கோமாளி கிங்ஸ் – அவதானங்களும் புரிதல்களும்

(01)
 
நேற்றிரவு கொட்டஹெனா சினிவேர்ல்ட் இல் – இரவு ஒன்பதரைக் காட்சியாகக்  கோமாளி கிங்சைப் பார்த்தேன். ஒன்பது மணிக்கே திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டேன். ஓரளவேனும் கூட்டமாக இருந்தால் தான் ஒன்பதரைக்குக் காட்சி, இல்லாவிட்டால் சற்று நேரமெடுக்கும் என்று பின்னேரமே காட்சிகள் குறித்து விசாரிக்கப் போனபோது அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். நான் நுழையும் போது ஐந்து பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். நான் ஆறாவது. வவுனியாவில் வசந்தி திரையரங்கில் நயன்தாராவின் மாயா திரைப்படத்தை மூன்று பேரோடு மட்டுமே இருந்து பார்த்தேன். படம் முடிந்த போது திரையரங்கில் நான்  தனித்து இருந்தேன். மற்றவர்கள் இடையிலேயே நழுவி விட்டிருந்தார்கள். அந்த வகையில் ஆறு பேர் என்பது ஓரளவு உவகையளித்தது. வழமை போல ஐந்நூறு ரூபா டிக்கெட்டினை எடுத்துக்கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்த போது மணி ஒன்பதே காலாகிவிட்டது. ஓரளவு முன் வரிசையில் சாவகாசமாக இருந்து ஆட்களின் வருகையை அவதானித்துக்கொண்டிருந்தேன். நேரத்தோடு ஆட்களின் வருகை அதிகரித்து அரங்கத்தின் அரைவாசியை நிறைக்க கோமாளி கிங்ஸ் திரையிடப்பட்டது. இதற்கிடையில் எனக்குப் பின்னாலிருந்த இளைஞர்கள் சிலர் அவர்களின் இன்னொரு நண்பனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ” அவன் இந்தியப் படங்களே பாக்கமாட்டான், இதுல இதுக்கு வரவா போறான் ” என்று அவர்களில் ஒருத்தன் சொன்னான். எம்மவர்கள் இடையே  திரைப்படம் என்றாலே இந்தியத் திரைப்படங்கள் தான் என்ற கருத்து இல்லாமற் போய்விட்டது. இன்று “படம் பார்த்துவிட்டீர்களா?” என்றால், “எது கோமாளி கிங்ஸா?” என்று பதிலளிப்பதைக் கேட்கின்ற போது  வெகுசன அடையாளம் ஒன்று இலங்கைத்  சினிமாக்கு ஏற்பட்டுவிட்டது என்பது  மகிழ்ச்சியாக இருந்தது.
 
கிட்டத்தட்ட நானும் அவர்கள் குறிப்பிட்ட நண்பனும் ஒரே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறோம். படங்களே பார்ப்பதில்லை என்பதல்ல. கோமாளி கிங்ஸ் வெளியாகிய இரவு, நண்பரொருவர் முகப்புத்தகத்தினூடு தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி விசாரித்தார். ” இப்போதெல்லாம் கார்ட்டூன் மட்டும் தான் பார்ப்பேன் ” என்று பதிலளித்தேன். அவர் சிரிப்பு எமோஜி ஒன்றை அனுப்பினார். ஆனால் உண்மையும் அதுதான். இப்போது கார்ட்டூன்கள் மற்றும் ஆவணப்படங்களையே அதிகமாகப் பார்க்கிறேன். பரவலாக பேசப்படுகின்ற தொடர்களையோ அல்லது உலக சினிமாக்களையோ(!) பார்ப்பது மிக அரிதாகிவிட்டது. கடைசியாகப் பார்த்தபடம் என்றால் The Death of Stalin. இதுவும் கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு சார்ந்த நகைச்சுவையான திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் Coco என்ற கார்ட்டூன் படம் பார்த்தேன். இப்படியெல்லாம் இருக்க , கோமாளி கிங்ஸை பார்த்தாக வேண்டும் என்று உறுதியோடிருந்தேன். காரணம் இலங்கையிலேயே  முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட தமிழ் வணிகத் திரைப்படம். இலங்கைத் தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயத்தைத் தொடக்கிவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பினை உருவாக்குவதன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. நம்மவர்களின் படைப்பு என்று மனதளவில் திரைப்படத்தைப் பற்றிய நெருக்கமான சிந்தனைகள் உருவாக்கி உலாவவிடப்பட்டது.  மீண்டும் பின்னாலிருந்த இளைஞர் ஒருவர், மற்றப்பக்க வரிசையில் இருந்தவரிடம் ” எப்படா உண்ட படம் வருது ” என்றார். அதற்கு சீக்கிரம் கொண்டுவந்துவிடுவோம் என்று பதிலளித்தார் மற்றவர். கோமாளி கிங்ஸின் வருகை சினிமா என்ற கனவோடு காத்திருக்கின்ற பல இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான திருப்பம். படைப்புகளை உருவாக்கிவிடுவதை எளிமையாக முடித்துவிடலாம் என்று நம்பக்கூடிய பலருக்கு, அதை வெளிப்படுத்துவதும் சந்தைப்படுத்துவதும் கடினமான ஒன்றாகவே இதுவரை இருந்தது. ஆனால் கோமாளி கிங்ஸ் இவற்றை உடைத்து சந்தைப்படுத்தல் வெளியை உருவாகியிருக்கிறது. இதற்காக படக்குழு அதிகமாக உழைக்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  முழுநீளத் தமிழ் திரைப்படம் ஒன்றை   மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது எளிதான விடயம் அல்ல. இனிவருகின்ற திரைப்படங்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகளவில் இருக்காது.
 
(02)
 
போரின் பின்னரான தமிழ்த் திரைப்படம் ஒன்றாகவே கோமாளி கிங்ஸை அணுகவேண்டிய தேவை எமக்குள்ளது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் போரின் குரல்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. போர் முடிந்துவிட்டது, இது மறுமலர்ச்சிக்காலம் என்றெல்லாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது. இன்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்கள், காணி மீட்ப்புப் போராட்டங்கள, அத்துமீறிய குடியிருப்புக்கள் என்று தமிழ்ப் பிரதேசங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை போரின் தொடர்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்திருந்தாலும் இன்னமும் நாங்கள் வேறொருவகையில் எமக்கான உரிமைகளுக்காக போராடிக்கொண்டிடருகிறோம். எம் பண்பாட்டுக் கூறுகள் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. எம் இனத்தின் மீது மௌனமாக பெரும் அரசியல் போரே நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து வருகின்ற ஒரு சினிமா என்ற அடிப்படையில் தான் கோமாளி கிங்ஸ் முதலாவதாக அடையாளப்படுத்தப்படும்.
 
கோமாளி கிங்ஸ் வெளிப்படுத்திய சமூகம் சார்ந்த பிரச்சனைகளாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரச்சனைகள் என்றே எதையும் குறிப்பிட முடியாது. ஒரு நகைசுவை திரைப்படமாக இருந்தாலும் உள்ளோட்டமாக நெருக்கடி ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நெருக்கடி தான் சுயம். நகைச்சுவைத் திரைப்படம் கடத்த வேண்டியது நகைச்சுவைகளை அல்ல, அதற்குள் ஊடுருவியிருக்கின்ற சமூகம் பற்றிய கருத்தினை¹.  இக்கருத்து கனமான செய்தி ஒன்றினை பார்வையாளருக்குக் கொடுக்கவேண்டும். சினிமா என்பதை எம்மிடையே ஒரு  பொழுதுபோக்கு அம்சமாக கருதுகின்ற சூழ்நிலையை நாம் இன்னும் அடைந்துவிடவில்லை. இன்னும் நிறைவேற்றப்படாதா எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. இன்னும் எங்கள் வரலாற்றையும் போராட்டத்தையும் சரியாக பதிவு செய்யவில்லை. இயங்கு நிலை சமூகம் ஒன்றின் அடிப்படை நோக்கமே வாழ்வியலை ஆவணப்படுத்துவது தான். போருக்குப் பிந்திய சமூகம் ஒன்றிற்கு இதைப் பற்றிய பார்வை இன்னும் இன்னும் விஸ்தாரமாக இருக்கவேண்டும். இன அழிப்பின் பின்னரான எதிர்ப்பு ஒன்றினையும் அவற்றைப் பற்றிய சரியான புரிதல்களையும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கியமும் சினிமாவும் ஊடகங்களும் அவற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கவேண்டும். கோமாளி கிங்ஸ் இவை எதையும் செய்ய மறந்துவிட்டது.
 
மாறாக, கோமாளி கிங்ஸ் உருவாக்கிய பிம்பங்கள் கடும் விமர்சனத்திற்குரியவை. இந்திய முழு வணிகத் திரைப்படங்களில் கூட ஏதோ ஒரு பிரச்சனையினை மையக் கருவாகக் கொண்டு நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால் கோமாளி கிங்ஸ், வெளிநாட்டிலிருந்து தன் தாய் நாட்டிற்கு வருபவன் – இயந்திர வாழ்க்கையை வெறுத்து நாட்டை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் – தாய் நாட்டிலேயே இருப்பதற்கு செய்கின்ற முயற்சிகள் தான் கதைக் கரு. வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்ததைக் கூட சாதாரணமாக வெளியேறியதாகவே வெளிக்காட்டுகின்றனர். அதற்காக எங்கும் போரைப் பிரதிபலிக்கவேண்டும், எப்போதும் போரையே பற்றிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று கூறவில்லை. இங்கு இனஅழிப்பு ஒன்று நடந்ததாக சிறு குறிப்புக்கூட திரைப்படத்தில் இல்லை. முழுக்க முழுக்க அழகிய இலங்கையை ஒளிப்பதிவு செய்கின்றார்கள். வடக்கு என்றால் நல்லுரையும் மன்னர் கருவாடையும் அடையாளப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் போரொன்றை முழுதாக மறந்துவிட்ட சமுதாயமாக எங்களை வெளிப்படுத்தியிருப்பதன் பின்னரான அரசியல் கேள்விகேட்கப்படவேண்டிய ஒன்று. உலகத்திற்கு எம்மைப் பற்றிய பிழையான விம்பம் கடத்தப்பட்டுவிட்டது.
 
(03)
திரைப்படத்தில் இரண்டு பகுதிகளாக கதை மாந்தர்களைப் பகுத்துள்ளார்கள். ஒன்று யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றவர்கள் மற்றையது கொழும்பில் பேசப்படுகின்ற கலப்புத் தமிழைப் பேசுகிறவர்கள். திரைப்படத்தின் படி யாழ்பாணத் தமிழைப் பேசுகின்றவர்களை நல்லவர்கள் போலவும், மற்றையவர்களை கெட்டவர்கள் அல்லது சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் போலவும்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சாதாரணமாக இதைக் கடந்துவிட முடியாது. இந்திய சினிமாவில் முஸ்லிம்களை எப்படி தீவிரவாதிகளாகவே மாற்றி வைத்திருக்கிறதோ இந்திய சினிமா அதே நிலையை இவர்களுக்கும் உருவாக்கிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களின் நடை, உடை, பாவனைகள், பேச்சு என்று  அனைத்தும் அநாகரீகமானதாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டும். முக்கியமாக அவர்களின் குழுவில் இருக்கின்ற பெண்ணின் பிரதிபலிப்புகள். கட்டையான உடைகளும் மற்றைய ஆண்கள் மீது இலகுவில் மையல் கொள்வது போல சித்தரிப்பதும், அந்தச் சமூகத்தின் எல்லாப் பெண்கள் பற்றிய விம்பமாகவே எடுத்துக்கொள்ளப்படப்போகிறது. ஆனால் அங்கு வந்திருக்கின்ற வெளிநாட்டுக் குடும்பம் பற்றியோ அல்லது கொழும்பிலேயே தங்கிருக்கின்ற யாழ்பாணக் குடும்பம் பற்றியோ எந்தக் குறையும் கூறிவிடாதபடி காட்டப்பட்டுள்ளது.  வயதான ஒருத்தர் தன் மனைவிக்கு பயந்து பயந்து மது அருந்துவதும் அதே மதுவினை மற்றைய  குழுவினர் பெண்களின் முன்னால் எந்தச் சலனமும் இன்றி குடிப்பதும் நகைப்புக்குரிய காட்சிகள் அல்ல.  வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்திலுகின்ற யுவதி ஒருத்தர் சிகரெட்டோ மதுவோ குடிப்பது கிடையாது என்றும் தான் மிகவும் சுத்தமானவள் என்றும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்ற காட்சிகள் மேலும் மேலும் பிரிவினைக்கான அத்திவாரத்தை ஏற்படுத்திக்கொண்ட நகர்கின்றது. இதனை இயக்குனர் தெரிந்து செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்று தெரியவில்லை.
 
இங்கு யாரையும் ஏற்றியோ தாழ்த்தியே பேசவில்லை, கோமாளி கிங்ஸின் வெளிப்பாடுகள் இவை.
 
இலங்கை தமிழ் சினிமா, ஈழத்து சினிமா என்ற இரண்டு சொற்பிரயோகங்கள் பற்றிய கேள்வி என்னுள் எழுகின்றது. இன்று இவற்றைப்பற்றிய தெளிவான புரிதல்களை எமக்குள் உருவாக்காது கடந்துபோய்விட்டால், இலங்கையில் சினிமா தனிச் சக்தியாக இயங்குகின்ற காலத்தில் எமக்கான அனைத்து அடையாளங்களையும் இழந்து விடுவோம்.
 
(04)
 
சினிமா பற்றிய கனவுகளோடு இருப்பவர்களும் திரைப்படக்குழு  மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் திரைப்படத்தைக் கொண்டாட காரணங்கள் நிறைய இருக்கின்றன. சினிமா பற்றிய கனவுகளோடு இருக்கின்ற இளைஞர்கள் கோமாளி கிங்ஸை கொண்டாடக் காரணம், அவர்களின் படைப்புகளும் இன்னொரு நாள் வெளிவரப்போகிறது என்பதாகவே இருக்கிறது. எனக்கு சினிமா ஒன்றினை தொழில்நுட்ப ரீதியில் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. முன்னரே கூறியது போல நான் கார்ட்டூன்களை ரசிப்பவன். ஆனால் ஒரு கலைவடிவம் ஒன்றின் சமூகப் பார்வை பற்றியும் அதன் பிரதிபலிப்புகள் பற்றியும் எனது பார்வைகளை முன்வைக்க முடியும். கோமாளி கிங்ஸ் ஒரு முன்னுதாரண சினிமா அல்ல. தவறான வழி ஒன்றிற்கு அத்திவாரம் தீட்டிவிட்டுப் போயிருக்கிறது. என் கவலைகள் அனைத்தும் இனி வரப்போகின்ற முழு நீளத் தமிழ் திரைப்படங்கள் பற்றியது தான்.
 
பின்குறிப்பு

  1. ஒரு கலைப் படைப்பாக இந்தத்  திரைப்படத்தை அணுகவேண்டிய கட்டாயத்தை இங்கு நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. முழுமையாக வெளிப்பாடுகள் பற்றிய அவதானங்கள் அடிப்படையிலேயே அணுகுகின்றேன்.

 
 
 
 
 

திருவிழா – தளமாற்றம் 

*இலங்கை சட்டக்கல்லூரியில் சட்ட மாணவர் இந்துமகா சபையின் வருடாந்த இதழான நக்கீரம் 2017இல்    வெளிவந்தது.
சிலருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் போது தற்கொலைக்கு முயற்சி செய்வதுண்டு. கண் திருஷ்டியை கழிப்பதற்கு நாற்சந்தியில் சமய அனுட்டனங்களைச் செய்து எரிப்பர். மனதில் நீண்ட சோகம் பரவும் போது வீட்டின் சுவர்களில் ஒட்டப்பட்ட அழகிய ஓவியங்களும் சிற்பங்களும் சாந்தியை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தின் நெருக்கம் உண்ணாவிரதம் போராட்டம் என்று தள மாற்றம் செய்யபடுகிறது. இந்த தளமாற்றம் தான், மனிதனின் நீண்ட இருப்பிற்க்கான அத்திவாரம். மனிதனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தான் உலகின் தொடர்ச்சிக்கான வழிவகையாக இருக்கிறது. மனிதனின் சீரற்ற வாழ்க்கை முறை, அவன் சூழல் சார்ந்த இயல்பான நெருக்கடிகள், அவனின் ஆழ்மனத்தின் சஞ்சலங்கள், உறவுகளினால் ஏற்படுகின்ற சிக்கல்கள், தொழில் ரீதியான அழுத்தங்கள் என்று அவன் வாழ்வின் அத்தனை நிகழ்சிகளும் ஏதோ ஒரு வகையில் இருப்பின் பிரச்சனையாக அமைந்துவிடுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தான் அவனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தேவைப்படுகின்றது. அதற்கான வழிமுறையை மனிதன் தேடவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றான்.
தளமாற்றதிற்க்கான மிக முக்கியமான கருவி திருவிழாக்கள். உலகில் திருவிழாக்களை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. கொண்டாட்டம், கேளிக்கை என்பதைத் தாண்டி திருவிழாக்கள் செய்கின்ற சமூகமாற்றங்கள் பெறுமதிமிக்கவை. அதனாலேயே பண்பாட்டின் மிகுதியாக திருவிழாக்கள் இன்றும் ஓரளவு பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றது. தனி மனித வாழ்வில் பிறப்பு, அறிவிப்பு, பூப்பு, திருமணம் முதிர்ச்சி, வயோதிபம், இறப்பு என்று ஏற்படுகின்ற தளமாற்றங்கள் எவ்வாறு அவ்வவ் பருவத்தின் அறிதல்களையும் புரிதல்களையும் கற்பிதம் செய்கின்றனவோ, – அப்பருவங்களில் வருகின்ற தனி மனித உளவியல் உடலியல் மாற்றங்களையும் அழுத்தங்களையும் நிவர்த்தி செய்கின்றனவோ, அவ்வாறான தொழிலையே மனிதக் கூட்ட இயங்கு தளமான சமூகத்திற்கு திருவிழாக்கள் செய்கின்றன.
ஒரு தொகுதி மக்கள் என்பது கிராமிய அடிப்படையிலோ நகர அடிப்படையிலோ சாதிய இன அடிப்படையிலோ வகுத்துக்கொண்டிருந்தாலும், முக்கியமாக தேவை அடிப்படையில் தான் அந்த தொகுதி உருவாகியிருக்கும். அந்தத் தொகுதிக்கான தேவை நிவர்த்தியாக்களில் ஏற்படுகின்ற இழுவை நிலையில்  அல்லது தேக்கநிலையில் அவர்களுக்கான உந்து சக்தி ஒன்றின் தேவை புலப்படுகின்றது. லெவிஸ்ராஸ் கூற்றின் படி எப்போதெல்லாம் சமூகத்தில் நெருக்கடிகள் உருவாகின்றதோ அப்போதெல்லாம் கூட்டுமானம் வலுவாக புதுப்பிக்கபடுகின்றது. இற்றைக்கு பற்பல ஆண்டுகளுக்கு முன்னராகவே உணரப்பட்டு செயற்பாட்டில் கொண்டுவரப்பட்ட நிகழ்வு திருவிழா. “திரு” என்பது புனிதம் என்ற பொருளில் வருகின்றது போது புனிதமான விழா என்று புரிந்துகொள்ளபடுகின்றது. எமது மரபின் ஆரம்பத்திலேயே திருவிழாக்கள் குறிப்பு பெயரில்லாமல் சடங்காக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. சமூக அழுத்தத்தின் தளம் திருவிழா என்ற சடங்கின் மூலம் இயற்கைக்கு மாற்றப்படுகின்றது. இது நம்பிக்கையின் வாதமாக இருந்தாலும் உளவியல் அடிப்படையில் சமூக மீள் கட்டுமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
திருவிழா என்றதும் ஊர் முழுதும் புனிதம் நிறைந்து விடுகின்றது. எல்லோரிடமும் எல்லா செயல்களிலும் புனிதத்தின் கூறுகள் செயல்படத் தொடங்குகின்றன. அதுவரை பிறழ்வான வாழ்வியலை கொண்டுநடத்திய மக்கள் கூட சரியான வழிக்கு திரும்புவார்கள். தனிமனித சமூக குளறுபடிகள் ஓய்ந்து போயிருக்கும். அமைதியும் ஒழுங்கும் எங்கும் பரந்திருக்கும். சமூகம் முழுக்க உளவியல் ரீதியில் பண்படுத்தப்பட்டிருக்கும். இந்த பண்படுத்தலின் ஆரம்பம் தான் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு வழிகாட்டியாக அமையும். இதனாலேயே திருவிழாக்களுக்கென குறித்த தேதியும் காலமும் இருக்காது. எப்போதெல்லாம் சமூக ஒன்றிணைப்பு தேவைப்படுகிறதோ அப்போது திருவிழாக்கள் நடந்தேறும்.
திருவிழாக்களின் பின்னைய போக்கு சற்று வித்தியாசமானதாக அமைந்தது. திருவிழாக்கள் ஒழுங்கமைக்கும் காரணமும் முறையும் ஆகமம் சார்ந்ததாக மாறத் தொடங்கியது. இன்றைய காலத்தில் காணப்படுகின்ற ஆகம, நாட்டார் வழிபாடுகள் என்ற பாகப் பிரிவினை உருவான காலமாக திருவிழாக்களின் தளமாற்றம் நிகழ்ந்த காலமாக கருத முடியும். காரணம், நாட்டார் வழிபாட்டிலிருந்து ஆகம முறைக்கு வழிபாடுகள் மாறத் தொடங்கியபோது வரைமுறைகளும் கட்டாயங்களும் ஆகமத் திருவிழாக்களில் அதிகமானது. சமூகக் காரணம் கருதி செய்யப்படாமல் பஞ்சாங்கங்களும் ஆகம கோப்புக்களும் திருவிழாக்களின் தேதியையும் காலத்தையும் நிர்ணயிக்கத் தொடங்கின. திருவிழாக்கள் பிராமணிய சமூகத்தின் குறியீடாக மாறத் தொடங்கியது. இருந்தும் மக்களின் பங்குபற்றலும் ஒன்றிணைப்பும் குறிப்பிடும் அளவு இருந்தது. சமயம் என்ற நிறுவனத்தின் பரவலாக்கம் அப்போது அதிகமாக இருந்தது. திருவிழாக் கிரியைகளோடான சாதாரண மக்களின் புழக்கம் நலிந்துகொண்டே வந்தது.
கூடவே நவீன கோட்பாடுகளும் தத்துவங்களும் மேலோங்க தொடங்க தனித்த வாழ்க்கை முறையை மனிதன் தேர்ந்தெடுக்க தொடங்கினான்.சாதியம், இனம், மதம் என்பதைத் தாண்டி கற்ற சமூகம் கல்லாத பாமர சமூகம் என்ற வேற்றுமை உருவாகத் தொடங்கியது. நாட்டார் வழக்கியல் பாமர சமூகத்தினருக்கே என்ற கோசமும் மேலோங்கியதால் திருவிழாக்கள் பிரிவினைக்குரிய பொருளாகிப் போனது. சாதிச் சண்டைகளும், தனிப்பட்ட குரோதங்களும் தீர்த்துக்கொள்ளும் இடமானது. எந்தக் காரணத்திற்காக திருவிழா என்ற சம்பிரதாயம் உருவாக்கபட்டதோ அது தளமாற்றம் அடையத் தொடங்கியது.
இன்றைய திருவிழாக்கள், திரு என்பதை எடுத்து கூத்து என்று மாற்றி வைக்கும் நிலையை அடைந்துள்ளன. உளம், உடல், சுற்றாடல், கிராமம், நகரம் என்று அனைத்திலும் புனிதத்தை விதைக்கின்ற பொறுப்பிலிருந்து திருவிழாக்களும் அவற்றை ஒழுங்குபடுத்துபவர்களும் விலகிவிட்டனர். திருவிழாக்கள் என்றவுடனேயே கேளிக்கைகளுக்கு பஞ்சம் இல்லாத தினமாக மாறிவிட்டது. புனிதம் அமைதி என்ற சொற்கள் எல்லாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் வந்து அதைசுற்றி இருண்மை குடிகொண்டு விட்டது. இன்று ஆகம திருவிழாக்கள்  நாட்டரியல் திருவிழாக்கள்  இரண்டிலும் இருண்மை பற்றிக்கொண்டே இருக்கிறது. இன்றைய திருவிழாகளை அகம் புறம் என்று நிலையியல் சார்பாக பிரித்துக் கொள்கிறேன். திருவிழாவின் அகம் என்பது ஆகம முறையில் பிராமண சமூகத்திடமும் நாட்டார் வழக்கியலில் உரித்து குடும்பத்திடமும் சென்று விட்டது. அகத்தைப் பற்றிய எந்த அறிவும் சாதாரண பொதுமகனிடம் இல்லை. அகத்தின் கூறுகள் எல்லாம் பிராமணர்களின் வசதிக்கு ஏற்ப / உரித்து குடும்பத்தினரின் வசதிக்கு ஏற்ப தளமாற்றம் செய்யபடுகின்றன.
இன்றைய திருவிழாக்களுக்கு கூட்டம் கூட்டாமாக மக்கள் வருகை தருகின்றனர் என்றால் காரணம் திருவிழாகளின் புறம் தான். புறக்கூறுகள் தான் இன்றைய சமுதாயத்தின் அழிவின் சின்னம். இன்றைய திருவிழாக்களின் புறத்தை கார்னிவெல்(carnival) என்றும் கூறலாம். எப்படி ஒரு கார்னிவெல் அத்தனை சமூக இழுக்குகளுக்கும் தளமாக அமைகின்றதோ அதே போன்ற அமைப்பையே திருவிழாக்களின் புறம் கொண்டிருக்கின்றது. திருவிழா என்றாலே இசைக் கச்சேரி காட்டாய காரியம் ஆகிவிட்டது. ஒரு வகையில் இன்றைய திருவிழாக்களுக்கு ஆள் சேர்க்கும் வழிமுறை கூட. மரபிற்கு ஒன்றிரண்டு பக்திப் பாடல்களைப் பாடிவிட்டு ஒரே வேகமாக சினிமா பாடல்களை அடைந்து விடுவார்கள். ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா  கொண்டாட்டத்தில் மூழ்கும். இசைக்கச்சேரிக்கு வந்த கூட்டத்தில் கூட்டமாக போதை தரும் சரக்குகளும் விற்பனை ஆகும். போதையும் இசையும் நடனமும் வயது பேதமின்றி சமூகத்தின் எல்லா நிலைகளையும் ஆட்கொண்டு விடும். காரணமற்ற சண்டைகளின் பிறப்பிடமாக அமைந்து விடுகிறது.
எந்தப் பகைகளையும் தீர்க்க சிறந்த களம் இன்றைய திருவிழாக்கள் தான். இதற்கு காரணம் திருவிழாக்கள் பெரும்பாலும் இரவில் நடப்பவையாக இருக்கின்றது  தானோ தெரியவில்லை. இருட்டில் முகம் தெரிவதில்லை; குணம் தெரிவதில்லை. அதனால் குற்றங்களுக்கு இருட்டின் மறைவு சாதமாகிப் போகின்றது. திருடவும் இது வசதியாகிப் போகின்றது. திருவிழா மண்ணில் நடுவே இருந்து தலையை விரித்து அழுகின்ற பெண்களை இன்றும் காணமுடிகின்றது. ஆண்களால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. திருட்டில் சமீபகாலமாக குழந்தை திருட்டு அதிகம் நடக்கின்றது. மத்திய காலத்தில் திருவிழாகளை கள்ளுக் குடிக்கவும் திருடவும் பயன்படுத்தினார்கள் என்பதில் இருந்து தொடங்கி இன்று அதைத் தொழிலாக செய்கின்ற இடமாகவே மாறி விட்டது. கும்பல் சண்டைகளுக்கு இன்றைய திருவிழாக்கள் மிகப் பிரபலம். வாட்கள், போத்தல்கள், கொட்டன்கள், கத்தி என்று பஞ்சமே இல்லாமல் சண்டையிட்டுக்கொள்வர். பல முக்கிய சண்டைகள் திருவிழா நாட்களிலேயே தேதி குறிக்கபடுகின்றது.
இன்று இளைஞர் யுவதியர் என்பதை தாண்டி எல்லாப் பிரிவினரும் காட்டுகின்ற அலங்கோலம் திருவிழாக்களில் நடந்தேறும். ஒரு முறை திருவிழாக் காலத்தில் பலவகையான வாசனைத்திரவியங்கள் ஒன்று சேர்ந்த நாற்றத்தில் நிற்கமுடியாமல் திண்டாடிய அனுபவங்கள் பலருக்கு உண்டு. இங்கு தான் அவர் அவர்களின் பொருளாதார வசதியைக் காட்டுகின்ற இடமாக இருக்கின்றது. அலங்காரங்கள் எல்லாம் ஒன்றிப்போய் அலங்கோலமாக காட்சி தரும்.
திருவிழாக்களின் அகத்தையும் புறத்தையும் ஆக்கிரமித்துள்ள இன்னொரு பெரும் சக்தி தொழில்நுட்பமாகும். இதன் வருகையையும் ஆக்கிரமைப்பையும் எம் சமூகத்தால் தடுக்கமுடியாமலே போனது. முஸ்லின் சமூகத்தில் இருந்து விலகியிருக்க கூடிய இந்த ஆக்கிரமிப்பு தமிழ் திருவிழாக்களை ஆக்கிரமிப்பது, எமது பண்பாட்டின் பின்னடைவே. மிகக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே பரந்தளவில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அதன் பலத்தை நிருபிக்கின்றது. அதன் முன்னர் நாம் அடிமையாக்கப்பட்ட சமுதாயமாகவே தோன்றுகின்றோம்.
அமைதியையும் ஒற்றுமையையும் பலப்படுத்த உருவாகிய சம்பிரதாயம் எல்லாப் பாவச் செயல்களின் இருப்பிடமாக தளமாற்றம் அடைந்துள்ளது.
எந்த பொருளும் நிகழ்வும் தனது உற்பத்தி நோக்கிலிருந்து விலகும் போது அது வழக்கிலிருந்து அழிந்து போகின்ற நிலையை அடையும். இன்றைய திருவிழாக்களும் வழக்கொழிந்து போகின்றன என்பதன் உட்பொருளும் அதே. மனிதனின் நடவடிக்கைகள் அழித்துவருகின்ற மிக தொன்மையான பண்பாட்டில் திருவிழாவும் ஒன்று. இன்றைய திருவிழாக்கள் குற்றங்களின் குறியீடாக மாறிவிட்டன. இதனை மீண்டும் தளமாற்றம் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம். மீண்டும் புனிதத்தையும் ஒற்றுமையையும் சமூக வலிமையையும் ஏற்படுத்துகின்ற பழைய திருவிழாக்கள் வழக்கொழிந்து போய்விட்டன. இன்றைய நாளைய சமூகம் திருவிழாக்கு பிரதியீடாக இன்னொன்றை உருவாகும் என்ற நம்பிக்கையும் இல்லை.
திருவிழாக்கள் தளமாற்றம் அடைந்து விட்டன.

பெண்ணியம் – கருத்து நிலை விளக்கம்.

சமூகத்தின் கட்டமைப்பில் இருக்கின்ற அடிப்படை அத்துமீறல்கள் காரணமாக ஏற்படுகின்ற கருத்துருவாக்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செறிந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கருத்துருவாக்கங்கள் அக்கால கட்டத்தின் சமூக நிலைமையையும் மக்களின் எண்ணப் பரவலாக்கத்தையும் காட்டும். ஒரு வலிமையான கருத்து எழுந்த போது ஆதரவுகளும் வளர்ச்சியும் பரவலாக்கமும் மாறுதல்களும் எதிர்ப்பும் மிகச் சாதாரணமாக எழுந்துவிடுகின்றன. சில கருத்தியல்கள் காலம் காலமாக கடத்தப்பட்டும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கருத்தின் நீண்டநாள் இருப்பு இரண்டு விடயங்களை வெளிப்படையாக சுட்டும். ஒன்று கருத்தின் ஆழம், மற்றையது கருத்தின் அமுலாக்கமின்மை. இவ்விரண்டும் ஒரு கருத்தியலின் நீண்ட இருப்பிற்கு காரணம்.
 
பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகிய கருத்தியல், இன்று வரை அதே வீச்சுடன் பேசபட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றது என்றால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் அந்த கருத்தியலின் நோக்கம் நிறைவேற்றப்படாமையே ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டு மேன்னாட்டு மக்களிடையே மெதுவாக பரவிய முற்போக்கான சிந்தனையே பெண்ணியம். பெண்ணியம் என்ற வார்த்தைக்குள் பெண்களின் அகம் புறம் சார் அத்தனை கூறுகளும் உள்ளடக்கப்படும். வாழ்க்கைமுறை, கல்வி, திருமணம், ஆசைகள், நிராசைகள், பொறுப்புக்கள், சட்டங்கள் என்று எல்லா துறைசார் விடயங்களும் அடங்கும். வார்த்தை என்பதை தாண்டி பெண்ணியம் என்ற உணர்வுக்குள் உள்ள உள்ளடக்கம் வித்தியாசமானது. பெண்ணியம் என்ற உணர்வு சொல்லுகின்ற செய்திகள் ஆழமானவை.
 
படைப்பின் அடிப்படையிலேயே பெண்கள் மென்மையானவர்கள் என்ற விஞ்ஞான கோட்பாடுகள் உண்டு. மென்மையானவர்கள் என்ற காரணத்தினால் அடிப்படை உரிமைகளை பெறவும் விவாதிக்கவும் பொருத்தமில்லாதவர்கள் என்ற பொருள் அல்ல. எங்கோ ஒரு இடத்தில் உருவாகிய ஆண் மேலாதிக்க இயல்பு கேள்விகள் எதுவுமின்றி தொடர்ந்துகொண்டே வந்தது. எப்போதும் குற்றமுள்ளவர்கள் தான் ஆதிக்கம் உடையவர்கள் என்ற கோட்பாட்டின் படியே காலம் காலமாக இந்த மரபு முறையை பேணிக்கொண்டு வந்தார்கள். மறுப்புகளை பேணுவதில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் அந்த மரபிலிருந்து எழுகின்ற பிரச்சனைகளை தீர்த்து கொள்ளமுடியாமல் மீண்டும் மரபு என்ற பெயரிலே ஆதிக்கம் செலுத்துவது தான் பெண்ணியம் என்ற கருத்தியல் ஆரம்பிக்க கருவாக இருந்தது.
 
பெண்ணியம் என்கிற உரையாடல் வழக்கு மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. மிதவாதப்பெண்ணியம், தீவிரவாதப்பெண்ணியம் மற்றும் சம தர்ம பெண்ணியம் என்பவை அவை.
பதினெட்டாம் நூற்றாண்டிலே மேன்னாட்டு மக்களிடையே முதலாவது அலை பெண்ணியம், இரண்டாவது அலை பெண்ணியம் என்று அவ்வப்போது பெண்கள் தமக்குரிய சில அடிப்படை உரிமைகளுக்காக குரல்களை எழுப்ப தொடங்கினர். குறுகிய பிரதேசத்துக்கு ஒலித்த குரல் ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்படும். பின்னர் வேறொங்கோ ஒலிக்கும் அங்கேயும் இதே நிலைமையை காணலாம். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வப்போது ஒலித்த குரல்களின் சேர்க்கை கொஞ்சம் தீவிரமாக பரவ தொடங்கியது.
 
ஒவ்வொரு பிராந்திய குரல்களும் ஒவ்வொரு பிரச்சனையை முன்வைத்து ஒலித்தன. பொதுப்படையாக கல்வி கற்கும் உரிமை, விரும்பியவரை மணக்கும் உரிமை, பணி புரியும் உரிமை, சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, வாக்குரிமை, தத்தெடுக்கும் உரிமை என்பன முக்கியமானவை. இதில் அதிக கவனமாக வாக்குரிமை தொடர்பான குரல்கள் மேல்லோங்கி ஒலித்தது. மேலை நாடுகளின் இருந்த மேட்டுக்குடி மற்றும் பாட்டாளி  சமூக பெண்களின் பிரச்சனைகள் வேறு வேறாக இருந்தன. மேட்டுக்குடி பெண்கள் எல்லோருமே மனையுறை மகளீராகவே இருந்தனர். அவர்களின் பொழுதுகள் எல்லாம் தமது ஆண்களுக்கு பணிவிடை செய்வதிலேயே கழிந்து போனது. அவர்கள் ஆண்களின் குறைகளை தேடித்தேடி அறிந்து நிவர்த்தி செய்யும் பொறுப்பிலேயே இருந்தார்கள். அவர்களிடம் படிப்பறிவு இருந்தது, ஆனால் அனுபவ அறிவு சுத்தமாக இருந்திருக்க வில்லை. மேட்டுக்குடியினரிடம் வினையே ஆடவர்க்கு மனையே மகளீர்க்கு என்ற பொதுத் தன்மை காணப்பட்டது. இதனால் மேட்டுக்குடி பெண்களின் பிரச்சனை அவர்களின் சுதந்திரமாகவே இருந்தது. அவர்கள் வெளிஉலகை காணவும் , உலக நடவடிக்கைகளோடு தாமும் பங்கு பற்றவும் முனைந்தார்கள். இவர்களின் குரல்கள் இப்படியாக இருக்க பாட்டாளி வர்க்க பெண்களின் குரல்கள் வேறுவிதமாக இருந்தன.
 
வயலில் தொழில் புரியும் உழத்திகள், கடையர் , தயிர் விற்கும் ஆச்சியர், பூவிலைப் பெண்டீர், உப்பு விற்கும் உமட்டியர், பண்ணியம் விற்கும் சிறு வணிகப்பெண்கள், தினைப்புனம் காக்கும் மகளீர் என்று பாட்டாளி வர்க்க பெண்களின் தேவை கல்வி அறிவாகவும், அடிப்படை சமூக அந்தஸ்தை பெற்றுகொள்வதாகவுமே அமைந்திருந்தது. அவர்கள் இருந்த சமூகம் அவர்களுக்கான உரிமைகளை கொடுக்க மறுத்தது. சாதி வர்க்க பிரிவனை அவர்களை வாட்டியது. ஆண் ஆதிக்க சமூகத்தின் இச்சைகளை நிவர்த்தி செய்கின்றதும் மற்றைய நேரங்களில் புறக்கணிக்கப்படுகின்றதுமான நிலைமை காணப்பட்டது. மேட்டுக்குடியினரின் சுதந்திரம் புறமாகவும் பட்டளிமக்களின் சுதந்திரம் அகம் புறம் இரண்டுமாகவும் இருந்தது.
 
சூசன் பாஸன்ட், “பெண்ணியம் வர்க்கம் இனம் தொடர்பானது. இருவரது பின்னணியும் தேவைகளும் புரட்சிகளும் வேறுவேறானவை. அவர்களுக்கான சுதந்திரம் வேறு வேறாக வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.
 
1975 இல் உலக நாடுகளின் பேரவை அந்த ஆண்டை அகில உலக பெண்கள் ஆண்டாக பிரகனப்படுத்தியது. 1975- 1985 வரையான பத்து ஆண்டுகளும் அனைத்துலக மகளீர் பத்தாண்டுகளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகளும் அங்கீகாரமும் பின்னைய காலங்களில் பெண்ணியம் பெரும் கருத்தியலாக ஊன்றி நிற்க மிகப்பெரும் இட்டது.
 
இவ்வாண்டுகளுக்கு முதலே இலங்கையின் உட்கட்டமைப்பு பிரிவுகளில் பெண்களின் வருகை நடந்தேறியது. இலங்கையில் ஆரம்பத்தில் இருந்த பெண்கள் கல்வியின்மை காலத்தோடு குறைந்து, பெண்கள் ஒவ்வொரு துறைகளிலும் தங்கள் பங்களிப்பை செய்யதொடங்கினார்கள். 1881 இல் 3 சதவீதமாக இருந்த பெண்கள் கல்வியறிவு 1921 இல் 21 சதவீதமாக வளர்ச்சி கண்டது. இது இலங்கையில் பெண்ணிய கருத்துகளின் பரவலாக்கதிற்கு சான்றாகிறது. எப்போதுமே ஒரு சமூகத்தில் ஒரு இனமோ ஜாதியோ தமக்கனான இடத்தை காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்றால் அவர்கள் தங்களை கல்வி மட்டத்தில் உயர்த்திக்கொள்ளவேண்டும். கற்ற சமூகம் அடிமைத்தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற கோட்பாடு பெண்ணிய கருத்தியல் செயற்பாட்டாளர்களிடம் வலிமையாக காணப்பட்டது.
 
இலங்கையில் 1890 களில் பறங்கிய இனப் பெண் ஒருவர் இலங்கை மருத்துவ கல்லூரிக்கு தெரிவானார். அவரைத்தொடர்ந்து அலிஸ் டி போயர், வினி பிரெட் என்ற இரு பறங்கிய பெண்கள் இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு மருத்துவம் கற்க சென்றார்கள். (Brohier-1994) 1904 இல் முதல் சிங்களபெண் லூசி டி ஆப்று மருத்துவ கல்லூரிக்கு சென்றார். 1930 இல் சட்ட கல்லூரி பெண்களுக்கான கல்விக்கு அனுமதி அளித்தது. 1934இல் இரண்டு பெண்கள் சட்ட கல்லூரிக்கு பிரவேசித்தார்கள். இதைவிட வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும் இங்கே ஏற்படுத்தப்படிருகின்றன.  1933 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் படித்த எசிலின் ஒபெசெகரா ( தரணிகல) 1930 இல் இந்திய பார்ஸி சமூகப்பெண் அவபாய் மேத்தா போன்றோர் சட்டதரனிகளாக வேலைசெய்திருக்கின்றனர்.
 
இவையெல்லாம் உலகம் பெண்ணிய கருத்தியலை தீவிரமாக்குவதற்க்கு முன்னரே இலங்கையில் உண்டான புரட்சிகள். இவை ஒரு புறமிருக்க, இன்னொரு சமூகத்தின் நிலை இன்றுவரை மோசமாகவே உள்ளது. இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதோ ஒருவகையில் பெண் அடிமைத்தனம் தலை தூக்கியவாறே உள்ளது. இன்று கல்விகற்ற பெண் சமூகம் தமது ஆதிகத்தை செலுத்துகின்ற அதே நேரம் அடிப்படை கல்வி அறிவை பெறமுடியாத நிலையில் பின்தங்கிய கிராமத்து பெண்களின் நிலை இருக்கிறது. இன்றைய தமிழ் சமூகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற பாலியல் வன்முறைகள் இன்னும் பெண் பாகுபாடு ஒழிந்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. இதை ஆணாதிக்கம் அல்லது பெண் நிலை இழிவு என்பதை தாண்டி பெண்ணிய கருத்தியல் சரியான முறையில் சென்றடையவில்லை எனலாம்.
 
எல்லா நிலை சமூகத்திலும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. கற்று அறிந்த சமூகத்தில் ஓரளவுக்கு குறைவு என்றாலும் மறைமுகமாக இன்னும் நடத்தப்பட்டுகொண்டே இருக்கின்றன. கிராமியபுறங்களில் இன்னும் அதே வழக்கத்தில் படிதாண்டா பெண்களை காணக்கூடிய நிலைமை இருக்கின்றது. அப்படியும் அதிலிருந்து கிளர்ந்து வருகின்ற பெண்கள் மேலிடங்களில் சுயலாபத்திற்காக கொடுமைப்படுத்தபடுகின்றதும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதையும் தினசரி அறிகிறோம். இவையல்லாவற்றையும் கடந்து மிளிர்கின்ற கோடியில் ஒரு பெண்ணால் பெண்ணியம் என்ற கருத்தியல் வலுப்பெறுகிறது. ஆனால் முடக்கபடுகின்ற மற்றைய பெண்களும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் போதே முழுமையாக பெண்ணிய கருத்துகள் வெற்றி பெறும்.
 
இன்னும் பெண்ணிய கருத்தியல் பரவலாக இருக்கின்றமைக்கு காரணம் கருத்தியலின் சரியான அமுலாக்கமின்மையும் சரியான விழிப்புணர்வு இன்மையுமே ஆகும். இதிலிருந்து மீள பெண்ணிய கருத்துக்கள் சமூகத்தின் எல்லா மட்டத்திற்கும் எல்லா மக்களிற்கும் ஒரே அளவில் தெளிவாக்கப்படவேண்டும். பெண்களின் சமத்துவம் அவர்களின் உரிமைகள் எல்லோருக்கும் தெரிவிக்கப்படவேண்டும். மீறுகின்ற பட்சத்தில் சரியான தண்டனைகளை கொடுக்கப்படவேண்டும்.
 
இல்லையெனில் பெண்ணியம் பெயர் அளவில் காலா காலமாக எம்முள் இருந்துகொண்டே இருக்கின்ற வலிதற்ற கருத்தியலாகவே போய் விடும்.

களைகள்.

மிகச் சமீப காலமாக எம்மிடையே பரவிக்கொண்டிருகின்ற  இரண்டு வற்றாத நோய்கள் பற்றி எனது தனிப்பட்ட பார்வை என்பதால் இதிலுள்ள கருத்தியல் மிக மட்டமாகவும் கீழ்த்தனமானதாகவும் இருக்கலாம். இதை பற்றி விவாதித்து கொள்ள தேவையில்லை.
 
இலங்கைத் தமிழர் இடையே காலம் காலமாக இருந்துகொண்டிருந்த செந்தீ சமீபத்தில் கீழ் பக்கங்களில் திரண்ட வெள்ளத்தால் அணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எத்தனையோ ஆண்டுகள் சுமந்து வந்த வலியையை மிக சாதாரணமாக வெள்ளம் அணைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் மே மாதத்தில் நடந்திருப்பது தமிழ் மக்களின் மனதில் இன்னும் இன்னும் குளிர்ச்சியை கிளறிவிட்டிருகின்றது. உதவும் கரங்கள், கால்கள், டிப்பர்கள் என்று கீழ் பக்கத்திற்கு சென்றுகொண்டிருகின்றன. வலியென்றால் இதுதான், காலம் தன் வேலையை செய்தே தீரும், பழிக்கு பழி, மே இரு இனத்திற்கும் கறுப்பு மாதம் என்று தமிழையும் உணர்வுகளையும் சந்தோசங்களையும் கூடவே நீங்கள் தயார் என்றால் நாங்கள் வருகின்றோம், சிங்கள சகோதரர்களே என்று போலி ஆட்டின் முகமூடியை போர்த்திகொண்டும் பழிக்கு பலி தீர்த்த இயற்கைக்கு வணக்கம் செய்யும் இழி நிலையில் இன்றைய தமிழ் மக்கள் இருப்பது வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது.
 
சாதாரண மனித பண்புகளை மீறிய அடக்குமுறைக்கும் பேராசை வேட்கைக்கும் நொந்து போயிருக்கிறோம் என்ற வெளிப்படை உண்மையை இவை எனக்கு எடுத்துகாட்டுகின்றன. இதில் உதவும் மனப்பாங்கு என்பது வேறு விதமான அர்த்தத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. “இதுவரையும் எந்த உதவியும் செய்யாத சிங்கள பேரினவாதிகளே பாருங்கள்! நாங்கள் உங்களுக்கு ஒன்று என்றால் உடனே வந்து உதவி செய்கிறோம். மனிதப்பண்பு மிக்க எங்கள் தமிழ் இனத்தையா நீங்கள் அழித்தீர்கள்? “ என்பது தான் இன்றைய ஒவ்வொரு உதவியின் பின்னலான உண்மைகள்.
 
இங்கு கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு ஆவணமும் ஒரு மிகப்பெரிய பிரதி உபகாரத்தை நோக்கியே இருகின்றது. சிலதை தவிர இங்கே எங்களின்  (தமிழ் மக்களின்) சுயநலம் மேலோங்குகின்றது போல எனக்கு தோன்றுகின்றது.
 
அடுத்த விடயம் இன்று சிந்தனை செயல் இரண்டு தளத்திலும் நடக்கின்ற மிக திறமையான விடயங்கள், அதன் பின்னால் நின்று உழைத்த ஆளுமைகள் யார் என்றே தெரியாமல் மெழுகப்பட்டு லாவகமாக உடை குச்சிகள் ஏறிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர். வெளிப்படையாக எந்த தகுதியும் இல்லாதவர்கள் வேடமிட்டுக்கொண்டு உரியவர்களின் ஆளுமைகளை மறைப்பது எந்நாட்டிலும் மிக கொடிய குற்றம், தெரிந்தோ தெரியாமலோ (சம்பிரதாயத்திற்காக) இன்றைய கற்று அறிந்த சமூகத்தினர் இதில் மிக தீவிரமாக ஈடுபடுகின்றனர். இது தான் தீவிரவாதம். எமது சமூக ஆளுமைகளை அடியோடு அமர்த்தும் கொடிய தீவிரவாதம்.
 
சங்கடமான செய்தி என்னவென்றால் நடைபெறுகின்ற குப்பை கேளிக்கைகளில் நாங்கள் எந்தப்பக்கம் என்பதிற்கு மிக நுட்பமான உரையாடல்கள் வேறு. இதை எந்த திசையில் ஆரம்பித்து களைய வேண்டும் என்பதே தெரியவில்லை.
 
முதலாவது விடயம் இனத்தின் இழுக்கு இரண்டாவது தனிமனித இழுக்கு.
 
எதைக்களைவது முதலில்?