தோமஸிலிருந்து புறப்படுதல் அல்லது “பொத்”தென விழுதல்.

1.

என்னிடமிருந்து
எதையாவது ஒன்றை எடுத்துச் சென்றுவிடுங்கள்
ஈரமான இந்தத் தரையிலிருந்து
ஒரு பிடி ஈரத்தையேனும்

2.

என் கைகளிலிருந்து தோமஸை விலக்கிக்கொண்டுபோய் என்ன செய்யப்போகிறீர்கள்? நேற்றும் அதற்கு முன் தினமும் அதற்கும் முதல் பல நாட்களிலும் நீங்கள் என்னிடமிருந்து பிரித்துக்கொண்டுபோன என் நண்பர்கள் என்னானார்கள்? என் வைரமான பிடிப்பையும் தாண்டி நீங்கள் இழுத்துச்சென்றவர்கள் என்னிடம் மீண்டும் வருவதற்காக கூச்சலிட்டு அழவில்லையா? உங்கள் மார்புகளை அவர்களின் வலிமையான கால்களால் உதைத்து வீழ்த்தி என்னிடம் வர எத்தணிக்கவில்லையா? நண்பர்களை என்னிடமிருந்து பிரிக்கமுன்னர் ஏன் என் கண்களை கறுப்புத் துணியினால் இறுகக் கட்டினீர்கள். ஓவென்று அழமுடியாதவாறு வாயை அடைத்தீர்கள். ஹ்ம் என்னவோ எல்லாம் செய்தீர்கள். இருந்தும் என்னால் முடிந்த எத்தனங்களைச் செய்தேன். உங்கள் கால்களையும் கைகளையும் பிடித்து தேம்பி தேம்பி அழுதேன். சுடுமணலை அள்ளி எற்றி உங்களைத் தூற்றினேன். சபித்தேன். நீங்கள் என் நண்பர்களைப் பிடித்துச் சென்ற பின்னர் அவர்களின் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என்னைப் பைத்தியம் என்றார்கள். இவனுக்கென்னாயிற்று நண்பர்கள் தானே பிரிந்து போனார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அத்தனை வலிமையற்றவனா இவன் என்று என் காதலிகள் சிரித்துக்கொண்டார்கள். ஆனால் தோமஸ் மட்டும் என்மீது பரிதாபப்பட்டான். என் கிழிந்த ஆடையினை, மழிக்காத முடியினை, மெத்தையில் செரிக்காமல் வாந்தியெடுத்த வேகாத இறைச்சி துண்டுகள் மீது புழுத்த நாற்றத்தினை இன்னும் எத்தனையோ. எல்லாவற்றைப் பார்த்தும் வருத்தப்பட்டான். தோமஸ் எத்தனை பரிவான பெயர். அத்தனை பரிவானவன் அவன். மனிதர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்? மனித உறவுகள் ஏன் இத்தனை பலகீனமானதாக இருக்கிறது? தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் ஏதோ ஒரு நாள் முடிவிற்கு வருகின்றன? முடிவிற்கு வருவதற்காக தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் தொடங்கப்பட்டன தோமஸ்? என் கைகளிலிருந்து நழுவி இழுத்துச் செல்லப்பட்டபோது நீயாவது அழுதாயா தோமஸ்?

3.

இந்தப் பூனைகளை பூமியிலிருந்து அழித்துவிடுங்கள்

சாத்தானே !
நீ கத்துவது
தொலைதூரத்திலிருந்து
என் நண்பன் அழுவதைப்போல கனக்கிறது.

4.

போதுமென்றளவு பேசிக்கொள்ள நண்பர்கள் இருந்த அந்த நாளில் தான் முதன்முதலாக நான் தனிமையை விரும்பத்தொடங்கினேன். அந்த நாளை என்னால் இன்னமும் சரியாக ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பனி படர்ந்த சவரக்கண்ணாடியின் மீது தெறித்தொதுங்கும் விம்பங்களைப்போல பல நாட்களை அடையாளங்கண்டு கொள்கிறேன். மிகச்சரியான அந்த நாளை, நொடியை என் பார்வையின் முன் நிறுத்தமுடியவில்லை. எரிந்து முடிந்த கடிதமொன்றிலிருந்து வார்த்தைகளைத் தேடி எடுப்பதைப்போல மழுங்கிப்போய்க்கொண்டிருக்கும் ஞாபகங்களிலிருந்து இவற்றை மீட்டி எடுப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது. அந்த நாளைப் பற்றிய நினைவுகளை ஓரளவேனும் மீட்டியெடுத்துவிட்டேன் என்று நினைத்த அந்தக்கணமே முடிவுறா வலியைத் தரும் அந்தக் கேள்வி எழுந்தது. காற்றாடிக்குள் சிக்கிக்கொண்ட ஈசலைப்போல சிறகுரிந்து உடல் சிதறிப் போனேன். “என் ஞாபகங்களில் எவை நியம்? எவை புனைவு?”. நிச்சயமாக என் ஞாபகங்கள் பொய்யில்லை. நியத்திலோ புனைவிலோ  எனக்குள் வாழ்பவர்கள் யாருமே பொய்யில்லை. அவர்கள்  அலட்சியமானவர்கள் அல்ல. சிந்திப்பவர்கள் இல்லை. அன்பைப் பற்றியும் தேவைகள் பற்றியும் சிந்தித்தவர்கள் இல்லை. வெள்ளைக் காகிதத்தின் மீது எறும்புகள் ஊர்வதைப்போல என்னுள்ளே அலைந்து திரிபவர்கள். அவர்களால் நான் அழுததில்லை. நான் அழுவதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து இறுக்கமாக முகத்தைப் பொத்தி நான் ரகசியமாக அழுவதைக்கூட அவர்கள் இலகுவாக அறிந்துவிடுகிறார்கள். தினமும் ஆயிரம் கேள்விகள் கேட்பேன். அவர்களுக்கு விடை தெரிந்திருக்காது. இருந்தும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சுவாரஷ்யமே இல்லாத கதைகளை சொல்லிக்கொண்டிருப்பேன், சற்றும் சம்பந்தமே இல்லாமல் சம்பவங்களை கோர்த்துச் சொல்வேன், பூக்கள் பறக்கின்றன என்பேன், மரம் பேசுகின்றது என்பேன், மின்மினிப்பூச்சிகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது என்பேன், இப்படி ஆயிரம் என்பேன். அவர்களும் சலிக்காமல் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக பொய்யில்லை, ஆனால் என் ஞாபகங்கள் நியமானவையா ? புனைவுகளா? தச்சனொருத்தன் மரக்குற்றியொன்றிலிருந்து சிற்பமொன்றை செதுக்கி எடுத்ததைப்போல தூய்மையாக மட்டுமே நினைவிலிருக்கின்ற ஞாபகங்கள் எனக்குள் பெருஞ்சலனத்தை ஏற்படுத்துகிறன. கல்லொன்றில் மோதி தெறித்தழியும் நீர்த் திவலைபோல சிதறியொதுங்குகிறேன்.

இங்கிருந்து முன்னும் பின்னும் அருகிலும் இன்னும் எங்கெல்லாம் பார்வையும் அறிவும் படர்கிறதோ அங்கெல்லாம் நியமும் புனைவும் ஊடறுத்துக் கலந்த ஓவியமாகவே தெரிகிறது. எங்கெல்லாம் மனிதர்கள் கனமாகவும் கூரிய ஆயுதங்களோடும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் கறுப்பை அள்ளி எற்றிவிடுகிறேன். எங்கெல்லாம் என் புருவங்கள் தாழ்ந்து இதயத்தின் ஆழத்தில் ஒரு பிடியளவு ரத்தம் உலர்கிறதோ அங்கும் ஈரமான கறுப்பை ஊற்றிவிடுகிறேன். கரைத்தும் கலந்தும் ஊற்றி ஊற்றி எங்கும் இருளின் வண்ணமாயிற்று. எதுவுமில்லா ஒன்றிலிருந்து உண்டான ஞாபகங்களில் நியத்தையும் புனைவையும் எப்படிப் பிரித்தறிய. இத்தனை கனமான கேள்வியின் பின்னர் தனித்துப்போன நாளைப்பற்றிய ஞாபகங்களை ஒழுங்குபடுத்துவது எனக்கு இலகுவானதல்ல.

என்னுள்ளே ஒவ்வொன்றும் கேள்விகள் தான். தனிமை என்றால் என்ன? நான் உணர்கின்ற உணர்விற்கு தனிமை என்பது சரியான அடையாளமா? அல்லது எனக்கு முன்னர் இந்த உலகத்தில் வாழ்ந்து முடித்த என்னைப்போன்ற பலகீனமானவர்கள் தங்கள் சௌகரியங்களுக்காக வைத்துக்கொண்ட பெயரொன்றை என் உணர்வோடு பொருத்திப்பார்க்கிறேனா? எப்போது இந்த உணர்வு எனக்குள் உருவாகியது? அல்லது தொற்றிக்கொண்டது? யார் வைத்த சூனியம் இது? உண்மையில் ஏதோ ஒன்றை உணர்கிறேனா? அல்லது நாடகமாடுகிறதா இந்த மூளை? மூளை சிந்திக்கிறது என்றால் எப்போது எனக்குள் அந்த உணர்வு பற்றிய சிந்தனைகள் வந்தேறியது? நான் உணரும் உணர்வு என்னுடையது தானா? அல்லது பிரபலமான கவிஞரோ புனைவாசிரியரோ எழுதிவைத்த சொற்களின் வெளிப்பாடு தான் என் தனிமையா? இந்தத் தனிமை என்ன செய்துவிடும்? சிரிப்பதைப் போல அழுவதைப்போல வலிப்பதைப்போல பசிப்பதைப்போல இதை ஏன் எளிதாக தீர்க்கமுடிவதில்லை? தனிமை நண்பர்களை, உறவினர்களை, காதலியை மற்றும் எல்லோரையும் அந்நியமாக்கிவிடுமா? என்னை என்னிலிருந்தே பிரித்து சிறுகச் சிறுக அழிந்துவிடுமா? எல்லாம் அழிந்த வெறுமையில் வெறும் ஆன்மாவோடு மட்டும் நின்று தனிமை என்ன செய்துவிடப்போகிறது? தனிமை பயங்கரவாதியா? தீவிரவாதியா? அல்லது மனநோயாளியா? கேள்விகள் கேள்விகள் தான் எல்லாம்.

இவையனைத்தையும் யாரிடம் பேசித்தீர்த்துவிட முடியும். கேள்விகளில் இருந்து தப்பிக்க வழிகளைத்தேடுகிறேன். இந்தக் கேள்விகள் ஆபரணங்களைப்போல வீணாக ஒட்டியிருப்பவை அல்ல. இந்த கேள்விகளும் மற்றைய கேள்விகளும் வேறு அனைத்து கேள்விகளும் மட்டும் தான் நான். என்னிலிருந்து நான் தப்பிக்கவே வழிதேடுகிறேன். பாலூனுக்குள்ளிருக்கும் காற்று வெளியேறி பரந்த ஆகாயத்தில் கலப்பதைப்போல.

5.

அன்புள்ள நண்பன் தோமஸுக்கு,

உன் தோழி என்னிடம் கதறியழுதாள். என் அறையிலிருந்து அப்போது தான் ஓரான் பாமுக்கின் ” Memories of Istanbul” வாசித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் பல முறை கெஞ்சியும் நீ வாசிக்க மறுத்த அதே பாமுக் தான். பாமுக்கை மட்டுமா நீ மறுத்தாய். நகுலனையும் சுந்தர ராமசாமியையும் ஆதவனையும் சுகுமாரையும் அனாரையும் ரமேஷையும் மார்கோசையும் ருஷ்டியையும் நெருதாவையும் இன்னும் நான் சொன்ன அனைவரையும் வேண்டாம் என்று ஒதுக்கினாய். உனக்கு பாடப்புத்தகங்களைத் தவிர வேறொன்றும் தேவையாகயிருக்கவில்லை. என் எதிர் வீட்டில் நகுலன் இருப்பதையும் பின்னேரங்களில் இரண்டாம் மாடியில் சுந்தர ராமசாமி உடுப்புக்களை உலரவிடுவதையும் சொன்னபோது என்னைப் பைத்தியம் என்றாய். போகட்டும். உனது பிறந்தநாளுக்கு நான் பரிசளித்த ” என் பெயர் ராமசேஷன் ” எங்கே. இருக்கட்டும். எனக்கு பாமுக்கின் பனி பிடித்திருக்கிறது என்றேன். நீயோ உனக்கு பனியில் தோழியுடன் நெருக்கமாக நடப்பது பிடிக்கும் என்றாய். உனக்கு நான் அத்தனை முக்கியமானவன் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன் தோமஸ். நான் உன் கன்னங்களில் மென்மையாக தந்த முத்தங்களை வேண்டாம் என உதறினாய். எனக்குத்தெரியும், உனக்கு காமத்தில் ஊறிய முத்தங்கள் தான் பிடிக்குமென்று. என்ன செய்வது ஆணாகப்பிறந்து விட்டேனே. உன் தோழியுடன் நீ இருப்பதையே அதிகம் விரும்பினாய். நீங்கள் நெருக்கமாக அலைவதைப்பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் வஞ்சித்ததில்லை. உன்னைச்சுற்றி நூற்றுக்கணக்கில் நண்பர்கள் இருக்கிறார்கள். காலையில் தொடங்கிய சம்பாசனை நள்ளிரவு தாண்டியும் முடியாமல் போய்க்கொண்டிருப்பதை நீ சொல்லி அறிந்திருக்கிறேன். உன் தோழியுடனும் மற்றைய நண்பிகளுடனும் மணிக்கணக்கில் நேரிலும் எழுத்திலும் நீ பேசிக்கொள்வதை சாதாரணமாகச் சொல்லும் போது வியப்போடு பார்க்கிறேன். உன் கடிகாரம் மட்டும் பாரபட்சம் பார்க்காமல் வேகமாக சுழல்வதாக நினைக்கிறேன். தோமஸ், உன் தோழி மூடியிருந்த கதவினை வேகமாகத் திறந்து என்னருகில் வந்து நின்றாள். அன்று நீ காணாமல் போயிருந்த மூன்றாம் நாள். அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. என் உள்ளங்கைகள் இரண்டாலும் அவள் முகத்தை மூடி புதைந்திருந்து  அழுதாள். உள்ளங்கையில் சுடுநீரை ஊற்றியது போல அவளது கண்ணீர் எரித்துக்கொண்டு நனைத்தது. அவளால் எப்போதும் அழுகையை நிறுத்தமுடியாது என்று தோன்றியது. உள்ளங்கைகளை உயர்த்தி அவள் முகத்தை திறந்தேன். ரத்தநாளங்கள் ஓடிப்போயிருந்த முகத்தில் உன்னைக்காணாத வாட்டம் தெரிந்தது. அவளின் புருவங்கள் துடித்துக்கொண்டிருந்தன. நெற்றி சுருங்கியிருந்தது. அழுதழுது மூக்குச் சிவந்திருந்தது. நானும் நீயும் பிரிந்து மூன்று நாளாயிற்று என்று அவள் அறிந்திருக்கவில்லை. இந்தப் பிரிவைப்பற்றி சொல்ல எதுவுமிருக்கவில்லை என்பதுவும் உண்மைதான். எனக்குத்தெரிந்து பிரிவினை எளிதாக எடுத்துக் கடந்துவிடும் ஒரே ஒரு உயிரினம் மனிதாராகத்தான் இருக்கமுடியும். எனக்கு பலத்த நம்பிக்கையிருக்கிறது. உன் காதலி பிரிவின் துயரத்திலிருந்து இரண்டாவது மூன்றாவதோ நாள் நிச்சயம் மீண்டுவிடுவாள். உனக்கு மனிதர்கள் எளிமையானவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் உனக்கு எதையும் தரப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாய். நீயும் அவர்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை. இந்த உண்மையை உன் தோழியிடம் எப்படி எடுத்துச்சொல்வேன். அன்பு சிந்தனைகளின் உற்பத்தி இல்லை தோமஸ். இப்படியெல்லாம் பேசுவது உனக்கு அயர்ச்சியளிக்கும். என்னசெய்வது. எனக்குத்தெரிந்த ஒரே மந்திரம் தந்திரம் எல்லாம் இந்த அன்பு தானே. நான் அன்பென்னும் பெரும் மலக்கிடங்கு. தோமஸ் ஒரு முறையாவது உன் தோழியிடம் வா. என்னிடம் வரவேண்டும் என்றில்லை. உன்னோடே இருந்து உனக்காகவே வாழ்ந்த அவளுக்காக ஒரு முறை வா. மென்மையான அவளின் கைகளைப்பிடித்து இந்த உலகத்தில் வாழும் ரகசியம் பற்றி ஓரிரு வார்த்தைகளேனும் சொல்லிவிட்டுப் போ. உன் தோழி என்னருகில் கதறி அழுகிறாள். உன் கண்கள் கலங்கவில்லையா தோமஸ்?

தோமஸிற்குத் திவசம்

மெல்லிய சாம்பல் நிறமாக முன்காலை வெளித்திருந்தது. பருவம் தவறி சுழன்றடிக்கும் ஆடிக்காற்று பழுத்த மஞ்சள் நிற இலைகளை லாவகமாக பிடுங்கி எறிந்துகொண்டிருந்தது. அவை சருகுகளாக முற்றம் முழுக்க சிதறிக்கிடந்தன. போஃகி தன் உடலை  வளைத்து பின்னங்காலினை நக்கியது. அது தன் உடல் முழுதும் படிந்திருந்த புழுதியை பாம்பொன்றின் லாவகத்துடன் வளைத்து உதறிக் கொட்டியது. என்னை அண்மித்து காலடியில் சுருண்டு கொண்ட கணம், நான் தோமஸின் திவசம் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன். தோமஸ் இறந்து இருபத்தொரு நாளாகியும் யாரும் திவசம் பற்றி சிந்திப்பதாய் இல்லை. தோமஸின் இறப்பைப் பற்றி சிறிதளவேனும் வருந்துவோர் கூட இதைச் சட்டை செய்வதாய் தெரியவில்லை. அது சரி, நெடுஞ்சாலையில் அனாதையாய்க் கிடந்தவனை பெக்கோவால் அள்ளி புதைத்தவர்களாயிற்றே.
 
தோமஸ் எந்த மதத்தையும் பின்பற்றிகொண்டவனாய் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. எந்த மார்க்கத்தையும் பண்பாட்டையும் கூட. அவன் தன் தாய் தந்தையர் பற்றியோ குலம் கோத்திரம் பற்றியோ எப்போதும் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. எங்களுக்கு முகங்களையோ அடையாளங்களோ தேவைப்படவில்லை. அவன் எதன் மீதும் பயத்திலிருக்கவில்லை. அதனால் அவனுக்கு அடையாளங்கள் தேவைப்படவில்லை. பயத்திலிருப்பவர்கள் தானே அடையாளங்களை தரித்துக்கொள்வார்கள். என்னிடம் ஒரு முறை மெதுவாகச் சொன்னான், ” நான்  மனிதர்கள் மீது பயத்திலிருக்கிறேன்” என்று. நானும் அவனும் பயத்தைப்பற்றி பேசிக்கொண்ட இரவை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன். அவன்  வலிமையான மனதினைக் கொண்டவனாயிருந்தான். மிகச்சிறிய விஷயத்திற்கே உடைந்து அழுதுவிடும் என்னோடு அவனிருந்தது ஆச்சரியமான ஒன்றுதான். அன்றைய இரவு என் பகற்கனவுகளை எண்ணி  பயந்துபோயிருந்தேன். நிலத்திலும் கட்டிலிலும் கதிரையில்  கண்களை மூடமுடியாதளவு பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. தடிப்பான கரும் போர்வை ஒன்றைப்போல பயம் என்மீது கவிந்திருந்தது. இரக்கமற்ற சொற்களும் வசைகளும் என்னைச்சுற்றிக் குடைந்துகொண்டிருந்தன. அறைக்கதவு இறுக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சிறிய யன்னல் ஓட்டைக்கூடாக உடலை செலுத்தி இறந்துவிடலாம் என்று எத்தனித்த போதும் என் பருத்த உடல் நுழைய மறுத்தது. பருமமான என்னுடல் முதன்முறையாக  என்னை வஞ்சித்தது. முகமூடியுடன் உடலற்றவர்களும் உடலோடு முகமற்றவர்களும் நிறைந்து போயிருந்தார்கள். அவர்களின் நெருக்கத்தில் என்னால் மூச்செடுக்கக் கூட முடியவில்லை. இறப்பு இப்படியாவது என்னை அழித்துவிடட்டும் என்று அடங்கிக்கொண்டிருந்த கணம் தூரத்திலிருந்து தோமஸின் குரல் கேட்டது. அது நிச்சயமாக தோமஸின் குரல் தான் என்பதை உணர்ந்துகொண்டேன். அவனது குரல் வெள்ளிக் குவளைக்குள் சல்லிக்கற்களை போட்டது போல கூர்மையாக இருக்கும்.  நான் உயிர்பிழைப்பதற்கான எல்லாச் சாத்தியங்களையும் அந்தக்குரல் கரகரத்து இரையும் வரை உரக்கக் கத்திக்கொண்டிருந்தது.  கும்மிருட்டுக்குள் மின்மினி ஒன்று தன்னுடலிலிருந்து வெளிச்சத்தை எனக்குள் பாய்ச்சியது. அது மிக மிக நுண்ணிய வெளிச்சம். இரண்டு விரல்களால் பிடித்துக்கொள்ள முடியாதளவிருந்து. அறைகுளிருந்த கதிரையொன்றிலேறி கழுத்தை உயர்த்தி விட்டத்தைப் பார்த்து மூச்செடுத்தேன். காற்றின் வழியாக உயிர் உடலை நிரப்பியது. தன் வாழ்நாளின் கடைசிக் கணங்களில் இருந்துகொண்டிருக்கும் காற்றாடி தலைக்கு மேலே கீறீச் சத்தத்தோடு என்னை நோக்கி சிரித்தது. தலைக்கு மேலும் காலுக்கு கீழும் இறப்பு காத்திருக்க தோமஸ் முன்கதவைத் திறந்தான்.
 
தோமஸிற்கு திவசம் செய்வதை அவன் விரும்புவானோ தெரியவில்லை. ஒரு வேளை இறப்பின் பின்னர் கடவுளை அவன் கண்டிருக்கலாம். இறை நம்பிக்கையுள்ளவனாய் மாறியிருக்கலாம். தோமஸும் மிகச் சாதாரணமான மனிதர் தானே. என்னோடிருந்த போது குழந்தைகளிடத்தே அதிக அன்பு செலுத்தினான். குழந்தைகளை ஒளி என்றான். ஒளியைப் பேசவிடாமல் இயற்கை எப்போதும் தடைவிதித்தபடியே வைத்திருக்கிறது.  அதனால் குழந்தைகள் பேசமாட்டார்கள் என்றான். குழந்தைகள் மௌனமாக்கப்பட்டார்கள், நானும் நீயும் மௌனித்திருக்கிறோம் தோமஸ். குழந்தைகளுக்கு அழுக்கும் இனிப்பும் ஒன்றுதான். தாய்ப்பால் மறந்த குழந்தை தான் ஞானி என்றேன். அவன் ஆமோதித்தான். முழுதும் திறந்த நீலவிழியன் இறந்து போகக்கூட ஒரு சாண் நிலம் தேவையாய் போயிற்றே. ஏதுமற்ற வெளி ஒன்றை இந்த புறவுலகில் புத்தனாலும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. தோமஸ் நீ கிறிஸ்தவனா?” In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. “, அவன் கிறிஸ்தவன் இல்லை. அவனிடம் பைபிள் இருந்திருந்தால் பற்றவைத்து ஆற்றில் கரைத்திருப்பான். முடிந்த முடிவாய் ஒன்றைச்சொல்லும் மதத்திடம் அவன் எக்காலமும் ஒன்றியிருந்திருக்கமாட்டான். பிறகெப்படி நீ தோமஸாவாய்? அது சரி நீ எப்போது உன்னை தோமஸ் என்றாய்.
 
எல்லோரிடமும் முன்கூட்டியே பதிலளிக்கப்பட்ட புத்தகம் ஒன்றுள்ளது. அதில் எல்லாக் கேள்விகளும் கதைகளும் போதனைகளும் கூடவே பதில்களும் உள்ளது. மனிதர்களை எளிமையாக ஏமாற்றிவிடலாம். அந்தக் கதைகளால் எனக்கு பதிலளிப்பதன் மூலம் என்னையும் ஏமாற்றிவிடுகிறார்கள். உண்மையில் ஏமாற்றப்பட்டேன். ஆயிரம் முறையேனும். பதிலளிக்கப்பட்ட  புத்தகங்களிலிருந்து இந்த உலகம் தோன்றியது என்று நம்பவைக்கப்படுகிறார்கள். தடிப்பான அந்தப் புத்தக அட்டைகளுக்குள் உலகம் சுருங்கியும் விரிந்தும் காலம் காலமாக சுழன்று வருகிறது என்கிறார்கள். மதப்புத்தகங்கள் இன்னொரு வரலாற்று நாவல்கள் என்பதை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. அவர்களின் நம்பிக்கையின் மீதான கேள்விகளை அபத்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதையும் தீட்டு என்கிறார்கள். தோமஸ் சில பத்தாயிரம் சடலங்கள் குவிந்து கிடந்த இந்த மண்ணை விடவா இந்தக் கேள்விகள் பெருந்தீட்டு. யேசுவிடம் கல்லை அப்பமாக்க கேட்ட துஷ்டனைப் போல என்னைப் பார்க்கிறார்கள். தோமஸ் நாங்கள் எக்காலமும் மதங்களைப்பற்றி உரையாடியதில்லை. ஆனால் இப்போது நான் அதைப்பற்றி சிந்திக்கிறேன். உனக்காக. உனக்கு திவசம் செய்வதா வேண்டாமா என்று ஒரு தீர்க்கமான முடிவு காணவேண்டும். மீண்டும் மீண்டும் உன்னை இவர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொள்ளும் சடங்கொன்று தேவைப்படுகிறது. இவர்கள் அந்த சில பத்தாயிரம் போல் உன்னையும் காற்றில் கரைக்கப்பார்கிறார்கள். நான் விடமாட்டேன். தோமஸ் இங்கு தீர்க்கப்படாத கணக்குகள் மிச்சமிருக்கின்றன.
 
 
 

தூர்ந்துபோன தோமஸிற்கு கடிதம்

அன்புள்ள தோமஸிற்கு,
 
உன் உடல் சீராக எரிந்து சாம்பலாகும் கணம் வரை எனக்கும் உனக்குமான உறவைப்பற்றி யாரிடமும் நான் சொன்னதில்லை. இப்போதும் அதற்கான தேவைகள் வரவில்லை. இங்கு எல்லோரும் அவர்களின் தோமஸை எண்ணி அவதானமாயிருக்கிறார்கள் அல்லது அது போன்று பாவனை செய்கிறார்கள். சுடுகாட்டின் வாசலில் நின்றுகொண்டும் கூட உன் இறப்பை சந்தேகப்பட்டேன். நீ இறந்ததில் பெருந்துயர் உன் காதலிக்கோ, தாய் தந்தையருக்கு, மனைவிக்கோ கிடையாது. அவர்கள் உன் இறப்பை வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல இந்த உலகத்து மக்களில் பெரும்பாலானோர் உன் இறப்பை ஆதரிக்கிறார்கள். நீ இறந்தேயிருப்பது அவர்களுக்கு இலகுவாய் போயிற்று. அவர்கள் உன்னைப் பார்க்கவிரும்பவில்லை. உன்னிடம் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை. தோமஸ் இறந்ததன் மூலம் அவர்கள் உருப்பெறுகின்றார்கள். உனக்கு ஒரு விடயம் தெளிவாக விளங்குகிறதா? நீ ஒன்றும் யேசு கிடையாதே, மீண்டும் உயிர்த்தெழ. அதனால் அவர்கள் சந்தோசமாக கொண்டாடுகின்றார்கள். ஒரு அரக்கன் அழிந்த நாளாக இனிப்புகளையும் பட்டாசுகளை கொளுத்தி அவர்கள் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். நள்ளிரவு பன்னிரண்டைத்தாண்டி அரைமணித்தியாலத்தின் பின் “போஃகி” ஊளையிடுவதைக்கேட்டு சந்தோசித்து கதவைத்திறந்து உன் வரவை எதிர்பார்த்து ஏமாற்றமடைகிறேன். இது நீ இறந்து ஒரு வார காலமாகியும் தவறாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. எனக்கு பைத்தியம் என்றோ பேய் பிடித்துவிட்டதொன்றோ பட்டம் கட்டுவதன் மூலம் எல்லோரும் தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள். அதை அவர்கள் பாட்டிற்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் என்னைவிட உயர்ந்தவர்கள். உலகத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் செய்கைகளும் இயல்பாக நடக்கிறது என்று நம்புகிறார்கள். இயல்பானவர்களையும் இயல்பானவற்றையும் சிந்தித்து சிந்தித்து முடியாமல் போயிற்று. பூக்கள் மலர்வதை இயல்பாக பார்ப்பது போல தோமஸ் இறப்பையும் இயல்பாக பார்க்கிறார்கள்.  உனக்கு அந்தநாளைப்பற்றிய ஞாபகம் இருக்கிறதா? நீ தான் இறந்து போயிற்றியே அதனால்  உன் ஞாபகங்களும் இறந்துபோயிருக்குமா என்ன? நாங்கள் சுயநலமாவார்கள். எங்களுக்கு உவப்பானவற்றையும் வெறுப்பானவற்றையும் மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். மற்றைய எல்லாவற்றையும் இயல்பாக நடந்தேறுகிறது என்று விட்டுவிடுகிறோம். ஞாபகங்களைக் கூட தேர்வு செய்து அடுக்கிவைக்கிறோம். இருந்தும் உன் ஞாபகங்கள் பற்றி எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவை நித்தியமானவை. எதையும் புறக்கணிக்காதவை. அவர்கள் எனக்கு “பத்”தும் “கூல் ட்ரிங்ஸ்”உம் தந்து என் சகோதரர்கள் இறப்பை கொண்டாடிய போது நீ கூடத்தானே இருந்தாய். உனக்கு அவற்றை அள்ளித் தின்னும் போது மலத்தை தின்பதைபோல அருவருத்ததாக சொன்னாயே. நீ கடுங்கோபமுற்று அந்த மனிதர்களை தாக்க முயன்ற போது நான் படாதபாடுபட்டு உன்னை அடக்கி அறைக்குள் திணித்தேன். ஆனால் என்னையும் உன்னையும் தவிர மிச்ச எல்லோரும் ” கட்டச்சம்பல் நல்லா இருக்கு ” என்று இயல்பாக சாப்பிட்டார்கள். அவர்கள் உன்மீது கடுங்கோபமுற்றிருந்ததை அறிவேன். ஆனால் உன் இறப்பை திருவிழாவாக்கி கொண்டாடுமளவு நீயும் நானும் மலினமானவர்களா என்ன. சுடுகாட்டில் யாருக்கும் தெரியாமல் உன்னைப் புதைக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது ஒருக்காலும் முடியாது என்று உணர்ந்தேன். ஏனென்றால் அவர்கள் தங்களை புத்திசாலியாக காட்டிக்கொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். இப்போது கூட உன்னை சுடுகாட்டில் ஏதோ பெருஞ்சாலை ஒன்றில் அடிபட்டு அழுகிப்போன விசர் நாயொன்றைப் புதைப்பதைப்போல ஓரமாய் புதைத்திருக்கிறார்கள்.
 
நீயும் நானும் பேசிகொண்டவற்றையெல்லாம் எந்தப் புதைகுழிக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அவர்கள் நாங்கள் உரையாடுவதை விரும்பவேயில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து உரையாடினோம். நேரம் காலம் இடம் என்று எந்த பேதமுமின்றி. உன்னோடு முரண்பட்டு உன்னை தூற்றிய போதெல்லாம் சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். நானே உன்னை அழித்து விடுவேன் என்று பலமாக நம்பினார்கள். அவர்களிடம் எதன் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள் என்றேன். எதுவும் நிலையில்லை என்றேன். இப்போது நான் இங்கு இருப்பது கூட என்னளவிலும் என்னை உணர்பவர்கள் அளவிலும் மட்டும் தான் உண்மை என்றேன். நான் பார்ப்பது மரம் ஒன்றினையா அல்லது நான் மரமாக நினைத்த ஒன்றினையா என்று வினவினேன். நீங்கள் உணர்வது இருப்பது ஒன்றைத்தானா அல்லது நீங்கள் அறிந்துவைத்திருக்கின்ற இல்லாத ஒன்றையா என்றேன். உங்களிடம் எதுவுமில்லை எல்லாம் புகுத்தப்பட்டது என்றேன். நீங்கள் சிந்திக்கவில்லை, தெரிந்துகொண்ட ஒன்றை திரும்பிச் சொல்வதை சிந்தனை என்று பொய்ப்பேர் சூட்டுகிறீர்கள் என்றேன். அவர்கள் வெகு எளிமையாக ” நிறையப் புத்தகங்கள் படிக்காதே என்று இதான் சொல்றது ” என்றார்கள். ஆனால் புத்தகங்கள் எனக்கோ உனக்கோ எதையும் தரவில்லை என்பதை உணரும் திறனை அவர்கள்  மழுங்கடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நானும் நீயும்  இதைப்பற்றியெல்லாம் கதைத்தோம் என்றபொழுது அவர்கள் சிரித்தார்கள். வேலையில்லாதவர்கள் என்றார்கள். சந்நியாசி ஆகப்போறான் என்றார்கள். ஆனால் தாங்கள் ஞானம் அடைந்ததாக சொல்லிக்கொள்கிறர்கள். அதுவும் பிரபஞ்ச ஞானம். அதைபார்த்தீர்களா என்றேன். எந்த தயக்கமுமில்லாமல் என்னை அடிமுட்டாள் இது தெரியாதா என்றார்கள். நீயே சொல்லு தோமஸ் உனக்கு புத்துயிர்ப்பு அவசியம் தானா?
 
அன்புடன்,
உன் அறைத்தோழன்.