at the drop of the hat – நான்கு கவிஞர்கள் பற்றிய அறிமுக குறிப்புகள்

at the drop of the hat

 

நன்றி

உன்னதம் – எஸ்போஸ், தர்மினி பற்றிய கட்டுரைகள் உன்னதம் இணைய இதழில் 2017 மார்கழி 15, 23 ஆம் திகதிகளிலும் 2018 தை 10 ஆம் திகதியும் வெளியானது.
 
ரஷ்மி – எஸ்போஸின் கோட்டோவியம்
வடலி – எஸ்போஸின் தொகுப்பின் முன்னட்டை
குங்குமம் – சுகுமாரனின் புகைப்படம்
முகப்புத்தகம் – மற்றைய எல்லாப் படங்களும் அவரவர் முகப்புத்தகங்களில் இருந்து பெறப்பட்டது.
 
அனார், சுகுமாரன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் எனது வலைதளத்தில் சுயாதீனமாக வெளியிடப்பட்டவை.
முகப்பு படம் என்னால் வடிவமைக்கப்பட்டது.
இக்கட்டுரைகள் எழுதும் போது உடனிருந்து திருத்தங்கள் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் மற்றும் உன்னதம் கௌதம சித்தார்த்தன் ஆகியோருக்கு நன்றிகள்.

கட்டுரைகள்

 

  • எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்

  • தர்மினி – அவளொருத்தி கீறிய படம்

  • அனார் – வெளிச்சத்தின் குரல்

  • சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

 
 

எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்

 


ஓவியம் – ரஷ்மி
(01)
போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த  உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ  அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று போராடுபவையாக பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் –  சாதாரண மனிதரது அவலங்களையும் உணர்வுகளையும்  சொற்பமாகவே பாடுகின்றனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் எஸ் போஸ் எனப்படுகின்ற சந்திரபோஸ் சுதாகர். அவரின் சுயம் என்ற கவிதையினூடாக பத்தியினைத்தொடங்கலாம்.
 
“என்னைப் பேசவிடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன”
 
அடக்குமுறைக்கு கீழே இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களினதும் கோஷமும் கருத்து சுதந்திரமாகவே இருக்கும். சிலி நாட்டின் கவிஞர் விக்தோர் ஹாராவை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். இறுதியில் சிறைச்சாலையில் விக்தோர் ஹாரா கொல்லப்பட்டதைப்போலத் தான் எஸ் போஸும். பெரும்பாலும் ஆதிக்க சக்திக்கு எதிராக குரல்கொடுக்கின்ற மனிதர்களின் முடிவு ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. எஸ் போஸும், தான் பேசவே கேட்கிறார். ஆனால் பிரச்சனை அடுத்த வரியிலேயே தொடங்கிவிடுகிறது. யாருக்கு மத்தியிலிருந்து தன்னை பேசக் கேட்கிறார்? “உங்கள்” என்று யாரை விளிக்கின்றார்? ராணுவத்தையா? புரட்சியாளர்களையா? அல்லது தன்னோடிருக்கும் சக மக்களையா? யார் அவரின் காயங்களை ஆழமாகக் கிழிப்பது?
 
“எனது குரல்கள் உங்கள் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைக்கின்றது
வேண்டாம்.
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.”
 
கவிஞர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கால்களின் கீழே ஒடுங்கிப்போவதாகவே பாடுவார்கள். ஆனால் எஸ் போஸ் அதைவிட மெல்லிதான பாதச்சுவட்டின் ஒலியிலேயே ஒடுங்கிப் போகின்றார். அல்லது உரத்துப்பாடுகின்ற எஸ் போஸின் குரலை விட மற்றைவை எல்லாம் ஓங்கியிருக்கின்றன. கொடூரமான யுத்தத்தின் பின்புலத்தில் இந்த சிறு கவிஞனின் குரல் எப்படி கேட்கப்போகிறது. ஆனாலும் எஸ் போஸ் தன்னை ஒரு கவிஞனாகவோ கலைஞனாகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர் எப்போதும் தன்னைப்போலவே இருக்க விரும்புகிறார். ஒரு சாதாரண குடிமகனாக. அதற்காகவே பாடுகிறார்.
 
“வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்,
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அனுமதியளியுங்கள்
அவர்களின் தொண்டைக்குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்.”
 
செல்களையும் மிதிவெடிகளையும் நட்சத்திரங்களாகவும் விதைகளாகவும் உருவகிக்கிறார். செல்கள் வெடிக்கும் போதும் மிதிவெடிகள் சிதறும் போதும் “நீங்கள்” என்று எஸ் போஸ் விழிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்காக தலைகுனியவும் செய்கிறார். இதிலிருந்து நீங்கள் என்பது யாராக இருக்கமுடியும் என்று ஊகிக்க தொடங்கலாம். சந்நதம் என்பது ஆவேசம். போரொன்றின் போது கூச்சலும் ஆவேசமும் அடைகின்ற தரப்பு – எப்படியும் யுத்தத்தில் முன்னேறுகின்ற தரப்பாகவே இருக்கும். அதுவும் இக்கவிதை எழுதப்பட்ட 1999 களில் ?
 
ஆதிக்க சக்தி ஓர் இனத்தையே அழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அழிப்பின் மூலம் கைப்பற்றுகின்ற ரத்தம் தோய்ந்த  நிலங்களின் மீது நின்று கூச்சலடைகின்றார்கள். உடன்பிறப்புக்களினதும் சொந்த இனத்தினதும் குருதியின் மீது நிற்கின்றவர்களைப் பார்த்து வெட்கிக்கின்ற மனோபாவம் எஸ் போஸிற்குரியது.  இங்கே எஸ் போஸ் ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி உணர்வுள்ள மனிதராகப் பரிமாணம் எடுக்கிறார்.
 
எஸ் போஸ் போரை விரும்பவில்லை. நிலமீட்பையும் நிலக்கைப்பற்றலையும் விரும்பவில்லை. எப்போதும் போல உயர் மட்டங்களே முடிவெடுத்து முடிக்கின்ற விடயங்கள் மீது சாதாரண மக்களின் நிலைப்பாட்டையும் கேட்கச் சொல்கிறார். எல்லாவற்றையும் பேசியே தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கடைசிவரை நின்றார்; அதையே பாடினார். கண் முன்னே தன் இனமே அழிந்து சீரழிகின்ற போது ஒரு கவிஞன் வேறு எதைத்தான் கேட்டுவிட முடியும்.
 
“எனது உடைந்த குரலில்
நானும் பாடவிரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை”
 
ஒரு கவிஞனின் குரலாக மட்டுமே எஸ் போஸின் கவிதைகளை அணுகமுடியாது. இது ஓர் இனத்தின் குரல். சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புகின்ற – ஆனால் வாழமுடியாத அளவு போர் மூண்டுள்ள சூழலில் உழல்கின்ற மனிதர்களின் குரல். அதனாலேயே எஸ் போஸும் நானும் பாடவிரும்புவதாக சொல்கின்றார்.
 
(02)
 
 
மனிதர்களில் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் முடிவில்லாத கனவு வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற இயல்பை பெற்றவுடன் மனம் ஆர்ப்பரித்து எல்லையற்று விரிகின்றது.
 
உலகத்தின் கோரப் பற்களாலால் குதறப்பட்ட மனிதர்கள் – ஒடுக்குமுறைகளுக்குள் வாழுகின்ற மனிதர்கள் – கனவு வெளிகளின் அசாத்திய எல்லைகளை அனுபவிக்கிறார்கள். போர் சூழப்பட்ட நிலம் ஒன்றில் வாழுகின்ற மனிதர்களின் கனவுலகம் சுதந்திரக் கனவுகளால் நிரம்பியிருக்கும். விடுதலை பற்றியும் சந்தோசங்கள் பற்றியும் நிறைந்திருக்கும். நிலத்திற்கான போராட்டம் ஒன்றில் நிலம் பற்றிய கனவுகளை மனிதர்கள் அதிகமாக உருவாக்குவார்கள். தமிழர்களுக்கு நிலம் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களுக்குள் சாதிய அமைப்பே நிலத்தை அடிப்படையாகக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதி சுதந்திரம், பெண்விடுதலை போன்று காணி நிலத்தையும் வேண்டிப்பாடியுள்ளார். தமிழர்கள் நிலங்களை உயிருள்ளவையாக பாவிக்கிறார்கள். உயிரின் உற்பத்திக்கான களமாக நினைக்கின்றார்கள். தோட்டமும் வயலும் கால்நடைகளும் சந்தோஷங்களும் சோகங்களும் இறப்புகளும் இழப்புகளும் நினைவுகளும் நிறைந்ததாக நிலத்தை அணுகுகிறார்கள். ஈழத்து நிலங்கள் இவற்றுடன் கூடவே போரையும் வீரத்தையும் துரோகத்தையும் நினைவுபடுகின்றன.
 
நாங்கள் ஒரு இரவில் நூறு கனவுகளைக் காண்கிறோம்
பிரிவு பற்றிய கனவுகள்
பிரிவு பற்றிய கனவுகள்
எல்லாமே அது தான்.
எங்கள் கனவுகளில்
பாலைவனங்கள் எங்கள் தலைகளின் மேலே சுழல்கின்றன.
மனிதர்களற்ற தெருக்களில்
கூரைகள் இல்லாத வீடுகளில்
பயிர்களற்ற தோட்டங்களில்
காளான்கள் பூத்தன
முட்கள் பெருகிப் பெருகி வானையளந்தன.
 
கற்பனை சாத்தியமாகின்ற பெருவெளியிலும் நாங்கள்  பிரிவையே கனவு காண்கிறோம். எங்களுக்குள் சாத்தியமான எல்லா வெளியையும் பிரிவு நிரப்பிவிடுகின்றது. பிரிவு என்பது எங்களோடு பிரிக்கமுடியாத ஒன்றாகிப்போனது. போராட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும்  ஒருத்தரை இணைக்கவேண்டிய கட்டாயத்தின் மூலம் எல்லாக்  குடும்பத்திலும் பிரிவு வலுக்கட்டாயமாக சேர்ந்துகொண்டது. கூடவே இடப்பெயர்வு. நிலங்களைச் செல்கள் உழுது தள்ள – உயிரைக் காப்பாற்ற சொந்த நிலங்களிலிருந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் லட்சக்கணக்கில் கிளம்பிய மனிதர்களின் கனவுகளில் பிரிவைத் தவிர வேறு எது ஆக்கிரமிக்க முடியும். இயற்கையினையும் சொந்தங்களையும் கட்டிக்கொண்டு வனப்பாக வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்து ஆளரவம் அற்ற தெருக்களையும் செல்களாலும் கிளைமோர்களாலும் சிதறடிக்கப்பட்ட வீடுகளையும் குருதியுறைந்த தெருக்களையும் இராத்திரிகளில் கேட்கின்ற அழுகுரல்களையும் சிதைந்து போன உடல்களையும் கடந்து இடம்பெயரும் போது பிரிவுத்துயர் அன்றி வேறெதுவும் நினைவிலும் கனவிலும் எழாது.
 
ஒவ்வொரு கிராமமாக இடம் பெயர்ந்து செல்லும் போதும் அவர்களை வரவேற்க  புதிய கிராமங்கள் மீதம் வைத்திருப்பது முன்னைய மக்களின் பிரிவுத்துயர் மட்டுமே. ஆட்கள் இல்லாமல் கைவிடப்பட்ட கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் போதும் அங்கே கவனிக்க ஆட்கள் இல்லாமல் பற்றை எழும்பிப்போன நிலங்கள் அவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரே சேதி பிரிவு. அகதிகளின் கனவுகள் நிலம் ஒன்றின் பிரிவைப் பற்றியதாகவே  இருக்கும்.
 
காலத்தை நெய்தவனை
சபித்தன உக்கிப்போன பொம்மைகள்.
எங்களைக் கடந்துபோகின்ற ஒவ்வொரு சுவடுகளிலிருந்தும்
பெருமூச்சு விடுகின்ற பட்சிகள்
எங்கள் கனவுகளின் காட்சிகள்
தெளிவற்றும் உருவமற்றும்
இரவில் சிதறின
திசைகளில் எது சூரியனின் திசை
எது நாங்கள் பயணிக்கின்ற திசை?
 
மக்கள் கொத்துக்கொத்தாக இடம் பெயர்கின்றார்கள். தங்கள் உடமைகளை சைக்கிளிலும் வாகனங்களிலும் கட்டிக்கொண்டு பிள்ளைகளை இடுப்பில் சுமந்தபடி மழை வெயில் இரவு பகல் என்று எதையும் பொறுப்படுத்தாமல் இடம்பெயர்கிறார்கள். அடர்ந்த வன்னிக்காடுகளுக்குள்ளாக இருட்டினில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு நடக்கிறார்கள். முன்னரே மக்கள் நடந்த தடங்களிலும் – இனி வரப்போகின்ற மக்கள் நடப்பதற்காக தங்களையும் உருவாக்கியபடி நடக்கிறார்கள். நிலத்தைப்பற்றிய கனவுகள் இருட்டில் சிதற அழிய இந்த கொடூர காலங்களை நெய்தவனை சபித்தபடியே திசையறியாத வனாந்தரத்துக்குள் உக்கிப்போன பொம்மைகளாக நடக்கிறார்கள்.
 
 
நாங்கள் பிரிந்து விட்டோம்
எமது நிலத்தை, எமது பூர்வீகத்தை
எமது பொறுமையை, எமது மௌனத்தை.
 
பின்குறிப்பு.
எஸ் போஸின் “காலத்தை நெய்தவனைச் சபித்தன பொம்மைகள்” என்ற கவிதையினை முன்னிறுத்தி இக்கட்டுரையின் பகுதி (02)   எழுதப்பட்டிருக்கிறது.
 
* எஸ் போஸின் படைப்புகள்  முழுமையாக தொகுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. 2007 சமாதானக் காலப்பகுதியில் வவுனியாவில் உள்ள தனது வீட்டில்  ஏழு வயதுப் பிள்ளையின் முன்னர்  இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் 2016இல் வடலிப் பதிப்பகம் மூலம் கருணாகரன், ப. தயாளன் மற்றும் சித்தாந்தனின் விடா முயற்சியால் “எஸ் போஸ் படைப்புகள்” என்று தொகுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் தொகுக்கப்படாமல் அவரின் சில  படைப்புகள் மறைந்து வாழுகின்றன.
 

தர்மினி – அவளொருத்தி கீறிய படம்

 


 
இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளினையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண மக்களைப் பற்றியும் , இன்னொரு தொகுதி இடம்பெயர்வு – புலம்பெயர்வுகள் பற்றியும் இன்னுமொரு தொகுதிக் கவிதைகள் புலம்பெயர் அகதி வாழ்க்கை பற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள் – இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.
 
வெளிச்சத்தின் உண்மைகள்
இருட்டில் மன்னிக்கப்படுகின்றனவா?
மறைக்கப்படுகின்றனவா?
 
என்று ” குரல்கள் ” என்ற கவிதையில் கேள்வி கேட்கின்ற தர்மினி
 
இருளே உண்மை
இருளோ வெட்கம் அறியாது
அது கசிந்த மனதுகளைத் துடைக்கும் கடுதாசி.
 
என “இருளைத் தரிசிக்க…. ” என்ற கவிதையில் அவரே பதிலளிக்கிறார்.
 
சுதந்திரம் என்பதை என்னவென்றே அறியாத காலத்தில் உழன்ற மக்களின் உணர்வுகளை பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. போராட்ட குழுவும் அரசாங்கமும் ஒப்பந்தங்கள் செய்வதும் – குறுகிய காலத்திலேயே அவை அனைத்தும் மீறப்பட்டு மீண்டும் இருள் சூழ்வதும் ஈழத்து மக்களுக்கு புதிதான ஒன்றும் இல்லை. இருந்தும் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் சுதந்திரத்தைப் பற்றிய கனவு மேலெழுகிறது. சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே சுதந்திரத்தை அளிப்பதைப் போன்ற அவல நிலைமையை அடைந்துவிட்டார்கள். இதனால் சுதந்திரம் என்பதே என்னென்று அறியாமல் – அதற்காக காத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தைப் பற்றி பாடியும் எழுதியும் அலுத்துவிட்டார்கள். எழுதிய அனைத்துமே சருகுகளாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
 
வெளியே மழையில்லை
கருமுகிலில்லை
புழுக்கமில்லை
ஆயினும் மழை பற்றிக் கதைக்கலாம் தானே?
 
– மழை முறியுமா?
 
உதிரும் மிகுதி வார்த்தைகளின்
குவியலைச் சுமக்கிறது அடிமரம்.
 
– அவளொருத்தி கீறிய படம்
 
போர்க்கவிதைகள் வெறுமனே வார்த்தைகளையும் உணர்வுகளையும் மட்டும் கொண்டுவருவன அல்ல. போர்க்கவிதை ஒன்றின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. கவிதையுடன், அதன் பின்னணியில் ஓடுகின்ற வரலாறும் கடத்தப்படுகிறது. எந்த ஒரு இலக்கியத்தின் பின்னும் அதன் பின்னணி வரலாறு காலம் காலமாக கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் போரிலக்கியங்கள் கடத்துகின்ற வரலாறு மிகவும் வலிமையானது. “1995 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி ” என்ற கவிதை பொதுவான வாசிப்பில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் தர்மினி குறித்த தினத்தைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றார்,
 
” இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.
 
அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள் உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம். ” – அவரின் தூமை வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
 
கவிதையாக உருவெடுக்கின்ற பொழுது,
 
அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி
அதே நாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
அதே ஆதரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.
 
தர்மினியை – பொதுவாக கலைஞர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு பின்னர் அடிமையாகிப்போகின்ற தனிமை சூழ்ந்துகொள்கிறது. அகதியாக அந்நியதேசத்து சென்ற எல்லா சாதாரண மனிதர்களையும் தனிமை வாட்டும் என்றால் ஒரு கலைஞரை எத்தனை சித்திரவதை செய்திருக்கும். ஊரைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஞாபகத்திலிருந்து பாடவேண்டிய துர்பாக்கிய நிலையை புலம்பெயர் கலைஞர்கள் அடைந்துவிடுகின்றார்கள். இதனால் தர்மினியின் கவிதைகளில் தனிமையோடு ஏக்கமும் பிரிவுத்துயரும் சேர்ந்து ஒட்டிக்கொள்கிறது.
 
” சுவர்கள் ஒட்டிக் கிடக்கின்றன
விளக்கின் நிழல்
ஒரு பூச்சி
தனித்துலையும் மனது ”
 
– இருளோடு
 
” ஒன்றொன்றாய் …
பிடிக்காத நாளை
பிடிக்காத மனிதரை
பிடிக்காத எதுவொன்றையாவது நினைத்து
கிழித்தபடி
இதோ மிச்சமாக
தனியாக
நானும் இக்கணமும் ”
 
– நாட்களைக் கழித்தல்
 
” மறுபக்கம் திரும்பி என்னிடம்
நீயொரு அகதி என்கிறது
மற்றொரு நாவு
பொது வெளியில்
ஒளிந்துகொள்கிறது
உயர்த்த முடியாத
குரலுக்காக மௌனிக்கிறது ”
 
– என் நாவு பிளந்து
 
தர்மினியின் ” முத்தங்கள் ” என்ற கவிதை முக்கியமானதொன்று. கவிதை முழுதும் உணர்வுகள் கொட்டிக்கிடந்தாலும் – அதை மீறி கவிதை எடுத்துக்கொண்ட கலாசார வேற்றுமை மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் முத்தங்கள் சாதாரணமானவை. முத்தங்கள் ஆதரவின் குறியீடு. அன்பின் வெளிப்பாடு. எல்லாச் சந்திப்புகளிலும் முத்தங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் எமது பணப்பாடுச் சூழல் அப்படியானதல்ல. அந்நியர்களுடனான முத்தம் காமத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. சொந்தங்களுக்கு முத்தம் கொடுப்பது ஐந்து ஆறு வயதுகளோடு மறைந்துபோய் விடுகிறது. பின்னர் முத்தம் சொந்தகளுக்கு வெட்கத்தின் குறியீடாகவும் அந்நியர்களுக்கு அருவருப்பின் குறியீடாகவும் மாற்றமைடைகின்றது. அம்மா- மகன் முத்தங்கள் வெளிப்படுத்துகின்ற அர்த்தங்களை விட; அப்பா- மகள் முத்தங்கள் விமர்சனப் பார்வையில் பார்க்கப்படுகின்றன. இதெல்லாம் இந்த மண்டிப்போன கலாசாரத்தின் குப்பைகளாக இருக்க தர்மினி இன்னொரு முத்தத்தைப் பற்றிப் பாடுகிறார். கொடுக்கப்படாத முத்தம். மகள் அம்மாக்கு கொடுக்க மறந்த முத்தத்தைப் பற்றியது. புலம்பெயர்ந்த தேசத்தில் யார்யாருக்காகவோ ஒட்டுகின்ற கன்னங்கள் குவிக்கின்ற உதடுகள் – அம்மாவிற்காக ஒட்டவும் குவியவும் மறந்ததைப்பாடுகின்றார்.
 
“யன்னலால் பார்த்தபடி நிற்கும் அம்மாவைக்
கொஞ்சி அணைத்திருக்கலாமோ?”
 
– முத்தங்கள்
 
மழையைப் பற்றி கவனத்துக்குரிய மூன்று கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. முதலாவது மழையும் நெருப்பும். ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டம் – போராட்டக் குழுவும் அரசாங்கமும் போரில் உக்கிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது போக்குவரத்து , பண்டப்பரிமாற்றம் என்பன கூடுதலாக தடைப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்க – பொருட்கள் தீர்ந்துவிட்டன. கள்ளமாக பொருட்களை கொண்டுவந்து சேர்த்தாலும் கேள்வியின் அளவிற்கு போதாமல் போனது. கூடவே ஒவ்வொன்றினது விலையும் பத்து பன்னிரண்டு மடங்காக உயர்ந்தது. காரணம் பொருட்களுடன் உயிரையும் பணயம் வைத்தே பண்டப் பரிமாற்றம் நடந்தது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பால்மாக்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதே சமயம் வெளிநாட்டு உதவிகள் நிறையைக் கிடைத்து கைநிறையப் பணம் புழங்கியது. ஆனால் பொருட்கள் தான் இல்லை.
 
” கொள்ளைக்காசிருந்தும் விற்கயாருமில்லை ”
 
– மழையும் நெருப்பும்
 
மற்றைய இரண்டு மழைக் கவிதைகளும் ஒப்பீட்டுக் கவிதைகள். ” சத்தமில்லாத மழை ” மற்றையது ” மழைச்சத்தம்” . இவ்விரண்டு கவிதைகளும் வெவ்வேறான மனநிலைகளிலிருந்து எழுதப்பட்டவை. வெவ்வேறான நிலச்சட்டகம். எங்கள் ஊர்களில் மழையின் சத்தம் என்பது வெறும் முகில்களில் இருந்து நீர்த்தாரைகள் வீழ்வது மட்டுமல்ல –
 
” மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி
கிணறு வழிய
பள்ளத்து வெள்ளங்களில்
தவளைகள் கத்தும் ”
 
– மழைச்சத்தம்
 
இதையெல்லாம் பார்த்து கேட்டு சிலிர்த்த உடல் அந்நிய தேசம் ஒன்றில் மழையின் சத்தத்தை –
 
” மின்னி ஒரு வெளிச்சம்
என் முன் விழ
திரைவிலக்கி வானம் பார்த்தால்
மழைக் கயிறுகள்
மண்ணில் ”
 
– சத்தமில்லாத மழை
 
ஊர்களில் –
 
” கூதலும் சத்தமுமாக மழை ”
 
– மழைச்சத்தம்
 
அந்நிய தேசத்தில்
 
” மண்ணில் கரைந்து கொண்டிருந்தன ”
 
– சத்தமில்லாத மழை
 
” ஒரு குருவி
அதற்கான வானொன்றைப் படைத்த
இரு கரங்களிடம்
முறைப்பாடுகளை வைப்பத்தைத் தவிர
வேறு வழியில்லை ”
 
– முடிவற்றது
 
 
பின்குறிப்பு
 
தர்மினியால் “1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி” என்ற தலைப்பில் தூமை இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தூமை இணையதளத்தை மேலும் துலாவிய பொழுது – இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக தர்மினி மற்றும் மோனிக்கா ஆகியோர் செயற்படுகிறார்கள் என்றும் பெண்ணியம் சார்ந்த உரையாடல்கள் பெண்களின் படைப்புக்கள் என்று முற்றுமுழுதாக பெண் இயக்கத்தால் நடத்தப்படுகிறதும் என்றும் புரிந்துகொண்டேன். தொடர்ச்சியான இயங்குகையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தூமை -ஒரு  காரணப்பெயராக அடையாளப்படுத்தப்படுகிறது. “இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
 
 

அனார் – வெளிச்சத்தின் குரல்

 
 


 
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
 
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
 
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
 
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்”
 
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
 
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “
 
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”
 
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக்  கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும்  அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
 
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும்.  கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும்  நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
 
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”
 
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”
 
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது  படைப்பு வெளியிலிருந்து கவிதையினை  உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
 
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
 
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
 
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும்  என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை”  என்கிறார்.
 
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு  சிறந்த முன்னுதாரணமாக  மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
 
பின்குறிப்புகள்
 
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு        “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
 

சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

 

9
நன்றி – குங்குமம்

 
மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
 
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
 
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
 
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
 
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
 
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
 
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
 
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
 
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
 
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
 
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
 
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
 
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
 
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
 
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 
இல்லை
ஒன்றே ஒன்று
 
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
 
 
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
 
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
 
 
****************
 
 
 
 
 
 
 
 
 
 

கழைக்கூத்தாடியின் இசை – திருத்தப்பட்ட வடிவம்


முன்குறிப்பு
2017 ஆம் ஆண்டு இதே திகதியில் எழுதப்பட்ட கட்டுரையான “சிற்பி – கழைக்கூத்தாடியின் இசை – தேவிபாரதி” இன் திருத்தப்பட்ட வடிவம் இது. ஆண்பால் விகுதிகள் பலர்பாலிற்கு மாற்றியதோடு மிக எளிய வசன அமைப்பு மாற்றங்கள் சிலதையும் செய்துள்ளேன். மற்றபடி தகவல்கள், கருத்துக்கள் எதிலும் மாற்றமோ சேர்க்கையோ செய்யவில்லை.
(01)
எழுத்தாளர் என்ற தொழிலின் புறவுருவயமான விளக்கம் இலக்கியத்தையும் மக்களின் தேவைகளையும் எழுதுவது என இன்றைய சூழலில் கருத்து நிலவுகிறது. ஒரு வகையில் அது மறுக்கமுடியாத உண்மை.எழுத்தாளர் என்பவர் அதனாலேயே அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த இலக்கியங்களையும் மக்கள் தேவைகளையும் எழுதுகின்ற சமூகப்பணியில் எழுத்தாளர் தனக்கென அடைகின்ற ஆத்ம திருப்தி அவரின் வீச்சு எல்லையை அவரே நிர்ணயிப்பதில் தான் இருகின்றது. இந்த நிர்ணயிப்பில் வெற்றி பெறுகின்ற எழுத்தாளர்கள் தான் இலக்கியத்தில் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களின் விஸ்தரிப்பான எழுத்தின் வலிமையை, அவர்கள் உருவாக்குகின்ற எழுத்துலக சிருஷ்டிப்புக்கள் தான் காட்டும். ஒரு சம்பவத்தை அல்லது ஒரு காட்சியை வாசகர் ஊடாக படரவிடுவதும் அதில் உலவுகின்ற பாத்திரங்களை வாசகருடன் பேசவைப்பதும் அதனூடாக உணர்வுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதும் என்ற பொது மொழியைத்தாண்டி இலக்கியங்களையும் சினிமாவையும் கலக்கின்ற களத்தை உண்டாகிகொண்டு அதில் உணர்வுகளை பேசுகின்ற தனித்துவமான எழுத்து கழைக்கூத்தாடியின் இசை.
எழுத்தாளர்கள் கையாள்கின்ற மொழியின் உரு , அவர்களின் கதைகருவின் மீதான அதீதத்தை கூட்டுவதாக இருக்கும். எந்த வகை கருவிற்கும் இது பொருத்தமானது. சரியான மொழியின் உருவில் உணர்வுகள் வெளிக்கொண்டுவரும் போது அதில் உருவாக்கப்படுகின்ற அழகியல் அற்புதமானதாக இருக்கும். பெரும்பான்மையான கதைகளில் இந்த உணர்வழகியல் கதை மாந்தர்களுக்கூடாகவே வெளிபடுத்தப்படும். வெகுசில படைப்புக்களில் தான் அதன் சூழலும் அதில் உள்ள உயிரற்றவையும் கூட உணர்வழகியலை வெளிக்கொண்டுவரும். அந்த கதைக்களம் மற்றும் உணர்வுப்பின்னணி இரண்டும் ஒன்று சேரும் போது வாசகருக்கு கதையின் மீது ஏற்படுகின்ற ஒன்றிப்பு மிக பலமானதாக இருக்கும். வாசகர் களத்தில் நின்று ஒரு முறை களத்தை சுற்றி பார்க்கும் போது அங்கிருக்கின்ற சிலையிலிருந்து அசையும் மனிதர்கள் வரை எல்லோரிடமும் பீடித்துபோயிருகின்ற கதைப்பின்னணி உணர்வழகியலின் உச்சம்.
எந்த சந்தர்ப்பத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடக்கூடிய இந்த நுட்பம் கழைக்கூத்தாடியின் இசையில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் சில போதைக்குறியீடுகள் மூலம். சினிமா, சிகரட், மாது, காப்பி, காதல், இலக்கியம் எல்லாமே போதையின் குறியீடுகள் தான். அவை ஒவ்வொன்றிலும் இந்த உணர்வழகியல் ஊடுருவி செல்கின்றது. கதை மாந்தர்களிடம் பீடித்திருகின்ற அவலம், கதையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமாக பேசப்படுகின்றது. எங்கிருந்தோ கடற்கரைக்கு காற்று வாங்க வருகின்றவர்களிடம் கூட.

“அந்த இடம் அரவாணிகளுக்கும் ஹோமோ செக்சுவல்களுக்குமுரியது. முகத்தைச் சுழித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் சுழித்துக்கொள்ளலாம். அடுத்த ஐம்பது மீட்டரில் வேசிகளின் உலகம் தொடங்குகிறது. கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நீண்டும் விரிந்தும் பரந்தும் கிடக்கும் அவ்வுலகமே இப்பெருநகரவாசிகளுக்கு அந்தப்புரம். உயரமான விளக்குத் தூண்களிலிருந்து கசியும் பாலொளிக்குக் கீழே படர்ந்திருக்கும் புகையிருளுக்குள் தம் மஞ்சங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இம்மாநகர ராஜாக்களும் ராணிகளும் கூத்திகளும் சேடிகளும். இப்பெருநகரில் காதலையும் காமத்தையும் பரிமாறிக்கொள்ள வேறு உருப்படியான இடமெதுவும் இல்லை. காற்று வாங்க வந்தவர்களுக்கு அருவருப்புத் தாளவில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டு உறுமும் கடலை நோக்கி வேகமாக நடக்கிறார்கள். சிலர் கள்ளப் பார்வை பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு ஆச்சரியமளிக்கிறது,
“அம்மா, அம்மா”
“என்ன?”
“அந்த அங்கிளும் ஆண்ட்டியும் என்ன செய்யறாங்க?”
“வெளையாடறாங்க”
சங்கடத்துடன் பதிலளித்தபடி தாய் அவர்களை இழுத்துச் செல்கிறாள்.
“அது என்ன வெளையாட்டு அம்மா?”
“கண்றாவி, இதுகளுக்குக் கொஞ்சமாச்சும் வெக்க மிருக்குதா? பப்ளிக் பிளேஸ்ல இதென்ன நியூசென்ஸ்?”
“நீங்க பேசாம நடங்க”

(02)
சிறுகதை என்ற வரையறைக்குள் கதைக்குள் உலாவ வேண்டிய மாந்தர்களும் சம்பவங்களும் ஏற்ற இறக்கங்களும் சம்பவங்களும் வரையறைக்குட்பட்டவை. அந்த வகையில் சிறுகதை என்ற பரிமாணத்தை தாண்டி குறுநாவல் என்ற பரிமாணத்தை கழைக்கூத்தாடியின் இசை பெறுகின்றது. என்னால் வாசிக்கப்பட்ட தமிழை மூலமொழியாக கொண்டு எழுதப்பட்ட முதல் குறுநாவல் இதுவே. புனைவுகளை ஆங்கிலத்தில் Flash fiction ,Short story ,Novelette ,Novella ,Novel என்று ஐந்து விதமாக வகைபடுத்துகின்றனர். கழைக்கூத்தாடியின் இசை Novelette என்கிற வடிவத்திற்குள் உட்புகுகிறது. ஒரு குறுநகர வாழ்வியலை ஒவ்வொரு அணுவாக பேசிக்கொண்டே நீள்கிறது கழைக்கூத்தாடியின் இசை. ஒரு பழைய மான்சனில் தொடங்கி வீதிகள், சாப்பாட்டு கடைகள், சிலைகளின் அடிவாரம், சினிமா தளங்கள், கடற்கரை, புகையிரத நிலையம், ஒரு அழுக்கான அறை என்று ஒரு மனிதர் சாதரணமாக நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம் கதையினை ஓடவிட்டு ஒவ்வொரு சந்திலும் ஒவ்வொரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். எல்லா சந்திகளும் ஏதோ ஒரு சுமையுடன் செல்லும் வாசகருக்கு இன்னொருபடி சுமையினை ஏற்றிவிடுகின்றது. ஒரு நிதர்சன தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை சிக்கல்களை ஒவ்வொரு புள்ளியும் விரிக்கின்றது.
ஆரம்பத்தில் எழுத்தாளர் உருவாகுகின்ற இலக்கிய உட்புகுத்தல்கள் ஒரு வாசகராக கதையின் வீரியத்தை குறைப்பதாக தோன்றுகின்றது. அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. நிதர்சன வாழ்க்கை என்ற புள்ளியில் நின்று சம்பவம் ஒன்றை விரித்துக்கொண்டு செல்லும் போது அந்த சுவாரஸ்யமான வாசிப்பு தன்மைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற உணர்வை உண்டாகியது. தெளிவாக சொல்ல போனால் இலக்கிய திணிப்பு போன்றது.

அங்கிருந்து நேர் கிழக்கே நடந்தால் காற்சிலம்பை உயர்த்திப்பிடித்தபடி ஆகாயத்தை வெறித்துக்கொண்டிருக்கும் கண்ணகியின் பொற்பாதங்களைச் சேரலாம். “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்?” எனப் பரிவுடன் கேட்க அங்கே அவளுக்கு யாருமில்லை. சாலை நெடுகிலுமுள்ள கோட்டைக் கொத்தளங்களுக்குச் சுழலும் விளக்குகளுடன் விரையும் அமைச்சர் பெருமக்களுடையவும் துறைச் செயலாளர்களுடையவும் இயக்குனர்களுடையவும் காவல்துறை அதிகாரிகளுடையவும் வாகனங்களின் இடையறாத சைரன் ஒலி. அடிக்கொருதரம் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள், இளைய சமுதாயத்தின் அசுரவேக இருசக்கர வாகனங்கள். எல்லாக் கண்காணிப்புக்களையும் மீறிச் சிலசமயங்களில் யாருக்காவது மண்டை சிதறுகிறது, முட்டிகள் உடைகின்றன. ‘ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தன் அரும்பெறர்ப் புதல்வனை யாழியின் மடித்தோனின் பெரும்பெயர் புகாரை’ப் போல இல்லை அவளுக்குக் காற்சிலம்பை உயர்த்திக்காட்டி நிற்கக் கிடைத்திருக்கும் மேடை அமைந்துள்ள காமராஜர் சாலை.

இது போன்ற மிக சொற்பமான இடங்களில் அவரின் வழமையான நடையில் கடந்திருக்க மிகத்தரமான அகச்சூழல் பார்வையினை ஏற்படுத்தியிருக்கும்.
(03)
குறுநாவல் ஒன்றுக்குள் பல சம்பவங்கள் அனுபவங்கள் கருத்துகள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். ஒவ்வொரு இடத்தையும் கோர்த்து எடுத்துக்கொள்ள கதைமாந்தர்கள் பயன்படுத்தபடுவார்கள். கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி கதைமாந்தர்கள் உலாவுவார்கள். ஒரு சாதாரண மனிதனைக்கொண்டு ஒரு நகரத்தின் அவலத்தை வெளிக்கொண்டுவருவது என்பது, அவனின் பயணிப்பிலும் நாளாந்ததிலும் கேள்விகளை ஏற்படுத்தி உயிர்ப்பை இல்லாமல் செய்துவிடும். கழைக்கூத்தாடியின் இசை எல்லா முடுக்குகளிலும் பயணிக்கும் பாத்திரம் ஒன்றை எதிர்பார்கிறது. அந்த எதிர்பார்ப்பை எழுத்தாளர் கைக்கொண்ட விதம் போற்றுதலுக்குரியது.
சினிமா என்ற ஊடகம் தோற்றத்தில் பிரமிப்பையும் உள்ளடக்கத்தில் சொல்லமுடியாத வேதனைகளையும் துயர்களையும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் புறக்கணிப்பையும் கொண்டது. சினிமாவுக்கு சமவுடமை வாதம் கிடையாது. ஒருவகையான மேலாதிக்க வாத போக்குடைய சினிமாவில் அதிகம் உழன்று போகின்ற உழைப்பாளர் வர்க்கம் தான் உதவி இயக்குனர்கள். இதிலும் மூன்றாம் படி நான்காம் படி உதவி இயக்குனர்கள். ஒரு நகர வாழ்க்கைக்கு அதன் எல்லா பிரவாகங்களுக்கும் மிக கச்சிதமான படைப்புகள் அவர்கள். அவர்கள் அனைத்து விதமான மக்களுடனும் பழகும் பாக்கியம் பெற்றவர்கள். எல்லா தட்டு மக்களின் வாழ்கையையும் வாழ்பவர்கள். நகரின் பெரும்பாண்மையை தம்முள் இணைத்து கொண்டவர்கள்.
இலக்கியம் தெரிந்த உதவி இயக்குனர்கள் என்றால் என்ற கற்பனை உத்திதான் கதையின் முழு நகர்விற்கும் அச்சாணி. காணுமிடமெல்லாம் இலக்கியத்தாலும் இலக்கிய கர்த்தாகளாலும் அவர்களின் சிருஷ்டிபுக்களினாலும் கதா மாந்தர்களை நகர்த்தி அவர்களின் வாழ்கையின் ஒவ்வொரு நகர்வையும் இலக்கிய ரசனைக்குட்படுத்தி இருக்கிறார்.
(04)
கழைக்கூத்தாடியின் இசை.
ஒரு பிரமிப்பான தலைப்பும் பொருத்தமும்.ஒரு அவலத்தின் குறியீடாக ஒரு இறுக்கமான முயற்சியும் அதற்கான மிக குறைவான கூலியும் என்ற துன்பியல் வாழ்க்கை கழை கூத்தாடிகளின் உடையது. சீரானது என்ற எதிர்பார்ப்புடன் உயரத்தில் வைக்கப்படும் தடியின் மேல் இன்னொரு தடியை கைகளின் அகலங்களில் விரிந்து பிடித்துக்கொண்டு அசைவுகளுக்கு ஏற்ப தடியை சமநிலைப்படுத்தி தள்ளாட்டத்தில் வாழ்கின்ற வாழ்க்கை அவர்களுடையது. அவர்களுள் மிக சிறிய பெண் குழந்தையிடம் தட்டினை கொடுத்து சன்மானம் கேட்டு அனுப்புவார்கள். அந்த குழந்தையோ ஒரு தட்டு ராபானையோ அல்லது ஏதாவது ஒரு ரலிய இசைக்கருவியை வாசித்துக்கொண்டு சோக கீதம் பாடிக்கொண்டு கூத்தடியினை சுற்றி சுற்றி வரும். அந்த இசையின் கொடூரம் கூத்தாடியின் கவனத்தை இன்னும் கூர்மையாகும். இந்த உளவியல் பின்னணி அந்த இசைக்குண்டு.
அதே வாழ்க்கை தான் ஒவ்வொருவரினதும் எம்மா சுற்றி இருகின்ற இசை இன்னும் கவனிக்கிசெய்வதற்கு உரியதே தவிர சேர்ந்து உழல்வதற்கு அல்ல.
அந்த குழந்தை கேட்கும் பணம் பிச்சை அல்ல உழைப்பின் கூலி.
மிக கச்சிதமான குறுநாவல் ஒன்றை வாசித்த திருப்தி கழைக்கூத்தாடியின் இசையினை வாசித்த போது கிடைத்தது. தேவி பாரதி என்ற ஆளுமையின் ஆழமான எழுத்து இன்னும் கொண்டாடப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனாக வாசகனுக்கு தேவி பாரதி வெற்றி கழைக்கூத்தாடியின் இசையில் கௌதம நீலாம்பரனின் இதழ்களிலிருந்து சத்தமில்லாமல் உதிர்ந்து தன் காலடியில் விழுந்து நசுங்கிய பழுப்பு நிறப் புன்னகை போன்றது.
இந்தக் கட்டுரையின் முன்னைய வடிவம்
https://brinthansite.wordpress.com/2017/05/09/சிற்பி-கழைக்கூத்தாடியி/
தேவி பாரதியின் கழைக்கூத்தாடியின் இசை என்ற குறுநாவலை வாசிக்க
http://www.kalachuvadu.com/archives/issue-197/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
அவரின் ஏனைய படைப்புக்களை வாசிக்க
http://devibharathi.blogspot.in/

பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
 
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
 
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
 
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
 
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
 
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
 
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
 
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
 
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
 
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
 
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
 
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
 
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
 
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
 
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 
இல்லை
ஒன்றே ஒன்று
 
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
 
 
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
 
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிச்சத்தின் குரல் – அனாரின் கவிதைகள்

தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கையை முன்னிறுத்தி எழுதிய குறிப்பில் அவரின் கவிதைகள் பற்றி இப்படி எழுதியிருக்கிறேன்,
இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள்இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.”¹
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
 
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
 
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
 
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்” ²
 
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
 
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “²
 
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”²
 
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக்  கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும்  அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
 
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும்.  கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும்  நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
 
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”²
 
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”²
 
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது  படைப்பு வெளியிலிருந்து கவிதையினை  உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
 
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
 
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும்  என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை”²  என்கிறார்.
 
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு  சிறந்த முன்னுதாரணமாக  மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
 
பின்குறிப்புகள்

  1. http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/
  2. இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு        “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.

வெட்டுக்கிளியும் அடர் வனமும்

முன்குறிப்புகள்

  1. எம். ஏ. சுசிலாவின் பாராட்டு விழாவில் பேசிய ஜெயமோகனின் காணொளியை பார்க்கக் கிடைத்தது. கிளாசிக் நாவல்கள் பற்றிய உரையாகவே இது அமைந்திருந்தது. இணைப்பு – https://www.youtube.com/watch?v=D4HesSrL5Dg&t=1947s இதனை சுருதி டிவி தெளிவாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
  2. Why Read the Classics?” என்னும் தலைப்பில் Italo Calvino எழுதிய கட்டுரையினை வாசித்துப்பார்க்கலாம்.
  3. தமிழில் பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். “நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்? – இடாலோ கால்வினோ“.
  4. வல்லினம் நவீன் எழுதிய இலங்கை வருகை பற்றிய கட்டுரை – http://vallinam.com.my/version2/?p=5191
  5. இக்கட்டுரையினை வாசித்த பின்னர் ஜெயமோகன் தனது ப்ளோகில் எழுதிய குறிப்பு – https://www.jeyamohan.in/108034#.WsrzUtNuau5
  6. அனோஜனின் கேள்வியும் ஜெயமோகனின் பதிலும் –https://www.jeyamohan.in/108231#.WswUotNuau4

வவுனியா பொது நூலகத்தில் என் வாசிப்பு கிளாசிக்குகளுடனேயே ஆரம்பமானது. முதன்முறைகளில் இரவல் பகுதியில் நவீன நாவல்களென்று எதுவும் என் கண்களுக்கு தென்படவில்லை. ஆனால் இதற்கு முன்னரே சில லத்தின் அமெரிக்க நாவல்களை வாசித்திருக்கிறேன். நூலகத்தின் இரவல் வாங்குகின்ற பகுதியின் தொங்கல் சுவரோடிருக்கின்ற ராக்கைகளில் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் அடுக்கிவைத்தபடியே இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு வருட கணக்காய்வின் போது மட்டுமே எடுத்து மீண்டும் அடுக்கப்படும் என்ற துயர நிலையிலிருந்தன. ஆனால் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு மட்டும் நான்கு பிரதிகள், கரமசோவ் சகோதரர்கள் இரண்டு, துர்கனேவின் தந்தையும் தனயரும் இரண்டு பிரதிகள் என்று பின்பக்கத்தில் ஒரு இரவல் முத்திரை கூட அடிக்கப்படாலே மீண்டும் மீண்டும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. உயர்தரம் முடித்து தனித்திருந்த காலத்தில் ஒவ்வொன்றாக இரவல் வாங்கிக்கொண்டுபோய் வாசிக்கத் தொடங்கினேன். அதே சமகாலத்தில் நவீன இலக்கியம் நெருக்கமாகிக்கொண்டிருந்தது. இதனால் நூலக இரவல் பகுதிக்குள் ஒளிந்து கிடந்த நவீன நாவல்களையும் ஒவ்வொன்றாக வாசிக்கத்தொடங்கினேன். இப்போது யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ராக்கைகளுக்குள் சாரு நிவேதிதாவின் ராஸலீலாவும் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல்கள், விஷ்ணுபுரமும் கோணங்கியின் சலூன் நாற்காலியில் சுழன்றபடி தொகுப்பும் அசோகமித்திரனின் ஒற்றன், தண்ணீரும் யாரோ ஒரு சிலரால் வாசிக்கப்பட்டு மீண்டும் உறங்குநிலையில்(dormancy) கிடந்திருக்கின்றன. அதே சமயம் நாவல்கள் என்றால் புத்துயிர்ப்பு போல இருக்கவேண்டும் என்றும் மனதிற்குள் பதிந்துவிட்டது.
அருண்மொழிவர்மனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவகாந்தனையும் ” கனவுச்சிறை”யையும் அறிமுகப்படுத்தினார். கனவுச்சிறை நூலகத்தின் இரவல் வாங்கும் பகுதியில் இருந்ததைப்பார்த்து நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அதைவிட அதிக ஆச்சரியம் கனவுச்சிறை வாசிப்பின் பின்னர் கிடைத்தது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான நாவல் கனவுச்சிறை. அதன்பின்னர் இரண்டு முறை வாசித்தும் அதன் பிரமாண்டம், உள்ளடக்கம், வாழ்க்கை, அழகியல் என்று விஸ்தாரமாக நகர்கின்ற தன்மை கிளாசிக் ஒன்றிற்கான அறைகூவலாகவே இருக்கின்றது. இதனை என்னோடு இலக்கியம் பற்றிப் பேசுபவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இப்படியான சம்பவம் ஒன்று தான் இது.
வல்லினம் குழுவினர் கொழும்பிற்கு வருகை தருவதாக கிரிசாந்தும் பின்னர் திலீப்குமாரும் அறிவித்தல் தந்தார்கள். இருவருமே கட்டாயம் சென்று சந்திக்கச் சொன்னார்கள். அறிவித்தல் கிடைக்கும் போது கொட்டஹேனாவில் இருந்தேன். செட்டியார் தெரு பூபாலசிங்கம் புத்தகசாலையில் சந்திப்பு என்பதால் போக வசதியாக இருந்தது. திடீரென ஒழுங்கமைப்பு செய்யப்பட்டதால் முகப்புத்தகத்திலோ அல்லது வேறு வழியாகவோ எந்த அறிவித்தல்களும் உரியநேரத்தில் கிடைக்கவில்லை. சரியான நேரத்திற்கு பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்கு சென்றுவிட்டேன். வல்லினம் குழுமத்தை கோணங்கி எழுதிய “கதைபோடுகிறாள் கனிப்பெண்” என்ற கட்டுரையின் மூலமாக அறிமுகம், நவீனை ஜெயமோகனின் தளத்தில் நடந்த விவாதங்களின் மூலமும் ஸ்ரீதர் ரங்கராஜை “கீனோ” மொழிபெயர்ப்பின் மூலமாகவும் தான் அறிமுகம். வேறு யாரையும் அறிந்திருக்கவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்த மேமன்கவி, ஹாஸிம் உமர், ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் , அங்கிருந்தவர் நானறியாத ஒருத்தர் தவிர மிகுதி எல்லோரும் வல்லினக் குழுவினர். நவீனின் உதிரக் கள் என்கிற இலங்கை பயண அனுபவங்களை வாசிக்கும் போது இதே நிலை தான் மற்றைய இடங்களிலும் நடந்திருக்கிறது என என்னால் அறிந்துகொள்ளமுடிகிறது. கூட்டத்தில் ஒவ்வொருவரினதும் அறிமுகம் நடந்தது. வரிசையாக அறிமுகம் செய்துவைத்துகொண்டுவந்த மேமன்கவி என்னிடம் வந்து மௌனமானார். என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் அறிமுகம் இல்லாதது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இதை எழுதுவதற்கும் கூட இலகுவாக உணர்கிறேன். வல்லினம் குழுவினரின் ஒவ்வொருத்தராக எழுந்து தம்மைப் பற்றியும் தங்களின் பணிகள் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மட்டமான கேள்விகள் கேட்கப்பட்டு பதில்களும் வழங்கப்பட்டன. அந்நியமாக இருந்த அவ்விடத்தில் தயாஜியோடு பேச்சுக்கொடுத்தேன். அறிமுகமானேன். மற்றபடி ஒவ்வொருத்தரும் தங்களின் பணிகளாக மலேசியாவில் உள்ள தமிழ் தவிர்ந்த மற்றைய மொழி இலக்கியங்களை தமிழிற்கு மொழி பெயர்த்துக்கொண்டிருப்பதாகவும் ஊடக சுதந்திரம் இல்லாததை இட்டு கோபமுற்று தனித்த ஆளாக நின்று பத்திரிக்கைகளில் அரசியல் எழுதுவதாகவும் , அப்படியாக இன்னபிற என்று இலக்கியத்திற்கு உவப்பே இல்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். நவீன் உதிரக் கள்லில் எடுத்த முடிவைப்போல நானும் எடுப்பதாக இருந்தால் சிங்கப்பூர்- மலேசிய இலக்கியம் காட்டுக் குப்பை என்றும் எழுத்தாளர்கள் என்பதை அந்தஸ்தைதாக வைத்திருப்பவர்கள் என்றும் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே சந்திப்பில் ஒரே உரையாடலில் இந்த முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். நவீனின் குறுகிய காலப் பயணம் ஈழத்து இலக்கியம் பற்றிஅடிப்படையான புரிதல்களைக் கூட ஏற்படுத்தியிருக்காது. ஈழத்தின் புறச்சூழலைக் கூட ஒரு கிழமைப் பயணத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியாது. இதிலெங்கு இலக்கியம் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது?
கூட்டம் முடிந்தவுடன் ஸ்ரீதர் ரங்கராஜ் என்னும் அருமையான மனிதரை சந்திக்க முடிந்தது. மென்மையான பேச்சும் சிந்தனையும் உடையவர். கீனோ பற்றி நிறைய உரையாடினோம், கூடவே மொழிபெயர்ப்புகள் பற்றியும். அந்த நீண்ட வாதம் பற்றி பின்னராக எழுதவேண்டும். அப்போது தான் ஈழத்து நாவல்கள் பற்றிய பேச்சு தொடங்கியது. புத்தகசாலையில் நின்றதால், முன்னரே ஓரிரு முறை அங்கு கனவுச்சிறையை பார்த்திருந்ததாலும் கனவுச்சிறை பற்றிய அறிமுகத்தை வழங்கினேன். தேவகாந்தனை தான் அறிந்திருக்கவில்லை என்று சொன்னார். பெயரளவில் கூட. நான் நாவலை மேல் ராக்கையொன்றிலிருந்து எடுத்து நீட்டினேன். அவர் உடனே ” டூ மச் போர் எ நொவல்” என்றார். நிற்க.
காலை ஜெயமோகனின் கிளாசிக்குகள் பற்றிய உரையின் மிகுதினை பார்த்துக்கொண்டும் கிரகித்துக்கொண்டும் இருந்தபோது ஸ்ரீதர் ரங்கராஜ் சொன்ன இந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. நவீனத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டதால் அவரிற்குள் இந்த எண்ணம் வந்திருக்கலாம். நான் பிழை கூறவில்லை. ஜெயமோகனின் உரை இந்த எண்ண உருவாக்கங்கள் பற்றி மிகவும் தெளிவான வெளிப்படுத்தல்களை கூறுகின்றது. கனவுச்சிறை அதற்கான பாரிய இடத்தையும் அளவையும் கோருகின்றது. பிரமாண்டமான மனித இயக்கங்கள் பற்றிய உரையாடலுக்கு கனவுச்சிறை கொடுத்திருக்கக்கூடிய அளவு சரியானதே. ஆரம்பத்திலும் இப்போதும் தொடர்ந்து கிளாசிக்குகளை வாசிக்காமல் தவிர்த்திருந்தால் இதுபோன்றொதொரு சிந்தனை எனக்குள்ளும் ஏற்பட்டிருக்கலாம்.
இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, மீண்டும் ஜெயமோகனின் தளத்தை பார்வையிட்ட போதுதான் “அங்கே இலக்கியவாசகர் என எவரேனும் இருக்கிறார்களா என்ற ஐயத்தையே நவீன் குறிப்பு உருவாக்குகிறது.” என்ற நவீனின் கட்டுரையினை அடிப்படையாகக் கொண்ட அவரின் கூற்றினை பார்க்க நேர்ந்தது. ஜெயமோகன் தன் சொந்த கருத்துக்களின் அடிப்படையில் இதை எழுதியிருந்தால் அவரின் தனிப்பட்ட கருத்து என்று கடந்துவிடலாம். ஆனால் நவீனின் கட்டுரையினை அடிப்படையாக வைத்து ஐயத்தினை உருவாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தான் சந்தித்தவர்களையும் , அவரைச் சந்தித்தவர்களையும் வைத்துக்கொண்டு எழுதிய கட்டுரை அது. இங்கிருக்கின்ற தீவிர இலக்கிய வாசகர்களையோ படைப்பாளிகளையோ சந்திருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு ஏற்படவில்லை. நவீனை வந்து சந்தித்து பேச வேண்டும் என்ற எந்தத் தேவையும் இங்கிருக்கும் வாசகர்களுக்கு இருந்திருக்காது. ஸ்ரீதர் ரங்கராஜிற்கு எப்படி தேவகாந்தனை அறிந்திருக்கவில்லையோ அதைப்போலவே இங்கிருப்பவர்கள் நவீனையும் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற எளிய முடிவிற்கு வந்துவிடலாம். உண்மையில் நவீன் இலக்கிய சந்திப்புக்கள், விவாதங்களுக்காக இலங்கை வந்திருந்தால், உத்வேகத்தோடு இயங்கி வாசகர்களை சந்தித்திருக்கவேண்டியது அவரின் பொறுப்பு. புரிந்துணவுடைய எழுத்தாளர் ஒருவரிற்கு இவற்றைச் சொல்லி வலியுறுத்தவேண்டிய தேவை இருக்காது. மேலும் அவரின் பயணத்தின் நோக்கம் ஈழத்து இலக்கியத்தை அறிவதாகவோ அல்லது வாசகர்களை சந்தித்து விவாதிப்பதாகவோ இருக்கவில்லை. “இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.”,”பொதுவாகவே ஒரு நாட்டின் பொருளியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு அந்நாட்டில் பல்லடுக்கு நிலையில் வாழும் மக்களையும் எவ்வித ஆய்வும் இன்றி பொருத்திப் பார்ப்பது மந்தமான பார்வை. மலேசியத் தமிழர்கள் கலை வெளிப்பாட்டின் சாதக, பாதகங்களை அறிய அவர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் உள்வாங்க வேண்டியுள்ளது. ‘வல்லினம் 100’ களஞ்சியம் அத்தகையதொரு குறுக்குவெட்டு பார்வையை வழங்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எனவே அதை சிங்கப்பூர், தமிழகத்தை அடுத்து இலங்கையில் பரவலான கவனத்திற்கு எடுத்துச் செல்வது உலகத் தமிழர்கள் பார்வைக்கு மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பக்கத்தைக் காட்டும் பணி என்றே உருவகித்துக்கொண்டோம்.” இவற்றை கடமையாக கொண்டு பயணித்தவர்களிடம் வாசகர்கள் பற்றிய புரிதல்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
நவீனின் கட்டுரையை முன்னமே படித்து ஓரமாக வைத்துவிட்டேன். அங்கு அறியாமையைத்தவிர விவாதப்பொருள் எதுவுமிருக்கவில்லை. ஆனால் ஜெயமோகன் நவீனின் கட்டுரையினை அடிப்படியாகக் கொண்டு ஒரு சிக்கலான ஐயத்தினை முன்வைக்கும் போது பெரும் அயற்சியளிக்கிறது. பரந்த வாசிப்பும் புரிந்துணர்வும் கொண்ட ஜெயமோகனால் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது.

இணைய வாசிப்பில் முரகாமி

இன்று ஹாருகி முரகாமியின் பிறந்த தினம். முதன் முதலில் ஹாருகி முரகாமியை அறிமுகப்படுத்தியவர் ஜி. குப்புசாமி அவர்கள். தோற்றத்தில் மென்மையானவராகத் தெரிபவரான முரகாமியின் எழுத்துக்களும் மென்மையானவை. உலக இலக்கியப் பரப்பில் எந்த விதத்திலும் நிராகரித்துக் கடந்தவிடக்கூடியவர் அல்ல. வெகுசீக்கிரம் அவரைப் பேசலாம். அவரின் நாவல்கள், சிறுகதைகள் என்று எதையும் பற்றிப் பேசாமல் இப்போது அவரின் இணைதளத்தைப் பற்றிய குறிப்பொன்றைத் தரலாம் என்று நினைக்கிறேன். இன்றைய வாசிப்பு இணையத்தினூடாக பரவலாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால் இணையத்தின் வழியாக ஹாருகி முரகாமியை அணுகுவது சுவாரஸ்யமானது. http://www.harukimurakami.com இந்த இணையதளம் அவரின் பிளாக்கர் இல்லை. இதில் முரகாமி நேரடியாக எழுதுவதும் இல்லை. ஆனால் முரகாமியின் அறிமுகத்தை பெற விரும்புகின்ற வாசகர் ஒருத்தர் கட்டாயம் ஒருமுறையாவது இதன் வடிவமைப்பைப் பார்க்கவேண்டும். முரகாமியின் எழுத்துக்களைப்போல அழகியலும் இசையும் கலந்த கலைவடிவம் இந்த இணையதளம். அத்தனை நேர்த்தியான கலைப்படைப்பு. சமகாலத்தில் எழுதுகின்ற ஈழத்து எழுத்தாளர்களாக இருந்தாலும் தமிழ் நாட்டின் எழுத்தாளர்களாக இருந்தாலும் பிரபலமான வெளிநாட்டு எழுத்தாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் படைப்புகளின் இருக்கின்ற கலைத்தன்மை அவர்களின் ப்ளோக்குகளில் இருப்பதில்லை. இணையத்தின் வழி வாசிப்பிற்குள் நுழைகின்றவர்கள் – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த எழுத்தாளர்களை இணையத்தினுள் தேடமுயற்சி செய்கின்றார்கள். அந்த அடிப்படையில் முரகாமி கொடுக்கக்கூடிய முதல் இணைய அனுபவம் அவரின் பின்பால்(Pin Ball) போன்று சாகசமான கலை அனுபவம். இணையதளத்தின் நிறச்சேர்க்கைகள், எழுத்துருக்கள், படங்கள், விவரிப்புக்கள், பக்கங்கள் மாறுகின்ற விதம், தரவுகளை காட்சிப்படுத்துகின்ற முறை என்று ஒவ்வொன்றும் மிகவும் தீவிரமான நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை முரகாமியே முழுக்க வடிவமைத்திருக்கமாட்டார் – ஆனால் வடிவமைப்பில் கட்டாயம் கணிசமான பங்கு அவரிற்கு இருந்திருக்கும். ஏனென்றால் முரகாமி போன்ற ஒரு கலைஞரால் மட்டும் தான் இவ்வாறான ஒரு இணையதளத்தை உருவாக்கிவிடமுடியும். அவரைப்போல என்னைக்கவர்ந்த இன்னொரு இணையதளம் ஹாரிபாட்டரின் ஆசிரியர் ஜெ.கே.ரௌலிங்கினுடையது. முரகாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்னைப் பேசவிடுங்கள் 03 – எஸ் போஸின் கவிதைகள் 02

வாசிக்க – http://unnatham.net/எஸ்போஸின்-கவிதைகள்/

குடிமைகள் – சாதியமும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்.

ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர்  ஒருவரின் தேடல்.  வாசகர் ஒருவர்  இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத ஒன்றை, நாவல் கடத்தவேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. அது வாசகரைச்  சென்றடைகிறது/ இல்லை என்பதைத் தாண்டி வரலாற்றின் ஓட்டத்தில் அது கலந்து கொள்ளப்படவேண்டும். எந்த வேறு இலக்கிய வடிவத்திற்கும் இல்லாத இந்தத்  தனித்தன்மை நாவலிற்கு மட்டுமே உள்ளது. நாவல் வாசகருக்கு மட்டும் அல்ல, வரலாற்று ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர், மாணவர், அரசியல் சார்புடையவர் என்று இன்னொரு சந்ததியின் மனிதர்களுக்கு, இன்னொரு கலாச்சாரத்தின் மனிதர்களுக்கு நாவலின் பண்பாட்டுச் சமூகத்தை கடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. எம்மால் இன்றுபரவிப் பேசப்படுகின்ற தூரத்துக் கலாச்சாரங்களெல்லாம் நாவல் வழி உள்நுழைந்தவை தான். எந்தப்பண்பாடும் எழுத்துரு பெறப்படும்போது தான், நம்பிக்கையாகக் கடத்தப்படுகிறது. எனவே சமூகம் ஒன்றில் நாவல் உருவாக்கம் பற்றிய திடமான எண்ணநிலைமை வேண்டும். நாவல் ஒரு சமூகத்தையே கடத்துகின்ற வல்லமை பெற்றது. அதே சமயம், ஒரு சமூகத்தின் அடையாளத்தை அப்படியே அழித்துப் பூசிவிடக்கூடியதும்.   
நாவல்களின் மூலம் கடத்தப்படவேண்டிய மிக முக்கியமான பிரச்சினை சாதியம். இது ஏன் கடத்தப்படவேண்டும்? கடத்தப்படாமல் இருந்தால் அப்படியே அழிந்து போய்விடுமே என்ற கேள்விகள் மிகவும் மேலோட்டமானவை. இன்று இலங்கை வடக்கில் யாரும்சாதிய அடிப்படையில் பிரிந்து இருக்கவில்லை, அவர்களுக்கு என்று தனித்தனி பிரதேசங்களில் வேறு வேறு சாதிய அடிப்படையில் குடியிருக்கவில்லை, இன்று எல்லோரும் சிகை அலங்கரிக்கும் கடைகளில் தான் முடிவெட்டுகிறார்கள் – இதனால் சாதியம் இறந்துவிட்டது என்பது சரியா? இன்னும் சாதியம் ஒழிந்து போய்விடவில்லை என்பதற்கு, இன்றைய மரணச் சடங்குகளும் திருமணங்களும் ஆதாரம். இன்னும் பறை அடிப்பவர்களும் கட்டாடிமார்களும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். படித்து வளர்ந்தசமூகத்தினரிடமே சாதியவெறி இன்னும் ஒழியவில்லை. எனக்கு நெருக்கமான நண்பன், அவன் மருத்துவபீடம் படித்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் பேசுகின்ற போது, அவனுக்குச் சாதியினால் உண்டான தாழ்வு மனப்பான்மை குறித்து வருத்தத்துடன்குறிப்பிட்டான். என்ன தான் வளர்ந்தாலும் தாங்கள் டோபிகள்( சலவை செய்வோர்) என்ற சாதியக் கட்டமைப்பை உடைக்கவே முடியவில்லை என்று வருந்தினான். இது இன்னமும் ஒழிக்கப்படாத சாதிய ஊடுருவலின் கூறுகள். இதைப்பற்றிய அறிவு அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனால், சாதியம் என்ற பெயர் இல்லாமல் – அதே அமைப்பு முறை உருவாகிவிடும். இது மறைத்தல் பண்பாட்டின் பெரும்  சிக்கல். இந்த சாதிய அமைப்புக்கள் எல்லாம் அறிவித்தல் என்பதை காட்டிலும் கற்பித்தல் என்கிற வழியில், உண்மை நிலைகள் புலப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஈழத்து நாவல் ஒன்றில் அதிகம் பேசப்படவேண்டிய பொருள் யுத்தமாகவே உள்ளது. இது காலத்தின் இன்றியமையாத பிரதிபலிப்புச் செய்கை. போரிலக்கியங்கள் இன்று எதிர்பார்க்கின்ற அளவு, உள்ளடக்கத்திலும், எண்ணிக்கையிலும் கனதியானவை வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதிகமாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. உண்மையான போரின் மொழியும், அணிகலன்களும் உலக சமூகத்திற்குச் சரியாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உலகளாவிய கலாசாரம் பற்றிய நிகழ்த்துகை விவாதங்கள் இலக்கியங்களின் மூலம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா வகையான பருப்பொருள்களைப் பற்றியும் பேச்சுக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்தும் பரவலாகப் பேசுகின்ற,  விவாதிக்கின்ற, ஆவணப்படுத்துகின்ற ஒரு  சமூகத்தில் சாதியம் பற்றிய முற்போக்கு வாதங்கள் மிகவும் குறைவு. தேசியம் பற்றியும் போரின் அழிவுகள் பற்றியும் பேசுபவர்கள் சாதியம் போன்ற உள் முரண்பாடுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப்போராடும்போதே அவை முற்போக்குக் கருத்தியலாகும்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பஞ்சமர்களில் ஒரு பிரிவான அம்பட்டர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற நாவல் குடிமைகள்’. இந்நாவல்  இலங்கையின் மூத்த எழுத்தாளரான தெணியான் என்ற புனைபெயருடன் எழுதுகின்ற கந்தையா நடேசுவால் எழுதப்பட்டது. இலங்கை அரசினால் 2014ல் சாகித்ய ரத்னா என்ற உயர் விருது தெணியான் அவர்களுக்குக் ‘குடிமைகள்’ நாவல் மூலம் கிடைத்தது. இலங்கையின் வடக்கிலிருக்கின்ற ஒடுக்கப்படும் சாதியாகிய சிகை திருத்தும் தொழலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை முறை, ஆசைகள் , பிரச்சினைகள், எதிர்ப்புக்கள், போராட்டம், புறக்கணிப்பு என்று எல்லாவித அக-புற வாழ்வியலினைத் தெணியான் குடிமைகள் மூலம் ஆவணம் செய்கின்றார். தனது ஐம்பது வருட அனுபவத்தையும், காட்சிப்புல நினைவுகளையும் ஒன்றிணைத்துக்குடிமைகள் நாவலை எழுதியுள்ளார். நாவல் இலங்கையின் வடக்கே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. இதைவிட மலையகத்தின் பதுளை நகருக்கும், கொழும்பு நகருக்கும் நாவல் நகர்ந்து போய் வருகின்றது. நாவல் 1960-70 காலப்பகுதியினை மையமாகக் கொண்டிருந்தாலும்,  நாவலில் நடக்கின்ற சம்பவங்கள் இன்றைய சமூகத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. இன்னும் கிராமங்களில் ஒவ்வொரு சமூகத்தினரையும் பிரிக்க ஒரு வீதியோ ஒரு வெறும் நிலமோகாணப்படுகிறது. வளர்ந்து நிற்கின்ற நகரங்களில் இவற்றை அவதானிக்க முடியாது. எல்லாச் சமூகத்தினரும் ஒன்றோடு  ஒன்று கலந்தே வாழுகின்றனர். இருந்தும் அவர்களிடையே இருக்கின்ற உளவியல் வேற்றுமை மாறாமலேயே இருக்கின்றது. தெணியானுடைய நோக்கம் நாவலிலிருந்து அம்பட்டர் சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்வியலையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்துவதே  ஆகும். பிறப்பின் மூலம் ஆதிக்க சாதியினர் உயர்ந்தவர்கள் என்றும் அம்பட்டர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆதிக்கச் சாதியினரால் பல வகைகளில் ஒடுக்கப்படும் சாதியினர் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை ஆழ்ந்து பேசுகின்ற தொனியே தெணியானின் குடிமைகள்.
(01)
மிகவும் முக்கியமானதொன்று நாவல் பேசுகின்ற அழகியல். விரிந்த பண்பாட்டு அமைப்புடைய சாதியம் ஒன்றின் பண்பாட்டு வெளிப்பாடு அதிகமாகப் பௌதீக அமைப்பிலேயே தங்கியிருக்கிறது. தனக்கென்று நிலம் இல்லாமல், வேளாளர் நிலத்தில் குடியிருக்கிறகுடிமைகளின் பௌதீக, உளவியல் அழகியல் மிகவும் வித்தியாசமானது. அவர்களது பௌதீகச் சூழல் முழுதாக ஆதிக்கச்  சாதியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் தேவைகளுக்கு ஏற்பக் குடிமைகளின் சுற்றுச் சூழல் வடிவமைக்கப்படுகிறது. சொந்த நிலம் ஒன்று இல்லாமல், அதில் அடிப்படை  வசதிகள் சரியாக இல்லாமல், அதை வெளிப்படுத்துவதிலும் பெரும் இடர்களைச் சந்திக்கின்ற ஆனால் அந்தச் சூழலுக்கே தன்னை இசைவாக்கப்படுத்திக் கொண்ட தாழ்த்தப்பட்ட  சமூகத்தின் குரல் நாவலில் எல்லாத்திசைகளிலும் ஒலிக்கின்றது. அம்பட்டர் சமூகத்தின் நீர்ப்பிரச்சனை தான் நாவலின் தொடக்கப் புள்ளி. நீர்ப்பிரச்சனை இயற்கையானது அல்ல, அதுவும் ஆதிக்கச் சாதியின் அடக்கு முறையே என்கிறார்,
‘கட்டாடிக்கு கிணறுவெட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ………….. கோடைகாலம் வந்துவிட்டால் மழைநீர் தேங்கி நிற்கும் துரவுகள் வற்றிப்போகும்…….. வெள்ளாவியில் வைத்து வெளுப்பதற்கு தண்ணீருக்கு எங்கே போவது?…..நயினார்கள்மார் என்ன காரியம் செய்தாலும் தமக்குகிடைக்கக்கூடிய நன்மைகளை கணக்குப்போட்டுத்தான் செய்வார்கள்’ (குடிமைகள் : பக்கம் 29)
தெணியான் கிணற்றைச் சுற்றி வரைகின்ற வரைவுகள் முக்கியமானவை. கிணற்றில் தண்ணீரே அள்ள முடியாத சமூக இளம் பெண்களை, எந்த ஆதிக்க சமூக ஆணும் தீண்டத் தகாதவர்களாகப் பார்ப்பதேஇல்லை. அவர்களுடைய காமம் சாதியைப் பார்ப்பதுஇல்லை. தாழ்ந்த சாதியினரைக் குடிமைகள் தொழில் பார்க்க மட்டும் அல்ல, தமது இச்சைகளைத் தீர்க்கவும் போகப் பொருளாக பார்க்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் எடுக்க நாயினார்மார்களின் கிணற்றுக்கு வருகின்ற அம்பட்ட சமூக வயதான பொன்னிஅனுபவிக்கின்ற இன்னல், அவள் வயதோடு வேறுபட்டிருக்கின்றதே தவிர மாறவில்லை. ஆரம்பத்தில் உடலளவிலும் பின்னர் உளவியலாலும் நோகடிக்கப்படுகின்றாள். உயர் சாதிப்பெண்களிடம் இருந்து தண்ணீர் பெறுகின்ற நிலையைப் பிச்சை எடுக்கும் நிலையைவிட மோசமானதாகக் கருதுகின்றார்கள். அங்கே விழுகின்ற வசைகளுக்கும் வயது வித்தியாசத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வயதான பொன்னிக்குத் தண்ணீர் ஊற்றிவிட யாரும் முன்வரவில்லை, முன்வந்தவர்கள் சினக்காமல் ஊற்றிவிடவில்லை, சொந்தமாகத் தண்ணீர் ஊற்றக் கூட தகுதி அற்ற குடிமைகள். கிணற்றைச் சுற்றித் தெணியான் கட்டி எழுப்புகின்ற கேள்விகள்  ஆழமானவை.
(02)
சாதியம் பிரிவினையை ஏற்படுத்துவது போலவே,அவ்வாறு பிளவுண்ட மனிதர்கள் தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்ற உயர்வு-தாழ்வைத் தெணியான் சித்திரிக்கின்றார். இரண்டு வெவ்வேறு இடங்களில் இதை வலியுறுத்துகின்றார்.
‘…எங்கடை சாதிக்காரர் எல்லாரும் எங்களுக்கு சமமே? ஒரு சாதிக்குள்ள எத்தினை பிரிவு எத்தனை பகுதி இருக்குது தெரியுமா?’ (குடிமைகள்:பக்கம் 112)
இளையவர்கள் சமூகக் கட்டமைப்புகளைத் தகர்க்க முயல்கின்ற போது, அங்கு மேலெழுகின்ற சமூகத் தலைமைகள்– இதற்குப் பெரும் சவாலாக இருக்கின்றது. ஒரே சாதிக்குள் கலந்து திருமணம் செய்வது கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. தொழில் தகைமைகள், வருமானம், வசதி போன்றவற்றை வைத்து ஒரே சாதிக்குள் பிரிவினைகள் உருவாகின்றன.ஒரே சாதிக்குள் மெலிதாக உயர்ந்தவர் மற்றவர்களை அடக்கி அதிகாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நேரடியாக இந்த முறைமை வெளிப்படாமல்இருந்தாலும் குறித்த சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. சரவணை முதலாளி, மணியன் இருவரையும் நாவலூடு கொண்டு செல்கின்ற அடிப்படை விடயம் இதுவாகும். மணியனை முதலாளி கொடுமைப்படுத்துகின்ற இடங்களிலும் மணியன் அடங்கிப்போகின்ற இடங்களிலும் வாசகரோடு எழுந்து பயணிக்கின்ற அனுபவங்கள், எங்கோ ஒரு நகரத்திற்குச் சிறிய தொழில் ஒன்றினைச் செய்வதற்காக வயது குறைந்த பிள்ளையை அனுப்பிவிட்டுத் தவிக்கின்ற ஒவ்வொரு பொன்னிக்கும் வலியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. கூலியே இல்லாமல் வேலை செய்கின்ற மணியனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருப்பமும் அதன் மூலம் மணியன் அடையக்கூடிய அனுகூலங்களும் வாசகர்களைத் திருப்தி அடைய வைக்கின்றது.
தெணியான், மணியனைக் கற்றலில் நாட்டம் இல்லாத ஒரு மாணவனாகச் சித்திரித்து, அதற்கான காரணத்தை ஆசிரியர்களின் சாதி பற்றிய வசைகளே என்கிறார். தெணியான் ஆவணம் இணையத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஆழமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசிய இடங்களில் அடக்கப்பட்ட சாதியப் பாடசாலை வாழ்க்கை முறை ஒன்றாகும். பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்துகின்ற/ வழி நடத்தப்படுகின்ற முறைகள் பற்றியும் தனது அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். அடக்கப்பட்ட சாதி மாணவர்கள் பாடசாலை விளையாட்டுகளில் மிகவும் பிரகாசிக்கக்கூடியவர்கள். அவர்களின் பால்ய வாழ்க்கை அவர்கள் செய்கின்ற சிறு வேலைகள் என்பன அவர்களின் திடமான உடலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பாடசாலையில் விளையாட்டுகளை வெற்றி கொள்வதில் தான் பாடசாலைச் சமூகம் கவனம் செலுத்தியதே தவிர அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் செலுத்த எத்தனிக்கவில்லை. அந்த ஆதிக்கத்திலிருந்து மீண்டு எழுந்து வந்தவர்களில் தெணியான் முக்கியமானவர் என்பதால் அவரின் எழுத்துகளும் அதையே முன்னிறுத்தி நிற்கின்றன.
(03)
மனித வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கானது.ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்டாலும் அவர்களுக்கான கொண்டாட்டங்கள் இல்லாமல் போய்விடவில்லை. மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் வீட்டின் ஒவ்வொரு மூலையில் இருத்தி வைத்துக் கொண்டு வெளி உலகம் தெரியாமலே வைத்திருந்த முத்தன் –பொன்னியின் கவலையும் அதுதான். முத்தனுக்கும் வள்ளிக்கொடிக்கும் திருமணமான பின்னர் வள்ளிக்கொடி மைத்துனர் இருவருக்கும் திருக்கல் வண்டிலும் மாடும் அவளின் கொடியை விற்று வாங்கிக்கொடுத்துச் சந்தோசப்படுகிறாள். மேலேயுள்ள நிகழ்வுகள் நாவலில் நடக்கும் போது வாசகர் மனதிற்குள் அளப்பெரிய சந்தோசமும் திருப்தியும் உருவாகின்றது.
கொண்டாட்டம் எவ்வளவு திருப்தியளிக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு கவலையையும், சோகத்தையும் குடிமைகள் சுமக்கிறது.
 
ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராகப் போராட்டம் செய்யவில்லை, மிகச் சிறிய உரிமைகளை வேண்டிக் கேட்ட போது மறுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள்  தம் போக்கில் தொழிலையும், சமூகக் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்கும் இடையூறாக ஆதிக்க சாதியினர் இருக்கின்றார்கள். நாவலின் மையப்பாத்திரமாகக் கருதத்தக்க முத்தன் சமூகக் கட்டமைப்புகளை உடைக்கவும் தமக்கென உரிய அடிப்படை மனித சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சமயத்தில் முயற்சி செய்கிறார். அதற்கு அவரது நண்பர்கள்களும் உதவுகின்றார்கள். நயினைமார்களை எதிர்த்து முத்தன் தொழில் செய்யத்தொடங்குகிறார். அதுவரை குடிமைகளாக இருந்த முத்தன் வீதிகளில் தலைநிமிர்ந்து நடக்கத்தொடங்குகிறார். அவருக்கான சுதந்திர வாழ்க்கையை, குடும்பதிற்கான அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் ஒரு சிறிதளவேனும் சம்பாத்தியம் செய்யக்கூடிய தொழிலினை உருவாக்கிக்கொள்கிறார். நண்பர்களான மற்றைய பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி செய்யத்தொழிலைத் தொடங்குகிறார். ஆனால், இறுதியில் சப்பாணிகளான இரண்டு சகோதரங்களையும் இழக்கிறார். அவரது சலூனும் தீ வைக்கப்படுகிறது. இறுதியில் வீடும் தீ வைக்கப்படுகின்றது. முத்தனும் குடும்பமும் அந்த ஊரை விட்டே போய்விடுகின்றனர். தெணியானின் ஐம்பது வருட அனுபவம், அவரின் கூர்ந்த அவதானிப்பு, சிந்தனை என்பவை மூலம் ஒடுக்கப்பட்டவர்களது போராட்டம் ஆதிக்க சாதியின் முன்னால் நிலைத்து நிற்கமுடியாமல், தளர்ந்து போனது. ஆனால், தோற்றுவிடவில்லை என்பதில் தெணியான் உறுதியாக இருக்கிறார்.
(04)
   
அடிமை முறையிலும் மிகக் கொடுமையானது சாதிய முறை என்கிறார் அம்பேத்கர். ஒரு மிகச் சாதாரண அம்பட்டர் குடும்பம், கொடிய சாதிய அடக்குமுறையால் அனுபவிக்கின்ற இன்னல்கள் குடிமைகளில் பதிவாகின்றது.  
     ‘வரலாற்றை உருவாக்குவது ஒடுக்குமுறையாளர் தான். அவர்கள் எழுதுகின்ற வரலாறு அவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவர்களது சொந்த வரலாறே! இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த வரலாறை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல’ என்று ஃபிரான்ஸ் ஃபனொன் கூறுகின்றார். அந்த வகையில் தெணியான் கடத்தியிருக்கின்ற வரலாறு அத்தியாவசியமானது.  டானியலோடும் டொமினிக் ஜீவாவோடும் என்.கே.ரகுநாதனோடும் சேர்ந்து சாதியத்தின் வீரியத்தை அழிக்கின்ற பணியைத் தெணியான் ‘குடிமைகள்’ மூலம்தொடர்கின்றார்.
உசாத்துணைகள்:
வேலைக்காரிகளின் புத்தகம் – ஷோபாசக்தி
அசோகமித்திரன் கட்டுரைகள் –  2
ஆவணம் இணையதளம்

“வினோத நூலகம் – வாசிப்பறிமுகம் – ஹருகி முரகாமி”

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka on the Shore (2002), மற்றும்   1Q84 (2009–10) என்பன குறிப்பிடத்தக்கன.
வினோத நூலகம் குறுநாவல் வகையை சேர்ந்த இலக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் Novella என்று அழைப்பார்கள். அளவில் இது குறுநாவலாக கருதப்பட்டாலும் பேசுகின்ற கருத்தளவில் இதை சிறுகதையாகவே கருதுகிறேன். இதை தமிழில் ஜி.குப்புசாமி மொழி பெயர்த்துள்ளார். மிகவும்நேர்த்தியான மொழி பெயர்ப்பு. விமர்சகர்காளால் ஒற்றை தளத்தில் நகர்கின்ற கதை என விமர்சிக்கப்பட்ட வினோத நூலகம், என்னளவில் மிகவும் சிறந்த படைப்பு ஆகும். எளிய மொழி நடையில் எழுதுகின்றமையால் இவ்வாறானதொரு விமர்சனம் எழுந்திருக்கலாம். முரகாமி மென்மையாக எழுகின்றவர். நவீன இலக்கியத்தின் முக்கிய பண்பான சொற்சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். குறுகிய மையக்கருத்தை வைத்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துபவர். இதை நுண்மையான கருத்தின் பெரும் உரையாடல்கள் எனலாம். வினோத நூலகமும் அதன் பிரதியே.
கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகன் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் விநோதநூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்களினூடு உணர்வுகளை கடத்திச்செல்கின்ற குறியீடு கதை முழுவது காணப்படுகின்றது. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லலாம். அக உணர்வுகளை , தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்கின்ற தன்மை மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திகொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆனா தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளை கடத்துகின்ற பிரதியே. மேலோட்டமான வாசிப்பில் சம்பவங்களின் கோர்வை போன்ற உருவம் இருந்தாலும் சம்பவங்கள்  கடத்துகின்ற உணர்வுகள் பின்னைய கால ஆழ்ந்த வாசிப்பில் உணரப்பட்டன. கட்டமைப்பு மீறலை செய்கின்ற பின் நவீனத்துவ முயற்சியாக இதை கருதுகின்றேன். ஹருகி முரகாமியை அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.
வினோத நூலகம், ஒரு உணர்வின் பன்மை பரிமாணம் பற்றிய விரிப்பு. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய, ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டி இன்னொரு அக உலகினை கட்டுமானம் செய்கின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக்கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்காளால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லக்கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதன் உருவாக்கிகொள்வான். இதையே உணர்வு ஒன்றின் பன்மைப் பரிமாணம் என்கிறேன். விநோதநூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தனின் பன்மைப் பரிமாணம் பற்றியது.
தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகம் தான் வினோத நூலகம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அவனுக்கு அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது. அதுவரை அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று அவனுக்கு தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய சோகமான உருகல் அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாகுகின்றது. அதுவே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிகின்றார்.
அந்த அறையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.
“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.”
அவனை வதைக்கின்ற பிரிவு– அவனை பழைய உணர்ச்சிகளுக்குள் உழல வைக்கின்றது. தனது தாய் அவனை தேடுவார் என்றும்; தனது கிளி தன்னை தேடும் என்றும் பிரிவின் பெரும் துயரை ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுகொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவானது ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.
“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
பாதாள அறையில் பேசுகின்ற விடயங்களும் சம்வங்களும் விசித்தரமானவை. பொதுவாக முரகாமி இப்படியான சேரலிச முறைமையை அதிகம் தனது படைப்புகளில் பயன்படுத்துவார். இதனாலேயே ஜப்பானிய சமூகத்தினரால் வேற்றுமொழி எழுத்தாளராக விமர்சனமும் செய்யப்பட்டார். ஆனால் அவரின் பெரும்பாலான படைப்புகள் தன்னிலை எழுத்துக்களாகவே இருக்கும். இது ஜப்பானியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற முறையாகும். வினோத நூலகமும் தன்னிலையில் எழுதப்பட்ட கதையாகும். பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகி பின்னர் ஒரே பாத்திரமாகி அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறும். இதை நிலை மயக்கமாக முரகாமி எழுதுகின்றார். இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன் , குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள்.
இதே வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாகவும் கருத முடியும். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலக கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்க கூடிய கொடிய உணர்ச்சி மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூடிய கனவாக முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இதை வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முகாமி வடிவமைத்திருப்பார்.
அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரகாமியின் இந்த நுட்பங்களின் கூட்டாக விநோதநூலக்த்தை எழுதுகின்றார். பின் நவீனத்துவ எழுத்துக்களில் முக்கியமான பிரதியாக வினோத நூலகம் அமைகின்றது.
வினோத நூலகம் குறுநாவலை வாசிக்க
 
வினோத நூலகம் வாசிக்க
*** ஹருகி முரகாமி பற்றிய நேர் மறை விமர்சனங்கள் இன்றைய சூழலில் அதிகமாக எழுந்துகொண்டு இருக்கின்றது. முரகாமி பற்றிய விவாதம் தேவையான ஒன்று. அது அவரின் படைப்புக்களை அணுகுவதைப் பற்றியதாக இருக்கவேண்டும். முரகாமி உருவாக்கிக்கொண்டுள்ள மொழி பற்றியும் நுட்பங்கள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உரையாடப்படவேண்டும். மிக இலகுவாக அவரைப் புறம்தள்ளி விடமுடியாது. சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் வாசகர் கடிதம் ஒன்றில் கேட்கப்பட்ட முரகாமி பற்றிய கேள்விக்கு, “முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.” என்று நகைச்சுவையாக பதிலளித்திருப்பார். அன்றிரவே முகப்புத்தகம் மூலமாக நானும் ஜி.குப்புசாமியும் இதைப்பற்றி குறுகிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அனோஜன் பாலகிருஷ்ணன்,”ஹருக்கி முரகாமி‘யின் கதைகளைத் தேர்ந்த இலக்கிய கதைகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடிவதிவில்லை. கடினப்பட்டு நான் வைத்திருக்கும் இலக்கிய போத்தலுக்குள் அவரை நுழைத்தாலும். பிடிவாதமாக திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ஆனால், ஆங்கிலம் வழியேயான வாசிப்புக்குள் நுழைய அவரின் கதைகள் கைகொடுக்கும். மிக எளிமையான நடை. பிடித்து மேலேறிவிடலாம்.” என்று முகப்புத்தக பதிவொன்றினை இட்டிருந்தார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முரகாமியின் வினோத நூலகம் என்ற சிறுகதை/ குறுநாவலுக்கு வாசிப்பறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயமோகனின் பதிவு– http://www.jeyamohan.in/98517#.WfIhxVuCzIU

நிகனோர் பரா – 01

ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி தேவைப்பட்டது. ஒவ்வொரு இடைவெளியிலும் மனம் வெவ்வேறு திசைகளில் பயணித்தது. கவிதைகள் தருகின்ற அமானுஷ்ய உணர்வு இடைவெளிகளில் பரவும் போது முற்றிலும் வேறு ஒரு சூழல் உருவாகி விடுகிறது. புகையிரதம் எத்தனை வீரியமாக சத்தம் எழுப்பிக்கொண்டு விரைந்த்தாலும், மெல்லிய மேகத்தின் மேல் மிதப்பது போல இருக்கும். ஜன்னலினூடாக தென்றல் முகத்தின் தசைகளை வருடினாலும், பாலைவனம் போன்ற வெம்மை இருக்கும். எதிரிலே இருக்கின்ற அத்தனை மனிதர்களும் அழகாக தோன்றுவார்கள் அல்லது அலங்கோலமாக தோன்றுவார்கள் அல்லது மறைந்து போவார்கள். கவிதைகள் மேற்ப்பரிப்பினூடு மகிழ்சியையும் ஆழ்ந்து போகும் போது இறுக்கத்தையும் தரலாம். ஆறு மணிநேரமும் எத்தனையோ சூலுக்கும் உலகங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இசைந்து கொடுத்து வந்திறங்கினேன்.
 
சிலி நாட்டு கவிஞர்களான நிகனோர் பராவையும்(Nicanor Parra) என்றிக் லிஹ்னையும்(Enrique Lihn) முதன் முதலில் வாசித்தேன். இருவரும் ஒரே நாட்டில் ஒரே காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள். நிகனோர் பரா தனது நூற்றி மூன்றாவது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1914இல் பிறந்தவர். என்றிக் லிஹ்ன் 1929- 1988 காலப்பகுதியில் வாழ்ந்தவர். நிகனோர் பரா இன்றும் தனது கவிதைகளை எழுதி பிரசுரித்து வருகின்றார்.
 
The Pilgrim – Nicanor Parra
 
எங்களது சாதாரண தர ஆங்கில இலக்கிய தொகுப்பில் Monkeys என்ற ஒரு சிறுகதை இருந்தது-  பெயர் சரியாக ஞாபகம் இல்லை. ஒரு சிறிய வயதுடைய சமனேரா என்னும் பையன், பௌத்த பிக்கு ஆவதற்காக பௌத்த மடம் ஒன்றில் சேர்க்கப்படுகிறான். அவனின் ஆசைகள் பற்றிய வரைவாக அந்த சிறுகதை நகர்ந்து செல்லும். அதில் சமனேரா அதிக நேரத்தை குன்றுகளில் குரங்குகளோடு களிப்பான். அது அவனிற்கு உவகை ஊட்டுவதாக அமையும். இதே போன்ற ஒரு பௌதீக சூழலை இந்த கவிதை நினைவூட்டியது.
மிகவும் சிறிய வயதில் துறவுநிலைக்கு கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுவன், – உலக சந்தோசங்கள் அனைத்தும் அனுபவிக்கின்ற சாதாரண மனிதர்களை நோக்கி இறைஞ்சுவதாக பரா எழுதுகின்றார். சிறுவனை அடையாளப்படுத்த பரா பயன்படுத்துகின்ற யுத்தி ஆழமானது. அதே நேரத்தில் எனக்கு கவலையை அளித்ததும் கூட.
But, I am a child calling to its mother from behind rocks,
I am a pilgrim who makes stones jump as high as his nose
சாதாரண குன்றின் பின்னால் நின்றுகொண்டு, குன்றை மீறி எட்டிப் பார்த்து தனது அம்மாவை அழைக்க பாய்கின்றபோது மூக்கு உயரம் மட்டுமே மேலேளும்பக்கூடிய சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். நான் வசித்துவந்த நகரத்தின் வீட்டிற்கு எதிரே பௌத்த விகாரை ஒன்றிருக்கிறது. அங்கே பௌத்ததுறவிகள் ஆவதற்காக சிறுவர்கள் வந்திருப்பார்கள். மிகவும் சிறியவயதில் முழுமையாக முடிகளை அகற்றி காவித்துணியும் உடுத்தி உலகின் எல்லா சுகங்களையும் துறந்தவர்கள் போல விகாரைக்கும் அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கும்(அருகில்) ஓடித்திரிவார்கள். பின்னேரங்களில் தங்களை மறந்து இயங்குவதையும் விகாரைக்கு வருகின்ற சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்த்து விளையாட அழைப்பதையும் கண்டிருக்கின்றேன். இவையெல்லாம் சமயத்தின் படி தவறுகள் என்றாலும் மனிதத்தின் படி?
நிகனோர் பரா இதையே வினவுகின்றார். எல்லா மனிதர்களைப்போலவும் தானே நாங்களும் – கனவுகளையும் ஆசைகளையும் வெறுத்து ஒதுக்கிவிட முடியாத போதும் கட்டாயப்படுத்தி அடைத்துவைக்கின்ற நிலைமையை கேள்வி கேட்கின்றார். புத்தர்கூட உலக சந்தோசங்களை அனுபவித்துத் தான் துறவறம் பூண்டார். தங்கள் சொந்த தேவைகளுக்காக பிள்ளைகளின் சந்தோசங்களை அழிக்கின்ற தானம் பற்றி கேட்கின்றார்.
 
A tree crying out to be covered with leaves.
 
எல்லாவற்றையும் மரத்துக்கு தருகின்ற இலைகளை போல அனைத்தையும் வேண்டி நிற்கின்ற சிறுவர்களின் மனநிலையை நிகனோர் பரா எழுதுகின்றார்.
 
இந்தக்கவிதையை ஸ்பானிஷ் மொழியிலிருந்து W.S.Merwin ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருகின்றார்.
 
இந்தக்கவிதையை வாசித்து முடித்தபின்னர் பேரமைதி சூழ்ந்துகொள்கிறது.