சுஜாதா – அவரின் வாசகர்கள் , வாதம் ௦2

வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.
இது லதீபன் அண்ணா அவர்களால் வாசிப்பு , சுஜாதா தொடர்பாக பகிரப்ட்ட பதிவிற்க்கான பின்னூட்டங்கள்

பதிவு

மற்றவர் பாராட்ட வேண்டும்,நம்மை கொண்டாட வேண்டும் என்ற நினைப்பிலே எழுத்துற்கு வந்தால் நீ நாசம்.
இங்கே நிறைய குப்பைமேடுகள் உண்டு அதிலே போய் உறக்கம் கொள்ளும் உன் எழுத்து.ஒருநாள் சரியத்தான் போகுது.
நிறைய விடயங்கள் வாசிக்க உண்டு.உலகம் போய்க்கொண்டிருக்கும் கடைசி விம்பநிலையினை நுனிப்புல் தனை மேய்ந்து விட்டேனும் எழுத்துக்கு வரலாம்
பாகுபலிகள், IPL, அனைவருக்கும் பிடிக்கிறது, ஆகா ஓகோ என்கிறார்கள்.ஆனால் உள்ளுக்குள் இருப்பதென்ன உன் id மனநிலையை காவு கொள்ளும் விடயங்கள் தான்.
வெறும் Cake இன் Icing மட்டும் நன்றாக இருப்பதால் அதை சாப்பிட முடியுமா? என்பது சந்தேகம் தானே?
அவ்வாறு தான் வாசிப்பற்ற எழுத்தும், வேண்டும் என்றால் சுஜாதாவின் சீடனாகலாம்.

எழுதுவதற்கு முதல் வாசிக்க நிறையவே உண்டு.வாசித்தவற்றை மற்றவர்களுடன் கலந்துரையாடும் போதே அது முழுமையாகும்.
ஆகவே இளந்தலைமுறையான நாங்கள் நிறைய வாசிப்போம் கலந்து பேசும் அதன் பின் எழுதுவோம்.

எனது பின்னூட்டம்

 
இங்கு சொடுகப்பட்டேன் என்னும் காரணத்தினால் எனக்கும் இந்த வாதங்களில் பங்குண்டு என்று எடுத்துக்கொள்கிறேன்.
பதிவின் நோக்கம் வலிமையான இலக்கிய எழுத்துக்கள் எம்மிடையே எழ வேண்டும் என்ற நோக்கில் எழுதபட்டிருப்பதாக எனக்கு தெரிகின்றது. பதிவை ஒரு பொழுதுபோக்கு வாசகன் என்ற நிலையில் இருந்து பார்க்காமல் தமிழ் இலக்கிய நலன் விரும்பி என்ற நிலையில் பார்க்கும் போது பதிவின் அத்தியாவசியத்தை விளங்கிக்கொள்ளலாம். என் தலைமுறை வாசகர்கள் வணிக எழுத்து என்ற மீளமுடியா வட்டத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை இன்று விஸ்தரித்து போய் விட்டது. வணிக எழுத்துகள் அளவுக்கு மீறி எம்மை சுற்றி இருப்பதால் வாசகன் அவற்றை படித்து பகுத்து அறிந்து கொள்ளும் கால எல்லை மிக நீளமானதாகவே நினைக்கிறன். பலர் மீளமுடியாமல் போன இடங்களும் உண்டு. இந்த அதிக கனமான எழுத்துக்குவியல் வாசகனை வாசகன் என்ற நிலையில் இருந்து வெளிக்கொண்டுவராது.
ஆரம்ப நிலை வாசகன் சுஜாதாவிலிருந்து ஆரம்பித்தல் பொருத்தமானதே. ஆனால் அவனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு தகுந்த வழிகாட்டல் அவசியமே. எம் சமூகத்தில் பலரின் வழிகாட்டல் மேலும் மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிடகூடும். இதனால் வாசிப்பை பற்றிய வாதங்களும் பகிர்வுகளும் கலந்துரையாடல்களும் எம்மிடையே அவசியம். இன்று எம்மவர்கள் பலர் சரியான வாசிப்பு வழிநடத்தல்கள் இன்றி மட்டமான படைப்புகளை வெளிக்கொண்டுவருவது அவர்களின் பிழை இல்லை. சரியான வழிநடத்தல்கள் இன்மையே காரணம். இதை அனுபவம் உள்ளவர்கள் செய்வது மிக குறைவு.
 

சுஜாதா – அவரின் வாசகர்கள்.

இன்று தமிழின் முக்கிய எழுத்தாளுமையான சுஜாதா என்கிற ரங்கராஜனின் பிறந்தநாள் ஆகும்.
 
வணிக எழுத்துலகு என்றால் அதுவும் தமிழ் வணிக எழுத்துலகு என்றால் மிக முக்கியமாக பலரின் புலன்களுக்குள் அகப்படுபவர் சுஜாதா. தமிழ் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நம்பியிருக்கும் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் உற்பத்தியாகிய எழுத்தாளர்ளுள் முக்கியமானவர். அன்றைய தமிழ் சமூக அறிவுநிலையையும், அவர்களின் பொழுதுபோக்கு தேவையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எழுததொடங்கினார். இந்த புள்ளி தான் சுஜாதாவின் எழுத்தாளுமையின் அளவு கோல் ஆகும். எழுத்தாளன் ஒரு வரையறைக்குள் தனது சிந்தனைகளையும் எழுதும் புலன்களையும் ஒடுக்கும் போது உள்ளடக்க பற்றாக்குறையும் அழகியல் பற்றாக்குறையும் எழுந்து விடும். சுஜாதாவிற்கு நடந்ததும் இதுவே. சுஜாதாவின் ஆரம்ப எழுத்துகள் ஒரு எழுத்தாளனின் கீழ் நிலையையும் எழுத்தாளன் வாசிப்பாளர் உறவு நிலையையும் மையபடுதியதாகவே இருந்தது. இந்த எழுத்தியல் உறவு நிலையை பற்றி பிடித்துக்கொண்ட சுஜாதா வாசகர்களின் கவனத்தை பெறுகின்றார்.
 
இந்த உடன் கவனிப்பும் ஆதரவும் தான் சுஜாதா என்ற எழுத்தாளனை முடங்க செய்ததாக உணர்கின்றேன். ஒரு எழுத்தாளனுக்கான அடிப்படை போராட்டம் அவற்றிற்கு இருக்கவில்லை. வெகுஜன ஊடக வாசகர்கள் சுஜாதாவை ஆதரித்த விதம் சுஜாதாவின் பேனைகள் தொடவேண்டிய பல இடங்களுக்கு முட்டுகையாக இருந்திருக்கிறது. எல்லா தரப்பு வாசகர்களையும் கவர வேண்டிய ஊடக கட்டாயம் அவரின் பரந்த கற்பனை உலகை இல்லாமல் செய்து விட்டது. தனது எழுத்துலக வாசகர் என்ற அளவுகோலையே தன் எழுத்துகளின் அளவுகோலாக மாற்றி அமைத்து கொண்டார். அவரின் சிந்தனைகளை வாசனுக்காய் குவியப்படுத்த வேண்டிய கட்டாயம் அவரின் எழுத்தழகியலை மழுங்கடித்து விட்டது. வாசகனுக்காய் எழுதியவற்றிலிருந்து உன்னத புனைவுகளை பிரித்தெடுப்பது சுஜாதா வாசகர்களுக்கு மிக கடுமையான விடயம். ஒரு வகையில் அவர்கள் அதை செய்யபோவதும் இல்லை.
 
சுஜாதாவின் மொழிநடை எளிமை என்று வரையறைபடுத்தமுடியாது. எளிமையான மொழிநடையை கையாண்ட அசோகமித்திரனின் தாக்கம் சுஜாதாவின் மொழிநடையில் இருப்பதனால் அவ்வாறான முடிவினை எடுத்துவிடுகின்றோம். ஆனால் சுஜாதா கொண்டிருந்த மொழி வணிகத்தனமானது. இருவழிகளில் அதை நிறுவலாம். ஒன்று அவரின் வாசகர்களில் அதிகரிப்பதால் பத்திரிகையோ சஞ்சிகையோ ஏற்படுத்தக்கூடிய வணிகம். இரண்டு எழுத்தியல் கூறுகளில் ஏற்படுத்தக்கூடிய வியாபர வணிகம். இவை இரண்டையும் ஒருங்கே சேர்த்த மொழிநடை அவரது. ஒரு லாபநோக்கான மொழிநடையில் புலமைக்கான கூறுகள் பஞ்சமே.
 
சிறுகதைகளிலும் சரி நாவல்களிலும் சரி விடயபரப்பை  தாண்டிய பார்வை சுஜாதாவிடம் இருந்திருக்கவில்லை. இன்று மகத்தான இலக்கியங்கள் எல்லாமே ஒரு பரந்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். சாதாரண பொழுது போக்கி வாசகன் எதிர்பார்க்கின்ற விறுவிறுப்பு அசாத்திய ஏற்ற இறக்கம் சுஜாதாவை விடயபரப்பின் மீது கொள்ள கூடிய கரிசனையை குறைகின்றது. பொழுதுபோக்கு என்பதை தாண்டி வாசிக்க நகர்கின்ற வாசனுக்கு வெறும் எழுத்துக்களையே மிச்சம் வைக்கின்றன. இந்த வெறுமையை வாசகன் ஏதோ ஒரு நிலையில் அடைந்துவிடுகிறான். அதன் பின்னர் விமர்சிக்க தொடங்குகிறான். சுஜாதவை ஆதரித்ததும் அவனாகவே விமர்சிப்பவனும் அவனாகவே இருக்கின்ற படிநிலை மாற்ற கால எல்லைக்குள் சுஜாதா வணிக எழுத்தாளனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.