முதிரும் ஒரு சொல்

நீண்ட பகற்கனவுகளின் மீது எனக்கு எப்போதும் ஆட்சேபனைகளற்ற நெருக்கம் இருந்திருக்கிறது. காண்டா கழுகின் ஒற்றை சிறகின் மலை நிழலுக்குள் மறைத்திருக்கும் பாழ் நகரத்தைப் போல பயங்கரமும் விசித்திரமும் நிறைந்த நினைவுகள் பற்றியும், அவற்றின் உருவாக்கங்கள் பற்றியும் யோசிக்கும் போது பகற்கனவுகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன. நீண்ட தூர வெயிற்கால நடையின் போது வெவ்வேறு நிழல்கள் நிலத்தை மறைத்து நிற்க என்னுடைய நிழல் அவற்றினூடு ஊடறுத்து செல்வதைப்போல இந்த நகரத்தின் இருண்மைகளுக்கூடாக நகர்ந்துகொண்டிருக்கிறேன். என் வீட்டைச்சுற்றி அடர்ந்து வளர்ந்த காட்டின் வாசனை. தனித்திருக்கும் இந்த செந்தரையின் மீதிருந்து ஒரு முழு நகரத்தையும் அதன் இருண்மையையும் கக்கிக்கொண்டிருக்கும் என் கனவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளமுடியாதளவு, இரண்டு பெரிய உச்சியினிடையே தேங்கிப்போயிருக்கும் அசைவற்ற நீர்நிலையாகி கட்டிலின் நடுவே அமுக்கப்பட்டிருக்கிறேன். இதிலிருந்து எனக்குள் தோன்றும் கனவுகள் என் அன்றாடத்தோடுஎவ்விதத்திலும் தொடர்பற்றவை. விழிப்பு நிலைக்கு அப்பாலிருக்கும் இன்னொரு நிலத்திற்கு உரித்தானவை. என்னால் கனவுகளின் போக்குவரத்து பற்றி எதுவும் அறியமுடியாதுள்ளது. ஆனால் அவை என்னை பீடித்துக்கொள்ளும் இடங்களிலிருந்து என்னால் விலகிக்கொள்ளக்கூடியவாறு இருக்கிறது. வீட்டின் விறாந்தையிலிருந்து, அகன்றிருக்கும் சொகுசு கதிரைகளிலிருந்து , இரண்டு சுவர்கள் முட்டிக்கொள்ளும் மூலைகளிலிருந்து விலகியிருக்கிறேன். தேய்க்க தேய்க்க துலங்கும் மாயத்தூபி எல்லையற்ற கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றது. அவற்றின் சேர்க்கை புரிந்துகொள்ளவியலாததாய் இருக்கின்றது நானற்றவற்றில் இருந்து கனவுகள் தோன்றுவதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கனவு ஒவ்வொரு நினைவு. இவற்றை யார் எப்போது வைத்தார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. அவை நீள அகலமற்ற பெருவெளி. எனக்கு முன்னும் பின்னும் பனி படர்ந்த இரண்டு ஆளுயரக் கண்ணாடிகள். கனவுகளில் ஒளியாகி விரிந்து வெவ்வேறாவதையும் இருளாகி ஒடுங்கிப்போவதையும் உணர்கிறேன்.

முன்னெப்போதும் சந்தித்திராத மனிதர்களின் சஞ்சாரம் எனதுகனவுகளுக்குள். நிச்சயமற்ற உருவத்தை தோற்றுவிக்கின்றன. என்னை ஏமாற்றுவதற்கு நெருக்கமானவர்களின் உருவங்களாக தம்மை மாற்றிக்கொள்கின்றன சமயங்களில் என்னைபோலவும் தோன்றி மறைகிறஇச்சஞ்சாரங்களை கண்டு திகைக்கிறேன். அர்த்தமற்ற வெவ்வேறு ஒலிகளிலிருந்து தோன்றும் அவர்கள் அலங்காரமான சொற்களுக்குள் புகுந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒட்டுண்ணிகள் அல்லர். இருப்பிழந்தவர்களும் அல்லர். அவர்களிடம் பொருளற்ற வார்த்தைகளைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நீண்ட ரயில் பயணமொன்றில் யன்னல் வழி தவறிப்போகும் கச்சான் கோதுகளைப்போல என்னிலிருந்து பிரிந்துபோகிறார்கள். பின்னர் அடர்ந்த தேயிலைக்காடுகளில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகளைப்போல மீளவந்துசேர்கிறார்கள். கனவுகளில் அலைபவர்கள் நிரந்தரமற்றவர்களாய் இருக்கும் வரை நான் இறுகி கனத்துப்போனதில்லை. என் ஞாபகங்களுக்கு உட்பட்ட வெள்ளிக்கிழமை முன்மதிய பகற்பொழுதொன்றின் போது நெருக்கமான குரலொன்றின் தூரத்து அழுகை காதுகளுக்குள் மெல்லிய ஊசியொன்றைப்போல ஊடறுத்துக் குத்தியது. அப்போது நான் தூக்கத்தில் இல்லை. தூரத்து கடல் அலைகளின் மெல்லிய ஆனால் கூர்மையான இரைச்சலைப்போல அழுகை நித்தியமாயிருந்தது. அழுகையின் கருநீல மணம் என் உடலெங்கும் பரவியது. என் நினைவு இரைச்சலாயிருந்து. அதே நினைவு மௌனமாயுமிருந்தது. ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்ட ஒளி ஊடுபாயும் தாள்களில் கீறப்பட்ட சித்திரங்களைப்போல நினைவு கள் எண்ணிக்கையற்ற ஊடுருவல்களால் நிறைந்திருக்கிறன. இத்தகைய நினைவைத்தின்று வளரும் கருநீல அழுகையே முதிர்ந்து மீண்டும் ஒரு சொல்லாகின்றது.

நின் கைவசம் என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய் வியர்வைத் துளிகளை  இன்னும் நீர்த்துக்கொண்டே இருந்தன புற்கள். காற்றின் வேகமும் பனியின் அடர்த்தியும் வெயிலோடு குறைந்துகொண்டே போகிறது. மழைக்கால அங்கியை அணிந்துகொண்ட செந்தழல் ஒன்றினைப்போல் அறை மீண்டும் வழக்கமான வெம்மையைச்  சூடிக்கொள்கிறது. குழந்தை ஒன்றின் மேகச்சித்திரம் காற்றில் கலைந்து சிதிலமடைவதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கும் தந்தையினைப்போல மழைக்கால அங்கியினை இந்தப் பகல் கழற்றுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூரியன் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்க முழுமையாக நிறம் மாறிய இந்தப் பகலை பைக்குள் போட்டு அடைத்துவிட்டு உறங்கப்போகிறேன்.

மாலையில் மொறட்டுவ மீண்டும் மழையைப் பெறுகின்றது. ஏழைப்பெண் பிச்சைப்பாத்திரத்தில் சில்லறைகளை சேர்பதைப் போல மெது மெதுவாக ஒவ்வொரு துளியையும் நிலம் கவர்கிறது. அடைத்த இருட்டு. மழைத் துமிகளோடு மோதிப் பிணைந்து ஈரலிப்பாக காற்று என்னை வந்தடைகிறது. எழுந்து யன்னலுக்கூடாக மைதானத்தைப் பார்க்கிறேன். இளம் பெண்ணொருத்தியின் வனப்பான உடலைப்போல ஈரத்தில் நனைந்து திரண்டிருந்தது மைதானம். நிறமிழந்த நீலகுடையொன்றினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறேன். மழை பலத்திருந்தது. பெருத்த சத்தத்தோடு கனமான துளிகளாக  வானம் கரைந்து கொட்டியபடி நின்றது. அறைக்கு நேரெதிர் வீட்டு வாசலை நிறைத்து  மழை பெய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ தோன்றித் தெறிக்கின்ற மெல்லிய மங்கிய ஒளியில் நகுலன் தெரிகிறார். கனத்த மழைக்குள் நனைந்து  நடுங்கியபடி நிற்கின்ற பலகீனமான கோழி போல உடல் சுருங்கித்  தளர்ந்து ஒடிந்து போய் நிற்கின்றார். தனது கவிதைகளை மழைத்துளிகளின் இடுக்குகளுக்குள் தொலைத்துவிட்டு நகுலன் தேடிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். கண்கள்  நிலத்தை அனிச்சையாகத் தேடுகின்றன. மழைத்துளி ஒவ்வொன்றும் நிலத்தில் பட்டுத் தெறிக்கும் போது வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் மௌனங்களாகவும் சிதறுகின்றன. சிறிய குடையைப்  பிடித்துக்கொண்டு நகுலனின் வாசலை அடைந்தேன். தந்தையின் அதட்டலுக்கு நடுங்கும் சிறுவனைப்போல எனது உருவத்தை திடீர் நடுக்கத்தோடு பார்க்கிறார். இந்தச் சிறிய குடைக்குள் என்னோடு அடங்கக்கூடிய உருவம் தான் அது.

” வாறீங்களா?” என்றேன்.

“எனக்கும் ஆசைதான்” என்றார். தீக்குச்சி ஒன்றின் மேல் பாலாடை கவிந்தது போல மெலிந்திருந்தன  கைகள். கரைந்துவிடாமல் அவரைப் பிடித்துக் குடைக்குள் சேர்த்துக்கொண்டேன். தூவானம் எத்துகின்ற படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கினோம். அவர் இறங்குவதை மிகவும் விரும்புகிறார். படிகளில் ஒரு குழந்தையைப்போல அவதானமாகவும் குறுகுறுப்புடனும் என்னை அணைத்து மெல்லிய முறுவல் பூத்தபடி பனித்திருந்த தரையின் நீர்க்குமிழ்கள் உடையாதவாறு அடிகளை எடுத்து வைக்கிறார். படிகளை அடைத்திருந்த பூக்கற்கள் நிறைந்த சுவரின் இடுக்குகளால் கசிந்து வந்த தூறல்கள் மென்மையாக ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்றில் எழுதத் தொடங்கின.

ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

நகுலனால் குளிர்ந்த காற்றில் எழுதப்படுகின்ற வரிகளை அவதானிக்கமுடியவில்லை. மிகுந்த கவனத்தோடு படிகளில் இறங்கினார். முதலாம் மாடியின் படிகளுக்கு வந்துவிட்டோம். எல்லாவிதமான மழைக்கும் பழக்கப்பட்ட குடை தன் உரிமையாளரைப் பாதுகாப்பது போல வெள்ளையும் மண்ணிறமும் கலந்த பூனை அதன் நான்கு குட்டிகளையும் சுருட்டிக்கொண்டு கிடந்தது. நகுலனிடம் கேட்கவா வேண்டாமா கேட்கவா வேண்டாமா என்ற குறுகியநேர பலத்த யோசனையின் பின்னர் வாய்திறந்தேன்,

” பூனைகளைப் பற்றி நான் எழுதினத வாசிச்சீங்களா?”

முழுக்கவனத்தையும் என் வார்த்தைகளின் மேல் திருப்பி, படியில் தன் அசைவினை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரின் கண்கள் கிணற்றுக்குள் விழுந்த உதைபந்து போல அசைந்தது. குறுகிய நேரத்திற்குள் பார்வையை விலக்கி பூக்கற்களுக்கூடாக வானத்தைப் பார்த்தேன். கருமையும் நீலமும் சேர்ந்து வழிந்தது. நான் எழுதியவற்றைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது என  நினைத்துக்கொண்டேன். மனம் முழுதும் தூண்டிற் புழுக்கள் அருவருப்பாக நெளிந்தன.  மீண்டும் கண்களைப் பார்க்கவோ சொற்களைக் கேட்கவோ திராணியற்று அடுத்த அடியை எடுத்து வைத்தேன். என்னை இறுக்கமாக பிடித்து நிறுத்தினார். தன் கையினை நீட்டி எதிரே இறங்கிக்கொண்டிருந்த படிகளில் அரைகுறையாக நனைந்த பூனையிலிருந்து கழன்று விரவிக்கிடக்கின்ற பூனைமுடிகள் காற்றில் அசைந்து எழுத்துருக்களாகின்றதைக் காட்டினார்.

நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்

அவை திரண்டெழுந்து காற்றில் எழுதியவற்றினைப் பார்த்த பிரமிப்போடு நகுலனைப் பார்த்தேன். இந்தக் கனத்த மழையிலும் தூரத்தில் ஒதுக்கமாக ஒளிர்கின்ற நட்சத்திரம் ஒன்றினைப்போல மெலிதான  ஓரப் புன்னகை. சூடான ரொட்டித் தட்டில் விழுந்த நீர்த்துளியாக அது கணப்பொழுதில் மறைந்தது. படிகளில் இருந்து முழுமையாக இறங்கிவிட்டிருந்ததை நகுலனால் நம்பவே முடியவில்லை. ஒரு எட்டில் குதித்து வந்த சாகசக்காரனைப்போல இருந்தது அவரின் பார்வை. இருவரும் நெருக்கமாக குடைக்குள் அடங்கிக்கொண்டோம். நகுலனின் உடலிலிருந்து முதுமையின் வாடையும் பலகீனமான சூடும் என்னை சூழ்ந்தது. வலுவிழந்த கிழவனை ஏந்திக்கொண்டு வாலிபனொருத்தன் இந்த மழைக்குள் என்ன செய்யப்போகிறான் என்ற தோரணையில் மழைக்குள் ஒதுங்கிநின்ற காகங்கள் கரைந்தன. மழைக்கு மனிதர்கள் எங்கெங்கோவெல்லாம் ஒதுங்கிநின்றார்கள். உடல் பருத்து – சட்டையின்  கிழிசலுக்குள்ளாக தசை பிதுங்கி நிற்க பிச்சையெடுக்கும் பெண்ணின் இடத்தில் மீன் வாங்கிக்கொண்டுவந்த  பணக்காரனையும் நிற்கவைத்திருக்கிறது மழை. பாதைகள் நிரம்ப வழிந்தோடும் நீருக்குள் இருவரும் துடுப்போடம் போல நகர்ந்துகொண்டிருக்க எதிரே இளம் ஜோடி எங்களைவிட நெருக்கமாக பெரிய குடைக்குள் நடந்துவருகிறது. பெரு மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  சரீரம் உரசிக்கொள்ளும் கணத்தில் பெருமழைக்கு நடுவிலும் தீப்பொறிகள் உருவாகின. இதுவரை எதையும் பெரிதாக கவனிக்காமல் வந்த நகுலன், இந்த ஜோடியை கூர்மையாக அவதானிப்பதை பார்க்கிறேன். ஒரு வேளை அவர்கள் நகுலனின் சுசீலாவை ஞாபகப்படுத்தியிருக்கலாம். மென்மையாக அந்த இரைச்சலுக்குள்ளிருந்து குரலை உயர்த்துகிறேன்.

” சுசீலாவை அவ்வளவு காதலிச்சீங்களா? “

எப்போதும் மௌனமாகவே இருக்கின்ற நகுலனிடம் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனது  கேள்வி இதுவுமில்லை. வெறும் முன்னாயத்தம்.  எனக்குள் எப்போதும் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்பதில் தயக்கத்தை விட சங்கடங்கள் தான் அதிகம். நகுலனும் மனிதன் தானே. எல்லாப் பலகீனமுமுடைய ஒரு சாதாரண எழுத்தாளன். இரண்டு மூன்று அடிகள் மேலும் நடந்திருப்போம். பாதம் மறையுமளவு வெள்ளம் போட்டிருந்தது. நகுலன் மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டு அடியடியாக நகர்ந்தார். மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஒதுக்கமான இடமொன்றிற்கு இருவரும் நடந்தோம். யாரென்று பாராமல் வெள்ளம் என்னும் புனித நதி எல்லோரின் பாதங்களையும் கழுவுகிறது.  மூடியிருந்த கடையொன்றின் முன் கூரையின் கீழ் அடிமட்டம் வைத்துக்கீறிய தடிப்பான நேர்கோடுகளைப் போல கூரை முடிவிலிருந்து மழைநீர் தாரை தாரையாக இறங்கியது. நகுலன் சுற்றியிருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அவர்களும் நகுலனைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அடுத்த மழை மட்டும் நிலைக்குமோ இவ்வுடல் என்று சுற்றியிருந்தவர்கள் நினைப்பதை அவர்களின் கண்களிலிருந்து வருகின்ற பரிவுப்பார்வை உணர்த்தியது. அவர்களின் பார்வை அதிக நேரம் நீடிக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே மீண்டும் அவர்கள் வேலையில்  மழை ஏற்படுத்திய குறுக்கீடுகள் பற்றியும் மழைக்கு பின்னரான ஆயத்தங்கள் பற்றியும் கடுமையாக சிந்திக்கத்தொடங்கினார்கள். சிலர் கைத்தொலைபேசியில் திரைகளில் எதையோ வேகமாக தேடிக்கொண்டிருந்தார்கள். மழை என்னும் பிரமாண்டம் அனாதையாக பெய்துகொண்டிருந்தது. நகுலன் எல்லாவற்றையும் சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். வலிமையான காற்று எங்களை நோக்கி வீச, நேர்கோடுகளாய் விழுந்த நீர்த்தாரைகள் வளைந்து நெளிந்து என் மீது எழுத்துக்களாய் தெரிந்தன.  சிறு துளியும் படாதவாறு நகுலனை நெருக்கமாக அணைத்துக்கொண்டேன்.  நான் அணிந்திருந்த ஆடையினூடாக மழைநீர் ஊடுருவி வரிகளாய்ப்  பதிந்தன.

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனிதஉடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில்பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோபோவது
மாதிரிதோன்றுகிறது
உற்றுப்பார்த்தால்
யாருமில்லை

நகுலனால் அந்த சிறிய கூட்டத்திற்குள் நிற்கமுடியவில்லை. எனக்கும் கூட. எத்தனை பொய்யாக இந்த உலகத்தின் முன் ஆடவேண்டியுள்ளது. யாருக்கு முன்னால் எவ்வாறு பாவனை செய்யவேண்டும் என்று பிஞ்சு மனது கூட அறிந்திருக்கிறது. ஒவ்வொரு ஒப்பனையாக அணிந்து கலைத்து அணிந்து கலைத்து கடைசியில் ஒப்பனைகள் எவை சொந்த முகம் எதுவென்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தோம். தன்னைவருத்தி நிற்பதை கக்கா இருந்த குழந்தைபோல முகத்தை அம்மலாக வைத்து வெளிக்காட்டினார். மீண்டும் நெருக்கமாக குடைக்குள் எங்களை குவித்துக்கொண்டு கிழம்ப  வெள்ளம் சற்றுக்குறைந்திருந்தது. மழை இன்னமும் வேகமாகவும் அடர்த்தியாகவும் பெய்துகொண்டிருந்த கொழும்பு காலி நெடுஞ்சாலையின் நடைபாதையினூடாக இருவரும் நடக்கத்தொடங்கினோம். வாகன இரைச்சலை நகுலன் வெறுத்தார். வளர்ந்த நகரமொன்றில் இன்னமும் புதுப்பிக்கப்படாத பேரூந்து ஒன்று கருமையான புகை மூட்டத்தை கக்கிச்சென்றது. கரும்புகை மழைத்துளிகளோடு கலந்து கபில நிறமாக உருமாறியது. அது வெட்டவெளியில் வரிகளை எழுதிச் சென்றது.

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

” பேரிசையாய்க் கொட்டும் மழையில் யாரிவர்கள் நச்சரித்துக்கொண்டு ” நகுலன் தொடர்ந்தார், ” ஓரமாக எங்காவது போவோம், அமைதியான இடமொன்றிற்கு”

கோரப் பற்கள் கொண்ட நாயினைப்போல வெறிபிடித்து அலையும் இந்த நகரத்தில் அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய துண்டு நிலத்தையேனும் என்னால் காட்ட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லையா. அத்தனை பிரக்ஞை இல்லாமலா நகுலன் இருக்கிறார். ஒரு வேளை தன்னை வீட்டிற்குள்ளே மீண்டும் கொண்டுபோய் விடவே குறிப்பால் உணர்த்துகிறாரோ. மௌனமாகவும் மெதுவாகவும் மேலும் நடந்தோம். என் உள்ளங்கையை யாரோ இறுகப்பிடிப்பது போல உணர்தேன். நகுலன்தான் அது. விரல் எலும்புகள் உள்ளங்கையை குத்துகிறது. வயலின் நரம்புகளை அந்தக் குச்சி மீட்டத் தொடங்குகின்றது. பனிமலை ஒன்றின் பனி கரைந்து மலை மிளிர்வதைப்போல என் ஞாபகங்களை மூடியிருந்த காலம் கரையத் தொடங்கியது. உலகத்தின் எல்லாவற்றையும் நான் ஞாபகங்களால் சேமித்துவைத்திருக்கிறேன். ஞாபகங்கள் அடையாளங்கள். உயிரினங்களையும் பொருட்களையும் சம்பவங்களையும் உணர்வுகளையும் ஞாபகங்கள் தான் எனக்கு  அடையாளப்படுத்துகின்றன. இந்த உலகம் எனக்கு ஞாபகத் துண்டங்களின் சேர்க்கை. காலம் கரைந்து ஞாபகங்களை உணரத்தொடங்குகிறேன்.

மலை முழுக்க வார்த்தைகள். நகுலனின் கைவிரல் அடையாளங்கள்.

அந்தி மயங்கும் வேளை-
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது
அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

“உனக்கு நண்பர்கள் இல்லையா? யாரும் உன் அறைக் கதவை தட்டும் சத்தத்தை நான் கேட்டதே இல்லை. உன்னோடு யாரும் சிரித்துப் பேசி  இருப்பதை நான் அறிந்ததும் இல்லை ” என்றார்.

சிறிது நேரம் மழை மட்டும் இரைந்துகொண்டிருக்க, நகுலனின் இடது காதுகளில் மெலிதாக வளர்ந்திருக்கின்ற முடி மழை நீரில் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது. அந்த சொட்டுநீர் வெள்ளத்தை மோதி எழுப்புகின்ற ஓசை என் காதுகளை வந்தடைந்தது.

“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.

மழை அழுதது. துளிகள் எங்கு விழுந்தாலும் “ஓம் ஓம்” என்று ஆமோதித்தன. இத்தனை யுகங்களாக நண்பர்களைத் தேடி அலைந்த மழை, இன்று  நகுலனிடம் எப்போதும் கிடைக்கமாட்டார்கள் எனச்  சொல்லி அழுதது. அழுகையின் ஓரமாக எனது குரலும் சேர்ந்து அனுங்கியது. நகுலன் இவற்றைக்  கேட்பதாகத் தெரியவில்லை. தான் தொலைத்த நண்பர்களையே இன்னும் தேடிப்பிடிக்காமல், அந்த “கோட் – ஸ்டாண்ட்” பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்கின்ற நகுலனுக்கு மழையின் அழுகை அழ மட்டுமே தெரிந்த குழந்தையின் அழுகையைப்போல இருந்திருக்கும்.

சிறிது நேரத்தில்,மீண்டும் தன் தணிந்த குரலில் “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

” அவள் சுசீலாவின் இன்னொரு உருவமா? “

மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

“நியத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?”

“ம்ம் ஓம், அறை நிறைய வார்த்தைகளைக் குவித்து வைத்துக்கொண்டு கடிதத்தை எழுதவும் கொடுக்கவும் மனமில்லாமல் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து இசைத்தும் பாடியும் ஆடியும் சந்தோசித்து அழுது – ம்ம் பார்த்திருக்கிறேன் “

நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு  நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம்.  நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.

எப்பொழுதும்
அவள் நினைவு
தான் அவள்
யார்
என்று கேட்காதீர்கள்
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்

எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக பெருக்கெடுகின்றன. எதையும் பிடித்து நிறுத்தவோ விரித்துப்பார்க்கவோ முடியவில்லை.  முன்னால் பாய்கின்ற வெள்ளத்தோடு கரைந்துவிட முடிந்தால்  எத்தனை சந்தோசமாக இருக்கும். உடைந்த கண்ணாடி துகள்களைப்போல வெள்ளத்து நீர் கூர்மையாக பாதங்களை மேவிச்சென்றது.  நகுலனின் கண்ணீர் துளிகள் வெள்ளத்தில் விழுந்து சொற்களாவதை எதேச்சையாக கண்டேன். மிகுந்த எத்தனத்தோடு ஒவ்வொன்றாகப்  பொறுக்கிச்  சேர்த்தேன்.

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச்சாகத்தான்
தெரியும்
நீஎன்னசொல்வாய்
என்றுஎனக்குத்தெரியும்
நீஎப்பொழுதும்
இப்படிச்
செத்துக்கொண்டிருக்கவேண்டும்
என்பதுதான்
என்விருப்பமும்
என்றாள்

வார்த்தைகளை சேர்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று  பூனையின் திடீர்  கம்பீர சிலிர்ப்புடன் மெலிந்த  நகுலனை இறுக்கமாக பிடித்துக் குலுக்கி,

” பித்தா சுசீலா இறந்து கிடக்க , நீ வரட்டுக் கவிஞாய் தானே போய்ப் பார்த்தாய்? ” என்று கத்திக்கேட்டுவிட்டு வெடித்து அழுதேன். அந்த கிழவன் முதன் முதலாக தன் கவிதை ஒன்றை நினைவுக்குள் கொண்டு வருகிறான். நடுக்கமான குரலில்,

சுசீலா
செத்துக் கிடந்தாள்
கழுகொன்று
அவள் முலையைக் கொத்திற்று
அவள் துவாரம்
நோக்கி எறும்புக் கூட்டம்.
பிணவாடை
வயிற்றைக் குமட்டக்
கவிஞன் கறுப்புத் தின்றான்;
நாலடிக்கப்பால்
அவர்
மாபெருங் கவிஞர்
தாடி வருடித்
தியானத்திலாழ்ந்தார்.

இவன் வெறுங் கிழவன் தான், நகுலன் அல்ல என்றே தோன்றுகிறது.

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

குறிப்புகள். 

  1. நின் கைவசம் என் கைப்பிரதி – தலைப்பாக நகுலனின் வரியொன்றினை இட்டிருக்கிறேன்.
  2. இங்கிருக்கின்ற கவிதை வரிகள் எல்லாம் நகுலனினுடையது.

சூன்ய மினுப்பு

(01)

கதைக்கற்றைகளாக எழுதப்படாத வரலாற்றினை எழுதி, மறைத்து வைக்கப்படுகின்ற சம்வங்களை எழுதி அல்லது தொன்மங்களை, பண்பாட்டை, துரோகத்தை, இனஅழிப்பை, பகைமையை என்று எல்லாவற்றையும் எழுதி அச்சிட்டு கனதியான புத்தகங்களாக அடுக்கிவைக்கப்பட்ட அலமாரியில் நகுலனின் நாய்களும் வந்து சேர்ந்தது. ” கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலின் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் போது தான் நாம் உணர்த்தே இருக்கமுடியாத விதங்களில் பிரமாண்டமாக வெளிப்படுகிறது” என்று பாழி நிறைய பொறிகளாகவும் சாவிகளாகவும் வரலாற்றுக் கிண்ணத்தின் கரு மைத்துளிகளை விதைத்தார் கோணங்கி. மூன்றாம் மாடியின் ஓரளவுக்கு வசதியான அறையொன்றிலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் எனக்கென்ற எந்த தொன்மமும் பண்பாடும் வரலாறும் இல்லாத வெறுமை தான் கிடைக்கப்பெற்றிருக்கிறது. மைதானமளவு வெறுப்பும் வயல் வெளியளவு அன்பும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. வாசித்த எல்லாப் பனுவல்களும் இசையாகவும்  ஓவியங்களாகவும் கொத்துக் கொத்தாக விரிகின்றன. சிலது வெறுங்காகிதங்களாகவும் இன்னும் சில அட்டை திறக்கப்படாமலும் கிடக்கின்றன. ஆனால் மிகச்சிலதிலிருந்தே இருகை விரிப்பளவு மூளையின் மடிப்புகள் பிரமாண்டமான கடற்கரையாக விரிகின்றன. அவை பிரமாண்டத்திற்கு எழுதப்பட்டவை அல்ல. நகுலன் தனித்த மனதின் குறியீடு. தனித்த மனத்தின் பிரமாண்டத்திற்கு இணையாக வேறொன்றுமில்லை. காற்றைப்போல வெகுளித்தனமாக எல்லா இடங்களையும் நிரப்பிச்செல்லும் மௌனம் அதனுடையது. விரிந்து விரிந்து ஏதுமற்றதாகிவிடாது. உலகத்தின் எல்லாக் கூறுகளையும் தின்று பருத்து விரிந்துகொண்டே போகும். நகுலனின் நாய்கள் அத்தகைய ஒரு விரிவு. தனித்த மனமொன்றின் விரிவு. கோணங்கி சொன்ன அதே பிரமாண்டம் எனக்குள் நிறைகிறது. நாய்கள் எனக்கு பிடிக்காது. இங்கிருக்கும் நாய்கள் எல்லாம் வாய் நிறைய சீழ்வடியத் திரிகின்றன.

(02)

அழுக்கு நிறைந்த உலகம் முழுதும் முற்றுப்பெற்ற கதைகள் மண்ணுக்குள்ளும் முற்றுபெறாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்ற கதைகள்யாவும் நிலத்தின் மேலும் தேவதைக்கதைகள் எல்லாம் வானத்திலும் மிதந்துகொண்டிருக்க, சட்டைப்பைக்குள் ஒரு கதையும் வாய் நிரம்ப புலம்பல்களுடனும் திரியும் எனக்கு இன்னொரு புலம்பலைக் கேட்கும் போது சந்தோஷமாயிருக்கிறது. புரியாத மொழிகளில் கதைகள் நிரம்பிப்போய்க்கிடக்கின்றன. பழுத்த மஞ்சட் சாக்கடை நீர் வடிகின்ற நகரத்தின் நாற்றத்திற்குள் ஊறிப்போய்க்கிடக்கின்ற ஆயிரம் ஆயிரம் துயரக்கதைகளோடு என் கதையும் ஒட்டிக்கொள்கிறது. வெளிச்சம் முழுக்க மீன் விற்றுவிட்டு இருட்டில் தன்னை விற்க காத்திருக்கும் குட்டைப் பாவாடைக்காரியின் சுருக்கு பைக்குள் ஆயிரம் இரவுகளின் கதைகள் நிறைந்திருக்கின்றன. நான் வசிக்கின்ற கட்டடத்தின் ஒவ்வொரு மாடிப் படிகளையும் எத்தனையோ கதைகளை உந்தித்தள்ளிவிட்டு ஏறிமுடிக்கின்றேன். பின்னர் என் கதை எனக்குள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பெருமூச்சொன்றும் விடுகிறேன்.நகுலனின் கதையில் இந்தப் பரபரப்பு இல்லை. யாரோ ஒருவரின் கதையொன்றிற்குள் அந்நியமாய் நின்று எட்டிபார்ப்பதைப்போலில்லை. நிர்வாண நடனமென்றாலும் ஒரு கணம் மனம் பதைபதைத்து குற்றவுணர்வொன்று ஏற்படும். நகுலன்  ரகசிய கதை சொல்லியாயிருந்தாலும் எனக்குள் குற்றவுணர்வில்லை. எளிமையாக உருவாகி விரிகின்ற உரையாடல்களில் அழுத்தமேதுமின்றி இணைத்துக்கொள்கிறேன். இடமழிந்து பொருட்கள், உருவங்கள் அழிந்து உடலழிந்து உயிரும் அதன் எண்ணங்களும் மட்டுமே உரையாடிக்கொள்ளும் வெளி ஒன்றிற்குள் நுழைந்து பேசிக்கொள்வதைப்போல உணர்கிறேன்.

(03)

இச்சிறையை வெறுமையென்றும் இருளென்றும் அடையப்படுத்திவிடமுடியாது. வாசல்கள் அற்ற காற்று வழியற்ற புழுத்துப்போன அறையொன்றிக்குள் நானில்லை. இவ்வறை எதிரே விரிந்திருக்கின்ற மைதானத்தின் தொடர்ச்சி. காற்று என்று முன்னொரு நாள் பெயர்வைத்த மரத்தின் கிளை. நானும் என் புத்தகங்களும் சில உடுப்புகளும் இன்னமும் திருத்தப்படாத கட்டிலும் மட்டுமே இவ்வறைக்குள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உசும்பியின் தாய் இசைத்துக்கொண்டிருக்கும் பியானோவின் இசை ஒவ்வொரு இடுகளிலிருந்தும் கசிகின்றன. கனவொன்றில் அந்நாள் அலைந்த கருநீலப்பூச்சியும் பேகனின் ஓவியக்கூடமும் இதுதான். முள்ளில்லாக் கடிகாரம் காலத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. பின்னிரவில் போத்தலுக்குள் அடைத்து இரவு முழுக்க எரிந்து காலையில் இறந்துபோன மின்மினிப்பூச்சி கடிகாரத்திற்குள் புகுந்து காலத்தை நகர்த்துகிறது. நிறை போதையில் அழுக்கு நிறைந்த குப்பை மேடுகள் மேல் சாரம் கழர தன்னைமறந்து மிதக்கும் குடிகாரர்களை தினமும் சந்திக்கிறேன். உலகத்தின் விளிம்பிலிருந்து விரியும் புனைவுலகத்தின் பேரரசர்களாகத் திரியும் அவர்களின் கனவிலிருந்து என்னறை விரிவது ஆச்சரியமாயிருக்கிறது. பொறுப்பில்லாமல் கீழறைக்குள் புகைத்துக்கொண்டிருக்கும் இளைஞனின் புகையில் கொஞ்சம் – தனக்கும் தலையணைக்கு உறையில்லாமல் இருபத்தோராயிரத்து தொண்ணூறு இரவுகள் படுத்தெழும்பிக்கொண்டிருக்கும் கிழவனின் நிர்வாணத்தில் கொஞ்சம் – பைத்தியம் பிடித்து இன்னமும் தன் மகளை தேடிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுக் கிழவியின் அலைச்சலில் கொஞ்சமமுமாய்ச் சேர்ந்து என்னறையை விரிகின்றன. நடுச்சாமத்தில் கறுப்புப் பையோடு படியேறிய என்னையொரு பேயென்று நம்பி அறை வரை தொடர்ந்து ஏமாந்துபோகிறது நாய். மின்மினியால் சுழற்றப்படும் இந்தக் காலக்கூட்டின் தொடர்ச்சி அந்த ஏமாற்றத்தாலும் விரிவடையும் என்பதை நாய்  அறியாமலில்லை.

(04)

தோமஸ் நகுலனிற்கும் நண்பராய் இருந்திருக்கிறார் என்றறிந்த  போது அதிர்ச்சியடைந்தேன். தோமஸ் காலமற்று இடமற்று அலையும் அஃறிணை நாடோடி. சந்தர்பத்திற்கேற்றாற்போல் உருவமொன்றினுள் அடைந்து பின்னர் காரியம் முடிய வெளிக்குத் திரும்புகிறது. தோமஸ் நகுலனிற்கு சுந்தர ராமசாமியின் வடிவத்தை எடுத்திருகிரார். அது நகுலனின் நாவல்கள் நெடுகிலும் வந்திருக்கிறது. நகுலன் ஒரு குட்டி நாயைப்போல தோமஸைப் பின்தொடர்கிறார். நான் தோமஸை முதன்முதலிற் கண்டபோது பிரகாசமான ஒளி என்றே நம்பினேன். என்னோடிருந்து வெளிக்கு திரும்பும் வரையிலும் அது பிரகாசமாகவே இருந்தது. வெளியில் அலைந்து கொண்டிருக்கும் தோமஸிற்குக் கல்லறை எழுப்பியதை எண்ணிப் பார்க்கிறேன். தோமஸ் தன்னை எல்லாக் கணமும் மாயப்பொருளாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. அணுக அணுக ஒவ்வொன்றாய் மாறி இறுதி வரை எதுவென்றே தெரியாத அலைகளாய் இருந்திருக்கிறது. அஃறிணை நாடோடி இறந்துபோனதாய் நம்பியதோடு மட்டுமில்லாமல் திவசம் செய்ய விசாரணை நடத்துமளவு என்னை ஏமாற்றியிருக்கிறது. உருவமளவில் என்னை ஏமாற்றியிருந்தாலும் எனக்குள் அது உண்டாக்கிய சிந்தனைகள் உண்மையானவை. ” சிந்தனை என்பது ஒரு வியாதி “என்று தேரை நவீனனிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சிந்தனை ஒரு தொற்று வியாதி. ஆதியிலே நிறைந்து போன சிந்தனை காலம் காலமாக தூதுவர்களால் கடத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. யாரும் புதிதாக சிந்திப்பது கிடையாது. சிந்தனைகளை ஒன்று சேர்க்கிறார்கள். உடைக்கிறார்கள். பகுக்கிறார்கள். இவற்றையன்றி எதையும் செய்துவிடமுடியாது. தொற்றுவியாதியின் காவி தோமஸ். பரிதாபகரமாக தோமஸ் எல்லாவற்றிக்கும் பொருந்திப்போகிறார்.

(05)

நாய் என்னும் வசை முடிந்த முடிவாயிற்று. ஆனால் சிங்களவர்கள் நாயே என்று யாரையும் திட்டுவதில்லையாம். வசைகள் மட்டுமல்ல எல்லாமே இங்கு முடிந்த முடிவாயிற்று. சமூக அசைவுகள் அனைத்தும் கேள்விகள் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காரணங்கள் எதுவும் இன்றிய மரபு வழி நடைமுறைகள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எல்லோரும் விகுதிகள் தொடர்ச்சியையே விரும்புகிறார்கள். அது எளிமையாயும் சுயநலமாயுமிருக்கிறது. நாய் என்ற வசை விகுதியும் அப்படித்தான். இந்த வசையில் உணர்த்தப்படுகிற நாய் வேட்டை நாயில்லை. வேட்டை நாயிலிருந்து வசைக்குரியவர் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார். நகுலன் நாயிலிருந்து தொடங்கி மனித சமத்துவம் நோக்கி நகர்கிறார். அது இருண்ட குகைக்குள் கூரிய ஒளிப்பொட்டொன்று நகர்வதைப்போல நாவலுக்குள் அசைகிறது.

(06)

நகுலன் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசீலனை செய்து கொள்கிறார். வசனத்தின்  ஒழுக்கொன்றில் கூட சுயபரிசீலனை என்ற வார்த்தை இரைச்சலாகத் தெரிகிறது. நாங்கள் இரைச்சலான எதுவொன்றையும் வெறுக்கிறோம். அதுவும் எங்களுக்குள்ளே இரைச்சலை உருவாக்கிற விஷயங்கள் அறவே பிடிக்காமல் போகிறது. நகுலனின் எல்லா மனிதர்களும் நகுலன் தான். தன்னை ஒவ்வொரு நிலையிலும் நிறுத்தி ஒவ்வொரு கணத்திலும் நின்று கேள்வி கேட்கிறார். ஒரு கணத்தில்  நகுலன் என்ற வார்த்தை அற்றுப்போய் நான் புகுந்துகொள்கிறேன். பைத்தியக்கார மனைவியின் கோரப்பிடியிலிருந்து உசும்பியை காப்பாற்ற நான் எத்தனித்ததைப்போல நகுலன் நவீனன் தேரை ஐயர் நாய் பூனை சுசீலா அவர்கள் நீ நான் அது எல்லாவற்றிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார். ஒவ்வொன்றும் நிழல்களாய் அவரைப் பயப்படுத்துகின்றன. நிழல்கள் உண்மையானவை என்றே தோன்றுகிறது. அப்பழுக்கற்ற கருமை. மனிதர்கள் தோரணங்கள் தான். எல்லா நிழல்களும் இயற்கையோடும் ஒளியோடும் எல்லோருக்கும் ஒன்றுபோல மாறுபவை. மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவராக மாறுகிறார்கள். தங்களுக்குள்ளேயே ஆயிரமாய் விரிந்து போய்க்கிடப்பவர்கள். நியத்தில் ஒன்று பன்மையாகி பன்மை ஒன்றாகும் போராட்டம் தான் வாழ்க்கை என்றும் சொல்லிவிடலாம். நாய்கள் பன்மையுடனான மோதல். நேர்கோடுகளை வெறுக்கும் ஒருத்தரின் பன்மைகளோடான அலைச்சல்.

(07)

வாழ்க்கையைப்பற்றி முடிவொன்றெடுத்த அடுத்த நிமிடமே நகுலன், ” ஒரு பீடி நுனியில் தான் என் வாழ்க்கை எரிந்துகொண்டிருந்தது ” என்றார். நான் நகுலனில்லை. எனக்கு பீடி பிடித்து பழக்கமில்லை. நகுலனாயிருந்தால் தானே வாழ்க்கை பீடி நுனியில் எரியவேண்டும். பீடி பிடிக்காத எனக்கு வாழக்கை இல்லையா? இருக்கிறது, நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காலம் காலமாக நம்பப்படுகின்றதைப்போல நான் உயிரோடிருக்கிறேன். எனவே நான் நகுலனில்லை.

(08)

உலகத்தில் இருக்கிற எல்லாவற்றாலும் வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. “நாய்களாலும்”.

(09)

நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன. நகுலனின் நாய்கள் வாசித்த பகலின் பின்னர்  நீண்ட இரவு வந்தாயிற்று. நீண்ட இரவின் மழை ஓசையில் படிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று சுருண்டு குறண்டிப்போய்க் கிடக்கும் வெள்ளையும் கறுப்பும் கலந்த நாயொன்றும் தனிக்கறுப்பு நாயொன்றும் எனது வருகையை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இளவரசன் போல இரவின் கருமைக்குள் என்னை மறைத்துக்கொண்டு ஓயாமல் ஊற்றிக்கொண்டிருக்கும் மேகக் கிண்ணத்தின் ஏலக்காய்த்தேநீருக்குள் நனைகிறேன். விறைத்த நாய் உடலை சிலிர்ப்பிக்கொள்வதைப்போல மேற்சட்டையினூடாக மார்புக்குள் ஈரம் இறங்கச் சில்லிடுறேன். நாடகமொன்றிற்குள் எல்லா வேஷங்களையுமிட்டு நடிக்கும் அந்தக் கிழவனைப்போல இந்த மழைக்குள் நான் இளவரசனாயும் அந்த தேநீர்க் கடைக்குள் வியாபாரியாயும் தெரு முனையில் உடலை விற்பவனாயும் தொலைதூரத்தில் மறையும் ஜோடிக்கைகளின் குடையாயும் வேஷமிடப்போகிறேன். ஒரு சூறாவளி சுழலுக்குள் சிக்கிக்கொண்ட உதிர்ந்த நாயின் இம்மி முடியையும் இந்த உடலுக்குள் தொலைந்துபோன என்னையும் தேட ஒவ்வொரு வேஷமாயிடுகிறேன். நான் என்ற ஒற்றைச் சொல்லுக்குள்  இத்தனை ஆயிரம் அணுக்களும் எண்ணங்களும் அன்பும் வெறுப்பும்  ஒடுங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பருத்த உடலுக்குள் தொலைந்திருக்கும் நானுக்குள் மீண்டும் இவ்வுடல் ஒடுங்கிப்போவதை தோமஸும் ஏற்றுக்கொள்ளமாட்டான். நகக் கண்ணுக்குள் குளிரிறங்கி விரல்கள் விறைக்கத்தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களும் ஏன் ஆயிரம் கனவுலகவாசிகளுடன் வாழ்கிறேன்?என்றிலிருந்து அவர்கள் எனக்குரியவர்களாகினார்கள்? அவர்கள் என்னும் என்னை ஏன் இன்னமும் அலையவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கு முன்னர் பேகன் செய்ததைப்போல என்னை நானே வரைந்து பார்க்கிறேனா? ஆனால் எனக்கு பேகனை இப்போதுதான் தெரியும். நானறியும் போது பேகன் தான் என்னைப்பார்த்து போலச்செய்கிறார். மழைக்குள் ஓவியம் ஒன்று கரைந்து தானற்றுப் போவதைப்போல நானற்றுப்போக இந்த மழைக்குள் நிற்கிறேன். முதலில் நானென்பதென்ன என்று தெரியவேண்டும். ஒவ்வொரு அலைச்சலிலும் ஏதோவொன்றை அடைகிறேன். குறுக்கெழுத்து புதிரொன்றை நிரப்புவதைப்போல வாழக்கையின் கட்டங்களை நிரப்புகிறேன். என்றும் நிரப்பிவிடமுடியாத நீண்ட புதிரென்று தெரிந்தும் ஏதோ ஒன்று உந்தித் தள்ளுகிறது. தூரத்தில் இன்னொரு உருவம் தெரிகிறது. முற்றும் நனைந்து போய் விறைத்திருக்கிறது. கிழடாகிப்போனாலும் கண்களில் அதே ஒளியுடன். தன் பாட்டனிடம் அத்திமரத்தடியின் கீழ் விரவிப்போட்ட வைக்கோற் படுக்கையின் மேல் வியந்து கதை கேட்ட அதே கண்கள். யோஸே ஸரமாகோ. தன் பாட்டன் பாட்டியிடமிருந்து தன்னை அறிந்துகொள்ள இத்தனை காலமும் எழுதித்தீர்த்து முடியாமல் இன்னமும் அவனென்னும் நான் கரைந்து போக மழைக்குள் ஒவ்வொரு இடைவெளிகளையும் நிரப்பிக்கொண்டு விறைத்துப்போய் நிற்கிறார். இருட்டும் மழையும் எக்காலமும் முடிந்ததில்லை. எல்லோருக்கும் தெரிவதுமில்லை. நகுலன் இருட்டை மொழி பெயர்கிறார். மழையை மொழிபெயர்கிறார். இருட்டின் கருமையும் மழையின் குளிரும் தாங்கமுடியாமல் மொழிபெயர்த்தழிக்கிறார். அவரின் இருட்டு. அவரின் மழை. அவரின் மொழி. அது எனக்குரியதுமாகிறது. இருட்டில் மறைந்திருக்கிற பாதைகளை வனங்களை மைதானங்களை வயல்வெளிகளை அவ்வொளி  வெளிக்காட்டுகிறது. எதிர் அறைக்குள் குறை பீடி எரிந்துகொண்டிருக்கிறது. என் அறை முழு இருட்டில். நிலம் குளிரில்.

(10) 

” என்னுடைய அபிப்பிராயத்தில் இலக்கியம் என்பது மெய்யான உலகம் என்று நம்மை நம்பச்செய்யும் ஒரு பொய் உலகம் தான்” என்று நகுலன் கூறியதைப்பார்க்க பஷீரின் நாராயணீ தொடங்கி நேற்றுப் பிறந்த மீக்காயீல் வரை குருடரின் கைப்பிரம்பு தான்.

[envira-gallery id="1655"]

விநோத நூலகத்தின் புதிர்வழிப் பாதைகள்

(01)

நீங்கள் யாராவது பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி இசையைக் கேட்டதுண்டா? ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய பல்வேறு வகையான உணர்வுகளின் கலவை. கண்களை மூடிக்கொண்டு காதுகளால் பார்க்கவும் கேட்கவும் நுகரவும் உணரவும் கூடிய இசைத் துணுக்குகள் ஏராளமாகப் பரவிக்கிடக்கிறது. இது வரை பதினாறு  முறை கேட்டிருப்பேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது பதினேழாவது முறையாக – நீங்கள் வாசிக்கும் போது இருபதோ முப்பதோ என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நீண்ட கோர்வையான இசையின் நடுவில் – எதேச்சையான ஒரு இசைத்துணுக்கின்பால் இழுபட்டு, ஆழ்மனதினுள் புதைந்து வெளிச்சமே படாத ஞாபகங்களை மீட்டிக்கொண்டுவந்துவிடும். இதை அனுபவம் என்று சொல்லமாட்டேன்.  உணர்வு – நினைவுகளில் இருந்து அகன்று போய் ஆனால் இன்னமும் அழியாமல் இருக்கின்ற சம்பவங்களை மீட்டுவதை அனுபவம் என்று சொல்லவே மாட்டேன். வதை –  மறந்து போன ஞாபகம் ஒன்றைப் பற்றிய யோசனை மீண்டும் எழுவது எவ்வளவு கொடூரம். உணர்வு நிலைக்கும் வதை நிலைக்கும் இடையே ஒரு இசைத்துணுக்கினூடு பயணம் செய்வதை நான் அதிகம் விரும்புகிறேன். நீங்களும் விரும்புவீர்கள். இதனாலேயே பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உங்களையும் கேட்கச் சொல்கிறேன்.

பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியின் இடைநடுவே வார்த்தைகளும் வசனங்களும் சேர்ந்திசைகின்ற குரல் பின்னணிகளும் கேட்கும். ஜெர்மானிய கவிஞரான Schiller இயற்றிய Ode to Joy என்ற கவிதையும் பீதோவன் சேர்த்த வார்த்தைகளும் இசைப்பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கும். வலிமை மிகுந்த இசையின் மேலாக வருகின்ற கவிதை – தனது தனித்த நிலையிலிருந்து மேலும் வலிமையாகின்றது.

Your magic binds again
What convention strictly divides;
All people become brothers,
Where your gentle wing abides. 1 – மெலிதாக எழுகின்ற இசைத்துணுக்குகளுக்கு இடையே வார்த்தைகள் கனமானதாக வெளிப்படுகின்றன.

ஏன் இசையையும் வார்த்தைகளையும் பற்றிய இவ்வளவு நுட்பமாக அவதானங்களைச்  சொல்லவேண்டிய தேவை எனக்கு ஏற்படுகின்றது என்ற சந்தேகத்தை நீங்கள் இன்னமும் என்னிடம் கேட்காமல் இருப்பது வியப்பளிக்கிறது. இப்போது கேட்கலாம்- ஆனால் அதற்கு முதல்,

(02)

இன்றைய சூழலில் இதுபோன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதில் பெரிய பிரயோசனம் ஒன்றும் இல்லை. இதைவிட அதிக வீச்சான, ஆழமான, புரியாத வார்த்தைகள் கணனி எங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு பெரும் எழுத்தாளரோ அல்லது பிரபலமான முகப்புத்தக  பதிவாளரோ தப்பித்தவறிக் கூட  ஓரிரு வசனங்கள் எழுதிவிட்டாலும் – எங்கிருந்தோ ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து, அவர்களின் வசனங்களிற்கு பெரும் பொழிப்பே உருவாக்கிவிடுவார்கள். இந்த அந்நியமான கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம்  இல்லாமல் ஒரு கலைவடிவத்தை ரசிக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியான எண்ணம் உங்களுக்குள் உருவாகிவிட்டாலே – இப்போதே இதைக் கடந்து பகுதி  03ற்கு செல்லுங்கள். இவை உங்களுக்கானவை அல்ல.

1966 களுடன் கொள்கையளவில் முடிந்துபோன வடிவம் Surrealism. இதைத் தமிழில் அடிமன வெளிப்பாட்டியம் என்கிறார்கள் (!). 1924 ஆம் ஆண்டு இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது கவிஞர் André Breton இனால் இவ்வடிவம் தலைமைதாங்கப்பட்டது.  இதை இவர் -“Psychic automatism in its pure state, by which one proposes to express…the actual functioning of thought…in the absence of any control exercised by reason, exempt from any aesthetic or moral concern.” 2 என்று வரைவிலக்கணப்படுத்துகிறார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க – Surrealism என்பதை இவ்வாறு எளிதாக அடையாளப்படுத்துவோம் – கற்பனையின் அசல் வடிவம்.

நவீன (அதாவது அக்கால – 1924கள்) சமூகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து- கடுமையான சட்டங்களுக்கு எதிராக வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாகவே Surrealism பரவத்தொடங்கியது. எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற கற்பனையின் வெளியில் தமக்கெதிரான அதிகாரத்தையும் கொள்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருந்தது Surrealism. ஓவியத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு கலைவடிவமாக பரவியது.

சிக்மன்ட் பிராய்ட் (Sigmund Freud)இன் படைப்புகள் சர்ரியலிஸ்ட்களின் மீது  ஆழமான செல்வாக்கை செலுத்தின. மிக முக்கியமாக அவரின் கனவுகளின் விளக்கம் The Interpretation of Dreams (1899) பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. பிராய்ட் கனவுகளின் முக்கியத்துவம் பற்றியும் – கனவுகள் நிஜமனிதர்களின் உணர்வுகளோடும் விருப்பங்களோடும் ஏற்படுத்துகின்ற வலிமையான பிணைப்புக்கள் பற்றியும் தெளிவாக விபரிக்கின்றார். இது சர்ரியலிஸ்ட்க்கு ஒரு நெறிப்படுத்தும் கையேடு போல மாறியது.

Existentialism மற்றும் individualism இன் வருகையினால் Surrealism நேரடிப்புழக்கத்திலிருந்து விடுபடத்தொடங்கியது.  பெயரளவில் மற்றைய சிந்தனைகள் Surrealismஇன் புழக்கத்தை மறைத்தாலும் – இன்னமும் இது கலைவடிவங்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இலக்கியத்தில் இதன் வருகை பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சர்ரியலிச இலக்கியத்தின் பொதுத்தன்மை என்று எதையும் வகைப்படுத்திவிட முடியாது. இருந்தும் பெரும்பாலான படைப்புகளில் கனவையும் நிஜத்தையும் இணைத்தார்கள். வாசகனால் ஊகிக்கமுடியாத பிரமிப்பூட்டத்தக்க உருவகங்களையும் கவிதை முறையில் கதை சொல்லுகின்ற பாணியையும் பின்பற்றினார்கள். கவிதை முறையில் கதை சொல்லும் போது, விரிந்த அழகியலுடன் கூடிய கனவு வெளியினை உருவாக்கிவிடலாம் என்றறிந்து பின்பற்றினார்கள்.

இலக்கிய வகுப்பு ஒன்றினை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புரிகின்றது. அதனால் அதிகம் இழுத்துக்கொண்டு போகாமல் உபபகுதிக்குள் போகலாம்.

(02 – இடைச்சொருகல்)

Goodreads  இணையதளம் தெரிவு செய்த சிறந்த எண்பத்து எட்டு சர்ரியலிச இலக்கிய படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 4

1.Kafka on the Shore -Haruki Murakami
3.The Wind-Up Bird Chronicle -Haruki Murakami
4.Metamorphosis and Other Stories -Franz Kafka
6.Hard-Boiled Wonderland and the End of the World – Haruki Murakami
12.1Q84 -Haruki Murakami
13.After Dark -Haruki Murakami
20.A Wild Sheep Chase (The Rat, #3) -Haruki Murakami
53.The Elephant Vanishes – Haruki Murakami

(02- முடிப்பு )

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கக்கூடும். ஏன் இலக்கிய வகுப்பு என்று. Surrealism என்ற இலக்கிய வடிவத்திற்கு உதாரணம் கூறச்சொன்னால் ஹருகி முரகாமியின் அனைத்துப் படைப்புகளையும் பட்டியலிட்டுவிடலாம். Surrealism என்ற இலக்கிய வடிவத்தின் உருவமாக ஹருகி முரகாமியின் நாவல்கள் இருக்கின்றன என்பதற்கு மேலுள்ள பட்டியலே சாட்சி. இருந்தும் பெரும்பாலான விமர்சகர்களும் விமர்சனங்களும் ஹருகி முரகாமியை Surrealism வடிவத்தினூடு ஒத்துப் பேசி பார்த்ததே இல்லை. ஏன்? ஒரு வடிவத்தின் தூண் மாதிரி இருக்கும் ஒரு எழுத்தாளர் – அவ்வடிவத்தின் மூலமாக விமர்சிக்கப்படாமை வருத்தமளிக்கிறது.  நூல்களோடு ஒப்பிடும் அளவும் – அதைத்தாண்டிய ஆழமான கலைவடிவத்தையும் சிருஷ்டிக்கின்ற ஹருகி முரகாமியின் குறுநாவல் ஒன்றைப்பற்றியே சொல்லப்போகிறேன். இது மேலுள்ள பட்டியலில் இல்லை. பட்டியல் மட்டும் அல்ல – தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் கவனம் பெறாத ஒன்று.

இனி வரும் அத்தியாயங்களில் நான் பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி பற்றியோ அல்லது Surrealism பற்றியோ பேசப்போவதில்லை. ஆனால் ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் இவையிரண்டும் மிகவும் ஆழமாக ஊடுருவிச் செல்லும்.

(03)

Novella எனப்படுகின்ற இலக்கிய பிரதி வடிவை தமிழில் குறுநாவல் என்றழைப்பார்கள். இரண்டு அல்லது மூன்று கதைக்கருக்களை மையமாக கொண்டதும் நீண்ட சிறுகதையாக அல்லது குறுகிய நாவலாக கருதத்தக்க வடிவம். குறுநாவல் வடிவத்தை பெரும்பாலும் எல்லையற்ற எழுத்துப்பாணியில் (Free style) எழுதுகின்றவர்களால் கையாளப்படுகின்றது.  ஹருகி முரகாமியின் வினோத நூலகமும் வடிவ வகைக்குள் குறுநாவலாகவே கருதப்படுகின்றது. இருந்தும், பிரதி பேசுகின்ற கருவின் அடிப்படையில் இதனை சிறுகதையாகவே கருதுகின்றேன். மேலை நாடுகளில் வினோத நூலகத்தை குறுநாவலாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் – ஆங்கிலத்திலோ மற்றைய மொழிகளிலோ அதிக படங்களுடன்  கூடிய புத்தகமாக வெளிவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பை ஜி. குப்புசாமி செய்திருக்கிறார். மிகவும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு. கதையின் உயிரோட்டமான மொழியினை பிசகு இல்லாமல் தமிழுக்கு மொழி பெயர்த்திருப்பார்.

வினோத நூலகத்தின் புத்தக வடிவமைப்பு கவனிக்கத்தக்க ஒன்று. சிறுகதையைப் போலவே நூற்பிரதியும் ஆச்சரியங்களும் புதிர்களும் நிரம்பியவை. நூலாக்கம் பொதுவான இலக்கியப் பிரதிகளைப் போல அல்லாமல் வித்தியாசமானதாகவும் பார்த்த மாத்திரத்தில் கவரக்கூடிய வகையிலும் ஆக்கப்பட்டுள்ளது. பிரதியின் ஆரம்பத்திலேயே நீள்பக்கமாக திறக்க வைக்கிறார். சமாந்தர பக்கங்களில் ஒரு பக்கம் எழுத்துப் பிரதியும் மற்றைய பக்கம் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கும். எழுத்துருக்கள் வழமையான அளவிலும் சற்று அதிகமாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வருகின்ற ஓவியங்கள் கதையின் நீட்சியினை சொல்லிக்கொண்டு போகும். ஒரு பக்கத்தில் அரை நிலவும் தொடர்ந்து அரை டொனல்ட்டும் அதைத் தொடர்ந்து மிகுதி நிலவும் அச்சிடப்பட்டிருக்கும். பிரத்தியேகமான அட்டை வடிவமைப்பு. தமிழில் பூனைகள் நகரம் தொகுப்பில் வினோத உலகம் ஒளிந்துகொண்டிருக்கிருக்கிறது. பூனைகள் நகரம் ஜி. குப்புசாமியால் மொழி பெயர்க்கப்பட்ட முரகாமியின் சிறுகதைகளைக் கொண்ட புத்தகம்.

“……..முரகாமி இதற்குமுன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம்‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது……” 5

முரகாமியின் வினோத நூலகம் வெளிவந்த ஆரம்ப காலகட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வெறுமனே ஒற்றைத் தளத்தில் நகர்வதாகவும் கனவுகள் கோர்வைகள் மட்டுமே எஞ்சுகின்றன  என்றும் இகழப்பட்டது. பின்னரான விரிவான வாசிப்பு – வினோத நூலகத்தின் பூட்டப்பட்ட கதவுகள் அனைத்தையும் திறந்தது; திறந்துகொண்டிருக்கின்றது. முதலாம் வாசிப்பின்போதே வினோத நூலகம்  என்னளவில்  சிறந்த படைப்பாக உணரப்பட்டது. வழமையாக குறைவான சொற்கள் வேகமான நடையை ஏற்படுத்தும். ஆனாலும்  குறைவான சொற்களினூடு மெதுவான உணர்வுப் பரிமாற்றத்தை முரகாமி ஏற்படுத்தக்கூடியவர்.

கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகர் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வினோத நூலகத்தை இன்றைய வாசகர்கள் பலவாறு திறந்து அணுகுகின்றார்கள். இன்னும் பலர் அதனை மிகவும் சாதாரணமாகவே – சாகசக் கதைகள் கேட்பது போல கடந்து போகின்றார்கள். Lewis Carroll எழுதிய Alice in Wonderland ஐ ஒட்டிய கனவுலகங்களை சிருஷ்டித்து எழுதியிருக்கிறார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது. 6 எது எவ்வாறாக இருந்தும் வினோத நூலகத்தை நெருங்கி வாசிப்பது அதிக சுவையைத் தரும். வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் வினோத நூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்கள் அனைத்தும் குறியீடாக கதையை நகர்த்திச் செல்கின்றன. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லமுடியாது. ஆழ்மன உணர்வுகளைத், தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்வதன்  மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆன தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் கூட இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளைக் கடத்துகின்ற பிரதியே. ஹருகி முரகாமியின் வினோத நூலகத்தை  அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.

வினோத நூலகம், ஒரு உணர்வின் வெவ்வேறு  பரிமாணங்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய அல்லது ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டிய இன்னொரு அக உலகினை உருவாக்குகின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக் கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்களால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அல்லது செய்ய முடியாத அசாத்தியங்களின் தொகுப்பாக இருக்கும்.  அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லாக் கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதர்கள் உருவாக்கிக்கொள்வார்கள்.  இதையே உணர்வு ஒன்றின் வெவ்வேறான  பரிமாணங்கள் என்கிறேன். வினோத நூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின்  வெவ்வேறான  உணர்வுகளின்  பரிமாணங்கள் பற்றியது.

தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகத்தை வினோத நூலகம் என்றும் கருதலாம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது.

“நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது.” 7

அதுவரை அவன் அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய உணர்வானது  அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாக்குகின்றது. அதையே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிக்கின்றார்.

அந்த அறையில் நடைபெறுகின்ற  ஒவ்வொரு நிகழ்வும் – மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.

“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.” 7

அவனைப் பிரிவு வதைக்கின்றது. மனதிலிருக்கின்ற பழைய உணர்ச்சிகள் உழல வைக்கின்றன. தனது தாய் அவனைத் தேடுவார் என்றும்; தனது கிளி தன்னைத் தேடும் என்றும்  ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவான உணர்ச்சி ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.

“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.” 7

“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?” 7

பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆட்டுத் தலை மனிதரும் இளம்பெண்ணும். பின்னர் ஒரே பாத்திரமாகி-  அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறுகின்றன. இதை வாசகர்கள் மீது  மயக்கமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதாக  முரகாமி எழுதுகின்றார்.  இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன், குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள். கூடவே அவனது  சப்பாத்தும்.

இப்படியாகவும்  வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாக உணரலாம். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலகக் கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்கக் கூடிய கொடிய உணர்ச்சிகளும் கனவுகளும் மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூட்டிய  கனவாகவும்  முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் அல்லது இதைவிட அதிகமாகவும் – வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முரகாமி வடிவமைத்திருக்கிறார்.

“அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.” 7

“சென்ற செவ்வாய்க்கிழமை என் அம்மா இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.” 7

“அம்மா இல்லை.

செல்லக்குருவி இல்லை.

ஆட்டுமனிதன் இல்லை.

அந்தப் பெண் இல்லை.” 7

“பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.”
 

பல்வேறு அனுபவங்களை பிரதி முழுக்க முரகாமி விதைத்திருக்கிறார். வினோத நூலகம் பின் நவீனத்துவ படைப்புகளில் கவனிக்கப்படவேண்டிய படைப்பாகும்.
இப்போது நீங்கள் மெதுவாக பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உணரத்தொடங்கியிருப்பீர்கள்.

You millions, I embrace you.
This kiss is for all the world! 1

பின்குறிப்புகள்.

  1. https://www.thoughtco.com/beethovens-ode-to-joy-lyrics-history-724410

 

  1. https://www.moma.org/learn/moma_learning/themes/surrealism

 

  1. https://www.goodreads.com/list/show/9755.Best_Surrealist_Literature

மேலும் முக்கியமாக கருதக்கூடிய – வாசிக்க பரிந்துரை செய்யக்கூடிய நூல்கள் . ( என்னால் வாசிக்கப்பட்டவையுள்)
The Trial -Franz Kafka
Story of the Eye -Georges Bataille
Surrealities -Bruce Boston

  1. இப்படியாக கட்டுரை ஒன்றினை எழுதுவதற்காக ஜி. குப்புசாமியிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன். அவற்றிலிருந்துதேவைக்கமைய எடுத்துக்கொண்டேன். அதன் முழு வடிவம்:

நான்  – முதல்முறையாக ‘வினோத நூலகம்‘ வாசித்த அனுபவம் எப்படியானது?

அவர் –முரகாமி இதற்கு முன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம் ‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது.

நா  – வினோத நூலகம் முரகாமியின் பிற படைப்புகளைப் போல ஏன் அதிகம் பிரபலம் அடையவில்லை?

அ – அப்படிச் சொல்லமுடியாது. எழுத்தாளர் தரப்புக்கும் ஆங்கில பதிப்பாளர்களுக்கும் இடையில் எழுந்த சில வேறுபாடுகள் காரணமாக மூலத்தில் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் வெளிவந்த குறுநாவல் இது. முரகாமியின் வழக்கமான பதிப்பாளர்கள் வெளியிடவில்லை. போதிய விளம்பரமும் அளிக்கப்படவில்லை. இவையனைத்தையும் மீறி வினோத நூலகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருவதாகவே நினைக்கிறேன்.

நா  – ஒரு மொழிபெயர்ப்பாளராக – சமகால உலக இலக்கியங்களில் அதிக ஈடுபாடும் வாசிப்பனுபவமும் உடையவராக – வினோத நூலகம் மற்றைய படைப்புகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

அ  – எல்லா எழுத்தாளர்களுமே தமது ஒவ்வொரு படைப்பும் முந்தைய படைப்புகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்றே விழைவார்கள். அந்தளவில் ஒவ்வொரு காத்திரமான படைப்பும் தன்னளவில் வேறுபட்டதாகவே இருக்கும். முரகாமியின் வாசகனுக்கு அவருடைய படைப்புலகத்தின் ஒவ்வொரு வழியும் அதன் திருப்பங்களும் புதிய அனுபவங்களைத் தருபவையே.

நா  – முரகாமிக்கும் இசைக்கும் அவரது படைப்புகளில் அதிகத் தொடர்பு எப்போதுமே இருக்கும். வினோத நூலகத்தின் கதையோட்டத்தில் அப்படி இசைக்குறிப்பு எதையாவது உணர்ந்தீர்களா ?

அ  – முரகாமிக்கு அமெரிக்க கலாச்சார அடையாளங்கள் மீது அதிகமான மனச்சாய்வு உண்டு. நவீன ஜப்பானிய தலைமுறையினரின் பிரதிநிதி அவர். கோபோ அபே, யாசுநாரி கவாபாதா போல முழுமையான பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார மனம் கொண்டவரல்ல. இதுவே அவரது பலமும் பலவீனமும். உள்ளூரில் பலவீனம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பலம். ஜாஸ் இசையின் மீதும் பேஸ் பால் விளையாட்டின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர். அவருடைய பல புனைவுகளில் இவை பின்னணியாக அமைந்திருக்கின்றன. அவருக்கு இயல்பான அகத்தூண்டல் ஜாஸ் இசையிலிருந்துதான் கிடைப்பதாக ஒப்புகொண்டிருக்கிறார். இசைக்கும் அவருக்கும்  உள்ள இறுக்கமான பிணைப்பு குறித்து அவர் அளித்த மிக நீளமான நேர்காணல் Absolutely on music  என்ற நூலாகவே வந்துள்ளது. முரகாமியின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜே ரூபின், முரகாமியின் எழுத்தில் உள்ள இசைத்தன்மை குறித்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். வினோத நூலகத்தில் இசை பற்றிய நேரடியான குறிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் உருவெளித்தோற்றமாக அறைச்சுவருக்குள் ஊடுருவி வரும் அந்தப் பெண் இசை வடிவமின்றி வேறென்ன ?

  1. https://www.npr.org/2014/12/02/363836249/watch-your-head-when-checking-out-murakamis-strange-library

 

  1. ஜி. குப்புசாமியின் வினோத நூலக மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

 

This slideshow requires JavaScript.

மீண்டும் சில குறிப்புகள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு இக்கட்டுரையினை வாசிக்கின்றேன். இலக்கியக் கோட்பாடுகளின்  மீது நிறைந்த நம்பிக்கை இருந்த நாட்களில் எழுதியவற்றை மிகுந்த கவனமெடுத்து வாசித்து, அதைப்பற்றி உரையாடி பிரசுரிக்கவும் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் இருவருக்கும் நன்றிகள். பின்னொரு நாளில் வெண்பளிங்கு மாளிகைக்குள் பிணைக்கப்பட்டிருந்த கல்குதிரைகளுக்குள் இப்புனைவினைப் பார்த்தேன். கட்டுரையின் எப்பகுதியிலும் கல்குதிரை பற்றி குறிப்பிடாதது என் அறியாமை. இப்புனைவின் முதலுருவம் கல்குதிரை. நானறிந்து தகவல்கள், ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் பார்த்த முகமறியா யாழினிக்கு நன்றிகள்.

சில திருத்தங்கள்

Surrealism தொடர்பான வரைவிலக்கணம் ஒன்று ஜெயமோகனால் கொடுக்கப்பட்டதாக இந்தக் கட்டுரையில் மின், அச்சுவடிவம் இரண்டிலும் பிரசுரமாகியிருந்தது. பிரக்ஞையுடன் அதை அழிக்கிறேன்.

என்னைப் பேசவிடுங்கள் 03 – எஸ் போஸின் கவிதைகள் 02

வாசிக்க – http://unnatham.net/எஸ்போஸின்-கவிதைகள்/

என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/
 
17390475_10210283695026705_7652377388685012484_o

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள்
உங்கள் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ”
– எஸ். போஸ்

” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ”
– காசுவோ இஷிகுரோ
உன்னதம் இதழில் வெளிவந்த ” என்னைப் பேசவிடுங்கள் ” பத்தி.
வாசிக்க –
http://unnatham.net/என்னைப்-பேசவிடுங்கள்/

குடிமைகள் – சாதியமும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்.

ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர்  ஒருவரின் தேடல்.  வாசகர் ஒருவர்  இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத ஒன்றை, நாவல் கடத்தவேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. அது வாசகரைச்  சென்றடைகிறது/ இல்லை என்பதைத் தாண்டி வரலாற்றின் ஓட்டத்தில் அது கலந்து கொள்ளப்படவேண்டும். எந்த வேறு இலக்கிய வடிவத்திற்கும் இல்லாத இந்தத்  தனித்தன்மை நாவலிற்கு மட்டுமே உள்ளது. நாவல் வாசகருக்கு மட்டும் அல்ல, வரலாற்று ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர், மாணவர், அரசியல் சார்புடையவர் என்று இன்னொரு சந்ததியின் மனிதர்களுக்கு, இன்னொரு கலாச்சாரத்தின் மனிதர்களுக்கு நாவலின் பண்பாட்டுச் சமூகத்தை கடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. எம்மால் இன்றுபரவிப் பேசப்படுகின்ற தூரத்துக் கலாச்சாரங்களெல்லாம் நாவல் வழி உள்நுழைந்தவை தான். எந்தப்பண்பாடும் எழுத்துரு பெறப்படும்போது தான், நம்பிக்கையாகக் கடத்தப்படுகிறது. எனவே சமூகம் ஒன்றில் நாவல் உருவாக்கம் பற்றிய திடமான எண்ணநிலைமை வேண்டும். நாவல் ஒரு சமூகத்தையே கடத்துகின்ற வல்லமை பெற்றது. அதே சமயம், ஒரு சமூகத்தின் அடையாளத்தை அப்படியே அழித்துப் பூசிவிடக்கூடியதும்.   
நாவல்களின் மூலம் கடத்தப்படவேண்டிய மிக முக்கியமான பிரச்சினை சாதியம். இது ஏன் கடத்தப்படவேண்டும்? கடத்தப்படாமல் இருந்தால் அப்படியே அழிந்து போய்விடுமே என்ற கேள்விகள் மிகவும் மேலோட்டமானவை. இன்று இலங்கை வடக்கில் யாரும்சாதிய அடிப்படையில் பிரிந்து இருக்கவில்லை, அவர்களுக்கு என்று தனித்தனி பிரதேசங்களில் வேறு வேறு சாதிய அடிப்படையில் குடியிருக்கவில்லை, இன்று எல்லோரும் சிகை அலங்கரிக்கும் கடைகளில் தான் முடிவெட்டுகிறார்கள் – இதனால் சாதியம் இறந்துவிட்டது என்பது சரியா? இன்னும் சாதியம் ஒழிந்து போய்விடவில்லை என்பதற்கு, இன்றைய மரணச் சடங்குகளும் திருமணங்களும் ஆதாரம். இன்னும் பறை அடிப்பவர்களும் கட்டாடிமார்களும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். படித்து வளர்ந்தசமூகத்தினரிடமே சாதியவெறி இன்னும் ஒழியவில்லை. எனக்கு நெருக்கமான நண்பன், அவன் மருத்துவபீடம் படித்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் பேசுகின்ற போது, அவனுக்குச் சாதியினால் உண்டான தாழ்வு மனப்பான்மை குறித்து வருத்தத்துடன்குறிப்பிட்டான். என்ன தான் வளர்ந்தாலும் தாங்கள் டோபிகள்( சலவை செய்வோர்) என்ற சாதியக் கட்டமைப்பை உடைக்கவே முடியவில்லை என்று வருந்தினான். இது இன்னமும் ஒழிக்கப்படாத சாதிய ஊடுருவலின் கூறுகள். இதைப்பற்றிய அறிவு அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனால், சாதியம் என்ற பெயர் இல்லாமல் – அதே அமைப்பு முறை உருவாகிவிடும். இது மறைத்தல் பண்பாட்டின் பெரும்  சிக்கல். இந்த சாதிய அமைப்புக்கள் எல்லாம் அறிவித்தல் என்பதை காட்டிலும் கற்பித்தல் என்கிற வழியில், உண்மை நிலைகள் புலப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஈழத்து நாவல் ஒன்றில் அதிகம் பேசப்படவேண்டிய பொருள் யுத்தமாகவே உள்ளது. இது காலத்தின் இன்றியமையாத பிரதிபலிப்புச் செய்கை. போரிலக்கியங்கள் இன்று எதிர்பார்க்கின்ற அளவு, உள்ளடக்கத்திலும், எண்ணிக்கையிலும் கனதியானவை வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதிகமாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. உண்மையான போரின் மொழியும், அணிகலன்களும் உலக சமூகத்திற்குச் சரியாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உலகளாவிய கலாசாரம் பற்றிய நிகழ்த்துகை விவாதங்கள் இலக்கியங்களின் மூலம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா வகையான பருப்பொருள்களைப் பற்றியும் பேச்சுக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்தும் பரவலாகப் பேசுகின்ற,  விவாதிக்கின்ற, ஆவணப்படுத்துகின்ற ஒரு  சமூகத்தில் சாதியம் பற்றிய முற்போக்கு வாதங்கள் மிகவும் குறைவு. தேசியம் பற்றியும் போரின் அழிவுகள் பற்றியும் பேசுபவர்கள் சாதியம் போன்ற உள் முரண்பாடுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப்போராடும்போதே அவை முற்போக்குக் கருத்தியலாகும்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பஞ்சமர்களில் ஒரு பிரிவான அம்பட்டர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற நாவல் குடிமைகள்’. இந்நாவல்  இலங்கையின் மூத்த எழுத்தாளரான தெணியான் என்ற புனைபெயருடன் எழுதுகின்ற கந்தையா நடேசுவால் எழுதப்பட்டது. இலங்கை அரசினால் 2014ல் சாகித்ய ரத்னா என்ற உயர் விருது தெணியான் அவர்களுக்குக் ‘குடிமைகள்’ நாவல் மூலம் கிடைத்தது. இலங்கையின் வடக்கிலிருக்கின்ற ஒடுக்கப்படும் சாதியாகிய சிகை திருத்தும் தொழலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை முறை, ஆசைகள் , பிரச்சினைகள், எதிர்ப்புக்கள், போராட்டம், புறக்கணிப்பு என்று எல்லாவித அக-புற வாழ்வியலினைத் தெணியான் குடிமைகள் மூலம் ஆவணம் செய்கின்றார். தனது ஐம்பது வருட அனுபவத்தையும், காட்சிப்புல நினைவுகளையும் ஒன்றிணைத்துக்குடிமைகள் நாவலை எழுதியுள்ளார். நாவல் இலங்கையின் வடக்கே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. இதைவிட மலையகத்தின் பதுளை நகருக்கும், கொழும்பு நகருக்கும் நாவல் நகர்ந்து போய் வருகின்றது. நாவல் 1960-70 காலப்பகுதியினை மையமாகக் கொண்டிருந்தாலும்,  நாவலில் நடக்கின்ற சம்பவங்கள் இன்றைய சமூகத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. இன்னும் கிராமங்களில் ஒவ்வொரு சமூகத்தினரையும் பிரிக்க ஒரு வீதியோ ஒரு வெறும் நிலமோகாணப்படுகிறது. வளர்ந்து நிற்கின்ற நகரங்களில் இவற்றை அவதானிக்க முடியாது. எல்லாச் சமூகத்தினரும் ஒன்றோடு  ஒன்று கலந்தே வாழுகின்றனர். இருந்தும் அவர்களிடையே இருக்கின்ற உளவியல் வேற்றுமை மாறாமலேயே இருக்கின்றது. தெணியானுடைய நோக்கம் நாவலிலிருந்து அம்பட்டர் சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்வியலையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்துவதே  ஆகும். பிறப்பின் மூலம் ஆதிக்க சாதியினர் உயர்ந்தவர்கள் என்றும் அம்பட்டர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆதிக்கச் சாதியினரால் பல வகைகளில் ஒடுக்கப்படும் சாதியினர் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை ஆழ்ந்து பேசுகின்ற தொனியே தெணியானின் குடிமைகள்.
(01)
மிகவும் முக்கியமானதொன்று நாவல் பேசுகின்ற அழகியல். விரிந்த பண்பாட்டு அமைப்புடைய சாதியம் ஒன்றின் பண்பாட்டு வெளிப்பாடு அதிகமாகப் பௌதீக அமைப்பிலேயே தங்கியிருக்கிறது. தனக்கென்று நிலம் இல்லாமல், வேளாளர் நிலத்தில் குடியிருக்கிறகுடிமைகளின் பௌதீக, உளவியல் அழகியல் மிகவும் வித்தியாசமானது. அவர்களது பௌதீகச் சூழல் முழுதாக ஆதிக்கச்  சாதியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் தேவைகளுக்கு ஏற்பக் குடிமைகளின் சுற்றுச் சூழல் வடிவமைக்கப்படுகிறது. சொந்த நிலம் ஒன்று இல்லாமல், அதில் அடிப்படை  வசதிகள் சரியாக இல்லாமல், அதை வெளிப்படுத்துவதிலும் பெரும் இடர்களைச் சந்திக்கின்ற ஆனால் அந்தச் சூழலுக்கே தன்னை இசைவாக்கப்படுத்திக் கொண்ட தாழ்த்தப்பட்ட  சமூகத்தின் குரல் நாவலில் எல்லாத்திசைகளிலும் ஒலிக்கின்றது. அம்பட்டர் சமூகத்தின் நீர்ப்பிரச்சனை தான் நாவலின் தொடக்கப் புள்ளி. நீர்ப்பிரச்சனை இயற்கையானது அல்ல, அதுவும் ஆதிக்கச் சாதியின் அடக்கு முறையே என்கிறார்,
‘கட்டாடிக்கு கிணறுவெட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ………….. கோடைகாலம் வந்துவிட்டால் மழைநீர் தேங்கி நிற்கும் துரவுகள் வற்றிப்போகும்…….. வெள்ளாவியில் வைத்து வெளுப்பதற்கு தண்ணீருக்கு எங்கே போவது?…..நயினார்கள்மார் என்ன காரியம் செய்தாலும் தமக்குகிடைக்கக்கூடிய நன்மைகளை கணக்குப்போட்டுத்தான் செய்வார்கள்’ (குடிமைகள் : பக்கம் 29)
தெணியான் கிணற்றைச் சுற்றி வரைகின்ற வரைவுகள் முக்கியமானவை. கிணற்றில் தண்ணீரே அள்ள முடியாத சமூக இளம் பெண்களை, எந்த ஆதிக்க சமூக ஆணும் தீண்டத் தகாதவர்களாகப் பார்ப்பதேஇல்லை. அவர்களுடைய காமம் சாதியைப் பார்ப்பதுஇல்லை. தாழ்ந்த சாதியினரைக் குடிமைகள் தொழில் பார்க்க மட்டும் அல்ல, தமது இச்சைகளைத் தீர்க்கவும் போகப் பொருளாக பார்க்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் எடுக்க நாயினார்மார்களின் கிணற்றுக்கு வருகின்ற அம்பட்ட சமூக வயதான பொன்னிஅனுபவிக்கின்ற இன்னல், அவள் வயதோடு வேறுபட்டிருக்கின்றதே தவிர மாறவில்லை. ஆரம்பத்தில் உடலளவிலும் பின்னர் உளவியலாலும் நோகடிக்கப்படுகின்றாள். உயர் சாதிப்பெண்களிடம் இருந்து தண்ணீர் பெறுகின்ற நிலையைப் பிச்சை எடுக்கும் நிலையைவிட மோசமானதாகக் கருதுகின்றார்கள். அங்கே விழுகின்ற வசைகளுக்கும் வயது வித்தியாசத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வயதான பொன்னிக்குத் தண்ணீர் ஊற்றிவிட யாரும் முன்வரவில்லை, முன்வந்தவர்கள் சினக்காமல் ஊற்றிவிடவில்லை, சொந்தமாகத் தண்ணீர் ஊற்றக் கூட தகுதி அற்ற குடிமைகள். கிணற்றைச் சுற்றித் தெணியான் கட்டி எழுப்புகின்ற கேள்விகள்  ஆழமானவை.
(02)
சாதியம் பிரிவினையை ஏற்படுத்துவது போலவே,அவ்வாறு பிளவுண்ட மனிதர்கள் தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்ற உயர்வு-தாழ்வைத் தெணியான் சித்திரிக்கின்றார். இரண்டு வெவ்வேறு இடங்களில் இதை வலியுறுத்துகின்றார்.
‘…எங்கடை சாதிக்காரர் எல்லாரும் எங்களுக்கு சமமே? ஒரு சாதிக்குள்ள எத்தினை பிரிவு எத்தனை பகுதி இருக்குது தெரியுமா?’ (குடிமைகள்:பக்கம் 112)
இளையவர்கள் சமூகக் கட்டமைப்புகளைத் தகர்க்க முயல்கின்ற போது, அங்கு மேலெழுகின்ற சமூகத் தலைமைகள்– இதற்குப் பெரும் சவாலாக இருக்கின்றது. ஒரே சாதிக்குள் கலந்து திருமணம் செய்வது கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. தொழில் தகைமைகள், வருமானம், வசதி போன்றவற்றை வைத்து ஒரே சாதிக்குள் பிரிவினைகள் உருவாகின்றன.ஒரே சாதிக்குள் மெலிதாக உயர்ந்தவர் மற்றவர்களை அடக்கி அதிகாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நேரடியாக இந்த முறைமை வெளிப்படாமல்இருந்தாலும் குறித்த சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. சரவணை முதலாளி, மணியன் இருவரையும் நாவலூடு கொண்டு செல்கின்ற அடிப்படை விடயம் இதுவாகும். மணியனை முதலாளி கொடுமைப்படுத்துகின்ற இடங்களிலும் மணியன் அடங்கிப்போகின்ற இடங்களிலும் வாசகரோடு எழுந்து பயணிக்கின்ற அனுபவங்கள், எங்கோ ஒரு நகரத்திற்குச் சிறிய தொழில் ஒன்றினைச் செய்வதற்காக வயது குறைந்த பிள்ளையை அனுப்பிவிட்டுத் தவிக்கின்ற ஒவ்வொரு பொன்னிக்கும் வலியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. கூலியே இல்லாமல் வேலை செய்கின்ற மணியனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருப்பமும் அதன் மூலம் மணியன் அடையக்கூடிய அனுகூலங்களும் வாசகர்களைத் திருப்தி அடைய வைக்கின்றது.
தெணியான், மணியனைக் கற்றலில் நாட்டம் இல்லாத ஒரு மாணவனாகச் சித்திரித்து, அதற்கான காரணத்தை ஆசிரியர்களின் சாதி பற்றிய வசைகளே என்கிறார். தெணியான் ஆவணம் இணையத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஆழமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசிய இடங்களில் அடக்கப்பட்ட சாதியப் பாடசாலை வாழ்க்கை முறை ஒன்றாகும். பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்துகின்ற/ வழி நடத்தப்படுகின்ற முறைகள் பற்றியும் தனது அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். அடக்கப்பட்ட சாதி மாணவர்கள் பாடசாலை விளையாட்டுகளில் மிகவும் பிரகாசிக்கக்கூடியவர்கள். அவர்களின் பால்ய வாழ்க்கை அவர்கள் செய்கின்ற சிறு வேலைகள் என்பன அவர்களின் திடமான உடலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பாடசாலையில் விளையாட்டுகளை வெற்றி கொள்வதில் தான் பாடசாலைச் சமூகம் கவனம் செலுத்தியதே தவிர அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் செலுத்த எத்தனிக்கவில்லை. அந்த ஆதிக்கத்திலிருந்து மீண்டு எழுந்து வந்தவர்களில் தெணியான் முக்கியமானவர் என்பதால் அவரின் எழுத்துகளும் அதையே முன்னிறுத்தி நிற்கின்றன.
(03)
மனித வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கானது.ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்டாலும் அவர்களுக்கான கொண்டாட்டங்கள் இல்லாமல் போய்விடவில்லை. மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் வீட்டின் ஒவ்வொரு மூலையில் இருத்தி வைத்துக் கொண்டு வெளி உலகம் தெரியாமலே வைத்திருந்த முத்தன் –பொன்னியின் கவலையும் அதுதான். முத்தனுக்கும் வள்ளிக்கொடிக்கும் திருமணமான பின்னர் வள்ளிக்கொடி மைத்துனர் இருவருக்கும் திருக்கல் வண்டிலும் மாடும் அவளின் கொடியை விற்று வாங்கிக்கொடுத்துச் சந்தோசப்படுகிறாள். மேலேயுள்ள நிகழ்வுகள் நாவலில் நடக்கும் போது வாசகர் மனதிற்குள் அளப்பெரிய சந்தோசமும் திருப்தியும் உருவாகின்றது.
கொண்டாட்டம் எவ்வளவு திருப்தியளிக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு கவலையையும், சோகத்தையும் குடிமைகள் சுமக்கிறது.
 
ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராகப் போராட்டம் செய்யவில்லை, மிகச் சிறிய உரிமைகளை வேண்டிக் கேட்ட போது மறுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள்  தம் போக்கில் தொழிலையும், சமூகக் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்கும் இடையூறாக ஆதிக்க சாதியினர் இருக்கின்றார்கள். நாவலின் மையப்பாத்திரமாகக் கருதத்தக்க முத்தன் சமூகக் கட்டமைப்புகளை உடைக்கவும் தமக்கென உரிய அடிப்படை மனித சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சமயத்தில் முயற்சி செய்கிறார். அதற்கு அவரது நண்பர்கள்களும் உதவுகின்றார்கள். நயினைமார்களை எதிர்த்து முத்தன் தொழில் செய்யத்தொடங்குகிறார். அதுவரை குடிமைகளாக இருந்த முத்தன் வீதிகளில் தலைநிமிர்ந்து நடக்கத்தொடங்குகிறார். அவருக்கான சுதந்திர வாழ்க்கையை, குடும்பதிற்கான அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் ஒரு சிறிதளவேனும் சம்பாத்தியம் செய்யக்கூடிய தொழிலினை உருவாக்கிக்கொள்கிறார். நண்பர்களான மற்றைய பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி செய்யத்தொழிலைத் தொடங்குகிறார். ஆனால், இறுதியில் சப்பாணிகளான இரண்டு சகோதரங்களையும் இழக்கிறார். அவரது சலூனும் தீ வைக்கப்படுகிறது. இறுதியில் வீடும் தீ வைக்கப்படுகின்றது. முத்தனும் குடும்பமும் அந்த ஊரை விட்டே போய்விடுகின்றனர். தெணியானின் ஐம்பது வருட அனுபவம், அவரின் கூர்ந்த அவதானிப்பு, சிந்தனை என்பவை மூலம் ஒடுக்கப்பட்டவர்களது போராட்டம் ஆதிக்க சாதியின் முன்னால் நிலைத்து நிற்கமுடியாமல், தளர்ந்து போனது. ஆனால், தோற்றுவிடவில்லை என்பதில் தெணியான் உறுதியாக இருக்கிறார்.
(04)
   
அடிமை முறையிலும் மிகக் கொடுமையானது சாதிய முறை என்கிறார் அம்பேத்கர். ஒரு மிகச் சாதாரண அம்பட்டர் குடும்பம், கொடிய சாதிய அடக்குமுறையால் அனுபவிக்கின்ற இன்னல்கள் குடிமைகளில் பதிவாகின்றது.  
     ‘வரலாற்றை உருவாக்குவது ஒடுக்குமுறையாளர் தான். அவர்கள் எழுதுகின்ற வரலாறு அவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவர்களது சொந்த வரலாறே! இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த வரலாறை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல’ என்று ஃபிரான்ஸ் ஃபனொன் கூறுகின்றார். அந்த வகையில் தெணியான் கடத்தியிருக்கின்ற வரலாறு அத்தியாவசியமானது.  டானியலோடும் டொமினிக் ஜீவாவோடும் என்.கே.ரகுநாதனோடும் சேர்ந்து சாதியத்தின் வீரியத்தை அழிக்கின்ற பணியைத் தெணியான் ‘குடிமைகள்’ மூலம்தொடர்கின்றார்.
உசாத்துணைகள்:
வேலைக்காரிகளின் புத்தகம் – ஷோபாசக்தி
அசோகமித்திரன் கட்டுரைகள் –  2
ஆவணம் இணையதளம்