ஆதாரமற்ற நெடுங்கனவொன்றின் மீதமரும் புனைவு என் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளோடு உரையாடத் தொடங்குகிறது. புனைவுலகு அகன்ற ஆழி. மிகத் தளர்வான கரைகளைக் கொண்ட ஆறு. எந்தக் குறிக்கோளும் பிரக்ஞையுமற்று செந்தரையின் குளிர்ச்சியில் நிரந்தமாய் உறங்கிப்போன எனக்கு, மிக நிதானமான உலகொன்றையும் அவற்றிக்குத் தோதான உணர்வுகளையும் உருவாக்கித்தந்தது புனைவு. வாழ்க்கையின் நிரந்த உணர்வுகள் புனைவிற்குள் அவற்றிக்கான மெய்வெளியினை பெருக்கிக்கொள்கின்றன. என் புனைவுகள் ஒரு பெண்ணின் நெற்றிக்குள் சுற்றும் சுழல். புனைவொன்றிற்குள் வாழவும் சிந்திக்கவும் பழகிய ஒருத்தர், எப்போதும் வாழ்கையின் மீது கொள்ளும் சலிப்பு ஒரு பொறி போன்றது. எல்லா வெளிகளையும் நிரப்பிக்கொள்ளும் பொறி, தாரை தாரையாய் பாயும் பொறி மூலமாகிறது. இம்மூலத்தின் ஒவ்வொரு நதியும் எனக்குரியதே. புனைவு புரிதலைத்தாண்டி ஏதோ ஒன்றை என்னிடம் கோருகிறது என்பதிலிருந்து அம்மாவின் காடு தழைக்கிறது.
குளிர் பொருந்திய இரவுகளை நினைத்துவாடும் பெருஞ்சொகமான இரவொன்றில் ஆளரவம் அற்ற எலிக்காடொன்றில் உலகம் மலையொன்றின் அமைதியைப்போல உறங்கிக்கொண்டிருந்த கணம் அம்மாவின் காடு வாசித்தேன். ரசம் பூசப்பட்ட சதுரக்கண்ணாடிக்கு முன்னின்று என் கண்களை வெறித்துப்பார்த்துக்கொண்டே நெய்யல் கரையில் எண்ணைப்பிசுக்கேறிய என் தாயின் உருவத்தைக் கண்டேன். அது நிச்சயமாக தேவிபாரதி கண்ட தாய் அல்ல. குதி நிறைய வெடித்துப்போய் மணலின் ஈரம் கசிய நிற்கும் என் தாய். கண்ணாடியின் முன் சிவந்த கண்களோடு உறைந்துபோய்நிற்கும் ஒருத்தனின் அத்தனை துன்பத்தையும் தன் சிவந்த குங்குமத்தால் சூடி நிற்கிறாள் அவள். முடிச்சிலிட்ட மலரொன்றைப்போல அவளின் இளமையும் சந்தோஷமும் மீளவும் உயிர்ப்பிக்கமுடியாமல் வாடிப்போனது. ஒரு கணம் நானும் இன்னொரு கணம் அவளும் குருதி தோய்ந்த கத்தி முனையின் மேல் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்.
அம்மாவின் காடு