நகரத்தின் குறிப்புகள் – 02

சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. நித்திரையில் போது உடலின் உஷ்ணம் தாங்கமுடியாமல் இருக்கின்றது. உண்மையில் நித்திரை என்பதைவிட அயர்ந்த நிலை என்பதே சரியாக இருக்கும். முதுகின் பின்னாலிருந்து நெருப்புத் தணல்களை பற்றவைத்து பிடித்துக்கொண்டிருபோல உணர்வேன். இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு முறையும் இரண்டு மணிக்கு ஒரு முறையும் கிடப்புக்கொள்ளாமல் எழுந்து விடுகிறேன். அதன் பின்னர் நிலையை மாற்றியும் இடத்தை மாற்றியும் நித்திரைகொள்ள பெரும் முயற்சியை எடுக்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு இரவு  தான் இது. இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதிய நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசிக்கும் போது சமீபத்தில் பார்த்த குறும்படம் ஒன்று ஞாபகத்தில்  வருகின்றது.
 
Emilie Muller 1994ஆம் ஆண்டு Yvon Marciano இனால் இயக்கப்பட்ட குறும்படம். ஒரே தளத்தில் நகர்கின்ற காட்சி அமைப்பு மட்டுமே இருக்கும். நடிகைக்கான தேர்வு ஒன்றிற்கு செல்லுகின்ற பெண் ஒருவரிடம், தேர்வினை நடத்துகின்ற இயக்குனர் அவளின் கைப்பைக்குள் இருக்கின்ற பொருட்களைப் பற்றி விசாரிப்பதாக நகரும். ஒவ்வொன்றைப்பற்றியும் அவளும் விவரணம் அளித்துக்கொண்டிருப்பாள். தேர்வு முடிய அவளும் கிளம்பிவிடுவாள். மற்ற வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த இயக்குனர் திடீரென்று அவளின் கைப்பை எதிரிலிருக்கும் தாங்கியில் தொங்குவதைப்பார்த்துவிட்டு எதிரிலிருப்பவரிடம் அந்தப்பெண் தனது கைப்பையை வைத்துவிட்டு சென்றுவிட்டாள், அதனால் அவளை போய் நிறுத்துமாறு கூறுவார். அதற்கு மற்றவர் அது இங்கு வேலை செய்யும் பெண்ணொருத்தியினுடையது என்பதை உறுதிப்படுத்த – இயக்குனர் வெளியில் சென்ற அவளை நோக்கி ஓடுவதாக குறும்படம் முடியும்.
 
இப்படியான ஒரு பெண்ணின்  பார்வை தான் இந்த நகரத்தின் குறிப்புகள் போலத்  தெரிகின்றது. எங்கிருந்தோ வந்தவன் ஒருத்தன் நகரத்தின் மீதுள்ள வெறுப்பில் எழுதுவது தான் இந்த நகரத்தின் குறிப்பு போலத் தெரிகின்றது. முதுகு மெதுவாக எரியத்தொடங்குகின்றது. மணி இரண்டைத்தாண்டிக்கொண்டு போகின்றது. மெதுவாக இரவு முடிந்து பஸ்ஸில் ஏறிட்டேன். பாதங்கள் புகுந்துள்ள சப்பாத்துக்களின் கணத்தை  என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு யன்னலோர இருக்கையில் இருந்து நகரத்தின் சாலை ஓரங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறேன்.
 
இது 21/08/17 அன்று எழுதிய டயரியிலிருந்து கத்தரிக்கப்பட்டது.
 
-“…….முதன்முதலாக பார்ப்பது அல்ல இது. எல்லா இடங்களிலும் இவர்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் இப்போது மட்டும் வித்தியாசமாகத் தெரிகின்றனர். எங்கள் இடங்களிலுள்ள பிச்சைக்காரர்கள் எனக்கு வித்தியாசமாகவும் புறம்பாகவும் தெரிந்ததில்லை. அவர்களையும் தினமும் பார்த்தவன் தான். ஆனால் இந்த நகரத்தின் பிச்சைக்காரர்கள் கண்களை உறுத்துகிறார்கள். நவீன உடைகளும் ஆடம்பர வாகனங்களும் வானுயர வளர்ந்து நிற்கின்ற கட்டடங்களுக்கும் மத்தியில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கின்றது…….”
 
பிச்சைக்காரர்கள் என்னும் போது ஆநாகரீகமாகத் தெரிகின்றதா? அப்படித்தானே நானும் நீங்களும் பேசிக்கொள்கின்றோம். பேசும் போது தெரியாத அநாகரீகம் எழுதும்போது மட்டும் தெரிவது ஏன்? நகரத்தின் குறிப்பில் பிச்சைக்காரர்கள் மிகவும் எளிமையாகப்  புகுந்து விடுகிறார்கள்.
 
21/08/17 டயரியில் இருந்து
 
-”……மிகவும் பிரசித்தி பெற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றின் முன்னர் உருளும் நாற்காலியில் எழுபது வயது மதிக்கத்தக்க வயதிபரையும் அவரின் அருகில் மனைவியையும் பார்க்கிறேன். இன்று காலை தான் அந்த காட்சியினைப் பார்த்தேன். ஒரு முழு பகலுக்குள் காட்சி மங்கிவிட்டது. அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றோ எப்படி இருந்தார்கள் என்றோ சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் அத்தனை சூழலிலும் புறம்பாகத் தெரிந்தார்கள்……”
 
அதனாலேயே தான் நாட்குறிப்பின் பக்கம் ஒன்றை நிரப்பியிருந்தார்கள். தொடர்ந்து பயணித்த நேரங்களை அவர்களை காணக்கிடைக்கவில்லை. அவர்கள் இருவரையும் அந்த நாளின் பின்னர் இன்று தான் இப்போது தான் உங்களுக்குச் சொல்லும் போது ஞாபகம் வருகிறது. அவர்களின் பின்னர் நான் கடந்து வந்த பிச்சைக்காரர்கள் பற்றி எழுதிய நாட்குறிப்புக்கள் இவை.
 
22/08/17
 
-”……..அவர்களைக் காணவில்லை. இன்னொரு வர்த்தக நிலையத்தின் முன்போ பிரார்த்தனை செய்கின்ற இடங்களின் முன்போ சென்றிருக்கக் கூடும். அதிக தூரம் அவர்களால் சென்றிருக்க முடியாது. தனது கணவனை உருளும் நாற்காலியில் இருத்திக்கொண்டு வயோதிபப்  பெண்ணால் எவ்வளவு தூரம் நடந்துவிட முடியும். என் கண்களுக்குப்  புலப்படாத தெரு ஒன்றில் இயலாத கணவனை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டுக்கொண்டிருப்பாள். இன்று இன்னொரு வயதானவரை உருளும் நாற்காலி ஒன்றில்  கண்டேன். நாற்காலிக்கு குறுக்கே தனது ஊன்றுகோலை வைத்து அதில் தனது கால்கள் இரண்டையும் கிடத்தியிருந்தார். கால்கள் இரண்டிலும் பாதங்கள் அற்றுப்போயிருந்தன. எஞ்சியிருந்த கால்களில் புண்ணும் சிதளுமாக பரவியிருந்தது. அவர் பிச்சை எடுப்பது போல தெரியவில்லை. ஆனால் அவரைச்சுற்றி சில்லறைகள் மட்டும் இருந்தன. இலையான்கள் புண்களை சுற்றிக்கொண்டிருந்தன. அவரால் தனது கால்களை அணிந்திருந்த சறத்தால் மறைத்திருக்க முடியும். ஏனோ அவர் செய்யவில்லை. இன்றைய நாள் முழுவதும் அவரின் சீழ் வடிகின்ற கால்கள் தான் ஞாபகத்தில் வருகின்றன. அவர் அத்தனை இயலாமைக்குள்ளும் ஏன் தற்கொலை பண்ணிவிடவில்லை. நானாக இருந்தால் தற்கொலை பண்ணியிருப்பேன். மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமான வீதி ஒன்றில் என்னால் இந்தக்கோலத்தில் இருக்க முடியாது……”
 
28/08/17
 
-”….எத்தனையோ பிச்சைக்காரர்களை கடந்து விட்டேன். ஆனால் அவள் நினைவை விட்டு போவதாகத் தெரியவில்லை. இந்தக்குறிப்பில் எழுதுவதன் மூலமாவது போகட்டும். பஸ் கடற்கரை அருகில் செல்லுகின்ற அகலமான வீதியின் முதல் தரிப்பிடத்தில் நிற்கின்றது. அவளும் இரண்டு வயது குழந்தையும் குறுகிய நேரம் நிறுத்தியிருந்த பஸ்ஸின் முன் இருக்கையிலிருந்து வேகமாக கைகளை ஜன்னலருகே நீட்டியபடி ஓடி வருகின்றார்கள். அவள் தான் கைகளை நீட்டாமல் குழந்தையின் கைகளை விரித்து ஜன்னலோரமாக நீட்டுகின்றாள். முன்னேயிருந்து இருபது ரூபாயும் சில்லறைகளை சில கை விசுக்கல்களும் கிடைக்கின்றது. தனது வாயிலிருந்து வெற்றிலை சிவப்பாக வடிய ஒவ்வொருவராக கடந்து என்னிடம் வருகின்றாள். நான் சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து குடுக்க, அவசரமாக எனக்கு பின் இருக்கைக்கு நகர்கிறாள். அவளின் கையிலிருந்த குழந்தை அழ – அவள் குழந்தையின் கைகளை மடக்கி வேகமாக உருவிட்டு மீண்டும் நீட்டவும் -பின் இருக்கையிலிருந்து பெண்மணி ஐந்து ரூபாயை நீட்டிப்  போடவும் -பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. அந்த ஐந்து ரூபாய் அந்தரத்தில் மிதந்து சிறிது தூரம் தள்ளி விழுந்தது. நான் கிளம்பிய பஸ்ஸிலிருந்து பின்னால் திரும்பி பார்க்க அவள் தனது குழந்தையை தரிப்பிடத்தில் இருத்திவிட்டு அந்த உருண்டு போன ஐந்து ரூபாயை எடுக்க ஓடிக்கொண்டிருந்தாள்…..”  
 
04/10/17
 
-”…..மீண்டும் நிறைய காலத்திற்கு பின்னர் ஒரு பிச்சைக்காரியினைப் பற்றி எழுதுகிறேன். நான் அப்போது கண்ணாடியைத் திறந்திருக்கவில்லை. அவள் கையில் ஐந்தாறு விளையாட்டு பொம்மைகள் பொருத்திய கீடேக்குகள் வைத்திருந்தாள். அதில் ஒன்றை வாங்குமாறு கைகளால் சைகை செய்துகொண்டிருந்தாள். உச்சி எரிகின்ற வெயிலில் அவள் வயிற்றில் குழந்தையுடன்  தலையை முக்காடிட்டுகொண்டு நின்றாள். அப்படி எத்தனையோ பெயரினைப் பார்த்திருக்கிறேன். நான் வேண்டாம் என்று சைகை செய்தேன். அவள் மீண்டும் பொம்மைகளைத்  தூக்கிகாட்டினாள். பின்னர் மெதுவாக கண்ணாடியைத் தட்டி இறங்குமாறு வேண்டினாள். இறங்கிவிட தேநீர் குடிக்க காசு கேட்டாள். கொடுத்து விட்டு கண்ணாடியினை மூடிவிட்டேன். அப்போது எனக்கு அந்த இருபது ரூபாய் பெரிதாகத்தெரியவில்லை. அவளும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தத் தாயினூடு வளரப்போகின்ற குழந்தை தான் என்னை உறுத்துகிறது. அன்றொருநாள் கண்ட அந்தக் குழந்தை போலத்தானே பஸ் தரிப்பிலோ அல்லது வேறொரு இடத்திலோ………..”
 
12/11/17
 
-”……..மீணடும் மீண்டும் பிச்சைக்காரர்களைப் பற்றிப் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் ஏதோ ஒரு வகையில் எனது நாளந்தத்திற்குள் வந்து போகின்றார்கள். எப்போதும் பயணத்தின் போது அவர்களைக் கடந்தே செல்கிறேன். எல்லாப் பிச்சைக்காரர்களும் என்னை ஈர்ப்பதில்லை. எவராவது ஓரிருவர் குறுகிய கால நினைவு ஒன்றை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த நினைவுகள் இன்னொரு பிச்சைக்காரரைப் பார்க்கும் போது மீட்டப்படுகிறது அல்லது மீட்டப்படாமலும் போகின்றது. அவர்களைப் பற்றி நெடுநேரம் யோசித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. எப்படி என்னால் எனது வாழ்க்கையைப் பற்றி பெரிதான மதிப்பீடுகள் இல்லாமல் கொண்டு நடந்த முடிகின்றதோ அதே போல அவர்களாலும் மதிப்பீடுகளுடனோ அல்லது எந்த மதிப்பீடுகளும் இல்லாமலோ வாழ்க்கையை வாழமுடிகின்றது . அந்தக் கால்கள் அழுகிய பிச்சைக்காரன் ஏன் தற்கொலை பண்ண வேண்டும்? அவனை விட அதிக பிரச்சனைகளுடன் சாதாரணமாக கண்ணுக்கு தெரிவோர் எத்தனை பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்…….”
 
நீங்களும் நானும் பிரச்சனைகள் இல்லாமலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க ஏன் பிச்சைக்காரர்கள் மட்டும் என் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்கள். இப்போதெல்லாம் நான் குளிரூட்டப்பட்ட பஸ்களிலேயே பயணம் செய்கிறேன். ஜன்னல் திரையை இழுத்துமூடிவிட்டால் பாதைகளும் தெரியாது பாதையோரங்களில் நிற்கின்ற பிச்சைக்காரர்களையும் தெரியாது. இனி ஒரு முறை எனது நாட்குறிப்பில் அவர்களைப்பற்றிய சேதி எதுவும் இருக்காது.
 
இன்று வேண்டும் என்றே ஜன்னலினூடாக சாலையோரத்தைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். இப்போது பிச்சைக்காரர்கள் என் பார்வைக்கு புறம்பாகவும் விசித்திரமாகவும் தெரியமாட்டார். அவர்களைத்தான் நான், என்னைப்போல சாதாரண மனிதர்களாக நினைவில் நிறுத்திவிட்டேன். இன்னமும் யாரும் எங்களுக்கு பிச்சைக்காரர்களாகத் தெரியவில்லை. உண்ணிப்பாக கவனிக்கிறேன். அதோ அந்த பிரதான தெருவிலிருந்து பிரிந்து செல்கின்ற கிளைத்தெரு ஒன்றின் மூலையில்……….
 

நகரத்தின் குறிப்புகள் – 01

நகரம் ஒன்றினைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவது எளிதான விடயம் ஒன்றல்ல. மனிதனின் ஆதி முதல் – ஒவ்வொருவரும் தங்கள் நகரங்களைப் பற்றியும் தாங்கள் வாழ்ந்த நகரங்கள் பற்றியும் வாழ விரும்புகின்ற நகரங்கள் பற்றியும் கேட்டு அறிந்து கொண்ட நகரங்கள் பற்றியும் அவர்களே தமக்குள்ள உருவாக்கிக்கொண்ட நகரங்கள் பற்றியும் பேசி, எழுதி விவாதித்திருக்கிறார்கள். இவற்றில் ஏதோ ஒரு வகை நகரத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன். இந்த நகரம் பற்றிச் சொல்ல முதல் – இன்னொரு நகரத்தைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்கள்.
-“……..ட கட்டடங்களுக்கு இடையே அந்த நதி ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர்தான் அந்த நதியின் பெயரை யூசோ என்றறிந்தேன். தெளிந்த வெள்ளை நீரினூடாக நதியின் ஆழத்திலிருக்கின்ற கற்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. அவை செயற்கையாக அங்கே பதிக்கப்பட்டவை. அவற்றின் இருப்பில் நேர்த்தியான ஒழுங்கின்மை இருக்கிறது. நீருக்குள் நிறைய வண்ணங்களில் மீன்கள் நீந்திக்கொண்டு திரியும். அவை எல்லாமே ஒரே இனம். பார்ப்பதற்கு மின்சாரத்தில் இயங்குகின்ற மீன்கள் போலவே இருக்கும். ஆனால் அவை உயிருள்ளவை.எல்லாம் ஒன்றாக தமது உடலை வளைத்து உன்னோக்கி உதைப்பது போல நீந்தும். கொத்துக் கொத்தாக ஆற்றில் பரவிக்காணப்படும்………”
 
இது புகழ்பெற்ற லத்தின் அமெரிக்கா எழுத்தாளர் ஒருவரின் பிரசுரிக்கப்படாத குறிப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். இவற்றை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனது நகரத்தை ஊடறுத்து செல்லுகின்ற ஆறுகள் ஞாபகத்திற்கு வந்தன. அதில் ஒன்றைப்பற்றித்தான் இப்போது எழுதப்போகிறேன்.
-“……..பாலத்தின் மீது நின்றுகொண்டு கீழே ஓடுகின்ற ஆற்றைப் பார்க்கிறேன். எந்த சலசலப்பும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது . ஆற்றின் வேகத்தைப்பற்றி ஊகிக்க முடியவில்லை. அகன்ற ஆறு அது. ஒழுங்கற்ற கரைகளைக்கொண்டது. கரையின் ஓரங்களில் பொலிதீன் பைகளும் உணவுக்குப்பைகளும். அவை குமியலாக ஓரங்கள் எங்கும் பரவிக்கிடந்தன. ஒவ்வொரு குமியாலும் மெதுவாக அதிரகரிக்கின்ற குப்பைச்சுமைகள் ஆற்றுக்குள் விழுத்திக்கொண்டிருந்தன. ஆறு -நகரத்தின் பெரிய கட்டடங்களின் பின்பக்கமாக இருக்கிறபடியால் – கட்டடங்களின் குப்பைகளை எளிதாக அகற்றிவிடமுடிகிறது. ஆற்றின் கரைகளுக்குப் பல கிளைகளிலிருந்து கழிவுநீர் திசைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழாய்க்குள்ளாகவுமிருந்து ஆற்றுக்குள் வீழ்கின்ற கழிவு நீர் கருமையான திட்டுக்களாக வழிந்துகொண்டிருந்தது. ஆற்றின் ஓட்டத்துடன் கலந்து ஆற்றின் ஒரு பகுதியாக மாறுகின்றன.ஆக இந்த ஆற்றின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு குழாய்க்குலிருந்து வெளியேறிய திண்மத்திட்டுத்தான். அதிலிருக்கின்ற கழிவு நீர்தான் இந்த ஆற்றை உருவாக்கியிருக்கிறது……..”
 
நீண்ட நாட்களுக்கு முன்னர் நண்பன் ஒருத்தன் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் ஒன்றின் பகுதியினை வாசிக்க அனுப்பியிருந்தான். அவனுக்கு நாவல் எழுத வரவேயில்லை. அவனால் நாவல் ஒன்றின் உருவாக்கம் பற்றிய சரியான புரிதல் இருக்கவில்லை. அவனின் மொழி பயங்கரமாக இருந்தது. வார்த்தைகளை ஒன்றிணைத்து வாக்கியம் ஒன்றினை எழுதுவதிலும், அவற்றை ஒன்றிணைத்து பந்தியாக்குவதிலும் நிறையப் பிழைகள் இருந்தன. இருந்தும் அந்தப்பகுதியில் உள்ளடக்கம் அபாரமானது. அது நகரம் ஒன்றின் ஆற்றங்கரைக் குடியிருப்புக்கள் பற்றியது. அவனின் மோசமான எழுத்துக்களால் சரியான முறையில் வசனங்களை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் அவை இவ்வாறு அமைந்திருக்கும்.
 
-“…….எங்களுக்கு அந்த நோய் பற்றி தெரிந்திருக்கவில்லை. தொட்டால் பரவுமா, நுளம்புகளால் பரவுமா, நீரின் மூலம் பரவுமா, காற்றிலே பரவுமா அல்லது உணவுகள் மூலம் பரவுமா என்று எந்த அறிவும் இல்லை. ஆனால் பரவியது. மிகவும் வேகமாக. இங்கே சாதாரணமாக எல்லோரும் கீழ் மட்டத்தொழில்கள் தான் செய்கிறோம். பெரும்பாலான சாலைகளில் சப்பாத்துக்கள் தைப்பவர்களாகவும் அதிஷ்டலாபச் சீட்டு விற்பவர்களாகவும் கால்வாய்கள் துப்பரவு செய்பவர்களாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்பவர்களாகவும் இருக்கின்றோம். நகரத்தின் எந்தப் பகுதியில் பரவுகின்ற நோய் உண்டானாலும்; அது எமது குடியிருப்புகளில் பரவத்தொடங்கிவிடும். அப்படியான ஒன்றாகக் கூட இந்த நோய் இருக்கலாம்.
எங்கள் வீடுகளுக்கு முன்னே இருக்கின்ற வீதியினால்த்தான் இரவு நேரங்களில் பெரிய வாகனங்கள் குப்பைகளை எடுத்து வந்து எதிரில் இருக்கின்ற ஆற்றுக்குள் கொட்டுவார்கள். அப்போது நாற்றம் மூச்சுத் துவாரங்களை அடைத்துவிடும். வழமையாகவே எவ்வளவு நாற்றத்தையும் பொறுத்துக்கொள்கின்ற எம்மால், இந்த நாற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு கடியும் சொறியும் அடுத்த நாளே வந்துவிடும். குமட்டி குமட்டி அழத்தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளால் சொறியவும் முடியாது. அவர்களின் கருமையான தேகத்தில் வட்ட வட்டமாக கொப்புளங்களும் அவற்றில் நுண் துளைகளும் வந்து விடும். அவற்றின் மீது நாம் சித்தலெப்பை தேய்ப்போம். அது அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டும். நான்கு ஐந்து நாட்கள் இது நீடிக்கும். பின்னர் அதுவே பழகிப்போகும். இப்போது பிறக்கின்ற குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வருவதில்லை.அவர்கள் கடி சொறி இல்லாமல் தமது குழந்தைப் பருவத்தை தாண்டுகிறார்கள். பெரியவர்களுக்கு எப்போதுமே இந்தப்பிரச்சனை வருவதில்லை. ஆனால் இந்த நோய் எல்லோரையும் பிடித்திருக்கின்றது. எல்லோரும் மெலிந்து போகின்றார்கள், அவர்களால் சரியாக நடக்க முடியவில்லை. விரல்களும் நகங்களும் சூம்பிப்போகின்றன. சிறுவர்கள் தங்கள் கால்ப்பகுதியை சொறிந்தபடியே திரிகிறார்கள். குழந்தைகள் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. முகங்களிலும் மெல்லிய தோல்ப் பகுதிகளிலும் தேமல்கள். தேமல்கள் காய்ந்து போகின்ற நேரத்தில் இளைஞர்கள் அவற்றை உரித்து எடுப்பார்கள். கடும் எரிச்சலுக்குட்படுத்திய தேமல்களை உரிப்பது சுகமாக இருக்கும். சில வயதானவர்கள் அதை உரிக்கும் போது தோலும் சேர்ந்து உரிந்து, எரிச்சலை கிளப்பும். சிலரின் பாதி முகம் முழுவது தேமல் படர்ந்திருக்கும்…..”
 
இப்படி அது நீண்டு செல்லும். இருந்தும் அவனால் அந்த நாவலை எழுதிமுடிக்க முடியவில்லை. நகரத்தின் பெரிய சாப்பிட்டு கடை ஒன்றில் வேலையாளாக பணியாற்றுகிறான். அவனுக்கு அதைத் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்பொழுது அவனின் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றமையால் – கடையில் அதிக நேரம் வேலைசெய்யவேண்டியதாக இருக்கின்றது. அதற்கேற்ற சம்பளமும் கிடைக்கின்றது. அது போதுமே, உடல் வேலைக்கேற்ற சம்பளம்.