அடிவானில் விரியும் துயர்

மூப்படைந்த எமிலாக்கு நிறப்பூச்சிட்டது போல நின்றது காலை ஐந்து நாற்பத்தைந்து ரயில். முழுமையாக திறக்காத கண்களோடு தன் உடலினைப் பார்த்துக்கொண்டிருந்தது இயற்கை. தண்டவாளத்தோடு பிணைத்திருந்த தன்னை விடுதலை செய்யுமாறு சீறிச்சினந்தது ரயில். மழைக்கு வீட்டிற்குள் மறித்துவைக்கப்பட்ட சிறுவனின் நிலை அதற்கு. அதன் இயந்திர முகத்திலிருந்து உருவான மஞ்சள் ஒளிப்பாகில் தண்டவாளம் இரண்டு நீண்ட ஈட்டிகள் போல மினுங்கியது. இரவின் குளிர்ச்சியில் திரண்டிருந்த பனித்துகள்கள் ஒளிப்பாகோடு கரைந்து கோடி மின்மினிகளாய்ச்  சுருண்டன. தன்னைச்சுற்றி வெறுக்க முடியாத கிரீஸ் வாசனையை கமளித்துக்கொண்டிருந்தது அந்த ரயில். தென் திசைக்குச் செல்லும் ரயில்களுக்கிருக்கும் சனநெரிசலும் அதனால் பரவும் இரைச்சலும் காலை ஐந்து நாற்பத்தைந்து ரயிலுக்கிருப்பதில்லை. என்னைத்தவிர எல்லோரிலும் நீண்ட உறக்கத்தின் பின் கனிந்திருக்கும் அதிகாலையின் உற்சாகம் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரின் மௌனமும் ஒவ்வொரு சுதியிருந்தது. அதன் இரண்டாவது பெட்டிக்கு அருகில் நிற்கும் எனக்குள் ஈரமான நத்தை நிலத்தை இழுத்துகொண்டு ஊர்ந்தது. பிரயாணிகள் நாட்களை பைகளுக்குள் நிரப்பியிருந்தார்கள். உப்பியிருந்த பைகளின் மேல் தளுதளுப்பாக பயம் மூடியிருந்தது. இன்னும் சிலர் நீண்ட பிரிவொன்றிக்குரிய ஆயத்தங்களோடு தெரிந்தனர். எப்போதும் ரயிலுக்குள் பிரிவு நிறைந்திருக்கும். ஆனால் எல்லாப் பெட்டிகளிலும் பிரிவு மட்டுமே இருப்பதில்லை. துரதிஷ்டவசமாக அதில் என் பெட்டியுமொன்று. அதிகாலையின் மயக்கம் பிரிவிற்கான எல்லா சங்கீதங்களையும் போர்த்திக்கொண்டது. இந்நேர ரயிலுக்கு அவசரப்பட்டு ஏறுபவர்கள் மிகவும் குறைவு. என்னைக்கடந்து செல்பவர்களின் கறி ரொட்டியின் வாசம். அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு இப்படியான வாசமிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். தண்ணீருக்குள் விரல்கள் நெளிந்து அசைவதைப்போல மனிதர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். அதிகாலை ரயிலுக்கு அவசரப்படுபவர்கள் இருக்கமாட்டார்கள்.


உறக்கமில்லாத நீண்ட கொடிய இரவினைக் கடந்து துடித்துக்கொண்டிருக்கும் ரயிலினுள் மனித அசைவுகளைப் பார்க்கிறேன். ஆறு கிழமைகளில் பின் ஒட்டியிருந்த நிறத்தையும் மணத்தையும் வியர்வையையும் உரித்தெறிந்துவிட்டு இன்னொரு நகரத்திற்குப் பிரிந்து செல்வது இதயத்திற்குள் கணத்துக்கொண்டேயிருந்தது. தண்டவாளத்தோடு ரயில் உரசிக்கொள்ளும் சத்தம் உடலுக்குள் படிகமாய்த் திரண்டது. ஆயிரம் நுளம்புகளும் கரப்பான்களும் கறுத்த சிறிய கட்டமான மட்டத்தேள்களும் இன்னும் பெயர் அறியா பூச்சிகளும் நிறைந்த பெட்டிக்குள் வருடமொன்றைத் தொலைத்த நினைவு. பச்சை ஒளிவீசும் மின்மினியைக் கொன்று தாவர சாடிக்குள் புதைத்த நினைவு. காற்றே இல்லாத வெப்பத்தில் மிதக்கும் அறை அது. நகுலனும் தோமஸும் இன்னும் பலரும் தோன்றி மறைந்த பூச்சு. எப்போதும் திரும்பக்கூடாது என்று வெளியேறிய அதே அறையின் நினைவு இந்தப் பெட்டிக்குள். தன்னை உலுப்பிக்கொண்டு ரயில் நகர்ந்தது. ரயிலுக்கு யாருடைய உணர்வுகளைப் பற்றியும் கவலையில்லை, தன்னுடைய பாதையில் நகர்ந்துகொண்டிருந்தது. அசாதாரணமாக மூலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையொன்றிலிருந்து மெல்ல வெளித்த வானத்தைப் பார்த்தேன். காலம் எனக்கு முன்னே நீண்டது. இதிலிருந்து பின்னோக்கி பயணிப்பது வீட்டிற்குள்ளிருந்த என்னை பலத்த விசையோடு இழுத்து வெளியேகொண்டுபோவதாக உணர்த்தியது. இருப்புக்கொள்ளாத கட்டிலும் செந்தரையும் வாழைக்குலைகளும் டொமியும் வீட்டின் பெரு அசைவுகள். முற்றத்திலிருக்கும் சாய்வுமனை துளசியில்லாத மாடம் திணை. அண்டைப்புழுக்கம். கோலத்திலிருந்த அரிசியொன்றை காற்று பெயர்த்தெடுத்துக் கொண்டுபோகிறது. வீட்டிலிருந்து வெகு தூரத்துக்குச் செல்லும் இந்த ரயில் புறப்பட்டவுடனேயே மனிதர்கள் எப்படி நிம்மதியாகத் தூங்கிவிடுகிறார்கள். அவர்களின் முகங்களில் பிரிவுக்கான எந்தச் சலனமுமில்லை. தூரத்தில் என் நிலத்திற்குள் புதையும் நிலவையும் எதிரே தோன்றும் செந்சூரியனையும் பார்க்கும் பயத்திலிருக்கிறேன். நிலவின் நிரம்பாத குழிகளுக்குள் என் நினைவுகளை புதைத்து வைத்திருக்கிறேன். வெள்ளி உடுக்கூட்டத்திற்குள் எட்டு ரகசியங்களை அலையவிட்டிருக்கிறேன். இப்போது மறையும் நிலவு இன்னொரு முறை வானில் தோன்றத்தான் செய்யும். அந்த உடுக்கூட்டம் கூட. ஆனால் அப்போது நான் இன்னொரு நிலத்தில் இன்னொரு மணத்தில் இருப்பேன். சரிந்துகொண்டிருக்கும் நெற்கதிர்களை பார்த்தபடி,

ஆமாம்.

இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி.   

– பிரமிள்
எழுத்து, டிசம்பர் 1961.

கறிமிளகாயும் சுருக்குப்பையும்

எட்வார்ட் லாவா மீதிருந்த பயத்தில் தியோ வாக்னர் என்று ஆல்ஃபிரட் பென்ட்டிங் தன் பெயரை மாற்றிச்சொன்னது போலல்ல இப்போது என்நிலை. தோமஸ் இன்னமும் உயிரோடிருக்கிறாரா என்று கேட்ட நண்பரிடம், தட்டுத் தடுமாறி ஓம் என் ஞாபக அடுக்குகளில் உயிரோடுதானிருக்கிறார் என்ற போது ஞாபகங்களையும் நியத்தையும் புனைவையும் பிரித்தறியமுடியாது தவித்தேன். பெருநாவலைப்போல உலகம் விரிவதை மெல்லிய கண்ணாடியிலான யன்னலூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். புனைவின் உருக்களை நியத்திலும் நிய உருக்களை புனைவிலும் கோர்க்கிறேன். அதனை சுயநினைவோடு தான் செய்துகொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லிச்சிரித்தாலும் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு சுயநினைவுகளைப் பற்றியும் சந்தேகமாயிருக்கிறது. உங்களை நண்பர்களே என்று விளிக்கலாம் என்று தோன்றுகிறது, நீங்கள் கோபப்படாமலிருந்தீர்களானால் மட்டும்.

நண்பர்களே,
நான் சந்தேகமாக உங்களைப் பார்க்கிறேன் என்றாலோ அல்லது உங்களையறியாமல் வசியம் செய்து ஞாபகங்களைத் திருடப்போகிறேன் என்றாலோ அல்லது உங்களை உளவு பார்க்கப்போகிறேன் என்றாலோ என் பெயரை நிச்சயமாக தியோ வாக்னர் என்று சொல்லியிருப்பேன். நான் அப்படி செய்யப்போவதில்லை. ஆனால் இங்கு தியோ வாக்னர்கள் மலிந்துபோயிருக்கிறார்கள். ஒரு கிலோ கறிமிளகாயின் விலையை விட அதிகமாக.
மேற்பனி மூடிய ஒத்ரிஸ் மலைகளின் அடிவாரத்தில் சிறு தீ மூட்டப்பட்டு, உறை நதிகளான மௌரிசும் தீக்குவானும் இணையும் முக்கோண நிலத்தின் மேலுறையும் கிரேக்க அரசர் பிரைம் மற்றும் அரசி ஹெகியூபாவின் மகனான பிரிஸ் தன் நீண்ட கீழ்வானம் போன்று வளைந்த வாளால் உறைநீரைக் கீறி உருவான தவாளிப்பின் வழி தன் கனவுலகத்திற்குள் நுழைந்தான். அன்றிலிருந்து இனி எல்லாக்காலமும் அந்நீர் உறைந்துபோயிருக்கும் என்று பகற்கனவில் அவனறிந்தான். உறை நீர் வளமான மண்ணைவிட அதிக பயன்மிக்கதாயிருந்தது. இதமான பளிங்கு மாளிகைகளையும் நீர்த்தவர தோட்டங்களையும் உருவாக்கினான். ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் போன்று அவன் எல்லைகளாலும் ராச்சியங்களாலும் அவஸ்தைப்படவில்லை. நண்பர்களே, பிரிஸின் வாழ்நிலத்தை ஒத்தது என் உலகம். வாழக்கையின் எல்லாக்கணமும் எடையான அடையாளங்களைச் சுமந்துகொண்டே அலைந்துதிரிகிறேன். என் பெயர் உட்பட. அணில் என்றவுடன் பழம் கொறிக்கும் என்பது போல.
தகிக்கும் பாலை நிலத்தின் மீது தேன் துளியொன்று விதைக்கப்படுகிறது. அது சூல்கொள்கிறது. ஹ்ம், இதையெல்லாம் நீங்கள் கேட்கவா போகிறீர்கள். பாருங்கள் சுருக்-குப்பை யோடு தியோ வாக்னர்கள். தூண்டிற் புழுப்போட்டு மீன் பிடித்து நிரப்பி வைத்திருக்கிறார்கள். கடைக்குள் ஆக்கள். தியோ வாக்னர்களும் இருக்கிறார்கள். தூண்டிற் புழுக்களை வாங்க. பிறகேன் மீக்காயீல். என் காதுகளுக்குள் கனவுகளை ஓதுபவன் என்றால் நம்பவா போகிறீர்கள்.
நன்றி நண்பர்களே.
49519665_2731822807042716_1206915454040276992_o

இருதிணை – ஆழ்கடல் மரபு – அனார் மீக்காயீல் பிரதிகள்

யாத்திரிகன் ஷீத் – மீக்காயீல் – மற்றும் மூன்று சிறுவர்கள் – மீக்காயீல் பிரதி – புறத்திணை

நீல இமைகளைக் கொண்ட ஷீத் தன் விரல்களால் உவர்நீரினை மேவி லைட்கற்களை அள்ள எத்தனித்தான். அவன் உள்ளங்கைகளிரண்டிலுமிருந்து அவிழ்ந்த ரேகைகள் நீண்ட கடற்பாம்புகளைப்போல கடலுக்குளிறங்கின. அவனுடைய கைப்பிடிக்குள் அடைய மறுத்த லைட்கற்கள் வெண்ணுரைக்குள் நழுவி மறைந்துபோயின. இன்னொரு அலைக்கான மீச்சிறு இடைவெளியில் அவை இறந்து பிறந்தன. பௌர்ணமி கடந்த அடுத்த இரவில் நிலவின் வருகை தாமதித்திருந்தது. பருவமழை தொடங்கி எட்டாமிரவு ஷீத்தும் மீக்காயீலும் கடற்கரைக்கு வந்திருக்கின்றனர். ஏழடுக்கு ஆகாயத்தின் பிரதிநிதி நட்சத்திரங்கள் எல்லாமும் அவளின் வருகைக்காக பட்டயங்கட்டி மணம் முடிக்க காத்திருக்கின்றன. காத்திருப்பில் தம் ஒளியிழந்து உதிர்ந்து கடலுக்குள் கலந்த நட்சத்திரங்கள் தான் லைட்கற்கள் என்றான் ஷீத். ஆயிரமாண்டுகளாய் இசைக்கும் நதிகளின் ஓட்டத்தில் கலந்த பளிங்குக் கற்கள் – காலத்தின் அசைவில் தன் ஆகிருதியிழந்து – உருண்டு -தேய்ந்து -அருவமாகி கடற்பரப்பில் உறைகின்றன. ஷீத் காலத்தின் எச்சத்தைத் திரட்டி பளிங்குக் கிண்ணமொன்று வனைந்தான். பின்னொரு காலத்தில் மீக்காயீல் அண்டத்தின் எல்லா நட்சத்திரங்களையும் அடைக்கபோகும் கிண்ணமிதுவென்பதையும் ஷீத் அறியாமலில்லை. பெண்ணுருக்கொண்ட கிண்ணத்தை வனைந்துமுடித்த கணம் ஆகாயத்தில் முதற்சாம நிலா தோன்றிற்று. ஷீத்தின் இரு கண்களும் அந்நிலவொளியில் ஒளிர்ந்ததை மீக்காயீல் அருகில் நின்று அவதானித்தான். நிலவின் ஒளி ஷீத்தின் கண்களிருந்து பெறப்பட்டதாகவே அவன் நம்புகிறான். அவளின் வருகையின் பின்னருங்கூட நட்சத்திரங்களின் உதிர்வு நின்றபாடில்லை. அவை நிலவினால் நிராகரிக்கப்பட்டவை. தாம் வானத்திலிருக்க தகுதியற்றவை என்று கடலுக்குள் உதிர்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன. அலைகளில் மிதந்து கரையில் புதைந்து ஒளியை இழக்கின்றன. ஷீத் கரையிலிருந்து அவற்றை அள்ளி மீண்டும் ஆகாயத்திற்கு தெளிக்கவே விரும்புகிறான். பளிங்குக்கிண்ணமும் அதற்குத்தான்.

 

இரண்டாம் சாமம் நெருங்கிற்று. நட்சத்திரங்களின் உதிர்வும் முற்றாக அற்றுப்போனது. ஷீத் கிண்ணம் நிறைந்த லைட்கற்களுடன் என்னைப் பார்த்தான். அவை சதைப்பற்றான நத்தைகளாகிக் கிடந்தன. உவர்நீரை உறிஞ்சி தம்முடலை பொன்னிறமாய் ஒளிர்த்துக்கொண்டு ஒன்றன்மீது ஒன்று அழுத்தி அணைத்தபடி ஊர்ந்தன. பொன்னொளியில் கிறங்கிப்போயிருந்த மீக்காயீல் தனது இரண்டு இறக்கைகளையும் அகல விரித்தான். ஒரு பெரும் புயலின் ஆக்ரோஷத்தோடு உலகளவு பரந்த அவ்விறக்கைகள் இரண்டும் காற்றில் நிலைத்து நின்றன. மீக்காயீலின் ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வானத்தின் நிறம் மாறியது. ஷீத் தன் விரல்களால் மலரிதழொன்றை அவிழ்ப்பதைப்போல அப்பெரிய இறக்கைகளிலிருந்து இறகுகள் இரண்டினை கொய்தெடுத்தான். அவற்றை அப்பெண்ணுருவ பளிங்குக் கிண்ணத்தின் வாளிப்பான முதுகினில் வருட கிண்ணம் உயிர்பெற்றது. ஷீத்தின் கைகளிலிருந்து நழுவி அப்பெண் பாலி என்ற பெயர்பெற்று வானத்தை நோக்கி ஆர்ப்பரித்தவாறு பறந்தாள். பின்னாளில் பாலியே நட்சத்திரங்களின் அரசியுமானாள்.

 

பார்வைக்கெட்டுந் தூரத்தில் கடல் நடுவே ஒளிக்குளத்தை உருவாக்கிற்று நிலா. வட்டமான ஒளிக்குளம் தெப்பம் ஒன்றினைப்போல அசைந்துகொண்டிருந்தது. ஷீத் அதைக் கடலின் இதயம் என்றான். கடலின் நடுவே பாற்குடம் நிரம்பியிருப்பதைப்போலவும் மீக்காயீலுக்கு விளங்கியது. அவ்வொளிக்குளத்திற்குள் பெருங்கடலின் நீரனைத்தும் ஒடுங்கிச் சேர்ந்தன. கடல் உள்வாங்கிற்று. எல்லையற்ற பெருவிரிப்பைப் போன்ற கடல் கசங்கி ஒளிக்குளத்திற்குள் படிந்து கொண்டிருக்க கிராமத்துச் சிறுவர்கள் மூவர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் லைட்கற்களை பொறுக்கிச் சேர்க்க நேர்த்தியாக சீவப்பட்ட அரைத்தேங்காயோடு வைத்திருந்தார்கள். அவர்களின் மெல்லிய விரல்களால் நுரைத்தொதுங்கும் சிறிய அலைகளைத் துழாவி ஏமாற்றமடைந்தனர். ஈரமண்ணைத்தவிர அவர்களால் வேறொன்றையும் எடுக்கமுடியாமற் போக ஷீத்தின் முன் வந்துநின்றார்கள். மீக்காயீல் அச்சிறுவர்களின் இயலாமையால் நரைத்துப்போன அவர்களின் இமைகளைப் பார்க்கிறான். கிராமத்துக் கிணறுகள் முழுதும் அவர்கள் சேர்த்துவைத்த லைட்கற்களின் ஒளி – இனி மங்கிக்கொண்டு போகப்போவதையிட்டு அவர்கள் வருந்தி நின்றார்கள். ஒவ்வொரு இரண்டாஞ் சாமமும் அவர்கள் சிரட்டை நிறைய லைட்கற்களைச் சேர்த்து ஊர்க்கிணறுகள் நெடுக ஒவ்வொன்றாய்த் தூவி ஒளி பொருத்தி வந்தார்கள். அவ்வொளியிற்தான் கிராமத்துப் பெண்கள் அனைவரினதும் நகங்களும் மின்னுவதாயும் ஆண்களின் இமைகள் நிறமடைவதாயும் அச்சிறுவர்கள் நம்பினார்கள். ஷீத்தும் மீக்காயீலும் அவர்களின் நம்பிக்கையை பாழாக்க விரும்பவில்லை. உண்மையில் அம்மூவரின் இமைகளைத் தவிர இருட்டில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளாய் கிராமத்து ஆண்களின் இமைகளும் மின்மினிகளாய் பெண்களின் நகங்களும் பெருவெளியில் அசைந்துகொண்டிருந்தன. மூவரில் இளையவனான சிறுவன் மீக்காயீலைப் பார்த்து கண்களைக் கசக்கினான். தன் தங்கையின் மினுமினுப்பான விரல் நகங்களை இனி எப்போதும் பார்க்கவே முடியாது என்று நம்பி அழத்தொடங்கினான். அவன் கண்ணீர்த்துளிகள் அலைகளின் மேல் விழுந்து – ஒளி பெற்று – மீன்களாய்ப் பாடிக்கொண்டே ஒளிக்குளத்திற்குள் விரைந்தன. அவை ஷீத் அனுப்பிய செய்திகளை உடலிற்சுமந்து சென்றன. சிறுவர்கள் கவலையை மறந்து பாடிக்கொண்டு விரையும் கண்ணீர்மீன்களை பார்த்துகொண்டிருந்தார்கள். அழுதுகொண்டிருந்த சிறுவன் அலைக்குள் பாய்ந்து அம்மீன் ஒன்றினை பிடிக்க எத்தணித்து முகம் முழுக்க மணற்துமிக்கைகளோடு எழுந்தான். அவனது முகம் நட்சத்திர மீனொன்றைப்போல விகாரமாய்த் தெரிய ஷீத் பொத்தென்று சிரித்தான். ஷீத்தின் சிரிப்பில் வானில் நின்ற நிலா பவளப்பற்களை காட்டிச் சிரிக்க, ஒளிக்குளம் கலைந்தது. படிகமாயிருந்த ஒளிக்குழம்புகள் ஒரு ஊற்றாய் கரைக்கு படையெடுத்தன. வெள்ளி நதியொன்றினைப்போல அவை வளைந்து நெளிந்து எம்மை நோக்கி வந்தன. அவை லைட்கற்களாய் நிரம்பிப் பெருகின.

 

யாத்திரிகன் ஷீத் – நீல இமைகள் ஒளிர்ந்தபடி பார்த்துக்கொண்டிருக்க சிறுவர்கள் சிரட்டைக்குள் லைட்கற்களை நிரப்பினர். அலைகளால் நிரப்ப முடியாத பெலத்த காற்தடயங்கள் ஆறு மணற்பரப்பில் பதிய கிணறுகளை நிரப்பும் ஆசையுடன் சிறுவர்கள் கிராமத்திற்குள் நடந்தார்கள். உவர் காற்று மெல்லிய இழையாய்ப் பிணைய மீக்காயீல் ஷீத்தின் இடது உள்ளங்கையை பற்றினான். ஒளிக்குளம் முழுதாய் கரைந்துபோனது. கடைச்சிறுவன் தன் தங்கையின் விரல்கள் அழகின் ஒளியாய் மினுங்கப்போவதை எண்ணி பாடிக்கொண்டே நடந்தான்.

 

பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னி – அனார் பிரதி – அகத்திணை

கடற்கன்னி பாடுவதை   யார் கேட்டிருக்கிறீர்கள்  அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல் இருகரைகளில் எதிரொலித்து துறைமுகங்களைத் தாண்டி விழுவதை அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி மதுநெடியுடன் பிதற்றுகிறான்

கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன கரைமணலில் சிறுமிகளின்  மடிகொள்ளாத வெண்சிப்பிகளாக

நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில் மாலுமிகளின் தனியறைகளில் கடற்கன்னியின் வாசனை வியாபித்து  திரைச்சீலைகள் படபடக்கின்றன

அவளின் நீண்டு நெளியும் வால் வசீகரிப்பினை
படர்பாசிகளின் கீழிருந்து வெளிவரும்  மீன்குஞ்சுப் பட்டாளங்கள்  பிரயாசையுடன் பின்தொடர்கின்றன

அடர்த்தியான பச்சைநிற பளபளக்கும் செதில்கள் நீர் அல்லிகளின் வேர்களைப் பின்னி பௌர்ணமியில் இன்னுமதிகமாய் ஜொலிக்கின்றன


கற்படுக்கைகளிடையே சுழியோடிகள் அவளது கண்களின் கவிதைகளைக் கண்டெடுத்து  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு  எடுத்துச் செல்கின்றார்கள் நள்ளிரவில் கடற்கன்னி மேகங்களை வேட்டையாடுகிறாள் அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே பதுக்கி வைத்து ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்

சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்துகொண்டு நீருக்குள் நழுவும் அற்புதத்தை தாம்மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற கருங்கற்பாறைகள்தம்மை அறியாமலேயே  உருகிக்கொண்டிருக்கின்றன

உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது


மின்னல்கள் கூக்குரலிட்டுக் கூவிவெடிப்பதெல்லாம் கடற்கன்னியின் பெயரைத்தான் என மலைவாசிகள் நம்புகின்றார்கள்


புராதனகால கடல் அரக்கனின் தந்திரோபாயங்களை தோற்கடித்தபடியே பருவகாலங்களை அருளும் கடற்கன்னி ஒவ்வொரு கடலினிலும்  நீந்திக் கொண்டே இருக்கிறாள் பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடிப்பாடி

மீக்காயீலின் மாதுளை நிலம்

மீக்காயீல் பிறந்தான். மென்னீலமும் பொன்னிறமுமாய் அந்நிலம் விரிந்திருந்தது. பிறப்பின் பூமியென்று நெடுங்காலமாய் நம்பப்பட்டுவந்த நிலத்திலிருந்து அந்நிலம் வெகு தொலைவிருந்தது. நத்தையுடலின் மேல் மிதக்கும் கோளநிலத்தின் சாயல். அன்பின் நிலமெல்லாம் கோளந்தான். மலைகளைப்போல் பரந்தும் நீண்டும் வளர்ந்துநிற்கின்ற மரங்கள். காற்றில் வலிமையாய் சிறகுவிரித்து நிற்கும் பருந்தினைப்போல அந்நிலம் தரையுமில்லை; அந்தரமுமில்லை. அங்கு இசையுமில்லை, மணமுமில்லை. பருவங்கள் நிறங்களாய்த் தோன்றி அவ்வெளியின் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்தன. நிறங்கள் ஒவ்வொன்றும் பருவங்கள். இது மழையும் பனியும் நிறை கூதல் பருவத்தின் இறுதிக்கணங்கள். பளிங்காற்றின் நடுவில் கோலொன்று ஆச்சரியமாய் நிற்கிறது. நிலையில்லாமல் அசைந்துருகும் நீர்த் திவலைகள் அதனடியில் மோதித் தெறிக்க அக்கோலின் மேல் பொருந்திநிற்கும் என்தலை வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. பேரலைகளைப் போல வானத்து நட்சத்திரங்கள் இரைவதை உணர்ந்தேன். அது சீற்றமில்லை. கொந்தளிப்புமில்லை. ஒரு பருவத்தின் முடிவிற்கும்  இன்னொரு பருவத்தின் தொடக்கத்திற்கும் இடையிலான காலத்தில் மட்டும் இரையும் இந்நட்சத்திரங்கள் என் தலையின்மேல் இரைந்துகொண்டிருந்தது பிறப்பொன்றின் அறிகுறி. பெருமழையொன்றின் வெள்ளத்தில் பூமியிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட என் தலை காலக்கோலின் உச்சியில் பிணைந்திருப்பது பிறப்பொன்றினை அறியத்தான். ஆற்றிலிருந்து தவறி நட்சத்திரங்களை நோக்கி நகரும் நீர்த்துமிகள் இடையிலேயே உறைந்து பனியாகின்றன. ஈற்றில் தொலைந்து போனதென நம்பப்படுகின்றவை நட்சத்திரங்களாகின்றன. அந்நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் தேவதைகளின் உறைவிடங்களாயின. அவை தேவதைகளின் பரபரப்பினால் இரைகின்றன. பிறப்பின் பரபரப்பு யாரைத்தான் விட்டுவைத்தது. அவர்கள் நட்சத்திரங்களிலிருந்து அக்கோலை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் பளபளக்கும் பச்சிலைகள் நிறைந்திருந்தன. பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.