கோமாளி கிங்ஸ் – அவதானங்களும் புரிதல்களும்

(01)
 
நேற்றிரவு கொட்டஹெனா சினிவேர்ல்ட் இல் – இரவு ஒன்பதரைக் காட்சியாகக்  கோமாளி கிங்சைப் பார்த்தேன். ஒன்பது மணிக்கே திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டேன். ஓரளவேனும் கூட்டமாக இருந்தால் தான் ஒன்பதரைக்குக் காட்சி, இல்லாவிட்டால் சற்று நேரமெடுக்கும் என்று பின்னேரமே காட்சிகள் குறித்து விசாரிக்கப் போனபோது அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். நான் நுழையும் போது ஐந்து பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். நான் ஆறாவது. வவுனியாவில் வசந்தி திரையரங்கில் நயன்தாராவின் மாயா திரைப்படத்தை மூன்று பேரோடு மட்டுமே இருந்து பார்த்தேன். படம் முடிந்த போது திரையரங்கில் நான்  தனித்து இருந்தேன். மற்றவர்கள் இடையிலேயே நழுவி விட்டிருந்தார்கள். அந்த வகையில் ஆறு பேர் என்பது ஓரளவு உவகையளித்தது. வழமை போல ஐந்நூறு ரூபா டிக்கெட்டினை எடுத்துக்கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்த போது மணி ஒன்பதே காலாகிவிட்டது. ஓரளவு முன் வரிசையில் சாவகாசமாக இருந்து ஆட்களின் வருகையை அவதானித்துக்கொண்டிருந்தேன். நேரத்தோடு ஆட்களின் வருகை அதிகரித்து அரங்கத்தின் அரைவாசியை நிறைக்க கோமாளி கிங்ஸ் திரையிடப்பட்டது. இதற்கிடையில் எனக்குப் பின்னாலிருந்த இளைஞர்கள் சிலர் அவர்களின் இன்னொரு நண்பனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ” அவன் இந்தியப் படங்களே பாக்கமாட்டான், இதுல இதுக்கு வரவா போறான் ” என்று அவர்களில் ஒருத்தன் சொன்னான். எம்மவர்கள் இடையே  திரைப்படம் என்றாலே இந்தியத் திரைப்படங்கள் தான் என்ற கருத்து இல்லாமற் போய்விட்டது. இன்று “படம் பார்த்துவிட்டீர்களா?” என்றால், “எது கோமாளி கிங்ஸா?” என்று பதிலளிப்பதைக் கேட்கின்ற போது  வெகுசன அடையாளம் ஒன்று இலங்கைத்  சினிமாக்கு ஏற்பட்டுவிட்டது என்பது  மகிழ்ச்சியாக இருந்தது.
 
கிட்டத்தட்ட நானும் அவர்கள் குறிப்பிட்ட நண்பனும் ஒரே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறோம். படங்களே பார்ப்பதில்லை என்பதல்ல. கோமாளி கிங்ஸ் வெளியாகிய இரவு, நண்பரொருவர் முகப்புத்தகத்தினூடு தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி விசாரித்தார். ” இப்போதெல்லாம் கார்ட்டூன் மட்டும் தான் பார்ப்பேன் ” என்று பதிலளித்தேன். அவர் சிரிப்பு எமோஜி ஒன்றை அனுப்பினார். ஆனால் உண்மையும் அதுதான். இப்போது கார்ட்டூன்கள் மற்றும் ஆவணப்படங்களையே அதிகமாகப் பார்க்கிறேன். பரவலாக பேசப்படுகின்ற தொடர்களையோ அல்லது உலக சினிமாக்களையோ(!) பார்ப்பது மிக அரிதாகிவிட்டது. கடைசியாகப் பார்த்தபடம் என்றால் The Death of Stalin. இதுவும் கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு சார்ந்த நகைச்சுவையான திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் Coco என்ற கார்ட்டூன் படம் பார்த்தேன். இப்படியெல்லாம் இருக்க , கோமாளி கிங்ஸை பார்த்தாக வேண்டும் என்று உறுதியோடிருந்தேன். காரணம் இலங்கையிலேயே  முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட தமிழ் வணிகத் திரைப்படம். இலங்கைத் தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயத்தைத் தொடக்கிவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பினை உருவாக்குவதன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. நம்மவர்களின் படைப்பு என்று மனதளவில் திரைப்படத்தைப் பற்றிய நெருக்கமான சிந்தனைகள் உருவாக்கி உலாவவிடப்பட்டது.  மீண்டும் பின்னாலிருந்த இளைஞர் ஒருவர், மற்றப்பக்க வரிசையில் இருந்தவரிடம் ” எப்படா உண்ட படம் வருது ” என்றார். அதற்கு சீக்கிரம் கொண்டுவந்துவிடுவோம் என்று பதிலளித்தார் மற்றவர். கோமாளி கிங்ஸின் வருகை சினிமா என்ற கனவோடு காத்திருக்கின்ற பல இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான திருப்பம். படைப்புகளை உருவாக்கிவிடுவதை எளிமையாக முடித்துவிடலாம் என்று நம்பக்கூடிய பலருக்கு, அதை வெளிப்படுத்துவதும் சந்தைப்படுத்துவதும் கடினமான ஒன்றாகவே இதுவரை இருந்தது. ஆனால் கோமாளி கிங்ஸ் இவற்றை உடைத்து சந்தைப்படுத்தல் வெளியை உருவாகியிருக்கிறது. இதற்காக படக்குழு அதிகமாக உழைக்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  முழுநீளத் தமிழ் திரைப்படம் ஒன்றை   மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது எளிதான விடயம் அல்ல. இனிவருகின்ற திரைப்படங்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகளவில் இருக்காது.
 
(02)
 
போரின் பின்னரான தமிழ்த் திரைப்படம் ஒன்றாகவே கோமாளி கிங்ஸை அணுகவேண்டிய தேவை எமக்குள்ளது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் போரின் குரல்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. போர் முடிந்துவிட்டது, இது மறுமலர்ச்சிக்காலம் என்றெல்லாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது. இன்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்கள், காணி மீட்ப்புப் போராட்டங்கள, அத்துமீறிய குடியிருப்புக்கள் என்று தமிழ்ப் பிரதேசங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை போரின் தொடர்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்திருந்தாலும் இன்னமும் நாங்கள் வேறொருவகையில் எமக்கான உரிமைகளுக்காக போராடிக்கொண்டிடருகிறோம். எம் பண்பாட்டுக் கூறுகள் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. எம் இனத்தின் மீது மௌனமாக பெரும் அரசியல் போரே நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து வருகின்ற ஒரு சினிமா என்ற அடிப்படையில் தான் கோமாளி கிங்ஸ் முதலாவதாக அடையாளப்படுத்தப்படும்.
 
கோமாளி கிங்ஸ் வெளிப்படுத்திய சமூகம் சார்ந்த பிரச்சனைகளாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரச்சனைகள் என்றே எதையும் குறிப்பிட முடியாது. ஒரு நகைசுவை திரைப்படமாக இருந்தாலும் உள்ளோட்டமாக நெருக்கடி ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நெருக்கடி தான் சுயம். நகைச்சுவைத் திரைப்படம் கடத்த வேண்டியது நகைச்சுவைகளை அல்ல, அதற்குள் ஊடுருவியிருக்கின்ற சமூகம் பற்றிய கருத்தினை¹.  இக்கருத்து கனமான செய்தி ஒன்றினை பார்வையாளருக்குக் கொடுக்கவேண்டும். சினிமா என்பதை எம்மிடையே ஒரு  பொழுதுபோக்கு அம்சமாக கருதுகின்ற சூழ்நிலையை நாம் இன்னும் அடைந்துவிடவில்லை. இன்னும் நிறைவேற்றப்படாதா எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. இன்னும் எங்கள் வரலாற்றையும் போராட்டத்தையும் சரியாக பதிவு செய்யவில்லை. இயங்கு நிலை சமூகம் ஒன்றின் அடிப்படை நோக்கமே வாழ்வியலை ஆவணப்படுத்துவது தான். போருக்குப் பிந்திய சமூகம் ஒன்றிற்கு இதைப் பற்றிய பார்வை இன்னும் இன்னும் விஸ்தாரமாக இருக்கவேண்டும். இன அழிப்பின் பின்னரான எதிர்ப்பு ஒன்றினையும் அவற்றைப் பற்றிய சரியான புரிதல்களையும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கியமும் சினிமாவும் ஊடகங்களும் அவற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கவேண்டும். கோமாளி கிங்ஸ் இவை எதையும் செய்ய மறந்துவிட்டது.
 
மாறாக, கோமாளி கிங்ஸ் உருவாக்கிய பிம்பங்கள் கடும் விமர்சனத்திற்குரியவை. இந்திய முழு வணிகத் திரைப்படங்களில் கூட ஏதோ ஒரு பிரச்சனையினை மையக் கருவாகக் கொண்டு நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால் கோமாளி கிங்ஸ், வெளிநாட்டிலிருந்து தன் தாய் நாட்டிற்கு வருபவன் – இயந்திர வாழ்க்கையை வெறுத்து நாட்டை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் – தாய் நாட்டிலேயே இருப்பதற்கு செய்கின்ற முயற்சிகள் தான் கதைக் கரு. வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்ததைக் கூட சாதாரணமாக வெளியேறியதாகவே வெளிக்காட்டுகின்றனர். அதற்காக எங்கும் போரைப் பிரதிபலிக்கவேண்டும், எப்போதும் போரையே பற்றிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று கூறவில்லை. இங்கு இனஅழிப்பு ஒன்று நடந்ததாக சிறு குறிப்புக்கூட திரைப்படத்தில் இல்லை. முழுக்க முழுக்க அழகிய இலங்கையை ஒளிப்பதிவு செய்கின்றார்கள். வடக்கு என்றால் நல்லுரையும் மன்னர் கருவாடையும் அடையாளப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் போரொன்றை முழுதாக மறந்துவிட்ட சமுதாயமாக எங்களை வெளிப்படுத்தியிருப்பதன் பின்னரான அரசியல் கேள்விகேட்கப்படவேண்டிய ஒன்று. உலகத்திற்கு எம்மைப் பற்றிய பிழையான விம்பம் கடத்தப்பட்டுவிட்டது.
 
(03)
திரைப்படத்தில் இரண்டு பகுதிகளாக கதை மாந்தர்களைப் பகுத்துள்ளார்கள். ஒன்று யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றவர்கள் மற்றையது கொழும்பில் பேசப்படுகின்ற கலப்புத் தமிழைப் பேசுகிறவர்கள். திரைப்படத்தின் படி யாழ்பாணத் தமிழைப் பேசுகின்றவர்களை நல்லவர்கள் போலவும், மற்றையவர்களை கெட்டவர்கள் அல்லது சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் போலவும்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சாதாரணமாக இதைக் கடந்துவிட முடியாது. இந்திய சினிமாவில் முஸ்லிம்களை எப்படி தீவிரவாதிகளாகவே மாற்றி வைத்திருக்கிறதோ இந்திய சினிமா அதே நிலையை இவர்களுக்கும் உருவாக்கிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களின் நடை, உடை, பாவனைகள், பேச்சு என்று  அனைத்தும் அநாகரீகமானதாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டும். முக்கியமாக அவர்களின் குழுவில் இருக்கின்ற பெண்ணின் பிரதிபலிப்புகள். கட்டையான உடைகளும் மற்றைய ஆண்கள் மீது இலகுவில் மையல் கொள்வது போல சித்தரிப்பதும், அந்தச் சமூகத்தின் எல்லாப் பெண்கள் பற்றிய விம்பமாகவே எடுத்துக்கொள்ளப்படப்போகிறது. ஆனால் அங்கு வந்திருக்கின்ற வெளிநாட்டுக் குடும்பம் பற்றியோ அல்லது கொழும்பிலேயே தங்கிருக்கின்ற யாழ்பாணக் குடும்பம் பற்றியோ எந்தக் குறையும் கூறிவிடாதபடி காட்டப்பட்டுள்ளது.  வயதான ஒருத்தர் தன் மனைவிக்கு பயந்து பயந்து மது அருந்துவதும் அதே மதுவினை மற்றைய  குழுவினர் பெண்களின் முன்னால் எந்தச் சலனமும் இன்றி குடிப்பதும் நகைப்புக்குரிய காட்சிகள் அல்ல.  வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்திலுகின்ற யுவதி ஒருத்தர் சிகரெட்டோ மதுவோ குடிப்பது கிடையாது என்றும் தான் மிகவும் சுத்தமானவள் என்றும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்ற காட்சிகள் மேலும் மேலும் பிரிவினைக்கான அத்திவாரத்தை ஏற்படுத்திக்கொண்ட நகர்கின்றது. இதனை இயக்குனர் தெரிந்து செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்று தெரியவில்லை.
 
இங்கு யாரையும் ஏற்றியோ தாழ்த்தியே பேசவில்லை, கோமாளி கிங்ஸின் வெளிப்பாடுகள் இவை.
 
இலங்கை தமிழ் சினிமா, ஈழத்து சினிமா என்ற இரண்டு சொற்பிரயோகங்கள் பற்றிய கேள்வி என்னுள் எழுகின்றது. இன்று இவற்றைப்பற்றிய தெளிவான புரிதல்களை எமக்குள் உருவாக்காது கடந்துபோய்விட்டால், இலங்கையில் சினிமா தனிச் சக்தியாக இயங்குகின்ற காலத்தில் எமக்கான அனைத்து அடையாளங்களையும் இழந்து விடுவோம்.
 
(04)
 
சினிமா பற்றிய கனவுகளோடு இருப்பவர்களும் திரைப்படக்குழு  மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் திரைப்படத்தைக் கொண்டாட காரணங்கள் நிறைய இருக்கின்றன. சினிமா பற்றிய கனவுகளோடு இருக்கின்ற இளைஞர்கள் கோமாளி கிங்ஸை கொண்டாடக் காரணம், அவர்களின் படைப்புகளும் இன்னொரு நாள் வெளிவரப்போகிறது என்பதாகவே இருக்கிறது. எனக்கு சினிமா ஒன்றினை தொழில்நுட்ப ரீதியில் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. முன்னரே கூறியது போல நான் கார்ட்டூன்களை ரசிப்பவன். ஆனால் ஒரு கலைவடிவம் ஒன்றின் சமூகப் பார்வை பற்றியும் அதன் பிரதிபலிப்புகள் பற்றியும் எனது பார்வைகளை முன்வைக்க முடியும். கோமாளி கிங்ஸ் ஒரு முன்னுதாரண சினிமா அல்ல. தவறான வழி ஒன்றிற்கு அத்திவாரம் தீட்டிவிட்டுப் போயிருக்கிறது. என் கவலைகள் அனைத்தும் இனி வரப்போகின்ற முழு நீளத் தமிழ் திரைப்படங்கள் பற்றியது தான்.
 
பின்குறிப்பு

  1. ஒரு கலைப் படைப்பாக இந்தத்  திரைப்படத்தை அணுகவேண்டிய கட்டாயத்தை இங்கு நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. முழுமையாக வெளிப்பாடுகள் பற்றிய அவதானங்கள் அடிப்படையிலேயே அணுகுகின்றேன்.

 
 
 
 
 

நன்பெரியல் குறிப்புகள் 01 – 08

01. முதல் நாளுக்கு முன்னைய நாட்கள்

சில கிழமைகளுக்கு முன்னர் காலியில் உள்ள ருமசலவிற்கு சென்றிருந்தேன். காடுகள் மலைகளின் நடுவே அமைந்த அழகிய கடற்கரை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் உப்புத்தண்ணீரில் ஊறினேன். அதிகளவான கூட்டம் இல்லாத கடற்கரை. அதே நாளில் தான் கொழும்பு உட்பட மேற்குப் பக்கம் தாழ் அமுக்கமும் கடும் மழையுமாக இருந்தது. இது எதுவுமே அறியாமல் பளிங்கு நீரின் மேல் நீந்தத் தெரியாமல் மிதந்துகொண்டிருந்தேன். அதற்கு அடுத்ததாக இந்த மாதம் 26 , 27களில் பலாங்கொடைக்கு அடுத்திருந்த நன்பெரியல் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். நன்பெரியல் செல்லுவதற்கான திட்டம் ருமசல போய்த் திரும்பும் வழியிலேயே முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனியான வாட்சப் குழுக்கள் திறந்து தீவிரமாக திட்டங்கள் தீட்டினார்கள். துரதிஷடவசமாக எனக்குச் சிங்களம் தெரியாததால் அவற்றில் பங்குபற்ற முடியவில்லை. கூடவே திட்டமும் விளங்கவில்லை. 25, 26 என்றிருந்தது பின்னர் 26, 27 ஆக மாற்றினார்கள் என்று அறியத்தந்தார்கள். பொருட்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு வீட்டிலிருந்து 25ஆம் திகதி இரவு கொழும்பு புறப்பட்டு அடுத்த நாட் காலை பெட்டா புகையிர நிலையத்தில் இறங்கி பின்னர் மஹரகம சென்று அங்கிருக்கும் சில நண்பர்களோடு நேராக பலாங்கொடை பயணிப்பதே திட்டம். வவுனியாவிலிருந்து பலாங்கொடைக்கு தனியாக பேரூந்து அல்லது புகையிரம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்த் தான் இப்படியான சுற்றுப் பாதை.
எப்போதும் போல இரவு பத்தே முக்காலுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்ற குளிரூட்டப்பட்ட பேரூந்தில் வவுனியாவில் நின்று ஏறுவதாக திட்டம். சாதாரண பேரூந்தில் அல்லது புகைவண்டியில் அதிக தூரம் பிரயாணம் செய்வது எனக்கு மிகவும் கஷ்டம். தினகரன் பேரூந்திற்கு முன்கூட்டியே தொலைபேசியில் அறிவித்துவிட்டு பத்தே முக்காலுக்காக காத்திருந்தேன். சரியாக நான் ஏறுகின்ற இடத்திற்கு பத்தே முக்காலுக்கு வந்துவிடும். நான் அவ்விடத்திற்கு பத்தரைக்குச் சென்றுவிடுவேன். பத்து இருபது போல பேரூந்து நடத்துனர் தொலைபேசியில் தாண்டிக்குளத்தைக் கடந்துவிட்டதாகச் சொன்னார். தாண்டிக்குளத்திற்கும் நான் ஏறுகின்ற இடத்திற்கும் இடையில் இரண்டு கிலோமீட்டர் தூரம். நெஞ்சு முழுக்க படபடக்கத் தொடங்கியது. எவ்வளவு வேகமாச் சென்றாலும் பிடித்துவிடமுடியாது. போய் விட்டது என்றால் சாதாரண பேரூந்திற் தான் போகவேண்டும். அவசர அவசரமாக விடைபெற்று மாமாவுடன் ஏறுகின்ற இடத்தை அடைத்தேன். அங்கே எப்போதும் போல சிலர் பேரூந்துகளுக்காக காத்திருந்தார்கள். அவற்றுள் எனது பாடசாலை நண்பனும் அம்மாவோடு நின்றான். பதபதைப்போடு இறங்கி அவனிடம் நலம் கூட விசாரிக்காமல் தினகரன் போய்விட்டதா என்றேன். இல்லை என்றான். நிம்மதியாக இருந்தது. ஒரு வேளை அவன் கவனிக்கத் தவறிய கணம் ஒன்றில் மின்னல் வேகத்தில் கடந்திருந்தால்? இருக்காது. அவனிடமோ அம்மாவிடமோ பேசச் சந்தர்ப்பதைத் தராமல் பேரூந்து வந்து சேர்ந்தது இரண்டு மூன்று நிமிடங்களில். பத்து முப்பத்தைந்து வரும். இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். குறிப்புகள் எடுக்கவும் சரியான ஒழுங்கில் நிகழ்வுகளைக் குறிக்கவும் குறிப்புப் புத்தகம் ஒன்றைக் காவிச்சென்றேன். ஆனால் எழுத ஒன்றும் கொண்டுபோகவில்லை. அங்கே கடைகளிலோ நண்பர்களிடமோ வாங்குவது கடினமான காரியம் இல்லை. இருந்தும் வாங்கவில்லை. அதனால் அங்கங்கே சிதறியும் உருக்குலைந்து குறிப்புகள் வரலாம்.
பேரூந்து ஓட்டுநர் வழமையானவர் இல்லை. ஒருவேளை ஓமந்தையை தாண்டிக்குளம் என்று நினைத்துச் சொல்லியிருப்பாரோ? ஓமந்தை தாண்டிக்குளத்திலிருந்து 11 கிலோமீட்டர் முன்னால் இருக்கின்றது. நான் பின்னால் இருந்த இருக்கை ஒன்றிற்ப் போய் இருந்து குளிர்ச்சட்டையையும் தலைக்குள்ளவையும் அணிந்தேன்.

 

02. மாற்றுத் திறனாளிகளும் நம்பிக்கைத் துரோகமும்

பேரூந்தின் கடைசி ஐந்து இருக்கைகளிலும் சாவகாசமாக நித்திரை கொண்டபடியே அடுத்தநாட் காலை மூன்று முப்பதிற்கு பெட்டா புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். கொழும்பு நகரிற்குள் பெரும்பாலும் பேருந்துகளில் சன நெரிசலாகவே இருக்கும். ஆனால் அதிகாலைப்பொழுதில் அப்படியில்லை. இரண்டு மூன்று முறை மொறட்டுவைக்கு அதிகாலையிற் போன அனுபவம். 138ற்க்காக காத்திருந்தேன். நினைத்ததை விட புகையிர நிலையத்தில் சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. என்னிலிருந்து சிறிய தூர இடைவெளியில் வாய்பேசாத காது கேட்காத ஐவர் சைகைகள் மூலம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் வித்தியாசமான முறையில் உடுத்தியும் தலைமுடியை நிறம் தீட்டியுமிருந்தார்கள். என்னருகில் அழகான இளம் பெண்ணொருவர் தனது பயணப் பையுடன் உறவினருக்காக காத்திருந்தார். அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் மூலம் அரை குறையாக விளங்கிக்கொண்டேன். ஐவரும் எனக்கருகில் வந்து மெதுவாக சைகைகள் மூலம் அருகில் நின்ற பெண்ணை வம்பிழுக்கத் தொடங்கினார்கள். அப்பெண்ணின் கண்களில் பயம் தெரிந்ததது. அதைவிட அதிகமாக எனக்குப் பயமாக இருந்தது. என்னைப் பார்த்து உதவுமாறு வேண்டுவதாக கண்கள் பேசின. என்னை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கினார். அதற்குள் காலி – கொழும்பு பேரூந்து வர ஐவரும் பாய்ந்து ஓடி ஏறினார்கள். அவர் குனிந்து பயணப்பையை நிமிர்த்திய போது தான் உணர்ந்தேன் – போகும் போது அந்தக் காவாலிகள் அவரின் பயணப்பையை எத்திவிட்டு ஏறியிருக்கிறார்கள். நான் மன்னிப்புக்கூற அவரை நோக்கித் திரும்பினேன். அவரின் கண்கள் பணித்திருந்தன.

முன் கண்ணாடியில் பனி படர்ந்திருக்க 138 வந்தது. 138 இன் உள்ளே ஏறவே பெரும் கூட்டம் பாய்ந்துஅடித்து வந்தது. அடப்பாவிகளா இத்தனை நேரம் எங்கிருந்தீர்கள் என்று நினைத்துக்கொண்டு நெருக்கி ஏறினேன். இடமே இல்லாமல் மிகவும் நெருக்கமாக நின்றோம். அதிகாலையில் எப்போதுமே சில இருக்கைகள் காலியாக இருக்கும் என்ற மனஎண்ணத்தை மாற்றிக்கொண்டேன். மஹராகமவிற்கு ஒரு பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு கூகிள் வரைபடத்தை திறந்தேன். வேலை செய்யவில்லை. முன்னர் மஹரகமவிற்குப் போன அனுபவமும் இல்லை. வீதியில் பெரிய வெளிச்சமும் இல்லை. கடைகளின் பெயர்ப்பலகைகளும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு நடுவில் சிங்களப் பாட்டுக்கள் வேறு. சிறிது நேரத்திற்கு ஒருமுறை வரைபடத்தை பார்த்தேன். ம்ஹும் – வேலை செய்வதாய்த் தெரியவில்லை. மஹரகம பஸ்டாண்ட் பகிண்ட என்று குரல் கேட்க கூட்டத்தைப் பிய்த்துக்கொண்டு இறங்கினேன். கூகுளை நம்பிக் கேட்டது இது முதன்முறை அல்ல.

03. கலையும் பிச்சைக்காரனின் காரும்

மஹரகமவிற்கு என்று தனியாக பேரூந்துத் தரிப்பிடம் கிடையாது. பெயரில் ” கம ” என்று இருப்பதனாலோ என்னவோ. இரண்டு வீதிகளுக்கு இடையில் ஓடை ஒன்றிற்குற் தான் பேரூந்துகள் நிறுத்தப்படும். இப்போது கூகிள் வரைபடம் வேலை செய்தது. வீதியோரங்கள் ஓடைகள் என்று எல்லா இடங்களிலும் சாலையோரக் கடைகள். குறிப்பாக உடுப்புகள் விற்கின்ற கடைகள் ஏராளமாக காணப்பட்டது. இறங்கி மஹரகமவிலிருந்து என்னோடு இணைந்து வருகின்ற நண்பனுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன். நேரம் நான்கு மணியிருக்கும். அவன் ஐந்து முப்பதளவில் வருவதாகக் கூறினான். ஒன்றரை மணித்தியாலம் மீதமிருந்தது. மீண்டும் இங்கே தான் வந்து சந்திக்க வேண்டும். மஹரகமவைச் சுற்றிப்பார்க்க நடக்கத் தொடங்கினேன். முக்கால்வாசிக்கு மேல்ப் பெண்கள் தான் நின்றார்கள். பலர் ஏற்கனவே மரமேசையில் உடுப்புகளை விரித்திருந்தார்கள். பெரும்பாலானவை உள்நாட்டில் தைக்கப்பட்டவை. ஆண்கள் உடைகள் பெண்கள் உடைகள் குழந்தைகளினுடையவை என்று எல்லாவகையான உடுப்புகளும் இருந்தன.நான்கு மணிக்கு முன்னரே வியாபாரத்தைத் தொடங்கியிருந்தார்கள். தலையைக் குள்ளாக்கள் கவ்வியிருந்தன. குளிர் அங்கி அணிந்திருந்தார்கள். அவர்கள் எவரின் முகத்திலும் சோம்பலையோ நித்திரைக் கலக்கத்தையோ காணவில்லை. பெரும்பாலும் அவர்களின் வியாபாரத்திற்கென நிரந்தர இடம் இருக்காது. முன்னால் வருகின்றவர்கள் இடங்களைப் பிடித்துக்கொள்வார்கள். சிலர் தமது வாகனங்களில் வந்து இடைவெளிகளில் உடுப்புகளை வேகமாக இறக்கி தமக்கான வியாபார இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மந்தமான வெளிச்சத்தில் மஹரகமவின் வியாபாரம் தொடங்கியது.
நான் நண்பனுக்காக காத்திருக்கவேண்டிய இடம் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால். கூகிள் வரைபடத்திற் தேடி நடக்க ஆரம்பித்தேன். வியாபாரம் நேரத்துடன் அதிகரித்தது. ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சன நடமாட்டம் அதிகமான இடமாக விரைவாக மாறியது. வரைபடத்தைத் தொடர்ந்து நடந்தேன். நான் கண்ட பல பெண்கள் தமது காரிலேயே உடுப்புகளைக் கொண்டுவந்து – எடுத்து – அடுக்கினார்கள். எனக்கு மனதிற்குள் மெலிதாக சில எண்ணங்கள் தோன்றின. அவர்கள் வசதியானவர்கள். உடைகளை விற்பதை வியாபாரமாக இல்லாமல் மனநிறைவாகப் பார்க்கின்றார்கள். தாமே தைத்து எடுத்துவந்த ஆடைகள் விலைப்படும் போது அவர்கள் சந்தோஷிக்கின்றார்கள். தமக்கான அங்கீகாரம் கிடைப்பதாக உணர்கிறார்கள். இவை எல்லாம் தான் குளிரின் மத்தியில் இந்த அதிகாலையில் அத்தனை செழிப்பாக அவர்களை வைத்திருக்கின்றது. அவர்கள் இதைக் கலையாக உணர்கிறார்கள்.
ஒருவழியாக தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால் வந்து நின்று பார்த்து திகைத்துப்போனேன். அவ்விடம் நான் முதலில் பேருந்திலிருந்து இறங்கிய இடத்தின் எதிர்ப்பக்கம். நிதானமாக யோசித்துப்பாருங்கள். இரண்டு பெரிய வீதிகள் இடையில் ஒரு வெற்றிடம். அது தான் மஹரகமவின் பெயரிடப்படாத பேரூந்து நிலையம். இறங்கியது ஒரு பக்கம் – இப்போது நிற்பது எதிர்ப்பக்கம். இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மேலே நேரம் மீதமாக இருக்கிறது. கடை ஒன்றிற்குள் நுழைந்து நெஸ்கோப்பி ஒன்றும் மீன் பணிஸ் ஒன்றும் சாப்பிட்டேன். மீண்டும் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு அருகில் நடந்துவந்து லொத்தர் சபை ஒன்றின் கூடாரத்திலிருந்த மரப் பலகையிலாலான இருப்பதற்கு ஏற்ற குற்றி ஒன்றிலிருந்தேன். அருகில் லொத்தர் போட்டியில் வெற்றி பெற்றால் கொடுப்பதற்காக கார் ஒன்று புதிதாக நிற்பாட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் யாருமில்லை. குற்றியிலிருந்தபடி வியாபாரம் நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன்.
சிறிது நேரத்தில் வயது போன ஒருத்தர் என்னை நோக்கி நடந்துவந்தார். பார்க்க மிகவும் ஏழையாகத் தெரிந்தார். கந்தலான உடுப்பே அணிந்திருந்தார். என்னைச் சுற்றி வந்து அங்கு நின்ற காரின் பின் கதவைத் திறந்து கையில் பற்தூரிகையுடன் வெளியே வந்தார்.

04. வித்தியாசம்

நான் திகைத்துப்போய் ஸ்தம்பிதம் ஆனேன். அது ஒரு டொயாட்டோ கார். சுற்றி விளம்பரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த வயதானவர் பல்லை மினுக்கி முகமும் கழுவிக்கொண்டு துவாயையும் காருக்குள் இருந்தே எடுத்துத் துடைத்தார். அவர் தனது அறையைப்போல காரினைப் பயன்படுத்தினார். நான் பெரும் குழப்பமடைந்தேன். மிகவும் கேவலமான உடை – டொயாட்டோ கார் – பெரும் முரண் ஒன்று. என்னிடம் சிங்களத்தில் ஏதோ சொன்னார். அவரின் சிங்களத்தில் நான் அறிந்த சிங்களம் எதுவும் இன்மையால் ஒன்றுமே புரியவில்லை. நான் சிரித்தபடியே பதிலளித்தேன். இருந்தும் குழப்பம் தீரவே இல்லை. சாத்தியமற்ற நிகழ்வு. இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது, மஞ்சள் கோட்டில் வயதானவர் ஒருத்தர் கால்களை அரக்கி அரக்கி வீதியைக் கடந்தார். அவரால் சிறிது நேரம் வாகனக் குளறுபடி ஏற்பட்டது. எனக்குப் பின்னால் நின்ற அதிசயமான மனிதர் – அந்த வயதானவரைப் பற்றி என்னிடம் நக்கலாகச் சிரித்துக்கொண்டு ஏதோ சொன்னார். அது பெரும்பாலும் அந்த வயோதிபரின் நடையைப் பற்றியதாகவே இருக்கும். அவருக்கு நடை வித்தியாசமாக இருந்திருக்கலாம் – எனக்கு நீங்களே வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று சொல்ல மொழி தெரியவில்லை.

இப்படித்தான் லொத்தரிலும் குலுக்கல்களிலும் பரிசாக விழுகின்ற பொருட்கள் இருக்குமா? புதிதானது என்ற பெயரில் தரப்படுகின்ற பரிசில்கள் – இப்படி ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்தப்பட்டவையாக இருந்தால்.
நான் குற்றியில் இருக்க நண்பன் வந்து சேர்ந்தான். தனித்திருந்த பொழுதுகள் நிறைவுற்றன. மெலிதாக வானம் வெளிக்கத்தொடங்கியது. இருட்டிற்குள் தனியாக அலைந்து திரிந்தது ஒன்றை உணர்த்திச் சென்றது. நான் நினைப்பது போல மனிதர்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் இல்லை.

 

05. இரண்டு சுவரொட்டிகள்

என்னோடு சேர்த்து ஆறு பேர் மஹரகமவிலிருந்து பதுளை புறப்படுகின்ற பேரூந்தில் ஏறினோம். பதுளைக்குச் செல்லுகின்ற வழியிற் தான் பலாங்கொடை. பலாங்கொடையிலிருந்து அடுத்த இடம் நான்பெரியல். சரியாக பலாங்கொடையை அடைய மூன்று அரை மணித்தியாலங்கள் எடுக்கும். தொங்கல் இருக்கைகளில் யன்னற் பக்கமாக அமர்ந்துகொண்டேன். இது குளிரூட்டப்பட்ட பேரூந்து அல்ல என்பதால் மனம் மெதுவாக சஞ்சலப்பட்டது. பயணம் தொடங்கியது. நேரம் ஆறு மணியிருக்கலாம். குளிர்ந்த காற்றின் மெல்லிய வருடலோடு அயர்ந்து தூங்கினேன். இதனைத் தூக்கம் என்று சொல்வது மிகச் சரியாக இருக்காது. குறுகிய நேரத்திற்கு ஒரு முறை ஏற்படுகின்ற பெரிய குழுக்களில் விழித்துக்கொள்வேன். பயணத்தின் போது வெளிச்சம் பரவியதே ஒழிய சூரியனைக் காணவில்லை. சாப்பிட ரத்னபுரியில் இறங்கினோம். மற்றபடி தொடர் குலுக்கல்களும் நித்திரையும் தான். கண்விழித்துப்பார்க்கின்ற இடங்களில் எல்லாம் இரண்டு விடயங்களைத் தவறாமல் கண்டேன். ஒன்று தேர்தல் சுவரொட்டிகள். மற்றையது பிரத்தியோக வகுப்பின் சுவரொட்டிகள். இரண்டு வகையான சுவரொட்டிகளும் ஒரே பாணியில் இருந்தன. அரசியல்வாதி யார் ஆசிரியர் யார் என்பதே தெரியவில்லை. பெருமபாலான சுவரொட்டிகளில் இருக்கின்ற சின்னங்களை வைத்தே பிரித்தறிந்துகொண்டேன். அதிலும் சில சின்னங்கள் அலங்காரப்பொருட்கள் மாதிரித் தெரிந்தன. ஆசிரியர் காதுகளில் கேட்பொறியும் மாக்கர்களுமாக நின்றார்கள். வர்த்தகப்பொருள்களின் விளம்பரங்கள் கூடக் கண்களுக்கு அகப்படமுடியாத அளவு வகுப்புகளுக்கான விளம்பரங்கள் யுத்தியாக ஒட்டப்பட்டிருந்தன. இந்தக் கலாசாரம் வவுனியாவில் இல்லை என்பது ஓரளவு சந்தோசம். அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் கூட ஆசிரியர்களின் அளவு நுட்பமாக எடுக்கப்படவில்லை. பலாங்கொடை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அண்மையில் இறங்கி பலாங்கொடையில் வசிக்கின்ற நண்பன் வீட்டிற்கு செல்ல தயாரானோம். நண்பனின் வருகைக்காக ஒரு கார் திருத்தும் கடை அருகில் இறக்கப்பட்டிருந்த ஷெட் ஒன்றின் கீழ் நின்றோம். அங்கிருந்த கார்கள் முதலிற் பார்த்த டொயாட்டோ காரையும் பல்லுவிளக்கிய அதிசய மனிதனையும் மீண்டும் ஞாபகப்படுத்தின.
 

06. பத்

சிறிது நேரத்திற்குள் நண்பன் காரில் வந்து சேர்ந்தான். எல்லோருக்கும் இடம் போதாமையால் முச்சக்கர வண்டி ஒன்றையும் பிடித்துக்கொண்டோம். பதுளை செல்லுகின்ற வீதியில் கிளை வீதியாக அல்லது தெருவாக குத்தன எழுந்து போகின்ற தெருவின் கடைசி வீடு அவனது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணிநேர பிரயாண அலுப்பு. தலை கழுத்து கை கால் என்று உடெல்லாம் தூக்கிப்போட்டது. அவனது வீட்டிலேயே குளித்துவிட்டு காலை உணவை எடுத்தோம். சிறிய நேர இடைவெளிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேரவேண்டியவர்களும் வந்து சேர்ந்தார்கள். எல்லோருமாக காலை உணவை எடுத்தோம். எமது வீடுகளில் காலை உணவாக பிட்டோ இடியாப்பமோ தோசையோ ரொட்டியோ அல்லது பாணோ சமைப்பார்கள். ஆனால் முழுப்பிராயணத்திலும் ஆறுவேளை சாப்பிட்டேன். ஆறு வேலையும் ” பத் ” தான். அவர்களுக்கு சோறு பிசா போலத் தெரிகிறது. வீட்டில் ஒரு வேலை சோறு சாப்பிடுவதே பெரிய விடயம். ஆறுவேளை தொடர்ந்து சோறு என்றால். சிங்களவர்கள் பழக்கப்பட்டிருந்தார்கள். இரண்டாவது நாளின் இரவுச்சாப்பாட்டை வெளியில் எடுக்கவேண்டியதாகப் போயிற்று. இரண்டு பேர் சாப்பாடு எடுத்துவருகிறோம் என்று வெளிக்கிட்டார்கள். நானும் இப்போதாவது பாராட்ட, கொத்து என்று ஏதாவது கொண்டுவருவார்கள் என்று பார்த்தால் அப்போதும் பத் தான். ஆனால் ஒன்று ஒவ்வொரு வேளை பத்துடனும் கோழிக்கறியும் கருவாடும் நன்றாக சமைத்துத் தந்தார்கள். இரண்டாம் நாள் காலை மலை ஏறுவதற்காக காலை மற்றும் மதிய உணவுகளைக் காவிக்கொண்டு போகவேண்டும். மலையில் ஏறும்போது எமது உடலைக் காவுதலே பெரும்பாடு இதில் இரண்டு வேளை சாப்பாட்டையும் காவுதல் மெத்தக் கஷ்டமான விஷயம். எப்படியும் மதியம் சோறு தான். காலைக்கு இடியாப்பமோ பணிசோ பாரமற்ற சாப்பாட்டை எடுத்து சென்றிருக்கலாம். ம்ஹிம் – அப்போதும் பத் தான். சரி சாப்பாட்டைப் பற்றிச் சொல்லியதால் இன்னமும் தொடர்வோம்.

முதல் நாள் மதியமும் இரவும் மட்டும் தான் தங்கியிருந்த இடத்தில் சாப்பிட்டோம். நாம் தங்கியிருந்த இடம் பலாங்கொடையிலிருந்து சற்றுத் தூரத்திலிருக்கிறது. பதுளை வீதி தான். அதிலிருந்து பிரிகின்ற வீதி ஒன்றினூடாக ஒரு கிமீ பயணம் செய்தால் நன்பெரிய விடுதி வரும். நன்பெரிய விடுதி முழுக்க முழுக்க ஆமியால் நடத்தப்படுகிறது. அங்கே ஐந்து கொட்டகைகள் இறக்கப்பட்டிருந்தன. அதில் முதல் மூன்றும் எங்களுக்கு. கொட்டகைக்கு அருகில் இரண்டுமாடிக் கட்டடம். மேலே சாப்பிட்டு இடம் – கீழே குளியறைகள். இந்த சாப்பிடும் இடத்தில் தான் முதல் நாள் மதியமும் இரவும் மட்டும் சாப்பிட்டோம். அதை விட தேநீர் தந்தார்கள். அந்த கட்டடம் மலையின் இடையில் இருக்கின்ற சமவெளியில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து விழுந்தால் பரலோகம். அடுத்த நாட் காலை உணவை கடல் மட்டத்திற்க்கு மேலே 5000 அடியில் இருக்கின்ற பேக்கர்ஸ் வளைவிலிருந்து சாப்பிட்டோம். அப்போது சுற்றி எதுவுமே தெரியவில்லை. முழுக்க பனிமூட்டம். அந்த நாள் மதிய உணவை பங்களா என்று அழைக்கப்படுகின்ற கட்டடத்திற்கு கீழ் இருக்கின்ற ஒரு தமிழரின் வீட்டில் வைத்து சாப்பிட்டோம். பேக்கர்ஸ் வளைவு பற்றியும் பங்களா தமிழ் குடும்பங்கள் பற்றியும் பின்னர் எழுதுகிறேன். மதிய சாப்பட்டைச் சாப்பிட்டு விட்டு குப்பைத்தொட்டியை தேடினோம். அப்போது அந்த வீட்டு அம்மா குப்பைகளை எரிக்கவேண்டும் என்றும் கீழே எடுத்துச் செல்வதில்லை என்றும் கூறினார். அந்த நாளின் இரவு உணவை பலாங்கொடை நண்பனின் வீட்டில் சாப்பிட்டோம். சாப்பாடு என்றாலே பத் தான்.

 
07.குளிர் காற்று
நாங்கள் தங்கியிருக்கப் போகின்ற கொட்டகைகள் வீதியிலிருந்து உள் நோக்கி 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தன. எங்கள் வருகைக்கு முன்னரே கொட்டகைகள் எல்லாம் அடித்து தயாராக வைத்திருந்தார்கள். எல்லோரும் ஆமி. அவர்களே எல்லா வேலைகளையும் செய்தார்கள். எங்களை மாத்தையா என்றே அழைத்தார்கள். நாங்கள் தங்கியிருக்கும் கொட்டைகைகளுக்கு மற்றப் பக்கம் ஒரு பெரிய மரத்தடியினை குத்தி வைத்து அதைச்சுற்றி சிறிய மரக்கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தார்கள். எங்களை அன்புடன் வரவேற்றார்கள். நாங்கள் எங்கள் உடைமைகளை கொட்டகைக்குள் வைத்துவிட்டு குளிப்பதற்காக மாற்று உடுப்புகளுடனும் கரப்பந்துடனும் நடக்கத்தொடங்கினோம். அப்போது நேரம் இரண்டு அல்லது மூன்று மணியிருக்கும். குளிப்பதற்காக ஆறிற்கு செல்லவேண்டும். ஆறு நாமிருக்கின்ற இடத்திலிருந்து 500மீட்டர் மேல்நோக்கியிருக்கிறது. நாங்கள் கதைத்துக்கொண்டே நடந்தோம். வீதியின் கரைகளில் நின்ற மரங்களுக்கு சிங்களத்தால் பெயர்பலகையிட்டிருந்தார்கள். அவற்றை உச்சரித்தபடியே நடந்தேன். எங்களைக்கடந்து வாகனங்கள் போகவும் வரவும் பார்த்தோம். எதிரே வீதி இரண்டாகப் பிரிந்தது. நாங்கள் ஒடுங்கிய பாதையை தெரிவு செய்து வாகனங்கள் தரிப்பிடத்தைத் தாண்டி நடக்க கரப்பந்தாட்ட மைதானம் தெரிந்தது.

அருகில் நின்ற மரம் ஒன்றின் கீழே மாற்றுடுப்புகளை வைத்துவிட்டு பந்தை எத்தினோம். நான் முன்னரெல்லாம் விளையாடும் போது சில பிரச்சனைகள் தானாக வந்துவிடும். அவற்றை ஒன்று அணியினைப் பிரிப்பது. ஆனால் நாங்கள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் இரண்டாகப் பிரிந்தோம். பந்து வலையின் மேலாக மிதக்கத்தொடங்கியது. நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. இந்த வருட பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டியில் கரப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற அணி நாங்கள். சூரியனின் அனைத்து உஷ்ணமும் எங்கள் உடலுக்குள் சேர விளையாட்டு உக்கிரமானது. சிங்களத்தில் கர்ச்சித்தபடி பந்தை அடிக்கத்தொடங்கினோம். தலை முழுக்க வியரத்து கண்கள் எரியத்தொடங்கின. மேற்சட்டை வியர்வையில் தோய்ந்தது. மூன்று செட் விளையாடினோம். பின்னர் உடுப்புகளை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினோம். 100 மீட்டர் தூரத்தில் பெரிய பாறை ஒன்றைக் குடைந்து வழியை உருவாக்கியிருந்தார். உடலை மெல்லிய குளிர் காற்று அடித்துப்போட்டது. சுவாசக்காற்றில் ஈரம் தெரிந்தது. தண்ணீரின் சலசலப்பு கேட்டது. நாங்கள் ஆற்றின் ஒரு கரையை அடைந்திருந்தோம்.
08.குளிர்
ஏற்கனவே இருபது பேர் அளவில் அங்கங்கே குளித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பாறையின் வழி கீழே இறங்கி ஆற்றின் மற்றப் பக்கத்தை அடைந்தோம். ஆற்றின் வழியெங்கும் பாறைகள் தென்பட்டன. இரண்டு அல்லது மூன்று கற்களின் இடுக்குகளினூடாக தூய்மையான தண்ணீர் பீச்சிக்கொண்டு பாய்ந்தது. உள்ளங்கால் நீரில் பட உடெல்லாம் சிலிர்த்தது. ஆற்றுப் படுக்கையினூடாக சிதறியிருந்த குறுகிய பெரிய பாறைகளைக் கடந்து 100 மீட்டர் அளவில் நடந்தும் அரக்கியும் ஊர்ந்து சென்று குளிப்பதற்கான சரியான இடத்தைக் கண்டு பிடித்தோம். அதில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையினூடாக தூய்மையான நீர் வேகமாகப் பாய்ந்து வந்தது. பின்னர் ஒரு சமதரையான இடம். நான் முதலில் வேகமாகப் பாய்ந்து வருகின்ற நீரில் முதுகை ஒத்தியவாறு அமர்ந்து ஆற்றின் முழுகுளிரையும் என்னுள்ளே இழுத்தேன். தண்ணீர்த் துளிகள் முதுகில் பட்டு கழுத்தின் இருபுறமாகவும் பாய்ந்தது. ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள். எங்களுக்கென நிரந்தமான இடம் என்று ஏதும் இல்லாமல் அங்கும் இங்கும் நகர்ந்து குளிரினை வாங்கிக்கொண்டோம். மற்றவர்களுக்கு சலிக்காமல் குளிரினைக்கொடுத்தோம். தண்ணீரினை ஏத்தி ஏத்தி விளையாடினோம். பளிங்கு போன்ற தண்ணீரின் நிறம் எப்போதும் மாறவில்லை.

பாறைகளுக்கு மேலேறி நின்று குளிர்ந்த காற்றில் உடம்பில் ஒட்டியிருந்த நீர்த் திவலைகளைக் காயவைத்தோம். அப்படியான ஒரு கணத்தில் திசை தெரியாத பக்கத்திலிருந்து குளிர்த்தண்ணீர் வந்து நனைக்க மீண்டும் ஆற்றுக்குள் இறங்குவோம். இதை ஒன்றிரண்டு அல்ல பல முறை செய்தோம். விரும்பிய கோணங்களில் நின்று நீரோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் தண்ணீர் என்பதும் நீரோட்டம் என்பதும் காற்றைப்போல ஒன்றாகப் பழகிப்போனது. நேரத்தோடு ஆற்றின் ஓட்டமும் அதிகரித்தது. கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் நீரில் ஊறியிருக்க இருட்டத் தொடங்கியது. நீரின் வேகமும் அதிகரித்ததால் மேலும் நிற்காமல் மீண்டும் பழைய இடங்களிற்குச் சென்று உடைகளை மாற்றினோம். எல்லாம் சரியாகி வெளிக்கிடும் தருணம் கனத்த மழை பெய்யத்தொடங்கியது. கைகளில் யாரிடமும் குடைகள் இல்லை. எங்களை விட குளிக்கவந்த மாற்றிய எல்லோரும் பாறையின் கீழே வந்து ஒதுங்கிக்கொண்டார்கள். அப்போது ஐம்பது பேர்மட்டில் அதிகரித்திருந்தார்கள். சிலர் வேகமாக உடலை உலர்த்திக்கொண்டு குடைகளை கைகளில் ஏந்திக்கொண்டு நடந்தார்கள். நாங்கள் பொறுத்திருந்தோம். அரைமணிநேரம் பொருத்தலின் பின்னரும் விடாத மழையை வைதுவிட்டு கொட்டகைக்கு துவாய்களை தலையில் போட்டுக்கொண்டு ஓடினோம். அங்கே சுடச் சுட பால்த் தேநீர் காத்திருந்தது.
ஆ அந்த கொட்டகைகள் தாயாராகியிருந்த இடத்தின் பெயர் “கெமுனு வாச்”.

This slideshow requires JavaScript.

நிறம் தீட்டுவோம் – ஆவணப்படம்.

பொதுவாகவே நான் சினிமா பார்ப்பது  குறைவு. முக்கியமான படைப்புகளையும் பரிந்துரைகளையும் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வேன். இருந்தும் சமீபகாலமாக சினிமாவின் முக்கிய பிரிவான ஆவணப்படங்களை விரும்பிப்பார்க்கிறேன். எழுத்திலக்கியத்தில் கட்டுரைகளுக்கு அதாவது non- fictionsக்கு இருக்கின்ற அதேயளவு கணத்தினை இந்த ஆவணப்படங்களில் காண்கிறேன். அதே போல நாவல் ஒன்றினை வாசித்துமுடித்த திருப்தியினையும் பெறுகின்றேன். எனக்கு சினிமா மீதிருந்த அவநம்பிக்கையை ஆவணப்படங்கள் இல்லாமல்செய்துகொண்டிருக்கின்றன.
வவுனியாவில் முதன் முதலில் ஆவணப்படம் ஒன்றை மோகனரங்கன் அண்ணாவின் மூலம் பார்த்தேன். அவர் இயக்கிய போர்க்கால சூழலில் தமது அங்கங்களை இழந்தவர்கள் பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் என்று நான் கேள்விப்படுவது விபீசன் அண்ணாவினுடையது. சமீபத்தில் அதற்கான ஒரு படத்தினையும்(poster) வெளியிட்டிருந்தார். ஆவணப்படம் ஒன்றினை இயக்கி வருகிறார் என்பதை முதலே அறிந்திருந்தாலும் எதைப்பற்றியது என்ற எந்த பிரக்ஞையும் இருக்கவில்லை. இப்போது தான் அறிந்தேன். நிறம் தீட்டுவோம் என்று அழகிய எழுத்துருவுடன் ஒரு பாடசாலைப்பையன் கண்ணாடியுடன் கைகாட்டி சிரித்துக்கொண்டிருக்குமாறு படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மோகனரங்கன் அண்ணாவின் ஆவணப்படத்தையும் விபிசன் அண்ணாவின் குறும்பட வெளியீட்டில்தான் திரையிட்டார்கள்.
“பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின் இன்றையநிலைப்பாட்டை தேவைகளை அவை நிவர்த்தியாக்கப்படும் விதத்தை அறிந்து கொள்ளல் .. அவர்களைப்பற்றிய சமூகத்தின் உணர்திறனை ஆய்வு செய்தல்..” – என்று தனது முகப்புத்தகத்தில் ஆவணப்படத்திற்கான அறிமுகத்தை செய்திருக்கிறார்.
 
திகதி சரியாக ஞாபகம் இல்லை, இது வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம். தமிழ் மாமன்றத்தின் விவாதப்பயிலரங்குகளில் ஒன்றிற்காக முதல் நாளே எல்லா ஆயத்தங்களையும் செய்துவிட்டு மூன்று பாடசாலைகளின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். எப்போதும் போல நேரம் பிந்திச்செல்ல – நான் பாடசாலையின் முன் வாசலில் நின்று நிலவரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் வரவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிகழ்வு நடக்கின்ற பாடசாலையைத் தவிர வேறு பாடசாலை எதுவும் வரவில்லை. இருந்தும் ஒரு நம்பிக்கையோடு வாசலில் நின்றேன். அப்போது தான் கலைச்செல்வனை முதன்முதலில் பார்த்தேன். ஒருத்தரின் உதவியோடு வாசலின் அருகில் வந்து நிகழ்வுகள் நடப்பதைப்பற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு பார்வைப்புலன் இல்லை அறிந்துகொண்டு என்னோடு நின்ற நண்பன் ஒருவனின் உதவியோடு நிகழ்வு நடக்கின்ற இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.
மாணவர்கள் பயிலரங்கிற்கு புதிது என்பதால் மௌனமாகவே இருந்தார்கள். ஆனால் ஒருத்தர் மட்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். புதிய அவையை எதிர் நோக்குவதையிட்டு பயம் எதுவும் இல்லாமல் தனது கருத்துக்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட இருந்தார் – கலைச்செல்வன். உண்மையில் மாணவர்களிடையே மிகவும் துடிதுடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார். அவர் மூலமாக ஒரு ஆவணப்படம் உருவாகியிருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
விபீசன் அண்ணாவிற்கு படக்குழுமத்திற்கும் வாழ்த்துக்கள்!

ஸீரோ டிகிரியும் மறாவும்.

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியில் ஆறாவது அத்தியாயத்தியாயத்தில் இரண்டு கதைகளை ஒன்று விட்டு ஒன்றாக வசனங்களை மாற்றி மாற்றி எழுதியிருப்பார். ஸீரோ டிகிரி வாசித்து மாதக்கணக்கு ஆனாலும் மீண்டும் இதை நினைவுபடுத்த வேண்டிய தேவையை உணர்கிறேன். ஒரு நடிகையைப்பற்றியும் தீவிரவாதி ஒருத்தர் தனது சகாவால் கொள்ளப்பட்டது பற்றியும் – குறுகிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.நாவல் முழுவதும் பின்நவீனத்துவத்தின் கூறுகள் பரந்து காணப்படும். சிதறிய போக்கு, மையமின்மை, முடிவின்மை என்று வேறு வேறு பல உத்திகளை கையாண்டிருப்பர் சாரு நிவேதிதா. ஆறாவது அத்தியாயம் முதலாம் வாசிப்பில் சிக்கலானது. இரண்டு வேறு வேறு நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து குழப்பி எழுதப்பட்டிருக்கும். வாசகர் இதனை சிறிது வாசித்துக்கொண்டுபோகக் கண்டுபிடித்துவிடுவார். அத்தியாயம் இடையிலே இரண்டு நிகழ்வுகளும் கலக்கும் புள்ளி தென்பட, அத்தியாயம் இவ்விரு நிகழ்வுகளுக்குமான சம்பந்தப்படுத்தலை உறுதி செய்து நிறைவுறும்.
charuu-blog
இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாயம் ஆறை மட்டும் நினைவுபடுத்தவேண்டிய தேவை – எனது நண்பர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மறா குறும்படத்தினால் ஏற்பட்டது. முன்னைய குறிப்பு ஒன்றில் அதன் கருவின் முக்கியத்துவம் மற்றும் கருவின் வெளிப்பாடு பற்றி எழுதியிருந்தேன். அப்போது குறும்படம் தொடர்பான வாதங்கள் ஏற்பட வேண்டும் என்றும், அது பற்றிய உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்று அழுத்தமாக கூறினேன். அதன் பின்னரும் இன்று வரை உரையாடல்கள் பொது வெளியில் நிகழ்த்தப்படவில்லை. ஈழத்து சினிமா என்பதை இப்பொழுது அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் நாம், இவ்வாறான முயற்சிகளைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்துவது ஆரோக்கியமானதாக இருக்கும். இன்று முகப்புத்தகங்களில் சினிமா பற்றி காரசாரமாக விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை இமாலயமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சரி பிழை என்பதற்கு அப்பால் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுகின்ற தன்மை ஆரோக்கியமானது. ஆனால் இப்படியானவர்கள் பார்வை சுதேச புது முயற்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே எனது ஆதங்கம்.
 
மறாவின் முடிவில் Impulse என்று எனக்கும் பங்கொன்றினை அளித்திருந்தார்கள். Impulse என்பதை உந்துவிசை என்ற அர்த்தத்தில் பாவித்திருந்தார்கள். எனது முதலாவது குறுங்கதையின் அடியில் இந்த சொல்லை பாவித்திருந்தேன், அதுவும் இதே சக நண்பர்களால் தொடங்கப்பட்ட பொய்யர் என்ற முகப்புத்தக பக்கத்திற்கு எழுதப்பட்டது. அதிலிருந்து அந்த வார்த்தையை எடுத்து என்னோடு சேர்த்திருக்கலாம்.
22365461_2514478085342262_7088084095692592887_n
ஸீரோ டிகிரியின் ஆறாம் அத்தியாயமும் மறாவும் – ஓரளவு ஒரே வகையான கதை நகர்த்தல் உத்தியை கையாளுகின்றன. ஒன்றோடு ஒன்று சம்பந்தமுள்ள நிகழ்வுகளை ஒழுங்கின்றி காட்சிப்படுத்தலின்மூலம் இரண்டுமே கதையை நகர்த்துகின்றன. இதை non linear வகை கதை நகர்த்தல் என்கிறார்கள். நாவல் ஒன்றின் ஒரு பகுதியை எழுத்துருக்களின் மூலம் non linear ஆக வடிவமைப்பு செய்து – வெளிப்படுத்துவது பெரியளவு வாசக மனநிலையை சமநிலையிழக்கச் செய்யாது. நாவல் ஒன்றில் முழு கதை சொல்லலுக்குள் ஒரு குறுகிய பகுதியாக வருகின்ற அத்தியாயம் ஏற்படுத்துகின்ற பாதிப்பு குறைவு. இருந்தும் சாரு நிவேதிதா இதனை லாவகமாகக் கையாண்டிருப்பர். மறாவில் நிலைமை வேறு. குறும்படம் ஒன்று non linear முறை கதைசொல்லலூடாக அதன் கருவினை வெளிப்படுத்தப்படப்போகின்றது என்பது மிகவும் சிக்கலான விடயம். வலிமையான கரு ஒன்றினைக்கூட – அதுவும் சாதாரண கதை சொல்லலின் மூலம் சரியாக வெளிப்படுத்தமுடியாத நிலைமைகள் இருக்கின்ற சூழலில், வலிமையற்ற கருவினை non linear முறை கதை சொல்லலுக்குள் உள்வாங்கி இன்னமும் வெளிப்பாடற்ற தன்மையை மறாவின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். இதை நான் திரைக்கதையின் பிறழ்வு என்பேன்.

Big Bad Wolf Books – Numero Zero

நீண்ட நாட்களாக நடைபெற்ற Big Bad Wolf Books புத்தக கண்காட்சிக்கு இரண்டு தடவை சென்றுவந்தேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் ஏற்பட்ட சலிப்பும் உறுத்தல்களும் இதில் ஏற்படவில்லை. முக்கியமான காரணம் இது முழுக்க முழுக்க ஆங்கில புத்தகங்களுக்கான சந்தையாக இருந்தது. ஆரம்பித்து இரண்டாம் நாள் ஒரு முறையும் கடைசி தினத்திலொரு முறையும் போனேன். எழுபத்தைந்து வீத கழிவில் புத்தகங்கள் இருப்பதனால், ஒன்றிரண்டை வாங்கி கொள்ளவும் முடிவோடு போனேன். அகன்ற இலங்கை கண்காட்சி கூடத்தில் புத்தகங்கள் பகுதி பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்தன. Fictions, Non-Fictions, Cookery, Architecture, Childern section என்று பலவாறு வகைப்படுத்தப்பட்டு புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இடக்கைப் பக்க சுவரினூடு நீளுகின்ற மேசைகளில் நாவல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நவீன சூப்பர் சந்தைகளில் பொருட்களை தள்ளுகின்ற வண்டி ஒன்றை தந்து அனுப்பினார்கள். அதற்குள் ஐம்பது புத்தகங்கள் வைக்குமளவு இடமிருக்கும். இரண்டு தடவையும் பெரும்பாலானோர், அவர்களின் குழந்தைகளை அதற்குள் வைத்து ஒன்றிரண்டு புத்தகங்களோடு தள்ளிச்சென்றதையே அவதானித்தேன். மேலும் சிலர் புத்தகங்கள் நிறைய அடுக்கிக்கொண்டு போனதையும் பார்த்தேன். அவர்களில் பெரும்பாலானோர் வயதான வெளிநாட்டவர்கள். அந்த வண்டியை வைத்து அங்கிருக்கும் சிறுவர்கள் வண்டில் பந்தயம் நடத்திக்கொண்டிருந்தார். நாவல்கள் ஒன்றிரண்டை பிரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த வெளிநாட்டவரோடு அறிமுகமானேன். அவர் ஒரு நாவலை நீண்ட நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தார். இடையில் ஒருமுறை தனது கைபேசியையும் எடுத்து ஏதோ செய்துவிட்டு என்னிடம் திரும்பினார். நான் மௌனமாக புன்னகை செய்தேன். அவர் தாழ்ந்த குரலில், ” இந்தப்புத்தகத்தை எனது நாட்டில் அறுபது டாலர் கொடுத்து வாங்கினேன், இப்போது இங்கே நான்கு டாலர் பெறுமதியில் கிடைக்கிறது.” என்றார். அது என்னவோ உண்மைதான் பெரும்பாலான நாவல்கள் 550, 600, 700 ரூபாய் மட்டில் தான் இருந்தன. அப்போதிலிருந்து அவரும் நானும் கையிலிருக்கின்ற புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். சில புகழ்பெற்ற நாவல்களைத் தவிர மிகுதி எல்லாம் சமீபத்தில் வெளியான நாவல்கள். மெல்லிய ஜாஸ் இசையுடன்  அனைத்து நாவல்களையும் கையில் தூக்கி அழகு பார்த்தேன். அதிலிருந்து மூன்றை வாங்கிக்கொண்டு வந்தேன்.
இரண்டாவது முறை போவதற்கு முக்கியமான காரணம் Umberto Eco இன் Numero Zero. முதல்தடவை பார்த்துவிட்டு வந்தாலும் என்னுள் அந்த நாவல் சலசலப்பை ஏற்படுத்தியபடியே இருந்தது. எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று கொட்டும் மழைக்குள் கண்காட்சி கூடத்திற்குள் வந்து சேர்ந்தேன். மழையை விட அதிகமாக நான் கண்ட காட்சி என்னை நனைய வைத்தது.இடப்பக்க மூலையில் இருந்த அந்த நீண்ட நாவல்கள் பகுதியை அடையாளமே இல்லாமல் முடித்து விட்டார்கள். அங்கே அப்படியான ஒரு பகுதி இருந்ததிற்க்கான அடையாளமே இல்லை. ஆங்கில நாவல்கள் வாசிக்கின்ற வாசகர்கள் மிகவும் அதிகம் என்பதை புரிந்து கொண்டேன். Numero Zero சில பிரதிகள் வேறு புத்தகங்களோடு கலந்து இருந்தன. நம்பிக்கை இன்மையில் ஒரு முறை அங்கிருக்கின்ற ஏற்பாட்டாளர்களிடம் போய் விசாரித்தேன், அவர்களும் மகிழ்ச்சியாக விற்று தீர்ந்துவிட்டது என்றார்கள். மற்றைய பகுதிகள் இன்னமும் மீதமிருக்கின்றனவே என்றேன். அவர் , மற்றைய பகுதிக்குரிய புத்தகங்களில் ஒன்று 200 பிரதிகள் வைத்திருந்தால் நாவல்கள் 10 பிரதிகள் தான் வைத்திருப்போம் என்றார். Umberto Eco இன் Numero Zero நாவலின் அட்டைப்படத்தில் 0 பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஒரு முறை மௌனித்துப்போய் நகர்ந்தேன். 

கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 02

தமிழ் அரங்குகளில் இருந்த புத்தக பல்வகைமை பற்றி பேசியே ஆகவேண்டும். புத்தக தேர்வு என்பது இன்றைய இலங்கை தமிழ் சமூகத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. கொழும்பு போன்ற அவசர நகரங்களில் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறைக்குள் இலக்கிய வாசிப்பு என்பதை எதிர்பார்க்க முடியாத ஒன்று. அவர்களுக்கு கிடைக்கின்ற ஓரளவு நேரங்களில் மனதை சந்தோசப்படுத்தக் கூடிய சில நாவல்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் அரங்கங்களில் முழுமையாக வணிக நாவல்களே இருந்தன. பாலகுமாரன், லட்சுமி, எட்மூரி, ராஜேஷ்குமார், அனுராதா என்று இன்னும் பலர். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று தடவை அவர்களின் ராக்கைகள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இந்த நிலையில், ஒரு வணிக நிறுவனம் அதிகம் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய புத்தகங்கள் வணிக நாவல்களாகவே இருப்பதில் எந்தப்பிழையும் இல்லை. ஆனால் அங்கு வருகின்ற நூறில் எப்போதாவது ஒருத்தர், சிறந்த இலக்கியத்தை தேடுகிறார். பல சிறந்த புத்தகங்களை தேடி, இல்லை என்னும் போது மனவருத்தத்துடன் திரும்புகிறார். அவருக்கு இலக்கிய சமூகம் கொடுக்க கூடிய பதில் என்ன? அவரின் வாசிப்பை ஊக்குவிக்காமல் முற்றுமுழுதாக வணிக நோக்கத்துடன் இயங்குதல் என்பது பிழை இல்லை, இழுக்கு.
குறுகிய கால இடைவெளிக்குள் என்னால் இரண்டு புத்தக கண்காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாண நல்லூரில் நடந்த கண்காட்சியில் பங்குபற்றிய சில இலக்கிய வாசகர்கள் ஜெயமோகனை அதிகமாக தெரிவு செய்தார்கள். கொற்றவை, விஷ்ணுபுரம் , வெண்முரசு போன்றவை அதிகம் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் சிலரால் அதிகம் தேடப்பட்டவர்கள் சாரு, காரல் மார்க்ஸ்(தற்போதைய) , பெருமாள் முருகன், பிரபு காளிதாஸ் போன்றோர். அங்கு அகிலனின் புத்தகத்தை கையில் வைத்திருந்த ஒருவரை  புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்போடு வழியனுப்பினேன்.நான் இங்கு வாசிப்பின் பல்வகைமையை அவதானித்தேன். என்ன தான் இருந்தும் வந்தவர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
ஓரளவு வயது வந்து வேலைக்கு செல்பவர்கள் தான் வணிக எழுத்தை பொழுதுபோக்குக்காக வாசிக்கிறார்கள் என்றால் பாடசாலை மாணவர்களும் அதையே தெரிவுசெய்கின்றனர். கல்கி சாண்டிலியன் கூட அவர்களால் வாசிக்க முடியவில்லை. வாசிக்க தெரியவில்லை. அவர்கள் தெரிவு செய்யும் புத்தகங்களில் பெரும்பாலானவை குடும்ப நாவல்களாகவே இருந்தன. சில மாணவர்களிடம் வேறு சில புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் பரிந்துரைத்தால் அவர்களுக்கே உரிய திமிருடன் கடந்து செல்கின்றார்கள். அவர்கள் காந்தியையும் சேகுவாராவையும் ஹொப்கின்ஸையும் கூட வாசிக்க நினைக்கவில்லை. எதேர்ச்சியாக YouTube இல் அமெரிக்காவின் நடுத்தர பாடசாலை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினைப் பார்த்தேன். அதில் மாணவர்களிடம் யாரை நீங்கள் வாசிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் உலக இலக்கிய மேதைகளையும் தற்போதைய லத்தீன் அமெரிக்கன் எழுத்தாளர்களையும்  வசிப்பதாக சொன்னர்கள். இவற்றை உண்மையாக வாசிப்பார்களா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. அவர்களுக்கு அவர்களின் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் தெரிந்திருக்கிறது. எம்மவர்களுக்கு அது கூடத் தெரியவில்லை.

கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 01

சினிமா அரங்குகளிலும் திருவிழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் மட்டுமே இவ்வளவு மக்கள் கூட்டத்தை கண்டிருக்கிறேன். இந்திய புத்தகக்கண்காட்சிகளில்  புத்தக அரங்குகளில் விநியோகஸ்தர்கள் ஈக்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள் என்று பரவலாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இது உண்மையாக இருந்தால் இப்படி நியாயப்படுத்தலாம் – இந்தியாவின் தமிழ் நாட்டில் புத்தக கண்காட்சிகள் அதிகம் நடைபெறும், அதனால் அதிக மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் புத்தக கண்காட்சி விற்பனையின் அளவை விட புதிய புத்தகங்களின் அறிமுக அளவு அதிகமாகி விட்டது. இதனால் எல்லாமும் வாசித்து முடித்துவிட்டார்கள் என்றும் கூறிவிட முடியவில்லை. வாசிப்பு நுகர்ச்சி குறைந்து போய் விட்டது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.  ஆனால் இலங்கையில் நிலை வேறு. புத்தக கண்காட்சிகள் எப்போதாவது ஒரு முறை தான் நடைபெறும். அதுவும் களவு செய்வதைப்போன்று சத்தமில்லாமலே நிறைந்து முடியும்.
BMICH இற்கு புத்தக கண்காட்சிக்காக சிறப்பு பேரூந்து சேவை. ஒரு புத்தக கண்காட்சிக்கு சிறப்பு போக்குவரத்து சேவை செய்கின்ற ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்கும். மிகவும் சனசஞ்சாரம் மிக்க சந்தை ஒன்றைப்போல புத்தக கண்காட்சி திடல்கள் காட்சியளித்தன. எல்லோருமே தமக்கு தேவையானவற்றைத் தேடி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தனித்தனியாக பிரித்து ஒதுக்கப்பட்டு நிறைய அரங்கங்கள். எந்த இடத்திலும் மனிதர்களின் வியர்வை வாடையைத் தாண்டிய புத்தக வாசம். இருபது ரூபாய் கடவுச் சீட்டுடன் கண்காட்சிக்குள்  நுழைந்தேன். மனிதர்களின் புத்தக வேட்கையைப் பார்த்து, அவர்கள் ஒவ்வொரு திடலாக ஏறிஇறங்கி புத்தகங்களை அள்ளுவதையும் பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டு பிரதான அரங்கிற்குள் நுழைந்தேன்.
பிரச்சனை 01 –
அங்கிருக்கின்ற கிட்டத்தட்ட 300 புத்தக விற்பனை அரங்கங்களில் இரண்டே இரண்டு அரங்கம் தான் தமிழ் மொழிக்குரிய புத்தகங்களை பெரும்பான்மையாகக் கொண்ட அரங்கங்கள். பூபாலசிங்கம் – கிழக்கு பதிப்பகம். சிங்கள புத்தக அரங்குகளுக்கும்  ஆங்கிலப் புத்தக அரங்குகளுக்கும் இடையே இவையிரண்டும் அடையாளம் தெரியாமல் நுண்மையானவையாக இருந்தன. கிழக்கு பதிப்பகம், அவற்றின் பாதிப்புகளையே மட்டும் கொண்டிருந்தமையால் நிறைந்த தெரிவுகள் பெரிதாக கொண்டிருக்கவில்லை. பூபாலசிங்கம் புத்தகசாலை எல்லாப் பதிப்பகங்களின் புத்தகங்களையும் வைத்திருந்தமையால் தேர்வு செய்யக்கூடிய அளவு புத்தக வகைமை இருந்தது. 300 அரங்கங்களில் கடைசி ஐம்பது அரங்கங்களிலேனும் தமிழ் புத்தகங்கள் இருந்திருக்க வேண்டும். இந்திய பதிப்பகங்கள் இந்த கண்காட்சிக்கு வந்து அவர்களின் சிறுதொகை புத்தகங்களையாவது காட்சிப்படுத்தியிருக்கவேண்டும். இலங்கையின் எழுத்தாளர்களும் வெளியீட்டாளர்களும் ஒன்றிணைந்து, இலங்கையின் படைப்புகளை முன்னிலைப்படுத்தி நான்கைந்து அரங்கங்களாவது வைத்திருக்கவேண்டும். இது ஒரு கண்காட்சி என்பதைத் தாண்டி சமூகத்தின் முன் ஆவணப்படுத்தல். பூபாலசிங்கம் புத்தகசாலையின் அரங்கிலும் சுதேச படைப்புகள் ஓரங்கட்டுப்பட்டே இருந்தன. பாலகுமாரனும் ராஜேஷ்குமாரும் லக்சுமியும் அனுராதாவும் விற்றுத் தீர்ந்துபோயின. ஒரு புத்தக நிலைய ஒழுங்கு குழுவை இதில் வசை பாடிப்பிரயோசனம் இல்லை. உள்நாட்டு படைப்புகள் சம்பந்தமான அறிவு இன்னும் என் மக்களுக்கு போய்ச் சேரவில்லை. இன்று இரண்டாய் இருப்பவை வருடக்கணக்கில் இல்லமே போய்விடும் அபாயம் தெரிகின்றது. ஒரு போட்டியிலிருந்து நாமே விலக்கிக்கொள்கின்ற நிலைமையை ஊக்குவிக்கின்றோம்.
பிரச்சனை 02-
பாடசாலை நூலகங்கள் மிகவும் முக்கியமான ஆளுமை விருத்தி தளங்களாகும். மாணவர்கள் இளமையில் தேடிக்கற்கின்ற ஒவ்வொன்றும் அவர்களின் எதிர்காலத்தின் அடிப்படைகள். இது சிங்களப் பாடசாலைகளில் நடக்கிறதா என்று தெரியவில்லை. புத்தக கண்காட்சி நேரம் அதிகமான பாடசாலைகள் தமது நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்வர். இதனை கொள்வனவு செய்ய வருபவர் ஓரளவாவது புத்தகங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? கடமைக்கு புத்தகங்களை கொள்வனவு செய்ய வருகின்ற ஆசியர்களால் ஒரு வருட கொள்வனவு மட்டுமன்றி, மாணவர்களின் வாசிப்பில் பிழையான வழிநடத்தல் உருவாகி விடும். குறிப்பிட்ட தொகைக்கு புத்தகங்களை நிரப்பித் தரக்கேட்கின்ற கொள்வனவு ஆசிரியர்கள், ஒரு சமுதாயத்தின்  எதிர்க்காலத்தில் கேள்வியினை உண்டாக்குகிறார்கள். அதைத் தாண்டி ஒரு பட்டியலுடன் சில கொள்வனவு ஆசிரியர்களைக் காணக்கூடியதாக இருக்கும். அவர்கள் கையில் வைத்திருக்கும் பட்டியலில் முக்கால் வாசி கடந்த கால வினாத்தாள்கள், – அதை தரம் ஒன்று தொடக்கம் பதின் மூன்றுவரை வரிசையில் எழுதிவைத்திருப்பார்கள். அடுத்தது பயிற்சி புத்தகங்கள், அதையும் அப்படியே அதே வரிசையில். இந்த அசிங்கமான மனசாட்சியற்ற ஒழுங்கின்மை மாற்றப்படவேண்டிய ஒன்று. இலங்கையில் இருக்கின்ற 99 சதவீத தமிழ் பாடசாலைகளுக்கு இவ்வாறான ஒரு கண்காட்சி நடப்பதே தெரிந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.
சந்தோஷமும் கவலையும் –
புத்தக கண்காட்சியின் எல்லா இடமும் சிங்கள புத்தகங்கள் நிறைந்து கிடந்தன. சிங்கள புத்தகங்களில் முழுமையானவையும் இலங்கையின் அச்சு துறையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டவை. சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சியும் விஸ்தரிப்பும் மேய் சிலிர்க்க வைத்தது. புனைவுகளும் அபுனைவுகளும் இந்த சிறிய தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தினரால் எழுதி குவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனிப்புத்தகம் என்றாலும் மக்கள் தொகையை விட அவர்களின் புத்தகங்கள் அதிகமானவையாகத் தான் இருக்கும். புத்தக வடிவமைப்பு சீரானதாக இருக்கின்றது. அட்டைப்படங்கள் அட்டைகள் காகிதங்கள் என்று எல்லாமுமே செய்நேர்த்தியுடன் இருக்கின்றது. அவர்களின் தனித்துவ இலக்கிய இருப்பிற்க்கான முயற்சியும் படைப்பூக்கமும் மேய்ச்சத்தக்கது. அதே நிலையில் எமது படைப்புக்கள்?
கூட்டத்திற்க்கன காரணம்?
அத்தனை அலை மோதும் கூட்டம் புத்தக கண்காட்சிக்கா என்று யோசித்து விடைகாணமுன்னர், புத்தக விற்பனை அரங்குகளை விட அலைமோதுகின்ற கூட்டம் அப்பியாசக்கொப்பிகள் மலிவு விற்பனை அரங்கிற்குள் இருந்தது. எப்படியும் வந்திருந்த கூட்டத்தில் முக்கால்வாசி அந்த அரங்கை முற்றுகையிட்டு கொள்வனவு செய்தனர். அதிகமான விலையில் வெளியில் விற்கப்படுகின்ற அப்பியாசக்கொப்பிகள் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் ஒரு வருடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கேயே கொள்வனவு செய்துகொள்ளுகின்ற கூட்டம் தான் புத்தக கண்காட்சியின் பெரும்பாண்மைக்கூட்டம்.

திருவிழா – தளமாற்றம் 

*இலங்கை சட்டக்கல்லூரியில் சட்ட மாணவர் இந்துமகா சபையின் வருடாந்த இதழான நக்கீரம் 2017இல்    வெளிவந்தது.
சிலருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் போது தற்கொலைக்கு முயற்சி செய்வதுண்டு. கண் திருஷ்டியை கழிப்பதற்கு நாற்சந்தியில் சமய அனுட்டனங்களைச் செய்து எரிப்பர். மனதில் நீண்ட சோகம் பரவும் போது வீட்டின் சுவர்களில் ஒட்டப்பட்ட அழகிய ஓவியங்களும் சிற்பங்களும் சாந்தியை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தின் நெருக்கம் உண்ணாவிரதம் போராட்டம் என்று தள மாற்றம் செய்யபடுகிறது. இந்த தளமாற்றம் தான், மனிதனின் நீண்ட இருப்பிற்க்கான அத்திவாரம். மனிதனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தான் உலகின் தொடர்ச்சிக்கான வழிவகையாக இருக்கிறது. மனிதனின் சீரற்ற வாழ்க்கை முறை, அவன் சூழல் சார்ந்த இயல்பான நெருக்கடிகள், அவனின் ஆழ்மனத்தின் சஞ்சலங்கள், உறவுகளினால் ஏற்படுகின்ற சிக்கல்கள், தொழில் ரீதியான அழுத்தங்கள் என்று அவன் வாழ்வின் அத்தனை நிகழ்சிகளும் ஏதோ ஒரு வகையில் இருப்பின் பிரச்சனையாக அமைந்துவிடுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தான் அவனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தேவைப்படுகின்றது. அதற்கான வழிமுறையை மனிதன் தேடவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றான்.
தளமாற்றதிற்க்கான மிக முக்கியமான கருவி திருவிழாக்கள். உலகில் திருவிழாக்களை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. கொண்டாட்டம், கேளிக்கை என்பதைத் தாண்டி திருவிழாக்கள் செய்கின்ற சமூகமாற்றங்கள் பெறுமதிமிக்கவை. அதனாலேயே பண்பாட்டின் மிகுதியாக திருவிழாக்கள் இன்றும் ஓரளவு பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றது. தனி மனித வாழ்வில் பிறப்பு, அறிவிப்பு, பூப்பு, திருமணம் முதிர்ச்சி, வயோதிபம், இறப்பு என்று ஏற்படுகின்ற தளமாற்றங்கள் எவ்வாறு அவ்வவ் பருவத்தின் அறிதல்களையும் புரிதல்களையும் கற்பிதம் செய்கின்றனவோ, – அப்பருவங்களில் வருகின்ற தனி மனித உளவியல் உடலியல் மாற்றங்களையும் அழுத்தங்களையும் நிவர்த்தி செய்கின்றனவோ, அவ்வாறான தொழிலையே மனிதக் கூட்ட இயங்கு தளமான சமூகத்திற்கு திருவிழாக்கள் செய்கின்றன.
ஒரு தொகுதி மக்கள் என்பது கிராமிய அடிப்படையிலோ நகர அடிப்படையிலோ சாதிய இன அடிப்படையிலோ வகுத்துக்கொண்டிருந்தாலும், முக்கியமாக தேவை அடிப்படையில் தான் அந்த தொகுதி உருவாகியிருக்கும். அந்தத் தொகுதிக்கான தேவை நிவர்த்தியாக்களில் ஏற்படுகின்ற இழுவை நிலையில்  அல்லது தேக்கநிலையில் அவர்களுக்கான உந்து சக்தி ஒன்றின் தேவை புலப்படுகின்றது. லெவிஸ்ராஸ் கூற்றின் படி எப்போதெல்லாம் சமூகத்தில் நெருக்கடிகள் உருவாகின்றதோ அப்போதெல்லாம் கூட்டுமானம் வலுவாக புதுப்பிக்கபடுகின்றது. இற்றைக்கு பற்பல ஆண்டுகளுக்கு முன்னராகவே உணரப்பட்டு செயற்பாட்டில் கொண்டுவரப்பட்ட நிகழ்வு திருவிழா. “திரு” என்பது புனிதம் என்ற பொருளில் வருகின்றது போது புனிதமான விழா என்று புரிந்துகொள்ளபடுகின்றது. எமது மரபின் ஆரம்பத்திலேயே திருவிழாக்கள் குறிப்பு பெயரில்லாமல் சடங்காக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. சமூக அழுத்தத்தின் தளம் திருவிழா என்ற சடங்கின் மூலம் இயற்கைக்கு மாற்றப்படுகின்றது. இது நம்பிக்கையின் வாதமாக இருந்தாலும் உளவியல் அடிப்படையில் சமூக மீள் கட்டுமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
திருவிழா என்றதும் ஊர் முழுதும் புனிதம் நிறைந்து விடுகின்றது. எல்லோரிடமும் எல்லா செயல்களிலும் புனிதத்தின் கூறுகள் செயல்படத் தொடங்குகின்றன. அதுவரை பிறழ்வான வாழ்வியலை கொண்டுநடத்திய மக்கள் கூட சரியான வழிக்கு திரும்புவார்கள். தனிமனித சமூக குளறுபடிகள் ஓய்ந்து போயிருக்கும். அமைதியும் ஒழுங்கும் எங்கும் பரந்திருக்கும். சமூகம் முழுக்க உளவியல் ரீதியில் பண்படுத்தப்பட்டிருக்கும். இந்த பண்படுத்தலின் ஆரம்பம் தான் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு வழிகாட்டியாக அமையும். இதனாலேயே திருவிழாக்களுக்கென குறித்த தேதியும் காலமும் இருக்காது. எப்போதெல்லாம் சமூக ஒன்றிணைப்பு தேவைப்படுகிறதோ அப்போது திருவிழாக்கள் நடந்தேறும்.
திருவிழாக்களின் பின்னைய போக்கு சற்று வித்தியாசமானதாக அமைந்தது. திருவிழாக்கள் ஒழுங்கமைக்கும் காரணமும் முறையும் ஆகமம் சார்ந்ததாக மாறத் தொடங்கியது. இன்றைய காலத்தில் காணப்படுகின்ற ஆகம, நாட்டார் வழிபாடுகள் என்ற பாகப் பிரிவினை உருவான காலமாக திருவிழாக்களின் தளமாற்றம் நிகழ்ந்த காலமாக கருத முடியும். காரணம், நாட்டார் வழிபாட்டிலிருந்து ஆகம முறைக்கு வழிபாடுகள் மாறத் தொடங்கியபோது வரைமுறைகளும் கட்டாயங்களும் ஆகமத் திருவிழாக்களில் அதிகமானது. சமூகக் காரணம் கருதி செய்யப்படாமல் பஞ்சாங்கங்களும் ஆகம கோப்புக்களும் திருவிழாக்களின் தேதியையும் காலத்தையும் நிர்ணயிக்கத் தொடங்கின. திருவிழாக்கள் பிராமணிய சமூகத்தின் குறியீடாக மாறத் தொடங்கியது. இருந்தும் மக்களின் பங்குபற்றலும் ஒன்றிணைப்பும் குறிப்பிடும் அளவு இருந்தது. சமயம் என்ற நிறுவனத்தின் பரவலாக்கம் அப்போது அதிகமாக இருந்தது. திருவிழாக் கிரியைகளோடான சாதாரண மக்களின் புழக்கம் நலிந்துகொண்டே வந்தது.
கூடவே நவீன கோட்பாடுகளும் தத்துவங்களும் மேலோங்க தொடங்க தனித்த வாழ்க்கை முறையை மனிதன் தேர்ந்தெடுக்க தொடங்கினான்.சாதியம், இனம், மதம் என்பதைத் தாண்டி கற்ற சமூகம் கல்லாத பாமர சமூகம் என்ற வேற்றுமை உருவாகத் தொடங்கியது. நாட்டார் வழக்கியல் பாமர சமூகத்தினருக்கே என்ற கோசமும் மேலோங்கியதால் திருவிழாக்கள் பிரிவினைக்குரிய பொருளாகிப் போனது. சாதிச் சண்டைகளும், தனிப்பட்ட குரோதங்களும் தீர்த்துக்கொள்ளும் இடமானது. எந்தக் காரணத்திற்காக திருவிழா என்ற சம்பிரதாயம் உருவாக்கபட்டதோ அது தளமாற்றம் அடையத் தொடங்கியது.
இன்றைய திருவிழாக்கள், திரு என்பதை எடுத்து கூத்து என்று மாற்றி வைக்கும் நிலையை அடைந்துள்ளன. உளம், உடல், சுற்றாடல், கிராமம், நகரம் என்று அனைத்திலும் புனிதத்தை விதைக்கின்ற பொறுப்பிலிருந்து திருவிழாக்களும் அவற்றை ஒழுங்குபடுத்துபவர்களும் விலகிவிட்டனர். திருவிழாக்கள் என்றவுடனேயே கேளிக்கைகளுக்கு பஞ்சம் இல்லாத தினமாக மாறிவிட்டது. புனிதம் அமைதி என்ற சொற்கள் எல்லாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் வந்து அதைசுற்றி இருண்மை குடிகொண்டு விட்டது. இன்று ஆகம திருவிழாக்கள்  நாட்டரியல் திருவிழாக்கள்  இரண்டிலும் இருண்மை பற்றிக்கொண்டே இருக்கிறது. இன்றைய திருவிழாகளை அகம் புறம் என்று நிலையியல் சார்பாக பிரித்துக் கொள்கிறேன். திருவிழாவின் அகம் என்பது ஆகம முறையில் பிராமண சமூகத்திடமும் நாட்டார் வழக்கியலில் உரித்து குடும்பத்திடமும் சென்று விட்டது. அகத்தைப் பற்றிய எந்த அறிவும் சாதாரண பொதுமகனிடம் இல்லை. அகத்தின் கூறுகள் எல்லாம் பிராமணர்களின் வசதிக்கு ஏற்ப / உரித்து குடும்பத்தினரின் வசதிக்கு ஏற்ப தளமாற்றம் செய்யபடுகின்றன.
இன்றைய திருவிழாக்களுக்கு கூட்டம் கூட்டாமாக மக்கள் வருகை தருகின்றனர் என்றால் காரணம் திருவிழாகளின் புறம் தான். புறக்கூறுகள் தான் இன்றைய சமுதாயத்தின் அழிவின் சின்னம். இன்றைய திருவிழாக்களின் புறத்தை கார்னிவெல்(carnival) என்றும் கூறலாம். எப்படி ஒரு கார்னிவெல் அத்தனை சமூக இழுக்குகளுக்கும் தளமாக அமைகின்றதோ அதே போன்ற அமைப்பையே திருவிழாக்களின் புறம் கொண்டிருக்கின்றது. திருவிழா என்றாலே இசைக் கச்சேரி காட்டாய காரியம் ஆகிவிட்டது. ஒரு வகையில் இன்றைய திருவிழாக்களுக்கு ஆள் சேர்க்கும் வழிமுறை கூட. மரபிற்கு ஒன்றிரண்டு பக்திப் பாடல்களைப் பாடிவிட்டு ஒரே வேகமாக சினிமா பாடல்களை அடைந்து விடுவார்கள். ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா  கொண்டாட்டத்தில் மூழ்கும். இசைக்கச்சேரிக்கு வந்த கூட்டத்தில் கூட்டமாக போதை தரும் சரக்குகளும் விற்பனை ஆகும். போதையும் இசையும் நடனமும் வயது பேதமின்றி சமூகத்தின் எல்லா நிலைகளையும் ஆட்கொண்டு விடும். காரணமற்ற சண்டைகளின் பிறப்பிடமாக அமைந்து விடுகிறது.
எந்தப் பகைகளையும் தீர்க்க சிறந்த களம் இன்றைய திருவிழாக்கள் தான். இதற்கு காரணம் திருவிழாக்கள் பெரும்பாலும் இரவில் நடப்பவையாக இருக்கின்றது  தானோ தெரியவில்லை. இருட்டில் முகம் தெரிவதில்லை; குணம் தெரிவதில்லை. அதனால் குற்றங்களுக்கு இருட்டின் மறைவு சாதமாகிப் போகின்றது. திருடவும் இது வசதியாகிப் போகின்றது. திருவிழா மண்ணில் நடுவே இருந்து தலையை விரித்து அழுகின்ற பெண்களை இன்றும் காணமுடிகின்றது. ஆண்களால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. திருட்டில் சமீபகாலமாக குழந்தை திருட்டு அதிகம் நடக்கின்றது. மத்திய காலத்தில் திருவிழாகளை கள்ளுக் குடிக்கவும் திருடவும் பயன்படுத்தினார்கள் என்பதில் இருந்து தொடங்கி இன்று அதைத் தொழிலாக செய்கின்ற இடமாகவே மாறி விட்டது. கும்பல் சண்டைகளுக்கு இன்றைய திருவிழாக்கள் மிகப் பிரபலம். வாட்கள், போத்தல்கள், கொட்டன்கள், கத்தி என்று பஞ்சமே இல்லாமல் சண்டையிட்டுக்கொள்வர். பல முக்கிய சண்டைகள் திருவிழா நாட்களிலேயே தேதி குறிக்கபடுகின்றது.
இன்று இளைஞர் யுவதியர் என்பதை தாண்டி எல்லாப் பிரிவினரும் காட்டுகின்ற அலங்கோலம் திருவிழாக்களில் நடந்தேறும். ஒரு முறை திருவிழாக் காலத்தில் பலவகையான வாசனைத்திரவியங்கள் ஒன்று சேர்ந்த நாற்றத்தில் நிற்கமுடியாமல் திண்டாடிய அனுபவங்கள் பலருக்கு உண்டு. இங்கு தான் அவர் அவர்களின் பொருளாதார வசதியைக் காட்டுகின்ற இடமாக இருக்கின்றது. அலங்காரங்கள் எல்லாம் ஒன்றிப்போய் அலங்கோலமாக காட்சி தரும்.
திருவிழாக்களின் அகத்தையும் புறத்தையும் ஆக்கிரமித்துள்ள இன்னொரு பெரும் சக்தி தொழில்நுட்பமாகும். இதன் வருகையையும் ஆக்கிரமைப்பையும் எம் சமூகத்தால் தடுக்கமுடியாமலே போனது. முஸ்லின் சமூகத்தில் இருந்து விலகியிருக்க கூடிய இந்த ஆக்கிரமிப்பு தமிழ் திருவிழாக்களை ஆக்கிரமிப்பது, எமது பண்பாட்டின் பின்னடைவே. மிகக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே பரந்தளவில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அதன் பலத்தை நிருபிக்கின்றது. அதன் முன்னர் நாம் அடிமையாக்கப்பட்ட சமுதாயமாகவே தோன்றுகின்றோம்.
அமைதியையும் ஒற்றுமையையும் பலப்படுத்த உருவாகிய சம்பிரதாயம் எல்லாப் பாவச் செயல்களின் இருப்பிடமாக தளமாற்றம் அடைந்துள்ளது.
எந்த பொருளும் நிகழ்வும் தனது உற்பத்தி நோக்கிலிருந்து விலகும் போது அது வழக்கிலிருந்து அழிந்து போகின்ற நிலையை அடையும். இன்றைய திருவிழாக்களும் வழக்கொழிந்து போகின்றன என்பதன் உட்பொருளும் அதே. மனிதனின் நடவடிக்கைகள் அழித்துவருகின்ற மிக தொன்மையான பண்பாட்டில் திருவிழாவும் ஒன்று. இன்றைய திருவிழாக்கள் குற்றங்களின் குறியீடாக மாறிவிட்டன. இதனை மீண்டும் தளமாற்றம் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம். மீண்டும் புனிதத்தையும் ஒற்றுமையையும் சமூக வலிமையையும் ஏற்படுத்துகின்ற பழைய திருவிழாக்கள் வழக்கொழிந்து போய்விட்டன. இன்றைய நாளைய சமூகம் திருவிழாக்கு பிரதியீடாக இன்னொன்றை உருவாகும் என்ற நம்பிக்கையும் இல்லை.
திருவிழாக்கள் தளமாற்றம் அடைந்து விட்டன.

கனவும் சமூகமும்

சமூகத் தொடர்புகள் பற்றி என்னுடன் உரையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது. மற்றவர்களோடு உரையாடுதல், அவர்களின் கருத்துக்களை செவிமடுத்தல், அவர்களோடு வேலைகளில் ஈடுபடுதல் , அவர்களோடு சந்தோசமாகவும் உற்சாகமாகவும் நேரத்தை கழித்தல் என்ற பல வேறுபட்ட விடயங்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் என்னைத் திருத்தி இந்த சமூகத்தில் வினைத் திறன் மிக்க மனிதனாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் என்னை இந்த சமூகத்திற்கு பழக்கப்படுத்துகிறார்கள். என்னைப்பற்றி யாரிடமாவது கூறும் போது நான் ஒரு வித்தியாசமான வகை என்கிறார்கள். எப்போதுமே புத்தகங்களையும் நித்திரையையும் தனிமையும் விரும்புகிறேன் என்கிறார்கள். புத்தகப் பூச்சி, நான் வாசிக்கும் புத்தகங்கள் எனக்குரியவை அல்ல என்றெல்லாம் என்னோடு இருப்பவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். என்னிடம் நீண்ட உரையாடல்கள் செய்பவர்கள் இறுதியில் என்னைப்பற்றிய அச்சத்துடனேயே முடித்துக்கொள்கிறார்கள். எதிலும் நான் அதிகம் ஈடுபடாததால் என்னைச் சுயநலவாதி என்கிறார்கள்.
அவர்கள் சொல்கின்ற வாழ்வியலுக்குள் என்னால் போகவே முடியவில்லை. அழுகிய முட்டை வெடுக்கு நாற்றமுள்ள அவர்களின் கருத்தியலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தனிமனித சுதந்திரம் மீறப்படுகின்ற இடங்களில் இருப்புக் கொள்ளவில்லை. மனிதர்களை மனிதராக மதிக்காத இடங்களிலும் மனிதர்கள் மனிதனாக இல்லாத இடங்களிலும் என்னால் இசைந்து கொடுத்து போவது அத்தனை சிரமமா இருக்கின்றது. அவர்கள் காலம் காலமாக நடைமுறைப்படுத்துகின்ற நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போகவும் அதை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் இருக்கின்றது. அவர்களின் பிரயோசனமற்ற நீண்ட உரையாடல்கள் என்கிற இரைச்சல்களை கேட்கவே முடிவதில்லை. சகித்து வாழுதல் என்ற முறையின் மிக இழிவான நடைமுறைப்படுத்தலை தெரிந்துகொண்டே அனுசரிக்க முடியவில்லை.
மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் ஒரு இந்தியத்துறவி வசித்து வந்தார். வழமையான கதை போல இது ஒரு ஊரில் என்று தான் சொல்லாமல் சொல்லித் தொடங்குகிறது. வெகு சிரமப்பட்டு ஒவ்வொரு நாளும் மலையில் ஏறி, வட்ட குவளை ஒன்றிற்குள் தண்ணீர் நிறைய எடுத்து இன்னும் அதிக சிரமத்துடன் அடிவாரத்தில் சேமித்து குடித்து வந்தார். அதற்காக மலையின் அடிவாரத்தில் தண்ணீர் இல்லை என்பதில்லை. இந்தியத்துறவிக்கு அசுத்தமான தண்ணீர் குடிப்பதில் சம்மதமில்லை. வயது அதிகரிக்க அவருக்கு மலையில் ஏறுவதும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து சேமித்து வைப்பதும் இலகுவாகப்போனது. துறவியின் வயது தொன்னூறை அடையும் போது அவர் இருபது வயது சிறுவன் போல உற்ச்சாகமாக ஏறி இறங்கி வந்தார். சில காலத்தின் பின்பு மலை அடிவார குடிநீர் ஊற்றுக்கள் எல்லாம் மொத்தமாக அசுத்தமாகிப் போயின. அங்கு குடியானவர்கள் குடிக்க தண்ணீருக்காக மலை உச்சிக்கு ஏறவேண்டிய கட்டாயநிலை உண்டானது. அப்போது அந்த துறவி உயிரோடு இல்லை. கரடு முரடான மலைப்பாதையில் அவர் வழமையாக நடந்து சென்ற பாதை மட்டும் சீராகவும் நடக்க ஏதுவானதாகவும் இருந்தது.குடிமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி பிரயோசனம் அடைந்து கொண்டார்கள்.
இந்தக் கதையை கனவாக எப்போதும் காண்பேன். இருபதிற்கும் அதிகமான தரம். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காட்சி மனதில் பதிந்து கொள்ளும். அப்படித்தான் இந்த கதையின் புறவுருவத்தை உருவாக்கினேன். இந்தக் கனவின் ஒரு கட்டத்தில் அந்தத் துறவி மெதுவாக சிரிப்பது போல இருக்கும். அவர் தனது பாதத்தை உயர்த்தி காட்டும் போது, அது அத்தனை சிதைவுகளோடும் புண்களோடும் இருக்கும். அத்தோடு இன்னொரு கனவும் அதிகமாக வரும். இதையும் கொஞ்ச கொஞ்சமாகவே பொருத்தினேன். இரண்டு மூன்று மாடிகள் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன். சுற்றி மனிதர்கள் அவர்களின் தொழிலைப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் யாரின் அருகில் போனாலும் அவர் எனக்கு நெருக்கமான ஒருவரின் உருவமாக மாறி கத்தி ஒன்றினால் என்னை குத்த துரத்துவார். நான் மீண்டும் ஓடி ஏறி இறங்கி அவரிடம் இருந்து தப்பித்தேன் என்று நினைத்த அடுத்த கணமே அருகில் இருப்பவர் அவராக மாறி என்னைத் துரத்தத் தொடங்குவார். இது தொடர்ச்சியாக இடம்பெறும். இவையிரண்டும் எனக்கு அதிகமாக வருகின்ற கனவுகள்.

மூன்று மௌனங்கள்.

தோள்ப் பையினை ஒரு தோள்மூட்டிலும் மற்றைய கையில் காகிதங்களுடனும் வேகமாக பன்னிரண்டாம் வாட் என்ற பெயர்ப்பலகையைத் தாண்டி நடந்துகொண்டிருந்தேன். நான் போகவேண்டிய இடம் பன்னிரண்டாம் வாட்டிற்கு எதிரில் அமைந்திருக்கின்றன மார்பு சோதிக்கும் நிலையம். காலை எட்டிலிருந்து மின்தூக்கிகளிலும் படிகளிலும் வரிசைகளிலும் நின்று வாடி வெறுத்துப்போயிருந்தேன். நேரம் இரண்டு முப்பதைத் தாண்டியிருக்க வேண்டும். பன்னிரண்டாம் வாட் – மருத்துவமனையின் தொங்கலில் இருக்கின்றது. அங்கிருந்த ஒரு தாதி வழி காட்டும் போது கையினை விரித்து நீட்டிய விதமே நீண்ட தூரத்தினை காட்டியது. காலையில் குடித்த தேநீர் செமித்து சிறு குடல்கள் அலறத் தொடங்கி வெகு நேரம் ஆகிவிட்டது. பெயர்ப்பலகையைத் தாண்டி நடைபாதையினூடு நுழைந்து நடந்து செல்ல கத்தியும் அழுதும் சத்தம் கேட்டது. என்னை அச்சத்தம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. காலை மருத்துவமனைக்குள் நுழையும் போதே அலறல் சத்தம் தான் வரவேற்றது. வெளிநோயாளர் பிரிவின் கீழ்தள வெளியிலிருந்து மேலே பார்க்க – அத்தனை மாடிகளிலும் இருந்து பெரும் கூட்டம் அலறலையும் சோகத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த ஓலத்திற்கு முன் இது ஒன்றும் பெரிய சத்தம் இல்லை. நேராக பன்னிரண்டாம் வாட்டை அடைந்தேன்.
தோற்றமே சிறுவர்களுக்கான பகுதி போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மூன்று மொழியிலும் ஏதோ சில வசனங்கள் கருத்துக்கள் எழுதியும் ஒட்டியும் இருந்தார்கள். அழுகைச் சத்தம் என்னை நெருங்கியது. வாட்டின் வெளிப்புறம் சிறைச்சாலை போல வெள்ளை கம்பிகள் போட்டு அடைத்த அறைகளை அவதானித்தேன். அதனுள் பெரும்பாலும் காலியான கட்டில்களே இருந்தன. இருந்த மூன்று அறைகளில் மூன்றாம் அறையில் கட்டில் மூலையை பிடித்த வண்ணம் ஒரு தாய் நின்று கொண்டிருந்தாள். அவர் ஒரு பிள்ளையின் தாய் என்பதை இனங்காண இலகுவாக இருந்தது. அழுகையின் சத்தமும் அந்த அறைக்குள் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. சிவப்பு நிற மேலங்கியும் நீல அரைக்காட்சட்டையும் போட்டுக்கொண்டு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் வெள்ளைக்கம்பிகளை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த அடுத்த கணமே அவனின் அம்மாவைத் தான் உற்றுப் பார்த்தேன். அவரின் கண்கள் காவிக்கொண்டிருந்த வெறுமை- அவரின் கைகள் கட்டிலின் நுனியை பிடித்திருந்த முறை – அவரின் பார்வை மகனை பார்க்காமல் வெளியே எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த விதம்- அனைத்தும் என்னுள் கலந்தன. சிறையின் கம்பிகளுக்குள் இருக்கின்ற ஒரு பறவையின் ஏக்கம் அவனின் தளர்ந்த பிடிப்பில் தெரிந்தது. எத்தனையோ முறை கெஞ்சியும் கொஞ்சமும் விலகிக்கொடுக்காத கம்பியிடமும் விலக்கிக்கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற தாதியிடமும், பேசுவதைப்போல அந்த அழுகை தெரிந்தது. அதுவரை இரைச்சலைப் போல தோன்றிய அவனின் அழுகை, அதன் பின்னர் உன்னதமான மொழியாக கேட்டது. அருகில் சென்று அவன் கிடந்த கம்பியின் அருகில் இருந்தேன். அவனின் கண்கள் இரண்டும் பொண்டிப் போய் இருந்தது. மூக்கு வழிந்து கொண்டிருந்தது. அவனிற்கு மூச்சு இரைத்தது. ஒரு கணம், ஒரே ஒரு கணம் அவன் என் கண்களை பார்த்தான். பின்னர் மெதுவாகத் திரும்பி அம்மாவைப் பார்த்தான். பின் தாதியை. அப்போது அவன் அழவில்லை. ஏதோ ஒன்றைக் கடத்தியிருக்கிறான். என்னை அவன் யாராக எண்ணியிருப்பான்? மருத்துவராக , தாதியாக , உறவினராக , தம்பியாக , பிள்ளையாக , மனைவியாக , கடவுளாக , எமனாக , கொள்ளைக்காரனாக எதுவாக? என்னால் அவனின் பார்வையையும் கணப்பொழுதில் அவன் கடத்திய மொழியையும் சற்றுக்கூட உணர முடியவில்லை.
அந்த தாதி என்னைப்பார்த்து சிரித்தார்.என்னால் அந்த கம்பிகளைத் திறந்த விடமுடியாது என்ற கர்வச் சிரிப்பு அது. பின்னர் தாதி என்னோடு கதைத்து, போகவேண்டிய இடத்தைக் காட்டினார். எல்லாம் முடித்து மருத்துவமனைக்கு வெளியில் வந்து நின்று ஒரு முறை யோசித்தேன், அவனின் அழுகை எதற்காக ? காலை அழுத உறவினர்களின் அழுகை எதற்காக?
அவன் எங்களைப் பார்த்து அழுகிறானா? அவனிற்கு- நாங்கள் சிறைக்கம்பிக்குள் இருப்பது போலத் தெரிகிறதா? எங்கள் வாழக்கையைப் பார்த்துத்தான் அழுகிறானா? எங்கள் அவலங்களை அவன் உணர்ந்துகொண்டு புலம்புகிறானா? அவன் என்னை மீட்கத் தான் அந்த பார்வையை பார்த்தானா? அந்த மௌனமான பார்வை என்னை நோக்கிய கருணையின் வடிவமா?
அழுத உறவினர்கள் எல்லோருமே இறந்தவர் இவ்வுலகைவிட்டு போய் விட்டார் என்று அழுகிறார்களா? இல்லை போய்விட்டாரே என்ற பொறாமையின் வடிவமா அந்த அழுகை ?
அந்த சிறுவனின் கண நேர மௌனமும் இறந்தவரின் நிரந்தர மௌனமும் எனக்குள் எதையோ ஒன்றை விதைத்துச் சென்று விட்டன.