ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன்.

ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக
உத்தேசித்திருக்கிறேன்.
1.சம்பவம்.

நான்
இருட்டின் வெளிச்சத்தில்
உறங்கிக்கொண்டிருந்தேன்.
அது ஒரு முழுப் பௌர்ணமி நிலவு.
என் படுக்கை அறையின்
கதவு ஓரத்திலிருந்து
நிலத்தாலும்
சுவராலும்
எறும்புகள் என் கட்டிலுக்கு
படையெடுத்தன.
ஜன்னல் ஊட்டாலும்
பூக்கற்களின் ஓட்டைகளாலும்
கதவு திறப்பிடும் துளைகளாலும்
ஈக்களும் பூச்சிகளும்
முட்டி மோதிக்கொண்டு
மொய்த்தன.
கட்டிலின் மேலே
ஒரு மரக்குற்றி சரிந்து கிடப்பதைப்போல
நான் பிரண்டு கிடந்தேன்.
2.குற்றம்.
இறந்தது நான் தான்,
பிணமாய் கிடப்பது என் உடல் தான்,
எறும்புகளும் ஈக்களும்
மொய்ப்பது என் மேல் தான்,
இவை அனைத்தையும்
என்னைப் பார்க்க வைத்தது ஏன்?
எல்லாம் பிரிந்து இறந்த பின்னர்
இத்தனை அவலத்தையும்
காண செய்தது ஏன்?
3.காரணம்.
பொது நூலக வீதியின்
முடக்கு சந்திக்குள்
புதராய் வளர்ந்துபோயிருந்த
காட்டுச் செடிகளின் மேலே
அவளை கண்டேன்.
எத்தனை அவலம் அது.
ஒரு புழுவை கம்பியால் குற்றி
வேக வைத்தது போல
குறண்டு வெளுத்து போயிருந்தது
அவளின் உடல்.
நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
4.பின்புலம்.
பத்து நாட்களுக்கு முன்னர்…..
ஆலயத்தை சுற்றி வளைத்தனர்,
பூசாரி உட்பட நான் அவள் என அனைவரையும்
சம்பவ விசாரிப்பிற்க்காய் அழைத்துச் சென்றனர்.
பூசாரியையும் என்னையும் உடனே
அனுப்பி விட்டனர்.
பின்னர் ஒவ்வொருவராய் அனுப்பினார்கள்.
அவளைத் தவிர
5.குற்றப்பத்திரிகை வாசிப்பு
இன்ன திகதி இன்ன இடத்தில்
இன்ன பெயரைக்கொண்டவர்
தன் காதல் தோல்வியால்
தற்கொலை செய்து கொண்டார்.
6.முடிப்பு.
அவள் யாரோ
நான் யாரோ
குற்றப்பத்திரிகை வேறு என்னவோ

உலக இலக்கிய தொடர் – பாகம் 2 தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் – முற்குறிப்பு.

முன்னைய கட்டுரையில் டால்ஸ்டாயின் அன்னே கரீனினா பற்றிய அறிமுகத்தை எழுதியிருந்தேன். டால்ஸ்டாய் மனிதத்தின் வெளிச்சத்தின் பகுதிகளை புனைகிறார் என்றால் தஸ்தாயெவ்ஸ்கி மனிதத்தின் இருண்மையை புனைகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துலகம் வித்தியாசமானது. அதுவரை – இன்னமும் யாராலும் கொண்டுசென்று காட்டமுடியாத ஒரு உலகு. ஒரு ஆழ்ந்த இருண்மையான அதல பாதாளத்தில் கைகளில் விளக்குடன் எம்மை கூட்டிச் செல்கிறார். அவருக்கு மட்டுமே தெரிந்த பாதை அது. அவருக்கு அந்த பாதைகள் அத்துப்படி. அத்தனை இருட்டையும் மெது மெதுவாக விலக்கிக்கொண்டு – ஒரு வழிகாட்டி தான் அடைந்த புதையல்களை மற்றவர்களுக்கு காட்டுவது போல – பாதாளத்தின் ஒவ்வொரு மூலைகளையும் சொல்லிக்கொண்டு போகின்றார். நாம் பாதாளத்தின் முடிவு இதுதான் என்று வியந்து பார்க்கின்ற தருணம் அதனிலிருந்து இன்னொரு ஆழமான பாதாளத்திற்கு கூட்டிக்செல்கின்றார்.

“ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கி – வரலாறு

ரஷ்ய – பிரான்சிய மோகம்.

1850 களில் ரஷ்சியா மாய வலையில் சிக்கியிருந்தது. அது பண்பாட்டு மாயவலை. எப்படி இன்றைய இலங்கையும் தமிழர்களும் ஐரோப்பிய கலாசாரதின் மீதும் ஆங்கில மொழி மீதும் மோகம் கொண்டிருக்கிறார்களோ, அப்படியான ஒரு மாய மோகம். பிரான்சின் கலாசாரம் மீதும் பிரான்சிய மொழி மீதும் ரஷ்சியர்கள் அளவு கடந்த மோகத்தை கொண்டிருந்தனர். மேல்வர்க்க குடியினர் முழுக்க முழுக்க பிரான்சிய கலாசாரத்தில் மூழ்கிப்போயினர். அவர்களின் வீடுகளிலும் ஒன்றுகூடல்களிலும் பிரான்சிய காலாசாரம் மேலோங்கி காணப்பட்டது. அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாடுவதை அவர்களினது வளர்ச்சியின் வெளிப்பாடாக கருதினார்கள்.
இலக்கியங்களிலும் இந்த தாக்கம் வெகுவாக இருந்தது. அன்றைய கால இலக்கிய சிருஷ்டிகளின் முழு போக்கும் பிரான்சிய பின்னணியை மையப்படுத்தியது. அவர்களுக்கு வர்த்தக ரீதியில் வருமானத்தை தரக்கூடியதாகவும் இருந்தது. இவான் துர்கனேவ் ரஷிய இலக்கியத்தில் மிளிர்ந்துகொண்டிருந்தார். அவரின் எல்லாப் படைப்புகளும் பிரான்சிய சாயலுடனேயே வெளிவந்தது. அவரின் மேன்னாட்டு கருத்தியலை மறு பேச்சின்றி ஆமோதிக்க கற்றறிந்த சமூகமும் தயாராக இருந்தது. ஒரு பிரபல  இலக்கிய முன்னோடியின் வழி எதுவோ , அதை லாவகாம பற்றிக்கொண்டு செல்லுகின்ற இன்றைய சமூகத்தைப் போலவே – ரஷ்ய எழுத்தாளர்களும் துர்கனேவை உதாரணமாக கொண்டு பிரான்சிய பின்னணியில் எழுத தொடங்கினார்கள். அக்காலத்தில் வெளியாகிய ராச்சிய இலக்கியங்கள் எல்லாம் பிரான்சிய  போலிகளாகவே இருந்தன.

சிந்தனை ஓட்டத்தில் வார்த்தைகள் அவரைக் கைவிடும் பொழுது தனது எண்ணங்களை கையெழுத்துக் கிறுக்கல்களாக பதிவு செய்துகொள்வார் (tumblr.com)

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்ப பின்னணி

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்பம் கடவுளால் சபிக்கப்பட்ட குடும்பம் என்கிறார், சுந்தர ராமசாமி. உண்மையும் அதுதான். பிரான்சிய பண்பாட்டு இலக்கியங்கள் குவிந்து கொண்டு இருக்கையில், அதன் மீளமுடியாத மோகத்தில் சிக்குண்டு இருக்கையில் – எது தஸ்தாயெவ்ஸ்கியை பிரித்துகாட்டுகின்றது என்று பார்த்தால் அவரின் வாழ்க்கை இன்னல்களே.
தஸ்தாயெவ்ஸ்கி என்ற ஆளுமையின் நிறைவில் இருக்கின்ற மகா ஷக்தி – வாழ்க்கை அவனுக்கு கொடுத்த வடுக்கள்.
1821 இல் மாஸ்கோவில் தஸ்தாயெவ்ஸ்கி பிறந்தான். அவனது தந்தை வைத்தியர். ஆரம்பத்தில் வசதியாக இருந்தவர்கள் தந்தையின் மூர்க்க குணத்தால் காலம் செல்ல வறுமைப்படுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்ப வாழ்க்கை அனுபவம் அவன் குடியிருந்த வைத்திய குடியிருப்பிலேயே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இறப்பு, நோய், அலைச்சல் என்பவற்றை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்து வருகின்றான். தனது பதினான்காவது  வயதிலேயே தாயையும், தொடர்ந்து இரண்டாம் வருடம் தந்தையையும் இழந்து அண்ணனுடன் வாழ்கின்றான்.
தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், அதை அவரின் கொடூரம் தாங்க முடியாத வேலையாட்களே செய்ததாகவும் குறிப்பிருக்கிறது. அண்ணன் மைகேல் மீது மிகுந்த பாசம் உடையவானாக இருக்கிறான் தஸ்தாயெவ்ஸ்கி. இருவரும் இராணுவ பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கற்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி கற்கை நெறிகளில் சிறந்து விளங்குகின்றார். இருந்தும் இறுதி பரீட்சையில் சூழ்ச்சிகளால் பின்தள்ளப்படுகின்றார். அண்ணன் தேர்வாகி இருந்தாலும் உடல்நிலை குறைவால் தொடர்து இயங்க முடியாமல் போகிறது. இதுவெல்லாம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வருத்தத்தை அளிக்கின்றது.

தஸ்தாயெவ்ஸ்கியும் இலக்கியமும்.

இராணுவ பொறியியல் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே தஸ்தாயெவ்ஸ்கிக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ரஷ்ய இலக்கியங்கள், ஜெர்மானிய இலக்கியங்கள், கொலை வழக்குகள், சிற்றிதழ்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி ஒரு தீராத வாசகானவே இருந்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது.(listal.com)

தனது இருபத்தைந்தாம் வயதில் முதலாவது நாவலான “ஏழை எளியவர்” (Poor People) ஐ எழுதுகின்றார். தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது. தனது சமூக நிலை பற்றி வருந்திய தஸ்தாயெவ்ஸ்கி முதலாவது நாவலை பதிப்பிட பின்நிற்கிறார். பின்வந்த காலப்பகுதியில் ரஷ்யாவின் மதிப்பு மிகுந்த சிற்றிதழ் ஒன்றுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நண்பன் “ஏழை எளியவர்கள்” நாவலை கொடுக்க, அதற்கு மிக சிறந்த விமர்சனமும் பெறப்படுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கி அன்று பரவியிருந்த இயக்கங்களிலும் தனது பங்களிப்புகளை வழங்கியிருந்தார். அந்த சமயம் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் அவருக்கு விதிக்கபடுகிறது. நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் தண்டனை ரத்து செய்யப்பட மீண்டும்  தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் செல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி தனது  வாழ்கையில் இறப்பிற்க்கான கடைசி நொடி மட்டும் சென்று, இறப்பின் வலி , அதற்கு முன்னரான மனதின் போராட்டம், எண்ண அலைச்சல்கள், வாழ்க்கை மீதான துச்சம் என்று மனிதனின் கடைசி நொடியில் உணரும் அனைத்து மனச் சிக்கல்களையும் அனுபவித்து விடுகின்றார். அதன் பின்னரான கைதி வாழ்கையும் அவருக்கு இலகுவானதாக அமைந்து விடவில்லை. (கைதி வாழ்க்கை எப்போதும் இலகுவானது அல்லவே!) தனது வாழ்வின் இருண்ட நாட்களை விதம் விதமான சிறைக்கைதிகளுடன் கழிக்கின்றார். ஒரு வகையில் அனைத்தையும் உணர்ந்த தேவ நிலையிலிருந்த தஸ்தாயெவ்ஸ்கி – சக கைதிகளின் மன ஆறுதலுக்கும் தன்னாலான உதவிகளையும் ஆற்றுகின்றார்.
1854 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றார். ஏழை எளியவர் மூலம் அறிமுகமாயிருந்த தஸ்தாயெவ்ஸ்கியை ரஷ்ய சமூகம் மறந்துபோயிருந்தது.  வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. இறுதியில் அண்ணனுடன் சேர்ந்து காலம் என்ற இதழை தொடங்குகிறார். மிக குறுகிய காலத்தில் காலம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது.

வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. (radissonblu.com)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய நாளில் சாதாரணமாக எந்த சிற்றிதழ்களும் கணக்கிலேயே எடுக்கப்படுவதில்லை. அத்தோடு எதையும் அரசாங்கம் நிறுத்தியதாய் அறியவும் இல்லை. இது அரசாங்கத்தின் அறிவீனமா? அல்லது சிற்றிதழ்களின் மந்த நிலையா? மீண்டும் ‘யுகம்’ என்ற இதழை தஸ்தாயெவ்ஸ்கி தொடங்குகிறார். இதழ் சோர்வாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கையிருப்பு காலியாகி கடனும் ஏறிக்கொண்டிருந்த பொழுது தஸ்தாயெவ்ஸ்கியை விட்டு அவரின் அண்ணன் இறந்து போகிறான். கூடவே தஸ்தாயெவ்ஸ்கிக்கு சூதாட்டமும் பழகி வெறியாகிப்போகிறது. தஸ்தாயெவ்ஸ்கி அனைத்தையும் இழந்து வீதிக்கு வருகிறார். மீண்டும் மீண்டும் துன்பம் சூழ்ந்து கொள்கிறது. அப்போது எழுதிய நாவல் தான் ‘குற்றமும் தண்டனையும்’.
எப்போதும் இருக்கிற ரஷ்ய எழுத்தாளர்களைப்போல இவரும் அங்கொன்று இங்கொன்றாய் திருமணம் செய்கிறார். குற்றமும் தண்டனையும் எழுதுவதற்கு ஒரு காரிய தரிசியை ஒழுங்கு செய்கிறார் – அவள் பெயர் அன்னா. இறுதியில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்கையில் நடந்த பெரும் திருப்பங்களுக்கும் அவரின் எழுத்துகளின் ஒன்றினைப்புக்கும் அன்னா ஒரு மனைவியாக உதவுகிறாள். இக்காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கி “ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). கரமசோவ் சகோதரர்கள் மூலம் புகழின் உச்சத்தையே அடைகிறார்.
தொடரும்…

தற்கொலையும் டீச்சரம்மாவும். – அசோகமித்திரனின் தண்ணீர்.

 
தண்ணீர் நாவலின் பதினெட்டாவது அத்தியாயம் நாவலிற்கும் சரி வாசகனிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். தற்கொலைக்கு முயற்சி செய்த யமுனாவை அந்தத் தெரு ஆசிரியை ஒருத்தி ஆற்றுப்படுத்துவதாய் அந்த அத்தியாயம் நகரும். யமுனா வாழ்கையின் சிக்கற் தன்மையை எதிர்கொள்ளமுடியாது உழன்று போய் தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவளின் வீட்டு முதலாளி அம்மா அதைத் தடுத்து விடுவார். யமுனாவுடன் ஓரளவுக்குப் பழக்கம் உடைய ஆசிரியைக்கு இது ஏதோ வகையில் தெரிந்து போக, ஆசிரியர்- இனி கதையின் படி டீச்சரம்மா, யமுனாவை தேற்றிகொள்ள முயற்சி செய்வதாக அந்த உரையாடல் அமையும்.
 
ஒரு தனிமனிதனின் வாழ்க்கை என்பது தனிமைப்பட்டது அல்லது அந்தரங்கமானது என்ற கூற்று உண்மையில் கருத்துப்பிழை உடையது. எந்தளவு ஒருத்தரின் வாழ்க்கை அந்தரங்கமாகிக் கொள்கிறதோ அந்தளவு வாழ்கையின் விஸ்தரிப்பு குறுகிக் கொள்கிறது. அதே போல தனிமைப்பட்ட வாழ்க்கை என்று ஏதுமில்லை. ஒரு சூழ்நிலை ஒருத்தரின் வாழ்கையின் போக்கை அப்படியே திருப்பிப் போடக்கூடியது. இதில் தன்னிலை நியாயம் என்பதை விட சூழ்நிலை நியாயத்தை புரிந்துகொண்டு அதன்படி சிந்தித்து செயலாற்றுதல் தான் சரியான வாழ்க்கைமுறை. பிரச்சனை என்பதை சவால் என்று எடுத்துகொள்ளல் ஒருபுறம் இருக்க, அதைத் தாண்டி செயலாற்றல் என்பது முக்கியமானது. விரைவாக எதிர்க்கொண்டு அதைத்தாண்டிச் செல்லல் என்பது சாதாரணமானதே. வாழ்கையின் ஒரு புள்ளியில் ஏற்படுகின்ற விபத்து, வாழ்நாள் முழுவதுமே ஆக்கிரமிக்கப் போகிறது என்று தெரிந்த பின்னும், மீளவே முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்தும் மீளாமை, அதை கொண்டு நடத்தி வெற்றி பெறல் என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இப்படியான சூழ்நிலை சிக்கலால் வாழ்நாள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டவர் தான் டீச்சரம்மா.
பதினைந்து வயதிலேயே திருமணம் செய்தவர். கணவர், –  என்பதைவிட நோயாளி என்பதே சரியான பதம்; முழுமையாக காச நோயால் பீடிக்கப்பட்டவர். எழுந்து திரிந்து வாழ்கையை நடத்தத் திராணி அற்றவர். பார்வைக்கோலத்தில் மிக பயங்கரமானவர். அருவருப்புகுரியவர். இத்தனையையும் சகித்துக்கொண்டு திருப்பதியே இல்லாத வாழ்க்கைக்குள் நுழைகிறார் டீச்சரம்மா. அவரின் கணவரோடு பழகிப்போன கணவரின் குடும்பம் எதுவும் செய்வது போலத் தெரியவில்லை. பதினைந்து வயது சிறுமிக்கு இந்த சூழ்நிலை மிகக் கொடுமையானதே. இருந்தும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்கிறார். நிலைத்து நிதானித்து முடிவு செய்கிறார். குடும்பம் என்பதைத் தாண்டி சமூகத்திலும் வேலைத்தளத்திலும் பிரச்சனைகள் வருகின்றன, உருவாக்கப்படுகின்றன. அத்தனையையும் சமாளித்து தாண்டுகின்றார். வாழ்க்கை என்பது பிரச்சனைகளின் நீண்ட கோர்வை தான் என்ற மனப்பக்குவம் வருகின்றது. இத்தனைக்குப் பின்னும் டீச்சரம்மா ஒருமுறை கூட தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. தன்னுடைய அனுவத்தின் மூலம் யமுனாவின் வாழ்கையை தொகுத்துக்கொள்கிறார்.
 
இந்த உரையாடலை மேற்சொன்ன சம்பவ கோர்ப்பின் அடிப்படையில் அசோகமித்ரன் புனைந்திருப்பார்.
 
அமியின் உட்பொருள் பற்றி பேசியாகவேண்டும். ஒரு மனிதனின் இருப்பு சார்ந்து உரையாடல் நிகழ்கிறது என்பது தெளிவு. வாழ்கையின் வளைவு நெளிவுகளுக்கு திரும்பி திரும்பி இன்னும் ஒரு முறை வளைய முடியாது என்கிற நிலையில் இருக்கின்ற யமுனாவின் பாதையில் இன்னும் வளைவுகள் வருகின்ற சாத்தியத்தையும் , அதை எதிர்க்கொள்ளுகின்ற துணிவையும் இந்த உரையாடல் அவளுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு தனி மனித இருப்பும் ஏதோ ஒரு வகையில் அவசியமாகின்றது. உலகின் நீண்ட இயக்கத்தின் சாரமே இருப்பின் அடிப்படியில் தான் அமைகின்றது. இந்த இருப்பை தகர்கின்றபோது ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகின்றது. இயற்கையின் சூட்சுமத்தில் சாதாரணமான மரணங்களால் ஏற்படுகின்ற வெற்றிடம் நிரப்பிகொள்ளபடுகிறது. ஆனால் இயற்கையை மீறிய மரணங்களுக்கு? தற்கொலைகளுக்கு?
 
தற்கொலைகள் இயற்கை இயக்கத்தை குலைக்கும் நடவடிக்கைகள்.
 
யமுனா இன்னொரு தற்கொலைக்கு முயற்சி செய்யக் கூடாது என்பதும்  வாசகர்களில் இருக்கின்ற, இனி ஏதோ ஒரு எளிய நிகழ்ச்சியால் யமுனா அகப்போகின்ற, யமுனாவை அருகிலும் சுற்றத்திலும் வேறு எங்கோ ஒரு மூலையிலும் காணப்போகின்ற டீச்சரம்மாக்களும் சார்ந்தோருக்கு நிகழ்த்தவேண்டிய பாடம் இதுவாகும்.
 
அசோகமித்திரன் என்னும் எழுத்தாளன் இவற்றைக்கூறும் போது மகத்தான எழுத்தாளனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான்.

கலகக் குரலின் ஆன்மீகம். – குற்றம் கடிதல்.

கலகக் குரலின் ஆன்மிகம் என்ற தலைப்பில் கத்தார் பற்றிய குறிப்புக்களோடு இரா. திருநாவுக்கரசு காலச்சுவடு மே 2017 இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதில் கோவிலுக்கு செல்வதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதும் மத சார்பின்மை என்றவாறு கட்டுரையை நகர்த்தியிருப்பார். இது எவ்வளவு சதவீதம் உண்மை?
 
கடவுள் என்ற சக்தியின் திணிப்பு பிறந்தது முதலே எமக்குள் ஊட்டபடுகிறது. இன்று நாத்திகன் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் ஏதோ ஒரு காலத்தில் ஆத்திகராக இருந்து மாறியிருகிறார்கள். இது ஒரு நீண்ட புரிதலால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது குறுகிய வெறுப்பினால் ஏற்பட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும் தன் சுய விருப்பு வெறுப்பின் பெயரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அனுபவங்களின் முதிர்ச்சியே ஒருத்தனை ஆத்திகன் நாத்திகன் என்று வேறு பிரிக்கக் கூடிய ஒரே பொருள். எல்லோருக்கும் மேலும் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி ஏதோ ஒருவகையில் உலக இயக்கத்தில் பங்காற்றுகிறது என்பதையும் நம்புகிறோம். பிறப்பின் போதும் இறப்பின் போதும் உயிரின் உண்மையினை புரிந்துகொள்கிறோம். இவை எல்லாவற்றையும் ஒரு சக்தி இயக்குகிறது. அது இயற்கையோ கடவுளோ. ஒன்று உள்ளது.
 
ஒரு வேலைத்தளத்தில் மேலதிகாரிக்கு ஏதோ ஒரு வகையில் நாம் வணக்கம் செலுத்துகிறோம். அவரின் நிலை அதிகாரத்திற்கு மதிபளிக்கிறோம். அதே சமயம், அவற்றை கருத்தில் கொள்ளாது நடக்கின்ற ஊழியர்களும் இருப்பார்கள். ஆனால் இருவருமே ஒரே அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்த் தான் இயங்குவார்கள். இதில் முதலாமவர் ஆத்திகர் மற்றவர் நாத்திகர்.
ஆதிகால மனிதன் கல்லையும் மரத்தையும் இடியையும் மின்னலையும் இயற்கையையும் வணங்கினார்கள். கற்கள் காலம் செல்லச் செல்ல உருவங்களாக மாறத்தொடங்கின. தமக்கு ஏற்றவாறு கற்களை செதுக்கினார்கள். உருவம் கொடுத்தார்கள். வர்ணம் தீட்டினார்கள். அவர்களை மீறிய சக்தியை கொண்டாடினார்கள். அதுவே மதமானது. மனிதனின் சிந்தனை வளச்சியில் சிந்தனைகள் வேறுபட மார்க்கங்கள் பிரியத்தொடங்கின. பொதுமை மதம் பிரிவுக்குள்ளானது. மதங்கள் உருவாகின. மனிதனின் சிந்தனை இன்னமும் வேறுபட மதங்களை நிராகரித்தான். பின்னர் மதங்களின் உருக்களான தெய்வங்களை நிராகரித்தான். நாத்திகன் ஆனான். அவ்வளவே. இருப்பு இல்லை என்பது அவரவர் சிந்தனை வழியே.
 
இதில் ஆத்திக அடையாளபடுத்தல் என்றொரு விடயம் இருக்கின்றது. ஆத்திகனாக தன்னை பிரகடனபடுத்தியவன் அவனுக்குரிய மார்க்க அடையாத்தை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. அதை அவன் கட்டயப்படுத்துகிறான். இந்த நிகழ்வின் பின்னணி ஒரு மத பரப்பு கொள்கையாகவும் இருக்கலாம். கூட்டம் சேர்க்கும் நோக்கமாகவும் இருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவனுக்கு அடையாளபடுத்தல் அவசியமாகிறது.
 
கத்தாரின் கோவில் பிரவேசமும் அப்படியே.
 
 
கட்டுரையை வாசிக்க
இங்கே சொடுகவும்.

பித்தன் 01 – அறிமுகமும் அம்பலமும். – அப்துல் ரகுமான்.

மீண்டும் ஒரு முறை பித்தன் கவிதை தொகுப்பை வாசித்துப் பார்த்தேன். 26.11.2016 அன்று நடந்த தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் நிகழ்வில் பித்தன் கவிதை தொகுதிக்கு அறிமுக அனுபவ பகிர்வு ஒன்றைச் செய்திருந்தேன். ஆனால் பதிவு செய்து இருக்கவில்லை. அதன் குறிப்புக்களும் என்னிடம் இப்போது இல்லை. பித்தன் தொடர்பாக விரிவாக எழுதவேண்டும் என்று ஆசையிருந்தது. தொகுப்பை நான் அணுகிய முறை, அதிலிருந்து விரிந்த கவி உலகம், அது வெளிப்படுத்தும் மானிட அடிப்படைவாத கேள்விகள், அதற்கு முன்வைக்கும் பதில்கள் என இன்னபிற நிறைய விடயங்களை பதிவுசெய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.

அறிமுகம்.

எப்போதுமே ஒரு கவிஞன் அவன் வாழ்ந்த காலத்தின் குறியீடாகவே கருதப்படுகிறான். அவனது எழுத்துக்கள் வழியே வெளிவருகின்ற உணர்வுகள் ஒவ்வொன்றும், அந்த சமுதாயத்தின் உணர்ச்சிகளே. கவிஞன் ஒரு கருவி. ஒரு கவிஞனின் எழுத்தில் பிரதிபலிக்க கூடிய பல்வகைமை, அவனுள் பதிந்த மானிடர்களின் அனுபவங்கள். பித்தன் தொகுப்பும் அப்படித்தான். ஒட்டுமொத்த சமூகத்தின் கேள்விகள், அவர்களின் அறியாமை, அவர்கள் கண்மூடித்தனமாக செய்கின்ற பழக்கவழக்கங்கள் என்பவை குறித்துத் தான் அப்துல் ரகுமான் எழுதுகின்றார்.

பித்தனின் அறிமுக கவிதையில் ரகுமான், இந்த தொகுப்பு முழுவதிலும் உலகத்தை தான் நின்று பார்த்த கோணத்தை விபரிக்கிறார். உலகின் ஒவ்வொரு தூண்டலிலும் இரண்டு துலங்கல்கள் இருக்கும். ஒன்று நேரானது மற்றையது மறையானது. எல்லோரது கண்களுக்கும் இரண்டுமே தெரியும். இரண்டையும் உணர்ந்து கொள்வார்கள். அப்துல் ரகுமான் அப்படி இல்லை. அவர் நேர் என்று நாம் குறிக்கும் துலங்கலில் உள்ள மறையை கண்டுகொள்கிறார்.  எல்லோராலும் வெறுக்கத்தக்க மறையான துலங்கல்களை ஆதரிக்கிறார். அதன் அழகை போற்றுகிறார். நேரானதில் காணாத இன்பம் மறையில் இருப்பதை விளக்குகிறார்.

பித்தன்
எதிர்களின் உபாசகன்

 

அதனால்
இருளிலிருந்து ஒளிக்கு என்ற
முழக்கத்திற்கு எதிராக
ஒளியிலிருந்து இருளுக்கு
என்று முழங்குபவன்.

 

அவன்
இல்லையின் தூதுவன்.

 

உண்மைக்குப்
பலமுகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்

 

முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.

அப்துல் ரகுமானின் இல்லையிலும் இருக்கிறான் தொகுப்பு கடவுளின் இருப்பு தொடர்பானதாக இருக்கும். அதில் ஒரு வலிதான வாதம் ஒன்றை முன்வைப்பார். இன்று மேசையில் ஒரு மெழுகுவர்த்தி இருந்தது. நாளை இல்லை என்றால் இருந்திருக்கிறது என்று தானே பொருள். அது போலத் தான் கடவுள் இல்லை என்றால் இங்கு இப்போது இல்லை என்று அர்த்தபடுத்திகொள்ளலாமே தவிர இல்லை என்று முடிவு கொள்ள முடியாது என்கிறார். இந்த நூலில் அவர் இல்லையின் தூதுவானாக வந்திருக்கிறார். எப்போதோ இருந்து இன்று இல்லாமல் போன ஒன்றை பேச வந்திருப்பது போல, நாமெல்லாம் மறந்து போன ஒன்றை ஆராய வந்திருப்பது போல, எமது அறியாமையை விலக்க முயற்சி செய்வது போல இல்லையின் மகத்துவத்தை எழுதுகிறார்.

உண்மைக்கு பல முகங்கள் உண்டு என்கிறார் அப்துல் ரகுமான், எங்களுக்கு பொய்களை திரித்தும் திருத்தியும் பேசித்தான் பழக்கம். பொய்களுக்கு வித்தியாசமான முகங்களை உருவாக்கிக் கொள்கிறோம்- எமக்கு சாதகமாக. ஆனால் உண்மைக்கே பல முகங்கள் உண்டு என்கிறார். அது அத்தனையையும் அறிந்தவன் பித்தன் என்கிறார். ஒரு உலகியல் உண்மையை அசைக்கிறார்.

அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகிவிட்டேன். – கலைஞர் மு. கருணாநிதி .

முன்னுரையில் இவ்வாறு கூறுகின்றார், –

பாசிடிவ், நெகடிவ் என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அது தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக சேர்ந்தால்தான் ஒளியே கிடைக்கும். முதலில் நெகடிவ் தயாராகிறது. புகைப்படத்திலே கூட முதலில் தயாராவது நெகடிவ்; பிறகு அது பாசிடிவ் ஆக படமாக உருவாகிறது. அதை மனதில் வைத்துகொண்டு படித்தால் எல்லாம் பாசிடிவ்விலேயே – அந்த அணுகுமுறையிலேயே பித்தனுடைய கவிதைகள் வெளியாகியிருகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.

என்கிறார்.

அம்பலம்

கவிதைக்கு செல்லமுன்னர் surrealism பற்றி தெரிந்து கொள்வோம்.

Surrealism

1920களை உலகம் தாண்டிக்கொண்டிருக்கும் போது நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் சில மரபுகள் உருவாக்கப்பட்டன. வழமையான பண்பாட்டு சித்திரங்களை மாற்றி புதிய அணுகுமுறை தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. வாசகர்களின் ரசனை மாற்றப்பட்டது. அதுவரை வாசர்களுக்கு கருத்துக்கள் கொடுக்கப்பட்ட முறைமை மாற்றப்பட்டது. நேரடியாக கருத்துக்களை வாங்கப்பழகியவர்கள், ஒரே வாசிப்பில் கருத்துக்களை உள்வாங்கியவர்களுக்கு அவர்கள் கொண்டுவந்த புதுமுறை எழுத்துருவாக்கமும் ஓவிய முறைமையும் அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. வாசகர்கள் தங்களை வருத்தாமல் வாசித்தும் அறிந்துகொண்டிருந்த காலத்துக்கு விடைகொடுக்க தொடங்கினர். வருத்தி வாசித்தறிதல் என்ற கோட்பாட்டுக்குள் உள்நுழைந்தார்கள். ஆரம்ப கட்டமாக வாசிப்பும் ஓவியங்களும் படிப்பறிவுள்ளவர்களுக்கு விளங்கிக்கொள்ள ஓரளவு இலகுவாயும் மற்றையவர்களுக்கு புரிதல் கஷ்டமாகவும் தென்பட்டது. காலம் நகர கீழ் மட்டத்தினரும் வாசிக்கவும் அறியவும் தொடங்கினர். இந்த வாசிப்பனுபவத்தைத் தான் surrealism என்போம்.

இந்த நுட்பம் கவிதைகளின் ஆரம்பத்திலிருந்தே அவதானிக்க கூடியவாறு உள்ளது. அம்பலம் பித்தனை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதாக இருக்கிறது. வாசகன் இனி நான், நான் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன். ஆடைகள் கிழிந்த முகங்களில் சுருக்கம் விழுந்த கிழவன் ஒருத்தனை மக்கள் கூட்டம் திருடனை அடிப்பதைப்போல கற்களால் தாக்கிகொண்டு இருக்கிறார்கள். அவன் சிரித்துக்கொண்டு இருக்கிறான். அவனின் உடலின் அனைத்து பாகங்களிலும் காயம் உருவாகி விட்டது. முதன் முதலாக அவனை அன்று தான் பார்கிறேன்.

அவன் சிரித்துகொண்டிருந்தான்
அவன் காயங்களும்
சிரித்துகொண்டிருந்தன.

அருகில் போன நான் அவனிடம் இப்படி அடிவாங்கியும் சிரித்துகொண்டு இருக்கிறாயே நீ என்ன பித்தானா என்று கேட்கிறான். அவன் லாவகமாக நீ கல்லா என்றான். அவனை நோக்கி கற்கள் மட்டுமே வந்திருக்கின்றன. அவனை நோக்கி வெறுப்புகள் தான் வந்திருக்கின்றன. என்னையும் அவற்றில் ஒன்றாக, இதுவரை வந்த வெறுப்புகளில் ஒன்றாக, இனி வரப்போகும் வெறுப்புகளின் ஆரம்பமாக பார்கிறான். அவனின் பார்வை என்னுள் மிக ஆழமான தாகத்தை ஏற்படுத்தியது. அவனிடம் தொடுத்த கேள்விகளுக்கான பதில்களின் சாரம் இப்படித்தான் இருந்தது.

அவன் உண்மையின் இன்னொரு பக்கத்தை பார்த்ததால் பித்தனாகி இருக்கிறான். உலக மக்களின் அந்தரங்கங்களை – அப்படி அவர்கள் நினைத்துகொள்ளும் ஒன்றை – உடைத்து உண்மையை வெளிபடுத்த எத்தனிக்கிறான், அதனால் தான் கல்லடி படுகிறான். தங்களின் சுயத்தை மறைத்து பொய் முகமூடிக்குள் வாழுகின்ற மனிதர்களை அம்பலப்படுத்துகிறான். அதனால் வெறுக்கப்படுகிறான். அதனால் தான் அவனை எல்லோரும் பித்தன் என்கிறார்கள்.
பித்தன் முடிக்கிறான்,

நான் உடைந்தேன்.

 

காலம் காலமாய்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.

தனது வருகையால் காலா காலமாக தம்மை மறைத்து வைத்திருந்தோரின் முகத்திரைகள் ஒழிந்து போகின்ற, என்கிறான்.

“கூனல்” – தெளிவத்தை ஜோசப் – மௌனிக்கும் குரல்கள்.

என்னதான் நாங்கள் சமத்துவமும் சமஉரிமையும் பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் திரிந்தாலும் நம் கண்முன்னே இன்னும் காலா காலமாக உரிமைகளை சரிவரப் பெறமுடியாத  மலையக சமூகத்தின் ஆதங்கங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவே இல்லை. தொழிலாளர் வர்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவந்து இன்று வரை தொழிலாளர் வர்க்கமாகவே வாழ்ந்து விட்டு செல்லும் துர்பாக்கிய நிலையில் மலையக மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். தினக்கூலிக்கும் மிக குறுகிய மாத சம்பளத்திற்கும் அடிமைகளாக தேயிலை தோட்டங்களில் இன்னமும் மிஞ்சி இருக்கின்ற சாதாரண மனிதர்களின் அவலம் மிகக் கொடியது. குறுகிய லயன்களில் போதிய வசதி எதுவும் இல்லாமல் மருத்துவம் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் சரிவர இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் குளிரில் வாடி மடிகின்ற மலையக  தொழிலாளர் வர்க்கத்தின் குரல்கள் வெளிப்படுத்தப் படவேண்டும். என்னதான் வாக்குரிமை வசதிகள் என்று நுண்மையாக அரசியல் வழிநடத்தல்களோடு உரிமைகள் கொடுக்கப்பட்டுகொண்டிருந்தாலும், அதே சமயத்தில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன்னொரு சமூகம் இருந்துகொண்டே இருக்கின்றது. எல்லோரின் போர்வையிலும் அவர்களும் அடிபட்டுப் போனாலும் அங்காங்கே எழுகின்ற இலக்கிய குறிப்புக்களில் தெளிவாக பதிவிடப்படுகின்றனர். சாதியத்தாலும் அவர்களின் ஆரம்ப கால வருகை நோக்கத்தினாலும் புண்படுத்தப்பட்டு, இறைச்சி சதையின் மேல் நெளிகின்ற புழுவைப்போல அலட்சியமாகவும் அசிங்கமாகவும் பாட்டாளி வர்க்கத்தினர்  இன்னமும் பார்க்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.
 
இந்த தொழிலாளர் முதலாளி  வர்க்க பேதம் பற்றி மிக நுண்மையான கதையாடல் மூலம் வெளிபடுத்துகின்ற தெளிவத்தை ஜோசப்பின் படைப்புத் தான் கூனல் சிறுகதை.
 
சிறுகதை இலக்கியத்தின் ஒரு கூறான மெய் தரிசனத்தை இந்த கதையின் பின்னணியில் காணலாம். கதையின் ஆரம்பத்திலிருந்து சாதாரண தேயிலை ஆலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் நகர்வுகளோடு தொடங்குகின்றது கூனல். மேற்ப்பார்வையாளர் தனது மேற்பார்வைக்கு வருகின்ற கணம் வரை , அவர்களின் வேலை பரபரப்பிலாமலும் அமைதியாகவும் நடந்துகொண்டிருக்கின்றது. மேற்பார்வையாளரின் முன் வேலையை பரபரப்பாக்கிக் கொள்கின்ற முறையும், அந்த பரபரப்பு வெறும் செய்கையில் மட்டுமே இன்றி உற்பத்தி வேகத்தை ஒரு போதும் அதிகரித்ததில்லை என்ற நிதர்சனமான பார்வையையும் ஜோசப்பின் மொழியாடலின் மிக லாவகாமாக வெளிப்படுகின்றது. தொழிற்சாலையின் ஒவ்வொரு கூறுகளும் அதில் வேலைசெய்கின்ற தொழிலாளர்களும் அவர்களின் உடல் அசைவுகள் , மன சிக்கல்கள், தேவைகள் , கஷ்டங்கள் என்று நுட்பமான விபரித்தல் ஊடாக கொண்டு சென்று கதையின் மைய பகுதிக்குள் நுழைகின்றார்.
 
கதையின் மைய பகுதி ‘பெனிங்சின்’ என்கிற உயர் வகைத் தேயிலையை கையாள்கின்ற பெயர் குறிப்பிடாத தொழிலாளி பற்றியது. அந்த பெயர் குறிப்பிடாத நபர் முழு தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமாக நகர்த்தபடுகின்றார். அவனின் மனநிலை பற்றிய சித்திரமாக ஜோசப் ஒவ்வொரு மலையக தொழிலாளியையும் முன்நிறுத்துகின்றார்.
 
லயன்களில் வசிக்கின்ற மக்களின் பொதுமையான தொழில் தேயிலை தோட்டம் சார்ந்ததாகவே இருக்கும். தேயிலை களத்தில் வேலைசெய்கின்ற ஒரு சாரார், தேயிலை ஆலையில் வேலைசெய்கின்ற ஒரு சாரார் , தேயிலை போக்குவரத்தில் வேலை செய்கின்ற இன்னொரு சாரார் என தேயிலையின் உற்பத்திகளோடு ஒன்றித்து வேலைசெய்கின்ற மக்கள் அவர்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு மிக பொருத்தமான உதாரணம் அவர்கள் குடிக்கின்ற தேநீர். என்னதான் உயர் ரக தேயிலையுடன் வேலை செய்தாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ கடைசி தரத்திற்கு முன்னைய தர தேயிலையாகும். கடைசி தர தேயிலை மரங்களுக்கு உரங்களாக பயன்படுத்தப்படும். ரேசன் அரிசி வாங்குவது போல தேயிலையை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இரண்டாம் வடித்தலுக்கு சாயம் வராத கஞ்சல்கள்(தேயிலை) சீக்கிரம் தீர்ந்து போக அயலவர்களிடம் வாங்கி சமாளித்துக் கொள்வார்கள். எத்தனை நாட்களுக்கு இதே போக்கில் செல்வது. மாத முடிவுகளில் வெறும் சுடு தண்ணீர் குடித்துவிட்டு குளிருக்குள் வேலைக்கு செல்கின்ற துயரம் மிக்க வாழ்க்கை அவர்களது. கதையின் நாயகனது.
 
மனதின் பாய்ச்சலில் நல்ல தேநீர் அருந்தி விடவேண்டும் என்று உயர் ரக தேயிலை சிறிய அளவை தனது கைகளில் மடிப்புக்குள் நிறைத்து சுருட்டி விடுகின்றான். மாடு மாதிரி வேலைகளை செய்து விட்டு இறுதியாக சோதனை செய்யும் இடத்தில், முகத்தில் வெறுமையும் பயமும் மிரட்சி கொள்ள காத்திருக்கிறான். துரதிஷ்டவசமாக அவனின் திருட்டு பிடிபட்டு விட்டது. எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுகிறான். குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். அவன் வியாபாரத்திற்க்கோ அல்லது வேறு தீய நோக்கத்திலோ தேயிலையை திருடியிருக்கவில்லை. அவனின் சிறிய ஆசைக்கு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மிக சிறிய விருப்பிற்கு அங்கே முட்டுக்கட்டை போடப்படுகிறது.
 
சிறுகதையின் இறுதி வரிகள், இதுவரை வாசகன் சுற்றிக்கொண்டிருக்கும் உலகத்தின் இருண்ட பக்கங்களை வெளிபடுத்துகிறது. இரவில் மூடை மூடையாக தேயிலை ஒரு கருப்பு காரில் ஏற்றப்படுவதும் அதை காவலாளி சலனமின்றி அவதானிப்பதும் திட்டமிட்ட முதலாளித்  திருட்டை அமபலபடுத்துகிறது. ஒரு சிறிய அளவு தேயிலையை விருப்பிற்காக கொண்டு செல்லும்போது குற்றவாளியாக பிடிபட்ட தொழிலாளியும், அதே தேயிலையை இருட்டில் மூடை மூடையாக சொந்த லாபத்திற்காக முதலாளி களவாடும் போது காவலாளி மௌனமாக ஆதரிப்பதும் வர்க்க பேதத்தின் பரவலாக்கத்தை விளிகின்றது. சோதனை செய்யும் இடத்தில் அவன் ஒரு பெருமனதோடு விடுவிக்கப்பட்டிருக்கலாம், இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் அந்த விடுதலையை தடுப்பது தொழிலாளி என்ற வர்க்க நிலையே. இதுவே முதலாளி  வர்க்கம் சுரண்டு மூடையாக குவிக்கும் போது “ யான் ஒன்றும் அறியேன் பராபரமே” என்றிருப்பதும் வர்க்க நிலையே.
 
தெளிவத்தை ஜோசப் கூனல் என்ற சிறுகதையின் மூலம் கூனலாகிப்போன மலையாக தொழிலாளர் வர்க்க உணர்வு நிலை போராட்டத்தை பதிவிடுகின்றார்.

மாண்ட்டோ படைப்புகள்.- சிறுகதை 1 – “காலித்” – ஊடறுக்கும் மனப்பிறழ்வுகள்.

எங்கள் எல்லோரிடமும் அழிக்கமுடியாத, அதே நேரத்தில் காரணமும் தெரியாத ஒரு வழக்கம் இருந்துகொண்டு வருகின்றது. ஒரு நேரத்தில் அதிகம் சிரித்தால் அடுத்து அதே அளவு அழவேண்டிவரும். அதற்காக எமது மகிழ்ச்சியான தருணங்களை வலுக்கட்டாயமாக குறைத்துக்  கொண்டாடுவோம். இது சிறியவர்களில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பின்பற்றப்பட்டு வருகின்றது. பௌதீக ரீதியில் சமானன எதிர் வினை எதற்கும் உண்டு என்பதை மீறிய உள்மன அடுக்குகளின் ஒரு எண்ணமே இது எனலாம். அதிகம் சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தை ஒன்று குறுகிய நேரத்தில் வீரியமாக அழுவதை பார்த்திருப்போம். அதை உதாரணமாகவே முன்னோர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். இந்த வழக்கம் சிறுவர்களாக இருந்து வளந்த பின்னரும் தொடரப்படுகின்றது. இந்த எண்ணம் மனதில் இருக்கின்ற ஒருவர், கொண்டாடுகின்ற மகிழ்ச்சிக்குப் பின்னால் அவருக்கு வருகின்ற துக்கம், மகிழ்ச்சியின் காரணமாக உருவானதே என்ற ஆழமான முடிவு ஒன்றை எடுத்துவிட செய்கின்றது. மனதளவில் வலிமை இல்லாதோருக்கு இப்படியான சூழ்நிலைகள் வருகின்ற போது மனப் பிறழ்வுகள் ஏற்படுகின்ற சந்தர்பங்கள் உருவாகின்றது.
images
சாதத் ஹசன் மண்ட்டோவின் காலித் சிறுகதையும் அவ்வாறான மனப் பிறழ்வை சந்திக்கபோகின்ற ஒரு சாதாரண அப்பாவையும்(மும்தாஜ்)  நோய்வாய்ப்  பட்டிருக்கின்ற அவரின் மகன் காலித்தை சுற்றியும் நகர்கின்றது. காலித் தனது முதலாவது பிறந்தநாளுக்கு முன்னரே இறந்துவிடுவான் என்பது உறுதியானதே. இந்த உறுதியை  மும்தாஜின் மனைவி அவ்வளவு தூரம் நம்பிவிடவில்லை. காலித்தின் ஆரம்ப கால செயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாகவும் அவனின் வளர்ச்சி மற்றைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது அதிகமாகவும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் இந்த விடயத்தால்  மிகவும் சோர்வுற்றிருந்தான். எந்த நேரமும் காலித் இறந்துவிடக்கூடும் என்கின்ற நினைப்பு அவனை வாட்டியது. அதுவும் காலித்தின் முதல் பிறந்தநாள் நெருங்க நெருங்க இன்னும் அதிகமானது.
 
இவ்வளவு கதையோட்டத்திலும் இரண்டு நிதர்சன சமூகவியல் பார்வையும் அதனோடு தனிமனித எண்ணங்கள் திரிக்கப்படுகின்ற விதமும் சித்தரிக்கப்படுகின்றது. ஒன்று- ஒரு மனிதனின் இறப்பின் பின்னர் அவரை சுற்றியிருந்தவர்கள் இறந்தவரை பற்றி கதைப்பதை கேட்டிருக்கிறோம். அதன் சாரம் இதுவாகத்தான் இருக்கும். – இறப்பதற்கு முன்னர் மிகவும் பொலிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார். எல்லோரது மனதையும் கவர்ந்தவராகவும் எல்லா விடயங்களிலும் ஆளுமை மிக்கவராகவும் இருந்தார். வழமையான அவரின் செயற்பாடுகளை விட சமீபத்திய செயற்பாடுகள் மிக நேர்த்தியாக இருந்தன. எல்லாம் அவரின் இறப்பிற்க்கான அறிகுறியாக இருந்து விட்டது. இந்த கதையின் ஓட்டத்தில் மும்தாஜின் மனதிலும் இந்த பார்வை இருந்தது, அவரின் மனைவியின் மனதிலும் இதே  பார்வை இருந்தது. ஆனால் பார்வைகள் இரண்டு ஒன்றுகொண்டு வித்தியாசமானவை. மும்தாஜின் பார்வை இறப்பை நோக்கிய அறிகுறியாகவும் மனைவியின் பார்வை ஆரோக்கியமான குழந்தைக்குரிய அறிகுறிகளாகவும் தென்படுகின்றது. இந்த இடம் மும்தாஜை மனதளவில் வலிமையற்றவராக வெளிக்காட்டுகின்றது. இரண்டாவது முடிவுப் புள்ளியை நோக்கிய நெருக்குதல்கள். ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையிலும் அல்லது போனால் ஒரு வியாபர வேலையிலும் காலக்கேடு முடிகின்ற நேரம் ஏற்படுகின்ற மன அழுத்தம் மிகக் கொடியது. சாதாரண மனிதனின் நிலையிலிருந்து அவனின் நாளாந்தத்தை பறித்து விடுகின்றது. தன்னிலையிலிருந்து தள்ளாட வைக்கின்றது. இது சாதாரண வாழ்வில் வாழுகின்ற எல்லோருக்கும் பொருத்தமானது.
 
பிறந்தநாளுக்கான ஆயத்தங்களை மனைவி விமர்சையாக செய்துகொண்டிருக்கின்றாள். அவளின் சுற்றம் நண்பர்கள் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுகின்றாள். ஆனால் மும்தாஜால் விரைவில் நடக்கப்போகின்ற இழப்பை நினைத்துக்கொண்டே நாட்களை கடத்துகின்றார். மும்தாஜின் எண்ணம் போலவே அந்த நாட்கள் அமைந்து கொண்டு வந்தன. ஒருநாள் மனைவியின் கூக்குரலுக்கு ஓடிப்போய் குளியலறையில் பார்க்க, எப்போதும் கைகளை விலாசமாகவும் குதூகலமாகவும் அசைத்து குழைந்து தண்ணீரில் விளையாடுகின்ற காலித் சோர்ந்து போனவானாக நின்றான். மும்தாஜுக்கு இன்னும் இழப்பின் நாள்நோக்கிய வருத்தம் அதிகமாகின்றது. அந்த நேரத்திலும் அவனின் மனைவி தன்னையும் கணவனையும் சுதாகரித்துக்கொள்ளுமாறு சாட்டுகளைச் சொல்லுகிறாள். காலித் சோர்ந்தும் துவண்டும் போகின்ற சந்தர்பங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. வருகின்ற மருத்துவர்களும் காலிதிற்கு ஏற்பட்ட நோய் கொடியது இல்லை என்றும் அதற்கான மாத்திரைகளை உபயோகிப்பதன் மூலம் குணப்படுத்திவிடலாம் என்றும் ஆறுதல் கூறுகின்றனர். இருந்தும் நாட்கள் செல்லச் செல்ல காலித் தீவிரமாக நோய்வாய்ப்படுகின்றான். அவனோடு மும்தாஜின் நிலைமையும் மோசமாகின்றது. மும்தாஜ் உளவியல் ரீதியாக பாதிப்பையும் நெருக்கத்தையும் உணர்கின்றான். காலிதிற்கு நோய் தீவிரமடைய மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கபடுகின்றான்.
 
இதன் பின்னரான மும்தாஜின் செய்கைகள், அவரின் மனப்பிம்பங்கள் அதில் உண்டாகுகின்ற பிறழ்வுகள் அதன் பின்னணி – இவை வாததிற்க்குரியவை. காலித்தின் தந்தையாக மும்தாஜ் என்கிற தனிநபர் செய்கின்ற ஒவ்வொரு சிறிய செயல்களும் காலித்தை பாதிப்பதாக தன்னுள் எண்ணிக்கொள்கின்றார். வயிறு நிரம்ப தண்ணீர் குடிப்பதிலும் சிகரட் புகைப்பதிலும் காலித்தை மருத்துவ மனையில் சென்று பார்பதிலும் தான் அடைகின்ற நிறைவு காலிதிற்க்கு ஆபத்தை உண்டாகும் என நினைக்கின்றார். அவற்றையெல்லாம் செய்வதில் பின்வாங்குகின்றார். அவரின் உடலை இயக்குகின்ற மூளையின் பகுதியும் உணர்வுகளை இயக்குகின்ற மூளையின் பகுதியும் வேறுவேறாக செயற்படுகின்றது. இதையே மும்தாஜ் அசரீரியாக உணர்கின்றார். வலிமை குன்றிய மனதினை  வலிமையான மறை எண்ணங்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைகின்றது. ஒவ்வொன்றையும் செய்வதால் உன் மகன் இறந்து விடுவான் என்று கூறி கூறியே பாசத்தால் பணியவைத்து அசரீரி காய்களை நகர்த்திக்கொண்டு போகின்றது. ஒவ்வொரு நகர்விற்க்குப் பின்னும் மும்தாஜால் நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தும் மீண்டும் வலிமையாக சூழ்ந்துகொள்கின்ற அசரீரியை மீறி/ உடைத்துக்கொண்டு எழுகின்ற சக்தி அவன் மனதில் இல்லை. அதனால் முழுமையாக ஆட்கொள்ளப்படுகின்றான்.
 
கதையின் நிறைவில் மும்தாஜ் தன் மகனை எடுத்துக்கொண்டாவது அசரீரியை தன்னை பிரியும் படி வேண்டுகின்ற அளவு மனதளவில் பிறழ்வுஅடைந்திருப்பார். இறுதியில் காலித் இறந்து போனான். கதையை மாண்ட்டோ இப்படி முடித்திருப்பார்
பிறகு அவன் தன் மகனிடம் “ காலித் தயவு செய்து இந்தக் குரலை அழைத்துப் போவாயா ?” என்று கெஞ்சினான்.
காலித் தன் தலையை அசைத்து “ சரி “ என்று சொன்னதைகேட்டதாக அவன் சத்தியம் செய்தான்.
 
ஆரம்பத்தில் ஏதோ ஒன்றைப்  பொருட்டு அதிகம் சிரத்தைகொள்வதனால் அதன் மூலம் அதிகம் கவலை அடைவதனால் மனப் பிறழ்வு அடைந்ததோ கடைசியில் அந்த கவலையே பொருட்டில்லாமல் ஆக்கும் அளவு அவை சக்தி வாய்ந்தவையாக மாறிக்கொள்கின்றன.

அஞ்ஞாதம். – சிறுகதை.

கண்கள் தான் அவளின் முகம். மேகலா என் சிறுவயது முதலே நல்ல நண்பி. அன்றிலிருந்து இன்று வரை எது வாங்கினாலும் பகிர்ந்துகொள்ளும் மனப்பக்குவம் எங்களிடம் இருந்தது. ஊர்த் தேர் திருவிழாவில் நான் வாங்கிக் கொடுத்த தஞ்ஞாவூர் பொம்மையை இன்றும் தான் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லிக்கொள்வாள். இரட்டை குடும்பி போட்டு ஒன்று முன்னே மற்றது பின்னே கழுதைக் காது போல சிறிதாக ஆடிக்கொண்டு திரியும் வயதிலிருந்து மேகலாவை நான் அவதானித்து வந்திருக்கிறேன். ஒன்றன் மீது அவள் ஆசையை வைத்துவிட்டாள் என்றால் உயிரே போனாலும் அதை அடையாமல் விடமாட்டாள். அடம்பிடித்து வீட்டு முற்றத்தில் வெறும் மேலோடு உச்சி வெயிலில் நின்று அப்பாவிடம் சைக்கிள் வாங்கினாள். அதைப் பெருமையாகவும் கருதினாள். அந்த சைக்கிளில் ஊர் உலகமெல்லாம் சுற்றித் திரிவாள். அவளின் அசட்டுத்தனமான தைரியம் ஒருமுறை என்னையும் அவளையும் ஆளில்லா கட்டில் தனியாக விட்டுவிட்டது. சைக்கிளோடு உச்சி வெயிலுக்குள் காட்டுக்குள் புகுந்த இருவருக்கும், களைப்பு மிகுந்ததால் ஓங்கி வளர்ந்திருந்த ஆல மரத்தின் கீழே நில வேர்களை தலைக்கு வைத்து நித்திரை கொண்டுவிட்டோம். களைப்பு அதிகமாக இருந்ததால் நேரம் காலம் போவது அறவே தெரியவில்லை. அவள் தான் என்னை வேகமாக தட்டி எழுப்பினாள். இருட்டில் அவள் யார் என்றே தெரியாமல் போனது. அலறியடித்துக்கொண்டு இருவரும் கைகளை கோர்த்து வீட்டுக்கு திரும்ப பாதையை தேடினோம். சைக்கிளில் தடக்குப்பட்டு குப்புற மூக்கு அடிபட நான் விழுந்தது தான் மிச்சம். இருவரும் சைக்கிளை கட்டிப்பிடித்துக்கொண்டு இரவை விளிப்போடே கழித்தோம். காலையில் வீட்டிற்கு போக, வீடு செத்தவீடு போல இருந்தது. என்னையும் மேகலாவையும் கண்ட ஊர் பெரியவர் ஒருவர் கொலை இழுவையாக இழுத்துக்கொண்டுவந்து வீட்டில் விட்டார். அன்றிலிருந்து மேகலா வெளியே எங்கேயும் போவது கிடையாது. அவளின் சைக்கிளும் பரணில் எறியப்பட்டது.
 
பின்னேரங்களில் அவளின் வீட்டிற்கு அம்மாவோடு போவேன். அவள் ஒரு சின்ன கதிரையில் இருந்து சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பாள். நான் அவளின் அருகில் போய் உட்காந்து , உகரம் எழுதும் போது சுழியை உள்ளங்கையால் அழித்து விடுவேன். அவள் என்னை அப்போது தான் திரும்பிப் பார்ப்பாள். அவளின் தனிமையை, அதனால்  உண்டான வெறுமையை அவளின் கண்களில் பார்த்திருக்கிறேன். அடுத்தமுறை அழித்து விடக்கூடாது என்று உறுதியாகச் செல்வேன். ஆனால்அவளின் எழுத்துக்களில் இருக்கின்ற சுழி, அவளைவிட நளினமாக தெரிவதால் மீண்டும் அழித்து விடுவேன். எப்போதும் அம்மாவால் துணைக்கு வர முடியவில்லை. நான் தனியாக செல்வதை விரும்பவில்லை. அவள் பூப்படைந்து இரண்டு வருடங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போய் விட்டாள்.
 
இரண்டு மாதங்களுக்கு முதல் தான் அவளை லண்டன் அல்லங்காடி ஒன்றில் சந்தித்தேன். அதே இரட்டை பின்னல் ஒன்று முன்னே மற்றையது பின்னே, மாட்டின் வாலைப்போலே நீளமாக கரும்பின் தாளைபோல அகலமாகவும் கரிய நிறமாகவும் இருப்பதை வைத்தே அவளை மட்டுப்பிடித்து விட்டேன். கணவருடன் சந்தோசமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். இடுப்புயர குழந்தைகள் இரண்டு. மேகலா நீங்கள் தானே என்பதற்குள் அவள் என்னை கண்டுபிடித்து விட்டாள். கண்களில் முன்னைய தனிமையும் வெறுப்பும் இப்போது இல்லவே இல்லை. அவளின் கணவனின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாள். அவளது கணவன் என்னைப்பார்த்த போது பல ஆண்டு பழகிய நண்பனைப்போல வாயை அகலமாக விரித்து அசட்டுத்தனமாக சிரித்தார். அவரின் புன்னகைக்கும் அவளின் கண்களின் தணிப்பிற்கும் இருந்த உறவை என்னால் அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர் என்கைகளை இறுக்கமாக குலுக்கி வீட்டில் இன்னும் அவள் பொம்மையை பத்திரமாக வைத்திருப்பதை மகிழ்ச்சியாக சொன்னார். அவளின் கண்கள் வேட்கத்தால் சுருங்கிப்போனதை என்னால் மட்டுமே உணரமுடிந்தது. அவளின் பையன்கள் கைகளை பிசைந்து கொண்டு இருவருக்கும் இடையில் கடக்கமுடியாத தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு நிற்பது போல உணர்வுகள் குவிந்து கொண்டிருக்கும் அங்காடியில் நீண்ட நேரம் நிற்கமுடியவில்லை.
 
சாலையின் இரண்டு புறங்களிலும் பனியை குவித்துக்கொண்டிருந்தது வாகனங்கள்.பொடி நடையாக ஐவரும் நடந்து சென்றோம். அவள் கைகளை கணவனின் கைகளோடு கோர்த்து விலாசமாக விசுக்கி விசுக்கி நடந்தாள். இப்பொது தலைக்கு குளிர் குல்லா ஒன்று போட்டிருப்பதால் பின்னல்கள் ஆடுவதை அவதானிக்கமுடியாமல் போனது. கதைகளின் இடைகளில் எல்லாமே அவள் சந்தோசமாக இருப்பதாக சொன்னாள். அவளின் கண்கள் அப்போதெல்லாம் மிகப் பிரகாசமாக மின்னியது.பையன்களுக்கு பழக்கபட்ட வீதிகளின் புறங்களில் குவிந்திருந்த பனியின் விளிம்புகளை தமது சப்பத்துக்களால் உதைந்து கொண்டே வந்தார்கள். மேகலா என்னை இராப்போசனம் கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பவேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தாள். வீட்டிற்குள் புக முதலே போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் அடிப்படையிலேயே உள்ளே நுழைந்தேன். நுழைந்ததும் உட்காராமல் நேரே புகைப்படங்கள் தொங்கவிட்டிருக்கும் சுவரை நோக்கி நடந்தேன். முதலில் பையன்கள் இருவரும் சிறு வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படம். அதில் ஆளுக்கொருவர் அவர்களின்  சட்டைக்கலரில் ஒவ்வொரு சைக்கிள் வைத்திருந்தார்கள். அடுத்த புகைப்படம் இவர்கள் இருவரது திருமணம். ஜோடியாக கைகளில் பூக்கொத்துடன் நின்றனர். மேகலாவின் பார்வை அப்போது வெறித்தபடியே இருந்தது. புகைப்படம் எடுத்த பெரியவருக்கே அது தெரிந்திருந்தது. மேகலாவின் சம்மதம் இல்லாமலே தான் திருமணம் நடந்தது. அவள் கணவனின் புகைப்படம் கூட பார்க்கவில்லை.வீட்டின் பெரியவர்கள் பார்தார்காளா என்று கூட தெரியவில்லை. அடுத்து முதல் பையனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம். பையன் அழுதபடியும் மேகலா சிரித்தபடியும் இருக்க கணவன் மேகலாவின் ஒரு தோளில் கையை இறுக்கமாக பிடித்திருக்க மேகலா அவரை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் மேகலாவிற்கு அவளின் கணவனை அதிகம் பிடித்திருக்க வேண்டும். கல்யாணமாகி இரண்டாம் நாள் மேகலாவின் வீட்டிற்கு சந்தோசமாகத்தான் வந்திருந்தாள். அப்போது தான் முதன் முறை மேகலாவை பெரிய பெண்ணாக பார்த்தேன்.  அடுத்தது இரண்டாவது மகனை தூக்கி வைத்திருக்கும் இருவரது தனிப்படம். முதலானவன் முகம் முழுக்க பௌடர் அடித்துக்கொண்டு கையில் கார் ஒன்றை வைத்திருந்தான். வரிசையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டு சென்று முடிவில் இருந்த கதிரையில் அமர்ந்தேன். மேகலாவின் கணவன் கையில் தஞ்ஞாவூர் பொம்மையுடன் சிரித்தபடியே வந்தார். அவரின் சிரிப்பில் மேகலாவின் சந்தோசமான வாழ்க்கை தெரிந்தது.
 
இன்று மதியம் மூன்று மணியளவில் தொலைபேசி மூலம் செய்தியறிந்தேன். விறுக்கென எழுந்து காரை எடுத்துக்கொண்டு மேகலாவின் வீட்டிற்கு புறப்பட்டேன். பாதையெங்கும் சூரியனின் வெளிச்சம். லண்டன் வாசிகள் எல்லாம் அரைகுறையாக நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். லண்டன் வெய்யில் காலங்களில் தான் அழகாகத் தெரியும். கடைகளில் எல்லாம் மட்டைகளும் தோரணங்களும் நீக்கமற நிறைந்திருக்கும். இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்தவர்களுக்கு லண்டனின் வெய்யிலையும் அழகையும் ரசிக்க கொடுத்துவைத்திருக்காது. அவர்களுக்கு இது தான் இலங்கைக்கு போக சரியான காலம். ஒவ்வொரு ஜோடியும் கைகளை கோர்த்து விலாசமாக விசுக்கி நடக்க, மேகலா என்னை ஞாபகப்படுத்தினாள்.
 
என்னையறியாமல் கண்கள் எல்லாம் கண்ணீரால் முட்டிப் போயிருந்தன.வாசல் கதவைத்திறந்து  வேகமாக விறாந்தைக்குள் நுழைந்தேன். ஒரு மூலையில் மேகலா கதிரைபோட்டு சுவரைபார்க்க திரும்பி இருந்தாள். பையன்களில் ஒருவன் என் கால்களைப்பிடித்து தலையை தொடையில் முட்டிக்கொண்டான். அவனை தூக்கிக்கொண்டு மேகலாவை நோக்கி நடந்தேன். அவள் அதை உணர்ந்திருக்க முடியாது. அவளின் தலைமுடி குலைந்து அசிங்கமாக இருந்தது. வீடே இருட்டி இருந்தது. யன்னல்கள் சூரியக்கதிர்களை தடுத்துவைத்திருந்தன.
 
அவளின் தோளில் மெதுவாக சென்று கையை வைத்தேன். கண்கள் சிவந்து வீங்கி ரத்த நாளம் எல்லாம் கண்களுக்குள் புடைத்துப்போய் முன்முடி கொஞ்சம் கீழே படர என்னை வெறித்து பார்த்தாள். அதே பார்வை அவளின் உகரத்தில் இருந்து நளினத்தை அழித்தபோது அவள் பார்த்த அதே பார்வை.

உலக இலக்கிய தொடர். பாகம் 01- டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.

அறிமுகம்.

நமது வாழ்கையில் இரண்டு வகையான தொழிற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று புறச்செயற்பாடு மற்றையது அகச்செயற்பாடு. இன்றைய சமூகத்தின் போக்கை ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை செயற்படுத்திக்கொள்ள புறச்செயற்பாடுகள்தான் காரணம். புறத்தே நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தனிமனித வாழ்வியலையும் பாதிக்கின்றது. எங்கோ நடக்கின்ற திருவிழாவும் எங்கோ நடக்கின்ற குண்டுவெடிப்பும் தூரத்தில் உதிர்கின்ற இலைகளும் எல்லாமுமே ஒரு வகையில் எம்மக்குள் பாதிப்புதான். ஒவ்வொரு பாதிப்பிலும் ஒவ்வொரு விதமாக நாங்கள் எங்களை சரிப்படுத்திக்கொண்டு அடுத்த பாதிப்பை நோக்கி செல்கிறோம். இதுதான் புறச் செயற்பாடு. இவ்வளவோடு எதுவும் முடிந்துவிட்டதென்பதில்லை.
ஒவ்வொரு புறச் செயற்பாடும் எம்முள் விதைக்கின்ற விதைகள்தான் மிக முக்கியமானவை. பாதைகளில் தடைகளை மட்டுமே புறச்செயற்பாடு காட்டும். அவ்வளவு தான் அதன் வலிமை. உண்மையில் நமது வாழ்க்கைக்கு பாதைகளே கிடையாதே. யார் சென்ற பாதையிலும் நாங்கள் செல்லப்போவதும் இல்லை. முன்னோடிகளா? அவர்களின் பாதையில் நாங்கள் செல்லப்போவது இல்லை. அவர்களின் பாதைகளை கவனித்து பயின்று பின்னர் எங்கள் பாதைகளை உருவாக்கிக்கொள்கிறோம். இது தான் யதார்த்தம். இந்த வெற்று வெளியில் பாதைகளை உருவாக்கிக் கொள்ள கருவிகள்தான் விதைகள். புறச்செயற்பாடு விதைத்த விதைகள். எல்லோரது வாழ்விலும் எண்ணற்ற விதைகளை விதைப்பதுண்டு. ஒவ்வொரு நொடியும் ஒரு புது விதை போடப்படுகின்றது; நேற்று போட்ட விதை துளிர்கின்றது; எப்போதோ போட்ட விதை விருட்சமாகின்றது; நெடுங்காலம் முதல் போட்டவை உதிர்கின்றன. இந்த செயல் வட்டம்தான் அகச்செயற்பாட்டு வாழ்க்கை.
இந்த விதைகளை விதைப்பதில் தான் அன்னா கரீனினா என்ற நாவல் வடிவம் பெறுகின்றது.

டால்ஸ்டாயும் அன்னா கரீனினாவும்.

லியோ டால்ஸ்டாய் (mosaicmagazine.com)

டால்ஸ்டாயின் மிக உன்னதமான நாவலான போரும் அமைதிக்கும் பிறகு அவர் எழுதிய இன்னொரு முக்கிய இலக்கியம்தான் அன்னா கரீனினா. குடும்ப வாழ்வின் திருப்பங்கள், அவற்றின் பிறழ்வுகள், ஒரு பெண்ணின் உளநிலை பிரச்சனைகள், காதல், சராசரி முடிவுகள் என்று முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை தழுவியே எழுதப்பட்ட நாவல். பொதுவாக நிலவுகின்ற  டோல்ஸ்டயிடம் இருந்து வர்ணனைகள் எடுத்து விட்டால் மீதம் இருப்பது உப்பு சப்பு இல்லாத கருத்துகளே என்ற சாடலுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் எழுதபட்ட நாவல். டால்ஸ்டாயின் புனைவுகள் என்பதை மீறி டால்ஸ்டாய் தனது வாழ்கையை பதிவிடும் எழுத்துகளாக அன்னா கரீனினாவை எழுதியிருகின்றார். பொதுவாக டால்ஸ்டாயின் வாழ்க்கைக்கும் அவரது புனைவுகளுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்னே கரீனினாவில் வருகின்ற லெவின் என்ற பாத்திரத்தை முற்று முழுதாக தன்னை உருவகப் படுத்தியே உருவாகியிருகின்றார்.
இந்த நாவல் ‘The Russian Messenger’ என்ற பத்திரிகையில் 1873 இலிருந்து 1877 வரையான நான்கு ஆண்டுகள் தொடராக வெளிவந்திருக்கிறது. அதையே பின்னர் கோர்த்து நூலாக்கியிருகின்றனர். இந்த நாவல் மொத்தமாக இருபத்தொன்பது மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருகின்றது. அன்னே கரீனினா நாவல் என்பதை தாண்டி ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் திரைப்படமாகவும் வெளிவந்திருகின்றது. Holleywood இல் மாத்திரம் நான்கு முறை திரைப்படமாக்கபட்டிருகின்றது. அன்னே கரீனினாவின் பின்னர் அன்றைய ரஸ்சிய மக்களால் புஸ்கினுக்கு அடுத்த மிக பெரிய எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார். இந்த நாவல் பிரெஞ்சு மொழியிலும் சம காலத்திலேயே சமாந்திரமாக எழுதப்பட்டது.

அன்னே கரீனினா எழுதுவதற்கான பின்னணி.

(pinimg.com)

டால்ஸ்டாய் பத்திரிகை ஒன்றில் “அன்னே ஸ்டேப்நோவா“ என்ற குடும்ப பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியை வாசிக்கின்றார். இந்த நிகழ்வு அன்றைய கால கட்டத்தில் அசாதாரணமானது. அதனால் டால்ஸ்டாய் இந்த நிகழ்வின் மீது கரிசனையும் அதிக கவனமும் செலுத்தி அதன் பின்னணியை ஆராய தொடங்குகின்றார். பிணவறையில் தலை மட்டும் தெளிவாக தெரியக்கூடிய உடலெல்லாம் சிதறிப்போன பெண்ணின் நிலையை கண்டு வேதனை அடைகிறார். அவளை பற்றி தேடியதில் அவளின் இறப்பிற்கு கள்ள காதல்தான் காரணம் என்றும் அறிந்து கொள்கிறார். அதைவிட மேலாக அந்த பெண் புஷ்கினின் மகள் என்ற உறுதிப்படுத்தபடாத செய்தியும் உண்டு. இவையெல்லாம் தான் டால்ஸ்டாயை அன்னே கரீனினா எழுத தூண்டியிருகிறது.
நாவலின் சிறப்பு பக்கங்கள்

அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார். (thefilmcricket.files.wordpress.com)

டால்ஸ்டாய் குடும்பம் என்ற சட்டகத்தில் இருந்து சமூகம் என்ற சட்டகத்திற்கு எவ்வாறு சிந்தனைகள் கடத்தபடுகின்றன என்பதை விவரித்திருப்பார். கூட்டுபண்ணையை உருவாக்குதல் பற்றியும் விவசாயத்தில் ஓடியிருக்கின்ற பழமையை இல்லாமல் ஒழித்து புதுமையான விவசாய புரட்சி செய்தல் பற்றியும் சாதாரண வாழ்கை தரத்திலிருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயத்திவிடுவது பற்றியும் மிக செறிவாக வாதிக்கின்றார்.
நாவல் சில ஆழமான குறியீடுகளை கொண்டிருகின்றது. அதில் முக்கியமானதாக புகைவண்டி காட்டபடுகின்றது. ஒரு புகைவண்டியின் அடிப்படை நோக்கம் ஒரு பயணியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லலே. இதை மிக நுட்பமாக டால்ஸ்டாய் அன்னாவின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்துகின்றார். அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார்.
அதைவிட ஒரு வாழ்வின் மிக கொடூரமான எல்லா மறையான விடயத்திற்கும் குறியீடாக புகைவண்டியை பயன்படுத்தியிருக்கலாம். அன்னாவின் வாழ்கையை அப்படியே வந்து அடித்து சிதிலமாகுகின்ற மறையான விடயங்களை புகைவண்டியின் மூலம் குறியீடாக்கியிருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

கதையில் வருகின்ற முக்கிய வசனங்கள்.

All happy families are alike; each unhappy family is unhappy in its own way.
In that brief glance Vronsky had time to notice the restrained animation that played over her face and fluttered between her shining eyes and the barely noticeable smile that curved her red lips. It was as if a surplus of something so overflowed her being that it expressed itself beyond her will, now in the brightness of her glance, now in her smile.
“Respect was invented to cover the empty place where love should be. But if you don’t love me, it would be better and more honest to say so.”
“. . . [M]y life now, my whole life, regardless of all that may happen to me, every minute of it, is not only not meaningless, as it was before, but has the unquestionable meaning of the good which it is in my power to put into it!”

அன்னா கரீனினாவும் விவாதங்களும்.

மிக எளிமையாக முடிக்கப்பட்ட ஒரு இறப்பிலிருந்து வாதங்களை அன்றைய அறிவார்ந்த சமூகத்தினர் அன்னாவின் மீது எழுப்பினார்கள். அன்றைய எல்லா அவைகளிலும் அன்னாவின் முடிவு சரியானதா பிழையானதா என்ற வாதம் எழுந்துகொண்டே இருந்தது. இன்றும் எழுந்தவண்ணமே இருகின்றது. வேறுபட்ட மனோபாவங்களையும் பல்வேறு சூழ்நிலை சிக்கல்களையும் எதிர்நோக்குகின்ற சாதாரண ஒரு பெண்ணின் முடிவு தற்கொலை தானா? என்ற காலத்தின் கேள்வியோடு வாதங்கள் தொடர்ந்தவண்ணமே இருகின்றன.
ஒரு உன்னத இலக்கிய படைப்பு காலத்தை மீறியது. காலக்கணிப்பு செய்யமுடியாத அர்த்தங்களை சுமப்பது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவும் காலத்தை கடந்த ஒரு உன்னத படைப்பு.
முழு நாவல் – ஆங்கிலத்தில்

உசாத்துணைகள்

உலக இலக்கிய பேருரைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
Spark Notes

குட்டை குடிநீர் – 03

தமிழ் இலக்கிய சூழலில் இன்று நின்று நிதானித்து வாசித்து கடக்கின்ற போக்கு அருகிப்போய் விட்டது. இதை எந்த கட்ட வாசிப்பு அல்லது இலக்கிய நிலை என்று கூறுவது சிரமம். ஒரு வகையில் வாசகனின் நேர முகாமைத்துவம் நேரடியான தாக்கத்தை செலுத்தினாலும் வாசகன் செலவு செய்கின்ற வீண் பொழுதுகளை கணக்கிடும் போது நேர சிக்கல் என்பது பொருட்டல்ல என்றே தோன்றுகின்றது. வாசிப்பு பரவலாக்கம் இன்று வியாபித்துப்போய் இருந்தும், வாசிப்பிற்க்கான ஊடகங்கள் அதிகரித்துபோயிருந்து வாசிப்பு மட்டம் மிக தாழ்வாகவே உள்ளது. வரலாற்று ரீதியில் இதை நியாயப்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் உலக வாழ்வில் எந்த காலகட்டத்திலும் இதே போன்ற ஒரு குவிய வாசிப்பு பண்பாடு தான் இருந்திருகிறது என்கிறார்கள்.இந்த குவிந்த வாசிப்பு பண்பாடு முன்னைய காலகட்டத்திற்கு ஒரு சவாலாக இருக்கவில்லை. அன்றைய சமூக ஒழுங்கமைப்பில் வாசிப்பின் பங்கு கணிசமாக இருந்தாலும் வாசிப்பு பரவலாக்கம் ஒரு பெரிய பொறிமுறையாக தேவை இல்லாமல் இருந்தது. பல புரட்சிகளுக்கு வாசிப்பு அனுபவத்தின் தேவை அதிகமாக இருந்திருக்கவில்லை. அக்கால சூழலிய கட்டமைப்புக்கள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. புரட்சிக்கான விதை சமூகத்தாலே விதைக்கப்பட்டது.
 
இன்றைய சூழ்நிலையில் இது எல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கான பதிலளிப்பிலே வாசிப்பின் பரவலாக்கத் தேவைக்கான அவசர அவசியம் உணரப்படும். தினசரி வாழ்கையில் நடக்கின்ற சம்பவங்களும் அதன் பின்னணிகளும் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தின் மீதான கேள்விக்குறியை ஏற்படுத்துகின்றது. எம்மிடையே பரவிக்காணப்படுகின்ற மந்தமான சுய பகுத்தறிவு இதற்கு முக்கிய பங்கை ஆற்றுகிறது. ஒரு பிரச்சனையை அல்லது ஒரு நிகழ்வை பகுத்து ஆராய்ந்து ஆலோசித்து முடிவை எடுக்கின்ற சாதாரண மனிதப்பண்பு கூட இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. சூழ்ந்துள்ள சமூகம் அதற்கான எந்த வாய்ப்புகளையும் வழங்குவதில்லை. ஏனென்றால் அவர்களும் இதே மந்த கோட்பாட்டு வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே சூழலிய பிரச்சனை உங்களால் உருவாகிக்கொண்டு இருக்கும்.
 
இதற்கான தீர்வு எது என்பதை சிந்தித்துப் பார்க்கின்ற ஏற்பாடு எங்களிடையே இல்லை. அதற்கு முன்னர் சிந்தித்து கொள்வதற்க்கான கருத்தியலையும் அனுபவங்களையும் நாங்கள் திரட்டி கொள்வதில்லை. இந்த கருத்தியலையும் அனுபவங்களையும் நூல்களில் இருந்து பிரித்து எடுத்து வாழ்க்கைக்கு பிரதியீடு செய்து வாழ்ந்து பார்த்தல் என்ற பேச்சிற்கே இன்று இடம் இல்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய பாடசாலையும் சமூகமும் குடும்பமும் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில்லை. மாறாக இன்னும் இழிய நிலைக்கு கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளார்கள். டெங்கிற்கு ஒலிபெருக்கிமூலம் அறிவுறுத்தி தண்டப்பணம் செலுத்தச் செய்வது போன்று  கண்டிப்பாக வாசிக்க வைக்க அரசாங்கம் சட்டம் அமுலாக்குதலின்றி இந்த சமூகம் விரைவில் எதிர்கொள்ளப்போகும் உயிர்கொல்லி நோய்க்கு வேறு மருந்தில்லை.