கிழிந்த இறகொன்றின் காதல் நினைவுகள்

கருநீலப்பூச்சி

 
வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை. ஒளிக்கும் வெப்பத்திற்கும் ஒத்திசைவாக்கப்பட்டவை. மழைக்காலத்தில் தன் உடலை இறக்கைகளுக்குள் சுருக்கி, ஒரு சாக்கடைப்புழுவைப் போல சுருண்டு இறப்பொன்றினை எதிர்பார்த்துக்கிடக்கும். மழைக்காலத்தின் பின்னர் வெயில் வரும் என்பதை அவை ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை. நீண்ட மழைக்காலத்தினை தம் இறப்பிற்குரிய ஆரம்ப அறிகுறியாக கருதிக்கொள்பவை. ஈரலிப்பான ஏதோ ஒன்று அவற்றின் மீது பூசப்படும் போது – அது ஒரு மழைத்துளியாக அல்லது வெள்ளத் தெறிப்பாக அல்லது எச்சிலாக அல்லது மூக்குச் சளியாக அல்லது சிறுநீராக – இறப்பின் அழைப்பாக கருத்திக்கொள்கின்றன. தம் உடல் புனித பயணம் ஒன்றிக்காக தயார் செய்யப்படுகின்றது என்று நினைக்கின்றன. அவை அனைத்திற்கும் புனித பயணம் ஒன்றைப்பற்றிய பொதுமையான கனவொன்றிருந்தது. இறந்து போன கருநீலநிற பூச்சிகளில் எதுவும் மீண்டும் தம்மிடத்தே வராததால் புனித பயணத்தைப் பற்றிய பொதுமையான கனவொன்றையே தமக்குள் சித்தரித்துக்கொண்டன. காகிதப் பூக்களை விட மென்மையான அவற்றின் உடல் காற்றில் நறுமணங்களால் கொண்டு செல்லப்படுகின்றது. மழைக்கால ஊர்வலத்தில் ஏனைய சக கருநீல பூச்சிகளால் பங்குபெற்றமுடியாததால் அவை எழுந்து தம் இறக்கைகளை விரித்து பறப்பதில்லை. ஏன் கண்களைக்கூட விரிப்பதில்லை. நறுமணத்தினை நுகர்க்கூடிய பொழுதுகளில் இறப்பொன்று நடந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும். யாருடைய இறப்பென்றதை அறியமுடியாது, அது தன்னுடைய இறப்பாக இருந்தாலும் கூட. தொடர்ந்து வருகின்ற  வெயில் காலமொன்றின் சூட்டினை உணரும் போதுதான் உயிரோடிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும். அவை இறப்பொன்றிக்கு செய்யும் அஞ்சலி மௌனமாக இருப்பது. காற்றிலே மிதந்து செல்லும் இறந்துபோன கருநீல உடலிற்கு இறக்கைகளை விரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமே ஏற்படுவதில்லை. நறுமணம் கொண்டு சென்ற கருநீலப் பூச்சிக்கு என்னானது என்று மற்றவை பேசிக்கொள்வதில்லை. புனித பயணத்தில் இணைந்துள்ளது அவ்வளவு தான். செதில்களாலான கூரிய மண்ணிற உடல் சூட்டை உணர்கின்றன தருணத்தில் வெயில் கால வருகையினை உணர்ந்துகொள்கின்றன. இறப்பிலிருந்து தப்பித்து வந்ததாக அல்லது இறந்து மீண்டும் பிறந்து வந்ததாக நினைத்துக்கொள்கின்றன. தம்முடைய இறக்கைகள் பிஞ்சுப் பசையினால் ஒட்டியிருக்க அவற்றினை கிழிந்திடாமல் விரிப்பதை பெருஞ்சிரமமாக செய்கின்றன. இறக்கைகள் இல்லாத அவை, தம்மைத் தாமே உமிழ்ந்து இறந்து போவதை பெரிதாக கருதுகின்றன. கருநீல நிறப்பூச்சி என்னை நோக்கி வருவதை சாதாரண நிகழ்ச்சியாக உணரவில்லை. சத்தம் இல்லாமல் துடிக்கின்ற இறகுகள் எனக்குள் பேரிரைச்சலை உண்டாக்குகின்றன.
 
வெட்ட வெளிச்சமான வானத்தில் இருள் கண்டிப்போனது. காற்று தன் உடலில் ஈரலிப்பை பொருத்தி காவிக்கொள்ளத் தொடங்கியது. சௌகரியமாக சாய்ந்திருந்த தூணிலிருந்து முதுகை விடுத்து, கருநீல பூச்சியினை நோக்கி வாயினை ஆவென்று திறக்கிறேன். அது என் வறண்ட நாக்கினை உற்றுநோக்கியதாக உணர்கிறேன். இல்லையென்றால் இப்போது எனது வாய்க்குள் புகுந்திருக்காது. உடலின் உஷ்ணக் காற்றினை வாய்க்குள் நிரப்பி பூச்சிக்கு வெம்மையளிக்கிறேன். பிரபஞ்சத்தில் உணர்வற்றுக்கிடக்கும் முகமூடி ஒன்றோடு இனி பயணிக்கப்போவதை எண்ணி வருந்தியிருக்கக்கூடும். அதைபற்றி எனக்கு கவலையில்லை. காற்றில் கனத்திருக்கின்ற ஈரலிப்பு கருநீல பூச்சியினை ஒன்றும் செய்துவிடக்கூடாது. இறப்பினைத் தாண்டி என்னிடம் ஏதோ சொல்லவோ கேட்கவோ வந்திருக்கும் இது, என் விருந்தாளி. நண்பன். வாயைத் திறந்தவுடன் குடிகொண்டுவிட்டதே. என் நண்பர்களிடம் இருந்து ஒவ்வொரு கதையினை வாங்கிக்கொள்வேன். கொடுக்க கதைகள் எதுவும் இருப்பதில்லை. நிழலை மீறி மேகத்தின் இருட்டு வெளியை  நிரப்பியது. வெங்காற்று நிரம்பிய வாயினை பொத்திக்கொண்டு அறைக்குள் விரைந்தேன். கண் கிடங்குகள் காதுச்சவ்வுகள் அடைக்கத் தொடங்கின. மூக்குத்துவாரங்களால் மூச்செடுக்க முடியும் என்ற உண்மையை அவ்விருள் கடத்திக்கொண்டு போய்விட்டது. வாய்க்குள் எச்சில் சுரக்கமுன்னர் பூச்சினை விடுத்தாகவேண்டும். இல்லையென்றால் இருட்டிடமிருந்து பூதம் கைப்பற்றியதாக ஆகிவிடும் அதன் நிலை. மேசையின் மேல் அருகாண்மையில் உதட்டினை திறந்தேன். புதைக்க மறந்த நாய்ப்பீயின் நாற்றத்தோடு பிண்டம் விழுந்தது. அருவருத்த நாக்கினை நீட்டி இரண்டுவிரல் நிகங்களாலும் வழித்துக் காறித்துப்பினேன். வாயினை நன்றாக கொப்பளித்து விட்டு மேசையின் அருகில் கதிரையில் இருந்து கருநீலப் பூச்சினை அவதானித்தேன். என்னை கருணை உணர்வோடு பார்ப்பதாக தோன்றியது. என்னிடம் சொல்லல வார்த்தைகள் இருப்பதாக. கண்ணின் மணியினை உயர்த்தி என்னைப்பார்த்து ஏழைச்சிறுவன் பிச்சைத் தட்டினை நீட்டி வயிற்றைத் தடவுவது போல தன்னை வெளிக்காட்டியது. அது இயலாமையின் அடையாளம். ஒற்றை மழைத்துளியில் கரைந்து போய்விடக்கூடிய ஒன்று இன்னமும் தன்னை வருத்தி வாழ எத்தனிக்கிறது என்றால் – என்னிடம் வந்து சரணடைந்திருக்கிறது என்றால் – நான் கேட்கவேண்டிய கதையொன்று அதனிடம் இருக்கிறது.
 

சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி

 
மென்பச்சையும் நீலமும் கலந்த மார்பிள் தரையில் ஒட்டிக்கிடந்த என் கறுத்த உடலை எழுப்பி, விறைத்தபடி கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற மழையினை கண்ணாடி யன்னலினூடாக பார்க்கிறேன். தன் எச்சத்தை கண்ணாடியின் மேல் பீய்ச்சி அடிப்பது என்னை ஏளனம் செய்வதைப்போலவே இருக்கிறது. காற்று புகமுடியாத அடைத்த அறையொன்றிலிருந்து மழையினை உணர்தல் என்பது கொடுங்காரியம். கண்ணாடிக்கு எதிரே பச்சைய வாசத்தை தீவிரமாக பரப்பிக்கொண்டிருந்த சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி, எல்லாவற்றையும் மறந்துபோய் மழையில் நடனமாடுகிறது. அது அவளின் உடலசைவுகளை எனக்குள் திரட்டுகின்றன. அவளை வெள்ளை நிற சுடிதாரில் பார்த்தது இல்லை. ஆனால் மழையோடும் குளிர்ந்த காற்றோடும் நிலத்தினை ஊடறுத்துப்பாய்கின்ற நீர்த்திவலைகளோடும் பார்த்திருக்கிறேன். சகதி பூசிய தரையினை கடந்து போக நீளமாக எறிந்து விடப்பட்ட ஓரளவான கற்களை சிரிப்போடு தாவிக் கடக்கின்ற அவளின் நளினத்தை அச்செடி ஞாபகப்படுத்துகின்றது. அகன்ற கண்ணாடியின் உடலெங்கும் மின்னல் வெளிச்சம் பரவுவதை இமைப்பொழுதில் கண்களில் தெறித்து மறைக்கின்றன. துளிகள் பெருகி கண்ணாடியில் அழுகின்ற காட்சி என்னைத் துருத்துகின்றது. தூரத்திருந்து தனக்குள்  வெடித்து அழுவதால்  தானாக கண்ணீர் வடித்தன அவளின் கண்கள். அந்தரத்தில் தொங்குகின்ற பூச்சாடிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மீதம் வழிந்த மழை ஓடிச்சென்று  கடைசில் கடலில் உவர்ப்பாகிப்போகின்றது. நிரம்பியிருந்த இருட்டின் மீது சிறிது பனி பரவத்தொடங்கியது. கண்ணாடியின் உள்புறம் அப்பழுக்களற்ற பனியினால் பூசப்படுகிறது. மில்லிமீட்டர் தடிப்புடைய கண்ணாடியின் இரண்டுபக்கமும் ஒட்டிநின்று காதல் செய்துகொண்டிருக்கிறது மழைத்துளிகளும் பனிப்படலமும். உள்ளிருக்கின்ற பனியினை அடைந்துவிடமுடியாத ஏக்கத்தில் அழுகின்றன மழைத்துளிகள். சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடியின் நடனம் என் தீர்க்கமுடியாத கனவொன்றினை ஏளனம் செய்வதைப்போல உணர்கிறேன்.
 
கொடிய கனவுகளில் மனிதர்களின் முகங்களும் அவர்களின் வார்த்தைகளும் மட்டுமே தெரிகின்றன. அவற்றைத்தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சிகள் எனக்கு விரும்பியவாறே நடந்தேறுகிறது. அதனாலேயே கொடிய கனவென்கிறேன். எதை ஆசைப்படுகிறேனோ எவ்வாறு ஆசைப்படுகிறேனோ அது அவ்வாறே நடந்து முடிந்து தீர்ந்துபோவதையிட்டு கவலையடைகிறேன். கனவினை மீட்டிப்பார்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் முடிந்து விட்டதே என்ற கவலை மேலெழுந்து கொடுங்கனவாக மாறிவிடுகின்றது.
 

கணவாய்கள் நிறைந்த செவ்வகப்பெட்டிகள்

 
இயக்கமற்ற உடலொன்றாய்க் கிடக்கிறேன். ஒரு கணவாயைப் போல அருவருக்கத்தக்க கரிய உடலை நிலத்தோடு கிடத்தி மழை ஓய்ந்த பின்னிரவொன்றில் செய்வதறியாது ஒவ்வொரு சம்பவங்களாக மீட்டிக்கொள்கிறேன். மழையின் பின்னரான இவ்விரவு குளிர்மையானதாக இல்லை. இந்த செவ்வகப் பெட்டிக்குலிருக்கும் எந்த உயிரினத்திற்கும் இவ்விரவு மழையின் பின்னரான இரவொன்றாக இல்லை. மெல்லிய படையாக பிசுபிசுப்பான திரவமொன்று உடலைச் சுற்றி  சுரக்கிறது. மழையில் அச்சமூட்டுவதாக தெரிந்த வாகன விளக்குகள், இப்போது வெறும் ஒளிப்பொட்டாக தெரிகின்றன. மழைக்குப் பின்னர் எந்தப் பெரிய இரைச்சலான மாநகரமும் அணிந்துகொள்கின்ற பேரமைதி எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. மழைக்கு முன்னரும் மழையின் போதும் ஆரவாரமாகவும் சுறுசுறுப்போடும் இயங்கிய மனிதர்கள் மழைக்கு பின்னர் சோபையிழந்து போகிறார்கள். அவர்களின் படபடப்பு ஓய்ந்துபோகிறது. அத்தனை படபடப்பும் எனக்குள் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது. உடலுக்குள் ஆயிரம் பூரான்கள் ஊர்வதைப்போல பிறாண்டிக்கொண்டிருக்கிறது. செவ்வக அறையை விட்டு இந்த கரிய உடலை விட்டு விலகிப்போக ஏதோ ஒன்று துடித்துக்கொண்டிருக்கிறது. இணைப்பறுந்து தூக்கி எறியப்பட்ட பழைய தொலைபேசி ஒன்றினைப்போல உலகத்தோடு தொடர்பற்றுப்போயிருக்கும் ஏதோ ஒன்று வெளியேறும் கடைசி கணத்தில் செவ்வக பெட்டியைவிட்டு வெளியே வந்துவிடவே எத்தனிக்கிறேன்.
 
சாலையில் மழைக்கான தடயம் எதுவும் இருக்கவில்லை. மிகச்சில மனிதர்கள் அவசரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிந்துபோன நாளொன்றின் நினைவுகளை மீட்டிக்கொண்டு வெறுப்பவற்றை தூக்கி எறிந்தும் நேசிப்பதை தனக்குள் சேமித்துக்கொண்டும் செல்கிறார்கள். என்னைத்தவிர எல்லாமுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடைகளுக்கு முன்னிருக்கின்ற படிகளிலும் பேரூந்து தரிப்பிடங்களிலும் எங்கெல்லாம் ஒதுங்குகின்றளவு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சைக்காரர்கள் கிழிந்த துணிகளால் தம்மை இழுத்துப்  போர்த்திக்கொண்டு அமைதியாக தூங்குகிறார்கள். நீரில் தோய்ந்து நனைந்துப்போன கிழிந்த இறகொன்று காற்றில் மிதந்து முடிவின்றி அலைகின்றது.

நகரத்தின் குறிப்புகள் – 05

மொறட்டுவையில் கட்டுபெத்தை சந்தி மிகவும் முக்கியமானதொன்று. கொழும்பிலிருந்து காலிக்கான அகன்ற வீதியிலிருந்து கொட்டவைக்குச்  செல்ல பிரிகின்ற இடம் தான் கட்டுபெத்தை சந்தி. ஏழு சமாந்தர வீதிகள். நிறைய நிற விளக்குகள். எப்போதும் சன நடமாட்டம் மிகுதியாகவே இருக்கும். தோள்களில் பைகளைப் போட்டுக்கொண்டு கைகளில் தொலைபேசியுடன் நடக்கின்ற கம்பஸ் மாணவர்களால் எப்போதுமே கட்டுபெத்தை சந்தி ஆரவாரமாகத் தெரியும். கட்டுபெத்தை சந்தியிலிருந்து கம்பஸிற்கு ஒரு கிலோமீட்டர் தூரமிருக்கும்.    முச்சக்கர வண்டியிற் போக எழுபது ரூபா. பேரூந்திற்குப் பத்து ரூபா. முன்பொருமுறை நகரத்தின் குறிப்புகளில் இந்த பேரூந்தைப் பற்றி எழுதியிருந்தேன். பெரும்பாலும் எல்லோரும் இந்தப் பேருந்து வழிப் பயணத்தையே விரும்புகின்றோம். ஏனென்றால் இதில் சேமிக்கின்ற அறுபது ரூபாய்க்கு இரண்டு கோழி இறைச்சி சாப்பாடு அல்லது ஒரு நூடுல்ஸ் அல்லது பன்னிரண்டு தேநீர் அல்லது இரண்டு பணிஸ் என்று ஏதாவது ஒன்றைச் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுவிடலாம். அல்லது இரவுத் தேவைக்கு ஒரு இணைய மீள்நிரப்பு அட்டை. என்னைப் பொறுத்தவரைக்கும் இன்னும் பத்து ரூபா சேர்த்து சிற்றுண்டிச்சாலையில் ஒரு போத்தல் கொத்மலே பால். எப்போதாவது யோர்கட். கட்டுபெத்தை சந்தியில் வந்திறங்கி, ஒரு சமிஞ்ஞையை கடந்து கடை வரிசையின் முன்னால் பேரூந்திற்குக்  காத்திருக்கவேண்டும். அதனருகிலேயே சிறிய சந்து ஒழுங்கைக்குள் முச்சக்கர வண்டிக்காரர்களும்  வரிசையில் நிற்பார்கள். கம்பஸ்சிற்குப் போக இரண்டு வகையான பெயர்பலகையுடன் பேரூந்துகள் வரும். ஒன்று 255 மற்றையது 255/1. கல்கிசையிலிருந்து தொடங்கி கொட்டவைக்கு 255உம், கட்டுபெத்தையிலிருந்து மொல்பேற்கு 255/1உம் சேவையிலிருக்கும்.  இரண்டுமே கம்பஸைத் தாண்டித்தான் செல்லும்.
 
255 சாதாரண பேரூந்து. கட்டுபெத்தை சந்தியில் நின்று காத்திருக்கின்ற ஆட்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்றுவிடும். கல்கிசையிலிருந்து ரத்மலான, கட்டுபெத்தை, பிலியந்தல ஊடாக கொட்டவையை அடையும் என்பதால் கட்டுபெத்தை சந்தியில் அதிக நேர மினக்கெடல் தேவையற்றது. ஆனால் 255/1 அளவில் சிறிய மினி ரகப் பேரூந்து. பழைய அலுமினியத் தகடுகளைக் பொருத்தி விளையாட்டு வாகனம் செய்தாற்போல ஆங்காங்கே வழிந்து தொங்கும். இரண்டு வேலை செய்யாத உருண்டை விளக்குகள், ஒரு சிறிய மாத நாட்காட்டி, பூக்கள் வைக்க சிறிய தட்டு கூடவே சில்லறைகள் இருக்கின்ற ஒரு தட்டு என்று சிறிய சிறிய பொருட்களால் பேரூந்து அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  ஆரம்பத்தில் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்கக் கூடும். இப்போது வெயில் சுட்டு மண்ணிறமாகிவிட்டது. அதில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று ஓட்டுனர்களை மட்டுமே  சந்தித்திருக்கிறேன். அவர்களும் பேரூந்தைப் போலவே வறட்சியாகத் தெரிவார்கள். மங்கிய பழுப்பு நிற மேற்சட்டையையும் அதற்குச் சற்றும் குறைவில்லாத நீளக் காற்சட்டையையும் அணிந்திருப்பார்கள். அவர்கள் கண்களில் அலைச்சலோ அல்லது கடுகடுபோத் தெரியாது. கட்டுபெத்தை சந்தியிலிருந்து மொல்பேக்கு வெறும் ஒன்றரை கிலோமீட்டர் தூர பயணத்திற்காக சேவையிலிருக்கிறது இந்தப் பேரூந்து. அனேகமான நேரங்களில் சந்தியில் தொடங்கி கம்பஸோடு பயணத்தை முடித்துவிடும். மொல்பேக்கு போக ஆட்கள் இருக்காது.  255 ஐ விடச் சற்று தாமதமானது. காலையில் கம்பஸிற்கு போகின்றவர்களாலும் பின்னேரங்களில் கம்பஸிலிருந்து திரும்புபவர்களாலும் மட்டுமே ஓரளவு நிறைந்த ஆட்களுடன் 255/1 சேவையில் ஈடுபடும். மற்றைய நேரங்களில் நான்கோ ஐந்தோ பேரோடு தான் பயணம். ஒரு சமயம் தனித்தே பயணித்திருக்கிறேன். அந்தச் சமயமும் நடத்துனர் சிரித்துக்கொண்டே காசை வாங்கினார். சில நேரங்களில் பேரூந்து நிரம்பி வழியும் கூட்டத்துடன் செல்லும். நடத்துனர் கூட்டத்தை உள்ளே தள்ளி, ஏறுகின்ற படிகளில் இருக்கின்ற அலுமினிய கைப்பிடிகளில் தனது  கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தலையை வெளியே நீட்டுவார். பேரூந்து வாரிபோட்ட காற்றில் அவரின் செம்பட்டை முடி அலை அலையாக மிதக்கும். அந்தக் காற்றிலே , நிரம்பிய கூட்டத்தை  எண்ணி மகிழ்ந்தவாறு புன்னகையினை உதிர்ப்பார். நிரந்தரமில்லாத அந்தப் புன்னகை கட்டுபெத்தை நாற்றத்தில் அமிழ்ந்து போய் விடும். 
நான் 255/1 இற்குள் யன்னல் கரையோரம் களைத்துப்போயிருந்தேன். வியர்வை பெனியனை நனைத்து மெல்லிய நீல அரைக் கை மேற்சட்டையினை ஈரமாக்கிக்கொண்டிருந்தது. கம்பஸிற்கு முன்னிருந்த தரிப்பில் பேரூந்து நின்றுகொண்டிருந்தது. அதிஷ்ட லாப சீட்டுக்களை பரப்பியபடி தகரக் கூட்டுக்குள் வாய்நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு பெண்ணொருவர் பேரூந்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவரிற்கு அருகில் தோடம்பழ கரைசல் விற்றுக்கொண்டிருந்தார் இன்னொரு பெண். மத்தியான வெயில் தலைக்குள் இறங்கிக்கொண்டிருக்கும் போது முப்பது ரூபாய் மதிப்புள்ள தோடம்பழக் கலவை சிறந்த நிவாரணியாகத் தோன்றும்.  கரைசல் தொண்டைக்குள் சுழற்றிக் கொண்டு இறங்கும் போது ஊடுருவியிருந்த வெப்பம் அனைத்தும் கணப்பொழுதில் மறைந்துவிடும். என்னோடு கூட நான்கைந்து பேர்.  இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் கிளம்பிவிடும். நடத்துனர் தனது இடது கையினை பேரூந்தில் பிடித்தவாறு வலது கையினால் தனது இறுதி அழைப்பினை விடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், 255 வேகமாக வந்து நானிருந்த பேரூந்திற்கு முன்னே நிறுத்தியது. நானிருந்த பேரூந்தில் சாரதி இயந்திரத்தினை உறுமி, பயண ஆயத்தத்தை உணர்த்திக்கொண்டிருந்தார். நானிருந்த பேரூந்திற்குளிருந்து முன்னிறுத்தப்பட்ட பேரூந்தைக் கண்ட மூவர் – கிளர்ச்சியுடன் இதிலிருந்து வேகமாக இறங்கி அதற்குள் பாய்ந்தார்கள். யாரின் வருகையையும் எதிர்பாராத 255 சாதாரணமாகக் கிளம்பியது. இதனை அவதானித்த நடத்துனர்,  இன்னொரு முறை இறுதிக் கூவலை விடுத்தார். எப்போதும் போல அது யாரின் காதுகளையும் சேர்ந்துவிடாமல் கிளம்பிய 255 இன் சத்தத்தில் மறைந்துபோனது. எங்கள் மூவருடன் அந்த எந்திர வாகனம் கிளம்பியது.
 
இது என்னைச் சுற்றியிருந்த எல்லோருக்கும் சாதாரணமாகப்பட்டிருக்கலாம். எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் மீண்டும் எனது சுற்றத்தின் மீதான வெறுப்பை அதிகரித்தது. கம்பஸ் முடிந்து போகின்றபோது, அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் பெரிய பொருட்டல்ல. அந்தக்  குறுகிய காத்திருப்பு மூவருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. அவர்களின்  இயங்கு நிலைச் சூழலின் மீதான அக்கறையின்மை என்னைப் பாதித்தது. நானிருக்கும் பேரூந்தின் சாரதி மீதும் நடத்துனர் மீதும் உயிரற்று இயக்கிக்கொண்டிருக்கின்ற பேரூந்தின் மீதும் கவலை படர்ந்தது. என் சமூகத்தின் எளிமையான அலட்சியம் பல கேள்விகளை உண்டாக்கியது. மிகவும் இலகுவாக அற்ப காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கின்ற மனிதர்கள், சம்பவங்கள், இடங்கள், நினைவுகள் அனைத்தும் ஏதோ ஒரு இயங்கு நிலையின் பிரதான காரணிகளாக இருக்கும். அந்த அலற்சியம்  என்  உணர்தலைப் பெரிதும் சலசலப்பிற்கானதாக மாற்றிவிடுகிறது. இந்தச் சம்பவம்  கூடவே இன்னொன்றையும் நினைவுபடுத்தியது.
 
நதியா பெரேராவின் ” நீ உறங்கிய வேளை ” என்ற குறுந்திரைப்படத்தை கடந்த வருட மார்கழி மாத இரண்டாம் திகதி உலக மகளிர் உச்சி  மாநாட்டுத்  திரையிடல் பகுதியில் பார்த்தேன். சீன முதலீடுகளின் வருகை போருக்கு பின்னர் அதிகரித்துள்ளது – சுதேச முதலீடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை குறியீடாக உணர்த்துகின்றது. அதே போல சமீப காலமாக பாதைகள் நெடுகிலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நடமாட்டத்தை அதிகமாகக் காணக்கிடைக்கிறது. அதில் பெரும்பாண்மையானோர் சீனர்கள். அத்தோடு, சில கிழமைகளுக்கு முன்னர் வீதியோரத்தில் கைகளில் சீனக்குழந்தையை ஏந்தியபடி இலங்கைத் தாய் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்ததையும் அவதானித்தேன். அவளின் கண்கள் இனம் புரியாத மிரட்சியுடன் இன்னொரு பத்து ரூபாய்க்காக காத்திருந்தது. அந்தக் குழந்தை முகத்தில் எந்த சலனமும் இல்லை. 
 
இவையனைத்தும் அந்தக் கணப்பொழுதில் தோன்றிப் பயணம் முழுதும் ஆக்கிரமித்துவிட்டன.
 

நகரத்தின் குறிப்புகள் – 04

நகரத்தின் குறிப்புகள் நான்கினை எழுதுவதற்காக எடுக்கப்பட்ட குறிப்புகளைத் தொகுத்துள்ளேன். இந்தக் குறிப்புகளை நான் பேரூந்தில் பயணிக்கும் போதும் பேரூந்திற்க்காகக் காத்திருக்கும் போதும் மேலும் வேறு சில இடங்களிலுமிருந்து எடுத்திருக்கிறேன். ஒழுங்கமைக்கப்படாத குறிப்புகளை தொகுப்பது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் எல்லாத் தனிமனிதர்களிடமும் குறிப்புகள் நிறையக் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரினதும் தினசரி வாழ்க்கையே மிகவும் நல்ல குறிப்புக்கள். புதிதாக ஒவ்வொருவரிடமும் பேசும் போதும் ஏதாவது ஒரு புதிய விடயத்தைச் சுவீகரித்துக்கொள்கிறேன். அப்படித்தான் எல்லோரும். வெளிப்டையாகப் பேசக்கூடியவை, பேசமுடியாதவை என்று அவற்றைப் பகுத்துக்கொள்ளலாம். சரி – இப்படியாக கொட்டிக்கிடக்கின்ற குறிப்புகளை ஒழுங்குபடுத்துவது தான் கஷ்டமான வேலை. இதனாற் தான் எல்லோரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. என்னுடைய குறிப்புகளை ஒழுங்குபடுத்துவதில் பலமுறை தோற்றுப்போனேன். போய்க்கொண்டிருக்கிறேன். அருணா சாய்ராமின் தர்பார் கச்சேரிகளைக் கேட்டுப்பாருங்கள். என்னால் ஏன் அவரைப்போல எழுத்துக்களைக் கோர்வையாகக் கோர்க்கமுடியவில்லை என்று கவலைப்படுகிறேன். எனக்கென்னவோ எழுத்தாளர் ஒருத்தர் கட்டாயம் இசையினைக் கேட்டு ரசிக்கவேண்டும் என்றே தோன்றுகின்றது. லாவகமாக ஸ்வரங்களில் ஏற்றங்களையும் இறக்கங்களையும் கையாண்டு காதுகளையும் ஆன்மாவையும் கட்டிப்போடும் தந்திரம் இசைக்கு அதிகமாக இருக்கிறது.
 
நகரத்தின் குறிப்புகள் மூன்றைப் பற்றிய சில சோகக் குறிப்புகளைக் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன். இருபத்து மூன்று பேர்களால் முகப்புத்தகத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. எனது தளத்திலும் அதேயளவு தான். பேரூந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்து நகரத்தின் குறிப்புகள் மூன்றின் மோசமான நிலைமையை யோசித்துக்கொண்டு வீடுநோக்கி திரும்பினேன். மூன்றாவது குறிப்போடு நிறுத்திக்கொண்டாலும் கேட்பார் யாருமில்லை. இராசயனவியலில் ஊக்கி முன்னிலையில் மட்டும் தான் சில தாக்கங்கள் நிகழும் என்பதைப்போல – பேரூந்தில் யோசித்துக்கொண்டே கொளுத்தும் வெயிலில் 155 இல் வந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தமது சுற்றத்தைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஜோடி ஒன்று இடைவிடாது காதலில் குழைந்துகொண்டிருந்தார்கள். காதல் என்பது முடிவில்லாத குழைவின் ஆதியூற்று. தனியாக இருவருக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய விரட்டமுடியாத பிரம்மை. மொத்த சமூகத்திலிருந்து இருவரை தனிமைப்படுத்தி ஒவ்வொரு கணத்தையும் ஆராதிக்கவைக்கும். இத்தனை சொற்களின் உருவமாக ஒரு ஜோடி. முன்னால் வீதியில் விபத்தொன்று என்றாலும் வயோதிபர் ஒருத்தர் நிற்க முடியாமல் நின்றாலும் இன்னமும் எத்தனை துன்பம் சூழ்ந்தாலும் அவர்கள் ஆராதித்துக்கொண்டே இருப்பார்கள்.  
 
எனக்குள் பல வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வாழ்க்கை போதவில்லை. ஒரே பிறப்பில் நான் விரும்பும் வாழ்க்கை அத்தனையையும் வாழ்ந்து தீர்த்துவிட முடியாது. இந்த வாழ்க்கை போதாமையின் குறியீடு. இயலாமையின் ஆக்கிரமிப்பு. பெரும்பாலானவர்களால் அவர்கள் விரும்பும் ஒரேயொரு வாழ்க்கையைக் கூட வாழ்ந்து தீர்த்துவிட முடியவில்லை. அப்படியிருக்க நான் விரும்பும் அசாத்திய வாழ்க்கைகளை எழுத்துக்கள் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போதாமையாலும் இயலாமையாலும் நிறைந்து போன வாழ்க்கைக்கு சமாந்தரமாக ஒவ்வொரு வாழ்க்கையையும் புனைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நிசப்தத்திற்குள் சஞ்சாரம் செய்கிறேன். இருத்தலின் பெருவெளிக்குள் நுழைகிறேன். உலக இன்பங்கள் அனைத்தையும் வாழ்ந்து தீர்க்கிறேன். புனைவுலகத்தை ஆராதிக்கிறேன். ஆக இப்போது நகரத்தின் குறிப்புகள் நான்கினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
 
பெரும்பாலான வேளைகளில் சிங்களப் பாட்டுகளைக் கேட்கும் போது உச்சக் கோபம் அடைவேன். கேட்பொறியினை மறந்து பேரூந்தில் ஏறினால் அதோகெதிதான். சிங்களவர்களின் அநேகமானோர் மிகவும் அழகானவர்கள். ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்பதனால் என்னை இலகுவாகக் கவர்ந்துவிடுவார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற ஹிந்தி நாடக நடிகைகளை விட சிங்களப் பெண்கள் அழகானவர்கள். எனது சிங்கள நண்பர்களுடன் இரண்டு நீண்ட பயணங்களைச் செய்திருக்கிறேன். பயணங்களின் போது மேலே ரபானைக் கொண்ட  நீண்ட குழலின் ஒரு பக்கம் கம்பிகளால் இழுக்கப்பட்ட இசைக்கருவி ஒன்றி தட்டிப் பைலா பாடினார்கள். குதூகலத்துடன் பைலை சேரும்போது துடிப்பு இன்னும் அதிகரிக்கும். என்னிடம் தமிழில் பைலா பாடச்சொன்னார்கள். எதைப் பாடுவது? சிங்களவர்களிடம் பைலா என்ற ஒரே ஒரு இசை வடிவத்தைத் தவிர கேட்டு ரசிக்குமளவு வேறெந்த இசை வடிவமும் கிடையாது. ” சமணலயா ” என்று தொடங்குகின்ற பாடல் ஓரளவு ரசிக்கக் கூடியமட்டிலிருக்கும். இதைத்தான் சிங்களவர்களின் சுதேச இசை வடிவம் எனப்போகிறீர்களா? அவர்களின் தோற்றத்திற்கும் ரசனைக்கும் அணுவளவு கூட சம்பந்தமில்லை. அண்மையில் தமிழில் பைலா ஒன்றை  ரசித்தேன். பைலா என்றவுடன் டொங்கு டொங்கு என்ற சந்தத்தில் கத்துவது மட்டுமல்ல. இஷா யோக மையத்தில் 2013 ஆம் ஆண்டு அருணா சாய்ராம் பாடிய “மாடு மேய்க்கும் கண்ணே” என்ற தமிழ் பைலாவைக் கேட்டுப்பாருங்கள். பேரூந்தில் ஏறி அத்தனை கத்தலுக்கும் கதறலுக்கும் மத்தியில் அமைதியாகத் தியான நிலையில் இருக்க நான் ஒன்றும் சத்குரு அல்ல. சாதாரண மனிதன்.
 
இதை எழுதும் போது இன்னொரு நிகழ்வும் ஞாபகத்திற்குள் வருகின்றது. மலை நகரத்திலிருந்து சொந்த நகரத்திற்கு பேரூந்தில் வந்துகொண்டிருந்தேன். கூடவே சித்தாவுமிருந்தார். ஏறிப் பத்து நிமிடத்தில் பிக்குவின் போதனைகளைப் போடத்தொடங்கினார்கள். மூன்று மணித்தியாலம் அளவில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டிய கொடுமை. இடையில் காசு போனாலும் பரவாயில்லை வேறு பேரூந்தில் ஏறிவிடுவோமோ என்றும் நினைத்தேன். சித்தா இல்லாவிட்டால் கட்டாயம் ஏறியிருப்பேன்.
 
இதை எனது அவதானம் என்றுகூடச் சொல்லலாம். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். எனது தினசரிப் பிரயாணம் நீண்ட நேரத்தை எடுக்கும் என்பதனால் குளிரூட்டப்பட்ட சிறிய ரக பேரூந்தில் பயணிப்பது அதிகம். இயலாத கட்டத்தில் சாதாரண பேருந்துகளிலும் பயணிப்பேன். குளிரூட்டப்பட்ட பேரூந்தின் நடத்துனர் என்னிடம் இயங்குகின்ற விதமும் சாதாரண பேரூந்தின் நடத்துனர் என்னிடம் நடந்துகொள்ளும் விதமும் வித்தியாசமானவை. மேலே தேவை கருதி நான் எனப் பாவிக்கிறேன் – பயணிகள் என்றும் வரலாம். குளிரூட்டப்பட்ட பேரூந்தின் ஓட்டுநர் மிகவும் குளிர்மையாக கையாளுவார். பேச்சிலும் நடத்தையிலும் அமைதியும் நிதானமுமிருக்கும். அதே போல எரிச்சற்படமாட்டார். காசுத் தாள்களை நேர்த்தியாக அடுக்கிவைத்தத்திருப்பர். மிகுதிப்பணம் உடனே இல்லை என்றால் பண்பாகக் கூறி மறக்காமல் தந்துவிடுவார். சாதாரண பேருந்துகளின் நடத்துனர்கள் பெரும்பாலும் இவர்களுக்கு நேரெதிர். மீதிப்பணத்தை நாங்களாகக் கேட்டாலன்றிக் கிடைக்காது. ஒரு வேளை சாதாரண பேருந்துகளை வாட்டுகின்ற உஷ்ணம் ஒரு காரணமாகவிருக்கலாம். சனநெருக்கடிக்குள் லாவகமாகப் புகுந்து எல்லோரிடமும் காசு வாங்குவது கஷ்டமான காரியம். ஏறுபவர் இறங்குபவர் என்று இருவரையும் கண்காணிக்கவேண்டும். கொஞ்ச நெருக்கடியான கூட்டம் என்றாலே போதும் நடத்துனர் நிதானமிழக்க. குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் நெருக்கம் என்பது அரிதான ஒன்று. அதனால் நிதானமாக டிக்கட்டுகளை கொடுக்கமுடியும். எல்லா நிறுத்தங்களில் நிற்காது. வேகாமகப் பறந்துவிடும். இப்படியான சில காரணங்களால் எனக்கு குளிரூட்டப்பட்ட பேரூந்துகளையும் அவற்றின் நடத்துனர்களையும் இயல்பாகப் பிடித்துப்போகிறது.
 
255 பற்றி சொல்லியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பயணம் தான். இந்தப் பயணம் பழகிப்போனால்  உலகத்தில் எந்த நெருக்கடியான பேருந்துகளிலும் சாதாரணமாகப் பயணித்துவிடலாம். இனி ஏற்ற இடமில்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகும் நடத்துனர் ” இஸ்ஸர யண்டகோ  மஹத்தையா ” என்று சத்தமிட்டு எங்காவது சிறிய இடம் தெரிகிறதா என்று பார்த்துத்தான் பேரூந்தை நகர்த்துவார்கள். எவ்வளவு சுத்தமாக குளித்து வந்தாலும் நேர்த்தியாக உடைகளை அழுத்தி வந்தாலும் இறங்கும் போது கந்தல். அத்தனை நெருக்கமான கூட்டத்திலும் ஈ ஒன்று நகர்வதைப்போல நடத்துனர் நுழைந்து வந்து டிக்கட் தந்துவிடுவார். பொதுவாக நடத்துனர்கள் மெல்லியதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 255 எவ்வளவு பிரசித்த பெற்ற பேரூந்து என்றால் – பல்கலைக்கழத்தில் சிறுகுறிப்பு வரைய சில தலைப்புக்கள் தரப்பட்டன. அதிலொன்று 255 பேரூந்தில் அனுபவம். 255 என்றாலே உடம்பு வியர்க்கத் தொடங்கிவிடும்.
 
நான்கிற்கான குறிப்புகளைத் தருவதாகக் கூறிவிட்டு முழுவதையும் எழுதிவிட்டானே என்று யோசிக்கிறீர்களா?
 
அருணா சாய்ராமின் ” மாடு மேய்க்கும் கண்ணே ”

நகரத்தின் குறிப்புகள் – 03

நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். முன்னால் கூனியபடி தலைக்கு முக்காடு மாதிரி ஒன்றால் மூடி சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார்.
பயணங்களின் போது நான் அருகிலிருப்பவர்களோடு பேசுவது மிகவும் குறைவு. தெரிந்தவர்கள் வந்தாலன்றி பேசுவதே இல்லை என்றுவிடலாம். பெரும்பாலும் இரண்டு நகரங்களுக்குத் தான் அதிகமான பயணங்களைச் செய்துள்ளேன். இரண்டும் எதிர் எதிர்த் திசையில் உள்ளவை. முதலாவது நகரத்திற்கு அதிகாலையில் போய் நடு வெயிலிற்கு திரும்பி விடுவேன். இரண்டு மூன்று மாதங்களை தொடர்ச்சியாக இதே போக்கினைப் பின்பற்றினேன். அதிகாலையில் நித்திரைக் குறையில் பேரூந்தில் ஏறுவதால் மிகுதி நித்திரையை பேருந்திலேயே முடித்துவிடுவேன். இதன் காரணமாக யாரிடமும் காலையில் பேசுவது கிடையாது. மத்தியானமும் இதே பிரச்சனை தான். கொளுத்துகின்ற வெயிலில் பேரூந்தில் ஏறி இரண்டரை மணித்தியாலங்கள் இலகுவாகக் கடக்க ஒரே வழி நித்திரை தான். இதனால் முதலாவது நகரத்தின் பேரூந்துப் பயணங்களில் எந்த நிகழ்வுகளும் மனதில் தங்கியதே கிடையாது. அப்படி ஏதாவது ஒன்றிரண்டு ஞாபகம் இருக்கும் என்றால் அது – நடத்துனர் பயணச் சீட்டுக்காக ஆழ்ந்த நித்திரையை குழப்பிய சந்தர்ப்பங்களாகவே இருக்கும்.
 
இரண்டாவது நகரத்தின் பயணங்களை இருட்டிலேயே தொடங்கி இருட்டிலேயே முடிந்து விடும். இரவு பதினொன்றிக்கு ஏறினால் காலை நான்கு முப்பத்திற்க்கு இறக்கிவிடுவார்கள். நினைவில் நிற்கக் கூடிய சம்பவங்கள் இருந்தாலும் மனிதர்கள் யாருடனுமே பேசிக்கொள்ளவில்லை. நினைவில் அதிகமாக நிற்கிற ஒரே விடயம் – இஞ்சி தேத்தண்ணீர். நடு ராத்திரி ஒன்று முப்பது மணியளவில் பேரூந்து கடை ஒன்றின் அருகில் நிறுத்தப்பட்டு சாப்பிடவும் மலசலம் கழிக்கவும் நிறுத்துவார்கள். அங்கே இருபது ரூபாய்க்கு இஞ்சி தேத்தண்ணீர் நல்ல சுவையாக இருக்கும். நடு ராத்திரிக்கு சூடான தீத்தண்ணீர் அருமையான பொருத்தம். இரண்டாவது நகரத்தில் நீண்ட நாட்கள் தங்கிவிடுவதால் அங்கிருந்து திரும்புவதும் இதே போன்ற ஒரு இருட்டிலேயே நடந்துமுடிந்துவிடுகிறது. எஸ் ராமகிருஷ்ணன் எதிலோ எழுதியது போன்ற ஒரு ஞாபகம் இருக்கிறது. சரியாக அதே வசனங்கள் இல்லா விட்டாலும் இதே கருத்தையே தரும். ” நான் பயணங்களின் போது மனிதர்களுடன் நட்புக்கொள்வது இல்லை. குறுகிய நேர இடைவெளியில் முடிந்து விடுகிற நட்புக்கள் வருத்தத்தை தருவன.” ஆனால் அவர் சொல்வதைப்போல நான் கொள்கை கோட்பாடுகளுடன் பயணங்களில் மனிதர்களை தவிர்த்தது கிடையாது.
இப்படியிருக்க நகரத்தின் குறிப்புகள் 03 இன் ஆரம்பத்தில் வருகின்ற அம்மா எங்கிருந்து வந்தார் என்ற கேள்வியுடன் தொடர்கிறேன். இரண்டாவது நகரத்தில் – இந்தக் கணத்திலிருந்து “நகரம்” என்றே அழைப்போம் – நான் இருக்கின்ற வீட்டிலிருந்து தினமும் போகவேண்டிய தூரம் 21 கிலோ மீட்டர். வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கி 1 கிலோமீட்டர் நடந்து பதின் மூன்று ரூபாய்க்கு முதலாவது பேரூந்து எடுத்து பின்னர் இறங்கி மீண்டும் 500 மீட்டர் அளவு தூரம் நடந்து முப்பத்தைந்து ரூபாய்க்கு இரண்டாவது பேரூந்து எடுத்து நீண்ட நேரம் – கிட்டத் தட்ட ஒன்றரை மணித்தியாலம் பயணம் செய்து இன்னொரு சந்தியில் இறங்கி மூன்றாவது பேரூந்து 10 ரூபாய்க்கு எடுத்து போய்ச் சேர்வேன். ஒரு நாளில் இரண்டு முறை இதே மாதிரியாக பயணம் செய்யவேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் போகவும் வரவும் செலவாகிவிடும். இனி வருகின்ற காலங்களில் இப்படியான சாத்தியம் மிகவும் குறைவாகிவிடும். ஏனென்றால் தினமும் போகவேண்டிய இடத்திற்கு மிகவும் அருகிலேயே வீடுபார்த்து போய்ச் சேர்ந்துவிடுவேன். அதனால்த் தான் நகரத்தின் குறிப்புகள் 03 – இந்த தினமும் நடக்கின்ற நான்கு மணித்தியாலப் பயணத்தைப் பற்றியதாக இருக்கப்போகிறது. முக்கியமாக அதில் சந்தித்த மனிதர்களைப் பற்றியது.
 
வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தேன். பின்னாலிருந்து ஒரு கை என்னைத் தட்டியது. அப்போது பேரூந்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அல்லது வாழ்வது போல தோற்றமளிக்கின்ற இடங்களினூடாக நகர்ந்துகொண்டிருந்தது. என்னைத் தமிழர் என்று எப்படி அடையாளம் கண்டுகொண்டார் என்பதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால்த் தமிழில் ,”ஒரு அம்பது ரூபா இருக்கா? டிக்கெட் எடுக்க காசில்லை.” என்றார். பார்க்க எழுபது மதிக்கத்தக்கவர். முன்னால் கூனிப்போய் தலைக்கு முக்காடிட்டிருந்தார். ஆனால் முஸ்லிம் இல்லை.
நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். தொடர்ந்து போகப் பணமில்லைப் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
 
எனக்கு கிடைக்கின்ற இந்த நான்கு மணித்தியாலங்களைப் பெரும்பாலும் வாசிப்பதற்கும் இசையை கேட்பதற்கும் பயன்படுத்திக்கொள்வேன். எப்போதுமே எனது பையுக்குள் ஒரு புத்தகம் இருக்கும். கனமான புத்தகங்களை எடுத்துச்செல்லமாட்டேன். மெல்லிய புத்தகங்கள் தான. கூடவே இயர் போன்களும். பயணங்களின் போது வாசிப்பிற்கு சிறந்தது எது என்று தெரியவில்லை. சிறிய புத்தகங்கள் எதுவாயினும் அதை எடுத்துக்கொண்டு போய்விடுவேன். முதன் முதலாக வசித்த புத்தகம் யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடம். பின்னர் பிரமிள் என்று நீண்டு செல்லுகிறது. இதுவரைக்கும் பயணங்களின் போது – நான் அவதானித்ததன் படி ஒரே ஒருத்தர் மட்டும் தான் புத்தகம் ஒன்றினை வாசித்துகொண்டிருந்தார். சுற்றி நன்றாக உறையிடப்பட்ட சிங்களப்புத்தகம். மூக்குக் கண்ணாடி அணிந்தவாறே என்னை நோக்கிப் புன்னகைத்துவிட்டு யன்னலோரம் தள்ளி இருந்தார். வயது அறுபதைத் தாண்டியே இருக்கவேண்டும். முகம், கழுத்து, கைகள் எல்லாம் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அப்போது வைத்திருந்த புத்தகத்தை விடியவே வசித்து முடித்து விட்டபடியால் மீண்டும் அதை எடுத்து புரட்டுவது எனக்கு செயற்கையாக இருக்கும் எனத் தோன்றியது.அந்தப் பெண்மணியே நான் பயணத்தில் சந்தித்த முதலும் கடைசியுமான வாசகர்.
 
சரி, அந்த அம்மா இவை எதையாவது வைத்துத் தான் என்னைத் தமிழ் என்று அடையாளம் கண்டுகொண்டிருப்பாரோ என்றால்- அதுதான் இல்லை. அன்று இசை தான் கேட்டுக்கொண்டிருந்தேன். சந்தோசமாக வாங்கிக் கொண்ட அந்த அம்மா, அடுத்த தரிப்பிலேயே இறங்கி விட்டார். ஒரு வேளை எனது நகரத்தின் குறிப்புகள் இரண்டை வாசித்த கோபத்தில் யாரேனும் ஒரு பிச்சைக்கார அம்மா என்னைப் பழிவாங்கத்தான் இப்படி சதி செய்திருப்பாரோ? இருக்கவே இருக்காது. அதை வாசித்தவர்களின் எண்ணிக்கை தான் அறுபத்து ஏழு ஆயிற்றே.
 
கூறியது போலவே மெல்லிய புத்தகங்களைத் தான் எடுத்துச் செல்வேன். விதிவிலக்காவதுமுண்டு. இரவு வாசித்து முடியும் தறுவாயில்களில் நிறுத்தப்பட்ட புத்தகங்களைக் கொண்டுபோய் வாசிப்பதும் உண்டு. Umberto Eco இன் The Prague Cemetery என்ற நாவலை இப்படித்தான் வசித்து முடித்தேன். பின்னேரம் மணி இரண்டு அல்லது மூன்று தான் வரும். யன்னலோர இருக்கையில் இருந்து நாவலை விரித்து கைத்தொலைபேசியில் அகராதியையும் திறந்து வைத்துக்கொண்டு ஆரம்பித்தேன். பத்து பதினைந்து நிமிடங்களின் பின்னர் எனது அருகில் மத்திம வயதினையுடைய ஒருத்தர் வந்திருந்தார். நான் வாசிப்பதை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். இடையிலே ஒருமுறை திரும்பி சிரித்தேன். பதிலுக்கு அவரும் சிரித்தார். நான் இறங்கும் புகைவண்டி நிலையத்திற்கே அவரும் பயணச்சீட்டினை எடுத்துக் கொண்டதால் இனிவருகின்ற ஒரு மணித்தியாலமும் எமக்கருகில் இவர்தான் என்று முடிவாகி விட்டது. அவர் சிங்களத்தில் ஏதோ கேட்டார். எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் – இனி உரையாடல் ஆங்கிலத்திலேயே தொடரும்.
“its ok. do you read novels? ”
” yes ” a deep silence prevails.
and gain he started,
“are you from kerala? ”
” no, i am from ……… , tamil ” , he might be confused by my color and looks.
“oh! what are you doing? ”
” i am …………………in …………….”
“isnt it? not every one in that field read this kind of books. ”
” may be you are correct, but in tamil there is a writer called Sujatha, he is also ……………… , and he also wrote many novels , short stories, columns. he is a significant figure in tamil literature ”
” oh really. its exiting. ”
and again a deep silence between us. and again he didn’t ask any question.
இதை ஏன் இவ்வளவு விவரமாக எழுதவேண்டிய தேவை வந்தது என்றால் – என் பயணங்களில் இவரைத்தவிர வேறு யாருமே என்னிடம் புத்தகங்கள் பற்றிப் பேசியதே கிடையாது.இப்போது தான் எனக்குள் அந்தக் கேள்வி உதித்திருக்கிறது. நான் அங்கே நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றைப் பார்த்துவிட்டு கோபமாக –
” புத்தக கண்காட்சியின் எல்லா இடமும் சிங்கள புத்தகங்கள் நிறைந்து கிடந்தன. சிங்கள புத்தகங்களில் முழுமையானவையும் இலங்கையின் அச்சு துறையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டவை. சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சியும் விஸ்தரிப்பும் மேய் சிலிர்க்க வைத்தது. புனைவுகளும் அபுனைவுகளும் இந்த சிறிய தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தினரால் எழுதி குவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனிப்புத்தகம் என்றாலும் மக்கள் தொகையை விட அவர்களின் புத்தகங்கள் அதிகமானவையாகத் தான் இருக்கும். புத்தக வடிவமைப்பு சீரானதாக இருக்கின்றது. அட்டைப்படங்கள் அட்டைகள் காகிதங்கள் என்று எல்லாமுமே செய்நேர்த்தியுடன் இருக்கின்றது. அவர்களின் தனித்துவ இலக்கிய இருப்பிற்க்கான முயற்சியும் படைப்பூக்கமும் மேய்ச்சத்தக்கது. அதே நிலையில் எமது படைப்புக்கள்? ” என்று ……………புத்தக கண்காட்சி ………. என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். இதில் நான் கூறியிருப்பது போல பார்க்காமல் விட்டிருந்தாலும் ஒரு நாளுக்கு இருவர் கையில் புத்தகம் வைத்திருந்திருப்பார் என்று பார்த்தாலும் எத்தனையோ மனிதர்களை அல்லவா சந்தித்திருக்க வேண்டும்.
 
இந்தக் குறிப்புகள் முழுவதும் புத்தகங்களுடையே முடிந்து போய் விட்டது. ஆனால் இதைவிட ஞாபக அடுக்குகளில் பதிந்திருக்கின்ற சம்பவங்கள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவை நகரத்தின் குறிப்புகள் 04 ஆக வரலாம் – வராமலும் போகலாம்.ஆனால் உடனேயே நகரத்தின் குறிப்புகள் 03 ஐ எழுதத் தூண்டியது ஒரே விடயம் தான். எனது நகரத்தில் இருக்கும் போது பேருந்துகளை பாவிப்பதும் அரிது. வாழ்க்கையில் பத்து முறைக்கு குறைவாகத் தான் இருக்கும். பெரும்பாலும் துவிச்சக்கர வண்டி தான். இன்று சன நெரிசலோடு எதிரே வந்த பேரூந்தைக்கு இடத்தை விட்டு துவிச்சக்கர வண்டியை திருப்பும் போது தான் என் வாழ்க்கையில் முதன் முதலில் எனது நகரத்துக்குள்ளேயே ஓடுகின்ற பேரூந்தின் இலக்கத்தை அவதானித்தேன். அப்படிப் பார்க்கையில் 100 , 101 ,154, 168, 255, 255/1 என்பவை என் அனுபவங்களில் முக்கியமானவை தான்.
 
 

நகரத்தின் குறிப்புகள் – 02

சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. நித்திரையில் போது உடலின் உஷ்ணம் தாங்கமுடியாமல் இருக்கின்றது. உண்மையில் நித்திரை என்பதைவிட அயர்ந்த நிலை என்பதே சரியாக இருக்கும். முதுகின் பின்னாலிருந்து நெருப்புத் தணல்களை பற்றவைத்து பிடித்துக்கொண்டிருபோல உணர்வேன். இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு முறையும் இரண்டு மணிக்கு ஒரு முறையும் கிடப்புக்கொள்ளாமல் எழுந்து விடுகிறேன். அதன் பின்னர் நிலையை மாற்றியும் இடத்தை மாற்றியும் நித்திரைகொள்ள பெரும் முயற்சியை எடுக்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு இரவு  தான் இது. இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதிய நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசிக்கும் போது சமீபத்தில் பார்த்த குறும்படம் ஒன்று ஞாபகத்தில்  வருகின்றது.
 
Emilie Muller 1994ஆம் ஆண்டு Yvon Marciano இனால் இயக்கப்பட்ட குறும்படம். ஒரே தளத்தில் நகர்கின்ற காட்சி அமைப்பு மட்டுமே இருக்கும். நடிகைக்கான தேர்வு ஒன்றிற்கு செல்லுகின்ற பெண் ஒருவரிடம், தேர்வினை நடத்துகின்ற இயக்குனர் அவளின் கைப்பைக்குள் இருக்கின்ற பொருட்களைப் பற்றி விசாரிப்பதாக நகரும். ஒவ்வொன்றைப்பற்றியும் அவளும் விவரணம் அளித்துக்கொண்டிருப்பாள். தேர்வு முடிய அவளும் கிளம்பிவிடுவாள். மற்ற வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த இயக்குனர் திடீரென்று அவளின் கைப்பை எதிரிலிருக்கும் தாங்கியில் தொங்குவதைப்பார்த்துவிட்டு எதிரிலிருப்பவரிடம் அந்தப்பெண் தனது கைப்பையை வைத்துவிட்டு சென்றுவிட்டாள், அதனால் அவளை போய் நிறுத்துமாறு கூறுவார். அதற்கு மற்றவர் அது இங்கு வேலை செய்யும் பெண்ணொருத்தியினுடையது என்பதை உறுதிப்படுத்த – இயக்குனர் வெளியில் சென்ற அவளை நோக்கி ஓடுவதாக குறும்படம் முடியும்.
 
இப்படியான ஒரு பெண்ணின்  பார்வை தான் இந்த நகரத்தின் குறிப்புகள் போலத்  தெரிகின்றது. எங்கிருந்தோ வந்தவன் ஒருத்தன் நகரத்தின் மீதுள்ள வெறுப்பில் எழுதுவது தான் இந்த நகரத்தின் குறிப்பு போலத் தெரிகின்றது. முதுகு மெதுவாக எரியத்தொடங்குகின்றது. மணி இரண்டைத்தாண்டிக்கொண்டு போகின்றது. மெதுவாக இரவு முடிந்து பஸ்ஸில் ஏறிட்டேன். பாதங்கள் புகுந்துள்ள சப்பாத்துக்களின் கணத்தை  என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு யன்னலோர இருக்கையில் இருந்து நகரத்தின் சாலை ஓரங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறேன்.
 
இது 21/08/17 அன்று எழுதிய டயரியிலிருந்து கத்தரிக்கப்பட்டது.
 
-“…….முதன்முதலாக பார்ப்பது அல்ல இது. எல்லா இடங்களிலும் இவர்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் இப்போது மட்டும் வித்தியாசமாகத் தெரிகின்றனர். எங்கள் இடங்களிலுள்ள பிச்சைக்காரர்கள் எனக்கு வித்தியாசமாகவும் புறம்பாகவும் தெரிந்ததில்லை. அவர்களையும் தினமும் பார்த்தவன் தான். ஆனால் இந்த நகரத்தின் பிச்சைக்காரர்கள் கண்களை உறுத்துகிறார்கள். நவீன உடைகளும் ஆடம்பர வாகனங்களும் வானுயர வளர்ந்து நிற்கின்ற கட்டடங்களுக்கும் மத்தியில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கின்றது…….”
 
பிச்சைக்காரர்கள் என்னும் போது ஆநாகரீகமாகத் தெரிகின்றதா? அப்படித்தானே நானும் நீங்களும் பேசிக்கொள்கின்றோம். பேசும் போது தெரியாத அநாகரீகம் எழுதும்போது மட்டும் தெரிவது ஏன்? நகரத்தின் குறிப்பில் பிச்சைக்காரர்கள் மிகவும் எளிமையாகப்  புகுந்து விடுகிறார்கள்.
 
21/08/17 டயரியில் இருந்து
 
-”……மிகவும் பிரசித்தி பெற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றின் முன்னர் உருளும் நாற்காலியில் எழுபது வயது மதிக்கத்தக்க வயதிபரையும் அவரின் அருகில் மனைவியையும் பார்க்கிறேன். இன்று காலை தான் அந்த காட்சியினைப் பார்த்தேன். ஒரு முழு பகலுக்குள் காட்சி மங்கிவிட்டது. அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றோ எப்படி இருந்தார்கள் என்றோ சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் அத்தனை சூழலிலும் புறம்பாகத் தெரிந்தார்கள்……”
 
அதனாலேயே தான் நாட்குறிப்பின் பக்கம் ஒன்றை நிரப்பியிருந்தார்கள். தொடர்ந்து பயணித்த நேரங்களை அவர்களை காணக்கிடைக்கவில்லை. அவர்கள் இருவரையும் அந்த நாளின் பின்னர் இன்று தான் இப்போது தான் உங்களுக்குச் சொல்லும் போது ஞாபகம் வருகிறது. அவர்களின் பின்னர் நான் கடந்து வந்த பிச்சைக்காரர்கள் பற்றி எழுதிய நாட்குறிப்புக்கள் இவை.
 
22/08/17
 
-”……..அவர்களைக் காணவில்லை. இன்னொரு வர்த்தக நிலையத்தின் முன்போ பிரார்த்தனை செய்கின்ற இடங்களின் முன்போ சென்றிருக்கக் கூடும். அதிக தூரம் அவர்களால் சென்றிருக்க முடியாது. தனது கணவனை உருளும் நாற்காலியில் இருத்திக்கொண்டு வயோதிபப்  பெண்ணால் எவ்வளவு தூரம் நடந்துவிட முடியும். என் கண்களுக்குப்  புலப்படாத தெரு ஒன்றில் இயலாத கணவனை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டுக்கொண்டிருப்பாள். இன்று இன்னொரு வயதானவரை உருளும் நாற்காலி ஒன்றில்  கண்டேன். நாற்காலிக்கு குறுக்கே தனது ஊன்றுகோலை வைத்து அதில் தனது கால்கள் இரண்டையும் கிடத்தியிருந்தார். கால்கள் இரண்டிலும் பாதங்கள் அற்றுப்போயிருந்தன. எஞ்சியிருந்த கால்களில் புண்ணும் சிதளுமாக பரவியிருந்தது. அவர் பிச்சை எடுப்பது போல தெரியவில்லை. ஆனால் அவரைச்சுற்றி சில்லறைகள் மட்டும் இருந்தன. இலையான்கள் புண்களை சுற்றிக்கொண்டிருந்தன. அவரால் தனது கால்களை அணிந்திருந்த சறத்தால் மறைத்திருக்க முடியும். ஏனோ அவர் செய்யவில்லை. இன்றைய நாள் முழுவதும் அவரின் சீழ் வடிகின்ற கால்கள் தான் ஞாபகத்தில் வருகின்றன. அவர் அத்தனை இயலாமைக்குள்ளும் ஏன் தற்கொலை பண்ணிவிடவில்லை. நானாக இருந்தால் தற்கொலை பண்ணியிருப்பேன். மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமான வீதி ஒன்றில் என்னால் இந்தக்கோலத்தில் இருக்க முடியாது……”
 
28/08/17
 
-”….எத்தனையோ பிச்சைக்காரர்களை கடந்து விட்டேன். ஆனால் அவள் நினைவை விட்டு போவதாகத் தெரியவில்லை. இந்தக்குறிப்பில் எழுதுவதன் மூலமாவது போகட்டும். பஸ் கடற்கரை அருகில் செல்லுகின்ற அகலமான வீதியின் முதல் தரிப்பிடத்தில் நிற்கின்றது. அவளும் இரண்டு வயது குழந்தையும் குறுகிய நேரம் நிறுத்தியிருந்த பஸ்ஸின் முன் இருக்கையிலிருந்து வேகமாக கைகளை ஜன்னலருகே நீட்டியபடி ஓடி வருகின்றார்கள். அவள் தான் கைகளை நீட்டாமல் குழந்தையின் கைகளை விரித்து ஜன்னலோரமாக நீட்டுகின்றாள். முன்னேயிருந்து இருபது ரூபாயும் சில்லறைகளை சில கை விசுக்கல்களும் கிடைக்கின்றது. தனது வாயிலிருந்து வெற்றிலை சிவப்பாக வடிய ஒவ்வொருவராக கடந்து என்னிடம் வருகின்றாள். நான் சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து குடுக்க, அவசரமாக எனக்கு பின் இருக்கைக்கு நகர்கிறாள். அவளின் கையிலிருந்த குழந்தை அழ – அவள் குழந்தையின் கைகளை மடக்கி வேகமாக உருவிட்டு மீண்டும் நீட்டவும் -பின் இருக்கையிலிருந்து பெண்மணி ஐந்து ரூபாயை நீட்டிப்  போடவும் -பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. அந்த ஐந்து ரூபாய் அந்தரத்தில் மிதந்து சிறிது தூரம் தள்ளி விழுந்தது. நான் கிளம்பிய பஸ்ஸிலிருந்து பின்னால் திரும்பி பார்க்க அவள் தனது குழந்தையை தரிப்பிடத்தில் இருத்திவிட்டு அந்த உருண்டு போன ஐந்து ரூபாயை எடுக்க ஓடிக்கொண்டிருந்தாள்…..”  
 
04/10/17
 
-”…..மீண்டும் நிறைய காலத்திற்கு பின்னர் ஒரு பிச்சைக்காரியினைப் பற்றி எழுதுகிறேன். நான் அப்போது கண்ணாடியைத் திறந்திருக்கவில்லை. அவள் கையில் ஐந்தாறு விளையாட்டு பொம்மைகள் பொருத்திய கீடேக்குகள் வைத்திருந்தாள். அதில் ஒன்றை வாங்குமாறு கைகளால் சைகை செய்துகொண்டிருந்தாள். உச்சி எரிகின்ற வெயிலில் அவள் வயிற்றில் குழந்தையுடன்  தலையை முக்காடிட்டுகொண்டு நின்றாள். அப்படி எத்தனையோ பெயரினைப் பார்த்திருக்கிறேன். நான் வேண்டாம் என்று சைகை செய்தேன். அவள் மீண்டும் பொம்மைகளைத்  தூக்கிகாட்டினாள். பின்னர் மெதுவாக கண்ணாடியைத் தட்டி இறங்குமாறு வேண்டினாள். இறங்கிவிட தேநீர் குடிக்க காசு கேட்டாள். கொடுத்து விட்டு கண்ணாடியினை மூடிவிட்டேன். அப்போது எனக்கு அந்த இருபது ரூபாய் பெரிதாகத்தெரியவில்லை. அவளும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தத் தாயினூடு வளரப்போகின்ற குழந்தை தான் என்னை உறுத்துகிறது. அன்றொருநாள் கண்ட அந்தக் குழந்தை போலத்தானே பஸ் தரிப்பிலோ அல்லது வேறொரு இடத்திலோ………..”
 
12/11/17
 
-”……..மீணடும் மீண்டும் பிச்சைக்காரர்களைப் பற்றிப் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் ஏதோ ஒரு வகையில் எனது நாளந்தத்திற்குள் வந்து போகின்றார்கள். எப்போதும் பயணத்தின் போது அவர்களைக் கடந்தே செல்கிறேன். எல்லாப் பிச்சைக்காரர்களும் என்னை ஈர்ப்பதில்லை. எவராவது ஓரிருவர் குறுகிய கால நினைவு ஒன்றை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த நினைவுகள் இன்னொரு பிச்சைக்காரரைப் பார்க்கும் போது மீட்டப்படுகிறது அல்லது மீட்டப்படாமலும் போகின்றது. அவர்களைப் பற்றி நெடுநேரம் யோசித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. எப்படி என்னால் எனது வாழ்க்கையைப் பற்றி பெரிதான மதிப்பீடுகள் இல்லாமல் கொண்டு நடந்த முடிகின்றதோ அதே போல அவர்களாலும் மதிப்பீடுகளுடனோ அல்லது எந்த மதிப்பீடுகளும் இல்லாமலோ வாழ்க்கையை வாழமுடிகின்றது . அந்தக் கால்கள் அழுகிய பிச்சைக்காரன் ஏன் தற்கொலை பண்ண வேண்டும்? அவனை விட அதிக பிரச்சனைகளுடன் சாதாரணமாக கண்ணுக்கு தெரிவோர் எத்தனை பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்…….”
 
நீங்களும் நானும் பிரச்சனைகள் இல்லாமலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க ஏன் பிச்சைக்காரர்கள் மட்டும் என் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்கள். இப்போதெல்லாம் நான் குளிரூட்டப்பட்ட பஸ்களிலேயே பயணம் செய்கிறேன். ஜன்னல் திரையை இழுத்துமூடிவிட்டால் பாதைகளும் தெரியாது பாதையோரங்களில் நிற்கின்ற பிச்சைக்காரர்களையும் தெரியாது. இனி ஒரு முறை எனது நாட்குறிப்பில் அவர்களைப்பற்றிய சேதி எதுவும் இருக்காது.
 
இன்று வேண்டும் என்றே ஜன்னலினூடாக சாலையோரத்தைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். இப்போது பிச்சைக்காரர்கள் என் பார்வைக்கு புறம்பாகவும் விசித்திரமாகவும் தெரியமாட்டார். அவர்களைத்தான் நான், என்னைப்போல சாதாரண மனிதர்களாக நினைவில் நிறுத்திவிட்டேன். இன்னமும் யாரும் எங்களுக்கு பிச்சைக்காரர்களாகத் தெரியவில்லை. உண்ணிப்பாக கவனிக்கிறேன். அதோ அந்த பிரதான தெருவிலிருந்து பிரிந்து செல்கின்ற கிளைத்தெரு ஒன்றின் மூலையில்……….
 

நகரத்தின் குறிப்புகள் – 01

நகரம் ஒன்றினைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவது எளிதான விடயம் ஒன்றல்ல. மனிதனின் ஆதி முதல் – ஒவ்வொருவரும் தங்கள் நகரங்களைப் பற்றியும் தாங்கள் வாழ்ந்த நகரங்கள் பற்றியும் வாழ விரும்புகின்ற நகரங்கள் பற்றியும் கேட்டு அறிந்து கொண்ட நகரங்கள் பற்றியும் அவர்களே தமக்குள்ள உருவாக்கிக்கொண்ட நகரங்கள் பற்றியும் பேசி, எழுதி விவாதித்திருக்கிறார்கள். இவற்றில் ஏதோ ஒரு வகை நகரத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன். இந்த நகரம் பற்றிச் சொல்ல முதல் – இன்னொரு நகரத்தைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்கள்.
-“……..ட கட்டடங்களுக்கு இடையே அந்த நதி ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர்தான் அந்த நதியின் பெயரை யூசோ என்றறிந்தேன். தெளிந்த வெள்ளை நீரினூடாக நதியின் ஆழத்திலிருக்கின்ற கற்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. அவை செயற்கையாக அங்கே பதிக்கப்பட்டவை. அவற்றின் இருப்பில் நேர்த்தியான ஒழுங்கின்மை இருக்கிறது. நீருக்குள் நிறைய வண்ணங்களில் மீன்கள் நீந்திக்கொண்டு திரியும். அவை எல்லாமே ஒரே இனம். பார்ப்பதற்கு மின்சாரத்தில் இயங்குகின்ற மீன்கள் போலவே இருக்கும். ஆனால் அவை உயிருள்ளவை.எல்லாம் ஒன்றாக தமது உடலை வளைத்து உன்னோக்கி உதைப்பது போல நீந்தும். கொத்துக் கொத்தாக ஆற்றில் பரவிக்காணப்படும்………”
 
இது புகழ்பெற்ற லத்தின் அமெரிக்கா எழுத்தாளர் ஒருவரின் பிரசுரிக்கப்படாத குறிப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். இவற்றை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனது நகரத்தை ஊடறுத்து செல்லுகின்ற ஆறுகள் ஞாபகத்திற்கு வந்தன. அதில் ஒன்றைப்பற்றித்தான் இப்போது எழுதப்போகிறேன்.
-“……..பாலத்தின் மீது நின்றுகொண்டு கீழே ஓடுகின்ற ஆற்றைப் பார்க்கிறேன். எந்த சலசலப்பும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது . ஆற்றின் வேகத்தைப்பற்றி ஊகிக்க முடியவில்லை. அகன்ற ஆறு அது. ஒழுங்கற்ற கரைகளைக்கொண்டது. கரையின் ஓரங்களில் பொலிதீன் பைகளும் உணவுக்குப்பைகளும். அவை குமியலாக ஓரங்கள் எங்கும் பரவிக்கிடந்தன. ஒவ்வொரு குமியாலும் மெதுவாக அதிரகரிக்கின்ற குப்பைச்சுமைகள் ஆற்றுக்குள் விழுத்திக்கொண்டிருந்தன. ஆறு -நகரத்தின் பெரிய கட்டடங்களின் பின்பக்கமாக இருக்கிறபடியால் – கட்டடங்களின் குப்பைகளை எளிதாக அகற்றிவிடமுடிகிறது. ஆற்றின் கரைகளுக்குப் பல கிளைகளிலிருந்து கழிவுநீர் திசைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழாய்க்குள்ளாகவுமிருந்து ஆற்றுக்குள் வீழ்கின்ற கழிவு நீர் கருமையான திட்டுக்களாக வழிந்துகொண்டிருந்தது. ஆற்றின் ஓட்டத்துடன் கலந்து ஆற்றின் ஒரு பகுதியாக மாறுகின்றன.ஆக இந்த ஆற்றின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு குழாய்க்குலிருந்து வெளியேறிய திண்மத்திட்டுத்தான். அதிலிருக்கின்ற கழிவு நீர்தான் இந்த ஆற்றை உருவாக்கியிருக்கிறது……..”
 
நீண்ட நாட்களுக்கு முன்னர் நண்பன் ஒருத்தன் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் ஒன்றின் பகுதியினை வாசிக்க அனுப்பியிருந்தான். அவனுக்கு நாவல் எழுத வரவேயில்லை. அவனால் நாவல் ஒன்றின் உருவாக்கம் பற்றிய சரியான புரிதல் இருக்கவில்லை. அவனின் மொழி பயங்கரமாக இருந்தது. வார்த்தைகளை ஒன்றிணைத்து வாக்கியம் ஒன்றினை எழுதுவதிலும், அவற்றை ஒன்றிணைத்து பந்தியாக்குவதிலும் நிறையப் பிழைகள் இருந்தன. இருந்தும் அந்தப்பகுதியில் உள்ளடக்கம் அபாரமானது. அது நகரம் ஒன்றின் ஆற்றங்கரைக் குடியிருப்புக்கள் பற்றியது. அவனின் மோசமான எழுத்துக்களால் சரியான முறையில் வசனங்களை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் அவை இவ்வாறு அமைந்திருக்கும்.
 
-“…….எங்களுக்கு அந்த நோய் பற்றி தெரிந்திருக்கவில்லை. தொட்டால் பரவுமா, நுளம்புகளால் பரவுமா, நீரின் மூலம் பரவுமா, காற்றிலே பரவுமா அல்லது உணவுகள் மூலம் பரவுமா என்று எந்த அறிவும் இல்லை. ஆனால் பரவியது. மிகவும் வேகமாக. இங்கே சாதாரணமாக எல்லோரும் கீழ் மட்டத்தொழில்கள் தான் செய்கிறோம். பெரும்பாலான சாலைகளில் சப்பாத்துக்கள் தைப்பவர்களாகவும் அதிஷ்டலாபச் சீட்டு விற்பவர்களாகவும் கால்வாய்கள் துப்பரவு செய்பவர்களாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்பவர்களாகவும் இருக்கின்றோம். நகரத்தின் எந்தப் பகுதியில் பரவுகின்ற நோய் உண்டானாலும்; அது எமது குடியிருப்புகளில் பரவத்தொடங்கிவிடும். அப்படியான ஒன்றாகக் கூட இந்த நோய் இருக்கலாம்.
எங்கள் வீடுகளுக்கு முன்னே இருக்கின்ற வீதியினால்த்தான் இரவு நேரங்களில் பெரிய வாகனங்கள் குப்பைகளை எடுத்து வந்து எதிரில் இருக்கின்ற ஆற்றுக்குள் கொட்டுவார்கள். அப்போது நாற்றம் மூச்சுத் துவாரங்களை அடைத்துவிடும். வழமையாகவே எவ்வளவு நாற்றத்தையும் பொறுத்துக்கொள்கின்ற எம்மால், இந்த நாற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு கடியும் சொறியும் அடுத்த நாளே வந்துவிடும். குமட்டி குமட்டி அழத்தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளால் சொறியவும் முடியாது. அவர்களின் கருமையான தேகத்தில் வட்ட வட்டமாக கொப்புளங்களும் அவற்றில் நுண் துளைகளும் வந்து விடும். அவற்றின் மீது நாம் சித்தலெப்பை தேய்ப்போம். அது அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டும். நான்கு ஐந்து நாட்கள் இது நீடிக்கும். பின்னர் அதுவே பழகிப்போகும். இப்போது பிறக்கின்ற குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வருவதில்லை.அவர்கள் கடி சொறி இல்லாமல் தமது குழந்தைப் பருவத்தை தாண்டுகிறார்கள். பெரியவர்களுக்கு எப்போதுமே இந்தப்பிரச்சனை வருவதில்லை. ஆனால் இந்த நோய் எல்லோரையும் பிடித்திருக்கின்றது. எல்லோரும் மெலிந்து போகின்றார்கள், அவர்களால் சரியாக நடக்க முடியவில்லை. விரல்களும் நகங்களும் சூம்பிப்போகின்றன. சிறுவர்கள் தங்கள் கால்ப்பகுதியை சொறிந்தபடியே திரிகிறார்கள். குழந்தைகள் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. முகங்களிலும் மெல்லிய தோல்ப் பகுதிகளிலும் தேமல்கள். தேமல்கள் காய்ந்து போகின்ற நேரத்தில் இளைஞர்கள் அவற்றை உரித்து எடுப்பார்கள். கடும் எரிச்சலுக்குட்படுத்திய தேமல்களை உரிப்பது சுகமாக இருக்கும். சில வயதானவர்கள் அதை உரிக்கும் போது தோலும் சேர்ந்து உரிந்து, எரிச்சலை கிளப்பும். சிலரின் பாதி முகம் முழுவது தேமல் படர்ந்திருக்கும்…..”
 
இப்படி அது நீண்டு செல்லும். இருந்தும் அவனால் அந்த நாவலை எழுதிமுடிக்க முடியவில்லை. நகரத்தின் பெரிய சாப்பிட்டு கடை ஒன்றில் வேலையாளாக பணியாற்றுகிறான். அவனுக்கு அதைத் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்பொழுது அவனின் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றமையால் – கடையில் அதிக நேரம் வேலைசெய்யவேண்டியதாக இருக்கின்றது. அதற்கேற்ற சம்பளமும் கிடைக்கின்றது. அது போதுமே, உடல் வேலைக்கேற்ற சம்பளம்.