும். அப்பப்பாவின் கதைகளில் பேயும் பிசாசும் நிறைய வரும் என்றும் அவரின் கதைகளில் எப்பொழுதும் ஒரு ஆண் தேவதை இருப்பார் என்றும் அப்பா சொல்லுவார். எனக்கு அந்த ஆண் தேவதை எப்படி இருப்பார் என்று கனவு கண்டே  சித்தம் கலங்கி விடும் போலிருந்தது.ஒரு போதும் அப்பபாவிடம் இதைப் பற்றி கேட்டது கிடையாது.
அப்பப்பா கட்டிலின் மூலையில் , இரண்டு சுவர்கள் இணைகின்ற ட வளைவில் நடுவே தலையணை ஒன்றை வைத்து சாய்ந்தபடி ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டே இருப்பார். அவரின் கட்டில் மூலையில் மூன்று புத்தகங்கள் மட்டுமே எப்போதும் இருக்கும். அன்றைய பத்திரிகை, கல்யாண வீட்டு அழைப்பிதழ், அந்தியட்டி வீட்டு அழைபிதழ் சிலவும் ஓரத்தில் நேர்த்தியாக வைக்கபட்டிருக்கும். யாரும் ஆம்பிள்ளைகள் வந்தால் மட்டும் முகம் கொடுத்து கதைப்பார். அதுவும் எல்லா ஆம்பிள்ளைகளும் அவர் முன்னால் இருந்துவிட முடியாது. ஒரு வெற்றிலை பெட்டி ஒன்று கைத்தாங்கலாக வைத்திருப்பார். அவர் பெரிதாக போடுவது கிடையாது. வயலுக்கு செல்லும்போது மட்டும் வாய்நிறைய சப்பிக்கொண்டும் போகின்ற வழியெல்லாம் சிவப்பு சிவப்பாக உமிழ்ந்துகொண்டும் போவார். வீட்டு வாசலில் சிவப்பை பின்தொடர தொடங்கினால் அவரின் நிழல் எல்லைக்குள் சென்று இலகுவாக அடைந்து விடலாம். ஒரு முறை பாட்டி “ இம்புட்டு ரோசம் இருக்குறவர் ஏண்டா மோனை களத்துக்கு மட்டும் துப்பிட்டே போறார் எண்டு கேளன்” என்றார். ஆண் தேவதை பற்றியே கேட்க முடியாமல் இருந்த எனக்கு இந்த கேள்வி எம்மாத்திரம்.
 
என் அப்பாவிற்கு கட்டில் மேல் எல்லாம் பிரியம் கிடையாது. ஒரு வேளை வயது போய் முடிய வந்துவிடலாம். அப்பா கட்டிலின் அருகில் இருந்து அப்பப்பாவிடம் ஏதோ மெதுவாக கதைத்துகொண்டிருந்தார். பாட்டியும் அம்மாவும் நானும் சுவரில் நின்ற பல்லியும் கூர்ந்து கேட்டுகொண்டிருந்தோம். அப்பா சொல்ல சொல்ல அப்பப்பாவின் கண்கள் கணத்துக்கொண்டு வந்தன.சிறிது நேரத்தில்  முகத்தில் எந்த மாறுதலுமின்றி அப்பா இடைத்தை விட்டு எழுந்து வெளியே போனார். அப்பப்பா கொஞ்ச நேரம் அப்பா போன தடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தன்னிடம் இருந்த பழைய புத்தகங்களில் மிக பழையதை எடுத்து விரித்தார். நாம் நால்வரும் வைத்த கண் வாங்காமல் அப்பப்பாவின் செய்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தோம். அப்பப்பா மெதுவாக திரும்பி என்னை பார்த்து “ வா மோனை “ என்றார். பின்னாலிருந்த அம்மா உந்தி விட நான் பயத்தோடு கட்டிலுக்கு அருகில் ஊர்ந்தேன்.
 
“ ஏறி இரு மோனை “
 
மெல்லியதாக கைகளை கட்டிலின் விளிம்பில் ஊன்றி சாவகாசமாக அமர்ந்து கொண்டேன். அப்பப்பா என் தலையில் கையை வைத்து அழுத்தி தன் தொடையில் கிடத்தினார்.என் கண்கள் கண்ணீரால் நிரம்பி முட்டிகொண்டிருந்தது. அப்பப்பாவின் வேட்டி நனைந்துவிடக்கூடாது என்று அடக்கிகொண்டேன். அவர் தனது கண்களை அருகிலிருந்த துவாயால் துடைத்து விட்டு கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். தேவதைக்கதை…. ஆண் தேவதைக்கதை …… கதை ஒரு மெழுகிய வழுக்கும் தரையைப்போல மிருதுவாகவும் சலனமற்றும் இருந்தது. அப்பப்பா ஒரு நல்ல கதை சொல்லி தான். அம்மாவும் பாட்டியும் கதைசொல்ல தொடங்கும் போதே உள்ளே போய் விட்டார்கள். நானும் பல்லியும் மட்டும் கதையை நீண்ட நேரம் கேட்டுகொண்டிருந்தோம். இடையில் நானும் தூங்கிவிட்டேன்.
 
அப்பப்பா வெற்றிலை பெட்டியிலிருந்து வெற்றிலையை வாய்நிறைய சப்பிக்கொண்டும் துப்பிக்கொண்டும் வயலுக்கு போனதாக பல்லி சொல்லி பின்னாளில் கேள்விப்பட்டேன்.
 
முதன் முதலில் கதை கேட்கும் போது எனக்கு வயது இருபத்தைந்து. இப்போது எழுபது. என் நான்கு பேரக்குழந்தைகளையும் என் மகள் இருவரையும் என் மனைவியையும் வைத்துகொண்டு அதே கட்டிலில் சந்தோசமாக தேவதைகளின்  கதையை சொல்லி முடித்து விட்டேன். பெண்தேவதைகளின் கதையை. என் பெண் பேரக்குழந்தைகளில் ஒன்று என் மடியின் மீது சிறுநீர் கழித்தது கூடத்தெரியாமல்.

ரிஷி வனம். – சிறுகதை ( திருத்தப்பட்டது )

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்படியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலையை முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன். வாகரை என்ற ஊரின் சுவாசம் ஆயிரத்து தொள்ளாயிரம்களிலேயே நின்றுவிட்டதாக பல்கலையில் இருக்கும் போது கிடைத்த சில புத்தகங்களில் இருந்து அறிந்து கொண்டேன். அந்த அறிதல் என்னுள் இனம்புரியாத வேட்கையை உருவாக்கியிருந்தது . அதுதானோ என்னமோ என்னை இப்போது இங்கு சடலமாய்ப்போன ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. சொந்தங்கள் என்று பாடசாலை மற்றும் பல்கலை நண்பர்கள் மட்டும் தான். அன்னை தெரேசா இல்லத்தில் நினைவு தெரிந்த நாளில் இருந்தேன். அது தான் என் வீடு , குடும்பம் எல்லாம். நான் பல்கலை அனுமதி பெற்ற போது என்னை மகனாய் வளர்த்த தாய் , ” நீ பிறந்த குழந்தையாக இருந்த போது எங்கள் இல்லத்திற்கு ஒரு எண்பது மதிக்கதக்க ஒரு ஆச்சியால் கைத்தாங்கலாக கொண்டுவரப்பட்டாய். அளவான உடல் வாகு உடையவனாயும் மா நிறத்திலும் இருந்தாய். உன்னை நிர்வாணமாகவே கொண்டுவந்திருந்தாள். உன்னில் தாய்ப்பால் வசமே வீசவில்லை. எங்களிடம் உன்னை ஒப்படைத்தவள் நீ வாகரைக்கு வந்து சேர்வாய் என்றுவிட்டு சென்றாள். நீ இப்படி……” என்று தொடர்ந்து வாழ்த்துச் சொன்னார்.
பின்னரும் நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அன்றைய தினம் நூலகத்தில் வாசித்த அந்த குறிப்புகள் தான் என் வேட்கையை   மீண்டும் தூண்டியது. இதோ இப்போது செம்மண் பரவிய வாகரையை  நோக்கிய குறும் பாதை ஒன்றினூடாக நடந்து சென்றுகொண்டிருக்கிறேன். இரண்டு கிழமைக்கான உடைகள் , பொருட்கள் மற்றும் பிடித்தமான சில புத்தகங்கள் என  எல்லாம் பொதி செய்து முதுகில் ஒன்று கையில் ஒன்றாய் பைகளில் ஏந்திக்கொண்டு என் நீண்ட கேசம் வீசிய காற்றில் காதின் மடல்களை முத்தமிடுவதை உணர்ந்தவனாய் பின்னேரம் ஐந்து மட்டில் நடந்துகொண்டிருக்கிறேன். வானம் காவி கட்டிக்கொண்ட மாதிரி மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. இதனால் என் நடையை வேகமாக ஆக்கிக்கொண்டேன். காற்றும் அதிகமான பலத்துடன் வீசியதால் என் கேசம் ருத்ரதாண்டவம் புரியத்தொடங்கியது. வலது நீள் காற்சட்டை  பைக்குள் கையை விட்டு தலைப்பட்டியை எடுத்து கேசத்தின் தாண்டவத்தை அடக்கி கொண்டேன். நீள் பார்வையில் வீதியில் எந்த மனித நடமாட்டமும் இல்லை. காட்டு பூனையும் மர அணிலும் குருவிகளும் போடும் சத்தம் தலைப்பட்டியினை கடந்து காதை அடைந்துகொண்டிருந்தன. இசையின் வேறொரு பரிமாணத்தில் சங்கமிப்பதாய் ஒரு உணர்வு மேலிட்டது.
எந்த முன்னறிவும் இல்லாமல், யார் எவர் ஊருக்குள் இருப்பார்கள் என்று தெரியாமல் மனிதர்கள் இருப்பார்களா என்றே தெரியாமல் , பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன் வாகரை செல்வதற்காக. யாரையும் விசாரிக்க மனத்திராணி இல்லாமல் பேருந்து பெயர்ப்பலகைகளாக தேடித் தேடி சுற்றினேன். கண்ணில் வாகரை என்ற பெயர் தென்படவே இல்லை. பேசாமல் திரும்பி விடலாம் என்றிருந்த போது தான் அந்த பெயர்ப்பலகை ” மண்ணுர் – வாகரை – தேனுக்கும் ” தென்பட்டது. அந்த நொடியே பேருந்துக்குள் தாவிக்கொண்டேன். ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டார் நடத்துனர். ஆனால் ரசீது தரவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. ஜன்னலோரம் இருந்து கொண்டு கண்ணயர்ந்தேன். அந்த சிறு பாதையின் அருகில் வைத்துதான் நடத்துனர் வாகரை வந்துவிட்டதாக என்னை உலுப்பிச்  சொன்னார்.
கடந்த இருபது நிமிடங்களாக நடந்து கொண்டே இருக்கிறேன், இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் நடப்பேன். இருள இருள மனதில் பயம் தொற்றிக்கொண்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது.பாதையும் காற்றும் என்னோடு நிறைய நாள் பழகிய உணர்வை அளித்ததால் பயம் பெரிதாக என்னை பீடித்துகொள்ளவில்லை. நான் களைத்து விடவில்லை இருந்தும் வீசிய காற்று என்னை மோதி கடந்து செல்லும் போது என் சக்தியின் அனுவளவினையேனும் உறிஞ்சி செல்வதை உணர்ந்தேன். நீண்ட கோடு போன்ற பாதை முடிவிற்கு வந்து இடப்பக்கமாக வளைந்ததது. அடுத்த அடியினை இன்னும் பலமாக எடுத்து வளைவினில் திரும்பினேன். என்னால் கண்முன்னே விரிந்திருந்த காட்சியை நம்பமுடியாமல் இருக்கின்றது. வியப்பில் அடுத்த அடியினை வைக்க முடியாமல் , வைக்க சக்தி இல்லாமல் எல்லா சக்தியும் அந்த முடக்குடன் முடிந்து விட்டது போல இருந்தது. முடக்கின் இடது கரையோரம் பெரிய நீளமான உருண்டை மர குற்றியை அடியாய்க்கொண்டு இரண்டு கப்புகளில் தாங்கியபடி ஒரு பெயர்ப்பலகையில்  வாகரை என கறுப்பு சாயத்தால் எழுதப்பட்டிருந்தது. வாகரை என எழுதியிருந்த எழுத்துருவின்  வடிவமே ஏதோ ஒருவகையான சோகத்தை விளித்துநின்றது. மேலும் நடக்க முடியாதவனாய் அந்த நீளமான உருண்டை மரக்குற்றியில் இருந்தேன். இருட்டு மேலும் மேலும் வலுப்பெற்றது. இனியும் இருந்தால் சரிவராது என்று எண்ணிக்கொண்டு நகரத்தொடங்கினேன். வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்களும் சோலைகளுமாய் காட்சியளித்தது. பழைய வடிவமைப்பில் கட்டப்பட்ட இரண்டு மாடிவீடுகளும் ஓலையால் வேயப்பட்ட மாட்டு குடில்களும் நாய்களும் , புறாக்களும் , கோழிகளுமாய் முற்றிலும் முந்தைய நூற்றாண்டின் நெடி வீசியவண்ணம் அமைந்திருந்தது.
முன்னால் கொட்டகை இறக்கி நன்றாக பழுத்த கதலி ,கப்பல் மற்றும் சீனி வாழைக்குலைகள் தொங்கவிடப்பட்டிருந்த கடை ஒன்றின் அருகில் செய்யப்பட்ட குந்தின் மேல் பைகளை வைத்து விட்டு கடைக்குள் சென்று என்னைப்  பற்றியும் வாகரையை நான் அறிந்திருந்த விதம் பற்றியும் விளக்கினேன். கடைக்காரர் அடர்த்தியான பூச்சு மீசையும் மழித்த தாடியும் சுருட்டை முடியுமாய் சரத்துடனும் பெனியனுடனும் என்னை நோக்கி திருதிரு என விழித்தார். அவர் முக பாவனையே எதுவுமே தெரியாதவர் என்பதை காட்டியது. அவர் இங்கிருந்து நான்காம் வீட்டை சுட்டி காட்டி அங்கே விசாரிக்குமாறு கூறினார். தான் கிராமம் வந்து சில காலம் தான் என்றும் அவர்கள் வம்சம் வம்சமாய் இங்கேயே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே நான் பைகளை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கி விட்டேன். அவர் காட்டிய வீடு வெகு தூரத்தில் இல்லை. நூறு காலடிகளில்  அடைந்து விட்டேன். சிறிய சிறிய மரகப்புகளால் நேர்த்தியாக ஒரு கோபுரம் போல அடுக்கப்பட்டிருந்தது அந்த வீட்டின் கதவு. இரவாகி இருந்தமையால் வெளியில் நின்றே உள்ளிருப்பவர்களை கூவினேன். முதல் கூவல் ……. இரண்டாம்  ……. மூன்றா……. வீட்டின் கதவு திறக்கப்படுவதை உள்ளிருந்து வந்த பிரகாசமான மின்குமிழ் வெளிச்சம் காட்டியது. ஒரு பெண் மெதுவாக நடந்து  வெளிக்காதவின் அருகில் வந்து விசாரித்தாள். வெளிச்சம் குன்றியிருந்தமையால் சரியாக அவளை இனம் காண முடியவில்லை. விவரத்தை அவளிடம் கூறினேன்.
அவள் முகத்தில் பெயர் தெரியாத ஒருவகையான உணர்வு வெளிப்பட்டதை உணர்ந்தேன், அவள் என்னை வீட்டிட்குள் அழைத்து சென்றாள்.அவளின் வீடுதான் நான் அந்த வீதியில் கண்ட வீடுகளில்  ஒப்பீட்டளவில் சிறியது. நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்த வீட்டின் மேற்பக்கம் ஓட்டினால் அடுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிற பூச்சு கொஞ்சமும் அழுக்குறாமல் மழையால் தெறித்த செம்மண் தடங்கள் வெண்சுவற்றின் கீழ் விளிம்புகளில் கோலம் போட்டது மாதிரி தெறித்திருந்தது. என் உயரத்திற்கு ஏற்றாற்போல் மேல்முனை வளைந்த வாசலினூடாக அவளின் பின்னால் தாயை பின்தொடரும் குழந்தைபோல பின் தொடர்ந்தேன். நீண்ட செவ்வக வடிவ வரவேற்பறையில் அடுக்கப்பட்ட ஆறு கருங்காலி மரத்திலான கதிரைகளில் தனிக்கதிரை ஒன்றைக்காட்டி அமருமாறு பணிவாக வேண்டினாள்.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த அவளது முகம் கட்டித் தயிரைப்போல திட்டு திட்டாக வெளிறிப்போய் இருந்தது. பெரிய உருண்டைக் கண்களும் வரம்புக்கு மீறிய இமைப்பரம்பலும் அவள் முகத்தை இன்னும் விகாரப்படுத்தியது. எல்லாவற்றிக்கும் மேலாக அவளது கறுத்த பொங்கிய உதடுகள் , சுருட்டு பிடித்து பிடித்தே வறண்டு போய் இருந்தது. இதெல்லாம் எனக்கு  வியப்பூட்டுவனவாக இல்லை. பைகளை கழட்டி ஒரு மரக்கதிரையில் வைத்துவிட்டு நான் அருகில் இருந்த கதிரையில் இருந்தேன் . அவள் என்னை  காத்திருக்குமாறு கூறிவிட்டு வீட்டின் அறை ஒன்றிற்குள் விரைந்தாள். கதவு திறக்கையில் அது சமையலறை என்பதை நான் ஊகித்திருந்தேன் . உடல் சோர்வுற்றிருந்த நான்  கால்களையும் கைகளையும் நீட்டி மூலி முறித்துக்கொண்டேன் . மனத்தால் உற்சாகமாக இருந்தாலும் உடலில் வலுவற்று போய் இமைகள் கண்களை மூடி என்னை தூக்கம் ஆட்கொண்டது. திடீர் என்று தூக்கத்தை அடித்துக்கலைத்தால் போல் தென் மேற்கு சுவரில் தொங்கியிருந்த ஒரு மூதாட்டியின் நினைவுப்படம் என் கண்களை கூசியது, அப்படத்திலிருந்து ஏதோ ஒரு ஒளிக்கீற்று என் உடல் முழுக்க பரவியது. அம்மூதாட்டி என்னை உற்று நோக்குவது போலவே தெரிந்தாள். இருந்தும் விரைவாக என்னை சுதாகரித்து கொண்டு பார்வையை நகர்த்தினேன். அந்த பெண் அம்மூதாட்டியின் பேத்தியாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.அந்த மூதாட்டியின் படத்துடன் இன்னும் பலரின் நினைவுப்படங்கள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்தின் வண்ணமும் அவர்கள் வாழ்ந்த காலத்தினை குறிப்பிட்டு காட்டின
சில நிமிடங்களிலேயே அந்த பெண் ஒரு வெள்ளி கோப்பையில் ஆவிபறக்க தேநீர் தந்தாள். இரண்டாவது வாய் கோப்பையில் வைக்க மீண்டும் இன்னொரு அறைக்குள் நுழைந்தாள். தேநீர்  அவ்வளவு சுவையாக இருந்தமையால் அது என்ன அறை என்பதை ஆராய்ச்சிக்குட்படுத்தவில்லை. கொஞ்ச தேநீர் மீதமிருக்க அவள் கையில் ஒரு திறப்பு  கோர்வையுடன் வந்தாள். தேநீரை முடித்து விட்டு கதிரைக்கால் ஒன்றின் அருகில் வைத்து அவளை பார்த்தேன். அவள் ஒன்றும் பேசாமல் என் எதிரே இருந்த கதிரையில் வந்திருந்தாள்.  குரலில் கொஞ்சம் கவலை கூடியதாக இருக்க ,
” என் ராசா, அந்தா அதில  இருக்கிறது எங்க ஆச்சி , எங்கம்மாவோட அம்மா . எங்கம்மா அய்யாவோட ஊருக்கு போயிருக்குது.நான் மட்டுந்த்தான் இருக்கேன் இப்ப வீட்டுல, ”
என்பதற்குள் நான்,
“ராசாவா? நானா ? ” என்றேன் அவளிடம்.
” ஆமாங்க ராசா , எங்க அம்மாக்கு  ஆச்சியும் எனக்கு எங்க அம்மாவும் சொன்னதன் படி நீங்க தான் எங்க ராசா. உங்களுக்கு இங்க ஒரு பெரிய மாளிகை  இருக்கு. கொஞ்ச தள்ளி.ஆச்சி காலத்தில இருந்து நாங்கதான் அத துடச்சு பாதுகாத்துட்டு வாறம், ஒவ்வொரு நாளும் அங்க போயி நான் எல்லா சுமையும் செய்திட்டு வருவன். நீங்க வருவியல் எண்டு காலம் காலமா காத்திட்டு இருக்கம். வாங்க ராசா  போவம் ” என்று முடித்துக்கொண்டு எழுந்தாள்.
எழுந்தவள் திடுக்கிட்டு ” சேர் , மை நேம் இஸ் ………” என்று தன்னைப்பற்றி விபரித்தாள், அவள் கூறிய எதுவும் வியப்பளிக்கவில்லை , கூறிய விதம் தான் வியப்பளித்தது. முன் பேச்சுக்கும் பின் பேச்சுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி தெரிந்தது. எதையும் காட்டிகொள்ளாதவனாய் மனதிற்குள் சிந்தனை அலைகளை படர விட்டேன்.
“ஷால் வி கோ ? ” என்றாள்.
திடுக்கிட்ட நான் போலாமே என்ற பாவனையுடன் பைகளை எடுத்து மாட்டிக்கொண்டேன்.என்னிடம் இருந்த கைப்பையை வலோத்காரமாய் ஏந்திக்கொண்டாள்.அவளின் பேச்சில் இருந்த முரண் என்னை திகைக்க வைத்தது. இருந்தும் என் வீட்டைப்பார்க்க போகிறேன் என்ற எண்ணமே அதிகம் என்னுள்  இருந்ததால் பெரிதாக நான் அதை பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
இருட்டில் வாகரை மறைந்து போய் இருந்தது. அழகிய பெண்ணின் நுதல் போன்று நிலா காட்சி அளித்தது. இடையே முகில் கூட்டம் மறைத்ததால் அவளின் நுதல் போன்று சிதைந்திருந்தது. அந்த வாழைக்குலை கடை சாத்தப்பட்டிருந்தது. தூரத்து மின் ஒளியில் தெரிந்த மரங்கள் எல்லாமே என்னை வரவேற்பது போல மெல்லிய காற்றுக்கு அதன் இலைகளையும் கொப்புகளையும் மெலிதாக ஆட்டிநின்றன. அவள் என் முன்னால் நடக்க தொடங்கினாள். நானும் கூடவே வீதியில் இறங்கி நடந்தேன். நடக்கும் போது வெளிச்சத்துக்காக அவள் ஒரு லாந்தரை எடுத்துக்கொண்டு வந்தாள். நான் எனது தொலைபேசியில் இருந்த விளக்கினை பிடித்துக்கொண்டு நேரத்தை உற்று பார்த்தேன். மணி எட்டை காட்டியது. லாந்தர் விளக்கின் ஆட்டத்தில் அவள் நிழல் அங்கேயும் இங்கேயுமாக ஆடிக்கொண்டிருந்தது. தொலைபேசி வெளிச்சத்தில் என் நிழல் சீராக பின்தொடர்ந்து.
இடையே அவளின் பெயரை விசாரித்தேன்.
” நூத்தாயி …..”
இதயம் நின்று போனது.
” அஞ்சலி… ”
திருத்திக்கொண்டாள் . மெதுவாக என்னை திரும்பி பார்த்து புன்முறுவல் செய்தாள். லாந்தரின் மங்கிய ஒளியில் அவளின் முகம் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை புலப்படுத்தியது. இருந்தும் அங்கு வீசிய காற்றும் அந்த நிலவொளியும் எனக்கு பழகிப்போன ஒரு சூழலை ஞாபகப்படுத்தியதால் எதையும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
கொஞ்ச தூரம் நடந்து போயிருப்போம். களைப்பு அதிகமானது. கால்களில் ஆணி குத்துவது போல குதிக்கால் எலும்பு குத்த தொடங்கியது. நான் தொலைபேசி வெளிச்சத்தில் சுற்றி இருக்கும் இயற்கையை ஆராய்ந்தபடியே நடந்தேன். எல்லா வீடுகளும் இருளில் தோய்ந்திருந்தது. எங்காவது ஒரு சில இடங்களில் மின்குமிழ் ஒளி தென்பட்டாலும் அதன் வீரியம் குன்றியதாகவே இருந்தது. இந்த இருள்மைதான் எவ்வளவு புனிதமானது. மனிதர்களில் சுத்தாமனோர் அசுத்தமானோர் என்று இல்லாமல், நல்லவர் கேட்டவர் என்று இல்லாமல் , வெள்ளை கறுப்பு என்றுமில்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரி காட்டிகொள்கிறது. இருட்டில் இருபவரின் விளக்கு இன்னொருவரை வெளிச்சமாக்குகிறது. எவ்வளவு புனிதமான செயல் அது. இருட்டில் தான் வெளிச்சம் வலுப்பெறுகிறது. நாய்களின் வேட்டைபல்லை இருள் காட்டுவது கிடையாது. எல்லாருமே அதற்கு ஒரே மாதிரி தான்.என்று எண்ணியவாறு நடந்தேன். நடந்தேன் . நடந்தோம் . நிறுத்திக்கொண்டாள். என்னை திரும்பி பார்த்து இருட்டி இருந்த ஒரு வெளியை நோக்கி சுட்டுவிரலை நீட்டினாள். ` லாந்தர் பலமிழந்து போய் இருந்ததால் , வெற்றிடத்தை நோக்கி தொலைபேசி வெளிச்சத்தை திசைதிருப்பினேன்.
வெளிச்சத்தை முன்னோக்கி பரப்பினேன். கறுத்த நிறத்தில் பொன்னிறமான வேலைப்பாடுகளுடன் இரண்டு ஆள் உயரத்துக்கு அகன்ற கதவு. துருவோ , கறையோ சுத்தமாக இல்லை. கதவின் அடியில் நீண்ட செவ்வக அடி மட்டம் இடப்பட்டு கதைவை பிரிக்கும் பொன்னிற தகட்டில் மயில் உருவ வேலைப்பாடுகளுடன் ஓரளவு உயரமான சிறு சிறு கம்பிகள் கதவுக்கு மேல நீட்டி இருக்க அதன் முனைகளில் வேல் செதுக்கப்பட்டிருந்தது. கதவு இரண்டாக திறக்கும் பாட்டில் அமைக்கப்பட்டிருப்பதோடு பெரிய பழைய ஆனால் சீரியமாக பாதுகாக்கப்பட்ட பூட்டால் பூட்டப்படிருந்தது. ஒவ்வொரு பாதியின் நடுவிலும் நிறைந்து வழியும் நெற்குட செதுக்கல் காணப்பட்டது. அவள் என் பை தூக்கிய கையில் இருந்த திறப்பு கோவையை லாந்தரை  அருகில் வைத்துவிட்டு எடுத்து , பூட்டை திறந்தாள். லாந்தர் முழுமையாக அணைந்திருந்தது.
அவள் லாந்தரை எடுப்பாள் என்று வெளிச்சத்தை நிலம் நோக்கினேன், அவள் பொருட்படுத்தாமல் கதவை தள்ளி திறந்தாள். எந்தவித சத்தமும் இல்லால் மிக அமைதியாக கதவு தன்னை திறந்து கொண்டது. நான் லாந்தருக்கு விலகி கொடுத்து உள்ளே நடந்தேன்.
விலாசமான புற்தரை வாசலில் இருந்து ஆரம்பித்து நீண்டு சென்றது. இருளில் அங்கங்கே சிறிய சிறிய பன்னம் மரங்களும் ஓரிரண்டு பெரிய மரங்களும் நின்றன. மங்கிய இருட்டு ஒளியில் மரங்களை இனம் காணமுடியாமல் இருந்தது. வாசலில் இருந்து சென்ற ஓரளவு பெரிய தரையைக்கொண்ட பாதையில் அவள் நடக்க தொடங்கினாள். நான் சுற்றமெல்லாம் வெளிச்சத்தை பரப்பி நிலத்தை ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தேன். அவள் ஓரிடத்தில் போய் நின்றாள். நான் வீட்டு வாசலை அடைந்து விட்டோம் என ஊகித்து கொண்டேன்.அவள் கையை சுவரில் தடவி கொண்டிருந்தாள். ஒரு வெளிச்சம் , இதை விட பிரகாசமான வெளிச்சத்தை என் வாழ்நாளில் உணர்த்ததே இல்லை. கண்கள் கூசத்தொடங்கின. அவளும் அதையே உணர்ந்திருக்க வேண்டும் கண்களை கசக்கி கொண்டாள் . மெதுவாக திறப்பு கோர்வையில் இருந்த மிகப்பெரிய திறப்பை கதவின் துளைக்குள் இருட்டு திருகினாள். அது ஒரு விற் கதவு. ஒரு செவ்வகமும் அரை வட்டமும் சேர்ந்த உருவம்,  அன்னத்தின் செதுக்கல்கள் அங்குமிங்குமாய் சிறியனவும் பெரியனவும் சேர்ந்து கலைக்கோவில் வாசல் போல தென்பட்டது. வாசலின் செவ்வக முடிவில் மாவிலைகள் போல செதுக்கப்பட்டிருந்த திரண்ட மரசெதுக்கல்கள் கொள்ளை அழகாக இருந்தன. பார்த்த மாத்திரத்தில் என் வம்சத்தை நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். கதவுகளில் ஒன்றை தள்ளி கொண்டு அவள் உள்நுழைந்தாள். அதிக ஆவலுடல் உள்ளே சென்றேன்.
வெளிவிளக்கின் வெளிச்சத்தில் வீட்டின் நடுப்பிரவாகம் மட்டும் தெரிந்தது. மேற்தளத்தில் செவ்வக வடிவ புகைப்படங்ள் மட்டும் மங்கியிருந்தன. செம்மஞ்சள் நிற கைப்பிடியை கொண்ட விளிம்புடைய மேற்தள தரை. மீண்டும் திடீரென வெளிச்சம்.  வீடு முழுக்க ஒளி சிதறியது. ஒரே சீரான நிரையில் பத்து கணக்கில் மின் குமிழ்கள், ஆடம்பரமானவை.
வீட்டின் பிரதான பாகத்தில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வீட்டை அந்த பேர் ஒளியில் நின்ற நிலையிலேயே ஒரு சுற்று சுற்றி பார்த்தேன். எல்லாமே அப்படியே இருந்தன, என் கனவு வீடு. இதே போல ஒன்றினைத்தான் கட்டவேண்டும் என்று பள்ளியில் படிக்கும் போது நண்பனுக்கு கீறிக்காட்டிய அதே அடுக்குகள். சிறிய கவலை மட்டும். எனது கனவு வீட்டில் எங்குமே கண்ணாடிகளால் ஜொலிக்கவிட்டிருந்தேன் ஆனால் இங்கே அவ்வாறில்லை. எல்லாமே சுவர்கள். அடைத்துவிடப்பட்டிருந்த யன்னல்கள். ஒரே ஒரு ஆளுயர கண்ணாடிமட்டும் இருந்தது. தென்பக்க மூலையோடு எட்டு அடுக்கு ராக்கையும் ஏழு அடிநீளமும் கொண்ட வட்ட நீள்வட்ட ஜாடிகளை கொண்ட அலமாரி. அதன் நடுவில் தான் இந்த கண்ணாடி. என் விம்பத்தை அப்படியே தன்னுள் செதுக்கிக்கொண்டிருந்தது. அது கட்டாயம் பிரதிபலிப்பு இல்லை செதுக்கல்தான். காற்றின் இடைவெளியில் உள்ள வெறுமையில் இருந்து வெளிப்பட்ட ஒளிபிளம்புகள் போல. நான் அதனருகே நகர அதுவும் என்னைநோக்கி வந்துகொண்டிருந்தது. கண்களில் உணர்வு வேட்கை உதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்கள் பிசைந்தபடி. கால்கள் விடுவிடுவென வேகமாக்கியது. மிக அருகில் போனபோது அது என் விம்பம் தான் என உணர்ந்துகொண்டேன்.காற்றின் வெறுமைகளில் ஏமாற்றம் நிரம்பிகொண்டது. அருகில் இருந்த ஜாடிகளை ஒவ்வொன்றாக எடுத்து சுற்றி சுற்றி பார்த்து கொண்டேன். சிலது கனமானவையாகவும் சிலது வெறுமையாகவும் காணப்பட்டன. எல்லாவற்றிலும் மருந்து திரவியங்களின் நெடி வீசியது. சில ஜாடிகள் சூடாக இருந்தன என என்னால் நிச்சயமாக கூறமுடியும். அவற்றை நான் அதிகநேரம் கையில் வைத்துக்கொள்ளவில்லை.
ஐ வில் பிரிங் தி டின்னர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அவளின் குரல் அசல் நகரத்து பெண்போல இருந்தது. விடுக்கென திரும்பாமல் மெதுவாக திரும்பி வேணாம் என்று சொல்லுவோம் என்று கண்ணாடி ஊடு அவளை பார்த்தேன் . செக்க சிவந்த அவள் உதடுகள் மெல்லிய புன்னகைத்துக்கொண்டு இருந்தது. இது வரை என்னோடு வந்த அவளா இவள்? காலையில் சூரியனை நோக்கி பூக்கும் பூப்போல என்னைநோக்கி பூத்தபடி அந்த அழகி நின்றுகொண்டிருந்தாள். அந்த கெட்டி தயிர் முகத்தில் சகிக்க முடியாமல் இருந்த அவளே தான். கண்ட பொழுதே புலன்கள் அனைத்தையும் தொலைத்து விட்டேன்.
யா சுவர் , பசிக்குது சீக்கிரம் வாங்க
கண்ணாடியை பார்த்தபடியே நின்றேன். அவள் மெதுவாக விலகி சென்றாள்.கதவை தாண்டும் வரை அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவள் போய் முடிந்துவிட்டாள். மங்கிய இருளில் அந்த பேரழகி இவ்வளவு அசிங்கமாக தெரிந்தாளே என்று இருட்டின் அமைதியை நொந்துகொண்டேன். இறக்கிய பைகளை அவள் ஒரு மேசையில் வைத்திருந்தாள்.மனதில் இருளை நொந்தபடி அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் போய் கிடந்தேன். முள்ளந்தண்டு கிடையோடு அறுபது இருக்குமாறு சாய்வினை கொண்ட அந்த கதிரை சுற்றி வைரமான மரத்தாலும் நடுவில் தங்கநிற தொய்யாத இறுக்கமான பின்னலையும் கொண்டிருந்தது. உடற் களை என்னை ஆட்கொண்டது.
கண்களை மூடிக்கொண்டேன். கண்ணாடி உடைகின்ற சப்தம். நிலத்தில் எல்லாமே சிதறுண்டு தெறித்துக்கொண்டிருக்கும் சப்தம். அலறல் ஒலி. உடைந்த கண்ணாடி துகள்கள் எல்லாம் கால்களை கீறுவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழும்பி கண்ணாடியை நோக்கினேன். என்னை விறைத்து பார்த்தபடியே என் செதுக்கல். கதிரையில் இருந்து கைகளை ஓரங்களில் முண்டுகொடுத்து முள்ளந்தண்டை நிமிர்த்து எழும்பினேன். அடிமேல் அடிவைத்து கண்ணாடி அருகில் போய் என்கண்களை உற்று பார்த்தேன். அதில் ஓடியிருந்த வெறுமை பெரும் வறட்சி உள்ள வயலைப்போய் என்கண்களை ஆக்கிவிட்டிருந்தது. வாயால் ஆழ் சுவாசக்காற்றை கண்ணாடியில் படரவிட்டேன். கண்ணாடியில் என் விம்பம் மங்கிப்போயிருந்தது. கண்கள் மட்டும் அப்படியே. வெறித்தபடி. கண்களை கூர்ந்து நோக்கினேன்.
முகத்திலிருந்து சிறிய கூரிய  பரு வருவதைப்போல கண்ணாடியில் இருந்து அந்த மாநிற தோற் துண்டு வெளிப்பட்டது. பயம் ஒரு புறம் இருக்க பழகிப்போன , நெருக்கமான காட்சிபோல இருந்தது. வெடுக்கென என்கண்களை பார்த்தேன். கண்ணெல்லாம் சாந்தம். வெள்ளை நிலாவில் கருந்துளை போல கண்கள் எதோ புரியாத உணர்வினால் என்னை பார்த்துக்கொண்டிருந்தன. என்கால்களில் ஏதோ முட்டுவது போல குளிர்ந்த நீரோடையில் கால்வைத்தது போல. கண்களை கீழே உருட்டினேன். வெண்ணிற பாதங்கள். குழந்தையின் விரல்கள் போல மெல்லிய பார்க்க மிருதுவான தோற்றம். பாதம் வெளியே வந்தது. கூடவே வெள்ளை மடிப்புகள். தூய்மையான வெள்ளை நிறம். கொஞ்சகொஞ்சமாக எல்லாமே. சர்வமும் வெளிப்பட்டது. அந்த மடிப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததில் எதையுமே கவனிக்கவில்லை. காற்றில் ஆடி என் முன்னங்கால்களை தொட்ட மடிப்புகள் மனதுள் சில முகில்களை உருவாக்கின. என் முன்னங்கால்கள் நிலத்தை பார்க்க குனிந்து கொண்டு துவண்டு கைகளை நெஞ்சுக்குள் மடித்து சுருட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடிய நினைவுகள். அந்த துணியில் கட்டப்பட்ட ஊஞ்சலில் இருக்கும்போது இருந்த அதே உணர்வு. அந்த சேலையின் வருடல்கள். என்னையறியாமல்
அம்மா
எந்த பதிலும் இல்லை. மீண்டும்
அம்மா
அவர் கைகள் என் மேலே பட்டிருந்ததை உணர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அம்மாவின் முகம் தான். இப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர் முகம் முழுக்க துணியால் சுற்றியிருந்தார். சுவாசிக்க மூக்கும் பார்க்க கண்களிரண்டும் மட்டுமே வெளியில் தெரிந்தன. முழுமையாக வெள்ளை நிற உடையையே அணிந்திருந்தார். முகத்தை சுற்றியிருந்த துணி கூட. அவரின் நீண்ட கேசம் கலைந்து போயிருந்தது. எந்த விசையோ தெரியவில்லை. உடனே என் தலைப்பட்டியை கழற்றி அவரின் கலைந்த கேசத்தை பின்னி கட்டிவிட்டேன். இதுவரைக்கும் பின்னி பார்த்ததுகூட கிடையாது. என் இரண்டு கண்களும் முன் முடியால் மூடியிருக்க அம்மா தன் கைகளால் என் கேசத்தை விலக்கி கண்களை பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குள் என் கையை மெதுவாக பிடித்துக்கொண்டு நடத்தி கொண்டு கதிரையை அடைந்தார். என்னை இருத்தி என்கால்களை மடியில் வைத்துக்கொண்டு அவர் கீழே அமர்ந்தார்.
என்னை பார்த்தபடியே கால்விரல் ஒவ்வொன்றாக மெடுக்கு உடைத்து கொண்டிருந்தார். நான் என் கேசத்தை கஷ்டப்படுத்தில் அமைதியாக்கி விட்டிருந்தேன். மெதுவாக என் பாதங்கள் ஈரமாவதை உணர்த்தவனாய் கைகளால் அம்மாவின் தலையை நிமிர்த்திக்கொண்டு அவரின் முகத்தை சுற்றியிருந்த வெள்ளைத்துணியை அகற்ற கைகளை கொண்டு சென்றேன். கண்ணீர் பட்ட இடமெல்லாம் ரத்த சிவப்பு நிறம் துணியில் ஊறியது. துணியை கழற்ற போவதை அறிந்த அம்மா என் கால்களை உதறிவிட்டு எழுந்து கண்ணாடியை நோக்கி ஓடினார். அம்மாவை பிடித்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை.
மேடுக்குடைத்த கால்விரல்கள் ஒதுக்கிவிட்ட கேசம் பிடித்து நடத்திய உள்ளங்கை என அம்மா தொட்ட இடமெல்லாம் வலிக்க தொடங்கியது. மிக நாசுக்காக விரல் நுனிகளை பிளேடினை கொண்டு சிறிது சிறிதாக அரிவதைபோன்ற நுண்ணிய வலி. சிறிய வயதில் ஆசிரியர் எல்லாம் உன் பெற்றோர் செய்த பாவம் என்று சபித்த வார்த்தைகள், உருண்டு பிரண்டு சண்டை பிடித்து பெருவிரலில் காயத்துடன் சென்று அறையில் ஓய்வெடுக்கும் போது பல்கலையில் நொந்து கொண்ட தருணங்கள், வெளிச்சத்தை மறந்து இருட்டை நேசிக்க தொடங்கி அதில் இழையோடுகின்ற நிசப்த இரைச்சலில் கலந்து போன நிமிடங்கள் எல்லாமுமே என்னை நிறுத்த எத்தனிக்கவில்லை.
 
 
என் பயணப்பைக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மூடியை திருகிக்கொண்டிருந்தேன்.  அந்த ஜாடியின் அதே சூடு. அதே நெடி. அந்த பெண் இராத்திரி உணவோடு அதே கறுத்த திரண்ட உதடோடு அசிங்கமாக புன்னகைத்தாள். என்னை நோக்கி வந்து முகத்தை சுற்றியிருந்த கறுப்பு துணியையும் முன் முடியையும் விலத்திவிட கைகளை நீட்டினாள். நான் வேகமாக , இன்னும் , இன்னும் அதிகமாக கண்ணாடியை நோக்கி ஓடினேன். கால்கள் எல்லாம் சிதறியிருந்த கண்ணாடி துகளுடு மெல்லிய ரத்தம் வழிய பாய்ந்துகொண்டிருந்தன. அந்த கண்ணாடியும் அதன் கீழிருந்த தலைபட்டியும் என்னை வரவேற்றன. அந்த ஜாடிகள் எல்லாமே மெதுவாக குலுங்க தொடங்கின. இருள் சூழ்ந்து கொண்டது. இன்னும் கண்ணாடியை நோக்கி வேகமாக ஓடுகிறேன்.
வாகரை.

எயிறு. – சிறுகதை

“அவன் கதவை தாழிட்டு கொண்டான்.” ,
என அந்த கதை முடிந்திருந்தது. நான் அதன் கடைசி முற்று புள்ளியை வெறித்துபார்த்துகொண்டு சில மணிநேரம் இருந்தேன். அந்த முற்றுபுள்ளியை தாண்டி அங்கால் ஏதும் எழுதப்பட்டிருக்க கூடாதா என்று மனதின் ஆழத்தில் பெரும் ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த சில மணி நேரங்களில் முற்றுப்புள்ளிக்கு அடுத்த வெற்றிடத்தில் சில ஈக்கள் வந்திருந்துவிட்டு போனது. எனக்கு அவற்றை கலைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. அவை எவற்றையாவது எழுதிவிட்டு செல்லாதா என்று தான் காத்திருக்க வைத்தது. இவ்வளவு நேரம் நான் எதற்காகவும் காத்திருந்ததில்லை. முதன் முதலாக என் காதலியை பார்க்க கோவிலுக்கு சென்றிருந்த போது ,அவள் வர சிறிது நேரம் தாமதமாகி விட்டது. அவள் அங்கு வந்த போது நான் அங்கிருந்து போயிருந்தேன். அவளை அவமதிப்பதாக அவளுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு காத்திருப்பு பிடிக்காது என்று அறிவுறுத்துவதர்க்காகவே நான் சென்றிருந்தேன். அதன் பின் அவள் சரியான நேரத்திற்கு வந்துவிடுவாள். நான் சில நேரங்களில் பிந்துவதுண்டு. அவள் அதை பொருட்படுத்தமாட்டாள். என்னைப் பார்த்து அவளின் சிவந்த மெல்லிய உதட்டால் ஓரப்புன்னகை செய்வாள். எனக்குள் இருக்கின்ற ஆண் என்ற கர்வம் இன்னும் ஒரு படி அதிகமாகிக்கொள்ளும்.
 
ஆனால் இப்போது அப்படி இல்லை. ஜன்னலூடாக வீசுகின்ற மெல்லிய காற்றில் மிதந்துவருகின்ற நுண்மையான தூசுகள்  அந்த முற்றுபுள்ளிக்கு அடுத்துள்ள வெற்றிடத்தை உரசும் போது எதையாவது எழுதக்கூடும் என்று அந்த வெற்றிடத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். வெற்றிடம் வெற்றிடமாகவே இருந்தது. நைலோனால் பின்னப்பட்ட சதுர சட்டக கதிரை என் இருப்பை அண்ட ஆரம்பித்தது. தலையும் தோளும் முதுகுத்தண்டின் மீது அனைத்து பாரத்தையும் வைப்பது போல இருந்தது. முதுகுப்பக்கம் மெல்லியதாக நெளியச்செய்தது. கழுத்தின் இரு மருங்கிலும் சுமக்க முடியாத சுமையை அள்ளிவைத்தது போல நொந்தது. இனி யாரும் அந்த வெற்றிடத்தில் எழுதிவிடப்போவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டு மெதுவாக அரை எழும்பல் செய்து கதிரையை சற்று பின்னே அரக்கி விட்டு முழுமையாக எழுந்துகொண்டேன். மாதக்கணக்கில் நித்திரை கொண்டு எழுந்தது போல உடம்பெல்லாம் இனம்தெரியாத வழியை உணர்ந்துகொண்டே இருந்தது. கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு வலது புறமும் இடது புறமும் மெதுவாக சாய்ந்து உடலை சோர்விலிருந்து மீட்டுக்கொள்ள அசைந்தேன். என்னை சுற்றி இருந்த எல்லோரும் என்னையே உற்றுநோக்கினார்கள். எல்லோரது கண்களும் என்னை ஏளனமாக பார்ப்பது போல இருந்தது. யாரும் இந்த புத்தகத்தை இதுவரையிலும் படித்ததில்லையா? இல்லை அவர்களுக்கு அந்த முற்றுப்புள்ளிக்கு அப்பால் இருந்த வெற்றிடத்தை நிரப்பிகொள்ளகூடியதாக இருந்ததா? அவர்களின் பார்வையை என்னைல் வேறுபிரித்து அறியமுடியவில்லை. ஆனால் அந்த கண்காணிப்பாளர், என்னை சாதரணமாகவே பார்த்தார். அதை பார்த்தபோது தான் மனதுக்குள் மெல்லிய இறகால் வருடியது போல இருந்தது. வயதாகிப்போன மின் விசிறிகள் எனக்கு மேலே என்னை ஆதரிப்பது போல சத்தங்களை இட்டன. எல்லோரது கண்களும் அவற்றின் மேல் திரும்பின. நான் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டேன். வேகமாக அந்த புத்தகத்தினை மூடி கையில் எடுத்துக்கொண்டேன். ஓரளவு பழைய தோல் உறையினை கொண்ட புத்தகம். எல்லா பக்கங்களும் மங்கிய மஞ்சள் தாள்கள். தட்டச்சில் அடிக்கப்பட்ட எழுத்துருக்கள். முதற்பக்கம் தொடங்கி எந்த பக்கத்திலும் படங்களே கிடையாது. ஏன் பக்க இலக்கம் கூட அச்சடிக்கப்படவில்லை. இருந்தும் அந்த புத்தகம் என்னை கவ்விகொண்டதிற்கு அதன் வாசனை ஒரு காரணமாக இருக்கலாம்.
 
நீங்கள் நூலகத்தில் எப்படி வாசிப்பிற்கு புத்தகங்களை எடுகின்றீர்கள் என்று எனக்குத்தெரியாது. என்னை புத்தகங்கள் தான் எடுத்துகொள்கின்ற்ன. நீண்ட ராக்கைகளின் அருகில் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு வாசனை என்னை ஈர்க்கும். அது ஒரு அறுசுவை உணவின் வாசனையோ அல்லது நாட்பட்ட அழுகிய உணவின் வாசனையோ இல்லை. அது ஒரு கவர்ச்சியின் வாசனை. நீ என்னை உன்விரல்களால் தீண்டவேண்டும் என்று ஒரு காதலி அழைக்கும் வாசனை. உன் கண்களால் என் மேல் மாலை தொடுக்க வேண்டும் என்று பூக்கள் அழைக்கும் வாசனை. அப்படியான ஒரு வாசனைதான் இந்த புத்தகத்தையும் ராக்கையில் இருந்து பிரிக்க வைத்தது. வாசகர்கள் சூழ்ந்திருந்த நூலக அறையில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் தனிமைபடுத்தப்பட்டுகொண்டிருந்தேன். புத்தகத்தை எடுத்த இடம் வந்து விட்டது. அருகில் இருந்த புத்தகங்களுக்கு வலிக்காமல் அதை உள்ளே அனுப்பினேன். மற்றவற்றை விட கொஞ்சம் கூடவே உள்ளே தள்ளினேன். யாரும் என்னோடு அந்த வெற்றிடத்திற்கு பயணித்துவிடக்கூடாதென்ற வஞ்சகத்தில். பெரும் நிசப்தத்திற்கு மத்தியில் அந்த மின் விசிறிகள் ஆர்பரித்துகொண்டிருந்தன.அதன் இரைச்சல் நான் வாசிக்கும் அவ்வளவு நேரமும் கேட்காதது மனதினை ஒருவகையில் சந்தோசப்படுத்தியது.
 
நூலகத்தை விட்டு தலையில் தொப்பியை போட்டுக்கொண்டு வீதிக்கு இறங்கி வீட்டிற்கு நடக்கத்தொடங்கினேன். அப்போது கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி வரும். எனது புத்தகப்பையை முதுகில் இறுக்கி கொழுவிக்கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். பின்னேர வகுப்பிற்காக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக தமக்குள்ள சிரித்தும் பேசியும் மகிழ்ந்தபடி சைக்கிளை உளக்கிக்கொண்டு என்னை முந்தி சென்றனர். அவர்கள் எனக்கு சமாந்தரமாய் வருவதிலிருந்து முடக்கில் திரும்புவது மட்டும் அவர்களையே பார்த்துகொண்டிருப்பேன். திரும்பியவுடன் இன்னொரு ஒத்த கூட்டம் எனக்கு சமாந்தரமாய் வந்துவிடும். எல்லா கூட்டத்திலும் அதிகளவாக பெண்களையே உற்று பார்ப்பேன். யாராவது மஞ்சள் கலந்த தூசின் நிறமாக இரட்டை ஜடை போட்டு சுடிதார் அணிந்து மிக சிறிய ஒட்டு போட்டு வைத்து இடக்கண் ஓரப்பார்வையுள்ள மங்களகரமான பெண் யாராவது அவர்களில் இருந்து விடக்கூடாதா என்ற எண்ணம் என்னை ஆட்டிபடைக்கும். நான் உற்றுபார்ப்பதை சில பெண்கள் அவர்களின் தோழியரிடம் சொல்லி சிரிப்பதையும் வேறு மிக சிலர் எனை முறைத்துவிட்டு செல்வதையும் நான் பொருட்படுத்துவது கிடையாது. உடனே திரும்பி பார்க்கும் அவர்களின் தோழியருக்கு அந்த லட்சணங்கள் இருகின்றதா என பார்த்துகொள்வேன். ஒரு முறை நான் உற்று பார்த்த சிவப்பு சுடிதார் அணிந்த பெண் அவளின் காதலனுடன் வந்து நடுவீதியில் என்னோடு வாக்குவாதப்பட்டு சென்றிருக்கிறான். எனது அம்மாவிற்கு வாக்குவாதம் பற்றி கூறியபோது முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு என்னை சமாதானப்படுத்தியிருகிறார். புத்தகங்களை போல எந்த பெண்ணும் என்னை தெரிவு செய்து கொள்ளவில்லை.
 
மாலை சூரியன் எனக்கு பின்னால் ஒளிந்து கொள்ள மஞ்சள் வெயில் நடுவில் என் கறுப்பு நிழல் விழுந்தது. எனது ஒவ்வொரு அடியும் நிழலை மிதித்து மிதித்துகொண்டே இருந்தது. அன்று, அந்த இரவில் அந்த கறுப்பு உருவத்தை இப்போது மிதிப்பது போல மிதித்திருந்தால் இன்று எந்த காதலனிடமும் பேச்சு வாங்கியிருக்க தேவையில்லை. எந்த பெண்ணையும் முடக்குவரை உற்றுபாத்திருக்க தேவை இல்லை. என் அம்மா முகத்தை சோகமாக வைத்திருந்திருக்க தேவை இல்லை.
 
நானும் அம்மாவும் தங்கச்சியும் இரவு ஒன்றாக இருந்து குசுனிக்குள் ரொட்டியும் சம்பலும் அம்மா சுட்டு தர நான் இரண்டு தங்கச்சி ஒன்று என்ற ஒழுங்கில் மாறி மாறி சாப்பிட்டுகொண்டிருந்தோம். இடைக்கிடை அம்மா என்தட்டில் இருந்த ரொட்டி துண்டை எடுத்து தன் பசியையும் போக்கிகொண்டார். பாடசாலையிலும் பின்னேர வகுப்பிலும் நடந்தவற்றை நான் அம்மாக்கு சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருந்தேன், தங்கச்சி அதை கவனமாக கேட்டுகொண்டிருந்தாள். அம்மாவின் சம்பல் கொஞ்சம் காரமாக இருக்கும். அதனால் மெல்லியதாக சம்பலுக்கு மேலே சீனி தூவித்தான் இருவரும் சாப்பிட்டோம்.அம்மா லாவகமாக சீனி இல்லாத சாம்பலின் பக்கத்தால் ரொட்டி துண்டை மடித்து உறைக்க உறைக்க சாப்பிட்டார். இருவரும் பெரிய ஆக்கள் ஆன பிறகு இப்படித்தான் சாப்பிடுவோம் என்றும் கூறினார்.
 
வெளியில் ஆட்டோ ஒன்று வந்து நிற்பது போல இருந்தது.வழமையாக இந்த நேரத்தில் பெரியப்பா குடும்பம் தான் எங்களை பார்க்க வருவார்கள்.அப்பாவை ஆமி கொண்டு போனதில் இருந்து அவரை சடலமாக குளத்திற்குள் எடுத்தது முதல் இன்று நானும் தங்கச்சியும் படிக்கின்ற செலவுவரை அவர்தான் பார்த்துகொள்கிறார்.அப்பா இறந்தபின்னர் அம்மா இருக்கின்ற காணிகளை விற்று குடும்பத்தைகொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்து பெரியப்பாவிடம் ஆலோசனை கேட்ட போது , அவர் அம்மாவை பேசி சொத்துகள் ஒரு காலத்தில் தங்கச்சிக்கு பயனாக இருக்கும் என்றும் தான் குடும்பத்தை பார்த்து கொள்கிறார் என்று விடாபிடியாக கூறினார். அன்றிலிருந்து எந்த முடிவேடுப்பதென்றாலும் பெரியப்பாவின் ஆலோசனை கட்டாயமாக இருக்கும். அவர் ஒரு கடும் பச்சை நிற ஆட்டோ வைத்திருக்கின்றார். அதில் தான் அவரும் அவரின் குடும்பமும் எங்களை பார்க்க வருவார்கள். பெரியப்பா கச்சேரியில் வேலை செய்வதாலும் வீட்டின் பின் தோட்டம் வைத்திருப்பதாலும் பெரும்பாலும் இரவில் தான் எங்களை பார்க்க வருவார்கள். ஆனால் இன்று புது விதமாக இருந்தது. வழமையாக அவர் தொலைபேசி அழைப்பொன்றை எமக்கு தந்துவிட்டே அவர்களின் வீட்டில் இருந்து கிளம்புவார்கள். ஆனால் இன்று அப்படி எந்த அழைப்பும் வரவில்லை. அம்மா சாதுவாக சந்தேகப்பட்டார். எதற்கும் ஒரு முறை பெரியப்பாவிற்கு எடுத்து விசாரிப்போம் என்று அழைப்பை ஏற்படுத்தினார்.மறுமுனையில் இருந்து பேசிய பெரியப்பாவிடம் விசாரித்த அம்மாக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்வீட்டில் இருப்பதாக சொன்னார். அம்மா அவரை கஷ்டபடுத்தாமல் அது எதிர் வீட்டிற்கு வந்திருந்த ஆட்டோ போலும் என்று கூறிவிட்டு வைத்தார். அம்மா உண்மையிலேயே அப்படிதான் நினைத்தார்.
 
கொஞ்ச நேரத்தில் எந்த சத்தமும் இல்லாமல் போனது, வழமையாக முன் விறாந்தையில் படுத்துக்கொள்ளும் மூவரும் சாமி அறைக்குள் படுத்துகொண்டோம். நான் பயத்தில் போர்வையை முகத்தை மூடும் வரை இழுத்து போர்த்திக்கொண்டு நித்திரை ஆகி விட்டேன்.
 
எழுந்து பார்த்த போது லேசாக தலை வலித்தது. கைகள் இரண்டும் விறைத்தது போலே இருந்தது. கட்டிலில் இருந்து இறங்கி கால்களை நிலத்தில் வைத்தபோது கால்களும் விறைதிருப்பதை உணர்ந்தேன். என் அருகில் இருந்த அம்மாவையோ தங்கசியையோ காணவில்லை. சில நேரங்களில் அதிகாலையிலே அவர் இருவரும் எழுந்து காலை வேலைகளை பார்க்கபோவது வழக்கம். ஆனால் மனது பதைபதைத்து கொண்டே இருந்தது. வெளியிலிருந்து எந்த சத்தத்தையும் கேட்கமுடியாமல் உள்ளே ரத்த ஓட்டம் சல சலப்பதை மட்டும் பெருவெளியில் சிறிய இரைச்சல் போல உணர்ந்தேன்.மெதுவாக விறாந்தைக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று பேர் தமக்குள்ள வாயசைத்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் ஓடியிருந்தது. இன்னும் கொஞ்சம் தள்ளி வர அம்மா தலைவிரித்தபடி ஒரு துணியால் மூடிய கட்டை போன்ற வடிவுடையத்தை அடித்து அழுதுகொண்டிருந்தார். என்னை கண்டவுடன்
 
“ தம்பீ …….” என்ற பலத்த சத்தத்தில் கதறிஒடி வந்தார். காதருகே அடுகுண்டைப்போட்டல் போல வெடித்து சிதறியது அடைப்பு. சுற்றியிருந்த சலசலப்பு என்னை நிலைகுலைய வைத்தது. அம்மா எழுந்து ஓடிவரும் போது அவர் அருகில் இருந்த உருவம் என்னை அடித்து போட்டது. மங்கியிருந்த கண்கள் ஒரு வேகத்தில் விளித்துகொண்டன. வெள்ளை துணி போர்த்தி என் தங்கச்சி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தாள். என் மூளைக்குள் பெரிய வண்டு போய் அரிப்பது போலவும் தாடைகள் இரண்டும் ஒன்றை ஒன்று முட்டி மோதி கால்கள் கைகள் எல்லாம் நடுங்க தொடங்கியது.தங்கச்சியின் அருகில் ஓடிசென்றேன். அம்மா என்கண்களை பொத்தி கொண்டார். இருந்தும் வலுகட்டாயமாக கைகளால் அவரின் கைகளை விலத்தி சாய்ந்திருந்த உயிரை பார்த்தேன். காதுகளின் நுனிகள் இரண்டும் பிய்ந்து , கழுத்தை அடையாளபடுத்த முடியாமல் சிவப்பை ரத்தம் உறைந்தும் அவளின் ரெட்டை சடை எல்லாம் ரத்தத்தில் தோய்ந்து போயும் அவரின் ஓரக்கண் என் என்னை, எப்போது தருவாய் என் கைவிசேசத்தை என்ற ஏக்கத்துடன் பார்த்தபடியும் தங்கச்சி விறைத்து போயிருந்தால்.
 
ஒரு சலவை இயந்திரத்துக்குள் மாட்டிக்கொண்ட பஞ்சைப்போல முட்பதருக்குள் சிக்கிக்கொண்ட மயிலிறைகைப் போல என் உடம்பெல்லாம் சுருட்டி வாரி போட்டது. தங்கச்சிக்கு அருகிலேயே எதுவும் பேசமால் அமர்ந்து விட்டேன். சுவரின் மூலையை வெறித்து பார்த்தபடி, இரவு அம்மா போட்டு விட்டு வர சொன்ன தாழ்பாள் அப்படியே குத்தனமாய் சுவரில். அதை சுற்றி யாரோ சிலர் குசு குசுத்துகொண்டு.
 
ஒரு அசாத்திய சக்தியுடன் என் நிழலை மிதித்து அடுத்த அடியை எடுத்து வைத்தேன்.
 
அந்த கதாசிரியர் அதற்கு பின்னும் ஏதாவது எழுதி இருக்க வேண்டும்.
 
“அவன் கதவை தாழிட்டு கொண்டான்”.

ரிஷி வனம். – சிறுகதை

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்பிடியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலை படித்து முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன். வாகரை என்ற ஊரின் சுவாசம் ஆயிரத்து தொள்ளாயிரம்களிலேயே நின்று விட்டதாக பல்கலையில் இருக்கும் போது கிடைத்த சில புத்தகங்களில் இருந்து அறிந்து கொண்டேன். அந்த அறிதல் என்னுள் இனம்புரியாத வேட்கையை உருவாக்கியிருந்தது . அதுதானோ என்னமோ என்னை இப்போது இங்கு சடலமாய்ப்போன ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. சொந்தங்கள் என்று பாடசாலை பல்கலை நண்பர்கள் மட்டும் தான். அன்னை தெரேசா இல்லத்தில் நினைவு தெரிந்த நாளில் இருந்தேன். அது தான் என் வீடு , குடும்பம் எல்லாம். நான் பல்கலை அனுமதி பெற்ற போது என்னை மகனாய் வளர்த்த தாய் , ” நீ பிறந்த குழந்தையாக இருந்த போது எங்கள் இல்லத்திற்கு ஒரு எண்பது மதிக்கதக்க ஒரு ஆச்சியால் கைத்தாங்கலாக கொண்டுவரப்பட்டாய். அளவான உடல் வாகு உடையவனாயும் மா நிறத்திலும் இருந்தாய். உன்னை நிர்வாணமாகவே கொண்டுவந்திருந்தாள். உன்னில் தாய்ப்பால் வசமே வீசவில்லை. எங்களிடம் உன்னை ஒப்படைத்தவள் நீ வாகரைக்கு வந்து சேர்வாய் என்றுவிட்டு சென்றாள். நீ இப்படி……” என்று வாழ்த்து சொன்னார்.
பின்னரும் நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அன்றைய தினம் நூலகத்தில் வாசித்த அந்த குறிப்புகள் தான் என் வேட்கையை தூண்டியது. இதோ இப்போது செம்மண் பரவிய வாகரையை  நோக்கிய குறும் பாதை ஒன்றினூடாக நடந்து சென்றுகொண்டிருக்கிறேன். இரண்டு கிழமைக்கான உடைகள் , பொருட்கள் மற்றும் லியோ டால்ஸ்டாயின் Resurrection என்ற நாவல்   எல்லாம் பொதி செய்து முதுகில் ஒன்று கையில் ஒன்றாய் பைகளில் ஏந்திக்கொண்டு என் நீண்ட கேசம் வீசிய காற்றில் காதின் மடல்களை முத்தமிடுவதை உணர்ந்தவனாய் பின்னேரம் ஐந்து மட்டில் நடந்துகொண்டிருக்கிறேன். வானம் காவி கட்டிக்கொண்ட மாதிரி மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. இதனால் என் நடையை வேகமாக ஆக்கிக்கொண்டேன். காற்றும் அதிகமான பலத்துடன் வீசியதில் என் கேசம் ருத்த்ரதாண்டவம் புரியத்தொடங்கியது. வலது நீள் காற்சட்டை  பைக்குள் கையை விட்டு தலைப்பட்டியை எடுத்து கேசத்தின் தாண்டவத்தை அடக்கி கொண்டேன். நீள் பார்வையில் வீதியில் எந்த மனித நடமாட்டமும் இல்லை. காட்டு பூனையும் மர அணிலும் குருவிகளும் போடும் சத்தம் தலைப்பட்டியினை கடந்து காதை குளிர்ச்சியாக்கியது. இசையின் வேறொரு பரிமாணத்தில் சங்கமிப்பதாய் ஒரு உணர்வு மேலிட்டது.
எந்த முன்னறிவும் இல்லாமல் யார் எவர் ஊருக்குள் இருப்பார்கள் என்று தெரியாமல் மனிதர்கள் இருப்பார்களா என்றே தெரியாமல் , பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன் வாகரை செல்வதற்காக. யாரையும் விசாரிக்க மனத்திராணி இல்லாமல் பேருந்து பெயர்ப்பலகைகளாக தேடித் தேடி சுற்றினேன். கண்ணில் வாகரை என்ற பெயர் தென்படவே இல்லை. பேசாமல் திரும்பி விடலாம் என்றிருந்த போது தான் அந்த பெயர்ப்பலகை ” மண்ணுர் – வாகரை – தேனுக்கும் ” தென்பட்டது. அந்த நொடியே பேருந்துக்குள் தாவிக்கொண்டேன். ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டார் நடத்துனர். ஆனால் ரசீது தரவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. ஜன்னலோரம் இருந்து கொண்டு கண்ணயர்ந்தேன். அந்த சிறு பாதையின் அருகில் வைத்துதான் நடத்துனர் வாகரை வந்துவிட்டதாக என்னை உலுப்பிச்  சொன்னார்.
கடந்த இருபது நிமிடங்களாக நடந்து கொண்டே இருக்கிறேன், இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் நடப்பேன். இருள இருள மனதில் பயம் தொற்றிக்கொண்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பழகிப்போன பாதையும் காற்றுமாய் இருந்த உணர்வு பயத்தின் வலுவை குறைத்தது. நான் களைத்து விடவில்லை இருந்தும் வீசிய காற்று என்னை மோதி கடந்து செல்லும் போது என் சக்தியின் அனுவளவினை உறிஞ்சி செல்வதை உணர்ந்தேன். நீண்ட கோடு போன்ற பாதை முடிவிற்கு வந்து இடப்பக்கமாக வளைந்ததது. அடுத்த அடியினை இன்னும் பலமாக எடுத்து வளைவினில் திரும்பினேன். என்னால் என் கண்முன்னே விரிந்திருந்த காட்சியை நம்பமுடியாமல் இருக்கின்றது. வியப்பில் அடுத்த அடியினை வைக்க முடியாமல் , வைக்க சக்தி இல்லாமல் எல்லா சக்தியும் அந்த முடக்குடன் முடிந்து விட்டதாய் இருந்தது. முடக்கின் இடது கரையோரம் பெரிய நீளமான உருண்டை மர குற்றியை அடியாய்க்கொண்டு இரண்டு கப்புகளில் தாங்கியபடி ஒரு பெயர்ப்பலகை வாகரை என கறுப்பு சாயத்தால் எழுதப்பட்டிருந்தது. வாகரை என எழுதியிருந்த எழுத்துருவில் வடிவமே ஏதோ ஒருவகையான சோகத்தை விளித்துநின்றது. மேலும் நடக்க முடியாதவனாய் அந்த நீளமான உருண்டை மரக்குற்றியில் இருந்தேன். இருட்டு மேலும் மேலும் வலுப்பெற்றது. இனியும் இருந்தால் சரிவராது என்று எண்ணிக்கொண்டு நகரத்தொடங்கினேன். வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்களும் சோலைகளுமாய் காட்சியளித்தது. பழைய வடிவமைப்பில் கட்டப்பட்ட இரண்டு மாடிவீடுகளும் ஓலையால் வேயப்பட்ட மாட்டு குடில்களும் நாய்களும் , புறாக்களும் , கோழிகளுமாய் முற்றிலும் முந்தைய நூற்றாண்டின் நெடி வீசியவண்ணம் அமைந்திருந்தது.
முன்னால் கொட்டகை இறக்கி நன்றாக பழுத்த கதலி ,கப்பல் மற்றும் சீனி வாழைக்குலைகள் தொங்கவிடப்பட்டிருந்த கடை ஒன்றின் அருகில் செய்யப்பட்ட குந்தின் மேல் பைகளை வைத்து விட்டு கடைக்குள் சென்று என்னைப்  பற்றியும் வாகரையை நான் அறிந்திருந்த விதம் பற்றியும் விளக்கினேன். கடைக்காரர் அடர்த்தியான பூச்சு மீசையும் மழித்த தாடியும் சுருட்டை முடியுமாய் சரத்துடனும் பெனியனுடனும் என்னை நோக்கி திருதிரு என விழித்தார். அவர் முக பாவனையே எதுவுமே தெரியாதவர் என்பதை காட்டியது. அவர் இங்கிருந்து நான்காம் வீட்டை சுட்டி காட்டி அங்கே விசாரிக்குமாறு கூறினார். தான் கிராமம் வந்து சில காலம் தான் என்றும் அவர்கள் வம்சம் வம்சமாய் இங்கேயே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே நான் பைகளை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கி விட்டேன். அவர் காட்டிய வீடு வெகு தூரத்தில் இல்லை. நூறு காலடிகளில்  அடைந்து விட்டேன். சிறிய சிறிய மரகப்புகளால் நேர்த்தியாக ஒரு கோபுரம் போல அடுக்கப்பட்டிருந்தது அந்த வீட்டின் கதவு. இரவாகி இருந்தமையால் வெளியில் நின்றே உள்ளிருப்பவர்களை கூவினேன். முதல் கூவல் ……. இரண்டாம் கூவல் ……. மூன்றா……. வீட்டின் கதவு திறக்கப்படுவதை உள்ளிருந்து வந்த பிரகாசமான மின்குமிழ் வெளிச்சம் காட்டியது. ஒரு பெண் மெதுவாக நடந்து  வெளிக்காதவின் அருகில் வந்து விசாரித்தாள். வெளிச்சம் குன்றியிருந்தமையால் சரியாக அவளை இனம் காண முடியவில்லை. விவரத்தை விளம்பினேன்.
அவள் முகத்தில் புன்சிரிப்பு மலர்வதைப்போல் உணர்ந்தேன், அவள் என்னை வீட்டிட்குள் அழைத்து சென்றாள்.அவளின் வீடுதான் நான் அந்த வீதியில் கண்ணுற்ற ஒப்பீட்டளவில் சிறியது. நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்த வீட்டின் மேற்பக்கம் ஓட்டினால் அடுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிற பூச்சு கொஞ்சமும் அழுக்குறாமல் மழையால் தெறித்த செம்மண் தடங்கள் வெண்சுவற்றின் கீழ் விளிம்புகளில் கோலம் போட்டது மாதிரி தெறித்திருந்தது. என் உயரத்திற்கு ஏற்றாற்போல் மேல்முனை வளைந்த வாசலினூடாக அவளின் பின்னால் தாயை பின்தொடரும் குழந்தைபோல பின் தொடர்ந்தேன். நீண்ட செவ்வக வடிவ வரவேற்பறையில் அடுக்கப்பட்ட ஆறு கருங்காலி மரத்திலான கதிரைகளில் தனிக்கதிரை ஒன்றைக்காட்டி அமருமாறு பணிவாக வேண்டினாள்.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த அவளது முகம் கட்டித் தயிரைப்போல திட்டு திட்டாக வெளிறிப்போய் இருந்தது. உருண்டைக்கன்களும் வரம்புக்கு மீறிய இமைப்பரம்பலும் அவள் முகத்தை இன்னும் விகாரப்படுத்தியது. எல்லாவற்றிக்கும் மேலாக அவளது கறுத்த பொங்கிய உதடுகள் , சுருட்டு பிடித்து பிடித்தே வறண்டு போய் இருந்தது. இதெல்லாம் எனக்கு  வியப்பூட்டுவனவாக இல்லை. பைகளை கழட்டி இன்னொரு மரக்கதிரையில் வைத்துவிட்டு நான் அருகில் இருந்த கதிரையில் இருந்தேன் . அவள் என்னை  காத்திருக்குமாறு கூறிவிட்டு வீட்டின் அறை ஒன்றிற்குள் விரைந்தாள். கதவு திறக்கையில் அது சமையலறை என்பதை நான் ஊகித்திருந்தேன் . உடல் சோர்வுற்றிருந்த நான்  கால்களையும் கைகளையும் நீட்டி மூலி முறித்துக்கொண்டேன் . மனத்தால் உற்சாகமாக இருந்தாலும் உடலில் வலுவற்று போய் இமைகள் கண்களை மூடி என்னை தூக்கம் ஆட்கொண்டது. திடீர் என்று தூக்கத்தை அடித்துக்கலைத்தால் போல் தென் மேற்கு சுவரில் தொங்கியிருந்த ஒரு மூதாட்டியின் நினைவுப்படம் என் கண்களை கூசியது, அப்படத்திலிருந்து ஏதோ ஒரு ஒளிக்கீற்று என் உடல் முழுக்க பரவியது. அம்மூதாட்டி என்னை உற்று நோக்குவது போலவே காட்சியளித்தாள். இருந்தும் விரைவாக என்னை சுதாகரித்து கொண்டு பார்வையை நகர்த்தினேன். அந்த பெண் அம்மூதாட்டியின் பேத்தியாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.அந்த மூதாட்டியின் படத்துடன் இன்னும் பலரின் நினைவுப்படங்கள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்தின் வண்ணமும் அவர்கள் வாழ்ந்த காலத்தினை குறிப்பிட்டு காட்டின
சில நிமிடங்களிலேயே அந்த பெண் ஒரு வெள்ளி கோப்பையில் ஆவிபறக்க தேநீர் தந்தாள். இரண்டாவது வாய் கோப்பையில் வைக்க மீண்டும் இன்னொரு அறைக்குள் நுழைந்தாள். தேத்தண்ணீர் அவ்வளவு சுவையாக இருந்தமையால் அது என்ன அறை என்பதை ஆராய்ச்சிக்குட்படுத்தவில்லை. கொஞ்ச தேநீர் மீதமிருக்க அவள் கையில் ஒரு திறப்பு  கோர்வையுடன் வந்தாள். தேநீரை முடித்து விட்டு கதிரைக்கால் ஒன்றின் அருகில் வைத்து அவளை நோக்கினேன். அவள் ஒன்றும் பேசாமல் என் எதிரே இருந்த கதிரையில் வந்திருந்தாள்.  குரலில் கொஞ்சம் கவலை கூடியதாக இருக்க ,” இங்கேருங்கோ எசமானே , அந்த போட்டோவில இருக்கிறது எங்க ஆச்சி , அம்மாள்ட அம்மாள். எங்கம்மாள் அய்யாவோட ஊருக்கு போயிருக்குது.நான் மட்டுந்த்தான் இருக்கேன் இப்ப வீட்டுல, ” என்பதற்குள் நான், “எஜமானா? நானா ? ” என கூறினேன்.
” ஆமாங்க எசமான் , எங்க ஆத்தாளுக்கு ஆச்சியும் எனக்கு எங்க ஆத்தாளும் கத்துத்தந்த படி நீங்க தான் எங்க எசமான். உங்களுக்கு இங்கிட்டு ஒரு பெரிய விலாஸ் இருக்கு. கொஞ்ச தள்ளி.ஆச்சி காலத்தில இருந்து நாங்கதான் அத துடச்சு காத்துட்டு வாறம், ஒவ்வொரு நாளும் அங்க போயி நான் எல்லா சுமையும் செய்திட்டு வருவன். நீங்க வருவியல் எண்டு காலம் காலமா காத்திட்டு இருக்கம். வாங்க எசமான் போவம் ” என்று முடித்துக்கொண்டு எழுந்தாள். எழுந்தவள் திடுக்கிட்டு ” சேர் , மை நேம் இஸ் ………” என்று தன்னைப்பற்றி விபரித்தாள், அவள் கூறிய எதுவும் வியப்பளிக்கவில்லை , கூறிய விதம் தான் வியப்பளித்தது. முன் பேச்சுக்கும் பின் பேச்சுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி தெரிந்தது. எதையும் காட்டிகொள்ளாதவனாய் மனதிற்குள் சிந்தனை அலைகளை படர விட்டேன்.
“ஷால் வி கோ ? ” என்றாள்.
திடுக்கிட்ட நான் போலாமே என்ற பாவனையுடன் பைகளை எடுத்து மாட்டிக்கொண்டேன்.என்னிடம் இருந்த கைப்பையை வலோத்காரமாய் ஏந்திக்கொண்டாள்.அவளின் பேச்சில் இருந்த முரண் என்னை திகைக்க வைத்தது. இருந்தும் என் வீட்டைப்பார்க்க போகிறேன் என்ற எண்ணமே அதிகம் இருந்ததால் பெரிதாக நான் அதை பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
இருட்டில் வாகரை மறைந்து போய் இருந்தது. அழகிய பெண்ணின் நுதல் போன்று நிலா காட்சி அளித்தது. இடையே முகில் கூட்டம் மறைத்ததால் அவளின் நுதல் போன்று சிதைந்திருந்தது. அந்த வாழைக்குலை கடை சாத்தப்பட்டிருந்தது. தூரத்து மின் ஒளியில் தெரிந்த மரங்கள் எல்லாமே என்னை வரவேற்பது போல மெல்லிய காற்றுக்கு அதன் இலைகளையும் கொப்புகளையும் மெலிதாக ஆட்டிநின்றன. அவள் என் முன்னால் நடக்க தொடங்கினாள். நானும் கூடவே வீதியில் இறங்கி நடந்தேன். நடக்கும் போது வெளிச்சத்துக்காக அவள் ஒரு லாந்தரை எடுத்துக்கொண்டு வந்தாள். நான் எனது தொலைபேசியில் இருந்த விளக்கினை பிடித்துக்கொண்டு நேரத்தை உற்று பார்த்தேன். மணி எட்டை காட்டியது. லாந்தர் விளக்கின் ஆட்டத்தில் அவள் நிழல் அங்கேயும் இங்கேயுமாக ஆடிக்கொண்டிருந்தது. தொலைபேசி வெளிச்சத்தில் என் நிழல் சீராக பின்தொடர்ந்து.
இடையே அவளின் பெயரை விசாரித்தேன்.
” நூத்தாயி …..”
இதயம் நின்று போனது.
” அஞ்சலி… ”
திருத்திக்கொண்டாள் . மெதுவாக என்னை திரும்பி பார்த்து புன்முறுவல் செய்தாள். லாந்தரின் மங்கிய ஒளியில் அவளின் முகம் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை புலப்படுத்தியது. இருந்தும் அங்கு வீசிய காற்றும் அந்த நிலவொளியும் எனக்கு பழகிப்போன ஒரு சூழலை ஞாபகப்படுத்தியதால் எதையும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
கொஞ்ச தூரம் நடந்து போயிருப்போம். களைப்பு அதிகமானது. கால்களில் ஆணி குத்துவது போல குதிக்கால் எலும்பு குத்த தொடங்கியது. நான் தொலைபேசி வெளிச்சத்தில் சுற்றி இருக்கும் இயற்கையை ஆராய்ந்தபடியே நடந்தேன். எல்லா வீடுகளும் இருளில் தோய்ந்திருந்தது. எங்காவது ஒரு சில இடங்களில் மின்குமிழ் ஒளி தென்பட்டாலும் அதன் வீரியம் குன்றியதாகவே இருந்தது. நடந்தேன். நடந்தேன் . நடந்தோம் . நிறுத்திக்கொண்டாள். என்னை திரும்பி பார்த்து இருட்டி இருந்த ஒரு வெளியை நோக்கி சுட்டுவிரலை சுட்டினாள். லாந்தர் பலமிழந்து போய் இருந்ததால் , வெற்றிடத்தை நோக்கி தொலைபேசி வெளிச்சத்தை திசைதிருப்பினேன்.
வெளிச்சத்தை முன்னோக்கி பரப்பினேன். கறுத்த நிறத்தில் பொன்னிறமான வேலைப்பாடுகளுடன் இரண்டு என்னை சேர்த்தால்  உயரத்துக்கு அகன்ற கதவு. துருவோ , கறையோ சுத்தமாக இல்லை. கதவின் அடியில் நீண்ட செவ்வக அடி மட்டம் இடப்பட்டு கதைவை பிரிக்கும் பொன்னிற தகட்டில் மயில் உருவ வேலைப்பாடுகளுடன் ஓரளவு உயரமான சிறு சிறு கம்பிகள் கதவுக்கு மேல நீட்டி இருக்க அதன் முனைகளில் வேல் செதுக்கப்பட்டிருந்தது. கதவு இரண்டாக திறக்கும் பாட்டில் அமைக்கப்பட்டிருப்பதோடு பெரிய பழைய ஆனால் சீரியமாக பாதுகாக்கப்பட்ட பூட்டால் பூட்டப்படிருந்தது. ஒவ்வொரு பாதியின் நடுவிலும் நிறைந்து வழியும் நெற்குட செதுக்கல் காணப்பட்டது. அவள் என் பை தூக்கிய கையில் இருந்த திறப்பு கோவையை லாந்தரை  அருகில் வைத்துவிட்டு எடுத்து , பூட்டை திறந்தாள். லாந்தர் முழுமையாக அணைந்திருந்தது.
அவள் லாந்தரை எடுப்பாள் என்று வெளிச்சத்தை நிலம் நோக்கினேன், அவள் பொருட்படுத்தாமல் கதவை தள்ளி திறந்தாள். எந்தவித சத்தமும் இல்லால் மிக அமைதியாக கதவு தன்னை திறந்து கொண்டது. நான் லாந்தருக்கு விலகி கொடுத்து உள்ளே நடந்தேன்.
விலாசமான புற்தரை வாசலில் இருந்து ஆரம்பித்து நீண்டு சென்றது. இருளில் அங்கங்கே சிறிய சிறிய பன்னம் மரங்களும் ஓரிரண்டு பெரிய மரங்களும் முற்றத்தில் நின்றன. மங்கிய இருட்டு ஒளியில் மரங்களை இனம் காணமுடியாமல் இருந்தது. வாசலில் இருந்து சென்ற ஓரளவு பெரிய தரையைக்கொண்ட பாதையில் அவள் நடக்க தொடங்கினாள். நான் சுற்றமெல்லாம் வெளிச்சத்தை பரப்பி நிலத்தை ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தேன். அவள் ஓரிடத்தில் போய் நின்றாள். நான் வீட்டு வாசலை அடைந்து விட்டோம் என ஊகித்து கொண்டேன்.அவள் கையை சுவரில் தடவி கொண்டிருந்தாள். ஒரு வெளிச்சம் , இதை விட பிரகாசமான வெளிச்சத்தை என் வாழ்நாளில் உணர்த்ததே இல்லை. கண்கள் கூசத்தொடங்கின. அவளும் அதையே உணர்ந்திருக்க வேண்டும் கண்களை கசக்கி கொண்டாள் . மெதுவாக திறப்பு கோர்வையில் இருந்த மிகப்பெரிய திறப்பை கதவின் துளைக்குள் இருட்டு திருகினாள். அது ஒரு விற் கதவு. ஒரு செவ்வகமும் அரை வட்டமும் சேர்ந்த உருவம்,  அன்னத்தின் செதுக்கல்கள் அங்குமிங்குமாய் சிறியனவும் பெரியனவும் சேர்ந்து கலைக்கோவில் வாசல் போல தென்பட்டது. வாசலின் செவ்வக முடிவில் மாவிலைகள் போல செதுக்கப்பட்டிருந்த திரண்ட மரசெதுக்கல்கள் கொள்ளை அழகாக இருந்தன. பார்த்த மாத்திரத்தில் என் வம்சத்தை நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். கதவுகளில் ஒன்றை தள்ளி கொண்டு அவள் உள்நுழைந்தாள். அதிக ஆவலுடல் உள்ளே சென்றேன். வெளிவிளக்கின் வெளிச்சத்தில் வீட்டின் நடுப்பிரவாகம் மட்டும் தெரிந்தது. மேற்தளத்தில் செவ்வக வடிவ புகைப்படங்ள் மட்டும் மங்கியிருந்தன. செம்மஞ்சள் நிற கைப்பிடியை கொண்ட விளிம்புடைய மேற்தள தரை. மீண்டும் திடீரென வெளிச்சம்.  வீடு முழுக்க ஒளி சிதறியது. ஒரே சீரான நிரையில் பத்து கணக்கில் மின் குமிழ்கள், ஆடம்பரமானவை.
வீட்டின் பிரதான பாகத்தில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வீட்டை அந்த பேர் ஒளியில் நின்ற நிலையிலேயே ஒரு சுற்று சுற்றி பார்த்தேன். எல்லாமே அப்படியே இருந்தன, என் கனவு வீடு. இதே போல ஒன்றினைத்தான் கட்டவேண்டும் என்று பள்ளியில் படிக்கும் போது நண்பனுக்கு கீறிக்காட்டிய அதே அடுக்குகள். சிறிய கவலை மட்டும். எனது கனவு வீட்டில் எங்குமே கண்ணாடிகளால் ஜொலிக்கவிட்டிருந்தேன் ஆனால் இங்கே அவ்வாறில்லை. எல்லாமே சுவர்கள். அடைத்துவிடப்பட்டிருந்த யன்னல்கள். ஒரே ஒரு ஆளுயர கண்ணாடிமட்டும் இருந்தது. தென்பக்க மூலையோடு எட்டு அடுக்கு ராக்கையும் ஏழு அடிநீளமும் கொண்ட புஸ்தக அலுமாரி. அதன் நடுவில் தான் இந்த கண்ணாடி. என் விம்பத்தை அப்படியே தன்னுள் செதுக்கிக்கொண்டிருந்தது. அது கட்டாயம் பிரதிபலிப்பு இல்லை செதுக்கல்தான். நான் அதனருகே நகர என் சிலையும் என்னைநோக்கி வந்துகொண்டிருந்தது. கண்களில் உணர்வு வேட்கை உதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்கள் பிசைந்தபடி. கால்கள் விடுவிடுவென வேகமாக்கியது. மிக்காருகில் போனபோது அது என் விம்பம் தான் என உணர்ந்துகொண்டேன். அப்படியே அருகில் இருந்த ராக்கையில் உள்ள தோல் உறை போட்ட சதுர தடிமனான புஸ்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். தினசரி பாவனையில் இருக்கும் புஸ்தகம் போல அதன் முதல் தொடுகை உணர்த்தியது. திறந்து பார்த்தேன். Resurrection.
ஐ வில் பிரிங் தி டின்னர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அவளின் குரல் அசல் நகரத்து பெண்போல இருந்தது. விடுக்கென திரும்பாமல் மெதுவாக திரும்பி வேணாம் என்று சொல்லுவோம் என்று கண்ணாடி ஊடு அவளை பார்த்தேன் . செக்க சிவந்த அவள் உதடுகள் மெல்லிய புன்னகைத்துக்கொண்டு இருந்தது. இது வரை என்னோடு வந்த அவளா இவள்? காலையில் சூரியனை நோக்கி பூக்கும் பூப்போல என்னைநோக்கி பூத்தபடி அந்த அழகி நின்றுகொண்டிருந்தாள்.
யா சுவர் , பசிக்குது சீக்கிரம் வாங்க
கண்ணாடியை பார்த்தபடியே நின்றேன். அவள் மெதுவாக விலகி சென்றாள்.கதவை தாண்டும் வரை அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவள் போய் முடிந்துவிட்டாள். மங்கிய இருளில் அந்த பேரழகி இவ்வளவு அசிங்கமாக தெரிந்தாளே என்று இருட்டின் அமைதியை நொந்துகொண்டேன். இறக்கிய பைகளை அவள் ஒரு மேசையில் வைத்திருந்தாள். என் கையில்கிடந்த புஸ்தகத்துடன் அந்த மேசையைத்தாண்டி இருந்த நாட்காலியில் சாய்ந்து கொண்டேன். முள்ளந்தண்டு கிடையோடு அறுபது இருக்குமாறு சாய்வினை கொண்ட அந்த கதிரை சுற்றி வைரமான மரத்தாலும் நடுவில் தங்கநிற தொய்யாத இறுக்கமான பின்னலையும் கொண்டிருந்தது. உடற் களை என்னை ஆட்கொண்டது.
கண்களை மூடிக்கொண்டேன். கண்ணாடி உடைகின்ற சப்தம். நிலத்தில் எல்லாமே சிதறுண்டு தெறித்துக்கொண்டிருக்கும் சப்தம். அலறல் ஒலி. உடைந்த கண்ணாடி துகள்கள் எல்லாம் கால்களை கீறுவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழும்பி கண்ணாடியை நோக்கினேன். என்னை விறைத்து பார்த்தபடியே என் செதுக்கல். கதிரையில் இருந்து கைகளை ஓரங்களில் முண்டுகொடுத்து முள்ளந்தண்டை நிமிர்த்து எழும்பினேன். அடிமேல் அடிவைத்து கண்ணாடி அருகில் போய் என்கண்களை உற்று பார்த்தேன். அதில் ஓடியிருந்த வெறுமை பெரும் வறட்சி உள்ள வயலைப்போய் என்கண்களை ஆக்கிவிட்டிருந்தது. வாயால் ஆழ் சுவாசக்காற்றை கண்ணாடியில் படரவிட்டேன். கண்ணாடியில் என் விம்பம் மங்கிப்போயிருந்தது. கண்கள் மட்டும் அப்படியே. வெறித்தபடி. கண்களை கூர்ந்து உற்று நோக்கினேன்.
முகத்திலிருந்து சிறிய கூறிய பரு வருவதைப்போல கண்ணாடியில் இருந்து அந்த மாநிற தோற் துண்டு வெளிப்பட்டது. பயம் ஒரு புறம் இருக்க பழகிப்போன , நெருக்கமான காட்சிபோல இருந்தது. வெடுக்கென என்கண்களை பார்த்தேன். கண்ணெல்லாம் சாந்தம். வெள்ளை நிலாவில் கருந்துளை போல கண்கள் எதோ புரியாத உணர்வினால் என்னை பார்த்துக்கொண்டிருந்தன. என்கால்களில் ஏதோ முட்டுவது போல குளிர்ந்த நீரோடையில் கால்வைத்தது போல. கண்களை கீழே உருட்டினேன். வெண்ணிற பாதங்கள். குழந்தையின் விரல்கள் போல மெல்லிய பார்க்க மிருதுவான தோற்றம். பாதம் வெளியே வந்தது. கூடவே வெள்ளை மடிப்புகள். தூய்மையான வெள்ளை நிறம். கொஞ்சகொஞ்சமாக எல்லாமே. சர்வமும் வெளிப்பட்டது. அந்த மடிப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததில் எதையுமே கவனிக்கவில்லை. காற்றில் ஆடி என் முன்னங்கால்களை தொட்ட மடிப்புகள் மனதுள் சில முகில்களை உருவாக்கின. என் முன்னங்கால்கள் நிலத்தை பார்க்க குனிந்து கொண்டு துவண்டு கைகளை நெஞ்சுக்குள் மடித்து சுருட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடிய நினைவுகள். அந்த துணியில் கட்டப்பட்ட ஊஞ்சலில் இருக்கும்போது இருந்த அதே உணர்வு. அந்த சேலையின் வருடல்கள். என்னையறியாமல்
அம்மா
எந்த பதிலும் இல்லை. மீண்டும்
அம்மா
அவர் கைகள் என் மேலே பட்டிருந்ததை உணர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அம்மாவின் முகம் தான். இப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர் முகம் முழுக்க துணியால் சுற்றியிருந்தார். சுவாசிக்க மூக்கும் பார்க்க கண்களிரண்டும் மட்டுமே வெளியில் தெரிந்தன. முழுமையாக வெள்ளை நிற உடையையே அணிந்திருந்தார். முகத்தை சுற்றியிருந்த துணி கூட. அவரின் நீண்ட கேசம் கலைந்து போயிருந்தது. எந்த விசையோ தெரியவில்லை. உடனே என் தலைப்பட்டியை கழற்றி அவரின் கலைந்த கேசத்தை பின்னி கட்டிவிட்டேன். இதுவரைக்கும் பின்னி பார்த்ததுகூட கிடையாது. என் இரண்டு கண்களும் முன் முடியால் மூடியிருக்க அம்மா தன் கைகளால் என் கேசத்தை விலக்கி கண்களை பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குள் என் கையை மெதுவாக பிடித்துக்கொண்டு நடத்தி கொண்டு கதிரையை அடைந்தார். என்னை இருத்தி என்கால்களை மடியில் வைத்துக்கொண்டு அவர் கீழே அமர்ந்தார்.
என்னை பார்த்தபடியே கால்விரல் ஒவ்வொன்றாக மெடுக்கு உடைத்து கொண்டிருந்தார். நான் என் கேசத்தை கஷ்டப்படுத்தில் அமைதியாக்கி விட்டிருந்தேன். மெதுவாக என் பாதங்கள் ஈரமாவதை உணர்த்தவனாய் கைகளால் அம்மாவின் தலையை நிமிர்த்திக்கொண்டு அவரின் முகத்தை சுற்றியிருந்த வெள்ளைத்துணியை அகற்ற கைகளை கொண்டு சென்றேன். கண்ணீர் பட்ட இடமெல்லாம் ரத்த சிவப்பு நிறம் துணியில் ஊறியது. துணியை கழற்ற போவதை அறிந்த அம்மா என் கால்களை உதறிவிட்டு எழுந்து கண்ணாடியை நோக்கி ஓடினார். அம்மாவை பிடித்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை.
Resurrection இல் முதல் அத்தியாயம் முடிந்து போயிருந்தது.
என் பயணப்பைக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மூடியை திருகிக்கொண்டிருந்தேன். அந்த பெண் இராத்திரி உணவோடு அதே கறுத்த திரண்ட உதடோடு அசிங்கமாக புன்னகைத்தாள். என்னை நோக்கி வந்து முகத்தை சுற்றியிருந்த கறுப்பு துணியையும் முன் முடியையும் விலத்திவிட கைகளை நீட்டினாள். நான் வேகமாக , இன்னும் , இன்னும் அதிகமாக கண்ணாடியை நோக்கி ஓடினேன். கால்கள் எல்லாம் கண்ணாடி துகள்கள்.
வாகரை…..

காகங்கள் – சிறுகதை

“பேர்? நம ?”
“சுனித்த கமகே”
“சுன்னித நா…… சுனித்த.. சுனித்த…”
“அய்யா சுன்னித்த இல்லே சுனித்த ”
நெற்றியிலிருந்து வியர்வைத்துளிகள் அவரின் இமைகளை நனைத்துக்கொண்டு இடக்கண்ணின் கூர்மையான ஓரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. கண்ணாடியினை கழற்றி எரிச்சலூட்டிய இடக்கண்ணை மெதுவாக தேய்த்துக்கொண்டார் அந்த எண்பது மதிக்கத்தக்க கிழவர். மீண்டும் குனிந்து டைப் ரைட்டர்ஐ கைகளால் அழுத்த தொடங்கினார்.
” கமகே கீயத? ”
பெரும் சிரிப்பொலி, வந்திருந்த இரண்டு ஆமிக்காரன்களும் ஒருவரையொருவர் பார்த்து எக்காளமிட்டு சிரித்து கொண்டனர்.
” கமகே பேர் என்ன சேர் ?”
” மாத்தற ”
“மத்தர நா அய்யே ” என்று சற்று கோபம்கலந்த மொழியுடன் இருந்த கதிரையை தள்ளிவிட்டு எழுந்து கொண்டான் அதிலொருவன். மற்றவன் அவனைப்போலவே செய்துகொண்டு இருவருமாய் முணுமுணுத்துக்கொண்டு அங்காலே இருந்த இளம் டைப் ரைட்டரிடம் விலகி சென்றார்கள்.
எண்பது மதிக்கத்தக்க அந்த வயதானவர் கையை ஒரு பொக்கெட்க்குள் வைத்து அதிலிருந்த சாயம் போயும் தெரிந்துவிடாத வெள்ளை லேஞ்சியை எடுத்து எல்லாமாக வியர்த்துப்போயிருந்த தலையை ஒரு சுற்று சுற்றினார். ஹிப்பியில் இருந்த வியர்வை அவரின் கொலரை ஈரமாக்கியிருந்தது. ஒருநாளில் எப்போதாவது ஒரு முறைதான் அவருக்கு வேலை வரும் . அதில் ஏற்படுத்திக்கொள்ளும் நூறு ரூபாயை பத்திரப்படுத்தி அவரின் அடையாளஅட்டை வைக்கும் பேசுக்குள் வைத்துகொள்ளவார். இன்று காலியாகத்தான் வீடு செல்லவேண்டும் என்ற மன கசப்புடன் பையுக்குள் இருந்த பைபிளை எடுத்து கடைசியாக வாசித்த அதிகாரத்தில் வைத்திருந்த புறா இறக்கையை அப்புறப்படுத்தி மனதுக்குள் வாசிக்க தொடங்கினார்.
” நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்து………” என்று மெல்லிய சப்தத்துடன் வாசித்துக்கொண்டிருக்கும் போது பலமில்லாத காற்று அவரின் மேசையை தாண்டி சென்றது. கூடவே அவர் வைத்திருந்த புறா இறக்கையையும் அடித்து சென்றது. காற்றில் மிதந்த இறகு மேற்தளத்தின் நடு வெளியினூடாக தரையில் விழுந்தது. அதை கவனித்தும் கவனிக்காமலும் வயதானவர்,
” கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.” என்று கொஞ்சம் விலகி வாசித்து முடித்தார். பின்னர் அவர் நெஞ்சில் கோத்திருந்த சிலுவையை ஒருமுறை தடவி விட்டு ஆமென் என்றார்.அப்பக்கத்தின் ஓரத்தை மடித்து அடையாளம் இட்டு கொண்டார்.
இன்னும் அந்த ஆமிக்காரர்கள் போய்விடாததை பார்த்து, தனக்கு சேரவேண்டிய பணம் கைமாறி செல்லுகின்றதே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார். கீழே குனிந்து அவரின் தோற்பையை எடுத்து மேசையில் வைத்தார், அதற்குள் டைப் ரைட்டரையும் பைபிளையும் ஓரிரண்டு பைல்களையும் எடுத்து திணித்தார். பின்னர் அந்த தோற்பையை முதுகில் அணிந்துகொண்டார். மதிய உணவு சுற்றிய கடதாசியையும் பொலிதீன் பாக்கையும் ஒருகையில் கசக்கி எடுத்துக்கொண்டு மறுகையால் ஜீன்சின் பின் பொக்கற்றை தடவி தன் பேர்ஸ் உள்ளதா என சரிபார்த்துக்கொண்டார். அதற்குள் காசு இல்லையே என்பது அவருக்கு வருத்தமாகவே இருந்தது. பின்னர் மேசைக்கு கீழே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து இருகைகளையும் நிரப்பி கொண்டார். வேகமாக படிக்கட்டுகளில் இருந்து இறங்கி சாலை ஓரத்தில் வழியே நடக்க தொடங்கினார். அவர் வயதுக்கு அந்த வேகம் அசாத்தியமானது.
அந்த இரண்டு ஆமிக்காரர்களும் தமக்குள்ள சிரித்துக்கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர்கள் இன்னும் சென்றிருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு வெறுக்கென்று திரும்பி படிகளுக்கு விரைந்தார். அதற்கு முன்னரே இருவரும் கீழே இறங்கி விட்டிருந்தனர். அவர்களின் முதுகுப்புறம் மட்டுமே வயோதிபருக்கு தெரிந்திருந்தது. உடனே அவர்களை நோக்கி நடக்க தொடங்கினார். அவர்கள் பஸ் ஸ்டாண்டின் நடுவாக சென்றுகொண்டிருந்தனர். திடீரென அந்த வயதானவர் நடையை நிறுத்திக்கொண்டார்.கையில் சுருட்டி வைத்திருந்த குப்பையை அங்கேயே போட்டுவிட்டு திரும்பி வந்த வழியேயே சாலை ஓரத்தை அடைந்து மிக மெதுவாக ஊர்ந்தார். வழியெல்லாம் அவரின் மனதை ஏதோ ஒன்று குடைந்துகொண்டே இருந்தது. காதில் செப்பை ஊற்றியது போல அவர்களின் சிரிப்பொலி ஒலித்துக்கொண்டே இருந்தது.
நிலத்தை நோக்கியபடி நடந்து கொண்டிருந்தவர் தனக்கு முன்னால் சாலை ஓரத்தில் ஒரு பூனைக்குட்டி முனகிக்கொண்டிருந்ததை அவதானித்தார். தன்னைப்போலவே அதன் நிலையும் என புரிந்துகொண்டவர் அதனருகே போய் தலை முடிகளை வருடிவிட்டார். இதன் போது தன் ஹிப்பியை யாரோ வருடுவது போல உணர்ச்சியுற்றார். அந்த பூனையின் கண்களில் குடிகொண்டிருந்த வறட்சி, அவரின் கீழ் உதட்டினை நடுங்க வைத்தது. தாடைகள் ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் ஆடிஅமர்ந்தன. அவர் தனது கையிலிருந்த தண்ணீர் போத்தலை வைத்துவிட்டு தோற்பையை கழட்டினார். அதன் வாய்ச்சுருக்கை அகற்றி அதிலிருந்த டைப் ரைட்டரை வெளியே எடுத்து நிலத்தில் வைத்தார். இருகைகளாலும் பூனைக்குட்டியை தூக்கி தன் தோற்பைக்குள் வைத்து விட்டு , டைப் ரைட்டரை குவிந்துபோயிருந்த சருகு குவியலுக்குள் மறைத்து வைத்தார். முதுகில் தோற்பையையும் கையில் தண்ணீர் போத்தலையும் கொண்டு எடுத்துக்கொண்டு வேகமா வீட்டு வாசலுக்கு விரைந்தார். வாசல் மதிலின் ஓரமாக நின்று மதிலின் மேலே போத்தலை வைத்து விட்டு தோற்பையை கழட்டி பூனைக்குட்டியை எடுத்து சுவருக்குள் நோகாமல் போட்டார்.
முன்னைய சந்தர்ப்பங்களை விட வேகமாய் தாய் அடிக்க துரத்தும் சிறுவனைப்போல டைப் ரைட்டர் ஒழித்துவைத்த இடத்தை நோக்கி ஓடினார். அங்கே சருகு குவியலும் இல்லை டைப் ரைட்டரும் இல்லை. கைகளை நிலத்தில் ஊன்றி அந்த ஓரத்திலிருந்த மரத்தின் தண்டில் முதுகை சாய்த்து எதிரே மின்கம்பத்தில் நின்ற காகங்களை பார்த்தவாறு சில தேவ வாக்கியங்களை உதிர்த்துக்கொண்டிருந்தார். மனதுக்குள் அந்த இரண்டு ஆமிக்காரங்களுள் ஒருவனின் பூட்சுக்குள் சிதைந்து போன புறா இறகும் தோற்பைக்குள் இறந்து கிடந்த பூனைக்குட்டியின் வறட்சியால் வெளிறிப்போன கண்களும் மாறி மாறி வந்துபோய்க்கொண்டிருந்தது. அந்த காகங்கள் மின்கம்பத்தை விட்டு பறக்க தொடங்கின.

”-COOK”

இருட்டு இன்னும் ஆழப்படுத்தி கொண்டிருந்து. லைட்டர் வெளிச்சங்கள் மட்டும். ஐந்தாறு சூரியன்கள் இருப்பதுபோல். எம்மில் எத்தனை பெயர் என்று சரியாக தெரியவில்லை. என்னோடு காலையில் அண்ணளவாக அறுபது பேர் வேலை செய்வார்கள். யாரும் என் இனத்தவன் இல்லை. மங்கோலியர்களும், நீக்கிரோக்களும் , அடிமட்ட அமெரிக்கர்களும் தான். என் கசினோ பழக்கம் என்னை இந்த கேவலமான தொழிலுக்கு வழிகோரிவிட்டிருந்தது . இன்றோடு மூன்று மாதங்கள் இந்த நரகத்துக்குள் வந்து. சுரங்க தொழிலில் உள்ள அபாயம் தெரிந்திருந்தும் , என் பெயரெல்லாம் இந்த சூழ்நிலைக்கு தேவை இல்லாத விடயம். எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவன் படிக்கிறான் , இன்னொருவன் மடிக்குழந்தை. என் மனைவி அவ்வளவாக படிக்கவில்லை. நான் வேலைசெய்த பழைய டாக்ஸி நிறுவனத்தில் என் செலவுக்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆஹா என்றில்லாமல் ஓரளவுக்கு நிதானமான வாழ்க்கை. செலவு போக எதுவும் சேமிப்புக்கு மிஞ்சியதில்லை. கஸ்டமர்களை இறக்கி விடுவதோடு சரி ,வங்கி பக்கம் அவசரத்துக்கு கூட போனதில்லை. எனது பெயர் அடா மாக்ஸ் என்று எந்த வங்கி ஊழியரிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆ….. ஒருமுறை இதே கதையை ஒரு கஸ்டமருக்கு சொல்லி இருக்கிறேன். அவருக்கு தெரிந்திருக்கலாம்.
நான் சபிக்கப்பட்டவன். அன்று ஒரு கோர்ட் சூட் போட்ட பணக்காரனால் தான் இந்த நிலைமை இன்று. தேவன் கூறும் அசுத்த ஆத்மா அவனாகத்தான் இருக்க முடியும். பார்க்க எடுப்பான தோற்றம் , முரடன் போல தெரியவில்லை. தலையில் முடி இருந்ததற்க்கான எந்த அடையாளமும் இல்லை. பனி தலையில் விழுந்து வழுக்கி விளையாடும் அளவு மிருதுவானதாக தோற்றம் அளித்தது. இறுக்கமான வெள்ளை கருப்பு கலந்த கோர்ட் சூட் போட்டு இருந்தார். பழுப்பு வெள்ளி நிற ட்ரை. கையில் கனமான ஒரு பை. விலைமதிப்பு கூடிய பை என ஒரு பார்வையிலேயே தெரிந்து கொண்டேன். எப்பிடி இவளவு அழுத்தமாக நினைவு இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? குறை காலனை எப்பிடி மறக்க முடியும். அவனிடமும் என் இதே கதையை எங்கும் விலகாமல் உளறினேன். கடைசியாக உங்களுக்கு முன்னர் என் கதையை கூறியது இவனிடம் தான். எல்லாவற்றையும் அமைதியாக செவிமடுத்துக்கொண்டே வந்தான். இடைக்கிடை ” excuse me ” என்றுவிட்டு தொலைபேசியில் உரையாடுவான். இடையிடையே நான்கு அழைப்புகள் வந்திருக்கும் , எல்லாமே பண விஷயம் தான். ஆயிரம் டாலர் கணக்கில் இல்லை , மில்லியனில்.  பேசி முடிந்தவுடன் ” go  a  head ” என்பான். நானும் இறங்கும் போது ஏதும் கொஞ்சம் கூட்டி தருவான் என்ற எதிர்பார்ப்புடன் கதையை சோகமாக அவிழ்த்து விட்டேன். மேல் பக்க கண்ணாடியில் பார்வையை நகர்த்தி அவனைப்பார்த்தால் எந்த சலனமும் இல்லாமை வீதியை வெறிச்சோடியபடி பார்த்துக்கொண்டே வந்தான். கதை நடுவே ”sir ” என்பதை அழுத்தி அவனது பார்வையை திசை திருப்ப முயற்சி செய்வேன். அவன் லேசாக தலையை ஆட்டுவான், அதிலிருந்து என்னை அவன் பின் தொடர்கிறான் என்று ஊகித்துக்கொள்வேன்.
இரவு பத்தை தாண்டியிருக்கும்,  வாகன நெரிசலில் எந்த மாற்றமும் இல்லை. ஆமை போல ஊர்ந்தது. முக்கால் மணிநேர பயணம் அது, ஹூஸ்டன் நகரின் மிக ஆடம்பரமான பப் தான் ரிக்கோ, அவர் தன்னை அங்கே இறக்கி விட சொன்னதில் எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஸ்டேட்ஸ்இன் பெரும்புள்ளிகள் மட்டுமே அங்கு செல்வார்கள். முக்கால் மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் என் மூளையையும் வாயையும் குடைந்து கொண்டே இருந்தது, ஏன் இப்படிப்பட்டவர் டாக்ஸியில் வர வேண்டும் ? இருந்தும் ஒரு போதும் அவரிடம் இதை பற்றி விசாரிக்கவே இல்லை. என் கண்களில் அவர் தரப்போகும் எக்ஸ்ட்ரா டொலர் தான் மின்னிக்கொண்டிருந்தது. அதில் என் மகனுக்கு ஏதாவது புதிதாய் ஒரு விளையாட்டுப்பொருள் போகும் போது வாங்கிக்கொண்டு போய் அசத்திவிடவேண்டும். ஆ… அவன் நான் ஓடுவதைப்போல் டாக்ஸி கேட்ட ஞாபகம்…..
எங்கோ சில பத்து மீட்டர்களுக்கு அப்பால் மின்சார தடை போல இருந்தது , ஹோஸ்டனில் இது அசாதாரணமான ஒன்று. இல்லை…. ஒரு லைட்டர் எரிந்து முடிந்து போனது. அந்த இடம் அண்டத்தின் சூனியம் போல இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் எது என ஊகிக்க முடியவில்லை , லைட்டர்களை பிடித்திருப்போரின் முகங்கள் மட்டும் வியர்த்து கொட்டி இருந்தது.எனக்கும் சாதுவாக…., எத்தனை லைட்டர்கள் எவ்வளவு நேரம் என்ற கணக்கு தெரிந்திருக்கவில்லை. விறைத்து பொய் இருந்தவர்கள் முனகத்தொடங்கி இருந்தார்கள், அதுவரை அவர்கள் ஆங்கிலம் கதைத்துத்தான் கேட்டு இருக்கிறேன், இப்போது யாரும் பேசுவதாய்  இல்லை. அவரவர் தாய் மொழிகளில் அலற ஆரம்பித்தார்கள். ஒரு பக்கம் பெயர்தெரியாத கடவுள்களின் பெயர்களெல்லாம் ஜெபிக்க தொடங்கியிருந்தார்கள்.இந்த சுரங்கத்தின் ஆழக்கணக்கெல்லாம் தெரியாது, நல்ல ஆழம், இல்லை கேட்ட ஆழம்…. ஒவ்வொரு நாளும் ஆழத்தின் அளவு பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய சதுரமான இரும்பு கன்டைனரில் நாலு பக்கமும் அடைத்து இருக்க ஆழத்துக்குள்  என்னையும் மற்றவர்களையும் இறங்குவார்கள், எங்கள் பணி ஆழத்தில் உள்ள ராக் பிரேக்கர் உடைத்து தரும் பாறைகளை,  நாம் இருக்கும் பெரிய கன்டைனரில்  உள்ள கிரசரால் நொறுக்கி வரும் தூள்களையும் துகள்களையும் அங்கேயே நிரந்தரமாகி இருக்கின்ற இன்னொரு அசையக்கூடிய கன்டைனருக்கு உருள் வண்டியில் கொண்டுசெல்வது . எப்படியும் ஒரு நூறு தரவை நாளைக்கு கொண்டு செல்வோம். ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர வேலை, ஏற்ற சம்பளம், இருக்கும் கடனை அடைக்க , வறுமையில் வாடும் குடும்பத்தை மீட்க ஜேசு காட்டிய ஒரே வழி  இதுதான்.
ரிக்கோ ஹோட்டலை அண்மித்தது வண்டி, தனது பையில் இருந்து ஒரு ஹல்ப் கோர்ட்டை எடுத்துக்கொண்டார். அவர் அணிந்திருந்த நீள கோர்ட்டையும் டையையும்  கழட்டி மடித்து வைத்துவிட்டு ஹல்ப் கோர்ட்டையும் பௌவையும் மாட்டிக்கொண்டார் , முன் கண்ணாடியையே பார்த்துகொண்டுவந்த எனக்கு ஏமாற்றம் பித்தாக்கியது , அசல் ஹோட்டல் சர்வர் போலவே காட்சி தந்தார். இவளவு நேரம் அலம்பியது வீணா ?  யார் எவர் எண்டு விசாரித்து அல்லவே கதையை தொடக்கி இருக்க வேண்டும் என்று மனம் அதட்டி கொண்டது, என் மகனுக்கான டாக்ஸி கனவு உறைந்து போனது. முன் பார்வைக் கண்ணாடியில் படிந்த மென் பனியை வைப்பர் அகற்றுவது போல் கனவையும் மனம் அகற்றிக்கொண்டது.ரிகாவின் அகன்ற வாயிலின் வழியே டாக்ஸி உல் நோக்கி சென்றது .அவர் நிதானமாக இறங்கிக்கொண்டார். அவரது கைப்பை இன்னும் கனத்திருந்ததை பார்த்து தலையை ஸ்டேரிங்க்களுள் புதைத்துக்கொண்டேன் . தனது பர்சினை புரட்டி கட்டணம் செலுத்தினார், எப்படியும் கூட தேறாது என்று நம்பிக்கையிலும் சலிப்பிலும் காசை எடுத்து எண்ண தொடங்கினேன். ஒரு பெனி கூட அதிகம் இல்லை. எதிர் பார்த்தது தான். நிறைய நேரம் ஆகியிருக்காது, ஆனால் அவர் உடனே மறைந்துவிட்டார். யாரோ கண்ணாடியில் தட்டுவது போல் இருந்தது, திரும்பினேன். பாதுகாப்பாளர் ஒருவர் முன்னோக்கியோ பின்னோக்கியோ டாக்ஸியை எடுக்கும் படி கூறிக்கொண்டிருப்பது, உதட்டசைவில் தெரிந்தது. கண்ணாடியை இறக்கி எடுப்பதாக கூறிவிட்டு பின்னோக்கி டாக்ஸியை செலுத்தினேன். மீண்டும் யாரோ பின் கண்ணாடியில் தட்டுவது போல இருந்தது, நான் கோவப்பட்டு விரைவாக எடுத்துவிடுவதாக அலறினேன்.
x354-q80
”excuse me ”
அதே குரல் , அதே ஹல்ப் கோர்ட் , அதே போவ் , வெறிச்சோடிய பார்வை மட்டும் தொலைந்து போயிருந்தது. எதையாவது மறந்து விட்டாரா என பின் பக்கம் நோட்டம் இட்டேன் , இல்லை எதுவும் இல்லை.பிறகு ஏன் என்ற கேள்வி துளைத்தது. டாக்ஸியை ஓரப்படுத்தினேன். அவர் கண்களில் ஒரு தேவ அருள் தெரிந்தது, வேறொரு மொழியில் கதைக்க தொடங்கினார். எனக்கு விளங்கியிருக்காது என அவருக்கு அப்பட்டமாக என் முகபாவனை உணர்த்தி இருக்கும். இருந்தும் நான் ஈர்க்கப்பட்டேன் , டாக்ஸியினை லாக் செய்துவிட்டு ரிகோக்குள் நடக்க தொடங்கினோம்.
வெளிக்கட்டடம் தான் பழமையானது போல தோற்றம் அழைத்தது, உள்ளே எலிசபெத் அரண்மனை போல இருந்தது. அடுக்கி அடுக்கி தேனிக்கூடு போல உள்தோற்றம். பிரமிப்பில் ஆழ்ந்து இருந்தேன்.கொஞ்ச தூரம் நடந்துபோயிருப்போம், உள்ளக விளையாட்டு அரங்கம் அது. பத்து மேஜைகள் இருந்திருக்கும், எல்லாமே நீல நிற வழவழப்பான மார்பிளால் ஆனவை. மேஜைக்கு இருபதுபேர் என்ற கணக்கில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இருந்திருக்க வேண்டும்.
”mike author ” என்றார். திரும்பி பார்த்தேன், புன்னகையுடன் இது இந்த கிளப்புக்கு மட்டுமே தனித்துவமான கசினோ விளையாட்டின் வகை என அறிமுகம் தந்தார். என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் கணமே மூலை மேஜையில் இருந்தவர் , ” completed , take that money bag ” என்றுகொண்டு அகன்ற பெரிய பையொன்றை தூக்கிக்கொண்டார். வியப்பில் ஆழ்ந்தேன். அவர் வரும் போது ஒரே ஒரு காரினை கொண்டுவந்ததாகவும் , விளையாடிய பின்னர் ஐம்பது காருக்குரிய பணத்தினை எடுத்து செல்வதாகவும் கூறினார். பிரமாண்ட வியப்பில் ஆழ்ந்தேன். என் மகன் கேட்ட டாக்ஸியின் ஞாபகம் வந்து மனக்கண்ணில் நின்றது. அவர் சந்தோசத்துடன் அடுத்த மேஜைக்கு பணக்கட்டை எடுத்து வைத்திருந்தார், சிகார் புகையில் அவர் தேவ ஆசி பெற்றிப்பதுபோல தோன்றியது.
எனது டாக்ஸியின் திறப்பை மேஜையொன்றில் வைத்தேன், ஆட்டம் ஆரம்பமானது. என் ஆட்சி மேலோங்க ஆரம்பித்தது அருகேயே இருந்து என்னை வழிகாட்டிக்கொண்டிருந்தார் அவர், அவரை எல்லாரும் கிறிஸ்டென் என அழைத்தது ஞாபகம் இருக்கிறது, இருந்தும் நான் அவரை சார் என்றே அழைத்தேன். அவர் பங்கை பையில் வைக்க என் பங்கை அடுத்த மேஜைக்கு வைத்தேன். ஆட்சி அதிகரித்துக்கொண்டே இருந்தது , ஐந்து கார் …… இருபது கார்…….ஐம்பது கார்…… எண்பது கார்……… என காசுக்கணக்கை கார்கணக்கில் வைத்திருந்தேன். கட்டின் எண்ணிக்கை கூட கூட போதை உச்சியின் விளிம்பை அடைந்தது, விளையாட்டு போதை. ” finally won ”, அதே குரல் மூலையில் கேட்ட குரல். திரும்பி பார்த்தேன் காணவில்லை, எதிரே – விறைத்துப்போனேன். என் பையில் மூன்று டொலர் மட்டும் அனாதையாய் கிடந்தது. எல்லாவற்றையும் போதையில் அவனிடம் தோற்றுவிட்டேன். இதே மேஜையில் அடுத்த சுற்றுக்கு வரும்படி சவால் விட்டுக்கொண்டே திரும்பி சாரை பார்த்தேன். காணவில்லை என ஊர்யிதமானது. மனம் நொந்து கொள்ளவில்லை. ஜீன்ஸ் பையெல்லாம் விட்டு துழாவி பார்த்தேன் , எதுவுமே தேறுவதாக இல்லை. தலையை கவிழ்ந்தபடி வெளியே வந்தேன் சிகாரை புகைத்தபடி. டாக்ஸி அருகில் சென்று பையை துலாவினேன் , என்ன இருக்கும் …. எதுவுமே இல்லை , எல்லாவற்றையும் முதலீட்டு தானே ஆரம்பித்தோம். கன்னி வழியே கண்ணீர் பீறிட்டது. ஓடிப்போனேன் கிளப் வாசலை நோக்கி. உள்ளே தகுந்த அடையாளம் இல்லாமல் விடமாட்டார்கள் என்று நிச்சயித்து கொண்டார்கள். அந்த ஹல்ப் கோர்ட் ,போவ் அதுதான் அடையாளமா ?
ஒரே ஒரு வெளிச்சம் மட்டும் தான் இருந்தது , நட்சத்திரம் போல. அதுவும் குற்றுயிரில் ஊசலாடியது.
”Terrorist tunnel detected by the IDF, meant for attacking States, reaching from southern ……… was attacted by US army last night. No one escaped from that.”