வடக்கு நாட்டார் இலக்கியங்கள்-அரிவி வெட்டு

ஒரு பேரூந்திலோ  அல்லது மோட்டார் சைக்கிளிலோ நகர்ப்புற வீதிகளில் செல்லும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் வித்தியாசமும் மாற்றமும் உணர்வீர்கள். விதவிதமான வான்முட்டும் கட்டடங்களும் தொழில்நுட்பமும் எம்மைச்சூழ விரிந்து கிடந்தாலும் நீண்ட முடிவில்லா வயல்களையும், பனந்தோப்புக்களையும், கொட்டில் வீடுகளையும் அதில் கொத்தி திரியும் கோழிகளையும் பார்க்கும்போது மனதின் ஓரத்தில் ஆனந்தமாய் இனம்தெரியாத ஒரு பூரிப்புவரும். கலை  இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இது கூடுதல் குதூகலம்  என்பதை மறுத்து கூறமுடியாது.
தொலைதூர புகைவண்டிப் பயணங்களில் எமது புகைப்படக் கருவிகள் அதிகம் படம் பிடிப்பது கிராமங்களையே. தேடித் தேடி சேர்த்துக்கொள்ளும் புகைப்படங்களில் கவனம் செலுத்திய நாங்கள் இதம் தந்த தென்றலையும், பரந்து விரிந்த வயல் தேசத்தில் கையில் மண்வெட்டியுடன் வியர்வையை  உரமிட்டு எங்கள் உணவுக்காக உழைக்கும் விவசாயியின் வாழ்வியலையும் இன்னும் சமூகவலைத்தளங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அச்சமூக வலை தளங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களின் நாளாந்தத்தையும் கவனிக்க தவறிவிடுகிறோம். இவ்வாறு தவறி விடப்பட்டவையே எதிர்காலத்தில் எங்கள் அடையாளங்களை கேள்விக்குறியாக்கி விடப்போகின்றன.
நாட்டார் வழக்காற்றியல் என்பதை அறிமுகம் செய்து உள்நுழையவேண்டிய துர் அதிஷ்ட நிலை என் எழுத்துக்களுக்கு ஏற்பட்டுள்ளதை நினைத்து ஒருகணம் வருந்திக்கொள்கிறேன். நாட்டார் இலக்கியம் என்பதை வரையறுப்பதில் காலம் காலமாக வேற்றுமையான எண்ணப்பாடுகள் காணப்பட்டு வருகின்றது. வரலாற்றில் நாட்டார் இலக்கியங்களை ஆராய்ந்தவர்கள் அக்காலநிலைக்கும் தங்கள் சுவாத்தியத்திற்கும் இணங்க அதனை வரைவிலக்கணப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள். இருந்தும் எல்லோரையும் பொதுமைப்படுத்தி அவர்களின் கருத்தாழங்கள் விடயப் பரப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அறிஞர் போக்ஸ்

புராதனமாகவோ அல்லது நாகரிகம் வாய்ந்ததாகவோ ஒரு சமூகப்பகுதி அல்லது உறவுக்குழுக்கள் அல்லது பழங்குடி மக்கள் அல்லது ஒரு இனம் அல்லது ஒரு நாட்டு மக்களின் வழக்காற்றுத்தொகுதியே நாட்டார் வழக்காற்றியல் என வரையறைசெய்கிறார்.

இந்த நாட்டார் வழக்காற்றியல் இரு பெரும் பிரிவாக பிரிகின்றது.

  1. நாட்டார் இலக்கியம்

2.நாட்டார் நம்பிக்கைகள்
இந்த தொடர் நாட்டார் இலக்கியம் என்ற பெரும் பிரிவையே முழு நோக்காக கொண்டு எழுதப்படுகிறது. வடக்கு தமிழ் மக்களின் வரலாற்று பாரம்பரியம் தொன்மையானது. நாட்டார் இலக்கியத்திற்குள்அவர்களின் வரலாற்று வாழ்க்கை முறையை ஆராய்வது மிக திருத்தமான செயலாகும்.
நாட்டார் இலக்கியம் பொதுவாக நாட்டுப்புற கதைகள் , நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணக் கதைகள், கூத்து என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை வாய்மொழி வழக்காறு உடையனவையாகவே காணப்படுகின்றன. நாட்டார் இலக்கியம் என்று வரும்போதே நாட்டாரியல் மேலோங்கி நிற்கிறது. ஆதிகால வடக்கு மக்களின் சூழலியல் சார்ந்த அம்சங்கள் வயலும் வயல்சார்ந்த இடங்களுமாக இருந்தமையால்  அம்மக்கள் கல்வித்துறையில் பெரும்பான்மை  நாட்டம் செலுத்த தடையாக இருந்தது. இதனால் எழுத்து மொழி இலக்கியங்களை விட வாய் மொழி இலக்கியங்களிலேயே அதிக ஈடுபாடு காட்டியிருந்தார்கள் அம்மக்கள். வடக்கு பகுதியின் நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவை பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் கூத்து, கதைப்பாடல்களாகவும் அமைந்துள்ளன.
வடக்கின் நாட்டார் இலக்கியங்களை இரசிக்க வாசகர்களை இன்றிலிருந்து மிகவேகமாக பின்னோக்கி ஒருமுறை அழைத்துச் செல்வோம்……
untitled-design-20
அதோ வயல்காணிகள் தெரிகின்றன, அளந்து மண் கோதி இடப்பட்ட வரம்புகள், எங்கு பார்த்தாலும் சலசலக்கும் வாய்க்கால்கள், வாய்க்கால்களில் நீந்தி விளையாடும் கச்சல், வரால், கெளிறு, மங்கன்,  மசரி,  உழுவைகள், கொஞ்ச தூரம் தள்ளி மதகு அருகே தூண்டிலோடு சில நடுத்தர வயதுகாரர்கள். வாய்க்கால் திரும்பும் இடம் ஓலையால் நேர்த்தியாக பின்னப்பட்டு களிமண் சுவர்கள் இடப்பட்டு வெளியே குந்துடன் சிறிய அளவான வீடு, வீட்டின் முன்னே ஓலைப்பின்னலினாலான கூடாரம் கோழிகளுக்கும் சாவல்களுக்கும், விவசாயத்திற்குச்செல்ல கணவன் தயாராகி விரிந்து செழித்த ஆலமரத்தின் கீழ் அடிஅகன்ற முடி கூரான பிள்ளையார் சிலை முன்

“முடியோடு தேங்காய் கையில் எடுத்தோம்
மூத்தோர் கணபதியை தோத்திரம் செய்தோம்.”  என தேங்காய் உடைப்பார்.

வீட்டோடு அருகே உள்ள வயலுக்கு சென்றவன் ஏர்பூட்டி உழ முன்…..

“பட்டி பெருகவேணும் தம்பிரானே
பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே……
மேழி பெருகவேணும் தம்பிரானே
மாரிமழை பெய்யவேணும் தம்பிரானே ………”

என மழை சிறப்பாக பெய்யவேண்டும் என வருண பகவானை வணங்கிக்கொள்வார்கள்.
என்னதான் மழையும் மனிதர்களும் ஒத்துழைத்தாலும் விவசாயியின் பெரும் நம்பிக்கை அவன் எருதிலேயே இருக்கும். எருதை சமாதானப்படுத்தி வேலை செய்யவைக்க

“சார்பார்த்த கள்ளனடா …..
தாய்வார்த்த கேளனடா …..
பாரக்கலப்பையடா செல்லனுக்கு ….
பாரமேத்தத் தோணுதடா……
வரம்போ தலகாணி செல்லனுக்கு ……
வாய்க்காலோ பஞ்சுமெத்த ……. ”

என்று பெற்ற பிள்ளையை போல தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவார்கள்.
 
இப்பிடி பிள்ளைபோல் வளர்த்த உழவு மாடுகள் இடைக்கிடை கட்டவிழ்த்து காடுகளுக்கிடையே மறைந்து விடுவதுண்டு. இப்பிடி தொலைந்த மாடுகளை தேடி காடு மேடுகளெல்லாம் அலையவேண்டி வரும். அலையும் நேரங்களில் தன்னை பாதுகாத்துக் கொள்ள உடற்கட்டு மந்திரம் சொல்லிக்கொள்வார்கள். ஊர் எல்லையெங்கும் காவலிருக்கும் ஐயனாருக்கு நல்ல கேட்டித் தடி வெட்டி சாத்தி வைப்பார்கள். இதை வதனமார் சிந்தில் வரும் பாடல் வரிகளில்

“நாவியும் கீரியும் நுழையாத குருமனில
நாங்கள் நுழைந்தொரு குரும் பொல்லு வெட்டி
பொல்லு நல்ல பொல்லு, வெட்டிக் கட்டிய பொல்லு
மட்டடக்கும் பொல்லு இது ……”

என்றும்

” அட்ட திசை எல்லாம் கவரிவீச
ஆடர்ந்து சில மனிதர் வந்தடி பணிந்தேத்த
மட்டுலவு மச்சிலாய் வாளுமையானாரை
மலரடிகளென்று மனதிலயராமே …..”

என்னும்

“சல்லியொரு கொம்பு முழவதிர
வெள்ளையானை மேலேறிவரும்
ஆதி சடவைக்குளம் வாளுமையானரே …..”

என்றும் வரும் வரிகள் அவர்களின் உணர்வுகளை இனிமையான சந்தத்துடன் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறான பாடல்கள் வடக்கில் இன்னும் வழக்கில் உள்ளன.
அரிவு வெட்டும் காலம் வந்தாலே கேளிக்கைகளுக்கும் நையாண்டிகளுக்கும் குறைவே இருக்காது, அந்த மக்களின் மனங்களைப்போலவே வேளாண்மையும் என்றும் செழித்தே இருக்கும். இந்தக் காலங்களில் பாடப்படும் பள்ளு பாடல்கள் ரசனை மிக்கவை.  அரிவு வெட்டும் கத்தியின் சிறப்புக்களை பாடும் போது

“மட்டு கருக்காலே அரிவாளை தீட்டி
மாவிலங்கம் பிடி தன்னில் இறுக்கி
வெட்டும் பிடியை சிரிக்கவே வெட்டி
வெள்ளித்தகட்டாலே விரல் கூட்டமிட்டு ….”

என பாடுகின்றனர்.
 
மட்டு என்பது மட்டக்கிளப்பின் சுருக்கம். அங்கிருந்து பெறப்பட்ட தாக்கத்தி, ஒன்றரை அல்லது இரண்டங்குல அகலமான முனை சுருட்டிய வளைவானது. இந்த கத்தி வீசினால் இரண்டு அல்லது மூன்று வீச்சுக்கு கைநிறையும். தொடர்ந்து உப்பட்டி விழும். முதல் மூன்று கத்தி வீச்சு நான்கு உப்பட்டி விழல் என்ற தொழில் சந்தத்தில் அருவி வெட்டு பாடல்கள் அமைந்திருப்பதை காணலாம்.
1.மாட்டு கருக்காலே 2.அரிவாளைத் தீட்டி 3. மாவிலங்கம்படி என மூன்று வீச்சுகளோடு நான்காவது சொல்லுக்கு உப்பட்டி கீழே விழும். இந்த ஒழுங்கு பாடல் தொடங்கி முடியும் மட்டும் மாறாமல் பேணப்படும்.

“கூழாவடியாம் குளிர்ந்த நிழலாம்
குளக்கட்டு நீளம் புளியாமினலாம் ……
யாரடா எந்தன் குளக்கட்டு தனிலே ?….
நாங்கள்தான் அந்த சிந்து கவி பாடியோர் ….”

என்று தொடர்ந்து செல்லும்.
அரிவு வெட்டு முடிந்தது நெல்லெல்லாம் வீட்டு முற்றத்திலே காய விடுகிறார்கள். காயவிட்டால் குருவி விடுமா? குருவியின் தொல்லையை பாடுகிறார்கள்

“கோலமலை நீலமலை குந்துமலை கண்டல்
கொக்கிளாய் பரந்தமலை மெம்மலை குறுந்தேர்
கன்னியங் குமரிமலை ஓதியமலையேகி
பொதியமலை நாயாறு தட்டாமலை குருவி முதலாய்
தோற்றமுள்ள கந்தளாய் குளமேவு மலையினொரு
சோல்லரிய பூநேரி சூழுமலையாளம்
குருவிக்கிளை பறந்து வருதே …….”

இதெல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது நாம் இப்போது உலவிக்கொண்டிருக்கும் கிராமத்துள் என்று சொற்களால் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மனம் பண்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு கற்பனை பார்வையிலே இவ்வளவு பண்படல் என்றால் நாட்டார் வழக்கியலும் நாட்டார் இலக்கியங்களும் அதனுள் உள்ள நாட்டார் பாடல்களும் எவ்வளவு பண்பட்டவை என்பது சொல்லிலடங்கா. இன்னும் நாட்டார் பாடல்களுடனும் நாட்டார் இலக்கியத்துடனும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
மீண்டும் இந்த இயந்திர நூற்றாண்டுக்குள் வந்துவிடுங்கள் இன்னும் எம்மை விட்டு உலக இலக்கியங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
Image Credits : Sajath Nijamudeen

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகம்

இன்றைய காலகட்டம் இரண்டாயிரம் ஆண்டுகள் பரிணாம உலகின் விளைவாகும். உலக அரங்கில் நடந்தேறும் எல்லா நிகழ்வுகளுக்கு பின்னும் மிக வலிதான வரலாற்றுப் பின்னணி மேலோங்கி நிற்கிறது. வலியது பிழைத்தல் என்ற கொள்கையின் உச்சம் தான் இந்த இருபத்தோராவது நூற்றாண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. சாதாரண எறும்புகளின் சேமிப்பு தொடக்கம் ரோபோக்களின் உற்பத்தி வரை எல்லாமே தக்கன பிழைத்தல் தான். இன்றைய சமூகத்தில் ஒரு நிலையான இடத்தினைத்  தேடல் என்பது மிகச் சிரமமான விடயம். எத்தனையோ கலாசாரங்கள் தோன்றி அழிந்து நாமம் இல்லாமலே போன வரலாறுகள் இந்த உலகின் பக்கங்களின் கறைபடிந்த எழுத்துக்களாக பதியப்படுள்ளன. நான் முதலே கூறிய வலிதான வரலாற்று பின்னணி, கரைந்து போன கலாசாரங்களுக்கும் உண்டு. இருந்தும், அக்கலாச்சாரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்ன? இன்னும் எத்தனை கலாச்சாரங்கள் இவ்வாறு அழிந்து ஒழிந்து போய்விடும் ? இதை மீட்க அல்லது தடுக்க வழி இல்லையா ?
 
பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ உகந்ததென கண்டுபிடிக்கப்பட்ட ஒரே கிரகம் பூமி. அதில் ஏற்படும் அதீத மக்கள் வளர்ச்சியும் பொதுப்பண்பாட்டு நிலையும் தொன்மையான பண்பாட்டு கலாச்சாரங்களும் மிகுந்த சவாலாக காணப்படுகின்றன. ஒருசில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த  ஆராய்விற்கு அல்லது இப்படியான ஒரு விழிப்புணர்வு கட்டுரைக்கான தேவைப்பாடு காணப்படவில்லை. உலகின் வளர்ச்சித்தன்மை வெளிப்பட்டது என்பது உண்மைதான் ஆனால் பண்பாட்டு கலாச்சாரங்களை மழுங்கடிக்கும் அளவு அதி தீவிரமான முறையில் அது காணப்படவில்லை. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற வலை எப்போது உலகின் மூலை  முடுக்கெல்லாம் தனது ஆக்கிரமிப்பால் போர்த்தி தன் வசம் இழுத்துக்கொண்டதோ அன்றிலிருந்தே பொதுப்பண்பாட்டுக் கொள்கை விகாரமடையத் தொடங்கியது. அதுவரை தங்கள்  சுதேசிய கலாச்சாரங்களுக்குள் இருந்து பண்பட்ட சமூகம், ஒரு திறந்த கட்டுப்பாடு அற்ற பண்பாட்டு அலையில் சிக்கிக்கொள்கிறது. ஒரு குறிப்பிட்டகாலம் வரை படிப்பறிவு மட்டம் கூடிய கூட்டத்துக்குள் இருந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், பாமரன் வரை கொண்டு செல்லப்பட்டது. இந்த பரவலாக்கம் சரி பிழை என்பதை மீறி பண்பாட்டின் மீதான அதன் தாக்கம் என்பது மறையான பாதிப்பாகவே காணப்படுகிறது.
இலங்கையின் ஆதிக்குடிகள் எனப்படும் இயக்கரும் நாகரும் வாழ்ந்த பழம்பெரும் நிலப்பரப்பு இலங்கை வடக்காகும். வடக்கின் மண்ணுக்கு உள்ள அதே வரலாற்று முக்கியத்துவம் வடக்கு மக்களுக்கும் உண்டு. இன்றைய உலக அரங்கில் இலங்கைத்தமிழர் என்ற அடையாளம் ஈழ யுத்தத்தால் ஏற்பட்டதே. கொஞ்சம் சில இருபது ஆண்டுகளில் இருந்து தொடங்கினால் வடக்கு தமிழனின் நிலைப்பாடு வேறு. எமது வரலாற்று பின்னணி,எமது இலக்கிய பதிவுகள் , எமது சாதனைகள் , என்பதைப்பற்றி நொடிகூட நினைக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் அவர்கள். அவர்கள் எண்ணம் எல்லாம் அவர்களுக்கான இருப்பிடம் தான். அவர்கள் தங்கள் அடையாளங்களை தேடிக்கொள்ள முற்படவில்லை அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதே பெரும் போராட்டமாக இருந்தது. உலகம் இலவச கணனி இணைய இணைப்பை வழங்கிக்கொண்டிருந்த காலம் பனம் காயில் உடல் தேய்த்து சீனியில்லாமல் வெறும் தண்ணீர் குடித்திருந்த வடுவான காலம் வடக்கு மக்களினது. இந்த போராட்ட காலம் அவர்களுக்கு உயிரை பாதுகாத்து கொள்வதில் போனதே ஒழிய வரலாற்றை கடத்துவதில் கவனம் செலுத்த தோன்றியதே இல்லை. இதில் வடக்கு மக்களுக்கு எந்த பழியும் சாராது. அவர்களில் நிலை அது. எந்த சமூகமும் இவ்வாறான ஒரு நிலையில் தங்கள் இருப்பை உறுதிசெய்யுமே தவிர வேறு நோக்கங்களில் ஈடுபடாது. இந்த இக்கட்டான நிலை, இதில் கடந்து சென்ற காலங்கள் உலக அரங்கிற்கும் வடக்கு தமிழருக்குமான ஒரு விரிசலை ஏற்படுத்தியது .
(c1.staticflickr.com)
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி வடக்குத் தமிழரின் வரலாற்று இருப்பை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. இன்றைய தலைமுறையினருக்கு சரியான வரலாற்றுப் பண்பாடுகள் கடத்தப்படவில்லை. இந்த கடத்தப்படாத பண்பாட்டு விழுமியங்கள் போன தலைமுறையினரோடு முடிந்து போவது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும். கடத்த இயலாமல் போன வடக்கு தமிழரின் பண்பாட்டு கலாசாரங்கள் முந்தைய தலைமுறையினரோடு தேக்கி வைக்கப்பட, இன்றைய சமூகத்தினர் இடையே ஒரு பண்பாட்டு வெறுமை தோன்றுகின்றது. இந்த பண்பாட்டு வெறுமை பரவலாக இருந்த காலத்தில்தான் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அவர்கள் கைகளில் வந்தது. இந்த தொழில்நுட்பம் பரப்பிய பொதுப்பண்பாடே இன்றைய  தலைமுறையினரால் எதிர்கொள்ளப்பட்ட  முதலாவது பண்பாட்டுக் கொள்கையாகும். பொதுப்பண்பாட்டில் உள்ள வெளி, அதில் உள்ள சுவாத்தியம் இன்றைய தலைமுறையினரின் எண்ணஓட்டத்திற்கு ஏதுவாக இருந்ததால் அதில் அவர்கள் தொற்றிக்கொண்டனர் . ஆகையால் இதற்கு இன்றைய தலைமுறையினரையும் குறை சொல்லமுடியாது.
இந்த யார் பொறுப்பு கூறுவது என்ற போராட்டம் இன்னும் கால இடைவெளியையும் விமர்சனங்களையும் பொதுப்பண்பாட்டின் மேலதிக ஊடுருவலையும் அதிகரிக்குமே தவிர வேகமான இந்த காலஓட்டத்தில் எந்த பயனுள்ள விடயத்தையும் முன்வைக்காது. மேலும் மேலும் உலக அரங்கில் வடக்கு தமிழரை பின்னோக்கி நகர்த்தும் சுயஇழிவுச்செயலே இதுவாகும். இதிலிருந்து விடுபட்டு எமது இருப்பை உறுதி செய்துகொள்ள போனதலைமுறையினர் வரலாற்று பண்பாட்டினை இந்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்துவதோடு இந்த தலைமுறையினர் பண்பாட்டு தேடலை அதிகரித்து ஆவணப்படுத்தவேண்டிய வழிமுறையே சரியானதாகும். இதில் ஒவ்வொரு வடக்கு வாழ் தமிழனும் தனக்கான பங்கினை சரிவர செய்வதன் மூலம் தொலைந்து போன பண்பாட்டு கலாசாரங்களை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
இந்த பண்பாடு கலாசாரம் என்பன எதன் மூலம் கடத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரே ஏற்றுக்கொள்ளத்தக்க பதில் இலக்கியங்கள் தான். இற்றைக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி தமிழன் வாழ்ந்தான்என்னும் வரலாறு, வாய்வழி எமக்கு கிடைக்கப்பட்டது இல்லை. தமிழர் வரலாற்றை இன்று கூறுகிறோம் என்றால் அன்று இப்படி இருந்தோம் , எங்களிடம் இவ்வளவு தேசம் இருந்தது, எம்மிடம் உலகையாண்ட படைகளும், தேவரும், அரக்கரும், பாய்ந்தோடும் முப்படையும் இருந்தது என்று கூவிக்கொள்கிறோம் என்றால் அதற்கு காரணம் எம் இலக்கியங்களே. இன்றைய காலத்தில் தமிழுக்கென சிறப்பிடம் இருக்கின்றது என்றால் அதற்கு இந்திய இலக்கியங்களே மூலம். ஒரு மொழியின் செம்மை , அதன் தொன்மை எல்லாவற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஒரே விளக்கு இலக்கியங்கள் தான். இவ்வளவு சிறப்பு ஏன் இலக்கியங்களுக்கு என்று பார்க்கப்போனால் , அது இன்றைய நிதர்சன நிலைக்கு ஒரு முறை திரும்பிப் பார்க்கச்சொல்கிறது.
 
இன்றைய நாளில் நீங்கள் என்ன எழுதுகிறீர்கள்? அதிகம் புனைவுகளையா? அதிகம் சுயசரிதத்தையா? பொதுவான விடை சுயசரிதமாகத்தான் இருக்கும். கூடப்போனால் புனைவு கலந்த சுயசரிதம். இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையினரின் எழுத்துக்கள் எதைநோக்கி இருக்கின்றன என்ற கேள்வியே முன்னைய கேள்வியின் பதிலாகும். இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.
இக்கட்டுரைத் தொடர் வடக்கின் நாட்டார் இலக்கியங்களைப் பற்றியது. வடக்கு மக்களிடையே ஏற்பட்ட விரிசல்களில் தொலைந்து போனதையும் , விரிசல்களால் உண்டானதையும்பற்றியதே இக்கட்டுரை. எனவே எனது இக்கட்டுரை ஆராய்ச்சி கட்டுரை இல்லை. என் தேடல்களின் சாராம்சம் . நான், இங்கே முதலில் கூறிய இன்றைய தலைமுறை பயிர்தான். வடக்கின்  இலக்கியம் சம்பந்தமான தேடல்களுள் நான்  தேற்றியவற்றைத்தான் இனி வரும் கட்டுரைகளில் தொகுக்க உள்ளேன். இதை தொடராக எழுதலாம் என்ற கோரிக்கையில் முதல் பாகமாக “தொடங்க முன் ” என்று தொடங்கி இருக்கிறேன். இதன் விமர்சனங்களில் பயிர் வாடிவிடப்போவதில்லை. எல்லாமே எனக்கிட்ட உரங்கள்தான். மிகவிரைவில் இரண்டாவது தொகுப்புடன் சந்திக்கிறேன்
தொடரும்…