( 5.4.17 ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதா பாரதியின் கட்டுரைக்கான விமர்சனம்)
தலைப்பை பார்த்தவுடனேயே வாசித்துவிடவேண்டும் என்ற எண்ணம் உள்ளூறியது. “ஆண்பால் பெண்பால் அன்பால் ” என்று வெள்ளை , கறுப்பு , வெள்ளை என்ற வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது தலைப்பு. இந்த குறியீடு பெண்ணியத்தின் இருள்மையை நோக்கிய வழமையான கட்டுரை என்ற சலிப்பையும் ஏற்படுத்தவே செய்திருந்தது, பழக்கப்படாத எழுத்தாளர் வேறு – கவிதா பாரதி.
கதையையும் கருத்தையும் பின்னணியையும் தேக்க நிலை பெண்ணியத்தையும் அதன் தீர்வுகளையும் ஒரு சலனமற்ற நீரோட்டம் போல பின்னி பின்னி குழைத்து தந்திருக்கின்றார் கவிதா பாரதி. பாரதியையும் வள்ளுவனையும் உதாரணமாக ஆரம்பத்தில் எடுத்தாளப்படும் போது காலம் கடந்த இலக்கிய கட்டுரையோ என்றிருக்கும் போது அப்படியே சமகாலத்துக்குள் குதித்தது முகவுரை. மூத்த ஆண்மகனாக தன்னை சித்தரித்து கொள்ளும் சுய அனுபவக்கதையினூடு கட்டுரை விரிகின்றது. கிராமத்தில் காணப்படுகின்ற ஆண் பெண் சமத்துவமின்மை , ஒரு மூத்த ஆண்மகனை எப்படியெல்லாம் அல்லலுறச்செய்யும் என்ற நிதர்சன நோக்கு பாராட்டுக்குரியது. அந்த ஆணின் மனநிலை பிறழ்வுகள் என்பதை விட மனநிலை விரிவுகளை கூறும் இடங்களில் வாசகனின் தன்னிலை சார் உணர்வுகள் தூண்டப்படுகிறது. வாசிப்பில் என்னை படம்போட்டு கட்டிய உணர்வுநிலை தொடர்பை அது ஏற்படுத்தி இருந்தது.
பால்யத்தில் ஏற்படுகின்ற முதல் காதலையும் அதன் விறுவிறுப்பையும் பற்றிக்கொண்டு நகர்கின்ற கதையோட்டம் வழமையான காதல் கதைகள் கொடுக்கின்ற இழுவை நிலையை ஏற்படுத்தியது. இருந்தும் முடிவாக கூறவிழைந்த கரு மிக முக்கியமானது.
” காதலிக்கும் போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப்படுத்தினீங்க. அதுக்கு பிறகு அவன் வாழ்க்கையைத் தேடிப்போகும் போது அவனைக்கையை பிடிச்சு கூட்டிட்டு போகலேயே. தோற்றுப்போன மைதானத்துல அப்பிடியே விட்டுட்டுபோய்ட்டிங்களே ” என்று இறந்த நண்பனின் முன்னாள் காதலி அவளை சந்திக்கும் கதைசொல்லிக்கு கூறுவதை உலகத்துக்கு சில நுண்ணிய பொருட்செறிவுள்ள கருத்துக்களை விட்டு செல்கிறாள். இதில் வெளிப்படையான கருத்துக்களை விட உள்ளூர ஓடுகின்ற தன்னிலை நியாயப்படுத்தலும் நண்பர்கள் என்ற சக்தி தடப்பிறழ்வான நிலையை எதிர்கொள்ளும் பிழையான வழிப்படுத்தலுமே தென்படுகின்றது. துண்டாக ஒன்றை கூறுகின்ற படிம நிலையை அந்த கூற்று ஏற்படுத்துகிறது. தனிமையில் விளைகின்ற தூண்டுதலின்றிய எந்த உணர்வுக்கும் , சரியான தன்னிலை மருந்து கட்டாயம் இருக்கும் என்பதாகும்.
கதை சொல்லலில் ஏற்பட்ட சலிப்பை இந்த கரு ஓரளவு தாழ்த்திவிடுகிறது. காதலர்களை விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும் தன்மை ரசிக்கக்கூடியவாறு உள்ளது. பின்னால் அவள் கூறுகின்ற தன்னிலை நியாயப்படுத்தல்கள் இந்தியாவின் சமூக பின்னணியை காரணம் காட்டியும் பெண்மையின் விநோதங்களை காரணம் காட்டியும் தன்னை தப்பித்துக்கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டவை போல தென்படுகின்றது. தலைப்பை தாக்குகின்ற போக்கினை உண்டுபண்ணுகின்றன.
கதைசொல்லி அப்படியே தன்வயதினை குறைத்து கொண்டு அடுத்த அனுபவத்திற்குள் செல்லுகிறார். அதே வழமையான பேயோட்டும் கிராம பின்னணியில் கதை நகர்கிறது. கதை நகர்தலில் பாவிக்கப்படுகின்ற மொழியின் தன்மை வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான எந்த விரிசலையும் ஏற்படுத்தாமல் கூட்டிசெல்கின்றது.
” பிடிப்பவளாகவும் பிடிக்கப்பட்டவர்களாகவும் அவற்றை ஓட்டுபவர்களாகவும் பெண்களே இருந்தனர். ”
” சொல்லப்போனால் இன்றைய தேதியில் விரட்டப்படவேண்டிய பேய்கள் எல்லாம் வாழ்வது, கத்தியும் ஆசிட் பாட்டிலுமாக திரியும் ஆண்களின் உடல்களில் தான்.”
என்னதான் இருந்தாலும் இதில் பெண்களின் அடக்குமுறையிலிருந்து அவர்கள் மிகச் சரியாக மீள்வதாக கூறுகின்ற இடங்கள் உரசிப்பாக்க வேண்டியவை. இலங்கையில் ஏற்படுகின்ற பெண் தற்கொலைகள் எல்லாம் சரியான முடிவுகள் தானா என்று வாதம் உருவாக்குகின்ற போது எதிர்த்து ஆண் தற்கொலைகளை முன்வைப்பவர்கள் இரு பால் தற்கொலைக்கான பின்னணியை ஆராய்தல் உசிதமாகும்.
கட்டுரை ஒன்றின் உயிர்ப்பு புள்ளி தான் கட்டுரையின் தரத்தை தீர்மானிக்கும் என்பது எனது கருதுகோள். அந்த வகையில் இருவேறுபட்ட உணர்வுகளோடு ஒரே களத்தில் சலசலத்துக்கொண்டிருந்த இரு கோண பெண்ணிய நோக்கு போராட்டம் என்ற கடலுள் சேரும் போது அதன் சலசலப்பு அற்றுப்போய் , அது கொண்டுவந்த கருத்துக்குவியல்கள் சிதறடிக்கப்படுகின்றன. ஈழப்போரினை அனுதாப குறியீடாக்கி அதில் பள்ளி கொள்ளும் சமகால ஈன இலக்கிய பதிவுகளுள் பெண்ணிய போராட்டத்தை நிர்வகிக்கும் பெண் போரளிகளை மையப்படுத்திய நகர்வு கட்டுரையின் உயிர்ப்பு புள்ளியாக அமைந்துவிடுதல் சிறந்த கட்டுரைக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்துகிறது. முன் இரு கதைகளிலும் ஏற்பட்ட தொய்வு குறித்த விமர்சனத்திற்கு பதிலளிப்பது போல, முன் கதைகள் விறுவிறுப்பிற்காக எழுதப்பட்டவை அல்ல என்ற புரிதலை உருவாக்குகின்றன. காதல் , பற்றுதல் , போராட்டம் என மூன்று மனநிலை பதிவுகளையும் வரலாறுகளாக சுமந்துகொண்டு சமகாலத்துக்குள் நுழைகிறது நிறைவுரை.
சமகால போராட்டங்களுள் பெண்ணின் பங்கினை மரீனா போராட்டத்திலும் சாந்தன், பேரறிவாளன் , முருகன் மரணதண்டனை ரத்து சம்பந்தமாக கோயம்பேடு கல்லூரிமாணவிகள் போராட்டங்களை உதாரணப்படுத்தி உறுதிசெய்துகொள்கிறார். பெண்கள் இன்று இன்னும் போராட்டக்குணம் அதிகரித்தவர்களாக காட்டுகிறர். அப்படியே தலைகீழாக்கி பெண்ணின் பாதுகாப்புக்குள் ஒரு தந்தையாக தன மனநிலையை வெளிப்படுத்தி கட்டுரையை முடித்துக்கொள்கிறார்.
” இதே நேரம் திருவனந்தபுரத்தில் ஏதேனு ஒரு சாலையை கடக்கத் தயங்கும் என் மகளை , இதேபோல் பத்திரமாக அனுப்பிவைக்கும் ஒரு வாகன ஓட்டிக்கு செய்யும் பதில் மரியாதையாகவே இதை நான் கருதுகிறேன்.”
கூடவே அங்கங்கே இருக்கிற கவிதை வரிகள் என்பதை விட உணர்வெழுத்துக்கள். கட்டுரையின் போக்குக்கு இடையூறு தராத தகுதியான வரிகளை எழுத்தாளர் சேர்த்திருப்பது வாசிக்க பொருந்துதலாகின்றது. கப்டன் வானதி எழுதிய எழுதுங்களேன் என்ற கவிதை என்னை மிக பாதித்தது. அதிலும் இந்த வரி கூறும் துயரம் உச்சரிப்புகளை ஈரமாக்குகின்றன.
“ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வரமுடியவில்லை
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால் ”
கட்டுரையை முழுமையாக வாசித்த பிறகு கவிதா பாரதியின் எழுத்தின் மீதான பற்றுதல் உண்டாகிறது. வாசகனை வழிப்படுத்தி கருத்தை கொடுக்கும் பாணியை கைவரப்பெற்றிருக்கிறார். தொய்வுகள் அங்கங்கே தலைதூக்கினாலும் விடயப்பரப்பை சரியாக கையாண்ட விதம் அமர்த்திக்கொள்கிறது. நலமான விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய சிறு சிறு கருக்களை கட்டுரையெங்கும் சிதறவிடுகிறார்.சமத்துவ நிலை கட்டுரையாக இல்லாவிட்டாலும் பெண் என்ற தனி மனநிலை சித்திரமாக , அந்த தனி மனநிலை ஆழமான ஊடுருவல்கள் செய்ததில் கவிதா பாரதியின் ஆண்பால் பெண்பால் அன்பால் வாசிக்க சுவைக்கிறது.
04.04.2017
Monthly Archives: April 2017
திருக்குறள் பக்கம் 10
எங்கள் சமூகம் இப்படிகட்டமைக்கப்பட்டிருந்தது. உழவர்களை உயர் ஜாதியாக கொண்ட அமைப்புமுறை, மற்றையோரின் தேவை உழவனின் உழைப்பாக இருந்தது. அதனால் உழவனைக் கொண்டாடிய வாழக்கை முறை வழிவந்தவர்கள் நாம். உழவனை உயர் ஜாதிக்காரன் என்பதை சமூகப்பிரிவினை வாதத்தின் அடிப்படை என்று கூச்சல் இட்டால் அதில் உள்ள மடைமைத்தனம் தான் இன்றைய பிளாஸ்டிக் அரிசி பாவனைக்கு காரணம். உழவனை பின் தொடர்ந்தல் தான் மிக நிதர்சன தேவையாகும். பின் தொடர்ந்தல் என்றால் அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். முக்கியத்துவம் என்றவுடன் பத்திரிகையில் விவசாயி தூக்கில் தொங்கி பலி என முதல் பக்கத்தில் இடுவதோ விவசாயி சொல்லும் விவசாயம் என்று ஆய்வுக்கட்டுரை போடுவதோ அல்லது மட்டைகளை தூக்கிக்கொண்டு எதுக்கும் பிரயோசனம் இல்லாத போராட்டங்களில் இறங்குவதோ இல்லை. இன்றைய தமிழர்கள் எல்லாத்துறைகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கின்றோம். புறக்கணிக்கப்படுகின்றோம், என்ற கோஷம் இருந்தாலும் அடையவேண்டிய இடங்களை தாராளமாகவே அடைந்து விட்டோம். மாற்றங்களை எங்கோ தேடிக்கொண்டு இன்னும் பல்லுக்குத்தியவாறு அனைத்தையும் குறைகூறுகின்றோம்.
உலகின் வறிய சமூகம் விவசாய உற்பத்தியற்ற சமூகமே. எவ்வளவு காலம் இறக்குமதிசெய்யலாம்? ஏற்றுமதி செய்யும் நாடு தன்னிறைவு உற்பத்தியிலிருந்து தளர்வுறும் வரை. அதன் பின் ஏற்றுமதியும் இல்லை இறக்குமதியும் இல்லை.எந்த சமூகமும் உழுதுண்டு வாழ்வோரின் பின் தான்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.( குறள் 1033 )
உழவனின் பின்னே செல்ல வேண்டிய வாழ்வுதான் அர்த்தமானது.
திருக்குறள் பக்கம் 09
இன்றைய சமுதாயத்தில் ஒரு வித மனநோய் பரவலாக காணப்படுகின்றது. உலகில் உள்ள எல்லா மனிதர்களுமே சமமான படைப்புக்கள். யாரும் தங்கத்திலிருந்தோ வானத்தில் இருந்தோ அல்லது புத்தகங்களில் இருந்தோ பிறந்து வந்தது கிடையாது. உங்களுக்கு ஒரு இடத்தில் இருக்கின்ற உரிமை மற்றைய எல்லாருக்குமே இருக்கின்றது. இங்கு ஆண்டாள் அடிமை ஆட்சி நடக்கவில்லை. யாருமே யாருக்கும் பயந்தோ அடிபணிந்தோ செல்லத்தேவை இல்லை. உங்கள் எல்லாரின் உரிமைகளும் மீட்டு எடுக்கப்பட்டுவிட்டன. நாடுகளுக்கு இடையில் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாமை அல்லது போதாமல் இருக்கக்கூடும். அது அவரவர் வாழ்க்கைமுறை சம்பந்தமானது. நாட்டு பிரிவினையே இனப்பிரிவினையோ தனிமனித செயற்பாடுகளை பாதிக்கும் அளவு குறுகியது. ஆனால் ஒரே சமூகத்துக்குள் அதுவும் கற்றுஅறிந்த சமூகத்துக்குள் காணப்படுகின்ற பிரிவினைப்போக்கு மிக ஆபத்தானது. தனிமனித செயற்பாடுகளை முடக்கும் அளவு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. எங்கள் சமூகம் கல்வியியலாளர்களை பின்பற்றும் சமூகம். அவர்களின் முடிவுகளில் செயற்படுகளிலும் அளவுகடந்த நம்பிக்கையை உருவாக்கிக்கொண்ட சமூகம். அவர்களின் அனைத்து தேவைகளும் கல்வியியலாளர்களினூடு தான் நிறைவேற்படுகின்றது. சரியோ பிழையோ அவர்களையே நம்புகின்ற கட்டமைப்புக்குள் வந்துவிட்டோம். இந்த போக்கை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
மாறுதலாக மாறவேண்டியது வழிநடத்தும் சமூகமே.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (குறள் 997 )
அறமற்ற அறிவார்ந்தோர் அஃறிணைகள் தான்.
காகங்கள் – சிறுகதை
“பேர்? நம ?”
“சுனித்த கமகே”
“சுன்னித நா…… சுனித்த.. சுனித்த…”
“அய்யா சுன்னித்த இல்லே சுனித்த ”
நெற்றியிலிருந்து வியர்வைத்துளிகள் அவரின் இமைகளை நனைத்துக்கொண்டு இடக்கண்ணின் கூர்மையான ஓரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. கண்ணாடியினை கழற்றி எரிச்சலூட்டிய இடக்கண்ணை மெதுவாக தேய்த்துக்கொண்டார் அந்த எண்பது மதிக்கத்தக்க கிழவர். மீண்டும் குனிந்து டைப் ரைட்டர்ஐ கைகளால் அழுத்த தொடங்கினார்.
” கமகே கீயத? ”
பெரும் சிரிப்பொலி, வந்திருந்த இரண்டு ஆமிக்காரன்களும் ஒருவரையொருவர் பார்த்து எக்காளமிட்டு சிரித்து கொண்டனர்.
” கமகே பேர் என்ன சேர் ?”
” மாத்தற ”
“மத்தர நா அய்யே ” என்று சற்று கோபம்கலந்த மொழியுடன் இருந்த கதிரையை தள்ளிவிட்டு எழுந்து கொண்டான் அதிலொருவன். மற்றவன் அவனைப்போலவே செய்துகொண்டு இருவருமாய் முணுமுணுத்துக்கொண்டு அங்காலே இருந்த இளம் டைப் ரைட்டரிடம் விலகி சென்றார்கள்.
எண்பது மதிக்கத்தக்க அந்த வயதானவர் கையை ஒரு பொக்கெட்க்குள் வைத்து அதிலிருந்த சாயம் போயும் தெரிந்துவிடாத வெள்ளை லேஞ்சியை எடுத்து எல்லாமாக வியர்த்துப்போயிருந்த தலையை ஒரு சுற்று சுற்றினார். ஹிப்பியில் இருந்த வியர்வை அவரின் கொலரை ஈரமாக்கியிருந்தது. ஒருநாளில் எப்போதாவது ஒரு முறைதான் அவருக்கு வேலை வரும் . அதில் ஏற்படுத்திக்கொள்ளும் நூறு ரூபாயை பத்திரப்படுத்தி அவரின் அடையாளஅட்டை வைக்கும் பேசுக்குள் வைத்துகொள்ளவார். இன்று காலியாகத்தான் வீடு செல்லவேண்டும் என்ற மன கசப்புடன் பையுக்குள் இருந்த பைபிளை எடுத்து கடைசியாக வாசித்த அதிகாரத்தில் வைத்திருந்த புறா இறக்கையை அப்புறப்படுத்தி மனதுக்குள் வாசிக்க தொடங்கினார்.
” நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்து………” என்று மெல்லிய சப்தத்துடன் வாசித்துக்கொண்டிருக்கும் போது பலமில்லாத காற்று அவரின் மேசையை தாண்டி சென்றது. கூடவே அவர் வைத்திருந்த புறா இறக்கையையும் அடித்து சென்றது. காற்றில் மிதந்த இறகு மேற்தளத்தின் நடு வெளியினூடாக தரையில் விழுந்தது. அதை கவனித்தும் கவனிக்காமலும் வயதானவர்,
” கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.” என்று கொஞ்சம் விலகி வாசித்து முடித்தார். பின்னர் அவர் நெஞ்சில் கோத்திருந்த சிலுவையை ஒருமுறை தடவி விட்டு ஆமென் என்றார்.அப்பக்கத்தின் ஓரத்தை மடித்து அடையாளம் இட்டு கொண்டார்.
இன்னும் அந்த ஆமிக்காரர்கள் போய்விடாததை பார்த்து, தனக்கு சேரவேண்டிய பணம் கைமாறி செல்லுகின்றதே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார். கீழே குனிந்து அவரின் தோற்பையை எடுத்து மேசையில் வைத்தார், அதற்குள் டைப் ரைட்டரையும் பைபிளையும் ஓரிரண்டு பைல்களையும் எடுத்து திணித்தார். பின்னர் அந்த தோற்பையை முதுகில் அணிந்துகொண்டார். மதிய உணவு சுற்றிய கடதாசியையும் பொலிதீன் பாக்கையும் ஒருகையில் கசக்கி எடுத்துக்கொண்டு மறுகையால் ஜீன்சின் பின் பொக்கற்றை தடவி தன் பேர்ஸ் உள்ளதா என சரிபார்த்துக்கொண்டார். அதற்குள் காசு இல்லையே என்பது அவருக்கு வருத்தமாகவே இருந்தது. பின்னர் மேசைக்கு கீழே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து இருகைகளையும் நிரப்பி கொண்டார். வேகமாக படிக்கட்டுகளில் இருந்து இறங்கி சாலை ஓரத்தில் வழியே நடக்க தொடங்கினார். அவர் வயதுக்கு அந்த வேகம் அசாத்தியமானது.
அந்த இரண்டு ஆமிக்காரர்களும் தமக்குள்ள சிரித்துக்கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர்கள் இன்னும் சென்றிருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு வெறுக்கென்று திரும்பி படிகளுக்கு விரைந்தார். அதற்கு முன்னரே இருவரும் கீழே இறங்கி விட்டிருந்தனர். அவர்களின் முதுகுப்புறம் மட்டுமே வயோதிபருக்கு தெரிந்திருந்தது. உடனே அவர்களை நோக்கி நடக்க தொடங்கினார். அவர்கள் பஸ் ஸ்டாண்டின் நடுவாக சென்றுகொண்டிருந்தனர். திடீரென அந்த வயதானவர் நடையை நிறுத்திக்கொண்டார்.கையில் சுருட்டி வைத்திருந்த குப்பையை அங்கேயே போட்டுவிட்டு திரும்பி வந்த வழியேயே சாலை ஓரத்தை அடைந்து மிக மெதுவாக ஊர்ந்தார். வழியெல்லாம் அவரின் மனதை ஏதோ ஒன்று குடைந்துகொண்டே இருந்தது. காதில் செப்பை ஊற்றியது போல அவர்களின் சிரிப்பொலி ஒலித்துக்கொண்டே இருந்தது.
நிலத்தை நோக்கியபடி நடந்து கொண்டிருந்தவர் தனக்கு முன்னால் சாலை ஓரத்தில் ஒரு பூனைக்குட்டி முனகிக்கொண்டிருந்ததை அவதானித்தார். தன்னைப்போலவே அதன் நிலையும் என புரிந்துகொண்டவர் அதனருகே போய் தலை முடிகளை வருடிவிட்டார். இதன் போது தன் ஹிப்பியை யாரோ வருடுவது போல உணர்ச்சியுற்றார். அந்த பூனையின் கண்களில் குடிகொண்டிருந்த வறட்சி, அவரின் கீழ் உதட்டினை நடுங்க வைத்தது. தாடைகள் ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் ஆடிஅமர்ந்தன. அவர் தனது கையிலிருந்த தண்ணீர் போத்தலை வைத்துவிட்டு தோற்பையை கழட்டினார். அதன் வாய்ச்சுருக்கை அகற்றி அதிலிருந்த டைப் ரைட்டரை வெளியே எடுத்து நிலத்தில் வைத்தார். இருகைகளாலும் பூனைக்குட்டியை தூக்கி தன் தோற்பைக்குள் வைத்து விட்டு , டைப் ரைட்டரை குவிந்துபோயிருந்த சருகு குவியலுக்குள் மறைத்து வைத்தார். முதுகில் தோற்பையையும் கையில் தண்ணீர் போத்தலையும் கொண்டு எடுத்துக்கொண்டு வேகமா வீட்டு வாசலுக்கு விரைந்தார். வாசல் மதிலின் ஓரமாக நின்று மதிலின் மேலே போத்தலை வைத்து விட்டு தோற்பையை கழட்டி பூனைக்குட்டியை எடுத்து சுவருக்குள் நோகாமல் போட்டார்.
முன்னைய சந்தர்ப்பங்களை விட வேகமாய் தாய் அடிக்க துரத்தும் சிறுவனைப்போல டைப் ரைட்டர் ஒழித்துவைத்த இடத்தை நோக்கி ஓடினார். அங்கே சருகு குவியலும் இல்லை டைப் ரைட்டரும் இல்லை. கைகளை நிலத்தில் ஊன்றி அந்த ஓரத்திலிருந்த மரத்தின் தண்டில் முதுகை சாய்த்து எதிரே மின்கம்பத்தில் நின்ற காகங்களை பார்த்தவாறு சில தேவ வாக்கியங்களை உதிர்த்துக்கொண்டிருந்தார். மனதுக்குள் அந்த இரண்டு ஆமிக்காரங்களுள் ஒருவனின் பூட்சுக்குள் சிதைந்து போன புறா இறகும் தோற்பைக்குள் இறந்து கிடந்த பூனைக்குட்டியின் வறட்சியால் வெளிறிப்போன கண்களும் மாறி மாறி வந்துபோய்க்கொண்டிருந்தது. அந்த காகங்கள் மின்கம்பத்தை விட்டு பறக்க தொடங்கின.
எழுத்தாளின் அஞ்சலி
அசோகமித்திரனுக்கு அஞ்சக்கூட்டம் நேற்று ( 31.03.17 ) மைலாப்பூரில் கவிகோ மன்றில் நடந்தேறியது. எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்வதற்காக இருந்ததால் நிகழ்வு மீதான பார்வை எனக்கு இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் மனுஷின் முகப்புத்தக பதிவில் , ” இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் ‘’ driving experiences of a tamil writer எனற பொருளில் ஒரு இலக்கிய பேருரை ஆற்றுகிறேன். அது நிச்சயம் உங்கள் முதுகுத்தண்டை சில்லிடச் செய்வதாக இருக்கும் தவறாமல் கலந்து கொள்ளவும் ” என்றிருந்ததில் இருந்து சற்று ஆவலாகவே காத்திருந்தேன். மணி 11 க்கு யூடூப்பில் காணொளி பதிவிடப்படும் என அறிவிப்பு இருந்தது. இருந்தும் இன்று காலை தான் என்னால் பார்க்க முடிந்தது.
எழுத்தாளர் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாக அந்த உரை இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளனினதும் ஏதோ ஒரு கருத்தியலிலாவது அவருடன் உடன்பட்டு போகும் என்பது எனது எண்ணம். பொதுவாக எழுத்தாளர்களை இருட்டின் நடுவில் தீக்குச்சி அல்லது மெழுகுவர்த்தி என புகழ் பாடுவதுண்டு, – எழுத்தாளர்களே. ஆனால் நிதர்சனம் இதுவல்ல. கறையின் மீது விழுந்த பனித்துளிகள் அவர்கள்.
காணொளியை காண
https://www.youtube.com/watch?v=vSA42IO8owk&t=10s
திருக்குறள் பக்கம் 08
தங்கி வாழும் முறை தான் அனைத்து உயிரினங்களினதும் வாழ்க்கை முறையாக இருந்துகொண்டிருக்கிறது. நான் யாரையும் சாராதவன் என்று யாராவது சொன்னால் அது அவர்களின் மூடத்தனத்தின் உச்சம். உலகில் எந்த சக்தியும் தனிமையானது அல்ல. பௌதீக உலகின் சக்திகள் எல்லாமே சோடியாக்கப்பட்டவை. மனித சக்தியும் அவ்வாறே. படைக்கப்பட்டபோதே சோடியாக படைக்கப்பட்டதன் சூட்சுமம் மனிதன் தனிமையை எதிர்கொள்ளமாட்டான் என்பதுவே. பலர் தாங்கள் தனிமையில் உழல்வதாக கூறுகின்றார்கள். அவர்களது தனிமை என்ற சொல் ஒதுங்கி என்ற பொருள் கொள்கிறதே ஒழிய தனிமை என்ற நிஜப்பொருளில் வருவதில்லை.
சில விரிசல்கள் எங்கள் கண்களுக்கு புலப்படாது. ஊசியளவு விரிசல் தான் மெல்லியது , கூர்மையானது. எம்மால் அதை இலகுவாக விலத்திக்கொண்டு வந்துவிட முடியும்.ஆனால் அந்த குண்டூசியளவு விரிசல் எம்மை பின்தொடர்ந்துகொண்டே இருக்கும். தன்னை இன்னும் இன்னும் கூர்மையாக்கிக்கொண்டு. அவர்கள் முகமூடிஅணிந்து இருப்பார்கள். நிஜ முகத்திலேயே. நாம் அவர்களை அதிகமா சார்ந்திருப்போம். அவர்களின் செயல்கள் எல்லாமே நம்மை வலிமைப்படுத்துவதாகவே தெரியும். அவர்கள் வலைவிரித்துக்கொண்டிருப்பார்கள்.
நேற்று மாலை சிகை அலங்கரிக்கும் இடம்,- இனி சலூன் க்கு சென்றிருந்தேன். அங்கு எனக்கு நேரே தொலைக்காட்சியில் கவண் திரைப்பட விளம்பரம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சவரம் செய்துகொண்டிருந்த தொழிலாளி என்னிடம் கே வி ஆனந்த் படங்களில் பெரும்பாலும் கூட நாயகனுடன் கூட இருப்பவர்கள் தான் வில்லனாகிறார்கள் என்றார். நான் உடனே நிஜத்திலும் அது தானே என்று பேச்சை முடித்துக்கொண்டேன். ஏன் என்றால் என் உயிர் அவர் சவர கத்தி விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. இந்த உரையாடல் அப்போது பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் கழித்து இதை யோசித்து பார்த்தேன். நிஜமும் அது தானே.
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.( குறள் 882 )
பகைவன் முன் முதுகை காட்டியாவது உறவினர் முன் நெஞ்சை காட்டு, விழித்திரு.