வீட்டு விறாந்தையின் கிழக்கு மூலையில் இருந்த மரக்கட்டில், இன்று விறாந்தையின் நடுவிற்கு கொண்டுவரப்பட்டது. நல்ல திடமான முதிரை மரத்தால் சீவி செய்யபட்டிருந்தது. அப்பப்பா சொன்னதன் படி இந்த கட்டில் என் பூட்டப்பாவின் அப்பா முதன் முதலில் பயன்படுத்தியிருந்தார். சந்ததி சந்ததியாக இந்த கட்டில் குடும்பத்தின் தலைவர்கள் வசமே இருந்தது . இந்த கட்டிலில் பெண்கள் ஏறக்கூடாது, தொடக்கூடாது என்பது வழக்கம். அவ்வாறு மாறி தொட்டால் கூட அது பெரும் இழுக்காகவே கருதப்படும். அதனால் நானோ என் அம்மாவோ பாட்டியோ அதற்கு அருகில் கூட செல்வதில்லை. பாய், தலையணை, போர்வையையும் பாட்டி , அப்பப்பாவிடம் சொல்லித்தான் சுருட்டி வாங்குவார். ஒருக்கால் அப்பப்பா கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுகொண்டிருக்கும்போது ,பாட்டி மூலிகைத்தண்ணீர் கொண்டு போய்க் கொடுக்க அருகே வரதே என்று காலால் கோப்பையையும் பாட்டியையும் உதைந்து தள்ளியது இன்னும் மனக்கண் முன் நிற்கிறது. பாட்டி எந்த சலனமும் இல்லாமல் கோப்பையை எடுத்துக்கொண்டு குசுனிக்கு போய் முடிய அப்பப்பா என்னை கூப்பிட்டு “ கொஞ்சம் தேதண்ணி தா மோனை “ என்று கேட்டது அடுத்த உதை எனக்கோ என்ற பயத்தை தூண்டியது.
என்னதான் நான் ஆம்பிள்ளையா இருந்தாலும் அந்த கட்டிலுக்கு கிட்ட போக செரியான பயம். எனது அப்பா எப்போதும் அப்பப்பா பற்றி சொல்லும் போது நல்ல கதை சொல்லி என்று பாராட்டுவார். அந்த கட்டிலில் அவரின் மடியில் தலை வைத்து அரைஞான்கொடியை கையில் வைத்து இழுத்துக்கொண்டே அவரின் பால்யம் முடிந்ததாக கூறும் போதெல்லாம் எனக்கும் ஒரு வித ஆசை உண்டாகும். அப்பப்பாவின் கதைகளில் பேயும் பிசாசும் நிறைய வரும் என்றும் அவரின் கதைகளில் எப்பொழுதும் ஒரு ஆண் தேவதை இருப்பார் என்றும் அப்பா சொல்லுவார். எனக்கு அந்த ஆண் தேவதை எப்படி இருப்பார் என்று கனவு கண்டே சித்தம் கலங்கி விடும் போலிருந்தது.ஒரு போதும் அப்பபாவிடம் இதைப் பற்றி கேட்டது கிடையாது.
அப்பப்பா கட்டிலின் மூலையில் , இரண்டு சுவர்கள் இணைகின்ற ட வளைவில் நடுவே தலையணை ஒன்றை வைத்து சாய்ந்தபடி ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டே இருப்பார். அவரின் கட்டில் மூலையில் மூன்று புத்தகங்கள் மட்டுமே எப்போதும் இருக்கும். அன்றைய பத்திரிகை, கல்யாண வீட்டு அழைப்பிதழ், அந்தியட்டி வீட்டு அழைபிதழ் சிலவும் ஓரத்தில் நேர்த்தியாக வைக்கபட்டிருக்கும். யாரும் ஆம்பிள்ளைகள் வந்தால் மட்டும் முகம் கொடுத்து கதைப்பார். அதுவும் எல்லா ஆம்பிள்ளைகளும் அவர் முன்னால் இருந்துவிட முடியாது. ஒரு வெற்றிலை பெட்டி ஒன்று கைத்தாங்கலாக வைத்திருப்பார். அவர் பெரிதாக போடுவது கிடையாது. வயலுக்கு செல்லும்போது மட்டும் வாய்நிறைய சப்பிக்கொண்டும் போகின்ற வழியெல்லாம் சிவப்பு சிவப்பாக உமிழ்ந்துகொண்டும் போவார். வீட்டு வாசலில் சிவப்பை பின்தொடர தொடங்கினால் அவரின் நிழல் எல்லைக்குள் சென்று இலகுவாக அடைந்து விடலாம். ஒரு முறை பாட்டி “ இம்புட்டு ரோசம் இருக்குறவர் ஏண்டா மோனை களத்துக்கு மட்டும் துப்பிட்டே போறார் எண்டு கேளன்” என்றார். ஆண் தேவதை பற்றியே கேட்க முடியாமல் இருந்த எனக்கு இந்த கேள்வி எம்மாத்திரம்.
என் அப்பாவிற்கு கட்டில் மேல் எல்லாம் பிரியம் கிடையாது. ஒரு வேளை வயது போய் முடிய வந்துவிடலாம். அப்பா கட்டிலின் அருகில் இருந்து அப்பப்பாவிடம் ஏதோ மெதுவாக கதைத்துகொண்டிருந்தார். பாட்டியும் அம்மாவும் நானும் சுவரில் நின்ற பல்லியும் கூர்ந்து கேட்டுகொண்டிருந்தோம். அப்பா சொல்ல சொல்ல அப்பப்பாவின் கண்கள் கணத்துக்கொண்டு வந்தன.சிறிது நேரத்தில் முகத்தில் எந்த மாறுதலுமின்றி அப்பா இடைத்தை விட்டு எழுந்து வெளியே போனார். அப்பப்பா கொஞ்ச நேரம் அப்பா போன தடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தன்னிடம் இருந்த பழைய புத்தகங்களில் மிக பழையதை எடுத்து விரித்தார். நாம் நால்வரும் வைத்த கண் வாங்காமல் அப்பப்பாவின் செய்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தோம். அப்பப்பா மெதுவாக திரும்பி என்னை பார்த்து “ வா மோனை “ என்றார். பின்னாலிருந்த அம்மா உந்தி விட நான் பயத்தோடு கட்டிலுக்கு அருகில் ஊர்ந்தேன்.
“ ஏறி இரு மோனை “
மெல்லியதாக கைகளை கட்டிலின் விளிம்பில் ஊன்றி சாவகாசமாக அமர்ந்து கொண்டேன். அப்பப்பா என் தலையில் கையை வைத்து அழுத்தி தன் தொடையில் கிடத்தினார்.என் கண்கள் கண்ணீரால் நிரம்பி முட்டிகொண்டிருந்தது. அப்பப்பாவின் வேட்டி நனைந்துவிடக்கூடாது என்று அடக்கிகொண்டேன். அவர் தனது கண்களை அருகிலிருந்த துவாயால் துடைத்து விட்டு கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். தேவதைக்கதை…. ஆண் தேவதைக்கதை …… கதை ஒரு மெழுகிய வழுக்கும் தரையைப்போல மிருதுவாகவும் சலனமற்றும் இருந்தது. அப்பப்பா ஒரு நல்ல கதை சொல்லி தான். அம்மாவும் பாட்டியும் கதைசொல்ல தொடங்கும் போதே உள்ளே போய் விட்டார்கள். நானும் பல்லியும் மட்டும் கதையை நீண்ட நேரம் கேட்டுகொண்டிருந்தோம். இடையில் நானும் தூங்கிவிட்டேன்.
அப்பப்பா வெற்றிலை பெட்டியிலிருந்து வெற்றிலையை வாய்நிறைய சப்பிக்கொண்டும் துப்பிக்கொண்டும் வயலுக்கு போனதாக பல்லி சொல்லி பின்னாளில் கேள்விப்பட்டேன்.
முதன் முதலில் கதை கேட்கும் போது எனக்கு வயது இருபத்தைந்து. இப்போது எழுபது. என் நான்கு பேரக்குழந்தைகளையும் என் மகள் இருவரையும் என் மனைவியையும் வைத்துகொண்டு அதே கட்டிலில் சந்தோசமாக தேவதைகளின் கதையை சொல்லி முடித்து விட்டேன். பெண்தேவதைகளின் கதையை. என் பெண் பேரக்குழந்தைகளில் ஒன்று என் மடியின் மீது சிறுநீர் கழித்தது கூடத்தெரியாமல்.
Monthly Archives: June 2017
ஒரு மணி நேரம் முன்பு. – முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் நிறைவு.
ஆ.முத்துலிங்கம் ஈழ இலக்கியத்தின் முக்கிய அடையாளம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. ஒரு கதை சொல்லியின் மிக தேர்ந்த வடிவமே முத்துலிங்கம். கதைகளை வாசகர் சிரமப்பட்டு அணுகாமல் மெல்லிய நீட்சியுடன் விரிகின்ற நுட்பமான கதைசொல்லல் அவரது. முத்துலிங்கத்தின் பல கதைகளின் முடிவும் அதனால் வாசகனுக்கு நீளுகின்ற வாசிப்பின் பின்னான அமைதியும் அவரின் எழுத்தாளுமையின் வலிமையே.
இறுதி காலச்சுவட்டில் வெளியான ஒரு மணி நேரம் முன்பு என்ற சிறுகதையும் வாசிப்பின் பின்னான நீண்ட அமைதியை தருகின்ற அவரின் படைப்பாகும். கல்வியை ஆதாரமாகக் கொண்டு வறுமையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் தாய் மகன் உறவினை கதையாடலாக கொண்டு எழுதப்பட்டிருகின்றது. நிதர்சனமாக பேசப்படவேண்டிய கரு. இன்றைய சூழலில் கல்வி நிறுவனங்களில் காணப்படுகின்ற அயர்ச்சியான போக்கு வறிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற வகையில் இருக்கின்றது. பொதுவாக பல்கலைக்கழக தேர்வு முறை எந்த தரப்பினையும் சாராது சமத்துவமாக இருந்தாலும் அதைத்தாண்டி விரிந்துபோய்க்கொண்டிருக்கின்ற தனியார் கல்வி மையங்களும் இதர அரச கல்வி நிலையங்களும் வறிய மாணவர்களை அடைகின்ற விகிதம் மிக சொற்பமாகவே உள்ளது. கையில் பணம் இருக்கின்ற எவரும் எவ்வித தகுதிகளும் இன்றி பொறியியலாளர்களாவும் மருத்துவர்களாகவும் கணக்காளர்களாகவும் வேறு வேறு உயர்நிலை உத்தியோகத்தர்களாகவும் உருவாக்க கூடிய கல்வியல் நிலைமை இன்று எழுந்துள்ளது.
இதில் வறுமை கோட்டின் கீழ் மிக திறமையுடன் இருக்கின்ற மாணவர்கள் வெளிப்படையாக ஒதுக்கப்படுகிறார்கள். இன்றைய இலங்கையில் இருக்கின்ற பல்கலைகழக நுழைவு முறையில் உட்புக தவறுகின்ற வறிய மாணவர்களின் எதிகாலம் கேள்விக்குறியாகின்றது. அவர்களுக்கான சரியான வழிநடத்தல் அதன் பின்னர் கிடைப்பதில்லை. அவர்கள் வழமை போலவே அவர்களின் குடும்ப தொழிற்கு திரும்பி விடுகின்றனர். இலங்கையில் இருக்கின்ற ஏனைய தொழில் துறை சார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சரியான விளக்கம் உரிய நேரத்தில் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இதிலிருந்து வறிய சமூகத்தின் பின்னடைவு இன்னும் அதிகரிகின்றது. இது ஆரோக்கியமான எதிர்காலத்தின் அறிகுறி அல்ல.
இதே பிரச்சனையின் மையத்தில் தான் கதை நகர்கின்றது. சிறந்த கல்வி வலிமை உடைய ஒரு சிறுவனை பெரிய பாடசாலை ஒன்றில் சேர்க்க தாய் எடுக்கின்ற அடுக்குகளோடு கதை ஆரம்பமாகின்றது. கதையின் ஆரம்பத்தில் சிறுவன் கடைக்கு சென்று , ஒரு வீட்டின் அடிப்படை உணவு விகுதி உப்பை கேட்பதும்; கடைக்காரனால் பழைய மிகுதியை செல்லுத்தும்படியும் உப்பு கொடுக்க மறுக்கப்பட்ட நிலையிலும் வீடுவந்து சேர்கிறான். உப்பில்லாத கஞ்சியை சிறுவன் குடித்துவிட்டு தாய் வெறும் வயிறுடன் கிளம்புகின்ற வறுமைக்குறிப்புகள் கதையின் ஆரம்பத்தில் பரவுகின்றன.
ஒரு தாயின் மனநிலையை, தனது மகனை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கை உடைய ஒரு தாயின் தாயார்ப்படுத்தல்கள் ஆழமான குறியீடுகளால் உணர்த்தப்பட்டிருகின்றது. படித்த, வசதியான சமூகத்தில் இருந்து வருகின்ற பெண்களின் லட்சணங்களை அவனின் தாய் உருவகித்திருந்த பாங்கில் தன்னையும் ஒரு வசதியான பெண்ணாக அலங்கரித்துகொள்ளும் இடம்; அந்த தாயின் ஆழமான மனசிக்கல்களை எடுத்து நிற்கின்றது. தன் அலங்கோலமே மகனின் கல்விக்கு முட்டு போடக்கூடாது என்கிற மனநிலையை முத்துலிங்கம் சொல்லாமல் சொல்லுகின்றார்.
அதே தாய் காலதாமதத்தால் நழுவப்படுகின்ற வாய்ப்பின் பின்னர் மீண்டும் வழக்கமாக அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற பக்குவம் வறுமையின் மிக சிறந்த படிப்பினையாக தோன்றுகின்றது. ஏமாற்றங்களும் வலிகளும் தினம் தினம் பழக்கிப்போன ஒன்றாகவும் கவலைகள் தோன்றுவதும் மறைவது வறிய சமூகத்தின் எழுதபடாத வழக்கமாகவும் இருகின்றது.
அதிக கவனமாக சிரத்தையுடன் பள்ளிக்கு மாகாணத்தில் முதல்நிலை பெற்ற மகனை அழைத்து செல்லுகின்ற அந்த தாயின் ஆர்வமும் , வாய்ப்பின் மீது பற்றிருந்தும் வறுமையை நோக்கி விழிப்படைந்த மகனின் ஆறுதல்களும் காலைக்கும் மாலைக்குமான வித்தியாசத்தை சரியாக புரிந்து வைத்துள்ள குடும்பங்களின் பிரதிநிதிகள்.
முத்துலிங்கம் என்ற கதை சொல்லி யாரோ ஒரு பிரதிநிதிக்கு முழுமையாக கதைசொன்ன நிறைவை வாசகன் பெற்றுக்கொள்கிறான்.
பெருவெளியிலிருந்து அஞ்சலிகள். – கவிக்கோ அப்துல் ரகுமான்.
இன்று முக்கியமான நாள். சிலரது வருகை நமது வாழ்கையை வேறு திசைக்கு திருப்பி விடுவதுண்டு. அவர்களின் எண்ணங்கள் எம்மை வேறு தளத்திற்கு கொண்டு சேர்ப்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஆராதித்து கொண்டே இருப்போம். அந்த அராதிப்பு சுயநலம் சார்ந்த ஒன்றுதான். அப்படி ஒரு தூய ஆராதனை அப்துல் ரகுமான் மீது எனக்குண்டு.

முன்னைய பதிவில் தான் அப்துல் ரகுமானை தேடி தேடி வாசித்தேன் என்று எழுதியிருந்தேன். தமிழ் மான்றதின் கவிதை பயிலரங்குகள் நடந்துகொண்டிருந்தது. உள் வேலைகள் இருந்தபடியால் பார்வையாளனாக பங்கேற்க முடியாமல் போனது. கவிதைகளை பற்றியும் கவிஞர்களை பற்றியும் ஒவ்வொருவரது நுட்பங்கள் பற்றியும் அனுபவங்களை வளவாளர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள். நான் வெளியில் நின்று சோடா ஊற்றிக்கொண்டிருந்தேன். மண்டபத்திலிருந்து வருகின்ற ஒவ்வொரு ஒலியிலும் மிதமான கவிக்கோவின் பெயர் உச்சரிக்க கேட்டபோதும் என்னுள் இருந்த வைரமுத்துக்கும் வாலிக்கும் பழனி பாரதிக்கும் ஆன இடைத்தை அந்த ஒலி நிரப்பிக்கொள்ள முடியவில்லை. ஆனால் பெரிய கவிஞர்கள் எல்லாம் கவிக்கோவின் ரசிகர்கள் என்பதை மிக ஆழமாக என்னுள் பதித்து கொண்டேன்.
அதன் பின்னர் எப்படி அப்துல் ரகுமானின் ரசிகன் ஆனேன் என்று தெரியவில்லை. ஆனால் புத்தக நிலையங்களிலும் கண்காட்சிகளிலும் அதிகம் பைகளை நிரப்பியவர் அவர்தான். எல்லோருக்குமே கவிதைகள் வாசிப்பில் ஒரு ஆரம்பம் இருக்கும். அந்த கவிதைகளை சொல் அலங்காரதிற்காகவும் உச்சரிப்பு அழகிற்காகவும் ஒழிந்திருந்த புதிர்களை லாவகமாக அவிழ்க்கும் நுட்பதிற்க்காகவும் பிடித்திருக்கும். இன்னும் சிலருக்கு கவிதைகள் காதலிக்காக பிடித்துபோயிருக்கும். அந்த நிலையில் நின்று விடமுடியாது. அதைத்தாண்டி அடுத்த தளதிற்கு செல்ல ஒரு வழிகாட்டி தேவைபடுகிறது. என்னை கைத்தாங்கலாக கூட்டி சென்ற வழிகாட்டி அப்துல் ரகுமானே. கவிதைகளின் ஆன்மாவை உணர கற்று தந்தவர். கவிதைக்குள் கவிஞனும் அவனின் வாசகனும் சஞ்சாரம் செய்யும் புள்ளியில் நின்று கவிஞன் கவிதையை திரிக்கவேண்டும் என்று இன்றளவில் நான் எழுதுகின்ற மிக சில கவிதைகளுக்கு ஆன்மாவை அளித்தவர்.
கால அந்தாதி
நரைத்துத் தோன்றி
கறுத்து உதிரும்
தின ரோமங்களைச்
சவுரி செய்யச்
சரித்திரம் திரட்டும் ;
என் நினைவுகளும் தான்
அவரிடம் ஒரு கவிதையை வாசகனுக்கு எப்படி கொண்டுசேர்க்கவேண்டும் என்ற நுட்பம் தெளிவாக தெரியும். அவரின் பல புத்தகங்களில் கவிதையை வெறுமனே கவிதைகளாக முடித்துவிடாமல் வாசகன் உள்ளார்ந்து செல்ல முன்னுரையும் விளக்கவுரையும் தருவார். அதுவும் மிக சிறந்த கவிதை வடிவிலேயே இருக்கும். ஆ.. எனக்கும் அவருக்குமான முதலாவது வாசிப்பு உறவு இல்லையிலும் இருக்கிறான். அந்த வடிவமைப்பு என்னை மிகவும் பாதித்தது. குறியீட்டு கவிதைகளுக்கு அவர் எழுதுகின்ற உரையில் லயித்து போயிருக்கிறேன். ஒரு கவிதையை அனுபவ வாசகனாக அணுகுகின்ற நுட்பம் அவரிடம் இருந்து உரையாடல் பகுதியில் இருந்து கற்றுகொண்டதே. நான் சொற்பமாக எழுதிவருகின்ற கவிதை ரசித்தல் தொடர் , அந்த அனுபவத்தின் நீட்சியே.
அப்துல் ரகுமான் அவரின் புத்தகங்களில் அறிமுகம் செய்யும் உருது அரபி மலையாள மேல்நாட்டு கவிஞர்கள் ஆரம்பத்தில் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இப்போது அதிகமாக பாதிக்கின்றார்கள். அவர்களின் கவிதைகளுக்கான திறவுகோலும் அவரே. செம்மொழி ,கவிதை ஓர் ஆராதனை,பூக்காலம்,தட்டாதே திறந்திருகின்றது,இல்லையிலும் இருக்கிறான்,தொலைபேசிக்கண்ணீர் ,பூப்படைந்த சபதம்,பித்தன் ,அவளுக்கு நிலா என்று பெயர், மரணம் முற்றுப்புள்ளி அல்ல,மகரந்த சிறகுகள்,சொந்த சிறைகள்,முட்டைவாசிகள்,சுட்டு விரல்சோ திமிகு நவகவிதை,தாகூரின் சித்ரா,கம்பனின் அரசியல் கோட்பாடு, பால்வீதி போன்ற அவரின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். பத்திரமாக வைத்திருக்கிறேன்.

உதிரும் சிறகுகள்
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து –
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
நான் என்னும் நப்பாசை 2 இல் நான் ,
இடையில் வாசிப்பும் அனுபவ பகிர்வும் (தமிழ் மாமன்ற நிகழ்வு , தமிழ்மாமன்றம் பற்றி விரிவாக எழுதவேண்டும் ,எழுதுகிறேன் காலதாமதமாக ) நடந்த போது தன அப்துல் ரகுமான் அறிமுகம் ஆனார். நான் வாசித்த தனிநபர் எழுதிய புத்தகங்களில் அதிகமானவை இவருடையதே. அன்று வரை இலகுவாக இருந்த கவிதைகள் இவரால் புது பரிமாணம் பெற்றன. ஒவ்வொரு வரிகளுக்கு பின்னும் சமுத்திர பரப்பு விடயங்கள் பொதிந்து இருப்பதை அவர் காட்டினார். சொற்களின் கோர்வைகள்தான் கவிதை ஏன்டா விம்பம் சிதறி பல கோர்வையான விடயங்கள் சில சொற்களில் என்று புரிய ஆரம்பித்தது. கவிதையை மட்டும் அன்றி பல கவிஞர்களையும் அறிமுகம் செய்தார் . இன்று நான் மொழிபெயர்க்கப்பட்ட அரபுக்கவிதைகளை வாசிக்கவும் இரசிக்கவும் அவரே பிள்ளையர் சுழி . அவரின் புத்தகங்கள் என்னை இன்னொரு தளத்திட்கு எடுத்து சென்றது. இன்று நான் வியந்து பார்க்கும் கவிஞர் அப்துல் ரகுமான் என்பதில் என் வாசிப்பு வட்டம் அடைந்துள்ள விருத்தியை உணரக்கூடிய அளவு உள்ளது.
என்று எழுதியிருக்கிறேன். வாசிப்பு நீட்சி இன்று அதிகமாகிவிட்டதால் சில கருத்துக்கள் மாறி இருக்கலாம். ஆனால் அப்துல் ரகுமான் மாறிவிடவில்லை.
சமீபகாலமாக கவிக்கோவின் உரைகளை இணையத்தில் பார்த்து வருகிறேன். அவை கலகலப்பானதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை உணர்கிறேன்.
தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவ பகிர்வும் நிகழ்வில் அவரின் பித்தன் நூலை பற்றி நீண்ட விமர்சன பகிர்வு செய்திருக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமானிற்கு என் கனவுப்பெருவெளியிலிருந்து அஞ்சலிகள்…