நீண்ட பகற்கனவுகளின் மீது எனக்கு எப்போதும் ஆட்சேபனைகளற்ற நெருக்கம் இருந்திருக்கிறது. காண்டா கழுகின் ஒற்றை சிறகின் மலை நிழலுக்குள் மறைத்திருக்கும் பாழ் நகரத்தைப் போல பயங்கரமும் விசித்திரமும் நிறைந்த நினைவுகள் பற்றியும், அவற்றின் உருவாக்கங்கள் பற்றியும் யோசிக்கும் போது பகற்கனவுகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன. நீண்ட தூர வெயிற்கால நடையின் போது வெவ்வேறு நிழல்கள் நிலத்தை மறைத்து நிற்க என்னுடைய நிழல் அவற்றினூடு ஊடறுத்து செல்வதைப்போல இந்த நகரத்தின் இருண்மைகளுக்கூடாக நகர்ந்துகொண்டிருக்கிறேன். என் வீட்டைச்சுற்றி அடர்ந்து வளர்ந்த காட்டின் வாசனை. தனித்திருக்கும் இந்த செந்தரையின் மீதிருந்து ஒரு முழு நகரத்தையும் அதன் இருண்மையையும் கக்கிக்கொண்டிருக்கும் என் கனவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளமுடியாதளவு, இரண்டு பெரிய உச்சியினிடையே தேங்கிப்போயிருக்கும் அசைவற்ற நீர்நிலையாகி கட்டிலின் நடுவே அமுக்கப்பட்டிருக்கிறேன். இதிலிருந்து எனக்குள் தோன்றும் கனவுகள் என் அன்றாடத்தோடுஎவ்விதத்திலும் தொடர்பற்றவை. விழிப்பு நிலைக்கு அப்பாலிருக்கும் இன்னொரு நிலத்திற்கு உரித்தானவை. என்னால் கனவுகளின் போக்குவரத்து பற்றி எதுவும் அறியமுடியாதுள்ளது. ஆனால் அவை என்னை பீடித்துக்கொள்ளும் இடங்களிலிருந்து என்னால் விலகிக்கொள்ளக்கூடியவாறு இருக்கிறது. வீட்டின் விறாந்தையிலிருந்து, அகன்றிருக்கும் சொகுசு கதிரைகளிலிருந்து , இரண்டு சுவர்கள் முட்டிக்கொள்ளும் மூலைகளிலிருந்து விலகியிருக்கிறேன். தேய்க்க தேய்க்க துலங்கும் மாயத்தூபி எல்லையற்ற கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றது. அவற்றின் சேர்க்கை புரிந்துகொள்ளவியலாததாய் இருக்கின்றது நானற்றவற்றில் இருந்து கனவுகள் தோன்றுவதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கனவு ஒவ்வொரு நினைவு. இவற்றை யார் எப்போது வைத்தார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. அவை நீள அகலமற்ற பெருவெளி. எனக்கு முன்னும் பின்னும் பனி படர்ந்த இரண்டு ஆளுயரக் கண்ணாடிகள். கனவுகளில் ஒளியாகி விரிந்து வெவ்வேறாவதையும் இருளாகி ஒடுங்கிப்போவதையும் உணர்கிறேன்.
முன்னெப்போதும் சந்தித்திராத மனிதர்களின் சஞ்சாரம் எனதுகனவுகளுக்குள். நிச்சயமற்ற உருவத்தை தோற்றுவிக்கின்றன. என்னை ஏமாற்றுவதற்கு நெருக்கமானவர்களின் உருவங்களாக தம்மை மாற்றிக்கொள்கின்றன சமயங்களில் என்னைபோலவும் தோன்றி மறைகிறஇச்சஞ்சாரங்களை கண்டு திகைக்கிறேன். அர்த்தமற்ற வெவ்வேறு ஒலிகளிலிருந்து தோன்றும் அவர்கள் அலங்காரமான சொற்களுக்குள் புகுந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒட்டுண்ணிகள் அல்லர். இருப்பிழந்தவர்களும் அல்லர். அவர்களிடம் பொருளற்ற வார்த்தைகளைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நீண்ட ரயில் பயணமொன்றில் யன்னல் வழி தவறிப்போகும் கச்சான் கோதுகளைப்போல என்னிலிருந்து பிரிந்துபோகிறார்கள். பின்னர் அடர்ந்த தேயிலைக்காடுகளில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகளைப்போல மீளவந்துசேர்கிறார்கள். கனவுகளில் அலைபவர்கள் நிரந்தரமற்றவர்களாய் இருக்கும் வரை நான் இறுகி கனத்துப்போனதில்லை. என் ஞாபகங்களுக்கு உட்பட்ட வெள்ளிக்கிழமை முன்மதிய பகற்பொழுதொன்றின் போது நெருக்கமான குரலொன்றின் தூரத்து அழுகை காதுகளுக்குள் மெல்லிய ஊசியொன்றைப்போல ஊடறுத்துக் குத்தியது. அப்போது நான் தூக்கத்தில் இல்லை. தூரத்து கடல் அலைகளின் மெல்லிய ஆனால் கூர்மையான இரைச்சலைப்போல அழுகை நித்தியமாயிருந்தது. அழுகையின் கருநீல மணம் என் உடலெங்கும் பரவியது. என் நினைவு இரைச்சலாயிருந்து. அதே நினைவு மௌனமாயுமிருந்தது. ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்ட ஒளி ஊடுபாயும் தாள்களில் கீறப்பட்ட சித்திரங்களைப்போல நினைவு கள் எண்ணிக்கையற்ற ஊடுருவல்களால் நிறைந்திருக்கிறன. இத்தகைய நினைவைத்தின்று வளரும் கருநீல அழுகையே முதிர்ந்து மீண்டும் ஒரு சொல்லாகின்றது.