வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 08 – நாட்டார் கதைகள் II

மனித நாகரிக வளர்ச்சியுடன் கூடவே வளர்ந்து வந்த முக்கிய கூறு மனிதப் பண்புகள். மனித நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதப் பண்புக உருவாகி வளர்ச்சியடைந்து முதிர்ந்து போய் செப்பனான முறையில் வரையறுக்கப்பட்டு இன்று வெளிவந்து விட்டன. சொல்லளவில் மிக முதிர்ச்சியான மனிதப்பண்புகள் இன்று எல்லா சமூகங்களிலும் ஊடுருவியிருகின்றன. எம் சமூகத்தில் இன்றிருக்கின்ற எல்லா மதத்தினருக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட மனிதப் பண்புகளை கூறுகின்ற மத நூல்கள் எழுத்துவடிவில் இருக்கின்றன.
அதை விட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதற்கே உரிய மிக தொன்மையான வாய்வழி இலக்கியங்கள் மிக பலமான மனித பண்புகளை கடத்திக்கொண்டு இருகின்றது. இவையெல்லாம் வெறும் எழுத்துரு சொல்வழி தளத்தில் இயங்குகின்றனவே ஒழிய சமூகத்துக்குள் ஊடுருவி புழங்குகின்ற தன்மை அற்றனவாக காணப்படுகின்றன. இந்த புழக்கம் இன்மையின் வினைதான் இன்றைய சமூக சீர்கேடுகள். எமது சமூகங்களுக்கு மனிதப்பண்புகளை உருவாக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் அமுல்படுத்தவேண்டிய, பின்பற்றவேண்டிய தேவை இருகின்றது. இதை யாரும் மறுத்துவிட முடியாது.

வடக்கு நட்டார் இலக்கியங்களின் இறுதிப் பகுதியான நட்டார் கதைகளின் நிறைவுப் பாகம் இது. வடக்கில் காலம் காலமாக இருந்த மக்களிடையே வாய்மொழியாக பேசப்பட்டு பின்பற்றப்பட்டு கடத்தப்பட்ட மனித நேய பண்புகளை கூறும் கதைகள்தான் இந்த பாகத்தின் மையப்பொருள். வடக்கு மனிதர்களிடையே காலம் காலமாக இருக்கின்ற இருபிரச்சனைகளை சுற்றியே எல்லா மனிதநேய கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

(staticflickr.com)

ஒன்று  ஆட்சி, இன்னொன்று குடும்பம். இவை இரண்டிலும் நாளாந்த வாழ்வியலில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கலை கருவாக கொண்டு நல்லது இது கெட்டது இது என்று வரையறை செய்கின்ற கதைகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. இரண்டு அரசு மற்றும் குடும்ப கட்டமைப்புக்களை களமாக கொண்டு பிரச்சினையை முன்வைத்து பின்னர் அதனால் உழல்கின்ற மக்களின் வாழ்வியலை காட்டி கடைசியாக  பிரச்சனையிலிருந்து மீள்கின்ற வழியினை போதித்து கதையை முடித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கதைகள் இந்த கட்டமைப்பிலேயே இருக்கின்றன.
கதைகளில் சில நுட்பமான குறியீடுகளை பயன்படுத்துவதன்  மூலம் சமூகத்தில் இருக்கின்ற தீய சக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் பின்னணி இப்படியாக அமைகின்றது. அதிகாரங்களில் இருப்பவர்களிடையே இருக்கின்ற தீய எண்ணம் கொண்டவர்களை எதிர்த்து வெளிப்படையாக கதைக்கக்கூடிய அல்லது போராடக்கூடிய திறன் அற்றவர்களாக இருந்த மக்கள், அவர்களை ஐந்து அறிவு படைத்த மிருகங்களாகவே கருதினார்கள். அவர்கள் செய்கின்ற அட்டகாசங்களை பிறருக்கும் அறிவிக்கின்ற, அறிவுறுத்துகின்ற வகையில் அதிகாரத்தில் இருக்கின்ற தீயவர்களை மிருகங்களுக்கு ஒப்பாக கருதி மிருகங்களாகவே வடித்துள்ளனர். அவர்களுடனான சாதாரண மக்களின் உரையாடல்களும் போராட்டங்களும் வெற்றியும் தோல்வியும் அதனூடு வெளிப்படுகின்ற நல்ல, தீய மனிதப்பண்புகளின் பிரிவினையையும் இந்தக் கதைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் ஆட்சியில் இருக்கின்றவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர்.

(blogspot.com)

கதை 1

“……… ஒரு நாள் நெல்லை காயவைத்துகொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று ‘உன்னை கடிக்கட்டா இல்லை நெல்லை கொறிக்கட்டா?‘ என்றது காட்டு பன்றி, அவள் பயத்திலேயே ‘நெல்லை கொறித்துகொள்‘ என்றாள்…………..”

கதை 2

“……………….கல்யாணத்தன்று குரங்கு அவனிடம் இதைக்கூற அவன் மறுத்துவிட்டான். பின்னால் ஏதோ ஒரு வகையில் குரங்கு அவனிடம் பேசி சம்மதிக்க வைத்தது………….”

கதை 3

“……………. அவளை மயக்கிக் கொண்டு சென்ற புலி ஒரு அழகான ஆண் புலிக்குழந்தையை அவளுக்கு கொடுத்தது…………………..”

கதை 4

“……………..தவளையிடம் அரசியை பார்த்து வரும் படி அவன் தூது அனுப்பினான். அதை அரச கழுகு கவனித்து ராஜாவிடம் சொல்லி விட்டது……..”

சில கதைகளில் மனித அறியாமையும் அதனால் ஏற்படுகின்ற தவறுகளும் அதற்கு உதவுகின்ற மாந்தர்களும் என உதவி செய்தலையும் செய்த உதவியை மறக்காமல் இருத்தலையும் ஆழமாக கூறுகின்றன. இவற்றுள் பொதுவாக குடும்ப பின்னணியே பயன்படுத்தபடுகின்றது.
கதை 5

“ ஒரு விவசாயி தினமும் பெரிய பெரிய கிழங்குகளை பிடுங்கி வீட்டிற்கு கொண்டு வருவான். ஆசையுடன் மனைவியிடம் கொடுத்து காய்ச்சச் சொல்வான். அவளும் பக்குவமாக பெரிய கிழங்குகளை அடியிலும் சிறிய கிழங்குகளை மேலும் வைத்து காச்சுவாள். காய்ச்சிய கிழங்குகளை அவன் தட்டில் குப்புற கொட்டுவாள். எப்போதும் அவனுக்கு சிறிய கிழங்குகளே கிடைக்கும். அதனால் மிக வருத்தம் அடைந்தவனாய் நண்பனிடம் ஒருநாள் சென்று விவரத்தை கூறினான். நண்பன் நெய்யை மனைவிக்கு தெரியாமல் தாச்சியின் அடியில் பூசி விட்டு விவரத்தை பார் எண்டான். இவனும் அப்படியே செய்தான் அண்டைக்கு எல்லா கிழங்குகளும் அவன் தட்டில் விழுந்தன. மனைவி தான் செய்த அறியாமையின் தவறை உணர்ந்து மனிப்புகேட்டாள். விவசாயி நண்பனுக்கு நன்றியுடையவனாக இருந்தான்.”

இந்த வாய்வழி கதை; உதவி, மன்னிக்கும் மனப்பாங்கு, நன்றிமறவாமை என்ற மனிதப் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இருந்தும் இதன் பின்னணியில் இருக்கின்ற, இதே போன்ற சில கதைகளின் பின்னணியில் இருக்கின்ற வெளிப்பாடுகள் பெண் அறியாமை என்ற கருவில் பேசுகின்றன.

(yartmagazine.com)

அடுத்து மிக முக்கியமாக கதைகளில் இருக்கின்ற பண்பு பாசம். அம்மா-மகன், அண்ணன்-தங்கை, கணவன்–மனைவி என்ற பாசப்பிணைப்புக்கள் போன்றவை கதைகளில் இழையோடி இருக்கிறன. எந்த சந்தர்ப்பத்திலும் மகனை விட்டுக்கொடுக்காத அம்மா, ஐந்து அண்ணன்களை தனது சாகசத்தால் மீட்ட தம்பி, தங்கையின் பாசத்துக்காக மனைவியை துறந்த அண்ணன் என்று கதைகள் ஒவ்வொன்றும் விதவிதமான பாசப்பிணைப்புகளை காட்டுவதாகவே அமைகின்றன.
கதை 6

“……….அண்ணா! அண்ணி செய்யும் கொடுமைகளை பார் என்று கேட்பது போல அவனுக்கு அவன் நான்கு தம்பியரின் பார்வைகள் இருந்தன, அவன் மனைவியை துரத்திவிடவில்லை. பக்குவமாய் பல மொழிகள் சொன்னான். அவளும் வெகு விரைவில் திருந்தி அண்ணனும் தம்பிமார்களும் அண்ணியும் மருமகளும் மிக சந்தோசமாக வாழ்ந்தார்கள்……….”

கதை 7

“………….புலி மரத்தின் மேலே நின்றதைப்பாரத்த அண்ணன் அது தாவும் முன்னர் தங்கச்சியை காப்பாற்ற புலி மீது பாய்கிறான்……..”

அரசாட்சிக்குள் நடக்கின்ற பிரச்சனைகளையும், அதில் ஏற்படுகின்ற கவனக்குறைவால் உண்டாகின்ற பிழைகளையும் மந்திரி ஊழியர் அரசர் உறவுகளையும் இளவரசியின் காதல், உதவுகின்ற மனப்பாங்குகளையும் போர்யுக்தி அரச பரஸ்பர உறவுமேம்பாட்டயும் அதிலே உண்டாகின்ற உன்னத மனித பண்புகள் பற்றியும் சில கதைகள் விவரிக்கின்றன.
மனிதப்பண்பு என்ற வகையோடு பேய்க்கதைகள் மந்திரக்கதைகள் என அமானுஷ்யங்களை பற்றிய கதைகள் வெகு சிலவும் காணப்படுகின்றன.

(google.lk)

இந்த பேச்சு வழி கதைகள் எல்லாம் எந்தக்குறையும் இன்றி கடத்தப்படுகின்றனவே ஒழிய பயன்படுத்தபடுகின்றன்வா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதிலிருந்து முடிவுகளையும் அனுபவங்களயும் எடுத்துக்கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மிக உன்னத பண்பாடு நாகரீகம் என்று வெறும் புறவய நிலுவைகளை கொண்டாடுகின்றோமே ஒழிய அகவயமாக நாம் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் நிதர்சனம்.
இந்த மறக்கப்பட்ட வடக்கு நாட்டார் இலக்கியங்கள் என்ற தொடர் இத்துடன் என்வழியே முற்று பெற்றாலும் ஆழமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் கூறியது போல

“இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.”

இன்று இத்தோடு முடிகின்ற அத்தியாயம் இன்னொரு முறை மிக ஆழமாக எழுதப்படும்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 07 – “நாட்டார் கதைகள்”

வழமை போல இலக்கியங்களுக்குள் ஒருவனாய் நின்று ஆராயாமல் ஒரு பார்வையாளனாக வடக்கு பிரதேசங்களில் உலவுகின்ற நாட்டுப்புற கதைகள் சம்பந்தமான இந்த கட்டுரையினை எழுதலாம் என்ற நோக்கம் தான் இந்த காலதாமதத்துக்கு ஒரு காரணம். எப்போதும்போல இலக்கிய வர்ணனைகளுடன் ஆராய்வதற்கு கதைகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதனால், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஆராய்தல் மிக பொருத்தமானதாக இருக்கும். இந்த கட்டுரையினை எழுதுவதற்காக கிட்டத்தட்ட நூற்று ஐம்பது கதைகளை வாசித்துள்ளேன். இணையத்தில் இருந்தும் சுற்றத்தில் இருந்தும் முக்கியமாக கலாநிதி கி. விசாகரூபன் எழுதிய ஈழத்து நாட்டுப்புறக் கதைகள் என்ற தொகுப்பிலிருந்து என்னால் பெருமளவான கதைகளை திரட்ட முடிந்தது.

கதைகள்- ஓர் அறிமுகம்

(mamtavn.files.wordpress.com)

இன்றிலிருந்து சுமார் 1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அனுமானிக்கப்படுகின்ற மனித இனம் வழி வழியாக கடந்து வந்த பாதையின் குறிப்புகளே கதைகள். இந்த குறிப்புகளின்  உண்மைத்தன்மை என்பதை மீறிய ஒரு பதிவு நுட்பம்தான் கதைகளின் கரு. சிறிய சிறிய விடயங்களில் தொடங்கி உலகின் மிகப்பெரிய வரலாற்றுத் தடங்கள் வரை எல்லாமுமே கதைகளின் கோப்புகள்தான். இன்று கிடைத்திருக்கின்ற வரலாற்று தடயங்களில் இருந்து உருவாகின்ற அனுமானங்கள் எல்லாமே கதைகள் தான். கல்லை உரசி பொறி துவக்கினானிலிருந்து கணனியில் பொறி கிளப்பினான் வரை எல்லாம் கதையின் பரிமாணங்கள் தான். ஒரு சம்பவமோ சில சம்பவ கோர்ப்புகளோ வெளிப்படும் போது அவை கதைகளாக மாற்றம் கொள்கின்றன. ஒரு காதாசிரியன் கதைகளை உருவாக்குகிறான் என்ற இன்றைய போக்கிலிருந்து சற்றே விலகி சாதாரண மாந்தர்கள் எல்லாருமே கதாசிரியர்கள் ஆகின்றார்கள் வரலாற்றில். பொதுவாகவே அனுபவங்கள் தான் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட்டுவருகின்ற கதைக்குறிப்புகளாக இருக்கின்றன. ஓர் உண்மைச்சம்பவமோ அல்லது புனைவோ அனுபவமாக கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த எச்சங்கள்தான் இன்றைய கதைகள்.

வடக்கின் நாட்டுப்புறக் கதைகள் – தெய்வீக கதைகள் ஒரு பார்வை

கதைகளுக்கு பிறப்பிடம் கிராமங்கள் தான். இதில் வேற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஏனென்றால் ஆதி வரலாறுகளில் கிராமங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. வடக்கின் புவியியல் அமைப்பு, விளிம்புகளில் கரையோரமாகவும் மத்திம பகுதிகளில் விளைநிலமாகவும் அடியில் காட்டு நிலமாகவும் இருந்திருக்கின்றது. இந்த நிலவியல் அடிப்படையிலேயே கதைகளும் அதன் போக்கை வகுத்துக்கொள்கின்றன. வெவ்வேறு நிலவியலில்  வாழுகின்ற மாந்தர்கள் அந்தந்த நிலவியலின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அந்த நிலவியல் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கின்றன. இந்த பயத்தின் குறியீடே அவர்களின் கதைகளில் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கின்றன.
கதை 01- வேளாங்கண்ணி மாதா

“……….. நடுக்கடலில் பெரிய புயல் வீசி கப்பல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க கப்பலில் இருந்த எல்லாரும் “மாதா” என அலறிக்கொண்டிருந்தனர். …………”

கதை 02- உக்கிர வைரவர்

“……..தண்ணி உக்கிரமாய் பாயத்தொடங்கியது. வர வர தண்ணீர் வேகமாக அடித்துகொண்டுவருவதைப்பார்க்க இவருக்கு ஐமிச்சம் ஆகிவிடுகிறது….. வேட்டி சால்வை எல்லாவற்றையும் மம்பட்டிக்கு சார்த்தி விட்டு ஓடி வந்துவிட்டார்…… “

இந்த பயத்தை ஏற்படுத்தும் ஊடகமாக இயற்கையே பயன்படுத்தப்பட்டது. இயற்கை கொள்கின்ற சீற்றம் அவர்களுக்கு தெய்வ குற்றமாகப் படுகின்றது. அந்த இடத்திலே ஏற்படுகின்ற உதவியை அவர்கள் தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட உதவியாகவும் அதன் பின்னரான சம்பவங்கள் அந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட குறீயீடுகளே என்ற நம்பிக்கை ஒவ்வொரு கதைகளிலும் பலமாக எதிரொலிக்கிறது.
கதை 03- லொரென்சியார் கோவில்

“…. தாமஸ் (ஐயம்பிள்ளை) லொரென்சியாரை பூசித்துவரும் காலத்தில் தீவாலய முன்றலில் நிறுவுவதற்கு கொடிமரம் இல்லையே என்று மனம் வருந்திய சில நாட்களில் பரவைக்கடலில் முப்பத்தைந்துஅடி உயரமான சவுக்கு மரம் ஒன்று வந்தடைந்தது ………”

பெரும்பாலான கதைகளின் பின்னணி அவ்வூர்களில் இருக்கின்ற கோவில்கள் தேவாலயங்கள் பற்றியே இருக்கின்றன. பக்தி என்ற பயத்தை மனிதர்களிடையே ஏற்படுத்துவதற்காக முன்னைநாள் அனுபவங்களை சொல்லுகின்ற பின்னணியை கதைகள் கொண்டிருக்கின்றன.

(pixabay.com)

கதைகளில் மையக் கருவாக இருக்கின்ற பக்தியினை உறுதிப்படுத்த புனைகின்ற சம்பவங்கள் அனைத்தும் தெய்வத்தை அலட்சியப் படுத்துகின்றதன் விளைவையோ அல்லது மிக இக்கட்டான சூழ்நிலையில் தெய்வத்தின் உதவியையோ காரணப்படுத்தி கூறப்படுகின்றன.
கதை 04 – காளியாச்சி

“………… பிறகு ஒரு நாள் ஒரு சோனக மனுசி அந்த அம்மன் கோவிலுக்கு முன்னால தலையை விரித்து அந்த முடியை கையால் கோரி விட்டுக்கொண்டு அம்மனை அலட்சியமாக பார்த்துவிட்டு போனாள். அப்படி பார்த்த மனுஷியின் தலை அப்படியே திரும்பி விட்டது…………..”

கதை 05 – அற்புத இளநீர்

“……….. அடுத்த நாள் அபிஷேகத்துக்கு பால் பழம் கொண்டு கோயிலுக்கு போனார்கள். கோயில் ஐயாவிடம் இளநீர் கிடைக்காததை எண்ணி வருந்த ஐயா தோட்டத்தில் போய் பார்க்குமாறு கூறி அனுப்பிவிடுகிறார். அங்கு சென்று பார்த்தபோது செவ்விளனி குலையாக காய்த்து கிடந்தது…….”

பக்தியோடு உள்ளூர சாதியமும் கதைகளில் ஓடுகின்றது. கீழ் சாதியினரை ஊர் மக்கள் வெறுப்பதாகவும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க மறுக்கின்ற அல்லது ஓதுகின்ற போக்கினையையும் எடுத்துக்காட்டுகின்றது.
கதை 05 – அற்புத இளநீர்

“….. பறையனுக்கு வீட்டில் இளநீர் இருந்தும் கொடுக்க மறுக்கின்றனர்……..”

கதை 06 – பாவம் கழித்தல்

” …….. அவர்கள் இந்த வளவுக்குள் வரக்கூடாது. மீறிவந்தால்உங்களையும்  அவர்கள் போலவே நினைத்துக்கொள்வேன். ……”

(pixabay.com)

சில கதைகள் மதப்பிரிவினை இருந்ததை கூறுகின்றன. மதங்களுக்கிடையே வன்முறை முற்றி இருப்பதை, அவர்கள் மற்றைய மதங்களை மதிக்காமல் இருப்பதையும் காட்டுகின்றது. இன்று வடக்கில் பேசாமல் ஒளிந்து காணப்படுகின்ற மதப்பிரிவினை ஒருகாலத்தில் பெரும் கலவரமாகலாம். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனித மனங்களுக்கிடையே காணப்படுகின்ற விரிசல் மிக வலிமை வாய்ந்தது. எவ்வளவுதான் நாம் ஒன்றாக இருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டாலும் புரிந்துணர்வு இல்லாமலே இந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் மூன்று சமய வணக்கஸ்தலங்களும் ஒன்றாக இருந்தாலும், கூடவே இருக்கின்ற மீன் இறைச்சி சந்தையின் நிலவுகை இன்றைய வவுனியா சூழலில் இருக்கின்ற மத, மன நல்லிணக்கத்தின் சிறந்த குறியீடு.
போர்த்துக்கேய ஒல்லாந்தர் ஆங்கிலேய கால கட்ட கதைகளின் போக்கு இன்னொருவிதமானது. இதில் கிறிஸ்தவ மத பின்னணியை கொண்ட புனைவுகளே அதிகமாக காணப்படும். அவர்களின் மத தாக்கம் அல்லது மத திணிப்பு கதைகளில் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமியர்களும் சரி இந்துக்களும் சரி எந்த பேதமுமின்றி கிறிஸ்தவர்களாகும் கதைகளே காணப்படுகின்றன. மேலை நாட்டவர் நீர் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்தமையால் கதைப்பின்னணி கடலோர வாழ்வியலை மையப்படுத்துகிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட தேவாலயங்கள் எல்லாமே இறைவனின் உதவிக்கு நன்றியாக கட்டப்பட்டிருக்கின்றன. மதம் மாற்றல் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்ட கதைகள் அந்த பருவ காலத்துக்குரியவை.
கதை 07 – சவேரியார் கோவில்

“……………..முஸ்லீம் யாத்திரைகள் யாவரும் சவேரியாரின் நாமத்தை கோஷித்த வண்ணமே வந்து அவரின் அடியை வணங்கினார்கள். நிலைமையை புரிந்துகொண்ட சவேரியார் ஜெசுவின் நாமத்தை உச்சரித்து குமாரனை உயிர்பித்தார். ………..”

கதை 08- லொரென்சியார் கோவில்

“…………ஐயம்பிள்ளையாரின் ஏற்கனவே இருந்த நாச்சிமார் கோவில் மறைய அவ்விடத்தில் கண்டெடுத்தல் கல்லை வைத்து லொரென்சியார் கோவில் அமைத்து வணங்கினார். நாச்சிமாரை வணங்கிய சமூகம் லொரென்சியாரை வணங்க தொடங்கியது…….”

(pixabay.com)

 
வெளிநாட்டவர்கள் மதத்தை வலுக்கட்டாயப்படுத்தி திணித்ததாக எந்த கதைகளுமே கூறவில்லை. மேலான சமயம் ஒன்றிக்கு தாமாக மாற்றப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. கோவில் அழிப்புக்கள் பல தாமாகவே மறைந்ததாகவும் அந்த இடத்திலே கிறிஸ்தவ தேவாலயங்கள் உருவானதாகவுமே வலிந்து கூறப்படுகின்றன.
வரலாற்றை மறைக்க புனையப்பட்ட வெறும் பொய்க்கதைகளாகவே இதை கருத முடிகின்றது. கதைகளில் பல இருவரோ அல்லது ஒருவருடனேயே முடிவடைந்து விடுகின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத நிகழ்வுகள் அங்கிருக்கும் ஆட்சிக்கோ நம்பிக்கைக்கோ ஏற்ப திரிபுபடுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். காலத்தின் நிலைமையோடு வழிபாடும் கடவுள்களின் சக்திகளும் அவர்களால் செய்யப்படுகின்ற அற்புதங்களும் வலுவைமாற்றிக்கொள்கின்றன. அந்த அந்த இடங்களில் வலுப்பெற்றிக்கின்ற சமயத்தினை பொருட்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன. இதிலிருந்து கதைகளில் உள்ள புனைவுத்தன்மை வெளிப்படுகின்றது. இவற்றினை ஒட்டுமொத்தமாக நோக்கும் பொருட்டு மிகத்தெளிவாக திரிபாக்கப்பட்ட கதைகளின் வடிவமாகவே தெய்வீக கதைகள் இன்று உலவுகின்றன என்பது ஓரளவு ஊர்ஜிதமாகின்றது.
இது சமய விருப்பு வெறுப்பு இன்றி எழுதப்பட்டது. கதைகளின் மீதான எனது தனிப்பார்வையிலேயே கட்டுரை ஆக்கப்பட்டுள்ளது. எந்த திணிப்புகளும் இதிலில்லை.
அடுத்த கட்டுரையில் சமூகம் சார்ந்த கதைகளையும் சமூக விழுமியங்கள் சார்ந்த கதைகளையும் அரசு ஆட்சி போன்றவை சம்பந்தமான கதைகளும் பற்றி ஆராயலாம்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 06 “கரகம்”

ஏன் இதையெல்லாம் பதிவிடுகிறோம்? புத்தகத்துக்கோ அல்லது திரைப்படத்துக்கோ மிஞ்சி போனால் சமூக நிலைமைக்கோ கட்டுரைகள் அல்லது விமர்சனங்கள் எழுதினால் நிறைய நாட்கள் நீடித்து நிற்கமுடியும், கூடவே மக்கள் மத்தியில் இஸ்திரமான ஒரு நிலையை அடையமுடியும். எத்தனை பேர் இதை வாசிப்பார்கள்? துடிப்பான சுவாரஸ்யமான தகவல்கள்தான் அதிக கவன ஈர்ப்பினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. சரி இது போன்ற தலைப்புகளில் எழுதுவதற்கு அனுபவமும் அடையாளமும் தேவையே, அங்கீகாரம் பெற்றவர்கள் எதை எழுதினாலும் அது கவனிக்கப்படுகிறதே, அங்கீகாரம் பெற்ற பிறகு எழுதிக்கொள்ளலாமே. இது போன்ற கருத்துக்களை நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் கொடுக்கலாமா இல்லையா என்ற மனநிலையில் இல்லை என்று சுதாகரித்து கொண்டு கிளம்பி விட்டேன்.
இன்றைய வடக்கு சூழலில் அருகிவருகின்ற ஒரு வழிபாட்டு முறை தான் கரகாட்டம். முன்னைய காலங்களில் பஞ்சம், தோற்று நோய், இயற்கை சீற்றங்களின் போது மாரியம்மனை வேண்டி வழிபட்ட ஆடலும் பாடலும் நிறைந்த வழிபாட்டு முறை தான் கரகாட்டம். இது தமிழ் மக்களுக்கே உரிய மிகப்பழைமையான நாட்டார் வழிபாட்டு ஆடற்கலை ஆகும். காலத்தினால் இது தொழிலுக்காக ஆடப்படுகின்ற கண்காட்சி ஆடல் முறையாக மாறிப்போனது. பணத்துக்காகவும் கேளிக்கைக்காகவும் ஆடப்படுகின்ற ஆடல் முறையாக இது மாறிப்போனது தமிழ் சமுகத்தின் இழிநிலையை காட்டுகின்றது. பயத்தால் புனிதமாக ஆடப்பட்ட கலையின் இன்றிய நிலை வருத்தத்திற்குரியதே. இருந்தும் சமகாலத்தில் கோயில் வழிபாட்டுடன் ஆடப்படும் கரகமும் நிலைத்தேயுள்ளது.பொதுவாக கரகம் ஆண்களுக்குரியதொன்றாகும். ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது.

ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது. (staticflickr.com)

கரத்தில் இருவகைகள் உள்ளன. ஒன்று சக்தி கரகம் மற்றையது ஆடு கரகம். முன்னையது தொன்மையானது பின்னையது தொழில்முறையானது. சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். இக்கரகம் இறை வழிபாட்டுடன் தொடர்புடையது. பக்தியின் விளைவாக எடுக்கப்படுகிறது. ஆடு கரகம் ஆண்கள் பெண்கள் என இருவகையினராலும் ஆடப்படுகிறது. இது தொழிலுக்காக எடுக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு செம்புகளும் ஆடுகரகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சக்தி கரத்தை அபிநயங்களை கூட்டியும் அம்பலமாகவும் கேளிக்கைக்காகவும் பணத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் மாற்றப்பட்டு ஊர் ஊராக ஆடு கரகம் ஆடப்படுகிறது.
வழிபாட்டுக்காக எடுக்கப்படும் காரகத்தினுள் புனித நீர் வைக்கப்படுகின்றது. உழவர்கள் ஏர்மங்கல விழாவின்போது இந்த புனித நீரையும், அதே போல பெண்கள் முளைப்பாலிகையையும், – முளைகள் உள்ள ஓடு, எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்வர். ஆண்கள் பக்தியுடன் எடுத்துச் செல்லும் புனிதநீர் அடங்கிய செம்பே கரகச்செம்பு என்றும் அதை எடுத்துச் செல்லும் உழவரை கரகக்காரர் என்றும் அழைப்பார்கள். இதே போன்ற செய்முறையில் கரகக்காரர்கள் ஒன்பது செம்புகளை எடுத்துச்செல்வார்கள்.

” ஒண்ணா கரகமடி எங்கள் முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி ” எனத்தொடங்கும் நாட்டார் பாடலில்
“ஒன்பதாம் கரகமடி எங்கள் முத்துமாரி
ஒலகம் செழிக்கவேணும் எங்க முத்துமாரி ” என முடிவுறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது வழிபாட்டு முறை என்றால் ஆடற்கரக முறை பல அடுக்குகளை கொண்டமைந்தது.
ஓரளவு தோதான அலுமினிய அல்லது கலப்புலோக செம்பு அல்லது குடம் தெரிவுசெய்யப்பட, அதனை சுற்றி பூக்களாலும் மாலைகளாலும் அலங்காரங்கள் செய்யப்படும். குடத்தினதோ செம்பினதோ வாயிலிருந்து கோபுரவடிவான- அதாவது கூம்பு வடிவ எழுப்பம் ஏற்றப்படும். அதை சுற்றி வண்ணங்களாலும் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு உச்சியில் பொம்மைக்கிளி சொருகப்படும்.

சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். (pinimg.com)

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர். ஆடுகரகம் எடுப்போர் குடம் முழுக்க மணலை நிரப்புவர். பௌதீகவியல் ரீதியில் சமநிலையை பேணுவதற்காக உள்ளடக்கம் செய்யப்படுவதாகவும், இந்து சமய ஐதீகங்களின் படி கரகச்செம்பை உடலாக உருவகித்தால் உள்ளடக்கம் உயிராக உருவகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கரகாட்டம் மூன்று நிலைகளை கொண்டது. தொடக்க நிலை, வேக நிலை மற்றும் அதிவேக நிலை என்பவை அவையாகும். ஊரவர் மத்தியில் கேளிக்கைக்கான நேரத்தினை ஏற்படுத்துவதற்காக கரகக்குழுவில் எல்லோரும் ஆயத்தம் அடையும் நிலையே தொடக்க நிலை.
கரகக் காரருடன் எல்லா வாத்தியங்களும் பொருந்த கரகக்காரர் தன்னை நேர்த்தியாக்கிக்கொண்டு கரகமும் உறுதிச்சமநிலையில் இருக்கின்றதா என சரிபார்த்துக்கொள்ளும் நிலை. நையாண்டி மேள இசையோடு எல்லா கூறுகளும் பொருந்துகின்ற ஒரு நிலையை அடையும் மட்டும் பக்கவாத்தியங்கள் கரகக்காரர்கள் என எல்லோரும் மெதுவாக அசைவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஒரு பெரிய சபாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவர்.
ஒருங்கிசைவு பெறப்பட்டவுடன் மெது மெதுவாக வாத்திய வேகத்தை அதிகரிக்க ஆட்டவேகமும் அதிகரித்துக் கொள்ளும். இது இது வேகநிலை. இதன் போது தாளசுதிக்கும் வாசிக்கும் இசைக்கும் ஏற்ப எவ்வித வேறுபாடும் தெரியாமல் கலைஞர்கள் ஆடுவர். இதனை சமநிலை என்றும் கூறுவார்கள். எல்லாம் பொருந்திய உச்சநிலையில் கரகாட்டம் அதிவேக நிலைக்கு செல்லும். ஒரு புயல் மைய்யம் கொண்டதுபோல கரகாட்டக்காரர் வலப்பக்கம் சுழன்று சுழன்று கரகம் கீழேவிழாமல் சமநிலையில்  இருக்கவும்  காண்போர் சமநிலை அற்று போகுமாறும் ஆடிக்கொண்டிருப்பர். தாளம் முறியாமலும் ஜாதிமுறியாமலும் முகமெது முதுகெது என அடையாளம் காணமுடிய படி சுழன்றுகொண்டிருப்பர்.

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர் (thenewsminute.com)

இப்பிடி ஓய்ந்த புயலில் மழையின் இடைவெளி சிரிப்பொலி போல கோமாளிகள் வந்து ஆடுவதுண்டு. இதன் நோக்கம் ஆட்டக்காரர் ஓய்வெடுப்பதாக இருக்கும். கோமாளி அவ்வூர் பேச்சுமொழியில் ஆபாசம் கலக்க நகைச்சுவையாக பேசுவான்.
கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும்.
காலில் மணிக்கச்சம் – ஆடுபவர் காலில் கட்டிக்கொள்ளும் சதங்கை, தலையில் செம்பை வைத்து தன் அங்கங்களில் சிக்கலான அசைவுகளை சிக்கலான இயக்கங்களை நடனக்காரன் மிகவும் நளினமாகவும் சாமர்தியமாகவும் வெளிப்படுத்திடுவார். இரண்டு நாதஸ்வரங்கள், ஓர் ஒத்து, தவில், தாளம், பம்பை, தமுக்கு போன்ற கருவிகளின் உதவியால் எழுப்பப்படும் நையாண்டி மேளம் என்ற ஒருவகை இசை இதற்கு பின்னணியாக திகழும், கரகமாடுபவன் தலையில் கரகத்துடன் நாத வேறுபாடுகளிற்கு  ஏற்ப தன் உடலின் பாவங்களை வெளிப்படுத்துவான். (சடகோபன் )
கரகாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அடிவைத்து மாறி மாறி வைப்பதுண்டு . இம்மாற்றம் களம் எனப்படும். கரகத்தில் உள்ளதற்கு மேற்பட்ட களக்கணக்குகள் உண்டு. இக்களம் நையாண்டி மேளத்தின் தாள கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது. எனவே நையாண்டி மேளம் இன்றியமையாததொன்றாகும். ( குணசேகரன் )
வல்வெட்டித்துறையில் ஊறணி என்ற இடத்தில் இந்திய வம்சாவழியினரால் இவ்வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனையோர் உடுக்கு நாதஸ்வரம் தவில் போன்றவற்றையே கையாளுகின்றனர். கரகம் ஆடுவதற்கென எந்த மேடை அமைப்பும் இல்லை. ஒரே ஒரு தளம் மட்டும் போதும். மக்களுக்குள் சென்று ஆடும் ஆடற்கரக வழக்கமும் உண்டு.

கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும். (tampabay.com)

கரகக் காரரின் உடையமைப்பு மிக அழகாக இருக்கும். முன்னைய காலத்தில் சட்டையும் பாவாடையும் தலையில் குடத்தை தாங்க குடுமியும் அணிந்து கொள்வர். இன்றைய காலத்தில் கீழே ஜீன்ஸ்-உம் மேலே முழங்கால் வரையே நீளுகின்ற மேற்சட்டையும் அணிவர். சில இடங்களில் திரைப்பட பாதிப்பில் பரத உடையும் அணிவதுண்டு.
கரகத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். கிழக்கு இராமநாதபுரத்தில் தஞ்சாவூரில் கரக செம்பு என்றும், திருநெல்வேலி மக்கள் கரகக்குடம் என்றும் கன்னியாகுமாரி மக்கள் கும்ப ஆட்டம் என்றும் இந்தியாவிலும் யாழிலும் கரகம், கரகாட்டம் என்று இருவகையாலும் மலை நாட்டில் செம்பாட்டம், கரக கூத்து என்றும் மட்டக்களப்பில் கரகம் என்றும் அழைப்பர்.
கரகத்தின் அடி நாதம் அற்றுப் போயிருந்தாலும் இன்றும் நிலைத்து நிற்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தோடு நடனங்கள் என்ற பகுதிக்கு விடைகொடுத்துக்கொண்டு வடக்கு நாட்டார் கதைகள் என்ற சுவாரஸ்யமான பகுதிக்குள் அடுத்த முறை செல்லலாம் என எண்ணுகிறேன். அடுத்த தலைப்புடன் சந்திக்கலாம்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 05 – “காவடி”

மனித நாகரீகம் வளர்ந்து உச்சத்தை அடைந்திருக்கும் – என கருதப்படுவதாக எண்ணுகிறேன், இந்த காலகட்டத்தில்  மானிட மனங்களால் பல வழமைகளின்  அல்லது நிகழ்வுகளின்  தொடர்ச்சியினை பின்பற்ற முடியாமல் போகின்றது. இந்த தொடர்ச்சியற்ற போக்கு ஒரு விதத்தில் காலத்தின் தேவைதான். சில வழக்காறுகள் அழிந்து போவதே உசிதம்.
பழையன கழிதல் நாகரீக எழுச்சிக்கான அடிப்படை என்பது எனது சொந்த கருத்து. இதில் பழையது என்பது குறித்துநிற்கும் அளவுகோல் எது என்பதில்தான் நாகரீக எழுச்சி தங்கியுள்ளது. இறந்தகாலம் அல்லது பயன்படுத்தாதவை பழையது என்ற வார்த்தையை அர்த்தப்படுத்தலாம். அந்த வகையில் இறந்தகாலம் கழிய வேண்டுமா? இறந்த காலம் தேவையற்ற ஒன்றா? இறந்த கால அனுபவங்கள் மறக்க வேண்டியவையா? என்ற அடுக்கான கேள்விகள் பழையது என்பது இறந்தகாலம் இல்லை என்பதை உறுதியாக கூறுகின்றன.

பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை (copycrave.com)

வழமையாக நீங்கள் துவிச்சக்கர வண்டியில் செல்லுவீர்கள் என வைப்போம். உங்கள் நண்பன் வெளியூர் செல்லவேண்டிய காரணத்தினால் அவரின் மோட்டார் சைக்கிளை உங்கள் வீட்டில் வைத்து விட்டு வரும் வரை பாவிக்கவும் அனுமதி   தருகிறார். நீங்கள் இப்பொழுதெல்லாம் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறீர்கள் என்பதற்காக பயன்படுத்தாத உங்கள் துவிச்சக்கர வண்டி பழையதா? துவிச்சக்கர வண்டி பயன்படவில்லை என்று கழித்துவிட்டால் அடுத்த நாள் அல்லது தொடர்ந்து வரும் நாட்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
இன்று பயனில்லை என்பதற்க்காக கழித்துவிடுதல் நாளைய தேவை ஒன்றிற்கான விடையினை அழித்துவிடுதல் ஆகும். இதிலிருந்து பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தனது உள்ளடக்கங்கள் அனைத்தையும் தந்து காலியாக இருக்கின்றவை அல்லது பொருந்தாத உள்ளடக்கங்களுடன் உள்ளவை என்று விளிக்கலாம். கடையில் இரண்டு ரூபாய் கொடுத்து இனிப்பு வாங்குகிறோம் , காசு கொடுத்து வாங்கினோமே என்பதற்க்காக இனிப்பின் உறையை யாரும் பத்திரப்படுத்திக் கொள்வதில்லை. இது தான் விடயம் , இனிப்பு என்னும் உள்ளடக்கம் தீர்ந்தவுடன் உறை என்னும் காவி கழிந்து போகின்றது. பழையன கழிதல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
இதை முகவுரை என்பதை விட ஒரு பதிவாக எடுத்துக்கொண்டு தலைப்பிற்குள் நுழையலாம்.
கலைகளில் மிகவும் நளினமானது எது என்றால் ஆடற்கலையையே எல்லோரும் உரைப்பர். ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். உணர்ச்சிகளை பலவிதப்படுத்தி வெளிக்காட்டுவர். வெளிப்பாட்டின் உச்சம் நடனமாகவே இருக்கும், இது சந்தமற்ற முறையற்ற கூச்சல் நடனமாக இருந்தாலும் சரி.

ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். (sehernow.in)

எந்த நாட்டார் கலையுமே இலக்கணங்களுக்கோ யாப்புகளுக்கோ வரைமுறைக்குட்படுத்தாமல் வளர்ச்சி கண்டவையே. ஆதிகால மனிதனிடம் மொழி இருக்கவில்லை. இதில் மனிதன் என்பது கவனிக்க வேண்டிய விடயம். அவனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் பதிந்து கொள்ளவும் ஒரு ஊடகம் தேவைப்பட்டிருக்கும். அந்த தேவைப்பாட்டின் விளைவே நடனமாகிறது. அவன் தனது சந்தோஷங்களையும், துக்கங்களையும், அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், பயத்தினையும் ஆடலின் மூலமே வெளிப்படுத்தினான். எத்தனை யுகங்கள் போனாலும் இன்னும் அங்க அசைவில் உண்டாகும் நடனங்கள் தான் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சம். உலகிலே நடமாடாத இடங்களும் இல்லை, மாந்தரும் இல்லை.
அதிலும் முக்கியமாக பயம் என்ற உணர்வின் சிறந்த வெளிப்பட்டு ஊடகம் நடமாகவே இருந்திருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய பரத நாட்டிய நிகழ்வுகளில் பயம்  என்ற நிலையில் தான் அதிக சிறப்பு காணப்படுகிறது. ஆக அன்றும் கடவுளைப்பார்த்து மனிதன் பயந்தான். பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள். சங்க இலக்கிய வரலாறுகள் வெறியாட்டு, துணங்கை , குரவை போன்ற ஆடல் கலைகளை கூறுகின்றன. இதே ஆடல் கலைகள்தான் இன்றைய நாட்டார் நடனங்களாக பெயர் பெறுகின்றன.

பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள் (bhmpics.com)

கிராமிய நடனங்கள் அணையற்ற ஆறு போன்றவை. எந்த இலக்கண எல்லைக்குள்ளும் இல்லாமல் இருப்பதே இதன் சிறப்பாகும். அவற்றின் வளர்ச்சியும் அப்படியே, எந்த வித்துவான்களும் அல்லது சங்கீத லக்ஷணகாரர்களும் அதற்கு அணை கட்டிவிடவில்லை. ஆதி காலத்தில் இருந்ததிலிருந்து இன்றைய காலகட்டத்தை நோக்கிய ஆடற்கலைகளின் வளர்ச்சி வியப்பான ஒன்றாகும், எந்த கட்டுப்பாடும் அற்ற கலை ஒன்று நீடித்து இருத்தல் என்பது அதீத சிறப்பு. அச்சிறப்பை நடனங்கள் பெற்றிருக்கின்றன. நாட்டார் நடனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே உவகை ஊட்டுவனவாக இருக்கின்றமை அதற்கொரு காரணமாகவும் இருக்கலாம்.
கவனிப்பில் பொதுவான நாட்டார் நடனங்களில் காணப்படும் சந்தம் நான்கு அக்ஷர காலம் கொண்ட தாளங்கள் (சதுர்சிரம்) அல்லது மூன்று அக்ஷரகாலம் கொண்ட தாளங்கள் (திரிசிரம்) ஆகவும் மேலும் சில ஏழு அக்ஷரகால தளங்களை (மிசுரம்) கொண்டதாகவும் அமைகின்றன.
நாட்டுப்புற ஆடற்கலைகள் என்ற போர்வைக்குள் காவடி , கரகம் , வசந்தன், கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவை முக்கியமானவை.

காவடி

காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது. (bhmpics.com)

காவடி என்ற சொல்லை காவு + தடி என்ற சொற்களின் சேர்க்கையாக கருதலாம். காவுகின்ற தடி எனபதே காவடியில் பொருள். காவுகின்ற தடி என்றால் வெறும் தடியினை காவுவதா? இல்லை, தடியையும் காவுகின்றோம் அது தடி என்ற நிலையை தாண்டி, அத்தடியில் இருபுறமும் நேர்த்திக்கடன் செய்த பொருட்களை காவி அல்லது மஞ்சள் துணியில் சிறிய பொட்டலமாக கட்டி தொங்கவிட்டு அத்தடி நிற்பதற்கு இரண்டு கால்களை இரு புறமும் அமைத்து ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு வில்போன்ற அமைப்பையுடைய கூடாரம் ஒன்றை உருவாக்கி அதை பட்டால் சுற்றி மூடி கிளி பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து – ஒரு தெய்வீகம் பொருந்திய புனிதப்பொருளாக அந்தஸ்தளிக்கப்படும்.  இது வெறும் தோளிற்கு சுமை என்பதை தாண்டி பிராத்தனைக்காக எடுக்கப்படும் தடி என்ற பொருளில் கையாளப்படுகிறது. காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது.
முன்னைய காலங்களில் வழிபாடு என்பது ஊரளவில் இருந்தாலும் புனித தலங்களை நோக்கிய நடைபயண பாத யாத்திரைகள் புகழ் பெற்று இருந்தன. இந்த பாத யாத்திரைகளை ஊரவர் நேர்த்திக்கடனாக செய்வது வழக்கம். எனது எண்ணப்படி, அந்தக் காலம் பயண போக்குவரத்திற்கு ஊடகங்கள் இல்லாத காலம். நடையையே ஒரே மார்க்கமாக கொண்டிருந்த காலம். பொதுவாக எல்லாரும் வடக்கு புறத்தில் இருந்து சைவர்களுக்கு காலம் காலமாக நம்பிக்கையும் அருளும் செய்துகொண்டிருக்கும் கதிக்காம கந்தனை நோக்கி விரதமிருந்து நேர்த்திசெய்வதற்காக ஊரவர் நேர்த்தி பொட்டலத்தையும் இதர தேவையான பொருள்களையும் சேர்த்து ஒரு தடியில் கட்டி எடுத்து சென்றிருக்கலாம். கால ஓட்டத்தில் சாதிப்பிரிவிற்கு ஏற்றால் போல அந்த தடி அலங்காரங்கள் உருவாகி இருக்கலாம். இதுவே இன்றைய காவடியில் வெளித்தோற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம் என்பது எனது எண்ணம். வழியிலே களைப்பு தெரியாமல் இருக்க அக்காவடியை சில ராக சந்தங்களுடன் நாட்டிய அசைவுகளுடனும் கொண்டு செல்வர். இதுவே பிற்கால காவடிச்சிந்துகளாகும்.

செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார் (dnaindia.com)

காவடியில் பல வகைகள் உண்டு. சேவற் காவடி , மச்சக்காவடி, அன்னக்காவடி, பாற்காவடி / பன்னீர் காவடி, செடிற் காவடி, ஆட்டக்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி என்பன வடக்கில் இருந்துள்ள காவடியின் வகைகளாகும். இதில் முதல் மூன்றுமான  சேவற் காவடி , மச்சக்காவடி , அன்னக்காவடி என்பன தற்கால வழக்கில் இல்லை.
சேவலைப்பிடித்து அதன் தலையை வெட்டி குடத்தினுள் இட்டு அதை தடியில் கட்டி ஆடுவதே சேவற் காவடி. மீன்களைப்பிடித்து குடத்தில் இட்டு ஆடுவது மச்சக்காவடி ஆகும். மச்சக்காவடிக்கு வடக்கு செல்வச்சந்நிதி ஆலயம் மிக பிரசித்தமான ஒன்றாகும். ஒரு காலத்தில் பக்தர்கள் மீன்களை பொரித்து குடத்தில் இட்டு கோவிலுக்கு கொண்டு வருவதாகவும், கோவில் அருகே உள்ள தொண்டமானாறு ஆற்றம்கரை அருகே வரும் போது பொரித்த மீன்கள் உயிர்பெற்று ஆற்றினுள் குதிப்பதாகவும் ஐதீகங்கள் உண்டு. அன்னக்காவடி எடுக்கும் வழக்கம் இன்றைய இலங்கையில் இல்லாவிட்டாலும் முற்காலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. தங்களுக்கும்  தங்களை சார்ந்த சந்நியாசிகளுக்கும் உணவை வேண்டி பரதேசிகள் தங்கள் தோள்களில் வெற்று பாத்திரம் ஏந்திய தடியுடன் அன்னம் பெற செல்லல் அன்னக்காவடி எனப்படுகிறது. பால் அல்லது பன்னீர், செம்புகளில்  நிரப்பப்பட்டு தடியில் கட்டப்பட்டு எடுக்கப்படும் காவடியாகும், இதன்போது ஆடுவதில்லை. பொதுவாகவே சிறுவர்கள் இதனை எடுப்பார்கள். செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார். கூடவே வாயின் இரு பக்கத்தாலும் வேலினை அலகு என்ற நாமத்தில் குத்தி கொள்வர். இக்கவடியை இருவர் அல்லது நால்வர் ஒரே ஒழுங்கில் ஆடுவது ஆட்டக்காவடி ஆகும்  பொதுவாகவே வடக்கில் பறைமேளம் மற்றும் உடுக்கு மட்டுமே ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்டது, அனால் இன்று தவில், நாதஸ்வரம் போன்றவையும் புழக்கத்தில் உள்ளன.

உடலை வருத்தி பெற்ற பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். (deviantart.net)

ஆட்டக்காவடிக்கு தாளம் மிக முக்கியமானதொன்றாகும். பார்ப்போர் அதனால் உந்தப்பட்டு ஆடுவது வழமை. தூக்குக்காவடி நீண்ட வரலாற்றை கொண்டதல்ல. 1953களில் முதன் முதலாக செல்வசந்நிதியிலேயேதான் இது அரங்கேற்றப்பட்டது. சகடை ஒன்றின் இருபுறமும் இரண்டு மரங்களை நிறுத்துவர். மரங்கள் மிகப்பலமானவையாக இருக்கும். இருமரங்களுக்கும் நடுவே வளை ஒன்றிட்டு அதில் கப்பி இடுவர். காவடி எடுப்பவர் பத்மாசனமிட்டிருக்க அவரின் இரண்டு விலாப்புறமும் இரண்டு பெரிய கொழுக்கி முட்களை குத்துவர். இரண்டு முழங்காலுக்கருகிரும் இரண்டு முட்களை குத்துவர். அதே போன்று பின் பகுதியிலும். ஆறு கயிறுகளையும் சேர்த்து மேற்புறமாக உறிபோல கட்டி கப்பியினூடு செலுத்துவார். காவடி எடுப்பவர் தூக்கில் தொங்குவது போல பத்மாசனத்தில் இருப்பர். இவரை வீதி வீதியாக அழைத்து செல்வார். தூக்கு தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு செய்து வெற்றிபெற்றதன் காரணமாக இதை செய்தார் என சொல்லப்படுகிறது. இதே முறையில் அந்த ஆறு முட்களையும் அடியவரை படுக்க வைத்து தோள் தொடை கால் என்பவற்றில் குத்தி ஊர் ஊராக கொண்டு சென்றால் அது பறவைக்காவடிதூக்கு, பறவை காவடிகள் பெண்கள் எடுப்பதில்லை.
இந்த காவடி முறை இன்று வடக்கில் எல்லா கோவில்களிலும் மறக்காமல் மறுக்காமலும் நடைபெற்று வருகின்றது. உடலை வருத்தி பெற்ற  பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். ஆரம்பத்தில் கூறிய பழையன கழிதலுடன் காவடியும் கழிந்து போகாமை காவடியில் சமூக முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றது.
இன்னும் சில நாட்டார் நடனங்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 04 “ஆனை மறி காரன் மகள்”

விலங்குகளுக்கும்  மனிதனுக்குமான உறவு எல்லைப்படுத்தப்பட முடியாத ஒன்று. மனிதனை நாகரிக விலங்கு என்று அழைப்பதுவும் இந்த எல்லையற்ற உறவின் விகுதிதானோ என்று பலமுறை நான் எண்ணியதுண்டு. மனித வர்ணனைகள் விலங்கியலுக்குள் ஊடுருவுவதும் இதன் தாக்கம் தான். கண்களை மீன்கள் என்பதுவும், நடையை அன்னநடை என்பதுவும், கோபத்தில் எருமை மாடு என்பதுவும் விலங்கியலோடு பின்னிய வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது.

அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக்கூட இந்த விலங்குகள் திசைப்படுத்துகின்றன என்பது தமிழர் வாழ்வியலை பேணும் சமூகத்திற்கு தெரிந்த ஒன்றே. பூனை குறுக்கிடுதல், கன்றுக்குட்டி ஓடி ஒழித்தல் , பல்லி சொல்லல் என சில சம்பிரதாய கோட்பாடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சில விலங்குகளை தெய்வத்திற்கு சமானமாக கொண்டாடுவது இந்துக்களின் வழக்கம்.
அதிகமாக, குடியிருப்புக்களை முதன்மைப்படுத்திய விலங்கு வளர்ப்பு சுவாரஸ்யமானதாகும். இவனோடு அறுவர் என்னும் பதங்கள் பெரும்பாலான செல்லப்பிராணி வளர்ப்பு வீடுகளில் அதிகம் ஒலிப்பதாகும். இந்த அன்னியோன்யம் எதனால் என்ற விளக்கம் இப்போதைக்கு அவசியம் இல்லை. ஆனால் இந்த அன்னியோன்யம் ஒருவகையான மனநோய்க்கு காரணமாக இருந்துவிடுகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். எது எப்படியோ பூனையின் கால்களில் காயம் வந்துவிட்டால் மணிக்கணக்கில் அழுது , உணவை தவிர்க்கும் குடும்பங்களும் எம்மத்தியில் உண்டு.
இது ஒருபக்கம் என்றால், என் தலைப்பு மறுபக்கம். காதை கிழிக்கும் அலறல் ஒலிகள். மான்களும் பசுக்கன்றுகளும் குருவிகளும் கத்திக்கொண்டு ஓடவும் பறக்கவும் செய்கின்றன. தூரத்தில் கொஞ்சப்பேர் ஏதோ விபரீதமாய் கத்திக்கொண்டு காடுகளின் இடுக்குகள் வழியே மேடுகளில் கால்கள் இடரிட சாரமும் பெனியனுமாய் ஊருக்குள் குதிக்கின்றார்கள். அவர்கள் எல்லாரையும் மீறிய சத்தம்.
காட்டின் தூரத்தில் மேல் மரங்கள் அசைவதை மட்டும் காணக்கூடியதாக உள்ளது. காட்டுக்குள் பலமணிநேரம் அது செலவிடாது என்பதை அவ்வூரினர் நன்றாய் அறிந்திருந்தனர். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னராக இதே எச்சரிக்கைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த நாள் இரவு கருப்பன் கோவில் திருவிழாவுக்காக ஊரே சேர்ந்திருந்தது. யாரும் தொழிலுக்குச்  செல்லவில்லை. வருடம் ஒருமுறை வரும் இந்த திருவிழா தான் அந்த ஊரினதும் அயல் ஊரினதும் கொண்டாட்ட நாள். ஊர் ஜனங்கள் எல்லாம் ஒன்றாகி சமையல், சாப்பாடு , வழிபாடு, விளையாட்டு, கூத்து , நாடகம் கேளிக்கைகள் என பிரமித்துப்போய் இருந்தது.

(vikatan.com)

இரவை போக்குவதற்காக படங்கெடுக்க இரு வாலிபர்கள் தங்கள் வீட்டை நோக்கி சென்றிருந்தார்கள். இருளில் மூழ்கியிருந்த அவர்களது குடிசைகளில் லாந்தர் விளக்கில் எல்லாம் அலங்கோலமாய் இருந்தது தெரிந்தது. என்ன நடந்ததென்று அறிந்திராதவர்கள் குடிசைகளை நோக்கி விரைந்தனர்.திருடர்களின் பயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால் கட்டைகளை ஏந்திக்கொண்டு விரைந்தார்கள். பக்கங்களை பார்த்தவர்கள் சமயோசிதமாக இது மனிதர்களால் ஏற்பட்டதல்ல என்று உணர்ந்து கோயிலுக்கு ஓடினார்கள். ஒரே பிடி …… அப்பிடியே தூக்கி மதகோடு போட்டு அடித்து உசுப்பியது அந்த யானை. பீறிட்ட ரத்தம் மதகை சிவப்பாக்கியிருந்தது. இராக் கொண்டாட்டத்தில் போனோர்களை மறந்துபோய் இருந்தனர் ஊரவர், சில சகபாடிகள் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க கூடும் என்று எண்ணினார்கள்.
பொழுது புலர்ந்தது, அதிகாலை பண்டமெடுப்பதற்காக சிலர் அரசடி பிள்ளையார்கோவிலுக்கு சென்றிருந்தனர். வழியில் மதகைத்தாண்டி செல்லும் போது கசங்கியிருந்த ,உருத்தெரியாத அளவு கொடூரமாய் தாக்கப்பட்டவர்களையும், அங்கால் பீடித்திருந்த சீரின்மையையும் கண்டுகொண்டனர். பயத்தாலும் கவலையாலும்   வெருண்டுபோனவர்கள் கூவிக்கொண்டு ஊரவர்களை அழைத்தார்கள் , ஊரே அலங்கோலத்தின் அடையாளமாய் காட்சி தந்தது. அந்த எண்பது வயது மூதாட்டியின் வீடு விறகுக்கு குவித்த மரக்குவியல் போல் சிதைந்திருந்தது. மணல் சுவர்கள் எல்லாம் இடிந்துபோயும் சில தெம்பான குற்றிகள் வளைந்துபோயும் இருந்தன. ஆறேழு வீடுகளின் சுவார்ப்பக்கங்கள் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தன. வயல் நடுப்பக்கங்களில் பெரிய பெரிய கால்த்தடங்கள் அரையாடிக்கொருக்கால் பதிந்திருந்தது. தடங்களில் மாட்டுப்பட்ட நெற்கதிர்களெல்லாம் தலை சாய்ந்து போய் காணப்பட்டன. வாழைத்தோப்புகள் எல்லாம்  அரைவாசியாகவும் அடியோடும் பிடுங்கப்பட்டு வாழைக்குலைகள் கவ்வப்பட்டும் இருந்தன. அவ்விடம் ஒரே வாழை சாற்று வாடையாய் இருந்தது. தடித்த நீண்ட பனைமரங்களும் தென்னை மரங்களும் குலுக்கப்பட்டு சாய்த்துவிடப்பட்டிருந்தன. குவித்து வைக்கப்பட்டிருந்த நெற்கள் எல்லாம் சிதறிப்போய் கிடந்தன. நெல்மணிகள் எல்லாம் தூரத்தூர விதைந்துபோய் இருந்தன. இறந்தவர்களின் குடும்பத்தினரும் அயலவர்களும் ஒப்பாரிவைத்துக்கொண்டு இருந்தனர். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்கிறார்கள்.

பாடல் 01

சொல்லக்கேளும் வன்னி மன்னனே
துன்பமெல்லாம் இங்கு கூறவே
அல்லல் ஒண்டிரண்டல்லவே
ஆனை செய்யும் அட்டகாசமே
கொல்லை புலம் வயல் யாவுமே
கூறுந்தரமல்ல நாசமே
தென்னை பனை பலா மாவெல்லாம்
சின்னாபின்னமாக வீழ்ந்ததே
முன்னால் குவிந்த நெற் போரெல்லாம்
முற்றாக தின்று முடிந்ததே
இன்றுமெங்கள் குடில் கொட்டில்கள்
எல்லாம் பிடுங்கியே வீசுதே
நாங்கள் மிரட்டி துரத்தவே
நம்மை நாடிச் சாடி ஓடுதே
எத்தனை பேர் இருந்தார்களோ
எண்ணிக்கணித்தார் யாவரே
முத்து நிறைந்திடு கொம்பனே
முற்றும் பரப்பும் சுணங்கனே
சுத்த முளமதோர் ஏழாதே
மத்தக மித்திரை மீதிலே

பாடல் 02


இது யானை பிடிக்கும் பணிக்கர்கள் வாயிலாக கூறுவதாகவுள்ளது,

சொல்லக்கேளும் வன்னி மன்னனே – இந்த
தொண்டு செய்வாரில்லை திண்ணமே
வல்லதொருவருமில்லை – மத
யானை படுத்திடல் தொல்லையே
சொல்ல வொண்ணாத்துயர் தாங்கியே – சென்று
சேர்ந்து மடிந்தனர் ஏங்கியே
எல்லையுண்டோ இறந்துற்றவர் – இந்த
யானைமுன்னே கண்ணிற்பட்டவர்
மந்திர தந்திர சாலமே -எங்கள்
மாயமெல்லாம் வெறும் சாலமே
எந்த விதத்துமடங்கிடா – திந்த
யானை எவர்க்கும் மொடுங்கிட
நன்றோ நாம் சென்று மடிவதே – நாட்டில்
நமக்கிலையே புவி வாழ்வதே
இன்று நீர் எம்மீத்திறங்கியே – எங்கள்
இன்னுயிர் காத்தருள் தாங்கியே
அலைகடல் போலவே முழங்குமே – அந்த
அதிர்ச்சியில் அண்டம் நடுங்குமே
மலையெனவே முழம் ஏழதே – அதன்
மத்தகம் இத்தரை மீதிலே
மேனி முற்றுபடர் சுணங்கனே – அதை
மேதினியில் காண்டோர் பிணங்களே(வேழம்படுத்த வீராங்கனை – பக் 32)

பாடல் 03

இம்மதயானை குறித்து ஒப்பாரி பாடல் ஒன்றிலே
நாகன் திருக்கோவிலிலே என அஞ்சுகலை
நஞ்சையுண்ட அஞ்சாத ஐங்கரனே அப்பரே ஆத ரவே
அங்கே நிற்குதாம் நல்ல கொம்பன்
எங்காள் ஆகாது எங்காளை யாளும் சின்ன வன்னி யனாரே – அது
ஏழு முழ யானையல்லோ
அது கோபமுள்ள யானையது
எங்களையாளும் சின்னவன்னியனாரே – அது
குளறுதே மாமுகில் போல்.

மதம்கொண்ட யானையால் எந்நேரமும் பாதிப்புவரும் , எந்நேரமும் ஊருக்குள் இறங்கிவிடக்கூடும் என்ற பயத்தினை வன்னி அரசனுக்கு கூறிய வழிமுறைப்பாடல்கள் தான் மேற்கூறியவை.ஊரின் வளங்களெல்லாம் ஒன்றுசேர கருங்கல்லாலும், இறுக்க மண்ணாலும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது சின்ன வன்னியனின் அரச பீடம். ஊரவர் நிலையை உணர்ந்து கொள்கிறான் சின்னவன்னியன். அவன் சிற்றரசின் கீழ் இருந்த ஏழு ஊர்களின் பணிக்கர்கள் குறித்த கிராமத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். பல ஊர்களின் யானை அச்சத்தை போக்கிய வீரப்பின்னணி இந்த ஏழு பணிக்கர்களது. அதிலும் வேழப்பணிக்கன் ஆகச்சிறந்தவன். எத்தனையோ மதங்கொண்ட யானைகளை அடக்கி, மீண்டும் ஊர்ப்பக்கம் வரவிடாமல் செய்து மக்களின் மனங்களில் நீங்காத இடத்தில் வீரனாய் இருப்பவன். இருந்தும், இன்றைய நிலவரம் இதுவல்ல. வேலப்பணிக்கனுற்க்கும் இது தெரியாத ஒன்றல்ல. கூட்டம் கூடிற்று

பாடல் 04

ஏழு ஊருப் பாணிக்கரும் என்
அஞ்சுகலை நஞ்சையுடைய ஐங்கரனே
அன்பரே ஆதரவே – அவர்
எழுதிவிட்டார் ஓலை தனை
எல்லாப்பணிக்கருமாய் இன்பமுடன்
தான் நடந்து அன்புடன் நீங்கள் சென்று -அந்த
ஆனைக்கட்டி வாருமெண்டார்.

தனியொருவராக அடக்கமுடியாது என்பதை அறிந்திருந்த சின்ன வன்னியர், எல்லாப்பணிக்கருமாய் சேர்ந்து அடக்கி விட முடியும் என எடுத்துரைக்கிறார். பணிக்கர்கள் முகங்களில் மரண பயம் தோன்றுகின்றது. தங்களால் அடக்கிவிட முடியாது என்பதை – வேலப்பணிக்கரால் அடக்கிவிட முடியும் என பதிலளிக்கின்றனர். இது வேலப்பணிக்கர் வீரத்தை உயர்த்தினாலும்  மற்றையோரின் கீழ்மையை எடுத்துக்காட்டுகிறது.

பாடல் 05

இந்த ஆனை கட்டிவர
எங்களை ஆளும் சின்னவன்னியரே – எங்களால்
ஆகாது, வேலப்பணிக்கனால் ஆகுமென்றார்.
அதிலொருவன் நின்றுகொண்டு,
வேலப்பணிக்கனால் ஆகாது
வேலப்பணிக்கன் பெண்சாதியினால் ஆகுமென்றார்.

இந்த கருத்து யாரையும் அங்கே அதிர்ச்சியுற செய்யவில்லை, மாறாக வேலப்பணிக்கனை தலைகுனிய செய்தது. வேலப்பணிக்கனின் மனைவி அரியாத்தை. பெயரை போலவே அரி போன்று வீரம் மிக்கவள். முன்னரே சில யானைகளை அடக்கி வீரத்தை வெளிக்காட்டியவள். ஆனால் அதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விடயங்கள் அல்ல. இந்த முறை எல்லாப்பணிக்கர்களாலும் இயலாது என தெரிந்தும் அரியாத்தையை இக்கணக்கிற்கு இழுப்பது வேலப்பணிக்கனுக்கு மன உளைச்சலை தந்தது. மற்றைய பணிக்கர் வம்பிற்கே கூறியிருப்பினும், வேலப்பணிக்கனுக்கு அது அவன் வீரத்திற்கு ஏற்பட்ட இழுக்காகவே தோன்றியது. சோகங்களை கட்டிக்கொண்டு வீடு திரும்பிகிறான்.நடந்தவற்றை மனைவியிடம் கூறி கவலையுறுகிறான்.

பாடல் 06

இத்தனைக்கோ நீர் சலித்தீர்
என்னுயிரே ஆண்டவனே – எழும்பி
நீர் சாப்பிடன்றாள்

ஆனால் அரியாத்தைக்கு இது பெரிய விடயமாகவே தெரியவில்லை, அவள் இதை எண்ணி சோர்வுறவும் இல்லை மாறாக, கணவனுக்கு ஆறுதல் மொழியே அளிக்கிறாள். கணவனின் ஒப்புதலோடு , குறை மனதாகவே வேலப்பணிக்கன் அவளை அனுப்புகிறான் என்று எந்த சான்றும் இல்லை – அவள் மதயானையை அடக்க விரைகிறாள்.

பாடல் 07

வாற பொழுதிலையோ ஆனையது
மும்மதமும் தான் பொழிந்து
கை மடித்து தான் குளறி – அரியாத்தை முன்பு
கொம்பன் வந்து நின்றதுவே
யானையைக்கண்டவுடன்
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அரியாத்தை அவ
கால் கை தடுமாறி நின்றாள்.
பாலை மரம் வீரை மரம்
வேலப்பணிக்கன் பெண்ஜாதி – அரியாத்தை அவ
படு மரத்தோடு நின்றாவே
காலாலே மண்ணை அள்ளி
தந்த வீர பத்திரனே
மால் மருக வேல் முருக – உன்
தஞ்சம் என முன் போட்டாள்
கற்புடையாள் நானாகில்
ஆனையடி ஆனையடி
ஆணமறி க்காரன் மகள்
ஆனை மயில் வாகனமே – உன்
கையைத்தான் நீட்டுமென்றாள்.
அந்த மொழி கேட்டவுடன்
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே – உன்
ஆனை கையைத்தான் நீட்டியதே
கையாலே கை பிடித்து
அஞ்சகலை நஞ்சையுண்ட
அஞ்சாத ஐங்கரனே
அன்பரே ஆதரவே – அதன் மேல்
கொடு முத்தல்லவோ
காலிலிரு தேமலல்லோ
யானையடி யானையடி
யானை மறி காரன் மகள்
ஆனை மயில் வாகனமே -உனது
காலிரண்டும் நற்தேமலல்லோ
பொல்லை எடுத்தல்லவோ
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ
போட்டாளே ஆனை முன்பு
பொல்லை எடுத்து என் கையிலே
ஆனை மத யானையது
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
நாச்சன் அரியாத்தை கையில்
பொற்புடனே தான் கொடுக்க
உன் காலைத் தா தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே – நானும்
கனத்த வடம் போட்டு இறுக்க
முன்னங்கால் தான் கிளப்பி
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
நாச்சன் அரியாத்தைக்கு
முடுக்கிட்டு நின்றதுவே
மான் வார்க்கயிறு எடுத்து
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ
மனங்குளிர போட்டிறுக்கி
முன்னங்கால் முடக்கு கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
நானயடியாள் பெண் பேதை – உன்
குப்பத்தில் பயந்து ஏற
முன்னங்கால் தான் மடிக்க
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
முன்னே நின்று தோள் பிடிக்க
உக் கோட்டைத் தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
வேலப்பணிக்கன் பெஞ்சாதி- யானையிட
குப்பத்தில் ஏறினாளே
செவியைத் தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
நானயடியாள் பெண் பேதை
துறட்டிதனை போட்டிறுக்க
செவியைத் தான் கொடுக்க
துறட்டிதனை போட்டிறுக்க
வேலப்பணிக்கன் பெஞ்சாதி அரியாத்தை
செப்பினாள் ஓர் வசனம்


தன் துணிச்சலாலும், தனது கற்பின் சிறப்பாலும் அரியாத்தை மதயானையை அடக்கி முடிக்கிறாள் – என்பதாக பாடல் முடிகிறது. வடக்கு நாட்டார் இலக்கியங்களில் ஒரு பெண்ணின் வீரம் கற்பு என்பவை இவ்வளவு விமர்சையாக தெரிவிக்கப்படுவது வேறெங்கிலும் இல்லை. மத யானையை அடக்கியதற்காக அரியாத்தை அரசவையில் சிறப்பிக்கப்படுகிறாள்.

பாடல் 08

வெள்ளை விரும்பித்தாளே
எங்களையாளும் சின்ன வன்னியர்
பெண்சாதி, அரியாத்தை தான் இருக்க
மேலாப்பு போடுவித்தாள்.

பதினெட்டு வரிசைகளும் பெற்றவள், வீடு திரும்புகிறாள். இது வரை வீரம் கொளித்த புராணம் – சூழ்ச்சிகளாலும் வஞ்சனைகளாலும் சூழப்படுகிறது . இருள் நிறைந்த வானில் அரியாத்தை என்னும் மின்மினியும் அடங்கிப்போகிறது. இடையிலே வரும் சில காரணங்கள் கர்ண பரம்பரைக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை .
அரியாத்தை வீடு திரும்புகிறாள், தன்னில் நிலை மாற்றங்களை உணரத்தொடங்குகிறாள் வழியில். அவளின் கண்கள் கடிப்பதாகவும் , கால்கள் என்றும் இல்லாதவாறு மிக சோர்வு அடைவதாகவும், கண்கள் இரண்டும் மயங்கிப்போவது போலவும், வாய் வரள்வதாகவும் ,வீடு செல்ல வழி தெரியவில்லை என்றும் கூறியவாறே குலதெய்வம் நாகதம்பிரானை துதித்துக்கொண்டே  இருண்டு போகிறாள். வழியிலேயே மடிந்து போகிறாள். இதற்க்கான காரணம் அரசவையில் யாரோ ஒரு பணிக்கன் , அரியாத்தை செய்தது ஆண் குலத்திற்கு அவமானமாக கருதி அவள் உண்ணும் வெற்றிலையில் நஞ்சு தடவி கொடுக்கிறான், – கர்ண பரம்பரைக்கதை. இருந்தும் எம்மவர் வரலாற்றில் இறப்பிற்க்கான சரியான காரணம் பதியப்படவில்லை. அது சரி இக்கால நவீன இறப்புகளுக்கே காரணம் தெரியாத பொழுது, அரியாத்தையின் இறப்பின் மர்மம் பெரிய பொருட்டல்ல. ஆனால் மரணத்தின் பின்னணியில் ஆண் வர்க்க மேலாதிக்கம் காரணம்செலுத்துகிறது என்பது மிக பெரிய அழுக்கே.
வேலப்பணிக்கருக்கு சேதி செல்லுகிறது. செய்தியை கேட்டவுடன் வேலப்பணிகரின் செய்கை தான் மற்றைய ஆண்களால் அவர்களின் வர்க்கத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கிறது. சேத்தி அறிந்த வேலப்பணிக்கர் அரியாத்தையுடன் உடன்கட்டை ஏற முடிவு செய்கிறார். இதனை அறிந்த மக்கள் அவனை ஒரு இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு அரியாத்தையை எரிக்க கொண்டு செல்கிறார்கள். கட்டுண்டு துன்பத்தால் துவண்ட வேலப்பணிக்கர்

பாடல் 09

கற்புடையாள் நீரானால்
என்னுயிரே கண்மணியே
எனக்கிணங்கும் நாயகியே – என்னுடைய
கையில் கட்டு தெறியாதோ
என உரைக்கிறான்.
கலங்கியழும் பொழுது வேலப்பணிக்கனுடைய
கைக்கட்டு தெறித்திட்டதே
கைக்கட்டு அறுந்து விட அரியாத்தையுடன் உடன்கட்டை ஏறுகிறான்
வேலப்பணிக்கன் என்னும் வீரன்.

இத்தோடு அரியாத்தை காதை முற்றுகிறது , கூடவே நாட்டார் இலக்கியங்களின் முதல் பாகம் நாட்டார் பாடல்களும் நிறுத்தப்பட்டு மற்றைய பாகங்களுக்குள் அடுத்ததடுத்த தொடர்களில் செல்லலாம் என எண்ணுகிறேன்.

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 -மணல் வாசம்

மணல், காற்றில் கலந்து வீசும் கரையோரங்களை தாண்டி தெரியும் அந்த குறுங்குடில்தான் அந்த மீனவனின் இல்லம். செங்கற்களால் அடுக்கியும் மண்ணால் அப்பியும் சீரின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த குடில். மீனவனும் அவன் மனைவியும் மட்டும்தான். ஊரார் கூடி கிராம நடுவில் உள்ள அந்தோனியார் கோயிலில் அவர்களுக்கு ஒரு மாதம் முன்தான் திருமணம் நிறைவேறியது. மன்னார் மாவட்ட கிராமங்களில் எல்லாம் காற்றில் கிருமிகளே இருக்காது. உப்பின் உவர்ப்பு கிருமிகளை இல்லாதொழித்து விடுகின்றது. அங்கு பரவியிருந்த தேவ ஒளி எல்லார் மனைகளிலும் அன்பும் சந்தோஷமும் பெருக ஆசி செய்துகொண்டிருந்தது. அந்த வீடும் அப்படித்தான். தேவ ஒளியில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
 
காலை புலர்ந்து விட்டிருந்தது. புலம்பெயர்ந்து வருகின்ற பெயர்தெரியாத வெளிநாட்டு பறவைகளின் விசித்திரமான கானம் அவன் காதுகளில் தேவகானத்தை மீட்டிக்கொண்டிருந்தது.

என்னடி புள்ளே விடிஞ்சல்லே போச்சுது
செல்ல வேணுமல்லே மீன் பிடிக்க
இன்னமும் நித்திரை கொள்ளலாமோ நீயும்
எழுந்திரு புள்ளே பொழுது புலந்திருச்சு

என்று உப்புக்காற்றை சுவாசித்து சுவாசித்து வரண்டு போன குரலால், முன்னைய நாள் காலை குடில் எல்லாம் சுற்றிக் காயப்போட்ட கருவாட்டுத் துண்டுகளை எடுத்துப் பக்குவமாய் குடிலுக்குள் வைப்பதில் காலம் தாழ்த்தி உறங்கிய மனைவியின் கால்களை உலுப்பி உறக்கத்தில் இருந்து விடுபட வழி செய்கிறான். ஏதோ பழகிப்போன பறவையின் கானம் போலே இருக்கிறதே என்ற யோசனையுடன் கண்களை கசக்கி எழுந்திருக்கிறாள் அவள், மீனவன் மனைவி. எழுந்தவள் தன்னை எழுப்பிய அந்த கானத்திற்குரிய பழகிய பறவை அவள் கணவன் என்று தெரிந்தவுடன் தன்னை சுதாரித்துக்கொண்டு

எழுந்திட்டேன் அத்தானே கொஞ்சம் பொறு
கோப்பித்தண்ணி வச்சுதருவன் ஐயா
தொழுவுங்கோ நம்மை படைத்தவனை
தினம் வாழ வழிவகை தந்தத்துக்கு

இன்றைய நாளில் நடந்ததொன்றும் அவளுக்கு புதுமை இல்லை. திருமணம் ஆகி ஒரே ஒரு மாதம் தான் ஆகின்றது . இருந்தும் கணவனிடம் எப்படி பழகிக்கொள்வது என்று மிக லாவகமாக அறிந்திருந்தாள் அவள். கணவரின் கோபத்துக்கு ஆளாகாமல் அவரை வேறு சில விடயங்களில் திசைதிருப்புவதன் மூலம் தன் காரியங்களை முடித்துக்கொள்ளலாம் என்று அவள் நன்றாகவே தெரிந்திருந்தாள். அதற்காக அவள் சொல்லும் காரணம் கூட உவப்பளிக்கிறது. இறைவன் மீதுள்ள நம்பிக்கையையும் இவ்வாழ்வு அவனால் அருளப்பட்டதே என்ற உண்மையையும் அவள் சரியாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கின்றாள். அவனை தொழுவது இன்றியமையாதது என்று அவனிடம் கூறி, தான் தேநீர் சமைத்து தருவதாகவும் கூறுகின்றாள் . மன்னாரில் அக்காலத்தில் கோப்பித்தண்ணி பழக்கம் நிலவியமை இதில் அடிக்கோடு இடப்படவேண்டியதாகும் .

கட்டு மரம் கொண்டு கடலோரம் போகணும்
கெதியாக் கொண்டுவா பிள்ளை நீயும்
கட்டுவலை பாய்ச்சக் கனியமு மாச்சுது
மீனெழுந்து வரும் நேரமு மாச்சு

 
தன்னை மெத்தப்படுத்த அவள் செய்யும் மாயவேலை தான் இது எல்லாம் என புரிந்து வைத்திருந்த கணவன் , எதையும் வெளிப்படுத்தாமல் வார்த்தைகளை மெதுவாக இறுக்கி கொள்கிறான். நேரடியாக அவளை பேசிக்கொள்ளாமல் , பொய் காரணமும் சொல்லாமல் தன் நிலையை வெளிப்படுத்துகிறான். இரவெல்லாம் ஆழ் கடலில் தூங்கிக்கொண்டிருக்கின்ற மீன்களெல்லாம் சூரிய ஒளிக்காய் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது சீக்கிரப்படுத்திக்கொள் என்று நடுமொழி உரைக்கிறான்.

கோப்பித்தண்ணி ஊற்றி வச்சிருக்கே னத்தான்
எடுத்து குடியுங்கோ தாக்கம் தீர
கோபப்படாமலே போகும் போது ஒரு
முத்தமொன்று தாங்கோ ஆசை தீர

உடனே விழித்துக்கொண்ட மனைவி, கணவனின் நியாயமான கோபத்துக்கு ஆளாகிக் கொள்ளாமல் இருக்க கோப்பித்தண்ணி ஊற்றி முடிந்தது என்றும் உங்கள் கோபம் தீர குடித்துக் கொள்ளுங்கள் என்றும் சாடையாக கூறுகின்றாள். அவள் கூறும் தாகம் தீர என்பது அவனின் கோபத்தை தீர்க்கவாகவே இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அவன் கோபம் தீர்ந்ததா இல்லையா என்று அறிந்து கொள்ளவும் அவள் பெண்மையை ஆற்றிக்கொள்ளவும் முத்தம் கேட்கும் விதம் அலாதியானது. சந்தம் கூட கேட்பது போல ஆசை தீர முத்தம் கோபப்படாமல் தாருங்கள் என்று கவிதை மொழியை மேலும் மேலும் அடுக்குகிறாள்.

முத்தமொன்று தந்தேன் பத்தரை மாற்றுப்
பசும் பொன்னேத்திரு திர வியமே
முத்துப்போல பிள்ளைகள் பெற்றிடுவோம்
தினம் மீன் பிடிக்க கற்று கொடுத்திடுவோம்.

முத்தம் கேட்டவுடன் உருகிப்போன அவன் மனதோடு கோபமும் பறந்தே போகிறது. அவளை அவன் விழிக்கும் விதம் கடலோர சமூகத்தில் மக்களின் மனநிலையையும் கணவன் மனைவி என்ற உறவின் மீது  அவர்கொண்டுள்ள புனிதத்துவத்தையும் உயர்த்திக்கொள்கிறது. தன் மனைவியை பசும் பொன்னாக உருவகப்படுத்திடும் அழகு அவன் பாசத்தின் உச்சம். அதையும் மீறி முத்துப் போல பிள்ளைகள் என்று கூறும் இடத்தில் கடலோர வாடையுடன் கவித்துவம் மேலோங்குகிறது. கடலோரமக்களின் அரும்பெரும் பொக்கிஷம் அவர்களிடம் கிடைக்கும் ஆழ் கடல் முத்தேயாகும். தங்கள் பிள்ளையும் அந்த ஆழ்கடல் முத்தே என விழித்தல், ஒரு தந்தை கண்டுடெடுக்கக் கூடிய முத்து அவர் பிள்ளைதான் என்ற கூரிய உண்மையை வெளிப்படுத்திடுகிறது. கூடவே பிள்ளையையும் தன் வழியே மீன் பிடித்தலுக்குள் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஓர்  ஆணின்  நியாயமான ஆசையும் காட்டப்பட்டுள்ளது.
 

மீன் பிடிக்க கற்றுக் கொடுத்திங்களா மென்றால்
அறிவு மலருமோ சொல்லுங்க ளத்தான்
ஈனப் பிறவிகள் நம்மளைப் போ லல்ல
கல்விமானா யாமும் வளர்ந்திடுவோம்

இந்த வரிகள் கவனிக்க வேண்டிய சமூக பிரச்சனைகள் சிலவற்றை படம் போட்டு காட்டுகிறது. கூடவே அந்நாளின் சமூக சிந்தனைகளையும் கூறுகின்றது. கணவன் மகனை மீனவனாக்க வேண்டும் என்று ஆசையை மனதுள் வளர்த்து கொள்கிறான், முத்தம் கொடுத்த உவகையுடன் அதை வெளிப்படுத்தியும் விடுகிறான். இதில் அவன் நோக்கம் இருவிதமான கண்ணோட்டத்துடன் ஆராயப்படவேண்டியதாகும். அக்கால சமூக கட்டமைப்பு மீனவனை மீனவனாகவே அழுத்திக்கொண்டு செல்லும் போக்குடையது. அப்போக்கினை ஏற்றுக்கொண்டவனாகவும் அதே வழி பயணிப்பவனாகவும் காணப்படுகிறான் கணவன். இன்னொரு பார்வையில் அவனை தன் மரபினை, வழித்தோன்றல்களை நினைவில் விழுத்தி அவனை ஒரு மீனவனாக்கும் நோக்கம் கொண்டவனாகவும் சித்தரிக்கலாம்.
ஆனால் மனைவியின் பார்வை எழுச்சியுடையது. அக்கால பெண்களின் மனநிலையும் கருத்து நிலைகளும் பிரமிக்கத்தக்கனவாக இருந்திருக்கின்றது. ஒரு ஆணாக கணவனானவன் தனது சமூக கட்டுப்பாட்டை மீறத் துணிவற்றவனாய் இருக்கும் போது  ஒரு பெண்ணாக அவள் சிந்தனை மறுமலர்ச்சி காண்கிறது. இன்றைய மீனவ சமூகத்தில் இருந்து  நாம் அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் எத்தனையோ  சாதனையாளர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த மனைவி போல் எத்தனையோ பெண்களினது தூரநோக்கானதும் துணிவானதுமான சிந்தனையே முதன்மைக் காரணம் எனலாம். தன் மகன் மீனவனாக வருவதனால் அவன் அறிவில் மேம்பாடு வருமோ வராதோ என கவலையுறுகிறாள் மனைவி. சீரிய கல்வியை தனது பிள்ளைக்கு வழங்குவதால் தன்னைப்போன்று, வெயில், மழை, கடும் காற்று என சீரில்லா காலநிலைகளின்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து நிச்சயமில்லாத கடற்றொழிலில் ஈடுபட்டு, இன்னுயிரைப் பணயம் வைத்து,  வலையில் சிக்குவதில் இருந்து கையில் சிக்குவதை கண்ணும் காரியமுமாய் பார்த்து சேமிக்க திண்டாடி அலைகளைப்போலே அலைவுறும் கிளிஞ்சல் வாழ்க்கை வேண்டாம், கல்வி கற்றவர்களாக இஸ்திரமான நிலையில் நாமும் வாழவேண்டும் என்று மனதின் வலிகளை கூறும் மொழிகள் நெகிழ்ச்சி ஊட்டுவனவாகின்றது.
 

சரிப்பிள்ளை போயிட்டு வருகிறேன் பால்கஞ்சி
கலயத்தை கொண்ட நீ வந்துவிடு
பொரிச்ச கருவாடும் சேர்த்துக்கொண்டே வந்து
கஞ்சி குடிக்கயில தந்து விடு

அவளின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவனாய், மனைவியின் கனவுகளை கலைக்க முடியாதவனாய் கதையின் போக்கை மாற்றுகிறான். உண்மையில் மாற்றவேண்டிய சூழ் நிலையில் இருக்கிறான். நாழிகள் கடந்து கொண்டே இருந்தன அவன் வேலைக்கு புறப்பட.. அவன் அவளிடம் பால்கஞ்சியும் பொரித்த கருவாடும் மதிய உணவுக்காக கேட்கிறான்.

சரியாத்தான் வலைபோட செல்லுங்கோ கஞ்சி
கலயத்தை கொண்டு நான் வந்திடுவன்
பொரிச்ச கருவாடும் அரைச்ச துவையலும்
கஞ்சி குடிக்கயில தந்திடுவன்

எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மனைவியாக கருவாடும் துவையலும் கஞ்சியும் கொண்டுவருவதாக கூறுகின்றாள். இதோடு மனைவியின் ஏக்கத்தை உணர்ந்த கணவனும், கணவனின் மனநிலையைஉணர்ந்த மனைவியாகவும் உடல்கள் பிரிய உணர்வுகாளால் பிணைந்திருக்கின்ற அந்த கடலோர குடிசையின் காலைப்பொழுது இதுவாகும்.
நிலையளவில் தாழ்ந்தவர்களாக சித்தரித்துக்கொள்ளும் அவர்கள் மனதளவில் உறுதியானவர்களாயும் அன்பளவில் இறுக்ககட்டுண்டவர்களாயும் காட்டிய அற்புத படைப்பு இந்த நாட்டார் பாடலாகும். மன்னார் என்ற அழகியல் இந்த பாடலில் இழையோடியுள்ளதை உணர்ந்துகொள்ளக்கூடியவாறு இருக்கின்றது.

வடக்கு நாட்டார் இலக்கியங்கள்-அரிவி வெட்டு

ஒரு பேரூந்திலோ  அல்லது மோட்டார் சைக்கிளிலோ நகர்ப்புற வீதிகளில் செல்லும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் வித்தியாசமும் மாற்றமும் உணர்வீர்கள். விதவிதமான வான்முட்டும் கட்டடங்களும் தொழில்நுட்பமும் எம்மைச்சூழ விரிந்து கிடந்தாலும் நீண்ட முடிவில்லா வயல்களையும், பனந்தோப்புக்களையும், கொட்டில் வீடுகளையும் அதில் கொத்தி திரியும் கோழிகளையும் பார்க்கும்போது மனதின் ஓரத்தில் ஆனந்தமாய் இனம்தெரியாத ஒரு பூரிப்புவரும். கலை  இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இது கூடுதல் குதூகலம்  என்பதை மறுத்து கூறமுடியாது.
தொலைதூர புகைவண்டிப் பயணங்களில் எமது புகைப்படக் கருவிகள் அதிகம் படம் பிடிப்பது கிராமங்களையே. தேடித் தேடி சேர்த்துக்கொள்ளும் புகைப்படங்களில் கவனம் செலுத்திய நாங்கள் இதம் தந்த தென்றலையும், பரந்து விரிந்த வயல் தேசத்தில் கையில் மண்வெட்டியுடன் வியர்வையை  உரமிட்டு எங்கள் உணவுக்காக உழைக்கும் விவசாயியின் வாழ்வியலையும் இன்னும் சமூகவலைத்தளங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அச்சமூக வலை தளங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களின் நாளாந்தத்தையும் கவனிக்க தவறிவிடுகிறோம். இவ்வாறு தவறி விடப்பட்டவையே எதிர்காலத்தில் எங்கள் அடையாளங்களை கேள்விக்குறியாக்கி விடப்போகின்றன.
நாட்டார் வழக்காற்றியல் என்பதை அறிமுகம் செய்து உள்நுழையவேண்டிய துர் அதிஷ்ட நிலை என் எழுத்துக்களுக்கு ஏற்பட்டுள்ளதை நினைத்து ஒருகணம் வருந்திக்கொள்கிறேன். நாட்டார் இலக்கியம் என்பதை வரையறுப்பதில் காலம் காலமாக வேற்றுமையான எண்ணப்பாடுகள் காணப்பட்டு வருகின்றது. வரலாற்றில் நாட்டார் இலக்கியங்களை ஆராய்ந்தவர்கள் அக்காலநிலைக்கும் தங்கள் சுவாத்தியத்திற்கும் இணங்க அதனை வரைவிலக்கணப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள். இருந்தும் எல்லோரையும் பொதுமைப்படுத்தி அவர்களின் கருத்தாழங்கள் விடயப் பரப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அறிஞர் போக்ஸ்

புராதனமாகவோ அல்லது நாகரிகம் வாய்ந்ததாகவோ ஒரு சமூகப்பகுதி அல்லது உறவுக்குழுக்கள் அல்லது பழங்குடி மக்கள் அல்லது ஒரு இனம் அல்லது ஒரு நாட்டு மக்களின் வழக்காற்றுத்தொகுதியே நாட்டார் வழக்காற்றியல் என வரையறைசெய்கிறார்.

இந்த நாட்டார் வழக்காற்றியல் இரு பெரும் பிரிவாக பிரிகின்றது.

  1. நாட்டார் இலக்கியம்

2.நாட்டார் நம்பிக்கைகள்
இந்த தொடர் நாட்டார் இலக்கியம் என்ற பெரும் பிரிவையே முழு நோக்காக கொண்டு எழுதப்படுகிறது. வடக்கு தமிழ் மக்களின் வரலாற்று பாரம்பரியம் தொன்மையானது. நாட்டார் இலக்கியத்திற்குள்அவர்களின் வரலாற்று வாழ்க்கை முறையை ஆராய்வது மிக திருத்தமான செயலாகும்.
நாட்டார் இலக்கியம் பொதுவாக நாட்டுப்புற கதைகள் , நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணக் கதைகள், கூத்து என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை வாய்மொழி வழக்காறு உடையனவையாகவே காணப்படுகின்றன. நாட்டார் இலக்கியம் என்று வரும்போதே நாட்டாரியல் மேலோங்கி நிற்கிறது. ஆதிகால வடக்கு மக்களின் சூழலியல் சார்ந்த அம்சங்கள் வயலும் வயல்சார்ந்த இடங்களுமாக இருந்தமையால்  அம்மக்கள் கல்வித்துறையில் பெரும்பான்மை  நாட்டம் செலுத்த தடையாக இருந்தது. இதனால் எழுத்து மொழி இலக்கியங்களை விட வாய் மொழி இலக்கியங்களிலேயே அதிக ஈடுபாடு காட்டியிருந்தார்கள் அம்மக்கள். வடக்கு பகுதியின் நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவை பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் கூத்து, கதைப்பாடல்களாகவும் அமைந்துள்ளன.
வடக்கின் நாட்டார் இலக்கியங்களை இரசிக்க வாசகர்களை இன்றிலிருந்து மிகவேகமாக பின்னோக்கி ஒருமுறை அழைத்துச் செல்வோம்……
untitled-design-20
அதோ வயல்காணிகள் தெரிகின்றன, அளந்து மண் கோதி இடப்பட்ட வரம்புகள், எங்கு பார்த்தாலும் சலசலக்கும் வாய்க்கால்கள், வாய்க்கால்களில் நீந்தி விளையாடும் கச்சல், வரால், கெளிறு, மங்கன்,  மசரி,  உழுவைகள், கொஞ்ச தூரம் தள்ளி மதகு அருகே தூண்டிலோடு சில நடுத்தர வயதுகாரர்கள். வாய்க்கால் திரும்பும் இடம் ஓலையால் நேர்த்தியாக பின்னப்பட்டு களிமண் சுவர்கள் இடப்பட்டு வெளியே குந்துடன் சிறிய அளவான வீடு, வீட்டின் முன்னே ஓலைப்பின்னலினாலான கூடாரம் கோழிகளுக்கும் சாவல்களுக்கும், விவசாயத்திற்குச்செல்ல கணவன் தயாராகி விரிந்து செழித்த ஆலமரத்தின் கீழ் அடிஅகன்ற முடி கூரான பிள்ளையார் சிலை முன்

“முடியோடு தேங்காய் கையில் எடுத்தோம்
மூத்தோர் கணபதியை தோத்திரம் செய்தோம்.”  என தேங்காய் உடைப்பார்.

வீட்டோடு அருகே உள்ள வயலுக்கு சென்றவன் ஏர்பூட்டி உழ முன்…..

“பட்டி பெருகவேணும் தம்பிரானே
பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே……
மேழி பெருகவேணும் தம்பிரானே
மாரிமழை பெய்யவேணும் தம்பிரானே ………”

என மழை சிறப்பாக பெய்யவேண்டும் என வருண பகவானை வணங்கிக்கொள்வார்கள்.
என்னதான் மழையும் மனிதர்களும் ஒத்துழைத்தாலும் விவசாயியின் பெரும் நம்பிக்கை அவன் எருதிலேயே இருக்கும். எருதை சமாதானப்படுத்தி வேலை செய்யவைக்க

“சார்பார்த்த கள்ளனடா …..
தாய்வார்த்த கேளனடா …..
பாரக்கலப்பையடா செல்லனுக்கு ….
பாரமேத்தத் தோணுதடா……
வரம்போ தலகாணி செல்லனுக்கு ……
வாய்க்காலோ பஞ்சுமெத்த ……. ”

என்று பெற்ற பிள்ளையை போல தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவார்கள்.
 
இப்பிடி பிள்ளைபோல் வளர்த்த உழவு மாடுகள் இடைக்கிடை கட்டவிழ்த்து காடுகளுக்கிடையே மறைந்து விடுவதுண்டு. இப்பிடி தொலைந்த மாடுகளை தேடி காடு மேடுகளெல்லாம் அலையவேண்டி வரும். அலையும் நேரங்களில் தன்னை பாதுகாத்துக் கொள்ள உடற்கட்டு மந்திரம் சொல்லிக்கொள்வார்கள். ஊர் எல்லையெங்கும் காவலிருக்கும் ஐயனாருக்கு நல்ல கேட்டித் தடி வெட்டி சாத்தி வைப்பார்கள். இதை வதனமார் சிந்தில் வரும் பாடல் வரிகளில்

“நாவியும் கீரியும் நுழையாத குருமனில
நாங்கள் நுழைந்தொரு குரும் பொல்லு வெட்டி
பொல்லு நல்ல பொல்லு, வெட்டிக் கட்டிய பொல்லு
மட்டடக்கும் பொல்லு இது ……”

என்றும்

” அட்ட திசை எல்லாம் கவரிவீச
ஆடர்ந்து சில மனிதர் வந்தடி பணிந்தேத்த
மட்டுலவு மச்சிலாய் வாளுமையானாரை
மலரடிகளென்று மனதிலயராமே …..”

என்னும்

“சல்லியொரு கொம்பு முழவதிர
வெள்ளையானை மேலேறிவரும்
ஆதி சடவைக்குளம் வாளுமையானரே …..”

என்றும் வரும் வரிகள் அவர்களின் உணர்வுகளை இனிமையான சந்தத்துடன் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறான பாடல்கள் வடக்கில் இன்னும் வழக்கில் உள்ளன.
அரிவு வெட்டும் காலம் வந்தாலே கேளிக்கைகளுக்கும் நையாண்டிகளுக்கும் குறைவே இருக்காது, அந்த மக்களின் மனங்களைப்போலவே வேளாண்மையும் என்றும் செழித்தே இருக்கும். இந்தக் காலங்களில் பாடப்படும் பள்ளு பாடல்கள் ரசனை மிக்கவை.  அரிவு வெட்டும் கத்தியின் சிறப்புக்களை பாடும் போது

“மட்டு கருக்காலே அரிவாளை தீட்டி
மாவிலங்கம் பிடி தன்னில் இறுக்கி
வெட்டும் பிடியை சிரிக்கவே வெட்டி
வெள்ளித்தகட்டாலே விரல் கூட்டமிட்டு ….”

என பாடுகின்றனர்.
 
மட்டு என்பது மட்டக்கிளப்பின் சுருக்கம். அங்கிருந்து பெறப்பட்ட தாக்கத்தி, ஒன்றரை அல்லது இரண்டங்குல அகலமான முனை சுருட்டிய வளைவானது. இந்த கத்தி வீசினால் இரண்டு அல்லது மூன்று வீச்சுக்கு கைநிறையும். தொடர்ந்து உப்பட்டி விழும். முதல் மூன்று கத்தி வீச்சு நான்கு உப்பட்டி விழல் என்ற தொழில் சந்தத்தில் அருவி வெட்டு பாடல்கள் அமைந்திருப்பதை காணலாம்.
1.மாட்டு கருக்காலே 2.அரிவாளைத் தீட்டி 3. மாவிலங்கம்படி என மூன்று வீச்சுகளோடு நான்காவது சொல்லுக்கு உப்பட்டி கீழே விழும். இந்த ஒழுங்கு பாடல் தொடங்கி முடியும் மட்டும் மாறாமல் பேணப்படும்.

“கூழாவடியாம் குளிர்ந்த நிழலாம்
குளக்கட்டு நீளம் புளியாமினலாம் ……
யாரடா எந்தன் குளக்கட்டு தனிலே ?….
நாங்கள்தான் அந்த சிந்து கவி பாடியோர் ….”

என்று தொடர்ந்து செல்லும்.
அரிவு வெட்டு முடிந்தது நெல்லெல்லாம் வீட்டு முற்றத்திலே காய விடுகிறார்கள். காயவிட்டால் குருவி விடுமா? குருவியின் தொல்லையை பாடுகிறார்கள்

“கோலமலை நீலமலை குந்துமலை கண்டல்
கொக்கிளாய் பரந்தமலை மெம்மலை குறுந்தேர்
கன்னியங் குமரிமலை ஓதியமலையேகி
பொதியமலை நாயாறு தட்டாமலை குருவி முதலாய்
தோற்றமுள்ள கந்தளாய் குளமேவு மலையினொரு
சோல்லரிய பூநேரி சூழுமலையாளம்
குருவிக்கிளை பறந்து வருதே …….”

இதெல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது நாம் இப்போது உலவிக்கொண்டிருக்கும் கிராமத்துள் என்று சொற்களால் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மனம் பண்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு கற்பனை பார்வையிலே இவ்வளவு பண்படல் என்றால் நாட்டார் வழக்கியலும் நாட்டார் இலக்கியங்களும் அதனுள் உள்ள நாட்டார் பாடல்களும் எவ்வளவு பண்பட்டவை என்பது சொல்லிலடங்கா. இன்னும் நாட்டார் பாடல்களுடனும் நாட்டார் இலக்கியத்துடனும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
மீண்டும் இந்த இயந்திர நூற்றாண்டுக்குள் வந்துவிடுங்கள் இன்னும் எம்மை விட்டு உலக இலக்கியங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
Image Credits : Sajath Nijamudeen

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகம்

இன்றைய காலகட்டம் இரண்டாயிரம் ஆண்டுகள் பரிணாம உலகின் விளைவாகும். உலக அரங்கில் நடந்தேறும் எல்லா நிகழ்வுகளுக்கு பின்னும் மிக வலிதான வரலாற்றுப் பின்னணி மேலோங்கி நிற்கிறது. வலியது பிழைத்தல் என்ற கொள்கையின் உச்சம் தான் இந்த இருபத்தோராவது நூற்றாண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. சாதாரண எறும்புகளின் சேமிப்பு தொடக்கம் ரோபோக்களின் உற்பத்தி வரை எல்லாமே தக்கன பிழைத்தல் தான். இன்றைய சமூகத்தில் ஒரு நிலையான இடத்தினைத்  தேடல் என்பது மிகச் சிரமமான விடயம். எத்தனையோ கலாசாரங்கள் தோன்றி அழிந்து நாமம் இல்லாமலே போன வரலாறுகள் இந்த உலகின் பக்கங்களின் கறைபடிந்த எழுத்துக்களாக பதியப்படுள்ளன. நான் முதலே கூறிய வலிதான வரலாற்று பின்னணி, கரைந்து போன கலாசாரங்களுக்கும் உண்டு. இருந்தும், அக்கலாச்சாரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்ன? இன்னும் எத்தனை கலாச்சாரங்கள் இவ்வாறு அழிந்து ஒழிந்து போய்விடும் ? இதை மீட்க அல்லது தடுக்க வழி இல்லையா ?
 
பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ உகந்ததென கண்டுபிடிக்கப்பட்ட ஒரே கிரகம் பூமி. அதில் ஏற்படும் அதீத மக்கள் வளர்ச்சியும் பொதுப்பண்பாட்டு நிலையும் தொன்மையான பண்பாட்டு கலாச்சாரங்களும் மிகுந்த சவாலாக காணப்படுகின்றன. ஒருசில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த  ஆராய்விற்கு அல்லது இப்படியான ஒரு விழிப்புணர்வு கட்டுரைக்கான தேவைப்பாடு காணப்படவில்லை. உலகின் வளர்ச்சித்தன்மை வெளிப்பட்டது என்பது உண்மைதான் ஆனால் பண்பாட்டு கலாச்சாரங்களை மழுங்கடிக்கும் அளவு அதி தீவிரமான முறையில் அது காணப்படவில்லை. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற வலை எப்போது உலகின் மூலை  முடுக்கெல்லாம் தனது ஆக்கிரமிப்பால் போர்த்தி தன் வசம் இழுத்துக்கொண்டதோ அன்றிலிருந்தே பொதுப்பண்பாட்டுக் கொள்கை விகாரமடையத் தொடங்கியது. அதுவரை தங்கள்  சுதேசிய கலாச்சாரங்களுக்குள் இருந்து பண்பட்ட சமூகம், ஒரு திறந்த கட்டுப்பாடு அற்ற பண்பாட்டு அலையில் சிக்கிக்கொள்கிறது. ஒரு குறிப்பிட்டகாலம் வரை படிப்பறிவு மட்டம் கூடிய கூட்டத்துக்குள் இருந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், பாமரன் வரை கொண்டு செல்லப்பட்டது. இந்த பரவலாக்கம் சரி பிழை என்பதை மீறி பண்பாட்டின் மீதான அதன் தாக்கம் என்பது மறையான பாதிப்பாகவே காணப்படுகிறது.
இலங்கையின் ஆதிக்குடிகள் எனப்படும் இயக்கரும் நாகரும் வாழ்ந்த பழம்பெரும் நிலப்பரப்பு இலங்கை வடக்காகும். வடக்கின் மண்ணுக்கு உள்ள அதே வரலாற்று முக்கியத்துவம் வடக்கு மக்களுக்கும் உண்டு. இன்றைய உலக அரங்கில் இலங்கைத்தமிழர் என்ற அடையாளம் ஈழ யுத்தத்தால் ஏற்பட்டதே. கொஞ்சம் சில இருபது ஆண்டுகளில் இருந்து தொடங்கினால் வடக்கு தமிழனின் நிலைப்பாடு வேறு. எமது வரலாற்று பின்னணி,எமது இலக்கிய பதிவுகள் , எமது சாதனைகள் , என்பதைப்பற்றி நொடிகூட நினைக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் அவர்கள். அவர்கள் எண்ணம் எல்லாம் அவர்களுக்கான இருப்பிடம் தான். அவர்கள் தங்கள் அடையாளங்களை தேடிக்கொள்ள முற்படவில்லை அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதே பெரும் போராட்டமாக இருந்தது. உலகம் இலவச கணனி இணைய இணைப்பை வழங்கிக்கொண்டிருந்த காலம் பனம் காயில் உடல் தேய்த்து சீனியில்லாமல் வெறும் தண்ணீர் குடித்திருந்த வடுவான காலம் வடக்கு மக்களினது. இந்த போராட்ட காலம் அவர்களுக்கு உயிரை பாதுகாத்து கொள்வதில் போனதே ஒழிய வரலாற்றை கடத்துவதில் கவனம் செலுத்த தோன்றியதே இல்லை. இதில் வடக்கு மக்களுக்கு எந்த பழியும் சாராது. அவர்களில் நிலை அது. எந்த சமூகமும் இவ்வாறான ஒரு நிலையில் தங்கள் இருப்பை உறுதிசெய்யுமே தவிர வேறு நோக்கங்களில் ஈடுபடாது. இந்த இக்கட்டான நிலை, இதில் கடந்து சென்ற காலங்கள் உலக அரங்கிற்கும் வடக்கு தமிழருக்குமான ஒரு விரிசலை ஏற்படுத்தியது .
(c1.staticflickr.com)
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி வடக்குத் தமிழரின் வரலாற்று இருப்பை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. இன்றைய தலைமுறையினருக்கு சரியான வரலாற்றுப் பண்பாடுகள் கடத்தப்படவில்லை. இந்த கடத்தப்படாத பண்பாட்டு விழுமியங்கள் போன தலைமுறையினரோடு முடிந்து போவது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும். கடத்த இயலாமல் போன வடக்கு தமிழரின் பண்பாட்டு கலாசாரங்கள் முந்தைய தலைமுறையினரோடு தேக்கி வைக்கப்பட, இன்றைய சமூகத்தினர் இடையே ஒரு பண்பாட்டு வெறுமை தோன்றுகின்றது. இந்த பண்பாட்டு வெறுமை பரவலாக இருந்த காலத்தில்தான் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அவர்கள் கைகளில் வந்தது. இந்த தொழில்நுட்பம் பரப்பிய பொதுப்பண்பாடே இன்றைய  தலைமுறையினரால் எதிர்கொள்ளப்பட்ட  முதலாவது பண்பாட்டுக் கொள்கையாகும். பொதுப்பண்பாட்டில் உள்ள வெளி, அதில் உள்ள சுவாத்தியம் இன்றைய தலைமுறையினரின் எண்ணஓட்டத்திற்கு ஏதுவாக இருந்ததால் அதில் அவர்கள் தொற்றிக்கொண்டனர் . ஆகையால் இதற்கு இன்றைய தலைமுறையினரையும் குறை சொல்லமுடியாது.
இந்த யார் பொறுப்பு கூறுவது என்ற போராட்டம் இன்னும் கால இடைவெளியையும் விமர்சனங்களையும் பொதுப்பண்பாட்டின் மேலதிக ஊடுருவலையும் அதிகரிக்குமே தவிர வேகமான இந்த காலஓட்டத்தில் எந்த பயனுள்ள விடயத்தையும் முன்வைக்காது. மேலும் மேலும் உலக அரங்கில் வடக்கு தமிழரை பின்னோக்கி நகர்த்தும் சுயஇழிவுச்செயலே இதுவாகும். இதிலிருந்து விடுபட்டு எமது இருப்பை உறுதி செய்துகொள்ள போனதலைமுறையினர் வரலாற்று பண்பாட்டினை இந்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்துவதோடு இந்த தலைமுறையினர் பண்பாட்டு தேடலை அதிகரித்து ஆவணப்படுத்தவேண்டிய வழிமுறையே சரியானதாகும். இதில் ஒவ்வொரு வடக்கு வாழ் தமிழனும் தனக்கான பங்கினை சரிவர செய்வதன் மூலம் தொலைந்து போன பண்பாட்டு கலாசாரங்களை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
இந்த பண்பாடு கலாசாரம் என்பன எதன் மூலம் கடத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரே ஏற்றுக்கொள்ளத்தக்க பதில் இலக்கியங்கள் தான். இற்றைக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி தமிழன் வாழ்ந்தான்என்னும் வரலாறு, வாய்வழி எமக்கு கிடைக்கப்பட்டது இல்லை. தமிழர் வரலாற்றை இன்று கூறுகிறோம் என்றால் அன்று இப்படி இருந்தோம் , எங்களிடம் இவ்வளவு தேசம் இருந்தது, எம்மிடம் உலகையாண்ட படைகளும், தேவரும், அரக்கரும், பாய்ந்தோடும் முப்படையும் இருந்தது என்று கூவிக்கொள்கிறோம் என்றால் அதற்கு காரணம் எம் இலக்கியங்களே. இன்றைய காலத்தில் தமிழுக்கென சிறப்பிடம் இருக்கின்றது என்றால் அதற்கு இந்திய இலக்கியங்களே மூலம். ஒரு மொழியின் செம்மை , அதன் தொன்மை எல்லாவற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஒரே விளக்கு இலக்கியங்கள் தான். இவ்வளவு சிறப்பு ஏன் இலக்கியங்களுக்கு என்று பார்க்கப்போனால் , அது இன்றைய நிதர்சன நிலைக்கு ஒரு முறை திரும்பிப் பார்க்கச்சொல்கிறது.
 
இன்றைய நாளில் நீங்கள் என்ன எழுதுகிறீர்கள்? அதிகம் புனைவுகளையா? அதிகம் சுயசரிதத்தையா? பொதுவான விடை சுயசரிதமாகத்தான் இருக்கும். கூடப்போனால் புனைவு கலந்த சுயசரிதம். இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையினரின் எழுத்துக்கள் எதைநோக்கி இருக்கின்றன என்ற கேள்வியே முன்னைய கேள்வியின் பதிலாகும். இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.
இக்கட்டுரைத் தொடர் வடக்கின் நாட்டார் இலக்கியங்களைப் பற்றியது. வடக்கு மக்களிடையே ஏற்பட்ட விரிசல்களில் தொலைந்து போனதையும் , விரிசல்களால் உண்டானதையும்பற்றியதே இக்கட்டுரை. எனவே எனது இக்கட்டுரை ஆராய்ச்சி கட்டுரை இல்லை. என் தேடல்களின் சாராம்சம் . நான், இங்கே முதலில் கூறிய இன்றைய தலைமுறை பயிர்தான். வடக்கின்  இலக்கியம் சம்பந்தமான தேடல்களுள் நான்  தேற்றியவற்றைத்தான் இனி வரும் கட்டுரைகளில் தொகுக்க உள்ளேன். இதை தொடராக எழுதலாம் என்ற கோரிக்கையில் முதல் பாகமாக “தொடங்க முன் ” என்று தொடங்கி இருக்கிறேன். இதன் விமர்சனங்களில் பயிர் வாடிவிடப்போவதில்லை. எல்லாமே எனக்கிட்ட உரங்கள்தான். மிகவிரைவில் இரண்டாவது தொகுப்புடன் சந்திக்கிறேன்
தொடரும்…