மிகச் சமீப காலமாக எம்மிடையே பரவிக்கொண்டிருகின்ற இரண்டு வற்றாத நோய்கள் பற்றி எனது தனிப்பட்ட பார்வை என்பதால் இதிலுள்ள கருத்தியல் மிக மட்டமாகவும் கீழ்த்தனமானதாகவும் இருக்கலாம். இதை பற்றி விவாதித்து கொள்ள தேவையில்லை.
இலங்கைத் தமிழர் இடையே காலம் காலமாக இருந்துகொண்டிருந்த செந்தீ சமீபத்தில் கீழ் பக்கங்களில் திரண்ட வெள்ளத்தால் அணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எத்தனையோ ஆண்டுகள் சுமந்து வந்த வலியையை மிக சாதாரணமாக வெள்ளம் அணைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் மே மாதத்தில் நடந்திருப்பது தமிழ் மக்களின் மனதில் இன்னும் இன்னும் குளிர்ச்சியை கிளறிவிட்டிருகின்றது. உதவும் கரங்கள், கால்கள், டிப்பர்கள் என்று கீழ் பக்கத்திற்கு சென்றுகொண்டிருகின்றன. வலியென்றால் இதுதான், காலம் தன் வேலையை செய்தே தீரும், பழிக்கு பழி, மே இரு இனத்திற்கும் கறுப்பு மாதம் என்று தமிழையும் உணர்வுகளையும் சந்தோசங்களையும் கூடவே நீங்கள் தயார் என்றால் நாங்கள் வருகின்றோம், சிங்கள சகோதரர்களே என்று போலி ஆட்டின் முகமூடியை போர்த்திகொண்டும் பழிக்கு பலி தீர்த்த இயற்கைக்கு வணக்கம் செய்யும் இழி நிலையில் இன்றைய தமிழ் மக்கள் இருப்பது வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது.
சாதாரண மனித பண்புகளை மீறிய அடக்குமுறைக்கும் பேராசை வேட்கைக்கும் நொந்து போயிருக்கிறோம் என்ற வெளிப்படை உண்மையை இவை எனக்கு எடுத்துகாட்டுகின்றன. இதில் உதவும் மனப்பாங்கு என்பது வேறு விதமான அர்த்தத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. “இதுவரையும் எந்த உதவியும் செய்யாத சிங்கள பேரினவாதிகளே பாருங்கள்! நாங்கள் உங்களுக்கு ஒன்று என்றால் உடனே வந்து உதவி செய்கிறோம். மனிதப்பண்பு மிக்க எங்கள் தமிழ் இனத்தையா நீங்கள் அழித்தீர்கள்? “ என்பது தான் இன்றைய ஒவ்வொரு உதவியின் பின்னலான உண்மைகள்.
இங்கு கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு ஆவணமும் ஒரு மிகப்பெரிய பிரதி உபகாரத்தை நோக்கியே இருகின்றது. சிலதை தவிர இங்கே எங்களின் (தமிழ் மக்களின்) சுயநலம் மேலோங்குகின்றது போல எனக்கு தோன்றுகின்றது.
அடுத்த விடயம் இன்று சிந்தனை செயல் இரண்டு தளத்திலும் நடக்கின்ற மிக திறமையான விடயங்கள், அதன் பின்னால் நின்று உழைத்த ஆளுமைகள் யார் என்றே தெரியாமல் மெழுகப்பட்டு லாவகமாக உடை குச்சிகள் ஏறிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர். வெளிப்படையாக எந்த தகுதியும் இல்லாதவர்கள் வேடமிட்டுக்கொண்டு உரியவர்களின் ஆளுமைகளை மறைப்பது எந்நாட்டிலும் மிக கொடிய குற்றம், தெரிந்தோ தெரியாமலோ (சம்பிரதாயத்திற்காக) இன்றைய கற்று அறிந்த சமூகத்தினர் இதில் மிக தீவிரமாக ஈடுபடுகின்றனர். இது தான் தீவிரவாதம். எமது சமூக ஆளுமைகளை அடியோடு அமர்த்தும் கொடிய தீவிரவாதம்.
சங்கடமான செய்தி என்னவென்றால் நடைபெறுகின்ற குப்பை கேளிக்கைகளில் நாங்கள் எந்தப்பக்கம் என்பதிற்கு மிக நுட்பமான உரையாடல்கள் வேறு. இதை எந்த திசையில் ஆரம்பித்து களைய வேண்டும் என்பதே தெரியவில்லை.
முதலாவது விடயம் இனத்தின் இழுக்கு இரண்டாவது தனிமனித இழுக்கு.
எதைக்களைவது முதலில்?
களைகள்.