உலக இலக்கியத் தொடர் 3 – கரமசோவ் சகோதரர்கள் – THE BROTHERS KARAMAZOV-அறிதலும் புரிதலும்.

எமது இலக்கியங்களுக்கும் ருச்சியன் இலக்கியங்களும் மிக நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. உண்மையில் எமது இலக்கியங்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ருச்சியர்களின் மொழி கலாசாரம் பண்பாடு வாழ்க்கை முறைகள் எல்லாம் வேறு வேறானவை. அவர்களின் பௌதீக அமைவிடம் சுற்றுச் சூழல் என்று அனைத்துமே வித்தியாசமானவை. இருந்தும் ருச்சியர்களின் இலக்கியம் எமக்கு நுணுக்கமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அவை மானுடம் என்ற கருப்பொருளின் இயலாமையும் நிதர்சன வாழ்கையின் ஒவ்வொரு சூழ்ச்சியையும் பேசுவதே ஆகும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எமது வாழ்கையில் ஒரு முறையேனும் சந்தித்த நபர்களை ஞாபகப்படுத்திச்செல்லும். அந்த வகையில் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் வாழ்கையின் இருண்மை நிலையையும் இருண்மையால் ஏற்படுகின்ற பித்தநிலையையும் அதன் தொடர்ச்சியையும் அது சமூகத்தில் பிரதிபலிக்கின்ற எதிர்வினையையும் பேசுகின்றது.

கரமசோவ் சகோதரர்கள் – பிரதி பற்றி

(orig12.deviantart.net)

சுதேசமொழி வழக்கு எழுத்துகள் மிக முக்கியமானவை. ஒரு இனக் குழுமத்தின் வரலாற்று இருப்பு என்பது அவர்களின் இலக்கியங்களாலேயே சாத்தியமாகின்றது. இன்றைய இலக்கிய சூழலில் உலகத்தரமான படைப்புகள் என்று சொல்லக்கூடிய பெரும்பாலானவை ஏதோ ஒரு இனத்தின் வழக்கு நிலை கலாசார புனைவுகளாகவே காணப்படுகின்றன. அவை அவர்களின் சுதேச மொழியில் எழுதப்படுகின்ற போது மேலும் உயிர்ப்பு நிலையை அடைகின்றன. அவர்களின் அடையாளமாகவும் மாறுகின்றன.  கரமசோவ் சகோதரர்கள் அன்றைய பேச்சுவழக்கில் இருந்த ருச்சியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க் என்ற நபராலேயே சொல்லப்படுகின்றது. அவர் கதை நடக்கின்ற இடத்தில் வாழ்ந்த ஒருத்தர். தஸ்தாயெவ்ஸ்கி ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க்கின் குரலையே தன் குரலாக கொள்கிறார்.

ஒளியும் இருளும்.

ஒளியில்லாத இடமே இருள். யாரும் இருள் இல்லாத இடம் ஒளி என்பதில்லை. கரமசோவ் நாவல் இருளில் ஒளியினை விவாதிக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரங்கள் பலர் இருளிலேயே வாழ்பவர்களாக இருக்கின்றனர். நாவலின் பெரும் பகுதி இருண்மையாகவே இருக்கின்றது. தகப்பன் கரமசோவ் இருண்மையின் மொத்த வடிவம். பொய், காமம், சூழ்ச்சி, நடிப்பு, சுயநலம், பேராசை,சந்தேகம் என்று தீமையின் அனைத்து குணங்களையும் கொண்டவர். அவரின் வாழ்வின் நோக்கம் சந்தோசம் மட்டுமே. சந்தோசம் முழுக்க முழுக்க காமத்தால் கிடைக்கும் என்ற எண்ணத்தை தீவிரமாக கொண்டவர். அதே வழியில் அதைக் கடைப்பிடிப்பவர். குடும்ப நலம், சுற்றுச் சூழல் நலம் என்ற எதையுமே கணக்கில் கொள்ளாது சுயநலத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர். இதற்காக மகன்களை வெறுக்கவும் மனைவியரை கொடுமைப்படுத்தவும் செய்கிறார்.

(modernlib.com)

தகப்பன் கரமசொவிற்கு இரண்டு பதிவு மனைவியர், பல எச்ச மனைவியர். தஸ்தாயெவ்ஸ்கி பதிவு மனைவியரை உறுதியாகக் கூறக் காரணம் தகப்பன் கரமசொவின் வாழ்வில் இனி வருகின்ற எல்லா அத்தியாயங்களிலும் கூட இருக்கின்ற, அவருடன் பயணிக்கப்போகின்ற மூன்று மகன்மார்களைக் கொண்டே.
முதல் மனைவிக்கு பிறந்தவன் திமித்ரி. அவனை மித்யா என்றும் அழைப்பார்கள். இண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் இவான் மற்றும் அலக்ஸ்சி. திமிதிரியும் இவானும் தகப்பனின் சாயலில் ஐம்பது சதவீதம் உள்ளவர்கள். இருவருக்குமே காமத்தின் வேட்கை பலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தகப்பனின் இருண்ட புத்தியை பின்பற்றுகிறார்கள். அதற்காக தகப்பனையே எதிர்க்கவும் செய்கிறார்கள். காமம் தகப்பனுக்கும் இரண்டு மகன்மார்களுக்கும் இடையே பெரும் விரிசலைத் தருகிறது. இருண்மை தகப்பனில் இருந்து முதலிரண்டு மகன் மார்களுக்கும் தொடர்கிறது.
அலக்ஸ்சி அப்படிப்பட்டவன் இல்லை. கரமசோவின் குணங்களை ஏற்றுக்கொள்ளாதவன். பகுத்து அறியும் பண்பினைக் கொண்டவன். அதனாலேயே இருட்டின் மத்தியில் ஒளியாக தெரிகின்றான். ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவன். அன்பும் கருணையும் உதவும் மனப்பாங்கும் உண்மையான காதலையும் உடையவன். சிதறிக்கிடக்கும் குடும்பத்தை ஒன்றிணைக்க பாடுபடும் ஒருத்தன். நாவலில் வருகின்ற அத்தனை இருண்மைக்கும் தனியே நின்று ஒளி கொடுக்ககூடியவன்.

மதகுருவும் சமூக பார்வை பிறழ்வுகளும்.

தஸ்தாயெவ்ஸ்கி அலக்ஸ்சியை ஒரு ஒளிர்ந்த பாத்திரமாக உருவாக்குவதற்கு பயன்படுத்திய கருவி ஆன்மிகம் ஆகும். தஸ்தாயெவ்ஸ்கி வாதப்பொருளை இங்கிருந்தே தொடங்குகிறார். ஒரு மனிதன் இருண்மையில் இருந்து வெளிவர ஆன்மிகம்தான் ஒரே வழியா? ஆன்மீகத்தை நம்பாதவர்கள் இருண்மையில் இருந்து வெளிவர முடியாதா ?
 

(pinimg.com)

தஸ்தாயெவ்ஸ்கியை ஒரு நடுநிலையான மனிதன் என்பதிலிருந்து மதவாதி என்ற போர்வைக்குள் இழுத்து வாதிக்கமுடியும். கரமசோவ் சகோதரர்கள் கிறிஸ்தவ மதத்தின் பேசு பொருளாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஆரம்பத்தில் வலுக்கிறது. இதை தஸ்தாயெவ்ஸ்கி லாவகமாக இவான் கூறுகின்ற “இயேசு மீண்டும் அவதரித்தால்” என்ற கவிதையின் ஊடாக தகர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அலக்ஸ்சி, பாதர் சொசிமா என்ற மதகுருவின் வழிகாட்டலிலேயே வளர்ந்து வருகின்றார். தகப்பன் கரமசோவின் நேர் எதிர் வடிவம் பாதர் சொசிமா. அலக்ஸ்சியின் வாழ்கையை நெறிப்படுத்துவதில் மிகுந்த சிரத்தையுடன் இருந்தார். வயதானவுடன் அவர் இறந்து போக அவரின் உடல் பிரார்தனைக்காகவும், நோய்களை நீக்கும் வலிமை கொண்ட புனித பொருளாகவும் வைக்கப்படுகிறது. சில நாட்களியே உடல் வெடுக்கு அடிக்கத்தொடங்குகிறது. அதுவரை மக்களால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருத்தர் சடலத்திலிருந்து கெட்ட வாடை வருவதால் நிராகரிக்கப்படுகிறார். அவரின் ஆரம்ப ஆடம்பர வாழ்க்கை மீண்டும் ஒருமுறை மக்களிடையே வாதிக்கப்டுகிறது. ஒரு எளிய இயற்கை மாற்றம் மக்களின் மனதில் பிறழ்வுகளை உருவாக்கத் தொடங்குகிறது. தஸ்தாயெவ்ஸ்கி கூறுகின்ற நுட்பமான செய்திகளில் இதுவும் ஒன்று.

காதலும் நாவலும்.

நாவல் முழுக்க காமதிற்கான போராட்டமாக இருந்தாலும் காமத்தை தேடிக்கொள்ள காதலையே அணுகுகின்றார்கள். நாவலில் லிசாவின் பக்கங்கள் அறிமுகம் ஆகும் வரை தஸ்தாயெவ்ஸ்கி காதல் காமதிற்க்கான முன்னாயத்தம் போலவே குறிப்பிடுகின்றார். காதலின் எந்த அசைவும் காமத்திற்கானதே என்பதை வருகின்ற எல்லாப் பாத்திரங்கள் மூலமும் உறுதி செய்தபடியே நகர்ந்தார். லிசாவின் அறிமுகமும் லிசா அலக்ஸ்சி காதலும் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் புரிதலை காட்டுகின்றது. லிசா அங்கவீனமாக இருந்தாலும் அலக்ஸ்சி அவள் மீது கொண்ட காதல் உடலைத் தாண்டி உள்ளம் சார்ந்தது என நிரூபணம் செய்கிறார்.
இந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி பெரும்பாலான உண்மை விடயங்களை, ஒளிர்மை வாய்ந்த கருத்துகளை வாசகனுக்கு கொண்டுசேர்க்க பயன்படுத்திய உத்திகளில் இதுவும் ஒன்றாகும். தஸ்தாயெவ்ஸ்கி முதலில் ஒரு கருத்தைப் பற்றிய புறவயமான எண்ணக்கருக்களை ஏற்படுத்துகிறார். பின்னர் அவற்றின் மறை விம்பங்களை காட்டுகிறார். வாசகன் மறையான விம்பத்தை நெருங்கும் போது அதை லாவகமாக உடைத்து மெய் விம்பத்தை காட்டுகிறார். இந்த புரிதல் நுட்பம் வாசகனின் மனதில் ஆழமாக இரு வேறான எல்லைகளையும் காட்டிவிடுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் தொடர்ச்சி வாசகனை அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத நீண்ட பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.

(huisjenphilosophy.files.wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது மனித மனதின் இருண்மைகளுக்குள் பயணிப்பதை போன்றது, அந்தப் பயணத்தில் நாம் அடையும் வெளிச்சமும் தைரியமும் செவ்விலக்கியத்தின் உன்னதத்தைப் புரிந்து கொள்ள வைப்பதுடன் இந்த உலகில் நமது இருப்பின் அடையாளத்தையும், நோக்கத்தையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் உதவுகிறது, அவ்வகையில் கரமசோவ் சகோதரர்கள் அவசியம் வாசிக்கவும் ஆழ்ந்து விவாதிக்கப்படவும் வேண்டிய முக்கிய நாவலாகும். – எஸ். ராமகிருஷ்ணன்
Sparknotes  இலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வசனங்கள்.

“Listen: if everyone must suffer, in order to buy eternal harmony with their suffering, pray tell me what have children got to do with it? It’s quite incomprehensible why they should have to suffer, and why they should buy harmony with their suffering.”
Very different is the monastic way. Obedience, fasting, and prayer are laughed at, yet they alone constitute the way to real and true freedom: I cut away my superfluous and unnecessary needs, through obedience I humble and chasten my vain and proud will, and thereby, with God’s help, attain freedom of spirit, and with that, spiritual rejoicing!”
“But hesitation, anxiety, the struggle between belief and disbelief—all that is sometimes such a torment for a conscientious man like yourself, that it’s better to hang oneself. . . . I’m leading you alternately between belief and disbelief, and I have my own purpose in doing so. A new method, sir: when you’ve completely lost faith in me, then you’ll immediately start convincing me to my face that I am not a dream but a reality—I know you know; and then my goal will be achieved. And it is a noble goal. I will sow a just a tiny seed of faith in you, and from it an oak will grow—and such an oak that you, sitting in that oak, will want to join ‘the desert fathers and the blameless women’; because secretly you want that ver-ry, ver-ry much.. . .”

முடிப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன். கரமசோவ் சகோதர்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே இது. ஒரு குறுகிய கட்டுரையின் மூலமாக கரமசோவ் சகோதரர்களையோ தஸ்தாயெவ்ஸ்கியையோ விவரித்து விட முடியாது. இரண்டு முறை வாசித்து மூன்றாம் முறை வாசிக்கும் போது கூட புதிய பொருள்களை அறிந்துகொள்ளகூடியவாறு இருக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின் ஒவ்வொரு முடுக்குகளையும் தஸ்தாயெவ்ஸ்கி காட்டியவாறே கொண்டுசெல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி இருட்டில் இருந்து ஒளியை காண்பிக்கும் மாயவித்தைக்காரனாகவே ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகின்றார்.

உலக இலக்கிய தொடர் – பாகம் 2 தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் – முற்குறிப்பு.

முன்னைய கட்டுரையில் டால்ஸ்டாயின் அன்னே கரீனினா பற்றிய அறிமுகத்தை எழுதியிருந்தேன். டால்ஸ்டாய் மனிதத்தின் வெளிச்சத்தின் பகுதிகளை புனைகிறார் என்றால் தஸ்தாயெவ்ஸ்கி மனிதத்தின் இருண்மையை புனைகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துலகம் வித்தியாசமானது. அதுவரை – இன்னமும் யாராலும் கொண்டுசென்று காட்டமுடியாத ஒரு உலகு. ஒரு ஆழ்ந்த இருண்மையான அதல பாதாளத்தில் கைகளில் விளக்குடன் எம்மை கூட்டிச் செல்கிறார். அவருக்கு மட்டுமே தெரிந்த பாதை அது. அவருக்கு அந்த பாதைகள் அத்துப்படி. அத்தனை இருட்டையும் மெது மெதுவாக விலக்கிக்கொண்டு – ஒரு வழிகாட்டி தான் அடைந்த புதையல்களை மற்றவர்களுக்கு காட்டுவது போல – பாதாளத்தின் ஒவ்வொரு மூலைகளையும் சொல்லிக்கொண்டு போகின்றார். நாம் பாதாளத்தின் முடிவு இதுதான் என்று வியந்து பார்க்கின்ற தருணம் அதனிலிருந்து இன்னொரு ஆழமான பாதாளத்திற்கு கூட்டிக்செல்கின்றார்.

“ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கி – வரலாறு

ரஷ்ய – பிரான்சிய மோகம்.

1850 களில் ரஷ்சியா மாய வலையில் சிக்கியிருந்தது. அது பண்பாட்டு மாயவலை. எப்படி இன்றைய இலங்கையும் தமிழர்களும் ஐரோப்பிய கலாசாரதின் மீதும் ஆங்கில மொழி மீதும் மோகம் கொண்டிருக்கிறார்களோ, அப்படியான ஒரு மாய மோகம். பிரான்சின் கலாசாரம் மீதும் பிரான்சிய மொழி மீதும் ரஷ்சியர்கள் அளவு கடந்த மோகத்தை கொண்டிருந்தனர். மேல்வர்க்க குடியினர் முழுக்க முழுக்க பிரான்சிய கலாசாரத்தில் மூழ்கிப்போயினர். அவர்களின் வீடுகளிலும் ஒன்றுகூடல்களிலும் பிரான்சிய காலாசாரம் மேலோங்கி காணப்பட்டது. அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாடுவதை அவர்களினது வளர்ச்சியின் வெளிப்பாடாக கருதினார்கள்.
இலக்கியங்களிலும் இந்த தாக்கம் வெகுவாக இருந்தது. அன்றைய கால இலக்கிய சிருஷ்டிகளின் முழு போக்கும் பிரான்சிய பின்னணியை மையப்படுத்தியது. அவர்களுக்கு வர்த்தக ரீதியில் வருமானத்தை தரக்கூடியதாகவும் இருந்தது. இவான் துர்கனேவ் ரஷிய இலக்கியத்தில் மிளிர்ந்துகொண்டிருந்தார். அவரின் எல்லாப் படைப்புகளும் பிரான்சிய சாயலுடனேயே வெளிவந்தது. அவரின் மேன்னாட்டு கருத்தியலை மறு பேச்சின்றி ஆமோதிக்க கற்றறிந்த சமூகமும் தயாராக இருந்தது. ஒரு பிரபல  இலக்கிய முன்னோடியின் வழி எதுவோ , அதை லாவகாம பற்றிக்கொண்டு செல்லுகின்ற இன்றைய சமூகத்தைப் போலவே – ரஷ்ய எழுத்தாளர்களும் துர்கனேவை உதாரணமாக கொண்டு பிரான்சிய பின்னணியில் எழுத தொடங்கினார்கள். அக்காலத்தில் வெளியாகிய ராச்சிய இலக்கியங்கள் எல்லாம் பிரான்சிய  போலிகளாகவே இருந்தன.

சிந்தனை ஓட்டத்தில் வார்த்தைகள் அவரைக் கைவிடும் பொழுது தனது எண்ணங்களை கையெழுத்துக் கிறுக்கல்களாக பதிவு செய்துகொள்வார் (tumblr.com)

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்ப பின்னணி

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்பம் கடவுளால் சபிக்கப்பட்ட குடும்பம் என்கிறார், சுந்தர ராமசாமி. உண்மையும் அதுதான். பிரான்சிய பண்பாட்டு இலக்கியங்கள் குவிந்து கொண்டு இருக்கையில், அதன் மீளமுடியாத மோகத்தில் சிக்குண்டு இருக்கையில் – எது தஸ்தாயெவ்ஸ்கியை பிரித்துகாட்டுகின்றது என்று பார்த்தால் அவரின் வாழ்க்கை இன்னல்களே.
தஸ்தாயெவ்ஸ்கி என்ற ஆளுமையின் நிறைவில் இருக்கின்ற மகா ஷக்தி – வாழ்க்கை அவனுக்கு கொடுத்த வடுக்கள்.
1821 இல் மாஸ்கோவில் தஸ்தாயெவ்ஸ்கி பிறந்தான். அவனது தந்தை வைத்தியர். ஆரம்பத்தில் வசதியாக இருந்தவர்கள் தந்தையின் மூர்க்க குணத்தால் காலம் செல்ல வறுமைப்படுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்ப வாழ்க்கை அனுபவம் அவன் குடியிருந்த வைத்திய குடியிருப்பிலேயே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இறப்பு, நோய், அலைச்சல் என்பவற்றை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்து வருகின்றான். தனது பதினான்காவது  வயதிலேயே தாயையும், தொடர்ந்து இரண்டாம் வருடம் தந்தையையும் இழந்து அண்ணனுடன் வாழ்கின்றான்.
தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், அதை அவரின் கொடூரம் தாங்க முடியாத வேலையாட்களே செய்ததாகவும் குறிப்பிருக்கிறது. அண்ணன் மைகேல் மீது மிகுந்த பாசம் உடையவானாக இருக்கிறான் தஸ்தாயெவ்ஸ்கி. இருவரும் இராணுவ பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கற்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி கற்கை நெறிகளில் சிறந்து விளங்குகின்றார். இருந்தும் இறுதி பரீட்சையில் சூழ்ச்சிகளால் பின்தள்ளப்படுகின்றார். அண்ணன் தேர்வாகி இருந்தாலும் உடல்நிலை குறைவால் தொடர்து இயங்க முடியாமல் போகிறது. இதுவெல்லாம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வருத்தத்தை அளிக்கின்றது.

தஸ்தாயெவ்ஸ்கியும் இலக்கியமும்.

இராணுவ பொறியியல் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே தஸ்தாயெவ்ஸ்கிக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ரஷ்ய இலக்கியங்கள், ஜெர்மானிய இலக்கியங்கள், கொலை வழக்குகள், சிற்றிதழ்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி ஒரு தீராத வாசகானவே இருந்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது.(listal.com)

தனது இருபத்தைந்தாம் வயதில் முதலாவது நாவலான “ஏழை எளியவர்” (Poor People) ஐ எழுதுகின்றார். தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது. தனது சமூக நிலை பற்றி வருந்திய தஸ்தாயெவ்ஸ்கி முதலாவது நாவலை பதிப்பிட பின்நிற்கிறார். பின்வந்த காலப்பகுதியில் ரஷ்யாவின் மதிப்பு மிகுந்த சிற்றிதழ் ஒன்றுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நண்பன் “ஏழை எளியவர்கள்” நாவலை கொடுக்க, அதற்கு மிக சிறந்த விமர்சனமும் பெறப்படுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கி அன்று பரவியிருந்த இயக்கங்களிலும் தனது பங்களிப்புகளை வழங்கியிருந்தார். அந்த சமயம் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் அவருக்கு விதிக்கபடுகிறது. நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் தண்டனை ரத்து செய்யப்பட மீண்டும்  தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் செல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி தனது  வாழ்கையில் இறப்பிற்க்கான கடைசி நொடி மட்டும் சென்று, இறப்பின் வலி , அதற்கு முன்னரான மனதின் போராட்டம், எண்ண அலைச்சல்கள், வாழ்க்கை மீதான துச்சம் என்று மனிதனின் கடைசி நொடியில் உணரும் அனைத்து மனச் சிக்கல்களையும் அனுபவித்து விடுகின்றார். அதன் பின்னரான கைதி வாழ்கையும் அவருக்கு இலகுவானதாக அமைந்து விடவில்லை. (கைதி வாழ்க்கை எப்போதும் இலகுவானது அல்லவே!) தனது வாழ்வின் இருண்ட நாட்களை விதம் விதமான சிறைக்கைதிகளுடன் கழிக்கின்றார். ஒரு வகையில் அனைத்தையும் உணர்ந்த தேவ நிலையிலிருந்த தஸ்தாயெவ்ஸ்கி – சக கைதிகளின் மன ஆறுதலுக்கும் தன்னாலான உதவிகளையும் ஆற்றுகின்றார்.
1854 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றார். ஏழை எளியவர் மூலம் அறிமுகமாயிருந்த தஸ்தாயெவ்ஸ்கியை ரஷ்ய சமூகம் மறந்துபோயிருந்தது.  வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. இறுதியில் அண்ணனுடன் சேர்ந்து காலம் என்ற இதழை தொடங்குகிறார். மிக குறுகிய காலத்தில் காலம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது.

வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. (radissonblu.com)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய நாளில் சாதாரணமாக எந்த சிற்றிதழ்களும் கணக்கிலேயே எடுக்கப்படுவதில்லை. அத்தோடு எதையும் அரசாங்கம் நிறுத்தியதாய் அறியவும் இல்லை. இது அரசாங்கத்தின் அறிவீனமா? அல்லது சிற்றிதழ்களின் மந்த நிலையா? மீண்டும் ‘யுகம்’ என்ற இதழை தஸ்தாயெவ்ஸ்கி தொடங்குகிறார். இதழ் சோர்வாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கையிருப்பு காலியாகி கடனும் ஏறிக்கொண்டிருந்த பொழுது தஸ்தாயெவ்ஸ்கியை விட்டு அவரின் அண்ணன் இறந்து போகிறான். கூடவே தஸ்தாயெவ்ஸ்கிக்கு சூதாட்டமும் பழகி வெறியாகிப்போகிறது. தஸ்தாயெவ்ஸ்கி அனைத்தையும் இழந்து வீதிக்கு வருகிறார். மீண்டும் மீண்டும் துன்பம் சூழ்ந்து கொள்கிறது. அப்போது எழுதிய நாவல் தான் ‘குற்றமும் தண்டனையும்’.
எப்போதும் இருக்கிற ரஷ்ய எழுத்தாளர்களைப்போல இவரும் அங்கொன்று இங்கொன்றாய் திருமணம் செய்கிறார். குற்றமும் தண்டனையும் எழுதுவதற்கு ஒரு காரிய தரிசியை ஒழுங்கு செய்கிறார் – அவள் பெயர் அன்னா. இறுதியில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்கையில் நடந்த பெரும் திருப்பங்களுக்கும் அவரின் எழுத்துகளின் ஒன்றினைப்புக்கும் அன்னா ஒரு மனைவியாக உதவுகிறாள். இக்காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கி “ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). கரமசோவ் சகோதரர்கள் மூலம் புகழின் உச்சத்தையே அடைகிறார்.
தொடரும்…

உலக இலக்கிய தொடர். பாகம் 01- டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.

அறிமுகம்.

நமது வாழ்கையில் இரண்டு வகையான தொழிற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று புறச்செயற்பாடு மற்றையது அகச்செயற்பாடு. இன்றைய சமூகத்தின் போக்கை ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை செயற்படுத்திக்கொள்ள புறச்செயற்பாடுகள்தான் காரணம். புறத்தே நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தனிமனித வாழ்வியலையும் பாதிக்கின்றது. எங்கோ நடக்கின்ற திருவிழாவும் எங்கோ நடக்கின்ற குண்டுவெடிப்பும் தூரத்தில் உதிர்கின்ற இலைகளும் எல்லாமுமே ஒரு வகையில் எம்மக்குள் பாதிப்புதான். ஒவ்வொரு பாதிப்பிலும் ஒவ்வொரு விதமாக நாங்கள் எங்களை சரிப்படுத்திக்கொண்டு அடுத்த பாதிப்பை நோக்கி செல்கிறோம். இதுதான் புறச் செயற்பாடு. இவ்வளவோடு எதுவும் முடிந்துவிட்டதென்பதில்லை.
ஒவ்வொரு புறச் செயற்பாடும் எம்முள் விதைக்கின்ற விதைகள்தான் மிக முக்கியமானவை. பாதைகளில் தடைகளை மட்டுமே புறச்செயற்பாடு காட்டும். அவ்வளவு தான் அதன் வலிமை. உண்மையில் நமது வாழ்க்கைக்கு பாதைகளே கிடையாதே. யார் சென்ற பாதையிலும் நாங்கள் செல்லப்போவதும் இல்லை. முன்னோடிகளா? அவர்களின் பாதையில் நாங்கள் செல்லப்போவது இல்லை. அவர்களின் பாதைகளை கவனித்து பயின்று பின்னர் எங்கள் பாதைகளை உருவாக்கிக்கொள்கிறோம். இது தான் யதார்த்தம். இந்த வெற்று வெளியில் பாதைகளை உருவாக்கிக் கொள்ள கருவிகள்தான் விதைகள். புறச்செயற்பாடு விதைத்த விதைகள். எல்லோரது வாழ்விலும் எண்ணற்ற விதைகளை விதைப்பதுண்டு. ஒவ்வொரு நொடியும் ஒரு புது விதை போடப்படுகின்றது; நேற்று போட்ட விதை துளிர்கின்றது; எப்போதோ போட்ட விதை விருட்சமாகின்றது; நெடுங்காலம் முதல் போட்டவை உதிர்கின்றன. இந்த செயல் வட்டம்தான் அகச்செயற்பாட்டு வாழ்க்கை.
இந்த விதைகளை விதைப்பதில் தான் அன்னா கரீனினா என்ற நாவல் வடிவம் பெறுகின்றது.

டால்ஸ்டாயும் அன்னா கரீனினாவும்.

லியோ டால்ஸ்டாய் (mosaicmagazine.com)

டால்ஸ்டாயின் மிக உன்னதமான நாவலான போரும் அமைதிக்கும் பிறகு அவர் எழுதிய இன்னொரு முக்கிய இலக்கியம்தான் அன்னா கரீனினா. குடும்ப வாழ்வின் திருப்பங்கள், அவற்றின் பிறழ்வுகள், ஒரு பெண்ணின் உளநிலை பிரச்சனைகள், காதல், சராசரி முடிவுகள் என்று முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை தழுவியே எழுதப்பட்ட நாவல். பொதுவாக நிலவுகின்ற  டோல்ஸ்டயிடம் இருந்து வர்ணனைகள் எடுத்து விட்டால் மீதம் இருப்பது உப்பு சப்பு இல்லாத கருத்துகளே என்ற சாடலுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் எழுதபட்ட நாவல். டால்ஸ்டாயின் புனைவுகள் என்பதை மீறி டால்ஸ்டாய் தனது வாழ்கையை பதிவிடும் எழுத்துகளாக அன்னா கரீனினாவை எழுதியிருகின்றார். பொதுவாக டால்ஸ்டாயின் வாழ்க்கைக்கும் அவரது புனைவுகளுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்னே கரீனினாவில் வருகின்ற லெவின் என்ற பாத்திரத்தை முற்று முழுதாக தன்னை உருவகப் படுத்தியே உருவாகியிருகின்றார்.
இந்த நாவல் ‘The Russian Messenger’ என்ற பத்திரிகையில் 1873 இலிருந்து 1877 வரையான நான்கு ஆண்டுகள் தொடராக வெளிவந்திருக்கிறது. அதையே பின்னர் கோர்த்து நூலாக்கியிருகின்றனர். இந்த நாவல் மொத்தமாக இருபத்தொன்பது மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருகின்றது. அன்னே கரீனினா நாவல் என்பதை தாண்டி ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் திரைப்படமாகவும் வெளிவந்திருகின்றது. Holleywood இல் மாத்திரம் நான்கு முறை திரைப்படமாக்கபட்டிருகின்றது. அன்னே கரீனினாவின் பின்னர் அன்றைய ரஸ்சிய மக்களால் புஸ்கினுக்கு அடுத்த மிக பெரிய எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார். இந்த நாவல் பிரெஞ்சு மொழியிலும் சம காலத்திலேயே சமாந்திரமாக எழுதப்பட்டது.

அன்னே கரீனினா எழுதுவதற்கான பின்னணி.

(pinimg.com)

டால்ஸ்டாய் பத்திரிகை ஒன்றில் “அன்னே ஸ்டேப்நோவா“ என்ற குடும்ப பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியை வாசிக்கின்றார். இந்த நிகழ்வு அன்றைய கால கட்டத்தில் அசாதாரணமானது. அதனால் டால்ஸ்டாய் இந்த நிகழ்வின் மீது கரிசனையும் அதிக கவனமும் செலுத்தி அதன் பின்னணியை ஆராய தொடங்குகின்றார். பிணவறையில் தலை மட்டும் தெளிவாக தெரியக்கூடிய உடலெல்லாம் சிதறிப்போன பெண்ணின் நிலையை கண்டு வேதனை அடைகிறார். அவளை பற்றி தேடியதில் அவளின் இறப்பிற்கு கள்ள காதல்தான் காரணம் என்றும் அறிந்து கொள்கிறார். அதைவிட மேலாக அந்த பெண் புஷ்கினின் மகள் என்ற உறுதிப்படுத்தபடாத செய்தியும் உண்டு. இவையெல்லாம் தான் டால்ஸ்டாயை அன்னே கரீனினா எழுத தூண்டியிருகிறது.
நாவலின் சிறப்பு பக்கங்கள்

அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார். (thefilmcricket.files.wordpress.com)

டால்ஸ்டாய் குடும்பம் என்ற சட்டகத்தில் இருந்து சமூகம் என்ற சட்டகத்திற்கு எவ்வாறு சிந்தனைகள் கடத்தபடுகின்றன என்பதை விவரித்திருப்பார். கூட்டுபண்ணையை உருவாக்குதல் பற்றியும் விவசாயத்தில் ஓடியிருக்கின்ற பழமையை இல்லாமல் ஒழித்து புதுமையான விவசாய புரட்சி செய்தல் பற்றியும் சாதாரண வாழ்கை தரத்திலிருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயத்திவிடுவது பற்றியும் மிக செறிவாக வாதிக்கின்றார்.
நாவல் சில ஆழமான குறியீடுகளை கொண்டிருகின்றது. அதில் முக்கியமானதாக புகைவண்டி காட்டபடுகின்றது. ஒரு புகைவண்டியின் அடிப்படை நோக்கம் ஒரு பயணியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லலே. இதை மிக நுட்பமாக டால்ஸ்டாய் அன்னாவின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்துகின்றார். அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார்.
அதைவிட ஒரு வாழ்வின் மிக கொடூரமான எல்லா மறையான விடயத்திற்கும் குறியீடாக புகைவண்டியை பயன்படுத்தியிருக்கலாம். அன்னாவின் வாழ்கையை அப்படியே வந்து அடித்து சிதிலமாகுகின்ற மறையான விடயங்களை புகைவண்டியின் மூலம் குறியீடாக்கியிருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

கதையில் வருகின்ற முக்கிய வசனங்கள்.

All happy families are alike; each unhappy family is unhappy in its own way.
In that brief glance Vronsky had time to notice the restrained animation that played over her face and fluttered between her shining eyes and the barely noticeable smile that curved her red lips. It was as if a surplus of something so overflowed her being that it expressed itself beyond her will, now in the brightness of her glance, now in her smile.
“Respect was invented to cover the empty place where love should be. But if you don’t love me, it would be better and more honest to say so.”
“. . . [M]y life now, my whole life, regardless of all that may happen to me, every minute of it, is not only not meaningless, as it was before, but has the unquestionable meaning of the good which it is in my power to put into it!”

அன்னா கரீனினாவும் விவாதங்களும்.

மிக எளிமையாக முடிக்கப்பட்ட ஒரு இறப்பிலிருந்து வாதங்களை அன்றைய அறிவார்ந்த சமூகத்தினர் அன்னாவின் மீது எழுப்பினார்கள். அன்றைய எல்லா அவைகளிலும் அன்னாவின் முடிவு சரியானதா பிழையானதா என்ற வாதம் எழுந்துகொண்டே இருந்தது. இன்றும் எழுந்தவண்ணமே இருகின்றது. வேறுபட்ட மனோபாவங்களையும் பல்வேறு சூழ்நிலை சிக்கல்களையும் எதிர்நோக்குகின்ற சாதாரண ஒரு பெண்ணின் முடிவு தற்கொலை தானா? என்ற காலத்தின் கேள்வியோடு வாதங்கள் தொடர்ந்தவண்ணமே இருகின்றன.
ஒரு உன்னத இலக்கிய படைப்பு காலத்தை மீறியது. காலக்கணிப்பு செய்யமுடியாத அர்த்தங்களை சுமப்பது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவும் காலத்தை கடந்த ஒரு உன்னத படைப்பு.
முழு நாவல் – ஆங்கிலத்தில்

உசாத்துணைகள்

உலக இலக்கிய பேருரைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
Spark Notes

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 08 – நாட்டார் கதைகள் II

மனித நாகரிக வளர்ச்சியுடன் கூடவே வளர்ந்து வந்த முக்கிய கூறு மனிதப் பண்புகள். மனித நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதப் பண்புக உருவாகி வளர்ச்சியடைந்து முதிர்ந்து போய் செப்பனான முறையில் வரையறுக்கப்பட்டு இன்று வெளிவந்து விட்டன. சொல்லளவில் மிக முதிர்ச்சியான மனிதப்பண்புகள் இன்று எல்லா சமூகங்களிலும் ஊடுருவியிருகின்றன. எம் சமூகத்தில் இன்றிருக்கின்ற எல்லா மதத்தினருக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட மனிதப் பண்புகளை கூறுகின்ற மத நூல்கள் எழுத்துவடிவில் இருக்கின்றன.
அதை விட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதற்கே உரிய மிக தொன்மையான வாய்வழி இலக்கியங்கள் மிக பலமான மனித பண்புகளை கடத்திக்கொண்டு இருகின்றது. இவையெல்லாம் வெறும் எழுத்துரு சொல்வழி தளத்தில் இயங்குகின்றனவே ஒழிய சமூகத்துக்குள் ஊடுருவி புழங்குகின்ற தன்மை அற்றனவாக காணப்படுகின்றன. இந்த புழக்கம் இன்மையின் வினைதான் இன்றைய சமூக சீர்கேடுகள். எமது சமூகங்களுக்கு மனிதப்பண்புகளை உருவாக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் அமுல்படுத்தவேண்டிய, பின்பற்றவேண்டிய தேவை இருகின்றது. இதை யாரும் மறுத்துவிட முடியாது.

வடக்கு நட்டார் இலக்கியங்களின் இறுதிப் பகுதியான நட்டார் கதைகளின் நிறைவுப் பாகம் இது. வடக்கில் காலம் காலமாக இருந்த மக்களிடையே வாய்மொழியாக பேசப்பட்டு பின்பற்றப்பட்டு கடத்தப்பட்ட மனித நேய பண்புகளை கூறும் கதைகள்தான் இந்த பாகத்தின் மையப்பொருள். வடக்கு மனிதர்களிடையே காலம் காலமாக இருக்கின்ற இருபிரச்சனைகளை சுற்றியே எல்லா மனிதநேய கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

(staticflickr.com)

ஒன்று  ஆட்சி, இன்னொன்று குடும்பம். இவை இரண்டிலும் நாளாந்த வாழ்வியலில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கலை கருவாக கொண்டு நல்லது இது கெட்டது இது என்று வரையறை செய்கின்ற கதைகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. இரண்டு அரசு மற்றும் குடும்ப கட்டமைப்புக்களை களமாக கொண்டு பிரச்சினையை முன்வைத்து பின்னர் அதனால் உழல்கின்ற மக்களின் வாழ்வியலை காட்டி கடைசியாக  பிரச்சனையிலிருந்து மீள்கின்ற வழியினை போதித்து கதையை முடித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கதைகள் இந்த கட்டமைப்பிலேயே இருக்கின்றன.
கதைகளில் சில நுட்பமான குறியீடுகளை பயன்படுத்துவதன்  மூலம் சமூகத்தில் இருக்கின்ற தீய சக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் பின்னணி இப்படியாக அமைகின்றது. அதிகாரங்களில் இருப்பவர்களிடையே இருக்கின்ற தீய எண்ணம் கொண்டவர்களை எதிர்த்து வெளிப்படையாக கதைக்கக்கூடிய அல்லது போராடக்கூடிய திறன் அற்றவர்களாக இருந்த மக்கள், அவர்களை ஐந்து அறிவு படைத்த மிருகங்களாகவே கருதினார்கள். அவர்கள் செய்கின்ற அட்டகாசங்களை பிறருக்கும் அறிவிக்கின்ற, அறிவுறுத்துகின்ற வகையில் அதிகாரத்தில் இருக்கின்ற தீயவர்களை மிருகங்களுக்கு ஒப்பாக கருதி மிருகங்களாகவே வடித்துள்ளனர். அவர்களுடனான சாதாரண மக்களின் உரையாடல்களும் போராட்டங்களும் வெற்றியும் தோல்வியும் அதனூடு வெளிப்படுகின்ற நல்ல, தீய மனிதப்பண்புகளின் பிரிவினையையும் இந்தக் கதைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் ஆட்சியில் இருக்கின்றவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர்.

(blogspot.com)

கதை 1

“……… ஒரு நாள் நெல்லை காயவைத்துகொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று ‘உன்னை கடிக்கட்டா இல்லை நெல்லை கொறிக்கட்டா?‘ என்றது காட்டு பன்றி, அவள் பயத்திலேயே ‘நெல்லை கொறித்துகொள்‘ என்றாள்…………..”

கதை 2

“……………….கல்யாணத்தன்று குரங்கு அவனிடம் இதைக்கூற அவன் மறுத்துவிட்டான். பின்னால் ஏதோ ஒரு வகையில் குரங்கு அவனிடம் பேசி சம்மதிக்க வைத்தது………….”

கதை 3

“……………. அவளை மயக்கிக் கொண்டு சென்ற புலி ஒரு அழகான ஆண் புலிக்குழந்தையை அவளுக்கு கொடுத்தது…………………..”

கதை 4

“……………..தவளையிடம் அரசியை பார்த்து வரும் படி அவன் தூது அனுப்பினான். அதை அரச கழுகு கவனித்து ராஜாவிடம் சொல்லி விட்டது……..”

சில கதைகளில் மனித அறியாமையும் அதனால் ஏற்படுகின்ற தவறுகளும் அதற்கு உதவுகின்ற மாந்தர்களும் என உதவி செய்தலையும் செய்த உதவியை மறக்காமல் இருத்தலையும் ஆழமாக கூறுகின்றன. இவற்றுள் பொதுவாக குடும்ப பின்னணியே பயன்படுத்தபடுகின்றது.
கதை 5

“ ஒரு விவசாயி தினமும் பெரிய பெரிய கிழங்குகளை பிடுங்கி வீட்டிற்கு கொண்டு வருவான். ஆசையுடன் மனைவியிடம் கொடுத்து காய்ச்சச் சொல்வான். அவளும் பக்குவமாக பெரிய கிழங்குகளை அடியிலும் சிறிய கிழங்குகளை மேலும் வைத்து காச்சுவாள். காய்ச்சிய கிழங்குகளை அவன் தட்டில் குப்புற கொட்டுவாள். எப்போதும் அவனுக்கு சிறிய கிழங்குகளே கிடைக்கும். அதனால் மிக வருத்தம் அடைந்தவனாய் நண்பனிடம் ஒருநாள் சென்று விவரத்தை கூறினான். நண்பன் நெய்யை மனைவிக்கு தெரியாமல் தாச்சியின் அடியில் பூசி விட்டு விவரத்தை பார் எண்டான். இவனும் அப்படியே செய்தான் அண்டைக்கு எல்லா கிழங்குகளும் அவன் தட்டில் விழுந்தன. மனைவி தான் செய்த அறியாமையின் தவறை உணர்ந்து மனிப்புகேட்டாள். விவசாயி நண்பனுக்கு நன்றியுடையவனாக இருந்தான்.”

இந்த வாய்வழி கதை; உதவி, மன்னிக்கும் மனப்பாங்கு, நன்றிமறவாமை என்ற மனிதப் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இருந்தும் இதன் பின்னணியில் இருக்கின்ற, இதே போன்ற சில கதைகளின் பின்னணியில் இருக்கின்ற வெளிப்பாடுகள் பெண் அறியாமை என்ற கருவில் பேசுகின்றன.

(yartmagazine.com)

அடுத்து மிக முக்கியமாக கதைகளில் இருக்கின்ற பண்பு பாசம். அம்மா-மகன், அண்ணன்-தங்கை, கணவன்–மனைவி என்ற பாசப்பிணைப்புக்கள் போன்றவை கதைகளில் இழையோடி இருக்கிறன. எந்த சந்தர்ப்பத்திலும் மகனை விட்டுக்கொடுக்காத அம்மா, ஐந்து அண்ணன்களை தனது சாகசத்தால் மீட்ட தம்பி, தங்கையின் பாசத்துக்காக மனைவியை துறந்த அண்ணன் என்று கதைகள் ஒவ்வொன்றும் விதவிதமான பாசப்பிணைப்புகளை காட்டுவதாகவே அமைகின்றன.
கதை 6

“……….அண்ணா! அண்ணி செய்யும் கொடுமைகளை பார் என்று கேட்பது போல அவனுக்கு அவன் நான்கு தம்பியரின் பார்வைகள் இருந்தன, அவன் மனைவியை துரத்திவிடவில்லை. பக்குவமாய் பல மொழிகள் சொன்னான். அவளும் வெகு விரைவில் திருந்தி அண்ணனும் தம்பிமார்களும் அண்ணியும் மருமகளும் மிக சந்தோசமாக வாழ்ந்தார்கள்……….”

கதை 7

“………….புலி மரத்தின் மேலே நின்றதைப்பாரத்த அண்ணன் அது தாவும் முன்னர் தங்கச்சியை காப்பாற்ற புலி மீது பாய்கிறான்……..”

அரசாட்சிக்குள் நடக்கின்ற பிரச்சனைகளையும், அதில் ஏற்படுகின்ற கவனக்குறைவால் உண்டாகின்ற பிழைகளையும் மந்திரி ஊழியர் அரசர் உறவுகளையும் இளவரசியின் காதல், உதவுகின்ற மனப்பாங்குகளையும் போர்யுக்தி அரச பரஸ்பர உறவுமேம்பாட்டயும் அதிலே உண்டாகின்ற உன்னத மனித பண்புகள் பற்றியும் சில கதைகள் விவரிக்கின்றன.
மனிதப்பண்பு என்ற வகையோடு பேய்க்கதைகள் மந்திரக்கதைகள் என அமானுஷ்யங்களை பற்றிய கதைகள் வெகு சிலவும் காணப்படுகின்றன.

(google.lk)

இந்த பேச்சு வழி கதைகள் எல்லாம் எந்தக்குறையும் இன்றி கடத்தப்படுகின்றனவே ஒழிய பயன்படுத்தபடுகின்றன்வா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதிலிருந்து முடிவுகளையும் அனுபவங்களயும் எடுத்துக்கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மிக உன்னத பண்பாடு நாகரீகம் என்று வெறும் புறவய நிலுவைகளை கொண்டாடுகின்றோமே ஒழிய அகவயமாக நாம் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் நிதர்சனம்.
இந்த மறக்கப்பட்ட வடக்கு நாட்டார் இலக்கியங்கள் என்ற தொடர் இத்துடன் என்வழியே முற்று பெற்றாலும் ஆழமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் கூறியது போல

“இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.”

இன்று இத்தோடு முடிகின்ற அத்தியாயம் இன்னொரு முறை மிக ஆழமாக எழுதப்படும்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 07 – “நாட்டார் கதைகள்”

வழமை போல இலக்கியங்களுக்குள் ஒருவனாய் நின்று ஆராயாமல் ஒரு பார்வையாளனாக வடக்கு பிரதேசங்களில் உலவுகின்ற நாட்டுப்புற கதைகள் சம்பந்தமான இந்த கட்டுரையினை எழுதலாம் என்ற நோக்கம் தான் இந்த காலதாமதத்துக்கு ஒரு காரணம். எப்போதும்போல இலக்கிய வர்ணனைகளுடன் ஆராய்வதற்கு கதைகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதனால், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஆராய்தல் மிக பொருத்தமானதாக இருக்கும். இந்த கட்டுரையினை எழுதுவதற்காக கிட்டத்தட்ட நூற்று ஐம்பது கதைகளை வாசித்துள்ளேன். இணையத்தில் இருந்தும் சுற்றத்தில் இருந்தும் முக்கியமாக கலாநிதி கி. விசாகரூபன் எழுதிய ஈழத்து நாட்டுப்புறக் கதைகள் என்ற தொகுப்பிலிருந்து என்னால் பெருமளவான கதைகளை திரட்ட முடிந்தது.

கதைகள்- ஓர் அறிமுகம்

(mamtavn.files.wordpress.com)

இன்றிலிருந்து சுமார் 1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அனுமானிக்கப்படுகின்ற மனித இனம் வழி வழியாக கடந்து வந்த பாதையின் குறிப்புகளே கதைகள். இந்த குறிப்புகளின்  உண்மைத்தன்மை என்பதை மீறிய ஒரு பதிவு நுட்பம்தான் கதைகளின் கரு. சிறிய சிறிய விடயங்களில் தொடங்கி உலகின் மிகப்பெரிய வரலாற்றுத் தடங்கள் வரை எல்லாமுமே கதைகளின் கோப்புகள்தான். இன்று கிடைத்திருக்கின்ற வரலாற்று தடயங்களில் இருந்து உருவாகின்ற அனுமானங்கள் எல்லாமே கதைகள் தான். கல்லை உரசி பொறி துவக்கினானிலிருந்து கணனியில் பொறி கிளப்பினான் வரை எல்லாம் கதையின் பரிமாணங்கள் தான். ஒரு சம்பவமோ சில சம்பவ கோர்ப்புகளோ வெளிப்படும் போது அவை கதைகளாக மாற்றம் கொள்கின்றன. ஒரு காதாசிரியன் கதைகளை உருவாக்குகிறான் என்ற இன்றைய போக்கிலிருந்து சற்றே விலகி சாதாரண மாந்தர்கள் எல்லாருமே கதாசிரியர்கள் ஆகின்றார்கள் வரலாற்றில். பொதுவாகவே அனுபவங்கள் தான் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட்டுவருகின்ற கதைக்குறிப்புகளாக இருக்கின்றன. ஓர் உண்மைச்சம்பவமோ அல்லது புனைவோ அனுபவமாக கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த எச்சங்கள்தான் இன்றைய கதைகள்.

வடக்கின் நாட்டுப்புறக் கதைகள் – தெய்வீக கதைகள் ஒரு பார்வை

கதைகளுக்கு பிறப்பிடம் கிராமங்கள் தான். இதில் வேற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஏனென்றால் ஆதி வரலாறுகளில் கிராமங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. வடக்கின் புவியியல் அமைப்பு, விளிம்புகளில் கரையோரமாகவும் மத்திம பகுதிகளில் விளைநிலமாகவும் அடியில் காட்டு நிலமாகவும் இருந்திருக்கின்றது. இந்த நிலவியல் அடிப்படையிலேயே கதைகளும் அதன் போக்கை வகுத்துக்கொள்கின்றன. வெவ்வேறு நிலவியலில்  வாழுகின்ற மாந்தர்கள் அந்தந்த நிலவியலின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அந்த நிலவியல் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கின்றன. இந்த பயத்தின் குறியீடே அவர்களின் கதைகளில் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கின்றன.
கதை 01- வேளாங்கண்ணி மாதா

“……….. நடுக்கடலில் பெரிய புயல் வீசி கப்பல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க கப்பலில் இருந்த எல்லாரும் “மாதா” என அலறிக்கொண்டிருந்தனர். …………”

கதை 02- உக்கிர வைரவர்

“……..தண்ணி உக்கிரமாய் பாயத்தொடங்கியது. வர வர தண்ணீர் வேகமாக அடித்துகொண்டுவருவதைப்பார்க்க இவருக்கு ஐமிச்சம் ஆகிவிடுகிறது….. வேட்டி சால்வை எல்லாவற்றையும் மம்பட்டிக்கு சார்த்தி விட்டு ஓடி வந்துவிட்டார்…… “

இந்த பயத்தை ஏற்படுத்தும் ஊடகமாக இயற்கையே பயன்படுத்தப்பட்டது. இயற்கை கொள்கின்ற சீற்றம் அவர்களுக்கு தெய்வ குற்றமாகப் படுகின்றது. அந்த இடத்திலே ஏற்படுகின்ற உதவியை அவர்கள் தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட உதவியாகவும் அதன் பின்னரான சம்பவங்கள் அந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட குறீயீடுகளே என்ற நம்பிக்கை ஒவ்வொரு கதைகளிலும் பலமாக எதிரொலிக்கிறது.
கதை 03- லொரென்சியார் கோவில்

“…. தாமஸ் (ஐயம்பிள்ளை) லொரென்சியாரை பூசித்துவரும் காலத்தில் தீவாலய முன்றலில் நிறுவுவதற்கு கொடிமரம் இல்லையே என்று மனம் வருந்திய சில நாட்களில் பரவைக்கடலில் முப்பத்தைந்துஅடி உயரமான சவுக்கு மரம் ஒன்று வந்தடைந்தது ………”

பெரும்பாலான கதைகளின் பின்னணி அவ்வூர்களில் இருக்கின்ற கோவில்கள் தேவாலயங்கள் பற்றியே இருக்கின்றன. பக்தி என்ற பயத்தை மனிதர்களிடையே ஏற்படுத்துவதற்காக முன்னைநாள் அனுபவங்களை சொல்லுகின்ற பின்னணியை கதைகள் கொண்டிருக்கின்றன.

(pixabay.com)

கதைகளில் மையக் கருவாக இருக்கின்ற பக்தியினை உறுதிப்படுத்த புனைகின்ற சம்பவங்கள் அனைத்தும் தெய்வத்தை அலட்சியப் படுத்துகின்றதன் விளைவையோ அல்லது மிக இக்கட்டான சூழ்நிலையில் தெய்வத்தின் உதவியையோ காரணப்படுத்தி கூறப்படுகின்றன.
கதை 04 – காளியாச்சி

“………… பிறகு ஒரு நாள் ஒரு சோனக மனுசி அந்த அம்மன் கோவிலுக்கு முன்னால தலையை விரித்து அந்த முடியை கையால் கோரி விட்டுக்கொண்டு அம்மனை அலட்சியமாக பார்த்துவிட்டு போனாள். அப்படி பார்த்த மனுஷியின் தலை அப்படியே திரும்பி விட்டது…………..”

கதை 05 – அற்புத இளநீர்

“……….. அடுத்த நாள் அபிஷேகத்துக்கு பால் பழம் கொண்டு கோயிலுக்கு போனார்கள். கோயில் ஐயாவிடம் இளநீர் கிடைக்காததை எண்ணி வருந்த ஐயா தோட்டத்தில் போய் பார்க்குமாறு கூறி அனுப்பிவிடுகிறார். அங்கு சென்று பார்த்தபோது செவ்விளனி குலையாக காய்த்து கிடந்தது…….”

பக்தியோடு உள்ளூர சாதியமும் கதைகளில் ஓடுகின்றது. கீழ் சாதியினரை ஊர் மக்கள் வெறுப்பதாகவும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க மறுக்கின்ற அல்லது ஓதுகின்ற போக்கினையையும் எடுத்துக்காட்டுகின்றது.
கதை 05 – அற்புத இளநீர்

“….. பறையனுக்கு வீட்டில் இளநீர் இருந்தும் கொடுக்க மறுக்கின்றனர்……..”

கதை 06 – பாவம் கழித்தல்

” …….. அவர்கள் இந்த வளவுக்குள் வரக்கூடாது. மீறிவந்தால்உங்களையும்  அவர்கள் போலவே நினைத்துக்கொள்வேன். ……”

(pixabay.com)

சில கதைகள் மதப்பிரிவினை இருந்ததை கூறுகின்றன. மதங்களுக்கிடையே வன்முறை முற்றி இருப்பதை, அவர்கள் மற்றைய மதங்களை மதிக்காமல் இருப்பதையும் காட்டுகின்றது. இன்று வடக்கில் பேசாமல் ஒளிந்து காணப்படுகின்ற மதப்பிரிவினை ஒருகாலத்தில் பெரும் கலவரமாகலாம். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனித மனங்களுக்கிடையே காணப்படுகின்ற விரிசல் மிக வலிமை வாய்ந்தது. எவ்வளவுதான் நாம் ஒன்றாக இருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டாலும் புரிந்துணர்வு இல்லாமலே இந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் மூன்று சமய வணக்கஸ்தலங்களும் ஒன்றாக இருந்தாலும், கூடவே இருக்கின்ற மீன் இறைச்சி சந்தையின் நிலவுகை இன்றைய வவுனியா சூழலில் இருக்கின்ற மத, மன நல்லிணக்கத்தின் சிறந்த குறியீடு.
போர்த்துக்கேய ஒல்லாந்தர் ஆங்கிலேய கால கட்ட கதைகளின் போக்கு இன்னொருவிதமானது. இதில் கிறிஸ்தவ மத பின்னணியை கொண்ட புனைவுகளே அதிகமாக காணப்படும். அவர்களின் மத தாக்கம் அல்லது மத திணிப்பு கதைகளில் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமியர்களும் சரி இந்துக்களும் சரி எந்த பேதமுமின்றி கிறிஸ்தவர்களாகும் கதைகளே காணப்படுகின்றன. மேலை நாட்டவர் நீர் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்தமையால் கதைப்பின்னணி கடலோர வாழ்வியலை மையப்படுத்துகிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட தேவாலயங்கள் எல்லாமே இறைவனின் உதவிக்கு நன்றியாக கட்டப்பட்டிருக்கின்றன. மதம் மாற்றல் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்ட கதைகள் அந்த பருவ காலத்துக்குரியவை.
கதை 07 – சவேரியார் கோவில்

“……………..முஸ்லீம் யாத்திரைகள் யாவரும் சவேரியாரின் நாமத்தை கோஷித்த வண்ணமே வந்து அவரின் அடியை வணங்கினார்கள். நிலைமையை புரிந்துகொண்ட சவேரியார் ஜெசுவின் நாமத்தை உச்சரித்து குமாரனை உயிர்பித்தார். ………..”

கதை 08- லொரென்சியார் கோவில்

“…………ஐயம்பிள்ளையாரின் ஏற்கனவே இருந்த நாச்சிமார் கோவில் மறைய அவ்விடத்தில் கண்டெடுத்தல் கல்லை வைத்து லொரென்சியார் கோவில் அமைத்து வணங்கினார். நாச்சிமாரை வணங்கிய சமூகம் லொரென்சியாரை வணங்க தொடங்கியது…….”

(pixabay.com)

 
வெளிநாட்டவர்கள் மதத்தை வலுக்கட்டாயப்படுத்தி திணித்ததாக எந்த கதைகளுமே கூறவில்லை. மேலான சமயம் ஒன்றிக்கு தாமாக மாற்றப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. கோவில் அழிப்புக்கள் பல தாமாகவே மறைந்ததாகவும் அந்த இடத்திலே கிறிஸ்தவ தேவாலயங்கள் உருவானதாகவுமே வலிந்து கூறப்படுகின்றன.
வரலாற்றை மறைக்க புனையப்பட்ட வெறும் பொய்க்கதைகளாகவே இதை கருத முடிகின்றது. கதைகளில் பல இருவரோ அல்லது ஒருவருடனேயே முடிவடைந்து விடுகின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத நிகழ்வுகள் அங்கிருக்கும் ஆட்சிக்கோ நம்பிக்கைக்கோ ஏற்ப திரிபுபடுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். காலத்தின் நிலைமையோடு வழிபாடும் கடவுள்களின் சக்திகளும் அவர்களால் செய்யப்படுகின்ற அற்புதங்களும் வலுவைமாற்றிக்கொள்கின்றன. அந்த அந்த இடங்களில் வலுப்பெற்றிக்கின்ற சமயத்தினை பொருட்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன. இதிலிருந்து கதைகளில் உள்ள புனைவுத்தன்மை வெளிப்படுகின்றது. இவற்றினை ஒட்டுமொத்தமாக நோக்கும் பொருட்டு மிகத்தெளிவாக திரிபாக்கப்பட்ட கதைகளின் வடிவமாகவே தெய்வீக கதைகள் இன்று உலவுகின்றன என்பது ஓரளவு ஊர்ஜிதமாகின்றது.
இது சமய விருப்பு வெறுப்பு இன்றி எழுதப்பட்டது. கதைகளின் மீதான எனது தனிப்பார்வையிலேயே கட்டுரை ஆக்கப்பட்டுள்ளது. எந்த திணிப்புகளும் இதிலில்லை.
அடுத்த கட்டுரையில் சமூகம் சார்ந்த கதைகளையும் சமூக விழுமியங்கள் சார்ந்த கதைகளையும் அரசு ஆட்சி போன்றவை சம்பந்தமான கதைகளும் பற்றி ஆராயலாம்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 06 “கரகம்”

ஏன் இதையெல்லாம் பதிவிடுகிறோம்? புத்தகத்துக்கோ அல்லது திரைப்படத்துக்கோ மிஞ்சி போனால் சமூக நிலைமைக்கோ கட்டுரைகள் அல்லது விமர்சனங்கள் எழுதினால் நிறைய நாட்கள் நீடித்து நிற்கமுடியும், கூடவே மக்கள் மத்தியில் இஸ்திரமான ஒரு நிலையை அடையமுடியும். எத்தனை பேர் இதை வாசிப்பார்கள்? துடிப்பான சுவாரஸ்யமான தகவல்கள்தான் அதிக கவன ஈர்ப்பினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. சரி இது போன்ற தலைப்புகளில் எழுதுவதற்கு அனுபவமும் அடையாளமும் தேவையே, அங்கீகாரம் பெற்றவர்கள் எதை எழுதினாலும் அது கவனிக்கப்படுகிறதே, அங்கீகாரம் பெற்ற பிறகு எழுதிக்கொள்ளலாமே. இது போன்ற கருத்துக்களை நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் கொடுக்கலாமா இல்லையா என்ற மனநிலையில் இல்லை என்று சுதாகரித்து கொண்டு கிளம்பி விட்டேன்.
இன்றைய வடக்கு சூழலில் அருகிவருகின்ற ஒரு வழிபாட்டு முறை தான் கரகாட்டம். முன்னைய காலங்களில் பஞ்சம், தோற்று நோய், இயற்கை சீற்றங்களின் போது மாரியம்மனை வேண்டி வழிபட்ட ஆடலும் பாடலும் நிறைந்த வழிபாட்டு முறை தான் கரகாட்டம். இது தமிழ் மக்களுக்கே உரிய மிகப்பழைமையான நாட்டார் வழிபாட்டு ஆடற்கலை ஆகும். காலத்தினால் இது தொழிலுக்காக ஆடப்படுகின்ற கண்காட்சி ஆடல் முறையாக மாறிப்போனது. பணத்துக்காகவும் கேளிக்கைக்காகவும் ஆடப்படுகின்ற ஆடல் முறையாக இது மாறிப்போனது தமிழ் சமுகத்தின் இழிநிலையை காட்டுகின்றது. பயத்தால் புனிதமாக ஆடப்பட்ட கலையின் இன்றிய நிலை வருத்தத்திற்குரியதே. இருந்தும் சமகாலத்தில் கோயில் வழிபாட்டுடன் ஆடப்படும் கரகமும் நிலைத்தேயுள்ளது.பொதுவாக கரகம் ஆண்களுக்குரியதொன்றாகும். ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது.

ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது. (staticflickr.com)

கரத்தில் இருவகைகள் உள்ளன. ஒன்று சக்தி கரகம் மற்றையது ஆடு கரகம். முன்னையது தொன்மையானது பின்னையது தொழில்முறையானது. சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். இக்கரகம் இறை வழிபாட்டுடன் தொடர்புடையது. பக்தியின் விளைவாக எடுக்கப்படுகிறது. ஆடு கரகம் ஆண்கள் பெண்கள் என இருவகையினராலும் ஆடப்படுகிறது. இது தொழிலுக்காக எடுக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு செம்புகளும் ஆடுகரகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சக்தி கரத்தை அபிநயங்களை கூட்டியும் அம்பலமாகவும் கேளிக்கைக்காகவும் பணத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் மாற்றப்பட்டு ஊர் ஊராக ஆடு கரகம் ஆடப்படுகிறது.
வழிபாட்டுக்காக எடுக்கப்படும் காரகத்தினுள் புனித நீர் வைக்கப்படுகின்றது. உழவர்கள் ஏர்மங்கல விழாவின்போது இந்த புனித நீரையும், அதே போல பெண்கள் முளைப்பாலிகையையும், – முளைகள் உள்ள ஓடு, எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்வர். ஆண்கள் பக்தியுடன் எடுத்துச் செல்லும் புனிதநீர் அடங்கிய செம்பே கரகச்செம்பு என்றும் அதை எடுத்துச் செல்லும் உழவரை கரகக்காரர் என்றும் அழைப்பார்கள். இதே போன்ற செய்முறையில் கரகக்காரர்கள் ஒன்பது செம்புகளை எடுத்துச்செல்வார்கள்.

” ஒண்ணா கரகமடி எங்கள் முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி ” எனத்தொடங்கும் நாட்டார் பாடலில்
“ஒன்பதாம் கரகமடி எங்கள் முத்துமாரி
ஒலகம் செழிக்கவேணும் எங்க முத்துமாரி ” என முடிவுறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது வழிபாட்டு முறை என்றால் ஆடற்கரக முறை பல அடுக்குகளை கொண்டமைந்தது.
ஓரளவு தோதான அலுமினிய அல்லது கலப்புலோக செம்பு அல்லது குடம் தெரிவுசெய்யப்பட, அதனை சுற்றி பூக்களாலும் மாலைகளாலும் அலங்காரங்கள் செய்யப்படும். குடத்தினதோ செம்பினதோ வாயிலிருந்து கோபுரவடிவான- அதாவது கூம்பு வடிவ எழுப்பம் ஏற்றப்படும். அதை சுற்றி வண்ணங்களாலும் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு உச்சியில் பொம்மைக்கிளி சொருகப்படும்.

சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். (pinimg.com)

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர். ஆடுகரகம் எடுப்போர் குடம் முழுக்க மணலை நிரப்புவர். பௌதீகவியல் ரீதியில் சமநிலையை பேணுவதற்காக உள்ளடக்கம் செய்யப்படுவதாகவும், இந்து சமய ஐதீகங்களின் படி கரகச்செம்பை உடலாக உருவகித்தால் உள்ளடக்கம் உயிராக உருவகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கரகாட்டம் மூன்று நிலைகளை கொண்டது. தொடக்க நிலை, வேக நிலை மற்றும் அதிவேக நிலை என்பவை அவையாகும். ஊரவர் மத்தியில் கேளிக்கைக்கான நேரத்தினை ஏற்படுத்துவதற்காக கரகக்குழுவில் எல்லோரும் ஆயத்தம் அடையும் நிலையே தொடக்க நிலை.
கரகக் காரருடன் எல்லா வாத்தியங்களும் பொருந்த கரகக்காரர் தன்னை நேர்த்தியாக்கிக்கொண்டு கரகமும் உறுதிச்சமநிலையில் இருக்கின்றதா என சரிபார்த்துக்கொள்ளும் நிலை. நையாண்டி மேள இசையோடு எல்லா கூறுகளும் பொருந்துகின்ற ஒரு நிலையை அடையும் மட்டும் பக்கவாத்தியங்கள் கரகக்காரர்கள் என எல்லோரும் மெதுவாக அசைவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஒரு பெரிய சபாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவர்.
ஒருங்கிசைவு பெறப்பட்டவுடன் மெது மெதுவாக வாத்திய வேகத்தை அதிகரிக்க ஆட்டவேகமும் அதிகரித்துக் கொள்ளும். இது இது வேகநிலை. இதன் போது தாளசுதிக்கும் வாசிக்கும் இசைக்கும் ஏற்ப எவ்வித வேறுபாடும் தெரியாமல் கலைஞர்கள் ஆடுவர். இதனை சமநிலை என்றும் கூறுவார்கள். எல்லாம் பொருந்திய உச்சநிலையில் கரகாட்டம் அதிவேக நிலைக்கு செல்லும். ஒரு புயல் மைய்யம் கொண்டதுபோல கரகாட்டக்காரர் வலப்பக்கம் சுழன்று சுழன்று கரகம் கீழேவிழாமல் சமநிலையில்  இருக்கவும்  காண்போர் சமநிலை அற்று போகுமாறும் ஆடிக்கொண்டிருப்பர். தாளம் முறியாமலும் ஜாதிமுறியாமலும் முகமெது முதுகெது என அடையாளம் காணமுடிய படி சுழன்றுகொண்டிருப்பர்.

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர் (thenewsminute.com)

இப்பிடி ஓய்ந்த புயலில் மழையின் இடைவெளி சிரிப்பொலி போல கோமாளிகள் வந்து ஆடுவதுண்டு. இதன் நோக்கம் ஆட்டக்காரர் ஓய்வெடுப்பதாக இருக்கும். கோமாளி அவ்வூர் பேச்சுமொழியில் ஆபாசம் கலக்க நகைச்சுவையாக பேசுவான்.
கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும்.
காலில் மணிக்கச்சம் – ஆடுபவர் காலில் கட்டிக்கொள்ளும் சதங்கை, தலையில் செம்பை வைத்து தன் அங்கங்களில் சிக்கலான அசைவுகளை சிக்கலான இயக்கங்களை நடனக்காரன் மிகவும் நளினமாகவும் சாமர்தியமாகவும் வெளிப்படுத்திடுவார். இரண்டு நாதஸ்வரங்கள், ஓர் ஒத்து, தவில், தாளம், பம்பை, தமுக்கு போன்ற கருவிகளின் உதவியால் எழுப்பப்படும் நையாண்டி மேளம் என்ற ஒருவகை இசை இதற்கு பின்னணியாக திகழும், கரகமாடுபவன் தலையில் கரகத்துடன் நாத வேறுபாடுகளிற்கு  ஏற்ப தன் உடலின் பாவங்களை வெளிப்படுத்துவான். (சடகோபன் )
கரகாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அடிவைத்து மாறி மாறி வைப்பதுண்டு . இம்மாற்றம் களம் எனப்படும். கரகத்தில் உள்ளதற்கு மேற்பட்ட களக்கணக்குகள் உண்டு. இக்களம் நையாண்டி மேளத்தின் தாள கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது. எனவே நையாண்டி மேளம் இன்றியமையாததொன்றாகும். ( குணசேகரன் )
வல்வெட்டித்துறையில் ஊறணி என்ற இடத்தில் இந்திய வம்சாவழியினரால் இவ்வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனையோர் உடுக்கு நாதஸ்வரம் தவில் போன்றவற்றையே கையாளுகின்றனர். கரகம் ஆடுவதற்கென எந்த மேடை அமைப்பும் இல்லை. ஒரே ஒரு தளம் மட்டும் போதும். மக்களுக்குள் சென்று ஆடும் ஆடற்கரக வழக்கமும் உண்டு.

கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும். (tampabay.com)

கரகக் காரரின் உடையமைப்பு மிக அழகாக இருக்கும். முன்னைய காலத்தில் சட்டையும் பாவாடையும் தலையில் குடத்தை தாங்க குடுமியும் அணிந்து கொள்வர். இன்றைய காலத்தில் கீழே ஜீன்ஸ்-உம் மேலே முழங்கால் வரையே நீளுகின்ற மேற்சட்டையும் அணிவர். சில இடங்களில் திரைப்பட பாதிப்பில் பரத உடையும் அணிவதுண்டு.
கரகத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். கிழக்கு இராமநாதபுரத்தில் தஞ்சாவூரில் கரக செம்பு என்றும், திருநெல்வேலி மக்கள் கரகக்குடம் என்றும் கன்னியாகுமாரி மக்கள் கும்ப ஆட்டம் என்றும் இந்தியாவிலும் யாழிலும் கரகம், கரகாட்டம் என்று இருவகையாலும் மலை நாட்டில் செம்பாட்டம், கரக கூத்து என்றும் மட்டக்களப்பில் கரகம் என்றும் அழைப்பர்.
கரகத்தின் அடி நாதம் அற்றுப் போயிருந்தாலும் இன்றும் நிலைத்து நிற்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தோடு நடனங்கள் என்ற பகுதிக்கு விடைகொடுத்துக்கொண்டு வடக்கு நாட்டார் கதைகள் என்ற சுவாரஸ்யமான பகுதிக்குள் அடுத்த முறை செல்லலாம் என எண்ணுகிறேன். அடுத்த தலைப்புடன் சந்திக்கலாம்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 05 – “காவடி”

மனித நாகரீகம் வளர்ந்து உச்சத்தை அடைந்திருக்கும் – என கருதப்படுவதாக எண்ணுகிறேன், இந்த காலகட்டத்தில்  மானிட மனங்களால் பல வழமைகளின்  அல்லது நிகழ்வுகளின்  தொடர்ச்சியினை பின்பற்ற முடியாமல் போகின்றது. இந்த தொடர்ச்சியற்ற போக்கு ஒரு விதத்தில் காலத்தின் தேவைதான். சில வழக்காறுகள் அழிந்து போவதே உசிதம்.
பழையன கழிதல் நாகரீக எழுச்சிக்கான அடிப்படை என்பது எனது சொந்த கருத்து. இதில் பழையது என்பது குறித்துநிற்கும் அளவுகோல் எது என்பதில்தான் நாகரீக எழுச்சி தங்கியுள்ளது. இறந்தகாலம் அல்லது பயன்படுத்தாதவை பழையது என்ற வார்த்தையை அர்த்தப்படுத்தலாம். அந்த வகையில் இறந்தகாலம் கழிய வேண்டுமா? இறந்த காலம் தேவையற்ற ஒன்றா? இறந்த கால அனுபவங்கள் மறக்க வேண்டியவையா? என்ற அடுக்கான கேள்விகள் பழையது என்பது இறந்தகாலம் இல்லை என்பதை உறுதியாக கூறுகின்றன.

பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை (copycrave.com)

வழமையாக நீங்கள் துவிச்சக்கர வண்டியில் செல்லுவீர்கள் என வைப்போம். உங்கள் நண்பன் வெளியூர் செல்லவேண்டிய காரணத்தினால் அவரின் மோட்டார் சைக்கிளை உங்கள் வீட்டில் வைத்து விட்டு வரும் வரை பாவிக்கவும் அனுமதி   தருகிறார். நீங்கள் இப்பொழுதெல்லாம் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறீர்கள் என்பதற்காக பயன்படுத்தாத உங்கள் துவிச்சக்கர வண்டி பழையதா? துவிச்சக்கர வண்டி பயன்படவில்லை என்று கழித்துவிட்டால் அடுத்த நாள் அல்லது தொடர்ந்து வரும் நாட்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
இன்று பயனில்லை என்பதற்க்காக கழித்துவிடுதல் நாளைய தேவை ஒன்றிற்கான விடையினை அழித்துவிடுதல் ஆகும். இதிலிருந்து பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தனது உள்ளடக்கங்கள் அனைத்தையும் தந்து காலியாக இருக்கின்றவை அல்லது பொருந்தாத உள்ளடக்கங்களுடன் உள்ளவை என்று விளிக்கலாம். கடையில் இரண்டு ரூபாய் கொடுத்து இனிப்பு வாங்குகிறோம் , காசு கொடுத்து வாங்கினோமே என்பதற்க்காக இனிப்பின் உறையை யாரும் பத்திரப்படுத்திக் கொள்வதில்லை. இது தான் விடயம் , இனிப்பு என்னும் உள்ளடக்கம் தீர்ந்தவுடன் உறை என்னும் காவி கழிந்து போகின்றது. பழையன கழிதல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
இதை முகவுரை என்பதை விட ஒரு பதிவாக எடுத்துக்கொண்டு தலைப்பிற்குள் நுழையலாம்.
கலைகளில் மிகவும் நளினமானது எது என்றால் ஆடற்கலையையே எல்லோரும் உரைப்பர். ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். உணர்ச்சிகளை பலவிதப்படுத்தி வெளிக்காட்டுவர். வெளிப்பாட்டின் உச்சம் நடனமாகவே இருக்கும், இது சந்தமற்ற முறையற்ற கூச்சல் நடனமாக இருந்தாலும் சரி.

ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். (sehernow.in)

எந்த நாட்டார் கலையுமே இலக்கணங்களுக்கோ யாப்புகளுக்கோ வரைமுறைக்குட்படுத்தாமல் வளர்ச்சி கண்டவையே. ஆதிகால மனிதனிடம் மொழி இருக்கவில்லை. இதில் மனிதன் என்பது கவனிக்க வேண்டிய விடயம். அவனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் பதிந்து கொள்ளவும் ஒரு ஊடகம் தேவைப்பட்டிருக்கும். அந்த தேவைப்பாட்டின் விளைவே நடனமாகிறது. அவன் தனது சந்தோஷங்களையும், துக்கங்களையும், அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், பயத்தினையும் ஆடலின் மூலமே வெளிப்படுத்தினான். எத்தனை யுகங்கள் போனாலும் இன்னும் அங்க அசைவில் உண்டாகும் நடனங்கள் தான் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சம். உலகிலே நடமாடாத இடங்களும் இல்லை, மாந்தரும் இல்லை.
அதிலும் முக்கியமாக பயம் என்ற உணர்வின் சிறந்த வெளிப்பட்டு ஊடகம் நடமாகவே இருந்திருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய பரத நாட்டிய நிகழ்வுகளில் பயம்  என்ற நிலையில் தான் அதிக சிறப்பு காணப்படுகிறது. ஆக அன்றும் கடவுளைப்பார்த்து மனிதன் பயந்தான். பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள். சங்க இலக்கிய வரலாறுகள் வெறியாட்டு, துணங்கை , குரவை போன்ற ஆடல் கலைகளை கூறுகின்றன. இதே ஆடல் கலைகள்தான் இன்றைய நாட்டார் நடனங்களாக பெயர் பெறுகின்றன.

பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள் (bhmpics.com)

கிராமிய நடனங்கள் அணையற்ற ஆறு போன்றவை. எந்த இலக்கண எல்லைக்குள்ளும் இல்லாமல் இருப்பதே இதன் சிறப்பாகும். அவற்றின் வளர்ச்சியும் அப்படியே, எந்த வித்துவான்களும் அல்லது சங்கீத லக்ஷணகாரர்களும் அதற்கு அணை கட்டிவிடவில்லை. ஆதி காலத்தில் இருந்ததிலிருந்து இன்றைய காலகட்டத்தை நோக்கிய ஆடற்கலைகளின் வளர்ச்சி வியப்பான ஒன்றாகும், எந்த கட்டுப்பாடும் அற்ற கலை ஒன்று நீடித்து இருத்தல் என்பது அதீத சிறப்பு. அச்சிறப்பை நடனங்கள் பெற்றிருக்கின்றன. நாட்டார் நடனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே உவகை ஊட்டுவனவாக இருக்கின்றமை அதற்கொரு காரணமாகவும் இருக்கலாம்.
கவனிப்பில் பொதுவான நாட்டார் நடனங்களில் காணப்படும் சந்தம் நான்கு அக்ஷர காலம் கொண்ட தாளங்கள் (சதுர்சிரம்) அல்லது மூன்று அக்ஷரகாலம் கொண்ட தாளங்கள் (திரிசிரம்) ஆகவும் மேலும் சில ஏழு அக்ஷரகால தளங்களை (மிசுரம்) கொண்டதாகவும் அமைகின்றன.
நாட்டுப்புற ஆடற்கலைகள் என்ற போர்வைக்குள் காவடி , கரகம் , வசந்தன், கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவை முக்கியமானவை.

காவடி

காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது. (bhmpics.com)

காவடி என்ற சொல்லை காவு + தடி என்ற சொற்களின் சேர்க்கையாக கருதலாம். காவுகின்ற தடி எனபதே காவடியில் பொருள். காவுகின்ற தடி என்றால் வெறும் தடியினை காவுவதா? இல்லை, தடியையும் காவுகின்றோம் அது தடி என்ற நிலையை தாண்டி, அத்தடியில் இருபுறமும் நேர்த்திக்கடன் செய்த பொருட்களை காவி அல்லது மஞ்சள் துணியில் சிறிய பொட்டலமாக கட்டி தொங்கவிட்டு அத்தடி நிற்பதற்கு இரண்டு கால்களை இரு புறமும் அமைத்து ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு வில்போன்ற அமைப்பையுடைய கூடாரம் ஒன்றை உருவாக்கி அதை பட்டால் சுற்றி மூடி கிளி பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து – ஒரு தெய்வீகம் பொருந்திய புனிதப்பொருளாக அந்தஸ்தளிக்கப்படும்.  இது வெறும் தோளிற்கு சுமை என்பதை தாண்டி பிராத்தனைக்காக எடுக்கப்படும் தடி என்ற பொருளில் கையாளப்படுகிறது. காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது.
முன்னைய காலங்களில் வழிபாடு என்பது ஊரளவில் இருந்தாலும் புனித தலங்களை நோக்கிய நடைபயண பாத யாத்திரைகள் புகழ் பெற்று இருந்தன. இந்த பாத யாத்திரைகளை ஊரவர் நேர்த்திக்கடனாக செய்வது வழக்கம். எனது எண்ணப்படி, அந்தக் காலம் பயண போக்குவரத்திற்கு ஊடகங்கள் இல்லாத காலம். நடையையே ஒரே மார்க்கமாக கொண்டிருந்த காலம். பொதுவாக எல்லாரும் வடக்கு புறத்தில் இருந்து சைவர்களுக்கு காலம் காலமாக நம்பிக்கையும் அருளும் செய்துகொண்டிருக்கும் கதிக்காம கந்தனை நோக்கி விரதமிருந்து நேர்த்திசெய்வதற்காக ஊரவர் நேர்த்தி பொட்டலத்தையும் இதர தேவையான பொருள்களையும் சேர்த்து ஒரு தடியில் கட்டி எடுத்து சென்றிருக்கலாம். கால ஓட்டத்தில் சாதிப்பிரிவிற்கு ஏற்றால் போல அந்த தடி அலங்காரங்கள் உருவாகி இருக்கலாம். இதுவே இன்றைய காவடியில் வெளித்தோற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம் என்பது எனது எண்ணம். வழியிலே களைப்பு தெரியாமல் இருக்க அக்காவடியை சில ராக சந்தங்களுடன் நாட்டிய அசைவுகளுடனும் கொண்டு செல்வர். இதுவே பிற்கால காவடிச்சிந்துகளாகும்.

செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார் (dnaindia.com)

காவடியில் பல வகைகள் உண்டு. சேவற் காவடி , மச்சக்காவடி, அன்னக்காவடி, பாற்காவடி / பன்னீர் காவடி, செடிற் காவடி, ஆட்டக்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி என்பன வடக்கில் இருந்துள்ள காவடியின் வகைகளாகும். இதில் முதல் மூன்றுமான  சேவற் காவடி , மச்சக்காவடி , அன்னக்காவடி என்பன தற்கால வழக்கில் இல்லை.
சேவலைப்பிடித்து அதன் தலையை வெட்டி குடத்தினுள் இட்டு அதை தடியில் கட்டி ஆடுவதே சேவற் காவடி. மீன்களைப்பிடித்து குடத்தில் இட்டு ஆடுவது மச்சக்காவடி ஆகும். மச்சக்காவடிக்கு வடக்கு செல்வச்சந்நிதி ஆலயம் மிக பிரசித்தமான ஒன்றாகும். ஒரு காலத்தில் பக்தர்கள் மீன்களை பொரித்து குடத்தில் இட்டு கோவிலுக்கு கொண்டு வருவதாகவும், கோவில் அருகே உள்ள தொண்டமானாறு ஆற்றம்கரை அருகே வரும் போது பொரித்த மீன்கள் உயிர்பெற்று ஆற்றினுள் குதிப்பதாகவும் ஐதீகங்கள் உண்டு. அன்னக்காவடி எடுக்கும் வழக்கம் இன்றைய இலங்கையில் இல்லாவிட்டாலும் முற்காலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. தங்களுக்கும்  தங்களை சார்ந்த சந்நியாசிகளுக்கும் உணவை வேண்டி பரதேசிகள் தங்கள் தோள்களில் வெற்று பாத்திரம் ஏந்திய தடியுடன் அன்னம் பெற செல்லல் அன்னக்காவடி எனப்படுகிறது. பால் அல்லது பன்னீர், செம்புகளில்  நிரப்பப்பட்டு தடியில் கட்டப்பட்டு எடுக்கப்படும் காவடியாகும், இதன்போது ஆடுவதில்லை. பொதுவாகவே சிறுவர்கள் இதனை எடுப்பார்கள். செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார். கூடவே வாயின் இரு பக்கத்தாலும் வேலினை அலகு என்ற நாமத்தில் குத்தி கொள்வர். இக்கவடியை இருவர் அல்லது நால்வர் ஒரே ஒழுங்கில் ஆடுவது ஆட்டக்காவடி ஆகும்  பொதுவாகவே வடக்கில் பறைமேளம் மற்றும் உடுக்கு மட்டுமே ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்டது, அனால் இன்று தவில், நாதஸ்வரம் போன்றவையும் புழக்கத்தில் உள்ளன.

உடலை வருத்தி பெற்ற பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். (deviantart.net)

ஆட்டக்காவடிக்கு தாளம் மிக முக்கியமானதொன்றாகும். பார்ப்போர் அதனால் உந்தப்பட்டு ஆடுவது வழமை. தூக்குக்காவடி நீண்ட வரலாற்றை கொண்டதல்ல. 1953களில் முதன் முதலாக செல்வசந்நிதியிலேயேதான் இது அரங்கேற்றப்பட்டது. சகடை ஒன்றின் இருபுறமும் இரண்டு மரங்களை நிறுத்துவர். மரங்கள் மிகப்பலமானவையாக இருக்கும். இருமரங்களுக்கும் நடுவே வளை ஒன்றிட்டு அதில் கப்பி இடுவர். காவடி எடுப்பவர் பத்மாசனமிட்டிருக்க அவரின் இரண்டு விலாப்புறமும் இரண்டு பெரிய கொழுக்கி முட்களை குத்துவர். இரண்டு முழங்காலுக்கருகிரும் இரண்டு முட்களை குத்துவர். அதே போன்று பின் பகுதியிலும். ஆறு கயிறுகளையும் சேர்த்து மேற்புறமாக உறிபோல கட்டி கப்பியினூடு செலுத்துவார். காவடி எடுப்பவர் தூக்கில் தொங்குவது போல பத்மாசனத்தில் இருப்பர். இவரை வீதி வீதியாக அழைத்து செல்வார். தூக்கு தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு செய்து வெற்றிபெற்றதன் காரணமாக இதை செய்தார் என சொல்லப்படுகிறது. இதே முறையில் அந்த ஆறு முட்களையும் அடியவரை படுக்க வைத்து தோள் தொடை கால் என்பவற்றில் குத்தி ஊர் ஊராக கொண்டு சென்றால் அது பறவைக்காவடிதூக்கு, பறவை காவடிகள் பெண்கள் எடுப்பதில்லை.
இந்த காவடி முறை இன்று வடக்கில் எல்லா கோவில்களிலும் மறக்காமல் மறுக்காமலும் நடைபெற்று வருகின்றது. உடலை வருத்தி பெற்ற  பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். ஆரம்பத்தில் கூறிய பழையன கழிதலுடன் காவடியும் கழிந்து போகாமை காவடியில் சமூக முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றது.
இன்னும் சில நாட்டார் நடனங்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 04 “ஆனை மறி காரன் மகள்”

விலங்குகளுக்கும்  மனிதனுக்குமான உறவு எல்லைப்படுத்தப்பட முடியாத ஒன்று. மனிதனை நாகரிக விலங்கு என்று அழைப்பதுவும் இந்த எல்லையற்ற உறவின் விகுதிதானோ என்று பலமுறை நான் எண்ணியதுண்டு. மனித வர்ணனைகள் விலங்கியலுக்குள் ஊடுருவுவதும் இதன் தாக்கம் தான். கண்களை மீன்கள் என்பதுவும், நடையை அன்னநடை என்பதுவும், கோபத்தில் எருமை மாடு என்பதுவும் விலங்கியலோடு பின்னிய வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது.

அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக்கூட இந்த விலங்குகள் திசைப்படுத்துகின்றன என்பது தமிழர் வாழ்வியலை பேணும் சமூகத்திற்கு தெரிந்த ஒன்றே. பூனை குறுக்கிடுதல், கன்றுக்குட்டி ஓடி ஒழித்தல் , பல்லி சொல்லல் என சில சம்பிரதாய கோட்பாடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சில விலங்குகளை தெய்வத்திற்கு சமானமாக கொண்டாடுவது இந்துக்களின் வழக்கம்.
அதிகமாக, குடியிருப்புக்களை முதன்மைப்படுத்திய விலங்கு வளர்ப்பு சுவாரஸ்யமானதாகும். இவனோடு அறுவர் என்னும் பதங்கள் பெரும்பாலான செல்லப்பிராணி வளர்ப்பு வீடுகளில் அதிகம் ஒலிப்பதாகும். இந்த அன்னியோன்யம் எதனால் என்ற விளக்கம் இப்போதைக்கு அவசியம் இல்லை. ஆனால் இந்த அன்னியோன்யம் ஒருவகையான மனநோய்க்கு காரணமாக இருந்துவிடுகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். எது எப்படியோ பூனையின் கால்களில் காயம் வந்துவிட்டால் மணிக்கணக்கில் அழுது , உணவை தவிர்க்கும் குடும்பங்களும் எம்மத்தியில் உண்டு.
இது ஒருபக்கம் என்றால், என் தலைப்பு மறுபக்கம். காதை கிழிக்கும் அலறல் ஒலிகள். மான்களும் பசுக்கன்றுகளும் குருவிகளும் கத்திக்கொண்டு ஓடவும் பறக்கவும் செய்கின்றன. தூரத்தில் கொஞ்சப்பேர் ஏதோ விபரீதமாய் கத்திக்கொண்டு காடுகளின் இடுக்குகள் வழியே மேடுகளில் கால்கள் இடரிட சாரமும் பெனியனுமாய் ஊருக்குள் குதிக்கின்றார்கள். அவர்கள் எல்லாரையும் மீறிய சத்தம்.
காட்டின் தூரத்தில் மேல் மரங்கள் அசைவதை மட்டும் காணக்கூடியதாக உள்ளது. காட்டுக்குள் பலமணிநேரம் அது செலவிடாது என்பதை அவ்வூரினர் நன்றாய் அறிந்திருந்தனர். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னராக இதே எச்சரிக்கைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த நாள் இரவு கருப்பன் கோவில் திருவிழாவுக்காக ஊரே சேர்ந்திருந்தது. யாரும் தொழிலுக்குச்  செல்லவில்லை. வருடம் ஒருமுறை வரும் இந்த திருவிழா தான் அந்த ஊரினதும் அயல் ஊரினதும் கொண்டாட்ட நாள். ஊர் ஜனங்கள் எல்லாம் ஒன்றாகி சமையல், சாப்பாடு , வழிபாடு, விளையாட்டு, கூத்து , நாடகம் கேளிக்கைகள் என பிரமித்துப்போய் இருந்தது.

(vikatan.com)

இரவை போக்குவதற்காக படங்கெடுக்க இரு வாலிபர்கள் தங்கள் வீட்டை நோக்கி சென்றிருந்தார்கள். இருளில் மூழ்கியிருந்த அவர்களது குடிசைகளில் லாந்தர் விளக்கில் எல்லாம் அலங்கோலமாய் இருந்தது தெரிந்தது. என்ன நடந்ததென்று அறிந்திராதவர்கள் குடிசைகளை நோக்கி விரைந்தனர்.திருடர்களின் பயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால் கட்டைகளை ஏந்திக்கொண்டு விரைந்தார்கள். பக்கங்களை பார்த்தவர்கள் சமயோசிதமாக இது மனிதர்களால் ஏற்பட்டதல்ல என்று உணர்ந்து கோயிலுக்கு ஓடினார்கள். ஒரே பிடி …… அப்பிடியே தூக்கி மதகோடு போட்டு அடித்து உசுப்பியது அந்த யானை. பீறிட்ட ரத்தம் மதகை சிவப்பாக்கியிருந்தது. இராக் கொண்டாட்டத்தில் போனோர்களை மறந்துபோய் இருந்தனர் ஊரவர், சில சகபாடிகள் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க கூடும் என்று எண்ணினார்கள்.
பொழுது புலர்ந்தது, அதிகாலை பண்டமெடுப்பதற்காக சிலர் அரசடி பிள்ளையார்கோவிலுக்கு சென்றிருந்தனர். வழியில் மதகைத்தாண்டி செல்லும் போது கசங்கியிருந்த ,உருத்தெரியாத அளவு கொடூரமாய் தாக்கப்பட்டவர்களையும், அங்கால் பீடித்திருந்த சீரின்மையையும் கண்டுகொண்டனர். பயத்தாலும் கவலையாலும்   வெருண்டுபோனவர்கள் கூவிக்கொண்டு ஊரவர்களை அழைத்தார்கள் , ஊரே அலங்கோலத்தின் அடையாளமாய் காட்சி தந்தது. அந்த எண்பது வயது மூதாட்டியின் வீடு விறகுக்கு குவித்த மரக்குவியல் போல் சிதைந்திருந்தது. மணல் சுவர்கள் எல்லாம் இடிந்துபோயும் சில தெம்பான குற்றிகள் வளைந்துபோயும் இருந்தன. ஆறேழு வீடுகளின் சுவார்ப்பக்கங்கள் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தன. வயல் நடுப்பக்கங்களில் பெரிய பெரிய கால்த்தடங்கள் அரையாடிக்கொருக்கால் பதிந்திருந்தது. தடங்களில் மாட்டுப்பட்ட நெற்கதிர்களெல்லாம் தலை சாய்ந்து போய் காணப்பட்டன. வாழைத்தோப்புகள் எல்லாம்  அரைவாசியாகவும் அடியோடும் பிடுங்கப்பட்டு வாழைக்குலைகள் கவ்வப்பட்டும் இருந்தன. அவ்விடம் ஒரே வாழை சாற்று வாடையாய் இருந்தது. தடித்த நீண்ட பனைமரங்களும் தென்னை மரங்களும் குலுக்கப்பட்டு சாய்த்துவிடப்பட்டிருந்தன. குவித்து வைக்கப்பட்டிருந்த நெற்கள் எல்லாம் சிதறிப்போய் கிடந்தன. நெல்மணிகள் எல்லாம் தூரத்தூர விதைந்துபோய் இருந்தன. இறந்தவர்களின் குடும்பத்தினரும் அயலவர்களும் ஒப்பாரிவைத்துக்கொண்டு இருந்தனர். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்கிறார்கள்.

பாடல் 01

சொல்லக்கேளும் வன்னி மன்னனே
துன்பமெல்லாம் இங்கு கூறவே
அல்லல் ஒண்டிரண்டல்லவே
ஆனை செய்யும் அட்டகாசமே
கொல்லை புலம் வயல் யாவுமே
கூறுந்தரமல்ல நாசமே
தென்னை பனை பலா மாவெல்லாம்
சின்னாபின்னமாக வீழ்ந்ததே
முன்னால் குவிந்த நெற் போரெல்லாம்
முற்றாக தின்று முடிந்ததே
இன்றுமெங்கள் குடில் கொட்டில்கள்
எல்லாம் பிடுங்கியே வீசுதே
நாங்கள் மிரட்டி துரத்தவே
நம்மை நாடிச் சாடி ஓடுதே
எத்தனை பேர் இருந்தார்களோ
எண்ணிக்கணித்தார் யாவரே
முத்து நிறைந்திடு கொம்பனே
முற்றும் பரப்பும் சுணங்கனே
சுத்த முளமதோர் ஏழாதே
மத்தக மித்திரை மீதிலே

பாடல் 02


இது யானை பிடிக்கும் பணிக்கர்கள் வாயிலாக கூறுவதாகவுள்ளது,

சொல்லக்கேளும் வன்னி மன்னனே – இந்த
தொண்டு செய்வாரில்லை திண்ணமே
வல்லதொருவருமில்லை – மத
யானை படுத்திடல் தொல்லையே
சொல்ல வொண்ணாத்துயர் தாங்கியே – சென்று
சேர்ந்து மடிந்தனர் ஏங்கியே
எல்லையுண்டோ இறந்துற்றவர் – இந்த
யானைமுன்னே கண்ணிற்பட்டவர்
மந்திர தந்திர சாலமே -எங்கள்
மாயமெல்லாம் வெறும் சாலமே
எந்த விதத்துமடங்கிடா – திந்த
யானை எவர்க்கும் மொடுங்கிட
நன்றோ நாம் சென்று மடிவதே – நாட்டில்
நமக்கிலையே புவி வாழ்வதே
இன்று நீர் எம்மீத்திறங்கியே – எங்கள்
இன்னுயிர் காத்தருள் தாங்கியே
அலைகடல் போலவே முழங்குமே – அந்த
அதிர்ச்சியில் அண்டம் நடுங்குமே
மலையெனவே முழம் ஏழதே – அதன்
மத்தகம் இத்தரை மீதிலே
மேனி முற்றுபடர் சுணங்கனே – அதை
மேதினியில் காண்டோர் பிணங்களே(வேழம்படுத்த வீராங்கனை – பக் 32)

பாடல் 03

இம்மதயானை குறித்து ஒப்பாரி பாடல் ஒன்றிலே
நாகன் திருக்கோவிலிலே என அஞ்சுகலை
நஞ்சையுண்ட அஞ்சாத ஐங்கரனே அப்பரே ஆத ரவே
அங்கே நிற்குதாம் நல்ல கொம்பன்
எங்காள் ஆகாது எங்காளை யாளும் சின்ன வன்னி யனாரே – அது
ஏழு முழ யானையல்லோ
அது கோபமுள்ள யானையது
எங்களையாளும் சின்னவன்னியனாரே – அது
குளறுதே மாமுகில் போல்.

மதம்கொண்ட யானையால் எந்நேரமும் பாதிப்புவரும் , எந்நேரமும் ஊருக்குள் இறங்கிவிடக்கூடும் என்ற பயத்தினை வன்னி அரசனுக்கு கூறிய வழிமுறைப்பாடல்கள் தான் மேற்கூறியவை.ஊரின் வளங்களெல்லாம் ஒன்றுசேர கருங்கல்லாலும், இறுக்க மண்ணாலும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது சின்ன வன்னியனின் அரச பீடம். ஊரவர் நிலையை உணர்ந்து கொள்கிறான் சின்னவன்னியன். அவன் சிற்றரசின் கீழ் இருந்த ஏழு ஊர்களின் பணிக்கர்கள் குறித்த கிராமத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். பல ஊர்களின் யானை அச்சத்தை போக்கிய வீரப்பின்னணி இந்த ஏழு பணிக்கர்களது. அதிலும் வேழப்பணிக்கன் ஆகச்சிறந்தவன். எத்தனையோ மதங்கொண்ட யானைகளை அடக்கி, மீண்டும் ஊர்ப்பக்கம் வரவிடாமல் செய்து மக்களின் மனங்களில் நீங்காத இடத்தில் வீரனாய் இருப்பவன். இருந்தும், இன்றைய நிலவரம் இதுவல்ல. வேலப்பணிக்கனுற்க்கும் இது தெரியாத ஒன்றல்ல. கூட்டம் கூடிற்று

பாடல் 04

ஏழு ஊருப் பாணிக்கரும் என்
அஞ்சுகலை நஞ்சையுடைய ஐங்கரனே
அன்பரே ஆதரவே – அவர்
எழுதிவிட்டார் ஓலை தனை
எல்லாப்பணிக்கருமாய் இன்பமுடன்
தான் நடந்து அன்புடன் நீங்கள் சென்று -அந்த
ஆனைக்கட்டி வாருமெண்டார்.

தனியொருவராக அடக்கமுடியாது என்பதை அறிந்திருந்த சின்ன வன்னியர், எல்லாப்பணிக்கருமாய் சேர்ந்து அடக்கி விட முடியும் என எடுத்துரைக்கிறார். பணிக்கர்கள் முகங்களில் மரண பயம் தோன்றுகின்றது. தங்களால் அடக்கிவிட முடியாது என்பதை – வேலப்பணிக்கரால் அடக்கிவிட முடியும் என பதிலளிக்கின்றனர். இது வேலப்பணிக்கர் வீரத்தை உயர்த்தினாலும்  மற்றையோரின் கீழ்மையை எடுத்துக்காட்டுகிறது.

பாடல் 05

இந்த ஆனை கட்டிவர
எங்களை ஆளும் சின்னவன்னியரே – எங்களால்
ஆகாது, வேலப்பணிக்கனால் ஆகுமென்றார்.
அதிலொருவன் நின்றுகொண்டு,
வேலப்பணிக்கனால் ஆகாது
வேலப்பணிக்கன் பெண்சாதியினால் ஆகுமென்றார்.

இந்த கருத்து யாரையும் அங்கே அதிர்ச்சியுற செய்யவில்லை, மாறாக வேலப்பணிக்கனை தலைகுனிய செய்தது. வேலப்பணிக்கனின் மனைவி அரியாத்தை. பெயரை போலவே அரி போன்று வீரம் மிக்கவள். முன்னரே சில யானைகளை அடக்கி வீரத்தை வெளிக்காட்டியவள். ஆனால் அதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விடயங்கள் அல்ல. இந்த முறை எல்லாப்பணிக்கர்களாலும் இயலாது என தெரிந்தும் அரியாத்தையை இக்கணக்கிற்கு இழுப்பது வேலப்பணிக்கனுக்கு மன உளைச்சலை தந்தது. மற்றைய பணிக்கர் வம்பிற்கே கூறியிருப்பினும், வேலப்பணிக்கனுக்கு அது அவன் வீரத்திற்கு ஏற்பட்ட இழுக்காகவே தோன்றியது. சோகங்களை கட்டிக்கொண்டு வீடு திரும்பிகிறான்.நடந்தவற்றை மனைவியிடம் கூறி கவலையுறுகிறான்.

பாடல் 06

இத்தனைக்கோ நீர் சலித்தீர்
என்னுயிரே ஆண்டவனே – எழும்பி
நீர் சாப்பிடன்றாள்

ஆனால் அரியாத்தைக்கு இது பெரிய விடயமாகவே தெரியவில்லை, அவள் இதை எண்ணி சோர்வுறவும் இல்லை மாறாக, கணவனுக்கு ஆறுதல் மொழியே அளிக்கிறாள். கணவனின் ஒப்புதலோடு , குறை மனதாகவே வேலப்பணிக்கன் அவளை அனுப்புகிறான் என்று எந்த சான்றும் இல்லை – அவள் மதயானையை அடக்க விரைகிறாள்.

பாடல் 07

வாற பொழுதிலையோ ஆனையது
மும்மதமும் தான் பொழிந்து
கை மடித்து தான் குளறி – அரியாத்தை முன்பு
கொம்பன் வந்து நின்றதுவே
யானையைக்கண்டவுடன்
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அரியாத்தை அவ
கால் கை தடுமாறி நின்றாள்.
பாலை மரம் வீரை மரம்
வேலப்பணிக்கன் பெண்ஜாதி – அரியாத்தை அவ
படு மரத்தோடு நின்றாவே
காலாலே மண்ணை அள்ளி
தந்த வீர பத்திரனே
மால் மருக வேல் முருக – உன்
தஞ்சம் என முன் போட்டாள்
கற்புடையாள் நானாகில்
ஆனையடி ஆனையடி
ஆணமறி க்காரன் மகள்
ஆனை மயில் வாகனமே – உன்
கையைத்தான் நீட்டுமென்றாள்.
அந்த மொழி கேட்டவுடன்
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே – உன்
ஆனை கையைத்தான் நீட்டியதே
கையாலே கை பிடித்து
அஞ்சகலை நஞ்சையுண்ட
அஞ்சாத ஐங்கரனே
அன்பரே ஆதரவே – அதன் மேல்
கொடு முத்தல்லவோ
காலிலிரு தேமலல்லோ
யானையடி யானையடி
யானை மறி காரன் மகள்
ஆனை மயில் வாகனமே -உனது
காலிரண்டும் நற்தேமலல்லோ
பொல்லை எடுத்தல்லவோ
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ
போட்டாளே ஆனை முன்பு
பொல்லை எடுத்து என் கையிலே
ஆனை மத யானையது
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
நாச்சன் அரியாத்தை கையில்
பொற்புடனே தான் கொடுக்க
உன் காலைத் தா தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே – நானும்
கனத்த வடம் போட்டு இறுக்க
முன்னங்கால் தான் கிளப்பி
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
நாச்சன் அரியாத்தைக்கு
முடுக்கிட்டு நின்றதுவே
மான் வார்க்கயிறு எடுத்து
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ
மனங்குளிர போட்டிறுக்கி
முன்னங்கால் முடக்கு கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
நானயடியாள் பெண் பேதை – உன்
குப்பத்தில் பயந்து ஏற
முன்னங்கால் தான் மடிக்க
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
முன்னே நின்று தோள் பிடிக்க
உக் கோட்டைத் தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
வேலப்பணிக்கன் பெஞ்சாதி- யானையிட
குப்பத்தில் ஏறினாளே
செவியைத் தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
நானயடியாள் பெண் பேதை
துறட்டிதனை போட்டிறுக்க
செவியைத் தான் கொடுக்க
துறட்டிதனை போட்டிறுக்க
வேலப்பணிக்கன் பெஞ்சாதி அரியாத்தை
செப்பினாள் ஓர் வசனம்


தன் துணிச்சலாலும், தனது கற்பின் சிறப்பாலும் அரியாத்தை மதயானையை அடக்கி முடிக்கிறாள் – என்பதாக பாடல் முடிகிறது. வடக்கு நாட்டார் இலக்கியங்களில் ஒரு பெண்ணின் வீரம் கற்பு என்பவை இவ்வளவு விமர்சையாக தெரிவிக்கப்படுவது வேறெங்கிலும் இல்லை. மத யானையை அடக்கியதற்காக அரியாத்தை அரசவையில் சிறப்பிக்கப்படுகிறாள்.

பாடல் 08

வெள்ளை விரும்பித்தாளே
எங்களையாளும் சின்ன வன்னியர்
பெண்சாதி, அரியாத்தை தான் இருக்க
மேலாப்பு போடுவித்தாள்.

பதினெட்டு வரிசைகளும் பெற்றவள், வீடு திரும்புகிறாள். இது வரை வீரம் கொளித்த புராணம் – சூழ்ச்சிகளாலும் வஞ்சனைகளாலும் சூழப்படுகிறது . இருள் நிறைந்த வானில் அரியாத்தை என்னும் மின்மினியும் அடங்கிப்போகிறது. இடையிலே வரும் சில காரணங்கள் கர்ண பரம்பரைக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை .
அரியாத்தை வீடு திரும்புகிறாள், தன்னில் நிலை மாற்றங்களை உணரத்தொடங்குகிறாள் வழியில். அவளின் கண்கள் கடிப்பதாகவும் , கால்கள் என்றும் இல்லாதவாறு மிக சோர்வு அடைவதாகவும், கண்கள் இரண்டும் மயங்கிப்போவது போலவும், வாய் வரள்வதாகவும் ,வீடு செல்ல வழி தெரியவில்லை என்றும் கூறியவாறே குலதெய்வம் நாகதம்பிரானை துதித்துக்கொண்டே  இருண்டு போகிறாள். வழியிலேயே மடிந்து போகிறாள். இதற்க்கான காரணம் அரசவையில் யாரோ ஒரு பணிக்கன் , அரியாத்தை செய்தது ஆண் குலத்திற்கு அவமானமாக கருதி அவள் உண்ணும் வெற்றிலையில் நஞ்சு தடவி கொடுக்கிறான், – கர்ண பரம்பரைக்கதை. இருந்தும் எம்மவர் வரலாற்றில் இறப்பிற்க்கான சரியான காரணம் பதியப்படவில்லை. அது சரி இக்கால நவீன இறப்புகளுக்கே காரணம் தெரியாத பொழுது, அரியாத்தையின் இறப்பின் மர்மம் பெரிய பொருட்டல்ல. ஆனால் மரணத்தின் பின்னணியில் ஆண் வர்க்க மேலாதிக்கம் காரணம்செலுத்துகிறது என்பது மிக பெரிய அழுக்கே.
வேலப்பணிக்கருக்கு சேதி செல்லுகிறது. செய்தியை கேட்டவுடன் வேலப்பணிகரின் செய்கை தான் மற்றைய ஆண்களால் அவர்களின் வர்க்கத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கிறது. சேத்தி அறிந்த வேலப்பணிக்கர் அரியாத்தையுடன் உடன்கட்டை ஏற முடிவு செய்கிறார். இதனை அறிந்த மக்கள் அவனை ஒரு இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு அரியாத்தையை எரிக்க கொண்டு செல்கிறார்கள். கட்டுண்டு துன்பத்தால் துவண்ட வேலப்பணிக்கர்

பாடல் 09

கற்புடையாள் நீரானால்
என்னுயிரே கண்மணியே
எனக்கிணங்கும் நாயகியே – என்னுடைய
கையில் கட்டு தெறியாதோ
என உரைக்கிறான்.
கலங்கியழும் பொழுது வேலப்பணிக்கனுடைய
கைக்கட்டு தெறித்திட்டதே
கைக்கட்டு அறுந்து விட அரியாத்தையுடன் உடன்கட்டை ஏறுகிறான்
வேலப்பணிக்கன் என்னும் வீரன்.

இத்தோடு அரியாத்தை காதை முற்றுகிறது , கூடவே நாட்டார் இலக்கியங்களின் முதல் பாகம் நாட்டார் பாடல்களும் நிறுத்தப்பட்டு மற்றைய பாகங்களுக்குள் அடுத்ததடுத்த தொடர்களில் செல்லலாம் என எண்ணுகிறேன்.

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 -மணல் வாசம்

மணல், காற்றில் கலந்து வீசும் கரையோரங்களை தாண்டி தெரியும் அந்த குறுங்குடில்தான் அந்த மீனவனின் இல்லம். செங்கற்களால் அடுக்கியும் மண்ணால் அப்பியும் சீரின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த குடில். மீனவனும் அவன் மனைவியும் மட்டும்தான். ஊரார் கூடி கிராம நடுவில் உள்ள அந்தோனியார் கோயிலில் அவர்களுக்கு ஒரு மாதம் முன்தான் திருமணம் நிறைவேறியது. மன்னார் மாவட்ட கிராமங்களில் எல்லாம் காற்றில் கிருமிகளே இருக்காது. உப்பின் உவர்ப்பு கிருமிகளை இல்லாதொழித்து விடுகின்றது. அங்கு பரவியிருந்த தேவ ஒளி எல்லார் மனைகளிலும் அன்பும் சந்தோஷமும் பெருக ஆசி செய்துகொண்டிருந்தது. அந்த வீடும் அப்படித்தான். தேவ ஒளியில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
 
காலை புலர்ந்து விட்டிருந்தது. புலம்பெயர்ந்து வருகின்ற பெயர்தெரியாத வெளிநாட்டு பறவைகளின் விசித்திரமான கானம் அவன் காதுகளில் தேவகானத்தை மீட்டிக்கொண்டிருந்தது.

என்னடி புள்ளே விடிஞ்சல்லே போச்சுது
செல்ல வேணுமல்லே மீன் பிடிக்க
இன்னமும் நித்திரை கொள்ளலாமோ நீயும்
எழுந்திரு புள்ளே பொழுது புலந்திருச்சு

என்று உப்புக்காற்றை சுவாசித்து சுவாசித்து வரண்டு போன குரலால், முன்னைய நாள் காலை குடில் எல்லாம் சுற்றிக் காயப்போட்ட கருவாட்டுத் துண்டுகளை எடுத்துப் பக்குவமாய் குடிலுக்குள் வைப்பதில் காலம் தாழ்த்தி உறங்கிய மனைவியின் கால்களை உலுப்பி உறக்கத்தில் இருந்து விடுபட வழி செய்கிறான். ஏதோ பழகிப்போன பறவையின் கானம் போலே இருக்கிறதே என்ற யோசனையுடன் கண்களை கசக்கி எழுந்திருக்கிறாள் அவள், மீனவன் மனைவி. எழுந்தவள் தன்னை எழுப்பிய அந்த கானத்திற்குரிய பழகிய பறவை அவள் கணவன் என்று தெரிந்தவுடன் தன்னை சுதாரித்துக்கொண்டு

எழுந்திட்டேன் அத்தானே கொஞ்சம் பொறு
கோப்பித்தண்ணி வச்சுதருவன் ஐயா
தொழுவுங்கோ நம்மை படைத்தவனை
தினம் வாழ வழிவகை தந்தத்துக்கு

இன்றைய நாளில் நடந்ததொன்றும் அவளுக்கு புதுமை இல்லை. திருமணம் ஆகி ஒரே ஒரு மாதம் தான் ஆகின்றது . இருந்தும் கணவனிடம் எப்படி பழகிக்கொள்வது என்று மிக லாவகமாக அறிந்திருந்தாள் அவள். கணவரின் கோபத்துக்கு ஆளாகாமல் அவரை வேறு சில விடயங்களில் திசைதிருப்புவதன் மூலம் தன் காரியங்களை முடித்துக்கொள்ளலாம் என்று அவள் நன்றாகவே தெரிந்திருந்தாள். அதற்காக அவள் சொல்லும் காரணம் கூட உவப்பளிக்கிறது. இறைவன் மீதுள்ள நம்பிக்கையையும் இவ்வாழ்வு அவனால் அருளப்பட்டதே என்ற உண்மையையும் அவள் சரியாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கின்றாள். அவனை தொழுவது இன்றியமையாதது என்று அவனிடம் கூறி, தான் தேநீர் சமைத்து தருவதாகவும் கூறுகின்றாள் . மன்னாரில் அக்காலத்தில் கோப்பித்தண்ணி பழக்கம் நிலவியமை இதில் அடிக்கோடு இடப்படவேண்டியதாகும் .

கட்டு மரம் கொண்டு கடலோரம் போகணும்
கெதியாக் கொண்டுவா பிள்ளை நீயும்
கட்டுவலை பாய்ச்சக் கனியமு மாச்சுது
மீனெழுந்து வரும் நேரமு மாச்சு

 
தன்னை மெத்தப்படுத்த அவள் செய்யும் மாயவேலை தான் இது எல்லாம் என புரிந்து வைத்திருந்த கணவன் , எதையும் வெளிப்படுத்தாமல் வார்த்தைகளை மெதுவாக இறுக்கி கொள்கிறான். நேரடியாக அவளை பேசிக்கொள்ளாமல் , பொய் காரணமும் சொல்லாமல் தன் நிலையை வெளிப்படுத்துகிறான். இரவெல்லாம் ஆழ் கடலில் தூங்கிக்கொண்டிருக்கின்ற மீன்களெல்லாம் சூரிய ஒளிக்காய் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது சீக்கிரப்படுத்திக்கொள் என்று நடுமொழி உரைக்கிறான்.

கோப்பித்தண்ணி ஊற்றி வச்சிருக்கே னத்தான்
எடுத்து குடியுங்கோ தாக்கம் தீர
கோபப்படாமலே போகும் போது ஒரு
முத்தமொன்று தாங்கோ ஆசை தீர

உடனே விழித்துக்கொண்ட மனைவி, கணவனின் நியாயமான கோபத்துக்கு ஆளாகிக் கொள்ளாமல் இருக்க கோப்பித்தண்ணி ஊற்றி முடிந்தது என்றும் உங்கள் கோபம் தீர குடித்துக் கொள்ளுங்கள் என்றும் சாடையாக கூறுகின்றாள். அவள் கூறும் தாகம் தீர என்பது அவனின் கோபத்தை தீர்க்கவாகவே இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அவன் கோபம் தீர்ந்ததா இல்லையா என்று அறிந்து கொள்ளவும் அவள் பெண்மையை ஆற்றிக்கொள்ளவும் முத்தம் கேட்கும் விதம் அலாதியானது. சந்தம் கூட கேட்பது போல ஆசை தீர முத்தம் கோபப்படாமல் தாருங்கள் என்று கவிதை மொழியை மேலும் மேலும் அடுக்குகிறாள்.

முத்தமொன்று தந்தேன் பத்தரை மாற்றுப்
பசும் பொன்னேத்திரு திர வியமே
முத்துப்போல பிள்ளைகள் பெற்றிடுவோம்
தினம் மீன் பிடிக்க கற்று கொடுத்திடுவோம்.

முத்தம் கேட்டவுடன் உருகிப்போன அவன் மனதோடு கோபமும் பறந்தே போகிறது. அவளை அவன் விழிக்கும் விதம் கடலோர சமூகத்தில் மக்களின் மனநிலையையும் கணவன் மனைவி என்ற உறவின் மீது  அவர்கொண்டுள்ள புனிதத்துவத்தையும் உயர்த்திக்கொள்கிறது. தன் மனைவியை பசும் பொன்னாக உருவகப்படுத்திடும் அழகு அவன் பாசத்தின் உச்சம். அதையும் மீறி முத்துப் போல பிள்ளைகள் என்று கூறும் இடத்தில் கடலோர வாடையுடன் கவித்துவம் மேலோங்குகிறது. கடலோரமக்களின் அரும்பெரும் பொக்கிஷம் அவர்களிடம் கிடைக்கும் ஆழ் கடல் முத்தேயாகும். தங்கள் பிள்ளையும் அந்த ஆழ்கடல் முத்தே என விழித்தல், ஒரு தந்தை கண்டுடெடுக்கக் கூடிய முத்து அவர் பிள்ளைதான் என்ற கூரிய உண்மையை வெளிப்படுத்திடுகிறது. கூடவே பிள்ளையையும் தன் வழியே மீன் பிடித்தலுக்குள் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஓர்  ஆணின்  நியாயமான ஆசையும் காட்டப்பட்டுள்ளது.
 

மீன் பிடிக்க கற்றுக் கொடுத்திங்களா மென்றால்
அறிவு மலருமோ சொல்லுங்க ளத்தான்
ஈனப் பிறவிகள் நம்மளைப் போ லல்ல
கல்விமானா யாமும் வளர்ந்திடுவோம்

இந்த வரிகள் கவனிக்க வேண்டிய சமூக பிரச்சனைகள் சிலவற்றை படம் போட்டு காட்டுகிறது. கூடவே அந்நாளின் சமூக சிந்தனைகளையும் கூறுகின்றது. கணவன் மகனை மீனவனாக்க வேண்டும் என்று ஆசையை மனதுள் வளர்த்து கொள்கிறான், முத்தம் கொடுத்த உவகையுடன் அதை வெளிப்படுத்தியும் விடுகிறான். இதில் அவன் நோக்கம் இருவிதமான கண்ணோட்டத்துடன் ஆராயப்படவேண்டியதாகும். அக்கால சமூக கட்டமைப்பு மீனவனை மீனவனாகவே அழுத்திக்கொண்டு செல்லும் போக்குடையது. அப்போக்கினை ஏற்றுக்கொண்டவனாகவும் அதே வழி பயணிப்பவனாகவும் காணப்படுகிறான் கணவன். இன்னொரு பார்வையில் அவனை தன் மரபினை, வழித்தோன்றல்களை நினைவில் விழுத்தி அவனை ஒரு மீனவனாக்கும் நோக்கம் கொண்டவனாகவும் சித்தரிக்கலாம்.
ஆனால் மனைவியின் பார்வை எழுச்சியுடையது. அக்கால பெண்களின் மனநிலையும் கருத்து நிலைகளும் பிரமிக்கத்தக்கனவாக இருந்திருக்கின்றது. ஒரு ஆணாக கணவனானவன் தனது சமூக கட்டுப்பாட்டை மீறத் துணிவற்றவனாய் இருக்கும் போது  ஒரு பெண்ணாக அவள் சிந்தனை மறுமலர்ச்சி காண்கிறது. இன்றைய மீனவ சமூகத்தில் இருந்து  நாம் அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் எத்தனையோ  சாதனையாளர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த மனைவி போல் எத்தனையோ பெண்களினது தூரநோக்கானதும் துணிவானதுமான சிந்தனையே முதன்மைக் காரணம் எனலாம். தன் மகன் மீனவனாக வருவதனால் அவன் அறிவில் மேம்பாடு வருமோ வராதோ என கவலையுறுகிறாள் மனைவி. சீரிய கல்வியை தனது பிள்ளைக்கு வழங்குவதால் தன்னைப்போன்று, வெயில், மழை, கடும் காற்று என சீரில்லா காலநிலைகளின்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து நிச்சயமில்லாத கடற்றொழிலில் ஈடுபட்டு, இன்னுயிரைப் பணயம் வைத்து,  வலையில் சிக்குவதில் இருந்து கையில் சிக்குவதை கண்ணும் காரியமுமாய் பார்த்து சேமிக்க திண்டாடி அலைகளைப்போலே அலைவுறும் கிளிஞ்சல் வாழ்க்கை வேண்டாம், கல்வி கற்றவர்களாக இஸ்திரமான நிலையில் நாமும் வாழவேண்டும் என்று மனதின் வலிகளை கூறும் மொழிகள் நெகிழ்ச்சி ஊட்டுவனவாகின்றது.
 

சரிப்பிள்ளை போயிட்டு வருகிறேன் பால்கஞ்சி
கலயத்தை கொண்ட நீ வந்துவிடு
பொரிச்ச கருவாடும் சேர்த்துக்கொண்டே வந்து
கஞ்சி குடிக்கயில தந்து விடு

அவளின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவனாய், மனைவியின் கனவுகளை கலைக்க முடியாதவனாய் கதையின் போக்கை மாற்றுகிறான். உண்மையில் மாற்றவேண்டிய சூழ் நிலையில் இருக்கிறான். நாழிகள் கடந்து கொண்டே இருந்தன அவன் வேலைக்கு புறப்பட.. அவன் அவளிடம் பால்கஞ்சியும் பொரித்த கருவாடும் மதிய உணவுக்காக கேட்கிறான்.

சரியாத்தான் வலைபோட செல்லுங்கோ கஞ்சி
கலயத்தை கொண்டு நான் வந்திடுவன்
பொரிச்ச கருவாடும் அரைச்ச துவையலும்
கஞ்சி குடிக்கயில தந்திடுவன்

எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மனைவியாக கருவாடும் துவையலும் கஞ்சியும் கொண்டுவருவதாக கூறுகின்றாள். இதோடு மனைவியின் ஏக்கத்தை உணர்ந்த கணவனும், கணவனின் மனநிலையைஉணர்ந்த மனைவியாகவும் உடல்கள் பிரிய உணர்வுகாளால் பிணைந்திருக்கின்ற அந்த கடலோர குடிசையின் காலைப்பொழுது இதுவாகும்.
நிலையளவில் தாழ்ந்தவர்களாக சித்தரித்துக்கொள்ளும் அவர்கள் மனதளவில் உறுதியானவர்களாயும் அன்பளவில் இறுக்ககட்டுண்டவர்களாயும் காட்டிய அற்புத படைப்பு இந்த நாட்டார் பாடலாகும். மன்னார் என்ற அழகியல் இந்த பாடலில் இழையோடியுள்ளதை உணர்ந்துகொள்ளக்கூடியவாறு இருக்கின்றது.

குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா

ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும் மாறி மாறி பிரயாணம் செய்ய வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. இத்தேவையினால் அவனுக்கான நிரந்தர வதிவிடத்தின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. குறுகிய நாட்களுக்குள் அவர்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைமை அடிக்கடி உருவானது.
கி மு 6000 ஆண்டு காலப்பகுதிகளில் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் பயிர்செய்கையின் மூலம் அவனது உணவுத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளத் தொடங்கினான். பயிர்களுக்காக அவன் தனது இருப்பிடத்தை நிலையாக்கி கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பயிர்களின் அடிப்படை தேவையான நீருக்காக அவன் குளக்கரை ஆற்றங்கரை ஓடைகள் என்பவற்றுக்கு அருகில் குடியேற ஆரம்பித்தான். கால ஓட்டத்தில் மக்கள் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. இடவசதிகள் கருதியும் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்காகவும் மக்கள் குழுமங்களாக பிரிய ஆரம்பித்தனர். இவ்வாறு பிரிந்துசென்ற மக்கள் மற்றுமொரு நீர்நிலையை அண்டியே தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். காலப்போக்கில் ஒவ்வொரு குடியேற்றமும் அதன் இருப்பிடம், மற்றும் அம்சங்களைக்கொண்டு அடையாளப்படுத்தப்பட்டன. இந்த அடையாளப்படுத்தலில் இயற்கை அம்சங்களாக  தாவரங்கள், மிருகங்கள், பறவைகள், நீர்நிலைகள், நில இயல்புகள் போன்றவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனை விட இதிகாச புராண இலக்கிய பெயர்களும் , தொழில் ரீதியான பெயர்களும் , அரசர் ,மேல்நிலை அதிகாரிகள்,தலைவர்கள் போன்றோரின் பெயர்களும் ஆதிக்கம் செலுத்துவதையும் காணலாம்.

வவுனியா நீர்த்தேக்கம் (panoramio.com)

இலங்கையின் வடக்கு வாயிலாக கருதப்படுகின்ற வவுனியாவின் இடப்பெயர்வுகளும் இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இந்தக் கட்டுரையின் பெரும்பாலான மூலங்கள் ஞா.ஜெகநாதன் என்பவரால் வவுனியா பிரதேச கலாசார விழா 2016 ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட இடப்பெயர் ஆய்வு என்ற ஆய்வில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதைவிட வேறு சில புத்தகங்கள் மற்றும் கேள்வி அறிவு என்பவற்றின் மூலமும் தொகுக்கப்படுகின்றது.

வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லாததாலும் ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும் இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும் பள்ளங்களும், பளைகளும், புராணங்களும், புரங்களும், மடுக்களும், மலைகளும், முறிப்புகளும், மோட்டைகளும், வத்தைகளும், வனப்பு சேர்ப்பதனால் வவுனியாவின் இடப்பெயர்களில் இவற்றின் ஆதிக்கமே பரவலாகி காணப்படும்.

இவற்றை விட வவுனியா பிரதேசங்களில் பரவிக்காணப்படுகின்ற தாவரங்களான அரசு, ஆத்தி , இத்தி , இலந்தை , இலுப்பை, இறம்பை , ஈஞ்சு , கரம்பை, கறிவேம்பு, கருங்காலி, கள்ளி, கான்ச்சூரை, காயா, கூமா, கூழா, சமிழ், சாளம்பை, செங்காராயத்தி, தம்பனை, தான்றி , தேக்கு, நறுவிலி, நெளு, நொச்சி, பம்பை, பனிச்சை, பயறி, பரசு, பாலை, பாவட்டை, பிரம்பு, புளி, பூசினி, பூவரசு, பொடுங்கண், மகிழ், மண்டு, மருது, மரக்காரை, மாறலுப்பை, முள்ளி, விண்ணானை, விளா , வேம்பு என்பனவும் உயிரினங்களான ஆமை, உக்கிளான், எருமை, பன்றி, மரை, மான், கொக்கு என்பனவும், மீன் இனமான குறவையும்   தானியங்களான எள், நெல் என்பனவும்  இடப்பெயரியலில் முக்கிய இடம் பெறுகின்றன.
இத்தாக்கங்களால் வவுனியாவில் ஊர் பெயர்களில் ஆழ்ந்த அர்த்தங்களும் அழகியலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது வவுனியா மக்களின் தமிழ் புலமையையும் ஆழ்ந்த பாண்டித்தியத்தையும் புலப்படுத்தி நிற்கிறன. இனி சில ஊர்களின் பெயர்களினூடு கவனம் செலுத்தலாம்.
பறங்கி என்பது பூசணியை குறிக்கும் பெயராகும். பூசணி பயிர் செய்கைக்கு அருகில் ஆறு இருந்தமையால் அக்குடியிருப்பு பறங்கியாறு என அழைக்கப்படுகின்றது. பறங்கியாறு புத்துக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் நீர் பாய்ந்தோடும் இயற்கை  கால்வாய்களை ஓடை என்று அழைப்பார்கள். மருத மரங்களின் சோலையினூடக அது பாய்ந்து ஓடுகின்றமையால் அவ்விடம் மருதோடை எனப்படுகிறது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. கண்டி என்பது குளத்தை குறிக்கும். உட்பகுதியை வெட்டி ஆழமாக்கி உருவாக்கப்பட்ட குளம் வெட்டுக்கண்டி என பெயர்பெற்றுக் கொண்டது. தற்போது இந்தக்குளம் நெளுக்குளத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இது நெளுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது.

மணியார் குளம் வவுனியா (panoramio.com)

இதைவிட மரங்களை பகுதியாக கொண்ட குளங்களில் முடியும் பெயர்களை கொண்ட கிராமங்களும் காணப்படுகின்றன. கோழிய குளம் என்பது கோலிக்குளம் என்பதன் திரிபாகும் .கோலி என்பது இலந்தை மரத்தை குறிக்கும். நீர்நிலை நெடுகில் இந்த மரம் அதிகமாக காணப்பட்டபடியால் கோலியகுளம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. சோபாலிகை என்பது பற்றைக்காட்டை குறிக்கும். பற்றைக்காடுகள் நிறைந்த புளியங்குளம் சோபாலிகை புளியங்குளம் என்றிருந்தது. நாளடைவில் சோபால புளியங்குளம் என மருவியது. வவுனியாவுக்கு வியாபாரநோக்கில் வந்த வணிகப்பெண் ஒருத்தி வாங்கியதால் புளியங்குளம் அவள் மரபான பட்டாணியை கொண்டு பட்டாணிச்சியூர் புலங்குளம் என்று பெயர் பெற்றது. புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகவும் அவை தரித்து நின்று செல்லும் இடமாகவும் இருந்த புளியங்குளம் புலிதரித்த புளியங்குளம் ஆனது. இப்பெயர் மருவி நாளடைவில் புலிதறித்த புளியங்குளம் ஆனது.
இராசேந்திரம் என்ற ஒரு உடையாரால் திருத்தி அமைக்கப்பட்டகுளம் இராசேந்திரகுளம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது . நாகர் இலுப்பைக்குளம் என்ற இடம் ஞாபகப்பெயர் என்று கருதப்படுகின்றது சிலோனுக்கு வந்த நாகா இனத்தவர்கள் நாகநாட்டை ஆக்கிரமித்து வன்னி இராச்சியங்களை நிறுவும்வகையில் ஈழத்தின் நாக நாட்டை ஆண்டுவந்த நாகர் இனத்தவர்களின் ஞாபகார்த்தமாக நிலைத்து நிற்கும் பெயர் நாகர் இலுப்பைக்குளம் ஆகும். இது கந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. வைரவர் கோவில் இருந்த புளியங்குளம் வைரவர்புளியங்குளம்  ஆனது.
தாயம் என்பது தந்தை வழி உறவை சுட்டிக்காட்டுகிறது. தந்தை வழியாக கடத்தப்பட்டு வந்த குலஉரிமையை உடைய குளம் தாயக்குளம் என்றும் அக்குளத்தைச்சுற்றி அதிகமாக எய்பன்றிகள் வாழ்ந்து வந்ததால் எய் பண்டி தாயங்குளம் எனவும் அவ்வூர் பெயர்பெற்றது.
குளக்கட்டுக்களை அலை தாக்காமல் இருப்பதற்கு உட்புற குளக்கட்டில் கற்களை அடுக்கி வைப்பர். இதன் பொருட்டு அந்த குளம் அலைக்கல்லு போட்டக்குளம் ஆனது. நாப்பண் என்பது நடு என்னும் பொருள் கொண்ட சொல்லாடல் ஆகும். சுற்றிவர பலகுளங்கள் இருக்கும் போது நடுவில் அணைக்கப்பட்டபடியால் நாப்பண் குளம் என பெயர்பெற்றது. நாளடைவில் இது நாம்பன் குளம் என மருவி காணப்படுகின்றது. குளமானது தாழி வடிவில் ஆழமான அமைப்பை கொண்டபடியால் தாழிக்குளம் என அழைக்கப்பட்டது பின்னர் தலிக்குளமாக மருவிப்போனது. யானைகளின் தந்தம் மிக விலைமதிப்பானது. யானைத்தந்தங்களை இறந்த யானைகளில் இருந்து எடுத்து ஊருக்கு கொண்டு செல்ல பயந்து ஒளித்துவைத்து சென்ற கிராமம் கொம்பு வைத்த குளம் என அழைக்கப்பட்டது.
சூரி என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும், எருமை மாடுகளில் ஆண் மாட்டை கடா என்பார்கள். பழக்கிய எருமை மாடுகளை கொண்டு சென்று, காட்டு குழுவின் மாடுகளை, நீர்நிலைகளுக்கு அருகே காலில் சுருக்கு போட்டு பிடிப்பது வழக்கமாகும். இப்படியான வழக்கம் உடைய ஊர் கடாச்சூரி என பெயர்பெற்றது நாளடைவில் கிடாசூரி ஆனது. பாளை என்பது நீர்நிலை அருகே மக்கள் தங்கி வாழும் இடங்களை குறிப்பது. அவ்விடங்களுக்கு அருகே மருக்காரை என்ற மரம் செறிந்து காணப்பட்டபடியால் அவ்விடம் மருக்காரம்பாளை ஆனது. மடு என்பது ஒரு நீர் நிலையை குறிக்கும். மாரி காலங்களில் நீர் பாய்ந்து ஓடுவதால் அதை மறித்து குளங்கள் கட்டப்பட்டுள்ளன. குளங்கள் கட்டப்பட்ட பின்பும் அந்த பூமி மடு என்றே அழைக்கப்படுகின்றது. சேமம் என்றால் புதை பொருட்களையும் அரண்களையும் குறிக்கும். இதனால் சேமம் கொண்டபிரதேசங்களில் இருக்கின்ற மடு சேமமடு எனப்படுகின்றது.
காட்டு பிரதேசங்களின் நகரமயமாக்கலின் போது பெரிய மரங்களை வெட்டி எடுத்து விடுவார்கள். அதன் பின்பு சிறிய மரங்களே எஞ்சி இருக்கும். இப்படி சிறிய மரங்களினால் எஞ்சிய காடு குருமன் காடு என பெயர் பெற்றது நாளடைவில் குருமண்காடு ஆகியது. கரம்பை மரங்களால் செழிக்கப்பட்ட இடத்தை உடைய காட்டு பிரதேசம் கரப்பன் காடு ஆனது. இவை வைரவர்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவை சார்ந்தவை.
பயிச்செய்கை நடைபெறும் இடங்களை தோட்டம் என  அழைத்தார்கள், நீர்ப்பாசன விவசாயம் செய்யப்படும் இடங்களை பூ என பூரிப்புடன் அழைப்பர். அதை தாண்டி அதற்கு அருகில் தோட்டம் செய்யப்படும் இடம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகிறது.  அதோடு வத்தை என்பதும் தோட்டத்தை குறிக்கும். அரச தேக்கம் தோட்டங்களில் குடியேறிய மக்கள் அவ்விடத்தை தேக்கத்தை என அழைத்தனர். மந்தை என்பது ஆடு மாடுகள் கூட்டமாக உள்ளதை குறிக்கும் பெயராகும். ஓ என்பது சென்று தங்குவதைக்குறிக்கும்.  மந்தைகள் சென்று தாங்குகின்ற இடமாக அமைவதால் ஓமந்தை என்ற ஊர் பெயர் பெறுகிறது.
இதில் பெயர்பெற்ற வவுனியா நிலையங்களையே சுட்டிக் காட்டியுள்ளேன். இதை விடவும் ஏனைய இடங்கள் அவற்றின் தனித்துவமான காரண ஊர் பெயர்களுடன் இன்றும் விளங்குவதை காணக்கூடியதாக அமைகின்றது. இப்படி செழுமையும் செழிப்பும் நிறைந்த ஊர்ப்பெயர்கள் குடியேற்றங்களால் அளிக்கப்படுவது மனவருத்தத்துக்குரியதொன்றாகும். மருவிப்போன பெயர்களைக்கூட ஆதாரப்படுத்தி விடலாம் ஆனால் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கி அழிக்கப்பட்ட  தமிழ்க்கிராமங்களின் அடையாளங்கள் ஆதாரப்படுத்த முடியாதன. நவீனமயமாக்கலின் போது ஊர்ப்பெயர்களும் நவீனமாக்கப்படுகின்றமை வரலாறுகளை மறைப்பதாக அமைந்து விடுகின்றது. அழகிய தமிழ்ப் பெயர்களை உடைய எமது வரலாற்றுச் சிறப்பைக்கூறும் ஊர்களின் காரணப்பெயர்களின் செழுமைமிக்க காரணமறிந்து அவற்றை நிலைபெறச் செய்வது தமிழர்களின் தலையாய கடமையன்றோ