மீண்டும் ஒரு முறை பித்தன் கவிதை தொகுப்பை வாசித்துப் பார்த்தேன். 26.11.2016 அன்று நடந்த தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் நிகழ்வில் பித்தன் கவிதை தொகுதிக்கு அறிமுக அனுபவ பகிர்வு ஒன்றைச் செய்திருந்தேன். ஆனால் பதிவு செய்து இருக்கவில்லை. அதன் குறிப்புக்களும் என்னிடம் இப்போது இல்லை. பித்தன் தொடர்பாக விரிவாக எழுதவேண்டும் என்று ஆசையிருந்தது. தொகுப்பை நான் அணுகிய முறை, அதிலிருந்து விரிந்த கவி உலகம், அது வெளிப்படுத்தும் மானிட அடிப்படைவாத கேள்விகள், அதற்கு முன்வைக்கும் பதில்கள் என இன்னபிற நிறைய விடயங்களை பதிவுசெய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.

அறிமுகம்.
எப்போதுமே ஒரு கவிஞன் அவன் வாழ்ந்த காலத்தின் குறியீடாகவே கருதப்படுகிறான். அவனது எழுத்துக்கள் வழியே வெளிவருகின்ற உணர்வுகள் ஒவ்வொன்றும், அந்த சமுதாயத்தின் உணர்ச்சிகளே. கவிஞன் ஒரு கருவி. ஒரு கவிஞனின் எழுத்தில் பிரதிபலிக்க கூடிய பல்வகைமை, அவனுள் பதிந்த மானிடர்களின் அனுபவங்கள். பித்தன் தொகுப்பும் அப்படித்தான். ஒட்டுமொத்த சமூகத்தின் கேள்விகள், அவர்களின் அறியாமை, அவர்கள் கண்மூடித்தனமாக செய்கின்ற பழக்கவழக்கங்கள் என்பவை குறித்துத் தான் அப்துல் ரகுமான் எழுதுகின்றார்.
பித்தனின் அறிமுக கவிதையில் ரகுமான், இந்த தொகுப்பு முழுவதிலும் உலகத்தை தான் நின்று பார்த்த கோணத்தை விபரிக்கிறார். உலகின் ஒவ்வொரு தூண்டலிலும் இரண்டு துலங்கல்கள் இருக்கும். ஒன்று நேரானது மற்றையது மறையானது. எல்லோரது கண்களுக்கும் இரண்டுமே தெரியும். இரண்டையும் உணர்ந்து கொள்வார்கள். அப்துல் ரகுமான் அப்படி இல்லை. அவர் நேர் என்று நாம் குறிக்கும் துலங்கலில் உள்ள மறையை கண்டுகொள்கிறார். எல்லோராலும் வெறுக்கத்தக்க மறையான துலங்கல்களை ஆதரிக்கிறார். அதன் அழகை போற்றுகிறார். நேரானதில் காணாத இன்பம் மறையில் இருப்பதை விளக்குகிறார்.
பித்தன்
எதிர்களின் உபாசகன்
அதனால்
இருளிலிருந்து ஒளிக்கு என்ற
முழக்கத்திற்கு எதிராக
ஒளியிலிருந்து இருளுக்கு
என்று முழங்குபவன்.
அவன்
இல்லையின் தூதுவன்.
உண்மைக்குப்
பலமுகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்
முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.
அப்துல் ரகுமானின் இல்லையிலும் இருக்கிறான் தொகுப்பு கடவுளின் இருப்பு தொடர்பானதாக இருக்கும். அதில் ஒரு வலிதான வாதம் ஒன்றை முன்வைப்பார். இன்று மேசையில் ஒரு மெழுகுவர்த்தி இருந்தது. நாளை இல்லை என்றால் இருந்திருக்கிறது என்று தானே பொருள். அது போலத் தான் கடவுள் இல்லை என்றால் இங்கு இப்போது இல்லை என்று அர்த்தபடுத்திகொள்ளலாமே தவிர இல்லை என்று முடிவு கொள்ள முடியாது என்கிறார். இந்த நூலில் அவர் இல்லையின் தூதுவானாக வந்திருக்கிறார். எப்போதோ இருந்து இன்று இல்லாமல் போன ஒன்றை பேச வந்திருப்பது போல, நாமெல்லாம் மறந்து போன ஒன்றை ஆராய வந்திருப்பது போல, எமது அறியாமையை விலக்க முயற்சி செய்வது போல இல்லையின் மகத்துவத்தை எழுதுகிறார்.
உண்மைக்கு பல முகங்கள் உண்டு என்கிறார் அப்துல் ரகுமான், எங்களுக்கு பொய்களை திரித்தும் திருத்தியும் பேசித்தான் பழக்கம். பொய்களுக்கு வித்தியாசமான முகங்களை உருவாக்கிக் கொள்கிறோம்- எமக்கு சாதகமாக. ஆனால் உண்மைக்கே பல முகங்கள் உண்டு என்கிறார். அது அத்தனையையும் அறிந்தவன் பித்தன் என்கிறார். ஒரு உலகியல் உண்மையை அசைக்கிறார்.
அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகிவிட்டேன். – கலைஞர் மு. கருணாநிதி .
முன்னுரையில் இவ்வாறு கூறுகின்றார், –
பாசிடிவ், நெகடிவ் என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அது தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக சேர்ந்தால்தான் ஒளியே கிடைக்கும். முதலில் நெகடிவ் தயாராகிறது. புகைப்படத்திலே கூட முதலில் தயாராவது நெகடிவ்; பிறகு அது பாசிடிவ் ஆக படமாக உருவாகிறது. அதை மனதில் வைத்துகொண்டு படித்தால் எல்லாம் பாசிடிவ்விலேயே – அந்த அணுகுமுறையிலேயே பித்தனுடைய கவிதைகள் வெளியாகியிருகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
என்கிறார்.
அம்பலம்
கவிதைக்கு செல்லமுன்னர் surrealism பற்றி தெரிந்து கொள்வோம்.
Surrealism
1920களை உலகம் தாண்டிக்கொண்டிருக்கும் போது நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் சில மரபுகள் உருவாக்கப்பட்டன. வழமையான பண்பாட்டு சித்திரங்களை மாற்றி புதிய அணுகுமுறை தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. வாசகர்களின் ரசனை மாற்றப்பட்டது. அதுவரை வாசர்களுக்கு கருத்துக்கள் கொடுக்கப்பட்ட முறைமை மாற்றப்பட்டது. நேரடியாக கருத்துக்களை வாங்கப்பழகியவர்கள், ஒரே வாசிப்பில் கருத்துக்களை உள்வாங்கியவர்களுக்கு அவர்கள் கொண்டுவந்த புதுமுறை எழுத்துருவாக்கமும் ஓவிய முறைமையும் அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. வாசகர்கள் தங்களை வருத்தாமல் வாசித்தும் அறிந்துகொண்டிருந்த காலத்துக்கு விடைகொடுக்க தொடங்கினர். வருத்தி வாசித்தறிதல் என்ற கோட்பாட்டுக்குள் உள்நுழைந்தார்கள். ஆரம்ப கட்டமாக வாசிப்பும் ஓவியங்களும் படிப்பறிவுள்ளவர்களுக்கு விளங்கிக்கொள்ள ஓரளவு இலகுவாயும் மற்றையவர்களுக்கு புரிதல் கஷ்டமாகவும் தென்பட்டது. காலம் நகர கீழ் மட்டத்தினரும் வாசிக்கவும் அறியவும் தொடங்கினர். இந்த வாசிப்பனுபவத்தைத் தான் surrealism என்போம்.
இந்த நுட்பம் கவிதைகளின் ஆரம்பத்திலிருந்தே அவதானிக்க கூடியவாறு உள்ளது. அம்பலம் பித்தனை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதாக இருக்கிறது. வாசகன் இனி நான், நான் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன். ஆடைகள் கிழிந்த முகங்களில் சுருக்கம் விழுந்த கிழவன் ஒருத்தனை மக்கள் கூட்டம் திருடனை அடிப்பதைப்போல கற்களால் தாக்கிகொண்டு இருக்கிறார்கள். அவன் சிரித்துக்கொண்டு இருக்கிறான். அவனின் உடலின் அனைத்து பாகங்களிலும் காயம் உருவாகி விட்டது. முதன் முதலாக அவனை அன்று தான் பார்கிறேன்.
அவன் சிரித்துகொண்டிருந்தான்
அவன் காயங்களும்
சிரித்துகொண்டிருந்தன.
அருகில் போன நான் அவனிடம் இப்படி அடிவாங்கியும் சிரித்துகொண்டு இருக்கிறாயே நீ என்ன பித்தானா என்று கேட்கிறான். அவன் லாவகமாக நீ கல்லா என்றான். அவனை நோக்கி கற்கள் மட்டுமே வந்திருக்கின்றன. அவனை நோக்கி வெறுப்புகள் தான் வந்திருக்கின்றன. என்னையும் அவற்றில் ஒன்றாக, இதுவரை வந்த வெறுப்புகளில் ஒன்றாக, இனி வரப்போகும் வெறுப்புகளின் ஆரம்பமாக பார்கிறான். அவனின் பார்வை என்னுள் மிக ஆழமான தாகத்தை ஏற்படுத்தியது. அவனிடம் தொடுத்த கேள்விகளுக்கான பதில்களின் சாரம் இப்படித்தான் இருந்தது.
அவன் உண்மையின் இன்னொரு பக்கத்தை பார்த்ததால் பித்தனாகி இருக்கிறான். உலக மக்களின் அந்தரங்கங்களை – அப்படி அவர்கள் நினைத்துகொள்ளும் ஒன்றை – உடைத்து உண்மையை வெளிபடுத்த எத்தனிக்கிறான், அதனால் தான் கல்லடி படுகிறான். தங்களின் சுயத்தை மறைத்து பொய் முகமூடிக்குள் வாழுகின்ற மனிதர்களை அம்பலப்படுத்துகிறான். அதனால் வெறுக்கப்படுகிறான். அதனால் தான் அவனை எல்லோரும் பித்தன் என்கிறார்கள்.
பித்தன் முடிக்கிறான்,
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
தனது வருகையால் காலா காலமாக தம்மை மறைத்து வைத்திருந்தோரின் முகத்திரைகள் ஒழிந்து போகின்ற, என்கிறான்.