“வினோத நூலகம் – வாசிப்பறிமுகம் – ஹருகி முரகாமி”

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka on the Shore (2002), மற்றும்   1Q84 (2009–10) என்பன குறிப்பிடத்தக்கன.
வினோத நூலகம் குறுநாவல் வகையை சேர்ந்த இலக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் Novella என்று அழைப்பார்கள். அளவில் இது குறுநாவலாக கருதப்பட்டாலும் பேசுகின்ற கருத்தளவில் இதை சிறுகதையாகவே கருதுகிறேன். இதை தமிழில் ஜி.குப்புசாமி மொழி பெயர்த்துள்ளார். மிகவும்நேர்த்தியான மொழி பெயர்ப்பு. விமர்சகர்காளால் ஒற்றை தளத்தில் நகர்கின்ற கதை என விமர்சிக்கப்பட்ட வினோத நூலகம், என்னளவில் மிகவும் சிறந்த படைப்பு ஆகும். எளிய மொழி நடையில் எழுதுகின்றமையால் இவ்வாறானதொரு விமர்சனம் எழுந்திருக்கலாம். முரகாமி மென்மையாக எழுகின்றவர். நவீன இலக்கியத்தின் முக்கிய பண்பான சொற்சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். குறுகிய மையக்கருத்தை வைத்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துபவர். இதை நுண்மையான கருத்தின் பெரும் உரையாடல்கள் எனலாம். வினோத நூலகமும் அதன் பிரதியே.
கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகன் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் விநோதநூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்களினூடு உணர்வுகளை கடத்திச்செல்கின்ற குறியீடு கதை முழுவது காணப்படுகின்றது. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லலாம். அக உணர்வுகளை , தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்கின்ற தன்மை மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திகொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆனா தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளை கடத்துகின்ற பிரதியே. மேலோட்டமான வாசிப்பில் சம்பவங்களின் கோர்வை போன்ற உருவம் இருந்தாலும் சம்பவங்கள்  கடத்துகின்ற உணர்வுகள் பின்னைய கால ஆழ்ந்த வாசிப்பில் உணரப்பட்டன. கட்டமைப்பு மீறலை செய்கின்ற பின் நவீனத்துவ முயற்சியாக இதை கருதுகின்றேன். ஹருகி முரகாமியை அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.
வினோத நூலகம், ஒரு உணர்வின் பன்மை பரிமாணம் பற்றிய விரிப்பு. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய, ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டி இன்னொரு அக உலகினை கட்டுமானம் செய்கின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக்கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்காளால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லக்கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதன் உருவாக்கிகொள்வான். இதையே உணர்வு ஒன்றின் பன்மைப் பரிமாணம் என்கிறேன். விநோதநூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தனின் பன்மைப் பரிமாணம் பற்றியது.
தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகம் தான் வினோத நூலகம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அவனுக்கு அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது. அதுவரை அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று அவனுக்கு தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய சோகமான உருகல் அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாகுகின்றது. அதுவே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிகின்றார்.
அந்த அறையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.
“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.”
அவனை வதைக்கின்ற பிரிவு– அவனை பழைய உணர்ச்சிகளுக்குள் உழல வைக்கின்றது. தனது தாய் அவனை தேடுவார் என்றும்; தனது கிளி தன்னை தேடும் என்றும் பிரிவின் பெரும் துயரை ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுகொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவானது ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.
“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
பாதாள அறையில் பேசுகின்ற விடயங்களும் சம்வங்களும் விசித்தரமானவை. பொதுவாக முரகாமி இப்படியான சேரலிச முறைமையை அதிகம் தனது படைப்புகளில் பயன்படுத்துவார். இதனாலேயே ஜப்பானிய சமூகத்தினரால் வேற்றுமொழி எழுத்தாளராக விமர்சனமும் செய்யப்பட்டார். ஆனால் அவரின் பெரும்பாலான படைப்புகள் தன்னிலை எழுத்துக்களாகவே இருக்கும். இது ஜப்பானியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற முறையாகும். வினோத நூலகமும் தன்னிலையில் எழுதப்பட்ட கதையாகும். பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகி பின்னர் ஒரே பாத்திரமாகி அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறும். இதை நிலை மயக்கமாக முரகாமி எழுதுகின்றார். இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன் , குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள்.
இதே வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாகவும் கருத முடியும். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலக கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்க கூடிய கொடிய உணர்ச்சி மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூடிய கனவாக முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இதை வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முகாமி வடிவமைத்திருப்பார்.
அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரகாமியின் இந்த நுட்பங்களின் கூட்டாக விநோதநூலக்த்தை எழுதுகின்றார். பின் நவீனத்துவ எழுத்துக்களில் முக்கியமான பிரதியாக வினோத நூலகம் அமைகின்றது.
வினோத நூலகம் குறுநாவலை வாசிக்க
 
வினோத நூலகம் வாசிக்க
*** ஹருகி முரகாமி பற்றிய நேர் மறை விமர்சனங்கள் இன்றைய சூழலில் அதிகமாக எழுந்துகொண்டு இருக்கின்றது. முரகாமி பற்றிய விவாதம் தேவையான ஒன்று. அது அவரின் படைப்புக்களை அணுகுவதைப் பற்றியதாக இருக்கவேண்டும். முரகாமி உருவாக்கிக்கொண்டுள்ள மொழி பற்றியும் நுட்பங்கள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உரையாடப்படவேண்டும். மிக இலகுவாக அவரைப் புறம்தள்ளி விடமுடியாது. சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் வாசகர் கடிதம் ஒன்றில் கேட்கப்பட்ட முரகாமி பற்றிய கேள்விக்கு, “முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.” என்று நகைச்சுவையாக பதிலளித்திருப்பார். அன்றிரவே முகப்புத்தகம் மூலமாக நானும் ஜி.குப்புசாமியும் இதைப்பற்றி குறுகிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அனோஜன் பாலகிருஷ்ணன்,”ஹருக்கி முரகாமி‘யின் கதைகளைத் தேர்ந்த இலக்கிய கதைகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடிவதிவில்லை. கடினப்பட்டு நான் வைத்திருக்கும் இலக்கிய போத்தலுக்குள் அவரை நுழைத்தாலும். பிடிவாதமாக திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ஆனால், ஆங்கிலம் வழியேயான வாசிப்புக்குள் நுழைய அவரின் கதைகள் கைகொடுக்கும். மிக எளிமையான நடை. பிடித்து மேலேறிவிடலாம்.” என்று முகப்புத்தக பதிவொன்றினை இட்டிருந்தார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முரகாமியின் வினோத நூலகம் என்ற சிறுகதை/ குறுநாவலுக்கு வாசிப்பறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயமோகனின் பதிவு– http://www.jeyamohan.in/98517#.WfIhxVuCzIU

உலக இலக்கியத் தொடர் 3 – கரமசோவ் சகோதரர்கள் – THE BROTHERS KARAMAZOV-அறிதலும் புரிதலும்.

எமது இலக்கியங்களுக்கும் ருச்சியன் இலக்கியங்களும் மிக நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. உண்மையில் எமது இலக்கியங்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ருச்சியர்களின் மொழி கலாசாரம் பண்பாடு வாழ்க்கை முறைகள் எல்லாம் வேறு வேறானவை. அவர்களின் பௌதீக அமைவிடம் சுற்றுச் சூழல் என்று அனைத்துமே வித்தியாசமானவை. இருந்தும் ருச்சியர்களின் இலக்கியம் எமக்கு நுணுக்கமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அவை மானுடம் என்ற கருப்பொருளின் இயலாமையும் நிதர்சன வாழ்கையின் ஒவ்வொரு சூழ்ச்சியையும் பேசுவதே ஆகும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எமது வாழ்கையில் ஒரு முறையேனும் சந்தித்த நபர்களை ஞாபகப்படுத்திச்செல்லும். அந்த வகையில் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் வாழ்கையின் இருண்மை நிலையையும் இருண்மையால் ஏற்படுகின்ற பித்தநிலையையும் அதன் தொடர்ச்சியையும் அது சமூகத்தில் பிரதிபலிக்கின்ற எதிர்வினையையும் பேசுகின்றது.

கரமசோவ் சகோதரர்கள் – பிரதி பற்றி

(orig12.deviantart.net)

சுதேசமொழி வழக்கு எழுத்துகள் மிக முக்கியமானவை. ஒரு இனக் குழுமத்தின் வரலாற்று இருப்பு என்பது அவர்களின் இலக்கியங்களாலேயே சாத்தியமாகின்றது. இன்றைய இலக்கிய சூழலில் உலகத்தரமான படைப்புகள் என்று சொல்லக்கூடிய பெரும்பாலானவை ஏதோ ஒரு இனத்தின் வழக்கு நிலை கலாசார புனைவுகளாகவே காணப்படுகின்றன. அவை அவர்களின் சுதேச மொழியில் எழுதப்படுகின்ற போது மேலும் உயிர்ப்பு நிலையை அடைகின்றன. அவர்களின் அடையாளமாகவும் மாறுகின்றன.  கரமசோவ் சகோதரர்கள் அன்றைய பேச்சுவழக்கில் இருந்த ருச்சியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க் என்ற நபராலேயே சொல்லப்படுகின்றது. அவர் கதை நடக்கின்ற இடத்தில் வாழ்ந்த ஒருத்தர். தஸ்தாயெவ்ஸ்கி ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க்கின் குரலையே தன் குரலாக கொள்கிறார்.

ஒளியும் இருளும்.

ஒளியில்லாத இடமே இருள். யாரும் இருள் இல்லாத இடம் ஒளி என்பதில்லை. கரமசோவ் நாவல் இருளில் ஒளியினை விவாதிக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரங்கள் பலர் இருளிலேயே வாழ்பவர்களாக இருக்கின்றனர். நாவலின் பெரும் பகுதி இருண்மையாகவே இருக்கின்றது. தகப்பன் கரமசோவ் இருண்மையின் மொத்த வடிவம். பொய், காமம், சூழ்ச்சி, நடிப்பு, சுயநலம், பேராசை,சந்தேகம் என்று தீமையின் அனைத்து குணங்களையும் கொண்டவர். அவரின் வாழ்வின் நோக்கம் சந்தோசம் மட்டுமே. சந்தோசம் முழுக்க முழுக்க காமத்தால் கிடைக்கும் என்ற எண்ணத்தை தீவிரமாக கொண்டவர். அதே வழியில் அதைக் கடைப்பிடிப்பவர். குடும்ப நலம், சுற்றுச் சூழல் நலம் என்ற எதையுமே கணக்கில் கொள்ளாது சுயநலத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர். இதற்காக மகன்களை வெறுக்கவும் மனைவியரை கொடுமைப்படுத்தவும் செய்கிறார்.

(modernlib.com)

தகப்பன் கரமசொவிற்கு இரண்டு பதிவு மனைவியர், பல எச்ச மனைவியர். தஸ்தாயெவ்ஸ்கி பதிவு மனைவியரை உறுதியாகக் கூறக் காரணம் தகப்பன் கரமசொவின் வாழ்வில் இனி வருகின்ற எல்லா அத்தியாயங்களிலும் கூட இருக்கின்ற, அவருடன் பயணிக்கப்போகின்ற மூன்று மகன்மார்களைக் கொண்டே.
முதல் மனைவிக்கு பிறந்தவன் திமித்ரி. அவனை மித்யா என்றும் அழைப்பார்கள். இண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் இவான் மற்றும் அலக்ஸ்சி. திமிதிரியும் இவானும் தகப்பனின் சாயலில் ஐம்பது சதவீதம் உள்ளவர்கள். இருவருக்குமே காமத்தின் வேட்கை பலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தகப்பனின் இருண்ட புத்தியை பின்பற்றுகிறார்கள். அதற்காக தகப்பனையே எதிர்க்கவும் செய்கிறார்கள். காமம் தகப்பனுக்கும் இரண்டு மகன்மார்களுக்கும் இடையே பெரும் விரிசலைத் தருகிறது. இருண்மை தகப்பனில் இருந்து முதலிரண்டு மகன் மார்களுக்கும் தொடர்கிறது.
அலக்ஸ்சி அப்படிப்பட்டவன் இல்லை. கரமசோவின் குணங்களை ஏற்றுக்கொள்ளாதவன். பகுத்து அறியும் பண்பினைக் கொண்டவன். அதனாலேயே இருட்டின் மத்தியில் ஒளியாக தெரிகின்றான். ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவன். அன்பும் கருணையும் உதவும் மனப்பாங்கும் உண்மையான காதலையும் உடையவன். சிதறிக்கிடக்கும் குடும்பத்தை ஒன்றிணைக்க பாடுபடும் ஒருத்தன். நாவலில் வருகின்ற அத்தனை இருண்மைக்கும் தனியே நின்று ஒளி கொடுக்ககூடியவன்.

மதகுருவும் சமூக பார்வை பிறழ்வுகளும்.

தஸ்தாயெவ்ஸ்கி அலக்ஸ்சியை ஒரு ஒளிர்ந்த பாத்திரமாக உருவாக்குவதற்கு பயன்படுத்திய கருவி ஆன்மிகம் ஆகும். தஸ்தாயெவ்ஸ்கி வாதப்பொருளை இங்கிருந்தே தொடங்குகிறார். ஒரு மனிதன் இருண்மையில் இருந்து வெளிவர ஆன்மிகம்தான் ஒரே வழியா? ஆன்மீகத்தை நம்பாதவர்கள் இருண்மையில் இருந்து வெளிவர முடியாதா ?
 

(pinimg.com)

தஸ்தாயெவ்ஸ்கியை ஒரு நடுநிலையான மனிதன் என்பதிலிருந்து மதவாதி என்ற போர்வைக்குள் இழுத்து வாதிக்கமுடியும். கரமசோவ் சகோதரர்கள் கிறிஸ்தவ மதத்தின் பேசு பொருளாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஆரம்பத்தில் வலுக்கிறது. இதை தஸ்தாயெவ்ஸ்கி லாவகமாக இவான் கூறுகின்ற “இயேசு மீண்டும் அவதரித்தால்” என்ற கவிதையின் ஊடாக தகர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அலக்ஸ்சி, பாதர் சொசிமா என்ற மதகுருவின் வழிகாட்டலிலேயே வளர்ந்து வருகின்றார். தகப்பன் கரமசோவின் நேர் எதிர் வடிவம் பாதர் சொசிமா. அலக்ஸ்சியின் வாழ்கையை நெறிப்படுத்துவதில் மிகுந்த சிரத்தையுடன் இருந்தார். வயதானவுடன் அவர் இறந்து போக அவரின் உடல் பிரார்தனைக்காகவும், நோய்களை நீக்கும் வலிமை கொண்ட புனித பொருளாகவும் வைக்கப்படுகிறது. சில நாட்களியே உடல் வெடுக்கு அடிக்கத்தொடங்குகிறது. அதுவரை மக்களால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருத்தர் சடலத்திலிருந்து கெட்ட வாடை வருவதால் நிராகரிக்கப்படுகிறார். அவரின் ஆரம்ப ஆடம்பர வாழ்க்கை மீண்டும் ஒருமுறை மக்களிடையே வாதிக்கப்டுகிறது. ஒரு எளிய இயற்கை மாற்றம் மக்களின் மனதில் பிறழ்வுகளை உருவாக்கத் தொடங்குகிறது. தஸ்தாயெவ்ஸ்கி கூறுகின்ற நுட்பமான செய்திகளில் இதுவும் ஒன்று.

காதலும் நாவலும்.

நாவல் முழுக்க காமதிற்கான போராட்டமாக இருந்தாலும் காமத்தை தேடிக்கொள்ள காதலையே அணுகுகின்றார்கள். நாவலில் லிசாவின் பக்கங்கள் அறிமுகம் ஆகும் வரை தஸ்தாயெவ்ஸ்கி காதல் காமதிற்க்கான முன்னாயத்தம் போலவே குறிப்பிடுகின்றார். காதலின் எந்த அசைவும் காமத்திற்கானதே என்பதை வருகின்ற எல்லாப் பாத்திரங்கள் மூலமும் உறுதி செய்தபடியே நகர்ந்தார். லிசாவின் அறிமுகமும் லிசா அலக்ஸ்சி காதலும் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் புரிதலை காட்டுகின்றது. லிசா அங்கவீனமாக இருந்தாலும் அலக்ஸ்சி அவள் மீது கொண்ட காதல் உடலைத் தாண்டி உள்ளம் சார்ந்தது என நிரூபணம் செய்கிறார்.
இந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி பெரும்பாலான உண்மை விடயங்களை, ஒளிர்மை வாய்ந்த கருத்துகளை வாசகனுக்கு கொண்டுசேர்க்க பயன்படுத்திய உத்திகளில் இதுவும் ஒன்றாகும். தஸ்தாயெவ்ஸ்கி முதலில் ஒரு கருத்தைப் பற்றிய புறவயமான எண்ணக்கருக்களை ஏற்படுத்துகிறார். பின்னர் அவற்றின் மறை விம்பங்களை காட்டுகிறார். வாசகன் மறையான விம்பத்தை நெருங்கும் போது அதை லாவகமாக உடைத்து மெய் விம்பத்தை காட்டுகிறார். இந்த புரிதல் நுட்பம் வாசகனின் மனதில் ஆழமாக இரு வேறான எல்லைகளையும் காட்டிவிடுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் தொடர்ச்சி வாசகனை அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத நீண்ட பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.

(huisjenphilosophy.files.wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது மனித மனதின் இருண்மைகளுக்குள் பயணிப்பதை போன்றது, அந்தப் பயணத்தில் நாம் அடையும் வெளிச்சமும் தைரியமும் செவ்விலக்கியத்தின் உன்னதத்தைப் புரிந்து கொள்ள வைப்பதுடன் இந்த உலகில் நமது இருப்பின் அடையாளத்தையும், நோக்கத்தையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் உதவுகிறது, அவ்வகையில் கரமசோவ் சகோதரர்கள் அவசியம் வாசிக்கவும் ஆழ்ந்து விவாதிக்கப்படவும் வேண்டிய முக்கிய நாவலாகும். – எஸ். ராமகிருஷ்ணன்
Sparknotes  இலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வசனங்கள்.

“Listen: if everyone must suffer, in order to buy eternal harmony with their suffering, pray tell me what have children got to do with it? It’s quite incomprehensible why they should have to suffer, and why they should buy harmony with their suffering.”
Very different is the monastic way. Obedience, fasting, and prayer are laughed at, yet they alone constitute the way to real and true freedom: I cut away my superfluous and unnecessary needs, through obedience I humble and chasten my vain and proud will, and thereby, with God’s help, attain freedom of spirit, and with that, spiritual rejoicing!”
“But hesitation, anxiety, the struggle between belief and disbelief—all that is sometimes such a torment for a conscientious man like yourself, that it’s better to hang oneself. . . . I’m leading you alternately between belief and disbelief, and I have my own purpose in doing so. A new method, sir: when you’ve completely lost faith in me, then you’ll immediately start convincing me to my face that I am not a dream but a reality—I know you know; and then my goal will be achieved. And it is a noble goal. I will sow a just a tiny seed of faith in you, and from it an oak will grow—and such an oak that you, sitting in that oak, will want to join ‘the desert fathers and the blameless women’; because secretly you want that ver-ry, ver-ry much.. . .”

முடிப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன். கரமசோவ் சகோதர்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே இது. ஒரு குறுகிய கட்டுரையின் மூலமாக கரமசோவ் சகோதரர்களையோ தஸ்தாயெவ்ஸ்கியையோ விவரித்து விட முடியாது. இரண்டு முறை வாசித்து மூன்றாம் முறை வாசிக்கும் போது கூட புதிய பொருள்களை அறிந்துகொள்ளகூடியவாறு இருக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின் ஒவ்வொரு முடுக்குகளையும் தஸ்தாயெவ்ஸ்கி காட்டியவாறே கொண்டுசெல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி இருட்டில் இருந்து ஒளியை காண்பிக்கும் மாயவித்தைக்காரனாகவே ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகின்றார்.

உலக இலக்கிய தொடர் – பாகம் 2 தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் – முற்குறிப்பு.

முன்னைய கட்டுரையில் டால்ஸ்டாயின் அன்னே கரீனினா பற்றிய அறிமுகத்தை எழுதியிருந்தேன். டால்ஸ்டாய் மனிதத்தின் வெளிச்சத்தின் பகுதிகளை புனைகிறார் என்றால் தஸ்தாயெவ்ஸ்கி மனிதத்தின் இருண்மையை புனைகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துலகம் வித்தியாசமானது. அதுவரை – இன்னமும் யாராலும் கொண்டுசென்று காட்டமுடியாத ஒரு உலகு. ஒரு ஆழ்ந்த இருண்மையான அதல பாதாளத்தில் கைகளில் விளக்குடன் எம்மை கூட்டிச் செல்கிறார். அவருக்கு மட்டுமே தெரிந்த பாதை அது. அவருக்கு அந்த பாதைகள் அத்துப்படி. அத்தனை இருட்டையும் மெது மெதுவாக விலக்கிக்கொண்டு – ஒரு வழிகாட்டி தான் அடைந்த புதையல்களை மற்றவர்களுக்கு காட்டுவது போல – பாதாளத்தின் ஒவ்வொரு மூலைகளையும் சொல்லிக்கொண்டு போகின்றார். நாம் பாதாளத்தின் முடிவு இதுதான் என்று வியந்து பார்க்கின்ற தருணம் அதனிலிருந்து இன்னொரு ஆழமான பாதாளத்திற்கு கூட்டிக்செல்கின்றார்.

“ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கி – வரலாறு

ரஷ்ய – பிரான்சிய மோகம்.

1850 களில் ரஷ்சியா மாய வலையில் சிக்கியிருந்தது. அது பண்பாட்டு மாயவலை. எப்படி இன்றைய இலங்கையும் தமிழர்களும் ஐரோப்பிய கலாசாரதின் மீதும் ஆங்கில மொழி மீதும் மோகம் கொண்டிருக்கிறார்களோ, அப்படியான ஒரு மாய மோகம். பிரான்சின் கலாசாரம் மீதும் பிரான்சிய மொழி மீதும் ரஷ்சியர்கள் அளவு கடந்த மோகத்தை கொண்டிருந்தனர். மேல்வர்க்க குடியினர் முழுக்க முழுக்க பிரான்சிய கலாசாரத்தில் மூழ்கிப்போயினர். அவர்களின் வீடுகளிலும் ஒன்றுகூடல்களிலும் பிரான்சிய காலாசாரம் மேலோங்கி காணப்பட்டது. அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாடுவதை அவர்களினது வளர்ச்சியின் வெளிப்பாடாக கருதினார்கள்.
இலக்கியங்களிலும் இந்த தாக்கம் வெகுவாக இருந்தது. அன்றைய கால இலக்கிய சிருஷ்டிகளின் முழு போக்கும் பிரான்சிய பின்னணியை மையப்படுத்தியது. அவர்களுக்கு வர்த்தக ரீதியில் வருமானத்தை தரக்கூடியதாகவும் இருந்தது. இவான் துர்கனேவ் ரஷிய இலக்கியத்தில் மிளிர்ந்துகொண்டிருந்தார். அவரின் எல்லாப் படைப்புகளும் பிரான்சிய சாயலுடனேயே வெளிவந்தது. அவரின் மேன்னாட்டு கருத்தியலை மறு பேச்சின்றி ஆமோதிக்க கற்றறிந்த சமூகமும் தயாராக இருந்தது. ஒரு பிரபல  இலக்கிய முன்னோடியின் வழி எதுவோ , அதை லாவகாம பற்றிக்கொண்டு செல்லுகின்ற இன்றைய சமூகத்தைப் போலவே – ரஷ்ய எழுத்தாளர்களும் துர்கனேவை உதாரணமாக கொண்டு பிரான்சிய பின்னணியில் எழுத தொடங்கினார்கள். அக்காலத்தில் வெளியாகிய ராச்சிய இலக்கியங்கள் எல்லாம் பிரான்சிய  போலிகளாகவே இருந்தன.

சிந்தனை ஓட்டத்தில் வார்த்தைகள் அவரைக் கைவிடும் பொழுது தனது எண்ணங்களை கையெழுத்துக் கிறுக்கல்களாக பதிவு செய்துகொள்வார் (tumblr.com)

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்ப பின்னணி

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்பம் கடவுளால் சபிக்கப்பட்ட குடும்பம் என்கிறார், சுந்தர ராமசாமி. உண்மையும் அதுதான். பிரான்சிய பண்பாட்டு இலக்கியங்கள் குவிந்து கொண்டு இருக்கையில், அதன் மீளமுடியாத மோகத்தில் சிக்குண்டு இருக்கையில் – எது தஸ்தாயெவ்ஸ்கியை பிரித்துகாட்டுகின்றது என்று பார்த்தால் அவரின் வாழ்க்கை இன்னல்களே.
தஸ்தாயெவ்ஸ்கி என்ற ஆளுமையின் நிறைவில் இருக்கின்ற மகா ஷக்தி – வாழ்க்கை அவனுக்கு கொடுத்த வடுக்கள்.
1821 இல் மாஸ்கோவில் தஸ்தாயெவ்ஸ்கி பிறந்தான். அவனது தந்தை வைத்தியர். ஆரம்பத்தில் வசதியாக இருந்தவர்கள் தந்தையின் மூர்க்க குணத்தால் காலம் செல்ல வறுமைப்படுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்ப வாழ்க்கை அனுபவம் அவன் குடியிருந்த வைத்திய குடியிருப்பிலேயே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இறப்பு, நோய், அலைச்சல் என்பவற்றை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்து வருகின்றான். தனது பதினான்காவது  வயதிலேயே தாயையும், தொடர்ந்து இரண்டாம் வருடம் தந்தையையும் இழந்து அண்ணனுடன் வாழ்கின்றான்.
தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், அதை அவரின் கொடூரம் தாங்க முடியாத வேலையாட்களே செய்ததாகவும் குறிப்பிருக்கிறது. அண்ணன் மைகேல் மீது மிகுந்த பாசம் உடையவானாக இருக்கிறான் தஸ்தாயெவ்ஸ்கி. இருவரும் இராணுவ பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கற்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி கற்கை நெறிகளில் சிறந்து விளங்குகின்றார். இருந்தும் இறுதி பரீட்சையில் சூழ்ச்சிகளால் பின்தள்ளப்படுகின்றார். அண்ணன் தேர்வாகி இருந்தாலும் உடல்நிலை குறைவால் தொடர்து இயங்க முடியாமல் போகிறது. இதுவெல்லாம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வருத்தத்தை அளிக்கின்றது.

தஸ்தாயெவ்ஸ்கியும் இலக்கியமும்.

இராணுவ பொறியியல் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே தஸ்தாயெவ்ஸ்கிக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ரஷ்ய இலக்கியங்கள், ஜெர்மானிய இலக்கியங்கள், கொலை வழக்குகள், சிற்றிதழ்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி ஒரு தீராத வாசகானவே இருந்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது.(listal.com)

தனது இருபத்தைந்தாம் வயதில் முதலாவது நாவலான “ஏழை எளியவர்” (Poor People) ஐ எழுதுகின்றார். தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது. தனது சமூக நிலை பற்றி வருந்திய தஸ்தாயெவ்ஸ்கி முதலாவது நாவலை பதிப்பிட பின்நிற்கிறார். பின்வந்த காலப்பகுதியில் ரஷ்யாவின் மதிப்பு மிகுந்த சிற்றிதழ் ஒன்றுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நண்பன் “ஏழை எளியவர்கள்” நாவலை கொடுக்க, அதற்கு மிக சிறந்த விமர்சனமும் பெறப்படுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கி அன்று பரவியிருந்த இயக்கங்களிலும் தனது பங்களிப்புகளை வழங்கியிருந்தார். அந்த சமயம் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் அவருக்கு விதிக்கபடுகிறது. நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் தண்டனை ரத்து செய்யப்பட மீண்டும்  தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் செல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி தனது  வாழ்கையில் இறப்பிற்க்கான கடைசி நொடி மட்டும் சென்று, இறப்பின் வலி , அதற்கு முன்னரான மனதின் போராட்டம், எண்ண அலைச்சல்கள், வாழ்க்கை மீதான துச்சம் என்று மனிதனின் கடைசி நொடியில் உணரும் அனைத்து மனச் சிக்கல்களையும் அனுபவித்து விடுகின்றார். அதன் பின்னரான கைதி வாழ்கையும் அவருக்கு இலகுவானதாக அமைந்து விடவில்லை. (கைதி வாழ்க்கை எப்போதும் இலகுவானது அல்லவே!) தனது வாழ்வின் இருண்ட நாட்களை விதம் விதமான சிறைக்கைதிகளுடன் கழிக்கின்றார். ஒரு வகையில் அனைத்தையும் உணர்ந்த தேவ நிலையிலிருந்த தஸ்தாயெவ்ஸ்கி – சக கைதிகளின் மன ஆறுதலுக்கும் தன்னாலான உதவிகளையும் ஆற்றுகின்றார்.
1854 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றார். ஏழை எளியவர் மூலம் அறிமுகமாயிருந்த தஸ்தாயெவ்ஸ்கியை ரஷ்ய சமூகம் மறந்துபோயிருந்தது.  வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. இறுதியில் அண்ணனுடன் சேர்ந்து காலம் என்ற இதழை தொடங்குகிறார். மிக குறுகிய காலத்தில் காலம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது.

வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. (radissonblu.com)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய நாளில் சாதாரணமாக எந்த சிற்றிதழ்களும் கணக்கிலேயே எடுக்கப்படுவதில்லை. அத்தோடு எதையும் அரசாங்கம் நிறுத்தியதாய் அறியவும் இல்லை. இது அரசாங்கத்தின் அறிவீனமா? அல்லது சிற்றிதழ்களின் மந்த நிலையா? மீண்டும் ‘யுகம்’ என்ற இதழை தஸ்தாயெவ்ஸ்கி தொடங்குகிறார். இதழ் சோர்வாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கையிருப்பு காலியாகி கடனும் ஏறிக்கொண்டிருந்த பொழுது தஸ்தாயெவ்ஸ்கியை விட்டு அவரின் அண்ணன் இறந்து போகிறான். கூடவே தஸ்தாயெவ்ஸ்கிக்கு சூதாட்டமும் பழகி வெறியாகிப்போகிறது. தஸ்தாயெவ்ஸ்கி அனைத்தையும் இழந்து வீதிக்கு வருகிறார். மீண்டும் மீண்டும் துன்பம் சூழ்ந்து கொள்கிறது. அப்போது எழுதிய நாவல் தான் ‘குற்றமும் தண்டனையும்’.
எப்போதும் இருக்கிற ரஷ்ய எழுத்தாளர்களைப்போல இவரும் அங்கொன்று இங்கொன்றாய் திருமணம் செய்கிறார். குற்றமும் தண்டனையும் எழுதுவதற்கு ஒரு காரிய தரிசியை ஒழுங்கு செய்கிறார் – அவள் பெயர் அன்னா. இறுதியில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்கையில் நடந்த பெரும் திருப்பங்களுக்கும் அவரின் எழுத்துகளின் ஒன்றினைப்புக்கும் அன்னா ஒரு மனைவியாக உதவுகிறாள். இக்காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கி “ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). கரமசோவ் சகோதரர்கள் மூலம் புகழின் உச்சத்தையே அடைகிறார்.
தொடரும்…

உலக இலக்கிய தொடர். பாகம் 01- டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.

அறிமுகம்.

நமது வாழ்கையில் இரண்டு வகையான தொழிற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று புறச்செயற்பாடு மற்றையது அகச்செயற்பாடு. இன்றைய சமூகத்தின் போக்கை ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை செயற்படுத்திக்கொள்ள புறச்செயற்பாடுகள்தான் காரணம். புறத்தே நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தனிமனித வாழ்வியலையும் பாதிக்கின்றது. எங்கோ நடக்கின்ற திருவிழாவும் எங்கோ நடக்கின்ற குண்டுவெடிப்பும் தூரத்தில் உதிர்கின்ற இலைகளும் எல்லாமுமே ஒரு வகையில் எம்மக்குள் பாதிப்புதான். ஒவ்வொரு பாதிப்பிலும் ஒவ்வொரு விதமாக நாங்கள் எங்களை சரிப்படுத்திக்கொண்டு அடுத்த பாதிப்பை நோக்கி செல்கிறோம். இதுதான் புறச் செயற்பாடு. இவ்வளவோடு எதுவும் முடிந்துவிட்டதென்பதில்லை.
ஒவ்வொரு புறச் செயற்பாடும் எம்முள் விதைக்கின்ற விதைகள்தான் மிக முக்கியமானவை. பாதைகளில் தடைகளை மட்டுமே புறச்செயற்பாடு காட்டும். அவ்வளவு தான் அதன் வலிமை. உண்மையில் நமது வாழ்க்கைக்கு பாதைகளே கிடையாதே. யார் சென்ற பாதையிலும் நாங்கள் செல்லப்போவதும் இல்லை. முன்னோடிகளா? அவர்களின் பாதையில் நாங்கள் செல்லப்போவது இல்லை. அவர்களின் பாதைகளை கவனித்து பயின்று பின்னர் எங்கள் பாதைகளை உருவாக்கிக்கொள்கிறோம். இது தான் யதார்த்தம். இந்த வெற்று வெளியில் பாதைகளை உருவாக்கிக் கொள்ள கருவிகள்தான் விதைகள். புறச்செயற்பாடு விதைத்த விதைகள். எல்லோரது வாழ்விலும் எண்ணற்ற விதைகளை விதைப்பதுண்டு. ஒவ்வொரு நொடியும் ஒரு புது விதை போடப்படுகின்றது; நேற்று போட்ட விதை துளிர்கின்றது; எப்போதோ போட்ட விதை விருட்சமாகின்றது; நெடுங்காலம் முதல் போட்டவை உதிர்கின்றன. இந்த செயல் வட்டம்தான் அகச்செயற்பாட்டு வாழ்க்கை.
இந்த விதைகளை விதைப்பதில் தான் அன்னா கரீனினா என்ற நாவல் வடிவம் பெறுகின்றது.

டால்ஸ்டாயும் அன்னா கரீனினாவும்.

லியோ டால்ஸ்டாய் (mosaicmagazine.com)

டால்ஸ்டாயின் மிக உன்னதமான நாவலான போரும் அமைதிக்கும் பிறகு அவர் எழுதிய இன்னொரு முக்கிய இலக்கியம்தான் அன்னா கரீனினா. குடும்ப வாழ்வின் திருப்பங்கள், அவற்றின் பிறழ்வுகள், ஒரு பெண்ணின் உளநிலை பிரச்சனைகள், காதல், சராசரி முடிவுகள் என்று முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை தழுவியே எழுதப்பட்ட நாவல். பொதுவாக நிலவுகின்ற  டோல்ஸ்டயிடம் இருந்து வர்ணனைகள் எடுத்து விட்டால் மீதம் இருப்பது உப்பு சப்பு இல்லாத கருத்துகளே என்ற சாடலுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் எழுதபட்ட நாவல். டால்ஸ்டாயின் புனைவுகள் என்பதை மீறி டால்ஸ்டாய் தனது வாழ்கையை பதிவிடும் எழுத்துகளாக அன்னா கரீனினாவை எழுதியிருகின்றார். பொதுவாக டால்ஸ்டாயின் வாழ்க்கைக்கும் அவரது புனைவுகளுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்னே கரீனினாவில் வருகின்ற லெவின் என்ற பாத்திரத்தை முற்று முழுதாக தன்னை உருவகப் படுத்தியே உருவாகியிருகின்றார்.
இந்த நாவல் ‘The Russian Messenger’ என்ற பத்திரிகையில் 1873 இலிருந்து 1877 வரையான நான்கு ஆண்டுகள் தொடராக வெளிவந்திருக்கிறது. அதையே பின்னர் கோர்த்து நூலாக்கியிருகின்றனர். இந்த நாவல் மொத்தமாக இருபத்தொன்பது மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருகின்றது. அன்னே கரீனினா நாவல் என்பதை தாண்டி ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் திரைப்படமாகவும் வெளிவந்திருகின்றது. Holleywood இல் மாத்திரம் நான்கு முறை திரைப்படமாக்கபட்டிருகின்றது. அன்னே கரீனினாவின் பின்னர் அன்றைய ரஸ்சிய மக்களால் புஸ்கினுக்கு அடுத்த மிக பெரிய எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார். இந்த நாவல் பிரெஞ்சு மொழியிலும் சம காலத்திலேயே சமாந்திரமாக எழுதப்பட்டது.

அன்னே கரீனினா எழுதுவதற்கான பின்னணி.

(pinimg.com)

டால்ஸ்டாய் பத்திரிகை ஒன்றில் “அன்னே ஸ்டேப்நோவா“ என்ற குடும்ப பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியை வாசிக்கின்றார். இந்த நிகழ்வு அன்றைய கால கட்டத்தில் அசாதாரணமானது. அதனால் டால்ஸ்டாய் இந்த நிகழ்வின் மீது கரிசனையும் அதிக கவனமும் செலுத்தி அதன் பின்னணியை ஆராய தொடங்குகின்றார். பிணவறையில் தலை மட்டும் தெளிவாக தெரியக்கூடிய உடலெல்லாம் சிதறிப்போன பெண்ணின் நிலையை கண்டு வேதனை அடைகிறார். அவளை பற்றி தேடியதில் அவளின் இறப்பிற்கு கள்ள காதல்தான் காரணம் என்றும் அறிந்து கொள்கிறார். அதைவிட மேலாக அந்த பெண் புஷ்கினின் மகள் என்ற உறுதிப்படுத்தபடாத செய்தியும் உண்டு. இவையெல்லாம் தான் டால்ஸ்டாயை அன்னே கரீனினா எழுத தூண்டியிருகிறது.
நாவலின் சிறப்பு பக்கங்கள்

அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார். (thefilmcricket.files.wordpress.com)

டால்ஸ்டாய் குடும்பம் என்ற சட்டகத்தில் இருந்து சமூகம் என்ற சட்டகத்திற்கு எவ்வாறு சிந்தனைகள் கடத்தபடுகின்றன என்பதை விவரித்திருப்பார். கூட்டுபண்ணையை உருவாக்குதல் பற்றியும் விவசாயத்தில் ஓடியிருக்கின்ற பழமையை இல்லாமல் ஒழித்து புதுமையான விவசாய புரட்சி செய்தல் பற்றியும் சாதாரண வாழ்கை தரத்திலிருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயத்திவிடுவது பற்றியும் மிக செறிவாக வாதிக்கின்றார்.
நாவல் சில ஆழமான குறியீடுகளை கொண்டிருகின்றது. அதில் முக்கியமானதாக புகைவண்டி காட்டபடுகின்றது. ஒரு புகைவண்டியின் அடிப்படை நோக்கம் ஒரு பயணியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லலே. இதை மிக நுட்பமாக டால்ஸ்டாய் அன்னாவின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்துகின்றார். அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார்.
அதைவிட ஒரு வாழ்வின் மிக கொடூரமான எல்லா மறையான விடயத்திற்கும் குறியீடாக புகைவண்டியை பயன்படுத்தியிருக்கலாம். அன்னாவின் வாழ்கையை அப்படியே வந்து அடித்து சிதிலமாகுகின்ற மறையான விடயங்களை புகைவண்டியின் மூலம் குறியீடாக்கியிருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

கதையில் வருகின்ற முக்கிய வசனங்கள்.

All happy families are alike; each unhappy family is unhappy in its own way.
In that brief glance Vronsky had time to notice the restrained animation that played over her face and fluttered between her shining eyes and the barely noticeable smile that curved her red lips. It was as if a surplus of something so overflowed her being that it expressed itself beyond her will, now in the brightness of her glance, now in her smile.
“Respect was invented to cover the empty place where love should be. But if you don’t love me, it would be better and more honest to say so.”
“. . . [M]y life now, my whole life, regardless of all that may happen to me, every minute of it, is not only not meaningless, as it was before, but has the unquestionable meaning of the good which it is in my power to put into it!”

அன்னா கரீனினாவும் விவாதங்களும்.

மிக எளிமையாக முடிக்கப்பட்ட ஒரு இறப்பிலிருந்து வாதங்களை அன்றைய அறிவார்ந்த சமூகத்தினர் அன்னாவின் மீது எழுப்பினார்கள். அன்றைய எல்லா அவைகளிலும் அன்னாவின் முடிவு சரியானதா பிழையானதா என்ற வாதம் எழுந்துகொண்டே இருந்தது. இன்றும் எழுந்தவண்ணமே இருகின்றது. வேறுபட்ட மனோபாவங்களையும் பல்வேறு சூழ்நிலை சிக்கல்களையும் எதிர்நோக்குகின்ற சாதாரண ஒரு பெண்ணின் முடிவு தற்கொலை தானா? என்ற காலத்தின் கேள்வியோடு வாதங்கள் தொடர்ந்தவண்ணமே இருகின்றன.
ஒரு உன்னத இலக்கிய படைப்பு காலத்தை மீறியது. காலக்கணிப்பு செய்யமுடியாத அர்த்தங்களை சுமப்பது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவும் காலத்தை கடந்த ஒரு உன்னத படைப்பு.
முழு நாவல் – ஆங்கிலத்தில்

உசாத்துணைகள்

உலக இலக்கிய பேருரைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
Spark Notes