வாசனை

தனி மனித வாசனை எதில் எல்லாம் தென்படும் என்று என்னிடம் நானே கேட்டுக்கொள்வதுண்டு. ஒரு சில ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்களை மனமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு. நாம் எடுக்கும் முடிவுகளில் எம்மை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது. இருந்தும் நான் எடுக்கும் முடிவுகள் தனி மனித சிந்தனைகளின் வெளிப்பாடுதானா என்பதில் நிச்சய ஐயம் உண்டு. உங்களது முடிவுகளில் வேறு யாரும் இல்லையா ? இல்லை என்றால் இத்தோடு புதிய தலைமுறைக்கான ஆட்சேர்ப்பினை உங்களில் இருந்து தொடங்குகிறேன். ஆம் என்றால் நீங்களும் நானும் ஒரே ஓலைச்சுவடிகள் தான். தனி மனித வாசனை தெரியவே தெரியாத பல காலமாய் தூசுகளும் கரையான்களும் படிந்த ஓலைச்சுவடிகள் தான் நாம். எம் முடிவுகளில் மூத்தோரின் அனுபவங்களும் வரலாற்றின் பாதிப்பும் கட்டாயம் தலை தூக்கிநிற்கும். இவற்றை மீறி முடிவுகளை எடுத்துக்கொள்ள நாம் அதிக சிரத்தை காட்டுவதில்லை. ஏன் எனில் எம்மால் எடுக்கப்படும் சார்பான முடிவுகள் எமக்கு சிரமங்களை தருவதில்லை. எனவே நாம் சுயமான முடிவுகளை எடுக்க கூடிய மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. எமது முடிவுகளில் தனி மனித வாசனை விசுவதே இல்லை.

எமது எழுத்துக்கள் ? கட்டாயம் இல்லை என்ற முடிவு தான் என்னைப்பொறுத்தவரைக்கும் நிதர்சனமானது. எங்கள் எழுத்துக்களில் எம் வாசனையிலும் பார்க்க எம்மை ஆட்கொண்ட எழுத்தாளர்களின் வாசனை தான் மேல்தூக்கி நிட்கும். ஏன் என்றால் எங்கள் அனுபவங்களை விட அவர்கள் அனுபவங்கள் தான் வலிமையானவை. இதில் எம்மேல் எந்த .குற்றமும் இல்லை. எவ்வளவு தூரம் எமது எழுத்துக்கள் எமது ஆழ்மனதின் பிரதிபலிப்பாய் இருக்கின்றன என்பதன் பொருட்டே தனி மனித வாசனையின் ஆதிக்கம் இருக்கும். கற்பனையில் முற்றுமுழுதாய் எம்மை வெளிப்படுத்தலாம் என்கிறீர்களா? உங்கள் கற்பனையின் மூலம் எங்கிருக்கிறது அல்லது எதைத்தழுவியது என்பது நீங்கள் மட்டுமே அறிந்த பரம ரகசியம் என்கிறீர்களா? ஆக அங்கும் நீங்கள் இல்லை , ரகசிய வாசனை தான் வீசுகிறது.
கண்களை மூடி பிராணாயாமம் செய்து விட்டு மனக்கண்ணால் பாருங்கள் அதோ அங்கு ஓடும் அதிசய மான் தான் நீங்கள். அங்கு ஒரு வேளை உங்கள் தனி மனித வாடை வீசலாம்….

Leave a Comment