கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்

ஒரு முழுமையான கட்டுரையினை – மொழித் தொடர்ச்சியினை எழுதுவதற்கு வேலைகளும் சூழ்நிலைகளும் ஒத்துழைக்காததன் பொருட்டு குறிப்புகளாக நாவலைப் பற்றி உங்களோடு உரையாடிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மனிதர்களோடு மிகவும் குறைவாக தொடர்பாடலிருக்கும் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், உண்மைகள் போன்றவற்றோடு என்னையும் அடையாளப்படுத்திக்கொள்வதால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை. அடையாளங்கள் என்ற சொல்லோடும் கசார்களின் அகராதி மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. பெருங்கடலை சுருட்டி ஒரு நூற்பைக்குள் நழுவ விட்டது போன்ற இந்நாவலை என் ஒழுங்கற்ற – நிச்சயமற்ற – அவதியான குறிப்புகளின் மூலம் உங்கள் கோப்பைகளுக்குள் நிறைப்பதையிட்டு கவலையடைகிறேன். இதற்கு முதல் இதே போன்ற ஒரு உரையாடலில் நோர்வேர்ஜியன் வூட் பற்றிய கட்டுரையை வாசித்தபோது இருந்த எனக்கும் இன்று கசார்களின் அகராதி பற்றிய முறையற்ற திருட்டுச்சாவிகளோடு கைநடுங்க இருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. கேள்விகள். வயதும் அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகளுக்கான பதில்கள் பெறப்படும் என்று நம்பினேன். வயதாவதை பதில்களுக்காக இனிமையாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினேன். ஆனால் நடந்தது வேறொன்று. நாட்களோடு கேள்விகள் இன்னமும் சிக்கலாயின. வாழ்க்கை அந்நியமாகத் தொடங்கியது. சரியாகச் சொல்லப்போனால் வாழ்க்கை அந்நியமாகிக்கொண்டிருக்க கேள்விகளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. முன்னைய உரையாடலைப்போல என்னுடைய கேள்விகளை உங்களிடம் பரப்பும் தவறை இம்முறை செய்யாதிருப்பேன் என்றே நம்புகிறேன். கசார்களுக்கு மதங்கள் துரோகமிழைத்ததைப் போலல்லாமல் நேர்மையோடு நடந்துகொள்ள முயல்கிறேன். என்னை மீறியும் அவை உருப்பெரும் எனில் அது கசார் காகனின் அழகிய மனைவியான – கசார் அகராதியின் பெண்பிரதியை தொகுத்த அதேக்கு உண்டான அதே காலத்தின் நிழல் என்னையும் தொடர்கிறது என்பதையும் தெரியப்படுத்துகிறேன்.

வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் மனிதன்

இது ஆண்பிரதி என்பதால் நிர்வாணமாக ஒரு ஆணை வரைவதில் மிலோராத் பாவிச்ற்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்காது என்ற வகையிலேயே மனிதன் என்ற ஆண்பாலை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இன்னொரு வகையான சிந்தனையும் என் மூளைக்குள் சுற்றுகிறது. ஒரு முகம் என்று சொல்லி வட்டத்தைக் கீறிக் காட்டும் போது, ஒரு ஆண் அதை ஆணின் முகமாகவா பெண்ணின் முகமாக உணர்ந்து கொள்வான். அதே வட்டத்தை ஒரு பெண்ணிடம் காட்டும் போது. அல்லது பால்புதுமையினர் அதைப் பார்க்கும் போது. வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் உருவம் எனக்கு மனிதனாகவே தென்பட்டது. தோராயமாக மீன்களும் யாழிசைப்பவரும் உயிரை உடலாய்க் கொண்டவன் தலையிருந்து செம்மறியாடும் அதனுடலில் பரவியிருக்கும் ரோமமும் அவனின் உடலிலிருந்து தான் இவ்வுலகமும் உயிர்களும் வாழ்க்கையும் விரிகிறது என்பதை எனக்கு உணர்த்தியது. அவன் ஒரு நிறைவான மனிதனாகவே அல்லது குறைகளின் மொத்த உருவமாகவோ தோன்றவில்லை. ஒன்றோடு ஒன்று கலந்த கலப்புலோகம் போல தூய மினுமினுப்பை தரக்கூடிய கலவையாக நிற்கிறான். இவ்வுருவம் ஆண்கள் ஆனது என்றாலும் அவனின் சமச்சீரில் டாவின்சியின் வெறுமையின் பாழ் நிலத்தில் பெண்ணின் உருவம் ஒடுங்கியிருக்கிறது. அவளின் மறைவும் பதுமையும் நாவலின் மீது வெறுப்பை ஏற்படுத்திடுகிறது. பிரமாண்டமான ஆண் உடலின் நடுவில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்ணின் மௌனத்திலிருந்து நாவலை உள்வாங்கிக்கொள்கிறேன். ஆண்களாகிக்கொண்டிருக்கும் வரலாற்று உருவங்களுக்குள் என்றைக்கும் மறைந்திருக்கும் மூதாட்டி ஒருத்தியின் முகச்சாயலை இவ்வுயிர்களாலான உடலின் உச்சியில் காண்கிறேன். இவ்வுடலில் பரந்து நிற்கும் நட்சத்திர கூட்டங்களை அவெர்கி ஸ்கீலா கவர்ந்து வந்த ராசிகளை ஞாபகப்படுத்துகின்றன.

கசார்களின் அகராதி மூன்று புத்தகங்களாலானது. ஒன்றிலிருந்து ஒன்று வளர்ச்சியடையும் தரவுகளுடன், முரண்படும் கதைகளுடன், ஆவணங்களுடன், மொழியின் பிரமாண்டமான உடலுடன் விரிந்துகொண்டிருக்கும். நிறங்களான புத்தங்களின் மீது ஊற்றப்பட்ட மதம் என்னும் மை, பஞ்சொன்றினூடாக இரத்தம் கசிந்து ஊடுருவதைப்போல ஒவ்வொரு பக்கங்களிலும் கசிந்து கசார்களை திரிபுபடுத்துகின்றது. வரலாற்றில் தமக்கென உறுதியான ஆவணங்கள் ஏதுமற்ற அவர்களின் வாழ்நிலமும் பண்பாடும் ஒவ்வொரு முகமூடிகளையோடு அணுகப்படுகிறது. ஒன்றில் கண்கள் தெரிகின்றன. இன்னொன்றில் காதுகள், இன்னொன்றில் கழுத்து. மூன்று புத்தங்களிலும் ஒரே நபர் வெவ்வேறு பெயர்களோடு வந்து போகிறார். அதே போல வெவ்வேறு நபர்கள் ஒரே பெயரோடு வந்து போவதையும் உணர முடிகிறது. இந்நாவலைத் திறக்க சிவப்புப் புத்தகத்தில் மரித்துப்போன முனைவர் இசைலோ சூக்கின் தங்கக் கைபிடி கொண்ட சிறியதொரு சாவி தேவைப்படுகிறது. எல்லாச்சாவிகளைப்போலவும் திறப்பு அதன் அடியில் இல்லை, கைப்பிடியில் தானிருக்கிறது. திறப்பு “தே” என்ற எழுத்து. அது அதே யின் இறுதி எழுத்து. நாவல் அதேயிலிருந்து தொடங்கினாலும் வாசிக்கத்தொடங்கிய எனக்கு அது உவப்பாக இல்லை. ஆனால் ஒரு அகராதி அ வில் தொடங்குவதைத்தவிர வேறு வழியில்லை.

சஷெங்காவின் தாயும் கலீனாவும் மகிழ்ச்சியை நெடுநாள் ஞாபகங்களில் பாதுகாக்க துயரத்தை அழைத்துக்கொள்வது பற்றிய குறிப்புகள்.

” யாருக்காவது ஏதேனும் நல்லது நடந்தால் – அதை பெத்குதினுக்கு விளக்கினாள் – அது எப்போதும் கொஞ்சம் துக்கத்தோடு கலந்திருக்க வேண்டும். அப்போதுதான் அக்கணம் நன்றாக நினைவிலிருக்கும். ஒருவர் மகிழ்ச்சியான தருணங்களை விட மகிழ்ச்சியற்ற தருணங்களையே எப்போதும் அதிகநாள்கள் நினைவில் வைத்திருக்கிறார்.. ” (பக்கம் 63)

மகிழ்ச்சியான தருணங்களின் மீது கோபத்தின் நிழல் விழுந்து நாட்களைக் கரியாக்கியது. ஒரு பொறியாய்த் தோன்றும் கோபம் பெருங்காடு முழுதும் பற்ற வண்ணத்திகள் நெருப்பில் உழன்றன. பொறி எப்போதும் பொறியாயேயிருக்கிறது. தணலை அது ஒருகாலமும் உணர்ந்ததில்லை, ஏனெனில் அது பொறி. பனிக்கு குளிரும் தணலுக்கு சூடும் உறைப்பதில்லை. அதன் குணமும் உடலும் பொறி தான். ஆனால் இந்நாவலில் யாரும் கோபக்காரர்களாக இல்லை. எல்லோரும் ஏமாளிகளாவே தெரிகின்றனர். அவர்களின் செயல்களே அவர்களை ஏமாற்றுகிறது. அவர்களின் நம்பிக்கைகள் மரணத்திற்குள் தள்ளுகின்றன. மனிதர்கள் தோன்றுவதும் நீண்ட நேரம் கனவு காண்பதும் பின்னர் கனவுகளால் மரணித்ததுபோவதும் சோர்ந்துவிடாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. ” ஒவ்வொரு தலைவனும் தன் சொந்த இறப்பைத் தழுவிக்கொள்வான்” (பக்கம் 73) அதனால் இதை ஏமாளிகளின் பிரதி என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு வகையில் நம் எல்லோரது வாழ்க்கையும் இந்தச் சுழற்சிக்குள் அகப்பட்டதைப்போலவே தோன்றுகிறது. குறைந்தபட்சம் என் வாழ்க்கையாவது. ஒவ்வொரு பக்கமாக நகர நகர தன்னை நிறமாற்றிக்கொள்ளும் ஒக்ட்டோபஸ் போல இசைக் கொற்றர்கள் நிறுத்திய பாறையுப்புக்கற்களின் மீது உரசியும் பற்றியும் நீளமான புரிதலுக்கும் விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட இசையாக நீண்டுகொண்டிருக்கிறது நாவல். பின்னைய பக்கம் ஒவ்வொன்றும் முன்னைய பக்கத்தைத் தின்று செரித்து வளர்கிறது. முதற்பக்கம் ஒரு நிகழ்த்துகை என்றால் அதைக் கொன்று இரண்டாம் பக்கம் இன்னொரு நிகழ்த்தலைச் செய்கிறது. இதுவும் புரிதலோடு துன்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் சஷெங்காவின் தாய் மற்றும் கலீனாவைப் போலவும் ஆயிரம் எத்தனமெடுத்தும் இன்பத்தோடு துன்பமும் சேர்ந்துகொள்வதை தடுக்கமுடியாத என்னைப்போவும் விசித்திரமாயிருக்கின்றன.

இன்மையின் முடிவற்ற சுழற்சியிலிருந்து உருப்பெற்ற நாங்கள் தரித்துக்கொள்ளும் சந்தோஷமும் துக்கமும் தங்க ஆபரணத்தைப்போல விலையுயர்ந்ததாயிருக்கிறது. அவற்றிக்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கிறோம். வாழ்க்கை பணயங்களால் ஆனது. சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கை நாணயத்தின் இருபக்கங்கள் என்று சமத்துவம் சொல்லுபவர்களே, பிறகேன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரே விலைக்கு – ஒரே பணயத்திற்குப் பெறமுடிவதில்லை. என் ஞாபகங்களில் நெடுநாள் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாகவே பிணைந்து கிடக்கின்றன. பாம்புகளும் ஓணான்களும் வண்ணத்திகளும் உருத்தெரியாமல் பிணைந்துகிடக்கும் ஞாபகங்களில் சந்தோசமெது துக்கமெதென்றே பிரித்துக் காணமுடியவில்லை.

கனவின் குழந்தைகள் மற்றும் கனவு வேட்டையர்கள் பற்றிய குறிப்புகள்.

கசார் காகன் கனவுகளுக்கு விளக்கம் கேட்கப் போய்தான் தன் கசார் இனைத்தையே துடைத்தழிகிறான். கனவுகள் விளக்கப்படவேண்டியவை அல்ல என்பதற்காகவே அவை கனவுகளாக மந்தமான மொழியில் நடந்தேறுகிறது. நாவல் முழுதும் கனவுகளும் விளக்கங்களும் நித்தியமாக பூத்தபடியே வருகின்றன. கசார்களின் துயரம் மிக எளிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலிருந்து தொடங்குகிறது. “இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் கனவில் காணும் போது, ஒருவரின் கனவே மற்றவரின் யதாரமாகும் நிலையில் எப்போதும் கனவின் சிறு பகுதி எஞ்சும். இவை கனவின் குழந்தைகள்.” (பக்கம் 46)

இரவுக்காக பகலைக் கைவிட்ட அவ்ரம் ப்ராங்கோவிச் போலத்தான் நானும். உலகம் சுறுசுறுப்பாக தீமைகளையும் சூழ்ச்சிகளையும் வன்மங்களையும் கக்கிக்கொண்டிருக்கும் பகல் பொழுதை நெளியும் புழுவைப்போல் பார்க்கிறேன். எல்லாமும் கண்களுக்குத் தெரியும் அவலம். கண்களில் குற்றத்தோடும் முகம் முழுக்க சிரிப்போடு உடலைச் சலவை செய்து கொள்ளும் மனிதர்களின் வாசம் நிறைந்த காலத்தை கடப்பது பெருந்துயராயிருக்கிறது. இடக்கண்ணில் பொறாமையும் வலக்கண்ணின் சூழ்ச்சியும் நிறைந்தவர்களின் முன்னால் ஒரு நீர்த்துளியாய் ஆவியாகிறேன். கொடுஞ்சூட்டில் தகிக்கிறேன். ஆனால் இரவு அவ்வாறானததல்ல. எல்லா வன்மமும் நிறைந்த உலகத்தின் மீது கறுப்புத் திரையிடுகிறது. குற்றங்கள் பார்வைக்குதொலைவாக நடந்தேறுகிறது. எதுவும் புலன்களுக்குள் உணரப்படும் போது தான் குழப்பம். இதை தப்பித்தல் என்று எல்லோரும் நினைக்கலாம். உண்மையும் அது தான், பகலின் கொடூரக்கண்களில் இருந்து தப்பித்து இரவிடம் அடைகிறேன். விபத்திலிருந்தது தப்பித்த ஒருவரை அருள்நிறைந்தவராய்ப் பார்க்கும் மனிதர்கள் பகலிலிருந்து தப்பிப்பவர்களை அதே கண்கொண்டு பார்க்கத் தவறுகிறார்கள். அவ்ரம் ப்ராங்கோவிசிற்கு அந்தக் கவலையிருக்கவில்லை. அவருக்கு குரோஸ் பற்றியே நினைப்பிருந்தது. கசார்களைப் பற்றிய தேடலை தன் கனவில் வரும் குரோஷிற்காகவே நடத்தினார்.

அவ்ரம் ப்ராங்கோவிச் அடுத்தவர்களின் கண்ணீர் ஊட்டப்பட்டு இரவுகளில் அலைந்தார். பகலில் ஒரு மசியப் பூனைபோல சுருண்டு கிடந்தது கனவுகளைக் கண்டார். சாமுயேல் கோஹென் கனவுகளிலிருந்து பிரிந்த இறகுகள் அவரின் இரவுகளை வனைந்துகொண்டிருந்தன. பகலிலிருந்து தப்பிக்க எனக்கிருக்கும் ஒரே வழி உறக்கம் தான். மூன்று அல்லது நான்கு நீண்ட தூக்கங்களில் ஒரு பகலைக் கடந்துவிடலாம். என் நினைவிற்கு ஒரு போதும் அறிந்திராத பண்புகளின் கட்டமைப்புக்களை பயத்தால் தயக்கத்தால் தீண்டும் போது ஒளிந்திருக்கும் அற அமைப்புக்கள் தூண்டப்படுகின்றன. இது பாசியை விலக்கி தெரிந்த நீரை காண்பதைப்போன்றதொன்றாகும். ஆனால் நீரில் தெரிவது உண்மையா விம்பமா என்ற குழப்பம் எப்போதுமிருக்குமளவுற்கு தண்ணீர் தெளிந்திருக்கும். ஒரு விளையாட்டைப்போல ஒரு அரசாங்கத்தைப்போல மனிதர்களுக்கு தங்களைப்பற்றிய விதிகள் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை. மனிதர்கள் அதிக குழப்பமான – சிக்கலான இயங்குநிலையையும் சிந்தனைகளையும் கொண்டவர்கள். அவர்களின் இயக்கம் எதனால் வழிநடத்தப்படுகிறது என்பதையும் இதுகாலமும் கூறப்பட்டுவரும் கூட்டறிவு என்பது என்னவென்றும் அறிவார் யாருமில்லை. கூட்டறிவை உணர்தல் அல்லது தேடிக்கொள்வதை அறிவு எனக்கொண்டாலும் நிக்கோல்ஸ்கி கூறுவதைப்போல ” அறிவென்பது அழியக்கூடிய பண்டம்; நொடியில் புளித்துபோகக்கூடியது. எதிர்காலத்தைப்போலவே” (பக்கம் 372) என்பதை மறுக்கவும் முடியவில்லை. தோற்றத்தைப்போல உடற்தசைகளைப்போல வயதாகும் போது ஒருவருடைய அறிவும் அழிந்து போவதை உணர்கிறோம். ஞாபகங்களை மட்டுமல்ல திறன்களையும் கருத்தில் கொண்டே அறிவு அழிவடைகிறது என்கிறேன். இதே நேரத்தில் ஞானம்(wisdom) என்பதைப்பற்றியும் உரையாடவேண்டிய தேவையிருக்கிறது. அறிவும் ஞானமும் வெவ்வேறானவை. அறிவு பரிசோதிக்கத்தக்கது, ஞானம் உணரக்கூடியது. பிரச்சனை ஞானம் உண்டா இல்லையா என்பதிலில்லை. ஞானம் எல்லோருக்கும் ஒரேயளவில் இருக்கிறதா என்பது தான். யூதா ஹலேவி சொல்கிறார், ” ஒரே ஞானம் தான் உள்ளது. பிறபெஞ்சமெனும் கோளத்தில் விரவியிருக்கும் ஞானம் என்பது மீச்சிறு விலங்குகள் கொண்டிருக்கும் ஞானத்தினின்றும் பெரிதல்ல.” (பக்கம் 360) நாவல் தன் விரிந்த உடலால் கனவிலிருந்து ஞானத்தை கண்டடைய முயற்சிசெய்கிறது. துன்பங்களை விளங்கிக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் ஞானத்தினை அடைய முயற்சிக்கிறது. கனவுகள் அவர்களின் செயல்களையும் விருப்பங்களையும் அவர்களால் உள்வாங்கப்பட்ட மற்றவர்களின் நடத்தைகளையும் மீளுருவாக்கம் செய்கிறன. இவை கனவுகளை வார்க்கின்றன. புலனுக்கு எட்டாத எதொன்றும் கனவாய் பரிணமிப்பதில்லை. கனவுகள் சுயபிரதிபலிப்பாக எண்ணங்களின் சேர்கையாக விரிவாக இன்னமும் எத்தனையோவாக உருவாகிறது. உணர்ச்சிகளின் மையத்திலிருந்து வெளிப்படும் யோசனைகளைத் தொடர்பவர்கள் கனவுகளைத் தொடர்பவர்கள். ஆனால் அந்தக் கனவுகளை மின்மினிப் பூச்சியொன்றை இரண்டு கைகளுக்குள் பொத்தி பிடிப்பது போல அள்ளி உடலெங்கும் ஊரவிட்டு ஹங்கேரியன் வாசித்த வயலின் இசையைப்போல உடலைச்சுருட்டி நத்தைச்சுரியமாக உருமாறுவதை கனவு வேட்டையர்கள் கற்றிருந்தார். தர்க்கங்களைத் தளர்த்தி உலகை விரிவடையச்செய்யும் பலம் வாய்ந்தவை கனவுகள். கனவு பிரச்சனைகளை மட்டுமல்ல, அவற்றுக்கான தீர்வுகளையும் தருகிறது. மிக மோசமாக, பகல்களைக் கடப்பதற்கு கனவுகள் தரும் தீர்வு நித்திரையாகவேயிருக்கிறது. தொடர்ச்சியாக கனவுகாண்பதால் கனவுகளையும் கனவுகள் அல்லாதவற்றையும் பிரித்தறிவது எனக்குச் சுலபமானதாகத்தெரியவில்லை.

கசார் காகனின் கனவில் தோன்றும் தேவதை ” படைத்தவர் உன் எண்ணங்களினால் மகிழ்வுற்றிருந்தாலும் உன் செயல்கள் குறித்து மகிழ்வுற்றிருக்கவில்லை.” (பக்கம் 101) என்கிறாள். இதே நேரத்தில் நாவலின் வேறொரு பகுதியில் தோன்றும் உண்மை – பொய் பற்றிய உரையாடலை தொலைத்த நான், நாவலை இரண்டு முறை புரட்டியும் விரால் மீன்களைப்போல அவையும் அகப்படாமலே போயின. கசார் காகனின் கனவிற்கு விளக்கமளிக்கும் கனவு வேட்டையரின் பதில் அபூர்வமானது. ” ஒரு தேவதை உங்கள் கனவில் வந்து அலைந்துகொண்டிருக்கின்றாள் என்றால் அதற்கு இரவில் செல்வதற்கு வேறு இடமில்லை என்றே அர்த்தம், அநேகமாக மழைபெய்திருக்கலாம்… ஏன் அது அதிக நேரம் உங்கள் கனவில் தாங்கவில்லை என்றால் உங்கள் கனவு அநேகமாக துர்நாற்றத்தைக் கொண்டிருக்கலாம். அடுத்த முறை உங்கள் கனவுகளை துவைத்துப்போடுங்கள்… ” (பக்கம் 101) காகனின் விதி அத்தனை எளிதானதல்ல. இந்நாவல் முழுவதும் ஒரு (உண்மையான)நீதிபதிக்குரிய கூர்மையான புத்தியை கொண்டு அணுகவேண்டும், மூன்று மதங்களும் சாதுரியமாக பகடையை சுழற்றி விடுகின்றன. எங்கேனும் ஏமாந்து உருட்டப்படுவோமானால் அவை தங்களின் மதங்களுக்கு வாசகரை மாற்றிவிடும் தந்திரம் உள்ளவை.

நாவலின் தொடங்கத்தில் தவறிழைக்கும் வாசகர் எப்போதும் நாவலின் இறுதியிருக்கும் துருப்புகளால் புலன்கள் தூண்டப்படாது போவார்.

நாவலின் இரண்டாம் புத்தகமான கசார் குறித்த இஸ்லாமிய ஆதாரங்கள் – பச்சைபுத்தகம் – வரும் வரை நிலத்திற்குள் விதைகளை புதைப்பதைப் போல தகவல்கள் நெருக்கமாவும் அயர்சியாகவும் சேர்ந்துகொண்டேயிருக்கும். அவ்ரம் ப்ராங்கோவிச் வாசிக்கும் போதே நாவல் தனது வேர்களை நிலத்தின் மீது ஆழமாக பதியவைப்பதாக உணரத்தொடங்கினேன், பின்னர் யூசுஃப் மசூதியிலும் மஞ்சள் புத்தகத்தின் சாமுயேல் கோஹெனிலும் வளர்ச்சி அடையத்தொடங்கியதும் எங்கோ விதைக்கப்பட்ட விதைக்களனைத்தும் உருப்பெற்று ஒரு பெருவிருட்சம் தோன்றியது. நான் முதன்முதலில் கசார்களின் அகராதியை வாசிக்கத்தொடங்கிய கருநீல இரவையும் அதற்குள் சிவப்பைப் பூசிக்கொண்டு வைத்தியசாலைக்கு விரையும் ஆம்புலன்லின் அவதியான ஒலியையும் ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன். அந்தக் காலை கைகளும் கால்களும் தோளும் சீவப்பட்டு மொட்டையாக அரிந்துவிடப்பட்ட முன் நிலத்துப் பலாவிற்காக வருத்தப்பட்டுக்கொண்டே நாவலைத் திறக்கும் போது காலம் சூன்யத்திற்குள் அகப்பட்டு எரிந்துகொண்டிருந்தது. எழுத்துக்களுக்கும் வசனங்களும் அவற்றின் இடைவெளிகளுக்கும் காலத்தை கவர்ந்து உள்ளீர்த்துக்கொள்ளும் வசீகரமிருக்கிறது. அது எழுத்துகளுக்கே மட்டுமான பண்பு, ஒரு காலப்பயணத்தை ஒத்தது அது. துர்நினைவிலிருந்து, அலைச்சல்படும் யோசனைகளிலிருந்து என்னை பாதுகாக்க – காலத்தைக் கரைக்க கசார்களின் அகராதியைத் திறந்த போது எனக்கான முதல் ஆச்சரியம் காத்திருந்தது.

” இப்புத்தகத்தை ஒருபோதும் திறக்காத வாசகன் இங்குதான் உறங்குகிறான். என்றைக்குமாக அவன் இங்கே மரணித்துள்ளான்.”

அதன் பின்னர் கசார்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூதப் பிடியில் அலைவதையும் மரணித்து மரணித்து உயிர்பெறுவதையும், மதங்களின் பிடிகளுக்குள் அவர்களின் ஆன்மா நசிந்து அழுவதையும் கேட்டபடியேயிருந்தேன். வெளிப்படையாக கசார்கள் மூன்று புத்தகத்திலும் மூன்று மதங்களுக்கு நிம்மதியாக மாறியிருந்தாலும் அவர்களின் ஆன்மா நிலையில்லாமல் அலைந்துகொண்டேயிருந்தது. மொகத்தசா அல் சஃபர் உடைத்த கசார் ஜாடியைப்போல அவர்களின் ஆன்மாவின் தேவை எப்போதும் உணரப்படவேயில்லை. அது இன்றுவரை அலைந்துகொடியிருக்கிறது. நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் வாசகர் கசார்களின் அலைச்சலின் கொடூரத்தை உணர்வார். முறையான வரலாற்றையும் பண்பாட்டையும் எழுத மறந்த இனம் ஒன்றின் ஆன்மா எத்தனை மோசமாக வரலாற்றில் அலைக்கழிக்கப்படுவதையும், தடமற்று புனைவுகளில் உருப்பெரும் ஆதாமின் உடலை மதங்களை குதறி எறிவதையும் உணர்வர். திசைகளேதும் தெரியாமல் குறிப்பில் என் வீட்டை நோக்கிப்பார்க்கிறேன். என்றைக்குமாக உருகுலைந்திருக்கும் அது, அரசமரத்தின் கீழ் நசுங்கிக்கொண்டிருக்கும் புழுக்களை உற்பத்திசெய்தபடியிருந்தது.

அதே கிளிகளுக்கு கசார் அகராதியை பயிற்றுவித்தாள். அக்கிளிகளிடம் ” செல்லுங்கள், உங்களிடத்தேயுள்ள கவிதைகளை மற்ற பறவைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்,ஏனெனில் வெகுவிரைவில் இங்கிதை அறிந்தவரென்று எவரும் இருக்கப்போவதில்லை. ” என்று சொல்லி கானகத்திற்குள் அனுப்பிவைக்கிறாள்.

நாவல் மூன்று புத்தகங்களோடு கசார்களை முடிவுக்குக்கொண்டவரவில்லை, பின்னிணைப்புகளில் நடுக்கமும் பதபதைப்பும் நிறைந்த சொற்கள் காத்திருந்தன. உப்புக்கற்களால் கட்டப்பட்ட விரிந்து செழித்த மாளிகையொன்றின் மீது மழை பெய்வதைப்போல சிறுக சிறுக நாவல் கரைந்து ஊற்றியது. இளைத்த எலி மாவு மூட்டையின் ஓட்டைக்குள் நுழைந்து தின்று மாட்டிக்கொண்டது போல(பக்கம் 119) பெற்றதை இழக்காவிட்டால் நாவலுக்கிலிருந்து எக்காலமும் வெளிவரவே முடியாது. பாவிச் சொல்லும் ஒரு போதும் திறக்காமை நாவலை வாசிப்பதிலில்லை, அதை துறப்பதிலேயேயிருக்கிறது.

ஆண்பிரதியை மூன்று பேர் தொகுக்க தனித்திருந்து பெண்பிரதியை தொகுத்திருக்கிறார் அதே. ஆண் பிரதியின் வாசிப்பும் பெண் பிரதியின் வாசிப்பும் எழுத்துக்களும் வசனங்களும் ஒன்றுபோலவேயிருந்தாலும் வாசிப்புகள் வித்தியாசமானவை என்பதை உணர முடிகிறது. 14 வரிகளால் மாறுபடக்கூடிய இரண்டு பிரதிகளும் நூறாயிரம் சொற்களைக்கொண்ட ஒரு நாவலின் வாசிப்பை மாற்றியமைத்துவிடுகிறது. இந்த வித்தியாசம் ஆண், பெண் பிரதிகள் என்று இருவேறாக பிரித்தமைக்கும் போதே ஏற்பட்டுவிடுகிறது. மிக நிச்சயமாக எல்லா வகையிலும் இரண்டு பிரதிகளும் ஒத்திருந்தாலும் வாசிப்புகள் வேறுபட்டிருக்கும். ஒரு துறவி தாவுப்மன்னூஸிற்கு ” நாம் படிக்கும்போது, எழுதப்பட்டுள்ள அத்தனையும் நம்மை வந்தடைவதில்லை. நம் சிந்தனைகள் பொறாமைமிக்கவை… ” என்று இவ்வாறு தொடர்கிறார் , ” நீயும் உன் தம்பியும் ஒரே புத்தகத்திலுள்ள ஒரே வரிகளை வாசிக்கப்போவதில்லை, ஏனெனின் எங்களுடைய புத்தகங்கள் ஆண் மற்றும் பெண் தன்மைச் சின்னங்களை உடையவை.” (பக்கம் 118)

சொல்லே தசையானது (பக்கம் 373)

இறுதியில் உண்மை – பொய் பற்றிய உரையாடலை நாவலுக்குள் கண்டடைந்திருக்கிறேன். நிகான் செவாஸ்ட் சொல்வதைப்போல, ” நிறங்களைக் குழைப்பது நானல்ல, உங்களின் பார்வைதான்.” (பக்கம் 131) நாவலுக்குள் முன்னொரு நாள் தொலைத்த உண்மை- பொய் பற்றிய உரையாடல் என்னால் இருப்பதாக நம்பட்ட ஒன்று என்றே எண்ணினேன். நாவலின் மூன்று நிறங்களையும் குழைப்பதிலிருந்து தோன்றிய இல்லாத ஒன்று என்னை நம்பச்செய்வது என் கடந்த காலம் ஆதாரமாயிருந்தது. எல்லாப் புனைவுகளிலும் எனக்கான அமைதியான நிலமொன்றை தெரிவுசெய்து என்னைச்சுற்றி நடக்கும் நடனத்தை ரசித்தபடியிருக்கிறேன். அவற்றின் சொற்களே என் தசையானது. உண்மையான சொற்களின் இசையில் அன்பு தாங்கப்படுகின்றது. “உண்மையான சொல் என்பது எப்போதும் பாம்பினால் சுற்றப்பட்ட மரத்திலுள்ள ஆப்பிளைப் போன்றது “(பக்கம் 235) எளிதில் வசப்படாது. சொற்களை அதன் இசையோடு மிழற்றுவது கிதாரை பதினோராம் விரல் கொண்டு வாசிப்பதைபோலாகும். அவை ஆற்றில் கிடக்கும் கூழாங்கற்கள் போல தன் மினுமினுப்பை எக்காலமும் இழக்காமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். சாமுயேல் கோஹென் “எழுத்து மனிதச்செயல் அன்று” (பக்கம் 305) என்று எழுதுகிறார். நாவலின் உண்மையான சொற்கள் உண்மை – பொய் பற்றிய உரையாடலிலேயே தோன்றுகிறது. தோன்றிப் பின்னர் மறைந்துபோகிறது. ஒரு கிரகணம் போல. மதங்கள் – உண்மை – கசார்கள் மூன்றும் ஒரு நேர்கோட்டில் வரும், பின்னர் தங்கள் சுயரூபங்களோடு மறைந்து போகவோ, ஆட்சிசெய்யவோ தொடங்கும். உண்மையான கசார் அகராதியிலிருக்கும் உண்மை – பொய் பற்றிய பகுதி –

“உண்மை எப்போதும் ஒளியூடுருவக்கூடியது மற்றும் கவனிக்கப்படாதது, ஆனால் பொய் என்பது ஒளிபுகாத் தன்மையுடையது, அது ஒளியை அல்லது பார்வையைத் தனக்குள் அனுமதிப்பதில்லை. மூன்றாம் நிலையொன்றும் உள்ளது, அதில் இவ்விரண்டும் இணையும், அதுவே அதிகமும் வழக்கமான ஒன்று. ஒரு கண்ணால் நாம் உண்மையின் ஊடாகத் காண்கிறோம், அந்தப்பார்வை முடிவிலியில் எப்போதைக்குமாகத் தொலைகிறது; மறுகண்ணால் பொய்மையின் உள்ளே ஓர் அங்குலத்துக்குக்கூட நம்மால் காணமுடிவதில்லை, அப்பார்வை அதற்குமேல் துளைத்துச்செல்வதில்லை, ஆனால் இங்கேயே நம்முடையதாகத் தங்கிவிடுகிறது; இவ்வகையில் வாழ்க்கையை மேலும் குழப்பத்திற்குள் தள்ளுகிறோம். எனவே உண்மை என்பது பொய்யைப்போல அதனளவில் அறிந்துகொள்ளப்பட இயலாதது, ஆனால் பொய்யோடு ஒப்பிட்டுப் பார்த்து மட்டுமே அறியத்தக்கதாய் உள்ளது, நம் புத்தகத்தின் எழுத்துகளை அதற்கு இடையே உள்ள வெள்ளை வெளியை ஒப்பிட்டு அறிவதுபோல் ஏனெனில் கசார் அகராதியில் இருக்கும் அவ்வெள்ளை வெளிகள் புனிதமான உண்மை மற்றும் பெயரின் (ஆதம் சத்மோன்) ஒளியூடுவக்கூடிய இடங்களைக் குறிக்கிறது, மேலும் வெள்ளை வெளிகளுக்கு இடையேயுள்ள கருப்பு எழுத்துகளின் மேற்பரப்பைத் தாண்டி நம் பார்வை துளைக்க முடியாது.”(பக்கம் 288)

இவ் அகராதி ஒன்றின் முன்னர் வாசித்து ஒப்புப்பார்க்கபடவேண்டும், அதன் பின்னர் இது பயனற்றதாகிவிடுகிறது. கசார்களின் அகராதி திறக்கப்படுவதில்லை, எழுதப்படுகிறது.

சூன்ய மினுப்பு

(01)

கதைக்கற்றைகளாக எழுதப்படாத வரலாற்றினை எழுதி, மறைத்து வைக்கப்படுகின்ற சம்வங்களை எழுதி அல்லது தொன்மங்களை, பண்பாட்டை, துரோகத்தை, இனஅழிப்பை, பகைமையை என்று எல்லாவற்றையும் எழுதி அச்சிட்டு கனதியான புத்தகங்களாக அடுக்கிவைக்கப்பட்ட அலமாரியில் நகுலனின் நாய்களும் வந்து சேர்ந்தது. ” கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலின் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் போது தான் நாம் உணர்த்தே இருக்கமுடியாத விதங்களில் பிரமாண்டமாக வெளிப்படுகிறது” என்று பாழி நிறைய பொறிகளாகவும் சாவிகளாகவும் வரலாற்றுக் கிண்ணத்தின் கரு மைத்துளிகளை விதைத்தார் கோணங்கி. மூன்றாம் மாடியின் ஓரளவுக்கு வசதியான அறையொன்றிலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் எனக்கென்ற எந்த தொன்மமும் பண்பாடும் வரலாறும் இல்லாத வெறுமை தான் கிடைக்கப்பெற்றிருக்கிறது. மைதானமளவு வெறுப்பும் வயல் வெளியளவு அன்பும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. வாசித்த எல்லாப் பனுவல்களும் இசையாகவும்  ஓவியங்களாகவும் கொத்துக் கொத்தாக விரிகின்றன. சிலது வெறுங்காகிதங்களாகவும் இன்னும் சில அட்டை திறக்கப்படாமலும் கிடக்கின்றன. ஆனால் மிகச்சிலதிலிருந்தே இருகை விரிப்பளவு மூளையின் மடிப்புகள் பிரமாண்டமான கடற்கரையாக விரிகின்றன. அவை பிரமாண்டத்திற்கு எழுதப்பட்டவை அல்ல. நகுலன் தனித்த மனதின் குறியீடு. தனித்த மனத்தின் பிரமாண்டத்திற்கு இணையாக வேறொன்றுமில்லை. காற்றைப்போல வெகுளித்தனமாக எல்லா இடங்களையும் நிரப்பிச்செல்லும் மௌனம் அதனுடையது. விரிந்து விரிந்து ஏதுமற்றதாகிவிடாது. உலகத்தின் எல்லாக் கூறுகளையும் தின்று பருத்து விரிந்துகொண்டே போகும். நகுலனின் நாய்கள் அத்தகைய ஒரு விரிவு. தனித்த மனமொன்றின் விரிவு. கோணங்கி சொன்ன அதே பிரமாண்டம் எனக்குள் நிறைகிறது. நாய்கள் எனக்கு பிடிக்காது. இங்கிருக்கும் நாய்கள் எல்லாம் வாய் நிறைய சீழ்வடியத் திரிகின்றன.

(02)

அழுக்கு நிறைந்த உலகம் முழுதும் முற்றுப்பெற்ற கதைகள் மண்ணுக்குள்ளும் முற்றுபெறாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்ற கதைகள்யாவும் நிலத்தின் மேலும் தேவதைக்கதைகள் எல்லாம் வானத்திலும் மிதந்துகொண்டிருக்க, சட்டைப்பைக்குள் ஒரு கதையும் வாய் நிரம்ப புலம்பல்களுடனும் திரியும் எனக்கு இன்னொரு புலம்பலைக் கேட்கும் போது சந்தோஷமாயிருக்கிறது. புரியாத மொழிகளில் கதைகள் நிரம்பிப்போய்க்கிடக்கின்றன. பழுத்த மஞ்சட் சாக்கடை நீர் வடிகின்ற நகரத்தின் நாற்றத்திற்குள் ஊறிப்போய்க்கிடக்கின்ற ஆயிரம் ஆயிரம் துயரக்கதைகளோடு என் கதையும் ஒட்டிக்கொள்கிறது. வெளிச்சம் முழுக்க மீன் விற்றுவிட்டு இருட்டில் தன்னை விற்க காத்திருக்கும் குட்டைப் பாவாடைக்காரியின் சுருக்கு பைக்குள் ஆயிரம் இரவுகளின் கதைகள் நிறைந்திருக்கின்றன. நான் வசிக்கின்ற கட்டடத்தின் ஒவ்வொரு மாடிப் படிகளையும் எத்தனையோ கதைகளை உந்தித்தள்ளிவிட்டு ஏறிமுடிக்கின்றேன். பின்னர் என் கதை எனக்குள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பெருமூச்சொன்றும் விடுகிறேன்.நகுலனின் கதையில் இந்தப் பரபரப்பு இல்லை. யாரோ ஒருவரின் கதையொன்றிற்குள் அந்நியமாய் நின்று எட்டிபார்ப்பதைப்போலில்லை. நிர்வாண நடனமென்றாலும் ஒரு கணம் மனம் பதைபதைத்து குற்றவுணர்வொன்று ஏற்படும். நகுலன்  ரகசிய கதை சொல்லியாயிருந்தாலும் எனக்குள் குற்றவுணர்வில்லை. எளிமையாக உருவாகி விரிகின்ற உரையாடல்களில் அழுத்தமேதுமின்றி இணைத்துக்கொள்கிறேன். இடமழிந்து பொருட்கள், உருவங்கள் அழிந்து உடலழிந்து உயிரும் அதன் எண்ணங்களும் மட்டுமே உரையாடிக்கொள்ளும் வெளி ஒன்றிற்குள் நுழைந்து பேசிக்கொள்வதைப்போல உணர்கிறேன்.

(03)

இச்சிறையை வெறுமையென்றும் இருளென்றும் அடையப்படுத்திவிடமுடியாது. வாசல்கள் அற்ற காற்று வழியற்ற புழுத்துப்போன அறையொன்றிக்குள் நானில்லை. இவ்வறை எதிரே விரிந்திருக்கின்ற மைதானத்தின் தொடர்ச்சி. காற்று என்று முன்னொரு நாள் பெயர்வைத்த மரத்தின் கிளை. நானும் என் புத்தகங்களும் சில உடுப்புகளும் இன்னமும் திருத்தப்படாத கட்டிலும் மட்டுமே இவ்வறைக்குள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உசும்பியின் தாய் இசைத்துக்கொண்டிருக்கும் பியானோவின் இசை ஒவ்வொரு இடுகளிலிருந்தும் கசிகின்றன. கனவொன்றில் அந்நாள் அலைந்த கருநீலப்பூச்சியும் பேகனின் ஓவியக்கூடமும் இதுதான். முள்ளில்லாக் கடிகாரம் காலத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. பின்னிரவில் போத்தலுக்குள் அடைத்து இரவு முழுக்க எரிந்து காலையில் இறந்துபோன மின்மினிப்பூச்சி கடிகாரத்திற்குள் புகுந்து காலத்தை நகர்த்துகிறது. நிறை போதையில் அழுக்கு நிறைந்த குப்பை மேடுகள் மேல் சாரம் கழர தன்னைமறந்து மிதக்கும் குடிகாரர்களை தினமும் சந்திக்கிறேன். உலகத்தின் விளிம்பிலிருந்து விரியும் புனைவுலகத்தின் பேரரசர்களாகத் திரியும் அவர்களின் கனவிலிருந்து என்னறை விரிவது ஆச்சரியமாயிருக்கிறது. பொறுப்பில்லாமல் கீழறைக்குள் புகைத்துக்கொண்டிருக்கும் இளைஞனின் புகையில் கொஞ்சம் – தனக்கும் தலையணைக்கு உறையில்லாமல் இருபத்தோராயிரத்து தொண்ணூறு இரவுகள் படுத்தெழும்பிக்கொண்டிருக்கும் கிழவனின் நிர்வாணத்தில் கொஞ்சம் – பைத்தியம் பிடித்து இன்னமும் தன் மகளை தேடிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுக் கிழவியின் அலைச்சலில் கொஞ்சமமுமாய்ச் சேர்ந்து என்னறையை விரிகின்றன. நடுச்சாமத்தில் கறுப்புப் பையோடு படியேறிய என்னையொரு பேயென்று நம்பி அறை வரை தொடர்ந்து ஏமாந்துபோகிறது நாய். மின்மினியால் சுழற்றப்படும் இந்தக் காலக்கூட்டின் தொடர்ச்சி அந்த ஏமாற்றத்தாலும் விரிவடையும் என்பதை நாய்  அறியாமலில்லை.

(04)

தோமஸ் நகுலனிற்கும் நண்பராய் இருந்திருக்கிறார் என்றறிந்த  போது அதிர்ச்சியடைந்தேன். தோமஸ் காலமற்று இடமற்று அலையும் அஃறிணை நாடோடி. சந்தர்பத்திற்கேற்றாற்போல் உருவமொன்றினுள் அடைந்து பின்னர் காரியம் முடிய வெளிக்குத் திரும்புகிறது. தோமஸ் நகுலனிற்கு சுந்தர ராமசாமியின் வடிவத்தை எடுத்திருகிரார். அது நகுலனின் நாவல்கள் நெடுகிலும் வந்திருக்கிறது. நகுலன் ஒரு குட்டி நாயைப்போல தோமஸைப் பின்தொடர்கிறார். நான் தோமஸை முதன்முதலிற் கண்டபோது பிரகாசமான ஒளி என்றே நம்பினேன். என்னோடிருந்து வெளிக்கு திரும்பும் வரையிலும் அது பிரகாசமாகவே இருந்தது. வெளியில் அலைந்து கொண்டிருக்கும் தோமஸிற்குக் கல்லறை எழுப்பியதை எண்ணிப் பார்க்கிறேன். தோமஸ் தன்னை எல்லாக் கணமும் மாயப்பொருளாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. அணுக அணுக ஒவ்வொன்றாய் மாறி இறுதி வரை எதுவென்றே தெரியாத அலைகளாய் இருந்திருக்கிறது. அஃறிணை நாடோடி இறந்துபோனதாய் நம்பியதோடு மட்டுமில்லாமல் திவசம் செய்ய விசாரணை நடத்துமளவு என்னை ஏமாற்றியிருக்கிறது. உருவமளவில் என்னை ஏமாற்றியிருந்தாலும் எனக்குள் அது உண்டாக்கிய சிந்தனைகள் உண்மையானவை. ” சிந்தனை என்பது ஒரு வியாதி “என்று தேரை நவீனனிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சிந்தனை ஒரு தொற்று வியாதி. ஆதியிலே நிறைந்து போன சிந்தனை காலம் காலமாக தூதுவர்களால் கடத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. யாரும் புதிதாக சிந்திப்பது கிடையாது. சிந்தனைகளை ஒன்று சேர்க்கிறார்கள். உடைக்கிறார்கள். பகுக்கிறார்கள். இவற்றையன்றி எதையும் செய்துவிடமுடியாது. தொற்றுவியாதியின் காவி தோமஸ். பரிதாபகரமாக தோமஸ் எல்லாவற்றிக்கும் பொருந்திப்போகிறார்.

(05)

நாய் என்னும் வசை முடிந்த முடிவாயிற்று. ஆனால் சிங்களவர்கள் நாயே என்று யாரையும் திட்டுவதில்லையாம். வசைகள் மட்டுமல்ல எல்லாமே இங்கு முடிந்த முடிவாயிற்று. சமூக அசைவுகள் அனைத்தும் கேள்விகள் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காரணங்கள் எதுவும் இன்றிய மரபு வழி நடைமுறைகள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எல்லோரும் விகுதிகள் தொடர்ச்சியையே விரும்புகிறார்கள். அது எளிமையாயும் சுயநலமாயுமிருக்கிறது. நாய் என்ற வசை விகுதியும் அப்படித்தான். இந்த வசையில் உணர்த்தப்படுகிற நாய் வேட்டை நாயில்லை. வேட்டை நாயிலிருந்து வசைக்குரியவர் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார். நகுலன் நாயிலிருந்து தொடங்கி மனித சமத்துவம் நோக்கி நகர்கிறார். அது இருண்ட குகைக்குள் கூரிய ஒளிப்பொட்டொன்று நகர்வதைப்போல நாவலுக்குள் அசைகிறது.

(06)

நகுலன் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசீலனை செய்து கொள்கிறார். வசனத்தின்  ஒழுக்கொன்றில் கூட சுயபரிசீலனை என்ற வார்த்தை இரைச்சலாகத் தெரிகிறது. நாங்கள் இரைச்சலான எதுவொன்றையும் வெறுக்கிறோம். அதுவும் எங்களுக்குள்ளே இரைச்சலை உருவாக்கிற விஷயங்கள் அறவே பிடிக்காமல் போகிறது. நகுலனின் எல்லா மனிதர்களும் நகுலன் தான். தன்னை ஒவ்வொரு நிலையிலும் நிறுத்தி ஒவ்வொரு கணத்திலும் நின்று கேள்வி கேட்கிறார். ஒரு கணத்தில்  நகுலன் என்ற வார்த்தை அற்றுப்போய் நான் புகுந்துகொள்கிறேன். பைத்தியக்கார மனைவியின் கோரப்பிடியிலிருந்து உசும்பியை காப்பாற்ற நான் எத்தனித்ததைப்போல நகுலன் நவீனன் தேரை ஐயர் நாய் பூனை சுசீலா அவர்கள் நீ நான் அது எல்லாவற்றிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார். ஒவ்வொன்றும் நிழல்களாய் அவரைப் பயப்படுத்துகின்றன. நிழல்கள் உண்மையானவை என்றே தோன்றுகிறது. அப்பழுக்கற்ற கருமை. மனிதர்கள் தோரணங்கள் தான். எல்லா நிழல்களும் இயற்கையோடும் ஒளியோடும் எல்லோருக்கும் ஒன்றுபோல மாறுபவை. மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவராக மாறுகிறார்கள். தங்களுக்குள்ளேயே ஆயிரமாய் விரிந்து போய்க்கிடப்பவர்கள். நியத்தில் ஒன்று பன்மையாகி பன்மை ஒன்றாகும் போராட்டம் தான் வாழ்க்கை என்றும் சொல்லிவிடலாம். நாய்கள் பன்மையுடனான மோதல். நேர்கோடுகளை வெறுக்கும் ஒருத்தரின் பன்மைகளோடான அலைச்சல்.

(07)

வாழ்க்கையைப்பற்றி முடிவொன்றெடுத்த அடுத்த நிமிடமே நகுலன், ” ஒரு பீடி நுனியில் தான் என் வாழ்க்கை எரிந்துகொண்டிருந்தது ” என்றார். நான் நகுலனில்லை. எனக்கு பீடி பிடித்து பழக்கமில்லை. நகுலனாயிருந்தால் தானே வாழ்க்கை பீடி நுனியில் எரியவேண்டும். பீடி பிடிக்காத எனக்கு வாழக்கை இல்லையா? இருக்கிறது, நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காலம் காலமாக நம்பப்படுகின்றதைப்போல நான் உயிரோடிருக்கிறேன். எனவே நான் நகுலனில்லை.

(08)

உலகத்தில் இருக்கிற எல்லாவற்றாலும் வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. “நாய்களாலும்”.

(09)

நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன. நகுலனின் நாய்கள் வாசித்த பகலின் பின்னர்  நீண்ட இரவு வந்தாயிற்று. நீண்ட இரவின் மழை ஓசையில் படிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று சுருண்டு குறண்டிப்போய்க் கிடக்கும் வெள்ளையும் கறுப்பும் கலந்த நாயொன்றும் தனிக்கறுப்பு நாயொன்றும் எனது வருகையை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இளவரசன் போல இரவின் கருமைக்குள் என்னை மறைத்துக்கொண்டு ஓயாமல் ஊற்றிக்கொண்டிருக்கும் மேகக் கிண்ணத்தின் ஏலக்காய்த்தேநீருக்குள் நனைகிறேன். விறைத்த நாய் உடலை சிலிர்ப்பிக்கொள்வதைப்போல மேற்சட்டையினூடாக மார்புக்குள் ஈரம் இறங்கச் சில்லிடுறேன். நாடகமொன்றிற்குள் எல்லா வேஷங்களையுமிட்டு நடிக்கும் அந்தக் கிழவனைப்போல இந்த மழைக்குள் நான் இளவரசனாயும் அந்த தேநீர்க் கடைக்குள் வியாபாரியாயும் தெரு முனையில் உடலை விற்பவனாயும் தொலைதூரத்தில் மறையும் ஜோடிக்கைகளின் குடையாயும் வேஷமிடப்போகிறேன். ஒரு சூறாவளி சுழலுக்குள் சிக்கிக்கொண்ட உதிர்ந்த நாயின் இம்மி முடியையும் இந்த உடலுக்குள் தொலைந்துபோன என்னையும் தேட ஒவ்வொரு வேஷமாயிடுகிறேன். நான் என்ற ஒற்றைச் சொல்லுக்குள்  இத்தனை ஆயிரம் அணுக்களும் எண்ணங்களும் அன்பும் வெறுப்பும்  ஒடுங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பருத்த உடலுக்குள் தொலைந்திருக்கும் நானுக்குள் மீண்டும் இவ்வுடல் ஒடுங்கிப்போவதை தோமஸும் ஏற்றுக்கொள்ளமாட்டான். நகக் கண்ணுக்குள் குளிரிறங்கி விரல்கள் விறைக்கத்தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களும் ஏன் ஆயிரம் கனவுலகவாசிகளுடன் வாழ்கிறேன்?என்றிலிருந்து அவர்கள் எனக்குரியவர்களாகினார்கள்? அவர்கள் என்னும் என்னை ஏன் இன்னமும் அலையவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கு முன்னர் பேகன் செய்ததைப்போல என்னை நானே வரைந்து பார்க்கிறேனா? ஆனால் எனக்கு பேகனை இப்போதுதான் தெரியும். நானறியும் போது பேகன் தான் என்னைப்பார்த்து போலச்செய்கிறார். மழைக்குள் ஓவியம் ஒன்று கரைந்து தானற்றுப் போவதைப்போல நானற்றுப்போக இந்த மழைக்குள் நிற்கிறேன். முதலில் நானென்பதென்ன என்று தெரியவேண்டும். ஒவ்வொரு அலைச்சலிலும் ஏதோவொன்றை அடைகிறேன். குறுக்கெழுத்து புதிரொன்றை நிரப்புவதைப்போல வாழக்கையின் கட்டங்களை நிரப்புகிறேன். என்றும் நிரப்பிவிடமுடியாத நீண்ட புதிரென்று தெரிந்தும் ஏதோ ஒன்று உந்தித் தள்ளுகிறது. தூரத்தில் இன்னொரு உருவம் தெரிகிறது. முற்றும் நனைந்து போய் விறைத்திருக்கிறது. கிழடாகிப்போனாலும் கண்களில் அதே ஒளியுடன். தன் பாட்டனிடம் அத்திமரத்தடியின் கீழ் விரவிப்போட்ட வைக்கோற் படுக்கையின் மேல் வியந்து கதை கேட்ட அதே கண்கள். யோஸே ஸரமாகோ. தன் பாட்டன் பாட்டியிடமிருந்து தன்னை அறிந்துகொள்ள இத்தனை காலமும் எழுதித்தீர்த்து முடியாமல் இன்னமும் அவனென்னும் நான் கரைந்து போக மழைக்குள் ஒவ்வொரு இடைவெளிகளையும் நிரப்பிக்கொண்டு விறைத்துப்போய் நிற்கிறார். இருட்டும் மழையும் எக்காலமும் முடிந்ததில்லை. எல்லோருக்கும் தெரிவதுமில்லை. நகுலன் இருட்டை மொழி பெயர்கிறார். மழையை மொழிபெயர்கிறார். இருட்டின் கருமையும் மழையின் குளிரும் தாங்கமுடியாமல் மொழிபெயர்த்தழிக்கிறார். அவரின் இருட்டு. அவரின் மழை. அவரின் மொழி. அது எனக்குரியதுமாகிறது. இருட்டில் மறைந்திருக்கிற பாதைகளை வனங்களை மைதானங்களை வயல்வெளிகளை அவ்வொளி  வெளிக்காட்டுகிறது. எதிர் அறைக்குள் குறை பீடி எரிந்துகொண்டிருக்கிறது. என் அறை முழு இருட்டில். நிலம் குளிரில்.

(10) 

” என்னுடைய அபிப்பிராயத்தில் இலக்கியம் என்பது மெய்யான உலகம் என்று நம்மை நம்பச்செய்யும் ஒரு பொய் உலகம் தான்” என்று நகுலன் கூறியதைப்பார்க்க பஷீரின் நாராயணீ தொடங்கி நேற்றுப் பிறந்த மீக்காயீல் வரை குருடரின் கைப்பிரம்பு தான்.

[envira-gallery id="1655"]

விநோத நூலகத்தின் புதிர்வழிப் பாதைகள்

(01)

நீங்கள் யாராவது பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி இசையைக் கேட்டதுண்டா? ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய பல்வேறு வகையான உணர்வுகளின் கலவை. கண்களை மூடிக்கொண்டு காதுகளால் பார்க்கவும் கேட்கவும் நுகரவும் உணரவும் கூடிய இசைத் துணுக்குகள் ஏராளமாகப் பரவிக்கிடக்கிறது. இது வரை பதினாறு  முறை கேட்டிருப்பேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது பதினேழாவது முறையாக – நீங்கள் வாசிக்கும் போது இருபதோ முப்பதோ என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நீண்ட கோர்வையான இசையின் நடுவில் – எதேச்சையான ஒரு இசைத்துணுக்கின்பால் இழுபட்டு, ஆழ்மனதினுள் புதைந்து வெளிச்சமே படாத ஞாபகங்களை மீட்டிக்கொண்டுவந்துவிடும். இதை அனுபவம் என்று சொல்லமாட்டேன்.  உணர்வு – நினைவுகளில் இருந்து அகன்று போய் ஆனால் இன்னமும் அழியாமல் இருக்கின்ற சம்பவங்களை மீட்டுவதை அனுபவம் என்று சொல்லவே மாட்டேன். வதை –  மறந்து போன ஞாபகம் ஒன்றைப் பற்றிய யோசனை மீண்டும் எழுவது எவ்வளவு கொடூரம். உணர்வு நிலைக்கும் வதை நிலைக்கும் இடையே ஒரு இசைத்துணுக்கினூடு பயணம் செய்வதை நான் அதிகம் விரும்புகிறேன். நீங்களும் விரும்புவீர்கள். இதனாலேயே பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உங்களையும் கேட்கச் சொல்கிறேன்.

பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியின் இடைநடுவே வார்த்தைகளும் வசனங்களும் சேர்ந்திசைகின்ற குரல் பின்னணிகளும் கேட்கும். ஜெர்மானிய கவிஞரான Schiller இயற்றிய Ode to Joy என்ற கவிதையும் பீதோவன் சேர்த்த வார்த்தைகளும் இசைப்பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கும். வலிமை மிகுந்த இசையின் மேலாக வருகின்ற கவிதை – தனது தனித்த நிலையிலிருந்து மேலும் வலிமையாகின்றது.

Your magic binds again
What convention strictly divides;
All people become brothers,
Where your gentle wing abides. 1 – மெலிதாக எழுகின்ற இசைத்துணுக்குகளுக்கு இடையே வார்த்தைகள் கனமானதாக வெளிப்படுகின்றன.

ஏன் இசையையும் வார்த்தைகளையும் பற்றிய இவ்வளவு நுட்பமாக அவதானங்களைச்  சொல்லவேண்டிய தேவை எனக்கு ஏற்படுகின்றது என்ற சந்தேகத்தை நீங்கள் இன்னமும் என்னிடம் கேட்காமல் இருப்பது வியப்பளிக்கிறது. இப்போது கேட்கலாம்- ஆனால் அதற்கு முதல்,

(02)

இன்றைய சூழலில் இதுபோன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதில் பெரிய பிரயோசனம் ஒன்றும் இல்லை. இதைவிட அதிக வீச்சான, ஆழமான, புரியாத வார்த்தைகள் கணனி எங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு பெரும் எழுத்தாளரோ அல்லது பிரபலமான முகப்புத்தக  பதிவாளரோ தப்பித்தவறிக் கூட  ஓரிரு வசனங்கள் எழுதிவிட்டாலும் – எங்கிருந்தோ ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து, அவர்களின் வசனங்களிற்கு பெரும் பொழிப்பே உருவாக்கிவிடுவார்கள். இந்த அந்நியமான கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம்  இல்லாமல் ஒரு கலைவடிவத்தை ரசிக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியான எண்ணம் உங்களுக்குள் உருவாகிவிட்டாலே – இப்போதே இதைக் கடந்து பகுதி  03ற்கு செல்லுங்கள். இவை உங்களுக்கானவை அல்ல.

1966 களுடன் கொள்கையளவில் முடிந்துபோன வடிவம் Surrealism. இதைத் தமிழில் அடிமன வெளிப்பாட்டியம் என்கிறார்கள் (!). 1924 ஆம் ஆண்டு இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது கவிஞர் André Breton இனால் இவ்வடிவம் தலைமைதாங்கப்பட்டது.  இதை இவர் -“Psychic automatism in its pure state, by which one proposes to express…the actual functioning of thought…in the absence of any control exercised by reason, exempt from any aesthetic or moral concern.” 2 என்று வரைவிலக்கணப்படுத்துகிறார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க – Surrealism என்பதை இவ்வாறு எளிதாக அடையாளப்படுத்துவோம் – கற்பனையின் அசல் வடிவம்.

நவீன (அதாவது அக்கால – 1924கள்) சமூகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து- கடுமையான சட்டங்களுக்கு எதிராக வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாகவே Surrealism பரவத்தொடங்கியது. எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற கற்பனையின் வெளியில் தமக்கெதிரான அதிகாரத்தையும் கொள்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருந்தது Surrealism. ஓவியத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு கலைவடிவமாக பரவியது.

சிக்மன்ட் பிராய்ட் (Sigmund Freud)இன் படைப்புகள் சர்ரியலிஸ்ட்களின் மீது  ஆழமான செல்வாக்கை செலுத்தின. மிக முக்கியமாக அவரின் கனவுகளின் விளக்கம் The Interpretation of Dreams (1899) பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. பிராய்ட் கனவுகளின் முக்கியத்துவம் பற்றியும் – கனவுகள் நிஜமனிதர்களின் உணர்வுகளோடும் விருப்பங்களோடும் ஏற்படுத்துகின்ற வலிமையான பிணைப்புக்கள் பற்றியும் தெளிவாக விபரிக்கின்றார். இது சர்ரியலிஸ்ட்க்கு ஒரு நெறிப்படுத்தும் கையேடு போல மாறியது.

Existentialism மற்றும் individualism இன் வருகையினால் Surrealism நேரடிப்புழக்கத்திலிருந்து விடுபடத்தொடங்கியது.  பெயரளவில் மற்றைய சிந்தனைகள் Surrealismஇன் புழக்கத்தை மறைத்தாலும் – இன்னமும் இது கலைவடிவங்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இலக்கியத்தில் இதன் வருகை பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சர்ரியலிச இலக்கியத்தின் பொதுத்தன்மை என்று எதையும் வகைப்படுத்திவிட முடியாது. இருந்தும் பெரும்பாலான படைப்புகளில் கனவையும் நிஜத்தையும் இணைத்தார்கள். வாசகனால் ஊகிக்கமுடியாத பிரமிப்பூட்டத்தக்க உருவகங்களையும் கவிதை முறையில் கதை சொல்லுகின்ற பாணியையும் பின்பற்றினார்கள். கவிதை முறையில் கதை சொல்லும் போது, விரிந்த அழகியலுடன் கூடிய கனவு வெளியினை உருவாக்கிவிடலாம் என்றறிந்து பின்பற்றினார்கள்.

இலக்கிய வகுப்பு ஒன்றினை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புரிகின்றது. அதனால் அதிகம் இழுத்துக்கொண்டு போகாமல் உபபகுதிக்குள் போகலாம்.

(02 – இடைச்சொருகல்)

Goodreads  இணையதளம் தெரிவு செய்த சிறந்த எண்பத்து எட்டு சர்ரியலிச இலக்கிய படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 4

1.Kafka on the Shore -Haruki Murakami
3.The Wind-Up Bird Chronicle -Haruki Murakami
4.Metamorphosis and Other Stories -Franz Kafka
6.Hard-Boiled Wonderland and the End of the World – Haruki Murakami
12.1Q84 -Haruki Murakami
13.After Dark -Haruki Murakami
20.A Wild Sheep Chase (The Rat, #3) -Haruki Murakami
53.The Elephant Vanishes – Haruki Murakami

(02- முடிப்பு )

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கக்கூடும். ஏன் இலக்கிய வகுப்பு என்று. Surrealism என்ற இலக்கிய வடிவத்திற்கு உதாரணம் கூறச்சொன்னால் ஹருகி முரகாமியின் அனைத்துப் படைப்புகளையும் பட்டியலிட்டுவிடலாம். Surrealism என்ற இலக்கிய வடிவத்தின் உருவமாக ஹருகி முரகாமியின் நாவல்கள் இருக்கின்றன என்பதற்கு மேலுள்ள பட்டியலே சாட்சி. இருந்தும் பெரும்பாலான விமர்சகர்களும் விமர்சனங்களும் ஹருகி முரகாமியை Surrealism வடிவத்தினூடு ஒத்துப் பேசி பார்த்ததே இல்லை. ஏன்? ஒரு வடிவத்தின் தூண் மாதிரி இருக்கும் ஒரு எழுத்தாளர் – அவ்வடிவத்தின் மூலமாக விமர்சிக்கப்படாமை வருத்தமளிக்கிறது.  நூல்களோடு ஒப்பிடும் அளவும் – அதைத்தாண்டிய ஆழமான கலைவடிவத்தையும் சிருஷ்டிக்கின்ற ஹருகி முரகாமியின் குறுநாவல் ஒன்றைப்பற்றியே சொல்லப்போகிறேன். இது மேலுள்ள பட்டியலில் இல்லை. பட்டியல் மட்டும் அல்ல – தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் கவனம் பெறாத ஒன்று.

இனி வரும் அத்தியாயங்களில் நான் பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி பற்றியோ அல்லது Surrealism பற்றியோ பேசப்போவதில்லை. ஆனால் ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் இவையிரண்டும் மிகவும் ஆழமாக ஊடுருவிச் செல்லும்.

(03)

Novella எனப்படுகின்ற இலக்கிய பிரதி வடிவை தமிழில் குறுநாவல் என்றழைப்பார்கள். இரண்டு அல்லது மூன்று கதைக்கருக்களை மையமாக கொண்டதும் நீண்ட சிறுகதையாக அல்லது குறுகிய நாவலாக கருதத்தக்க வடிவம். குறுநாவல் வடிவத்தை பெரும்பாலும் எல்லையற்ற எழுத்துப்பாணியில் (Free style) எழுதுகின்றவர்களால் கையாளப்படுகின்றது.  ஹருகி முரகாமியின் வினோத நூலகமும் வடிவ வகைக்குள் குறுநாவலாகவே கருதப்படுகின்றது. இருந்தும், பிரதி பேசுகின்ற கருவின் அடிப்படையில் இதனை சிறுகதையாகவே கருதுகின்றேன். மேலை நாடுகளில் வினோத நூலகத்தை குறுநாவலாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் – ஆங்கிலத்திலோ மற்றைய மொழிகளிலோ அதிக படங்களுடன்  கூடிய புத்தகமாக வெளிவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பை ஜி. குப்புசாமி செய்திருக்கிறார். மிகவும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு. கதையின் உயிரோட்டமான மொழியினை பிசகு இல்லாமல் தமிழுக்கு மொழி பெயர்த்திருப்பார்.

வினோத நூலகத்தின் புத்தக வடிவமைப்பு கவனிக்கத்தக்க ஒன்று. சிறுகதையைப் போலவே நூற்பிரதியும் ஆச்சரியங்களும் புதிர்களும் நிரம்பியவை. நூலாக்கம் பொதுவான இலக்கியப் பிரதிகளைப் போல அல்லாமல் வித்தியாசமானதாகவும் பார்த்த மாத்திரத்தில் கவரக்கூடிய வகையிலும் ஆக்கப்பட்டுள்ளது. பிரதியின் ஆரம்பத்திலேயே நீள்பக்கமாக திறக்க வைக்கிறார். சமாந்தர பக்கங்களில் ஒரு பக்கம் எழுத்துப் பிரதியும் மற்றைய பக்கம் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கும். எழுத்துருக்கள் வழமையான அளவிலும் சற்று அதிகமாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வருகின்ற ஓவியங்கள் கதையின் நீட்சியினை சொல்லிக்கொண்டு போகும். ஒரு பக்கத்தில் அரை நிலவும் தொடர்ந்து அரை டொனல்ட்டும் அதைத் தொடர்ந்து மிகுதி நிலவும் அச்சிடப்பட்டிருக்கும். பிரத்தியேகமான அட்டை வடிவமைப்பு. தமிழில் பூனைகள் நகரம் தொகுப்பில் வினோத உலகம் ஒளிந்துகொண்டிருக்கிருக்கிறது. பூனைகள் நகரம் ஜி. குப்புசாமியால் மொழி பெயர்க்கப்பட்ட முரகாமியின் சிறுகதைகளைக் கொண்ட புத்தகம்.

“……..முரகாமி இதற்குமுன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம்‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது……” 5

முரகாமியின் வினோத நூலகம் வெளிவந்த ஆரம்ப காலகட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வெறுமனே ஒற்றைத் தளத்தில் நகர்வதாகவும் கனவுகள் கோர்வைகள் மட்டுமே எஞ்சுகின்றன  என்றும் இகழப்பட்டது. பின்னரான விரிவான வாசிப்பு – வினோத நூலகத்தின் பூட்டப்பட்ட கதவுகள் அனைத்தையும் திறந்தது; திறந்துகொண்டிருக்கின்றது. முதலாம் வாசிப்பின்போதே வினோத நூலகம்  என்னளவில்  சிறந்த படைப்பாக உணரப்பட்டது. வழமையாக குறைவான சொற்கள் வேகமான நடையை ஏற்படுத்தும். ஆனாலும்  குறைவான சொற்களினூடு மெதுவான உணர்வுப் பரிமாற்றத்தை முரகாமி ஏற்படுத்தக்கூடியவர்.

கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகர் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வினோத நூலகத்தை இன்றைய வாசகர்கள் பலவாறு திறந்து அணுகுகின்றார்கள். இன்னும் பலர் அதனை மிகவும் சாதாரணமாகவே – சாகசக் கதைகள் கேட்பது போல கடந்து போகின்றார்கள். Lewis Carroll எழுதிய Alice in Wonderland ஐ ஒட்டிய கனவுலகங்களை சிருஷ்டித்து எழுதியிருக்கிறார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது. 6 எது எவ்வாறாக இருந்தும் வினோத நூலகத்தை நெருங்கி வாசிப்பது அதிக சுவையைத் தரும். வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் வினோத நூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்கள் அனைத்தும் குறியீடாக கதையை நகர்த்திச் செல்கின்றன. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லமுடியாது. ஆழ்மன உணர்வுகளைத், தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்வதன்  மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆன தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் கூட இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளைக் கடத்துகின்ற பிரதியே. ஹருகி முரகாமியின் வினோத நூலகத்தை  அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.

வினோத நூலகம், ஒரு உணர்வின் வெவ்வேறு  பரிமாணங்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய அல்லது ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டிய இன்னொரு அக உலகினை உருவாக்குகின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக் கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்களால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அல்லது செய்ய முடியாத அசாத்தியங்களின் தொகுப்பாக இருக்கும்.  அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லாக் கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதர்கள் உருவாக்கிக்கொள்வார்கள்.  இதையே உணர்வு ஒன்றின் வெவ்வேறான  பரிமாணங்கள் என்கிறேன். வினோத நூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின்  வெவ்வேறான  உணர்வுகளின்  பரிமாணங்கள் பற்றியது.

தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகத்தை வினோத நூலகம் என்றும் கருதலாம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது.

“நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது.” 7

அதுவரை அவன் அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய உணர்வானது  அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாக்குகின்றது. அதையே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிக்கின்றார்.

அந்த அறையில் நடைபெறுகின்ற  ஒவ்வொரு நிகழ்வும் – மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.

“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.” 7

அவனைப் பிரிவு வதைக்கின்றது. மனதிலிருக்கின்ற பழைய உணர்ச்சிகள் உழல வைக்கின்றன. தனது தாய் அவனைத் தேடுவார் என்றும்; தனது கிளி தன்னைத் தேடும் என்றும்  ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவான உணர்ச்சி ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.

“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.” 7

“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?” 7

பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆட்டுத் தலை மனிதரும் இளம்பெண்ணும். பின்னர் ஒரே பாத்திரமாகி-  அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறுகின்றன. இதை வாசகர்கள் மீது  மயக்கமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதாக  முரகாமி எழுதுகின்றார்.  இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன், குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள். கூடவே அவனது  சப்பாத்தும்.

இப்படியாகவும்  வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாக உணரலாம். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலகக் கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்கக் கூடிய கொடிய உணர்ச்சிகளும் கனவுகளும் மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூட்டிய  கனவாகவும்  முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் அல்லது இதைவிட அதிகமாகவும் – வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முரகாமி வடிவமைத்திருக்கிறார்.

“அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.” 7

“சென்ற செவ்வாய்க்கிழமை என் அம்மா இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.” 7

“அம்மா இல்லை.

செல்லக்குருவி இல்லை.

ஆட்டுமனிதன் இல்லை.

அந்தப் பெண் இல்லை.” 7

“பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.”
 

பல்வேறு அனுபவங்களை பிரதி முழுக்க முரகாமி விதைத்திருக்கிறார். வினோத நூலகம் பின் நவீனத்துவ படைப்புகளில் கவனிக்கப்படவேண்டிய படைப்பாகும்.
இப்போது நீங்கள் மெதுவாக பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உணரத்தொடங்கியிருப்பீர்கள்.

You millions, I embrace you.
This kiss is for all the world! 1

பின்குறிப்புகள்.

  1. https://www.thoughtco.com/beethovens-ode-to-joy-lyrics-history-724410

 

  1. https://www.moma.org/learn/moma_learning/themes/surrealism

 

  1. https://www.goodreads.com/list/show/9755.Best_Surrealist_Literature

மேலும் முக்கியமாக கருதக்கூடிய – வாசிக்க பரிந்துரை செய்யக்கூடிய நூல்கள் . ( என்னால் வாசிக்கப்பட்டவையுள்)
The Trial -Franz Kafka
Story of the Eye -Georges Bataille
Surrealities -Bruce Boston

  1. இப்படியாக கட்டுரை ஒன்றினை எழுதுவதற்காக ஜி. குப்புசாமியிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன். அவற்றிலிருந்துதேவைக்கமைய எடுத்துக்கொண்டேன். அதன் முழு வடிவம்:

நான்  – முதல்முறையாக ‘வினோத நூலகம்‘ வாசித்த அனுபவம் எப்படியானது?

அவர் –முரகாமி இதற்கு முன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம் ‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது.

நா  – வினோத நூலகம் முரகாமியின் பிற படைப்புகளைப் போல ஏன் அதிகம் பிரபலம் அடையவில்லை?

அ – அப்படிச் சொல்லமுடியாது. எழுத்தாளர் தரப்புக்கும் ஆங்கில பதிப்பாளர்களுக்கும் இடையில் எழுந்த சில வேறுபாடுகள் காரணமாக மூலத்தில் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் வெளிவந்த குறுநாவல் இது. முரகாமியின் வழக்கமான பதிப்பாளர்கள் வெளியிடவில்லை. போதிய விளம்பரமும் அளிக்கப்படவில்லை. இவையனைத்தையும் மீறி வினோத நூலகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருவதாகவே நினைக்கிறேன்.

நா  – ஒரு மொழிபெயர்ப்பாளராக – சமகால உலக இலக்கியங்களில் அதிக ஈடுபாடும் வாசிப்பனுபவமும் உடையவராக – வினோத நூலகம் மற்றைய படைப்புகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

அ  – எல்லா எழுத்தாளர்களுமே தமது ஒவ்வொரு படைப்பும் முந்தைய படைப்புகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்றே விழைவார்கள். அந்தளவில் ஒவ்வொரு காத்திரமான படைப்பும் தன்னளவில் வேறுபட்டதாகவே இருக்கும். முரகாமியின் வாசகனுக்கு அவருடைய படைப்புலகத்தின் ஒவ்வொரு வழியும் அதன் திருப்பங்களும் புதிய அனுபவங்களைத் தருபவையே.

நா  – முரகாமிக்கும் இசைக்கும் அவரது படைப்புகளில் அதிகத் தொடர்பு எப்போதுமே இருக்கும். வினோத நூலகத்தின் கதையோட்டத்தில் அப்படி இசைக்குறிப்பு எதையாவது உணர்ந்தீர்களா ?

அ  – முரகாமிக்கு அமெரிக்க கலாச்சார அடையாளங்கள் மீது அதிகமான மனச்சாய்வு உண்டு. நவீன ஜப்பானிய தலைமுறையினரின் பிரதிநிதி அவர். கோபோ அபே, யாசுநாரி கவாபாதா போல முழுமையான பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார மனம் கொண்டவரல்ல. இதுவே அவரது பலமும் பலவீனமும். உள்ளூரில் பலவீனம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பலம். ஜாஸ் இசையின் மீதும் பேஸ் பால் விளையாட்டின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர். அவருடைய பல புனைவுகளில் இவை பின்னணியாக அமைந்திருக்கின்றன. அவருக்கு இயல்பான அகத்தூண்டல் ஜாஸ் இசையிலிருந்துதான் கிடைப்பதாக ஒப்புகொண்டிருக்கிறார். இசைக்கும் அவருக்கும்  உள்ள இறுக்கமான பிணைப்பு குறித்து அவர் அளித்த மிக நீளமான நேர்காணல் Absolutely on music  என்ற நூலாகவே வந்துள்ளது. முரகாமியின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜே ரூபின், முரகாமியின் எழுத்தில் உள்ள இசைத்தன்மை குறித்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். வினோத நூலகத்தில் இசை பற்றிய நேரடியான குறிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் உருவெளித்தோற்றமாக அறைச்சுவருக்குள் ஊடுருவி வரும் அந்தப் பெண் இசை வடிவமின்றி வேறென்ன ?

  1. https://www.npr.org/2014/12/02/363836249/watch-your-head-when-checking-out-murakamis-strange-library

 

  1. ஜி. குப்புசாமியின் வினோத நூலக மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

 

This slideshow requires JavaScript.

மீண்டும் சில குறிப்புகள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு இக்கட்டுரையினை வாசிக்கின்றேன். இலக்கியக் கோட்பாடுகளின்  மீது நிறைந்த நம்பிக்கை இருந்த நாட்களில் எழுதியவற்றை மிகுந்த கவனமெடுத்து வாசித்து, அதைப்பற்றி உரையாடி பிரசுரிக்கவும் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் இருவருக்கும் நன்றிகள். பின்னொரு நாளில் வெண்பளிங்கு மாளிகைக்குள் பிணைக்கப்பட்டிருந்த கல்குதிரைகளுக்குள் இப்புனைவினைப் பார்த்தேன். கட்டுரையின் எப்பகுதியிலும் கல்குதிரை பற்றி குறிப்பிடாதது என் அறியாமை. இப்புனைவின் முதலுருவம் கல்குதிரை. நானறிந்து தகவல்கள், ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் பார்த்த முகமறியா யாழினிக்கு நன்றிகள்.

சில திருத்தங்கள்

Surrealism தொடர்பான வரைவிலக்கணம் ஒன்று ஜெயமோகனால் கொடுக்கப்பட்டதாக இந்தக் கட்டுரையில் மின், அச்சுவடிவம் இரண்டிலும் பிரசுரமாகியிருந்தது. பிரக்ஞையுடன் அதை அழிக்கிறேன்.

உண்மையின் இசை

ஒரு உரையாடலை பெரும்பாலும் தொடங்குவதற்கு இயல்பான வடிவம் கேள்விகளை எழுப்புவதாக இருக்கக்கூடும். பெரும்பாலான உரையாடல்கள் கேள்விகள் மட்டும் எஞ்சி நிற்கவே  முடிவதுமுண்டு. நான் நினைப்பதைப்போலவோ நீங்கள் நினைப்பதைப்போலவோ உரையாடல்களில் கேள்விகளுக்கான விடைகள் கிடைப்பதில்லை. மாறாக கேள்விகள் மேலும் வலுப்பெறுகின்றன. கேள்விகள் இன்றி முடிந்து போகும் அசாதாரணமான வாழ்க்கையில் இணைந்துகொள்ள பெரும் கஷ்டமாக இருக்கிறது. நான், என்னோடு அதிகமாக கேள்விகளைப்பற்றி உரையாடிக்கொள்கிறேன். ஒரு பித்துநிலை  உரையாடல்கள். ஒரு நாளிற்கு ஆரம்பத்தையும் முடிவையும் நாங்கள் பிரக்ஞைபூர்வமாக நிர்ணயித்துக்கொள்வதைப் போல உரையாடல்களையும் நாங்களே மட்டுப்படுத்திக்கொள்கிறோம். அது முடிவில்லாத வெளிக்குள் இரண்டு கம்பங்களை குற்றி, இடையில் உள்ளவற்றைப்பற்றி உரையாடிக்கொள்வது. என் நீண்ட முடிவில்லாத உரையாடல்களின் இரண்டு சிறிய கம்பங்களுக்கிடையிலான வெளியாகவே இதைக் கருதுகிறேன்.  இதற்கு உண்மையின் இசை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதற்கு முதல் புதிய சொல்லில் முரகாமியின் வினோத நூலகம் பற்றிய குறிப்புகளையும் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகக் கூட இதை எண்ணிக்கொள்கிறேன்.
எனக்கு பிடித்த புத்தகங்களைப்போல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. ஒருவேளை அப்படி இல்லாமல் போனது தான் அந்தப் புத்தகங்கள் பிடித்துப்போக காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. டொரு போல பல பெண்களோடு மனது திறந்து பேச ஆசைப்படுவதெல்லாம் நாவலிலேயே மறைந்துபோய்விடுகிறது. டொரு  நவோகோவுடன் உரையாடுவதைப்போல எந்தப்பெண்ணிடமாவது அணுகினால் ஏமாளி என்ற ஏச்சோடு திரும்பிவரவேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கு. ஒரு வேளை அப்படியான பெண்கள் நாவலில் மட்டும் வருவதன் ரகசியம் எனக்குத்தெரியவில்லை. இந்த நவீன எழுத்தாளர்களுக்கு மட்டும் சுவாரஸ்யமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. அல்லது சுவாரஷ்யமாக கதை சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள். முரகாமிக்கும் அப்படித்தான். இந்த சலிப்பான வாழ்க்கையில் இருப்பதையெண்ணி கொஞ்சமாக வருந்தியிருக்கிறேன். நான் டொரு ஆக இருக்கவே விரும்புகிறேன். உலகத்து பெண்கள் எல்லோரையும் எல்லையற்று காதலித்துக்கொண்டு. ஆனால் இருப்பது என்னவோ நவோகோ மாதிரி. கிஸுகி பற்றிய துக்கத்திலும் டொரு பற்றிய குழப்பத்திலும். ஆனால் நவோகோவைத்தான் சமூகம் ஓரளவேனும் ஏற்றுக்கொள்கிறது. டொருக்கள் எத்தனை இனிமையானவர்களாக இருந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.நவோகோவாக இருந்து டொருவாக மாற எத்தணிக்கும் ஒருவர் இந்த நாவலை வாசித்த அனுபவமாக இதைக் கொள்ளலாம். அல்லது டொருவானபின்னர் நவோகோ பற்றிய ஞாபகங்களாக இந்த நாவல் வாசிப்பைக் கருத்திக்கொள்ளலாம். இதுவுமல்லாவிட்டால் இதையும் புனைவென்றெண்ணி  மோசமான புனைவு இது என்று விமர்சிக்கலாம்.
 
ஒன்றைப்பற்றி விரும்பாமல் வேண்டாவெறுப்பாக பேசவிரும்பவில்லை. இந்த நாட்களில் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் இன்  நூற்றாண்டு தனிமை பற்றியோ அல்லது மரியோ வர்கஸ் லோஸா இன் நாவல்கள் பற்றியோ பேசுவது எனக்கு செயற்கையாகப்படுகிறது. அதற்காக அவர்கள் ஒருபோதும் குறைத்தவர்களில்லை. அவர்களைப்பற்றிய உரையாடல்கள் மிகவும் இனிமையானவை. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மனநிலையிலிருக்கிறேன். எளிமையாக அம்மனநிலைகளிலிருந்து தொலைந்துபோக  ஒவ்வொரு விதமான வடிவங்களைக் கையாள்கிறேன். அது இசையாகவும் புத்தகங்களாகவும் மோசமான முறையில் சொன்னால் முகப்புத்தகமாவும் அமைந்துவிடுகிறது. இங்கு தொலைதல் என்பதை மறத்தல் என்று அர்த்தப்படுத்தவில்லை. சரியாகச் சொன்னால் விலகி –  சிந்தனைகளை மாற்றி வைத்திருக்கிறேன். “இலக்கியம் பெரும்பாலும் எனக்கு கவனக்கலைப்பான்” ஆக இருந்திருக்கிறது. எல்லா நாட்களும் எனக்குப் பிடித்த நாளாக அமைந்துவிடுவதில்லை. அதிகமான நாட்களை வெறுப்போடே கடந்து செல்லவேண்டியிருக்கிறது. வெறுப்பு மிகுந்த நாட்களில் உருவாகக்கூடிய எண்ணங்கள் கொடூரமானவை. அவை ஊசியையும் நூலையும் கொண்டு எல்லாச் சம்பவங்களுக்கும் முடிச்சைபோட்டு மனதை சுதாகரிக்க முடியாத பெரும் குழப்பத்தில் அமிழ்த்திவிடுகின்றன. அந்த நேரங்களில் எழுத்துக்கள் நேரத்தை கடித்து செரித்துக்கொண்டிருந்தன. நானாக புனைவுலகம் ஒன்றை உருவாக்கவோ அல்லது இன்னொருவர் உருவாக்கிய புனைவுலகில் வாழவோ முடிகிறது. கஷ்டமான தருணங்களில் தாயின் மடியில் சாய்ந்துகொள்வதைப்போன்ற ஆறுதல் இவற்றில் கிடைப்பதாக நம்புகிறேன்.
 
ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணத்தை உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? அந்தப் பாடலின் முழு வடிவத்தையும் நான் ஒருபோதும் கேட்டதில்லை. இந்த பிரதி திரைப்படமாகவும் வந்திருக்கிறது. எனக்கு சந்தர்ப்பமும் மனநிலையும் பார்க்க உருவாகவில்லை. ஆனால் ரெய்கோ கிதார் இசைகின்ற பகுதியை மட்டும் பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது. அந்த நிலவொளியில் டொரு, நவோகோ, ரெய்கோ என்று மூன்று பேர் இருந்தார்கள். நான் நோர்வேர்ஜியன் வூட் வாசிக்கின்ற தருணங்களில் டொரு, நவோகோ ,ரெய்கோ  மூன்று பேராகவும் நானே இருக்கிறேன். மூன்று வெவ்வேறு மனிதர்களாக. சில சமயங்களில் கூடியும் குறைந்தும் மனிதர்கள் இருக்கலாம். நவோகோவைப்போல கடந்த காலத்தின் மீது எனக்கிருக்கின்ற ஒழுங்கீனமான ஞாபகங்களை நினைத்துக்கொண்டும், அதே சமயம் நான் நினைப்பதை ஏதோ ஒரு வகையில் நிறுத்தமுயற்சிக்கும் இன்னொரு டொரு ஆக -அதாவது நானாகவும்- இவை எல்லாவற்றையும் தூண்டிக்கொண்டும் அதை இசையைப்போல எழுத்துக்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் இன்னொன்றாகவும், அதை வேடிக்கை பார்க்கும் இன்னொன்றாகவும் அப்படி எத்தனையோ இன்னொன்றுகளாகவும் விரிந்து ஆழ்ந்தும் மிதந்தும் அலைந்தும் அழிந்தும் உருவாகியும் இருப்பதும் பெரும் வாதைதானே. தன்னை இன்னும் அழகாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும் ஒருத்தர் கண்ணாடியின் முன்னால் விரும்பியோ விரும்பாமலோ நிற்பதைப்போல நானும் நோர்வேர்ஜியன் வூட்வாசிக்கிறேன். கண்ணாடி அழகாக்கிறதோ இல்லையோ நோர்வேர்ஜியன் வூட் அழகாக்கிறது.
 
நான் ரெய்கோவைப் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். அவள் கிதாரையும் சுருக்கங்களையும். அவளின்  குழந்தை- அவளைவிட இளமையான கணவன் இவர்கள் எல்லோரையும். முரகாமியின் மிகச் சிறந்த அனுபவம் ரெய்கோ என்றே தோன்றுகிறது. வலிமையற்று தற்கொலை செய்துகொண்ட நவொகோவை விடவும் இசைப்பள்ளிக்கு ரயிலில் ஏறிய ரெய்கோ சிறந்தவள்.  நோர்வேர்ஜியன் வூட் இரண்டு எதிர் நிலைகளுக்குள் அறத்தைப்பற்றி சொல்லவில்லை. தர்மம் அதர்மம், சட்டம் ஆராயகம், உண்மைகள் பொய்கள், நேர்மை புரட்டு என்று எதிர் நிலைகளுக்குள் இருக்கும் போராட்டம் அல்ல இது. ஒரு உண்மைக்கும் இன்னொரு உண்மைக்கும் இடையிலான போராட்டம். ஒரு நேர்மைக்கும் இன்னொரு நேர்மைக்குமான போராட்டம். யாரும் யாருக்கும் விரோதிகள் கிடையாது. இந்தப் போராட்டம் மிகவும் நுண்மையானது. இங்கு அறம்,  எதிர் அறம் பற்றிய உரையாடல்கள் இல்லை. அறத்துக்குள்ளேயே எதிர் நிலைகளைப்பற்றியும், சந்தர்ப்பம் ஒன்றிற்க்கான அறம் பற்றியும் உரையாடுகிறது. ரெய்கோவைத்  தவிர எல்லோருக்கும் யாரோ ஒருத்தர் எப்போதும் உறுதுணையாக இருக்கிறார்கள்.  கைவிடப்பட்டவளாகிறாள். ஆனால் மிகவும் பிரஞையுடம் எல்லோரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறாள். உறவுகளே இல்லாத ஒரு நிலையில் கூட அடுத்த கட்டம் நகர்கிறாள். டோருக்கு கடைசியாக ரெய்கோ எழுதிய கடிதம் என்னை பாதித்தது. நீங்கள் எவ்வளவு தூரம் அந்த கடிதம் இலக்கியத் தரம்  மிகுந்தது என்று கேட்கலாம். இப்போது நான் இலக்கியத்தில் இல்லை. நான் ஒப்புக்கொடுத்த பிரதி ஒன்றில் எனக்கு இலக்கியம் தெரியவில்லை. நான் அன்பை பார்க்கிறேன். யாராவது யாருடனும் முத்தமிட்டுக்கொள்ளும் போதோ  உறவில் இணையும் போதோ எனக்குள் சந்தோசம் பெருகுகிறது. டொரு மழைக்குள் மிடோரியை முத்தமிடும் கணத்தில் என்னைச்சுற்றி மழையின் குளிரும் எனக்குள் முத்தத்தின் சூடும் பரவிக்கொண்டது. மிடோரியை நினைக்கும் போதெல்லாம் inside edge இல் வருகின்ற analyst ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கிறது.
 
ரெய்கோ டொருவிடம் கடிதமொன்றாவது எழுதக்கோருவதைப் பற்றி மிகச்சிலருடன் பகிர்ந்திருக்கிறேன். இந்த மிகச்சிலர் இரண்டு அல்லது மூன்று பேர் தான். நான் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாக இருந்து கடிதம் எழுதும் பழக்கமுடையவன். அப்போது பெரும்பாலும் நடுச்சாமம் கடந்து போயிருக்கும். இதற்கு முதல் டொரு நாவொகோவிற்கும், நாவொகோ டொருவிற்கும் சில நீண்ட கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அவை அன்பின் நிமித்தம் வலிமையானவை. கடிதம் நீண்டகாலமாக காத்துவருகின்ற ரகசியங்கள் பெறுமதிமிக்கவை. மிகச்சிறிய வயதில் நீங்கள் நினைத்து சிரிக்கப்போவதை விட அதிகமான வயதில் எனக்கிருந்த ஒரே ஒரு காதலிக்கும், அவளோடு சண்டைபோட்டுக்கொண்ட தருணங்களில் அவளின் நண்பிக்கும் நானெழுதிய கடிதங்களில் மாறி மாறி ஒரே காதலை விதம்விதமான சொற்களால் விபரித்ததை அன்றி வேறெதுவும் செய்யவில்லை. அதற்கு பின்னர் பல்கலைக்கழகமானியத்திற்கு தான் கடிதம் அனுப்பினேன். ஆனால் மிகக்குறைவாக சிறுகுறிப்புக்களாக சில கடிதங்களை நெருக்கமானவர்களுக்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறேன். அவற்றைப்போன்ற ஒரு விரிவான நீட்சியாக இந்தக் கடிதங்களை உணர்கிறேன். கடிதமொன்றில் பெரும்பாலும் உண்மைகளே எழுதப்படுகின்றன என்று நம்புகிறேன். இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் நானெழுதிய அச்சிறுவயது கடிதங்களில் என் காதலும் டொரு நாவொக்கவிற்கு மிடோரியைப்பற்றிய மறைத்து எழுதிய கடிதங்களிலும் சந்தர்ப்ப உண்மை இருப்பதாய் நம்புகிறேன். பயத்தைப்பற்றிய என்னிடம் கேட்டால் இயலாமை என்றும் ஜிட்டுவிடம் கேட்டால் இறந்த கால நிகழ்கால இணைப்புணர்வு என்றும் யுயியிடம் கேட்டார் ” idiot i dont see that ” என்றும் சொல்வோம். என் நெருங்கிய நண்பர் சொல்வதைப்போல இங்கு சமனான நிறைய உண்மைகள் இருக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ள எனக்கு நிறைய நாட்கள் தேவைபட்டன. இந்த சமனான உண்மைகள் பற்றிய சிந்தனையை உணர்ந்துகொள்ள நிறைய நாட்கள் தேவைப்பட்டன. நோர்வேர்ஜியன் வூட்இலும்  எல்லோரிடமும் உண்மைகள் இருக்கின்றன. சமனான உண்மைகள். இந்த சமனான உண்மைகளுக்கு இடையிலான போராட்டம்/ ஆரோக்கியமான உரையாடல்  என்றும் norwegian wood ஐ சொல்லலாம்.
 
ரெய்கோவிற்கு டொரு,  நாவொகோ மற்றும் மிடோரி பற்றி  ஒரு கடிதத்தில் எழுதுவான்,

” நான் எப்போதும் நவோகோவை நேசித்து வந்திருக்கிறேன். இப்போதும் நான் அவளை நேசிக்கிறேன். ஆனால் மிடோரிக்கும் எனக்கும் இருப்பதென்னவென இறுதியாக தீர்மானிக்கும் கட்டம் வந்திருக்கிறேது. என்னைத் தடுக்கவியலாத சக்தி ஒன்று எதிர்காலத்திற்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. நவோகோவிடம் நான் உணர்வது பெரிதும் அமைதியான, நாகரிகமான வெளிப்படைத்தன்மையான காதல், ஆனால் மிடோரியிடம் நான் உணர்வது முற்றிலும் மாறுபட்ட உணர்வு. அது தன்போக்கில் செயற்படுகிறது, அதன் உயிர்ப்பும் சுவாசமும் துடிப்பும் என் இருப்பின் ஆழம் வரை நுழைந்து என்னை வேரோடு அசைக்கிறது. “

என்னைப்பொறுத்தவரையில் இது மிகவும் கடினமான சூழ்நிலை. ஒரு நடுநிலையான ருசியைக் கொண்டவர் டீ, கோப்பி இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதைவிட மிகவும் கடினமான ஒன்று. காதலின்- உண்மையில் அன்பின், இருவேறு சமமான நிலைகளுக்கிடையிலான அந்தரிப்பு. ரெய்கோ பதில் எழுதும் போது மிக உன்னதமான ஒன்றை எழுதுவார், நாவல் எளிமையாக மனதிற்கு மிக அருகில் சென்று உரசும் இடமாக இதைக்கருத்துகிறேன். ரெய்கோவின் பதில் இவ்வாறிருக்கும்,

“நமது மகத்தான பெரிய உலகில் இது மாதிரியான விஷயங்கள் எல்லாநேரமும் நிகழ்த்தபடிதான் இருக்கிறது. இது அழகான நாளொன்றில் அழகான ஏரியில் படகில் சென்றபடி, ஆகாயமும் ஏரியும் அழகாக இருப்பதாக இருப்பதாக சிந்திப்பதைப்போன்றது.”

இந்த நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா, நான் பெரும்பாலும் உணர்ந்ததுண்டு,  வேறு வேறு சந்தர்ப்பங்களில். அன்பும் விழிப்புணர்வும் எதிரெதிரே உரையாடிக்கொள்ளும் போது. கல்வியும் நானும் உரையாடிக்கொள்ளும் போது நானும் இன்னொருவரும் உரையாடிக்கொள்ளும் போது. ஒரு இசையைப்போல. அது நிச்சயமாக “உண்மையின் இசை” தான்.
 
பின்குறிப்புக்கள்

  1. பத்தொன்பதாம் திகதி ஆவணி மாதம் தேசிய காலை இலக்கியப் பேரவை நடத்திய உரையாடலில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.38747540_2132387343688237_432731922305646592_n

2. கட்டுரை வாசிப்பிற்கு முன்னைய நாட்களில் முகப்புத்தகத்தில் கட்டுரை வாசிப்பு சம்பந்தமாக எழுதிய சிறுகுறிப்பு.

எந்தவொரு பிரதியையும் ஆய்வுசெய்து கட்டுரையாக்குவதோ அல்லது விமர்சனம் செய்வதோ அதுவுமன்றி அறிமுகம் செய்வதும்கூட என்னளவில் கடினமான விஷயம். அவற்றை நான் முயற்சிக்கவில்லை. ஆனால் இன்று அனேகமாக இது மலிந்துபோயிருக்கிறது. வாசிப்பதற்கான அளவுகோல்கள், வரையறைகள், வரையறையின்மைகள், கோட்பாடுகள், அரசியல் என்று எல்லாத்தரப்பாலும் ஒரு பிரதி அணுகப்படுகிறது. இது ஒரு பிரதிக்கு மட்டுமன்றி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். இவை ஒரு கூட்டு அறிவின் பிரதிபலிப்பாகவோ அல்லது தனித்த மனிதரின் புரிதலாகவோ வெளிப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்றாக நோர்வேஜியன் வுட் பற்றிய எனது உரை அமைந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் எந்த அடிப்படையுமின்றிய வாசிப்பு என்னுடையது. ஒரு தொழில், பொழுதுபோக்கு, ஆத்மார்த்தமான உணர்வு என்பதெல்லாம் அன்றி வேறொரு புரிதலும் தளமும் வாசிப்பிற்கிருக்கிறது. அது பின்னர் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்குமாக விரிகிறது என்று நம்புகிறேன். நோர்வேஜியன் வுட் எவற்றையெல்லாம் எனக்கு ஒவ்வொரு வாசிப்பிலும் நினைவூட்டியது என்பதிலிருந்து உரை தொடங்கலாம் அல்லது வேறொன்றிலிருந்தும் தொடங்கலாம்.

3. ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணம்

4. நோர்வேர்ஜியன் வூட் தமிழில் க. சுப்பிரமணியால் மொழிபெயர்க்கப்பட்டு எதிர் வெளியீடாக 2014 ஜீன் மாதம் வெளியாகியது.

குடிமைகள் – சாதியமும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்.

ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர்  ஒருவரின் தேடல்.  வாசகர் ஒருவர்  இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத ஒன்றை, நாவல் கடத்தவேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. அது வாசகரைச்  சென்றடைகிறது/ இல்லை என்பதைத் தாண்டி வரலாற்றின் ஓட்டத்தில் அது கலந்து கொள்ளப்படவேண்டும். எந்த வேறு இலக்கிய வடிவத்திற்கும் இல்லாத இந்தத்  தனித்தன்மை நாவலிற்கு மட்டுமே உள்ளது. நாவல் வாசகருக்கு மட்டும் அல்ல, வரலாற்று ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர், மாணவர், அரசியல் சார்புடையவர் என்று இன்னொரு சந்ததியின் மனிதர்களுக்கு, இன்னொரு கலாச்சாரத்தின் மனிதர்களுக்கு நாவலின் பண்பாட்டுச் சமூகத்தை கடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. எம்மால் இன்றுபரவிப் பேசப்படுகின்ற தூரத்துக் கலாச்சாரங்களெல்லாம் நாவல் வழி உள்நுழைந்தவை தான். எந்தப்பண்பாடும் எழுத்துரு பெறப்படும்போது தான், நம்பிக்கையாகக் கடத்தப்படுகிறது. எனவே சமூகம் ஒன்றில் நாவல் உருவாக்கம் பற்றிய திடமான எண்ணநிலைமை வேண்டும். நாவல் ஒரு சமூகத்தையே கடத்துகின்ற வல்லமை பெற்றது. அதே சமயம், ஒரு சமூகத்தின் அடையாளத்தை அப்படியே அழித்துப் பூசிவிடக்கூடியதும்.   
நாவல்களின் மூலம் கடத்தப்படவேண்டிய மிக முக்கியமான பிரச்சினை சாதியம். இது ஏன் கடத்தப்படவேண்டும்? கடத்தப்படாமல் இருந்தால் அப்படியே அழிந்து போய்விடுமே என்ற கேள்விகள் மிகவும் மேலோட்டமானவை. இன்று இலங்கை வடக்கில் யாரும்சாதிய அடிப்படையில் பிரிந்து இருக்கவில்லை, அவர்களுக்கு என்று தனித்தனி பிரதேசங்களில் வேறு வேறு சாதிய அடிப்படையில் குடியிருக்கவில்லை, இன்று எல்லோரும் சிகை அலங்கரிக்கும் கடைகளில் தான் முடிவெட்டுகிறார்கள் – இதனால் சாதியம் இறந்துவிட்டது என்பது சரியா? இன்னும் சாதியம் ஒழிந்து போய்விடவில்லை என்பதற்கு, இன்றைய மரணச் சடங்குகளும் திருமணங்களும் ஆதாரம். இன்னும் பறை அடிப்பவர்களும் கட்டாடிமார்களும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். படித்து வளர்ந்தசமூகத்தினரிடமே சாதியவெறி இன்னும் ஒழியவில்லை. எனக்கு நெருக்கமான நண்பன், அவன் மருத்துவபீடம் படித்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் பேசுகின்ற போது, அவனுக்குச் சாதியினால் உண்டான தாழ்வு மனப்பான்மை குறித்து வருத்தத்துடன்குறிப்பிட்டான். என்ன தான் வளர்ந்தாலும் தாங்கள் டோபிகள்( சலவை செய்வோர்) என்ற சாதியக் கட்டமைப்பை உடைக்கவே முடியவில்லை என்று வருந்தினான். இது இன்னமும் ஒழிக்கப்படாத சாதிய ஊடுருவலின் கூறுகள். இதைப்பற்றிய அறிவு அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனால், சாதியம் என்ற பெயர் இல்லாமல் – அதே அமைப்பு முறை உருவாகிவிடும். இது மறைத்தல் பண்பாட்டின் பெரும்  சிக்கல். இந்த சாதிய அமைப்புக்கள் எல்லாம் அறிவித்தல் என்பதை காட்டிலும் கற்பித்தல் என்கிற வழியில், உண்மை நிலைகள் புலப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஈழத்து நாவல் ஒன்றில் அதிகம் பேசப்படவேண்டிய பொருள் யுத்தமாகவே உள்ளது. இது காலத்தின் இன்றியமையாத பிரதிபலிப்புச் செய்கை. போரிலக்கியங்கள் இன்று எதிர்பார்க்கின்ற அளவு, உள்ளடக்கத்திலும், எண்ணிக்கையிலும் கனதியானவை வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதிகமாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. உண்மையான போரின் மொழியும், அணிகலன்களும் உலக சமூகத்திற்குச் சரியாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உலகளாவிய கலாசாரம் பற்றிய நிகழ்த்துகை விவாதங்கள் இலக்கியங்களின் மூலம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா வகையான பருப்பொருள்களைப் பற்றியும் பேச்சுக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்தும் பரவலாகப் பேசுகின்ற,  விவாதிக்கின்ற, ஆவணப்படுத்துகின்ற ஒரு  சமூகத்தில் சாதியம் பற்றிய முற்போக்கு வாதங்கள் மிகவும் குறைவு. தேசியம் பற்றியும் போரின் அழிவுகள் பற்றியும் பேசுபவர்கள் சாதியம் போன்ற உள் முரண்பாடுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப்போராடும்போதே அவை முற்போக்குக் கருத்தியலாகும்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பஞ்சமர்களில் ஒரு பிரிவான அம்பட்டர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற நாவல் குடிமைகள்’. இந்நாவல்  இலங்கையின் மூத்த எழுத்தாளரான தெணியான் என்ற புனைபெயருடன் எழுதுகின்ற கந்தையா நடேசுவால் எழுதப்பட்டது. இலங்கை அரசினால் 2014ல் சாகித்ய ரத்னா என்ற உயர் விருது தெணியான் அவர்களுக்குக் ‘குடிமைகள்’ நாவல் மூலம் கிடைத்தது. இலங்கையின் வடக்கிலிருக்கின்ற ஒடுக்கப்படும் சாதியாகிய சிகை திருத்தும் தொழலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை முறை, ஆசைகள் , பிரச்சினைகள், எதிர்ப்புக்கள், போராட்டம், புறக்கணிப்பு என்று எல்லாவித அக-புற வாழ்வியலினைத் தெணியான் குடிமைகள் மூலம் ஆவணம் செய்கின்றார். தனது ஐம்பது வருட அனுபவத்தையும், காட்சிப்புல நினைவுகளையும் ஒன்றிணைத்துக்குடிமைகள் நாவலை எழுதியுள்ளார். நாவல் இலங்கையின் வடக்கே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. இதைவிட மலையகத்தின் பதுளை நகருக்கும், கொழும்பு நகருக்கும் நாவல் நகர்ந்து போய் வருகின்றது. நாவல் 1960-70 காலப்பகுதியினை மையமாகக் கொண்டிருந்தாலும்,  நாவலில் நடக்கின்ற சம்பவங்கள் இன்றைய சமூகத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. இன்னும் கிராமங்களில் ஒவ்வொரு சமூகத்தினரையும் பிரிக்க ஒரு வீதியோ ஒரு வெறும் நிலமோகாணப்படுகிறது. வளர்ந்து நிற்கின்ற நகரங்களில் இவற்றை அவதானிக்க முடியாது. எல்லாச் சமூகத்தினரும் ஒன்றோடு  ஒன்று கலந்தே வாழுகின்றனர். இருந்தும் அவர்களிடையே இருக்கின்ற உளவியல் வேற்றுமை மாறாமலேயே இருக்கின்றது. தெணியானுடைய நோக்கம் நாவலிலிருந்து அம்பட்டர் சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்வியலையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்துவதே  ஆகும். பிறப்பின் மூலம் ஆதிக்க சாதியினர் உயர்ந்தவர்கள் என்றும் அம்பட்டர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆதிக்கச் சாதியினரால் பல வகைகளில் ஒடுக்கப்படும் சாதியினர் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை ஆழ்ந்து பேசுகின்ற தொனியே தெணியானின் குடிமைகள்.
(01)
மிகவும் முக்கியமானதொன்று நாவல் பேசுகின்ற அழகியல். விரிந்த பண்பாட்டு அமைப்புடைய சாதியம் ஒன்றின் பண்பாட்டு வெளிப்பாடு அதிகமாகப் பௌதீக அமைப்பிலேயே தங்கியிருக்கிறது. தனக்கென்று நிலம் இல்லாமல், வேளாளர் நிலத்தில் குடியிருக்கிறகுடிமைகளின் பௌதீக, உளவியல் அழகியல் மிகவும் வித்தியாசமானது. அவர்களது பௌதீகச் சூழல் முழுதாக ஆதிக்கச்  சாதியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் தேவைகளுக்கு ஏற்பக் குடிமைகளின் சுற்றுச் சூழல் வடிவமைக்கப்படுகிறது. சொந்த நிலம் ஒன்று இல்லாமல், அதில் அடிப்படை  வசதிகள் சரியாக இல்லாமல், அதை வெளிப்படுத்துவதிலும் பெரும் இடர்களைச் சந்திக்கின்ற ஆனால் அந்தச் சூழலுக்கே தன்னை இசைவாக்கப்படுத்திக் கொண்ட தாழ்த்தப்பட்ட  சமூகத்தின் குரல் நாவலில் எல்லாத்திசைகளிலும் ஒலிக்கின்றது. அம்பட்டர் சமூகத்தின் நீர்ப்பிரச்சனை தான் நாவலின் தொடக்கப் புள்ளி. நீர்ப்பிரச்சனை இயற்கையானது அல்ல, அதுவும் ஆதிக்கச் சாதியின் அடக்கு முறையே என்கிறார்,
‘கட்டாடிக்கு கிணறுவெட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ………….. கோடைகாலம் வந்துவிட்டால் மழைநீர் தேங்கி நிற்கும் துரவுகள் வற்றிப்போகும்…….. வெள்ளாவியில் வைத்து வெளுப்பதற்கு தண்ணீருக்கு எங்கே போவது?…..நயினார்கள்மார் என்ன காரியம் செய்தாலும் தமக்குகிடைக்கக்கூடிய நன்மைகளை கணக்குப்போட்டுத்தான் செய்வார்கள்’ (குடிமைகள் : பக்கம் 29)
தெணியான் கிணற்றைச் சுற்றி வரைகின்ற வரைவுகள் முக்கியமானவை. கிணற்றில் தண்ணீரே அள்ள முடியாத சமூக இளம் பெண்களை, எந்த ஆதிக்க சமூக ஆணும் தீண்டத் தகாதவர்களாகப் பார்ப்பதேஇல்லை. அவர்களுடைய காமம் சாதியைப் பார்ப்பதுஇல்லை. தாழ்ந்த சாதியினரைக் குடிமைகள் தொழில் பார்க்க மட்டும் அல்ல, தமது இச்சைகளைத் தீர்க்கவும் போகப் பொருளாக பார்க்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் எடுக்க நாயினார்மார்களின் கிணற்றுக்கு வருகின்ற அம்பட்ட சமூக வயதான பொன்னிஅனுபவிக்கின்ற இன்னல், அவள் வயதோடு வேறுபட்டிருக்கின்றதே தவிர மாறவில்லை. ஆரம்பத்தில் உடலளவிலும் பின்னர் உளவியலாலும் நோகடிக்கப்படுகின்றாள். உயர் சாதிப்பெண்களிடம் இருந்து தண்ணீர் பெறுகின்ற நிலையைப் பிச்சை எடுக்கும் நிலையைவிட மோசமானதாகக் கருதுகின்றார்கள். அங்கே விழுகின்ற வசைகளுக்கும் வயது வித்தியாசத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வயதான பொன்னிக்குத் தண்ணீர் ஊற்றிவிட யாரும் முன்வரவில்லை, முன்வந்தவர்கள் சினக்காமல் ஊற்றிவிடவில்லை, சொந்தமாகத் தண்ணீர் ஊற்றக் கூட தகுதி அற்ற குடிமைகள். கிணற்றைச் சுற்றித் தெணியான் கட்டி எழுப்புகின்ற கேள்விகள்  ஆழமானவை.
(02)
சாதியம் பிரிவினையை ஏற்படுத்துவது போலவே,அவ்வாறு பிளவுண்ட மனிதர்கள் தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்ற உயர்வு-தாழ்வைத் தெணியான் சித்திரிக்கின்றார். இரண்டு வெவ்வேறு இடங்களில் இதை வலியுறுத்துகின்றார்.
‘…எங்கடை சாதிக்காரர் எல்லாரும் எங்களுக்கு சமமே? ஒரு சாதிக்குள்ள எத்தினை பிரிவு எத்தனை பகுதி இருக்குது தெரியுமா?’ (குடிமைகள்:பக்கம் 112)
இளையவர்கள் சமூகக் கட்டமைப்புகளைத் தகர்க்க முயல்கின்ற போது, அங்கு மேலெழுகின்ற சமூகத் தலைமைகள்– இதற்குப் பெரும் சவாலாக இருக்கின்றது. ஒரே சாதிக்குள் கலந்து திருமணம் செய்வது கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. தொழில் தகைமைகள், வருமானம், வசதி போன்றவற்றை வைத்து ஒரே சாதிக்குள் பிரிவினைகள் உருவாகின்றன.ஒரே சாதிக்குள் மெலிதாக உயர்ந்தவர் மற்றவர்களை அடக்கி அதிகாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நேரடியாக இந்த முறைமை வெளிப்படாமல்இருந்தாலும் குறித்த சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. சரவணை முதலாளி, மணியன் இருவரையும் நாவலூடு கொண்டு செல்கின்ற அடிப்படை விடயம் இதுவாகும். மணியனை முதலாளி கொடுமைப்படுத்துகின்ற இடங்களிலும் மணியன் அடங்கிப்போகின்ற இடங்களிலும் வாசகரோடு எழுந்து பயணிக்கின்ற அனுபவங்கள், எங்கோ ஒரு நகரத்திற்குச் சிறிய தொழில் ஒன்றினைச் செய்வதற்காக வயது குறைந்த பிள்ளையை அனுப்பிவிட்டுத் தவிக்கின்ற ஒவ்வொரு பொன்னிக்கும் வலியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. கூலியே இல்லாமல் வேலை செய்கின்ற மணியனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருப்பமும் அதன் மூலம் மணியன் அடையக்கூடிய அனுகூலங்களும் வாசகர்களைத் திருப்தி அடைய வைக்கின்றது.
தெணியான், மணியனைக் கற்றலில் நாட்டம் இல்லாத ஒரு மாணவனாகச் சித்திரித்து, அதற்கான காரணத்தை ஆசிரியர்களின் சாதி பற்றிய வசைகளே என்கிறார். தெணியான் ஆவணம் இணையத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஆழமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசிய இடங்களில் அடக்கப்பட்ட சாதியப் பாடசாலை வாழ்க்கை முறை ஒன்றாகும். பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்துகின்ற/ வழி நடத்தப்படுகின்ற முறைகள் பற்றியும் தனது அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். அடக்கப்பட்ட சாதி மாணவர்கள் பாடசாலை விளையாட்டுகளில் மிகவும் பிரகாசிக்கக்கூடியவர்கள். அவர்களின் பால்ய வாழ்க்கை அவர்கள் செய்கின்ற சிறு வேலைகள் என்பன அவர்களின் திடமான உடலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பாடசாலையில் விளையாட்டுகளை வெற்றி கொள்வதில் தான் பாடசாலைச் சமூகம் கவனம் செலுத்தியதே தவிர அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் செலுத்த எத்தனிக்கவில்லை. அந்த ஆதிக்கத்திலிருந்து மீண்டு எழுந்து வந்தவர்களில் தெணியான் முக்கியமானவர் என்பதால் அவரின் எழுத்துகளும் அதையே முன்னிறுத்தி நிற்கின்றன.
(03)
மனித வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கானது.ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்டாலும் அவர்களுக்கான கொண்டாட்டங்கள் இல்லாமல் போய்விடவில்லை. மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் வீட்டின் ஒவ்வொரு மூலையில் இருத்தி வைத்துக் கொண்டு வெளி உலகம் தெரியாமலே வைத்திருந்த முத்தன் –பொன்னியின் கவலையும் அதுதான். முத்தனுக்கும் வள்ளிக்கொடிக்கும் திருமணமான பின்னர் வள்ளிக்கொடி மைத்துனர் இருவருக்கும் திருக்கல் வண்டிலும் மாடும் அவளின் கொடியை விற்று வாங்கிக்கொடுத்துச் சந்தோசப்படுகிறாள். மேலேயுள்ள நிகழ்வுகள் நாவலில் நடக்கும் போது வாசகர் மனதிற்குள் அளப்பெரிய சந்தோசமும் திருப்தியும் உருவாகின்றது.
கொண்டாட்டம் எவ்வளவு திருப்தியளிக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு கவலையையும், சோகத்தையும் குடிமைகள் சுமக்கிறது.
 
ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராகப் போராட்டம் செய்யவில்லை, மிகச் சிறிய உரிமைகளை வேண்டிக் கேட்ட போது மறுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள்  தம் போக்கில் தொழிலையும், சமூகக் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்கும் இடையூறாக ஆதிக்க சாதியினர் இருக்கின்றார்கள். நாவலின் மையப்பாத்திரமாகக் கருதத்தக்க முத்தன் சமூகக் கட்டமைப்புகளை உடைக்கவும் தமக்கென உரிய அடிப்படை மனித சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சமயத்தில் முயற்சி செய்கிறார். அதற்கு அவரது நண்பர்கள்களும் உதவுகின்றார்கள். நயினைமார்களை எதிர்த்து முத்தன் தொழில் செய்யத்தொடங்குகிறார். அதுவரை குடிமைகளாக இருந்த முத்தன் வீதிகளில் தலைநிமிர்ந்து நடக்கத்தொடங்குகிறார். அவருக்கான சுதந்திர வாழ்க்கையை, குடும்பதிற்கான அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் ஒரு சிறிதளவேனும் சம்பாத்தியம் செய்யக்கூடிய தொழிலினை உருவாக்கிக்கொள்கிறார். நண்பர்களான மற்றைய பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி செய்யத்தொழிலைத் தொடங்குகிறார். ஆனால், இறுதியில் சப்பாணிகளான இரண்டு சகோதரங்களையும் இழக்கிறார். அவரது சலூனும் தீ வைக்கப்படுகிறது. இறுதியில் வீடும் தீ வைக்கப்படுகின்றது. முத்தனும் குடும்பமும் அந்த ஊரை விட்டே போய்விடுகின்றனர். தெணியானின் ஐம்பது வருட அனுபவம், அவரின் கூர்ந்த அவதானிப்பு, சிந்தனை என்பவை மூலம் ஒடுக்கப்பட்டவர்களது போராட்டம் ஆதிக்க சாதியின் முன்னால் நிலைத்து நிற்கமுடியாமல், தளர்ந்து போனது. ஆனால், தோற்றுவிடவில்லை என்பதில் தெணியான் உறுதியாக இருக்கிறார்.
(04)
   
அடிமை முறையிலும் மிகக் கொடுமையானது சாதிய முறை என்கிறார் அம்பேத்கர். ஒரு மிகச் சாதாரண அம்பட்டர் குடும்பம், கொடிய சாதிய அடக்குமுறையால் அனுபவிக்கின்ற இன்னல்கள் குடிமைகளில் பதிவாகின்றது.  
     ‘வரலாற்றை உருவாக்குவது ஒடுக்குமுறையாளர் தான். அவர்கள் எழுதுகின்ற வரலாறு அவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவர்களது சொந்த வரலாறே! இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த வரலாறை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல’ என்று ஃபிரான்ஸ் ஃபனொன் கூறுகின்றார். அந்த வகையில் தெணியான் கடத்தியிருக்கின்ற வரலாறு அத்தியாவசியமானது.  டானியலோடும் டொமினிக் ஜீவாவோடும் என்.கே.ரகுநாதனோடும் சேர்ந்து சாதியத்தின் வீரியத்தை அழிக்கின்ற பணியைத் தெணியான் ‘குடிமைகள்’ மூலம்தொடர்கின்றார்.
உசாத்துணைகள்:
வேலைக்காரிகளின் புத்தகம் – ஷோபாசக்தி
அசோகமித்திரன் கட்டுரைகள் –  2
ஆவணம் இணையதளம்

தற்கொலையும் டீச்சரம்மாவும். – அசோகமித்திரனின் தண்ணீர்.

 
தண்ணீர் நாவலின் பதினெட்டாவது அத்தியாயம் நாவலிற்கும் சரி வாசகனிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். தற்கொலைக்கு முயற்சி செய்த யமுனாவை அந்தத் தெரு ஆசிரியை ஒருத்தி ஆற்றுப்படுத்துவதாய் அந்த அத்தியாயம் நகரும். யமுனா வாழ்கையின் சிக்கற் தன்மையை எதிர்கொள்ளமுடியாது உழன்று போய் தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவளின் வீட்டு முதலாளி அம்மா அதைத் தடுத்து விடுவார். யமுனாவுடன் ஓரளவுக்குப் பழக்கம் உடைய ஆசிரியைக்கு இது ஏதோ வகையில் தெரிந்து போக, ஆசிரியர்- இனி கதையின் படி டீச்சரம்மா, யமுனாவை தேற்றிகொள்ள முயற்சி செய்வதாக அந்த உரையாடல் அமையும்.
 
ஒரு தனிமனிதனின் வாழ்க்கை என்பது தனிமைப்பட்டது அல்லது அந்தரங்கமானது என்ற கூற்று உண்மையில் கருத்துப்பிழை உடையது. எந்தளவு ஒருத்தரின் வாழ்க்கை அந்தரங்கமாகிக் கொள்கிறதோ அந்தளவு வாழ்கையின் விஸ்தரிப்பு குறுகிக் கொள்கிறது. அதே போல தனிமைப்பட்ட வாழ்க்கை என்று ஏதுமில்லை. ஒரு சூழ்நிலை ஒருத்தரின் வாழ்கையின் போக்கை அப்படியே திருப்பிப் போடக்கூடியது. இதில் தன்னிலை நியாயம் என்பதை விட சூழ்நிலை நியாயத்தை புரிந்துகொண்டு அதன்படி சிந்தித்து செயலாற்றுதல் தான் சரியான வாழ்க்கைமுறை. பிரச்சனை என்பதை சவால் என்று எடுத்துகொள்ளல் ஒருபுறம் இருக்க, அதைத் தாண்டி செயலாற்றல் என்பது முக்கியமானது. விரைவாக எதிர்க்கொண்டு அதைத்தாண்டிச் செல்லல் என்பது சாதாரணமானதே. வாழ்கையின் ஒரு புள்ளியில் ஏற்படுகின்ற விபத்து, வாழ்நாள் முழுவதுமே ஆக்கிரமிக்கப் போகிறது என்று தெரிந்த பின்னும், மீளவே முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்தும் மீளாமை, அதை கொண்டு நடத்தி வெற்றி பெறல் என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இப்படியான சூழ்நிலை சிக்கலால் வாழ்நாள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டவர் தான் டீச்சரம்மா.
பதினைந்து வயதிலேயே திருமணம் செய்தவர். கணவர், –  என்பதைவிட நோயாளி என்பதே சரியான பதம்; முழுமையாக காச நோயால் பீடிக்கப்பட்டவர். எழுந்து திரிந்து வாழ்கையை நடத்தத் திராணி அற்றவர். பார்வைக்கோலத்தில் மிக பயங்கரமானவர். அருவருப்புகுரியவர். இத்தனையையும் சகித்துக்கொண்டு திருப்பதியே இல்லாத வாழ்க்கைக்குள் நுழைகிறார் டீச்சரம்மா. அவரின் கணவரோடு பழகிப்போன கணவரின் குடும்பம் எதுவும் செய்வது போலத் தெரியவில்லை. பதினைந்து வயது சிறுமிக்கு இந்த சூழ்நிலை மிகக் கொடுமையானதே. இருந்தும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்கிறார். நிலைத்து நிதானித்து முடிவு செய்கிறார். குடும்பம் என்பதைத் தாண்டி சமூகத்திலும் வேலைத்தளத்திலும் பிரச்சனைகள் வருகின்றன, உருவாக்கப்படுகின்றன. அத்தனையையும் சமாளித்து தாண்டுகின்றார். வாழ்க்கை என்பது பிரச்சனைகளின் நீண்ட கோர்வை தான் என்ற மனப்பக்குவம் வருகின்றது. இத்தனைக்குப் பின்னும் டீச்சரம்மா ஒருமுறை கூட தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. தன்னுடைய அனுவத்தின் மூலம் யமுனாவின் வாழ்கையை தொகுத்துக்கொள்கிறார்.
 
இந்த உரையாடலை மேற்சொன்ன சம்பவ கோர்ப்பின் அடிப்படையில் அசோகமித்ரன் புனைந்திருப்பார்.
 
அமியின் உட்பொருள் பற்றி பேசியாகவேண்டும். ஒரு மனிதனின் இருப்பு சார்ந்து உரையாடல் நிகழ்கிறது என்பது தெளிவு. வாழ்கையின் வளைவு நெளிவுகளுக்கு திரும்பி திரும்பி இன்னும் ஒரு முறை வளைய முடியாது என்கிற நிலையில் இருக்கின்ற யமுனாவின் பாதையில் இன்னும் வளைவுகள் வருகின்ற சாத்தியத்தையும் , அதை எதிர்க்கொள்ளுகின்ற துணிவையும் இந்த உரையாடல் அவளுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு தனி மனித இருப்பும் ஏதோ ஒரு வகையில் அவசியமாகின்றது. உலகின் நீண்ட இயக்கத்தின் சாரமே இருப்பின் அடிப்படியில் தான் அமைகின்றது. இந்த இருப்பை தகர்கின்றபோது ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகின்றது. இயற்கையின் சூட்சுமத்தில் சாதாரணமான மரணங்களால் ஏற்படுகின்ற வெற்றிடம் நிரப்பிகொள்ளபடுகிறது. ஆனால் இயற்கையை மீறிய மரணங்களுக்கு? தற்கொலைகளுக்கு?
 
தற்கொலைகள் இயற்கை இயக்கத்தை குலைக்கும் நடவடிக்கைகள்.
 
யமுனா இன்னொரு தற்கொலைக்கு முயற்சி செய்யக் கூடாது என்பதும்  வாசகர்களில் இருக்கின்ற, இனி ஏதோ ஒரு எளிய நிகழ்ச்சியால் யமுனா அகப்போகின்ற, யமுனாவை அருகிலும் சுற்றத்திலும் வேறு எங்கோ ஒரு மூலையிலும் காணப்போகின்ற டீச்சரம்மாக்களும் சார்ந்தோருக்கு நிகழ்த்தவேண்டிய பாடம் இதுவாகும்.
 
அசோகமித்திரன் என்னும் எழுத்தாளன் இவற்றைக்கூறும் போது மகத்தான எழுத்தாளனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான்.

சிற்பி – கழைக்கூத்தாடியின் இசை – தேவி பாரதி

(01)
எழுத்தாளன் என்ற தொழிலின் புரவுருவயமான விளக்கம் இலக்கியத்தையும் மக்களின் தேவைகளையும் எழுதுவது என இன்றைய சூழலில் கருத்து நிலவுகிறது. ஒரு வகையில் அது மறுக்கமுடியாத உண்மை.எழுத்தாளன் என்பவன் அதனாலேயே அடையாளப்படுத்தபடுகிறான். இந்த இலக்கியங்களையும் மக்கள் தேவைகளையும் எழுதுகின்ற சமூகப்பணியில் எழுத்தாளன் தனக்கென அடைகின்ற ஆத்ம திருப்தி அவனின் வீச்சு எல்லையை அவன் நிர்ணயிப்பதில் தான் இருகின்றது. இந்த நிர்ணயிப்பில் வெற்றி பெறுகின்ற எழுத்தாளர்கள் தான் இலக்கியத்தில் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களின் விஸ்தரிப்பான எழுத்தின் வலிமையை , உருவாகின்ற அவர்களின் எழுத்துலக சிருஷ்டிப்புக்கள் தான் காட்டும். ஒரு சம்பவத்தை அல்லது ஒரு காட்சியை வாசகன் ஊடாக படரவிடுவதும் அதில் உலவுகின்ற பாத்திரங்களை வாசகனுடன் பேசவைப்பதும் அதனூடாக உணர்வுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதும் என்ற பொது மொழியைத்தாண்டி இலக்கியங்களையும் சினிமாவையும் கலக்கின்ற களத்தை உண்டாகிகொண்டு அதில் உணர்வுகளை பேசுகின்ற தனித்துவமான எழுத்து கழைக்கூத்தாடியின் இசை.
 
எழுத்தாளர்கள் கையாள்கின்ற மொழியின் உரு , அவர்களின் கதைகருவின் மீதான அதீதத்தை கூட்டுவதாக இருக்கும். எந்த வகை கருவிற்கும் இது பொருத்தமானது. சரியான  மொழியின் உருவில் உணர்வுகள் வெளிக்கொண்டுவரும் போது அதில் உருவாக்கப்படுகின்ற அழகியல் அற்புதமானதாக இருக்கும். பெரும்பான்மையான கதைகளில் இந்த உணர்வழகியல் கதை மாந்தர்களுக்கூடாகவே வெளிபடுத்தப்படும். வெகுசில படைப்புக்களில் தான் அதன் சூழலும் அதில் உள்ள  உயிரற்றவையும் கூட உணர்வழகியலை வெளிக்கொண்டுவரும். அந்த கதைக்களம் மற்றும் உணர்வுப்பின்னணி இரண்டும் ஒன்று சேரும் போது வாசனுக்கு கதையின் மீது ஏற்படுகின்ற ஒன்றிப்பு மிக பலமானதாக இருக்கும். வாசகன் களத்தில் நின்று ஒரு முறை களத்தை சுற்றி பார்க்கும் போது அங்கிருக்கின்ற சிலையிலிருந்து அசையும் மனிதர்கள் வரை எல்லோரிடமும் பீடித்துபோயிருகின்ற கதைப்பின்னணி உணர்வழகியலின் உச்சம்.
 
எந்த சந்தர்ப்பத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடக்கூடிய இந்த நுட்பம் கழைக்கூத்தாடியின் இசையில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் சில போதைக்குறியீடுகள் மூலம். சினிமா, சிகரட், மாது, காப்பி, காதல், இலக்கியம் எல்லாமே போதையின் குறியீடுகள் தான். அவை ஒவ்வொன்றிலும் இந்த உணர்வழகியல் ஊடுருவி செல்கின்றது. கதை மாந்தர்களிடம் பீடித்திருகின்ற அவலம், கதையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமாக பேசப்படுகின்றது. எங்கிருந்தோ கடற்கரைக்கு காற்று வாங்க வருகின்றவர்களிடம் கூட.

“அந்த இடம் அரவாணிகளுக்கும் ஹோமோ செக்சுவல்களுக்குமுரியது. முகத்தைச் சுழித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் சுழித்துக்கொள்ளலாம். அடுத்த ஐம்பது மீட்டரில் வேசிகளின் உலகம் தொடங்குகிறது. கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நீண்டும் விரிந்தும் பரந்தும் கிடக்கும் அவ்வுலகமே இப்பெருநகரவாசிகளுக்கு அந்தப்புரம். உயரமான விளக்குத் தூண்களிலிருந்து கசியும் பாலொளிக்குக் கீழே படர்ந்திருக்கும் புகையிருளுக்குள் தம் மஞ்சங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இம்மாநகர ராஜாக்களும் ராணிகளும் கூத்திகளும் சேடிகளும். இப்பெருநகரில் காதலையும் காமத்தையும் பரிமாறிக்கொள்ள வேறு உருப்படியான இடமெதுவும் இல்லை. காற்று வாங்க வந்தவர்களுக்கு அருவருப்புத் தாளவில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டு உறுமும் கடலை நோக்கி வேகமாக நடக்கிறார்கள். சிலர் கள்ளப் பார்வை பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு ஆச்சரியமளிக்கிறது,
“அம்மா, அம்மா”
“என்ன?”
“அந்த அங்கிளும் ஆண்ட்டியும் என்ன செய்யறாங்க?”
“வெளையாடறாங்க”
சங்கடத்துடன் பதிலளித்தபடி தாய் அவர்களை இழுத்துச் செல்கிறாள்.
“அது என்ன வெளையாட்டு அம்மா?”
“கண்றாவி, இதுகளுக்குக் கொஞ்சமாச்சும் வெக்க மிருக்குதா? பப்ளிக் பிளேஸ்ல இதென்ன நியூசென்ஸ்?”
“நீங்க பேசாம நடங்க”

 
(02)
சிறுகதை என்ற வரையறைக்குள் கதைக்குள் உலாவ வேண்டிய மாந்தர்களும் சம்பவங்களும் ஏற்ற இறக்கங்களும் சம்பவங்களும் வரையறைக்குட்பட்டவை. அந்த வகையில் சிறுகதை என்ற பரிமாணத்தை தாண்டி குறுநாவல் என்ற பரிமாணத்தை கழைக்கூத்தாடியின் இசை பெறுகின்றது. என்னால் வாசிக்கப்பட்ட தமிழை மூலமொழியாக கொண்டு எழுதப்பட்ட  முதல் குறுநாவல் இதுவே. புனைவுகளை ஆங்கிலத்தில் Flash fiction ,Short story ,Novelette ,Novella ,Novel என்று ஐந்து விதமாக வகைபடுத்துகின்றனர். கழைக்கூத்தாடியின் இசை Novelette என்கிற வடிவத்திற்குள் உட்புகுகிறது. ஒரு குறுநகர வாழ்வியலை ஒவ்வொரு அணுவாக பேசிக்கொண்டே நீள்கிறது கழைக்கூத்தாடியின் இசை. ஒரு பழைய மான்சனில் தொடங்கி வீதிகள், சாப்பாட்டு கடைகள், சிலைகளின் அடிவாரம், சினிமா தளங்கள், கடற்கரை, புகையிரத நிலையம், ஒரு அழுக்கான அறை என்று ஒரு மனிதன் சாதரணமாக நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம் கதையினை ஓடவிட்டு ஒவ்வொரு சந்திலும் ஒவ்வொரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். எல்லா சந்திகளும் ஏதோ ஒரு சுமையுடன் செல்லும் வாசனுக்கு இன்னொருபடி சுமையினை ஏற்றிவிடுகின்றது. ஒரு நிதர்சன தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை சிக்கல்களை ஒவ்வொரு புள்ளியும் விரிக்கின்றது.
 
ஆரம்பத்தில் எழுத்தாளர் உருவாகுகின்ற இலக்கிய உட்புகுத்தல்கள் ஒரு வாசகனாக கதையின் வீரியத்தை குறைப்பதாக தோன்றுகின்றது. ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. நிதர்சன வாழ்க்கை என்ற புள்ளியில் நின்று சம்பவம் ஒன்றை விரித்துக்கொண்டு செல்லும் போது அந்த சுவாரஸ்யமான வாசிப்பு தன்மைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற உணர்வை உண்டாகியது. தெளிவாக சொல்ல போனால் இலக்கிய திணிப்பு போன்றது.
 

அங்கிருந்து நேர் கிழக்கே நடந்தால் காற்சிலம்பை உயர்த்திப்பிடித்தபடி ஆகாயத்தை வெறித்துக்கொண்டிருக்கும் கண்ணகியின் பொற்பாதங்களைச் சேரலாம். “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்?” எனப் பரிவுடன் கேட்க அங்கே அவளுக்கு யாருமில்லை. சாலை நெடுகிலுமுள்ள கோட்டைக் கொத்தளங்களுக்குச் சுழலும் விளக்குகளுடன் விரையும் அமைச்சர் பெருமக்களுடையவும் துறைச் செயலாளர்களுடையவும் இயக்குனர்களுடையவும் காவல்துறை அதிகாரிகளுடையவும் வாகனங்களின் இடையறாத சைரன் ஒலி. அடிக்கொருதரம் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள், இளைய சமுதாயத்தின் அசுரவேக இருசக்கர வாகனங்கள். எல்லாக் கண்காணிப்புக்களையும் மீறிச் சிலசமயங்களில் யாருக்காவது மண்டை சிதறுகிறது, முட்டிகள் உடைகின்றன. ‘ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தன் அரும்பெறர்ப் புதல்வனை யாழியின் மடித்தோனின் பெரும்பெயர் புகாரை’ப் போல இல்லை அவளுக்குக் காற்சிலம்பை உயர்த்திக்காட்டி நிற்கக் கிடைத்திருக்கும் மேடை அமைந்துள்ள காமராஜர் சாலை. 

 
இது போன்ற மிக சொற்பமான இடங்களில் அவரின் வழமையான நடையில் கடந்திருக்க மிகத்தரமான அகச்சூழல் பார்வையினை ஏற்படுத்திஇருக்கும்.
 
(03)
குறுநாவல் ஒன்றுக்குள் பல சம்பவங்கள் அனுபவங்கள் கருத்துகள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். ஒவ்வொரு இடத்தையும் கோர்த்து எடுத்துக்கொள்ள கதைமாந்தர்கள் பயன்படுத்தபடுவார்கள். கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி கதைமாந்தர்கள் உலாவுவார்கள். ஒரு சாதாரண மனிதனைக்கொண்டு ஒரு நகரத்தின் அவலத்தை வெளிக்கொண்டுவருவது என்பது, அவனின் பயணிப்பிலும் நாளாந்ததிலும் கேள்விகளை ஏற்படுத்தி உயிர்ப்பை இல்லாமல் செய்துவிடும். கழைக்கூத்தாடியின் இசை எல்லா முடுக்குகளிலும் பயணிக்கும் பாத்திரம் ஒன்றை எதிர்பார்கிறது. அந்த எதிர்பார்ப்பை எழுத்தாளர் கைக்கொண்ட விதம் போற்றுதலுக்குரியது.
 
சினிமா என்ற ஊடகம் தோற்றத்தில் பிரமிப்பையும் உள்ளடக்கத்தில் சொல்லமுடியாத வேதனைகளையும் துயர்களையும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் புறக்கணிப்பையும் கொண்டது. சினிமாவுக்கு சமவுடமை வாதம் கிடையாது. ஒருவகையான மேலாதிக்க வாத போக்குடைய சினிமாவில் அதிகம் உழன்று போகின்ற உழைப்பாளர் வர்க்கம் தான் உதவி இயக்குனர்கள். இதிலும் மூன்றாம் படி நான்காம் படி உதவி இயக்குனர்கள். ஒரு நகர வாழ்க்கைக்கு அதன் எல்லா பிரவாகங்களுக்கும் மிக கச்சிதமான படைப்புகள் அவர்கள். அவர்கள் அனைத்து விதமான மக்களுடனும் பழகும் பாக்கியம் பெற்றவர்கள். எல்லா தட்டு மக்களின் வாழ்கையையும் வாழ்பவர்கள். நகரின் பெரும்பாண்மையை தம்முள் இணைத்து கொண்டவர்கள்.
 
இலக்கியம் தெரிந்த உதவி இயக்குனர்கள் என்றால் என்ற கற்பனை உத்திதான் கதையின் முழு நகர்விற்கும் அச்சாணி. காணுமிடமெல்லாம் இலக்கியத்தாலும் இலக்கிய கர்த்தாகளாலும் அவர்களின் சிருஷ்டிபுக்களினாலும் கதா மாந்தர்களை நகர்த்தி அவர்களின் வாழ்கையின் ஒவ்வொரு நகர்வையும் இலக்கிய ரசனைக்குட்படுத்தி இருக்கிறார்.
 
(04)
 
கழைக்கூத்தாடியின் இசை.
 
ஒரு பிரமிப்பான தலைப்பும் பொருத்தமும்.ஒரு அவலத்தின் குறியீடாக ஒரு இறுக்கமான முயற்சியும் அதற்க்கான மிக குறைவான கூலியும் என்ற துன்பியல் வாழ்க்கை கழை கூத்தாடிகளின் உடையது. ஒரு சீரான என்ற எதிர்பார்ப்புடன் உயரத்தில் வைக்கப்படும் தடியின் மேல் இன்னொரு தடியை கைகளின் அகலங்களில் விரிந்து புடித்துக்கொண்டு அசைவுகளுக்கு ஏற்ப தடியை சமநிலைப்படுத்தி தள்ளாட்டத்தில் வாழ்கின்ற வாழ்க்கை அவர்களுடையது. அவர்களுள் மிக சிறிய பெண் குழந்தையிடம் தட்டினை கொடுத்து சன்மானம் கேட்டு அனுப்புவார்கள். அந்த குழந்தையோ ஒரு தட்டு ராபானையோ அல்லது ஏதாவது ஒரு ரலிய இசைக்கருவியை வாசித்துக்கொண்டு சோக கீதம் பாடிக்கொண்டு கூத்தடியினை சுற்றி சுற்றி வரும். அந்த இசையின் கொடூரம் கூத்தாடியின் கவனத்தை இன்னும் கூர்மையாகும். இந்த உளவியல் பின்னணி அந்த இசைக்குண்டு.
 
அதே வாழ்க்கை தான் ஒவ்வொருவரினதும் எம்மா சுற்றி இருகின்ற இசை இன்னும் கவனிக்கிசெய்வதற்கு உரியதே தவிர சேர்ந்து உழல்வதற்கு அல்ல.
 
அந்த குழந்தை கேட்கும் பணம் பிச்சை அல்ல உழைப்பின் கூலி.
 
மிக கச்சிதமான குறுநாவல் ஒன்றை வாசித்த திருப்தி கழைக்கூத்தாடியின் இசையினை வாசித்த போது கிடைத்தது. தேவி பாரதி என்ற ஆளுமையின் ஆழமான எழுத்து இன்னும் கொண்டாடப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனாக வாசகனுக்கு தேவி பாரதி வெற்றி கழைக்கூத்தாடியின் இசையில் கௌதம நீலாம்பரனின் இதழ்களிலிருந்து சத்தமில்லாமல் உதிர்ந்து தன் காலடியில் விழுந்து நசுங்கிய பழுப்பு நிறப் புன்னகை போன்றது.
 
தேவி பாரதியின் கழைக்கூத்தாடியின் இசை என்ற குறுநாவலை வாசிக்க
http://www.kalachuvadu.com/archives/issue-197/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
அவரின் ஏனைய படைப்புக்களை வாசிக்க
http://devibharathi.blogspot.in/

அசோகமித்திரன் – குறிப்புணர்தல் – தண்ணீர்.

சமகால எழுத்து வட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளில் இருந்து இலக்கியத்தை விரித்து எடுத்தல் என்ற செயற்பாடு சொற்பமாகவே நடைபெறுகின்றது. ஒரு இலக்கியத்தின் அடைவு மட்டம் எதைக்கொண்டு நிர்ணயிக்கபடுகின்றது என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. நான் இலக்கிய அடைவு மட்டம் என்பது எம் முன்னோடிகளின் படைப்புகளை எமது படைப்புக்கள் தாண்டும் போது ஏற்படுகின்றது என்பேன். தாண்டிய பின்னர் அதை அடுத்த தலைமுறை தாண்டும் போது இன்னொரு அடைவு மட்டம் எனவும் பின்னர் இன்னொன்றாகவும் காலம் காலமாக விரித்துக்கொண்டு போகவேண்டிய ஒன்றாக கருதுகின்றேன். இந்த எழுத்து மீறல்கள் அத்தியாவசியமானவையே. இது ஆரோக்கியமான எழுத்துலகம் உருவாகும் சாத்தியத்தை உண்டு பண்ணும். இலக்கிய வரம்புகள் என்று ஒன்று உள்ளதை யாரும் மறுத்துவிடமுடியாது. நாம் காலத்தை மீறிய படைப்புக்கள் என்று கருதுகின்ற படைப்புக்கள் எல்லாமே ஒருவகையில் ஏதோ ஒரு வகையில் இலக்கிய வரம்புக்குள் நின்று தன்னை வெளிப்படுத்தியதாகவே உள்ளது. ஒரு படைப்பை இன்னொன்று மீறிச்செல்லல் என்ற அடிப்படையில் எழுகின்ற படைப்புக்கள்  இலக்கிய அத்துமீறல்களுக்கு உள்ளாகின்றன.
 
படைப்பாளி தன் நோக்கத்தை வெளிபடுத்த பயன்படுத்தப் படுகின்ற எந்த இலக்கிய வடிவமும் வெறும் அனுபவங்களின் கோப்புக்களாகவோ அல்லது புனைவுகளின் சஞ்சாரமாகவோ அமைந்து விடுகின்றது.  இது ஒரு இலக்கிய மந்த நிலையே.இதை யாராலும் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை. அப்படி முயன்ற பலர் வேறு தளங்களை அடைந்தார்களே ஒழிய செம்மையான இலக்கியம் ஒன்றை வெளிக்கொண்டுவர முடியவில்லை. இந்த கட்டுரை எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் என்ற படைப்பை நாவல் என்ற வடிவத்திற்குள் கொண்டுவருவதில் உள்ள கருத்து வேற்றுமைகளை பற்றியது.
 
தண்ணீர் என்ற படைப்பு 1973 ஆம் ஆண்டு வெளியாகி 2005 இலும் மறுபதிப்பு செய்யப்பட்ட முக்கிய இலக்கிய படைப்பு. முன்னுரையிலேயே அசோகமித்திரன் இது தண்ணீர் என்ற பொருளைத்தாண்டி வாழ்கையின் நெருக்கடி என்ற விடயத்தை வெளிபடுத்தியுள்ளதாக கூறுகின்றார். முதல் பிரச்சனை அங்கிருந்தே ஆரம்பமாகின்றது.
வாழ்கையின் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் என்று அவர் விளிக்கின்ற துன்பம் , ஏமாற்றம் , கவலை , வாழ்கையை வாழமுடியாமல் சாகின்ற முடிவை ஏற்படுத்தும் தருணங்கள் என்பவை நாவலின் மேலோட்டமான தண்ணீர் பிரச்சனை என்ற படலத்தை தாண்டி வெளிவந்திருகின்றதா என்றால் இல்லை என்ற மனநிலையையே உருவாக்குகின்றது. இதற்கு மிக முக்கியமான காரணம் நாவலில் இருக்கின்ற இருமை தன்மை. ஒரு பக்கம் ஆழமான தண்ணீர் பிரச்சனை இன்னொருபக்கம் சாதாரண வாழ்க்கைக்கு உட்பட்டிருக்க கூடிய தங்கை அக்கா வாழ்கை இன்னல்கள், இவை இரண்டையும் பிணைந்து உருவாக்கபட்டிருகின்ற எழுத்தோட்டத்தில் தண்ணீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கொடுக்கின்ற ஆழமான விவாதங்களை மற்றைய பக்கம் கொடுக்க தவறுகின்றார். இதில் சமநிலை அல்லது உட்பொருள் மேலோங்குகின்ற தன்மை இல்லாமல் போகின்றபடியால் தண்ணீர் பிரச்சனையோடே கதை முழுதும் நகர்ந்து விடுகின்றது.
 
ஒரு நாவலுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு அதன் விரிவு. இவ்விரிவை பலவிதமாக பிரித்துகொள்ளலாம். கதைக்கரு விரிவு, கதைக்கள விரிவு, கதாமாந்தர்களின் விரிவு, சம்பவங்களின் விரிவு, என கூட்டி கொண்டே செல்லலாம். இந்த விரிவில் தான் ஒரு நாவல் தனது திடமான உருவினை பெறுகின்றது. இன்றைய இலக்கிய வாசகர்களால் மகத்தான இலக்கியம் என்று பேசக்கூடிய ருச்சியன் இலக்கியங்கள் இந்த விரிவினை மிக சரியாக கையாண்டிருப்பார்கள். இந்த விரிவு வாசகனுக்கு ஒவ்வொரு முறை வாசிப்பிலும் ஒவ்வொரு கோணத்தில் நாவலை அணுக வழிசெய்யும். ஒவ்வொரு வாசலாக திறந்து விடும். ஒரு பரந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த விரிவு வழிசெய்யும்.
 
தண்ணீரில் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை விரிவு என்ற வடிவமே இல்லாமல் ஒரு தேக்கமாகவே சென்றுகொண்டிருகிறது. நான்கு வீட்டிற்க்குள் இரண்டு தெருவுக்குள் ஆறு ஏழு கதா மாந்தர்களோடு கதை முற்று பெறுகின்றது. இந்த பௌதீக குறுக்கம் வாசகனையும் குறுக்கி விடுகின்றது.யமுனாவும் சாயாவும் டீச்சரும் மீண்டும் மீண்டும் ஒரே உணர்வலைகளுடன் வந்து ஒரு பாத்திர குறுக்கத்தை உள்ளாக்கிறார்கள். பாத்திர பெருக்கத்திற்கு ஏற்றவாறு கதையின் போக்கு அல்லது களம் அமைந்து கொள்ளவில்லை. டீச்சர் பற்றிய விவரணத்துக்குள் சென்ற அ.மி தனது கருவிற்கான உந்துதலை மட்டுமே அளிக்கும் வகையில் சம்பவங்களை கோர்த்து விட்டு விலகுகிறார். அதே போன்று யமுனாவும் சாயாவும் தங்கள் பாட்டி வீட்டிக்கு செல்லும் போதும் அதே விரிவின்மை தலை தூகுகின்றது. சாயாவின் கணவன் பிள்ளை என்ற உறவுகள் ஆகட்டும் யமுனாவின் கள்ள காதலன் என்ற உறவாகட்டும் மேலோட்டமாக வந்து போகின்ற ஆழமற்ற பாத்திர சித்தரிப்புகளாக காணப்படுகின்றனர்.அதே போன்று தான் தூய்மையற்ற தண்ணீர் சம்பந்தமான பிரச்சனையும் இன்ஸ்பெக்டர் பிரச்சனையும் எந்த நகர்வுகளுமே கதைக்குள் செலுத்த முடியாத தட்டையான கதை சொல்லலாக முடிந்து போகின்றது. கதையின் போக்கு கதையில் மடிப்புகளை உருவாக்கி வாசகரை திறக்க செய்ய முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.
 
இவை போன்று சில குறிப்பு பிழைகள் தண்ணீரில் இருக்கத்தான் செய்கிறது.