நின் கைவசம் என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய் வியர்வைத் துளிகளை  இன்னும் நீர்த்துக்கொண்டே இருந்தன புற்கள். காற்றின் வேகமும் பனியின் அடர்த்தியும் வெயிலோடு குறைந்துகொண்டே போகிறது. மழைக்கால அங்கியை அணிந்துகொண்ட செந்தழல் ஒன்றினைப்போல் அறை மீண்டும் வழக்கமான வெம்மையைச்  சூடிக்கொள்கிறது. குழந்தை ஒன்றின் மேகச்சித்திரம் காற்றில் கலைந்து சிதிலமடைவதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கும் தந்தையினைப்போல மழைக்கால அங்கியினை இந்தப் பகல் கழற்றுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூரியன் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்க முழுமையாக நிறம் மாறிய இந்தப் பகலை பைக்குள் போட்டு அடைத்துவிட்டு உறங்கப்போகிறேன்.

மாலையில் மொறட்டுவ மீண்டும் மழையைப் பெறுகின்றது. ஏழைப்பெண் பிச்சைப்பாத்திரத்தில் சில்லறைகளை சேர்பதைப் போல மெது மெதுவாக ஒவ்வொரு துளியையும் நிலம் கவர்கிறது. அடைத்த இருட்டு. மழைத் துமிகளோடு மோதிப் பிணைந்து ஈரலிப்பாக காற்று என்னை வந்தடைகிறது. எழுந்து யன்னலுக்கூடாக மைதானத்தைப் பார்க்கிறேன். இளம் பெண்ணொருத்தியின் வனப்பான உடலைப்போல ஈரத்தில் நனைந்து திரண்டிருந்தது மைதானம். நிறமிழந்த நீலகுடையொன்றினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறேன். மழை பலத்திருந்தது. பெருத்த சத்தத்தோடு கனமான துளிகளாக  வானம் கரைந்து கொட்டியபடி நின்றது. அறைக்கு நேரெதிர் வீட்டு வாசலை நிறைத்து  மழை பெய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ தோன்றித் தெறிக்கின்ற மெல்லிய மங்கிய ஒளியில் நகுலன் தெரிகிறார். கனத்த மழைக்குள் நனைந்து  நடுங்கியபடி நிற்கின்ற பலகீனமான கோழி போல உடல் சுருங்கித்  தளர்ந்து ஒடிந்து போய் நிற்கின்றார். தனது கவிதைகளை மழைத்துளிகளின் இடுக்குகளுக்குள் தொலைத்துவிட்டு நகுலன் தேடிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். கண்கள்  நிலத்தை அனிச்சையாகத் தேடுகின்றன. மழைத்துளி ஒவ்வொன்றும் நிலத்தில் பட்டுத் தெறிக்கும் போது வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் மௌனங்களாகவும் சிதறுகின்றன. சிறிய குடையைப்  பிடித்துக்கொண்டு நகுலனின் வாசலை அடைந்தேன். தந்தையின் அதட்டலுக்கு நடுங்கும் சிறுவனைப்போல எனது உருவத்தை திடீர் நடுக்கத்தோடு பார்க்கிறார். இந்தச் சிறிய குடைக்குள் என்னோடு அடங்கக்கூடிய உருவம் தான் அது.

” வாறீங்களா?” என்றேன்.

“எனக்கும் ஆசைதான்” என்றார். தீக்குச்சி ஒன்றின் மேல் பாலாடை கவிந்தது போல மெலிந்திருந்தன  கைகள். கரைந்துவிடாமல் அவரைப் பிடித்துக் குடைக்குள் சேர்த்துக்கொண்டேன். தூவானம் எத்துகின்ற படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கினோம். அவர் இறங்குவதை மிகவும் விரும்புகிறார். படிகளில் ஒரு குழந்தையைப்போல அவதானமாகவும் குறுகுறுப்புடனும் என்னை அணைத்து மெல்லிய முறுவல் பூத்தபடி பனித்திருந்த தரையின் நீர்க்குமிழ்கள் உடையாதவாறு அடிகளை எடுத்து வைக்கிறார். படிகளை அடைத்திருந்த பூக்கற்கள் நிறைந்த சுவரின் இடுக்குகளால் கசிந்து வந்த தூறல்கள் மென்மையாக ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்றில் எழுதத் தொடங்கின.

ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

நகுலனால் குளிர்ந்த காற்றில் எழுதப்படுகின்ற வரிகளை அவதானிக்கமுடியவில்லை. மிகுந்த கவனத்தோடு படிகளில் இறங்கினார். முதலாம் மாடியின் படிகளுக்கு வந்துவிட்டோம். எல்லாவிதமான மழைக்கும் பழக்கப்பட்ட குடை தன் உரிமையாளரைப் பாதுகாப்பது போல வெள்ளையும் மண்ணிறமும் கலந்த பூனை அதன் நான்கு குட்டிகளையும் சுருட்டிக்கொண்டு கிடந்தது. நகுலனிடம் கேட்கவா வேண்டாமா கேட்கவா வேண்டாமா என்ற குறுகியநேர பலத்த யோசனையின் பின்னர் வாய்திறந்தேன்,

” பூனைகளைப் பற்றி நான் எழுதினத வாசிச்சீங்களா?”

முழுக்கவனத்தையும் என் வார்த்தைகளின் மேல் திருப்பி, படியில் தன் அசைவினை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரின் கண்கள் கிணற்றுக்குள் விழுந்த உதைபந்து போல அசைந்தது. குறுகிய நேரத்திற்குள் பார்வையை விலக்கி பூக்கற்களுக்கூடாக வானத்தைப் பார்த்தேன். கருமையும் நீலமும் சேர்ந்து வழிந்தது. நான் எழுதியவற்றைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது என  நினைத்துக்கொண்டேன். மனம் முழுதும் தூண்டிற் புழுக்கள் அருவருப்பாக நெளிந்தன.  மீண்டும் கண்களைப் பார்க்கவோ சொற்களைக் கேட்கவோ திராணியற்று அடுத்த அடியை எடுத்து வைத்தேன். என்னை இறுக்கமாக பிடித்து நிறுத்தினார். தன் கையினை நீட்டி எதிரே இறங்கிக்கொண்டிருந்த படிகளில் அரைகுறையாக நனைந்த பூனையிலிருந்து கழன்று விரவிக்கிடக்கின்ற பூனைமுடிகள் காற்றில் அசைந்து எழுத்துருக்களாகின்றதைக் காட்டினார்.

நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்

அவை திரண்டெழுந்து காற்றில் எழுதியவற்றினைப் பார்த்த பிரமிப்போடு நகுலனைப் பார்த்தேன். இந்தக் கனத்த மழையிலும் தூரத்தில் ஒதுக்கமாக ஒளிர்கின்ற நட்சத்திரம் ஒன்றினைப்போல மெலிதான  ஓரப் புன்னகை. சூடான ரொட்டித் தட்டில் விழுந்த நீர்த்துளியாக அது கணப்பொழுதில் மறைந்தது. படிகளில் இருந்து முழுமையாக இறங்கிவிட்டிருந்ததை நகுலனால் நம்பவே முடியவில்லை. ஒரு எட்டில் குதித்து வந்த சாகசக்காரனைப்போல இருந்தது அவரின் பார்வை. இருவரும் நெருக்கமாக குடைக்குள் அடங்கிக்கொண்டோம். நகுலனின் உடலிலிருந்து முதுமையின் வாடையும் பலகீனமான சூடும் என்னை சூழ்ந்தது. வலுவிழந்த கிழவனை ஏந்திக்கொண்டு வாலிபனொருத்தன் இந்த மழைக்குள் என்ன செய்யப்போகிறான் என்ற தோரணையில் மழைக்குள் ஒதுங்கிநின்ற காகங்கள் கரைந்தன. மழைக்கு மனிதர்கள் எங்கெங்கோவெல்லாம் ஒதுங்கிநின்றார்கள். உடல் பருத்து – சட்டையின்  கிழிசலுக்குள்ளாக தசை பிதுங்கி நிற்க பிச்சையெடுக்கும் பெண்ணின் இடத்தில் மீன் வாங்கிக்கொண்டுவந்த  பணக்காரனையும் நிற்கவைத்திருக்கிறது மழை. பாதைகள் நிரம்ப வழிந்தோடும் நீருக்குள் இருவரும் துடுப்போடம் போல நகர்ந்துகொண்டிருக்க எதிரே இளம் ஜோடி எங்களைவிட நெருக்கமாக பெரிய குடைக்குள் நடந்துவருகிறது. பெரு மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  சரீரம் உரசிக்கொள்ளும் கணத்தில் பெருமழைக்கு நடுவிலும் தீப்பொறிகள் உருவாகின. இதுவரை எதையும் பெரிதாக கவனிக்காமல் வந்த நகுலன், இந்த ஜோடியை கூர்மையாக அவதானிப்பதை பார்க்கிறேன். ஒரு வேளை அவர்கள் நகுலனின் சுசீலாவை ஞாபகப்படுத்தியிருக்கலாம். மென்மையாக அந்த இரைச்சலுக்குள்ளிருந்து குரலை உயர்த்துகிறேன்.

” சுசீலாவை அவ்வளவு காதலிச்சீங்களா? “

எப்போதும் மௌனமாகவே இருக்கின்ற நகுலனிடம் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனது  கேள்வி இதுவுமில்லை. வெறும் முன்னாயத்தம்.  எனக்குள் எப்போதும் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்பதில் தயக்கத்தை விட சங்கடங்கள் தான் அதிகம். நகுலனும் மனிதன் தானே. எல்லாப் பலகீனமுமுடைய ஒரு சாதாரண எழுத்தாளன். இரண்டு மூன்று அடிகள் மேலும் நடந்திருப்போம். பாதம் மறையுமளவு வெள்ளம் போட்டிருந்தது. நகுலன் மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டு அடியடியாக நகர்ந்தார். மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஒதுக்கமான இடமொன்றிற்கு இருவரும் நடந்தோம். யாரென்று பாராமல் வெள்ளம் என்னும் புனித நதி எல்லோரின் பாதங்களையும் கழுவுகிறது.  மூடியிருந்த கடையொன்றின் முன் கூரையின் கீழ் அடிமட்டம் வைத்துக்கீறிய தடிப்பான நேர்கோடுகளைப் போல கூரை முடிவிலிருந்து மழைநீர் தாரை தாரையாக இறங்கியது. நகுலன் சுற்றியிருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அவர்களும் நகுலனைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அடுத்த மழை மட்டும் நிலைக்குமோ இவ்வுடல் என்று சுற்றியிருந்தவர்கள் நினைப்பதை அவர்களின் கண்களிலிருந்து வருகின்ற பரிவுப்பார்வை உணர்த்தியது. அவர்களின் பார்வை அதிக நேரம் நீடிக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே மீண்டும் அவர்கள் வேலையில்  மழை ஏற்படுத்திய குறுக்கீடுகள் பற்றியும் மழைக்கு பின்னரான ஆயத்தங்கள் பற்றியும் கடுமையாக சிந்திக்கத்தொடங்கினார்கள். சிலர் கைத்தொலைபேசியில் திரைகளில் எதையோ வேகமாக தேடிக்கொண்டிருந்தார்கள். மழை என்னும் பிரமாண்டம் அனாதையாக பெய்துகொண்டிருந்தது. நகுலன் எல்லாவற்றையும் சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். வலிமையான காற்று எங்களை நோக்கி வீச, நேர்கோடுகளாய் விழுந்த நீர்த்தாரைகள் வளைந்து நெளிந்து என் மீது எழுத்துக்களாய் தெரிந்தன.  சிறு துளியும் படாதவாறு நகுலனை நெருக்கமாக அணைத்துக்கொண்டேன்.  நான் அணிந்திருந்த ஆடையினூடாக மழைநீர் ஊடுருவி வரிகளாய்ப்  பதிந்தன.

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனிதஉடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில்பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோபோவது
மாதிரிதோன்றுகிறது
உற்றுப்பார்த்தால்
யாருமில்லை

நகுலனால் அந்த சிறிய கூட்டத்திற்குள் நிற்கமுடியவில்லை. எனக்கும் கூட. எத்தனை பொய்யாக இந்த உலகத்தின் முன் ஆடவேண்டியுள்ளது. யாருக்கு முன்னால் எவ்வாறு பாவனை செய்யவேண்டும் என்று பிஞ்சு மனது கூட அறிந்திருக்கிறது. ஒவ்வொரு ஒப்பனையாக அணிந்து கலைத்து அணிந்து கலைத்து கடைசியில் ஒப்பனைகள் எவை சொந்த முகம் எதுவென்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தோம். தன்னைவருத்தி நிற்பதை கக்கா இருந்த குழந்தைபோல முகத்தை அம்மலாக வைத்து வெளிக்காட்டினார். மீண்டும் நெருக்கமாக குடைக்குள் எங்களை குவித்துக்கொண்டு கிழம்ப  வெள்ளம் சற்றுக்குறைந்திருந்தது. மழை இன்னமும் வேகமாகவும் அடர்த்தியாகவும் பெய்துகொண்டிருந்த கொழும்பு காலி நெடுஞ்சாலையின் நடைபாதையினூடாக இருவரும் நடக்கத்தொடங்கினோம். வாகன இரைச்சலை நகுலன் வெறுத்தார். வளர்ந்த நகரமொன்றில் இன்னமும் புதுப்பிக்கப்படாத பேரூந்து ஒன்று கருமையான புகை மூட்டத்தை கக்கிச்சென்றது. கரும்புகை மழைத்துளிகளோடு கலந்து கபில நிறமாக உருமாறியது. அது வெட்டவெளியில் வரிகளை எழுதிச் சென்றது.

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

” பேரிசையாய்க் கொட்டும் மழையில் யாரிவர்கள் நச்சரித்துக்கொண்டு ” நகுலன் தொடர்ந்தார், ” ஓரமாக எங்காவது போவோம், அமைதியான இடமொன்றிற்கு”

கோரப் பற்கள் கொண்ட நாயினைப்போல வெறிபிடித்து அலையும் இந்த நகரத்தில் அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய துண்டு நிலத்தையேனும் என்னால் காட்ட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லையா. அத்தனை பிரக்ஞை இல்லாமலா நகுலன் இருக்கிறார். ஒரு வேளை தன்னை வீட்டிற்குள்ளே மீண்டும் கொண்டுபோய் விடவே குறிப்பால் உணர்த்துகிறாரோ. மௌனமாகவும் மெதுவாகவும் மேலும் நடந்தோம். என் உள்ளங்கையை யாரோ இறுகப்பிடிப்பது போல உணர்தேன். நகுலன்தான் அது. விரல் எலும்புகள் உள்ளங்கையை குத்துகிறது. வயலின் நரம்புகளை அந்தக் குச்சி மீட்டத் தொடங்குகின்றது. பனிமலை ஒன்றின் பனி கரைந்து மலை மிளிர்வதைப்போல என் ஞாபகங்களை மூடியிருந்த காலம் கரையத் தொடங்கியது. உலகத்தின் எல்லாவற்றையும் நான் ஞாபகங்களால் சேமித்துவைத்திருக்கிறேன். ஞாபகங்கள் அடையாளங்கள். உயிரினங்களையும் பொருட்களையும் சம்பவங்களையும் உணர்வுகளையும் ஞாபகங்கள் தான் எனக்கு  அடையாளப்படுத்துகின்றன. இந்த உலகம் எனக்கு ஞாபகத் துண்டங்களின் சேர்க்கை. காலம் கரைந்து ஞாபகங்களை உணரத்தொடங்குகிறேன்.

மலை முழுக்க வார்த்தைகள். நகுலனின் கைவிரல் அடையாளங்கள்.

அந்தி மயங்கும் வேளை-
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது
அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

“உனக்கு நண்பர்கள் இல்லையா? யாரும் உன் அறைக் கதவை தட்டும் சத்தத்தை நான் கேட்டதே இல்லை. உன்னோடு யாரும் சிரித்துப் பேசி  இருப்பதை நான் அறிந்ததும் இல்லை ” என்றார்.

சிறிது நேரம் மழை மட்டும் இரைந்துகொண்டிருக்க, நகுலனின் இடது காதுகளில் மெலிதாக வளர்ந்திருக்கின்ற முடி மழை நீரில் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது. அந்த சொட்டுநீர் வெள்ளத்தை மோதி எழுப்புகின்ற ஓசை என் காதுகளை வந்தடைந்தது.

“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.

மழை அழுதது. துளிகள் எங்கு விழுந்தாலும் “ஓம் ஓம்” என்று ஆமோதித்தன. இத்தனை யுகங்களாக நண்பர்களைத் தேடி அலைந்த மழை, இன்று  நகுலனிடம் எப்போதும் கிடைக்கமாட்டார்கள் எனச்  சொல்லி அழுதது. அழுகையின் ஓரமாக எனது குரலும் சேர்ந்து அனுங்கியது. நகுலன் இவற்றைக்  கேட்பதாகத் தெரியவில்லை. தான் தொலைத்த நண்பர்களையே இன்னும் தேடிப்பிடிக்காமல், அந்த “கோட் – ஸ்டாண்ட்” பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்கின்ற நகுலனுக்கு மழையின் அழுகை அழ மட்டுமே தெரிந்த குழந்தையின் அழுகையைப்போல இருந்திருக்கும்.

சிறிது நேரத்தில்,மீண்டும் தன் தணிந்த குரலில் “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

” அவள் சுசீலாவின் இன்னொரு உருவமா? “

மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

“நியத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?”

“ம்ம் ஓம், அறை நிறைய வார்த்தைகளைக் குவித்து வைத்துக்கொண்டு கடிதத்தை எழுதவும் கொடுக்கவும் மனமில்லாமல் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து இசைத்தும் பாடியும் ஆடியும் சந்தோசித்து அழுது – ம்ம் பார்த்திருக்கிறேன் “

நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு  நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம்.  நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.

எப்பொழுதும்
அவள் நினைவு
தான் அவள்
யார்
என்று கேட்காதீர்கள்
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்

எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக பெருக்கெடுகின்றன. எதையும் பிடித்து நிறுத்தவோ விரித்துப்பார்க்கவோ முடியவில்லை.  முன்னால் பாய்கின்ற வெள்ளத்தோடு கரைந்துவிட முடிந்தால்  எத்தனை சந்தோசமாக இருக்கும். உடைந்த கண்ணாடி துகள்களைப்போல வெள்ளத்து நீர் கூர்மையாக பாதங்களை மேவிச்சென்றது.  நகுலனின் கண்ணீர் துளிகள் வெள்ளத்தில் விழுந்து சொற்களாவதை எதேச்சையாக கண்டேன். மிகுந்த எத்தனத்தோடு ஒவ்வொன்றாகப்  பொறுக்கிச்  சேர்த்தேன்.

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச்சாகத்தான்
தெரியும்
நீஎன்னசொல்வாய்
என்றுஎனக்குத்தெரியும்
நீஎப்பொழுதும்
இப்படிச்
செத்துக்கொண்டிருக்கவேண்டும்
என்பதுதான்
என்விருப்பமும்
என்றாள்

வார்த்தைகளை சேர்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று  பூனையின் திடீர்  கம்பீர சிலிர்ப்புடன் மெலிந்த  நகுலனை இறுக்கமாக பிடித்துக் குலுக்கி,

” பித்தா சுசீலா இறந்து கிடக்க , நீ வரட்டுக் கவிஞாய் தானே போய்ப் பார்த்தாய்? ” என்று கத்திக்கேட்டுவிட்டு வெடித்து அழுதேன். அந்த கிழவன் முதன் முதலாக தன் கவிதை ஒன்றை நினைவுக்குள் கொண்டு வருகிறான். நடுக்கமான குரலில்,

சுசீலா
செத்துக் கிடந்தாள்
கழுகொன்று
அவள் முலையைக் கொத்திற்று
அவள் துவாரம்
நோக்கி எறும்புக் கூட்டம்.
பிணவாடை
வயிற்றைக் குமட்டக்
கவிஞன் கறுப்புத் தின்றான்;
நாலடிக்கப்பால்
அவர்
மாபெருங் கவிஞர்
தாடி வருடித்
தியானத்திலாழ்ந்தார்.

இவன் வெறுங் கிழவன் தான், நகுலன் அல்ல என்றே தோன்றுகிறது.

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

குறிப்புகள். 

  1. நின் கைவசம் என் கைப்பிரதி – தலைப்பாக நகுலனின் வரியொன்றினை இட்டிருக்கிறேன்.
  2. இங்கிருக்கின்ற கவிதை வரிகள் எல்லாம் நகுலனினுடையது.

சூன்ய மினுப்பு

(01)

கதைக்கற்றைகளாக எழுதப்படாத வரலாற்றினை எழுதி, மறைத்து வைக்கப்படுகின்ற சம்வங்களை எழுதி அல்லது தொன்மங்களை, பண்பாட்டை, துரோகத்தை, இனஅழிப்பை, பகைமையை என்று எல்லாவற்றையும் எழுதி அச்சிட்டு கனதியான புத்தகங்களாக அடுக்கிவைக்கப்பட்ட அலமாரியில் நகுலனின் நாய்களும் வந்து சேர்ந்தது. ” கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலின் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் போது தான் நாம் உணர்த்தே இருக்கமுடியாத விதங்களில் பிரமாண்டமாக வெளிப்படுகிறது” என்று பாழி நிறைய பொறிகளாகவும் சாவிகளாகவும் வரலாற்றுக் கிண்ணத்தின் கரு மைத்துளிகளை விதைத்தார் கோணங்கி. மூன்றாம் மாடியின் ஓரளவுக்கு வசதியான அறையொன்றிலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் எனக்கென்ற எந்த தொன்மமும் பண்பாடும் வரலாறும் இல்லாத வெறுமை தான் கிடைக்கப்பெற்றிருக்கிறது. மைதானமளவு வெறுப்பும் வயல் வெளியளவு அன்பும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. வாசித்த எல்லாப் பனுவல்களும் இசையாகவும்  ஓவியங்களாகவும் கொத்துக் கொத்தாக விரிகின்றன. சிலது வெறுங்காகிதங்களாகவும் இன்னும் சில அட்டை திறக்கப்படாமலும் கிடக்கின்றன. ஆனால் மிகச்சிலதிலிருந்தே இருகை விரிப்பளவு மூளையின் மடிப்புகள் பிரமாண்டமான கடற்கரையாக விரிகின்றன. அவை பிரமாண்டத்திற்கு எழுதப்பட்டவை அல்ல. நகுலன் தனித்த மனதின் குறியீடு. தனித்த மனத்தின் பிரமாண்டத்திற்கு இணையாக வேறொன்றுமில்லை. காற்றைப்போல வெகுளித்தனமாக எல்லா இடங்களையும் நிரப்பிச்செல்லும் மௌனம் அதனுடையது. விரிந்து விரிந்து ஏதுமற்றதாகிவிடாது. உலகத்தின் எல்லாக் கூறுகளையும் தின்று பருத்து விரிந்துகொண்டே போகும். நகுலனின் நாய்கள் அத்தகைய ஒரு விரிவு. தனித்த மனமொன்றின் விரிவு. கோணங்கி சொன்ன அதே பிரமாண்டம் எனக்குள் நிறைகிறது. நாய்கள் எனக்கு பிடிக்காது. இங்கிருக்கும் நாய்கள் எல்லாம் வாய் நிறைய சீழ்வடியத் திரிகின்றன.

(02)

அழுக்கு நிறைந்த உலகம் முழுதும் முற்றுப்பெற்ற கதைகள் மண்ணுக்குள்ளும் முற்றுபெறாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்ற கதைகள்யாவும் நிலத்தின் மேலும் தேவதைக்கதைகள் எல்லாம் வானத்திலும் மிதந்துகொண்டிருக்க, சட்டைப்பைக்குள் ஒரு கதையும் வாய் நிரம்ப புலம்பல்களுடனும் திரியும் எனக்கு இன்னொரு புலம்பலைக் கேட்கும் போது சந்தோஷமாயிருக்கிறது. புரியாத மொழிகளில் கதைகள் நிரம்பிப்போய்க்கிடக்கின்றன. பழுத்த மஞ்சட் சாக்கடை நீர் வடிகின்ற நகரத்தின் நாற்றத்திற்குள் ஊறிப்போய்க்கிடக்கின்ற ஆயிரம் ஆயிரம் துயரக்கதைகளோடு என் கதையும் ஒட்டிக்கொள்கிறது. வெளிச்சம் முழுக்க மீன் விற்றுவிட்டு இருட்டில் தன்னை விற்க காத்திருக்கும் குட்டைப் பாவாடைக்காரியின் சுருக்கு பைக்குள் ஆயிரம் இரவுகளின் கதைகள் நிறைந்திருக்கின்றன. நான் வசிக்கின்ற கட்டடத்தின் ஒவ்வொரு மாடிப் படிகளையும் எத்தனையோ கதைகளை உந்தித்தள்ளிவிட்டு ஏறிமுடிக்கின்றேன். பின்னர் என் கதை எனக்குள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பெருமூச்சொன்றும் விடுகிறேன்.நகுலனின் கதையில் இந்தப் பரபரப்பு இல்லை. யாரோ ஒருவரின் கதையொன்றிற்குள் அந்நியமாய் நின்று எட்டிபார்ப்பதைப்போலில்லை. நிர்வாண நடனமென்றாலும் ஒரு கணம் மனம் பதைபதைத்து குற்றவுணர்வொன்று ஏற்படும். நகுலன்  ரகசிய கதை சொல்லியாயிருந்தாலும் எனக்குள் குற்றவுணர்வில்லை. எளிமையாக உருவாகி விரிகின்ற உரையாடல்களில் அழுத்தமேதுமின்றி இணைத்துக்கொள்கிறேன். இடமழிந்து பொருட்கள், உருவங்கள் அழிந்து உடலழிந்து உயிரும் அதன் எண்ணங்களும் மட்டுமே உரையாடிக்கொள்ளும் வெளி ஒன்றிற்குள் நுழைந்து பேசிக்கொள்வதைப்போல உணர்கிறேன்.

(03)

இச்சிறையை வெறுமையென்றும் இருளென்றும் அடையப்படுத்திவிடமுடியாது. வாசல்கள் அற்ற காற்று வழியற்ற புழுத்துப்போன அறையொன்றிக்குள் நானில்லை. இவ்வறை எதிரே விரிந்திருக்கின்ற மைதானத்தின் தொடர்ச்சி. காற்று என்று முன்னொரு நாள் பெயர்வைத்த மரத்தின் கிளை. நானும் என் புத்தகங்களும் சில உடுப்புகளும் இன்னமும் திருத்தப்படாத கட்டிலும் மட்டுமே இவ்வறைக்குள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உசும்பியின் தாய் இசைத்துக்கொண்டிருக்கும் பியானோவின் இசை ஒவ்வொரு இடுகளிலிருந்தும் கசிகின்றன. கனவொன்றில் அந்நாள் அலைந்த கருநீலப்பூச்சியும் பேகனின் ஓவியக்கூடமும் இதுதான். முள்ளில்லாக் கடிகாரம் காலத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. பின்னிரவில் போத்தலுக்குள் அடைத்து இரவு முழுக்க எரிந்து காலையில் இறந்துபோன மின்மினிப்பூச்சி கடிகாரத்திற்குள் புகுந்து காலத்தை நகர்த்துகிறது. நிறை போதையில் அழுக்கு நிறைந்த குப்பை மேடுகள் மேல் சாரம் கழர தன்னைமறந்து மிதக்கும் குடிகாரர்களை தினமும் சந்திக்கிறேன். உலகத்தின் விளிம்பிலிருந்து விரியும் புனைவுலகத்தின் பேரரசர்களாகத் திரியும் அவர்களின் கனவிலிருந்து என்னறை விரிவது ஆச்சரியமாயிருக்கிறது. பொறுப்பில்லாமல் கீழறைக்குள் புகைத்துக்கொண்டிருக்கும் இளைஞனின் புகையில் கொஞ்சம் – தனக்கும் தலையணைக்கு உறையில்லாமல் இருபத்தோராயிரத்து தொண்ணூறு இரவுகள் படுத்தெழும்பிக்கொண்டிருக்கும் கிழவனின் நிர்வாணத்தில் கொஞ்சம் – பைத்தியம் பிடித்து இன்னமும் தன் மகளை தேடிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுக் கிழவியின் அலைச்சலில் கொஞ்சமமுமாய்ச் சேர்ந்து என்னறையை விரிகின்றன. நடுச்சாமத்தில் கறுப்புப் பையோடு படியேறிய என்னையொரு பேயென்று நம்பி அறை வரை தொடர்ந்து ஏமாந்துபோகிறது நாய். மின்மினியால் சுழற்றப்படும் இந்தக் காலக்கூட்டின் தொடர்ச்சி அந்த ஏமாற்றத்தாலும் விரிவடையும் என்பதை நாய்  அறியாமலில்லை.

(04)

தோமஸ் நகுலனிற்கும் நண்பராய் இருந்திருக்கிறார் என்றறிந்த  போது அதிர்ச்சியடைந்தேன். தோமஸ் காலமற்று இடமற்று அலையும் அஃறிணை நாடோடி. சந்தர்பத்திற்கேற்றாற்போல் உருவமொன்றினுள் அடைந்து பின்னர் காரியம் முடிய வெளிக்குத் திரும்புகிறது. தோமஸ் நகுலனிற்கு சுந்தர ராமசாமியின் வடிவத்தை எடுத்திருகிரார். அது நகுலனின் நாவல்கள் நெடுகிலும் வந்திருக்கிறது. நகுலன் ஒரு குட்டி நாயைப்போல தோமஸைப் பின்தொடர்கிறார். நான் தோமஸை முதன்முதலிற் கண்டபோது பிரகாசமான ஒளி என்றே நம்பினேன். என்னோடிருந்து வெளிக்கு திரும்பும் வரையிலும் அது பிரகாசமாகவே இருந்தது. வெளியில் அலைந்து கொண்டிருக்கும் தோமஸிற்குக் கல்லறை எழுப்பியதை எண்ணிப் பார்க்கிறேன். தோமஸ் தன்னை எல்லாக் கணமும் மாயப்பொருளாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. அணுக அணுக ஒவ்வொன்றாய் மாறி இறுதி வரை எதுவென்றே தெரியாத அலைகளாய் இருந்திருக்கிறது. அஃறிணை நாடோடி இறந்துபோனதாய் நம்பியதோடு மட்டுமில்லாமல் திவசம் செய்ய விசாரணை நடத்துமளவு என்னை ஏமாற்றியிருக்கிறது. உருவமளவில் என்னை ஏமாற்றியிருந்தாலும் எனக்குள் அது உண்டாக்கிய சிந்தனைகள் உண்மையானவை. ” சிந்தனை என்பது ஒரு வியாதி “என்று தேரை நவீனனிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சிந்தனை ஒரு தொற்று வியாதி. ஆதியிலே நிறைந்து போன சிந்தனை காலம் காலமாக தூதுவர்களால் கடத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. யாரும் புதிதாக சிந்திப்பது கிடையாது. சிந்தனைகளை ஒன்று சேர்க்கிறார்கள். உடைக்கிறார்கள். பகுக்கிறார்கள். இவற்றையன்றி எதையும் செய்துவிடமுடியாது. தொற்றுவியாதியின் காவி தோமஸ். பரிதாபகரமாக தோமஸ் எல்லாவற்றிக்கும் பொருந்திப்போகிறார்.

(05)

நாய் என்னும் வசை முடிந்த முடிவாயிற்று. ஆனால் சிங்களவர்கள் நாயே என்று யாரையும் திட்டுவதில்லையாம். வசைகள் மட்டுமல்ல எல்லாமே இங்கு முடிந்த முடிவாயிற்று. சமூக அசைவுகள் அனைத்தும் கேள்விகள் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காரணங்கள் எதுவும் இன்றிய மரபு வழி நடைமுறைகள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எல்லோரும் விகுதிகள் தொடர்ச்சியையே விரும்புகிறார்கள். அது எளிமையாயும் சுயநலமாயுமிருக்கிறது. நாய் என்ற வசை விகுதியும் அப்படித்தான். இந்த வசையில் உணர்த்தப்படுகிற நாய் வேட்டை நாயில்லை. வேட்டை நாயிலிருந்து வசைக்குரியவர் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார். நகுலன் நாயிலிருந்து தொடங்கி மனித சமத்துவம் நோக்கி நகர்கிறார். அது இருண்ட குகைக்குள் கூரிய ஒளிப்பொட்டொன்று நகர்வதைப்போல நாவலுக்குள் அசைகிறது.

(06)

நகுலன் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசீலனை செய்து கொள்கிறார். வசனத்தின்  ஒழுக்கொன்றில் கூட சுயபரிசீலனை என்ற வார்த்தை இரைச்சலாகத் தெரிகிறது. நாங்கள் இரைச்சலான எதுவொன்றையும் வெறுக்கிறோம். அதுவும் எங்களுக்குள்ளே இரைச்சலை உருவாக்கிற விஷயங்கள் அறவே பிடிக்காமல் போகிறது. நகுலனின் எல்லா மனிதர்களும் நகுலன் தான். தன்னை ஒவ்வொரு நிலையிலும் நிறுத்தி ஒவ்வொரு கணத்திலும் நின்று கேள்வி கேட்கிறார். ஒரு கணத்தில்  நகுலன் என்ற வார்த்தை அற்றுப்போய் நான் புகுந்துகொள்கிறேன். பைத்தியக்கார மனைவியின் கோரப்பிடியிலிருந்து உசும்பியை காப்பாற்ற நான் எத்தனித்ததைப்போல நகுலன் நவீனன் தேரை ஐயர் நாய் பூனை சுசீலா அவர்கள் நீ நான் அது எல்லாவற்றிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார். ஒவ்வொன்றும் நிழல்களாய் அவரைப் பயப்படுத்துகின்றன. நிழல்கள் உண்மையானவை என்றே தோன்றுகிறது. அப்பழுக்கற்ற கருமை. மனிதர்கள் தோரணங்கள் தான். எல்லா நிழல்களும் இயற்கையோடும் ஒளியோடும் எல்லோருக்கும் ஒன்றுபோல மாறுபவை. மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவராக மாறுகிறார்கள். தங்களுக்குள்ளேயே ஆயிரமாய் விரிந்து போய்க்கிடப்பவர்கள். நியத்தில் ஒன்று பன்மையாகி பன்மை ஒன்றாகும் போராட்டம் தான் வாழ்க்கை என்றும் சொல்லிவிடலாம். நாய்கள் பன்மையுடனான மோதல். நேர்கோடுகளை வெறுக்கும் ஒருத்தரின் பன்மைகளோடான அலைச்சல்.

(07)

வாழ்க்கையைப்பற்றி முடிவொன்றெடுத்த அடுத்த நிமிடமே நகுலன், ” ஒரு பீடி நுனியில் தான் என் வாழ்க்கை எரிந்துகொண்டிருந்தது ” என்றார். நான் நகுலனில்லை. எனக்கு பீடி பிடித்து பழக்கமில்லை. நகுலனாயிருந்தால் தானே வாழ்க்கை பீடி நுனியில் எரியவேண்டும். பீடி பிடிக்காத எனக்கு வாழக்கை இல்லையா? இருக்கிறது, நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காலம் காலமாக நம்பப்படுகின்றதைப்போல நான் உயிரோடிருக்கிறேன். எனவே நான் நகுலனில்லை.

(08)

உலகத்தில் இருக்கிற எல்லாவற்றாலும் வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. “நாய்களாலும்”.

(09)

நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன. நகுலனின் நாய்கள் வாசித்த பகலின் பின்னர்  நீண்ட இரவு வந்தாயிற்று. நீண்ட இரவின் மழை ஓசையில் படிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று சுருண்டு குறண்டிப்போய்க் கிடக்கும் வெள்ளையும் கறுப்பும் கலந்த நாயொன்றும் தனிக்கறுப்பு நாயொன்றும் எனது வருகையை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இளவரசன் போல இரவின் கருமைக்குள் என்னை மறைத்துக்கொண்டு ஓயாமல் ஊற்றிக்கொண்டிருக்கும் மேகக் கிண்ணத்தின் ஏலக்காய்த்தேநீருக்குள் நனைகிறேன். விறைத்த நாய் உடலை சிலிர்ப்பிக்கொள்வதைப்போல மேற்சட்டையினூடாக மார்புக்குள் ஈரம் இறங்கச் சில்லிடுறேன். நாடகமொன்றிற்குள் எல்லா வேஷங்களையுமிட்டு நடிக்கும் அந்தக் கிழவனைப்போல இந்த மழைக்குள் நான் இளவரசனாயும் அந்த தேநீர்க் கடைக்குள் வியாபாரியாயும் தெரு முனையில் உடலை விற்பவனாயும் தொலைதூரத்தில் மறையும் ஜோடிக்கைகளின் குடையாயும் வேஷமிடப்போகிறேன். ஒரு சூறாவளி சுழலுக்குள் சிக்கிக்கொண்ட உதிர்ந்த நாயின் இம்மி முடியையும் இந்த உடலுக்குள் தொலைந்துபோன என்னையும் தேட ஒவ்வொரு வேஷமாயிடுகிறேன். நான் என்ற ஒற்றைச் சொல்லுக்குள்  இத்தனை ஆயிரம் அணுக்களும் எண்ணங்களும் அன்பும் வெறுப்பும்  ஒடுங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பருத்த உடலுக்குள் தொலைந்திருக்கும் நானுக்குள் மீண்டும் இவ்வுடல் ஒடுங்கிப்போவதை தோமஸும் ஏற்றுக்கொள்ளமாட்டான். நகக் கண்ணுக்குள் குளிரிறங்கி விரல்கள் விறைக்கத்தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களும் ஏன் ஆயிரம் கனவுலகவாசிகளுடன் வாழ்கிறேன்?என்றிலிருந்து அவர்கள் எனக்குரியவர்களாகினார்கள்? அவர்கள் என்னும் என்னை ஏன் இன்னமும் அலையவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கு முன்னர் பேகன் செய்ததைப்போல என்னை நானே வரைந்து பார்க்கிறேனா? ஆனால் எனக்கு பேகனை இப்போதுதான் தெரியும். நானறியும் போது பேகன் தான் என்னைப்பார்த்து போலச்செய்கிறார். மழைக்குள் ஓவியம் ஒன்று கரைந்து தானற்றுப் போவதைப்போல நானற்றுப்போக இந்த மழைக்குள் நிற்கிறேன். முதலில் நானென்பதென்ன என்று தெரியவேண்டும். ஒவ்வொரு அலைச்சலிலும் ஏதோவொன்றை அடைகிறேன். குறுக்கெழுத்து புதிரொன்றை நிரப்புவதைப்போல வாழக்கையின் கட்டங்களை நிரப்புகிறேன். என்றும் நிரப்பிவிடமுடியாத நீண்ட புதிரென்று தெரிந்தும் ஏதோ ஒன்று உந்தித் தள்ளுகிறது. தூரத்தில் இன்னொரு உருவம் தெரிகிறது. முற்றும் நனைந்து போய் விறைத்திருக்கிறது. கிழடாகிப்போனாலும் கண்களில் அதே ஒளியுடன். தன் பாட்டனிடம் அத்திமரத்தடியின் கீழ் விரவிப்போட்ட வைக்கோற் படுக்கையின் மேல் வியந்து கதை கேட்ட அதே கண்கள். யோஸே ஸரமாகோ. தன் பாட்டன் பாட்டியிடமிருந்து தன்னை அறிந்துகொள்ள இத்தனை காலமும் எழுதித்தீர்த்து முடியாமல் இன்னமும் அவனென்னும் நான் கரைந்து போக மழைக்குள் ஒவ்வொரு இடைவெளிகளையும் நிரப்பிக்கொண்டு விறைத்துப்போய் நிற்கிறார். இருட்டும் மழையும் எக்காலமும் முடிந்ததில்லை. எல்லோருக்கும் தெரிவதுமில்லை. நகுலன் இருட்டை மொழி பெயர்கிறார். மழையை மொழிபெயர்கிறார். இருட்டின் கருமையும் மழையின் குளிரும் தாங்கமுடியாமல் மொழிபெயர்த்தழிக்கிறார். அவரின் இருட்டு. அவரின் மழை. அவரின் மொழி. அது எனக்குரியதுமாகிறது. இருட்டில் மறைந்திருக்கிற பாதைகளை வனங்களை மைதானங்களை வயல்வெளிகளை அவ்வொளி  வெளிக்காட்டுகிறது. எதிர் அறைக்குள் குறை பீடி எரிந்துகொண்டிருக்கிறது. என் அறை முழு இருட்டில். நிலம் குளிரில்.

(10) 

” என்னுடைய அபிப்பிராயத்தில் இலக்கியம் என்பது மெய்யான உலகம் என்று நம்மை நம்பச்செய்யும் ஒரு பொய் உலகம் தான்” என்று நகுலன் கூறியதைப்பார்க்க பஷீரின் நாராயணீ தொடங்கி நேற்றுப் பிறந்த மீக்காயீல் வரை குருடரின் கைப்பிரம்பு தான்.

[envira-gallery id="1655"]