அன்று தமிழ் மாருதம் விமர்சையாக நடந்துகொண்டிருந்தது. இலக்கிய நிகழ்வுகளோடு மண்டபத்தின் அருகில் இருந்த நீண்ட திறந்த வெளியில் பூபாலசிங்கம் புத்தக நிலைய புத்தக விற்பனை மையமும் போடப்பட்டிருந்தது. வரிசைக்கு நான்கு ஐந்து மேசைகள் வைத்து புத்தகங்களை பரவி விட்டிருந்தார்கள். நிகழ்வுகளை கவனிக்கும் அதே வேளை பார்வையாளர்களையும் கவனிக்கவேண்டி இருந்ததால் இரண்டு மூன்று கட்டமாக புத்தகங்களை கொள்வனவு செய்தேன். அப்போது அப்துல் ரகுமானின் கவிதைகள் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. நிகழ்வுகளுக்கு முன்னரே இருக்கின்ற அவரின் புத்தகங்களில் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று வாங்கியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அவ்வாறே அதுவும் நிறைவேறியது. இடையிடையே பலரோடு புத்தகங்களை பார்க்கவும் அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் முயன்றேன். மதுரகன் அண்ணாவுடன் புத்தகங்களை பார்த்துகொண்டு சென்றபோது தான் அந்த நிகழ்வு நடந்தது.
அப்துல் ரகுமானின் சில புத்தகங்களை காட்டிவிட்டு ஒரு அறுபது பக்க அளவுள்ள சிறிய கருமை நிற மட்டையில் பென்சிலால் யாரோ ஒரு கிழவனின் சித்திரம் வரையப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். பள்ளம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது கீழே சுந்தர ராமசாமி என்று அச்சிடப்பட்டிருந்தது. வித்தியாசமான எழுத்து பிடித்திருந்தால் வாசித்து பார்க்கலாம் என்று கூறி அதை அன்பளிப்பாகவும் தந்தார். உண்மையில் ஒதுக்கியிருந்த பணத்தை ஏற்கனவே அப்துல் ரகுமான் கைப்பற்றி விட்டதால் பள்ளம் அன்பளிப்பனது. இது மற்றவர்கள் கூறுவது போல எதேச்சையாக கிடைத்த பொக்கிசமாக எல்லாம் நான் கருதவே இல்லை. சிறுகதை வாசிப்பிலும் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. வாங்கிகொண்டுவந்து ஒதுக்கி வைத்து விட்டேன். உள்ளே திறந்து கூட பார்க்கவில்லை. அப்போது இருந்த மனநிலையில் அப்துல் ரகுமானை முழுமையாக வாசித்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தேன். எல்லோர் போலும் இல்லாமல் கல்கியை ஆரம்பத்தில் வாசிக்கவில்லை, சாண்டில்யனை வாசிக்கவில்லை, சுஜாதாவை வாசிக்கவில்லை, ராஜேஷ்குமாரை வாசிக்கவில்லை. நான் வாசித்த முதல் சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தனினுடையது. காலத்தால் பிந்திப்போன முற்போக்கு சிறுகதைகளை வாசித்த மாத்திரத்தில் எனக்குள் எந்த சஞ்சலமும் ஏற்படவில்லை. அவரிலிருந்து வாசிப்பை கொஞ்ச பரவலாக்கி மற்றைய எல்லோரையும் சமாந்தரமாக வாசிக்க தொடங்கினேன். இதில் கூட சுந்தர ராமசாமின் அகப்படவில்லை. ஒருவர் தனது உரையில் சுந்தர ராமசாமியை பற்றியும் அவரின் கருத்து நிலையை பற்றியும் தொட்டு செல்ல பள்ளம் ஞாபகம் வந்தது. சுந்தர ராமசாமியை விக்கிபீடியாவில் தேடிய அறியாமை என்னுள் இருந்தது. காலச்சுவட்டின் பிரதம ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது சுந்தர ராமசாமியை எனக்குள் ஒரு உச்ச நிலைக்கு உயர்த்தியது. பின்னரான காலத்தில் எனது ஒப்பியல் அறிவை நினைத்து சிரித்துக்கொள்ள இதுவும் சான்றானது. பின்னர்தான் பள்ளம் சிறுகதை தொகுப்பை திறந்தேன்.
முதலாவது கதையே ரத்னாபாயின் ஆங்கிலம், அவ்வளவு கொடுமையான வாசிப்பு அனுபவம் சாரு நிவேதிதாவின் மொழிபெயர்ப்பு கதைகளில் தவிர வேறு எதிலும் வந்ததில்லை. அத்தோடு மூடி வைத்து விட்டேன். சுந்தர ராமசாமியாவது? பள்ளமாவது?

2006 ம் ஆண்டு காலச்சுவட்டில் அரவிந்தன் எழுதிய சுந்தர ராமசாமி பற்றிய மதிப்புரை போன்ற கட்டுரை ஒன்றை வாசித்தேன். அந்த கட்டுரையில் சுந்தர ராமசாமியை அரவிந்தன் உயர்த்திக்கொண்ட பாங்கு என்னை வியக்க வைத்தது. மிக கொடுமையான எழுத்துகளை எழுதுபவர் ஒருவரையா இவர் இப்படி எழுதுகின்றார்? என்ற எண்ணம் ஓடியது. அதில் அறிமுகமாகியது தான் குரங்குகள் சிறுகதை.
குரங்குகள் பெயரை கேட்ட மாத்திரத்தில் பள்ளம் சிறுகதை தொகுப்பில் தலைப்பை மட்டும் பார்த்த நினைவு எழுந்தது. குரங்குளை வாசித்தேன். அதுவரையில் யாருடைய மொழி நடையிலும் கதை சொல்லலிலும் ஒன்றிப்போகாத நான், குரங்குகளோடும் சுராவோடும் ஒன்றிப்போனேன். குரங்குகளில் இருந்த முற்போக்கு தனம், அவரின் கருத்து நிலை ஆழம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டேன். வாசித்த உடனேயே ரத்னாபாயின் ஆங்கிலத்தையும் வாசித்தேன். எனது வாசிப்பின் பரிமாண வளர்ச்சிக்கு ரத்னாபாயின் ஆங்கிலம் ஒரு அளவுகோலாக இருந்தது. கொடூரமான எழுத்து என்று வசை பாடிய ரத்னாபாயின் ஆங்கிலம் இன்றுவரை வாசித்த மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகியது. சாருவின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இன்றைய நாளில் வாசிக்க சுவைப்பவையாக இருகின்றதிற்கு காரணம் சாருவா அல்லது அசல் எழுத்தர்களின் ஆளுமையா தெரியவில்லை.
தொடர்ந்து அவரின் புத்தகங்களை வவுனியாவில் தேடிப்போனால் வேறு ஏதாவது புத்தகங்களோடு தான் வந்து சேரவேண்டிய நிலைமை இருந்தது. இலக்கிய பகுதியை காட்டச் சொன்னால் , அப்படி ஒரு பிரத்தியோக பகுதி இல்லை என்றார்கள். நாவல்கள் சிறுகதைகள் கேட்டால் , ரமணிச்சந்திரனின் பக்கம் கையை நீட்டுகிறார்கள். ஒரு முறை ராமனிச்சந்திரனுடன் இருந்த சாதத் ஹசன் மண்ட்டோ அலட்சியப்படுத்தப்பட்டு சில காலத்திற்கு முதல் அதே இடத்திலிருந்து அணுவளவும் அசையாமல் கிடைக்கப்பெற்றார். இந்த நிலையில் எங்குபோய் சுராவை தேடுவது?

அவரின் சிறுகதைகளை இணையத்தில் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொள்வேன். ஒரு முறை அவரின் கவிதை ஒன்றையும் காணுற்ற போது தான் சுரா கவிதைகளையும் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையில் அதுவரையில் சுந்தர ராமசாமியை வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளராகவே எண்ணிக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் நூலகத்தில் அங்கத்துவமும் கிடைத்தது. முதலில் சென்று எடுத்த புத்தகம் டால்ஸ்டாயின் போரும் அமைதியும். வாசிக்காமலே திரும்பி கொடுத்து விட்டு காகங்கள் சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். ஒவ்வொரு சிறுகதையாக வாசிக்க தொடங்கி மூன்று நாட்களுக்குள் முடித்துக்கொண்டு உடனே ஆளுமைகள் மதிப்பீட்டினையும் வாசிக்க தொடங்கினேன். ஆளுமைகள் மதிப்பீடு இன்று வரை என் வாசிப்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்ற ஒரு படைப்பாகவே இருக்கின்றது.
தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஒரு புளியமரத்தின் கதை , ஜே ஜே சில குறிப்புகள், பிரசாதம், தொலைவிலிருக்கும் கவிதைகள் , நடுநிசி நாய்கள், இதம் தந்த வரிகள் ,விரிவும் ஆழமும் தேடி , யாரோ ஒருவனுக்காக போன்றவற்றை வரவழைத்து உடைமை ஆக்கிக்கொண்டேன். நூலகத்தில் குழந்தை பெண்கள் ஆண்கள், மற்றும் சில கட்டுரைகளையும் வாசித்தேன்.
சுந்தர ராமசாமியின் கதைகளை பிராமணிய தொனியுடன் , நளினத்துடன் வாசிக்கும் போது எனக்கு இன்னும் உவர்ப்பாக இருந்தது. எழுத்தாளன் என்பதை தாண்டி ஒரு சிறந்த விமர்சன உரையாளனாகவும் பேச்சாளனாகவும் இருந்தார்.
சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம் பார்த்து அவரின் வாழ்க்கை மீதும் அவரின் எழுத்துநிலை விளக்கங்கள் பற்றியும் அறிந்தேன். சுந்தர ராமசாமியின் கருத்தியலை ஆதாரமாக்கி பல எழுத்தாளர்கள் தமது விமர்சனங்களை செய்வதை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். இன்றைய சூழலில் ஆளுமைகள் மதிப்பீடு என்னை மிகவும் பாதித்த/ எனக்குள் சுய விமர்சனம் செய்யகூடிய திறனை வளர்க்க உதவிய/ எனக்கான கருத்தியலுக்கு அடித்தளமிட்ட படைப்பாகி விட்டது.
அப்போது வித்தயாசமான எழுத்து என்றும் கொடுமையான எழுத்து என்றும் ஒதுக்கிய எழுத்துகள் இன்று என்னுள் பரந்து விரிந்து போய் இருக்கின்ற மாயம் சுந்தர ராமசாமி என்னும் மகத்தான படைப்பாளியால் செய்ய முடிந்தது.
சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம்.
அரவிந்தனின் சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரை.
https://azhiyasudargal.wordpress.com/2010/10/14/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/
அழியாச்சுடரில்
http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF