“வினோத நூலகம் – வாசிப்பறிமுகம் – ஹருகி முரகாமி”

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka on the Shore (2002), மற்றும்   1Q84 (2009–10) என்பன குறிப்பிடத்தக்கன.
வினோத நூலகம் குறுநாவல் வகையை சேர்ந்த இலக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் Novella என்று அழைப்பார்கள். அளவில் இது குறுநாவலாக கருதப்பட்டாலும் பேசுகின்ற கருத்தளவில் இதை சிறுகதையாகவே கருதுகிறேன். இதை தமிழில் ஜி.குப்புசாமி மொழி பெயர்த்துள்ளார். மிகவும்நேர்த்தியான மொழி பெயர்ப்பு. விமர்சகர்காளால் ஒற்றை தளத்தில் நகர்கின்ற கதை என விமர்சிக்கப்பட்ட வினோத நூலகம், என்னளவில் மிகவும் சிறந்த படைப்பு ஆகும். எளிய மொழி நடையில் எழுதுகின்றமையால் இவ்வாறானதொரு விமர்சனம் எழுந்திருக்கலாம். முரகாமி மென்மையாக எழுகின்றவர். நவீன இலக்கியத்தின் முக்கிய பண்பான சொற்சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். குறுகிய மையக்கருத்தை வைத்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துபவர். இதை நுண்மையான கருத்தின் பெரும் உரையாடல்கள் எனலாம். வினோத நூலகமும் அதன் பிரதியே.
கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகன் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் விநோதநூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்களினூடு உணர்வுகளை கடத்திச்செல்கின்ற குறியீடு கதை முழுவது காணப்படுகின்றது. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லலாம். அக உணர்வுகளை , தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்கின்ற தன்மை மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திகொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆனா தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளை கடத்துகின்ற பிரதியே. மேலோட்டமான வாசிப்பில் சம்பவங்களின் கோர்வை போன்ற உருவம் இருந்தாலும் சம்பவங்கள்  கடத்துகின்ற உணர்வுகள் பின்னைய கால ஆழ்ந்த வாசிப்பில் உணரப்பட்டன. கட்டமைப்பு மீறலை செய்கின்ற பின் நவீனத்துவ முயற்சியாக இதை கருதுகின்றேன். ஹருகி முரகாமியை அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.
வினோத நூலகம், ஒரு உணர்வின் பன்மை பரிமாணம் பற்றிய விரிப்பு. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய, ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டி இன்னொரு அக உலகினை கட்டுமானம் செய்கின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக்கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்காளால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லக்கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதன் உருவாக்கிகொள்வான். இதையே உணர்வு ஒன்றின் பன்மைப் பரிமாணம் என்கிறேன். விநோதநூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தனின் பன்மைப் பரிமாணம் பற்றியது.
தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகம் தான் வினோத நூலகம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அவனுக்கு அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது. அதுவரை அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று அவனுக்கு தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய சோகமான உருகல் அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாகுகின்றது. அதுவே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிகின்றார்.
அந்த அறையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.
“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.”
அவனை வதைக்கின்ற பிரிவு– அவனை பழைய உணர்ச்சிகளுக்குள் உழல வைக்கின்றது. தனது தாய் அவனை தேடுவார் என்றும்; தனது கிளி தன்னை தேடும் என்றும் பிரிவின் பெரும் துயரை ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுகொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவானது ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.
“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
பாதாள அறையில் பேசுகின்ற விடயங்களும் சம்வங்களும் விசித்தரமானவை. பொதுவாக முரகாமி இப்படியான சேரலிச முறைமையை அதிகம் தனது படைப்புகளில் பயன்படுத்துவார். இதனாலேயே ஜப்பானிய சமூகத்தினரால் வேற்றுமொழி எழுத்தாளராக விமர்சனமும் செய்யப்பட்டார். ஆனால் அவரின் பெரும்பாலான படைப்புகள் தன்னிலை எழுத்துக்களாகவே இருக்கும். இது ஜப்பானியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற முறையாகும். வினோத நூலகமும் தன்னிலையில் எழுதப்பட்ட கதையாகும். பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகி பின்னர் ஒரே பாத்திரமாகி அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறும். இதை நிலை மயக்கமாக முரகாமி எழுதுகின்றார். இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன் , குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள்.
இதே வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாகவும் கருத முடியும். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலக கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்க கூடிய கொடிய உணர்ச்சி மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூடிய கனவாக முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இதை வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முகாமி வடிவமைத்திருப்பார்.
அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரகாமியின் இந்த நுட்பங்களின் கூட்டாக விநோதநூலக்த்தை எழுதுகின்றார். பின் நவீனத்துவ எழுத்துக்களில் முக்கியமான பிரதியாக வினோத நூலகம் அமைகின்றது.
வினோத நூலகம் குறுநாவலை வாசிக்க
 
வினோத நூலகம் வாசிக்க
*** ஹருகி முரகாமி பற்றிய நேர் மறை விமர்சனங்கள் இன்றைய சூழலில் அதிகமாக எழுந்துகொண்டு இருக்கின்றது. முரகாமி பற்றிய விவாதம் தேவையான ஒன்று. அது அவரின் படைப்புக்களை அணுகுவதைப் பற்றியதாக இருக்கவேண்டும். முரகாமி உருவாக்கிக்கொண்டுள்ள மொழி பற்றியும் நுட்பங்கள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உரையாடப்படவேண்டும். மிக இலகுவாக அவரைப் புறம்தள்ளி விடமுடியாது. சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் வாசகர் கடிதம் ஒன்றில் கேட்கப்பட்ட முரகாமி பற்றிய கேள்விக்கு, “முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.” என்று நகைச்சுவையாக பதிலளித்திருப்பார். அன்றிரவே முகப்புத்தகம் மூலமாக நானும் ஜி.குப்புசாமியும் இதைப்பற்றி குறுகிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அனோஜன் பாலகிருஷ்ணன்,”ஹருக்கி முரகாமி‘யின் கதைகளைத் தேர்ந்த இலக்கிய கதைகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடிவதிவில்லை. கடினப்பட்டு நான் வைத்திருக்கும் இலக்கிய போத்தலுக்குள் அவரை நுழைத்தாலும். பிடிவாதமாக திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ஆனால், ஆங்கிலம் வழியேயான வாசிப்புக்குள் நுழைய அவரின் கதைகள் கைகொடுக்கும். மிக எளிமையான நடை. பிடித்து மேலேறிவிடலாம்.” என்று முகப்புத்தக பதிவொன்றினை இட்டிருந்தார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முரகாமியின் வினோத நூலகம் என்ற சிறுகதை/ குறுநாவலுக்கு வாசிப்பறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயமோகனின் பதிவு– http://www.jeyamohan.in/98517#.WfIhxVuCzIU

ஒழிதல்

என் அறையில் என்னைத்தவிர

மூன்று பிசாசுகள் உள்ளன;

 

எல்லாமே என்னோடு

நன்றாகப் பேசும்,

அதனால் ஒன்றும் சத்தம் கேட்கப்போவதில்லையே.

 

எல்லாம் என்னோடு

சேர்ந்து வாசிக்கும்,

பெரும்பாலும் என்னை விட அதிகமாக.

 

எப்போதும் அழுதபடியே இருக்கும்,

அவை நினைத்தபடி

அவற்றால் வாழமுடியாததை எண்ணி.

 

அவை ஒரு போதும் தூங்காது,

என்னை தூங்கவும் விடாது – நீங்கள்

எப்போவதாவது அவற்றைப் பார்த்தால்

தயவு  செய்து தூங்கச் சொல்லுங்கள்.

 

நான் இருக்கும் கதிரைக்கு

செங்குத்தாக ஒவ்வொரு திசைகளில்

இருந்துவிடும்,

நான் புத்தகம் ஒன்றை படிக்க எடுத்தால்

அவற்றை வேண்டி அலறல் செய்யும்.

நான் கணத்துக்கு கணம்

புத்தகத்தை செங்குத்தாக

மாற்றியபடியே இருப்பேன்.

 

அவற்றில் ஒன்று மிகவும் அசிங்கமானது.

எதையாவது தேடியபடியே அலையும்,

கட்டிலுக்கு கீழ்

மேசைக்கு கீழ்

உடைகளுக்குள்

தண்ணீர் கோப்பைக்குள்

என் முதுகின் மேல்

 

ஒரு முறை பழைய துணி ஒன்றை எடுத்து

அதன் அசிங்கமான முகத்தை இறுக்கி கட்டியது,

கண்கள் மட்டும் தெரியும் படி.

 

விரைந்து என் புத்தக அலமாரிக்குள்

நுழைந்து கொண்டது,

முக்கி முனகி

ஒரு புத்தகத்தை எடுத்துவந்தது.

 

அவற்றில் இன்னொன்று மிகவும் கறுப்பானது.

வெயில், மழை, காற்று, புயல்

எதுவுமே ஒரு பொருட்டல்ல.

 

புழுக்கள் மிதக்கும் வீதியின்

எல்லா மூலைகளுக்கும் எல்லா எல்லைகளுக்கு

வெறிபிடித்துப்போய் அலையும்.

 

கால்களில் சிதழ் வடிகின்ற

பிச்சைக்காரனுக்கு அருகில் போய் நின்று கொள்ளும் ;

வாய்முழுக்க வெற்றிலை வெடுக்கு வீசும்

கைகளில் சிறுகுழந்தையை வைத்திருக்கும்

நாடோடிக்கு அருகில் போய் நின்றுகொள்ளும்;

கால்களை இழுத்துக்கொண்டு

சதைப்பிண்டங்களாக அலையும்

ஊனமுற்றவர்கள் பின்னால் அலைந்து திரியும்.

 

சேரிகளில் அருகில்

புளுத்துக்கொட்டிப்போய் அசையாமல்

திரண்டு போயிருக்கும் கழிவுக்கால்வாயின்

அருகில் போய்நின்றுகொண்டு

உரத்து கத்தும்;

வெருண்டுபோய்

மீண்டும் உரத்துக்கத்தும்;

படிந்துபோயிருக்கின்ற

நூற்றாண்டுக்கழிவுகளின் திண்ம திட்டுக்கள்

அதிர்ந்து போகுமளவு- ஆனால்

என்னைத்தவிர யாருக்கும் இது கேட்பதேயில்லை.

 

மூன்றாவது மிகவும் நல்லது,

எப்போதும் தூக்கியபடியே இருக்கும்.

அதற்கு

இம்மையும் மறுமையும் கிடையாது;

இரவும் பகலும் கிடையாது;

தனிமை சேர்க்கை கிடையாது;

இன்பம் துன்பம் கிடையாது;

காதல் வெறுப்பு  கிடையாது;

சிரிப்பு அழுகை  தெரியாது.

 

இறப்பை எதிர்பார்த்துக் கிடைக்கும்

ஒரு துண்டுப் பிண்டம்.

அவற்றிக்கு செல்கள் சுவாசிக்கும் சத்தம் கேட்கும்,

இறந்த செல்கள் அழிந்து நொறுங்கும் சத்தம் கேட்கும்.

இவைபோதாதா?

 

இருட்டில்

பெரிதாக எதுவும் தெரியப்போவதில்லை என்ற

நம்பிக்கையில் தான்

புரண்டு புரண்டு தூங்கும்.

 

நீங்கள் நினைக்கிறீர்களா

இவற்றோடு என்னால் இயல்பாக

இயங்க முடியும் என்று,

 

ஒரு பெரிய

பொலிதீன் பைக்குள்

தவளையைக் கட்டி

வெறும் தரையில் விட்டது போலத்தான்;

 

துள்ளும் போதும்

நகரும் போதும்

புரளும் போதும்

அறையின் சுவர்களில்

முட்டி மோதிக்கொள்கிறேன்,

 

என்னைப்பார்த்து சிரித்தபடியே

மூன்றும்;

இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

Big Bad Wolf Books – Numero Zero

நீண்ட நாட்களாக நடைபெற்ற Big Bad Wolf Books புத்தக கண்காட்சிக்கு இரண்டு தடவை சென்றுவந்தேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் ஏற்பட்ட சலிப்பும் உறுத்தல்களும் இதில் ஏற்படவில்லை. முக்கியமான காரணம் இது முழுக்க முழுக்க ஆங்கில புத்தகங்களுக்கான சந்தையாக இருந்தது. ஆரம்பித்து இரண்டாம் நாள் ஒரு முறையும் கடைசி தினத்திலொரு முறையும் போனேன். எழுபத்தைந்து வீத கழிவில் புத்தகங்கள் இருப்பதனால், ஒன்றிரண்டை வாங்கி கொள்ளவும் முடிவோடு போனேன். அகன்ற இலங்கை கண்காட்சி கூடத்தில் புத்தகங்கள் பகுதி பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்தன. Fictions, Non-Fictions, Cookery, Architecture, Childern section என்று பலவாறு வகைப்படுத்தப்பட்டு புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இடக்கைப் பக்க சுவரினூடு நீளுகின்ற மேசைகளில் நாவல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நவீன சூப்பர் சந்தைகளில் பொருட்களை தள்ளுகின்ற வண்டி ஒன்றை தந்து அனுப்பினார்கள். அதற்குள் ஐம்பது புத்தகங்கள் வைக்குமளவு இடமிருக்கும். இரண்டு தடவையும் பெரும்பாலானோர், அவர்களின் குழந்தைகளை அதற்குள் வைத்து ஒன்றிரண்டு புத்தகங்களோடு தள்ளிச்சென்றதையே அவதானித்தேன். மேலும் சிலர் புத்தகங்கள் நிறைய அடுக்கிக்கொண்டு போனதையும் பார்த்தேன். அவர்களில் பெரும்பாலானோர் வயதான வெளிநாட்டவர்கள். அந்த வண்டியை வைத்து அங்கிருக்கும் சிறுவர்கள் வண்டில் பந்தயம் நடத்திக்கொண்டிருந்தார். நாவல்கள் ஒன்றிரண்டை பிரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த வெளிநாட்டவரோடு அறிமுகமானேன். அவர் ஒரு நாவலை நீண்ட நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தார். இடையில் ஒருமுறை தனது கைபேசியையும் எடுத்து ஏதோ செய்துவிட்டு என்னிடம் திரும்பினார். நான் மௌனமாக புன்னகை செய்தேன். அவர் தாழ்ந்த குரலில், ” இந்தப்புத்தகத்தை எனது நாட்டில் அறுபது டாலர் கொடுத்து வாங்கினேன், இப்போது இங்கே நான்கு டாலர் பெறுமதியில் கிடைக்கிறது.” என்றார். அது என்னவோ உண்மைதான் பெரும்பாலான நாவல்கள் 550, 600, 700 ரூபாய் மட்டில் தான் இருந்தன. அப்போதிலிருந்து அவரும் நானும் கையிலிருக்கின்ற புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். சில புகழ்பெற்ற நாவல்களைத் தவிர மிகுதி எல்லாம் சமீபத்தில் வெளியான நாவல்கள். மெல்லிய ஜாஸ் இசையுடன்  அனைத்து நாவல்களையும் கையில் தூக்கி அழகு பார்த்தேன். அதிலிருந்து மூன்றை வாங்கிக்கொண்டு வந்தேன்.
இரண்டாவது முறை போவதற்கு முக்கியமான காரணம் Umberto Eco இன் Numero Zero. முதல்தடவை பார்த்துவிட்டு வந்தாலும் என்னுள் அந்த நாவல் சலசலப்பை ஏற்படுத்தியபடியே இருந்தது. எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று கொட்டும் மழைக்குள் கண்காட்சி கூடத்திற்குள் வந்து சேர்ந்தேன். மழையை விட அதிகமாக நான் கண்ட காட்சி என்னை நனைய வைத்தது.இடப்பக்க மூலையில் இருந்த அந்த நீண்ட நாவல்கள் பகுதியை அடையாளமே இல்லாமல் முடித்து விட்டார்கள். அங்கே அப்படியான ஒரு பகுதி இருந்ததிற்க்கான அடையாளமே இல்லை. ஆங்கில நாவல்கள் வாசிக்கின்ற வாசகர்கள் மிகவும் அதிகம் என்பதை புரிந்து கொண்டேன். Numero Zero சில பிரதிகள் வேறு புத்தகங்களோடு கலந்து இருந்தன. நம்பிக்கை இன்மையில் ஒரு முறை அங்கிருக்கின்ற ஏற்பாட்டாளர்களிடம் போய் விசாரித்தேன், அவர்களும் மகிழ்ச்சியாக விற்று தீர்ந்துவிட்டது என்றார்கள். மற்றைய பகுதிகள் இன்னமும் மீதமிருக்கின்றனவே என்றேன். அவர் , மற்றைய பகுதிக்குரிய புத்தகங்களில் ஒன்று 200 பிரதிகள் வைத்திருந்தால் நாவல்கள் 10 பிரதிகள் தான் வைத்திருப்போம் என்றார். Umberto Eco இன் Numero Zero நாவலின் அட்டைப்படத்தில் 0 பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஒரு முறை மௌனித்துப்போய் நகர்ந்தேன். 

நிகனோர் பரா – 01

ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி தேவைப்பட்டது. ஒவ்வொரு இடைவெளியிலும் மனம் வெவ்வேறு திசைகளில் பயணித்தது. கவிதைகள் தருகின்ற அமானுஷ்ய உணர்வு இடைவெளிகளில் பரவும் போது முற்றிலும் வேறு ஒரு சூழல் உருவாகி விடுகிறது. புகையிரதம் எத்தனை வீரியமாக சத்தம் எழுப்பிக்கொண்டு விரைந்த்தாலும், மெல்லிய மேகத்தின் மேல் மிதப்பது போல இருக்கும். ஜன்னலினூடாக தென்றல் முகத்தின் தசைகளை வருடினாலும், பாலைவனம் போன்ற வெம்மை இருக்கும். எதிரிலே இருக்கின்ற அத்தனை மனிதர்களும் அழகாக தோன்றுவார்கள் அல்லது அலங்கோலமாக தோன்றுவார்கள் அல்லது மறைந்து போவார்கள். கவிதைகள் மேற்ப்பரிப்பினூடு மகிழ்சியையும் ஆழ்ந்து போகும் போது இறுக்கத்தையும் தரலாம். ஆறு மணிநேரமும் எத்தனையோ சூலுக்கும் உலகங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இசைந்து கொடுத்து வந்திறங்கினேன்.
 
சிலி நாட்டு கவிஞர்களான நிகனோர் பராவையும்(Nicanor Parra) என்றிக் லிஹ்னையும்(Enrique Lihn) முதன் முதலில் வாசித்தேன். இருவரும் ஒரே நாட்டில் ஒரே காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள். நிகனோர் பரா தனது நூற்றி மூன்றாவது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1914இல் பிறந்தவர். என்றிக் லிஹ்ன் 1929- 1988 காலப்பகுதியில் வாழ்ந்தவர். நிகனோர் பரா இன்றும் தனது கவிதைகளை எழுதி பிரசுரித்து வருகின்றார்.
 
The Pilgrim – Nicanor Parra
 
எங்களது சாதாரண தர ஆங்கில இலக்கிய தொகுப்பில் Monkeys என்ற ஒரு சிறுகதை இருந்தது-  பெயர் சரியாக ஞாபகம் இல்லை. ஒரு சிறிய வயதுடைய சமனேரா என்னும் பையன், பௌத்த பிக்கு ஆவதற்காக பௌத்த மடம் ஒன்றில் சேர்க்கப்படுகிறான். அவனின் ஆசைகள் பற்றிய வரைவாக அந்த சிறுகதை நகர்ந்து செல்லும். அதில் சமனேரா அதிக நேரத்தை குன்றுகளில் குரங்குகளோடு களிப்பான். அது அவனிற்கு உவகை ஊட்டுவதாக அமையும். இதே போன்ற ஒரு பௌதீக சூழலை இந்த கவிதை நினைவூட்டியது.
மிகவும் சிறிய வயதில் துறவுநிலைக்கு கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுவன், – உலக சந்தோசங்கள் அனைத்தும் அனுபவிக்கின்ற சாதாரண மனிதர்களை நோக்கி இறைஞ்சுவதாக பரா எழுதுகின்றார். சிறுவனை அடையாளப்படுத்த பரா பயன்படுத்துகின்ற யுத்தி ஆழமானது. அதே நேரத்தில் எனக்கு கவலையை அளித்ததும் கூட.
But, I am a child calling to its mother from behind rocks,
I am a pilgrim who makes stones jump as high as his nose
சாதாரண குன்றின் பின்னால் நின்றுகொண்டு, குன்றை மீறி எட்டிப் பார்த்து தனது அம்மாவை அழைக்க பாய்கின்றபோது மூக்கு உயரம் மட்டுமே மேலேளும்பக்கூடிய சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். நான் வசித்துவந்த நகரத்தின் வீட்டிற்கு எதிரே பௌத்த விகாரை ஒன்றிருக்கிறது. அங்கே பௌத்ததுறவிகள் ஆவதற்காக சிறுவர்கள் வந்திருப்பார்கள். மிகவும் சிறியவயதில் முழுமையாக முடிகளை அகற்றி காவித்துணியும் உடுத்தி உலகின் எல்லா சுகங்களையும் துறந்தவர்கள் போல விகாரைக்கும் அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கும்(அருகில்) ஓடித்திரிவார்கள். பின்னேரங்களில் தங்களை மறந்து இயங்குவதையும் விகாரைக்கு வருகின்ற சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்த்து விளையாட அழைப்பதையும் கண்டிருக்கின்றேன். இவையெல்லாம் சமயத்தின் படி தவறுகள் என்றாலும் மனிதத்தின் படி?
நிகனோர் பரா இதையே வினவுகின்றார். எல்லா மனிதர்களைப்போலவும் தானே நாங்களும் – கனவுகளையும் ஆசைகளையும் வெறுத்து ஒதுக்கிவிட முடியாத போதும் கட்டாயப்படுத்தி அடைத்துவைக்கின்ற நிலைமையை கேள்வி கேட்கின்றார். புத்தர்கூட உலக சந்தோசங்களை அனுபவித்துத் தான் துறவறம் பூண்டார். தங்கள் சொந்த தேவைகளுக்காக பிள்ளைகளின் சந்தோசங்களை அழிக்கின்ற தானம் பற்றி கேட்கின்றார்.
 
A tree crying out to be covered with leaves.
 
எல்லாவற்றையும் மரத்துக்கு தருகின்ற இலைகளை போல அனைத்தையும் வேண்டி நிற்கின்ற சிறுவர்களின் மனநிலையை நிகனோர் பரா எழுதுகின்றார்.
 
இந்தக்கவிதையை ஸ்பானிஷ் மொழியிலிருந்து W.S.Merwin ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருகின்றார்.
 
இந்தக்கவிதையை வாசித்து முடித்தபின்னர் பேரமைதி சூழ்ந்துகொள்கிறது.