War Pigs – Black Sabbath

Heavy metal music இசை வகையின் முன்னோடிகள் என்றழைக்கப்படும் இங்கிலாந்தின் ராக் இசைக்குழுமம் ஒன்றின் படைப்பு War Pigs. இது அவர்களின் இரண்டாவது இசைத் தொகுப்பில் வெளியாகிய பாடல். அவர்களின் முதலாவது இசைத்தொகுப்பு 1970 இல் வெளியாகிய Black Sabbath. பின்னாளில் அவர்கள் Black Sabbath குழுவினர் என்றே அழைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அதே வருடத்தில் உருவாகிய Paranoid என்ற தொகுப்பில் தான் War Pigs, Walpurgis என்ற பெயரில் வெளியானது. ஆரம்பத்தில் ஏழு நிமிடம் ஐம்பத்தியேழு வினாடிகள் நீளமாக உருவாகிய பாடல் நாற்பது வருட காலத்தில் வெறும் மூன்றே நொடிகள் மட்டும் அதிகரிக்கப்பட்டது. அவ்வளவு நேர்த்தியாக இசையமைக்கப்பட்டிருக்கும். Terence Michael Butler, Tony Iommi, John Osbourne மற்றும் William Ward ஆகியோரின் கூட்டணியில் எழுதப்பட்ட வரிகள் – முழுக்க முழுக்க அமெரிக்கச் சர்வாதிகாரத்தையும் போரையும் எதிர்ப்பதாக அமைகின்றது. முக்கியமாக வியட்நாம் போரினை. தங்களின் சுயநலத்தின் பேரில் உருவாக்கப்படுகின்ற போர்களில் வறிய மக்கள் வெள்ளந்தியாக அனுப்பப்பட்டு கொல்லப்படுவதைச் சாடி வரிகள் எழுதப்பட்டிருக்கிறன. வறியவர்கள் இலகுவாக மூளைச்சலவை செய்யப்பட்டு போரிற்கு அனுப்பப்படுவதாகவும் – எல்லா வறிய மக்களும் இறந்த பின்னர் வெறும் சாம்பல் மேடு மட்டுமே மிஞ்சியிருக்கும் தேசம் ஒன்றில் – சாத்தான்களிடம் அதிகாரத்தில் இருப்போர் மண்டியிட்டு தங்கள் பாவங்களை இல்லாதொழிக்கக் கெஞ்சிக்கொண்டிருப்பதாக – எளிமையான வரிகள் மூலம் அதிகாரத்தை எதிர்த்திருக்கிறார்கள். கூடவே அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் குற்றவாளிகள்- தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டிக் கொன்றுகுவிக்கின்ற கொடூரத்தையும் எழுதியிருக்கிறார்கள். பாடல் முழுக்க இறைவனை விளித்தே பாடப்பட்டிருக்கின்றது. பாடலின் வரிகள் இவ்வாறு வரும்.
Generals gathered in their masses,
just like witches at black masses.
Evil minds that plot destruction,
sorcerer of death’s construction.
In the fields the bodies burning,
as the war machine keeps turning.
Death and hatred to mankind,
poisoning their brainwashed minds…Oh lord yeah!
Politicians hide themselves away
They only started the war
Why should they go out to fight?
They leave that role to the poor
Time will tell on their power minds
Making war just for fun
Treating people just like pawns in chess
Wait `till their judgement day comes, yeah!
Now in darkness, world stops turning,
ashes where the bodies burning.
No more war pigs have the power,
hand of god has struck the hour.
Day of judgement, god is calling,
on their knees the war pigs crawling.
Begging mercy for their sins,
Satan, laughing, spreads his wings…Oh lord, yeah!
– azlyrics இணையதளம்
Ozzy Osbourne இன் ஈரம் ஊறிய குரளின் மூலம் அவலத்தைச் சரியாக வெளிப்படுத்தியிருப்பார்கள். போரெதிர்ப்பு உணர்வு எதிர்பார்க்கப்பட்ட அளவு வெளிப்பட்டிருக்கும். பாடல் முழுக்கச் சூழ்ந்து கொள்ளும் கிட்டார் இசையினை Tony Iommiயும் bass கிட்டாரினை Geezer Butlerஉம் இசைத்திருப்பார்கள். எந்தக்கணமும் புலன்களை சிதற விடாமல் கட்டிப்போடும் வீரியமான இசையினை War Pigs கொண்டிருக்கிறது.
இதைவிட நீர்த்தன்மையான காட்சியமைப்பு அற்புதமாக இருக்கும். மிகவும் நுட்பமாக கலை நேர்த்தியுடன் இயக்கியிருக்கிறார். காட்சியமைப்பில் குறியீடுகள் நிரம்பி வழிகின்றன. இசை – வரிகள் – காட்சியமைப்பு என்று பார்வையாளரை அசையவிடாமல் தன்னுடன் War Pigs இணைத்துக்கொள்ளும்.

இணைய வாசிப்பில் முரகாமி

இன்று ஹாருகி முரகாமியின் பிறந்த தினம். முதன் முதலில் ஹாருகி முரகாமியை அறிமுகப்படுத்தியவர் ஜி. குப்புசாமி அவர்கள். தோற்றத்தில் மென்மையானவராகத் தெரிபவரான முரகாமியின் எழுத்துக்களும் மென்மையானவை. உலக இலக்கியப் பரப்பில் எந்த விதத்திலும் நிராகரித்துக் கடந்தவிடக்கூடியவர் அல்ல. வெகுசீக்கிரம் அவரைப் பேசலாம். அவரின் நாவல்கள், சிறுகதைகள் என்று எதையும் பற்றிப் பேசாமல் இப்போது அவரின் இணைதளத்தைப் பற்றிய குறிப்பொன்றைத் தரலாம் என்று நினைக்கிறேன். இன்றைய வாசிப்பு இணையத்தினூடாக பரவலாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால் இணையத்தின் வழியாக ஹாருகி முரகாமியை அணுகுவது சுவாரஸ்யமானது. http://www.harukimurakami.com இந்த இணையதளம் அவரின் பிளாக்கர் இல்லை. இதில் முரகாமி நேரடியாக எழுதுவதும் இல்லை. ஆனால் முரகாமியின் அறிமுகத்தை பெற விரும்புகின்ற வாசகர் ஒருத்தர் கட்டாயம் ஒருமுறையாவது இதன் வடிவமைப்பைப் பார்க்கவேண்டும். முரகாமியின் எழுத்துக்களைப்போல அழகியலும் இசையும் கலந்த கலைவடிவம் இந்த இணையதளம். அத்தனை நேர்த்தியான கலைப்படைப்பு. சமகாலத்தில் எழுதுகின்ற ஈழத்து எழுத்தாளர்களாக இருந்தாலும் தமிழ் நாட்டின் எழுத்தாளர்களாக இருந்தாலும் பிரபலமான வெளிநாட்டு எழுத்தாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் படைப்புகளின் இருக்கின்ற கலைத்தன்மை அவர்களின் ப்ளோக்குகளில் இருப்பதில்லை. இணையத்தின் வழி வாசிப்பிற்குள் நுழைகின்றவர்கள் – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த எழுத்தாளர்களை இணையத்தினுள் தேடமுயற்சி செய்கின்றார்கள். அந்த அடிப்படையில் முரகாமி கொடுக்கக்கூடிய முதல் இணைய அனுபவம் அவரின் பின்பால்(Pin Ball) போன்று சாகசமான கலை அனுபவம். இணையதளத்தின் நிறச்சேர்க்கைகள், எழுத்துருக்கள், படங்கள், விவரிப்புக்கள், பக்கங்கள் மாறுகின்ற விதம், தரவுகளை காட்சிப்படுத்துகின்ற முறை என்று ஒவ்வொன்றும் மிகவும் தீவிரமான நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை முரகாமியே முழுக்க வடிவமைத்திருக்கமாட்டார் – ஆனால் வடிவமைப்பில் கட்டாயம் கணிசமான பங்கு அவரிற்கு இருந்திருக்கும். ஏனென்றால் முரகாமி போன்ற ஒரு கலைஞரால் மட்டும் தான் இவ்வாறான ஒரு இணையதளத்தை உருவாக்கிவிடமுடியும். அவரைப்போல என்னைக்கவர்ந்த இன்னொரு இணையதளம் ஹாரிபாட்டரின் ஆசிரியர் ஜெ.கே.ரௌலிங்கினுடையது. முரகாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்னைப் பேசவிடுங்கள் 03 – எஸ் போஸின் கவிதைகள் 02

வாசிக்க – http://unnatham.net/எஸ்போஸின்-கவிதைகள்/

கொழுக்கட்டைத் திருவிழா

எனக்கு உருவாகின்ற கனவுகளைப் பற்றி ஏற்கனவே ஒரு தடவை எழுதியுள்ளேன். ” கனவும் சமூகமும் ” என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பதிவில் – ஒரே மாதிரியான கனவுகள் பல தடவைகள் வருவதைப் பற்றிக் கூறியிருக்கிறேன். கனவுகளைப் பற்றி நிறைய கேட்டும் வாசித்தும் அறிந்திருக்கிறேன். எல்லோருக்கும் போல விதம் விதமான கனவுகள் எனக்கு ஏற்படுவதில்லை. குறிப்பிடத்தக்க சில கனவுகளே மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவத்தில் வந்து போகும். அப்படியான கனவுகளுக்கு விளக்கங்களையும் தேடி வாசித்திருக்கிறேன். அதில் Sigmund Freud இன் The Interpretation of Dreams உம் C.G. Jung இன் The Undiscovered Self உம் முக்கியாமானவையாகத் தெரிகின்றன. அதை விட காலம் காலமாக நம்பப்பட்டு வருகின்ற கனவுகள் பற்றிய விளக்கங்களையும் அறிந்துகொண்டேன். இந்தக் கனவின் விளக்கத்தையும் கேளுங்கள்.
எப்போதும் என் பற்கள் ஒவ்வொன்றாக விழுகின்ற மாதிரிக் கனவுகள் காண்பேன். கொத்தாக விழாமல் – ஒவ்வொன்றாக – என் முழுப் பிறக்ஞையுடன் விழுவதைப்போல. பற்கள் விழுந்தால் நெருங்கிய சொந்தத்தில் யாரவது இறப்பார்கள் என்பது பொதுவான கருத்து. அப்படிப்பார்த்தால் இன்று என் வம்சமே அழிந்திருக்க வேண்டும். அத்தனை முறை பற்கள் விழுவதைப்போன்று கனவுகள் ஏற்பட்டுள்ளன. இப்படியான கனவுகள் வருகின்ற நாட்களின் முன்னைய பகலை ஆராய்ந்தேன். அன்றைய பகல் வேளைகளில் நான் அறிந்து ஒரு சிறு பொய்யையேனும் சொல்லியிருக்கிறேன். என்னை அறிந்து பொய்கள் சொல்கின்ற நாட்களில் பற்கள் விழுவதைப்போல கனவுகள் ஏற்படுகின்றன என்ற பொதுத் தன்மையை அறிந்தேன். ஒரு முறை என் கொடுப்பு பல்லொன்று விழுவதைப்போல கனவு கண்டேன். சாதாரணமாக அல்ல. அகோர வலி. கொடுப்புக்குள் குண்டூசிகளால் குத்துவதைப்போல. சிறிது நேரத்தில் அந்தப்பல் முரசோடு கழன்று விழுந்தது. முழுதும் அழுகிப்போன முரசு. கறுத்து துளைகள் விழுந்து கல் போன்றிருந்தது. அந்த அழுக்குக் முரசின் கீழ் என் பல் தூய்மையாகத் தெரிந்தன. இதைக் கனவு கண்டு சில நாட்களிலேயே எனக்குத் தெரியாத நெருக்கமான உறவினர் ஒருத்தர் இறந்து போனார். அதிக வயது – இயற்கை இறப்பு. அதன் பின்னரும் பொய் சொல்லும் நாட்களில் இதே கனவுகள் வந்துகொண்டிருந்தன.
ஒன்று முப்பத்திற்கு பல்கலைக்கழகத்தை முடித்துக்கொண்டு சாப்பிடாமல் பேரூந்து எடுக்க நடந்து வந்துகொண்டிருந்தேன். கொளுத்தும் வெயில். அகன்ற வீதி ஒன்றைக் கடக்கவேண்டும். சமிஞ்சை வீதியைக் இன்னும் எண்பத்தாறு வினாடிகள் காத்திருக்க வேண்டும் என்றது. இலேசாக பசித்தது. ஆனால் பொறுத்துக்கொள்ளக்கூடிய பசி தான். இருந்தும் அருகிலிருந்த கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பேஸ்ட்ரி ஒரு முறை ருசிக்கத் தூண்டியது. வேகமாக கடைக்குள் நுழைந்து காசைக்கொடுத்து பேஸ்ட்ரியை வாங்கிக்கொண்டன். பார்க்க மொறு மொறு என்று திட்டு திட்டாக அவித்துப் பொரித்த மா எச்சில் ஊற வைத்தது.வேகமாக எடுத்து முன்வாயில் வைத்துக் கடித்தேன். நறுக்.
நான் பல பேரோடு இதைபற்றிக் கதைத்திருக்கிறேன். சம்பவம் நிகழ முன்னரும் பின்னரும். பல்வரிசையில் மம்பட்டிப் பற்கள் இரண்டிற்கும் நேரே கீழிருக்கின்ற இரண்டு பற்களும் முளைத்ததிலிருந்து இன்னமும் விழுந்து மீண்டும் முளைக்கவில்லை. பாற்பற்கள் இரண்டும் இன்னமும் புதிதாகவே இருக்கின்றன. கறையோ சூத்தையோ பிடிக்காமல் மற்றைய எல்லாப் பற்கள் மாதிரியும் புதிதாக இருந்தன. தற்போது இரண்டு மூன்று மாதங்களாக அப்பற்களின் கீழுள்ள முரசு கரைவதும் வலி உண்டாவதுமாக இருக்கின்றது. இரண்டு பற்களில் ஒன்றில் வேர் மட்டும் சாதுவான நோவை ஏற்படுத்துகிறது. நானறிந்த மட்டில் இன்னமும் பாற்பற்களுடன் அலைகின்ற இருபது அல்லது அண்டிய வயதுடையவர்களைக் காணவில்லை. அப்பற்கள் இரண்டும் சிறியதாகவே இருப்பதனால் சிலருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது அவ்விடம் ஒட்டையைப் போலத் தெரியும். அவர்கள் விசாரித்தபோது பற்களைப் பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்வேன். அப்பற்களை அண்டிய பகுதிகளில் அதற்கான புதிய பற்கள் முளைக்கவில்லை. அதனால் மருத்துவரிடம் அணுக வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இப்படியான பாற்பற்களாற் தான் பேஸ்ட்ரியைக் கடித்தேன்.
பார்க்க மொறு மொறு என்றிருந்த பேஸ்ட்ரி என் பாற்பற்களில் ஒன்றைப் பதம்பார்த்து விட்டது. பேஸ்ட்ரி அத்தனை கடிமையாக இருந்தது. அந்தப் பல் ஆடத்தொடங்கி விட்டது. இருபது வருட இருப்பின் ஆட்டம் அது. பேஸ்ட்ரியை ஏறிய மனமில்லாமல் பைக்குள் வைத்துக்கொண்டு சோகமாக நடக்கத் தொடங்கினேன். இன்னமும் அந்தப் பல் விழவில்லை. ஆடிக்கொண்டே இருக்கிறது. ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. கொடுப்பிற்குள் வைத்து சாப்பிடுவதற்கு என்ன பிரச்சனை என்று கேட்டீர்களா? காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தாற் தான் தெரியும் என்று கடந்துவிடுகிறேன். அந்த இடத்தில் மீண்டும் பல் முளைக்குமா தெரியவில்லை. அப்படி முளைத்தாலும் அதற்கான இடம் சரியாக பொருந்துமா என்பது பெரிய பிரச்சனை. விழுந்தது பாற்பல். சிறியது . முளைக்காவிட்டால் ஓட்டை வாயாகிவிடும். சொத்தியாக முளைத்தால் சொத்திப்பல். இப்படிப் பல பிரச்சனை.
ஆனால் இந்தப் பல் இப்போது துருத்துவது எனது சிறிய வயது ஞாபகங்களை மீட்டுகிறது. மற்றைய பற்கள் ஆடி விழும் போது ஏற்படுகின்ற பயம், பல் விழுந்த பின்னர் முரசில் இருக்கின்ற அதன் வேரை நாக்கால் வருடும் போது உருவாகும் சிலிர்ப்பு , நாக்கால் ஆடுகின்ற பல்லை விழும் வரை தள்ளித் தள்ளி ஆட்டுகின்ற சுகம் என்று அத்தனை சிறுவயது ஞாபகங்களை இரண்டு நாட்களாக என்னைப் பின்தொடர்ந்து வருகின்றது. ஆச்சி கொழுக்கட்டை கொட்டிவிடுவோம் என்றார். ஜோடியாக இருந்த பற்களில் ஒன்று இரண்டு மூன்று நாட்களுக்குள் விழுந்துவிடும். விழுத்திவிடுவேன். காதலர்கள் பிரியப்போகிறார்கள். பல்லியிடம் ஒரு பல் தஞ்சமடையப்போகிறது. இந்த முறை பல்லிக்கு பற்களைக் கொடுக்காமல் வருகின்ற கனவுகளுக்கு சமர்ப்பணம் செய்து அவ்வகைக் கனவுகளை சாந்தி செய்வோமா என்று தீவிரமாக யோசிக்கிறேன்.
“பற்கள் விழுவதான கனவுகளின் விளக்கம் – பற்கள் விழுவது தான் அன்றி வேறொன்றும் இல்லை.”

நகரத்தின் குறிப்புகள் – 04

நகரத்தின் குறிப்புகள் நான்கினை எழுதுவதற்காக எடுக்கப்பட்ட குறிப்புகளைத் தொகுத்துள்ளேன். இந்தக் குறிப்புகளை நான் பேரூந்தில் பயணிக்கும் போதும் பேரூந்திற்க்காகக் காத்திருக்கும் போதும் மேலும் வேறு சில இடங்களிலுமிருந்து எடுத்திருக்கிறேன். ஒழுங்கமைக்கப்படாத குறிப்புகளை தொகுப்பது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் எல்லாத் தனிமனிதர்களிடமும் குறிப்புகள் நிறையக் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரினதும் தினசரி வாழ்க்கையே மிகவும் நல்ல குறிப்புக்கள். புதிதாக ஒவ்வொருவரிடமும் பேசும் போதும் ஏதாவது ஒரு புதிய விடயத்தைச் சுவீகரித்துக்கொள்கிறேன். அப்படித்தான் எல்லோரும். வெளிப்டையாகப் பேசக்கூடியவை, பேசமுடியாதவை என்று அவற்றைப் பகுத்துக்கொள்ளலாம். சரி – இப்படியாக கொட்டிக்கிடக்கின்ற குறிப்புகளை ஒழுங்குபடுத்துவது தான் கஷ்டமான வேலை. இதனாற் தான் எல்லோரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. என்னுடைய குறிப்புகளை ஒழுங்குபடுத்துவதில் பலமுறை தோற்றுப்போனேன். போய்க்கொண்டிருக்கிறேன். அருணா சாய்ராமின் தர்பார் கச்சேரிகளைக் கேட்டுப்பாருங்கள். என்னால் ஏன் அவரைப்போல எழுத்துக்களைக் கோர்வையாகக் கோர்க்கமுடியவில்லை என்று கவலைப்படுகிறேன். எனக்கென்னவோ எழுத்தாளர் ஒருத்தர் கட்டாயம் இசையினைக் கேட்டு ரசிக்கவேண்டும் என்றே தோன்றுகின்றது. லாவகமாக ஸ்வரங்களில் ஏற்றங்களையும் இறக்கங்களையும் கையாண்டு காதுகளையும் ஆன்மாவையும் கட்டிப்போடும் தந்திரம் இசைக்கு அதிகமாக இருக்கிறது.
 
நகரத்தின் குறிப்புகள் மூன்றைப் பற்றிய சில சோகக் குறிப்புகளைக் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன். இருபத்து மூன்று பேர்களால் முகப்புத்தகத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. எனது தளத்திலும் அதேயளவு தான். பேரூந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்து நகரத்தின் குறிப்புகள் மூன்றின் மோசமான நிலைமையை யோசித்துக்கொண்டு வீடுநோக்கி திரும்பினேன். மூன்றாவது குறிப்போடு நிறுத்திக்கொண்டாலும் கேட்பார் யாருமில்லை. இராசயனவியலில் ஊக்கி முன்னிலையில் மட்டும் தான் சில தாக்கங்கள் நிகழும் என்பதைப்போல – பேரூந்தில் யோசித்துக்கொண்டே கொளுத்தும் வெயிலில் 155 இல் வந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தமது சுற்றத்தைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஜோடி ஒன்று இடைவிடாது காதலில் குழைந்துகொண்டிருந்தார்கள். காதல் என்பது முடிவில்லாத குழைவின் ஆதியூற்று. தனியாக இருவருக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய விரட்டமுடியாத பிரம்மை. மொத்த சமூகத்திலிருந்து இருவரை தனிமைப்படுத்தி ஒவ்வொரு கணத்தையும் ஆராதிக்கவைக்கும். இத்தனை சொற்களின் உருவமாக ஒரு ஜோடி. முன்னால் வீதியில் விபத்தொன்று என்றாலும் வயோதிபர் ஒருத்தர் நிற்க முடியாமல் நின்றாலும் இன்னமும் எத்தனை துன்பம் சூழ்ந்தாலும் அவர்கள் ஆராதித்துக்கொண்டே இருப்பார்கள்.  
 
எனக்குள் பல வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வாழ்க்கை போதவில்லை. ஒரே பிறப்பில் நான் விரும்பும் வாழ்க்கை அத்தனையையும் வாழ்ந்து தீர்த்துவிட முடியாது. இந்த வாழ்க்கை போதாமையின் குறியீடு. இயலாமையின் ஆக்கிரமிப்பு. பெரும்பாலானவர்களால் அவர்கள் விரும்பும் ஒரேயொரு வாழ்க்கையைக் கூட வாழ்ந்து தீர்த்துவிட முடியவில்லை. அப்படியிருக்க நான் விரும்பும் அசாத்திய வாழ்க்கைகளை எழுத்துக்கள் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போதாமையாலும் இயலாமையாலும் நிறைந்து போன வாழ்க்கைக்கு சமாந்தரமாக ஒவ்வொரு வாழ்க்கையையும் புனைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நிசப்தத்திற்குள் சஞ்சாரம் செய்கிறேன். இருத்தலின் பெருவெளிக்குள் நுழைகிறேன். உலக இன்பங்கள் அனைத்தையும் வாழ்ந்து தீர்க்கிறேன். புனைவுலகத்தை ஆராதிக்கிறேன். ஆக இப்போது நகரத்தின் குறிப்புகள் நான்கினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
 
பெரும்பாலான வேளைகளில் சிங்களப் பாட்டுகளைக் கேட்கும் போது உச்சக் கோபம் அடைவேன். கேட்பொறியினை மறந்து பேரூந்தில் ஏறினால் அதோகெதிதான். சிங்களவர்களின் அநேகமானோர் மிகவும் அழகானவர்கள். ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்பதனால் என்னை இலகுவாகக் கவர்ந்துவிடுவார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற ஹிந்தி நாடக நடிகைகளை விட சிங்களப் பெண்கள் அழகானவர்கள். எனது சிங்கள நண்பர்களுடன் இரண்டு நீண்ட பயணங்களைச் செய்திருக்கிறேன். பயணங்களின் போது மேலே ரபானைக் கொண்ட  நீண்ட குழலின் ஒரு பக்கம் கம்பிகளால் இழுக்கப்பட்ட இசைக்கருவி ஒன்றி தட்டிப் பைலா பாடினார்கள். குதூகலத்துடன் பைலை சேரும்போது துடிப்பு இன்னும் அதிகரிக்கும். என்னிடம் தமிழில் பைலா பாடச்சொன்னார்கள். எதைப் பாடுவது? சிங்களவர்களிடம் பைலா என்ற ஒரே ஒரு இசை வடிவத்தைத் தவிர கேட்டு ரசிக்குமளவு வேறெந்த இசை வடிவமும் கிடையாது. ” சமணலயா ” என்று தொடங்குகின்ற பாடல் ஓரளவு ரசிக்கக் கூடியமட்டிலிருக்கும். இதைத்தான் சிங்களவர்களின் சுதேச இசை வடிவம் எனப்போகிறீர்களா? அவர்களின் தோற்றத்திற்கும் ரசனைக்கும் அணுவளவு கூட சம்பந்தமில்லை. அண்மையில் தமிழில் பைலா ஒன்றை  ரசித்தேன். பைலா என்றவுடன் டொங்கு டொங்கு என்ற சந்தத்தில் கத்துவது மட்டுமல்ல. இஷா யோக மையத்தில் 2013 ஆம் ஆண்டு அருணா சாய்ராம் பாடிய “மாடு மேய்க்கும் கண்ணே” என்ற தமிழ் பைலாவைக் கேட்டுப்பாருங்கள். பேரூந்தில் ஏறி அத்தனை கத்தலுக்கும் கதறலுக்கும் மத்தியில் அமைதியாகத் தியான நிலையில் இருக்க நான் ஒன்றும் சத்குரு அல்ல. சாதாரண மனிதன்.
 
இதை எழுதும் போது இன்னொரு நிகழ்வும் ஞாபகத்திற்குள் வருகின்றது. மலை நகரத்திலிருந்து சொந்த நகரத்திற்கு பேரூந்தில் வந்துகொண்டிருந்தேன். கூடவே சித்தாவுமிருந்தார். ஏறிப் பத்து நிமிடத்தில் பிக்குவின் போதனைகளைப் போடத்தொடங்கினார்கள். மூன்று மணித்தியாலம் அளவில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டிய கொடுமை. இடையில் காசு போனாலும் பரவாயில்லை வேறு பேரூந்தில் ஏறிவிடுவோமோ என்றும் நினைத்தேன். சித்தா இல்லாவிட்டால் கட்டாயம் ஏறியிருப்பேன்.
 
இதை எனது அவதானம் என்றுகூடச் சொல்லலாம். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். எனது தினசரிப் பிரயாணம் நீண்ட நேரத்தை எடுக்கும் என்பதனால் குளிரூட்டப்பட்ட சிறிய ரக பேரூந்தில் பயணிப்பது அதிகம். இயலாத கட்டத்தில் சாதாரண பேருந்துகளிலும் பயணிப்பேன். குளிரூட்டப்பட்ட பேரூந்தின் நடத்துனர் என்னிடம் இயங்குகின்ற விதமும் சாதாரண பேரூந்தின் நடத்துனர் என்னிடம் நடந்துகொள்ளும் விதமும் வித்தியாசமானவை. மேலே தேவை கருதி நான் எனப் பாவிக்கிறேன் – பயணிகள் என்றும் வரலாம். குளிரூட்டப்பட்ட பேரூந்தின் ஓட்டுநர் மிகவும் குளிர்மையாக கையாளுவார். பேச்சிலும் நடத்தையிலும் அமைதியும் நிதானமுமிருக்கும். அதே போல எரிச்சற்படமாட்டார். காசுத் தாள்களை நேர்த்தியாக அடுக்கிவைத்தத்திருப்பர். மிகுதிப்பணம் உடனே இல்லை என்றால் பண்பாகக் கூறி மறக்காமல் தந்துவிடுவார். சாதாரண பேருந்துகளின் நடத்துனர்கள் பெரும்பாலும் இவர்களுக்கு நேரெதிர். மீதிப்பணத்தை நாங்களாகக் கேட்டாலன்றிக் கிடைக்காது. ஒரு வேளை சாதாரண பேருந்துகளை வாட்டுகின்ற உஷ்ணம் ஒரு காரணமாகவிருக்கலாம். சனநெருக்கடிக்குள் லாவகமாகப் புகுந்து எல்லோரிடமும் காசு வாங்குவது கஷ்டமான காரியம். ஏறுபவர் இறங்குபவர் என்று இருவரையும் கண்காணிக்கவேண்டும். கொஞ்ச நெருக்கடியான கூட்டம் என்றாலே போதும் நடத்துனர் நிதானமிழக்க. குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் நெருக்கம் என்பது அரிதான ஒன்று. அதனால் நிதானமாக டிக்கட்டுகளை கொடுக்கமுடியும். எல்லா நிறுத்தங்களில் நிற்காது. வேகாமகப் பறந்துவிடும். இப்படியான சில காரணங்களால் எனக்கு குளிரூட்டப்பட்ட பேரூந்துகளையும் அவற்றின் நடத்துனர்களையும் இயல்பாகப் பிடித்துப்போகிறது.
 
255 பற்றி சொல்லியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பயணம் தான். இந்தப் பயணம் பழகிப்போனால்  உலகத்தில் எந்த நெருக்கடியான பேருந்துகளிலும் சாதாரணமாகப் பயணித்துவிடலாம். இனி ஏற்ற இடமில்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகும் நடத்துனர் ” இஸ்ஸர யண்டகோ  மஹத்தையா ” என்று சத்தமிட்டு எங்காவது சிறிய இடம் தெரிகிறதா என்று பார்த்துத்தான் பேரூந்தை நகர்த்துவார்கள். எவ்வளவு சுத்தமாக குளித்து வந்தாலும் நேர்த்தியாக உடைகளை அழுத்தி வந்தாலும் இறங்கும் போது கந்தல். அத்தனை நெருக்கமான கூட்டத்திலும் ஈ ஒன்று நகர்வதைப்போல நடத்துனர் நுழைந்து வந்து டிக்கட் தந்துவிடுவார். பொதுவாக நடத்துனர்கள் மெல்லியதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 255 எவ்வளவு பிரசித்த பெற்ற பேரூந்து என்றால் – பல்கலைக்கழத்தில் சிறுகுறிப்பு வரைய சில தலைப்புக்கள் தரப்பட்டன. அதிலொன்று 255 பேரூந்தில் அனுபவம். 255 என்றாலே உடம்பு வியர்க்கத் தொடங்கிவிடும்.
 
நான்கிற்கான குறிப்புகளைத் தருவதாகக் கூறிவிட்டு முழுவதையும் எழுதிவிட்டானே என்று யோசிக்கிறீர்களா?
 
அருணா சாய்ராமின் ” மாடு மேய்க்கும் கண்ணே ”

என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/
 
17390475_10210283695026705_7652377388685012484_o

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள்
உங்கள் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ”
– எஸ். போஸ்

” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ”
– காசுவோ இஷிகுரோ
உன்னதம் இதழில் வெளிவந்த ” என்னைப் பேசவிடுங்கள் ” பத்தி.
வாசிக்க –
http://unnatham.net/என்னைப்-பேசவிடுங்கள்/

நகரத்தின் குறிப்புகள் – 03

நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். முன்னால் கூனியபடி தலைக்கு முக்காடு மாதிரி ஒன்றால் மூடி சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார்.
பயணங்களின் போது நான் அருகிலிருப்பவர்களோடு பேசுவது மிகவும் குறைவு. தெரிந்தவர்கள் வந்தாலன்றி பேசுவதே இல்லை என்றுவிடலாம். பெரும்பாலும் இரண்டு நகரங்களுக்குத் தான் அதிகமான பயணங்களைச் செய்துள்ளேன். இரண்டும் எதிர் எதிர்த் திசையில் உள்ளவை. முதலாவது நகரத்திற்கு அதிகாலையில் போய் நடு வெயிலிற்கு திரும்பி விடுவேன். இரண்டு மூன்று மாதங்களை தொடர்ச்சியாக இதே போக்கினைப் பின்பற்றினேன். அதிகாலையில் நித்திரைக் குறையில் பேரூந்தில் ஏறுவதால் மிகுதி நித்திரையை பேருந்திலேயே முடித்துவிடுவேன். இதன் காரணமாக யாரிடமும் காலையில் பேசுவது கிடையாது. மத்தியானமும் இதே பிரச்சனை தான். கொளுத்துகின்ற வெயிலில் பேரூந்தில் ஏறி இரண்டரை மணித்தியாலங்கள் இலகுவாகக் கடக்க ஒரே வழி நித்திரை தான். இதனால் முதலாவது நகரத்தின் பேரூந்துப் பயணங்களில் எந்த நிகழ்வுகளும் மனதில் தங்கியதே கிடையாது. அப்படி ஏதாவது ஒன்றிரண்டு ஞாபகம் இருக்கும் என்றால் அது – நடத்துனர் பயணச் சீட்டுக்காக ஆழ்ந்த நித்திரையை குழப்பிய சந்தர்ப்பங்களாகவே இருக்கும்.
 
இரண்டாவது நகரத்தின் பயணங்களை இருட்டிலேயே தொடங்கி இருட்டிலேயே முடிந்து விடும். இரவு பதினொன்றிக்கு ஏறினால் காலை நான்கு முப்பத்திற்க்கு இறக்கிவிடுவார்கள். நினைவில் நிற்கக் கூடிய சம்பவங்கள் இருந்தாலும் மனிதர்கள் யாருடனுமே பேசிக்கொள்ளவில்லை. நினைவில் அதிகமாக நிற்கிற ஒரே விடயம் – இஞ்சி தேத்தண்ணீர். நடு ராத்திரி ஒன்று முப்பது மணியளவில் பேரூந்து கடை ஒன்றின் அருகில் நிறுத்தப்பட்டு சாப்பிடவும் மலசலம் கழிக்கவும் நிறுத்துவார்கள். அங்கே இருபது ரூபாய்க்கு இஞ்சி தேத்தண்ணீர் நல்ல சுவையாக இருக்கும். நடு ராத்திரிக்கு சூடான தீத்தண்ணீர் அருமையான பொருத்தம். இரண்டாவது நகரத்தில் நீண்ட நாட்கள் தங்கிவிடுவதால் அங்கிருந்து திரும்புவதும் இதே போன்ற ஒரு இருட்டிலேயே நடந்துமுடிந்துவிடுகிறது. எஸ் ராமகிருஷ்ணன் எதிலோ எழுதியது போன்ற ஒரு ஞாபகம் இருக்கிறது. சரியாக அதே வசனங்கள் இல்லா விட்டாலும் இதே கருத்தையே தரும். ” நான் பயணங்களின் போது மனிதர்களுடன் நட்புக்கொள்வது இல்லை. குறுகிய நேர இடைவெளியில் முடிந்து விடுகிற நட்புக்கள் வருத்தத்தை தருவன.” ஆனால் அவர் சொல்வதைப்போல நான் கொள்கை கோட்பாடுகளுடன் பயணங்களில் மனிதர்களை தவிர்த்தது கிடையாது.
இப்படியிருக்க நகரத்தின் குறிப்புகள் 03 இன் ஆரம்பத்தில் வருகின்ற அம்மா எங்கிருந்து வந்தார் என்ற கேள்வியுடன் தொடர்கிறேன். இரண்டாவது நகரத்தில் – இந்தக் கணத்திலிருந்து “நகரம்” என்றே அழைப்போம் – நான் இருக்கின்ற வீட்டிலிருந்து தினமும் போகவேண்டிய தூரம் 21 கிலோ மீட்டர். வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கி 1 கிலோமீட்டர் நடந்து பதின் மூன்று ரூபாய்க்கு முதலாவது பேரூந்து எடுத்து பின்னர் இறங்கி மீண்டும் 500 மீட்டர் அளவு தூரம் நடந்து முப்பத்தைந்து ரூபாய்க்கு இரண்டாவது பேரூந்து எடுத்து நீண்ட நேரம் – கிட்டத் தட்ட ஒன்றரை மணித்தியாலம் பயணம் செய்து இன்னொரு சந்தியில் இறங்கி மூன்றாவது பேரூந்து 10 ரூபாய்க்கு எடுத்து போய்ச் சேர்வேன். ஒரு நாளில் இரண்டு முறை இதே மாதிரியாக பயணம் செய்யவேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் போகவும் வரவும் செலவாகிவிடும். இனி வருகின்ற காலங்களில் இப்படியான சாத்தியம் மிகவும் குறைவாகிவிடும். ஏனென்றால் தினமும் போகவேண்டிய இடத்திற்கு மிகவும் அருகிலேயே வீடுபார்த்து போய்ச் சேர்ந்துவிடுவேன். அதனால்த் தான் நகரத்தின் குறிப்புகள் 03 – இந்த தினமும் நடக்கின்ற நான்கு மணித்தியாலப் பயணத்தைப் பற்றியதாக இருக்கப்போகிறது. முக்கியமாக அதில் சந்தித்த மனிதர்களைப் பற்றியது.
 
வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தேன். பின்னாலிருந்து ஒரு கை என்னைத் தட்டியது. அப்போது பேரூந்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அல்லது வாழ்வது போல தோற்றமளிக்கின்ற இடங்களினூடாக நகர்ந்துகொண்டிருந்தது. என்னைத் தமிழர் என்று எப்படி அடையாளம் கண்டுகொண்டார் என்பதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால்த் தமிழில் ,”ஒரு அம்பது ரூபா இருக்கா? டிக்கெட் எடுக்க காசில்லை.” என்றார். பார்க்க எழுபது மதிக்கத்தக்கவர். முன்னால் கூனிப்போய் தலைக்கு முக்காடிட்டிருந்தார். ஆனால் முஸ்லிம் இல்லை.
நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். தொடர்ந்து போகப் பணமில்லைப் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
 
எனக்கு கிடைக்கின்ற இந்த நான்கு மணித்தியாலங்களைப் பெரும்பாலும் வாசிப்பதற்கும் இசையை கேட்பதற்கும் பயன்படுத்திக்கொள்வேன். எப்போதுமே எனது பையுக்குள் ஒரு புத்தகம் இருக்கும். கனமான புத்தகங்களை எடுத்துச்செல்லமாட்டேன். மெல்லிய புத்தகங்கள் தான. கூடவே இயர் போன்களும். பயணங்களின் போது வாசிப்பிற்கு சிறந்தது எது என்று தெரியவில்லை. சிறிய புத்தகங்கள் எதுவாயினும் அதை எடுத்துக்கொண்டு போய்விடுவேன். முதன் முதலாக வசித்த புத்தகம் யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடம். பின்னர் பிரமிள் என்று நீண்டு செல்லுகிறது. இதுவரைக்கும் பயணங்களின் போது – நான் அவதானித்ததன் படி ஒரே ஒருத்தர் மட்டும் தான் புத்தகம் ஒன்றினை வாசித்துகொண்டிருந்தார். சுற்றி நன்றாக உறையிடப்பட்ட சிங்களப்புத்தகம். மூக்குக் கண்ணாடி அணிந்தவாறே என்னை நோக்கிப் புன்னகைத்துவிட்டு யன்னலோரம் தள்ளி இருந்தார். வயது அறுபதைத் தாண்டியே இருக்கவேண்டும். முகம், கழுத்து, கைகள் எல்லாம் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அப்போது வைத்திருந்த புத்தகத்தை விடியவே வசித்து முடித்து விட்டபடியால் மீண்டும் அதை எடுத்து புரட்டுவது எனக்கு செயற்கையாக இருக்கும் எனத் தோன்றியது.அந்தப் பெண்மணியே நான் பயணத்தில் சந்தித்த முதலும் கடைசியுமான வாசகர்.
 
சரி, அந்த அம்மா இவை எதையாவது வைத்துத் தான் என்னைத் தமிழ் என்று அடையாளம் கண்டுகொண்டிருப்பாரோ என்றால்- அதுதான் இல்லை. அன்று இசை தான் கேட்டுக்கொண்டிருந்தேன். சந்தோசமாக வாங்கிக் கொண்ட அந்த அம்மா, அடுத்த தரிப்பிலேயே இறங்கி விட்டார். ஒரு வேளை எனது நகரத்தின் குறிப்புகள் இரண்டை வாசித்த கோபத்தில் யாரேனும் ஒரு பிச்சைக்கார அம்மா என்னைப் பழிவாங்கத்தான் இப்படி சதி செய்திருப்பாரோ? இருக்கவே இருக்காது. அதை வாசித்தவர்களின் எண்ணிக்கை தான் அறுபத்து ஏழு ஆயிற்றே.
 
கூறியது போலவே மெல்லிய புத்தகங்களைத் தான் எடுத்துச் செல்வேன். விதிவிலக்காவதுமுண்டு. இரவு வாசித்து முடியும் தறுவாயில்களில் நிறுத்தப்பட்ட புத்தகங்களைக் கொண்டுபோய் வாசிப்பதும் உண்டு. Umberto Eco இன் The Prague Cemetery என்ற நாவலை இப்படித்தான் வசித்து முடித்தேன். பின்னேரம் மணி இரண்டு அல்லது மூன்று தான் வரும். யன்னலோர இருக்கையில் இருந்து நாவலை விரித்து கைத்தொலைபேசியில் அகராதியையும் திறந்து வைத்துக்கொண்டு ஆரம்பித்தேன். பத்து பதினைந்து நிமிடங்களின் பின்னர் எனது அருகில் மத்திம வயதினையுடைய ஒருத்தர் வந்திருந்தார். நான் வாசிப்பதை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். இடையிலே ஒருமுறை திரும்பி சிரித்தேன். பதிலுக்கு அவரும் சிரித்தார். நான் இறங்கும் புகைவண்டி நிலையத்திற்கே அவரும் பயணச்சீட்டினை எடுத்துக் கொண்டதால் இனிவருகின்ற ஒரு மணித்தியாலமும் எமக்கருகில் இவர்தான் என்று முடிவாகி விட்டது. அவர் சிங்களத்தில் ஏதோ கேட்டார். எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் – இனி உரையாடல் ஆங்கிலத்திலேயே தொடரும்.
“its ok. do you read novels? ”
” yes ” a deep silence prevails.
and gain he started,
“are you from kerala? ”
” no, i am from ……… , tamil ” , he might be confused by my color and looks.
“oh! what are you doing? ”
” i am …………………in …………….”
“isnt it? not every one in that field read this kind of books. ”
” may be you are correct, but in tamil there is a writer called Sujatha, he is also ……………… , and he also wrote many novels , short stories, columns. he is a significant figure in tamil literature ”
” oh really. its exiting. ”
and again a deep silence between us. and again he didn’t ask any question.
இதை ஏன் இவ்வளவு விவரமாக எழுதவேண்டிய தேவை வந்தது என்றால் – என் பயணங்களில் இவரைத்தவிர வேறு யாருமே என்னிடம் புத்தகங்கள் பற்றிப் பேசியதே கிடையாது.இப்போது தான் எனக்குள் அந்தக் கேள்வி உதித்திருக்கிறது. நான் அங்கே நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றைப் பார்த்துவிட்டு கோபமாக –
” புத்தக கண்காட்சியின் எல்லா இடமும் சிங்கள புத்தகங்கள் நிறைந்து கிடந்தன. சிங்கள புத்தகங்களில் முழுமையானவையும் இலங்கையின் அச்சு துறையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டவை. சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சியும் விஸ்தரிப்பும் மேய் சிலிர்க்க வைத்தது. புனைவுகளும் அபுனைவுகளும் இந்த சிறிய தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தினரால் எழுதி குவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனிப்புத்தகம் என்றாலும் மக்கள் தொகையை விட அவர்களின் புத்தகங்கள் அதிகமானவையாகத் தான் இருக்கும். புத்தக வடிவமைப்பு சீரானதாக இருக்கின்றது. அட்டைப்படங்கள் அட்டைகள் காகிதங்கள் என்று எல்லாமுமே செய்நேர்த்தியுடன் இருக்கின்றது. அவர்களின் தனித்துவ இலக்கிய இருப்பிற்க்கான முயற்சியும் படைப்பூக்கமும் மேய்ச்சத்தக்கது. அதே நிலையில் எமது படைப்புக்கள்? ” என்று ……………புத்தக கண்காட்சி ………. என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். இதில் நான் கூறியிருப்பது போல பார்க்காமல் விட்டிருந்தாலும் ஒரு நாளுக்கு இருவர் கையில் புத்தகம் வைத்திருந்திருப்பார் என்று பார்த்தாலும் எத்தனையோ மனிதர்களை அல்லவா சந்தித்திருக்க வேண்டும்.
 
இந்தக் குறிப்புகள் முழுவதும் புத்தகங்களுடையே முடிந்து போய் விட்டது. ஆனால் இதைவிட ஞாபக அடுக்குகளில் பதிந்திருக்கின்ற சம்பவங்கள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவை நகரத்தின் குறிப்புகள் 04 ஆக வரலாம் – வராமலும் போகலாம்.ஆனால் உடனேயே நகரத்தின் குறிப்புகள் 03 ஐ எழுதத் தூண்டியது ஒரே விடயம் தான். எனது நகரத்தில் இருக்கும் போது பேருந்துகளை பாவிப்பதும் அரிது. வாழ்க்கையில் பத்து முறைக்கு குறைவாகத் தான் இருக்கும். பெரும்பாலும் துவிச்சக்கர வண்டி தான். இன்று சன நெரிசலோடு எதிரே வந்த பேரூந்தைக்கு இடத்தை விட்டு துவிச்சக்கர வண்டியை திருப்பும் போது தான் என் வாழ்க்கையில் முதன் முதலில் எனது நகரத்துக்குள்ளேயே ஓடுகின்ற பேரூந்தின் இலக்கத்தை அவதானித்தேன். அப்படிப் பார்க்கையில் 100 , 101 ,154, 168, 255, 255/1 என்பவை என் அனுபவங்களில் முக்கியமானவை தான்.
 
 

பொருட்காட்சி – இரவு ஒன்று முப்பது.

மணி இரவு ஒன்று முப்பது. குளிரூட்டப்பட்ட பேருந்திலிருந்து இறங்கி – பின்பக்கமாக சாப்பாட்டுக் கடைக்குள் நுழைவதற்காக நடந்தேன். முழு நித்திரைக் கலக்கத்தில் இருந்ததால் மந்தமான பார்வையில் இன்னொரு பேரூந்து எமக்கருகில் நிறுத்தப்பட்டிருந்தது. தனியார் பேரூந்து. மேலும் முன்னே நடந்து கடைக்குள் செல்வதற்கு முன்னர்- வழமையை விட அவ்விடம் அதிக சனக்கூட்டமாக இருந்தது , வெள்ளை தலைக்கவசத்துடன் பொலிஸார் வீதிக்குக் குறுக்க மறுக்க நடந்து திரிந்தார்கள், இருவர் அளவு நாடா கொண்டு வீதியின் நீளத்தை அளந்துகொண்டிருந்தார்; அந்த இடம் வழமையை விட விசித்திரமாக இருந்தது. அதுவரை தூக்கக் கலக்கம் குறையவில்லை. கடைக்குள் சென்று கறி ரொட்டி ஒன்றும் பிளேன் டீ ஒன்றும் வாங்கிக்கொண்டு வாசலில் நின்று நிதானமாக ஒவ்வொன்றாக அவதானித்தேன்.
வீதியில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிப் போயிருந்தன. அண்ணளவாக முப்பது மீட்டர் தூரத்திற்கு வீதியில் கீறல்கள். அப்படியே திரும்பி பேரூந்தைப் பார்த்தபோது தான் முழு நித்திரைக் கலக்கமும் கலைந்தது. எமது பேரூந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து – அதன் சாரதியால் நிதானமாக நிறுத்தப்படவில்லை என்பதை உணர்ந்தேன். விபத்து. எல்லோரும் அதைப்பார்த்துக்கொண்டுதான் நின்றார்கள். அவர்கள் கைகளிலும் தின்பண்டங்களும் குடிபானங்களும் இருந்தன. அந்த விபத்தின் நிகழ்த்துகைக்குப் பின்னரான காட்சியினை ரசித்துக்கொண்டிருந்தார்கள். தெளிவாக சுற்றிலும் பார்த்தேன். கடைக்கு அடுத்ததாக அவ்வளவு ஆழமில்லாத பள்ளம். அந்தப் பள்ளத்தில் விழாமலும் கடையுடன் மோதாமலும் வீதி நெடுகிலும் நிற்கின்ற மின்சாரக் கம்பங்களை முறிக்காமலும் அந்தரத்தில் ஆனால் பாதுகாப்பாக பேரூந்து நிறுத்தப்பட்டிருந்தது. கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழக்குவியலுடன் இடித்திருக்கிறது. மின்சாரக் கம்பம் இல்லை அது தொலைபேசி வயர்கள் செல்லுகின்ற கம்பம். அதுவும் இடையில் கொஞ்சமாக முறிந்திருந்தது. இவ்விடத்தில் இருந்த சைகைப்பலகை ஒன்றையும் பேரூந்து மோதி கிளப்பி விட்டதாக அருகில் நின்ற சிங்களவர் ஒருத்தருக்கு இன்னொருவர் சொல்லிக்கொண்டிருந்தார். வீதியில் வருகின்ற வாகனங்கள் வேகத்தை குறைத்து விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்க, போலீசார் முகங்களைக் கடுமையாக வைத்துக்கொண்டு – வாகனங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
நான் பேரூந்தின் மற்றைய பக்கமா நடந்து வந்தேன். அது தனியார் பேரூந்து. ஏறுகின்ற வாசலுக்கு அடுத்த ஆசனத்தின் கண்ணாடியில் வவுனியா – அனுராதபுர – கொழும்பு என்று சிங்களத்தில் எழுதியிருந்தது. பேரூந்தின் சாரதி ஆசனத்திற்கு மேல் இன்னமும் காற்றாடி சுழன்றது. உள்ளே ஒருத்தர் பொறிகளுடன் ஏதோ வேலைசெய்துகொண்டிருந்தார். யாரிடமும் இதைப்பற்றி விசாரிக்க மனம் வரவில்லை. அவர்கள் ஒரு பொருட்காட்சியை ரசிப்பது போல விபத்தின் காரணத்தையும் சாரதியின் சமயோசிதத்தையும் பற்றி பேசிக்கொண்டார்கள்.
எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் நானில்லை. கையிலிருந்த கறிரொட்டியை தூக்கி பற்றைக்குள் எறிந்துவிட்டு பிளேன் டீயினை உதடுகளுக்கு அருகில் கொண்டுவர மனமே இன்றி அதையும் பற்றைக்குள்ளே ஊற்றி நேராகக் கடைக்குள்ச் சென்று கோப்பையை வைத்து விட்டு எனது பேரூந்திற்குள் ஏறினேன். மணி இரண்டைக் காட்டியது. வழமையாக இங்கே பத்து பதினைந்து நிமிடம் தான் சாப்பிட நிறுத்துவார்கள். இப்போது அரைமணித்தியாலம் ஆகிவிட்டது. ஆசனத்தில் இருந்து முகப்புத்தகத்தைத் திறந்தேன். கிரிஷாந்த் “சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா! ” என்ற பாரதியின் பாடலைப் பதிந்து அதற்கு கீழே சுவேதா மோகன் பாடிய இணைப்பையும் வழங்கியிருந்தார். காதுகளுக்குள் கேட்பொறியை (headphone) அணிந்து பாடலை கேட்டேன்.
“நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!”
பொருட்காட்சி முக்கால் மணிநேரம் நடந்தது. பின்னர் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டனர். அத்தனை பொருட்காட்சியையும் ரசித்துப்பார்த்த அவர்கள் ஒவ்வொருவரது முகத்தையும் ஏறிக்கொண்டிருக்கும் போது உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ! “

நகரத்தின் குறிப்புகள் – 02

சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. நித்திரையில் போது உடலின் உஷ்ணம் தாங்கமுடியாமல் இருக்கின்றது. உண்மையில் நித்திரை என்பதைவிட அயர்ந்த நிலை என்பதே சரியாக இருக்கும். முதுகின் பின்னாலிருந்து நெருப்புத் தணல்களை பற்றவைத்து பிடித்துக்கொண்டிருபோல உணர்வேன். இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு முறையும் இரண்டு மணிக்கு ஒரு முறையும் கிடப்புக்கொள்ளாமல் எழுந்து விடுகிறேன். அதன் பின்னர் நிலையை மாற்றியும் இடத்தை மாற்றியும் நித்திரைகொள்ள பெரும் முயற்சியை எடுக்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு இரவு  தான் இது. இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதிய நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசிக்கும் போது சமீபத்தில் பார்த்த குறும்படம் ஒன்று ஞாபகத்தில்  வருகின்றது.
 
Emilie Muller 1994ஆம் ஆண்டு Yvon Marciano இனால் இயக்கப்பட்ட குறும்படம். ஒரே தளத்தில் நகர்கின்ற காட்சி அமைப்பு மட்டுமே இருக்கும். நடிகைக்கான தேர்வு ஒன்றிற்கு செல்லுகின்ற பெண் ஒருவரிடம், தேர்வினை நடத்துகின்ற இயக்குனர் அவளின் கைப்பைக்குள் இருக்கின்ற பொருட்களைப் பற்றி விசாரிப்பதாக நகரும். ஒவ்வொன்றைப்பற்றியும் அவளும் விவரணம் அளித்துக்கொண்டிருப்பாள். தேர்வு முடிய அவளும் கிளம்பிவிடுவாள். மற்ற வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த இயக்குனர் திடீரென்று அவளின் கைப்பை எதிரிலிருக்கும் தாங்கியில் தொங்குவதைப்பார்த்துவிட்டு எதிரிலிருப்பவரிடம் அந்தப்பெண் தனது கைப்பையை வைத்துவிட்டு சென்றுவிட்டாள், அதனால் அவளை போய் நிறுத்துமாறு கூறுவார். அதற்கு மற்றவர் அது இங்கு வேலை செய்யும் பெண்ணொருத்தியினுடையது என்பதை உறுதிப்படுத்த – இயக்குனர் வெளியில் சென்ற அவளை நோக்கி ஓடுவதாக குறும்படம் முடியும்.
 
இப்படியான ஒரு பெண்ணின்  பார்வை தான் இந்த நகரத்தின் குறிப்புகள் போலத்  தெரிகின்றது. எங்கிருந்தோ வந்தவன் ஒருத்தன் நகரத்தின் மீதுள்ள வெறுப்பில் எழுதுவது தான் இந்த நகரத்தின் குறிப்பு போலத் தெரிகின்றது. முதுகு மெதுவாக எரியத்தொடங்குகின்றது. மணி இரண்டைத்தாண்டிக்கொண்டு போகின்றது. மெதுவாக இரவு முடிந்து பஸ்ஸில் ஏறிட்டேன். பாதங்கள் புகுந்துள்ள சப்பாத்துக்களின் கணத்தை  என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு யன்னலோர இருக்கையில் இருந்து நகரத்தின் சாலை ஓரங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறேன்.
 
இது 21/08/17 அன்று எழுதிய டயரியிலிருந்து கத்தரிக்கப்பட்டது.
 
-“…….முதன்முதலாக பார்ப்பது அல்ல இது. எல்லா இடங்களிலும் இவர்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் இப்போது மட்டும் வித்தியாசமாகத் தெரிகின்றனர். எங்கள் இடங்களிலுள்ள பிச்சைக்காரர்கள் எனக்கு வித்தியாசமாகவும் புறம்பாகவும் தெரிந்ததில்லை. அவர்களையும் தினமும் பார்த்தவன் தான். ஆனால் இந்த நகரத்தின் பிச்சைக்காரர்கள் கண்களை உறுத்துகிறார்கள். நவீன உடைகளும் ஆடம்பர வாகனங்களும் வானுயர வளர்ந்து நிற்கின்ற கட்டடங்களுக்கும் மத்தியில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கின்றது…….”
 
பிச்சைக்காரர்கள் என்னும் போது ஆநாகரீகமாகத் தெரிகின்றதா? அப்படித்தானே நானும் நீங்களும் பேசிக்கொள்கின்றோம். பேசும் போது தெரியாத அநாகரீகம் எழுதும்போது மட்டும் தெரிவது ஏன்? நகரத்தின் குறிப்பில் பிச்சைக்காரர்கள் மிகவும் எளிமையாகப்  புகுந்து விடுகிறார்கள்.
 
21/08/17 டயரியில் இருந்து
 
-”……மிகவும் பிரசித்தி பெற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றின் முன்னர் உருளும் நாற்காலியில் எழுபது வயது மதிக்கத்தக்க வயதிபரையும் அவரின் அருகில் மனைவியையும் பார்க்கிறேன். இன்று காலை தான் அந்த காட்சியினைப் பார்த்தேன். ஒரு முழு பகலுக்குள் காட்சி மங்கிவிட்டது. அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றோ எப்படி இருந்தார்கள் என்றோ சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் அத்தனை சூழலிலும் புறம்பாகத் தெரிந்தார்கள்……”
 
அதனாலேயே தான் நாட்குறிப்பின் பக்கம் ஒன்றை நிரப்பியிருந்தார்கள். தொடர்ந்து பயணித்த நேரங்களை அவர்களை காணக்கிடைக்கவில்லை. அவர்கள் இருவரையும் அந்த நாளின் பின்னர் இன்று தான் இப்போது தான் உங்களுக்குச் சொல்லும் போது ஞாபகம் வருகிறது. அவர்களின் பின்னர் நான் கடந்து வந்த பிச்சைக்காரர்கள் பற்றி எழுதிய நாட்குறிப்புக்கள் இவை.
 
22/08/17
 
-”……..அவர்களைக் காணவில்லை. இன்னொரு வர்த்தக நிலையத்தின் முன்போ பிரார்த்தனை செய்கின்ற இடங்களின் முன்போ சென்றிருக்கக் கூடும். அதிக தூரம் அவர்களால் சென்றிருக்க முடியாது. தனது கணவனை உருளும் நாற்காலியில் இருத்திக்கொண்டு வயோதிபப்  பெண்ணால் எவ்வளவு தூரம் நடந்துவிட முடியும். என் கண்களுக்குப்  புலப்படாத தெரு ஒன்றில் இயலாத கணவனை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டுக்கொண்டிருப்பாள். இன்று இன்னொரு வயதானவரை உருளும் நாற்காலி ஒன்றில்  கண்டேன். நாற்காலிக்கு குறுக்கே தனது ஊன்றுகோலை வைத்து அதில் தனது கால்கள் இரண்டையும் கிடத்தியிருந்தார். கால்கள் இரண்டிலும் பாதங்கள் அற்றுப்போயிருந்தன. எஞ்சியிருந்த கால்களில் புண்ணும் சிதளுமாக பரவியிருந்தது. அவர் பிச்சை எடுப்பது போல தெரியவில்லை. ஆனால் அவரைச்சுற்றி சில்லறைகள் மட்டும் இருந்தன. இலையான்கள் புண்களை சுற்றிக்கொண்டிருந்தன. அவரால் தனது கால்களை அணிந்திருந்த சறத்தால் மறைத்திருக்க முடியும். ஏனோ அவர் செய்யவில்லை. இன்றைய நாள் முழுவதும் அவரின் சீழ் வடிகின்ற கால்கள் தான் ஞாபகத்தில் வருகின்றன. அவர் அத்தனை இயலாமைக்குள்ளும் ஏன் தற்கொலை பண்ணிவிடவில்லை. நானாக இருந்தால் தற்கொலை பண்ணியிருப்பேன். மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமான வீதி ஒன்றில் என்னால் இந்தக்கோலத்தில் இருக்க முடியாது……”
 
28/08/17
 
-”….எத்தனையோ பிச்சைக்காரர்களை கடந்து விட்டேன். ஆனால் அவள் நினைவை விட்டு போவதாகத் தெரியவில்லை. இந்தக்குறிப்பில் எழுதுவதன் மூலமாவது போகட்டும். பஸ் கடற்கரை அருகில் செல்லுகின்ற அகலமான வீதியின் முதல் தரிப்பிடத்தில் நிற்கின்றது. அவளும் இரண்டு வயது குழந்தையும் குறுகிய நேரம் நிறுத்தியிருந்த பஸ்ஸின் முன் இருக்கையிலிருந்து வேகமாக கைகளை ஜன்னலருகே நீட்டியபடி ஓடி வருகின்றார்கள். அவள் தான் கைகளை நீட்டாமல் குழந்தையின் கைகளை விரித்து ஜன்னலோரமாக நீட்டுகின்றாள். முன்னேயிருந்து இருபது ரூபாயும் சில்லறைகளை சில கை விசுக்கல்களும் கிடைக்கின்றது. தனது வாயிலிருந்து வெற்றிலை சிவப்பாக வடிய ஒவ்வொருவராக கடந்து என்னிடம் வருகின்றாள். நான் சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து குடுக்க, அவசரமாக எனக்கு பின் இருக்கைக்கு நகர்கிறாள். அவளின் கையிலிருந்த குழந்தை அழ – அவள் குழந்தையின் கைகளை மடக்கி வேகமாக உருவிட்டு மீண்டும் நீட்டவும் -பின் இருக்கையிலிருந்து பெண்மணி ஐந்து ரூபாயை நீட்டிப்  போடவும் -பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. அந்த ஐந்து ரூபாய் அந்தரத்தில் மிதந்து சிறிது தூரம் தள்ளி விழுந்தது. நான் கிளம்பிய பஸ்ஸிலிருந்து பின்னால் திரும்பி பார்க்க அவள் தனது குழந்தையை தரிப்பிடத்தில் இருத்திவிட்டு அந்த உருண்டு போன ஐந்து ரூபாயை எடுக்க ஓடிக்கொண்டிருந்தாள்…..”  
 
04/10/17
 
-”…..மீண்டும் நிறைய காலத்திற்கு பின்னர் ஒரு பிச்சைக்காரியினைப் பற்றி எழுதுகிறேன். நான் அப்போது கண்ணாடியைத் திறந்திருக்கவில்லை. அவள் கையில் ஐந்தாறு விளையாட்டு பொம்மைகள் பொருத்திய கீடேக்குகள் வைத்திருந்தாள். அதில் ஒன்றை வாங்குமாறு கைகளால் சைகை செய்துகொண்டிருந்தாள். உச்சி எரிகின்ற வெயிலில் அவள் வயிற்றில் குழந்தையுடன்  தலையை முக்காடிட்டுகொண்டு நின்றாள். அப்படி எத்தனையோ பெயரினைப் பார்த்திருக்கிறேன். நான் வேண்டாம் என்று சைகை செய்தேன். அவள் மீண்டும் பொம்மைகளைத்  தூக்கிகாட்டினாள். பின்னர் மெதுவாக கண்ணாடியைத் தட்டி இறங்குமாறு வேண்டினாள். இறங்கிவிட தேநீர் குடிக்க காசு கேட்டாள். கொடுத்து விட்டு கண்ணாடியினை மூடிவிட்டேன். அப்போது எனக்கு அந்த இருபது ரூபாய் பெரிதாகத்தெரியவில்லை. அவளும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தத் தாயினூடு வளரப்போகின்ற குழந்தை தான் என்னை உறுத்துகிறது. அன்றொருநாள் கண்ட அந்தக் குழந்தை போலத்தானே பஸ் தரிப்பிலோ அல்லது வேறொரு இடத்திலோ………..”
 
12/11/17
 
-”……..மீணடும் மீண்டும் பிச்சைக்காரர்களைப் பற்றிப் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் ஏதோ ஒரு வகையில் எனது நாளந்தத்திற்குள் வந்து போகின்றார்கள். எப்போதும் பயணத்தின் போது அவர்களைக் கடந்தே செல்கிறேன். எல்லாப் பிச்சைக்காரர்களும் என்னை ஈர்ப்பதில்லை. எவராவது ஓரிருவர் குறுகிய கால நினைவு ஒன்றை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த நினைவுகள் இன்னொரு பிச்சைக்காரரைப் பார்க்கும் போது மீட்டப்படுகிறது அல்லது மீட்டப்படாமலும் போகின்றது. அவர்களைப் பற்றி நெடுநேரம் யோசித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. எப்படி என்னால் எனது வாழ்க்கையைப் பற்றி பெரிதான மதிப்பீடுகள் இல்லாமல் கொண்டு நடந்த முடிகின்றதோ அதே போல அவர்களாலும் மதிப்பீடுகளுடனோ அல்லது எந்த மதிப்பீடுகளும் இல்லாமலோ வாழ்க்கையை வாழமுடிகின்றது . அந்தக் கால்கள் அழுகிய பிச்சைக்காரன் ஏன் தற்கொலை பண்ண வேண்டும்? அவனை விட அதிக பிரச்சனைகளுடன் சாதாரணமாக கண்ணுக்கு தெரிவோர் எத்தனை பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்…….”
 
நீங்களும் நானும் பிரச்சனைகள் இல்லாமலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க ஏன் பிச்சைக்காரர்கள் மட்டும் என் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்கள். இப்போதெல்லாம் நான் குளிரூட்டப்பட்ட பஸ்களிலேயே பயணம் செய்கிறேன். ஜன்னல் திரையை இழுத்துமூடிவிட்டால் பாதைகளும் தெரியாது பாதையோரங்களில் நிற்கின்ற பிச்சைக்காரர்களையும் தெரியாது. இனி ஒரு முறை எனது நாட்குறிப்பில் அவர்களைப்பற்றிய சேதி எதுவும் இருக்காது.
 
இன்று வேண்டும் என்றே ஜன்னலினூடாக சாலையோரத்தைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். இப்போது பிச்சைக்காரர்கள் என் பார்வைக்கு புறம்பாகவும் விசித்திரமாகவும் தெரியமாட்டார். அவர்களைத்தான் நான், என்னைப்போல சாதாரண மனிதர்களாக நினைவில் நிறுத்திவிட்டேன். இன்னமும் யாரும் எங்களுக்கு பிச்சைக்காரர்களாகத் தெரியவில்லை. உண்ணிப்பாக கவனிக்கிறேன். அதோ அந்த பிரதான தெருவிலிருந்து பிரிந்து செல்கின்ற கிளைத்தெரு ஒன்றின் மூலையில்……….