சுடர்.

கடிதத்தை நீட்டிய போது அவன் வியப்படையவில்லை. காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து விட்டு வழமையான தனது கறுப்பும் சாம்பலும் கலந்த சீருடையை கொடியிலிருந்து எடுத்து இஸ்திரி போடும் பெட்டி உள்ள மேசைக்கு அருகில் நீளமாக இருந்த வரிசையில் அமர்ந்தான். சுற்றியிருந்த எல்லாருமே ஒவ்வொரு கையடக்க தொலைபேசிகளை வைத்து நோண்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் முகங்களும்  தொலைபேசி வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஒருத்தன் வேகமாக இரண்டு கட்டை விரல்களையும் திரையில் அமத்திகொண்டிருந்தான். இன்னொருத்தன் தொலைபேசியை கிடையாக மடியில் வைத்து யாருடைய பேட்டியோ அல்லது செய்தியோ பார்த்துகொண்டிருந்தான். பெரும்பாலனவர்கள் கைகளில் நவீனமான தொலைபேசிகளையே வைத்திருந்தார்கள். ஒருத்தன் கையில் மூடிவைத்திருந்த தொலைபேசியின் திரை விட்டு விட்டு மின்னியது. அதைப்பார்த்த போது அவனுக்கு சிறிய வயதில் கோவில் திருவிழாக்களின்  வண்ண விளக்குகளின் ஞாபகத்தில் வந்தது. அப்பாவின் கையையும் அம்மாவின் கையையும் பிடித்து தொங்கியபடியே பார்த்து முடித்த தேர் திருவிழாவும் அடுத்த நாள் தீர்த்தத்திற்கு வந்திருந்த அன்றைய பிரபல வழக்கறிஞ்சறின் மனைவிக்காக வைத்திருந்த குண்டில் அவன் அம்மா அகப்பட்டு இறந்து போனதையும் அந்த மின்னும் ஒளியின் பின்னணியில் மனம் படம் போட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதிரைகளில் இருந்தபடி தங்களின் அம்மாவிடமோ அப்பவிடமோ சகோதரங்களிடமோ மனைவியிடமோ உறவுகளில் யாரவது ஒருவருடனோ கதைத்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒவ்வொரு நாள் பயணமும் அடுத்த நாளின் விடிவை நிச்சயிக்க முடியாததாகவே இருக்கும். அவனோடு சேர்த்து வெகு சிலர் மட்டுமே இன்னும் பழைய நோக்கியாவை வைத்து காலம் தள்ளுகிறார்கள்.
மகிழன் தரம் ஆறு மட்டுமே படித்திருக்கிறான். அம்மா குண்டு வெடிப்பில் இறந்த பின்னர் தனது தந்தையுடன் தோட்டவேலைகளுக்கு போய்க்கொண்டிருந்தான். இருபது வயதுகளை அவன் நெருங்கும் போது மெலிந்த உயரமான தோற்றத்தையும் சுறுசுறுப்பான போக்கையும்  கொண்டிருந்தான். அவனின் கண்களில் யாரிடமும் இல்லாத தனிமை எப்பொழும் ஒட்டிக்கொண்டே இருக்கும். அதற்காக அவன் தனிமையில் இருப்பவன் என்று சொல்லி விடமுடியாது. அவனுக்கென நண்பர்கள்  இருந்தார்கள். அவனுடனே தரம் ஆறு மட்டும் படித்து பின்னர் சாதாரண தரம் வரை படித்த சுகந்தன் அவனுடைய நல்ல நண்பன். காலையிலும் மாலையிலும் பாத்திகளுக்கு தண்ணீர் கட்டும் வேளைகளையும் தவிர்த்து மற்றைய பொழுதை சுகந்தனுடனே கழித்து வந்தான். சுகந்தன் தனக்கென ஒரு சிறிய சாப்பாட்டு கடை வைத்திருந்தான். உரிமையாளனும் ஊழியனும் அவனே. சுகந்தனுக்கு ஒத்தாசையாகவும் தனது பொழுதை போக்கவும் சாப்பாட்டு கடையை மகிழன் அணுகினான். அங்கிருக்கும் பணிசையும் டீயையும் காலை உணவாகவும் பின்னேரம் சுகந்தன் போடுகின்ற சுடச் சுட அப்பத்தை இரவுக்கு தனக்கும் அப்பாவுக்கும் உணவாகவும் கட்டிக்கொண்டு போவான். மத்தியானங்களில் பெரும்பாலும் அப்பாவுடனே வீட்டில் சோறும் ஒரு கறியும் வைத்து இருவருமாக சாப்பிடுவார்கள். அப்பாவிற்கு வயதாவதை அவரின் சாப்பாடு மகிழனுக்கு காட்டிக்கொண்டே இருந்தது. சுகந்தனுடன் கதைக்கும் போதெல்லாம் அப்பாவையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளத்தக்க வேலை ஒன்றில் வெகு சீக்கிரம் சேர்ந்தாகவேண்டும் என்று கூறுவான். சுகந்தனுக்கும் ஒரு சத பிரயோசனம் இல்லாத சாப்பாட்டு கடையை மூடிவிட்டு நிரந்தர தொழில் ஒன்றில் சேரவேண்டும் என்று ஆசை இருந்தது. இருவரும் பலதடவைகள் வேலை வாய்ப்புகள் பற்றி பேசிக்கொள்வார்கள்.ஒரு தடவை மத்தியான நேரத்தில் மகிழன் பேச்சை தொடங்கினான்.
“ அடேய் , இண்டைக்கு காலம அப்பா காணிண்ட மூலையில இருந்த மரக்குந்து ஒண்ட வெட்ட கோடரியால ஒன்கியிருக்காரு. அது குந்துல பட்டு தெறிச்சு அப்பாட முழங்காலுக்கு கீழ நேர வந்து அடிச்சிட்டு. அவர் அய்யோ எண்டு கத்தேக்க தான் நான் பாத்தன். காலில பெரிய வீக்கம். பக்கத்தில இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போவம் எண்டா வேணாம் எண்டுட்டார்.”
“பேயா நீ எல்லோ கொண்டுபோயிருக்கணும், எலும்பு கிலும்பு முறின்சிட்டா என்ன செய்வா. “
“நான் எவளவோ கேட்டுட்டன்டா. அவர் வரவே மாட்டன் எண்டுட்டார். போய் ஏதோ இல குல எடுத்து கட்டி வச்சிருக்கார். “
“ அவருக்கும் அறுபதுக்கு மேல ஆயிடிச்சு, இனியும் கொத்தி குனிச்சு வேல செய்ய ஏலுமா? “
“என்னடா செய்வம் ? எனக்கெண்டா ஒண்டுமா விளங்கல”
“ பேசாம இயக்கத்தோட போய்டுவமாடா?”
“ உனக்கென விசரா, ஒரு கொஞ்ச காசும் வராது. ஆமியோட சேந்தா மாசம் மாசம் காசாவது வரும்”
“அதுக்கு உங்க அப்பா ஓமாம ? உன்ன அடிச்சே கொண்டு போடுவார் “
‘இனியும் பொறுக்க ஏலதுடா”
இருவருக்குமான  உரையாடலை நீட்டிக்கொள்ளாமல் மகிழன் எழுந்தான். மத்தியான சாப்பாட்டிற்கு வீட்டை நோக்கி புறபட்டான்.
மகிழன் தன்னுடன் கதைத்த வார்த்தைகள் அவனுக்கு உறுத்திக்கொண்டு இருந்தது. ஆமியில் சேர்வது என்னவோ சரியான வழிமுறைதான், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? இயக்கத்திற்கு போவது தானே வீரம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் தமிழுக்காய் இறப்பது தானே சிறப்பு. இங்கு வாண்டுகளில் இருந்து வயதானார்கள் வரை போராடுகிறார்களே. நமக்கு என்ன குறைச்சல். பக்கத்து வீட்டு ராஜன் வயது பத்தொன்பது தான். பதினேழு வயதில் இயக்கத்துக்கு போனான். இப்போது தனக்கென ஒரு அணியை வழிநடத்தில் செல்கிறான். அவனின் தாத்தா பாட்டி அப்பா அம்மா எல்லோரும் எவ்வளவு பெருமையாக பேசிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு வீரனாக அல்லவா இருக்க வேண்டும். உடல் முழுக்க சீருடையும் தலையில் கவசமும் மார்பில் கவசமும் கையில் உயர் ரக துப்பாக்கியும் கால்களில் பூட்சும் இடுப்பு பட்டியில் எறிவெடிகளும். ஒரு ஐந்து பேரை கூட்டிக்கொண்டு காட்டின் வழியே போர்டரை அடைந்து ஆமியின் தளம் ஒன்றை வெடிக்க செய்தால் எவ்வளவு மதிப்பு மரியாதை. வெடிப்பில் அங்கேயே இறந்தாலும் பறுவாயில்லை. பெயர் சுகந்தன் இல்லை! கப்டன் சுகந்தன்.
“தம்பி ஒரு டீ “
கதிரையில் அண்ணாந்து கிடந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். வாயிலிருந்து வழிந்திருந்த வீணீரை துடைத்து சின்க் அருகில் போய் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக்கொண்டான். அருகிலிருந்த கண்ணாடி குவளைக்குள் தண்ணீரை நிரப்பி ஒரு அலசு அலசி சின்க்இற்குள் ஊற்றி விட்டு பால்மா பெட்டியை திறந்தான்.
அப்போது சண்டை பெரிதாக ஆரம்பித்திருக்கவில்லை. ஊரில் இருந்த பல குடியினர் ஊரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டை தொடங்கபோவதை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு பக்கத்தாலும் பெரும் நெருக்கடி உருவாகிவிடும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். ஒரு பக்கம் ஆமி, மற்றப்பக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் சின்ன சின்ன குழுக்கள். வயது பால் பேதமின்றி தத்தம் அணிக்கு பலம் சேர்க்கும் ஆட்சேகரிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரில் எல்லோரும் இயக்கபக்கம் தான். எல்லோருக்குமே இயக்கம் வெல்லவேண்டும் தனி தேசியம் வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. அதற்காக குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களும் துப்பாக்கி ஏந்திய குடும்பமும் இருந்தது. இப்போது இல்லை. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இயக்கத்தை மதமாகவும் மொழியாகவும் செயலாகவும் சொல்லிகொடுத்தே வளர்த்து விட்டார்கள்.
வெயிலுக்குள் சென்றவனின் உச்சந்தலையில் சூடு பொக்கென இறங்கியது. போனதும் செருப்பை வீட்டு வாசலில் சுழற்றி விட்டு வெறுந் தரையில் கையிரண்டையும் தலைக்கு முட்டு கொடுத்து மல்லாக்காகப்படுத்தான். அப்பா சாப்பாட்டை பற்றி கேட்ட போது காலம் தாழ்த்தி சாப்பிடுவதாக சொல்லி விட்டான். அப்பா ஒரு காலை கதிரையில் வைத்து மட்டையால் விசிக்கியபடி சாய்ந்திருந்தார். வீடு முழுக்க புழுக்கம்.
“ அப்பா ஒரு பேன் வாங்கணும்”
அப்பா ஒண்டுமே சொல்ல வில்லை. விசிக்கி கொண்டே இருந்தார். மழையே இல்லாத வறண்ட காலநிலையால் வயலாலும் தோட்டதாலும் இலாபம் கிடையாது. இரண்டு மாதத்திற்கு முதல் விற்ற கெளப்பியால் கிடைத்த வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்திற்கு அதை வைத்து சமாளித்து விடலாம். அதற்கு பிறகு என்ன செய்வது? எங்காவது கூலி வேலை தான் செய்ய வேண்டும். வயதும் ஆகிவிட்டது. இனி எங்கே கூலி வேலைக்கு கூப்பிட போகிறார்கள். கூப்பிட்டாலும் எவ்வளவு நேரம் வேலை செய்ய முடியும். பேசாமல் இருக்கின்ற ஒரு தோட்டக்காணியை விற்று விடவேண்டியது தான். வேறு வழியில்லை. விற்று விட்டு எங்கேயும் ஒரு சிங்கள குடியேற்றமாய்ப்போய் இருந்து விட வேண்டியது தான். மகிழனுக்கு ஒரு சிறிய வேலையை எடுத்து குடுக்க வேண்டும். விற்று வருகின்ற பணத்தில் எப்படியும் இரண்டு வருடங்கள் தள்ளி விடலாம். அப்புறம் மகிழன் பார்த்து கொள்வான். அவன் என்ன சின்ன பொடியனா?
“ அப்பா நான் வேலைக்கு போகணும். உங்களுக்கும் உடம்புக்கு ஏலாம வந்திட்டு. இனி நீங்க கஷ்டப்பட முடியாது. நான் போறன், எங்கயாவது ஏதோ ஒரு வேலை பாக்கிறன்.”
அவர் இதற்கும் பதில் அளிக்க வில்லை. அவர் மனதில் நினைத்த எதையும் காட்டிக்கொள்ளாமல் மட்டையை  இன்னும் வேகமாக விசுக்கிகொண்டிருந்தார்.
பின்னேரம் மகிழன் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு சுகந்தனின் கடைக்கு போய் டீ ஒன்றை போட்டன். மேசைக்கு எடுத்துக்கொண்டுவந்து சுகந்தனுக்கு ஒன்று தனக்கு ஒன்றாக பிரித்து தனித்தனி கண்ணாடி குவளைக்குள் ஊற்றிவிட்டு காத்திருந்தான். சுகந்தன் எல்லாம் முடியும் வரை பாத்துகொண்டிருந்துவிட்டு எழுந்து வந்து மகிழனின் எதிரில் அமர்ந்தான். இருவரும் பேசிக்கொள்ளாமல் டீயை குடித்தார்கள். ஒவ்வொரு இழுவையின் பின்னும் ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொள்வது போல பார்த்தார்கள். மகிழனின் பார்வை சுகந்தனுக்கு கவலையின் குறியீடாகவே தெரிந்தது. சுகந்தனின் பார்வையை மகிழன் அறிந்து கொள்ளுமளவு நிதானத்தில் இருக்கவில்லை.
ஒவ்வொரு கைத்தொலைபேசியும் ஏதோ ஒரு வகையில் உறவுகளை மேம்படுத்திக்கொண்டே இருப்பதாக அவனுக்கு தோன்றியது. தனக்கு அருகிலும் முன்னாலும் இருந்தவனுக்கு அழைப்பு வர அவன் பெரு மகிழ்ச்சி பிரவாகத்தில்  எழுந்து யன்னல் ஓரத்தில் இருந்த இரும்பு வலைகளில் கை விரல்களை கோர்த்துக்கொண்டு கதைக்க தொடங்கினான். மகிழன் எழுந்து தனது சீருடையை எடுத்து மேசையில் வைத்து இஸ்திரி பெட்டியின் சூட்டை கூட்டி இழுக்க தொடங்கினான். கொலர், தோள், கை, வயிறு என்று ஒவ்வொன்றாக இழுக்கப்பட்டு கசங்கியிருந்த பகுதியெல்லாம் சீர் செய்யப்பட்டது. அடுத்து காற்சட்டை , இன்னும் இஸ்திரி பெட்டியின் சூட்டை அதிகரித்தான். முன்னதைப்போல இல்லாமல் வேகமாக இரண்டு இழுவை இழுத்துக்கொண்டு சூட்டினை வழமையான நிலைக்கு திருப்பி விட்டு அவனின் அறைக்கு திரும்பினான். திரும்பும் வழியில் தான் சுகந்தன் அந்த கடிதத்தை நீட்டினான். மற்றவர்களைப்போல அவனுக்கு யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை.அவன் அவசரப்படாமல் அந்த கடித்ததை வாங்கி இஸ்திரி போட்டு கொண்டுவந்த சீருடைகளோடு கையில் ஏந்திக்கொண்டு சுகந்தனோடு அவர்களின் அறைக்கு சென்றான். நேரம் ஆறைத்தாண்டி விட்டது.
சுகந்தன் ஏற்கனவே சீருடை உடுத்தவனாக நின்றான். இன்னும் பூட்ஸ் போடவில்லை. அதற்குள் மகிழனுக்கு கடிதம் வந்திருப்பதாக அறிவிக்கப்பட , மகிழன் குளித்துகொண்டிருந்தான். அதனால் சுகந்தானே சென்று கையொப்பம் இட்டு கடிதத்தை வாங்கிகொண்டான். இது ஒன்றும் முதல் முறையல்ல. மகிழன் அப்பாவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்து மாதா மாதம் அப்பா மறக்காமல் கடிதம் போடுவார். பதிலுக்கு இவனும் எழுதுவான். இடைக்கிடை தொலைபேசியில் நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொள்வார்கள். கடிதம் எழுதுவது வீண்வேலைதானே என்று மகிழன் அப்பாவிடம் சொல்லும் போதெல்லாம், தொலைபேசி எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி விடாது. ஆனால் எழுத்துக்கள் அப்படியில்லை, என்று உறுதியாக கடிதங்கள் எழுதுவதில் இருந்தார். மகிழனுக்கு அப்பாவின் கையெழுத்தை கடிதத்தில் பார்க்கும் போதெல்லாம் அவர் அருகில் இருப்பது போல இருக்கும். அதனால் அவனும் கடிதங்களை ஒரு வகையில் விரும்பினான்.அப்பாவின் கையெழுத்துக்கள் அவரைப்போலவே வர வர நோய்வாய்ப்பட்டுக்கொண்டே வந்தன. மகிழன் சீருடையை மேசையின் மீது வைத்து விட்டு, போட்டிருந்த காற்சட்டையை கழற்றி உள்ளாடைகளையும் சீருடையையும் அணிந்தான். அவனின் மெல்லிய உடம்பிற்கு சீருடை தொழ தொழ என்றிருந்தது. அவனின் சகபாடிகள் எல்லோரும் இதை பலமுறை கிண்டல் செய்துள்ளார்கள்.
அவன் சீருடையில் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துகொண்டான். கண்ணாடியில் சீருடையின் மங்கிய விம்பம் பிரதிபலித்தது. அதற்குள் சுகந்தன் பூட்ஸ் போட்டுக்கொண்டு வந்து விட்டான். சுகந்தன் ஆரம்பித்தான்,
“ என்ன மாப்பிள்ளை மாரி நிக்கிற, அடுத்த வருஷம் எப்பிடியும் புது மாப்பிளை தானே, இந்த கடிதமும் அது சம்பந்தமா தான் இருக்கும்.”
“ அப்பிடித்தான் நினைக்கிறன், இந்த ஏலாதவயசிலையும் அப்பா பண்ற வேலைய பாரடா”
“அப்பா எண்டா அப்பிடித்தான்”
“அதுக்காக சேந்த நாலு மாசத்திலேயா ?”
“வயசுக்கு தெரியுமா வேலை பத்தி “
“மனசுக்கு தெரியுமே “
தனது கட்டிலின் கீழிருந்த பூட்சை எடுத்து சொக்சால் பூட்ஸின் மேல்பக்கங்களை தட்டி விட்டு சொக்சை இரண்டு காலிலும் போட்டு விட்டான் மகிழன் பேசியபடியே.
“அப்பா தனிய தான் இருக்கார் , சமச்சு கொடுக்க ஒருத்தி வேணும் அதுக்காகத்தான் ஒம் என்டன்”
“சரி கடிதத்த பிரி “
“இல்ல இருக்கட்டும் வந்து பாப்பம் , நேரமாச்சு . எப்பிடியும் ஒருத்திய முடிவு பண்ணிட்டு தான் கடிதத்த போட்டிப்பார், வேணுமெண்டால் பாரன்” என்று சிரித்துக்கொண்டே கட்டிலிருந்து எழுந்து நிலத்தில் ஒரு துள்ளு துள்ளி மகிழன் எழுந்து நின்றான்.
சுகந்தனுக்கு இது புதுசாக இருந்தது.
மகிழனின் அப்பா மேசையில் அரசாங்க முத்திரை குத்திய சில கடதாசிகளை வைத்திருந்தது பற்றி அப்பாவிடம் முகிழன் எதுவும் பெரிதாக கேட்டு கொள்ளவில்லை. அந்த தாள்கள் வீட்டினதும் தோட்ட காணியினதும் என்று அவனால் ஊகித்துகொள்ளக்கூடியதாகஇருந்தது. அப்பா, முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார் என்பது மட்டுமல்ல மகிழனுக்கும் ஒரு காரணத்தேவை இருந்தது. அடுத்தநாளே பத்திரங்கள் ஒப்பமிடப்பட்டது. வந்திருந்தவர்களுக்கு டீயினை சுகந்தன் கடையிருந்து மகிழன் வாங்கிகொண்டுவந்ததை பார்த்தவர்கள் வீட்டிற்க்கு ஒரு பெண்ணாவது வேண்டும் என்று அப்பாவிற்கு சாடமாடையாக சொன்னார்கள். மகிழனின் அப்பாவிற்கு அது முக்கிய சொற்களாக பட்டது. காணியிலிருந்து இருவரும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கிளம்பிவிட்டர்கள். சுகந்தன் தான் கட்டில் அலமாரி எடுத்து ட்ரக்டரில் ஏற்றுவதற்கு ஒத்தாசையாக நின்றான்.அவனுக்கு மகிழன் எந்த தேசம் போனாலும் டீ குடிக்க அவனின் காடைக்கு வந்தே தீருவான் என்று ஆழமான நம்பிக்கை வைத்திருந்தான். சுகந்தன் மிக நிதானமாக சாமான்களை பெட்டியில் அடுக்குவதிலும் பின்னர் புது வீட்டில் இறக்கி ஒழுங்குபடுத்துவதிலும் மும்முரமாக வேலை செய்தான். மகிழனுக்குத் தான் சங்கடமாக இருந்தது, அவனை விட்டு பிரிந்து போகபோகின்றோமே என்று மனதுக்குள்ளே கவலைபட்டுக்கொண்டான். எல்லாக்கவலையும் இருவரும் கூம்இற்கு போகும் மட்டும் தான் இருந்தது.
கூம் ஒரு மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம். தனியார் நிறுவனம் என்றால் சம்பளம் அதிகம். வேலைப்பழு அதிகம் தான் ஆனால் அதற்கு ஏற்ற சம்பளம் ஆகிற்றே. கூம் இலங்கையில் ஆரம்பித்து சில வாரங்களே என்பதால் பெரும் திரளான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அவர்களுக்குள் மகிழனும் சுகந்தனும் இணைந்து கொண்டார்கள். சுகந்தன் அந்த டீ கடையை மூடிவிட்டான். முதல் இரண்டு மாதம் பயிற்சி, பின்னர் வேலை.இப்போது நான்கு மாதங்களாகி விட்டது. மகிழனின் அப்பா அவனுக்கு பெண் பார்க்க தொடங்கியும் ஆறு மாதங்கள் ஆகின்றது.
கூமைபற்றி இருவரும் ஆரம்பத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களது எண்ணங்கள் எல்லாம் இயக்கத்திலும் ஆமியிலும் மட்டுமே இருந்தன. இளைஞர்கள் பெரும்பாலானோர் இயக்கதிற்க்கே சென்று கொண்டிருந்தனர். வெகு சிலர் வேறு தனியார் குழுக்களுக்கும் சென்று கொண்டிருந்தனர். எழுந்து நடக்க தெரிந்தால் போதும் ஏதாவது ஒரு படையில் சேர்ந்துகொள்ள. மகிழனின் அப்பாவிற்கு சண்டைக்குள் மகனை விட விருப்பமே இல்லை. எங்காவது ஒரு சிறிய வியபாரமாவது அவன் செய்தால் போதும் என்று நினைத்துகொண்டிருந்தார். அவ்வேளை தான் இந்த கூமிற்கு ஆக்கள் சேர்க்கும் நடவடிக்கை மெதுவாக தொடங்கியது. மூவருக்கும் கூம் பாதுகாப்பானதாக தோன்றியது.
இருவரும் ஒன்றாகவே அவர்களின் வீடுகளுக்கு திரும்புவார்கள். இந்த ஆறு மாதங்களில் இருவரும் மூன்றுமுறைதான் வீடுகளுக்கு போயிருக்கிறார்கள். மூன்று முறை தான் அவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது. இன்று நான்காவது முறை.
அவசரம் அவசரமாக அறைக்கு வந்த மகிழனும் சுகந்தனும் அவர்களது நீண்ட காலுறையை கழற்றி கட்டிலின் கீழே போட்டு விட்டு இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளையும் பேஸ்ட் பிரஷ் சோப் என்பவற்றையும் பைகளுக்குள் உருட்டி திணித்தனர். எல்லா அறைகளிலும் இந்த நிகழ்ச்சி சமாந்தரமாக நடந்துகொண்டிருந்தது. மேசையில் இருந்த கைபேசியையும் வண்டி திறப்பையும் மகிழன் எடுத்துகொண்டு சுகந்தனை வேகப்படுத்தினான்.
“ எடுடா எடுடா ஏற்கனவே நேரமாகீற்று “
“அப்பவே சொன்னான் தானே, கடைல மினகடதா எண்டு “
“என்னடா செய்ய வாங்க வேண்டியதா போயிற்று”
“ சரி கதைய குடுக்காம இரு, லெட்டர் எடுத்திட்டியா ?”
“ இல்லடா பாத்தியா , இன்னும் பிரிக்க கூட இல்ல “
மகிழன் அவசரம் அவசரமாக அவனின் மடித்து வைக்கபட்டிருந்த உடைகளை கிளறினான்.
“ எடுத்திட்டியா ?”
“ இல்லடா நீ வெளிக்கிட்டியா ?”
“ ஓமடா “
“அப்ப வா போவம், எப்பிடியும் இண்டைக்கு அவர நேர்ல பாக்க தானே போரம் “
“சரி சாவி எடுத்தியா “
மகிழன் திறப்பை உயர்த்திக்காட்ட சுகந்தன் சிரித்துக்கொண்டே முதுகை தட்டினான்.
மணி 11 ஐ தாண்டிய நிலையில் தார்வீதிகளில் இருந்து வண்டி மண் வீதிக்கு இறங்கியது. சனநடமாட்டமே இல்லாத இருண்ட வெளியாக இரவு இருந்தது. காற்று வேகமாக இன்னும் வேகமாக வண்டியின் வேகத்திற்கு இணை கொடுத்து ஜக்கெட்டுகளை கிழித்தது. தென்னை இடுக்குகளில் இருந்த சந்திரன் வெட்ட வெளிக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தான். உலகில் எதுவுமே தூய்மை இல்லை என்பது போல இருட்டின் கனதி மிக அதிகமாக இருந்தது. பகல் முழுக்க வேலை செய்த அயர்ப்பும் காகிதத்தில் என்ன இருக்கும் என்ற யோசிப்பும் மகிழனை ஒரு முறை உலுப்பியது. மகிழன் மெதுவாக வண்டியின் வேகத்தை குறைத்து சுகந்தனிடம் பேச்சை கொடுத்தான்.
வண்டி மண் வீதியின் ஏற்றதில் ஏறி இறங்கியது.
பேச்சு கொடுக்க திரும்பிய மகிழன் தூரத்தில் நான்கைந்து வட்ட மஞ்சள் ஒளிபொருந்திய சில வண்டிகள் எதிர்த்துக்கொண்டு வருவதை கண்டான். பேச்சை கொடுக்காமல் திரும்பி வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.பொதுவாக இந்த நேரத்தில் யாரும் கூட்டமாக பயணம் போகமாட்டார்கள். தனியாகவே செல்லுவார்கள். இப்படி ஒரு குழுமமாக வண்டிகளை பார்த்ததும் மகிழன் சுகந்தனை தயார்படுத்தினான். சுகந்தனுக்கு இந்த வீதிக்கு கிளை வீதிகள் எதுவுமே கிடையாது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. இருந்தும் ஒன்றாவது உருவாகியிருக்க கூடாத என்று கடவுளிடம் கெஞ்சி கேட்டான். அவர்களிடம் கூமில் வேலை செய்யும் அடையாள அட்டை இருந்தது. அப்படி மறித்தால் அதைக்காட்டி சென்று விடலாம் என்று இருவரும் பேசிக்கொண்டார்கள். வெளிச்சங்களை நெருங்க நெருங்க அங்கிருந்து எந்த அசைவும் தெரியவில்லை. இன்னும் நெருங்க வாகனங்கள் சில நகராமல் வெளிச்சத்தை மட்டும் பாய்ச்சிய வண்ணம் நின்றது. கட்டாயம் அது ஆமியோ போலிசோ கிடையாது. சில நேரம் உளவுத்துறையாக இருக்குமோ?
நன்கு வளர்ந்த பருமனான ஒருவன் கைகளை காட்டி இறங்க சொன்னான். வண்டி முழு வேகத்தையும் குறைத்து படபடப்புடன் அவர்கள் இறங்கி பின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு பேர்செய் திறந்து அடையாள அட்டைகளை எடுத்து காட்டினார்கள். அவன் அடையாள அட்டைகளை வாங்கி கொண்டு போய் அங்கிருந்த இருவரிடம் நீட்டினான்.
அவ்விடத்தில் இரண்டு ஆட்டோக்களும் ஒரு மோட்டார் வண்டியும் நின்றது. சிவப்புநிற ஆட்டோக்கள் தான் இரண்டும். வெளிச்சத்தில் அங்கிருந்த எட்டு பேரின் முகத்தையும் உடல் வாகுவையும் மகிழனால் அறிய முடிந்தது. கைத்தொலைபேசியில் இருந்து வந்த ஒளியில் மின்னிய அவனின் தோழர்களின் முகங்களை போல வாகன வெளிச்சத்தில் இவர்களின் முகமும் ஒரு இறுக்கமான பிடியுடன் தெரிந்தது. எல்லோரது முகங்களிலும் நெடுநாளாக மழிக்காத தாடியும் மீசையும் அழுக்காக படிந்திருந்தது. யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் சிங்களவர்கள் அல்ல.
இவை அனைத்தையும் கவனிக்க முன்னரே அவர்கள் மகிழனையும் சுகந்தனையும் சுற்றி கொண்டார்கள். இருவர் ஆட்டோக்குள் சென்று ஒரு பெரிய லாரி டயரை தூக்கிக்கொண்டு வந்தார்கள். சுற்றிருந்தவர்களில் ஒருத்தன் கைகளில் கயிறுடன் வந்தான், இன்னொருத்தன் ஒரு கானுடன் வந்தான். சுற்றியிருந்தவர்கள் இருவரையும் நெருங்க மகிழனும் சுகந்தனும் மிக சத்தமாக தம்மை விடும் படி அலற ஆரம்பித்தார்கள். சுற்றி எங்குமே வீடில்லாத வீதியில் அவர்களின் குரல் காற்றோடு கலந்து நிசப்தமாய் போனது. மகிழன் ஒரு முறை திமிறி அவர்களின் பிடியிலிருந்து விலக எத்தனித்தான். அவர்களின் பிடியிலிருந்து அணுவும் விலக முடியவில்லை. இன்னும் சத்தாமாக கத்தினான். சுகந்தன் மெதுவாக முனகினான். மகிழன் உரத்தை கூட்டி கத்தினான். அடித்தொண்டையின் வளை அதிருமாறு தலையை மேலும் கீழும் ஆட்டி திமிறியவாறு கால்களை நிலத்தில் குத்தி எம்பி எழ எத்தனித்து கத்தினான். சுற்றியிருந்தவர்காளால் அவனின் அலறலை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒருத்தன் விறகு குற்றி ஒன்றை கொணர்ந்து மகிழனின் வாய்க்குள் அடித்து இறுக்கினான். விறகின் சிராய்கள் வாய்களின் புறங்களை கிழித்து ரத்தம் சீறி பாய்ந்தது. மகிழன் வலியால் கண்களாலும் காதுகளாலும் மூக்காலும் முனகினான். வாயிலிருந்து ரத்தம் அவனின் மார்பெல்லாம் வழிந்தது.
கையில் கயிறுடன் நின்றவன் இருவரையும் இணைத்து கைகளை மடக்கி கால்களையும் சேர்த்து கால் வயிறு கைகள் கழுத்து என மகிழனையும் சுகந்தனையும் இறுக்கி ஒன்றாக கட்டி விட்டான். அவர்களில் இன்னொருத்தன் மற்றவர்களின் பிடிகளை தளர்த்தி விட்டு தன் கால்களால் இருவரையும் அழுத்தமாக உதைந்தான். இருவரும் மண்ணின் மீது ஒன்றாக கவிழ்ந்தார்கள். விறகு கட்டை மகிழனின் வாயினை இன்னும் ஆழமாக தாக்கியது. மகிழன் மயங்கி போனான். சுகந்தன் சுயநினைவை இழந்து போய் இரண்டு சடலாங்களாகி போனார்கள்.
இருவரையும் சிலர் இழுத்துக்கொண்டு வந்து அருகில் இருந்த நீரோடாத வாடிப்போன வாய்க்காலுக்குள் தள்ளி விட டயரை இருவர் கொணர்ந்து இருவரின் மேலே போட்டார்கள். கொணர்தவர்களின் கண்களில் எந்த சலனமும் இல்லை. நடந்து திரிகின்ற பிணங்கள் போலவே அவர்களும் இருந்தனர். இதுவரை அவர்கள் எவரும் பேசிக்கொண்டாதாய் இல்லை. அவர்களின் உடலும் இயக்கமும் எந்திரதனமாக இருந்தது. நள்ளிரவிலும் அவர்களின் நேர்த்தியான முனைப்பும் இறுக்கமும் உறுதியாக இருந்தது.
அடுத்தவன் கானிலிருந்த மஞ்சள் திரவத்தை அவர்களின் மேலே ஊற்றினான். ஒரு கடவுளுக்கு பாலாபிசேகம் செய்வதை போல மிக மெதுவாக எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றினான். அவர்களில் யாருமே ரசித்ததையும் வெறுத்ததாயும் தெரியவில்லை. மஞ்சள் ஒளியின் மங்கிய பிரகாசத்தில் திரவம் மினுக்கம் கட்டியது. ஒருத்தன் கட்டிபோட்ட இருவரின் அருகிலும் வந்து அவர்களின் அடியாள அட்டைகளை அவர்கள் மீது எறிந்தான்.
மற்றையவன் தனது பின் ஜீன்சுக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்து சுகந்தனின் தலைக்கு குறிவைத்து சன்னத்தை பாய்ச்சினான். துப்பாக்கி முனை ஒரு கணம்  இருட்டில் பற்றி பிடித்து அணைந்தது போல இருந்தது.
குபுக்கென பற்றிக்கொண்டு எரிந்தது டயர், கூடவே இரண்டு பிண்டங்களும்.அந்த வீதி முழுக்க ஒளி அவ்வளவு பிரகாசமாக பரவியது. முனுமுனுத்துக்கொண்டே இருந்து அவர்களின் இறுதி நேரத்து சொற்கள் எல்லாம் வெளிச்சத்தில் கலந்து காத தூரம் போய் அடையாளங்கள் அற்று மறைந்து போயின. தண்ணீரே படாத மண்வீதியின் வாய்கால் திரவத்திலும் ரத்தத்திலும் உறைந்து போனது. டயருடன் மகிழனும் சுகந்தனும் கருகிப்போனார்கள்.
அவ்வளவு நேரம் எரித்தவர்கள் நிற்கவில்லை. அவர்களுக்கு கட்டளையும் அப்படி வழங்க படவில்லை.சன்னம் பாய்ந்த அடுத்த நிமிடம் அவர்களும் வண்டிகளில் பாய்ந்து விட்டார்கள். அவர்களுக்கு இது வெறும் தொழிலே. கொள்கைகள் இல்லாமல் சுற்றித்திரிந்த அவர்கள் தெரிந்தெடுத்த பிழையான பாதையினால் மிக சரியாக குழிக்குள் விழுத்தப்பட்ட நிலையே அவர்களது.
ஒரு வாய்க்காலுக்குள் இரண்டு புழுக்கள் நெளிவதைப்போல முடிந்து போனது அந்த இரவும் முகிழன் சுகந்தன் இருவரின் வாழ்கையும்.
மகிழனின் வண்டிக்கு பின் கட்டியிருந்த இருவரது பைகளுக்குள் மகிழனின் பைக்குள் இருந்த  திணித்த உடைகளுக்குள் கண்ணீர் வழிய அப்பாவின் கடிதம் எல்லாவற்றியும் மௌனமாக பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தது.
 

Leave a Comment