போருக்குப் பின்னரான சில சிறுகதைப்பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும் – 1

போர் மனிதர்கள் காணாத, உணராத ஒன்றல்ல. போர்களையும் அதன் கொடூரங்களையும் அழிவுகளையும் வரலாறு நெடுக மனித இனம் கண்டுகொண்டே வந்திருக்கிறது. போருக்கான சூழல், அதன் பின்னர் மூளும் மனிதர்களின் அரசாங்கங்களின் சுயநலம், தவறான வழிநடத்தல்கள், துரோகங்கள், தோல்விகள், இழப்புகள், மரணங்கள், கண்ணீர், அத்துமீறல்கள், போரில் வெற்றி, அகதிகள், ஊனமுறவர்கள், அனாதையாக்கப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள், காணமல் போனவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், பண்பாட்டு அழிவு, வடுக்கள், ஏளனங்கள், உள்ளூர மூண்டு எழும் கோபம், ஞாபகங்களில் இருந்து அகற்றிவிடமுடியாமல் கீறலாகிப்போன நாட்கள், மீண்டும் போருக்கான சூழல். போர் எப்போதும் முடிவடைவதில்லை. போருக்கு தொடக்கம் நடுவு முடிவு என்று ஏதுமில்லை. ஒரு நிலத்தில் என்றைக்கேனும் ஒரு நாள் போருக்கான முதல் ரத்தம் விதைக்கப்படுகிறோ அன்றிலிருந்து காலம் சூன்யமாகிவிடுகிறது. எதிர்காலம் என்ற ஒன்று அந்நிலத்திலிருந்து கண்காணாத தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆச்சரியமாக போர் யார் பக்கமும் சாய்ந்திருப்பதில்லை. அதற்கென்று மொழியோ இனமோ இருப்பதில்லை. அவற்றுக்குத் தேவையானவை தோல்விகளும் மனித உடல்களும் தான். போருக்குப் பின்னர் என்பது மாயை. அது என்றைக்கும் வரையறுக்கமுடியாத ஒன்று. காண்பியலுக்கு போருக்கு பின் என்பது காலத்தை வரையறைசெய்துகொள்ள ஏதுவாயிருந்தாலும், இக்கட்டுரையில் போருக்குப் பின்னர் என்பது மிகச்சரியாக மே 19, 2009 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன மதிய நேரச் செய்திகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட போது பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த எனது அம்மா அச்செய்தியைக் கண்டு சுவரோடு சாய்ந்து தன் தலையில் மேல் கை வைத்ததோடு தொடங்குகிறது.

கட்டுரைக்கான உடல் ஒன்றினைத் தெரிவு செய்வதன் மூலம் வாசிப்புகளையும் புரிதல்களையும் ஒழுங்கமைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். போருக்குப் பின்னரான சிறுகதைகளின் களங்கள் இருவேறு நிலங்களில் உயிர்கொள்கிறது. ஒன்று போர் நிலம் மற்றையது போர் நிலத்திற்கு அண்டைய நிலம். போர் நிலமென்பது விடுதலைக்காக ஆயுதங்களைத் தூக்கி மனித உயிர்களைப் பணயம் வைத்து நின்ற நிலம். அதே போன்று ஆயுதம் தாங்கிய போர் நடக்கும் நிலத்தைச் சுற்றி போரின் மௌன ஓலம் வெடித்துப் பரந்த நிலங்கள் அனைத்தும் போருக்கு அண்டைய நிலங்கள். அவை தூரங்களால் அல்ல துயரங்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன. நிலம் போரின் முக்கிய பொறி. மனிதர்கள் நிலங்களின் மேல் கொண்டிருக்கும் நித்தியமான உறவும் ஆதரவும் போரில் பகடையாக உருட்டப்படுகிறது. பரந்தனில் எழுநூறு கோழிக்கால் குறியிட்ட மாடுகளுடன் தொடங்கி செல் அடிக்கு திக்கெது திசையேது என்றறியாமல் இறுதியில் மீள் குடியேற்றத்தில் பிடித்த ஒரு கோமதியும் தொலைத்த அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது மற்றைய கோமதிகளும் தன் நிலத்தின் மீது யதார்த்தன் பிடித்து நிற்கும் துண்டுக் கண்ணாடி. சுருவில் மக்கள் சட்டி பானைகளோடு தேவாலயத்திற்கு கிளம்பும் போது கப்டன் பொன்ராசா தன் நிலத்திலிருந்து வர முடியாமல் சுருள்வதும் பாழங்கிணத்திற்குள் வருடக்கணக்கில் பாசிகளையும் தவளைகளையும் நுண்ணங்கிகளையும் போல உயிர்ப்புடனிருக்கும் பெயர் தெரியாத ஊரிப்புல குடிமகனும் சோபா சக்தியின் நில அச்சாணியில் உருளும் துயரங்கள். பிண முற்றிப்போன இறுதிக்காடுகளை அவர்கள் கடந்து என் நிலத்தின் தரப்பாள்களுக்குள் திணிக்கப்படும் போது அவர்களின் உயிரைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் அந்நிலத்திற்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் புதைவிட்டு வந்தார்கள். போரின் நிலம் உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் சுடுகாடாய்ப்போனது. தமிழினிக்கு தன்னிலத்தில் கந்தக வாசத்தோடும் ரத்த வாடையோடும் பச்சிலைகளின் கருகல் வாசனையும் சேர்ந்து துயரத்தைத் தருகிறது. அது புனைவால் போரை நிகழ்த்தும் எவராலும் உணரமுடியாத வலி. களமுனையில் தன் நண்பி சங்கவியோடு மரத்தின் கீழிருந்து பேசிக்கொண்டிருக்கும் தமிழினியின் மனதில் போரைப்பற்றிய பயமில்லை. ஆனால் எதிர்காலத்தைப்பற்றிய நிச்சயமின்மையும் இழப்புகளைப்பற்றிய கவலையும் நீண்டிருந்தது. அது அவளின் கண்களுக்குள் திரண்டு மரணத்தின் வாசனையாய் நிலமெங்கும் படர்கிறது. புத்தர் அவன் மகளிடம் மரணமில்லாத வீடொன்றிலிருந்து ஒரு பிடிக் கடுகு வாங்கிவா என்றபோது எல்லா வீட்டிலும் மரணமிருந்ததைபோல எந்த வீட்டிலும் கடுகிருக்கவில்லை என்ற உண்மையும் எமக்குள் உறைக்கிறது. இழப்பு போரின் நிலத்திலிருந்து முகாம்களை நோக்கி தன் புளுத்துப்போன வாயைத் திறக்கிறது.

யதார்த்தனின் முகாம்கள் முக்கியமான அமைப்பு. போர்நிலத் தொடர்ச்சி. ஆனால் அவை உரிய மண்ணால் செதுக்கப்பட்ட சிற்பங்களா என்றால், இல்லை என்று தான் நம்புகிறேன். ஆனால் இக்கட்டுரைக்கு சிற்பங்களை விட மண்ணால் செய்யப்படுகின்றன என்பது முக்கியமாகத் தெரிகிறது. இது யதார்த்தனுக்கு மட்டுமல்ல பலருக்கும் பொருந்தும். சைவே என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்பட்ட பிரியங்கா, அப் பெயரையும் நிறத்தையும் பூச மரணமொன்றே காரணாமாயிருக்கிறது. மனிதர்களின் பெயர்களையும் மன அமைப்புகளையும் சமூக அமைப்புகளை இலக்கிய உடல்களையும் மரணங்கள் உருமாற்றியிருக்கிறன. மரணங்களும் இழப்புகளும் சிறுகதைப் போக்குகளை மாற்றுவதில் முக்கியமானதாயிருக்கின்றன. எங்களுக்கான வாழ்க்கையைப் பற்றிய அறமும், அநித்தியம் பற்றிய உண்மைகளும் மரணங்களின் மூலமே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலத்தின் புனைவு மொழி இறந்த உடல்களுக்குள் மௌனமாய் உறைந்துபோன கனவுகளின் மொழி. முன்னர் விஸ்பர் வாங்குவதைக் கூட தயக்கமாகக் கூறும் பிரியங்கா, பின்னர் வெகு லாவகமாக பெரிய மோட்டார் சைக்கிளில் ஏறி உலகத்தின் முன்னால் தன்னை திறந்து கொள்வது வரை போர் மனிதர்களை வெளிப்படையாக்கியிருக்கிறது. இந்த வெளிப்படைத்தன்மை – அவர்களின் அரசியலிலும் தென்படுகிறது. பசித்த வயிற்றுடன் சுத்தமாக்கப்பட்ட வீரை மரத்தின் கீழிருந்து என்றைக்கும் திரும்ப முடியாத தம் இழந்து போன வாழ்க்கையைப் பற்றி அந்தச் சிறுவனின் குடும்பமும் – அதே மரத்தின் கீழ் முன்னொரு மழைக்கால இரவில் கறுத்த வானத்தை நோக்கி ஒளிர்ந்துகொண்டிருந்த விழிகளுடன் விடுதலைக்கான ஆசையோடு தன் மூச்சை நிறுத்தியிருந்த தமிழினியின் தோழியும் – பல்லாயிரம் சிறுவர்களும் குடும்பங்களும் சங்கவிகளும் சாக்காட்டின் ஒவ்வொரு நிழலும் நிலைத்து நிற்கிறார்கள். வானம் அவர்களின் தோல்விகளால் இருண்டிருக்கிறது. புனைவுகளையும் சிறுகதைகளையும் தவிர எந்த விசாரணையும் அவர்களின் காயங்களுக்கு பதில் சொல்லப்போவதில்லை. முகாம்கள் மனித அவலத்தின் ஒட்டுமொத்தப் புகைப்படம். அன்று யூதர்களின் உடல்கள் கருக்கப்பட்டு எழுந்த புகைக்கூடத்தின் மணத்தையும் மினிக் பாம்கள் எங்கும் எழுந்த மனிதர்களின் மணத்தையும் எந்த வித்தியாசமின்றிப் பார்க்கிறேன். மரணங்களின் மணமும் போரில் தோற்றவர்களின் மணமும் வேறு வேறல்ல.

புலம்பெயர்வு என்றைக்கும் திரும்பமுடியாத வாழ்க்கை நிலைமை எமக்குத் தந்திருக்கிறது. இந்நிலம் புலம்பெயர்வுகளுக்காக சபிக்கப்பட்டிருக்கிறது. நிலத்திலிருந்து மனிதர்கள் பிரியும் போது அந்நிலம் தன் பிடிகளை இழக்கிறது. ஒவ்வொரு மனிதரும் நிலத்தை விட்டுப்பிரியும் போது தம்மோடு நிலத்தின் ஒரு துண்டத்தை பெயர்த்துக்கொண்டு கிளம்புகிறார்கள். இன்று அவர்களின் மூன்றாம் சந்ததியும் உருவாகிவிட்டது. ஆனால் என்றைக்குமான அவர்களின் நிலம் பெயர்த்தெடுத்துப்போன அத்துண்டு நிலமாகவேயிருக்கிறது. அவர்களின் கதைகளில், பயணங்களில் அந்நிலம் ஒவ்வொன்றாக உருப்பெறுகிறது. அவை களிமண்ணைப்போல ஒவ்வொரு வடிவங்களில் ஒவ்வொரு நிறங்களில் தம்மை உருமாற்றி உருமாற்றிக்காட்டிக்கொண்டிருகின்றன. வேற்றுநிலத்தின் ஆற்றுப்படுக்கைகளிலும் மலைகளிலும் தன்னிலத்தை விரித்து சாய்ந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களின் விருப்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விரும்பி ஏற்காத வாழ்க்கைக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் பலர் இறுதி முனையிலும் முகாம்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிளுமிருக்க தனித்திருந்து உழலும் அவர்களின் மனநிலையும், போருக்குப்பின்னர் வருவதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டும் வரமுடியாமல் உழலும் மனிதர்களையும் கதைகள் நெடுக காணக்கூடியதாயிருக்கிறது. போர் அவர்களை இன்னொரு வழியில் சிறைபிடித்திருக்கிறது. தருமலிங்கமும் அசோகமலரும் இந்தியாவில் தனித்திருக்கும் இனிய காலம் இன்னமும் எத்தனையோ பேருக்கு வாய்க்காதது. சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் இந்நாட்டில் இருக்கும் சுதந்திரம் புலம் பெயர் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. சோபா சக்தி போரின் கதைகளை அரசியல் பிரசுரமாக்குகிறார். அவர் காட்டும் சாமான்ய மனிதர்களின் அலைக்கழிப்பைத் தவிர வேறு எந்தத்தரப்பையும் அணுகுவது எனக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு கதை சொல்லியென்ற அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளத்தையும் ஏற்படுத்துமளவிற்கு எனக்கு அவரின் சிறுகதைகளில் உண்மையை உணர முடியாதுள்ளது. புனைவுகளுக்கு உண்மை அவசியமில்லை என்றாலும் போர்ப் புனைவுகளில் உண்மை அற்றுப்போகும் போது போர் சந்தையாக்கப்படுகிறது. இங்கு உண்மை என்பது பொது மொழியில் பொய்க்கு எதிரானது. புனைவு மொழியில் உண்மைக்கு நிகரானது. இருந்தும் சோபா சக்தியின் சாதாரண மனிதர்களை மதிக்கிறேன். வேலும் மயிலும் பமுவும் அப்பாவிகளாக போர்நிலத்தில் பலியிடப்படும் போது இரண்டு தரப்பினரும் கொண்டாடுகின்றனர் . போரை அப்பாவி மனிதர்களின் இழப்பாக இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அவரின் பெரும்பாலான கதைகளில் போரோடு துரோகமும் கலந்துகொள்கிறது. “தமிழனை தமிழனே இப்படி செய்யக்கூடாது” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

பொன்ராசாவின் கதைக்கருக்கு ஏறக்குறைய ஒத்த கதையை புனைகிறார் கபில். கபிலோடு தர்மு பிரசாத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டியிருக்கிறது. சோபா சக்தி, கபில், தர்மு மூன்று பெயரையும் ஒரே முக்கோணத்தில் வைத்து சுழற்றிப் பார்க்க உடலெது கதையெது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று மேவிக்கொண்டிருக்கினர். தர்மு பிரசாத்திடம் வலிமையான கதைகள் இருக்கின்றன. தன்னுள் தனித்து ஊறும் நிலமும் சொற்களுமிருக்கின்றன. களவாடப்பட்ட உடல்களுக்குள் வலிமையான இக்கதைகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. தனிமையின் நூறு ஆண்டுகளில் தண்டனைக்குட்படும் அக்கா, தமிழ் சமூகத்தின் மொத்த பெண்ணுருவாய்த் தெரிகிறார். போர் பெண்களை வலிமையாக்கியது. வரலாற்றின் பனியாய் எம் பெண்கள் உருக்கொண்டார்கள். தனிமையின் நூறு ஆண்டுகள் மூன்று கோடைகளாக விரிகிறது. என்றைக்குமே மாரியைப் பார்க்கமுடியாத நிலத்தின் தனி மனிதப் பிறழ்வை, தனிமனித அழிவை திருகுவதன் மூலம் சமநிலையற்ற போர் விதிகளின் மீது தறிகெட்டாடும் மொத்த சமுகத்தின் பிறழ்வை மொழிக்குள் கொணர்கிறது. மோசஸ் மீளுயிர்க் கொண்டதும் அக்காவின் உயிர் எடுக்கப்படாமல் அந்தரத்தில் விடுத்துப் போனதும் கதைகளின் போக்கை ஆணுயிர், பெண்ணுயிர் என்று மொழிபடுத்துகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் சோபாசக்தியின் சக்கைகளாவே எனக்குத் தோன்றுகின்றன. கதையுடல்கள் போரின் கதைகளுக்கு அவசியமானவையா என்ற கேள்வி எப்போதும் எமக்குள் தொக்கி நிற்கிறது. இந்தக் கேள்விக்கு ஆதி காரணம் எங்களை அடையாளப்படுத்தியவர்கள். ஒரு துளியை பாலாகவும் ரத்தமாகவும் பார்க்கப்படவேண்டியிருக்கிறது. இன்னமும் அதிகாரத்தின் பார்வையில் சிறுபான்மையாக ஊரும் எமக்கு வரலாறு பன்முக வாசிப்பினைக் கோருகிறது. இலையின் கீழ் ரவையை மறைத்து கைமாற்றவேண்டியிருக்கிறது. நியம புத்தரை காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கும் ராகவனின் பொறி கதையுடல்களுக்கு சிறந்த உதாரணம். எல்லோரும் போரின் தொடக்கத்தில் மிகத் திடமான குறிக்கோள்களுடனிருந்து உயிருக்காய் ஒவ்வொன்றாகக் கைவிட்டு கடைசியில் உயிரோடு மட்டுமே திரும்பிய பொதுவான போக்கை சிறுகதைகள் கொண்டிருக்கின்றன. அன்று கைவிட்டுப் போன நிலமும் பின்னர் எம் கைகளுக்குக் கிடைத்த நிலமும் ஒன்றல்ல. பௌதீகத்தாலும் மனத்தாலும் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடைய இரண்டு நிலங்கள். இது போர் நிலத்திற்கு மட்டுமேயுரிய குணமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. வாழ்க்கை சாமான்ய மனிதர்களின் மீது தொடுக்கும் எல்லாவகையான போர்களிலும் போராட்டமும் தோல்விகளும் பெரும்பங்காயிருக்கிறன. அதிகாரம் மனிதர்களின் அன்றாடத்தை பூனைகளைப்போல நசுங்கித் தின்கின்றன. எல்லா வளைகளிலும் வாய்வைத்திருக்கும் பூனையின் பிடியில் திசேராவின் புனைவுகள் உருப்பெறுகின்றன.

கதையுடல்களின் சாத்தியங்களையும் கட்றற்ற மொழிச் சோதனைகளையும் புனைவுகளில் பரிசோதித்துப்பார்க்கிறார் திசேரா. எண்களையும் தாவரங்களையும் கவிதை மொழிகளையும் குழந்தையொன்றின் முதல் முயற்சிகள் போல கையாண்டுபார்க்கிறார். தன் மொழியின் கூறு நிலைகளை மாற்றுவதனாலும் மொழிக்குள் வெறுமையையும் இறுக்கத்தையும் ஏற்படுவதுவதன் மூலமும் கதைகளைப் புனைய விரும்புகிறார். வழிகள் அதிகமிருந்தும் இயற்கையை சவாலுக்கு அழைத்து ஆடும் பகடையை நிகழ்த்திப்பார்க்க தவறுகிறார். பன்மைப்பால் நிலைகளால் புனைவு மனத்தை வனையும் தன்மை உரையாடப்படவேண்டிய ஒன்று. தன்னுடைய பால் நிலையைக் கழைந்து எழுதுவது என்பதும் அதற்குரிய பிரக்ஞையுடன் மொழியைக் கையாள்வது என்பதும் இன்று பலரிடம் இல்லாத ஒன்று. தமிழில் போதுமானளவு உரையாடல்கள் நிகழ்த்தப்பட்ட பிறகும் ஆண், பெண் விகுதிகளை கையாள்வதில் தடித்த ஆண் மனோபாவமும் அலட்சியமும் நிறைந்திருக்கிறது. மொழியை அதன் பாட்டில் நகரவிட்டு பின்தொடரும் திசேரா அவற்றில் மிகவும் பிரக்ஞை உணர்வோடு செயற்பட்டிருக்கிறார். கதைகளைப்பற்றியும் அதன் விவாதங்கள் வாசக பார்வைகள் என்று கதைகளின் எல்லாக் கூறுகளின் மீதும் விருப்பமும் ஈடுபாடுமுள்ளவர்கள் சமூகத்தின் அடிப்படை உண்மையை மொழியில் கையாள்வதிலுள்ள தயக்கம், தங்களைத் திருத்திக்கொள்வதில் உள்ள அலட்சியமும் ஏமாற்றமளிக்கிறது. திசேரா வெறுமையான நிலத்தின் ஒழிந்திருக்கும் கருமௌனங்களைப் புனைகிறார். இழத்தலின் காலம் பரிசோதனைகளின் உயிர்ப்புள்ள குழந்தையாக உணர்கிறேன்.

போரின் நிலத்திற்கும் அண்டைய நிலத்திற்கும் இடையில் மனித அலைச்சல்களின் வேர் பிணைந்து கிடக்கிறது. அதன் நுண்மையான வேர் மயிர்களின் கசப்பு இந்நிலத்தின் மீது எழுதப்பட்ட, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும், எழுதப்போகும் எல்லாப் புனைவுகளிலும் தோய்ந்து அலைந்துகொண்டிருக்கும். காலத்தை மீள் நிறுத்தி கதை சொல்லும் காலமா இது என்கிறார் கற்சுறா. எம்முன் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது, புனைவுகள் சுவர்களில் துளைக்கப்பட்ட ரவைக் கலன்களுக்குள் நிறைத்து நிற்கின்றன. குடியேற்றப்பட்ட நிலங்களின் மீது கலங்கி ஓடும் தொலைக்காட்சி பெட்டிகளில் கூட ரூபமாய் மனிதர்களின் அலைச்சல். போரில் தோற்றவர்கள் மீண்டும் தம் நிலங்களின் மீது வெறும்பாதங்களை அழுத்தும் போது உணரப்படுவது மண்ணின் கண்ணீரா அல்லது மனிதர்களின் ரத்தமா என்ற ஞாபகக்கலப்பு. போர்ப் புனைவுக்காலம் முடிவற்றது. துயரங்கள் என்றும் அழிக்கமுடியாதவை. காலம் உளுத்து நனைந்த குற்றியின் மேல் பூக்கும் சாம்பல் பூக்களுக்காக காத்திருக்கிறது .

மேலதிகமாக சொல்லப்படவேண்டிய குறிப்புகள்

  1. 29 புரட்டாதி 2019 அன்று வன்னியில் நடந்த 49வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். இது.
  2. இக்கட்டுரையின் உடலுக்குள் எழுதப்படாத சிறுகதைகளும் புனைவுகளும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு பொருத்தமான உடலுக்குள் பேசப்படவேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். என் வாசிப்பு அனுபவமும் எல்லையும் மிகக்குறுகியது. இங்கு தவறவிடக்கூடாதவையென்று நீங்கள் நினைக்கும் சிறுகதைகளை வாசித்து எனக்கு கிடைக்கூடிய மற்றைய சந்தர்ப்பத்தில் பொருத்தமானவற்றை குறிப்பிடத் தவறமாட்டேன் என்று நம்புகிறேன். மின்னஞ்சல் – kanesalingambrinthan187@gmail.com

கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்

ஒரு முழுமையான கட்டுரையினை – மொழித் தொடர்ச்சியினை எழுதுவதற்கு வேலைகளும் சூழ்நிலைகளும் ஒத்துழைக்காததன் பொருட்டு குறிப்புகளாக நாவலைப் பற்றி உங்களோடு உரையாடிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மனிதர்களோடு மிகவும் குறைவாக தொடர்பாடலிருக்கும் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், உண்மைகள் போன்றவற்றோடு என்னையும் அடையாளப்படுத்திக்கொள்வதால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை. அடையாளங்கள் என்ற சொல்லோடும் கசார்களின் அகராதி மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. பெருங்கடலை சுருட்டி ஒரு நூற்பைக்குள் நழுவ விட்டது போன்ற இந்நாவலை என் ஒழுங்கற்ற – நிச்சயமற்ற – அவதியான குறிப்புகளின் மூலம் உங்கள் கோப்பைகளுக்குள் நிறைப்பதையிட்டு கவலையடைகிறேன். இதற்கு முதல் இதே போன்ற ஒரு உரையாடலில் நோர்வேர்ஜியன் வூட் பற்றிய கட்டுரையை வாசித்தபோது இருந்த எனக்கும் இன்று கசார்களின் அகராதி பற்றிய முறையற்ற திருட்டுச்சாவிகளோடு கைநடுங்க இருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. கேள்விகள். வயதும் அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகளுக்கான பதில்கள் பெறப்படும் என்று நம்பினேன். வயதாவதை பதில்களுக்காக இனிமையாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினேன். ஆனால் நடந்தது வேறொன்று. நாட்களோடு கேள்விகள் இன்னமும் சிக்கலாயின. வாழ்க்கை அந்நியமாகத் தொடங்கியது. சரியாகச் சொல்லப்போனால் வாழ்க்கை அந்நியமாகிக்கொண்டிருக்க கேள்விகளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. முன்னைய உரையாடலைப்போல என்னுடைய கேள்விகளை உங்களிடம் பரப்பும் தவறை இம்முறை செய்யாதிருப்பேன் என்றே நம்புகிறேன். கசார்களுக்கு மதங்கள் துரோகமிழைத்ததைப் போலல்லாமல் நேர்மையோடு நடந்துகொள்ள முயல்கிறேன். என்னை மீறியும் அவை உருப்பெரும் எனில் அது கசார் காகனின் அழகிய மனைவியான – கசார் அகராதியின் பெண்பிரதியை தொகுத்த அதேக்கு உண்டான அதே காலத்தின் நிழல் என்னையும் தொடர்கிறது என்பதையும் தெரியப்படுத்துகிறேன்.

வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் மனிதன்

இது ஆண்பிரதி என்பதால் நிர்வாணமாக ஒரு ஆணை வரைவதில் மிலோராத் பாவிச்ற்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்காது என்ற வகையிலேயே மனிதன் என்ற ஆண்பாலை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இன்னொரு வகையான சிந்தனையும் என் மூளைக்குள் சுற்றுகிறது. ஒரு முகம் என்று சொல்லி வட்டத்தைக் கீறிக் காட்டும் போது, ஒரு ஆண் அதை ஆணின் முகமாகவா பெண்ணின் முகமாக உணர்ந்து கொள்வான். அதே வட்டத்தை ஒரு பெண்ணிடம் காட்டும் போது. அல்லது பால்புதுமையினர் அதைப் பார்க்கும் போது. வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் உருவம் எனக்கு மனிதனாகவே தென்பட்டது. தோராயமாக மீன்களும் யாழிசைப்பவரும் உயிரை உடலாய்க் கொண்டவன் தலையிருந்து செம்மறியாடும் அதனுடலில் பரவியிருக்கும் ரோமமும் அவனின் உடலிலிருந்து தான் இவ்வுலகமும் உயிர்களும் வாழ்க்கையும் விரிகிறது என்பதை எனக்கு உணர்த்தியது. அவன் ஒரு நிறைவான மனிதனாகவே அல்லது குறைகளின் மொத்த உருவமாகவோ தோன்றவில்லை. ஒன்றோடு ஒன்று கலந்த கலப்புலோகம் போல தூய மினுமினுப்பை தரக்கூடிய கலவையாக நிற்கிறான். இவ்வுருவம் ஆண்கள் ஆனது என்றாலும் அவனின் சமச்சீரில் டாவின்சியின் வெறுமையின் பாழ் நிலத்தில் பெண்ணின் உருவம் ஒடுங்கியிருக்கிறது. அவளின் மறைவும் பதுமையும் நாவலின் மீது வெறுப்பை ஏற்படுத்திடுகிறது. பிரமாண்டமான ஆண் உடலின் நடுவில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்ணின் மௌனத்திலிருந்து நாவலை உள்வாங்கிக்கொள்கிறேன். ஆண்களாகிக்கொண்டிருக்கும் வரலாற்று உருவங்களுக்குள் என்றைக்கும் மறைந்திருக்கும் மூதாட்டி ஒருத்தியின் முகச்சாயலை இவ்வுயிர்களாலான உடலின் உச்சியில் காண்கிறேன். இவ்வுடலில் பரந்து நிற்கும் நட்சத்திர கூட்டங்களை அவெர்கி ஸ்கீலா கவர்ந்து வந்த ராசிகளை ஞாபகப்படுத்துகின்றன.

கசார்களின் அகராதி மூன்று புத்தகங்களாலானது. ஒன்றிலிருந்து ஒன்று வளர்ச்சியடையும் தரவுகளுடன், முரண்படும் கதைகளுடன், ஆவணங்களுடன், மொழியின் பிரமாண்டமான உடலுடன் விரிந்துகொண்டிருக்கும். நிறங்களான புத்தங்களின் மீது ஊற்றப்பட்ட மதம் என்னும் மை, பஞ்சொன்றினூடாக இரத்தம் கசிந்து ஊடுருவதைப்போல ஒவ்வொரு பக்கங்களிலும் கசிந்து கசார்களை திரிபுபடுத்துகின்றது. வரலாற்றில் தமக்கென உறுதியான ஆவணங்கள் ஏதுமற்ற அவர்களின் வாழ்நிலமும் பண்பாடும் ஒவ்வொரு முகமூடிகளையோடு அணுகப்படுகிறது. ஒன்றில் கண்கள் தெரிகின்றன. இன்னொன்றில் காதுகள், இன்னொன்றில் கழுத்து. மூன்று புத்தங்களிலும் ஒரே நபர் வெவ்வேறு பெயர்களோடு வந்து போகிறார். அதே போல வெவ்வேறு நபர்கள் ஒரே பெயரோடு வந்து போவதையும் உணர முடிகிறது. இந்நாவலைத் திறக்க சிவப்புப் புத்தகத்தில் மரித்துப்போன முனைவர் இசைலோ சூக்கின் தங்கக் கைபிடி கொண்ட சிறியதொரு சாவி தேவைப்படுகிறது. எல்லாச்சாவிகளைப்போலவும் திறப்பு அதன் அடியில் இல்லை, கைப்பிடியில் தானிருக்கிறது. திறப்பு “தே” என்ற எழுத்து. அது அதே யின் இறுதி எழுத்து. நாவல் அதேயிலிருந்து தொடங்கினாலும் வாசிக்கத்தொடங்கிய எனக்கு அது உவப்பாக இல்லை. ஆனால் ஒரு அகராதி அ வில் தொடங்குவதைத்தவிர வேறு வழியில்லை.

சஷெங்காவின் தாயும் கலீனாவும் மகிழ்ச்சியை நெடுநாள் ஞாபகங்களில் பாதுகாக்க துயரத்தை அழைத்துக்கொள்வது பற்றிய குறிப்புகள்.

” யாருக்காவது ஏதேனும் நல்லது நடந்தால் – அதை பெத்குதினுக்கு விளக்கினாள் – அது எப்போதும் கொஞ்சம் துக்கத்தோடு கலந்திருக்க வேண்டும். அப்போதுதான் அக்கணம் நன்றாக நினைவிலிருக்கும். ஒருவர் மகிழ்ச்சியான தருணங்களை விட மகிழ்ச்சியற்ற தருணங்களையே எப்போதும் அதிகநாள்கள் நினைவில் வைத்திருக்கிறார்.. ” (பக்கம் 63)

மகிழ்ச்சியான தருணங்களின் மீது கோபத்தின் நிழல் விழுந்து நாட்களைக் கரியாக்கியது. ஒரு பொறியாய்த் தோன்றும் கோபம் பெருங்காடு முழுதும் பற்ற வண்ணத்திகள் நெருப்பில் உழன்றன. பொறி எப்போதும் பொறியாயேயிருக்கிறது. தணலை அது ஒருகாலமும் உணர்ந்ததில்லை, ஏனெனில் அது பொறி. பனிக்கு குளிரும் தணலுக்கு சூடும் உறைப்பதில்லை. அதன் குணமும் உடலும் பொறி தான். ஆனால் இந்நாவலில் யாரும் கோபக்காரர்களாக இல்லை. எல்லோரும் ஏமாளிகளாவே தெரிகின்றனர். அவர்களின் செயல்களே அவர்களை ஏமாற்றுகிறது. அவர்களின் நம்பிக்கைகள் மரணத்திற்குள் தள்ளுகின்றன. மனிதர்கள் தோன்றுவதும் நீண்ட நேரம் கனவு காண்பதும் பின்னர் கனவுகளால் மரணித்ததுபோவதும் சோர்ந்துவிடாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. ” ஒவ்வொரு தலைவனும் தன் சொந்த இறப்பைத் தழுவிக்கொள்வான்” (பக்கம் 73) அதனால் இதை ஏமாளிகளின் பிரதி என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு வகையில் நம் எல்லோரது வாழ்க்கையும் இந்தச் சுழற்சிக்குள் அகப்பட்டதைப்போலவே தோன்றுகிறது. குறைந்தபட்சம் என் வாழ்க்கையாவது. ஒவ்வொரு பக்கமாக நகர நகர தன்னை நிறமாற்றிக்கொள்ளும் ஒக்ட்டோபஸ் போல இசைக் கொற்றர்கள் நிறுத்திய பாறையுப்புக்கற்களின் மீது உரசியும் பற்றியும் நீளமான புரிதலுக்கும் விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட இசையாக நீண்டுகொண்டிருக்கிறது நாவல். பின்னைய பக்கம் ஒவ்வொன்றும் முன்னைய பக்கத்தைத் தின்று செரித்து வளர்கிறது. முதற்பக்கம் ஒரு நிகழ்த்துகை என்றால் அதைக் கொன்று இரண்டாம் பக்கம் இன்னொரு நிகழ்த்தலைச் செய்கிறது. இதுவும் புரிதலோடு துன்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் சஷெங்காவின் தாய் மற்றும் கலீனாவைப் போலவும் ஆயிரம் எத்தனமெடுத்தும் இன்பத்தோடு துன்பமும் சேர்ந்துகொள்வதை தடுக்கமுடியாத என்னைப்போவும் விசித்திரமாயிருக்கின்றன.

இன்மையின் முடிவற்ற சுழற்சியிலிருந்து உருப்பெற்ற நாங்கள் தரித்துக்கொள்ளும் சந்தோஷமும் துக்கமும் தங்க ஆபரணத்தைப்போல விலையுயர்ந்ததாயிருக்கிறது. அவற்றிக்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கிறோம். வாழ்க்கை பணயங்களால் ஆனது. சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கை நாணயத்தின் இருபக்கங்கள் என்று சமத்துவம் சொல்லுபவர்களே, பிறகேன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரே விலைக்கு – ஒரே பணயத்திற்குப் பெறமுடிவதில்லை. என் ஞாபகங்களில் நெடுநாள் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாகவே பிணைந்து கிடக்கின்றன. பாம்புகளும் ஓணான்களும் வண்ணத்திகளும் உருத்தெரியாமல் பிணைந்துகிடக்கும் ஞாபகங்களில் சந்தோசமெது துக்கமெதென்றே பிரித்துக் காணமுடியவில்லை.

கனவின் குழந்தைகள் மற்றும் கனவு வேட்டையர்கள் பற்றிய குறிப்புகள்.

கசார் காகன் கனவுகளுக்கு விளக்கம் கேட்கப் போய்தான் தன் கசார் இனைத்தையே துடைத்தழிகிறான். கனவுகள் விளக்கப்படவேண்டியவை அல்ல என்பதற்காகவே அவை கனவுகளாக மந்தமான மொழியில் நடந்தேறுகிறது. நாவல் முழுதும் கனவுகளும் விளக்கங்களும் நித்தியமாக பூத்தபடியே வருகின்றன. கசார்களின் துயரம் மிக எளிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலிருந்து தொடங்குகிறது. “இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் கனவில் காணும் போது, ஒருவரின் கனவே மற்றவரின் யதாரமாகும் நிலையில் எப்போதும் கனவின் சிறு பகுதி எஞ்சும். இவை கனவின் குழந்தைகள்.” (பக்கம் 46)

இரவுக்காக பகலைக் கைவிட்ட அவ்ரம் ப்ராங்கோவிச் போலத்தான் நானும். உலகம் சுறுசுறுப்பாக தீமைகளையும் சூழ்ச்சிகளையும் வன்மங்களையும் கக்கிக்கொண்டிருக்கும் பகல் பொழுதை நெளியும் புழுவைப்போல் பார்க்கிறேன். எல்லாமும் கண்களுக்குத் தெரியும் அவலம். கண்களில் குற்றத்தோடும் முகம் முழுக்க சிரிப்போடு உடலைச் சலவை செய்து கொள்ளும் மனிதர்களின் வாசம் நிறைந்த காலத்தை கடப்பது பெருந்துயராயிருக்கிறது. இடக்கண்ணில் பொறாமையும் வலக்கண்ணின் சூழ்ச்சியும் நிறைந்தவர்களின் முன்னால் ஒரு நீர்த்துளியாய் ஆவியாகிறேன். கொடுஞ்சூட்டில் தகிக்கிறேன். ஆனால் இரவு அவ்வாறானததல்ல. எல்லா வன்மமும் நிறைந்த உலகத்தின் மீது கறுப்புத் திரையிடுகிறது. குற்றங்கள் பார்வைக்குதொலைவாக நடந்தேறுகிறது. எதுவும் புலன்களுக்குள் உணரப்படும் போது தான் குழப்பம். இதை தப்பித்தல் என்று எல்லோரும் நினைக்கலாம். உண்மையும் அது தான், பகலின் கொடூரக்கண்களில் இருந்து தப்பித்து இரவிடம் அடைகிறேன். விபத்திலிருந்தது தப்பித்த ஒருவரை அருள்நிறைந்தவராய்ப் பார்க்கும் மனிதர்கள் பகலிலிருந்து தப்பிப்பவர்களை அதே கண்கொண்டு பார்க்கத் தவறுகிறார்கள். அவ்ரம் ப்ராங்கோவிசிற்கு அந்தக் கவலையிருக்கவில்லை. அவருக்கு குரோஸ் பற்றியே நினைப்பிருந்தது. கசார்களைப் பற்றிய தேடலை தன் கனவில் வரும் குரோஷிற்காகவே நடத்தினார்.

அவ்ரம் ப்ராங்கோவிச் அடுத்தவர்களின் கண்ணீர் ஊட்டப்பட்டு இரவுகளில் அலைந்தார். பகலில் ஒரு மசியப் பூனைபோல சுருண்டு கிடந்தது கனவுகளைக் கண்டார். சாமுயேல் கோஹென் கனவுகளிலிருந்து பிரிந்த இறகுகள் அவரின் இரவுகளை வனைந்துகொண்டிருந்தன. பகலிலிருந்து தப்பிக்க எனக்கிருக்கும் ஒரே வழி உறக்கம் தான். மூன்று அல்லது நான்கு நீண்ட தூக்கங்களில் ஒரு பகலைக் கடந்துவிடலாம். என் நினைவிற்கு ஒரு போதும் அறிந்திராத பண்புகளின் கட்டமைப்புக்களை பயத்தால் தயக்கத்தால் தீண்டும் போது ஒளிந்திருக்கும் அற அமைப்புக்கள் தூண்டப்படுகின்றன. இது பாசியை விலக்கி தெரிந்த நீரை காண்பதைப்போன்றதொன்றாகும். ஆனால் நீரில் தெரிவது உண்மையா விம்பமா என்ற குழப்பம் எப்போதுமிருக்குமளவுற்கு தண்ணீர் தெளிந்திருக்கும். ஒரு விளையாட்டைப்போல ஒரு அரசாங்கத்தைப்போல மனிதர்களுக்கு தங்களைப்பற்றிய விதிகள் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை. மனிதர்கள் அதிக குழப்பமான – சிக்கலான இயங்குநிலையையும் சிந்தனைகளையும் கொண்டவர்கள். அவர்களின் இயக்கம் எதனால் வழிநடத்தப்படுகிறது என்பதையும் இதுகாலமும் கூறப்பட்டுவரும் கூட்டறிவு என்பது என்னவென்றும் அறிவார் யாருமில்லை. கூட்டறிவை உணர்தல் அல்லது தேடிக்கொள்வதை அறிவு எனக்கொண்டாலும் நிக்கோல்ஸ்கி கூறுவதைப்போல ” அறிவென்பது அழியக்கூடிய பண்டம்; நொடியில் புளித்துபோகக்கூடியது. எதிர்காலத்தைப்போலவே” (பக்கம் 372) என்பதை மறுக்கவும் முடியவில்லை. தோற்றத்தைப்போல உடற்தசைகளைப்போல வயதாகும் போது ஒருவருடைய அறிவும் அழிந்து போவதை உணர்கிறோம். ஞாபகங்களை மட்டுமல்ல திறன்களையும் கருத்தில் கொண்டே அறிவு அழிவடைகிறது என்கிறேன். இதே நேரத்தில் ஞானம்(wisdom) என்பதைப்பற்றியும் உரையாடவேண்டிய தேவையிருக்கிறது. அறிவும் ஞானமும் வெவ்வேறானவை. அறிவு பரிசோதிக்கத்தக்கது, ஞானம் உணரக்கூடியது. பிரச்சனை ஞானம் உண்டா இல்லையா என்பதிலில்லை. ஞானம் எல்லோருக்கும் ஒரேயளவில் இருக்கிறதா என்பது தான். யூதா ஹலேவி சொல்கிறார், ” ஒரே ஞானம் தான் உள்ளது. பிறபெஞ்சமெனும் கோளத்தில் விரவியிருக்கும் ஞானம் என்பது மீச்சிறு விலங்குகள் கொண்டிருக்கும் ஞானத்தினின்றும் பெரிதல்ல.” (பக்கம் 360) நாவல் தன் விரிந்த உடலால் கனவிலிருந்து ஞானத்தை கண்டடைய முயற்சிசெய்கிறது. துன்பங்களை விளங்கிக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் ஞானத்தினை அடைய முயற்சிக்கிறது. கனவுகள் அவர்களின் செயல்களையும் விருப்பங்களையும் அவர்களால் உள்வாங்கப்பட்ட மற்றவர்களின் நடத்தைகளையும் மீளுருவாக்கம் செய்கிறன. இவை கனவுகளை வார்க்கின்றன. புலனுக்கு எட்டாத எதொன்றும் கனவாய் பரிணமிப்பதில்லை. கனவுகள் சுயபிரதிபலிப்பாக எண்ணங்களின் சேர்கையாக விரிவாக இன்னமும் எத்தனையோவாக உருவாகிறது. உணர்ச்சிகளின் மையத்திலிருந்து வெளிப்படும் யோசனைகளைத் தொடர்பவர்கள் கனவுகளைத் தொடர்பவர்கள். ஆனால் அந்தக் கனவுகளை மின்மினிப் பூச்சியொன்றை இரண்டு கைகளுக்குள் பொத்தி பிடிப்பது போல அள்ளி உடலெங்கும் ஊரவிட்டு ஹங்கேரியன் வாசித்த வயலின் இசையைப்போல உடலைச்சுருட்டி நத்தைச்சுரியமாக உருமாறுவதை கனவு வேட்டையர்கள் கற்றிருந்தார். தர்க்கங்களைத் தளர்த்தி உலகை விரிவடையச்செய்யும் பலம் வாய்ந்தவை கனவுகள். கனவு பிரச்சனைகளை மட்டுமல்ல, அவற்றுக்கான தீர்வுகளையும் தருகிறது. மிக மோசமாக, பகல்களைக் கடப்பதற்கு கனவுகள் தரும் தீர்வு நித்திரையாகவேயிருக்கிறது. தொடர்ச்சியாக கனவுகாண்பதால் கனவுகளையும் கனவுகள் அல்லாதவற்றையும் பிரித்தறிவது எனக்குச் சுலபமானதாகத்தெரியவில்லை.

கசார் காகனின் கனவில் தோன்றும் தேவதை ” படைத்தவர் உன் எண்ணங்களினால் மகிழ்வுற்றிருந்தாலும் உன் செயல்கள் குறித்து மகிழ்வுற்றிருக்கவில்லை.” (பக்கம் 101) என்கிறாள். இதே நேரத்தில் நாவலின் வேறொரு பகுதியில் தோன்றும் உண்மை – பொய் பற்றிய உரையாடலை தொலைத்த நான், நாவலை இரண்டு முறை புரட்டியும் விரால் மீன்களைப்போல அவையும் அகப்படாமலே போயின. கசார் காகனின் கனவிற்கு விளக்கமளிக்கும் கனவு வேட்டையரின் பதில் அபூர்வமானது. ” ஒரு தேவதை உங்கள் கனவில் வந்து அலைந்துகொண்டிருக்கின்றாள் என்றால் அதற்கு இரவில் செல்வதற்கு வேறு இடமில்லை என்றே அர்த்தம், அநேகமாக மழைபெய்திருக்கலாம்… ஏன் அது அதிக நேரம் உங்கள் கனவில் தாங்கவில்லை என்றால் உங்கள் கனவு அநேகமாக துர்நாற்றத்தைக் கொண்டிருக்கலாம். அடுத்த முறை உங்கள் கனவுகளை துவைத்துப்போடுங்கள்… ” (பக்கம் 101) காகனின் விதி அத்தனை எளிதானதல்ல. இந்நாவல் முழுவதும் ஒரு (உண்மையான)நீதிபதிக்குரிய கூர்மையான புத்தியை கொண்டு அணுகவேண்டும், மூன்று மதங்களும் சாதுரியமாக பகடையை சுழற்றி விடுகின்றன. எங்கேனும் ஏமாந்து உருட்டப்படுவோமானால் அவை தங்களின் மதங்களுக்கு வாசகரை மாற்றிவிடும் தந்திரம் உள்ளவை.

நாவலின் தொடங்கத்தில் தவறிழைக்கும் வாசகர் எப்போதும் நாவலின் இறுதியிருக்கும் துருப்புகளால் புலன்கள் தூண்டப்படாது போவார்.

நாவலின் இரண்டாம் புத்தகமான கசார் குறித்த இஸ்லாமிய ஆதாரங்கள் – பச்சைபுத்தகம் – வரும் வரை நிலத்திற்குள் விதைகளை புதைப்பதைப் போல தகவல்கள் நெருக்கமாவும் அயர்சியாகவும் சேர்ந்துகொண்டேயிருக்கும். அவ்ரம் ப்ராங்கோவிச் வாசிக்கும் போதே நாவல் தனது வேர்களை நிலத்தின் மீது ஆழமாக பதியவைப்பதாக உணரத்தொடங்கினேன், பின்னர் யூசுஃப் மசூதியிலும் மஞ்சள் புத்தகத்தின் சாமுயேல் கோஹெனிலும் வளர்ச்சி அடையத்தொடங்கியதும் எங்கோ விதைக்கப்பட்ட விதைக்களனைத்தும் உருப்பெற்று ஒரு பெருவிருட்சம் தோன்றியது. நான் முதன்முதலில் கசார்களின் அகராதியை வாசிக்கத்தொடங்கிய கருநீல இரவையும் அதற்குள் சிவப்பைப் பூசிக்கொண்டு வைத்தியசாலைக்கு விரையும் ஆம்புலன்லின் அவதியான ஒலியையும் ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன். அந்தக் காலை கைகளும் கால்களும் தோளும் சீவப்பட்டு மொட்டையாக அரிந்துவிடப்பட்ட முன் நிலத்துப் பலாவிற்காக வருத்தப்பட்டுக்கொண்டே நாவலைத் திறக்கும் போது காலம் சூன்யத்திற்குள் அகப்பட்டு எரிந்துகொண்டிருந்தது. எழுத்துக்களுக்கும் வசனங்களும் அவற்றின் இடைவெளிகளுக்கும் காலத்தை கவர்ந்து உள்ளீர்த்துக்கொள்ளும் வசீகரமிருக்கிறது. அது எழுத்துகளுக்கே மட்டுமான பண்பு, ஒரு காலப்பயணத்தை ஒத்தது அது. துர்நினைவிலிருந்து, அலைச்சல்படும் யோசனைகளிலிருந்து என்னை பாதுகாக்க – காலத்தைக் கரைக்க கசார்களின் அகராதியைத் திறந்த போது எனக்கான முதல் ஆச்சரியம் காத்திருந்தது.

” இப்புத்தகத்தை ஒருபோதும் திறக்காத வாசகன் இங்குதான் உறங்குகிறான். என்றைக்குமாக அவன் இங்கே மரணித்துள்ளான்.”

அதன் பின்னர் கசார்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூதப் பிடியில் அலைவதையும் மரணித்து மரணித்து உயிர்பெறுவதையும், மதங்களின் பிடிகளுக்குள் அவர்களின் ஆன்மா நசிந்து அழுவதையும் கேட்டபடியேயிருந்தேன். வெளிப்படையாக கசார்கள் மூன்று புத்தகத்திலும் மூன்று மதங்களுக்கு நிம்மதியாக மாறியிருந்தாலும் அவர்களின் ஆன்மா நிலையில்லாமல் அலைந்துகொண்டேயிருந்தது. மொகத்தசா அல் சஃபர் உடைத்த கசார் ஜாடியைப்போல அவர்களின் ஆன்மாவின் தேவை எப்போதும் உணரப்படவேயில்லை. அது இன்றுவரை அலைந்துகொடியிருக்கிறது. நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் வாசகர் கசார்களின் அலைச்சலின் கொடூரத்தை உணர்வார். முறையான வரலாற்றையும் பண்பாட்டையும் எழுத மறந்த இனம் ஒன்றின் ஆன்மா எத்தனை மோசமாக வரலாற்றில் அலைக்கழிக்கப்படுவதையும், தடமற்று புனைவுகளில் உருப்பெரும் ஆதாமின் உடலை மதங்களை குதறி எறிவதையும் உணர்வர். திசைகளேதும் தெரியாமல் குறிப்பில் என் வீட்டை நோக்கிப்பார்க்கிறேன். என்றைக்குமாக உருகுலைந்திருக்கும் அது, அரசமரத்தின் கீழ் நசுங்கிக்கொண்டிருக்கும் புழுக்களை உற்பத்திசெய்தபடியிருந்தது.

அதே கிளிகளுக்கு கசார் அகராதியை பயிற்றுவித்தாள். அக்கிளிகளிடம் ” செல்லுங்கள், உங்களிடத்தேயுள்ள கவிதைகளை மற்ற பறவைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்,ஏனெனில் வெகுவிரைவில் இங்கிதை அறிந்தவரென்று எவரும் இருக்கப்போவதில்லை. ” என்று சொல்லி கானகத்திற்குள் அனுப்பிவைக்கிறாள்.

நாவல் மூன்று புத்தகங்களோடு கசார்களை முடிவுக்குக்கொண்டவரவில்லை, பின்னிணைப்புகளில் நடுக்கமும் பதபதைப்பும் நிறைந்த சொற்கள் காத்திருந்தன. உப்புக்கற்களால் கட்டப்பட்ட விரிந்து செழித்த மாளிகையொன்றின் மீது மழை பெய்வதைப்போல சிறுக சிறுக நாவல் கரைந்து ஊற்றியது. இளைத்த எலி மாவு மூட்டையின் ஓட்டைக்குள் நுழைந்து தின்று மாட்டிக்கொண்டது போல(பக்கம் 119) பெற்றதை இழக்காவிட்டால் நாவலுக்கிலிருந்து எக்காலமும் வெளிவரவே முடியாது. பாவிச் சொல்லும் ஒரு போதும் திறக்காமை நாவலை வாசிப்பதிலில்லை, அதை துறப்பதிலேயேயிருக்கிறது.

ஆண்பிரதியை மூன்று பேர் தொகுக்க தனித்திருந்து பெண்பிரதியை தொகுத்திருக்கிறார் அதே. ஆண் பிரதியின் வாசிப்பும் பெண் பிரதியின் வாசிப்பும் எழுத்துக்களும் வசனங்களும் ஒன்றுபோலவேயிருந்தாலும் வாசிப்புகள் வித்தியாசமானவை என்பதை உணர முடிகிறது. 14 வரிகளால் மாறுபடக்கூடிய இரண்டு பிரதிகளும் நூறாயிரம் சொற்களைக்கொண்ட ஒரு நாவலின் வாசிப்பை மாற்றியமைத்துவிடுகிறது. இந்த வித்தியாசம் ஆண், பெண் பிரதிகள் என்று இருவேறாக பிரித்தமைக்கும் போதே ஏற்பட்டுவிடுகிறது. மிக நிச்சயமாக எல்லா வகையிலும் இரண்டு பிரதிகளும் ஒத்திருந்தாலும் வாசிப்புகள் வேறுபட்டிருக்கும். ஒரு துறவி தாவுப்மன்னூஸிற்கு ” நாம் படிக்கும்போது, எழுதப்பட்டுள்ள அத்தனையும் நம்மை வந்தடைவதில்லை. நம் சிந்தனைகள் பொறாமைமிக்கவை… ” என்று இவ்வாறு தொடர்கிறார் , ” நீயும் உன் தம்பியும் ஒரே புத்தகத்திலுள்ள ஒரே வரிகளை வாசிக்கப்போவதில்லை, ஏனெனின் எங்களுடைய புத்தகங்கள் ஆண் மற்றும் பெண் தன்மைச் சின்னங்களை உடையவை.” (பக்கம் 118)

சொல்லே தசையானது (பக்கம் 373)

இறுதியில் உண்மை – பொய் பற்றிய உரையாடலை நாவலுக்குள் கண்டடைந்திருக்கிறேன். நிகான் செவாஸ்ட் சொல்வதைப்போல, ” நிறங்களைக் குழைப்பது நானல்ல, உங்களின் பார்வைதான்.” (பக்கம் 131) நாவலுக்குள் முன்னொரு நாள் தொலைத்த உண்மை- பொய் பற்றிய உரையாடல் என்னால் இருப்பதாக நம்பட்ட ஒன்று என்றே எண்ணினேன். நாவலின் மூன்று நிறங்களையும் குழைப்பதிலிருந்து தோன்றிய இல்லாத ஒன்று என்னை நம்பச்செய்வது என் கடந்த காலம் ஆதாரமாயிருந்தது. எல்லாப் புனைவுகளிலும் எனக்கான அமைதியான நிலமொன்றை தெரிவுசெய்து என்னைச்சுற்றி நடக்கும் நடனத்தை ரசித்தபடியிருக்கிறேன். அவற்றின் சொற்களே என் தசையானது. உண்மையான சொற்களின் இசையில் அன்பு தாங்கப்படுகின்றது. “உண்மையான சொல் என்பது எப்போதும் பாம்பினால் சுற்றப்பட்ட மரத்திலுள்ள ஆப்பிளைப் போன்றது “(பக்கம் 235) எளிதில் வசப்படாது. சொற்களை அதன் இசையோடு மிழற்றுவது கிதாரை பதினோராம் விரல் கொண்டு வாசிப்பதைபோலாகும். அவை ஆற்றில் கிடக்கும் கூழாங்கற்கள் போல தன் மினுமினுப்பை எக்காலமும் இழக்காமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். சாமுயேல் கோஹென் “எழுத்து மனிதச்செயல் அன்று” (பக்கம் 305) என்று எழுதுகிறார். நாவலின் உண்மையான சொற்கள் உண்மை – பொய் பற்றிய உரையாடலிலேயே தோன்றுகிறது. தோன்றிப் பின்னர் மறைந்துபோகிறது. ஒரு கிரகணம் போல. மதங்கள் – உண்மை – கசார்கள் மூன்றும் ஒரு நேர்கோட்டில் வரும், பின்னர் தங்கள் சுயரூபங்களோடு மறைந்து போகவோ, ஆட்சிசெய்யவோ தொடங்கும். உண்மையான கசார் அகராதியிலிருக்கும் உண்மை – பொய் பற்றிய பகுதி –

“உண்மை எப்போதும் ஒளியூடுருவக்கூடியது மற்றும் கவனிக்கப்படாதது, ஆனால் பொய் என்பது ஒளிபுகாத் தன்மையுடையது, அது ஒளியை அல்லது பார்வையைத் தனக்குள் அனுமதிப்பதில்லை. மூன்றாம் நிலையொன்றும் உள்ளது, அதில் இவ்விரண்டும் இணையும், அதுவே அதிகமும் வழக்கமான ஒன்று. ஒரு கண்ணால் நாம் உண்மையின் ஊடாகத் காண்கிறோம், அந்தப்பார்வை முடிவிலியில் எப்போதைக்குமாகத் தொலைகிறது; மறுகண்ணால் பொய்மையின் உள்ளே ஓர் அங்குலத்துக்குக்கூட நம்மால் காணமுடிவதில்லை, அப்பார்வை அதற்குமேல் துளைத்துச்செல்வதில்லை, ஆனால் இங்கேயே நம்முடையதாகத் தங்கிவிடுகிறது; இவ்வகையில் வாழ்க்கையை மேலும் குழப்பத்திற்குள் தள்ளுகிறோம். எனவே உண்மை என்பது பொய்யைப்போல அதனளவில் அறிந்துகொள்ளப்பட இயலாதது, ஆனால் பொய்யோடு ஒப்பிட்டுப் பார்த்து மட்டுமே அறியத்தக்கதாய் உள்ளது, நம் புத்தகத்தின் எழுத்துகளை அதற்கு இடையே உள்ள வெள்ளை வெளியை ஒப்பிட்டு அறிவதுபோல் ஏனெனில் கசார் அகராதியில் இருக்கும் அவ்வெள்ளை வெளிகள் புனிதமான உண்மை மற்றும் பெயரின் (ஆதம் சத்மோன்) ஒளியூடுவக்கூடிய இடங்களைக் குறிக்கிறது, மேலும் வெள்ளை வெளிகளுக்கு இடையேயுள்ள கருப்பு எழுத்துகளின் மேற்பரப்பைத் தாண்டி நம் பார்வை துளைக்க முடியாது.”(பக்கம் 288)

இவ் அகராதி ஒன்றின் முன்னர் வாசித்து ஒப்புப்பார்க்கபடவேண்டும், அதன் பின்னர் இது பயனற்றதாகிவிடுகிறது. கசார்களின் அகராதி திறக்கப்படுவதில்லை, எழுதப்படுகிறது.

அடிவானில் விரியும் துயர்

மூப்படைந்த எமிலாக்கு நிறப்பூச்சிட்டது போல நின்றது காலை ஐந்து நாற்பத்தைந்து ரயில். முழுமையாக திறக்காத கண்களோடு தன் உடலினைப் பார்த்துக்கொண்டிருந்தது இயற்கை. தண்டவாளத்தோடு பிணைத்திருந்த தன்னை விடுதலை செய்யுமாறு சீறிச்சினந்தது ரயில். மழைக்கு வீட்டிற்குள் மறித்துவைக்கப்பட்ட சிறுவனின் நிலை அதற்கு. அதன் இயந்திர முகத்திலிருந்து உருவான மஞ்சள் ஒளிப்பாகில் தண்டவாளம் இரண்டு நீண்ட ஈட்டிகள் போல மினுங்கியது. இரவின் குளிர்ச்சியில் திரண்டிருந்த பனித்துகள்கள் ஒளிப்பாகோடு கரைந்து கோடி மின்மினிகளாய்ச்  சுருண்டன. தன்னைச்சுற்றி வெறுக்க முடியாத கிரீஸ் வாசனையை கமளித்துக்கொண்டிருந்தது அந்த ரயில். தென் திசைக்குச் செல்லும் ரயில்களுக்கிருக்கும் சனநெரிசலும் அதனால் பரவும் இரைச்சலும் காலை ஐந்து நாற்பத்தைந்து ரயிலுக்கிருப்பதில்லை. என்னைத்தவிர எல்லோரிலும் நீண்ட உறக்கத்தின் பின் கனிந்திருக்கும் அதிகாலையின் உற்சாகம் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரின் மௌனமும் ஒவ்வொரு சுதியிருந்தது. அதன் இரண்டாவது பெட்டிக்கு அருகில் நிற்கும் எனக்குள் ஈரமான நத்தை நிலத்தை இழுத்துகொண்டு ஊர்ந்தது. பிரயாணிகள் நாட்களை பைகளுக்குள் நிரப்பியிருந்தார்கள். உப்பியிருந்த பைகளின் மேல் தளுதளுப்பாக பயம் மூடியிருந்தது. இன்னும் சிலர் நீண்ட பிரிவொன்றிக்குரிய ஆயத்தங்களோடு தெரிந்தனர். எப்போதும் ரயிலுக்குள் பிரிவு நிறைந்திருக்கும். ஆனால் எல்லாப் பெட்டிகளிலும் பிரிவு மட்டுமே இருப்பதில்லை. துரதிஷ்டவசமாக அதில் என் பெட்டியுமொன்று. அதிகாலையின் மயக்கம் பிரிவிற்கான எல்லா சங்கீதங்களையும் போர்த்திக்கொண்டது. இந்நேர ரயிலுக்கு அவசரப்பட்டு ஏறுபவர்கள் மிகவும் குறைவு. என்னைக்கடந்து செல்பவர்களின் கறி ரொட்டியின் வாசம். அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு இப்படியான வாசமிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். தண்ணீருக்குள் விரல்கள் நெளிந்து அசைவதைப்போல மனிதர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். அதிகாலை ரயிலுக்கு அவசரப்படுபவர்கள் இருக்கமாட்டார்கள்.


உறக்கமில்லாத நீண்ட கொடிய இரவினைக் கடந்து துடித்துக்கொண்டிருக்கும் ரயிலினுள் மனித அசைவுகளைப் பார்க்கிறேன். ஆறு கிழமைகளில் பின் ஒட்டியிருந்த நிறத்தையும் மணத்தையும் வியர்வையையும் உரித்தெறிந்துவிட்டு இன்னொரு நகரத்திற்குப் பிரிந்து செல்வது இதயத்திற்குள் கணத்துக்கொண்டேயிருந்தது. தண்டவாளத்தோடு ரயில் உரசிக்கொள்ளும் சத்தம் உடலுக்குள் படிகமாய்த் திரண்டது. ஆயிரம் நுளம்புகளும் கரப்பான்களும் கறுத்த சிறிய கட்டமான மட்டத்தேள்களும் இன்னும் பெயர் அறியா பூச்சிகளும் நிறைந்த பெட்டிக்குள் வருடமொன்றைத் தொலைத்த நினைவு. பச்சை ஒளிவீசும் மின்மினியைக் கொன்று தாவர சாடிக்குள் புதைத்த நினைவு. காற்றே இல்லாத வெப்பத்தில் மிதக்கும் அறை அது. நகுலனும் தோமஸும் இன்னும் பலரும் தோன்றி மறைந்த பூச்சு. எப்போதும் திரும்பக்கூடாது என்று வெளியேறிய அதே அறையின் நினைவு இந்தப் பெட்டிக்குள். தன்னை உலுப்பிக்கொண்டு ரயில் நகர்ந்தது. ரயிலுக்கு யாருடைய உணர்வுகளைப் பற்றியும் கவலையில்லை, தன்னுடைய பாதையில் நகர்ந்துகொண்டிருந்தது. அசாதாரணமாக மூலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையொன்றிலிருந்து மெல்ல வெளித்த வானத்தைப் பார்த்தேன். காலம் எனக்கு முன்னே நீண்டது. இதிலிருந்து பின்னோக்கி பயணிப்பது வீட்டிற்குள்ளிருந்த என்னை பலத்த விசையோடு இழுத்து வெளியேகொண்டுபோவதாக உணர்த்தியது. இருப்புக்கொள்ளாத கட்டிலும் செந்தரையும் வாழைக்குலைகளும் டொமியும் வீட்டின் பெரு அசைவுகள். முற்றத்திலிருக்கும் சாய்வுமனை துளசியில்லாத மாடம் திணை. அண்டைப்புழுக்கம். கோலத்திலிருந்த அரிசியொன்றை காற்று பெயர்த்தெடுத்துக் கொண்டுபோகிறது. வீட்டிலிருந்து வெகு தூரத்துக்குச் செல்லும் இந்த ரயில் புறப்பட்டவுடனேயே மனிதர்கள் எப்படி நிம்மதியாகத் தூங்கிவிடுகிறார்கள். அவர்களின் முகங்களில் பிரிவுக்கான எந்தச் சலனமுமில்லை. தூரத்தில் என் நிலத்திற்குள் புதையும் நிலவையும் எதிரே தோன்றும் செந்சூரியனையும் பார்க்கும் பயத்திலிருக்கிறேன். நிலவின் நிரம்பாத குழிகளுக்குள் என் நினைவுகளை புதைத்து வைத்திருக்கிறேன். வெள்ளி உடுக்கூட்டத்திற்குள் எட்டு ரகசியங்களை அலையவிட்டிருக்கிறேன். இப்போது மறையும் நிலவு இன்னொரு முறை வானில் தோன்றத்தான் செய்யும். அந்த உடுக்கூட்டம் கூட. ஆனால் அப்போது நான் இன்னொரு நிலத்தில் இன்னொரு மணத்தில் இருப்பேன். சரிந்துகொண்டிருக்கும் நெற்கதிர்களை பார்த்தபடி,

ஆமாம்.

இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி.   

– பிரமிள்
எழுத்து, டிசம்பர் 1961.

நின் கைவசம் என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய் வியர்வைத் துளிகளை  இன்னும் நீர்த்துக்கொண்டே இருந்தன புற்கள். காற்றின் வேகமும் பனியின் அடர்த்தியும் வெயிலோடு குறைந்துகொண்டே போகிறது. மழைக்கால அங்கியை அணிந்துகொண்ட செந்தழல் ஒன்றினைப்போல் அறை மீண்டும் வழக்கமான வெம்மையைச்  சூடிக்கொள்கிறது. குழந்தை ஒன்றின் மேகச்சித்திரம் காற்றில் கலைந்து சிதிலமடைவதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கும் தந்தையினைப்போல மழைக்கால அங்கியினை இந்தப் பகல் கழற்றுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூரியன் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்க முழுமையாக நிறம் மாறிய இந்தப் பகலை பைக்குள் போட்டு அடைத்துவிட்டு உறங்கப்போகிறேன்.

மாலையில் மொறட்டுவ மீண்டும் மழையைப் பெறுகின்றது. ஏழைப்பெண் பிச்சைப்பாத்திரத்தில் சில்லறைகளை சேர்பதைப் போல மெது மெதுவாக ஒவ்வொரு துளியையும் நிலம் கவர்கிறது. அடைத்த இருட்டு. மழைத் துமிகளோடு மோதிப் பிணைந்து ஈரலிப்பாக காற்று என்னை வந்தடைகிறது. எழுந்து யன்னலுக்கூடாக மைதானத்தைப் பார்க்கிறேன். இளம் பெண்ணொருத்தியின் வனப்பான உடலைப்போல ஈரத்தில் நனைந்து திரண்டிருந்தது மைதானம். நிறமிழந்த நீலகுடையொன்றினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறேன். மழை பலத்திருந்தது. பெருத்த சத்தத்தோடு கனமான துளிகளாக  வானம் கரைந்து கொட்டியபடி நின்றது. அறைக்கு நேரெதிர் வீட்டு வாசலை நிறைத்து  மழை பெய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ தோன்றித் தெறிக்கின்ற மெல்லிய மங்கிய ஒளியில் நகுலன் தெரிகிறார். கனத்த மழைக்குள் நனைந்து  நடுங்கியபடி நிற்கின்ற பலகீனமான கோழி போல உடல் சுருங்கித்  தளர்ந்து ஒடிந்து போய் நிற்கின்றார். தனது கவிதைகளை மழைத்துளிகளின் இடுக்குகளுக்குள் தொலைத்துவிட்டு நகுலன் தேடிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். கண்கள்  நிலத்தை அனிச்சையாகத் தேடுகின்றன. மழைத்துளி ஒவ்வொன்றும் நிலத்தில் பட்டுத் தெறிக்கும் போது வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் மௌனங்களாகவும் சிதறுகின்றன. சிறிய குடையைப்  பிடித்துக்கொண்டு நகுலனின் வாசலை அடைந்தேன். தந்தையின் அதட்டலுக்கு நடுங்கும் சிறுவனைப்போல எனது உருவத்தை திடீர் நடுக்கத்தோடு பார்க்கிறார். இந்தச் சிறிய குடைக்குள் என்னோடு அடங்கக்கூடிய உருவம் தான் அது.

” வாறீங்களா?” என்றேன்.

“எனக்கும் ஆசைதான்” என்றார். தீக்குச்சி ஒன்றின் மேல் பாலாடை கவிந்தது போல மெலிந்திருந்தன  கைகள். கரைந்துவிடாமல் அவரைப் பிடித்துக் குடைக்குள் சேர்த்துக்கொண்டேன். தூவானம் எத்துகின்ற படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கினோம். அவர் இறங்குவதை மிகவும் விரும்புகிறார். படிகளில் ஒரு குழந்தையைப்போல அவதானமாகவும் குறுகுறுப்புடனும் என்னை அணைத்து மெல்லிய முறுவல் பூத்தபடி பனித்திருந்த தரையின் நீர்க்குமிழ்கள் உடையாதவாறு அடிகளை எடுத்து வைக்கிறார். படிகளை அடைத்திருந்த பூக்கற்கள் நிறைந்த சுவரின் இடுக்குகளால் கசிந்து வந்த தூறல்கள் மென்மையாக ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்றில் எழுதத் தொடங்கின.

ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

நகுலனால் குளிர்ந்த காற்றில் எழுதப்படுகின்ற வரிகளை அவதானிக்கமுடியவில்லை. மிகுந்த கவனத்தோடு படிகளில் இறங்கினார். முதலாம் மாடியின் படிகளுக்கு வந்துவிட்டோம். எல்லாவிதமான மழைக்கும் பழக்கப்பட்ட குடை தன் உரிமையாளரைப் பாதுகாப்பது போல வெள்ளையும் மண்ணிறமும் கலந்த பூனை அதன் நான்கு குட்டிகளையும் சுருட்டிக்கொண்டு கிடந்தது. நகுலனிடம் கேட்கவா வேண்டாமா கேட்கவா வேண்டாமா என்ற குறுகியநேர பலத்த யோசனையின் பின்னர் வாய்திறந்தேன்,

” பூனைகளைப் பற்றி நான் எழுதினத வாசிச்சீங்களா?”

முழுக்கவனத்தையும் என் வார்த்தைகளின் மேல் திருப்பி, படியில் தன் அசைவினை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரின் கண்கள் கிணற்றுக்குள் விழுந்த உதைபந்து போல அசைந்தது. குறுகிய நேரத்திற்குள் பார்வையை விலக்கி பூக்கற்களுக்கூடாக வானத்தைப் பார்த்தேன். கருமையும் நீலமும் சேர்ந்து வழிந்தது. நான் எழுதியவற்றைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது என  நினைத்துக்கொண்டேன். மனம் முழுதும் தூண்டிற் புழுக்கள் அருவருப்பாக நெளிந்தன.  மீண்டும் கண்களைப் பார்க்கவோ சொற்களைக் கேட்கவோ திராணியற்று அடுத்த அடியை எடுத்து வைத்தேன். என்னை இறுக்கமாக பிடித்து நிறுத்தினார். தன் கையினை நீட்டி எதிரே இறங்கிக்கொண்டிருந்த படிகளில் அரைகுறையாக நனைந்த பூனையிலிருந்து கழன்று விரவிக்கிடக்கின்ற பூனைமுடிகள் காற்றில் அசைந்து எழுத்துருக்களாகின்றதைக் காட்டினார்.

நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்

அவை திரண்டெழுந்து காற்றில் எழுதியவற்றினைப் பார்த்த பிரமிப்போடு நகுலனைப் பார்த்தேன். இந்தக் கனத்த மழையிலும் தூரத்தில் ஒதுக்கமாக ஒளிர்கின்ற நட்சத்திரம் ஒன்றினைப்போல மெலிதான  ஓரப் புன்னகை. சூடான ரொட்டித் தட்டில் விழுந்த நீர்த்துளியாக அது கணப்பொழுதில் மறைந்தது. படிகளில் இருந்து முழுமையாக இறங்கிவிட்டிருந்ததை நகுலனால் நம்பவே முடியவில்லை. ஒரு எட்டில் குதித்து வந்த சாகசக்காரனைப்போல இருந்தது அவரின் பார்வை. இருவரும் நெருக்கமாக குடைக்குள் அடங்கிக்கொண்டோம். நகுலனின் உடலிலிருந்து முதுமையின் வாடையும் பலகீனமான சூடும் என்னை சூழ்ந்தது. வலுவிழந்த கிழவனை ஏந்திக்கொண்டு வாலிபனொருத்தன் இந்த மழைக்குள் என்ன செய்யப்போகிறான் என்ற தோரணையில் மழைக்குள் ஒதுங்கிநின்ற காகங்கள் கரைந்தன. மழைக்கு மனிதர்கள் எங்கெங்கோவெல்லாம் ஒதுங்கிநின்றார்கள். உடல் பருத்து – சட்டையின்  கிழிசலுக்குள்ளாக தசை பிதுங்கி நிற்க பிச்சையெடுக்கும் பெண்ணின் இடத்தில் மீன் வாங்கிக்கொண்டுவந்த  பணக்காரனையும் நிற்கவைத்திருக்கிறது மழை. பாதைகள் நிரம்ப வழிந்தோடும் நீருக்குள் இருவரும் துடுப்போடம் போல நகர்ந்துகொண்டிருக்க எதிரே இளம் ஜோடி எங்களைவிட நெருக்கமாக பெரிய குடைக்குள் நடந்துவருகிறது. பெரு மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  சரீரம் உரசிக்கொள்ளும் கணத்தில் பெருமழைக்கு நடுவிலும் தீப்பொறிகள் உருவாகின. இதுவரை எதையும் பெரிதாக கவனிக்காமல் வந்த நகுலன், இந்த ஜோடியை கூர்மையாக அவதானிப்பதை பார்க்கிறேன். ஒரு வேளை அவர்கள் நகுலனின் சுசீலாவை ஞாபகப்படுத்தியிருக்கலாம். மென்மையாக அந்த இரைச்சலுக்குள்ளிருந்து குரலை உயர்த்துகிறேன்.

” சுசீலாவை அவ்வளவு காதலிச்சீங்களா? “

எப்போதும் மௌனமாகவே இருக்கின்ற நகுலனிடம் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனது  கேள்வி இதுவுமில்லை. வெறும் முன்னாயத்தம்.  எனக்குள் எப்போதும் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்பதில் தயக்கத்தை விட சங்கடங்கள் தான் அதிகம். நகுலனும் மனிதன் தானே. எல்லாப் பலகீனமுமுடைய ஒரு சாதாரண எழுத்தாளன். இரண்டு மூன்று அடிகள் மேலும் நடந்திருப்போம். பாதம் மறையுமளவு வெள்ளம் போட்டிருந்தது. நகுலன் மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டு அடியடியாக நகர்ந்தார். மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஒதுக்கமான இடமொன்றிற்கு இருவரும் நடந்தோம். யாரென்று பாராமல் வெள்ளம் என்னும் புனித நதி எல்லோரின் பாதங்களையும் கழுவுகிறது.  மூடியிருந்த கடையொன்றின் முன் கூரையின் கீழ் அடிமட்டம் வைத்துக்கீறிய தடிப்பான நேர்கோடுகளைப் போல கூரை முடிவிலிருந்து மழைநீர் தாரை தாரையாக இறங்கியது. நகுலன் சுற்றியிருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அவர்களும் நகுலனைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அடுத்த மழை மட்டும் நிலைக்குமோ இவ்வுடல் என்று சுற்றியிருந்தவர்கள் நினைப்பதை அவர்களின் கண்களிலிருந்து வருகின்ற பரிவுப்பார்வை உணர்த்தியது. அவர்களின் பார்வை அதிக நேரம் நீடிக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே மீண்டும் அவர்கள் வேலையில்  மழை ஏற்படுத்திய குறுக்கீடுகள் பற்றியும் மழைக்கு பின்னரான ஆயத்தங்கள் பற்றியும் கடுமையாக சிந்திக்கத்தொடங்கினார்கள். சிலர் கைத்தொலைபேசியில் திரைகளில் எதையோ வேகமாக தேடிக்கொண்டிருந்தார்கள். மழை என்னும் பிரமாண்டம் அனாதையாக பெய்துகொண்டிருந்தது. நகுலன் எல்லாவற்றையும் சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். வலிமையான காற்று எங்களை நோக்கி வீச, நேர்கோடுகளாய் விழுந்த நீர்த்தாரைகள் வளைந்து நெளிந்து என் மீது எழுத்துக்களாய் தெரிந்தன.  சிறு துளியும் படாதவாறு நகுலனை நெருக்கமாக அணைத்துக்கொண்டேன்.  நான் அணிந்திருந்த ஆடையினூடாக மழைநீர் ஊடுருவி வரிகளாய்ப்  பதிந்தன.

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனிதஉடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில்பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோபோவது
மாதிரிதோன்றுகிறது
உற்றுப்பார்த்தால்
யாருமில்லை

நகுலனால் அந்த சிறிய கூட்டத்திற்குள் நிற்கமுடியவில்லை. எனக்கும் கூட. எத்தனை பொய்யாக இந்த உலகத்தின் முன் ஆடவேண்டியுள்ளது. யாருக்கு முன்னால் எவ்வாறு பாவனை செய்யவேண்டும் என்று பிஞ்சு மனது கூட அறிந்திருக்கிறது. ஒவ்வொரு ஒப்பனையாக அணிந்து கலைத்து அணிந்து கலைத்து கடைசியில் ஒப்பனைகள் எவை சொந்த முகம் எதுவென்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தோம். தன்னைவருத்தி நிற்பதை கக்கா இருந்த குழந்தைபோல முகத்தை அம்மலாக வைத்து வெளிக்காட்டினார். மீண்டும் நெருக்கமாக குடைக்குள் எங்களை குவித்துக்கொண்டு கிழம்ப  வெள்ளம் சற்றுக்குறைந்திருந்தது. மழை இன்னமும் வேகமாகவும் அடர்த்தியாகவும் பெய்துகொண்டிருந்த கொழும்பு காலி நெடுஞ்சாலையின் நடைபாதையினூடாக இருவரும் நடக்கத்தொடங்கினோம். வாகன இரைச்சலை நகுலன் வெறுத்தார். வளர்ந்த நகரமொன்றில் இன்னமும் புதுப்பிக்கப்படாத பேரூந்து ஒன்று கருமையான புகை மூட்டத்தை கக்கிச்சென்றது. கரும்புகை மழைத்துளிகளோடு கலந்து கபில நிறமாக உருமாறியது. அது வெட்டவெளியில் வரிகளை எழுதிச் சென்றது.

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

” பேரிசையாய்க் கொட்டும் மழையில் யாரிவர்கள் நச்சரித்துக்கொண்டு ” நகுலன் தொடர்ந்தார், ” ஓரமாக எங்காவது போவோம், அமைதியான இடமொன்றிற்கு”

கோரப் பற்கள் கொண்ட நாயினைப்போல வெறிபிடித்து அலையும் இந்த நகரத்தில் அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய துண்டு நிலத்தையேனும் என்னால் காட்ட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லையா. அத்தனை பிரக்ஞை இல்லாமலா நகுலன் இருக்கிறார். ஒரு வேளை தன்னை வீட்டிற்குள்ளே மீண்டும் கொண்டுபோய் விடவே குறிப்பால் உணர்த்துகிறாரோ. மௌனமாகவும் மெதுவாகவும் மேலும் நடந்தோம். என் உள்ளங்கையை யாரோ இறுகப்பிடிப்பது போல உணர்தேன். நகுலன்தான் அது. விரல் எலும்புகள் உள்ளங்கையை குத்துகிறது. வயலின் நரம்புகளை அந்தக் குச்சி மீட்டத் தொடங்குகின்றது. பனிமலை ஒன்றின் பனி கரைந்து மலை மிளிர்வதைப்போல என் ஞாபகங்களை மூடியிருந்த காலம் கரையத் தொடங்கியது. உலகத்தின் எல்லாவற்றையும் நான் ஞாபகங்களால் சேமித்துவைத்திருக்கிறேன். ஞாபகங்கள் அடையாளங்கள். உயிரினங்களையும் பொருட்களையும் சம்பவங்களையும் உணர்வுகளையும் ஞாபகங்கள் தான் எனக்கு  அடையாளப்படுத்துகின்றன. இந்த உலகம் எனக்கு ஞாபகத் துண்டங்களின் சேர்க்கை. காலம் கரைந்து ஞாபகங்களை உணரத்தொடங்குகிறேன்.

மலை முழுக்க வார்த்தைகள். நகுலனின் கைவிரல் அடையாளங்கள்.

அந்தி மயங்கும் வேளை-
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது
அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

“உனக்கு நண்பர்கள் இல்லையா? யாரும் உன் அறைக் கதவை தட்டும் சத்தத்தை நான் கேட்டதே இல்லை. உன்னோடு யாரும் சிரித்துப் பேசி  இருப்பதை நான் அறிந்ததும் இல்லை ” என்றார்.

சிறிது நேரம் மழை மட்டும் இரைந்துகொண்டிருக்க, நகுலனின் இடது காதுகளில் மெலிதாக வளர்ந்திருக்கின்ற முடி மழை நீரில் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது. அந்த சொட்டுநீர் வெள்ளத்தை மோதி எழுப்புகின்ற ஓசை என் காதுகளை வந்தடைந்தது.

“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.

மழை அழுதது. துளிகள் எங்கு விழுந்தாலும் “ஓம் ஓம்” என்று ஆமோதித்தன. இத்தனை யுகங்களாக நண்பர்களைத் தேடி அலைந்த மழை, இன்று  நகுலனிடம் எப்போதும் கிடைக்கமாட்டார்கள் எனச்  சொல்லி அழுதது. அழுகையின் ஓரமாக எனது குரலும் சேர்ந்து அனுங்கியது. நகுலன் இவற்றைக்  கேட்பதாகத் தெரியவில்லை. தான் தொலைத்த நண்பர்களையே இன்னும் தேடிப்பிடிக்காமல், அந்த “கோட் – ஸ்டாண்ட்” பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்கின்ற நகுலனுக்கு மழையின் அழுகை அழ மட்டுமே தெரிந்த குழந்தையின் அழுகையைப்போல இருந்திருக்கும்.

சிறிது நேரத்தில்,மீண்டும் தன் தணிந்த குரலில் “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

” அவள் சுசீலாவின் இன்னொரு உருவமா? “

மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

“நியத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?”

“ம்ம் ஓம், அறை நிறைய வார்த்தைகளைக் குவித்து வைத்துக்கொண்டு கடிதத்தை எழுதவும் கொடுக்கவும் மனமில்லாமல் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து இசைத்தும் பாடியும் ஆடியும் சந்தோசித்து அழுது – ம்ம் பார்த்திருக்கிறேன் “

நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு  நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம்.  நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.

எப்பொழுதும்
அவள் நினைவு
தான் அவள்
யார்
என்று கேட்காதீர்கள்
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்

எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக பெருக்கெடுகின்றன. எதையும் பிடித்து நிறுத்தவோ விரித்துப்பார்க்கவோ முடியவில்லை.  முன்னால் பாய்கின்ற வெள்ளத்தோடு கரைந்துவிட முடிந்தால்  எத்தனை சந்தோசமாக இருக்கும். உடைந்த கண்ணாடி துகள்களைப்போல வெள்ளத்து நீர் கூர்மையாக பாதங்களை மேவிச்சென்றது.  நகுலனின் கண்ணீர் துளிகள் வெள்ளத்தில் விழுந்து சொற்களாவதை எதேச்சையாக கண்டேன். மிகுந்த எத்தனத்தோடு ஒவ்வொன்றாகப்  பொறுக்கிச்  சேர்த்தேன்.

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச்சாகத்தான்
தெரியும்
நீஎன்னசொல்வாய்
என்றுஎனக்குத்தெரியும்
நீஎப்பொழுதும்
இப்படிச்
செத்துக்கொண்டிருக்கவேண்டும்
என்பதுதான்
என்விருப்பமும்
என்றாள்

வார்த்தைகளை சேர்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று  பூனையின் திடீர்  கம்பீர சிலிர்ப்புடன் மெலிந்த  நகுலனை இறுக்கமாக பிடித்துக் குலுக்கி,

” பித்தா சுசீலா இறந்து கிடக்க , நீ வரட்டுக் கவிஞாய் தானே போய்ப் பார்த்தாய்? ” என்று கத்திக்கேட்டுவிட்டு வெடித்து அழுதேன். அந்த கிழவன் முதன் முதலாக தன் கவிதை ஒன்றை நினைவுக்குள் கொண்டு வருகிறான். நடுக்கமான குரலில்,

சுசீலா
செத்துக் கிடந்தாள்
கழுகொன்று
அவள் முலையைக் கொத்திற்று
அவள் துவாரம்
நோக்கி எறும்புக் கூட்டம்.
பிணவாடை
வயிற்றைக் குமட்டக்
கவிஞன் கறுப்புத் தின்றான்;
நாலடிக்கப்பால்
அவர்
மாபெருங் கவிஞர்
தாடி வருடித்
தியானத்திலாழ்ந்தார்.

இவன் வெறுங் கிழவன் தான், நகுலன் அல்ல என்றே தோன்றுகிறது.

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

குறிப்புகள். 

  1. நின் கைவசம் என் கைப்பிரதி – தலைப்பாக நகுலனின் வரியொன்றினை இட்டிருக்கிறேன்.
  2. இங்கிருக்கின்ற கவிதை வரிகள் எல்லாம் நகுலனினுடையது.

சூன்ய மினுப்பு

(01)

கதைக்கற்றைகளாக எழுதப்படாத வரலாற்றினை எழுதி, மறைத்து வைக்கப்படுகின்ற சம்வங்களை எழுதி அல்லது தொன்மங்களை, பண்பாட்டை, துரோகத்தை, இனஅழிப்பை, பகைமையை என்று எல்லாவற்றையும் எழுதி அச்சிட்டு கனதியான புத்தகங்களாக அடுக்கிவைக்கப்பட்ட அலமாரியில் நகுலனின் நாய்களும் வந்து சேர்ந்தது. ” கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலின் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் போது தான் நாம் உணர்த்தே இருக்கமுடியாத விதங்களில் பிரமாண்டமாக வெளிப்படுகிறது” என்று பாழி நிறைய பொறிகளாகவும் சாவிகளாகவும் வரலாற்றுக் கிண்ணத்தின் கரு மைத்துளிகளை விதைத்தார் கோணங்கி. மூன்றாம் மாடியின் ஓரளவுக்கு வசதியான அறையொன்றிலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் எனக்கென்ற எந்த தொன்மமும் பண்பாடும் வரலாறும் இல்லாத வெறுமை தான் கிடைக்கப்பெற்றிருக்கிறது. மைதானமளவு வெறுப்பும் வயல் வெளியளவு அன்பும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. வாசித்த எல்லாப் பனுவல்களும் இசையாகவும்  ஓவியங்களாகவும் கொத்துக் கொத்தாக விரிகின்றன. சிலது வெறுங்காகிதங்களாகவும் இன்னும் சில அட்டை திறக்கப்படாமலும் கிடக்கின்றன. ஆனால் மிகச்சிலதிலிருந்தே இருகை விரிப்பளவு மூளையின் மடிப்புகள் பிரமாண்டமான கடற்கரையாக விரிகின்றன. அவை பிரமாண்டத்திற்கு எழுதப்பட்டவை அல்ல. நகுலன் தனித்த மனதின் குறியீடு. தனித்த மனத்தின் பிரமாண்டத்திற்கு இணையாக வேறொன்றுமில்லை. காற்றைப்போல வெகுளித்தனமாக எல்லா இடங்களையும் நிரப்பிச்செல்லும் மௌனம் அதனுடையது. விரிந்து விரிந்து ஏதுமற்றதாகிவிடாது. உலகத்தின் எல்லாக் கூறுகளையும் தின்று பருத்து விரிந்துகொண்டே போகும். நகுலனின் நாய்கள் அத்தகைய ஒரு விரிவு. தனித்த மனமொன்றின் விரிவு. கோணங்கி சொன்ன அதே பிரமாண்டம் எனக்குள் நிறைகிறது. நாய்கள் எனக்கு பிடிக்காது. இங்கிருக்கும் நாய்கள் எல்லாம் வாய் நிறைய சீழ்வடியத் திரிகின்றன.

(02)

அழுக்கு நிறைந்த உலகம் முழுதும் முற்றுப்பெற்ற கதைகள் மண்ணுக்குள்ளும் முற்றுபெறாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்ற கதைகள்யாவும் நிலத்தின் மேலும் தேவதைக்கதைகள் எல்லாம் வானத்திலும் மிதந்துகொண்டிருக்க, சட்டைப்பைக்குள் ஒரு கதையும் வாய் நிரம்ப புலம்பல்களுடனும் திரியும் எனக்கு இன்னொரு புலம்பலைக் கேட்கும் போது சந்தோஷமாயிருக்கிறது. புரியாத மொழிகளில் கதைகள் நிரம்பிப்போய்க்கிடக்கின்றன. பழுத்த மஞ்சட் சாக்கடை நீர் வடிகின்ற நகரத்தின் நாற்றத்திற்குள் ஊறிப்போய்க்கிடக்கின்ற ஆயிரம் ஆயிரம் துயரக்கதைகளோடு என் கதையும் ஒட்டிக்கொள்கிறது. வெளிச்சம் முழுக்க மீன் விற்றுவிட்டு இருட்டில் தன்னை விற்க காத்திருக்கும் குட்டைப் பாவாடைக்காரியின் சுருக்கு பைக்குள் ஆயிரம் இரவுகளின் கதைகள் நிறைந்திருக்கின்றன. நான் வசிக்கின்ற கட்டடத்தின் ஒவ்வொரு மாடிப் படிகளையும் எத்தனையோ கதைகளை உந்தித்தள்ளிவிட்டு ஏறிமுடிக்கின்றேன். பின்னர் என் கதை எனக்குள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பெருமூச்சொன்றும் விடுகிறேன்.நகுலனின் கதையில் இந்தப் பரபரப்பு இல்லை. யாரோ ஒருவரின் கதையொன்றிற்குள் அந்நியமாய் நின்று எட்டிபார்ப்பதைப்போலில்லை. நிர்வாண நடனமென்றாலும் ஒரு கணம் மனம் பதைபதைத்து குற்றவுணர்வொன்று ஏற்படும். நகுலன்  ரகசிய கதை சொல்லியாயிருந்தாலும் எனக்குள் குற்றவுணர்வில்லை. எளிமையாக உருவாகி விரிகின்ற உரையாடல்களில் அழுத்தமேதுமின்றி இணைத்துக்கொள்கிறேன். இடமழிந்து பொருட்கள், உருவங்கள் அழிந்து உடலழிந்து உயிரும் அதன் எண்ணங்களும் மட்டுமே உரையாடிக்கொள்ளும் வெளி ஒன்றிற்குள் நுழைந்து பேசிக்கொள்வதைப்போல உணர்கிறேன்.

(03)

இச்சிறையை வெறுமையென்றும் இருளென்றும் அடையப்படுத்திவிடமுடியாது. வாசல்கள் அற்ற காற்று வழியற்ற புழுத்துப்போன அறையொன்றிக்குள் நானில்லை. இவ்வறை எதிரே விரிந்திருக்கின்ற மைதானத்தின் தொடர்ச்சி. காற்று என்று முன்னொரு நாள் பெயர்வைத்த மரத்தின் கிளை. நானும் என் புத்தகங்களும் சில உடுப்புகளும் இன்னமும் திருத்தப்படாத கட்டிலும் மட்டுமே இவ்வறைக்குள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உசும்பியின் தாய் இசைத்துக்கொண்டிருக்கும் பியானோவின் இசை ஒவ்வொரு இடுகளிலிருந்தும் கசிகின்றன. கனவொன்றில் அந்நாள் அலைந்த கருநீலப்பூச்சியும் பேகனின் ஓவியக்கூடமும் இதுதான். முள்ளில்லாக் கடிகாரம் காலத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. பின்னிரவில் போத்தலுக்குள் அடைத்து இரவு முழுக்க எரிந்து காலையில் இறந்துபோன மின்மினிப்பூச்சி கடிகாரத்திற்குள் புகுந்து காலத்தை நகர்த்துகிறது. நிறை போதையில் அழுக்கு நிறைந்த குப்பை மேடுகள் மேல் சாரம் கழர தன்னைமறந்து மிதக்கும் குடிகாரர்களை தினமும் சந்திக்கிறேன். உலகத்தின் விளிம்பிலிருந்து விரியும் புனைவுலகத்தின் பேரரசர்களாகத் திரியும் அவர்களின் கனவிலிருந்து என்னறை விரிவது ஆச்சரியமாயிருக்கிறது. பொறுப்பில்லாமல் கீழறைக்குள் புகைத்துக்கொண்டிருக்கும் இளைஞனின் புகையில் கொஞ்சம் – தனக்கும் தலையணைக்கு உறையில்லாமல் இருபத்தோராயிரத்து தொண்ணூறு இரவுகள் படுத்தெழும்பிக்கொண்டிருக்கும் கிழவனின் நிர்வாணத்தில் கொஞ்சம் – பைத்தியம் பிடித்து இன்னமும் தன் மகளை தேடிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுக் கிழவியின் அலைச்சலில் கொஞ்சமமுமாய்ச் சேர்ந்து என்னறையை விரிகின்றன. நடுச்சாமத்தில் கறுப்புப் பையோடு படியேறிய என்னையொரு பேயென்று நம்பி அறை வரை தொடர்ந்து ஏமாந்துபோகிறது நாய். மின்மினியால் சுழற்றப்படும் இந்தக் காலக்கூட்டின் தொடர்ச்சி அந்த ஏமாற்றத்தாலும் விரிவடையும் என்பதை நாய்  அறியாமலில்லை.

(04)

தோமஸ் நகுலனிற்கும் நண்பராய் இருந்திருக்கிறார் என்றறிந்த  போது அதிர்ச்சியடைந்தேன். தோமஸ் காலமற்று இடமற்று அலையும் அஃறிணை நாடோடி. சந்தர்பத்திற்கேற்றாற்போல் உருவமொன்றினுள் அடைந்து பின்னர் காரியம் முடிய வெளிக்குத் திரும்புகிறது. தோமஸ் நகுலனிற்கு சுந்தர ராமசாமியின் வடிவத்தை எடுத்திருகிரார். அது நகுலனின் நாவல்கள் நெடுகிலும் வந்திருக்கிறது. நகுலன் ஒரு குட்டி நாயைப்போல தோமஸைப் பின்தொடர்கிறார். நான் தோமஸை முதன்முதலிற் கண்டபோது பிரகாசமான ஒளி என்றே நம்பினேன். என்னோடிருந்து வெளிக்கு திரும்பும் வரையிலும் அது பிரகாசமாகவே இருந்தது. வெளியில் அலைந்து கொண்டிருக்கும் தோமஸிற்குக் கல்லறை எழுப்பியதை எண்ணிப் பார்க்கிறேன். தோமஸ் தன்னை எல்லாக் கணமும் மாயப்பொருளாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. அணுக அணுக ஒவ்வொன்றாய் மாறி இறுதி வரை எதுவென்றே தெரியாத அலைகளாய் இருந்திருக்கிறது. அஃறிணை நாடோடி இறந்துபோனதாய் நம்பியதோடு மட்டுமில்லாமல் திவசம் செய்ய விசாரணை நடத்துமளவு என்னை ஏமாற்றியிருக்கிறது. உருவமளவில் என்னை ஏமாற்றியிருந்தாலும் எனக்குள் அது உண்டாக்கிய சிந்தனைகள் உண்மையானவை. ” சிந்தனை என்பது ஒரு வியாதி “என்று தேரை நவீனனிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சிந்தனை ஒரு தொற்று வியாதி. ஆதியிலே நிறைந்து போன சிந்தனை காலம் காலமாக தூதுவர்களால் கடத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. யாரும் புதிதாக சிந்திப்பது கிடையாது. சிந்தனைகளை ஒன்று சேர்க்கிறார்கள். உடைக்கிறார்கள். பகுக்கிறார்கள். இவற்றையன்றி எதையும் செய்துவிடமுடியாது. தொற்றுவியாதியின் காவி தோமஸ். பரிதாபகரமாக தோமஸ் எல்லாவற்றிக்கும் பொருந்திப்போகிறார்.

(05)

நாய் என்னும் வசை முடிந்த முடிவாயிற்று. ஆனால் சிங்களவர்கள் நாயே என்று யாரையும் திட்டுவதில்லையாம். வசைகள் மட்டுமல்ல எல்லாமே இங்கு முடிந்த முடிவாயிற்று. சமூக அசைவுகள் அனைத்தும் கேள்விகள் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காரணங்கள் எதுவும் இன்றிய மரபு வழி நடைமுறைகள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எல்லோரும் விகுதிகள் தொடர்ச்சியையே விரும்புகிறார்கள். அது எளிமையாயும் சுயநலமாயுமிருக்கிறது. நாய் என்ற வசை விகுதியும் அப்படித்தான். இந்த வசையில் உணர்த்தப்படுகிற நாய் வேட்டை நாயில்லை. வேட்டை நாயிலிருந்து வசைக்குரியவர் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார். நகுலன் நாயிலிருந்து தொடங்கி மனித சமத்துவம் நோக்கி நகர்கிறார். அது இருண்ட குகைக்குள் கூரிய ஒளிப்பொட்டொன்று நகர்வதைப்போல நாவலுக்குள் அசைகிறது.

(06)

நகுலன் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசீலனை செய்து கொள்கிறார். வசனத்தின்  ஒழுக்கொன்றில் கூட சுயபரிசீலனை என்ற வார்த்தை இரைச்சலாகத் தெரிகிறது. நாங்கள் இரைச்சலான எதுவொன்றையும் வெறுக்கிறோம். அதுவும் எங்களுக்குள்ளே இரைச்சலை உருவாக்கிற விஷயங்கள் அறவே பிடிக்காமல் போகிறது. நகுலனின் எல்லா மனிதர்களும் நகுலன் தான். தன்னை ஒவ்வொரு நிலையிலும் நிறுத்தி ஒவ்வொரு கணத்திலும் நின்று கேள்வி கேட்கிறார். ஒரு கணத்தில்  நகுலன் என்ற வார்த்தை அற்றுப்போய் நான் புகுந்துகொள்கிறேன். பைத்தியக்கார மனைவியின் கோரப்பிடியிலிருந்து உசும்பியை காப்பாற்ற நான் எத்தனித்ததைப்போல நகுலன் நவீனன் தேரை ஐயர் நாய் பூனை சுசீலா அவர்கள் நீ நான் அது எல்லாவற்றிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார். ஒவ்வொன்றும் நிழல்களாய் அவரைப் பயப்படுத்துகின்றன. நிழல்கள் உண்மையானவை என்றே தோன்றுகிறது. அப்பழுக்கற்ற கருமை. மனிதர்கள் தோரணங்கள் தான். எல்லா நிழல்களும் இயற்கையோடும் ஒளியோடும் எல்லோருக்கும் ஒன்றுபோல மாறுபவை. மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவராக மாறுகிறார்கள். தங்களுக்குள்ளேயே ஆயிரமாய் விரிந்து போய்க்கிடப்பவர்கள். நியத்தில் ஒன்று பன்மையாகி பன்மை ஒன்றாகும் போராட்டம் தான் வாழ்க்கை என்றும் சொல்லிவிடலாம். நாய்கள் பன்மையுடனான மோதல். நேர்கோடுகளை வெறுக்கும் ஒருத்தரின் பன்மைகளோடான அலைச்சல்.

(07)

வாழ்க்கையைப்பற்றி முடிவொன்றெடுத்த அடுத்த நிமிடமே நகுலன், ” ஒரு பீடி நுனியில் தான் என் வாழ்க்கை எரிந்துகொண்டிருந்தது ” என்றார். நான் நகுலனில்லை. எனக்கு பீடி பிடித்து பழக்கமில்லை. நகுலனாயிருந்தால் தானே வாழ்க்கை பீடி நுனியில் எரியவேண்டும். பீடி பிடிக்காத எனக்கு வாழக்கை இல்லையா? இருக்கிறது, நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காலம் காலமாக நம்பப்படுகின்றதைப்போல நான் உயிரோடிருக்கிறேன். எனவே நான் நகுலனில்லை.

(08)

உலகத்தில் இருக்கிற எல்லாவற்றாலும் வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. “நாய்களாலும்”.

(09)

நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன. நகுலனின் நாய்கள் வாசித்த பகலின் பின்னர்  நீண்ட இரவு வந்தாயிற்று. நீண்ட இரவின் மழை ஓசையில் படிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று சுருண்டு குறண்டிப்போய்க் கிடக்கும் வெள்ளையும் கறுப்பும் கலந்த நாயொன்றும் தனிக்கறுப்பு நாயொன்றும் எனது வருகையை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இளவரசன் போல இரவின் கருமைக்குள் என்னை மறைத்துக்கொண்டு ஓயாமல் ஊற்றிக்கொண்டிருக்கும் மேகக் கிண்ணத்தின் ஏலக்காய்த்தேநீருக்குள் நனைகிறேன். விறைத்த நாய் உடலை சிலிர்ப்பிக்கொள்வதைப்போல மேற்சட்டையினூடாக மார்புக்குள் ஈரம் இறங்கச் சில்லிடுறேன். நாடகமொன்றிற்குள் எல்லா வேஷங்களையுமிட்டு நடிக்கும் அந்தக் கிழவனைப்போல இந்த மழைக்குள் நான் இளவரசனாயும் அந்த தேநீர்க் கடைக்குள் வியாபாரியாயும் தெரு முனையில் உடலை விற்பவனாயும் தொலைதூரத்தில் மறையும் ஜோடிக்கைகளின் குடையாயும் வேஷமிடப்போகிறேன். ஒரு சூறாவளி சுழலுக்குள் சிக்கிக்கொண்ட உதிர்ந்த நாயின் இம்மி முடியையும் இந்த உடலுக்குள் தொலைந்துபோன என்னையும் தேட ஒவ்வொரு வேஷமாயிடுகிறேன். நான் என்ற ஒற்றைச் சொல்லுக்குள்  இத்தனை ஆயிரம் அணுக்களும் எண்ணங்களும் அன்பும் வெறுப்பும்  ஒடுங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பருத்த உடலுக்குள் தொலைந்திருக்கும் நானுக்குள் மீண்டும் இவ்வுடல் ஒடுங்கிப்போவதை தோமஸும் ஏற்றுக்கொள்ளமாட்டான். நகக் கண்ணுக்குள் குளிரிறங்கி விரல்கள் விறைக்கத்தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களும் ஏன் ஆயிரம் கனவுலகவாசிகளுடன் வாழ்கிறேன்?என்றிலிருந்து அவர்கள் எனக்குரியவர்களாகினார்கள்? அவர்கள் என்னும் என்னை ஏன் இன்னமும் அலையவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கு முன்னர் பேகன் செய்ததைப்போல என்னை நானே வரைந்து பார்க்கிறேனா? ஆனால் எனக்கு பேகனை இப்போதுதான் தெரியும். நானறியும் போது பேகன் தான் என்னைப்பார்த்து போலச்செய்கிறார். மழைக்குள் ஓவியம் ஒன்று கரைந்து தானற்றுப் போவதைப்போல நானற்றுப்போக இந்த மழைக்குள் நிற்கிறேன். முதலில் நானென்பதென்ன என்று தெரியவேண்டும். ஒவ்வொரு அலைச்சலிலும் ஏதோவொன்றை அடைகிறேன். குறுக்கெழுத்து புதிரொன்றை நிரப்புவதைப்போல வாழக்கையின் கட்டங்களை நிரப்புகிறேன். என்றும் நிரப்பிவிடமுடியாத நீண்ட புதிரென்று தெரிந்தும் ஏதோ ஒன்று உந்தித் தள்ளுகிறது. தூரத்தில் இன்னொரு உருவம் தெரிகிறது. முற்றும் நனைந்து போய் விறைத்திருக்கிறது. கிழடாகிப்போனாலும் கண்களில் அதே ஒளியுடன். தன் பாட்டனிடம் அத்திமரத்தடியின் கீழ் விரவிப்போட்ட வைக்கோற் படுக்கையின் மேல் வியந்து கதை கேட்ட அதே கண்கள். யோஸே ஸரமாகோ. தன் பாட்டன் பாட்டியிடமிருந்து தன்னை அறிந்துகொள்ள இத்தனை காலமும் எழுதித்தீர்த்து முடியாமல் இன்னமும் அவனென்னும் நான் கரைந்து போக மழைக்குள் ஒவ்வொரு இடைவெளிகளையும் நிரப்பிக்கொண்டு விறைத்துப்போய் நிற்கிறார். இருட்டும் மழையும் எக்காலமும் முடிந்ததில்லை. எல்லோருக்கும் தெரிவதுமில்லை. நகுலன் இருட்டை மொழி பெயர்கிறார். மழையை மொழிபெயர்கிறார். இருட்டின் கருமையும் மழையின் குளிரும் தாங்கமுடியாமல் மொழிபெயர்த்தழிக்கிறார். அவரின் இருட்டு. அவரின் மழை. அவரின் மொழி. அது எனக்குரியதுமாகிறது. இருட்டில் மறைந்திருக்கிற பாதைகளை வனங்களை மைதானங்களை வயல்வெளிகளை அவ்வொளி  வெளிக்காட்டுகிறது. எதிர் அறைக்குள் குறை பீடி எரிந்துகொண்டிருக்கிறது. என் அறை முழு இருட்டில். நிலம் குளிரில்.

(10) 

” என்னுடைய அபிப்பிராயத்தில் இலக்கியம் என்பது மெய்யான உலகம் என்று நம்மை நம்பச்செய்யும் ஒரு பொய் உலகம் தான்” என்று நகுலன் கூறியதைப்பார்க்க பஷீரின் நாராயணீ தொடங்கி நேற்றுப் பிறந்த மீக்காயீல் வரை குருடரின் கைப்பிரம்பு தான்.

[envira-gallery id="1655"]

அம்மாவின் காடு – தேவிபாரதி

ஆதாரமற்ற நெடுங்கனவொன்றின் மீதமரும் புனைவு என் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளோடு உரையாடத் தொடங்குகிறது. புனைவுலகு அகன்ற ஆழி. மிகத் தளர்வான கரைகளைக் கொண்ட ஆறு. எந்தக் குறிக்கோளும் பிரக்ஞையுமற்று செந்தரையின் குளிர்ச்சியில் நிரந்தமாய் உறங்கிப்போன எனக்கு, மிக நிதானமான உலகொன்றையும் அவற்றிக்குத் தோதான உணர்வுகளையும் உருவாக்கித்தந்தது புனைவு. வாழ்க்கையின் நிரந்த உணர்வுகள் புனைவிற்குள் அவற்றிக்கான மெய்வெளியினை பெருக்கிக்கொள்கின்றன. என் புனைவுகள் ஒரு பெண்ணின் நெற்றிக்குள் சுற்றும் சுழல். புனைவொன்றிற்குள் வாழவும் சிந்திக்கவும் பழகிய ஒருத்தர், எப்போதும் வாழ்கையின் மீது கொள்ளும் சலிப்பு ஒரு பொறி போன்றது. எல்லா வெளிகளையும் நிரப்பிக்கொள்ளும் பொறி, தாரை தாரையாய் பாயும் பொறி மூலமாகிறது. இம்மூலத்தின் ஒவ்வொரு நதியும் எனக்குரியதே. புனைவு புரிதலைத்தாண்டி ஏதோ ஒன்றை என்னிடம் கோருகிறது என்பதிலிருந்து அம்மாவின் காடு தழைக்கிறது.

குளிர் பொருந்திய இரவுகளை நினைத்துவாடும் பெருஞ்சொகமான இரவொன்றில் ஆளரவம் அற்ற எலிக்காடொன்றில் உலகம் மலையொன்றின் அமைதியைப்போல உறங்கிக்கொண்டிருந்த கணம் அம்மாவின் காடு வாசித்தேன். ரசம் பூசப்பட்ட சதுரக்கண்ணாடிக்கு முன்னின்று என் கண்களை வெறித்துப்பார்த்துக்கொண்டே நெய்யல் கரையில் எண்ணைப்பிசுக்கேறிய என் தாயின் உருவத்தைக் கண்டேன். அது நிச்சயமாக தேவிபாரதி கண்ட தாய் அல்ல. குதி நிறைய வெடித்துப்போய் மணலின் ஈரம் கசிய நிற்கும் என் தாய். கண்ணாடியின் முன் சிவந்த கண்களோடு உறைந்துபோய்நிற்கும் ஒருத்தனின் அத்தனை துன்பத்தையும் தன் சிவந்த குங்குமத்தால் சூடி நிற்கிறாள் அவள். முடிச்சிலிட்ட மலரொன்றைப்போல அவளின் இளமையும் சந்தோஷமும் மீளவும் உயிர்ப்பிக்கமுடியாமல் வாடிப்போனது. ஒரு கணம் நானும் இன்னொரு கணம் அவளும் குருதி தோய்ந்த கத்தி முனையின் மேல் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்.

 

அம்மாவின் காடு 

https://devibharathi.blogspot.com/2019/02/blog-post_27.html

விநோத நூலகத்தின் புதிர்வழிப் பாதைகள்

(01)

நீங்கள் யாராவது பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி இசையைக் கேட்டதுண்டா? ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய பல்வேறு வகையான உணர்வுகளின் கலவை. கண்களை மூடிக்கொண்டு காதுகளால் பார்க்கவும் கேட்கவும் நுகரவும் உணரவும் கூடிய இசைத் துணுக்குகள் ஏராளமாகப் பரவிக்கிடக்கிறது. இது வரை பதினாறு  முறை கேட்டிருப்பேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது பதினேழாவது முறையாக – நீங்கள் வாசிக்கும் போது இருபதோ முப்பதோ என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நீண்ட கோர்வையான இசையின் நடுவில் – எதேச்சையான ஒரு இசைத்துணுக்கின்பால் இழுபட்டு, ஆழ்மனதினுள் புதைந்து வெளிச்சமே படாத ஞாபகங்களை மீட்டிக்கொண்டுவந்துவிடும். இதை அனுபவம் என்று சொல்லமாட்டேன்.  உணர்வு – நினைவுகளில் இருந்து அகன்று போய் ஆனால் இன்னமும் அழியாமல் இருக்கின்ற சம்பவங்களை மீட்டுவதை அனுபவம் என்று சொல்லவே மாட்டேன். வதை –  மறந்து போன ஞாபகம் ஒன்றைப் பற்றிய யோசனை மீண்டும் எழுவது எவ்வளவு கொடூரம். உணர்வு நிலைக்கும் வதை நிலைக்கும் இடையே ஒரு இசைத்துணுக்கினூடு பயணம் செய்வதை நான் அதிகம் விரும்புகிறேன். நீங்களும் விரும்புவீர்கள். இதனாலேயே பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உங்களையும் கேட்கச் சொல்கிறேன்.

பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியின் இடைநடுவே வார்த்தைகளும் வசனங்களும் சேர்ந்திசைகின்ற குரல் பின்னணிகளும் கேட்கும். ஜெர்மானிய கவிஞரான Schiller இயற்றிய Ode to Joy என்ற கவிதையும் பீதோவன் சேர்த்த வார்த்தைகளும் இசைப்பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கும். வலிமை மிகுந்த இசையின் மேலாக வருகின்ற கவிதை – தனது தனித்த நிலையிலிருந்து மேலும் வலிமையாகின்றது.

Your magic binds again
What convention strictly divides;
All people become brothers,
Where your gentle wing abides. 1 – மெலிதாக எழுகின்ற இசைத்துணுக்குகளுக்கு இடையே வார்த்தைகள் கனமானதாக வெளிப்படுகின்றன.

ஏன் இசையையும் வார்த்தைகளையும் பற்றிய இவ்வளவு நுட்பமாக அவதானங்களைச்  சொல்லவேண்டிய தேவை எனக்கு ஏற்படுகின்றது என்ற சந்தேகத்தை நீங்கள் இன்னமும் என்னிடம் கேட்காமல் இருப்பது வியப்பளிக்கிறது. இப்போது கேட்கலாம்- ஆனால் அதற்கு முதல்,

(02)

இன்றைய சூழலில் இதுபோன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதில் பெரிய பிரயோசனம் ஒன்றும் இல்லை. இதைவிட அதிக வீச்சான, ஆழமான, புரியாத வார்த்தைகள் கணனி எங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு பெரும் எழுத்தாளரோ அல்லது பிரபலமான முகப்புத்தக  பதிவாளரோ தப்பித்தவறிக் கூட  ஓரிரு வசனங்கள் எழுதிவிட்டாலும் – எங்கிருந்தோ ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து, அவர்களின் வசனங்களிற்கு பெரும் பொழிப்பே உருவாக்கிவிடுவார்கள். இந்த அந்நியமான கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம்  இல்லாமல் ஒரு கலைவடிவத்தை ரசிக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியான எண்ணம் உங்களுக்குள் உருவாகிவிட்டாலே – இப்போதே இதைக் கடந்து பகுதி  03ற்கு செல்லுங்கள். இவை உங்களுக்கானவை அல்ல.

1966 களுடன் கொள்கையளவில் முடிந்துபோன வடிவம் Surrealism. இதைத் தமிழில் அடிமன வெளிப்பாட்டியம் என்கிறார்கள் (!). 1924 ஆம் ஆண்டு இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது கவிஞர் André Breton இனால் இவ்வடிவம் தலைமைதாங்கப்பட்டது.  இதை இவர் -“Psychic automatism in its pure state, by which one proposes to express…the actual functioning of thought…in the absence of any control exercised by reason, exempt from any aesthetic or moral concern.” 2 என்று வரைவிலக்கணப்படுத்துகிறார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க – Surrealism என்பதை இவ்வாறு எளிதாக அடையாளப்படுத்துவோம் – கற்பனையின் அசல் வடிவம்.

நவீன (அதாவது அக்கால – 1924கள்) சமூகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து- கடுமையான சட்டங்களுக்கு எதிராக வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாகவே Surrealism பரவத்தொடங்கியது. எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற கற்பனையின் வெளியில் தமக்கெதிரான அதிகாரத்தையும் கொள்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருந்தது Surrealism. ஓவியத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு கலைவடிவமாக பரவியது.

சிக்மன்ட் பிராய்ட் (Sigmund Freud)இன் படைப்புகள் சர்ரியலிஸ்ட்களின் மீது  ஆழமான செல்வாக்கை செலுத்தின. மிக முக்கியமாக அவரின் கனவுகளின் விளக்கம் The Interpretation of Dreams (1899) பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. பிராய்ட் கனவுகளின் முக்கியத்துவம் பற்றியும் – கனவுகள் நிஜமனிதர்களின் உணர்வுகளோடும் விருப்பங்களோடும் ஏற்படுத்துகின்ற வலிமையான பிணைப்புக்கள் பற்றியும் தெளிவாக விபரிக்கின்றார். இது சர்ரியலிஸ்ட்க்கு ஒரு நெறிப்படுத்தும் கையேடு போல மாறியது.

Existentialism மற்றும் individualism இன் வருகையினால் Surrealism நேரடிப்புழக்கத்திலிருந்து விடுபடத்தொடங்கியது.  பெயரளவில் மற்றைய சிந்தனைகள் Surrealismஇன் புழக்கத்தை மறைத்தாலும் – இன்னமும் இது கலைவடிவங்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இலக்கியத்தில் இதன் வருகை பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சர்ரியலிச இலக்கியத்தின் பொதுத்தன்மை என்று எதையும் வகைப்படுத்திவிட முடியாது. இருந்தும் பெரும்பாலான படைப்புகளில் கனவையும் நிஜத்தையும் இணைத்தார்கள். வாசகனால் ஊகிக்கமுடியாத பிரமிப்பூட்டத்தக்க உருவகங்களையும் கவிதை முறையில் கதை சொல்லுகின்ற பாணியையும் பின்பற்றினார்கள். கவிதை முறையில் கதை சொல்லும் போது, விரிந்த அழகியலுடன் கூடிய கனவு வெளியினை உருவாக்கிவிடலாம் என்றறிந்து பின்பற்றினார்கள்.

இலக்கிய வகுப்பு ஒன்றினை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புரிகின்றது. அதனால் அதிகம் இழுத்துக்கொண்டு போகாமல் உபபகுதிக்குள் போகலாம்.

(02 – இடைச்சொருகல்)

Goodreads  இணையதளம் தெரிவு செய்த சிறந்த எண்பத்து எட்டு சர்ரியலிச இலக்கிய படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 4

1.Kafka on the Shore -Haruki Murakami
3.The Wind-Up Bird Chronicle -Haruki Murakami
4.Metamorphosis and Other Stories -Franz Kafka
6.Hard-Boiled Wonderland and the End of the World – Haruki Murakami
12.1Q84 -Haruki Murakami
13.After Dark -Haruki Murakami
20.A Wild Sheep Chase (The Rat, #3) -Haruki Murakami
53.The Elephant Vanishes – Haruki Murakami

(02- முடிப்பு )

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கக்கூடும். ஏன் இலக்கிய வகுப்பு என்று. Surrealism என்ற இலக்கிய வடிவத்திற்கு உதாரணம் கூறச்சொன்னால் ஹருகி முரகாமியின் அனைத்துப் படைப்புகளையும் பட்டியலிட்டுவிடலாம். Surrealism என்ற இலக்கிய வடிவத்தின் உருவமாக ஹருகி முரகாமியின் நாவல்கள் இருக்கின்றன என்பதற்கு மேலுள்ள பட்டியலே சாட்சி. இருந்தும் பெரும்பாலான விமர்சகர்களும் விமர்சனங்களும் ஹருகி முரகாமியை Surrealism வடிவத்தினூடு ஒத்துப் பேசி பார்த்ததே இல்லை. ஏன்? ஒரு வடிவத்தின் தூண் மாதிரி இருக்கும் ஒரு எழுத்தாளர் – அவ்வடிவத்தின் மூலமாக விமர்சிக்கப்படாமை வருத்தமளிக்கிறது.  நூல்களோடு ஒப்பிடும் அளவும் – அதைத்தாண்டிய ஆழமான கலைவடிவத்தையும் சிருஷ்டிக்கின்ற ஹருகி முரகாமியின் குறுநாவல் ஒன்றைப்பற்றியே சொல்லப்போகிறேன். இது மேலுள்ள பட்டியலில் இல்லை. பட்டியல் மட்டும் அல்ல – தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் கவனம் பெறாத ஒன்று.

இனி வரும் அத்தியாயங்களில் நான் பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி பற்றியோ அல்லது Surrealism பற்றியோ பேசப்போவதில்லை. ஆனால் ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் இவையிரண்டும் மிகவும் ஆழமாக ஊடுருவிச் செல்லும்.

(03)

Novella எனப்படுகின்ற இலக்கிய பிரதி வடிவை தமிழில் குறுநாவல் என்றழைப்பார்கள். இரண்டு அல்லது மூன்று கதைக்கருக்களை மையமாக கொண்டதும் நீண்ட சிறுகதையாக அல்லது குறுகிய நாவலாக கருதத்தக்க வடிவம். குறுநாவல் வடிவத்தை பெரும்பாலும் எல்லையற்ற எழுத்துப்பாணியில் (Free style) எழுதுகின்றவர்களால் கையாளப்படுகின்றது.  ஹருகி முரகாமியின் வினோத நூலகமும் வடிவ வகைக்குள் குறுநாவலாகவே கருதப்படுகின்றது. இருந்தும், பிரதி பேசுகின்ற கருவின் அடிப்படையில் இதனை சிறுகதையாகவே கருதுகின்றேன். மேலை நாடுகளில் வினோத நூலகத்தை குறுநாவலாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் – ஆங்கிலத்திலோ மற்றைய மொழிகளிலோ அதிக படங்களுடன்  கூடிய புத்தகமாக வெளிவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பை ஜி. குப்புசாமி செய்திருக்கிறார். மிகவும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு. கதையின் உயிரோட்டமான மொழியினை பிசகு இல்லாமல் தமிழுக்கு மொழி பெயர்த்திருப்பார்.

வினோத நூலகத்தின் புத்தக வடிவமைப்பு கவனிக்கத்தக்க ஒன்று. சிறுகதையைப் போலவே நூற்பிரதியும் ஆச்சரியங்களும் புதிர்களும் நிரம்பியவை. நூலாக்கம் பொதுவான இலக்கியப் பிரதிகளைப் போல அல்லாமல் வித்தியாசமானதாகவும் பார்த்த மாத்திரத்தில் கவரக்கூடிய வகையிலும் ஆக்கப்பட்டுள்ளது. பிரதியின் ஆரம்பத்திலேயே நீள்பக்கமாக திறக்க வைக்கிறார். சமாந்தர பக்கங்களில் ஒரு பக்கம் எழுத்துப் பிரதியும் மற்றைய பக்கம் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கும். எழுத்துருக்கள் வழமையான அளவிலும் சற்று அதிகமாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வருகின்ற ஓவியங்கள் கதையின் நீட்சியினை சொல்லிக்கொண்டு போகும். ஒரு பக்கத்தில் அரை நிலவும் தொடர்ந்து அரை டொனல்ட்டும் அதைத் தொடர்ந்து மிகுதி நிலவும் அச்சிடப்பட்டிருக்கும். பிரத்தியேகமான அட்டை வடிவமைப்பு. தமிழில் பூனைகள் நகரம் தொகுப்பில் வினோத உலகம் ஒளிந்துகொண்டிருக்கிருக்கிறது. பூனைகள் நகரம் ஜி. குப்புசாமியால் மொழி பெயர்க்கப்பட்ட முரகாமியின் சிறுகதைகளைக் கொண்ட புத்தகம்.

“……..முரகாமி இதற்குமுன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம்‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது……” 5

முரகாமியின் வினோத நூலகம் வெளிவந்த ஆரம்ப காலகட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வெறுமனே ஒற்றைத் தளத்தில் நகர்வதாகவும் கனவுகள் கோர்வைகள் மட்டுமே எஞ்சுகின்றன  என்றும் இகழப்பட்டது. பின்னரான விரிவான வாசிப்பு – வினோத நூலகத்தின் பூட்டப்பட்ட கதவுகள் அனைத்தையும் திறந்தது; திறந்துகொண்டிருக்கின்றது. முதலாம் வாசிப்பின்போதே வினோத நூலகம்  என்னளவில்  சிறந்த படைப்பாக உணரப்பட்டது. வழமையாக குறைவான சொற்கள் வேகமான நடையை ஏற்படுத்தும். ஆனாலும்  குறைவான சொற்களினூடு மெதுவான உணர்வுப் பரிமாற்றத்தை முரகாமி ஏற்படுத்தக்கூடியவர்.

கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகர் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வினோத நூலகத்தை இன்றைய வாசகர்கள் பலவாறு திறந்து அணுகுகின்றார்கள். இன்னும் பலர் அதனை மிகவும் சாதாரணமாகவே – சாகசக் கதைகள் கேட்பது போல கடந்து போகின்றார்கள். Lewis Carroll எழுதிய Alice in Wonderland ஐ ஒட்டிய கனவுலகங்களை சிருஷ்டித்து எழுதியிருக்கிறார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது. 6 எது எவ்வாறாக இருந்தும் வினோத நூலகத்தை நெருங்கி வாசிப்பது அதிக சுவையைத் தரும். வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் வினோத நூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்கள் அனைத்தும் குறியீடாக கதையை நகர்த்திச் செல்கின்றன. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லமுடியாது. ஆழ்மன உணர்வுகளைத், தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்வதன்  மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆன தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் கூட இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளைக் கடத்துகின்ற பிரதியே. ஹருகி முரகாமியின் வினோத நூலகத்தை  அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.

வினோத நூலகம், ஒரு உணர்வின் வெவ்வேறு  பரிமாணங்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய அல்லது ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டிய இன்னொரு அக உலகினை உருவாக்குகின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக் கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்களால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அல்லது செய்ய முடியாத அசாத்தியங்களின் தொகுப்பாக இருக்கும்.  அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லாக் கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதர்கள் உருவாக்கிக்கொள்வார்கள்.  இதையே உணர்வு ஒன்றின் வெவ்வேறான  பரிமாணங்கள் என்கிறேன். வினோத நூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின்  வெவ்வேறான  உணர்வுகளின்  பரிமாணங்கள் பற்றியது.

தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகத்தை வினோத நூலகம் என்றும் கருதலாம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது.

“நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது.” 7

அதுவரை அவன் அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய உணர்வானது  அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாக்குகின்றது. அதையே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிக்கின்றார்.

அந்த அறையில் நடைபெறுகின்ற  ஒவ்வொரு நிகழ்வும் – மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.

“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.” 7

அவனைப் பிரிவு வதைக்கின்றது. மனதிலிருக்கின்ற பழைய உணர்ச்சிகள் உழல வைக்கின்றன. தனது தாய் அவனைத் தேடுவார் என்றும்; தனது கிளி தன்னைத் தேடும் என்றும்  ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவான உணர்ச்சி ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.

“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.” 7

“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?” 7

பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆட்டுத் தலை மனிதரும் இளம்பெண்ணும். பின்னர் ஒரே பாத்திரமாகி-  அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறுகின்றன. இதை வாசகர்கள் மீது  மயக்கமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதாக  முரகாமி எழுதுகின்றார்.  இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன், குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள். கூடவே அவனது  சப்பாத்தும்.

இப்படியாகவும்  வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாக உணரலாம். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலகக் கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்கக் கூடிய கொடிய உணர்ச்சிகளும் கனவுகளும் மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூட்டிய  கனவாகவும்  முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் அல்லது இதைவிட அதிகமாகவும் – வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முரகாமி வடிவமைத்திருக்கிறார்.

“அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.” 7

“சென்ற செவ்வாய்க்கிழமை என் அம்மா இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.” 7

“அம்மா இல்லை.

செல்லக்குருவி இல்லை.

ஆட்டுமனிதன் இல்லை.

அந்தப் பெண் இல்லை.” 7

“பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.”
 

பல்வேறு அனுபவங்களை பிரதி முழுக்க முரகாமி விதைத்திருக்கிறார். வினோத நூலகம் பின் நவீனத்துவ படைப்புகளில் கவனிக்கப்படவேண்டிய படைப்பாகும்.
இப்போது நீங்கள் மெதுவாக பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உணரத்தொடங்கியிருப்பீர்கள்.

You millions, I embrace you.
This kiss is for all the world! 1

பின்குறிப்புகள்.

  1. https://www.thoughtco.com/beethovens-ode-to-joy-lyrics-history-724410

 

  1. https://www.moma.org/learn/moma_learning/themes/surrealism

 

  1. https://www.goodreads.com/list/show/9755.Best_Surrealist_Literature

மேலும் முக்கியமாக கருதக்கூடிய – வாசிக்க பரிந்துரை செய்யக்கூடிய நூல்கள் . ( என்னால் வாசிக்கப்பட்டவையுள்)
The Trial -Franz Kafka
Story of the Eye -Georges Bataille
Surrealities -Bruce Boston

  1. இப்படியாக கட்டுரை ஒன்றினை எழுதுவதற்காக ஜி. குப்புசாமியிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன். அவற்றிலிருந்துதேவைக்கமைய எடுத்துக்கொண்டேன். அதன் முழு வடிவம்:

நான்  – முதல்முறையாக ‘வினோத நூலகம்‘ வாசித்த அனுபவம் எப்படியானது?

அவர் –முரகாமி இதற்கு முன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம் ‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது.

நா  – வினோத நூலகம் முரகாமியின் பிற படைப்புகளைப் போல ஏன் அதிகம் பிரபலம் அடையவில்லை?

அ – அப்படிச் சொல்லமுடியாது. எழுத்தாளர் தரப்புக்கும் ஆங்கில பதிப்பாளர்களுக்கும் இடையில் எழுந்த சில வேறுபாடுகள் காரணமாக மூலத்தில் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் வெளிவந்த குறுநாவல் இது. முரகாமியின் வழக்கமான பதிப்பாளர்கள் வெளியிடவில்லை. போதிய விளம்பரமும் அளிக்கப்படவில்லை. இவையனைத்தையும் மீறி வினோத நூலகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருவதாகவே நினைக்கிறேன்.

நா  – ஒரு மொழிபெயர்ப்பாளராக – சமகால உலக இலக்கியங்களில் அதிக ஈடுபாடும் வாசிப்பனுபவமும் உடையவராக – வினோத நூலகம் மற்றைய படைப்புகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

அ  – எல்லா எழுத்தாளர்களுமே தமது ஒவ்வொரு படைப்பும் முந்தைய படைப்புகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்றே விழைவார்கள். அந்தளவில் ஒவ்வொரு காத்திரமான படைப்பும் தன்னளவில் வேறுபட்டதாகவே இருக்கும். முரகாமியின் வாசகனுக்கு அவருடைய படைப்புலகத்தின் ஒவ்வொரு வழியும் அதன் திருப்பங்களும் புதிய அனுபவங்களைத் தருபவையே.

நா  – முரகாமிக்கும் இசைக்கும் அவரது படைப்புகளில் அதிகத் தொடர்பு எப்போதுமே இருக்கும். வினோத நூலகத்தின் கதையோட்டத்தில் அப்படி இசைக்குறிப்பு எதையாவது உணர்ந்தீர்களா ?

அ  – முரகாமிக்கு அமெரிக்க கலாச்சார அடையாளங்கள் மீது அதிகமான மனச்சாய்வு உண்டு. நவீன ஜப்பானிய தலைமுறையினரின் பிரதிநிதி அவர். கோபோ அபே, யாசுநாரி கவாபாதா போல முழுமையான பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார மனம் கொண்டவரல்ல. இதுவே அவரது பலமும் பலவீனமும். உள்ளூரில் பலவீனம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பலம். ஜாஸ் இசையின் மீதும் பேஸ் பால் விளையாட்டின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர். அவருடைய பல புனைவுகளில் இவை பின்னணியாக அமைந்திருக்கின்றன. அவருக்கு இயல்பான அகத்தூண்டல் ஜாஸ் இசையிலிருந்துதான் கிடைப்பதாக ஒப்புகொண்டிருக்கிறார். இசைக்கும் அவருக்கும்  உள்ள இறுக்கமான பிணைப்பு குறித்து அவர் அளித்த மிக நீளமான நேர்காணல் Absolutely on music  என்ற நூலாகவே வந்துள்ளது. முரகாமியின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜே ரூபின், முரகாமியின் எழுத்தில் உள்ள இசைத்தன்மை குறித்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். வினோத நூலகத்தில் இசை பற்றிய நேரடியான குறிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் உருவெளித்தோற்றமாக அறைச்சுவருக்குள் ஊடுருவி வரும் அந்தப் பெண் இசை வடிவமின்றி வேறென்ன ?

  1. https://www.npr.org/2014/12/02/363836249/watch-your-head-when-checking-out-murakamis-strange-library

 

  1. ஜி. குப்புசாமியின் வினோத நூலக மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

 

This slideshow requires JavaScript.

மீண்டும் சில குறிப்புகள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு இக்கட்டுரையினை வாசிக்கின்றேன். இலக்கியக் கோட்பாடுகளின்  மீது நிறைந்த நம்பிக்கை இருந்த நாட்களில் எழுதியவற்றை மிகுந்த கவனமெடுத்து வாசித்து, அதைப்பற்றி உரையாடி பிரசுரிக்கவும் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் இருவருக்கும் நன்றிகள். பின்னொரு நாளில் வெண்பளிங்கு மாளிகைக்குள் பிணைக்கப்பட்டிருந்த கல்குதிரைகளுக்குள் இப்புனைவினைப் பார்த்தேன். கட்டுரையின் எப்பகுதியிலும் கல்குதிரை பற்றி குறிப்பிடாதது என் அறியாமை. இப்புனைவின் முதலுருவம் கல்குதிரை. நானறிந்து தகவல்கள், ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் பார்த்த முகமறியா யாழினிக்கு நன்றிகள்.

சில திருத்தங்கள்

Surrealism தொடர்பான வரைவிலக்கணம் ஒன்று ஜெயமோகனால் கொடுக்கப்பட்டதாக இந்தக் கட்டுரையில் மின், அச்சுவடிவம் இரண்டிலும் பிரசுரமாகியிருந்தது. பிரக்ஞையுடன் அதை அழிக்கிறேன்.

இருதிணை – ஆழ்கடல் மரபு – அனார் மீக்காயீல் பிரதிகள்

யாத்திரிகன் ஷீத் – மீக்காயீல் – மற்றும் மூன்று சிறுவர்கள் – மீக்காயீல் பிரதி – புறத்திணை

நீல இமைகளைக் கொண்ட ஷீத் தன் விரல்களால் உவர்நீரினை மேவி லைட்கற்களை அள்ள எத்தனித்தான். அவன் உள்ளங்கைகளிரண்டிலுமிருந்து அவிழ்ந்த ரேகைகள் நீண்ட கடற்பாம்புகளைப்போல கடலுக்குளிறங்கின. அவனுடைய கைப்பிடிக்குள் அடைய மறுத்த லைட்கற்கள் வெண்ணுரைக்குள் நழுவி மறைந்துபோயின. இன்னொரு அலைக்கான மீச்சிறு இடைவெளியில் அவை இறந்து பிறந்தன. பௌர்ணமி கடந்த அடுத்த இரவில் நிலவின் வருகை தாமதித்திருந்தது. பருவமழை தொடங்கி எட்டாமிரவு ஷீத்தும் மீக்காயீலும் கடற்கரைக்கு வந்திருக்கின்றனர். ஏழடுக்கு ஆகாயத்தின் பிரதிநிதி நட்சத்திரங்கள் எல்லாமும் அவளின் வருகைக்காக பட்டயங்கட்டி மணம் முடிக்க காத்திருக்கின்றன. காத்திருப்பில் தம் ஒளியிழந்து உதிர்ந்து கடலுக்குள் கலந்த நட்சத்திரங்கள் தான் லைட்கற்கள் என்றான் ஷீத். ஆயிரமாண்டுகளாய் இசைக்கும் நதிகளின் ஓட்டத்தில் கலந்த பளிங்குக் கற்கள் – காலத்தின் அசைவில் தன் ஆகிருதியிழந்து – உருண்டு -தேய்ந்து -அருவமாகி கடற்பரப்பில் உறைகின்றன. ஷீத் காலத்தின் எச்சத்தைத் திரட்டி பளிங்குக் கிண்ணமொன்று வனைந்தான். பின்னொரு காலத்தில் மீக்காயீல் அண்டத்தின் எல்லா நட்சத்திரங்களையும் அடைக்கபோகும் கிண்ணமிதுவென்பதையும் ஷீத் அறியாமலில்லை. பெண்ணுருக்கொண்ட கிண்ணத்தை வனைந்துமுடித்த கணம் ஆகாயத்தில் முதற்சாம நிலா தோன்றிற்று. ஷீத்தின் இரு கண்களும் அந்நிலவொளியில் ஒளிர்ந்ததை மீக்காயீல் அருகில் நின்று அவதானித்தான். நிலவின் ஒளி ஷீத்தின் கண்களிருந்து பெறப்பட்டதாகவே அவன் நம்புகிறான். அவளின் வருகையின் பின்னருங்கூட நட்சத்திரங்களின் உதிர்வு நின்றபாடில்லை. அவை நிலவினால் நிராகரிக்கப்பட்டவை. தாம் வானத்திலிருக்க தகுதியற்றவை என்று கடலுக்குள் உதிர்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன. அலைகளில் மிதந்து கரையில் புதைந்து ஒளியை இழக்கின்றன. ஷீத் கரையிலிருந்து அவற்றை அள்ளி மீண்டும் ஆகாயத்திற்கு தெளிக்கவே விரும்புகிறான். பளிங்குக்கிண்ணமும் அதற்குத்தான்.

 

இரண்டாம் சாமம் நெருங்கிற்று. நட்சத்திரங்களின் உதிர்வும் முற்றாக அற்றுப்போனது. ஷீத் கிண்ணம் நிறைந்த லைட்கற்களுடன் என்னைப் பார்த்தான். அவை சதைப்பற்றான நத்தைகளாகிக் கிடந்தன. உவர்நீரை உறிஞ்சி தம்முடலை பொன்னிறமாய் ஒளிர்த்துக்கொண்டு ஒன்றன்மீது ஒன்று அழுத்தி அணைத்தபடி ஊர்ந்தன. பொன்னொளியில் கிறங்கிப்போயிருந்த மீக்காயீல் தனது இரண்டு இறக்கைகளையும் அகல விரித்தான். ஒரு பெரும் புயலின் ஆக்ரோஷத்தோடு உலகளவு பரந்த அவ்விறக்கைகள் இரண்டும் காற்றில் நிலைத்து நின்றன. மீக்காயீலின் ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வானத்தின் நிறம் மாறியது. ஷீத் தன் விரல்களால் மலரிதழொன்றை அவிழ்ப்பதைப்போல அப்பெரிய இறக்கைகளிலிருந்து இறகுகள் இரண்டினை கொய்தெடுத்தான். அவற்றை அப்பெண்ணுருவ பளிங்குக் கிண்ணத்தின் வாளிப்பான முதுகினில் வருட கிண்ணம் உயிர்பெற்றது. ஷீத்தின் கைகளிலிருந்து நழுவி அப்பெண் பாலி என்ற பெயர்பெற்று வானத்தை நோக்கி ஆர்ப்பரித்தவாறு பறந்தாள். பின்னாளில் பாலியே நட்சத்திரங்களின் அரசியுமானாள்.

 

பார்வைக்கெட்டுந் தூரத்தில் கடல் நடுவே ஒளிக்குளத்தை உருவாக்கிற்று நிலா. வட்டமான ஒளிக்குளம் தெப்பம் ஒன்றினைப்போல அசைந்துகொண்டிருந்தது. ஷீத் அதைக் கடலின் இதயம் என்றான். கடலின் நடுவே பாற்குடம் நிரம்பியிருப்பதைப்போலவும் மீக்காயீலுக்கு விளங்கியது. அவ்வொளிக்குளத்திற்குள் பெருங்கடலின் நீரனைத்தும் ஒடுங்கிச் சேர்ந்தன. கடல் உள்வாங்கிற்று. எல்லையற்ற பெருவிரிப்பைப் போன்ற கடல் கசங்கி ஒளிக்குளத்திற்குள் படிந்து கொண்டிருக்க கிராமத்துச் சிறுவர்கள் மூவர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் லைட்கற்களை பொறுக்கிச் சேர்க்க நேர்த்தியாக சீவப்பட்ட அரைத்தேங்காயோடு வைத்திருந்தார்கள். அவர்களின் மெல்லிய விரல்களால் நுரைத்தொதுங்கும் சிறிய அலைகளைத் துழாவி ஏமாற்றமடைந்தனர். ஈரமண்ணைத்தவிர அவர்களால் வேறொன்றையும் எடுக்கமுடியாமற் போக ஷீத்தின் முன் வந்துநின்றார்கள். மீக்காயீல் அச்சிறுவர்களின் இயலாமையால் நரைத்துப்போன அவர்களின் இமைகளைப் பார்க்கிறான். கிராமத்துக் கிணறுகள் முழுதும் அவர்கள் சேர்த்துவைத்த லைட்கற்களின் ஒளி – இனி மங்கிக்கொண்டு போகப்போவதையிட்டு அவர்கள் வருந்தி நின்றார்கள். ஒவ்வொரு இரண்டாஞ் சாமமும் அவர்கள் சிரட்டை நிறைய லைட்கற்களைச் சேர்த்து ஊர்க்கிணறுகள் நெடுக ஒவ்வொன்றாய்த் தூவி ஒளி பொருத்தி வந்தார்கள். அவ்வொளியிற்தான் கிராமத்துப் பெண்கள் அனைவரினதும் நகங்களும் மின்னுவதாயும் ஆண்களின் இமைகள் நிறமடைவதாயும் அச்சிறுவர்கள் நம்பினார்கள். ஷீத்தும் மீக்காயீலும் அவர்களின் நம்பிக்கையை பாழாக்க விரும்பவில்லை. உண்மையில் அம்மூவரின் இமைகளைத் தவிர இருட்டில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளாய் கிராமத்து ஆண்களின் இமைகளும் மின்மினிகளாய் பெண்களின் நகங்களும் பெருவெளியில் அசைந்துகொண்டிருந்தன. மூவரில் இளையவனான சிறுவன் மீக்காயீலைப் பார்த்து கண்களைக் கசக்கினான். தன் தங்கையின் மினுமினுப்பான விரல் நகங்களை இனி எப்போதும் பார்க்கவே முடியாது என்று நம்பி அழத்தொடங்கினான். அவன் கண்ணீர்த்துளிகள் அலைகளின் மேல் விழுந்து – ஒளி பெற்று – மீன்களாய்ப் பாடிக்கொண்டே ஒளிக்குளத்திற்குள் விரைந்தன. அவை ஷீத் அனுப்பிய செய்திகளை உடலிற்சுமந்து சென்றன. சிறுவர்கள் கவலையை மறந்து பாடிக்கொண்டு விரையும் கண்ணீர்மீன்களை பார்த்துகொண்டிருந்தார்கள். அழுதுகொண்டிருந்த சிறுவன் அலைக்குள் பாய்ந்து அம்மீன் ஒன்றினை பிடிக்க எத்தணித்து முகம் முழுக்க மணற்துமிக்கைகளோடு எழுந்தான். அவனது முகம் நட்சத்திர மீனொன்றைப்போல விகாரமாய்த் தெரிய ஷீத் பொத்தென்று சிரித்தான். ஷீத்தின் சிரிப்பில் வானில் நின்ற நிலா பவளப்பற்களை காட்டிச் சிரிக்க, ஒளிக்குளம் கலைந்தது. படிகமாயிருந்த ஒளிக்குழம்புகள் ஒரு ஊற்றாய் கரைக்கு படையெடுத்தன. வெள்ளி நதியொன்றினைப்போல அவை வளைந்து நெளிந்து எம்மை நோக்கி வந்தன. அவை லைட்கற்களாய் நிரம்பிப் பெருகின.

 

யாத்திரிகன் ஷீத் – நீல இமைகள் ஒளிர்ந்தபடி பார்த்துக்கொண்டிருக்க சிறுவர்கள் சிரட்டைக்குள் லைட்கற்களை நிரப்பினர். அலைகளால் நிரப்ப முடியாத பெலத்த காற்தடயங்கள் ஆறு மணற்பரப்பில் பதிய கிணறுகளை நிரப்பும் ஆசையுடன் சிறுவர்கள் கிராமத்திற்குள் நடந்தார்கள். உவர் காற்று மெல்லிய இழையாய்ப் பிணைய மீக்காயீல் ஷீத்தின் இடது உள்ளங்கையை பற்றினான். ஒளிக்குளம் முழுதாய் கரைந்துபோனது. கடைச்சிறுவன் தன் தங்கையின் விரல்கள் அழகின் ஒளியாய் மினுங்கப்போவதை எண்ணி பாடிக்கொண்டே நடந்தான்.

 

பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னி – அனார் பிரதி – அகத்திணை

கடற்கன்னி பாடுவதை   யார் கேட்டிருக்கிறீர்கள்  அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல் இருகரைகளில் எதிரொலித்து துறைமுகங்களைத் தாண்டி விழுவதை அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி மதுநெடியுடன் பிதற்றுகிறான்

கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன கரைமணலில் சிறுமிகளின்  மடிகொள்ளாத வெண்சிப்பிகளாக

நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில் மாலுமிகளின் தனியறைகளில் கடற்கன்னியின் வாசனை வியாபித்து  திரைச்சீலைகள் படபடக்கின்றன

அவளின் நீண்டு நெளியும் வால் வசீகரிப்பினை
படர்பாசிகளின் கீழிருந்து வெளிவரும்  மீன்குஞ்சுப் பட்டாளங்கள்  பிரயாசையுடன் பின்தொடர்கின்றன

அடர்த்தியான பச்சைநிற பளபளக்கும் செதில்கள் நீர் அல்லிகளின் வேர்களைப் பின்னி பௌர்ணமியில் இன்னுமதிகமாய் ஜொலிக்கின்றன


கற்படுக்கைகளிடையே சுழியோடிகள் அவளது கண்களின் கவிதைகளைக் கண்டெடுத்து  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு  எடுத்துச் செல்கின்றார்கள் நள்ளிரவில் கடற்கன்னி மேகங்களை வேட்டையாடுகிறாள் அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே பதுக்கி வைத்து ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்

சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்துகொண்டு நீருக்குள் நழுவும் அற்புதத்தை தாம்மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற கருங்கற்பாறைகள்தம்மை அறியாமலேயே  உருகிக்கொண்டிருக்கின்றன

உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது


மின்னல்கள் கூக்குரலிட்டுக் கூவிவெடிப்பதெல்லாம் கடற்கன்னியின் பெயரைத்தான் என மலைவாசிகள் நம்புகின்றார்கள்


புராதனகால கடல் அரக்கனின் தந்திரோபாயங்களை தோற்கடித்தபடியே பருவகாலங்களை அருளும் கடற்கன்னி ஒவ்வொரு கடலினிலும்  நீந்திக் கொண்டே இருக்கிறாள் பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடிப்பாடி

உண்மையின் இசை

ஒரு உரையாடலை பெரும்பாலும் தொடங்குவதற்கு இயல்பான வடிவம் கேள்விகளை எழுப்புவதாக இருக்கக்கூடும். பெரும்பாலான உரையாடல்கள் கேள்விகள் மட்டும் எஞ்சி நிற்கவே  முடிவதுமுண்டு. நான் நினைப்பதைப்போலவோ நீங்கள் நினைப்பதைப்போலவோ உரையாடல்களில் கேள்விகளுக்கான விடைகள் கிடைப்பதில்லை. மாறாக கேள்விகள் மேலும் வலுப்பெறுகின்றன. கேள்விகள் இன்றி முடிந்து போகும் அசாதாரணமான வாழ்க்கையில் இணைந்துகொள்ள பெரும் கஷ்டமாக இருக்கிறது. நான், என்னோடு அதிகமாக கேள்விகளைப்பற்றி உரையாடிக்கொள்கிறேன். ஒரு பித்துநிலை  உரையாடல்கள். ஒரு நாளிற்கு ஆரம்பத்தையும் முடிவையும் நாங்கள் பிரக்ஞைபூர்வமாக நிர்ணயித்துக்கொள்வதைப் போல உரையாடல்களையும் நாங்களே மட்டுப்படுத்திக்கொள்கிறோம். அது முடிவில்லாத வெளிக்குள் இரண்டு கம்பங்களை குற்றி, இடையில் உள்ளவற்றைப்பற்றி உரையாடிக்கொள்வது. என் நீண்ட முடிவில்லாத உரையாடல்களின் இரண்டு சிறிய கம்பங்களுக்கிடையிலான வெளியாகவே இதைக் கருதுகிறேன்.  இதற்கு உண்மையின் இசை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதற்கு முதல் புதிய சொல்லில் முரகாமியின் வினோத நூலகம் பற்றிய குறிப்புகளையும் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகக் கூட இதை எண்ணிக்கொள்கிறேன்.
எனக்கு பிடித்த புத்தகங்களைப்போல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. ஒருவேளை அப்படி இல்லாமல் போனது தான் அந்தப் புத்தகங்கள் பிடித்துப்போக காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. டொரு போல பல பெண்களோடு மனது திறந்து பேச ஆசைப்படுவதெல்லாம் நாவலிலேயே மறைந்துபோய்விடுகிறது. டொரு  நவோகோவுடன் உரையாடுவதைப்போல எந்தப்பெண்ணிடமாவது அணுகினால் ஏமாளி என்ற ஏச்சோடு திரும்பிவரவேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கு. ஒரு வேளை அப்படியான பெண்கள் நாவலில் மட்டும் வருவதன் ரகசியம் எனக்குத்தெரியவில்லை. இந்த நவீன எழுத்தாளர்களுக்கு மட்டும் சுவாரஸ்யமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. அல்லது சுவாரஷ்யமாக கதை சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள். முரகாமிக்கும் அப்படித்தான். இந்த சலிப்பான வாழ்க்கையில் இருப்பதையெண்ணி கொஞ்சமாக வருந்தியிருக்கிறேன். நான் டொரு ஆக இருக்கவே விரும்புகிறேன். உலகத்து பெண்கள் எல்லோரையும் எல்லையற்று காதலித்துக்கொண்டு. ஆனால் இருப்பது என்னவோ நவோகோ மாதிரி. கிஸுகி பற்றிய துக்கத்திலும் டொரு பற்றிய குழப்பத்திலும். ஆனால் நவோகோவைத்தான் சமூகம் ஓரளவேனும் ஏற்றுக்கொள்கிறது. டொருக்கள் எத்தனை இனிமையானவர்களாக இருந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.நவோகோவாக இருந்து டொருவாக மாற எத்தணிக்கும் ஒருவர் இந்த நாவலை வாசித்த அனுபவமாக இதைக் கொள்ளலாம். அல்லது டொருவானபின்னர் நவோகோ பற்றிய ஞாபகங்களாக இந்த நாவல் வாசிப்பைக் கருத்திக்கொள்ளலாம். இதுவுமல்லாவிட்டால் இதையும் புனைவென்றெண்ணி  மோசமான புனைவு இது என்று விமர்சிக்கலாம்.
 
ஒன்றைப்பற்றி விரும்பாமல் வேண்டாவெறுப்பாக பேசவிரும்பவில்லை. இந்த நாட்களில் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் இன்  நூற்றாண்டு தனிமை பற்றியோ அல்லது மரியோ வர்கஸ் லோஸா இன் நாவல்கள் பற்றியோ பேசுவது எனக்கு செயற்கையாகப்படுகிறது. அதற்காக அவர்கள் ஒருபோதும் குறைத்தவர்களில்லை. அவர்களைப்பற்றிய உரையாடல்கள் மிகவும் இனிமையானவை. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மனநிலையிலிருக்கிறேன். எளிமையாக அம்மனநிலைகளிலிருந்து தொலைந்துபோக  ஒவ்வொரு விதமான வடிவங்களைக் கையாள்கிறேன். அது இசையாகவும் புத்தகங்களாகவும் மோசமான முறையில் சொன்னால் முகப்புத்தகமாவும் அமைந்துவிடுகிறது. இங்கு தொலைதல் என்பதை மறத்தல் என்று அர்த்தப்படுத்தவில்லை. சரியாகச் சொன்னால் விலகி –  சிந்தனைகளை மாற்றி வைத்திருக்கிறேன். “இலக்கியம் பெரும்பாலும் எனக்கு கவனக்கலைப்பான்” ஆக இருந்திருக்கிறது. எல்லா நாட்களும் எனக்குப் பிடித்த நாளாக அமைந்துவிடுவதில்லை. அதிகமான நாட்களை வெறுப்போடே கடந்து செல்லவேண்டியிருக்கிறது. வெறுப்பு மிகுந்த நாட்களில் உருவாகக்கூடிய எண்ணங்கள் கொடூரமானவை. அவை ஊசியையும் நூலையும் கொண்டு எல்லாச் சம்பவங்களுக்கும் முடிச்சைபோட்டு மனதை சுதாகரிக்க முடியாத பெரும் குழப்பத்தில் அமிழ்த்திவிடுகின்றன. அந்த நேரங்களில் எழுத்துக்கள் நேரத்தை கடித்து செரித்துக்கொண்டிருந்தன. நானாக புனைவுலகம் ஒன்றை உருவாக்கவோ அல்லது இன்னொருவர் உருவாக்கிய புனைவுலகில் வாழவோ முடிகிறது. கஷ்டமான தருணங்களில் தாயின் மடியில் சாய்ந்துகொள்வதைப்போன்ற ஆறுதல் இவற்றில் கிடைப்பதாக நம்புகிறேன்.
 
ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணத்தை உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? அந்தப் பாடலின் முழு வடிவத்தையும் நான் ஒருபோதும் கேட்டதில்லை. இந்த பிரதி திரைப்படமாகவும் வந்திருக்கிறது. எனக்கு சந்தர்ப்பமும் மனநிலையும் பார்க்க உருவாகவில்லை. ஆனால் ரெய்கோ கிதார் இசைகின்ற பகுதியை மட்டும் பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது. அந்த நிலவொளியில் டொரு, நவோகோ, ரெய்கோ என்று மூன்று பேர் இருந்தார்கள். நான் நோர்வேர்ஜியன் வூட் வாசிக்கின்ற தருணங்களில் டொரு, நவோகோ ,ரெய்கோ  மூன்று பேராகவும் நானே இருக்கிறேன். மூன்று வெவ்வேறு மனிதர்களாக. சில சமயங்களில் கூடியும் குறைந்தும் மனிதர்கள் இருக்கலாம். நவோகோவைப்போல கடந்த காலத்தின் மீது எனக்கிருக்கின்ற ஒழுங்கீனமான ஞாபகங்களை நினைத்துக்கொண்டும், அதே சமயம் நான் நினைப்பதை ஏதோ ஒரு வகையில் நிறுத்தமுயற்சிக்கும் இன்னொரு டொரு ஆக -அதாவது நானாகவும்- இவை எல்லாவற்றையும் தூண்டிக்கொண்டும் அதை இசையைப்போல எழுத்துக்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் இன்னொன்றாகவும், அதை வேடிக்கை பார்க்கும் இன்னொன்றாகவும் அப்படி எத்தனையோ இன்னொன்றுகளாகவும் விரிந்து ஆழ்ந்தும் மிதந்தும் அலைந்தும் அழிந்தும் உருவாகியும் இருப்பதும் பெரும் வாதைதானே. தன்னை இன்னும் அழகாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும் ஒருத்தர் கண்ணாடியின் முன்னால் விரும்பியோ விரும்பாமலோ நிற்பதைப்போல நானும் நோர்வேர்ஜியன் வூட்வாசிக்கிறேன். கண்ணாடி அழகாக்கிறதோ இல்லையோ நோர்வேர்ஜியன் வூட் அழகாக்கிறது.
 
நான் ரெய்கோவைப் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். அவள் கிதாரையும் சுருக்கங்களையும். அவளின்  குழந்தை- அவளைவிட இளமையான கணவன் இவர்கள் எல்லோரையும். முரகாமியின் மிகச் சிறந்த அனுபவம் ரெய்கோ என்றே தோன்றுகிறது. வலிமையற்று தற்கொலை செய்துகொண்ட நவொகோவை விடவும் இசைப்பள்ளிக்கு ரயிலில் ஏறிய ரெய்கோ சிறந்தவள்.  நோர்வேர்ஜியன் வூட் இரண்டு எதிர் நிலைகளுக்குள் அறத்தைப்பற்றி சொல்லவில்லை. தர்மம் அதர்மம், சட்டம் ஆராயகம், உண்மைகள் பொய்கள், நேர்மை புரட்டு என்று எதிர் நிலைகளுக்குள் இருக்கும் போராட்டம் அல்ல இது. ஒரு உண்மைக்கும் இன்னொரு உண்மைக்கும் இடையிலான போராட்டம். ஒரு நேர்மைக்கும் இன்னொரு நேர்மைக்குமான போராட்டம். யாரும் யாருக்கும் விரோதிகள் கிடையாது. இந்தப் போராட்டம் மிகவும் நுண்மையானது. இங்கு அறம்,  எதிர் அறம் பற்றிய உரையாடல்கள் இல்லை. அறத்துக்குள்ளேயே எதிர் நிலைகளைப்பற்றியும், சந்தர்ப்பம் ஒன்றிற்க்கான அறம் பற்றியும் உரையாடுகிறது. ரெய்கோவைத்  தவிர எல்லோருக்கும் யாரோ ஒருத்தர் எப்போதும் உறுதுணையாக இருக்கிறார்கள்.  கைவிடப்பட்டவளாகிறாள். ஆனால் மிகவும் பிரஞையுடம் எல்லோரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறாள். உறவுகளே இல்லாத ஒரு நிலையில் கூட அடுத்த கட்டம் நகர்கிறாள். டோருக்கு கடைசியாக ரெய்கோ எழுதிய கடிதம் என்னை பாதித்தது. நீங்கள் எவ்வளவு தூரம் அந்த கடிதம் இலக்கியத் தரம்  மிகுந்தது என்று கேட்கலாம். இப்போது நான் இலக்கியத்தில் இல்லை. நான் ஒப்புக்கொடுத்த பிரதி ஒன்றில் எனக்கு இலக்கியம் தெரியவில்லை. நான் அன்பை பார்க்கிறேன். யாராவது யாருடனும் முத்தமிட்டுக்கொள்ளும் போதோ  உறவில் இணையும் போதோ எனக்குள் சந்தோசம் பெருகுகிறது. டொரு மழைக்குள் மிடோரியை முத்தமிடும் கணத்தில் என்னைச்சுற்றி மழையின் குளிரும் எனக்குள் முத்தத்தின் சூடும் பரவிக்கொண்டது. மிடோரியை நினைக்கும் போதெல்லாம் inside edge இல் வருகின்ற analyst ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கிறது.
 
ரெய்கோ டொருவிடம் கடிதமொன்றாவது எழுதக்கோருவதைப் பற்றி மிகச்சிலருடன் பகிர்ந்திருக்கிறேன். இந்த மிகச்சிலர் இரண்டு அல்லது மூன்று பேர் தான். நான் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாக இருந்து கடிதம் எழுதும் பழக்கமுடையவன். அப்போது பெரும்பாலும் நடுச்சாமம் கடந்து போயிருக்கும். இதற்கு முதல் டொரு நாவொகோவிற்கும், நாவொகோ டொருவிற்கும் சில நீண்ட கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அவை அன்பின் நிமித்தம் வலிமையானவை. கடிதம் நீண்டகாலமாக காத்துவருகின்ற ரகசியங்கள் பெறுமதிமிக்கவை. மிகச்சிறிய வயதில் நீங்கள் நினைத்து சிரிக்கப்போவதை விட அதிகமான வயதில் எனக்கிருந்த ஒரே ஒரு காதலிக்கும், அவளோடு சண்டைபோட்டுக்கொண்ட தருணங்களில் அவளின் நண்பிக்கும் நானெழுதிய கடிதங்களில் மாறி மாறி ஒரே காதலை விதம்விதமான சொற்களால் விபரித்ததை அன்றி வேறெதுவும் செய்யவில்லை. அதற்கு பின்னர் பல்கலைக்கழகமானியத்திற்கு தான் கடிதம் அனுப்பினேன். ஆனால் மிகக்குறைவாக சிறுகுறிப்புக்களாக சில கடிதங்களை நெருக்கமானவர்களுக்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறேன். அவற்றைப்போன்ற ஒரு விரிவான நீட்சியாக இந்தக் கடிதங்களை உணர்கிறேன். கடிதமொன்றில் பெரும்பாலும் உண்மைகளே எழுதப்படுகின்றன என்று நம்புகிறேன். இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் நானெழுதிய அச்சிறுவயது கடிதங்களில் என் காதலும் டொரு நாவொக்கவிற்கு மிடோரியைப்பற்றிய மறைத்து எழுதிய கடிதங்களிலும் சந்தர்ப்ப உண்மை இருப்பதாய் நம்புகிறேன். பயத்தைப்பற்றிய என்னிடம் கேட்டால் இயலாமை என்றும் ஜிட்டுவிடம் கேட்டால் இறந்த கால நிகழ்கால இணைப்புணர்வு என்றும் யுயியிடம் கேட்டார் ” idiot i dont see that ” என்றும் சொல்வோம். என் நெருங்கிய நண்பர் சொல்வதைப்போல இங்கு சமனான நிறைய உண்மைகள் இருக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ள எனக்கு நிறைய நாட்கள் தேவைபட்டன. இந்த சமனான உண்மைகள் பற்றிய சிந்தனையை உணர்ந்துகொள்ள நிறைய நாட்கள் தேவைப்பட்டன. நோர்வேர்ஜியன் வூட்இலும்  எல்லோரிடமும் உண்மைகள் இருக்கின்றன. சமனான உண்மைகள். இந்த சமனான உண்மைகளுக்கு இடையிலான போராட்டம்/ ஆரோக்கியமான உரையாடல்  என்றும் norwegian wood ஐ சொல்லலாம்.
 
ரெய்கோவிற்கு டொரு,  நாவொகோ மற்றும் மிடோரி பற்றி  ஒரு கடிதத்தில் எழுதுவான்,

” நான் எப்போதும் நவோகோவை நேசித்து வந்திருக்கிறேன். இப்போதும் நான் அவளை நேசிக்கிறேன். ஆனால் மிடோரிக்கும் எனக்கும் இருப்பதென்னவென இறுதியாக தீர்மானிக்கும் கட்டம் வந்திருக்கிறேது. என்னைத் தடுக்கவியலாத சக்தி ஒன்று எதிர்காலத்திற்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. நவோகோவிடம் நான் உணர்வது பெரிதும் அமைதியான, நாகரிகமான வெளிப்படைத்தன்மையான காதல், ஆனால் மிடோரியிடம் நான் உணர்வது முற்றிலும் மாறுபட்ட உணர்வு. அது தன்போக்கில் செயற்படுகிறது, அதன் உயிர்ப்பும் சுவாசமும் துடிப்பும் என் இருப்பின் ஆழம் வரை நுழைந்து என்னை வேரோடு அசைக்கிறது. “

என்னைப்பொறுத்தவரையில் இது மிகவும் கடினமான சூழ்நிலை. ஒரு நடுநிலையான ருசியைக் கொண்டவர் டீ, கோப்பி இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதைவிட மிகவும் கடினமான ஒன்று. காதலின்- உண்மையில் அன்பின், இருவேறு சமமான நிலைகளுக்கிடையிலான அந்தரிப்பு. ரெய்கோ பதில் எழுதும் போது மிக உன்னதமான ஒன்றை எழுதுவார், நாவல் எளிமையாக மனதிற்கு மிக அருகில் சென்று உரசும் இடமாக இதைக்கருத்துகிறேன். ரெய்கோவின் பதில் இவ்வாறிருக்கும்,

“நமது மகத்தான பெரிய உலகில் இது மாதிரியான விஷயங்கள் எல்லாநேரமும் நிகழ்த்தபடிதான் இருக்கிறது. இது அழகான நாளொன்றில் அழகான ஏரியில் படகில் சென்றபடி, ஆகாயமும் ஏரியும் அழகாக இருப்பதாக இருப்பதாக சிந்திப்பதைப்போன்றது.”

இந்த நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா, நான் பெரும்பாலும் உணர்ந்ததுண்டு,  வேறு வேறு சந்தர்ப்பங்களில். அன்பும் விழிப்புணர்வும் எதிரெதிரே உரையாடிக்கொள்ளும் போது. கல்வியும் நானும் உரையாடிக்கொள்ளும் போது நானும் இன்னொருவரும் உரையாடிக்கொள்ளும் போது. ஒரு இசையைப்போல. அது நிச்சயமாக “உண்மையின் இசை” தான்.
 
பின்குறிப்புக்கள்

  1. பத்தொன்பதாம் திகதி ஆவணி மாதம் தேசிய காலை இலக்கியப் பேரவை நடத்திய உரையாடலில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.38747540_2132387343688237_432731922305646592_n

2. கட்டுரை வாசிப்பிற்கு முன்னைய நாட்களில் முகப்புத்தகத்தில் கட்டுரை வாசிப்பு சம்பந்தமாக எழுதிய சிறுகுறிப்பு.

எந்தவொரு பிரதியையும் ஆய்வுசெய்து கட்டுரையாக்குவதோ அல்லது விமர்சனம் செய்வதோ அதுவுமன்றி அறிமுகம் செய்வதும்கூட என்னளவில் கடினமான விஷயம். அவற்றை நான் முயற்சிக்கவில்லை. ஆனால் இன்று அனேகமாக இது மலிந்துபோயிருக்கிறது. வாசிப்பதற்கான அளவுகோல்கள், வரையறைகள், வரையறையின்மைகள், கோட்பாடுகள், அரசியல் என்று எல்லாத்தரப்பாலும் ஒரு பிரதி அணுகப்படுகிறது. இது ஒரு பிரதிக்கு மட்டுமன்றி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். இவை ஒரு கூட்டு அறிவின் பிரதிபலிப்பாகவோ அல்லது தனித்த மனிதரின் புரிதலாகவோ வெளிப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்றாக நோர்வேஜியன் வுட் பற்றிய எனது உரை அமைந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் எந்த அடிப்படையுமின்றிய வாசிப்பு என்னுடையது. ஒரு தொழில், பொழுதுபோக்கு, ஆத்மார்த்தமான உணர்வு என்பதெல்லாம் அன்றி வேறொரு புரிதலும் தளமும் வாசிப்பிற்கிருக்கிறது. அது பின்னர் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்குமாக விரிகிறது என்று நம்புகிறேன். நோர்வேஜியன் வுட் எவற்றையெல்லாம் எனக்கு ஒவ்வொரு வாசிப்பிலும் நினைவூட்டியது என்பதிலிருந்து உரை தொடங்கலாம் அல்லது வேறொன்றிலிருந்தும் தொடங்கலாம்.

3. ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணம்

4. நோர்வேர்ஜியன் வூட் தமிழில் க. சுப்பிரமணியால் மொழிபெயர்க்கப்பட்டு எதிர் வெளியீடாக 2014 ஜீன் மாதம் வெளியாகியது.

குர்ரத்துலைன் ஹைதர் – உதிரும் இலைகளின் ஓசை