ஒரு வருடம் – மறா

(01)
எந்த ஒரு விடயத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து செய்யும் போது மனத்திருப்தியுடன் கூடிய முன்னேற்றம் உருவாகும் என்பதை அறிந்த சந்தர்ப்பங்களுள் எனது வலைப்பூவும் ஒன்று. சாதாரண தரம் எழுதிவிட்டு உடனேயே எல்லோரும் உயர்தரத்திற்கு தயாராக தொடங்கிவிடுவார்கள். இலங்கையில் பெரும்பாலான உயர்தரக் கல்வி தனியார் வகுப்புகளை நம்பியே இருந்தது. சிறுவயது முதல் ஒன்றாக படித்துக்கொண்டுவந்த எனது நண்பர்களிடம் இருந்து , நான் தெரிவு செய்த துறையும் தனியார் கல்வி நிறுவனமும் மெல்லிய இடைவெளியை ஏற்படுத்த தொடங்கியது. அவர்களின் கதையாடல்கள் மெதுவாக அந்நியமாகத் தொடங்கின. உயர்தரம் முடிந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தது கூட முழுமையாக நிவர்த்தியாகவில்லை. உயர்தரம் எழுதி முடித்து வருகின்ற ஓய்வு நாட்களின் மாலைகளில் நண்பர்களுடன் விளையாடுவதாயும்  பேசி மகிழ்வதாயும் கழிந்தன. இருந்தும் அவர்களிடம் அந்த மூன்று வருடங்களில் உருவாகியிருந்த பிணைப்பில் என்னால் நுழையவே முடியவில்லை. அவர்களிடம் அப்போதிருந்த சுதந்திரம் – என்னிடமிருந்தும், எனக்கான வெளி வேறாக இருந்தது. என் சுதந்திரம் முழுவதும் அவ்வெளியின் கூறுகளால் நிரப்பப்பட்டன. இந்த இடைவெளி நீண்ட பிரிவு ஒன்றிற்கு காரணமாக இருக்கும் என்பதை நான் அறியாமலில்லை. உயர்தர பெறுபேறுகள் வெளிவர, நான் தனித்துப்போனேன்.
 
ஒக்ட்டோபர் மாத இறுதி நாட்களில் தான் முதன் முதலாக வலைப்பூ ஒன்றினை தொடங்குவதற்கான எண்ணம் வந்தது. அப்போது ஜெயமோகனும் சாருவும் தீவிரமாக தமது வலைப்பூவில் எழுத்துக்கொண்டிருந்தார்கள். அத்தோடு கீற்று, மலைகள், காலச்சுவடு போன்ற இணைய இதழ்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். கூடவே மதுரகன் அண்ணாவின் வலைப்பூவும் பரீட்சயமாக இருந்தது. நான் அப்போது சிறு சிறு கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். வாசித்துக்கொண்டும் இருந்தேன். சரி, எனக்கான வலைப்பூ ஒன்றை தொடங்குவதற்கு முடிவு செய்துவிட்டேன். எப்படியும் காசு செலவு செய்து சொந்த டொமைனில் வலைப்பூ ஒன்றினை எழுதமுடியாது என்று இலவச வலைத்தளங்களை தேடினேன். Weebly, wordpress, blogspot, 123site, wix, zoho என்று ஒவ்வொன்றிலும் மாறி மாறி ஒவ்வொரு விதமான வடிவத்திலும் ஒரே கவிதையை வைத்து செய்வது அழிப்பதுமாக இருந்தேன். முதன் முதலில் நீண்ட காலம் – இரண்டு கிழமை அளவு , பாவனையில் இருந்த தளம் 123site இன் மூலம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்று மாத கால அளவில் wordpress இன் இலவச தளத்தில் மெது மெதுவாக கவிதைகள், குறும் கதைகள், கட்டுரைகள் என்று சேர்க்கத்தொடங்கினேன். முதலாம் மாத இறுதியளவில் எனது தளத்திற்கான பார்வைகள் அதிகாமாகத் தொங்கியது. அந்த நேரத்தில் எனது குட்டியிடம்(அம்மாவின் தங்கை) பணம் வாங்கி எனக்கான சொந்த டொமைன் ஒன்றை வாங்கிக்கொண்டேன். brinthanonline.com -இப்போது அது  hacked by sulaiman hacker என்ற பெயரில் கிடப்பில் கிடக்கிறது. இன்றிலிருந்து மூன்று  மாதங்களுக்கு முன்பு, எனது டொமைனை யாரோ ஹாக் செய்துவிடடார்கள். எனது டொமைன் ப்ரொவைடரிடம் (வழங்கி) கேட்டும் மீட்டுப் பெறமுடியவில்லை. அப்படியே அதை விட்டு விட்டு மீண்டும் wordpress இன் இலவச இணைய தளத்தில் அனைத்து பதிவுகளையும் பிரதி செய்து, புத்துருவாக்கம் செய்தேன். இன்றுவரை அதில் பதிவிட்டு வருகிறேன்.
 
இவ்வருடம் தையிலிருந்து ஆவணி வரையிலான எட்டு மாதம், நண்பர்கள் பெரிதும் இல்லாத தனிமையை நிரப்பிக்கொண்டது எனது வாசிப்பும் வலைத்தளமும் தான்;இன்றுவரையும். கடந்த மூன்றாம் திகதி இம்மாதம், எனது முதல் குறுகிய 123site இணைய தளத்தில் முதல் பதிவை பதிவு செய்தேன். ஒரு ஆண்டு முடிந்து விட்டது.  
Screen Shot 2017-11-05 at 1.00.27 PM 
 
(02)
ஈழத்து சினிமா என்பது மிகவும் மேலோட்டமான முறையில் நகர்ந்து கொண்டிருப்பதை வைத்து அதன் அவசியத்தையும் பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இலங்கை தமிழ் மக்களிடையே பரவலான பயன்பாட்டில் உள்ள ஊடகம் சினிமா. தென்இந்திய தமிழ் திரைப்படங்கள் இலங்கையின் எல்லா இடங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. பாலாபிஷேகம், பெரிய உருவப்படங்கள் , மாலை , ஆராத்தி என்று எல்லாவற்றுக்கும் மேலாக வைத்து கொண்டாடுகின்ற நிலைமையை சமீபகாலமாக மிகவும் தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது. இன்று முகப்புத்தகங்களிலும் நண்பர்கள் குழுக்களுக்கிடையேயும் வீதிகளிலும் சாதாரணமாக நடக்கின்ற சினிமா வாக்குவாதங்கள் – எமது சமூகத்தில் சினிமாவின் ஊடுருவலை உணர்த்தி நிற்கின்றன.
 
இன்றைய இந்திய தமிழ் சினிமாவின் தாக்கத்தால்  மீளமுடியாமல் இருக்கின்ற எம்மிடையே ஈழத்து சினிமா பற்றிய புரிதல் மிகவும் மந்தமாக இருக்கிறது. இந்திய தமிழ் சினிமாக்கள் ஏற்படுத்துகின்ற விம்ப மாயை பற்றிய அறியாமையில், இன்றைய நாட்களில் எழுகின்ற ஈழத்து முழுநீள, குறும்படங்கள் – அதன் நீட்சியாகவே உருவாகின்றன. இந்த நீட்சியே எமக்கான தனித்துவமான சினிமா அடையாளத்தை உருவாக்க முடியாமல் செய்கின்றது. இந்திய சினிமாவை பீடித்திருக்கின்ற வர்த்தக நோக்கம் கொண்ட திரைப்படங்களின் பெரும் பாய்ச்சல் – அவர்களின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதைப் போன்று ; இந்திய சினிமாவின் ஆதிக்கம் எமக்குரிய தனித்துவமான கலையையும் பார்வையையும் மழுங்கடித்துக்கொண்டு இருக்கின்றன. இதே தொடர்ச்சியினை குறும்படங்களும் கையாளத்தொடங்கிவிட்டன.
 
மறா எனது நண்பர்களால் உருவாக்கப்பட்ட குறும்படம். படப்பிடிப்பு , இசை  எல்லாம் முடிந்து இறுதிநேரத்தில் தான் படம் பற்றிய செய்தியே எனக்கு கிடைத்தது. ஆவலாக காத்திருந்து இணைப்பு கிடைத்தவுடனேயே பேருந்தில் படத்தை பார்த்து முடித்தேன். அவர்களின் முயற்சிக்கு முதல் பெருத்த நன்றிகளும் பாராட்டுகளும். மறாவில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரினதும் எண்ணங்களும் சிந்தனைகளும் பற்றிய சிறிய புரிந்துணர்வாவது இருக்கும் என்ற எண்ணத்தில் – இதைப்பற்றிய உரையாடலை முன்வைக்கிறேன். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு போதியளவு கிடைத்திருக்கும். நான் மேலும் பாராட்டி எழுதுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. அதனால் மறாவின் சினிமா அரசியல் பற்றிய எனது கருத்துக்களை பகிர்கிறேன். இது அவர்களுக்கு பொருந்தாமலும் போகலாம், ஏனையவர்களுக்கு பொருத்தமானதாகவும் இருக்கலாம்.
 
கதையின் கரு பற்றி சினிமா ஆளுமைகளிடம் இருந்து கருத்துக்கள் விவாதங்கள் நடந்திருக்கும் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. கதை திரைப்படம் ஒன்றில் நடித்து தோற்றுப்போகும் நாயகன், தனது கனவில் சென்று தன் குறைகளை திருத்த முயல்கிறான்; முடியாமல் போக இன்னொரு கனவில் சென்று குறைகளை இல்லாமல் செய்து பூரணம் அடைகிறான். கனவுகளை மட்டும் இல்லாமல் செய்து விட்டு கதையின் கருவை பார்த்தால் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாம் சுற்று வெற்றியின் ரகசியம் போலத் தெரியும். இது நகைச்சுவை இல்லை. கதையின் கருவும் எமது சூழலும் விலகி நிற்கின்ற புள்ளி அது தான். கோடம்பாக்கத்திற்கு வருகின்ற ஒரு நடிகனின் முதல் படம் தோல்வியில் முடிய தனது இரண்டாம் படத்திற்கு தன்னிடம் இருந்த குறைகளை நீக்கிக் கொண்டு வெற்றிபெற வருவது போல. இலங்கையின் தமிழ் சூழலில் இதன் சாத்தியப்பாடு தான் எனது கேள்வி. இன்று இளைஞர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் அரசியல் ரீதியாக , சமூக ரீதியாக, ஆன்மீக ரீதியாக, உளவியல் ரீதியாக ஏற்படுகின்றது. அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இப்படியான இந்திய தமிழ் சினிமா கலாசார தொனியில் படம் வந்ததன் நோக்கம் தான் பிரச்சனை. இது இயக்குனரின் சுதந்திரம் என்று வாதிடுவது சரியானதே, ஆனால் ஈழத்து குறும்படம் என்ற அடையாளம் எதன் மூலம் உருவாக்கம் பெறப்போகிறது.
இரண்டாவது பார்வையாளருக்கு திரைப்படத்திற்குமான தொடர்பு. இதே பிரச்சனை தற்கால சில கவிதைகள் மீதும் எனக்குண்டு. இரண்டிற்கும் பொதுவாக, எப்போதுமே ஒரு படைப்பு  ஒன்றில் அப்படைப்புக்கும் வாசகருக்கும்/ பார்வையாளருக்கு ஏதோ ஒரு புள்ளியில் இணைப்பு ஏற்படும் போது தான் அது கலைப்படைப்பாக உருமாற்றம் அடைகின்றது. சம்பவங்களை அடுக்குதல் பின்நவீனத்தின் முக்கிய கூறு என்றாலும், அது வாசகரை/ பார்வையாளரை ஒரு கணத்தின் உள்வாங்கும் போது தான் உன்னதம் அடையும். இந்தச் சிக்கலை மறாவை பார்க்கும் போது எனக்கு ஏற்படுகிறது. இயக்குனர் காட்டுகின்ற காட்சிகள் சிதறிய கண்ணாடி போல புதிர்த்தன்மை வாய்ந்தது. வேறு வேறான காட்சி அமைப்புக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. குறியீடுகள் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இவை நெய்ல் பேர்கரின் காட்சி அமைப்புகளையும் கதை சொல்லையும் நினைவுபடுத்துகின்றன. ஒளிப்பதிவும் அவ்வளவு நேர்த்தியாகவே இருக்கின்றது. ஆனால் அந்த சிதறிய காட்சிகள் ஒன்று சேரும் இடம் பற்றிய கேள்வி தான், படத்தின் மீதான விமர்சனத்தை ஏற்படுத்துகின்றது. காட்சிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, பார்வையாளர்களுக்கு  எப்படி காட்சிகளின் மூலம் இணைப்பை ஏற்படுத்துவது என்பதைத் தான் பிரபல இயக்குனர்கள் எல்லோரும் சரியாகச் செய்கின்றனர். சிதறுண்ட காட்சிகள்/ சொற்கள் மூலம் யாரும் எதையும் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு இயக்குனர்/ கவிஞர் தான் சொல்லவந்த கருவை காட்சிகளுடனும் பார்வையாளர்களுடனும்/ வாசகர்களுடனும் இணைக்கத்தான் பெரும் முயற்சி எடுக்கவேண்டி இருக்கின்றது. அந்த முயற்சி செய்யப்படுகின்ற படைப்பு கலைப்படைப்பாக மாறுகின்றது. மறாவில் இயக்குனரின் பங்கு வெறுமையாக விடப்பட்டுள்ளது. இயக்குனர் சொல்வதைப்போல கதையை ஊகிக்க முடியாத நிலை, இயக்குனரின் தோல்வியே தவிர பார்வையாளரின் அல்ல.
22792295_1970568726537324_2263350883293001022_o