இருதிணை – ஆழ்கடல் மரபு – அனார் மீக்காயீல் பிரதிகள்

யாத்திரிகன் ஷீத் – மீக்காயீல் – மற்றும் மூன்று சிறுவர்கள் – மீக்காயீல் பிரதி – புறத்திணை

நீல இமைகளைக் கொண்ட ஷீத் தன் விரல்களால் உவர்நீரினை மேவி லைட்கற்களை அள்ள எத்தனித்தான். அவன் உள்ளங்கைகளிரண்டிலுமிருந்து அவிழ்ந்த ரேகைகள் நீண்ட கடற்பாம்புகளைப்போல கடலுக்குளிறங்கின. அவனுடைய கைப்பிடிக்குள் அடைய மறுத்த லைட்கற்கள் வெண்ணுரைக்குள் நழுவி மறைந்துபோயின. இன்னொரு அலைக்கான மீச்சிறு இடைவெளியில் அவை இறந்து பிறந்தன. பௌர்ணமி கடந்த அடுத்த இரவில் நிலவின் வருகை தாமதித்திருந்தது. பருவமழை தொடங்கி எட்டாமிரவு ஷீத்தும் மீக்காயீலும் கடற்கரைக்கு வந்திருக்கின்றனர். ஏழடுக்கு ஆகாயத்தின் பிரதிநிதி நட்சத்திரங்கள் எல்லாமும் அவளின் வருகைக்காக பட்டயங்கட்டி மணம் முடிக்க காத்திருக்கின்றன. காத்திருப்பில் தம் ஒளியிழந்து உதிர்ந்து கடலுக்குள் கலந்த நட்சத்திரங்கள் தான் லைட்கற்கள் என்றான் ஷீத். ஆயிரமாண்டுகளாய் இசைக்கும் நதிகளின் ஓட்டத்தில் கலந்த பளிங்குக் கற்கள் – காலத்தின் அசைவில் தன் ஆகிருதியிழந்து – உருண்டு -தேய்ந்து -அருவமாகி கடற்பரப்பில் உறைகின்றன. ஷீத் காலத்தின் எச்சத்தைத் திரட்டி பளிங்குக் கிண்ணமொன்று வனைந்தான். பின்னொரு காலத்தில் மீக்காயீல் அண்டத்தின் எல்லா நட்சத்திரங்களையும் அடைக்கபோகும் கிண்ணமிதுவென்பதையும் ஷீத் அறியாமலில்லை. பெண்ணுருக்கொண்ட கிண்ணத்தை வனைந்துமுடித்த கணம் ஆகாயத்தில் முதற்சாம நிலா தோன்றிற்று. ஷீத்தின் இரு கண்களும் அந்நிலவொளியில் ஒளிர்ந்ததை மீக்காயீல் அருகில் நின்று அவதானித்தான். நிலவின் ஒளி ஷீத்தின் கண்களிருந்து பெறப்பட்டதாகவே அவன் நம்புகிறான். அவளின் வருகையின் பின்னருங்கூட நட்சத்திரங்களின் உதிர்வு நின்றபாடில்லை. அவை நிலவினால் நிராகரிக்கப்பட்டவை. தாம் வானத்திலிருக்க தகுதியற்றவை என்று கடலுக்குள் உதிர்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன. அலைகளில் மிதந்து கரையில் புதைந்து ஒளியை இழக்கின்றன. ஷீத் கரையிலிருந்து அவற்றை அள்ளி மீண்டும் ஆகாயத்திற்கு தெளிக்கவே விரும்புகிறான். பளிங்குக்கிண்ணமும் அதற்குத்தான்.

 

இரண்டாம் சாமம் நெருங்கிற்று. நட்சத்திரங்களின் உதிர்வும் முற்றாக அற்றுப்போனது. ஷீத் கிண்ணம் நிறைந்த லைட்கற்களுடன் என்னைப் பார்த்தான். அவை சதைப்பற்றான நத்தைகளாகிக் கிடந்தன. உவர்நீரை உறிஞ்சி தம்முடலை பொன்னிறமாய் ஒளிர்த்துக்கொண்டு ஒன்றன்மீது ஒன்று அழுத்தி அணைத்தபடி ஊர்ந்தன. பொன்னொளியில் கிறங்கிப்போயிருந்த மீக்காயீல் தனது இரண்டு இறக்கைகளையும் அகல விரித்தான். ஒரு பெரும் புயலின் ஆக்ரோஷத்தோடு உலகளவு பரந்த அவ்விறக்கைகள் இரண்டும் காற்றில் நிலைத்து நின்றன. மீக்காயீலின் ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வானத்தின் நிறம் மாறியது. ஷீத் தன் விரல்களால் மலரிதழொன்றை அவிழ்ப்பதைப்போல அப்பெரிய இறக்கைகளிலிருந்து இறகுகள் இரண்டினை கொய்தெடுத்தான். அவற்றை அப்பெண்ணுருவ பளிங்குக் கிண்ணத்தின் வாளிப்பான முதுகினில் வருட கிண்ணம் உயிர்பெற்றது. ஷீத்தின் கைகளிலிருந்து நழுவி அப்பெண் பாலி என்ற பெயர்பெற்று வானத்தை நோக்கி ஆர்ப்பரித்தவாறு பறந்தாள். பின்னாளில் பாலியே நட்சத்திரங்களின் அரசியுமானாள்.

 

பார்வைக்கெட்டுந் தூரத்தில் கடல் நடுவே ஒளிக்குளத்தை உருவாக்கிற்று நிலா. வட்டமான ஒளிக்குளம் தெப்பம் ஒன்றினைப்போல அசைந்துகொண்டிருந்தது. ஷீத் அதைக் கடலின் இதயம் என்றான். கடலின் நடுவே பாற்குடம் நிரம்பியிருப்பதைப்போலவும் மீக்காயீலுக்கு விளங்கியது. அவ்வொளிக்குளத்திற்குள் பெருங்கடலின் நீரனைத்தும் ஒடுங்கிச் சேர்ந்தன. கடல் உள்வாங்கிற்று. எல்லையற்ற பெருவிரிப்பைப் போன்ற கடல் கசங்கி ஒளிக்குளத்திற்குள் படிந்து கொண்டிருக்க கிராமத்துச் சிறுவர்கள் மூவர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் லைட்கற்களை பொறுக்கிச் சேர்க்க நேர்த்தியாக சீவப்பட்ட அரைத்தேங்காயோடு வைத்திருந்தார்கள். அவர்களின் மெல்லிய விரல்களால் நுரைத்தொதுங்கும் சிறிய அலைகளைத் துழாவி ஏமாற்றமடைந்தனர். ஈரமண்ணைத்தவிர அவர்களால் வேறொன்றையும் எடுக்கமுடியாமற் போக ஷீத்தின் முன் வந்துநின்றார்கள். மீக்காயீல் அச்சிறுவர்களின் இயலாமையால் நரைத்துப்போன அவர்களின் இமைகளைப் பார்க்கிறான். கிராமத்துக் கிணறுகள் முழுதும் அவர்கள் சேர்த்துவைத்த லைட்கற்களின் ஒளி – இனி மங்கிக்கொண்டு போகப்போவதையிட்டு அவர்கள் வருந்தி நின்றார்கள். ஒவ்வொரு இரண்டாஞ் சாமமும் அவர்கள் சிரட்டை நிறைய லைட்கற்களைச் சேர்த்து ஊர்க்கிணறுகள் நெடுக ஒவ்வொன்றாய்த் தூவி ஒளி பொருத்தி வந்தார்கள். அவ்வொளியிற்தான் கிராமத்துப் பெண்கள் அனைவரினதும் நகங்களும் மின்னுவதாயும் ஆண்களின் இமைகள் நிறமடைவதாயும் அச்சிறுவர்கள் நம்பினார்கள். ஷீத்தும் மீக்காயீலும் அவர்களின் நம்பிக்கையை பாழாக்க விரும்பவில்லை. உண்மையில் அம்மூவரின் இமைகளைத் தவிர இருட்டில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளாய் கிராமத்து ஆண்களின் இமைகளும் மின்மினிகளாய் பெண்களின் நகங்களும் பெருவெளியில் அசைந்துகொண்டிருந்தன. மூவரில் இளையவனான சிறுவன் மீக்காயீலைப் பார்த்து கண்களைக் கசக்கினான். தன் தங்கையின் மினுமினுப்பான விரல் நகங்களை இனி எப்போதும் பார்க்கவே முடியாது என்று நம்பி அழத்தொடங்கினான். அவன் கண்ணீர்த்துளிகள் அலைகளின் மேல் விழுந்து – ஒளி பெற்று – மீன்களாய்ப் பாடிக்கொண்டே ஒளிக்குளத்திற்குள் விரைந்தன. அவை ஷீத் அனுப்பிய செய்திகளை உடலிற்சுமந்து சென்றன. சிறுவர்கள் கவலையை மறந்து பாடிக்கொண்டு விரையும் கண்ணீர்மீன்களை பார்த்துகொண்டிருந்தார்கள். அழுதுகொண்டிருந்த சிறுவன் அலைக்குள் பாய்ந்து அம்மீன் ஒன்றினை பிடிக்க எத்தணித்து முகம் முழுக்க மணற்துமிக்கைகளோடு எழுந்தான். அவனது முகம் நட்சத்திர மீனொன்றைப்போல விகாரமாய்த் தெரிய ஷீத் பொத்தென்று சிரித்தான். ஷீத்தின் சிரிப்பில் வானில் நின்ற நிலா பவளப்பற்களை காட்டிச் சிரிக்க, ஒளிக்குளம் கலைந்தது. படிகமாயிருந்த ஒளிக்குழம்புகள் ஒரு ஊற்றாய் கரைக்கு படையெடுத்தன. வெள்ளி நதியொன்றினைப்போல அவை வளைந்து நெளிந்து எம்மை நோக்கி வந்தன. அவை லைட்கற்களாய் நிரம்பிப் பெருகின.

 

யாத்திரிகன் ஷீத் – நீல இமைகள் ஒளிர்ந்தபடி பார்த்துக்கொண்டிருக்க சிறுவர்கள் சிரட்டைக்குள் லைட்கற்களை நிரப்பினர். அலைகளால் நிரப்ப முடியாத பெலத்த காற்தடயங்கள் ஆறு மணற்பரப்பில் பதிய கிணறுகளை நிரப்பும் ஆசையுடன் சிறுவர்கள் கிராமத்திற்குள் நடந்தார்கள். உவர் காற்று மெல்லிய இழையாய்ப் பிணைய மீக்காயீல் ஷீத்தின் இடது உள்ளங்கையை பற்றினான். ஒளிக்குளம் முழுதாய் கரைந்துபோனது. கடைச்சிறுவன் தன் தங்கையின் விரல்கள் அழகின் ஒளியாய் மினுங்கப்போவதை எண்ணி பாடிக்கொண்டே நடந்தான்.

 

பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னி – அனார் பிரதி – அகத்திணை

கடற்கன்னி பாடுவதை   யார் கேட்டிருக்கிறீர்கள்  அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல் இருகரைகளில் எதிரொலித்து துறைமுகங்களைத் தாண்டி விழுவதை அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி மதுநெடியுடன் பிதற்றுகிறான்

கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன கரைமணலில் சிறுமிகளின்  மடிகொள்ளாத வெண்சிப்பிகளாக

நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில் மாலுமிகளின் தனியறைகளில் கடற்கன்னியின் வாசனை வியாபித்து  திரைச்சீலைகள் படபடக்கின்றன

அவளின் நீண்டு நெளியும் வால் வசீகரிப்பினை
படர்பாசிகளின் கீழிருந்து வெளிவரும்  மீன்குஞ்சுப் பட்டாளங்கள்  பிரயாசையுடன் பின்தொடர்கின்றன

அடர்த்தியான பச்சைநிற பளபளக்கும் செதில்கள் நீர் அல்லிகளின் வேர்களைப் பின்னி பௌர்ணமியில் இன்னுமதிகமாய் ஜொலிக்கின்றன


கற்படுக்கைகளிடையே சுழியோடிகள் அவளது கண்களின் கவிதைகளைக் கண்டெடுத்து  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு  எடுத்துச் செல்கின்றார்கள் நள்ளிரவில் கடற்கன்னி மேகங்களை வேட்டையாடுகிறாள் அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே பதுக்கி வைத்து ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்

சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்துகொண்டு நீருக்குள் நழுவும் அற்புதத்தை தாம்மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற கருங்கற்பாறைகள்தம்மை அறியாமலேயே  உருகிக்கொண்டிருக்கின்றன

உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது


மின்னல்கள் கூக்குரலிட்டுக் கூவிவெடிப்பதெல்லாம் கடற்கன்னியின் பெயரைத்தான் என மலைவாசிகள் நம்புகின்றார்கள்


புராதனகால கடல் அரக்கனின் தந்திரோபாயங்களை தோற்கடித்தபடியே பருவகாலங்களை அருளும் கடற்கன்னி ஒவ்வொரு கடலினிலும்  நீந்திக் கொண்டே இருக்கிறாள் பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடிப்பாடி

மீக்காயீலின் மாதுளை நிலம்

மீக்காயீல் பிறந்தான். மென்னீலமும் பொன்னிறமுமாய் அந்நிலம் விரிந்திருந்தது. பிறப்பின் பூமியென்று நெடுங்காலமாய் நம்பப்பட்டுவந்த நிலத்திலிருந்து அந்நிலம் வெகு தொலைவிருந்தது. நத்தையுடலின் மேல் மிதக்கும் கோளநிலத்தின் சாயல். அன்பின் நிலமெல்லாம் கோளந்தான். மலைகளைப்போல் பரந்தும் நீண்டும் வளர்ந்துநிற்கின்ற மரங்கள். காற்றில் வலிமையாய் சிறகுவிரித்து நிற்கும் பருந்தினைப்போல அந்நிலம் தரையுமில்லை; அந்தரமுமில்லை. அங்கு இசையுமில்லை, மணமுமில்லை. பருவங்கள் நிறங்களாய்த் தோன்றி அவ்வெளியின் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்தன. நிறங்கள் ஒவ்வொன்றும் பருவங்கள். இது மழையும் பனியும் நிறை கூதல் பருவத்தின் இறுதிக்கணங்கள். பளிங்காற்றின் நடுவில் கோலொன்று ஆச்சரியமாய் நிற்கிறது. நிலையில்லாமல் அசைந்துருகும் நீர்த் திவலைகள் அதனடியில் மோதித் தெறிக்க அக்கோலின் மேல் பொருந்திநிற்கும் என்தலை வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. பேரலைகளைப் போல வானத்து நட்சத்திரங்கள் இரைவதை உணர்ந்தேன். அது சீற்றமில்லை. கொந்தளிப்புமில்லை. ஒரு பருவத்தின் முடிவிற்கும்  இன்னொரு பருவத்தின் தொடக்கத்திற்கும் இடையிலான காலத்தில் மட்டும் இரையும் இந்நட்சத்திரங்கள் என் தலையின்மேல் இரைந்துகொண்டிருந்தது பிறப்பொன்றின் அறிகுறி. பெருமழையொன்றின் வெள்ளத்தில் பூமியிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட என் தலை காலக்கோலின் உச்சியில் பிணைந்திருப்பது பிறப்பொன்றினை அறியத்தான். ஆற்றிலிருந்து தவறி நட்சத்திரங்களை நோக்கி நகரும் நீர்த்துமிகள் இடையிலேயே உறைந்து பனியாகின்றன. ஈற்றில் தொலைந்து போனதென நம்பப்படுகின்றவை நட்சத்திரங்களாகின்றன. அந்நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் தேவதைகளின் உறைவிடங்களாயின. அவை தேவதைகளின் பரபரப்பினால் இரைகின்றன. பிறப்பின் பரபரப்பு யாரைத்தான் விட்டுவைத்தது. அவர்கள் நட்சத்திரங்களிலிருந்து அக்கோலை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் பளபளக்கும் பச்சிலைகள் நிறைந்திருந்தன. பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன். 

உதிர்ந்த இசைச்சொல்

(01)

 

பேகன் இறந்த இருபத்தாறாவது வருடத்தின் கனத்த பொழுதொன்றில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். உடல் முழுக்க ரத்தத்தைப் பாய்ச்சி அடிக்கும் வலிமையான இதயம் தனது வலிமையை இழந்துகொண்டிருக்கின்ற இந்தக் கணம் ஓவியங்களைப்பற்றி எழுதுவதொன்றும் இனிமையானதல்ல. அடுத்த தெருவில் இதயம் அடைத்து அதிகாலையில் இறந்து போன, தெரிந்தும் தெரியாததுமான ஒருவரின் ஆத்மா உடலிலிருந்து கிளம்பி இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கும் காலத்திற்குள் என்னால் எழுதுவதென்பது சாத்தியமற்ற ஒன்று. ஓவியம் மட்டுமல்ல, எந்தக் கலையைப் பற்றியும் அணுவளவும் தெரிந்திராத வதைக்கூடமொன்றுக்குளிருந்து எழுதுவது தண்டனை. சுய வெறுப்பைப் போல வேறெதுவும் கடினமானதல்ல என்றுணர்ந்த பொழுதில், அதன் அலைகள் கூட இன்னமும் அகன்றுபோகாத மென்மஞ்சள் வெயில் நாளொன்றில் பேகனைப் பற்றி எழுதி என்னாகிவிடப்போகிறது. சூரிய ஒளிக்கு கண்ணாடியைப்போல ஒளிர்ந்துகொண்டிருக்கும் பச்சை நிற இலைகளை ஒத்துக் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒன்றைத்தேடி உடைந்த மரச்சட்டகங்களும் கீலங்களாக கிழிக்கப்பட்டு குமித்துவைக்கப்பட்டிருக்கும் தடிப்பான மட்டைகளும் குத்திக் கிழிக்கப்பட்ட ஓவிய மிச்சங்களும் திண்மத் திட்டுகளாகிப்போன வண்ணக் கலவைகளுக்குள்  இறுகிப்போன தூரிகளும் கறுப்பும் பச்சையும் சாம்பலும் சிவப்பும் மண்ணிறமும் இன்னும் எத்தனையோ பெயர் அறியாப்பொருட்களும் நிறைந்திருந்த அந்தக் குப்பைக்கூடத்திற்குள் தெளிவற்று மங்கலாகிப்போன வட்டக் கண்ணாடியின் முன் பேகன் தன் முன்முடிகளை இடக்கையில் முதன்மூன்று விரல்களாலும் சீர்படுத்திக்கொண்டிருக்கும் அந்தக் கணம் நிர்வாணமான என் உடலை முன்னிறுத்தி பேகனின் தோளை அழுத்தமாகப் பிடித்துத் திருப்பினேன்.

 

என்னுடல் மீது கவிந்திருந்த இளங்கறுப்பும் அங்கங்கே மழிக்கப்படாமல் கற்றைகளாக வளர்ந்திருந்த முடிகளும் இறுக்கமற்றுப் போயிருந்த தசைகளும் முதற்பார்வையிலேயே பேகனுக்கு அருவருப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சிறிய பலாக்கொட்டைகளைப்போன்ற கண்களிரண்டையும் இளம்பெண்ணுக்குரிய நளினத்தோடும் வெறுப்போடும் சிமிட்டியபடி என்னைப் பார்த்தார். ஒரு கிழமைக்கு முன்னர் மழித்த கன்னங்களில் அரும்புகளாக முளைத்திருந்த தாடியைக் கூர்ந்து பார்த்த பின்னர் தன்னுடைய கண்களை மேல்நோக்கிச் செருகி மேலுதட்டைக் கீழ்வாய்ப்பற்களுக்குள் இழுத்தார். மையிட்டிருந்த என் கண்களின் மீது அதீதமான கவர்ச்சியை அவர் உணர்த்திருக்கக்கூடும். பருத்திருந்த என்னுடலில்  கவர்ச்சியைத் தரக்கூடிய ஒரே உறுப்பு கண்களாகத்தான் இருக்கும். நாளொன்றில் இரண்டு வேளைகள் கண்களுக்குக்  கருமையிட்டு அழகுபார்த்துக்கொள்வேன். நிர்வாணமான ஆணுடலின்  மீது எந்தக் கறையும் இருப்பதில்லை. ஆணுடல் வெளிப்படையானது. நேர்த்தியற்றது. ஒழுங்கற்ற குன்றைப்போன்றது. பிடிப்பான தசைகளும் வெண்மையான தேகமும் நிர்வாணத்தில் பெண்மையையும் வெளிப்படுத்தக்கூடிய உடலல்ல என்னுடையது. என் அழுத்தமான பிடிப்பினை அவர் விலக்கியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யவில்லை. சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தோம். எங்களால் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று மௌனமாயிருத்தல் மட்டுந்தான்.

 

(02)

 

” ஓரினச்சேர்க்கை அழகினால் மட்டுந்தான் ஏற்படுகிறது” என்று மௌனத்தை உடைக்கும் போது எனக்குள்ளிருந்த ஆண்மையை உணரத்தொடங்கினேன். பத்து வயது சிறுவனைப்போல பேகன் இதனைச் சொன்னார். வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கத் தெரியாமல் இரண்டு பூக்கள் காற்றில் மோதிக்கொள்வதைப்போல அந்தச் சொற்கள் சத்தமிட்டன. நாங்கள் மௌனித்திருந்த அத்தனை நேரமும் என்னையொரு பெண்ணாக உணர்ந்திருந்தேன். மௌனத்தில் காமம் அடர்ந்திருந்தது. ஓவியம் ஒன்றிலிருந்து வழிந்தோடும் வண்ணம் போல உருகி ஓடியது. பேகனின் வெளிறிய மஞ்சள் நிறக்கண்கள் என்னிலிருந்து விலகி ஓரத்திலிருந்த மென்நீலச்சட்டையின் மீது தாவியது. அத்தாவல் முதலுறவில் வெட்கித்துப்போன பெண்ணொருத்தியின் பார்வையைப்போல தூய்மையாயிருந்தது. அந்த மேற்சட்டையையும் அதற்கு அங்காலிருந்த நீளக் காற்சட்டையையும் எடுத்து நீட்டினார்.  என் நிர்வாணத்தில் நீண்டநேரமிருக்க பேகன் விரும்பவில்லை. நிர்வாணம் ஒரு போதையல்ல என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார். என்னுடல் பிதுங்கிப்போகும் அளவு இறுக்கமான ஆடைகளை வலிந்து அணிந்து கொண்டேன். யாருக்கும் எதுவும் சரியாய்ப் பொருந்திப்போவதில்லை. நாம் தான் அவற்றிற்குள் செருகிக்கொள்ள வேண்டப்படுகிறோம். பேகனுக்காக ஆடைகளுக்குள்  செருகிக்கொண்டேன். அணிந்த ஆடை பேகனின் பார்வையைப்போல இதமாக அழுத்தியது.

 

” வா இவற்றை அள்ளிக் குவிக்கலாம் ” என்று அறையெங்கும் பரவியிருந்த கீலங்களைக் காட்டினார். ஒவ்வொன்றும் ஆயிரம் வண்ணங்களின் சேர்கையாகத் தெரிந்தது. நிச்சயம் அவை அவரின் ஓவியங்கள் தான். புயலொன்றில் சிதைந்துபோன கவிதையைப்போல அவை புள்ளிகளாக மிதந்துகொண்டிருந்தன. இசைத்தட்டொன்றின் பின்புறத்திலிருக்கின்ற வண்ணங்கள் மாயாயாலம் செய்வதைப்போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணத்தில் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. தன் கால்களால் அவற்றைக் குவிக்கதொடங்கினார். பேகன் ஓவியங்களை நேசிக்கவில்லை. கண்ணீரைப்போல மலத்தைப்போல அத்துமீறிவளர்ந்த நகத்தைப்போல ஓவியங்களையும் பொருட்டில்லாத பாவனை செய்தார். நான் இறுக்கமான காற்சட்டை கிழிந்துவிடும் என்ற பயத்திலும் நெருக்கடியிலும்  மெதுவாக குனிந்து கைகளால் குவிக்கத்தொடங்கினேன். அவை ஒன்றின் மீது ஒன்று மருவும் போதும் அருகருகில் சென்று குவியும் போதும் ஒன்று ஒன்றிற்குள் மறையும் போதும் புதுப்புது ஓவியங்களாக மாறிக்கொண்டேயிருந்தன. ஒவ்வொரு கணமும் தம்மை புதுப்பித்துக்கொண்டன. தாங்கள் சிதைந்ததை  எண்ணிக் கவலையுறவில்லை. அவை சந்தர்ப்பங்களில் தனித்து நின்றும் சேர்ந்து நின்றும் ஓவியங்களை வரைந்தன. ஒவ்வொன்றிற்கும் தனித்த மனமிருந்தது. அது பேகன் கொடுத்ததோ நான் கொடுத்ததோ அல்ல. எல்லாக்கீலங்களும் மரச்சட்டகங்களும் ஒருமிக்கக்குவிந்து பிரமாண்டமான ஒளியொன்றாய் உருவாகின. நிறமில்லாத தூய ஒளி. அவை அழகின்மையிலிருந்து  உருவாகிய ஒவ்வொரு உயிரினதும் ஒளி. உலகத்தில் தனித்துவிடப்பட்ட எல்லா பொருட்களினதும்  ஒளி. கைவிடப்பட்டு உக்கிப்போன என் பதின்ம வயது சைக்கிளின் ஒளி. எழுதி எழுதி அடுக்கப்பட்டு பின்னர் கொடுக்கவே முடியாமல் கரையான் அரித்து பொட்டலமாகிப் போன கடிதங்களின் ஒளி. அந்த நிறமற்ற பேரொளியில் மறைத்துவைத்த ஞாபகங்கள் உயிர்தெழுந்துகொண்டிருந்தன. ஒளியாலான பெருங்குவியல்  வண்ணத்துப்பூச்சியின் ஒரு பக்கச் செட்டையைப்போல துடித்துக்கொண்டிருந்தது. மற்றைய செட்டை எந்தச் சலனமுமின்றி மீதமிருக்கின்ற சில கீற்றுக்களை ஒவ்வொன்றாக குவியலுக்குள் தள்ளிக்கொண்டிருந்தது.

 

தன்னறையின் ஓரத்திலிருந்த மதுப்போத்தல் ஒன்றையும்  நீண்ட கழுத்துக்களைக்  கொண்ட இரண்டு கண்ணாடிக் குவளைகளையும் தூக்கிக்கொண்டு ” இந்த மலத்தை நீயே அள்ளிக்கொண்டு வா” என்று முகம் அருவருக்கச் சொன்னார். ” ஒரு குவளை போதும்” என்றேன். காற்றில் பனி படர்வதைப்போல சொற்கள் உறைந்து விரிந்தன. ” நான் குடிப்பதில்லை, அதன் வாசனை நாக்கினை தடிக்கச்செய்து விடுகிறது. வலது கால் பெருவிரல் கூட அதன் புளித்த நாற்றத்திற்கு வீங்கி நடக்கமுடியாமற் போகிறது “என்று தொடர்ந்தேன். குழந்தை புதிய நிறமொன்றை ஆச்சரியமாகப் பார்பதைபோல உறைந்து போன என் சொற்களைப் பார்த்தார். எப்போதும் இரண்டிற்கு மேற்பட்ட குவளைகளை நிறைத்திருக்கக் கூடிய பேகன், ஒன்றை மட்டும் எடுத்துச்செல்வதில் விருப்பமற்று ” சரி உன் இஷ்டம் ” என்றார். ஆனால் இரண்டு குவளைகளையும் காவினார். நான் முடிந்தளவு பக்குவமாய்க் கீலங்களையும் மரச்சட்டகங்களையும் அள்ளிக்கொண்டுபோய் வாகனத்தின் பின்புறத்தில் குவித்தேன். மூன்று முறையில் முழுவதுமாக எடுத்துமுடித்தவுடன் வாகனத்தின் அருகில் புகைத்துக்கொண்டிருந்த  பேகனை பார்த்துத் தலையசைத்தேன்.

 

அந்தி சாயும் நேரத்தில் அவருருவம் ஒரு குட்டிப்பன்றியைப்போலத் தெரிந்தது. கறுப்பு நிற நீள மேலங்கியை முழங்கைக்கு மேல் இழுத்துவிட்டு வெகு லாவகமாகப் புகைத்துக்கொண்டிருந்தார். இன்னும் முகச்சுருக்கமே விழத்தொடங்கியிராத இவர் எப்படி இறந்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே அறையில் என்ன மீதமிருக்கிறது என்று கேட்டார். “ஒரு வண்ணமும் சில துளி கண்ணீரும்” என்றேன். ஆழமாக இழுத்த புகையை தன் முகம் முழுக்க பரவுமாறு ஊதித்தள்ளி ” தூரமாகப் போவோம்” என்றார். நாம் வாகனத்தில் ஏறியிருந்த நேரம் உலகத்து வண்ணங்கள் மறைந்து அவற்றின் இடத்திலெல்லாம் கரு-மை ஊறத்தொடங்கியது .பொருட்கள் இருட்டில் மறைந்துகொண்டிருக்க  நாங்களிருவரும் ஊருக்கு வெளிப்புறத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம். பேகன் இடைவிடாமல் புகைத்துக்கொண்டிருந்தார். அவரின் உதவுகளிரண்டும் நறுக்கிவைத்த ஆப்பிள் துண்டுகள் போல பொலிவாயிருந்தது எனக்குள் ஆச்சரியத்தைத் தந்தது. ஜன்னலுக்கூடாக கூரிய அம்புகளாக காற்று வாகனத்திற்குள் பாய்ந்தது .

 

(03)

 

நகருக்கு ஒதுக்குபுறமாக வழிந்துகொண்டிருந்த அகன்ற ஆழமற்ற ஆற்றின் கரையில் வண்ணங்கள் அனைத்தும் நெருப்பாகியிருந்தன. குளிர்ந்த இராக்காற்று நெருப்பின் அடர்த்தியினை அழித்தும் ஆக்கியும் விளைடாடிக்கொண்டிருந்தது. ஈரலிப்பு அதிகமான காற்று நெருப்பின் வெக்கையோடு கலந்து ஒரு வித போதையான சூட்டைத் தந்தது. பேகன் முதல் சுற்றுக்கு தயாரான நிலையில் என்னிடம் என்ன  இசைக்கோர்வைகள் இருக்கிறன என்று கேட்டார். நான் அமைதியாகப்போய் விட்னியின் நோ வுமனை இசைக்கச்செய்தேன். கண்களிரண்டையும் மூடி நீண்டநேரம் இசையைக் கேட்ட பின் தனது  முதல் சொட்டைப் பருகினார். அவ்விசை கண்ணாடியின் மேல் நீர் பரவுவதைப்போல மனதிற்குள் வழுக்கிக்கொண்டு சென்று நிறைந்துவிடும். மீண்டும் கூர்மையாக சில நொடிகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ” அற்புதம். என்னவொரு இசை, உடல் முழுக்க இனிப்பை கரைத்து ஊற்றியது போல சுவைக்கிறது” என்றபடி கைகளிரண்டையும் தோளளவிற்கு தூக்கி பெண்ணிற்குரிய எல்லா நளினத்துடனும் உடலை வளைத்து ஆடத்தொடங்கினார். ஒவ்வொரு நடன அசைவுகளிலும் மறந்திடாமல் இடுப்பை வட்டமாக அசைத்துக் கொண்டாடத்தவறவில்லை. ஆயிரக்கணக்கான கொண்டாட்ட  நடனங்களுக்குப் பழக்கப்பட்டவரைப்போல இசைக்கும் காற்றுக்கும் எந்த இடையூறுமின்றி நிதானமாக மதுவைப் பருகியபடி ஆடினார். எரி சுவாலையும் அவரின் உடலும் ஒருகணத்தில் ஒருங்கிசைந்து அசைந்தன. நடனம் விடுதலை என்று எனக்குள் தோன்றியது. தன் கைவசமிருந்த எல்லா ஓவியங்களையும் கருக்கி விட்டு அதிக போதை ஏறாத நிலையில் பேகன் ஆடுகின்ற நடனம் அவரின் விடுதலையை நோக்கியது. ஜான் இறந்த அறைக்குள் மீண்டும் ஒருமுறையிருந்து ஞாபகங்களை மறக்கமுடியாமல் வண்ணங்களால் கீறியபின்னரும், ஓயாமல் துரத்தும் கொடிய வேதாளம் போன்ற நினைவுகளை அழிக்க ஓவியங்களைக் கருக்கும் பேகனின் நடனம் வேறெந்த தேர்ந்த நடனக் கலைஞரின்  நடனத்தை விடவும் மேலான உயிர்ப்புடையது. நீண்ட சீத்தைத் துணிபோல மென்மையாக அசைந்துகொண்டிருந்த நதி பேகனின் அசைவில் தூண்டப்பட்டு சலங்கைச்சத்தம் போட்டவாறு குதித்துப் பாய்ந்தது. வியாபாரிக்கு மில்லியன்களும் எனக்கு கலையும் பேகனுக்கு மலமும் எரிந்துகொண்டிருந்தது. தான் செய்த காகிதக் கப்பலை தானே கல்லெறிந்து தாழ்த்தும் குழந்தையொன்றின் சந்தோசம் பேகனின் முகத்தில் தெரிந்தது.

 

தொடர்ந்து சாமுவேல் பார்பரின் அடகியோ போர் ஸ்ட்ரிங் இசைக்கத்தொடங்கியது. என் கைகளிரண்டையும் பிடித்திழுத்து பேகன் நெருப்பினருகிற் கூட்டிச்சென்றார். எந்த எதிர்ப்புமின்றி இசைந்தேன். அவரின் உள்ளங்கையில்  பற்றிக்கொண்ட  சதைத்துணுக்கு அகோர வெப்பத்திலிருந்து. எனக்கொரு நடனம் தேவைப்பட்டது. உண்மையில் விடுதலை. ஒரு மெல்லிய கோட்டைக் கடப்பத்தைப்போல சுலபமாகத்தெரிந்தாலும் யாராலும் காட்டிவிடமுடியாத விடுதலை. பேகன் ஆடத்தொடங்கிய கணமே எனக்குள்ளே துள்ளல் தொடங்கிற்று. பருத்த உடலாயினும் ஓரளவேனும் அசைவுகளோடு ஆடுவேன் என்ற நம்பிக்கை. பேகன் மற்றைய குவளைக்குள் மதுவை நிரப்பி கைகளில் நீட்டினார். மீண்டும் மறுப்பேதும் இன்றி வாங்கி ஊற்றினேன். வாய் நிறைய நுரைத்துக்கொண்டு உள்ளிறங்கியது. அடித்தொண்டை குளிர்ச்சியில் சிலிர்த்தது. முதல் குடிக்குரிய பரபரப்பேதும் இல்லாமல் கையில் குவளையை ஏந்தியபடி ஆடத்தொடங்கினேன். அது ஜொஹான் சபாஸ்டியனின் பக் இன் கம் ஸ்வீட் டெத். தீயைச் சுற்றி ஆடினோம். பெரும் அசைவுகள் ஏதுமின்றி எளிமையான முழுச்சுதந்திரத்தோடு நரம்புகளும் தசைகளும் அசைந்துகொண்டிருந்தன. பேகனின் கண்களில் போதையேறிய எந்த அறிகுறியும் தெரியவில்லை மாறாக நான் களைத்திருந்தேன், மயக்கத்திலிருந்தேன். இருந்தும் பேகனை முத்தமிடவேண்டும் போலிருந்தது. உடல் முழுமையாக வியர்வையிலூறி களைத்துப்போக பேகனின் அருகிற் சென்று தோள்களை கைகளால் அழுத்தி சிவந்த உதட்டோடு முத்தமிட்டேன். அது ” சுதந்திரத்தின்  முத்தம்”.

 

(04)

 

உடல் களைத்திருந்தது. இரவின் சுதந்திர நடனத்தில் தசைகள் இறுக்கமாகி வலித்தன. செவி மடல்களுக்குள் கண்ணாடி உடைசலைப்போல ஆற்று நீர் சலசலத்துக்கொண்டிருந்தது. இன்னும் விடிந்திருக்கவில்லை. கைக்கெட்டும் தூரத்துக்கு அப்பால்  உடல் முழுதும் சாம்பலை பூசியபடி பேகன் நிர்வாணமாகக் கிடந்தார். ஆற்றாமையில் அள்ளிப்பூசிக்கொண்ட சாம்பல் அது. முடிந்த இரவில் பிறை உச்சியைக் கடந்து நின்ற போது பாதி மயக்கத்தில் எழுந்திருந்தேன். என்னால் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. பேகன் ஆக்ரோஷமாக தண்ணீரைத் தலையிலும் உடல் முழுதும் அள்ளி ஏற்றிக்கொண்டது போலிருந்தது. இப்போது சாம்பல் பூசிய பேகனைக் காணும் பொழுது தான் அது தண்ணீரல்ல சாம்பல் என்று தெரிகிறது.  கழுத்து அசைக்கமுடியாமல் நொந்தது. தோள்பட்டை பற்றி சொல்லவே தேவையில்லை. மெதுவாக எழுந்து பேகன் அருகில் வலிமையற்று நகர்ந்தேன். அவர் இயல்புக்கு மீறி துவண்டுபோயிருந்தார். ஒரு சாம்பல் நிற பூனையைப்போல உடலை தனக்குள் சுருக்கிக்கொண்டு கிடந்தார். இரவிரவாக பாடி இன்னமும் ஓயாமல் ராபர்ட் ஸ்கமனின் ற்றமுறி இசைக்கத்தொடங்கியிருந்தது. மெல்லிய கீலமாக அதிகாலையின் மஞ்சளொளி ஆற்றுப்படுகையின் மீது தெறித்தது. எரிந்த குறையில் இரண்டொரு மரச் சட்ட்டகங்கள் ஆங்காங்கே கிடந்தன. பேகனைக் கைத்தாங்கலாக தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றினேன். கரையோரத்தில் அனாதையாகக் கிடந்த அவரது ஆடையை அணிவித்து மீண்டும் அவரின் ஓவியக்கூடத்திற்கு வாகனத்தைச் செலுத்தினேன். பேகன் அதுவரையில் இம்மியளவும் சுயநினைவாயில்லை. இரவு தீவிரமாக குடித்தும் ஆடியுமிருந்தார். பேகனின் உடல் பாரமற்றிருந்தது. ஒரு பலூனைப்போல மிதக்கின்றளவு பாரமில்லாமல். அந்த உடலின் எலும்புகளின் பாரத்திற்கும் தசைகளின் பாரத்திற்கும் அணுவளவும் பொருத்தமில்லாமல் பாரமற்றிருந்த உடலைக் காவியதில் எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.

 

(05)

 

பேகனை மீண்டும் சந்திக்கத் தோன்றவில்லை. அவரின் ஓவிய அறைக்குள் நுழைவதைவிட திரும்புவது சிரமாமாக இருந்தது. அந்த அறை மனித நிர்வாணத்தில் பெருங்கூடாகத் தெரிந்தது. அன்றைய இரவுக்குப் பின்னர் எனது நிர்வாணம் எனக்குள் பயத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. எல்லா மனிதர்களின் நிர்வாணமும் எனக்குள் வாழ்தல் பற்றிய அச்சத்தினை வலுப்படுத்த்திக்கொண்டே சென்றன. பேகனின் ஓவியங்களில் வாழ்வதற்கான கொச்சைக் காரணங்கள் கிடைக்கும். நேரமிருக்கும் போதெல்லாம் அவரின் கண்காட்சி கூடத்திற்குச் சென்றுவருவேன். கண்காட்சிக்கூடம் பல கண்ணாடிகள் பொருந்திய என்னுடைய குளியலறையைப்போல தோற்றமளிக்கும். எல்லா முகங்களும் உடல்களும் எனக்குரியதாகவும் அவற்றின் உணர்ச்சிகள் அனைத்தும் எனக்கேயானதாகவும் தோன்றும். நான் ஒவ்வொரு ஓவியமாகக் கூர்ந்து கவனிப்பேன். அது ஒரு மயக்கநிலை. மந்தமான போதையில் உருவங்கள் திரிந்து அங்கொன்றும் இங்கொன்றும் தனித்து அலைவதைப்போல ஓவியங்கள் முன்னோக்கியும் பின்னோக்கியும் ஆழமாகவும் மேலாகவும் மீனின் கண்களைப்போலவும் நீரின் தளம்பல் போலவும் ரத்தக்கறை போலவும் விதம் விதமாக தோன்றி மறையும். பெரும்பாலான ஓவியங்கள் அழுவதையே  கேட்டிருக்கிறேன். தன்னிலிருந்து வெட்டி அகற்றப்பட்ட பாகமொன்றிற்காக அவை வருத்தப்பட்டு அழுகின்றன. பேகனின் ஓவியங்கள் நிறைவுறுவதில்லை. அவை பார்க்க பார்க்க குறைந்துகொண்டே போய் ஒரு இரசம் பூசப்பட்ட கண்ணாடியாய் திரிந்து நிறைவுறும். கடைசியில் என் விம்பத்தை விரல்களின் நுனிகளால் உரசிப்பார்த்துவிட்டு திரும்புவேன். ஓவியம் நிறைவுறும் கணம் அது. அக்கணம் கண்ணாடிக்குள் இழுக்கப்பட்டு கரைந்துவிடுவதைப்போல உணர்வேன். என்னாலன்றி வேறு எவராலும் என்னை மீட்கமுடியாத நிலை வரும். அப்போது கண்காட்சிக்கூடத்தை விட்டு வலிந்து வெளியேறிவிடுவேன்.

 

(06)

 

நிறைபோதையில் பேகனின் அறைக்குள் நுழைந்த போது நான்கைந்து மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஆணொருத்தனின் முகத்தை வரைந்து முடிக்கும் நிலையிலிருந்தார். சிகரெட் புகையின் வாசமும் வண்ணக்கலவையின் நாற்றமும் புரைக்கேறும் அளவு தலைக்குளிறங்கியது. நாசித்துவாரங்கள் கரகரத்தன. ரத்தம் முழுக்க நாற்றம் பரவுவதை என்னால் சகிக்கமுடியவில்லை. உடல் குறுகுறுத்து தாடைகள் இறுகிக்கொண்டன. பேகன் தன்னிலை மறந்து வண்ணங்களைச் சேர்ப்பதில் தீவிரமாயிருந்தார். அருகில் அரைவாசி மீதமிருக்கின்ற மதுப்போத்தலும்  சிகரெட் துண்டுகளும் நிறைந்திருந்தன. பேகனின் பின்புறம் மட்டுமே தெரிந்தது. தலை முடி வியர்வையில் மினுங்கியது. மேற்சட்டையில்லை. உடல் வியர்த்துக் கண்ணாடியின் மேல் பனித்துகளிகள் வழிந்து ஓடுவதைப்போல் ஈரமாயிருந்து. அன்று பார்த்ததைவிட இரண்டுமடங்கு மரச்சட்டகங்களாலும்  ஓவியங்களாலும் அறை நிறைந்திருந்தது. அவை அன்றிருந்த மோசமான நிலையிலில்லை. உண்மையில் ஒழுங்காகவும் இல்லை. நாற்காலி ஒன்றையெடுத்து அவரிலிருந்து சற்றுத் தொலைவில் வைத்தேன். மேற்சட்டைப்பைக்குள்ளிருந்து சிகரட்டொன்றை எடுத்துப் புகைக்கத்தொடங்கினேன். நான் குடிக்கத்தொடங்கிய சில நாட்களில் புகைக்கவும் செய்தேன். பேகன் சிவப்பு நிற தூரிகையையெடுத்து அத்தனை நேரமும் கீறிக்கொண்டிருந்த ஓவியத்தின் இடப்பக்க மூலையில் எற்றினார். அதொரு கோபக்கார முதியவர் திடகாத்திரமான இளைஞனை தன் நடக்கும் பொல்லால் விளாசியது போலிருந்தது. எனக்கொருகணம் தலை விறைத்தது. ஓவியத்திலிருந்த முகத்தின் பாதி இரத்தத்தில் நனைந்தது.

 

சிகரெட்டொன்றைப் பற்றவைத்து மதுவும் ஒரு முரடு மென்றுவிட்டு மீண்டும் மெல்லிய கறுப்பு தூரிகையால் வரையத்தொடங்கினார். நிழலொன்றை அவதானிப்பதைப்போல அவரின் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றன்பின் ஒன்றாக பதினாறு சிகரெட்கள் தீர்ந்த பின்னர் பேகன் என்னை நோக்கித் திரும்பினார்.
காயமடைந்த பேகனின் முகத்தைப் பார்த்ததில் அதிர்ச்சியேதும் ஏற்படவில்லை. இடக்கண்ணில் பெரிய ரத்தக்கண்டல். முழி விகாரமடைந்திருந்தது. வாயோரம் சிறிய திட்டுப்போல சிவந்த காயம். அவர் ஓவியத்தில் இருந்தார். ஓவியமும் முகமும் ஒரே மனநிலையிலிருந்தன. நான் சிகரெட்டை கீழே போட்டு ” பேகன் என்னாயிற்று ” என்றேன்.
தன்னை கஷ்டப்படுத்தி செயற்கையாக சிரித்துக்கொண்டே ” கீறினேன் ” என்றார். நான் மௌனமாயிருந்தேன். அவரின் உடலிலிருந்து ஓயாமல் வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. அவரின் இடப்பக்க முகம் எந்தப் பாவனையும் செய்ய முடியாதளவு வீங்கியிருந்தது. அவர் முகத்தையும் உடலையும் பாவமாக வைத்துக்கொண்டு அடிவாங்கிய குட்டி நாயைப்போல தெரிந்தார். எனக்கு உண்மையில் அழுகை வந்தது. கண்களிரண்டும் முட்டி நின்றன. ” பேகன் உங்கள் முகத்திற்கு என்ன நடந்தது” என்றேன். வெளிப்படையாக சொல்லப்போனால் விம்மினேன்.

 

” மனிதர்கள் கறுப்பை விரும்பவும் வெள்ளையை வெறுக்கவும் செய்கிறார்களே. ஏன் ? ” என்றார்.
நான் எதுவும் பேசவில்லை, ஏன் கேள்வியைக்கூட சரியாக உள்வாங்கவில்லை. சிறிது நேரத்தில் ” கறுப்பில் எதுவும் கிடையாது; வெள்ளையில் எல்லாமிருக்கின்றன. மனிதர்கள் எதுவுமில்லாமற் போகவே விரும்புகிறார்கள்.” என்றார்.
மௌனம் ஒரு பாலைவனத்தைப்போல மிக வீரியமாகப் பரவியது. அந்த அறை வெறுமையில் தத்தளித்தது. நா வறண்டு என்னுடல் இயல்பாக வியர்க்கத்தொடங்கியது. மனிதர்கள் எதுவுமில்லாமற் போகவே விரும்புகிறார்கள் என்ற ஓசை காதுகளை மீண்டும் மீண்டும் அடைந்துகொண்டேயிருந்தன.  ஆயிரம் குண்டூசிகளின் முனைகளில் வார்த்தைகள் செருகி காதுப்பறையின் மேல் குத்திநின்றன. பேகன் எதுவுமில்லாற் போகத்தான் தன்னை வருத்திக்கொள்கிறார். ஓவியங்களை வரைகிறார். எரிகிறார். குடிக்கிறார். புகைக்கிறார். காயப்படுகிறார். நானும் அப்படித்தான். பேகனின் கண்களை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு கதிரையில் இருந்து எழுந்து நடந்தேன். மனிதர்கள் எதுவுமில்லாமற் போகத்தான் வாழ்கிறார்கள். ஹ்ம்! ஒன்றுமில்லாமற் போகத்தான்.