முன்குறிப்புகள்
- எம். ஏ. சுசிலாவின் பாராட்டு விழாவில் பேசிய ஜெயமோகனின் காணொளியை பார்க்கக் கிடைத்தது. கிளாசிக் நாவல்கள் பற்றிய உரையாகவே இது அமைந்திருந்தது. இணைப்பு – https://www.youtube.com/watch?v=D4HesSrL5Dg&t=1947s இதனை சுருதி டிவி தெளிவாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
- “Why Read the Classics?” என்னும் தலைப்பில் Italo Calvino எழுதிய கட்டுரையினை வாசித்துப்பார்க்கலாம்.
- தமிழில் பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். “நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்? – இடாலோ கால்வினோ“.
- வல்லினம் நவீன் எழுதிய இலங்கை வருகை பற்றிய கட்டுரை – http://vallinam.com.my/version2/?p=5191
- இக்கட்டுரையினை வாசித்த பின்னர் ஜெயமோகன் தனது ப்ளோகில் எழுதிய குறிப்பு – https://www.jeyamohan.in/108034#.WsrzUtNuau5
- அனோஜனின் கேள்வியும் ஜெயமோகனின் பதிலும் –https://www.jeyamohan.in/108231#.WswUotNuau4
வவுனியா பொது நூலகத்தில் என் வாசிப்பு கிளாசிக்குகளுடனேயே ஆரம்பமானது. முதன்முறைகளில் இரவல் பகுதியில் நவீன நாவல்களென்று எதுவும் என் கண்களுக்கு தென்படவில்லை. ஆனால் இதற்கு முன்னரே சில லத்தின் அமெரிக்க நாவல்களை வாசித்திருக்கிறேன். நூலகத்தின் இரவல் வாங்குகின்ற பகுதியின் தொங்கல் சுவரோடிருக்கின்ற ராக்கைகளில் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் அடுக்கிவைத்தபடியே இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு வருட கணக்காய்வின் போது மட்டுமே எடுத்து மீண்டும் அடுக்கப்படும் என்ற துயர நிலையிலிருந்தன. ஆனால் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு மட்டும் நான்கு பிரதிகள், கரமசோவ் சகோதரர்கள் இரண்டு, துர்கனேவின் தந்தையும் தனயரும் இரண்டு பிரதிகள் என்று பின்பக்கத்தில் ஒரு இரவல் முத்திரை கூட அடிக்கப்படாலே மீண்டும் மீண்டும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. உயர்தரம் முடித்து தனித்திருந்த காலத்தில் ஒவ்வொன்றாக இரவல் வாங்கிக்கொண்டுபோய் வாசிக்கத் தொடங்கினேன். அதே சமகாலத்தில் நவீன இலக்கியம் நெருக்கமாகிக்கொண்டிருந்தது. இதனால் நூலக இரவல் பகுதிக்குள் ஒளிந்து கிடந்த நவீன நாவல்களையும் ஒவ்வொன்றாக வாசிக்கத்தொடங்கினேன். இப்போது யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ராக்கைகளுக்குள் சாரு நிவேதிதாவின் ராஸலீலாவும் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல்கள், விஷ்ணுபுரமும் கோணங்கியின் சலூன் நாற்காலியில் சுழன்றபடி தொகுப்பும் அசோகமித்திரனின் ஒற்றன், தண்ணீரும் யாரோ ஒரு சிலரால் வாசிக்கப்பட்டு மீண்டும் உறங்குநிலையில்(dormancy) கிடந்திருக்கின்றன. அதே சமயம் நாவல்கள் என்றால் புத்துயிர்ப்பு போல இருக்கவேண்டும் என்றும் மனதிற்குள் பதிந்துவிட்டது.
அருண்மொழிவர்மனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவகாந்தனையும் ” கனவுச்சிறை”யையும் அறிமுகப்படுத்தினார். கனவுச்சிறை நூலகத்தின் இரவல் வாங்கும் பகுதியில் இருந்ததைப்பார்த்து நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அதைவிட அதிக ஆச்சரியம் கனவுச்சிறை வாசிப்பின் பின்னர் கிடைத்தது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான நாவல் கனவுச்சிறை. அதன்பின்னர் இரண்டு முறை வாசித்தும் அதன் பிரமாண்டம், உள்ளடக்கம், வாழ்க்கை, அழகியல் என்று விஸ்தாரமாக நகர்கின்ற தன்மை கிளாசிக் ஒன்றிற்கான அறைகூவலாகவே இருக்கின்றது. இதனை என்னோடு இலக்கியம் பற்றிப் பேசுபவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இப்படியான சம்பவம் ஒன்று தான் இது.
வல்லினம் குழுவினர் கொழும்பிற்கு வருகை தருவதாக கிரிசாந்தும் பின்னர் திலீப்குமாரும் அறிவித்தல் தந்தார்கள். இருவருமே கட்டாயம் சென்று சந்திக்கச் சொன்னார்கள். அறிவித்தல் கிடைக்கும் போது கொட்டஹேனாவில் இருந்தேன். செட்டியார் தெரு பூபாலசிங்கம் புத்தகசாலையில் சந்திப்பு என்பதால் போக வசதியாக இருந்தது. திடீரென ஒழுங்கமைப்பு செய்யப்பட்டதால் முகப்புத்தகத்திலோ அல்லது வேறு வழியாகவோ எந்த அறிவித்தல்களும் உரியநேரத்தில் கிடைக்கவில்லை. சரியான நேரத்திற்கு பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்கு சென்றுவிட்டேன். வல்லினம் குழுமத்தை கோணங்கி எழுதிய “கதைபோடுகிறாள் கனிப்பெண்” என்ற கட்டுரையின் மூலமாக அறிமுகம், நவீனை ஜெயமோகனின் தளத்தில் நடந்த விவாதங்களின் மூலமும் ஸ்ரீதர் ரங்கராஜை “கீனோ” மொழிபெயர்ப்பின் மூலமாகவும் தான் அறிமுகம். வேறு யாரையும் அறிந்திருக்கவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்த மேமன்கவி, ஹாஸிம் உமர், ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் , அங்கிருந்தவர் நானறியாத ஒருத்தர் தவிர மிகுதி எல்லோரும் வல்லினக் குழுவினர். நவீனின் உதிரக் கள் என்கிற இலங்கை பயண அனுபவங்களை வாசிக்கும் போது இதே நிலை தான் மற்றைய இடங்களிலும் நடந்திருக்கிறது என என்னால் அறிந்துகொள்ளமுடிகிறது. கூட்டத்தில் ஒவ்வொருவரினதும் அறிமுகம் நடந்தது. வரிசையாக அறிமுகம் செய்துவைத்துகொண்டுவந்த மேமன்கவி என்னிடம் வந்து மௌனமானார். என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் அறிமுகம் இல்லாதது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இதை எழுதுவதற்கும் கூட இலகுவாக உணர்கிறேன். வல்லினம் குழுவினரின் ஒவ்வொருத்தராக எழுந்து தம்மைப் பற்றியும் தங்களின் பணிகள் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மட்டமான கேள்விகள் கேட்கப்பட்டு பதில்களும் வழங்கப்பட்டன. அந்நியமாக இருந்த அவ்விடத்தில் தயாஜியோடு பேச்சுக்கொடுத்தேன். அறிமுகமானேன். மற்றபடி ஒவ்வொருத்தரும் தங்களின் பணிகளாக மலேசியாவில் உள்ள தமிழ் தவிர்ந்த மற்றைய மொழி இலக்கியங்களை தமிழிற்கு மொழி பெயர்த்துக்கொண்டிருப்பதாகவும் ஊடக சுதந்திரம் இல்லாததை இட்டு கோபமுற்று தனித்த ஆளாக நின்று பத்திரிக்கைகளில் அரசியல் எழுதுவதாகவும் , அப்படியாக இன்னபிற என்று இலக்கியத்திற்கு உவப்பே இல்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். நவீன் உதிரக் கள்லில் எடுத்த முடிவைப்போல நானும் எடுப்பதாக இருந்தால் சிங்கப்பூர்- மலேசிய இலக்கியம் காட்டுக் குப்பை என்றும் எழுத்தாளர்கள் என்பதை அந்தஸ்தைதாக வைத்திருப்பவர்கள் என்றும் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே சந்திப்பில் ஒரே உரையாடலில் இந்த முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். நவீனின் குறுகிய காலப் பயணம் ஈழத்து இலக்கியம் பற்றிஅடிப்படையான புரிதல்களைக் கூட ஏற்படுத்தியிருக்காது. ஈழத்தின் புறச்சூழலைக் கூட ஒரு கிழமைப் பயணத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியாது. இதிலெங்கு இலக்கியம் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது?
கூட்டம் முடிந்தவுடன் ஸ்ரீதர் ரங்கராஜ் என்னும் அருமையான மனிதரை சந்திக்க முடிந்தது. மென்மையான பேச்சும் சிந்தனையும் உடையவர். கீனோ பற்றி நிறைய உரையாடினோம், கூடவே மொழிபெயர்ப்புகள் பற்றியும். அந்த நீண்ட வாதம் பற்றி பின்னராக எழுதவேண்டும். அப்போது தான் ஈழத்து நாவல்கள் பற்றிய பேச்சு தொடங்கியது. புத்தகசாலையில் நின்றதால், முன்னரே ஓரிரு முறை அங்கு கனவுச்சிறையை பார்த்திருந்ததாலும் கனவுச்சிறை பற்றிய அறிமுகத்தை வழங்கினேன். தேவகாந்தனை தான் அறிந்திருக்கவில்லை என்று சொன்னார். பெயரளவில் கூட. நான் நாவலை மேல் ராக்கையொன்றிலிருந்து எடுத்து நீட்டினேன். அவர் உடனே ” டூ மச் போர் எ நொவல்” என்றார். நிற்க.
காலை ஜெயமோகனின் கிளாசிக்குகள் பற்றிய உரையின் மிகுதினை பார்த்துக்கொண்டும் கிரகித்துக்கொண்டும் இருந்தபோது ஸ்ரீதர் ரங்கராஜ் சொன்ன இந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. நவீனத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டதால் அவரிற்குள் இந்த எண்ணம் வந்திருக்கலாம். நான் பிழை கூறவில்லை. ஜெயமோகனின் உரை இந்த எண்ண உருவாக்கங்கள் பற்றி மிகவும் தெளிவான வெளிப்படுத்தல்களை கூறுகின்றது. கனவுச்சிறை அதற்கான பாரிய இடத்தையும் அளவையும் கோருகின்றது. பிரமாண்டமான மனித இயக்கங்கள் பற்றிய உரையாடலுக்கு கனவுச்சிறை கொடுத்திருக்கக்கூடிய அளவு சரியானதே. ஆரம்பத்திலும் இப்போதும் தொடர்ந்து கிளாசிக்குகளை வாசிக்காமல் தவிர்த்திருந்தால் இதுபோன்றொதொரு சிந்தனை எனக்குள்ளும் ஏற்பட்டிருக்கலாம்.
இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, மீண்டும் ஜெயமோகனின் தளத்தை பார்வையிட்ட போதுதான் “அங்கே இலக்கியவாசகர் என எவரேனும் இருக்கிறார்களா என்ற ஐயத்தையே நவீன் குறிப்பு உருவாக்குகிறது.” என்ற நவீனின் கட்டுரையினை அடிப்படையாகக் கொண்ட அவரின் கூற்றினை பார்க்க நேர்ந்தது. ஜெயமோகன் தன் சொந்த கருத்துக்களின் அடிப்படையில் இதை எழுதியிருந்தால் அவரின் தனிப்பட்ட கருத்து என்று கடந்துவிடலாம். ஆனால் நவீனின் கட்டுரையினை அடிப்படையாக வைத்து ஐயத்தினை உருவாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தான் சந்தித்தவர்களையும் , அவரைச் சந்தித்தவர்களையும் வைத்துக்கொண்டு எழுதிய கட்டுரை அது. இங்கிருக்கின்ற தீவிர இலக்கிய வாசகர்களையோ படைப்பாளிகளையோ சந்திருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு ஏற்படவில்லை. நவீனை வந்து சந்தித்து பேச வேண்டும் என்ற எந்தத் தேவையும் இங்கிருக்கும் வாசகர்களுக்கு இருந்திருக்காது. ஸ்ரீதர் ரங்கராஜிற்கு எப்படி தேவகாந்தனை அறிந்திருக்கவில்லையோ அதைப்போலவே இங்கிருப்பவர்கள் நவீனையும் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற எளிய முடிவிற்கு வந்துவிடலாம். உண்மையில் நவீன் இலக்கிய சந்திப்புக்கள், விவாதங்களுக்காக இலங்கை வந்திருந்தால், உத்வேகத்தோடு இயங்கி வாசகர்களை சந்தித்திருக்கவேண்டியது அவரின் பொறுப்பு. புரிந்துணவுடைய எழுத்தாளர் ஒருவரிற்கு இவற்றைச் சொல்லி வலியுறுத்தவேண்டிய தேவை இருக்காது. மேலும் அவரின் பயணத்தின் நோக்கம் ஈழத்து இலக்கியத்தை அறிவதாகவோ அல்லது வாசகர்களை சந்தித்து விவாதிப்பதாகவோ இருக்கவில்லை. “இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.”,”பொதுவாகவே ஒரு நாட்டின் பொருளியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு அந்நாட்டில் பல்லடுக்கு நிலையில் வாழும் மக்களையும் எவ்வித ஆய்வும் இன்றி பொருத்திப் பார்ப்பது மந்தமான பார்வை. மலேசியத் தமிழர்கள் கலை வெளிப்பாட்டின் சாதக, பாதகங்களை அறிய அவர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் உள்வாங்க வேண்டியுள்ளது. ‘வல்லினம் 100’ களஞ்சியம் அத்தகையதொரு குறுக்குவெட்டு பார்வையை வழங்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எனவே அதை சிங்கப்பூர், தமிழகத்தை அடுத்து இலங்கையில் பரவலான கவனத்திற்கு எடுத்துச் செல்வது உலகத் தமிழர்கள் பார்வைக்கு மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பக்கத்தைக் காட்டும் பணி என்றே உருவகித்துக்கொண்டோம்.” இவற்றை கடமையாக கொண்டு பயணித்தவர்களிடம் வாசகர்கள் பற்றிய புரிதல்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
நவீனின் கட்டுரையை முன்னமே படித்து ஓரமாக வைத்துவிட்டேன். அங்கு அறியாமையைத்தவிர விவாதப்பொருள் எதுவுமிருக்கவில்லை. ஆனால் ஜெயமோகன் நவீனின் கட்டுரையினை அடிப்படியாகக் கொண்டு ஒரு சிக்கலான ஐயத்தினை முன்வைக்கும் போது பெரும் அயற்சியளிக்கிறது. பரந்த வாசிப்பும் புரிந்துணர்வும் கொண்ட ஜெயமோகனால் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது.