பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
 
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
 
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
 
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
 
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
 
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
 
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
 
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
 
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
 
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
 
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
 
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
 
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
 
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
 
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 
இல்லை
ஒன்றே ஒன்று
 
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
 
 
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
 
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
 
 
 
 
 
 
 
 
 
 

கிழிந்த இறகொன்றின் காதல் நினைவுகள்

கருநீலப்பூச்சி

 
வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை. ஒளிக்கும் வெப்பத்திற்கும் ஒத்திசைவாக்கப்பட்டவை. மழைக்காலத்தில் தன் உடலை இறக்கைகளுக்குள் சுருக்கி, ஒரு சாக்கடைப்புழுவைப் போல சுருண்டு இறப்பொன்றினை எதிர்பார்த்துக்கிடக்கும். மழைக்காலத்தின் பின்னர் வெயில் வரும் என்பதை அவை ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை. நீண்ட மழைக்காலத்தினை தம் இறப்பிற்குரிய ஆரம்ப அறிகுறியாக கருதிக்கொள்பவை. ஈரலிப்பான ஏதோ ஒன்று அவற்றின் மீது பூசப்படும் போது – அது ஒரு மழைத்துளியாக அல்லது வெள்ளத் தெறிப்பாக அல்லது எச்சிலாக அல்லது மூக்குச் சளியாக அல்லது சிறுநீராக – இறப்பின் அழைப்பாக கருத்திக்கொள்கின்றன. தம் உடல் புனித பயணம் ஒன்றிக்காக தயார் செய்யப்படுகின்றது என்று நினைக்கின்றன. அவை அனைத்திற்கும் புனித பயணம் ஒன்றைப்பற்றிய பொதுமையான கனவொன்றிருந்தது. இறந்து போன கருநீலநிற பூச்சிகளில் எதுவும் மீண்டும் தம்மிடத்தே வராததால் புனித பயணத்தைப் பற்றிய பொதுமையான கனவொன்றையே தமக்குள் சித்தரித்துக்கொண்டன. காகிதப் பூக்களை விட மென்மையான அவற்றின் உடல் காற்றில் நறுமணங்களால் கொண்டு செல்லப்படுகின்றது. மழைக்கால ஊர்வலத்தில் ஏனைய சக கருநீல பூச்சிகளால் பங்குபெற்றமுடியாததால் அவை எழுந்து தம் இறக்கைகளை விரித்து பறப்பதில்லை. ஏன் கண்களைக்கூட விரிப்பதில்லை. நறுமணத்தினை நுகர்க்கூடிய பொழுதுகளில் இறப்பொன்று நடந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும். யாருடைய இறப்பென்றதை அறியமுடியாது, அது தன்னுடைய இறப்பாக இருந்தாலும் கூட. தொடர்ந்து வருகின்ற  வெயில் காலமொன்றின் சூட்டினை உணரும் போதுதான் உயிரோடிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும். அவை இறப்பொன்றிக்கு செய்யும் அஞ்சலி மௌனமாக இருப்பது. காற்றிலே மிதந்து செல்லும் இறந்துபோன கருநீல உடலிற்கு இறக்கைகளை விரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமே ஏற்படுவதில்லை. நறுமணம் கொண்டு சென்ற கருநீலப் பூச்சிக்கு என்னானது என்று மற்றவை பேசிக்கொள்வதில்லை. புனித பயணத்தில் இணைந்துள்ளது அவ்வளவு தான். செதில்களாலான கூரிய மண்ணிற உடல் சூட்டை உணர்கின்றன தருணத்தில் வெயில் கால வருகையினை உணர்ந்துகொள்கின்றன. இறப்பிலிருந்து தப்பித்து வந்ததாக அல்லது இறந்து மீண்டும் பிறந்து வந்ததாக நினைத்துக்கொள்கின்றன. தம்முடைய இறக்கைகள் பிஞ்சுப் பசையினால் ஒட்டியிருக்க அவற்றினை கிழிந்திடாமல் விரிப்பதை பெருஞ்சிரமமாக செய்கின்றன. இறக்கைகள் இல்லாத அவை, தம்மைத் தாமே உமிழ்ந்து இறந்து போவதை பெரிதாக கருதுகின்றன. கருநீல நிறப்பூச்சி என்னை நோக்கி வருவதை சாதாரண நிகழ்ச்சியாக உணரவில்லை. சத்தம் இல்லாமல் துடிக்கின்ற இறகுகள் எனக்குள் பேரிரைச்சலை உண்டாக்குகின்றன.
 
வெட்ட வெளிச்சமான வானத்தில் இருள் கண்டிப்போனது. காற்று தன் உடலில் ஈரலிப்பை பொருத்தி காவிக்கொள்ளத் தொடங்கியது. சௌகரியமாக சாய்ந்திருந்த தூணிலிருந்து முதுகை விடுத்து, கருநீல பூச்சியினை நோக்கி வாயினை ஆவென்று திறக்கிறேன். அது என் வறண்ட நாக்கினை உற்றுநோக்கியதாக உணர்கிறேன். இல்லையென்றால் இப்போது எனது வாய்க்குள் புகுந்திருக்காது. உடலின் உஷ்ணக் காற்றினை வாய்க்குள் நிரப்பி பூச்சிக்கு வெம்மையளிக்கிறேன். பிரபஞ்சத்தில் உணர்வற்றுக்கிடக்கும் முகமூடி ஒன்றோடு இனி பயணிக்கப்போவதை எண்ணி வருந்தியிருக்கக்கூடும். அதைபற்றி எனக்கு கவலையில்லை. காற்றில் கனத்திருக்கின்ற ஈரலிப்பு கருநீல பூச்சியினை ஒன்றும் செய்துவிடக்கூடாது. இறப்பினைத் தாண்டி என்னிடம் ஏதோ சொல்லவோ கேட்கவோ வந்திருக்கும் இது, என் விருந்தாளி. நண்பன். வாயைத் திறந்தவுடன் குடிகொண்டுவிட்டதே. என் நண்பர்களிடம் இருந்து ஒவ்வொரு கதையினை வாங்கிக்கொள்வேன். கொடுக்க கதைகள் எதுவும் இருப்பதில்லை. நிழலை மீறி மேகத்தின் இருட்டு வெளியை  நிரப்பியது. வெங்காற்று நிரம்பிய வாயினை பொத்திக்கொண்டு அறைக்குள் விரைந்தேன். கண் கிடங்குகள் காதுச்சவ்வுகள் அடைக்கத் தொடங்கின. மூக்குத்துவாரங்களால் மூச்செடுக்க முடியும் என்ற உண்மையை அவ்விருள் கடத்திக்கொண்டு போய்விட்டது. வாய்க்குள் எச்சில் சுரக்கமுன்னர் பூச்சினை விடுத்தாகவேண்டும். இல்லையென்றால் இருட்டிடமிருந்து பூதம் கைப்பற்றியதாக ஆகிவிடும் அதன் நிலை. மேசையின் மேல் அருகாண்மையில் உதட்டினை திறந்தேன். புதைக்க மறந்த நாய்ப்பீயின் நாற்றத்தோடு பிண்டம் விழுந்தது. அருவருத்த நாக்கினை நீட்டி இரண்டுவிரல் நிகங்களாலும் வழித்துக் காறித்துப்பினேன். வாயினை நன்றாக கொப்பளித்து விட்டு மேசையின் அருகில் கதிரையில் இருந்து கருநீலப் பூச்சினை அவதானித்தேன். என்னை கருணை உணர்வோடு பார்ப்பதாக தோன்றியது. என்னிடம் சொல்லல வார்த்தைகள் இருப்பதாக. கண்ணின் மணியினை உயர்த்தி என்னைப்பார்த்து ஏழைச்சிறுவன் பிச்சைத் தட்டினை நீட்டி வயிற்றைத் தடவுவது போல தன்னை வெளிக்காட்டியது. அது இயலாமையின் அடையாளம். ஒற்றை மழைத்துளியில் கரைந்து போய்விடக்கூடிய ஒன்று இன்னமும் தன்னை வருத்தி வாழ எத்தனிக்கிறது என்றால் – என்னிடம் வந்து சரணடைந்திருக்கிறது என்றால் – நான் கேட்கவேண்டிய கதையொன்று அதனிடம் இருக்கிறது.
 

சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி

 
மென்பச்சையும் நீலமும் கலந்த மார்பிள் தரையில் ஒட்டிக்கிடந்த என் கறுத்த உடலை எழுப்பி, விறைத்தபடி கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற மழையினை கண்ணாடி யன்னலினூடாக பார்க்கிறேன். தன் எச்சத்தை கண்ணாடியின் மேல் பீய்ச்சி அடிப்பது என்னை ஏளனம் செய்வதைப்போலவே இருக்கிறது. காற்று புகமுடியாத அடைத்த அறையொன்றிலிருந்து மழையினை உணர்தல் என்பது கொடுங்காரியம். கண்ணாடிக்கு எதிரே பச்சைய வாசத்தை தீவிரமாக பரப்பிக்கொண்டிருந்த சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி, எல்லாவற்றையும் மறந்துபோய் மழையில் நடனமாடுகிறது. அது அவளின் உடலசைவுகளை எனக்குள் திரட்டுகின்றன. அவளை வெள்ளை நிற சுடிதாரில் பார்த்தது இல்லை. ஆனால் மழையோடும் குளிர்ந்த காற்றோடும் நிலத்தினை ஊடறுத்துப்பாய்கின்ற நீர்த்திவலைகளோடும் பார்த்திருக்கிறேன். சகதி பூசிய தரையினை கடந்து போக நீளமாக எறிந்து விடப்பட்ட ஓரளவான கற்களை சிரிப்போடு தாவிக் கடக்கின்ற அவளின் நளினத்தை அச்செடி ஞாபகப்படுத்துகின்றது. அகன்ற கண்ணாடியின் உடலெங்கும் மின்னல் வெளிச்சம் பரவுவதை இமைப்பொழுதில் கண்களில் தெறித்து மறைக்கின்றன. துளிகள் பெருகி கண்ணாடியில் அழுகின்ற காட்சி என்னைத் துருத்துகின்றது. தூரத்திருந்து தனக்குள்  வெடித்து அழுவதால்  தானாக கண்ணீர் வடித்தன அவளின் கண்கள். அந்தரத்தில் தொங்குகின்ற பூச்சாடிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மீதம் வழிந்த மழை ஓடிச்சென்று  கடைசில் கடலில் உவர்ப்பாகிப்போகின்றது. நிரம்பியிருந்த இருட்டின் மீது சிறிது பனி பரவத்தொடங்கியது. கண்ணாடியின் உள்புறம் அப்பழுக்களற்ற பனியினால் பூசப்படுகிறது. மில்லிமீட்டர் தடிப்புடைய கண்ணாடியின் இரண்டுபக்கமும் ஒட்டிநின்று காதல் செய்துகொண்டிருக்கிறது மழைத்துளிகளும் பனிப்படலமும். உள்ளிருக்கின்ற பனியினை அடைந்துவிடமுடியாத ஏக்கத்தில் அழுகின்றன மழைத்துளிகள். சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடியின் நடனம் என் தீர்க்கமுடியாத கனவொன்றினை ஏளனம் செய்வதைப்போல உணர்கிறேன்.
 
கொடிய கனவுகளில் மனிதர்களின் முகங்களும் அவர்களின் வார்த்தைகளும் மட்டுமே தெரிகின்றன. அவற்றைத்தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சிகள் எனக்கு விரும்பியவாறே நடந்தேறுகிறது. அதனாலேயே கொடிய கனவென்கிறேன். எதை ஆசைப்படுகிறேனோ எவ்வாறு ஆசைப்படுகிறேனோ அது அவ்வாறே நடந்து முடிந்து தீர்ந்துபோவதையிட்டு கவலையடைகிறேன். கனவினை மீட்டிப்பார்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் முடிந்து விட்டதே என்ற கவலை மேலெழுந்து கொடுங்கனவாக மாறிவிடுகின்றது.
 

கணவாய்கள் நிறைந்த செவ்வகப்பெட்டிகள்

 
இயக்கமற்ற உடலொன்றாய்க் கிடக்கிறேன். ஒரு கணவாயைப் போல அருவருக்கத்தக்க கரிய உடலை நிலத்தோடு கிடத்தி மழை ஓய்ந்த பின்னிரவொன்றில் செய்வதறியாது ஒவ்வொரு சம்பவங்களாக மீட்டிக்கொள்கிறேன். மழையின் பின்னரான இவ்விரவு குளிர்மையானதாக இல்லை. இந்த செவ்வகப் பெட்டிக்குலிருக்கும் எந்த உயிரினத்திற்கும் இவ்விரவு மழையின் பின்னரான இரவொன்றாக இல்லை. மெல்லிய படையாக பிசுபிசுப்பான திரவமொன்று உடலைச் சுற்றி  சுரக்கிறது. மழையில் அச்சமூட்டுவதாக தெரிந்த வாகன விளக்குகள், இப்போது வெறும் ஒளிப்பொட்டாக தெரிகின்றன. மழைக்குப் பின்னர் எந்தப் பெரிய இரைச்சலான மாநகரமும் அணிந்துகொள்கின்ற பேரமைதி எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. மழைக்கு முன்னரும் மழையின் போதும் ஆரவாரமாகவும் சுறுசுறுப்போடும் இயங்கிய மனிதர்கள் மழைக்கு பின்னர் சோபையிழந்து போகிறார்கள். அவர்களின் படபடப்பு ஓய்ந்துபோகிறது. அத்தனை படபடப்பும் எனக்குள் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது. உடலுக்குள் ஆயிரம் பூரான்கள் ஊர்வதைப்போல பிறாண்டிக்கொண்டிருக்கிறது. செவ்வக அறையை விட்டு இந்த கரிய உடலை விட்டு விலகிப்போக ஏதோ ஒன்று துடித்துக்கொண்டிருக்கிறது. இணைப்பறுந்து தூக்கி எறியப்பட்ட பழைய தொலைபேசி ஒன்றினைப்போல உலகத்தோடு தொடர்பற்றுப்போயிருக்கும் ஏதோ ஒன்று வெளியேறும் கடைசி கணத்தில் செவ்வக பெட்டியைவிட்டு வெளியே வந்துவிடவே எத்தனிக்கிறேன்.
 
சாலையில் மழைக்கான தடயம் எதுவும் இருக்கவில்லை. மிகச்சில மனிதர்கள் அவசரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிந்துபோன நாளொன்றின் நினைவுகளை மீட்டிக்கொண்டு வெறுப்பவற்றை தூக்கி எறிந்தும் நேசிப்பதை தனக்குள் சேமித்துக்கொண்டும் செல்கிறார்கள். என்னைத்தவிர எல்லாமுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடைகளுக்கு முன்னிருக்கின்ற படிகளிலும் பேரூந்து தரிப்பிடங்களிலும் எங்கெல்லாம் ஒதுங்குகின்றளவு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சைக்காரர்கள் கிழிந்த துணிகளால் தம்மை இழுத்துப்  போர்த்திக்கொண்டு அமைதியாக தூங்குகிறார்கள். நீரில் தோய்ந்து நனைந்துப்போன கிழிந்த இறகொன்று காற்றில் மிதந்து முடிவின்றி அலைகின்றது.

பாதுகை – எடை இல்லாத கலை

கோமாளி கிங்ஸ் பற்றிய எனது பார்வையினை பலர் விமர்சித்திருந்தார்கள். நான்கைந்து நேரடி விவாதங்களிலும் கலந்துகொண்டேன். எனக்கு எதிராக வைக்கப்படுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் அதே கட்டுரையில் பதிலிருக்கின்றது. நான் எதிராக விமர்சிக்கிறேன் என்ற புள்ளியில் நின்று என்னை அணுகுபவர்கள் “எதற்காக விமர்சிக்கிறேன்” என்று கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இதனால் அவர்களுடனான விவாதங்கள் அயற்சியளிக்கின்றன. “எப்போது சினிமா என்ற பொழுதுபோக்கு கலையாகின்றது” என்ற கேள்வியினை மீண்டும் மீண்டும் தமக்குள் கேட்டுக்கொண்டும் அகமும் புறமும் தேடிக்கொண்டும் இயங்க வேண்டிய தேவையினை நம்மவர்கள் உணரவேண்டும்.
 
பிரெஞ்சு திரைப்பட இயக்குனரும் கதாசிரியருமான Alain Resnais, சினிமாவை “Manipulation of Reality through image and sound“¹ என்கிறார். எதார்த்தத்தை என்பதை வெளிப்படுத்துவதில்  நுட்பமான பல விடயங்களைக் கையாளலாம். அதற்கான வெளி-சுதந்திரம் சினிமாவில் உண்டு. எல்லையற்ற இந்தச் சுதந்திரத்தின் மூலம்  எதார்த்தத்தை மூடி மறைத்துவிட முடியும். ஆனால் இது அறமாகாது. இந்த அறம் ஒவ்வொரு மொழிக்கும் தேசத்திற்கும் தனிநபருக்கு வேறுபடும். ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய தனித்த அறத்தில் நின்று செயற்படுகின்றோம். இலங்கை – ஈழத்து சினிமாவை பொறுத்தவரையில் எமக்கான கூட்டு அறம் ஒன்றினை வரையறுக்கவேண்டிய கட்டாயத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். அது சுதந்திரம் ஒன்றை வேண்டிநிற்கின்ற ஒரு இனத்தின் அறமாக இருக்கவேண்டும்.
 
மதி சுதாவின் குறும்படமான  “பாதுகை“² யினை முகப்புத்தகத்தினூடாக பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. கதைப் போக்கிலிருந்து உண்மைக்கதை ஒன்றின் தழுவலாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கிறேன். தொழில்நுட்ப உத்திகள், நேர்த்தியான ஒலிப்பதிவு போன்றவை இல்லாமலும் ஒரு நெருக்கமான கலைப்படைப்பினை உருவாக்கியிருக்கிறார் மதிசுதா. இன்று கிராமங்களுக்கு மின்சாரம், வசதியான குடிமனைகள், சீரான வீதிகள் என்று எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டாலும், எப்போதும் போல இவை ஒவ்வொன்றிலிருந்தும் விலக்கப்படுகின்ற/ஒதுக்கப்படுகின்ற  குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் தனி ஒருவராக குடும்பத்தை நடத்துகின்றவர்களையே பாதிக்கின்றது. பாதுகை இங்கிருந்து அணுக்கமாகத் தொடங்கின்றது. குறும்படத்தில் வருகின்ற பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் எமது நாளாந்தத்தின் பிரதிபலிப்புகளாக காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. இதுவே காட்சிகள் – கலையாக மாறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. கீரைப் புட்டிலிருந்து அதை வைத்து சாப்பிடும் கோப்பையின் வடிவம் வரை எமக்குரியது என்ற மனநிலையை உருவாக்குவதன் மூலம், இது ஈழத்து சினிமா என்று உணர்வினை இயக்குனர் ஏற்படுத்திவிடுகிறார். இயல்பான வன்னியின் மொழிப் பிரயோகம் உணர்வு நிலை உரையாடல்களை பலமாக்குகிறது.
 
பாதுகையின் கதை மீது எனக்கு ஈர்ப்பில்லை. “Land without people are lands without History“³ என்ற  J.R.Michell இன் புகழ்பெற்ற கூற்று ஒன்றிருக்கிறது. இன்று வன்னி நிலப்பரப்பின் குக்கிராமங்களின் சுதேச குடிகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மறுப்பதன்மூலம் – அல்லது தட்டிக்கழிப்பதன் மூலம் அக்கிராமங்கள்  “Land without people” ஆக்கப்படுகின்றன. அக்கிராமங்களின் அயல் காடுகளை செப்பனிட்டு சிங்களக்குடியேற்றங்களை அமர்த்துவதன் மூலம் வரலாறு மாற்றியெழுதப்படுகின்றது. இந்தக் களத்தில் நின்று மதிசுதா பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. கதை நகர்வில் இதனை வலிமையாக காட்டியிருக்கலாம். மதிசுதா கதையின் மீது இன்னும் அவதானம் செலுத்தியிருக்கலாம். நீண்ட காலத்திற்கு ஆவணப்படுத்தல்களை காட்சிப்படுத்துவதன் மூலம் மட்டும் எமக்கான சினிமாவினை உருவாகிவிடமுடியாது.
 
குறும்படம் வெளிப்படுத்துகின்றன இன்னொரு முக்கியமான உண்மை, போருக்கு பின்னாலான வாழ்க்கை. தான் கட்டமைத்து வைத்திருக்கின்ற எல்லா சமூக கட்டமைப்புகளையும், பேரழிவு ஒன்றின் பின்னலான ஈழத்து தமிழ் சமூகம் மீண்டும் உருவாக்குகின்றது என்பதை குறும்படம் காட்டுகிறது. அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலை என்று ஒன்றிருக்க, தன் சமூகத்தாலேயே கைவிடப்பட்ட இன்னொரு நிலையும் எமக்குள் இருக்கின்றது. இதனை சாதியத்துடன் இணைக்கிறார். புற, அக காரணிகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் எளிமையான யதார்த்த உரையாடல்கள் மூலம் குறும்படம் நிரப்பப்படுகிறது.
 
பின்குறிப்புகள்
1. https://www.jstor.org/stable/3245771?seq=1#page_scan_tab_contents
2. https://www.youtube.com/watch?v=z_FQH9OpodI
3. Historical Geography, London, 1954 , p.41.

29351584_1902662689778192_8542491170371164585_o.jpg
 

அந்நியன்

தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண். அம்மம்மா வீட்டின் முன் விறாந்தையோடு சேர்ந்தாற்போல ஒரு அறையிருக்கிறது. பழைய பொருட்களை எல்லாம் அடுக்கி அங்கு வைத்திருக்கிறார்கள்.  மெத்தையில்லாத கட்டில், பழைய பாய்கள் இரண்டு மூன்று, மேல் விளிம்பால் வெடித்துப் போன கண்ணாடி, பழைய கொப்பிகளைப் போட்டு கட்டிவைக்கப்பட்ட பெட்டிகள்,  காலுடைந்த மின்விசிறி ஒன்று, என் உடுப்புகள் உள்ள ஒரு பக்கம் துருப்பிடித்து சுவரில் சாய்ந்து நிற்கின்ற அலுமாரி மற்றும் என்னுடைய நான்கடுக்கு  புத்தக ராக்கைகள். இவையனைத்து எலிகளும் சிலந்திகளும் வேறு பல ஜந்துக்களும் குடியிருக்கும் எல்லோராலும் கைவிடப்பட்ட அந்த மென்னீல பூச்சு அறைக்குள் சிதறிக்கிடக்கின்றன. எல்லோரது வீட்டிலும் இப்படியான அறையொன்றிருக்கும். கொழும்பிலிருந்து வவுனியாவிற்குப் போனால் சாமியறைக்குள் தூங்கிவிடுவேன். பெரிதாக உடுப்புகள் எதையும் காவிக்கொண்டு போகமாட்டேன். முன்னறை அலுமாரிக்குள் இருக்கின்ற ஒன்றிரண்டு நல்ல உடுப்புகளே போதுமானதாக இருக்கும். முன்னர் அதே அலுமாரிக்குள் என்னுடையதும் தம்பியினுடையதும் உடுப்புகள் எமக்குரிய பகுதிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் . எமது பாடசாலைத் துணிகளும் அதற்குள் தான். பாடசாலைக் கால கடுஞ்சிவப்பான பாண்ட் உடுப்பு பத்து ரூபா பொலித்தீன் பைக்குள் கவனமாக மடித்து வைக்கப்பட்டிக்கும். சில காலத்தில் என் தம்பியின் பாண்ட் உடுப்பும் வந்து சேர்ந்தது. இப்போது தம்பியின் எல்லா உடுப்புகளும் உள்ளறை ஒன்றிற்குள் மாற்றப்பட்டுவிட்டன. முன்னறையின் மங்கிய மஞ்சளொளியில் பொருத்தமான உடுப்பொன்றினை கிளறி எடுக்கும்போதெல்லாம், வீட்டிற்கு அந்நியனாகப் போய்விட்டதாக தோன்றுகிறது.
 
எப்போதும் என்னால் நிறைந்திருந்த வீடொன்றில்  என் நினைவுகள் இறந்து போய்க்கொண்டிருக்கின்றன. சாப்பாட்டு மேசையிலும் உடுப்புகள் தொங்குகின்ற ஹாங்கரிலும் கதிரைகளிலும் எனக்கான எதுவுமே இப்போது இருப்பதில்லை. முன்னரிருந்த ஒதுக்கமான கழிப்பறையிருந்து எல்லோரும் உள்ளக வசதியான குளியலறைக்கு மாறிவிட்டார்கள். புத்தகங்களை உருண்டு கிடந்து வாசித்து தேய்த்த சிவப்பு மை பூசிய நிலம் என் வாசத்தை அறவே மறந்து விட்டது. இப்போது அந்நியனாய்ப்போய் வெறுந்தரையின் குளிரினை வாங்கிக்கொண்டிருக்கிறேன். அண்ணாந்து வெறும் மேலுடன் வீட்டு நிலத்தின் குளிரினை உடலுக்குள் செலுத்துவதைப்போன்ற ஆனந்தம் வேறெதிலும் இல்லை. முதன் முதலாக வெறும் முதுகு குளிர்ந்த தரையினைத் தொடுகின்ற போது கரு விழித் துளைக்குள் ஊசியினைப் பாய்ச்சுவதைப்போல உடல் சிலிர்க்கும். முள்ளந்தண்டின் வழியே மூளை நரம்புகளுக்கு குளிர் சென்று அதி போதையைத் தரும். அலுமாரியில் எதிரில் தான் நான்கடுக்கு  புத்தக ராக்கை இருக்கிறது. திறந்த ராக்கையாக இருப்பதால் தூசு பிடிக்கும். இதற்காக கட்டில் விரிபொன்றினால் மூடப்பட்டிருக்கிறது. முதல் தட்டில் சிறுகதை, நாவல்கள் கீழே கவிதைகள், கட்டுரைகள் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கடைசியில் கோப்புக்கள். இது இறுதியான வரிசைப்படுத்தல்தான். இதற்கு முன்னர் வித்தியாசம் வித்தியாசமான முறைகளில் அடுக்கி வைத்திருந்தேன். நவீன இலக்கியம் ஒரு பக்கம், நவீனத்திற்கு முந்திய இலக்கியங்கள் ஒரு பக்கம். அதற்கும் முதல் அப்துல் ரகுமான் ஒரு பக்கம் மற்றவர்கள் எல்லாம் இன்னொரு பக்கம். நவீன இலக்கியப் பாகுபாட்டிலும் இதே கூத்துக்கள் நடக்கும். ஜெயமோகனுக்கு முன்னுரிமை பின்னர் சாருக்கு முன்னுரிமை. சுஜாதா அளவோடு தான் இருந்துகொண்டார். இப்போது எல்லாம் கெட்டு, வாசித்தவை ஒரு பக்கம் வாசிக்காதவை இன்னொருபக்கம் என்றாகிற்று.  புத்தகங்களை வாசிப்பதைப்போல அடுக்குவதிலும் எனக்கு அலாதிப் பிரியம்.
 
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு படிக்க வந்தபோது இரண்டு பெரிய சூட்கேஸ் நிறைய புத்தகங்களைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டேன். இருந்தும் இன்னமும் அரைவாசிக்கு மேல் அந்த புத்தக ராக்கைகளில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் இரண்டாவது வாசிப்பிற்கு உவர்ப்பில்லாதவை. என்னுடைய தம்பி சமீபகாலமாக அவற்றைப் புரட்டத் தொடங்கியிருக்கிறான். இப்போது வவுனியா செல்லுகின்ற வேளைகளில் வைரமுத்துவோ மேத்தாவோ அல்லது அப்துல் ரகுமான் வீட்டு மேசையில் இருப்பார்கள்.  கண்டவுடனே எடுத்துகொண்டுபோய் ராக்கையில் சேர்த்துவிடுவேன். புத்தகம் அனாதையாகக் கிடப்பது என்னை முடமாக்குவது போல இருக்கும். நானில்லாத வீட்டில் என் புத்தகங்கள் அலைவது என்னை ஒரு போதும் திருப்திப்படுத்தப்போவதில்லை. இப்போது வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கின்ற எனது புத்தகங்களில், தம்பியின் வாசமே வீசுகிறது. அவை மீண்டும் ராக்கையை சென்றடையும் போது தான் எனதாகின்றது. அலுமாரியைப் போலன்றி புத்தக ராக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. அதில் இன்னொருவனின் நினைவுகளும் அனுபவங்களும் நிறைந்துகொண்டிருக்கின்றன. புத்தகங்கள் மறுபிறப்படைகின்றன. அந்த அறையின் இருட்டும், படிந்திருக்கின்ற தூசின் வாசனையும் மறந்து போய்விட்டேன். இப்போதிருக்கின்ற வாடகை அறையில் என் தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண் வாஞ்சையோடு பார்த்துக்கொண்டும் கண்ணாடி யன்னலின் இடுக்குகளிற்கூடாக கசிந்து  பரணில் பட்டுத்தெறித்து வருகின்ற காற்றினை  ஆழமாக சுவாசித்தவாறும் நிற்கிறேன். அணுவளவு கூட எனக்குள் திருப்தி  வரவில்லை.
 
நேற்றிரவு முன்னறையினை வாடகைக்கு விடப்போவதாக அறிந்தேன். மனம் பதைபதைக்கத் தொடங்கிவிட்டது. ஐம்புலன்களில் ஒன்று ஊனமாகிக்கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன்.  ப்ளேட் துண்டு ஒன்றினால் உடலின் மென்மையான சவ்வுகள் கிழிக்கப்படுகின்றன. நான் என்பது வெறும் உணர்வுகள் மட்டுமா? என் நினைவுகள் பலமிழந்தவையா? வெறும் தசையும் என்பும் ரத்தமும் தான் மனிதர் என்றால் அவையிருந்தும்  வெளியை  நிரப்பமுடியாமல் போகின்றது ஏன்? அப்படியானால்  இருப்பு என்பது எதனால் அடையாளப்படுத்தப்படுகிறது?  புத்தக ராக்கைகள் பற்றிய கவலை இப்போது எனக்கில்லை. எல்லாம் அந்த அலுமாரியும் என் பழைய உடுப்புகளும் அதிலிருக்கும் என்  வாசனையும் பற்றியவை தான். விறாந்தையில் நான்  குழந்தையாக இருக்கும்  புகைப்படம் ஒன்று தொங்குகிறது. நான் வீடற்றவனாகிக் கொண்டிருக்கிறேன்.
 
புகைப்படம் –

© The Estate of Francis Bacon. All rights reserved, DACS/Artimage 2018. Photo: Prudence Cuming Associates Ltd

என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/
 
17390475_10210283695026705_7652377388685012484_o

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள்
உங்கள் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ”
– எஸ். போஸ்

” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ”
– காசுவோ இஷிகுரோ
உன்னதம் இதழில் வெளிவந்த ” என்னைப் பேசவிடுங்கள் ” பத்தி.
வாசிக்க –
http://unnatham.net/என்னைப்-பேசவிடுங்கள்/

ஒரு வருடம் – மறா

(01)
எந்த ஒரு விடயத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து செய்யும் போது மனத்திருப்தியுடன் கூடிய முன்னேற்றம் உருவாகும் என்பதை அறிந்த சந்தர்ப்பங்களுள் எனது வலைப்பூவும் ஒன்று. சாதாரண தரம் எழுதிவிட்டு உடனேயே எல்லோரும் உயர்தரத்திற்கு தயாராக தொடங்கிவிடுவார்கள். இலங்கையில் பெரும்பாலான உயர்தரக் கல்வி தனியார் வகுப்புகளை நம்பியே இருந்தது. சிறுவயது முதல் ஒன்றாக படித்துக்கொண்டுவந்த எனது நண்பர்களிடம் இருந்து , நான் தெரிவு செய்த துறையும் தனியார் கல்வி நிறுவனமும் மெல்லிய இடைவெளியை ஏற்படுத்த தொடங்கியது. அவர்களின் கதையாடல்கள் மெதுவாக அந்நியமாகத் தொடங்கின. உயர்தரம் முடிந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தது கூட முழுமையாக நிவர்த்தியாகவில்லை. உயர்தரம் எழுதி முடித்து வருகின்ற ஓய்வு நாட்களின் மாலைகளில் நண்பர்களுடன் விளையாடுவதாயும்  பேசி மகிழ்வதாயும் கழிந்தன. இருந்தும் அவர்களிடம் அந்த மூன்று வருடங்களில் உருவாகியிருந்த பிணைப்பில் என்னால் நுழையவே முடியவில்லை. அவர்களிடம் அப்போதிருந்த சுதந்திரம் – என்னிடமிருந்தும், எனக்கான வெளி வேறாக இருந்தது. என் சுதந்திரம் முழுவதும் அவ்வெளியின் கூறுகளால் நிரப்பப்பட்டன. இந்த இடைவெளி நீண்ட பிரிவு ஒன்றிற்கு காரணமாக இருக்கும் என்பதை நான் அறியாமலில்லை. உயர்தர பெறுபேறுகள் வெளிவர, நான் தனித்துப்போனேன்.
 
ஒக்ட்டோபர் மாத இறுதி நாட்களில் தான் முதன் முதலாக வலைப்பூ ஒன்றினை தொடங்குவதற்கான எண்ணம் வந்தது. அப்போது ஜெயமோகனும் சாருவும் தீவிரமாக தமது வலைப்பூவில் எழுத்துக்கொண்டிருந்தார்கள். அத்தோடு கீற்று, மலைகள், காலச்சுவடு போன்ற இணைய இதழ்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். கூடவே மதுரகன் அண்ணாவின் வலைப்பூவும் பரீட்சயமாக இருந்தது. நான் அப்போது சிறு சிறு கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். வாசித்துக்கொண்டும் இருந்தேன். சரி, எனக்கான வலைப்பூ ஒன்றை தொடங்குவதற்கு முடிவு செய்துவிட்டேன். எப்படியும் காசு செலவு செய்து சொந்த டொமைனில் வலைப்பூ ஒன்றினை எழுதமுடியாது என்று இலவச வலைத்தளங்களை தேடினேன். Weebly, wordpress, blogspot, 123site, wix, zoho என்று ஒவ்வொன்றிலும் மாறி மாறி ஒவ்வொரு விதமான வடிவத்திலும் ஒரே கவிதையை வைத்து செய்வது அழிப்பதுமாக இருந்தேன். முதன் முதலில் நீண்ட காலம் – இரண்டு கிழமை அளவு , பாவனையில் இருந்த தளம் 123site இன் மூலம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்று மாத கால அளவில் wordpress இன் இலவச தளத்தில் மெது மெதுவாக கவிதைகள், குறும் கதைகள், கட்டுரைகள் என்று சேர்க்கத்தொடங்கினேன். முதலாம் மாத இறுதியளவில் எனது தளத்திற்கான பார்வைகள் அதிகாமாகத் தொங்கியது. அந்த நேரத்தில் எனது குட்டியிடம்(அம்மாவின் தங்கை) பணம் வாங்கி எனக்கான சொந்த டொமைன் ஒன்றை வாங்கிக்கொண்டேன். brinthanonline.com -இப்போது அது  hacked by sulaiman hacker என்ற பெயரில் கிடப்பில் கிடக்கிறது. இன்றிலிருந்து மூன்று  மாதங்களுக்கு முன்பு, எனது டொமைனை யாரோ ஹாக் செய்துவிடடார்கள். எனது டொமைன் ப்ரொவைடரிடம் (வழங்கி) கேட்டும் மீட்டுப் பெறமுடியவில்லை. அப்படியே அதை விட்டு விட்டு மீண்டும் wordpress இன் இலவச இணைய தளத்தில் அனைத்து பதிவுகளையும் பிரதி செய்து, புத்துருவாக்கம் செய்தேன். இன்றுவரை அதில் பதிவிட்டு வருகிறேன்.
 
இவ்வருடம் தையிலிருந்து ஆவணி வரையிலான எட்டு மாதம், நண்பர்கள் பெரிதும் இல்லாத தனிமையை நிரப்பிக்கொண்டது எனது வாசிப்பும் வலைத்தளமும் தான்;இன்றுவரையும். கடந்த மூன்றாம் திகதி இம்மாதம், எனது முதல் குறுகிய 123site இணைய தளத்தில் முதல் பதிவை பதிவு செய்தேன். ஒரு ஆண்டு முடிந்து விட்டது.  
Screen Shot 2017-11-05 at 1.00.27 PM 
 
(02)
ஈழத்து சினிமா என்பது மிகவும் மேலோட்டமான முறையில் நகர்ந்து கொண்டிருப்பதை வைத்து அதன் அவசியத்தையும் பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இலங்கை தமிழ் மக்களிடையே பரவலான பயன்பாட்டில் உள்ள ஊடகம் சினிமா. தென்இந்திய தமிழ் திரைப்படங்கள் இலங்கையின் எல்லா இடங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. பாலாபிஷேகம், பெரிய உருவப்படங்கள் , மாலை , ஆராத்தி என்று எல்லாவற்றுக்கும் மேலாக வைத்து கொண்டாடுகின்ற நிலைமையை சமீபகாலமாக மிகவும் தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது. இன்று முகப்புத்தகங்களிலும் நண்பர்கள் குழுக்களுக்கிடையேயும் வீதிகளிலும் சாதாரணமாக நடக்கின்ற சினிமா வாக்குவாதங்கள் – எமது சமூகத்தில் சினிமாவின் ஊடுருவலை உணர்த்தி நிற்கின்றன.
 
இன்றைய இந்திய தமிழ் சினிமாவின் தாக்கத்தால்  மீளமுடியாமல் இருக்கின்ற எம்மிடையே ஈழத்து சினிமா பற்றிய புரிதல் மிகவும் மந்தமாக இருக்கிறது. இந்திய தமிழ் சினிமாக்கள் ஏற்படுத்துகின்ற விம்ப மாயை பற்றிய அறியாமையில், இன்றைய நாட்களில் எழுகின்ற ஈழத்து முழுநீள, குறும்படங்கள் – அதன் நீட்சியாகவே உருவாகின்றன. இந்த நீட்சியே எமக்கான தனித்துவமான சினிமா அடையாளத்தை உருவாக்க முடியாமல் செய்கின்றது. இந்திய சினிமாவை பீடித்திருக்கின்ற வர்த்தக நோக்கம் கொண்ட திரைப்படங்களின் பெரும் பாய்ச்சல் – அவர்களின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதைப் போன்று ; இந்திய சினிமாவின் ஆதிக்கம் எமக்குரிய தனித்துவமான கலையையும் பார்வையையும் மழுங்கடித்துக்கொண்டு இருக்கின்றன. இதே தொடர்ச்சியினை குறும்படங்களும் கையாளத்தொடங்கிவிட்டன.
 
மறா எனது நண்பர்களால் உருவாக்கப்பட்ட குறும்படம். படப்பிடிப்பு , இசை  எல்லாம் முடிந்து இறுதிநேரத்தில் தான் படம் பற்றிய செய்தியே எனக்கு கிடைத்தது. ஆவலாக காத்திருந்து இணைப்பு கிடைத்தவுடனேயே பேருந்தில் படத்தை பார்த்து முடித்தேன். அவர்களின் முயற்சிக்கு முதல் பெருத்த நன்றிகளும் பாராட்டுகளும். மறாவில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரினதும் எண்ணங்களும் சிந்தனைகளும் பற்றிய சிறிய புரிந்துணர்வாவது இருக்கும் என்ற எண்ணத்தில் – இதைப்பற்றிய உரையாடலை முன்வைக்கிறேன். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு போதியளவு கிடைத்திருக்கும். நான் மேலும் பாராட்டி எழுதுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. அதனால் மறாவின் சினிமா அரசியல் பற்றிய எனது கருத்துக்களை பகிர்கிறேன். இது அவர்களுக்கு பொருந்தாமலும் போகலாம், ஏனையவர்களுக்கு பொருத்தமானதாகவும் இருக்கலாம்.
 
கதையின் கரு பற்றி சினிமா ஆளுமைகளிடம் இருந்து கருத்துக்கள் விவாதங்கள் நடந்திருக்கும் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. கதை திரைப்படம் ஒன்றில் நடித்து தோற்றுப்போகும் நாயகன், தனது கனவில் சென்று தன் குறைகளை திருத்த முயல்கிறான்; முடியாமல் போக இன்னொரு கனவில் சென்று குறைகளை இல்லாமல் செய்து பூரணம் அடைகிறான். கனவுகளை மட்டும் இல்லாமல் செய்து விட்டு கதையின் கருவை பார்த்தால் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாம் சுற்று வெற்றியின் ரகசியம் போலத் தெரியும். இது நகைச்சுவை இல்லை. கதையின் கருவும் எமது சூழலும் விலகி நிற்கின்ற புள்ளி அது தான். கோடம்பாக்கத்திற்கு வருகின்ற ஒரு நடிகனின் முதல் படம் தோல்வியில் முடிய தனது இரண்டாம் படத்திற்கு தன்னிடம் இருந்த குறைகளை நீக்கிக் கொண்டு வெற்றிபெற வருவது போல. இலங்கையின் தமிழ் சூழலில் இதன் சாத்தியப்பாடு தான் எனது கேள்வி. இன்று இளைஞர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் அரசியல் ரீதியாக , சமூக ரீதியாக, ஆன்மீக ரீதியாக, உளவியல் ரீதியாக ஏற்படுகின்றது. அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இப்படியான இந்திய தமிழ் சினிமா கலாசார தொனியில் படம் வந்ததன் நோக்கம் தான் பிரச்சனை. இது இயக்குனரின் சுதந்திரம் என்று வாதிடுவது சரியானதே, ஆனால் ஈழத்து குறும்படம் என்ற அடையாளம் எதன் மூலம் உருவாக்கம் பெறப்போகிறது.
இரண்டாவது பார்வையாளருக்கு திரைப்படத்திற்குமான தொடர்பு. இதே பிரச்சனை தற்கால சில கவிதைகள் மீதும் எனக்குண்டு. இரண்டிற்கும் பொதுவாக, எப்போதுமே ஒரு படைப்பு  ஒன்றில் அப்படைப்புக்கும் வாசகருக்கும்/ பார்வையாளருக்கு ஏதோ ஒரு புள்ளியில் இணைப்பு ஏற்படும் போது தான் அது கலைப்படைப்பாக உருமாற்றம் அடைகின்றது. சம்பவங்களை அடுக்குதல் பின்நவீனத்தின் முக்கிய கூறு என்றாலும், அது வாசகரை/ பார்வையாளரை ஒரு கணத்தின் உள்வாங்கும் போது தான் உன்னதம் அடையும். இந்தச் சிக்கலை மறாவை பார்க்கும் போது எனக்கு ஏற்படுகிறது. இயக்குனர் காட்டுகின்ற காட்சிகள் சிதறிய கண்ணாடி போல புதிர்த்தன்மை வாய்ந்தது. வேறு வேறான காட்சி அமைப்புக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. குறியீடுகள் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இவை நெய்ல் பேர்கரின் காட்சி அமைப்புகளையும் கதை சொல்லையும் நினைவுபடுத்துகின்றன. ஒளிப்பதிவும் அவ்வளவு நேர்த்தியாகவே இருக்கின்றது. ஆனால் அந்த சிதறிய காட்சிகள் ஒன்று சேரும் இடம் பற்றிய கேள்வி தான், படத்தின் மீதான விமர்சனத்தை ஏற்படுத்துகின்றது. காட்சிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, பார்வையாளர்களுக்கு  எப்படி காட்சிகளின் மூலம் இணைப்பை ஏற்படுத்துவது என்பதைத் தான் பிரபல இயக்குனர்கள் எல்லோரும் சரியாகச் செய்கின்றனர். சிதறுண்ட காட்சிகள்/ சொற்கள் மூலம் யாரும் எதையும் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு இயக்குனர்/ கவிஞர் தான் சொல்லவந்த கருவை காட்சிகளுடனும் பார்வையாளர்களுடனும்/ வாசகர்களுடனும் இணைக்கத்தான் பெரும் முயற்சி எடுக்கவேண்டி இருக்கின்றது. அந்த முயற்சி செய்யப்படுகின்ற படைப்பு கலைப்படைப்பாக மாறுகின்றது. மறாவில் இயக்குனரின் பங்கு வெறுமையாக விடப்பட்டுள்ளது. இயக்குனர் சொல்வதைப்போல கதையை ஊகிக்க முடியாத நிலை, இயக்குனரின் தோல்வியே தவிர பார்வையாளரின் அல்ல.
22792295_1970568726537324_2263350883293001022_o

இசை – Rohingya – அனிதா

(1)
நேற்று புகையிரதப் பெட்டிக்குள் வியர்த்து விறுவிறுக்க ஏறி, தோளில் இருந்த பயணப்பையை மேலே வைத்துவிட்டு ; காலையிலிருந்து உடுத்தியிருந்த மேற்சட்டையையும் பெனியனையும் கழற்றி புதிய மேற்சட்டை ஒன்றை வேகமாக மாற்றினேன். அந்த பேட்டியில் பெரிதாக எவருமே இல்லை என்பதால் எனக்கு மாற்றுவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. சப்பாத்தைக் கழற்றி வைத்துவிட்டு, துணி ஒன்றினால் வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் கிளம்ப பத்து நிமிடத்திற்கு முதல், என்னைவிட ஆரவாரமாக வயது முதிர்ந்த பாட்டி, நடுத்தரவயதில் ஆண்கள் பெண்கள் யுவதிகள் சிறுவர்கள் என்று சுமார் பதினைந்து பேர்கொண்ட படை அத்தனை ஆசனங்களையும் நிரப்பியது. எனது ஆசன இலக்கம் பதினெட்டு, அருகில் பதினேழு. பதினேழும் அவர்கள் பதிவு செய்த ஆசனமே. ஆரவாரமாக அவர்களது பயணப்பைகளையும் கிட்டார் ஒன்றரையும் வேறு சில கைப்பைகளையும் ஒழுங்குபடுத்தி அடுக்கிவைத்தார்கள். அவர்கள் முகம் முழுக்க எதிர்பார்ப்பு இருந்தது; கவலையோடு. அவர்கள் யாரையோ எதிர்பார்த்தார்கள். கைத்தொலைபேசியை வேகமாக அழுத்தி காதில் வைப்பதும் பின்னர் தமக்குள்ள கதைப்பதுமாக இருந்தார்கள். கடைசியில் அவர்கள் எதிர்பார்த்த அந்த நபர் பெட்டிக்குள் ஏறினார். அவருக்கான ஆசனம் பதினேழு.
ஆரம்பத்தில் குலுக்கமாக அசையாத தொடங்கியது புகையிரதம். சிறிது நேரம் எவராலும் எதையும் செய்துகொள்ளமுடியவில்லை. அவ்வளவு குலுக்கம். கூடவே அருகில் இருந்த மலசலகூட கதவு திறக்கப்படும் போதெல்லாம் மூச்சை சூறையாடும் வெடுக்கு நாற்றம். இத்தனைக்கும் நடுவில் அமைதியாக தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்ற அழகான குடும்பம். அல்லது நண்பர்கள். அல்லது….
அருகில் இருந்த ஆச்சியிடம் பேச்சைக் கொடுத்தேன். அவர்கள் எங்கே போவதாக விசாரித்தேன். அவர்கூறிய எதுவுமே விளங்கவில்லை. காரணம் அவரது ஓட்டைப் பற்களாக இருக்கலாம். அல்லது என் மொழிக் குறைபாடாக இருக்கலாம். அவரது கண்களின் அசைவுகளில்,அது அவரின் முழுக்குடும்பம் என்றும் நிகழ்வு ஒன்றிக்கு எல்லோருமாகச் செல்கிறார்கள் என்றும் புரிந்துகொண்டேன். அவரின் தாமதம் பற்றி விசாரிக்க நினைத்திருந்தாலும், அவர் பேசுகின்ற சிங்களத்தின் வேகமான நடைக்கு ஈடுகொடுக்கமுடியாது என்று பேசாமலே இருந்துவிட்டேன். புகையிரத ஆட்டம் குறைய, அவர்களில் நடுத்தர வயதை உடைய ஒருத்தர் எழுந்து கைகளில் கிட்டாரை எடுத்துக்கொண்டு, அவர்களில் யுவதிகளும் குழந்தைகளும் இருக்கின்ற ஆசனங்களின் நடுவே போயிருந்தார். அவரைத் தொடர்ந்து, அந்த வீட்டின் எல்லோரும் பெட்டியின் முன் ஆசனங்களை அருகிலும் ஆசன கைகளிலும் இருந்தார்கள். இரண்டு சிறுவர்கள் கைகளில் றபான்களை எடுத்தார்கள். என்னருகில் இருந்த ஆச்சியும் எழுந்து அவர்கள் அருகில் சென்று, உள்ளே அமர்ந்து கொண்டார். அவர்கள் இருந்த ஆசனங்களில் அறுபது சதவீதம் இப்போது வெறிச்சோடிப்போனது. பெட்டி கலகலக்கத் தொடங்கியது.
அவர்கள் பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும் தொடங்கினார்கள். சிங்களத்தில் தான் பாடினார்கள். அவர்களில் கிட்டார் வைத்திருந்தவர் தன்னை மறந்து இசைத்துக்கொண்டிருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்தும், கண்களால் அன்பினைப் பரிமாறியும், இடையிடை மெல்லிய நடன அசைவுகளை ஆடியும் ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். யுவதிகளின் தடிமனான உதட்டு சாயம் பாடலுக்கு மிக குதூகலமாக அசைந்துகொண்டிருந்தது. அவர்கள் இசையின் மூலம் பேசிக்கொண்டார்கள். இசையை அவர்களின் சந்தோசத்தின் வெளிப்பாடாக கருதினார்கள். சில வார்த்தைகள் உச்சரிக்கப்படும் போது அனைவரும் ஒன்று சேர்ந்து தோள்களுக்கு மேல் கைகளைகளைப் போட்டு ஒற்றுமையை காட்டினார்கள். வேறு சில சொற்களுக்கு வானத்தை நோக்கி வணங்கியும், சிலவற்றுக்கு இயற்கையை ரசிப்பது போலவும் சைகைகள் செய்தார்கள். அங்கிருந்த யுவதிகளின் அழகிற்கு ஏற்ப அவர்களின் குரலோ இசையோ இருக்கவில்லை. ஆனாலும் அவற்றைத் தாண்டி அவர்களின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பெட்டிமுழுக்க பரவியது. ஜன்னல் ஓரத்தினூடாக வெளியே பார்த்தேன். அருகில் நீண்டு அகன்று விரிந்திருந்த மலை, அவர்களின் முன்னால் சிறிய நீர்க்குமிழ் போலத் தோன்றியது.
(2)
மியன்மாரில் நடக்கின்ற மனித அவலங்களை தினமும் காணக்கூடியதாக இருக்கின்றது. மனிதர்கள் மீது மனிதர்களே நடத்துகின்ற இழிவுக்கொடூரம் இது. புகைப்படங்களிலும் காணொளிகளிலும் அங்கங்கள் சிதைந்தும் உரு அற்றுப்போயும் குற்றுயிர் குறையுயிராக மனிதர்கள் சிதிலமடைவதைப் பார்க்கும் போது உலக நாடுகளும் பொது அமைப்புக்களும் இன்னும் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை. இனங்களுக்கிடையிலான பிரச்சனையாக இருந்தாலும் Aung San Suu Kyi கருத்துப்போல ஒரே இனக்குழுமத்தின் பிரச்சனையாக இருந்தாலும் பலியாவதும் முடமாவதும் மனித உயிர்களே. வன்முறை என்ற வழி எப்போது உலகில் கையாளத் தொடங்கப்பட்டதோ அப்போதே மனிதம் இறந்துபோனது. ஒரு கொடூர மனித அவலங்களின் அரங்கேறிய நாட்டிலிருந்து, இன்னொரு மனித அவலம் நடந்துகொண்டிருக்கின்ற தேசத்திற்கு என்ன கூறிவிடமுடியும்? எங்களுக்கு எப்படி முழு உலகமும் மௌனமாக பதில் செய்ததோ அதே போன்ற பதிலைத்தான் Rohingya மக்களும் எதிர்பார்க்க முடியும். கிராமங்களை தீவைப்பதும் அதனுள் குழந்தைகளை தூக்கி எறிவதும், வெட்டை வெளியில் கழுத்தறுப்பதும் கொடிய மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் கூட முடியாத ஒன்று.
400 ற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது இன்றைய நாளில் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய விடயம் இல்லை. இதை நான் இனஅழிப்பு என்றே சொல்லுவேன். மனிதர்கள் இறப்பது மட்டுமல்ல இனஅழிப்பு. 73000 ற்கு அதிகமானோர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் குழந்தைகள் போசனைக்குறைபாடான நிலையில் இருக்கின்றனர். இதெல்லாம் ஒரு இருபது ஆண்டுகள் பின்தங்கிய நிலையை அம்மக்களுக்கு ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் அடிப்படைகளை நிவர்த்தி செய்து, உலக போட்டிக்குள் நுழைய இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது எடுக்கும். வறுமை நோய் மக்கள் விரட்டும். வெறுமனே நான்கு ஐந்து நாட்கள் நடக்கின்ற பிரச்சனை அரை நூற்றாண்டு வாழ்வியலையே பாதிக்கும். இப்படியான பாதிப்புக்கள் ஒரு தேசத்தின் சிறுபான்மை மக்களுக்கு நிகழ்வதே பெரும் துயர்.
கடந்த வியாழக்கிழமை Nat நதியின் கரையில் இருபது மனித உடல்கள் எடுக்கப்பட்டன, அதில் பன்னிரண்டு குழந்தைகள். இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் புதைந்து போன நிகழ்வுகள் இன்னும் சில இனக்குழுமங்களுக்கு நடந்துகொண்டிருப்பது கவலைக்குரியது. வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்த பெண்ணொருவரின் பேட்டியை வாசித்தேன், அதில் அவர் மியன்மாரில் நிறைய சிறுபான்மை இனங்கள் இருந்தும் நாம் மட்டுமே அவர்களால் அதிகமாக வெறுக்கப்பட்டோம் என்கிறார். வங்கதேசத்தில் குவிக்கின்ற அகதிகள் பற்றிய கேள்விகள் அதிகமாகின்றன. எமது நாட்டின் போரில் அகதிகளாக தஞ்சமடைந்த மக்கள், தங்கள் சொந்தங்களின் நிலத்தில் அகதி முகாம்களில் பட்ட அவதியும் துன்பங்களும் கொடியது. அவர்களுக்கான வசதிகள் சரியான முறையில் கொடுக்கப்படாமையும் அதனுள் நடக்கின்ற அசிங்கமான அரசியல் நகர்வுகளும் மேலும் மேலும் அகதிகளின் நிலைமையை பிரச்சனைக்குள்ளாக்கும். சொந்த நாட்டின் உள்ளக அகதிகளுக்கே இந்த நிலைமை என்றால் இன்னொரு நாட்டில் தஞ்சம் கோரிக் போகின்ற Rohingya மக்களின் நிலைமை இன்னும் மோசமானதாகவே இருக்கும்.
Rohingya மக்களின் பிரச்சனை இன்னும் இன்னும் மௌனமாக்கப்படும் போது வீரியமடையக்கூடும். இதைவிட பலமான ஆதிக்கசக்திகள் Rohingya மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சர்வதேச ரீதியில் இதற்கான ஆயத்தங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும். இது முன்னர் எங்களுக்கும் இப்போது Rohingya மக்களுக்கும் இனி இன்னொரு இனக்குழுமத்திற்கும் நடக்கும். மனிதாபிமானம் இல்லாத உலகம் உருவாகி, அதன் ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறது.
(3)
NEET தேர்வும் அனிதாவின் மரணமும் இன்றைய கல்வி முறை குறித்த வெளிப்படுத்தல்களை எல்லா சாராருக்கும் தெரிவித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியா என்ற தேசத்திற்குள் இந்த சம்பவத்தை அடக்கிவிடாமல் நாமும் இதைப் பற்றிய விழிப்புணர்வை அடையவேண்டும். இலங்கை கல்வி முறை குறித்த பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், அதை அமுல்ப்படுத்துவதிலும் பரிசோதிப்பதிலும் அரசாங்கம் தயக்கம் தெரிவிப்பது பல மானவர்க்ளுக்கு கெடுதலாக அமைகின்றது. புள்ளிகள் மூலம் திறமையை வரையறுத்துக்கொள்ளும் கல்வி முறைமை எம்மைப்போன்ற சில நாடுகளிலேயே இன்னமும் அமுலில் இருக்கின்றது. இதனால் இன்னமும் பல மாணவர்கள் பல்கலைக்கழக தகுதியினை, அவர்களுக்கு குறித்த துறையில் புலமை பெற ஆற்றல் இருந்தும் இழக்கின்றனர். தனியார் பல்கலைக்கழங்கள் இருந்தும் அவர்கள் கேட்கின்ற தொகைப்பணத்தை கொடுத்து படித்து வெளியேறும் அளவு பொருளாதார வசதியினைக்கொண்டிராத திறமையான மாணவர்கள் முழுக்க முழுக்க புள்ளிகள் அடிப்படை தேர்வு முறையினை நம்பியிருக்கவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அதில் போராடி தோற்றுப்போகின்ற மாணவர்களின் நிலைமை என்ன? அவர்கள் தமது கனவுகளை புதைக்கொண்டு இன்னொரு வேலைக்கு போகின்ற அல்லது இன்னொரு துறையை தெரிகின்ற துர்ப்பாக்கிய நிலையை அடைகின்றார்கள்.
ஏற்கனவே இலங்கையில் SAITM இற்கு எதிராக போராடுகிறார்கள். SAITM இற்கு முதல் இப்படியாக தட்டிக்கழிக்கப்படுகின்ற மாணவர்களின் எதிர்காலம் பற்றிய நிலைப்பாடு என்ன? அசம்பாவிதங்கள் நடக்கின்ற போது தான் அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகின்றது. அனிதாவின் மரணம் ஒரு சம்பவமாக முடிந்துவிடாமல் கல்வி முறைமை பற்றிய பல கேள்விகளையும் கேள்விகள் சிறந்த கல்வி முறைமையையும் ஏற்படுத்தவேண்டும்.

பேரூந்து – மெடூசா – குறியீடு

(01)

காலையில் அந்தரப்பட்டு என்னைத் தயார் செய்து கொண்டு அப்பாவுடன் பேரூந்து நிலையத்திற்கு யாழ்பாணம் போவதற்காக சென்றேன். பேரூந்து நிலையம் போவதற்கு முதலே பேரூந்தை இடையில் மறித்து ஏறிக்கொண்டேன். ஏறும் கணமே நடத்துனரும் பேரூந்து படியில் நின்றவரும் ஏதோ பேசிக்கொண்டனர். நான் அதைப் பொருட்படுத்திகொள்ளாமல் என் பாட்டில் ஏறினேன். படியில் நின்ற இருபத்தைந்து மதிக்கத்தக்கவர் என்னை இறுதி ஆசனத்தில் அமரச் சொன்னார். ஏற்கனவே அதில் ஐந்து பேர் உறங்கியும் கலங்கியும் இருந்தார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த ஒருவரை தள்ளி இருக்கச் சொல்லி விட்டு குறுகிய இடத்தில் வளைந்து அமர்ந்தேன். இதற்குள் மேலோட்டமாக முன்னே எங்கும் ஆசனங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தேன். எதுவுமே தென்படவில்லை. குறுகிய இடத்திற்குள் நான் செருகிக்கொண்டேன். எனக்கு அருகில் ஒருத்தர் தன் மார்புகளைக் கைகளால் கட்டிக்கொண்டும் மற்ற அருகில் இருந்த ஒருவர் கைகளை தொடைகள் அருகில் வைத்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்கள். மார்புகளைக் கைகளால் கட்டிக்கொண்டு இருந்தவர் ஓரளவு பருத்திருந்தார். அவரின் பருமனை விடவும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்திருந்தார். கூடவே நித்திரை வேறு. இடக்கையின் முழங்கை என் மூட்டை இடித்துக் கொண்டிருக்க நான் மேற்ப்பக்கமாக சாதுவாக வளைந்தேன். அப்படியே மற்றப்பக்கம் இருந்தவரின் கைகள் அண்ட இடுப்புப் பக்கமாகவும் வளைந்து என் உடலின் மேற்ப்பக்கத்தை ஆங்கில எழுத்து S போல வளைத்து இருவருக்கும் வளைந்துகொடுத்தபடி நொந்துகொண்டிருந்தேன். என் நிலைமையை படியில் நின்றவர் அவதானித்துக்கொண்டே வந்தார். இத்தனை நடந்தும் எனக்கு பெரிய தாக்கம் எதுவும் மனதளவில் ஏற்படவில்லை. பேரூந்து ஓட்டத்தில் வழிகளில் நின்று ஏறிய நான்கு ஐந்து பேருக்கு படியில் நின்றவர் முன்னுக்கு ஆசனங்களை ஒதுக்கி கொடுத்துகொண்டிருப்பதைப் பார்க்கும் போது தான் மனித மனதின் இறுக்கமான தன்மை தானாக கவலையை ஏற்படுத்தியது.

(02)

 

யதார்த்தனின் சிறுகதைத் தொகுப்பு வெகு சீக்கிரம் வெளிவரப் போவது மகிழ்ச்சியான விடயமாகும். அவர்களின் குழுமத்தில் எனக்கு அனோஜன் அவர்களின் சதைகள் சிறுகதை தொகுப்பு கிடைத்திருந்தது. அதைத்தொடர்ந்து யதார்த்தனின் தொகுப்பும் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கின்ற 47வது இலக்கிய ஒன்றுகூடலில் வெளியிட்டு வைக்கபட இருக்கின்றது. இந்த ஒன்று கூடல் மலையகத்தில் கொட்டக்கலை என்ற இடத்தில் இம்மாத இறுதி தினங்களான 29 மற்றும் 30 இல் நடைபெறுகின்றது. யதார்த்தனைப் பொறுத்தவரையில் புனைவு அபுனைவு என இரண்டு தளத்திலும் இயங்கி வருகின்றவர். புனைவுகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய கதை சொல்லியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அவரின் அபுனைவுகளில் நான் மிக ரசித்து வாசித்ததும் அனேகமான தகவல்களைத் திரட்டிக்கொண்டதுமான படைப்பு இயற்கை மரபின் இருப்பு – குருவிக்காடு ஆகும். இது சமீபத்திய விவரணக் கட்டுரை. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” சிறுகதைத் தொகுப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

(03)

 

இன்று அ.மார்க்ஸ் இன் வலை தளத்தில் மணிமேகலையை ஒரு பௌத்த காப்பியமாகவும் பார்க்ககூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். எமது அடையாளங்கள் என்பவை எவை என்ற கேள்வி உள்ளூர எழுந்தது. நேற்று அருண்மொழிவர்மன் அவர்களுடன் பேசியதில் அவர் ஈழத்து தமிழர் என்பதையே தான் அடையாலகுறியீடாக பயன்படுத்துவதாகச் சொன்னார். இந்திய தமிழ் நாட்டு இதழ்களும் ஈழத்து தமிழர் என்பதையே எமக்கான குறியீடாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எமது சமூகத்தின் எழுத்தாளர்களையும் அதே வரையறைக்குள்ளேயே அறிமுகப்படுத்துகிறோம். இதுவரை காலமும் நடந்து முடிந்த யுத்தம் (என்று கூறப்படும்) முழுவதும் எமது அடையாளம் ஈழத்து தமிழர்கள் தான். ஈழம் என்ற சொல்லின் உள்ளடக்கம் பற்றிய கருத்து எதிர்ப்பு இருந்தாலும் அதை அடையாளப் படுத்தல் என்பது இப்போதைக்கு கட்டயமானதே. அ.மார்க்ஸ் ஐப்போல நின்று இறங்கி ஆராய்ந்து எமது வரலாற்றையும் தொன்மையையும் இலக்கியத்தின் மூலம் நிறுவிக்கொள்ளமுடியாது. எம்மிடம் வலிதான இலக்கிய ஆதாரப் பிரதிகள் எதுவுமே இல்லை. எமது ஆதிகால முன்னோர்கள் எமக்கான எழுத்துரு இலக்கியங்கள் எதையுமே உருவாக்கியிருக்கவில்லை. எமக்கிருக்கும் ஒரே ஆதாரம் தொல்பொருட்கள் தான். ஈழத்து தமிழர் என்ற அடையாளக் குறியீட்டை வலுப்படுத்தகூடிய ஒரே வழிமுறை தொல்பொருள் ஆய்வுகள். இதற்கு அரசாங்கமும் ஈழத்து தமிழர்களும் ஒத்துழைக்கவேண்டும். எமது அடையாளத்தை நாம் நிறுவ வேண்டிய காலம் வெகு விரைவில் வந்துவிடும். இது இருப்பு சார்ந்த அடிப்படைப் பிரச்சனை.