ஒரு படைப்பாளியும் மூன்று மனநிலையும். – சுந்தர ராமசாமியின் பிறந்த நாள் நினைவு.

அன்று தமிழ் மாருதம் விமர்சையாக நடந்துகொண்டிருந்தது. இலக்கிய நிகழ்வுகளோடு மண்டபத்தின் அருகில் இருந்த நீண்ட திறந்த வெளியில் பூபாலசிங்கம் புத்தக நிலைய புத்தக விற்பனை மையமும் போடப்பட்டிருந்தது. வரிசைக்கு நான்கு ஐந்து மேசைகள் வைத்து புத்தகங்களை பரவி விட்டிருந்தார்கள். நிகழ்வுகளை கவனிக்கும் அதே வேளை பார்வையாளர்களையும் கவனிக்கவேண்டி இருந்ததால் இரண்டு மூன்று கட்டமாக புத்தகங்களை கொள்வனவு செய்தேன். அப்போது அப்துல் ரகுமானின் கவிதைகள் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. நிகழ்வுகளுக்கு முன்னரே இருக்கின்ற அவரின் புத்தகங்களில் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று வாங்கியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அவ்வாறே அதுவும் நிறைவேறியது. இடையிடையே பலரோடு புத்தகங்களை பார்க்கவும் அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் முயன்றேன். மதுரகன் அண்ணாவுடன் புத்தகங்களை பார்த்துகொண்டு சென்றபோது தான் அந்த நிகழ்வு நடந்தது.

அப்துல் ரகுமானின் சில புத்தகங்களை காட்டிவிட்டு ஒரு அறுபது பக்க அளவுள்ள சிறிய கருமை நிற மட்டையில் பென்சிலால் யாரோ ஒரு கிழவனின் சித்திரம் வரையப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். பள்ளம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது கீழே சுந்தர ராமசாமி என்று அச்சிடப்பட்டிருந்தது. வித்தியாசமான எழுத்து பிடித்திருந்தால் வாசித்து பார்க்கலாம் என்று கூறி அதை அன்பளிப்பாகவும் தந்தார். உண்மையில் ஒதுக்கியிருந்த பணத்தை ஏற்கனவே அப்துல் ரகுமான் கைப்பற்றி விட்டதால் பள்ளம் அன்பளிப்பனது. இது மற்றவர்கள் கூறுவது போல எதேச்சையாக கிடைத்த பொக்கிசமாக எல்லாம் நான் கருதவே இல்லை. சிறுகதை வாசிப்பிலும் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. வாங்கிகொண்டுவந்து ஒதுக்கி வைத்து விட்டேன். உள்ளே திறந்து கூட பார்க்கவில்லை. அப்போது இருந்த மனநிலையில் அப்துல் ரகுமானை முழுமையாக வாசித்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தேன். எல்லோர் போலும் இல்லாமல் கல்கியை ஆரம்பத்தில் வாசிக்கவில்லை, சாண்டில்யனை வாசிக்கவில்லை, சுஜாதாவை வாசிக்கவில்லை, ராஜேஷ்குமாரை வாசிக்கவில்லை. நான் வாசித்த முதல் சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தனினுடையது. காலத்தால் பிந்திப்போன முற்போக்கு சிறுகதைகளை வாசித்த மாத்திரத்தில் எனக்குள் எந்த சஞ்சலமும் ஏற்படவில்லை. அவரிலிருந்து வாசிப்பை கொஞ்ச பரவலாக்கி மற்றைய எல்லோரையும் சமாந்தரமாக வாசிக்க தொடங்கினேன். இதில் கூட சுந்தர ராமசாமின் அகப்படவில்லை. ஒருவர்  தனது உரையில் சுந்தர ராமசாமியை பற்றியும் அவரின் கருத்து நிலையை பற்றியும் தொட்டு செல்ல பள்ளம் ஞாபகம் வந்தது. சுந்தர ராமசாமியை விக்கிபீடியாவில் தேடிய அறியாமை என்னுள் இருந்தது. காலச்சுவட்டின் பிரதம ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது சுந்தர ராமசாமியை எனக்குள் ஒரு உச்ச நிலைக்கு உயர்த்தியது. பின்னரான காலத்தில் எனது ஒப்பியல் அறிவை நினைத்து சிரித்துக்கொள்ள இதுவும் சான்றானது. பின்னர்தான் பள்ளம் சிறுகதை தொகுப்பை திறந்தேன்.

முதலாவது கதையே ரத்னாபாயின் ஆங்கிலம், அவ்வளவு கொடுமையான வாசிப்பு அனுபவம் சாரு நிவேதிதாவின் மொழிபெயர்ப்பு கதைகளில் தவிர வேறு எதிலும் வந்ததில்லை. அத்தோடு மூடி வைத்து விட்டேன். சுந்தர ராமசாமியாவது? பள்ளமாவது?

2006 ம் ஆண்டு காலச்சுவட்டில் அரவிந்தன் எழுதிய சுந்தர ராமசாமி பற்றிய மதிப்புரை போன்ற கட்டுரை ஒன்றை வாசித்தேன். அந்த கட்டுரையில் சுந்தர ராமசாமியை அரவிந்தன் உயர்த்திக்கொண்ட பாங்கு என்னை வியக்க வைத்தது. மிக கொடுமையான எழுத்துகளை எழுதுபவர் ஒருவரையா இவர் இப்படி எழுதுகின்றார்? என்ற எண்ணம் ஓடியது. அதில் அறிமுகமாகியது தான் குரங்குகள் சிறுகதை.

குரங்குகள் பெயரை கேட்ட மாத்திரத்தில் பள்ளம் சிறுகதை தொகுப்பில் தலைப்பை மட்டும் பார்த்த நினைவு எழுந்தது. குரங்குளை வாசித்தேன். அதுவரையில் யாருடைய மொழி நடையிலும் கதை சொல்லலிலும் ஒன்றிப்போகாத நான், குரங்குகளோடும் சுராவோடும் ஒன்றிப்போனேன். குரங்குகளில் இருந்த முற்போக்கு தனம், அவரின் கருத்து நிலை ஆழம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டேன். வாசித்த உடனேயே ரத்னாபாயின் ஆங்கிலத்தையும் வாசித்தேன். எனது வாசிப்பின் பரிமாண வளர்ச்சிக்கு ரத்னாபாயின் ஆங்கிலம் ஒரு அளவுகோலாக இருந்தது. கொடூரமான எழுத்து என்று வசை பாடிய ரத்னாபாயின் ஆங்கிலம் இன்றுவரை வாசித்த மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகியது. சாருவின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இன்றைய நாளில் வாசிக்க சுவைப்பவையாக இருகின்றதிற்கு காரணம்  சாருவா அல்லது அசல் எழுத்தர்களின் ஆளுமையா தெரியவில்லை.

தொடர்ந்து அவரின் புத்தகங்களை வவுனியாவில் தேடிப்போனால் வேறு ஏதாவது புத்தகங்களோடு தான் வந்து சேரவேண்டிய நிலைமை இருந்தது. இலக்கிய பகுதியை காட்டச் சொன்னால் , அப்படி ஒரு பிரத்தியோக பகுதி இல்லை என்றார்கள். நாவல்கள் சிறுகதைகள் கேட்டால் , ரமணிச்சந்திரனின் பக்கம் கையை நீட்டுகிறார்கள். ஒரு முறை ராமனிச்சந்திரனுடன் இருந்த சாதத் ஹசன் மண்ட்டோ அலட்சியப்படுத்தப்பட்டு சில காலத்திற்கு முதல் அதே இடத்திலிருந்து அணுவளவும் அசையாமல் கிடைக்கப்பெற்றார். இந்த நிலையில் எங்குபோய் சுராவை தேடுவது?

அவரின் சிறுகதைகளை இணையத்தில் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொள்வேன். ஒரு முறை அவரின் கவிதை ஒன்றையும் காணுற்ற போது தான் சுரா கவிதைகளையும் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையில் அதுவரையில் சுந்தர ராமசாமியை  வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளராகவே எண்ணிக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் நூலகத்தில் அங்கத்துவமும் கிடைத்தது. முதலில் சென்று எடுத்த புத்தகம் டால்ஸ்டாயின் போரும் அமைதியும். வாசிக்காமலே திரும்பி கொடுத்து விட்டு காகங்கள் சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். ஒவ்வொரு சிறுகதையாக வாசிக்க தொடங்கி மூன்று நாட்களுக்குள் முடித்துக்கொண்டு உடனே ஆளுமைகள் மதிப்பீட்டினையும் வாசிக்க தொடங்கினேன். ஆளுமைகள் மதிப்பீடு இன்று வரை என் வாசிப்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்ற ஒரு படைப்பாகவே இருக்கின்றது.

தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஒரு புளியமரத்தின் கதை , ஜே ஜே சில குறிப்புகள், பிரசாதம், தொலைவிலிருக்கும் கவிதைகள் , நடுநிசி நாய்கள், இதம் தந்த வரிகள் ,விரிவும் ஆழமும் தேடி , யாரோ ஒருவனுக்காக போன்றவற்றை வரவழைத்து உடைமை ஆக்கிக்கொண்டேன். நூலகத்தில் குழந்தை பெண்கள் ஆண்கள், மற்றும் சில கட்டுரைகளையும் வாசித்தேன்.
சுந்தர ராமசாமியின் கதைகளை பிராமணிய தொனியுடன் , நளினத்துடன் வாசிக்கும் போது எனக்கு இன்னும் உவர்ப்பாக இருந்தது. எழுத்தாளன் என்பதை தாண்டி ஒரு சிறந்த விமர்சன உரையாளனாகவும் பேச்சாளனாகவும் இருந்தார்.
சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம் பார்த்து அவரின் வாழ்க்கை மீதும் அவரின் எழுத்துநிலை விளக்கங்கள் பற்றியும் அறிந்தேன். சுந்தர ராமசாமியின் கருத்தியலை ஆதாரமாக்கி பல எழுத்தாளர்கள் தமது விமர்சனங்களை செய்வதை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். இன்றைய சூழலில் ஆளுமைகள் மதிப்பீடு என்னை மிகவும் பாதித்த/ எனக்குள் சுய விமர்சனம் செய்யகூடிய திறனை வளர்க்க உதவிய/ எனக்கான கருத்தியலுக்கு அடித்தளமிட்ட படைப்பாகி விட்டது.

அப்போது வித்தயாசமான எழுத்து என்றும் கொடுமையான எழுத்து என்றும் ஒதுக்கிய எழுத்துகள் இன்று என்னுள் பரந்து விரிந்து போய் இருக்கின்ற மாயம் சுந்தர ராமசாமி என்னும் மகத்தான படைப்பாளியால் செய்ய முடிந்தது.

சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம்.

அரவிந்தனின் சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரை.
https://azhiyasudargal.wordpress.com/2010/10/14/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/
அழியாச்சுடரில்
http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF

களைகள்.

மிகச் சமீப காலமாக எம்மிடையே பரவிக்கொண்டிருகின்ற  இரண்டு வற்றாத நோய்கள் பற்றி எனது தனிப்பட்ட பார்வை என்பதால் இதிலுள்ள கருத்தியல் மிக மட்டமாகவும் கீழ்த்தனமானதாகவும் இருக்கலாம். இதை பற்றி விவாதித்து கொள்ள தேவையில்லை.
 
இலங்கைத் தமிழர் இடையே காலம் காலமாக இருந்துகொண்டிருந்த செந்தீ சமீபத்தில் கீழ் பக்கங்களில் திரண்ட வெள்ளத்தால் அணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எத்தனையோ ஆண்டுகள் சுமந்து வந்த வலியையை மிக சாதாரணமாக வெள்ளம் அணைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் மே மாதத்தில் நடந்திருப்பது தமிழ் மக்களின் மனதில் இன்னும் இன்னும் குளிர்ச்சியை கிளறிவிட்டிருகின்றது. உதவும் கரங்கள், கால்கள், டிப்பர்கள் என்று கீழ் பக்கத்திற்கு சென்றுகொண்டிருகின்றன. வலியென்றால் இதுதான், காலம் தன் வேலையை செய்தே தீரும், பழிக்கு பழி, மே இரு இனத்திற்கும் கறுப்பு மாதம் என்று தமிழையும் உணர்வுகளையும் சந்தோசங்களையும் கூடவே நீங்கள் தயார் என்றால் நாங்கள் வருகின்றோம், சிங்கள சகோதரர்களே என்று போலி ஆட்டின் முகமூடியை போர்த்திகொண்டும் பழிக்கு பலி தீர்த்த இயற்கைக்கு வணக்கம் செய்யும் இழி நிலையில் இன்றைய தமிழ் மக்கள் இருப்பது வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது.
 
சாதாரண மனித பண்புகளை மீறிய அடக்குமுறைக்கும் பேராசை வேட்கைக்கும் நொந்து போயிருக்கிறோம் என்ற வெளிப்படை உண்மையை இவை எனக்கு எடுத்துகாட்டுகின்றன. இதில் உதவும் மனப்பாங்கு என்பது வேறு விதமான அர்த்தத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. “இதுவரையும் எந்த உதவியும் செய்யாத சிங்கள பேரினவாதிகளே பாருங்கள்! நாங்கள் உங்களுக்கு ஒன்று என்றால் உடனே வந்து உதவி செய்கிறோம். மனிதப்பண்பு மிக்க எங்கள் தமிழ் இனத்தையா நீங்கள் அழித்தீர்கள்? “ என்பது தான் இன்றைய ஒவ்வொரு உதவியின் பின்னலான உண்மைகள்.
 
இங்கு கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு ஆவணமும் ஒரு மிகப்பெரிய பிரதி உபகாரத்தை நோக்கியே இருகின்றது. சிலதை தவிர இங்கே எங்களின்  (தமிழ் மக்களின்) சுயநலம் மேலோங்குகின்றது போல எனக்கு தோன்றுகின்றது.
 
அடுத்த விடயம் இன்று சிந்தனை செயல் இரண்டு தளத்திலும் நடக்கின்ற மிக திறமையான விடயங்கள், அதன் பின்னால் நின்று உழைத்த ஆளுமைகள் யார் என்றே தெரியாமல் மெழுகப்பட்டு லாவகமாக உடை குச்சிகள் ஏறிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர். வெளிப்படையாக எந்த தகுதியும் இல்லாதவர்கள் வேடமிட்டுக்கொண்டு உரியவர்களின் ஆளுமைகளை மறைப்பது எந்நாட்டிலும் மிக கொடிய குற்றம், தெரிந்தோ தெரியாமலோ (சம்பிரதாயத்திற்காக) இன்றைய கற்று அறிந்த சமூகத்தினர் இதில் மிக தீவிரமாக ஈடுபடுகின்றனர். இது தான் தீவிரவாதம். எமது சமூக ஆளுமைகளை அடியோடு அமர்த்தும் கொடிய தீவிரவாதம்.
 
சங்கடமான செய்தி என்னவென்றால் நடைபெறுகின்ற குப்பை கேளிக்கைகளில் நாங்கள் எந்தப்பக்கம் என்பதிற்கு மிக நுட்பமான உரையாடல்கள் வேறு. இதை எந்த திசையில் ஆரம்பித்து களைய வேண்டும் என்பதே தெரியவில்லை.
 
முதலாவது விடயம் இனத்தின் இழுக்கு இரண்டாவது தனிமனித இழுக்கு.
 
எதைக்களைவது முதலில்?

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 08 – நாட்டார் கதைகள் II

மனித நாகரிக வளர்ச்சியுடன் கூடவே வளர்ந்து வந்த முக்கிய கூறு மனிதப் பண்புகள். மனித நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதப் பண்புக உருவாகி வளர்ச்சியடைந்து முதிர்ந்து போய் செப்பனான முறையில் வரையறுக்கப்பட்டு இன்று வெளிவந்து விட்டன. சொல்லளவில் மிக முதிர்ச்சியான மனிதப்பண்புகள் இன்று எல்லா சமூகங்களிலும் ஊடுருவியிருகின்றன. எம் சமூகத்தில் இன்றிருக்கின்ற எல்லா மதத்தினருக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட மனிதப் பண்புகளை கூறுகின்ற மத நூல்கள் எழுத்துவடிவில் இருக்கின்றன.
அதை விட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதற்கே உரிய மிக தொன்மையான வாய்வழி இலக்கியங்கள் மிக பலமான மனித பண்புகளை கடத்திக்கொண்டு இருகின்றது. இவையெல்லாம் வெறும் எழுத்துரு சொல்வழி தளத்தில் இயங்குகின்றனவே ஒழிய சமூகத்துக்குள் ஊடுருவி புழங்குகின்ற தன்மை அற்றனவாக காணப்படுகின்றன. இந்த புழக்கம் இன்மையின் வினைதான் இன்றைய சமூக சீர்கேடுகள். எமது சமூகங்களுக்கு மனிதப்பண்புகளை உருவாக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் அமுல்படுத்தவேண்டிய, பின்பற்றவேண்டிய தேவை இருகின்றது. இதை யாரும் மறுத்துவிட முடியாது.

வடக்கு நட்டார் இலக்கியங்களின் இறுதிப் பகுதியான நட்டார் கதைகளின் நிறைவுப் பாகம் இது. வடக்கில் காலம் காலமாக இருந்த மக்களிடையே வாய்மொழியாக பேசப்பட்டு பின்பற்றப்பட்டு கடத்தப்பட்ட மனித நேய பண்புகளை கூறும் கதைகள்தான் இந்த பாகத்தின் மையப்பொருள். வடக்கு மனிதர்களிடையே காலம் காலமாக இருக்கின்ற இருபிரச்சனைகளை சுற்றியே எல்லா மனிதநேய கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

(staticflickr.com)

ஒன்று  ஆட்சி, இன்னொன்று குடும்பம். இவை இரண்டிலும் நாளாந்த வாழ்வியலில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கலை கருவாக கொண்டு நல்லது இது கெட்டது இது என்று வரையறை செய்கின்ற கதைகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. இரண்டு அரசு மற்றும் குடும்ப கட்டமைப்புக்களை களமாக கொண்டு பிரச்சினையை முன்வைத்து பின்னர் அதனால் உழல்கின்ற மக்களின் வாழ்வியலை காட்டி கடைசியாக  பிரச்சனையிலிருந்து மீள்கின்ற வழியினை போதித்து கதையை முடித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கதைகள் இந்த கட்டமைப்பிலேயே இருக்கின்றன.
கதைகளில் சில நுட்பமான குறியீடுகளை பயன்படுத்துவதன்  மூலம் சமூகத்தில் இருக்கின்ற தீய சக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் பின்னணி இப்படியாக அமைகின்றது. அதிகாரங்களில் இருப்பவர்களிடையே இருக்கின்ற தீய எண்ணம் கொண்டவர்களை எதிர்த்து வெளிப்படையாக கதைக்கக்கூடிய அல்லது போராடக்கூடிய திறன் அற்றவர்களாக இருந்த மக்கள், அவர்களை ஐந்து அறிவு படைத்த மிருகங்களாகவே கருதினார்கள். அவர்கள் செய்கின்ற அட்டகாசங்களை பிறருக்கும் அறிவிக்கின்ற, அறிவுறுத்துகின்ற வகையில் அதிகாரத்தில் இருக்கின்ற தீயவர்களை மிருகங்களுக்கு ஒப்பாக கருதி மிருகங்களாகவே வடித்துள்ளனர். அவர்களுடனான சாதாரண மக்களின் உரையாடல்களும் போராட்டங்களும் வெற்றியும் தோல்வியும் அதனூடு வெளிப்படுகின்ற நல்ல, தீய மனிதப்பண்புகளின் பிரிவினையையும் இந்தக் கதைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் ஆட்சியில் இருக்கின்றவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர்.

(blogspot.com)

கதை 1

“……… ஒரு நாள் நெல்லை காயவைத்துகொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று ‘உன்னை கடிக்கட்டா இல்லை நெல்லை கொறிக்கட்டா?‘ என்றது காட்டு பன்றி, அவள் பயத்திலேயே ‘நெல்லை கொறித்துகொள்‘ என்றாள்…………..”

கதை 2

“……………….கல்யாணத்தன்று குரங்கு அவனிடம் இதைக்கூற அவன் மறுத்துவிட்டான். பின்னால் ஏதோ ஒரு வகையில் குரங்கு அவனிடம் பேசி சம்மதிக்க வைத்தது………….”

கதை 3

“……………. அவளை மயக்கிக் கொண்டு சென்ற புலி ஒரு அழகான ஆண் புலிக்குழந்தையை அவளுக்கு கொடுத்தது…………………..”

கதை 4

“……………..தவளையிடம் அரசியை பார்த்து வரும் படி அவன் தூது அனுப்பினான். அதை அரச கழுகு கவனித்து ராஜாவிடம் சொல்லி விட்டது……..”

சில கதைகளில் மனித அறியாமையும் அதனால் ஏற்படுகின்ற தவறுகளும் அதற்கு உதவுகின்ற மாந்தர்களும் என உதவி செய்தலையும் செய்த உதவியை மறக்காமல் இருத்தலையும் ஆழமாக கூறுகின்றன. இவற்றுள் பொதுவாக குடும்ப பின்னணியே பயன்படுத்தபடுகின்றது.
கதை 5

“ ஒரு விவசாயி தினமும் பெரிய பெரிய கிழங்குகளை பிடுங்கி வீட்டிற்கு கொண்டு வருவான். ஆசையுடன் மனைவியிடம் கொடுத்து காய்ச்சச் சொல்வான். அவளும் பக்குவமாக பெரிய கிழங்குகளை அடியிலும் சிறிய கிழங்குகளை மேலும் வைத்து காச்சுவாள். காய்ச்சிய கிழங்குகளை அவன் தட்டில் குப்புற கொட்டுவாள். எப்போதும் அவனுக்கு சிறிய கிழங்குகளே கிடைக்கும். அதனால் மிக வருத்தம் அடைந்தவனாய் நண்பனிடம் ஒருநாள் சென்று விவரத்தை கூறினான். நண்பன் நெய்யை மனைவிக்கு தெரியாமல் தாச்சியின் அடியில் பூசி விட்டு விவரத்தை பார் எண்டான். இவனும் அப்படியே செய்தான் அண்டைக்கு எல்லா கிழங்குகளும் அவன் தட்டில் விழுந்தன. மனைவி தான் செய்த அறியாமையின் தவறை உணர்ந்து மனிப்புகேட்டாள். விவசாயி நண்பனுக்கு நன்றியுடையவனாக இருந்தான்.”

இந்த வாய்வழி கதை; உதவி, மன்னிக்கும் மனப்பாங்கு, நன்றிமறவாமை என்ற மனிதப் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இருந்தும் இதன் பின்னணியில் இருக்கின்ற, இதே போன்ற சில கதைகளின் பின்னணியில் இருக்கின்ற வெளிப்பாடுகள் பெண் அறியாமை என்ற கருவில் பேசுகின்றன.

(yartmagazine.com)

அடுத்து மிக முக்கியமாக கதைகளில் இருக்கின்ற பண்பு பாசம். அம்மா-மகன், அண்ணன்-தங்கை, கணவன்–மனைவி என்ற பாசப்பிணைப்புக்கள் போன்றவை கதைகளில் இழையோடி இருக்கிறன. எந்த சந்தர்ப்பத்திலும் மகனை விட்டுக்கொடுக்காத அம்மா, ஐந்து அண்ணன்களை தனது சாகசத்தால் மீட்ட தம்பி, தங்கையின் பாசத்துக்காக மனைவியை துறந்த அண்ணன் என்று கதைகள் ஒவ்வொன்றும் விதவிதமான பாசப்பிணைப்புகளை காட்டுவதாகவே அமைகின்றன.
கதை 6

“……….அண்ணா! அண்ணி செய்யும் கொடுமைகளை பார் என்று கேட்பது போல அவனுக்கு அவன் நான்கு தம்பியரின் பார்வைகள் இருந்தன, அவன் மனைவியை துரத்திவிடவில்லை. பக்குவமாய் பல மொழிகள் சொன்னான். அவளும் வெகு விரைவில் திருந்தி அண்ணனும் தம்பிமார்களும் அண்ணியும் மருமகளும் மிக சந்தோசமாக வாழ்ந்தார்கள்……….”

கதை 7

“………….புலி மரத்தின் மேலே நின்றதைப்பாரத்த அண்ணன் அது தாவும் முன்னர் தங்கச்சியை காப்பாற்ற புலி மீது பாய்கிறான்……..”

அரசாட்சிக்குள் நடக்கின்ற பிரச்சனைகளையும், அதில் ஏற்படுகின்ற கவனக்குறைவால் உண்டாகின்ற பிழைகளையும் மந்திரி ஊழியர் அரசர் உறவுகளையும் இளவரசியின் காதல், உதவுகின்ற மனப்பாங்குகளையும் போர்யுக்தி அரச பரஸ்பர உறவுமேம்பாட்டயும் அதிலே உண்டாகின்ற உன்னத மனித பண்புகள் பற்றியும் சில கதைகள் விவரிக்கின்றன.
மனிதப்பண்பு என்ற வகையோடு பேய்க்கதைகள் மந்திரக்கதைகள் என அமானுஷ்யங்களை பற்றிய கதைகள் வெகு சிலவும் காணப்படுகின்றன.

(google.lk)

இந்த பேச்சு வழி கதைகள் எல்லாம் எந்தக்குறையும் இன்றி கடத்தப்படுகின்றனவே ஒழிய பயன்படுத்தபடுகின்றன்வா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதிலிருந்து முடிவுகளையும் அனுபவங்களயும் எடுத்துக்கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மிக உன்னத பண்பாடு நாகரீகம் என்று வெறும் புறவய நிலுவைகளை கொண்டாடுகின்றோமே ஒழிய அகவயமாக நாம் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் நிதர்சனம்.
இந்த மறக்கப்பட்ட வடக்கு நாட்டார் இலக்கியங்கள் என்ற தொடர் இத்துடன் என்வழியே முற்று பெற்றாலும் ஆழமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் கூறியது போல

“இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.”

இன்று இத்தோடு முடிகின்ற அத்தியாயம் இன்னொரு முறை மிக ஆழமாக எழுதப்படும்.

நிதர்சனம். அன்டன் செக்காவின் வலிமையான மனப்பதிவுகள்

தி இந்துவின் 2016ஆம் ஆண்டின் தீபாவாளி சிறப்புமலரில் பிரசுரமாகியிருந்த அன்டன் செக்காவ் இன் வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எனக்கு சில நிதர்சன உண்மைகளை வெளிக்காட்டியது. வழமையான செக்காவின் சிறுகதைகள் போலவே நுண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஒரு படைப்பு தான் வலிமையான மனப்பதிவுகள்.
 
எங்கள் எல்லோரிடமும் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. யாரும் அறவே இல்லை என்று மறுக்க முடியாது. பலர் வாழ்நாளில் தாங்கள் ஏமாற்றபட்டோமா என்று தெரியாமலே இறந்து போகின்றனர். சிலர் நெடுகாலத்தின் பின்னர் அறிகின்றனர். நான் கூறும் குணம் ஏமாற்றம் அடைவதே. எந்த பேதமுமே இல்லாமல் எல்லா தேசங்களிலும் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றம் என்ற செயற்பாடு வெற்றிகரமாக நடைபெறுகின்றது. ஏமாறுகின்ற செய்கை நெடுகாலமாக இருந்து கொண்டே வருகின்றது. இந்த செய்கையில் பயன்படுத்தப்படும் உத்தியை மையமாக வைத்தே வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது.
 
1880களில் எழுதபட்டிருக்க கூடிய இந்த சிறுகதையில் , அதில் வருகின்ற வழக்கறிஞர் என்ற பாத்திரம் பயன்படுத்துகின்ற உத்தி இன்றைய நவீன சூழலிலும் அதே வழிமுறையில் பயன்படுத்தபடுகின்றது ஆச்சரியமாக இருந்தது. எம்மை விமர்சனம் செய்கின்ற ஒருவர் முதலில் எப்போதுமே எம்மில் உள்ள நல்ல விடயங்களை ஆரவாரமாக சொல்வார். அந்த புகழ்ச்சியில் மதி மயங்கிப்போய் நாமும் அவரின் சொற்களுக்குள் ஒன்றித்து அவரின் மேல் அதீத நம்பிக்கை வைத்துவிடுவோம். அவரின் கருத்துக்கள் எல்லாம் உண்மைத்தன்மை வாய்ந்தவை என்ற மனநிலையை அவரின் புகழ்ச்சி ஏற்படுத்தி விடும். அவரின் புகழ்ச்சியின் வீரியத்தில் அவரின் சொற்கள் எல்லாமே வேத வாக்கியங்கள் ஆகிப்போகும். அப்படியே அவர் சற்று இறங்கி ஆனால்… என்று ஆரம்பிக்கும் மற்றைய பக்க விமர்சனமும் உண்மை பொய் என்ற வாதங்களுக்கு அப்பால் சரியானதாகவே இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற மனநிலையை நாம் உருவாக்கிகொள்வோம். மனம் பகுத்து அறிதல் என்பதையே மறந்து விமர்சகரின் மூளையில் சிந்தனை ஓட்டத்தோடு கலந்து போகும். மிக அப்பட்டமான பொய்யையும் மெய்யாக்குகின்ற வல்லமை அந்த விமர்சன உத்திக்கு இருக்கிறது.
 
இந்த நுட்பத்தில் தான் அந்த வழக்கறிஞர் தனது நண்பனின் மனதை மாற்றுவான். இதே நுட்பம் நம் வாழ்விலும் பல முறை சந்தித்திருப்போம். நம்முடன் பேச்சு கொடுத்து நம்மை அளந்து ஒரு உயரத்தில் வைத்து விட்டு பின்னர் அவர்கள் பேசுகின்ற வசையையெல்லாம் உள்வாங்குகின்ற மனநிலைக்கு எம்மை தயார்படுத்துவார்கள். இதை சாதாரண நபர்களால் செய்து விடமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் எல்லோராலும் இந்த உத்தியை பயன்படுத்த முடிகின்றது. பயன் படுத்துகின்றார்கள். சாதாரண வாழ்வில் ஒரு நாளில் பலமுறை இந்த அணுகுமுறையை இனி கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம். முக்கியமாக ஒதுங்கி கொள்ளலாம்.
 
வலிமையான மனப்பதிவு சிறுகதையில் இந்த நிதர்சன ஒன்றிப்பை உணரக்கூடிய சந்தர்பங்கள் அதிகம் இருகின்றன.

தேவை.

எனது மிக நெருங்கிய உறவினர் இறந்து விட்டார்
ஏதோ கண்காணாத தேசத்தில்,
 
அவருக்கென
ஒரு சவப்பெட்டி
ஆறடியில்.
 
நானும் அந்த மலர்ச்சாலைக்கு
போயிருந்தேன்.
 
விதம் விதமாக
ஒவ்வொரு விலையில்
பல மரங்களின் அர்ப்பணிப்பில்.
 
ஒரு பூ மட்டும் இரண்டு கதவுகளில்
இரண்டு பூக்கள் இரண்டு கதவிலும்
ஒரு பூச்செண்டு
அதனுடன் ஒரு பூ
 
நீங்கள் என்ன ரசனையில் எதிர்பார்கிறீர்கள்?
 
என்னோடு வந்தவர்
கஷ்டப்பட்டு ஒன்றை முடிவு செய்தார்.
 
எனக்கும் பிடித்திருந்தது,
ஆனால் கதவுகள் மூடும் விளிம்பில்
ஏதாவது ஒரு அலங்காரம் இருந்திருக்கலாம்,
இறந்தவர் வெளிநாட்டவர் ஆச்சே.
 
அவர் சுற்றி சுற்றி ஏதும்
உடைசல்கள் இருகின்றதா என்று பார்த்துகொண்டார்.
 
வெளிநாட்டவர் இறைத்த
சில்லறைகள் எங்காவது ஒரு சின்ன உடைசலுக்குள்லாலும்
வெளியே விழுந்து விடலாம்.
 
என் பேர்சில் இருந்த
அப்பா அம்மா  அக்கா
எனது நான்கு மாத தம்பி  எல்லோருடனும்
நான் நின்று எடுத்த
புகைப்படைத்தை பார்த்துவிட்டு
 
ஒரு முறை
அந்த
சவப்பெட்டியின்
விளிம்பில் விரலால் தேய்த்து
தொட்டேன்.
 
விளிம்பு கீறி
தரையெல்லாம் ரத்தம்.

தமிழ் சமூகமும் தமிழ் திரைப்படங்களும் – 01

இன்றைய தமிழ் சூழலின் வடிவமைப்பில் திரைப்படங்களின் வீச்சு மிக கூர்மையானது. இன்றைய பண்பாட்டு பரவலாக்கம் காரணமாக ஒரு சமூகத்தின் அனைத்து கூறுகளும் எல்லா சமூகத்தினரும் அவதானிக்க கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இந்த அவதானங்களின் மையப்பொருளாக, ஒரு சமூகத்தின் அடையாளாமாக எடுத்தாளப்படுகின்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் அசாத்தியமானது. எந்த சமூக ஊடகமும் அடைய முடியாத ஆழத்தையும் பரவலாகத்தையும் கற்று அறிந்த சமூகத்தில் தொடங்கி மேற்தட்டு மக்கள் நடுத்தர வர்கத்தினர் விளிம்புநிலை மக்கள் ஏழை வறியவர்கள் வரையும் வயது இன மொழி ஜாதி வேறுபாடின்றி தமிழ் திரைப்படங்கள் அவர்களுக்குள் ஒரு அங்கமாக அவர்களையும் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் வடிவமைக்கின்ற அல்லது வடிவமைக்கப்பட்ட சமுதாயத்தில் மாற்றத்தை உண்டு பண்ண கூடிய சக்தியாக உருவெடுத்து விட்டன.

பார்த்து உணர்ந்து சிந்தித்து பிரித்தறிதல் என்ற சாதாரண மனித செயற்பாடுகளுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் பார்த்ததை அமுல்படுத்தல் என்ற கொடிய செயற்பாட்டு தளத்தில் இயங்கும் அளவிற்கு இன்றைய மக்கள்  தமிழ் திரைபடங்களிடையே  கொண்டிருக்கின்ற பற்றுதல் மிக கேவலமான சமூகத்தின் அடையாளம். இதற்கு காட்சிகள் உருவாக்குகின்ற நியத்தன்மை பொருந்திய மாய சினிமா உலகம் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தும் திரை நிய வாழ்வியலை பிரித்தறிய முடியாத அளவு திரைபடங்கள் தமிழ் சமுதாயத்திற்குள் ஊடுருவி விட்டன.

அணுக்கம்.

நீங்கள் கவிதையினை எப்படி அணுகுவீர்கள்?
 
எந்த வசனத்திலிருந்து
அல்லது எந்த எழுத்திலிருந்து
அப்படியும் இல்லையா
அப்போது எந்த புள்ளியிலிருந்து ஆரம்பிப்பீர்கள்?
 
யாராவது தொட்டு காட்டுவார்களா ?
இல்லை அவர்களே வாசிப்பார்களா ?
 
காலையிலா ?
மாலையிலா ?
நடு நிசியிலா ?
அல்லது தூக்கத்தை இடையிலே கலைத்து விட்டு
அரை நித்திரையிலா ?
 
எப்படி தொடங்குவீர்கள் ?
முதல் பந்தியிலேயே ஆரம்பித்துவிடுவீர்களா?
கடைசி வரியிலிருந்து ஆரம்பிப்பீர்களா ?
அல்லது  இடையிடே தொட்டு தொட்டு போவீர்களா ?
 
எந்த நிலையில் இருப்பீர்கள் வாசிக்கும் போது
இருந்து
கிடந்தது
கால்மேல் கால் போட்டு
குப்புற கிடந்து
தலைகீழாக
கன்னத்தில் கை வைத்தபடி
கால்களை ஆட்டிய படி
எப்படி ?
 
இந்த எறும்புகள் போகுமே அப்படியா ?
வெட்ட வெளியில்
மக்கள் நடுவிலே
நின்று சிரிக்கும் ஏமாற்றி வித்தைக்காரனின்
கோமாளி குரங்கை போலாவா ?
 
எப்படி ?
 
ஆழ் சமுத்திரத்தில் முத்து எடுப்பதை போலவா ?
அகன்ற வானில் பட்டம் விடுவதை போலவா ?
 
விளக்கவுரை வாசிப்பீர்களா ?
யாருடையது ?
 
சாப்பிட முன்
நன்றாக கழுவிய  இலையை சுற்றி
தண்ணீர் தெளிப்பதை போல
விளங்காமலே வாசிப்பீர்களா ?
 
இல்லை
வாகனம் மோதிய
நாயின் அலறலை கேட்காத மாதிரி
போகும் சாரதியினை போல
விளங்கியும் விளங்காத மாதிரி வாசிப்பீர்களா?
 
விளங்கவில்லை.
எப்படி ஒரு கவிதையினை
நீங்கள் அணுகுவீர்கள் என்று.
 
அது சரி
பக்கங்களே  இல்லாத
புத்தகங்களில் எழுத்துகள் எப்படி இருக்கும்.
 
அதை அணுகவும்
மூட்டை கணக்கில்
வழிகாட்டிகள்.
 
இப்போதும் அதே சந்தேகம் தான்
 
நீங்கள் மூட்டைகளை எப்படி அணுகுவீர்கள்?

சிற்பி – கழைக்கூத்தாடியின் இசை – தேவி பாரதி

(01)
எழுத்தாளன் என்ற தொழிலின் புரவுருவயமான விளக்கம் இலக்கியத்தையும் மக்களின் தேவைகளையும் எழுதுவது என இன்றைய சூழலில் கருத்து நிலவுகிறது. ஒரு வகையில் அது மறுக்கமுடியாத உண்மை.எழுத்தாளன் என்பவன் அதனாலேயே அடையாளப்படுத்தபடுகிறான். இந்த இலக்கியங்களையும் மக்கள் தேவைகளையும் எழுதுகின்ற சமூகப்பணியில் எழுத்தாளன் தனக்கென அடைகின்ற ஆத்ம திருப்தி அவனின் வீச்சு எல்லையை அவன் நிர்ணயிப்பதில் தான் இருகின்றது. இந்த நிர்ணயிப்பில் வெற்றி பெறுகின்ற எழுத்தாளர்கள் தான் இலக்கியத்தில் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களின் விஸ்தரிப்பான எழுத்தின் வலிமையை , உருவாகின்ற அவர்களின் எழுத்துலக சிருஷ்டிப்புக்கள் தான் காட்டும். ஒரு சம்பவத்தை அல்லது ஒரு காட்சியை வாசகன் ஊடாக படரவிடுவதும் அதில் உலவுகின்ற பாத்திரங்களை வாசகனுடன் பேசவைப்பதும் அதனூடாக உணர்வுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதும் என்ற பொது மொழியைத்தாண்டி இலக்கியங்களையும் சினிமாவையும் கலக்கின்ற களத்தை உண்டாகிகொண்டு அதில் உணர்வுகளை பேசுகின்ற தனித்துவமான எழுத்து கழைக்கூத்தாடியின் இசை.
 
எழுத்தாளர்கள் கையாள்கின்ற மொழியின் உரு , அவர்களின் கதைகருவின் மீதான அதீதத்தை கூட்டுவதாக இருக்கும். எந்த வகை கருவிற்கும் இது பொருத்தமானது. சரியான  மொழியின் உருவில் உணர்வுகள் வெளிக்கொண்டுவரும் போது அதில் உருவாக்கப்படுகின்ற அழகியல் அற்புதமானதாக இருக்கும். பெரும்பான்மையான கதைகளில் இந்த உணர்வழகியல் கதை மாந்தர்களுக்கூடாகவே வெளிபடுத்தப்படும். வெகுசில படைப்புக்களில் தான் அதன் சூழலும் அதில் உள்ள  உயிரற்றவையும் கூட உணர்வழகியலை வெளிக்கொண்டுவரும். அந்த கதைக்களம் மற்றும் உணர்வுப்பின்னணி இரண்டும் ஒன்று சேரும் போது வாசனுக்கு கதையின் மீது ஏற்படுகின்ற ஒன்றிப்பு மிக பலமானதாக இருக்கும். வாசகன் களத்தில் நின்று ஒரு முறை களத்தை சுற்றி பார்க்கும் போது அங்கிருக்கின்ற சிலையிலிருந்து அசையும் மனிதர்கள் வரை எல்லோரிடமும் பீடித்துபோயிருகின்ற கதைப்பின்னணி உணர்வழகியலின் உச்சம்.
 
எந்த சந்தர்ப்பத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடக்கூடிய இந்த நுட்பம் கழைக்கூத்தாடியின் இசையில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் சில போதைக்குறியீடுகள் மூலம். சினிமா, சிகரட், மாது, காப்பி, காதல், இலக்கியம் எல்லாமே போதையின் குறியீடுகள் தான். அவை ஒவ்வொன்றிலும் இந்த உணர்வழகியல் ஊடுருவி செல்கின்றது. கதை மாந்தர்களிடம் பீடித்திருகின்ற அவலம், கதையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமாக பேசப்படுகின்றது. எங்கிருந்தோ கடற்கரைக்கு காற்று வாங்க வருகின்றவர்களிடம் கூட.

“அந்த இடம் அரவாணிகளுக்கும் ஹோமோ செக்சுவல்களுக்குமுரியது. முகத்தைச் சுழித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் சுழித்துக்கொள்ளலாம். அடுத்த ஐம்பது மீட்டரில் வேசிகளின் உலகம் தொடங்குகிறது. கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நீண்டும் விரிந்தும் பரந்தும் கிடக்கும் அவ்வுலகமே இப்பெருநகரவாசிகளுக்கு அந்தப்புரம். உயரமான விளக்குத் தூண்களிலிருந்து கசியும் பாலொளிக்குக் கீழே படர்ந்திருக்கும் புகையிருளுக்குள் தம் மஞ்சங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இம்மாநகர ராஜாக்களும் ராணிகளும் கூத்திகளும் சேடிகளும். இப்பெருநகரில் காதலையும் காமத்தையும் பரிமாறிக்கொள்ள வேறு உருப்படியான இடமெதுவும் இல்லை. காற்று வாங்க வந்தவர்களுக்கு அருவருப்புத் தாளவில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டு உறுமும் கடலை நோக்கி வேகமாக நடக்கிறார்கள். சிலர் கள்ளப் பார்வை பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு ஆச்சரியமளிக்கிறது,
“அம்மா, அம்மா”
“என்ன?”
“அந்த அங்கிளும் ஆண்ட்டியும் என்ன செய்யறாங்க?”
“வெளையாடறாங்க”
சங்கடத்துடன் பதிலளித்தபடி தாய் அவர்களை இழுத்துச் செல்கிறாள்.
“அது என்ன வெளையாட்டு அம்மா?”
“கண்றாவி, இதுகளுக்குக் கொஞ்சமாச்சும் வெக்க மிருக்குதா? பப்ளிக் பிளேஸ்ல இதென்ன நியூசென்ஸ்?”
“நீங்க பேசாம நடங்க”

 
(02)
சிறுகதை என்ற வரையறைக்குள் கதைக்குள் உலாவ வேண்டிய மாந்தர்களும் சம்பவங்களும் ஏற்ற இறக்கங்களும் சம்பவங்களும் வரையறைக்குட்பட்டவை. அந்த வகையில் சிறுகதை என்ற பரிமாணத்தை தாண்டி குறுநாவல் என்ற பரிமாணத்தை கழைக்கூத்தாடியின் இசை பெறுகின்றது. என்னால் வாசிக்கப்பட்ட தமிழை மூலமொழியாக கொண்டு எழுதப்பட்ட  முதல் குறுநாவல் இதுவே. புனைவுகளை ஆங்கிலத்தில் Flash fiction ,Short story ,Novelette ,Novella ,Novel என்று ஐந்து விதமாக வகைபடுத்துகின்றனர். கழைக்கூத்தாடியின் இசை Novelette என்கிற வடிவத்திற்குள் உட்புகுகிறது. ஒரு குறுநகர வாழ்வியலை ஒவ்வொரு அணுவாக பேசிக்கொண்டே நீள்கிறது கழைக்கூத்தாடியின் இசை. ஒரு பழைய மான்சனில் தொடங்கி வீதிகள், சாப்பாட்டு கடைகள், சிலைகளின் அடிவாரம், சினிமா தளங்கள், கடற்கரை, புகையிரத நிலையம், ஒரு அழுக்கான அறை என்று ஒரு மனிதன் சாதரணமாக நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம் கதையினை ஓடவிட்டு ஒவ்வொரு சந்திலும் ஒவ்வொரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். எல்லா சந்திகளும் ஏதோ ஒரு சுமையுடன் செல்லும் வாசனுக்கு இன்னொருபடி சுமையினை ஏற்றிவிடுகின்றது. ஒரு நிதர்சன தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை சிக்கல்களை ஒவ்வொரு புள்ளியும் விரிக்கின்றது.
 
ஆரம்பத்தில் எழுத்தாளர் உருவாகுகின்ற இலக்கிய உட்புகுத்தல்கள் ஒரு வாசகனாக கதையின் வீரியத்தை குறைப்பதாக தோன்றுகின்றது. ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. நிதர்சன வாழ்க்கை என்ற புள்ளியில் நின்று சம்பவம் ஒன்றை விரித்துக்கொண்டு செல்லும் போது அந்த சுவாரஸ்யமான வாசிப்பு தன்மைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற உணர்வை உண்டாகியது. தெளிவாக சொல்ல போனால் இலக்கிய திணிப்பு போன்றது.
 

அங்கிருந்து நேர் கிழக்கே நடந்தால் காற்சிலம்பை உயர்த்திப்பிடித்தபடி ஆகாயத்தை வெறித்துக்கொண்டிருக்கும் கண்ணகியின் பொற்பாதங்களைச் சேரலாம். “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்?” எனப் பரிவுடன் கேட்க அங்கே அவளுக்கு யாருமில்லை. சாலை நெடுகிலுமுள்ள கோட்டைக் கொத்தளங்களுக்குச் சுழலும் விளக்குகளுடன் விரையும் அமைச்சர் பெருமக்களுடையவும் துறைச் செயலாளர்களுடையவும் இயக்குனர்களுடையவும் காவல்துறை அதிகாரிகளுடையவும் வாகனங்களின் இடையறாத சைரன் ஒலி. அடிக்கொருதரம் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள், இளைய சமுதாயத்தின் அசுரவேக இருசக்கர வாகனங்கள். எல்லாக் கண்காணிப்புக்களையும் மீறிச் சிலசமயங்களில் யாருக்காவது மண்டை சிதறுகிறது, முட்டிகள் உடைகின்றன. ‘ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தன் அரும்பெறர்ப் புதல்வனை யாழியின் மடித்தோனின் பெரும்பெயர் புகாரை’ப் போல இல்லை அவளுக்குக் காற்சிலம்பை உயர்த்திக்காட்டி நிற்கக் கிடைத்திருக்கும் மேடை அமைந்துள்ள காமராஜர் சாலை. 

 
இது போன்ற மிக சொற்பமான இடங்களில் அவரின் வழமையான நடையில் கடந்திருக்க மிகத்தரமான அகச்சூழல் பார்வையினை ஏற்படுத்திஇருக்கும்.
 
(03)
குறுநாவல் ஒன்றுக்குள் பல சம்பவங்கள் அனுபவங்கள் கருத்துகள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். ஒவ்வொரு இடத்தையும் கோர்த்து எடுத்துக்கொள்ள கதைமாந்தர்கள் பயன்படுத்தபடுவார்கள். கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி கதைமாந்தர்கள் உலாவுவார்கள். ஒரு சாதாரண மனிதனைக்கொண்டு ஒரு நகரத்தின் அவலத்தை வெளிக்கொண்டுவருவது என்பது, அவனின் பயணிப்பிலும் நாளாந்ததிலும் கேள்விகளை ஏற்படுத்தி உயிர்ப்பை இல்லாமல் செய்துவிடும். கழைக்கூத்தாடியின் இசை எல்லா முடுக்குகளிலும் பயணிக்கும் பாத்திரம் ஒன்றை எதிர்பார்கிறது. அந்த எதிர்பார்ப்பை எழுத்தாளர் கைக்கொண்ட விதம் போற்றுதலுக்குரியது.
 
சினிமா என்ற ஊடகம் தோற்றத்தில் பிரமிப்பையும் உள்ளடக்கத்தில் சொல்லமுடியாத வேதனைகளையும் துயர்களையும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் புறக்கணிப்பையும் கொண்டது. சினிமாவுக்கு சமவுடமை வாதம் கிடையாது. ஒருவகையான மேலாதிக்க வாத போக்குடைய சினிமாவில் அதிகம் உழன்று போகின்ற உழைப்பாளர் வர்க்கம் தான் உதவி இயக்குனர்கள். இதிலும் மூன்றாம் படி நான்காம் படி உதவி இயக்குனர்கள். ஒரு நகர வாழ்க்கைக்கு அதன் எல்லா பிரவாகங்களுக்கும் மிக கச்சிதமான படைப்புகள் அவர்கள். அவர்கள் அனைத்து விதமான மக்களுடனும் பழகும் பாக்கியம் பெற்றவர்கள். எல்லா தட்டு மக்களின் வாழ்கையையும் வாழ்பவர்கள். நகரின் பெரும்பாண்மையை தம்முள் இணைத்து கொண்டவர்கள்.
 
இலக்கியம் தெரிந்த உதவி இயக்குனர்கள் என்றால் என்ற கற்பனை உத்திதான் கதையின் முழு நகர்விற்கும் அச்சாணி. காணுமிடமெல்லாம் இலக்கியத்தாலும் இலக்கிய கர்த்தாகளாலும் அவர்களின் சிருஷ்டிபுக்களினாலும் கதா மாந்தர்களை நகர்த்தி அவர்களின் வாழ்கையின் ஒவ்வொரு நகர்வையும் இலக்கிய ரசனைக்குட்படுத்தி இருக்கிறார்.
 
(04)
 
கழைக்கூத்தாடியின் இசை.
 
ஒரு பிரமிப்பான தலைப்பும் பொருத்தமும்.ஒரு அவலத்தின் குறியீடாக ஒரு இறுக்கமான முயற்சியும் அதற்க்கான மிக குறைவான கூலியும் என்ற துன்பியல் வாழ்க்கை கழை கூத்தாடிகளின் உடையது. ஒரு சீரான என்ற எதிர்பார்ப்புடன் உயரத்தில் வைக்கப்படும் தடியின் மேல் இன்னொரு தடியை கைகளின் அகலங்களில் விரிந்து புடித்துக்கொண்டு அசைவுகளுக்கு ஏற்ப தடியை சமநிலைப்படுத்தி தள்ளாட்டத்தில் வாழ்கின்ற வாழ்க்கை அவர்களுடையது. அவர்களுள் மிக சிறிய பெண் குழந்தையிடம் தட்டினை கொடுத்து சன்மானம் கேட்டு அனுப்புவார்கள். அந்த குழந்தையோ ஒரு தட்டு ராபானையோ அல்லது ஏதாவது ஒரு ரலிய இசைக்கருவியை வாசித்துக்கொண்டு சோக கீதம் பாடிக்கொண்டு கூத்தடியினை சுற்றி சுற்றி வரும். அந்த இசையின் கொடூரம் கூத்தாடியின் கவனத்தை இன்னும் கூர்மையாகும். இந்த உளவியல் பின்னணி அந்த இசைக்குண்டு.
 
அதே வாழ்க்கை தான் ஒவ்வொருவரினதும் எம்மா சுற்றி இருகின்ற இசை இன்னும் கவனிக்கிசெய்வதற்கு உரியதே தவிர சேர்ந்து உழல்வதற்கு அல்ல.
 
அந்த குழந்தை கேட்கும் பணம் பிச்சை அல்ல உழைப்பின் கூலி.
 
மிக கச்சிதமான குறுநாவல் ஒன்றை வாசித்த திருப்தி கழைக்கூத்தாடியின் இசையினை வாசித்த போது கிடைத்தது. தேவி பாரதி என்ற ஆளுமையின் ஆழமான எழுத்து இன்னும் கொண்டாடப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனாக வாசகனுக்கு தேவி பாரதி வெற்றி கழைக்கூத்தாடியின் இசையில் கௌதம நீலாம்பரனின் இதழ்களிலிருந்து சத்தமில்லாமல் உதிர்ந்து தன் காலடியில் விழுந்து நசுங்கிய பழுப்பு நிறப் புன்னகை போன்றது.
 
தேவி பாரதியின் கழைக்கூத்தாடியின் இசை என்ற குறுநாவலை வாசிக்க
http://www.kalachuvadu.com/archives/issue-197/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
அவரின் ஏனைய படைப்புக்களை வாசிக்க
http://devibharathi.blogspot.in/

உருவாக்கம்.

மனநோயாளியிடம்
கதைத்துக் கொண்டிருந்த
வைத்தியர்,
தன்னறைக்குள் சென்று
தலையை
சோறிந்து கொண்டார்.

மனநோயாளிகள் பிறப்பதில்லை ; உருவாக்கப்படுகிறார்கள்.

சுஜாதா – அவரின் வாசகர்கள் , வாதம் ௦1

வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.
 
எனது சுஜாதா – அவரின் வாசகர்கள் என்ற பதிவு தொடர்பாக எழுந்த கருத்து பகிர்வுகள்.
https://brinthansite.wordpress.com/2017/05/03/சுஜாதா-அவரின்-வாசகர்கள-2/
இந்த பதிவின் பின்னர்
மதன் குமார்  :-  சுஜாதா வெகுஜன எழுத்தாளர் என்ற புள்ளியிலிருந்து அவ்வப்போது விலகி தீவிர இலக்கியப் பக்கமும் தலைகாட்டிப் போயிருக்கிறார். தீவிர இலக்கியத்தில் ஈடுபட காரணமாக இருந்தவை அவரின் வாசிப்பாககூட இருக்கலாம். சுஜாதா நல்ல சிறுகதையாளன் என்ற பிம்பத்தை வெகுஜன இலக்கியமே தந்தது தீவிர இலக்கியம் இல்லை.
அவர்காலத்திய எந்த எழுத்தாளரும் இப்படி நிலையில் இல்லை. பின்னர் வந்த நல்ல சொம்பு தூக்கிகலால் பேருறுவாக மாற்றப்பட்டார்.
நான் :-  சுஜாதா என்ற ஆளுமை மீது எனக்கு விமர்சனம் கிடையாது. வெறும் ஜனரஞ்சக எழுத்துக்குள்ளேயே ஒரு எழுத்தாளனை அடக்கிவைத்த அவர் வாசகர்களைத் தான் விமர்சிக்கிறேன். சுஜாதாவை சிறிய வட்டத்துக்குள் குறுக்கிய சுயநலம் கொண்டவர்கள் அவரின் வாசகர்கள் என்கிறேன். சுஜாதாவை ஜனரஞ்சக எழுத்துலகு பீடித்திருக்காவிட்டால் அவரின் எழுத்துகள் வலிமையாகியிருக்கும். அவரின் கோட்பாடுகள் விரிவடைந்து இருக்கும். சுஜாதாவிற்கு இருக்கும் இலக்கிய கேள்விக்குறிகள் சில வேளை அவரின் வாசகர்கள் நினைத்திருந்தால் இல்லாமல் போயிருக்கலாம். இப்போது பிரயோசனம் அற்ற கூச்சல்கள் தான் மிஞ்சும்.
மதன் குமார் :- சுஜாதா என்ற ஆளுமை வெகுஜன எழுத்தில் பிரபலமடைந்தவர். நல்ல இலக்கியப் படைப்பை அவர் எழுத வாசகர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை. சில நல்ல சிறுகதைகளும் தீவிர இலக்கியப் புலத்தில் வந்திருக்கிறது. எந்த இடத்தில் அவருக்கான வரவேற்ப்பு அதிகமோ அந்த இடத்தில் நின்று தன் படைப்பை தந்திருக்கிறார் அவ்வளவே.
அசோகமித்திரனுக்கும் அவ்வாரான வரவேற்ப்புகளும் இருந்திருக்கக்கூடும். அவர் ஏன் தீவிர இலக்கிய விசிறிகளால் கொண்டாடப்படுகிறார். சுஜாதா ஏன் வெகுஜன எழுத்துலகில் போற்றப்பட்டார் என்பதை கொஞ்சமாக ஆராய்ந்தால் போதும் விளங்கிவிடக்கூடும்.
வெகுசிலருக்கு சுஜாதா தெரிந்த அளவு அ.மியை தெரியவில்லை. இலக்கிய பரிச்சியம் உள்ளவர்களுக்கு சுஜாதா எந்த நிலையிவ் வைக்கப்படுகிறார் என்பது அவரவர் வாசிப்பைப் பொருத்தே அமைகிறது.
 
நான்  :-  இதில் சில கருத்துக்களோடு உடன்படுகிறேன். சுஜாதா வெற்றி பெற்ற வெகுஜன ஊடகம் , அதே சுஜாதவை கேள்விக்கும் உட்படுத்துகிறது. சாதாரண வாசிப்பு படிநிலையில் தாண்டிய ஒரு வாசகன் சுஜாதாவை உடனே விமர்சனப் படுத்துகின்ற மேற்போக்கான இலக்கிய எழுத்துகளை சாட்சிப் படுத்துவது ஏற்கமுடியாது. அவரது எழுத்துக்கள் வரவேற்புக்கே என்ற பிறகு இலக்கிய ஆழத்தை தேடுவானேன். அசோகமித்திரன் ஆரம்ப நிலைகளில் (பின்னரும் கூட ) அறியப்படாத எழுத்தாளராக இருந்தார். இந்த நிலை தான் அவரின் வலுபெற்ற எழுத்துகளுக்கும் உள்ளடக்கங்களுக்கும் காரணம். அங்கீகாரம் ஏற்படவேண்டும் என்ற முனைப்பு தான் அசோகமித்திரனின் இலக்கிய பிரவேசத்துக்கு காரணம். சுஜாதா தன் வாசகனுக்கு மகுடி ஊத தொடங்கியதில் இருந்து தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டார். தமிழ் வாசகர் வட்டத்தின் தற்கால நிலையில் இருந்து உங்கள் கருத்துடன் முரண் படுகின்றேன் . ரமணிச்சந்திரனை சுஜாதாவை விட பலருக்கு பரிச்சயம் என்பதால் இலக்கிய உலகில் ரமணிச்சந்திரனின் இடத்தை பற்றி விவாதிப்பது எவ்வளவு அபத்தம். பொழுதுபோக்கு வாசகர்கள் சுஜாதவை அடுத்த இடத்திற்கு இப்போது கொண்டு செல்ல நினைப்பது அவர்களின் காரணப்பெயருக்கு இழுக்கு.
 
இதோடு வாதம் நிறைவு பெற்றது.