கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்

ஒரு முழுமையான கட்டுரையினை – மொழித் தொடர்ச்சியினை எழுதுவதற்கு வேலைகளும் சூழ்நிலைகளும் ஒத்துழைக்காததன் பொருட்டு குறிப்புகளாக நாவலைப் பற்றி உங்களோடு உரையாடிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மனிதர்களோடு மிகவும் குறைவாக தொடர்பாடலிருக்கும் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், உண்மைகள் போன்றவற்றோடு என்னையும் அடையாளப்படுத்திக்கொள்வதால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை. அடையாளங்கள் என்ற சொல்லோடும் கசார்களின் அகராதி மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. பெருங்கடலை சுருட்டி ஒரு நூற்பைக்குள் நழுவ விட்டது போன்ற இந்நாவலை என் ஒழுங்கற்ற – நிச்சயமற்ற – அவதியான குறிப்புகளின் மூலம் உங்கள் கோப்பைகளுக்குள் நிறைப்பதையிட்டு கவலையடைகிறேன். இதற்கு முதல் இதே போன்ற ஒரு உரையாடலில் நோர்வேர்ஜியன் வூட் பற்றிய கட்டுரையை வாசித்தபோது இருந்த எனக்கும் இன்று கசார்களின் அகராதி பற்றிய முறையற்ற திருட்டுச்சாவிகளோடு கைநடுங்க இருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. கேள்விகள். வயதும் அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகளுக்கான பதில்கள் பெறப்படும் என்று நம்பினேன். வயதாவதை பதில்களுக்காக இனிமையாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினேன். ஆனால் நடந்தது வேறொன்று. நாட்களோடு கேள்விகள் இன்னமும் சிக்கலாயின. வாழ்க்கை அந்நியமாகத் தொடங்கியது. சரியாகச் சொல்லப்போனால் வாழ்க்கை அந்நியமாகிக்கொண்டிருக்க கேள்விகளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. முன்னைய உரையாடலைப்போல என்னுடைய கேள்விகளை உங்களிடம் பரப்பும் தவறை இம்முறை செய்யாதிருப்பேன் என்றே நம்புகிறேன். கசார்களுக்கு மதங்கள் துரோகமிழைத்ததைப் போலல்லாமல் நேர்மையோடு நடந்துகொள்ள முயல்கிறேன். என்னை மீறியும் அவை உருப்பெரும் எனில் அது கசார் காகனின் அழகிய மனைவியான – கசார் அகராதியின் பெண்பிரதியை தொகுத்த அதேக்கு உண்டான அதே காலத்தின் நிழல் என்னையும் தொடர்கிறது என்பதையும் தெரியப்படுத்துகிறேன்.

வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் மனிதன்

இது ஆண்பிரதி என்பதால் நிர்வாணமாக ஒரு ஆணை வரைவதில் மிலோராத் பாவிச்ற்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்காது என்ற வகையிலேயே மனிதன் என்ற ஆண்பாலை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இன்னொரு வகையான சிந்தனையும் என் மூளைக்குள் சுற்றுகிறது. ஒரு முகம் என்று சொல்லி வட்டத்தைக் கீறிக் காட்டும் போது, ஒரு ஆண் அதை ஆணின் முகமாகவா பெண்ணின் முகமாக உணர்ந்து கொள்வான். அதே வட்டத்தை ஒரு பெண்ணிடம் காட்டும் போது. அல்லது பால்புதுமையினர் அதைப் பார்க்கும் போது. வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் உருவம் எனக்கு மனிதனாகவே தென்பட்டது. தோராயமாக மீன்களும் யாழிசைப்பவரும் உயிரை உடலாய்க் கொண்டவன் தலையிருந்து செம்மறியாடும் அதனுடலில் பரவியிருக்கும் ரோமமும் அவனின் உடலிலிருந்து தான் இவ்வுலகமும் உயிர்களும் வாழ்க்கையும் விரிகிறது என்பதை எனக்கு உணர்த்தியது. அவன் ஒரு நிறைவான மனிதனாகவே அல்லது குறைகளின் மொத்த உருவமாகவோ தோன்றவில்லை. ஒன்றோடு ஒன்று கலந்த கலப்புலோகம் போல தூய மினுமினுப்பை தரக்கூடிய கலவையாக நிற்கிறான். இவ்வுருவம் ஆண்கள் ஆனது என்றாலும் அவனின் சமச்சீரில் டாவின்சியின் வெறுமையின் பாழ் நிலத்தில் பெண்ணின் உருவம் ஒடுங்கியிருக்கிறது. அவளின் மறைவும் பதுமையும் நாவலின் மீது வெறுப்பை ஏற்படுத்திடுகிறது. பிரமாண்டமான ஆண் உடலின் நடுவில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்ணின் மௌனத்திலிருந்து நாவலை உள்வாங்கிக்கொள்கிறேன். ஆண்களாகிக்கொண்டிருக்கும் வரலாற்று உருவங்களுக்குள் என்றைக்கும் மறைந்திருக்கும் மூதாட்டி ஒருத்தியின் முகச்சாயலை இவ்வுயிர்களாலான உடலின் உச்சியில் காண்கிறேன். இவ்வுடலில் பரந்து நிற்கும் நட்சத்திர கூட்டங்களை அவெர்கி ஸ்கீலா கவர்ந்து வந்த ராசிகளை ஞாபகப்படுத்துகின்றன.

கசார்களின் அகராதி மூன்று புத்தகங்களாலானது. ஒன்றிலிருந்து ஒன்று வளர்ச்சியடையும் தரவுகளுடன், முரண்படும் கதைகளுடன், ஆவணங்களுடன், மொழியின் பிரமாண்டமான உடலுடன் விரிந்துகொண்டிருக்கும். நிறங்களான புத்தங்களின் மீது ஊற்றப்பட்ட மதம் என்னும் மை, பஞ்சொன்றினூடாக இரத்தம் கசிந்து ஊடுருவதைப்போல ஒவ்வொரு பக்கங்களிலும் கசிந்து கசார்களை திரிபுபடுத்துகின்றது. வரலாற்றில் தமக்கென உறுதியான ஆவணங்கள் ஏதுமற்ற அவர்களின் வாழ்நிலமும் பண்பாடும் ஒவ்வொரு முகமூடிகளையோடு அணுகப்படுகிறது. ஒன்றில் கண்கள் தெரிகின்றன. இன்னொன்றில் காதுகள், இன்னொன்றில் கழுத்து. மூன்று புத்தங்களிலும் ஒரே நபர் வெவ்வேறு பெயர்களோடு வந்து போகிறார். அதே போல வெவ்வேறு நபர்கள் ஒரே பெயரோடு வந்து போவதையும் உணர முடிகிறது. இந்நாவலைத் திறக்க சிவப்புப் புத்தகத்தில் மரித்துப்போன முனைவர் இசைலோ சூக்கின் தங்கக் கைபிடி கொண்ட சிறியதொரு சாவி தேவைப்படுகிறது. எல்லாச்சாவிகளைப்போலவும் திறப்பு அதன் அடியில் இல்லை, கைப்பிடியில் தானிருக்கிறது. திறப்பு “தே” என்ற எழுத்து. அது அதே யின் இறுதி எழுத்து. நாவல் அதேயிலிருந்து தொடங்கினாலும் வாசிக்கத்தொடங்கிய எனக்கு அது உவப்பாக இல்லை. ஆனால் ஒரு அகராதி அ வில் தொடங்குவதைத்தவிர வேறு வழியில்லை.

சஷெங்காவின் தாயும் கலீனாவும் மகிழ்ச்சியை நெடுநாள் ஞாபகங்களில் பாதுகாக்க துயரத்தை அழைத்துக்கொள்வது பற்றிய குறிப்புகள்.

” யாருக்காவது ஏதேனும் நல்லது நடந்தால் – அதை பெத்குதினுக்கு விளக்கினாள் – அது எப்போதும் கொஞ்சம் துக்கத்தோடு கலந்திருக்க வேண்டும். அப்போதுதான் அக்கணம் நன்றாக நினைவிலிருக்கும். ஒருவர் மகிழ்ச்சியான தருணங்களை விட மகிழ்ச்சியற்ற தருணங்களையே எப்போதும் அதிகநாள்கள் நினைவில் வைத்திருக்கிறார்.. ” (பக்கம் 63)

மகிழ்ச்சியான தருணங்களின் மீது கோபத்தின் நிழல் விழுந்து நாட்களைக் கரியாக்கியது. ஒரு பொறியாய்த் தோன்றும் கோபம் பெருங்காடு முழுதும் பற்ற வண்ணத்திகள் நெருப்பில் உழன்றன. பொறி எப்போதும் பொறியாயேயிருக்கிறது. தணலை அது ஒருகாலமும் உணர்ந்ததில்லை, ஏனெனில் அது பொறி. பனிக்கு குளிரும் தணலுக்கு சூடும் உறைப்பதில்லை. அதன் குணமும் உடலும் பொறி தான். ஆனால் இந்நாவலில் யாரும் கோபக்காரர்களாக இல்லை. எல்லோரும் ஏமாளிகளாவே தெரிகின்றனர். அவர்களின் செயல்களே அவர்களை ஏமாற்றுகிறது. அவர்களின் நம்பிக்கைகள் மரணத்திற்குள் தள்ளுகின்றன. மனிதர்கள் தோன்றுவதும் நீண்ட நேரம் கனவு காண்பதும் பின்னர் கனவுகளால் மரணித்ததுபோவதும் சோர்ந்துவிடாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. ” ஒவ்வொரு தலைவனும் தன் சொந்த இறப்பைத் தழுவிக்கொள்வான்” (பக்கம் 73) அதனால் இதை ஏமாளிகளின் பிரதி என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு வகையில் நம் எல்லோரது வாழ்க்கையும் இந்தச் சுழற்சிக்குள் அகப்பட்டதைப்போலவே தோன்றுகிறது. குறைந்தபட்சம் என் வாழ்க்கையாவது. ஒவ்வொரு பக்கமாக நகர நகர தன்னை நிறமாற்றிக்கொள்ளும் ஒக்ட்டோபஸ் போல இசைக் கொற்றர்கள் நிறுத்திய பாறையுப்புக்கற்களின் மீது உரசியும் பற்றியும் நீளமான புரிதலுக்கும் விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட இசையாக நீண்டுகொண்டிருக்கிறது நாவல். பின்னைய பக்கம் ஒவ்வொன்றும் முன்னைய பக்கத்தைத் தின்று செரித்து வளர்கிறது. முதற்பக்கம் ஒரு நிகழ்த்துகை என்றால் அதைக் கொன்று இரண்டாம் பக்கம் இன்னொரு நிகழ்த்தலைச் செய்கிறது. இதுவும் புரிதலோடு துன்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் சஷெங்காவின் தாய் மற்றும் கலீனாவைப் போலவும் ஆயிரம் எத்தனமெடுத்தும் இன்பத்தோடு துன்பமும் சேர்ந்துகொள்வதை தடுக்கமுடியாத என்னைப்போவும் விசித்திரமாயிருக்கின்றன.

இன்மையின் முடிவற்ற சுழற்சியிலிருந்து உருப்பெற்ற நாங்கள் தரித்துக்கொள்ளும் சந்தோஷமும் துக்கமும் தங்க ஆபரணத்தைப்போல விலையுயர்ந்ததாயிருக்கிறது. அவற்றிக்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கிறோம். வாழ்க்கை பணயங்களால் ஆனது. சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கை நாணயத்தின் இருபக்கங்கள் என்று சமத்துவம் சொல்லுபவர்களே, பிறகேன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரே விலைக்கு – ஒரே பணயத்திற்குப் பெறமுடிவதில்லை. என் ஞாபகங்களில் நெடுநாள் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாகவே பிணைந்து கிடக்கின்றன. பாம்புகளும் ஓணான்களும் வண்ணத்திகளும் உருத்தெரியாமல் பிணைந்துகிடக்கும் ஞாபகங்களில் சந்தோசமெது துக்கமெதென்றே பிரித்துக் காணமுடியவில்லை.

கனவின் குழந்தைகள் மற்றும் கனவு வேட்டையர்கள் பற்றிய குறிப்புகள்.

கசார் காகன் கனவுகளுக்கு விளக்கம் கேட்கப் போய்தான் தன் கசார் இனைத்தையே துடைத்தழிகிறான். கனவுகள் விளக்கப்படவேண்டியவை அல்ல என்பதற்காகவே அவை கனவுகளாக மந்தமான மொழியில் நடந்தேறுகிறது. நாவல் முழுதும் கனவுகளும் விளக்கங்களும் நித்தியமாக பூத்தபடியே வருகின்றன. கசார்களின் துயரம் மிக எளிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலிருந்து தொடங்குகிறது. “இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் கனவில் காணும் போது, ஒருவரின் கனவே மற்றவரின் யதாரமாகும் நிலையில் எப்போதும் கனவின் சிறு பகுதி எஞ்சும். இவை கனவின் குழந்தைகள்.” (பக்கம் 46)

இரவுக்காக பகலைக் கைவிட்ட அவ்ரம் ப்ராங்கோவிச் போலத்தான் நானும். உலகம் சுறுசுறுப்பாக தீமைகளையும் சூழ்ச்சிகளையும் வன்மங்களையும் கக்கிக்கொண்டிருக்கும் பகல் பொழுதை நெளியும் புழுவைப்போல் பார்க்கிறேன். எல்லாமும் கண்களுக்குத் தெரியும் அவலம். கண்களில் குற்றத்தோடும் முகம் முழுக்க சிரிப்போடு உடலைச் சலவை செய்து கொள்ளும் மனிதர்களின் வாசம் நிறைந்த காலத்தை கடப்பது பெருந்துயராயிருக்கிறது. இடக்கண்ணில் பொறாமையும் வலக்கண்ணின் சூழ்ச்சியும் நிறைந்தவர்களின் முன்னால் ஒரு நீர்த்துளியாய் ஆவியாகிறேன். கொடுஞ்சூட்டில் தகிக்கிறேன். ஆனால் இரவு அவ்வாறானததல்ல. எல்லா வன்மமும் நிறைந்த உலகத்தின் மீது கறுப்புத் திரையிடுகிறது. குற்றங்கள் பார்வைக்குதொலைவாக நடந்தேறுகிறது. எதுவும் புலன்களுக்குள் உணரப்படும் போது தான் குழப்பம். இதை தப்பித்தல் என்று எல்லோரும் நினைக்கலாம். உண்மையும் அது தான், பகலின் கொடூரக்கண்களில் இருந்து தப்பித்து இரவிடம் அடைகிறேன். விபத்திலிருந்தது தப்பித்த ஒருவரை அருள்நிறைந்தவராய்ப் பார்க்கும் மனிதர்கள் பகலிலிருந்து தப்பிப்பவர்களை அதே கண்கொண்டு பார்க்கத் தவறுகிறார்கள். அவ்ரம் ப்ராங்கோவிசிற்கு அந்தக் கவலையிருக்கவில்லை. அவருக்கு குரோஸ் பற்றியே நினைப்பிருந்தது. கசார்களைப் பற்றிய தேடலை தன் கனவில் வரும் குரோஷிற்காகவே நடத்தினார்.

அவ்ரம் ப்ராங்கோவிச் அடுத்தவர்களின் கண்ணீர் ஊட்டப்பட்டு இரவுகளில் அலைந்தார். பகலில் ஒரு மசியப் பூனைபோல சுருண்டு கிடந்தது கனவுகளைக் கண்டார். சாமுயேல் கோஹென் கனவுகளிலிருந்து பிரிந்த இறகுகள் அவரின் இரவுகளை வனைந்துகொண்டிருந்தன. பகலிலிருந்து தப்பிக்க எனக்கிருக்கும் ஒரே வழி உறக்கம் தான். மூன்று அல்லது நான்கு நீண்ட தூக்கங்களில் ஒரு பகலைக் கடந்துவிடலாம். என் நினைவிற்கு ஒரு போதும் அறிந்திராத பண்புகளின் கட்டமைப்புக்களை பயத்தால் தயக்கத்தால் தீண்டும் போது ஒளிந்திருக்கும் அற அமைப்புக்கள் தூண்டப்படுகின்றன. இது பாசியை விலக்கி தெரிந்த நீரை காண்பதைப்போன்றதொன்றாகும். ஆனால் நீரில் தெரிவது உண்மையா விம்பமா என்ற குழப்பம் எப்போதுமிருக்குமளவுற்கு தண்ணீர் தெளிந்திருக்கும். ஒரு விளையாட்டைப்போல ஒரு அரசாங்கத்தைப்போல மனிதர்களுக்கு தங்களைப்பற்றிய விதிகள் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை. மனிதர்கள் அதிக குழப்பமான – சிக்கலான இயங்குநிலையையும் சிந்தனைகளையும் கொண்டவர்கள். அவர்களின் இயக்கம் எதனால் வழிநடத்தப்படுகிறது என்பதையும் இதுகாலமும் கூறப்பட்டுவரும் கூட்டறிவு என்பது என்னவென்றும் அறிவார் யாருமில்லை. கூட்டறிவை உணர்தல் அல்லது தேடிக்கொள்வதை அறிவு எனக்கொண்டாலும் நிக்கோல்ஸ்கி கூறுவதைப்போல ” அறிவென்பது அழியக்கூடிய பண்டம்; நொடியில் புளித்துபோகக்கூடியது. எதிர்காலத்தைப்போலவே” (பக்கம் 372) என்பதை மறுக்கவும் முடியவில்லை. தோற்றத்தைப்போல உடற்தசைகளைப்போல வயதாகும் போது ஒருவருடைய அறிவும் அழிந்து போவதை உணர்கிறோம். ஞாபகங்களை மட்டுமல்ல திறன்களையும் கருத்தில் கொண்டே அறிவு அழிவடைகிறது என்கிறேன். இதே நேரத்தில் ஞானம்(wisdom) என்பதைப்பற்றியும் உரையாடவேண்டிய தேவையிருக்கிறது. அறிவும் ஞானமும் வெவ்வேறானவை. அறிவு பரிசோதிக்கத்தக்கது, ஞானம் உணரக்கூடியது. பிரச்சனை ஞானம் உண்டா இல்லையா என்பதிலில்லை. ஞானம் எல்லோருக்கும் ஒரேயளவில் இருக்கிறதா என்பது தான். யூதா ஹலேவி சொல்கிறார், ” ஒரே ஞானம் தான் உள்ளது. பிறபெஞ்சமெனும் கோளத்தில் விரவியிருக்கும் ஞானம் என்பது மீச்சிறு விலங்குகள் கொண்டிருக்கும் ஞானத்தினின்றும் பெரிதல்ல.” (பக்கம் 360) நாவல் தன் விரிந்த உடலால் கனவிலிருந்து ஞானத்தை கண்டடைய முயற்சிசெய்கிறது. துன்பங்களை விளங்கிக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் ஞானத்தினை அடைய முயற்சிக்கிறது. கனவுகள் அவர்களின் செயல்களையும் விருப்பங்களையும் அவர்களால் உள்வாங்கப்பட்ட மற்றவர்களின் நடத்தைகளையும் மீளுருவாக்கம் செய்கிறன. இவை கனவுகளை வார்க்கின்றன. புலனுக்கு எட்டாத எதொன்றும் கனவாய் பரிணமிப்பதில்லை. கனவுகள் சுயபிரதிபலிப்பாக எண்ணங்களின் சேர்கையாக விரிவாக இன்னமும் எத்தனையோவாக உருவாகிறது. உணர்ச்சிகளின் மையத்திலிருந்து வெளிப்படும் யோசனைகளைத் தொடர்பவர்கள் கனவுகளைத் தொடர்பவர்கள். ஆனால் அந்தக் கனவுகளை மின்மினிப் பூச்சியொன்றை இரண்டு கைகளுக்குள் பொத்தி பிடிப்பது போல அள்ளி உடலெங்கும் ஊரவிட்டு ஹங்கேரியன் வாசித்த வயலின் இசையைப்போல உடலைச்சுருட்டி நத்தைச்சுரியமாக உருமாறுவதை கனவு வேட்டையர்கள் கற்றிருந்தார். தர்க்கங்களைத் தளர்த்தி உலகை விரிவடையச்செய்யும் பலம் வாய்ந்தவை கனவுகள். கனவு பிரச்சனைகளை மட்டுமல்ல, அவற்றுக்கான தீர்வுகளையும் தருகிறது. மிக மோசமாக, பகல்களைக் கடப்பதற்கு கனவுகள் தரும் தீர்வு நித்திரையாகவேயிருக்கிறது. தொடர்ச்சியாக கனவுகாண்பதால் கனவுகளையும் கனவுகள் அல்லாதவற்றையும் பிரித்தறிவது எனக்குச் சுலபமானதாகத்தெரியவில்லை.

கசார் காகனின் கனவில் தோன்றும் தேவதை ” படைத்தவர் உன் எண்ணங்களினால் மகிழ்வுற்றிருந்தாலும் உன் செயல்கள் குறித்து மகிழ்வுற்றிருக்கவில்லை.” (பக்கம் 101) என்கிறாள். இதே நேரத்தில் நாவலின் வேறொரு பகுதியில் தோன்றும் உண்மை – பொய் பற்றிய உரையாடலை தொலைத்த நான், நாவலை இரண்டு முறை புரட்டியும் விரால் மீன்களைப்போல அவையும் அகப்படாமலே போயின. கசார் காகனின் கனவிற்கு விளக்கமளிக்கும் கனவு வேட்டையரின் பதில் அபூர்வமானது. ” ஒரு தேவதை உங்கள் கனவில் வந்து அலைந்துகொண்டிருக்கின்றாள் என்றால் அதற்கு இரவில் செல்வதற்கு வேறு இடமில்லை என்றே அர்த்தம், அநேகமாக மழைபெய்திருக்கலாம்… ஏன் அது அதிக நேரம் உங்கள் கனவில் தாங்கவில்லை என்றால் உங்கள் கனவு அநேகமாக துர்நாற்றத்தைக் கொண்டிருக்கலாம். அடுத்த முறை உங்கள் கனவுகளை துவைத்துப்போடுங்கள்… ” (பக்கம் 101) காகனின் விதி அத்தனை எளிதானதல்ல. இந்நாவல் முழுவதும் ஒரு (உண்மையான)நீதிபதிக்குரிய கூர்மையான புத்தியை கொண்டு அணுகவேண்டும், மூன்று மதங்களும் சாதுரியமாக பகடையை சுழற்றி விடுகின்றன. எங்கேனும் ஏமாந்து உருட்டப்படுவோமானால் அவை தங்களின் மதங்களுக்கு வாசகரை மாற்றிவிடும் தந்திரம் உள்ளவை.

நாவலின் தொடங்கத்தில் தவறிழைக்கும் வாசகர் எப்போதும் நாவலின் இறுதியிருக்கும் துருப்புகளால் புலன்கள் தூண்டப்படாது போவார்.

நாவலின் இரண்டாம் புத்தகமான கசார் குறித்த இஸ்லாமிய ஆதாரங்கள் – பச்சைபுத்தகம் – வரும் வரை நிலத்திற்குள் விதைகளை புதைப்பதைப் போல தகவல்கள் நெருக்கமாவும் அயர்சியாகவும் சேர்ந்துகொண்டேயிருக்கும். அவ்ரம் ப்ராங்கோவிச் வாசிக்கும் போதே நாவல் தனது வேர்களை நிலத்தின் மீது ஆழமாக பதியவைப்பதாக உணரத்தொடங்கினேன், பின்னர் யூசுஃப் மசூதியிலும் மஞ்சள் புத்தகத்தின் சாமுயேல் கோஹெனிலும் வளர்ச்சி அடையத்தொடங்கியதும் எங்கோ விதைக்கப்பட்ட விதைக்களனைத்தும் உருப்பெற்று ஒரு பெருவிருட்சம் தோன்றியது. நான் முதன்முதலில் கசார்களின் அகராதியை வாசிக்கத்தொடங்கிய கருநீல இரவையும் அதற்குள் சிவப்பைப் பூசிக்கொண்டு வைத்தியசாலைக்கு விரையும் ஆம்புலன்லின் அவதியான ஒலியையும் ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன். அந்தக் காலை கைகளும் கால்களும் தோளும் சீவப்பட்டு மொட்டையாக அரிந்துவிடப்பட்ட முன் நிலத்துப் பலாவிற்காக வருத்தப்பட்டுக்கொண்டே நாவலைத் திறக்கும் போது காலம் சூன்யத்திற்குள் அகப்பட்டு எரிந்துகொண்டிருந்தது. எழுத்துக்களுக்கும் வசனங்களும் அவற்றின் இடைவெளிகளுக்கும் காலத்தை கவர்ந்து உள்ளீர்த்துக்கொள்ளும் வசீகரமிருக்கிறது. அது எழுத்துகளுக்கே மட்டுமான பண்பு, ஒரு காலப்பயணத்தை ஒத்தது அது. துர்நினைவிலிருந்து, அலைச்சல்படும் யோசனைகளிலிருந்து என்னை பாதுகாக்க – காலத்தைக் கரைக்க கசார்களின் அகராதியைத் திறந்த போது எனக்கான முதல் ஆச்சரியம் காத்திருந்தது.

” இப்புத்தகத்தை ஒருபோதும் திறக்காத வாசகன் இங்குதான் உறங்குகிறான். என்றைக்குமாக அவன் இங்கே மரணித்துள்ளான்.”

அதன் பின்னர் கசார்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூதப் பிடியில் அலைவதையும் மரணித்து மரணித்து உயிர்பெறுவதையும், மதங்களின் பிடிகளுக்குள் அவர்களின் ஆன்மா நசிந்து அழுவதையும் கேட்டபடியேயிருந்தேன். வெளிப்படையாக கசார்கள் மூன்று புத்தகத்திலும் மூன்று மதங்களுக்கு நிம்மதியாக மாறியிருந்தாலும் அவர்களின் ஆன்மா நிலையில்லாமல் அலைந்துகொண்டேயிருந்தது. மொகத்தசா அல் சஃபர் உடைத்த கசார் ஜாடியைப்போல அவர்களின் ஆன்மாவின் தேவை எப்போதும் உணரப்படவேயில்லை. அது இன்றுவரை அலைந்துகொடியிருக்கிறது. நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் வாசகர் கசார்களின் அலைச்சலின் கொடூரத்தை உணர்வார். முறையான வரலாற்றையும் பண்பாட்டையும் எழுத மறந்த இனம் ஒன்றின் ஆன்மா எத்தனை மோசமாக வரலாற்றில் அலைக்கழிக்கப்படுவதையும், தடமற்று புனைவுகளில் உருப்பெரும் ஆதாமின் உடலை மதங்களை குதறி எறிவதையும் உணர்வர். திசைகளேதும் தெரியாமல் குறிப்பில் என் வீட்டை நோக்கிப்பார்க்கிறேன். என்றைக்குமாக உருகுலைந்திருக்கும் அது, அரசமரத்தின் கீழ் நசுங்கிக்கொண்டிருக்கும் புழுக்களை உற்பத்திசெய்தபடியிருந்தது.

அதே கிளிகளுக்கு கசார் அகராதியை பயிற்றுவித்தாள். அக்கிளிகளிடம் ” செல்லுங்கள், உங்களிடத்தேயுள்ள கவிதைகளை மற்ற பறவைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்,ஏனெனில் வெகுவிரைவில் இங்கிதை அறிந்தவரென்று எவரும் இருக்கப்போவதில்லை. ” என்று சொல்லி கானகத்திற்குள் அனுப்பிவைக்கிறாள்.

நாவல் மூன்று புத்தகங்களோடு கசார்களை முடிவுக்குக்கொண்டவரவில்லை, பின்னிணைப்புகளில் நடுக்கமும் பதபதைப்பும் நிறைந்த சொற்கள் காத்திருந்தன. உப்புக்கற்களால் கட்டப்பட்ட விரிந்து செழித்த மாளிகையொன்றின் மீது மழை பெய்வதைப்போல சிறுக சிறுக நாவல் கரைந்து ஊற்றியது. இளைத்த எலி மாவு மூட்டையின் ஓட்டைக்குள் நுழைந்து தின்று மாட்டிக்கொண்டது போல(பக்கம் 119) பெற்றதை இழக்காவிட்டால் நாவலுக்கிலிருந்து எக்காலமும் வெளிவரவே முடியாது. பாவிச் சொல்லும் ஒரு போதும் திறக்காமை நாவலை வாசிப்பதிலில்லை, அதை துறப்பதிலேயேயிருக்கிறது.

ஆண்பிரதியை மூன்று பேர் தொகுக்க தனித்திருந்து பெண்பிரதியை தொகுத்திருக்கிறார் அதே. ஆண் பிரதியின் வாசிப்பும் பெண் பிரதியின் வாசிப்பும் எழுத்துக்களும் வசனங்களும் ஒன்றுபோலவேயிருந்தாலும் வாசிப்புகள் வித்தியாசமானவை என்பதை உணர முடிகிறது. 14 வரிகளால் மாறுபடக்கூடிய இரண்டு பிரதிகளும் நூறாயிரம் சொற்களைக்கொண்ட ஒரு நாவலின் வாசிப்பை மாற்றியமைத்துவிடுகிறது. இந்த வித்தியாசம் ஆண், பெண் பிரதிகள் என்று இருவேறாக பிரித்தமைக்கும் போதே ஏற்பட்டுவிடுகிறது. மிக நிச்சயமாக எல்லா வகையிலும் இரண்டு பிரதிகளும் ஒத்திருந்தாலும் வாசிப்புகள் வேறுபட்டிருக்கும். ஒரு துறவி தாவுப்மன்னூஸிற்கு ” நாம் படிக்கும்போது, எழுதப்பட்டுள்ள அத்தனையும் நம்மை வந்தடைவதில்லை. நம் சிந்தனைகள் பொறாமைமிக்கவை… ” என்று இவ்வாறு தொடர்கிறார் , ” நீயும் உன் தம்பியும் ஒரே புத்தகத்திலுள்ள ஒரே வரிகளை வாசிக்கப்போவதில்லை, ஏனெனின் எங்களுடைய புத்தகங்கள் ஆண் மற்றும் பெண் தன்மைச் சின்னங்களை உடையவை.” (பக்கம் 118)

சொல்லே தசையானது (பக்கம் 373)

இறுதியில் உண்மை – பொய் பற்றிய உரையாடலை நாவலுக்குள் கண்டடைந்திருக்கிறேன். நிகான் செவாஸ்ட் சொல்வதைப்போல, ” நிறங்களைக் குழைப்பது நானல்ல, உங்களின் பார்வைதான்.” (பக்கம் 131) நாவலுக்குள் முன்னொரு நாள் தொலைத்த உண்மை- பொய் பற்றிய உரையாடல் என்னால் இருப்பதாக நம்பட்ட ஒன்று என்றே எண்ணினேன். நாவலின் மூன்று நிறங்களையும் குழைப்பதிலிருந்து தோன்றிய இல்லாத ஒன்று என்னை நம்பச்செய்வது என் கடந்த காலம் ஆதாரமாயிருந்தது. எல்லாப் புனைவுகளிலும் எனக்கான அமைதியான நிலமொன்றை தெரிவுசெய்து என்னைச்சுற்றி நடக்கும் நடனத்தை ரசித்தபடியிருக்கிறேன். அவற்றின் சொற்களே என் தசையானது. உண்மையான சொற்களின் இசையில் அன்பு தாங்கப்படுகின்றது. “உண்மையான சொல் என்பது எப்போதும் பாம்பினால் சுற்றப்பட்ட மரத்திலுள்ள ஆப்பிளைப் போன்றது “(பக்கம் 235) எளிதில் வசப்படாது. சொற்களை அதன் இசையோடு மிழற்றுவது கிதாரை பதினோராம் விரல் கொண்டு வாசிப்பதைபோலாகும். அவை ஆற்றில் கிடக்கும் கூழாங்கற்கள் போல தன் மினுமினுப்பை எக்காலமும் இழக்காமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். சாமுயேல் கோஹென் “எழுத்து மனிதச்செயல் அன்று” (பக்கம் 305) என்று எழுதுகிறார். நாவலின் உண்மையான சொற்கள் உண்மை – பொய் பற்றிய உரையாடலிலேயே தோன்றுகிறது. தோன்றிப் பின்னர் மறைந்துபோகிறது. ஒரு கிரகணம் போல. மதங்கள் – உண்மை – கசார்கள் மூன்றும் ஒரு நேர்கோட்டில் வரும், பின்னர் தங்கள் சுயரூபங்களோடு மறைந்து போகவோ, ஆட்சிசெய்யவோ தொடங்கும். உண்மையான கசார் அகராதியிலிருக்கும் உண்மை – பொய் பற்றிய பகுதி –

“உண்மை எப்போதும் ஒளியூடுருவக்கூடியது மற்றும் கவனிக்கப்படாதது, ஆனால் பொய் என்பது ஒளிபுகாத் தன்மையுடையது, அது ஒளியை அல்லது பார்வையைத் தனக்குள் அனுமதிப்பதில்லை. மூன்றாம் நிலையொன்றும் உள்ளது, அதில் இவ்விரண்டும் இணையும், அதுவே அதிகமும் வழக்கமான ஒன்று. ஒரு கண்ணால் நாம் உண்மையின் ஊடாகத் காண்கிறோம், அந்தப்பார்வை முடிவிலியில் எப்போதைக்குமாகத் தொலைகிறது; மறுகண்ணால் பொய்மையின் உள்ளே ஓர் அங்குலத்துக்குக்கூட நம்மால் காணமுடிவதில்லை, அப்பார்வை அதற்குமேல் துளைத்துச்செல்வதில்லை, ஆனால் இங்கேயே நம்முடையதாகத் தங்கிவிடுகிறது; இவ்வகையில் வாழ்க்கையை மேலும் குழப்பத்திற்குள் தள்ளுகிறோம். எனவே உண்மை என்பது பொய்யைப்போல அதனளவில் அறிந்துகொள்ளப்பட இயலாதது, ஆனால் பொய்யோடு ஒப்பிட்டுப் பார்த்து மட்டுமே அறியத்தக்கதாய் உள்ளது, நம் புத்தகத்தின் எழுத்துகளை அதற்கு இடையே உள்ள வெள்ளை வெளியை ஒப்பிட்டு அறிவதுபோல் ஏனெனில் கசார் அகராதியில் இருக்கும் அவ்வெள்ளை வெளிகள் புனிதமான உண்மை மற்றும் பெயரின் (ஆதம் சத்மோன்) ஒளியூடுவக்கூடிய இடங்களைக் குறிக்கிறது, மேலும் வெள்ளை வெளிகளுக்கு இடையேயுள்ள கருப்பு எழுத்துகளின் மேற்பரப்பைத் தாண்டி நம் பார்வை துளைக்க முடியாது.”(பக்கம் 288)

இவ் அகராதி ஒன்றின் முன்னர் வாசித்து ஒப்புப்பார்க்கபடவேண்டும், அதன் பின்னர் இது பயனற்றதாகிவிடுகிறது. கசார்களின் அகராதி திறக்கப்படுவதில்லை, எழுதப்படுகிறது.