கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 01

சினிமா அரங்குகளிலும் திருவிழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் மட்டுமே இவ்வளவு மக்கள் கூட்டத்தை கண்டிருக்கிறேன். இந்திய புத்தகக்கண்காட்சிகளில்  புத்தக அரங்குகளில் விநியோகஸ்தர்கள் ஈக்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள் என்று பரவலாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இது உண்மையாக இருந்தால் இப்படி நியாயப்படுத்தலாம் – இந்தியாவின் தமிழ் நாட்டில் புத்தக கண்காட்சிகள் அதிகம் நடைபெறும், அதனால் அதிக மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் புத்தக கண்காட்சி விற்பனையின் அளவை விட புதிய புத்தகங்களின் அறிமுக அளவு அதிகமாகி விட்டது. இதனால் எல்லாமும் வாசித்து முடித்துவிட்டார்கள் என்றும் கூறிவிட முடியவில்லை. வாசிப்பு நுகர்ச்சி குறைந்து போய் விட்டது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.  ஆனால் இலங்கையில் நிலை வேறு. புத்தக கண்காட்சிகள் எப்போதாவது ஒரு முறை தான் நடைபெறும். அதுவும் களவு செய்வதைப்போன்று சத்தமில்லாமலே நிறைந்து முடியும்.
BMICH இற்கு புத்தக கண்காட்சிக்காக சிறப்பு பேரூந்து சேவை. ஒரு புத்தக கண்காட்சிக்கு சிறப்பு போக்குவரத்து சேவை செய்கின்ற ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்கும். மிகவும் சனசஞ்சாரம் மிக்க சந்தை ஒன்றைப்போல புத்தக கண்காட்சி திடல்கள் காட்சியளித்தன. எல்லோருமே தமக்கு தேவையானவற்றைத் தேடி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தனித்தனியாக பிரித்து ஒதுக்கப்பட்டு நிறைய அரங்கங்கள். எந்த இடத்திலும் மனிதர்களின் வியர்வை வாடையைத் தாண்டிய புத்தக வாசம். இருபது ரூபாய் கடவுச் சீட்டுடன் கண்காட்சிக்குள்  நுழைந்தேன். மனிதர்களின் புத்தக வேட்கையைப் பார்த்து, அவர்கள் ஒவ்வொரு திடலாக ஏறிஇறங்கி புத்தகங்களை அள்ளுவதையும் பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டு பிரதான அரங்கிற்குள் நுழைந்தேன்.
பிரச்சனை 01 –
அங்கிருக்கின்ற கிட்டத்தட்ட 300 புத்தக விற்பனை அரங்கங்களில் இரண்டே இரண்டு அரங்கம் தான் தமிழ் மொழிக்குரிய புத்தகங்களை பெரும்பான்மையாகக் கொண்ட அரங்கங்கள். பூபாலசிங்கம் – கிழக்கு பதிப்பகம். சிங்கள புத்தக அரங்குகளுக்கும்  ஆங்கிலப் புத்தக அரங்குகளுக்கும் இடையே இவையிரண்டும் அடையாளம் தெரியாமல் நுண்மையானவையாக இருந்தன. கிழக்கு பதிப்பகம், அவற்றின் பாதிப்புகளையே மட்டும் கொண்டிருந்தமையால் நிறைந்த தெரிவுகள் பெரிதாக கொண்டிருக்கவில்லை. பூபாலசிங்கம் புத்தகசாலை எல்லாப் பதிப்பகங்களின் புத்தகங்களையும் வைத்திருந்தமையால் தேர்வு செய்யக்கூடிய அளவு புத்தக வகைமை இருந்தது. 300 அரங்கங்களில் கடைசி ஐம்பது அரங்கங்களிலேனும் தமிழ் புத்தகங்கள் இருந்திருக்க வேண்டும். இந்திய பதிப்பகங்கள் இந்த கண்காட்சிக்கு வந்து அவர்களின் சிறுதொகை புத்தகங்களையாவது காட்சிப்படுத்தியிருக்கவேண்டும். இலங்கையின் எழுத்தாளர்களும் வெளியீட்டாளர்களும் ஒன்றிணைந்து, இலங்கையின் படைப்புகளை முன்னிலைப்படுத்தி நான்கைந்து அரங்கங்களாவது வைத்திருக்கவேண்டும். இது ஒரு கண்காட்சி என்பதைத் தாண்டி சமூகத்தின் முன் ஆவணப்படுத்தல். பூபாலசிங்கம் புத்தகசாலையின் அரங்கிலும் சுதேச படைப்புகள் ஓரங்கட்டுப்பட்டே இருந்தன. பாலகுமாரனும் ராஜேஷ்குமாரும் லக்சுமியும் அனுராதாவும் விற்றுத் தீர்ந்துபோயின. ஒரு புத்தக நிலைய ஒழுங்கு குழுவை இதில் வசை பாடிப்பிரயோசனம் இல்லை. உள்நாட்டு படைப்புகள் சம்பந்தமான அறிவு இன்னும் என் மக்களுக்கு போய்ச் சேரவில்லை. இன்று இரண்டாய் இருப்பவை வருடக்கணக்கில் இல்லமே போய்விடும் அபாயம் தெரிகின்றது. ஒரு போட்டியிலிருந்து நாமே விலக்கிக்கொள்கின்ற நிலைமையை ஊக்குவிக்கின்றோம்.
பிரச்சனை 02-
பாடசாலை நூலகங்கள் மிகவும் முக்கியமான ஆளுமை விருத்தி தளங்களாகும். மாணவர்கள் இளமையில் தேடிக்கற்கின்ற ஒவ்வொன்றும் அவர்களின் எதிர்காலத்தின் அடிப்படைகள். இது சிங்களப் பாடசாலைகளில் நடக்கிறதா என்று தெரியவில்லை. புத்தக கண்காட்சி நேரம் அதிகமான பாடசாலைகள் தமது நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்வர். இதனை கொள்வனவு செய்ய வருபவர் ஓரளவாவது புத்தகங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? கடமைக்கு புத்தகங்களை கொள்வனவு செய்ய வருகின்ற ஆசியர்களால் ஒரு வருட கொள்வனவு மட்டுமன்றி, மாணவர்களின் வாசிப்பில் பிழையான வழிநடத்தல் உருவாகி விடும். குறிப்பிட்ட தொகைக்கு புத்தகங்களை நிரப்பித் தரக்கேட்கின்ற கொள்வனவு ஆசிரியர்கள், ஒரு சமுதாயத்தின்  எதிர்க்காலத்தில் கேள்வியினை உண்டாக்குகிறார்கள். அதைத் தாண்டி ஒரு பட்டியலுடன் சில கொள்வனவு ஆசிரியர்களைக் காணக்கூடியதாக இருக்கும். அவர்கள் கையில் வைத்திருக்கும் பட்டியலில் முக்கால் வாசி கடந்த கால வினாத்தாள்கள், – அதை தரம் ஒன்று தொடக்கம் பதின் மூன்றுவரை வரிசையில் எழுதிவைத்திருப்பார்கள். அடுத்தது பயிற்சி புத்தகங்கள், அதையும் அப்படியே அதே வரிசையில். இந்த அசிங்கமான மனசாட்சியற்ற ஒழுங்கின்மை மாற்றப்படவேண்டிய ஒன்று. இலங்கையில் இருக்கின்ற 99 சதவீத தமிழ் பாடசாலைகளுக்கு இவ்வாறான ஒரு கண்காட்சி நடப்பதே தெரிந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.
சந்தோஷமும் கவலையும் –
புத்தக கண்காட்சியின் எல்லா இடமும் சிங்கள புத்தகங்கள் நிறைந்து கிடந்தன. சிங்கள புத்தகங்களில் முழுமையானவையும் இலங்கையின் அச்சு துறையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டவை. சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சியும் விஸ்தரிப்பும் மேய் சிலிர்க்க வைத்தது. புனைவுகளும் அபுனைவுகளும் இந்த சிறிய தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தினரால் எழுதி குவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனிப்புத்தகம் என்றாலும் மக்கள் தொகையை விட அவர்களின் புத்தகங்கள் அதிகமானவையாகத் தான் இருக்கும். புத்தக வடிவமைப்பு சீரானதாக இருக்கின்றது. அட்டைப்படங்கள் அட்டைகள் காகிதங்கள் என்று எல்லாமுமே செய்நேர்த்தியுடன் இருக்கின்றது. அவர்களின் தனித்துவ இலக்கிய இருப்பிற்க்கான முயற்சியும் படைப்பூக்கமும் மேய்ச்சத்தக்கது. அதே நிலையில் எமது படைப்புக்கள்?
கூட்டத்திற்க்கன காரணம்?
அத்தனை அலை மோதும் கூட்டம் புத்தக கண்காட்சிக்கா என்று யோசித்து விடைகாணமுன்னர், புத்தக விற்பனை அரங்குகளை விட அலைமோதுகின்ற கூட்டம் அப்பியாசக்கொப்பிகள் மலிவு விற்பனை அரங்கிற்குள் இருந்தது. எப்படியும் வந்திருந்த கூட்டத்தில் முக்கால்வாசி அந்த அரங்கை முற்றுகையிட்டு கொள்வனவு செய்தனர். அதிகமான விலையில் வெளியில் விற்கப்படுகின்ற அப்பியாசக்கொப்பிகள் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் ஒரு வருடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கேயே கொள்வனவு செய்துகொள்ளுகின்ற கூட்டம் தான் புத்தக கண்காட்சியின் பெரும்பாண்மைக்கூட்டம்.

திருவிழா – தளமாற்றம் 

*இலங்கை சட்டக்கல்லூரியில் சட்ட மாணவர் இந்துமகா சபையின் வருடாந்த இதழான நக்கீரம் 2017இல்    வெளிவந்தது.
சிலருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் போது தற்கொலைக்கு முயற்சி செய்வதுண்டு. கண் திருஷ்டியை கழிப்பதற்கு நாற்சந்தியில் சமய அனுட்டனங்களைச் செய்து எரிப்பர். மனதில் நீண்ட சோகம் பரவும் போது வீட்டின் சுவர்களில் ஒட்டப்பட்ட அழகிய ஓவியங்களும் சிற்பங்களும் சாந்தியை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தின் நெருக்கம் உண்ணாவிரதம் போராட்டம் என்று தள மாற்றம் செய்யபடுகிறது. இந்த தளமாற்றம் தான், மனிதனின் நீண்ட இருப்பிற்க்கான அத்திவாரம். மனிதனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தான் உலகின் தொடர்ச்சிக்கான வழிவகையாக இருக்கிறது. மனிதனின் சீரற்ற வாழ்க்கை முறை, அவன் சூழல் சார்ந்த இயல்பான நெருக்கடிகள், அவனின் ஆழ்மனத்தின் சஞ்சலங்கள், உறவுகளினால் ஏற்படுகின்ற சிக்கல்கள், தொழில் ரீதியான அழுத்தங்கள் என்று அவன் வாழ்வின் அத்தனை நிகழ்சிகளும் ஏதோ ஒரு வகையில் இருப்பின் பிரச்சனையாக அமைந்துவிடுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தான் அவனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தேவைப்படுகின்றது. அதற்கான வழிமுறையை மனிதன் தேடவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றான்.
தளமாற்றதிற்க்கான மிக முக்கியமான கருவி திருவிழாக்கள். உலகில் திருவிழாக்களை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. கொண்டாட்டம், கேளிக்கை என்பதைத் தாண்டி திருவிழாக்கள் செய்கின்ற சமூகமாற்றங்கள் பெறுமதிமிக்கவை. அதனாலேயே பண்பாட்டின் மிகுதியாக திருவிழாக்கள் இன்றும் ஓரளவு பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றது. தனி மனித வாழ்வில் பிறப்பு, அறிவிப்பு, பூப்பு, திருமணம் முதிர்ச்சி, வயோதிபம், இறப்பு என்று ஏற்படுகின்ற தளமாற்றங்கள் எவ்வாறு அவ்வவ் பருவத்தின் அறிதல்களையும் புரிதல்களையும் கற்பிதம் செய்கின்றனவோ, – அப்பருவங்களில் வருகின்ற தனி மனித உளவியல் உடலியல் மாற்றங்களையும் அழுத்தங்களையும் நிவர்த்தி செய்கின்றனவோ, அவ்வாறான தொழிலையே மனிதக் கூட்ட இயங்கு தளமான சமூகத்திற்கு திருவிழாக்கள் செய்கின்றன.
ஒரு தொகுதி மக்கள் என்பது கிராமிய அடிப்படையிலோ நகர அடிப்படையிலோ சாதிய இன அடிப்படையிலோ வகுத்துக்கொண்டிருந்தாலும், முக்கியமாக தேவை அடிப்படையில் தான் அந்த தொகுதி உருவாகியிருக்கும். அந்தத் தொகுதிக்கான தேவை நிவர்த்தியாக்களில் ஏற்படுகின்ற இழுவை நிலையில்  அல்லது தேக்கநிலையில் அவர்களுக்கான உந்து சக்தி ஒன்றின் தேவை புலப்படுகின்றது. லெவிஸ்ராஸ் கூற்றின் படி எப்போதெல்லாம் சமூகத்தில் நெருக்கடிகள் உருவாகின்றதோ அப்போதெல்லாம் கூட்டுமானம் வலுவாக புதுப்பிக்கபடுகின்றது. இற்றைக்கு பற்பல ஆண்டுகளுக்கு முன்னராகவே உணரப்பட்டு செயற்பாட்டில் கொண்டுவரப்பட்ட நிகழ்வு திருவிழா. “திரு” என்பது புனிதம் என்ற பொருளில் வருகின்றது போது புனிதமான விழா என்று புரிந்துகொள்ளபடுகின்றது. எமது மரபின் ஆரம்பத்திலேயே திருவிழாக்கள் குறிப்பு பெயரில்லாமல் சடங்காக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. சமூக அழுத்தத்தின் தளம் திருவிழா என்ற சடங்கின் மூலம் இயற்கைக்கு மாற்றப்படுகின்றது. இது நம்பிக்கையின் வாதமாக இருந்தாலும் உளவியல் அடிப்படையில் சமூக மீள் கட்டுமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
திருவிழா என்றதும் ஊர் முழுதும் புனிதம் நிறைந்து விடுகின்றது. எல்லோரிடமும் எல்லா செயல்களிலும் புனிதத்தின் கூறுகள் செயல்படத் தொடங்குகின்றன. அதுவரை பிறழ்வான வாழ்வியலை கொண்டுநடத்திய மக்கள் கூட சரியான வழிக்கு திரும்புவார்கள். தனிமனித சமூக குளறுபடிகள் ஓய்ந்து போயிருக்கும். அமைதியும் ஒழுங்கும் எங்கும் பரந்திருக்கும். சமூகம் முழுக்க உளவியல் ரீதியில் பண்படுத்தப்பட்டிருக்கும். இந்த பண்படுத்தலின் ஆரம்பம் தான் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு வழிகாட்டியாக அமையும். இதனாலேயே திருவிழாக்களுக்கென குறித்த தேதியும் காலமும் இருக்காது. எப்போதெல்லாம் சமூக ஒன்றிணைப்பு தேவைப்படுகிறதோ அப்போது திருவிழாக்கள் நடந்தேறும்.
திருவிழாக்களின் பின்னைய போக்கு சற்று வித்தியாசமானதாக அமைந்தது. திருவிழாக்கள் ஒழுங்கமைக்கும் காரணமும் முறையும் ஆகமம் சார்ந்ததாக மாறத் தொடங்கியது. இன்றைய காலத்தில் காணப்படுகின்ற ஆகம, நாட்டார் வழிபாடுகள் என்ற பாகப் பிரிவினை உருவான காலமாக திருவிழாக்களின் தளமாற்றம் நிகழ்ந்த காலமாக கருத முடியும். காரணம், நாட்டார் வழிபாட்டிலிருந்து ஆகம முறைக்கு வழிபாடுகள் மாறத் தொடங்கியபோது வரைமுறைகளும் கட்டாயங்களும் ஆகமத் திருவிழாக்களில் அதிகமானது. சமூகக் காரணம் கருதி செய்யப்படாமல் பஞ்சாங்கங்களும் ஆகம கோப்புக்களும் திருவிழாக்களின் தேதியையும் காலத்தையும் நிர்ணயிக்கத் தொடங்கின. திருவிழாக்கள் பிராமணிய சமூகத்தின் குறியீடாக மாறத் தொடங்கியது. இருந்தும் மக்களின் பங்குபற்றலும் ஒன்றிணைப்பும் குறிப்பிடும் அளவு இருந்தது. சமயம் என்ற நிறுவனத்தின் பரவலாக்கம் அப்போது அதிகமாக இருந்தது. திருவிழாக் கிரியைகளோடான சாதாரண மக்களின் புழக்கம் நலிந்துகொண்டே வந்தது.
கூடவே நவீன கோட்பாடுகளும் தத்துவங்களும் மேலோங்க தொடங்க தனித்த வாழ்க்கை முறையை மனிதன் தேர்ந்தெடுக்க தொடங்கினான்.சாதியம், இனம், மதம் என்பதைத் தாண்டி கற்ற சமூகம் கல்லாத பாமர சமூகம் என்ற வேற்றுமை உருவாகத் தொடங்கியது. நாட்டார் வழக்கியல் பாமர சமூகத்தினருக்கே என்ற கோசமும் மேலோங்கியதால் திருவிழாக்கள் பிரிவினைக்குரிய பொருளாகிப் போனது. சாதிச் சண்டைகளும், தனிப்பட்ட குரோதங்களும் தீர்த்துக்கொள்ளும் இடமானது. எந்தக் காரணத்திற்காக திருவிழா என்ற சம்பிரதாயம் உருவாக்கபட்டதோ அது தளமாற்றம் அடையத் தொடங்கியது.
இன்றைய திருவிழாக்கள், திரு என்பதை எடுத்து கூத்து என்று மாற்றி வைக்கும் நிலையை அடைந்துள்ளன. உளம், உடல், சுற்றாடல், கிராமம், நகரம் என்று அனைத்திலும் புனிதத்தை விதைக்கின்ற பொறுப்பிலிருந்து திருவிழாக்களும் அவற்றை ஒழுங்குபடுத்துபவர்களும் விலகிவிட்டனர். திருவிழாக்கள் என்றவுடனேயே கேளிக்கைகளுக்கு பஞ்சம் இல்லாத தினமாக மாறிவிட்டது. புனிதம் அமைதி என்ற சொற்கள் எல்லாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் வந்து அதைசுற்றி இருண்மை குடிகொண்டு விட்டது. இன்று ஆகம திருவிழாக்கள்  நாட்டரியல் திருவிழாக்கள்  இரண்டிலும் இருண்மை பற்றிக்கொண்டே இருக்கிறது. இன்றைய திருவிழாகளை அகம் புறம் என்று நிலையியல் சார்பாக பிரித்துக் கொள்கிறேன். திருவிழாவின் அகம் என்பது ஆகம முறையில் பிராமண சமூகத்திடமும் நாட்டார் வழக்கியலில் உரித்து குடும்பத்திடமும் சென்று விட்டது. அகத்தைப் பற்றிய எந்த அறிவும் சாதாரண பொதுமகனிடம் இல்லை. அகத்தின் கூறுகள் எல்லாம் பிராமணர்களின் வசதிக்கு ஏற்ப / உரித்து குடும்பத்தினரின் வசதிக்கு ஏற்ப தளமாற்றம் செய்யபடுகின்றன.
இன்றைய திருவிழாக்களுக்கு கூட்டம் கூட்டாமாக மக்கள் வருகை தருகின்றனர் என்றால் காரணம் திருவிழாகளின் புறம் தான். புறக்கூறுகள் தான் இன்றைய சமுதாயத்தின் அழிவின் சின்னம். இன்றைய திருவிழாக்களின் புறத்தை கார்னிவெல்(carnival) என்றும் கூறலாம். எப்படி ஒரு கார்னிவெல் அத்தனை சமூக இழுக்குகளுக்கும் தளமாக அமைகின்றதோ அதே போன்ற அமைப்பையே திருவிழாக்களின் புறம் கொண்டிருக்கின்றது. திருவிழா என்றாலே இசைக் கச்சேரி காட்டாய காரியம் ஆகிவிட்டது. ஒரு வகையில் இன்றைய திருவிழாக்களுக்கு ஆள் சேர்க்கும் வழிமுறை கூட. மரபிற்கு ஒன்றிரண்டு பக்திப் பாடல்களைப் பாடிவிட்டு ஒரே வேகமாக சினிமா பாடல்களை அடைந்து விடுவார்கள். ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா  கொண்டாட்டத்தில் மூழ்கும். இசைக்கச்சேரிக்கு வந்த கூட்டத்தில் கூட்டமாக போதை தரும் சரக்குகளும் விற்பனை ஆகும். போதையும் இசையும் நடனமும் வயது பேதமின்றி சமூகத்தின் எல்லா நிலைகளையும் ஆட்கொண்டு விடும். காரணமற்ற சண்டைகளின் பிறப்பிடமாக அமைந்து விடுகிறது.
எந்தப் பகைகளையும் தீர்க்க சிறந்த களம் இன்றைய திருவிழாக்கள் தான். இதற்கு காரணம் திருவிழாக்கள் பெரும்பாலும் இரவில் நடப்பவையாக இருக்கின்றது  தானோ தெரியவில்லை. இருட்டில் முகம் தெரிவதில்லை; குணம் தெரிவதில்லை. அதனால் குற்றங்களுக்கு இருட்டின் மறைவு சாதமாகிப் போகின்றது. திருடவும் இது வசதியாகிப் போகின்றது. திருவிழா மண்ணில் நடுவே இருந்து தலையை விரித்து அழுகின்ற பெண்களை இன்றும் காணமுடிகின்றது. ஆண்களால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. திருட்டில் சமீபகாலமாக குழந்தை திருட்டு அதிகம் நடக்கின்றது. மத்திய காலத்தில் திருவிழாகளை கள்ளுக் குடிக்கவும் திருடவும் பயன்படுத்தினார்கள் என்பதில் இருந்து தொடங்கி இன்று அதைத் தொழிலாக செய்கின்ற இடமாகவே மாறி விட்டது. கும்பல் சண்டைகளுக்கு இன்றைய திருவிழாக்கள் மிகப் பிரபலம். வாட்கள், போத்தல்கள், கொட்டன்கள், கத்தி என்று பஞ்சமே இல்லாமல் சண்டையிட்டுக்கொள்வர். பல முக்கிய சண்டைகள் திருவிழா நாட்களிலேயே தேதி குறிக்கபடுகின்றது.
இன்று இளைஞர் யுவதியர் என்பதை தாண்டி எல்லாப் பிரிவினரும் காட்டுகின்ற அலங்கோலம் திருவிழாக்களில் நடந்தேறும். ஒரு முறை திருவிழாக் காலத்தில் பலவகையான வாசனைத்திரவியங்கள் ஒன்று சேர்ந்த நாற்றத்தில் நிற்கமுடியாமல் திண்டாடிய அனுபவங்கள் பலருக்கு உண்டு. இங்கு தான் அவர் அவர்களின் பொருளாதார வசதியைக் காட்டுகின்ற இடமாக இருக்கின்றது. அலங்காரங்கள் எல்லாம் ஒன்றிப்போய் அலங்கோலமாக காட்சி தரும்.
திருவிழாக்களின் அகத்தையும் புறத்தையும் ஆக்கிரமித்துள்ள இன்னொரு பெரும் சக்தி தொழில்நுட்பமாகும். இதன் வருகையையும் ஆக்கிரமைப்பையும் எம் சமூகத்தால் தடுக்கமுடியாமலே போனது. முஸ்லின் சமூகத்தில் இருந்து விலகியிருக்க கூடிய இந்த ஆக்கிரமிப்பு தமிழ் திருவிழாக்களை ஆக்கிரமிப்பது, எமது பண்பாட்டின் பின்னடைவே. மிகக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே பரந்தளவில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அதன் பலத்தை நிருபிக்கின்றது. அதன் முன்னர் நாம் அடிமையாக்கப்பட்ட சமுதாயமாகவே தோன்றுகின்றோம்.
அமைதியையும் ஒற்றுமையையும் பலப்படுத்த உருவாகிய சம்பிரதாயம் எல்லாப் பாவச் செயல்களின் இருப்பிடமாக தளமாற்றம் அடைந்துள்ளது.
எந்த பொருளும் நிகழ்வும் தனது உற்பத்தி நோக்கிலிருந்து விலகும் போது அது வழக்கிலிருந்து அழிந்து போகின்ற நிலையை அடையும். இன்றைய திருவிழாக்களும் வழக்கொழிந்து போகின்றன என்பதன் உட்பொருளும் அதே. மனிதனின் நடவடிக்கைகள் அழித்துவருகின்ற மிக தொன்மையான பண்பாட்டில் திருவிழாவும் ஒன்று. இன்றைய திருவிழாக்கள் குற்றங்களின் குறியீடாக மாறிவிட்டன. இதனை மீண்டும் தளமாற்றம் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம். மீண்டும் புனிதத்தையும் ஒற்றுமையையும் சமூக வலிமையையும் ஏற்படுத்துகின்ற பழைய திருவிழாக்கள் வழக்கொழிந்து போய்விட்டன. இன்றைய நாளைய சமூகம் திருவிழாக்கு பிரதியீடாக இன்னொன்றை உருவாகும் என்ற நம்பிக்கையும் இல்லை.
திருவிழாக்கள் தளமாற்றம் அடைந்து விட்டன.

கனவும் சமூகமும்

சமூகத் தொடர்புகள் பற்றி என்னுடன் உரையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது. மற்றவர்களோடு உரையாடுதல், அவர்களின் கருத்துக்களை செவிமடுத்தல், அவர்களோடு வேலைகளில் ஈடுபடுதல் , அவர்களோடு சந்தோசமாகவும் உற்சாகமாகவும் நேரத்தை கழித்தல் என்ற பல வேறுபட்ட விடயங்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் என்னைத் திருத்தி இந்த சமூகத்தில் வினைத் திறன் மிக்க மனிதனாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் என்னை இந்த சமூகத்திற்கு பழக்கப்படுத்துகிறார்கள். என்னைப்பற்றி யாரிடமாவது கூறும் போது நான் ஒரு வித்தியாசமான வகை என்கிறார்கள். எப்போதுமே புத்தகங்களையும் நித்திரையையும் தனிமையும் விரும்புகிறேன் என்கிறார்கள். புத்தகப் பூச்சி, நான் வாசிக்கும் புத்தகங்கள் எனக்குரியவை அல்ல என்றெல்லாம் என்னோடு இருப்பவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். என்னிடம் நீண்ட உரையாடல்கள் செய்பவர்கள் இறுதியில் என்னைப்பற்றிய அச்சத்துடனேயே முடித்துக்கொள்கிறார்கள். எதிலும் நான் அதிகம் ஈடுபடாததால் என்னைச் சுயநலவாதி என்கிறார்கள்.
அவர்கள் சொல்கின்ற வாழ்வியலுக்குள் என்னால் போகவே முடியவில்லை. அழுகிய முட்டை வெடுக்கு நாற்றமுள்ள அவர்களின் கருத்தியலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தனிமனித சுதந்திரம் மீறப்படுகின்ற இடங்களில் இருப்புக் கொள்ளவில்லை. மனிதர்களை மனிதராக மதிக்காத இடங்களிலும் மனிதர்கள் மனிதனாக இல்லாத இடங்களிலும் என்னால் இசைந்து கொடுத்து போவது அத்தனை சிரமமா இருக்கின்றது. அவர்கள் காலம் காலமாக நடைமுறைப்படுத்துகின்ற நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போகவும் அதை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் இருக்கின்றது. அவர்களின் பிரயோசனமற்ற நீண்ட உரையாடல்கள் என்கிற இரைச்சல்களை கேட்கவே முடிவதில்லை. சகித்து வாழுதல் என்ற முறையின் மிக இழிவான நடைமுறைப்படுத்தலை தெரிந்துகொண்டே அனுசரிக்க முடியவில்லை.
மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் ஒரு இந்தியத்துறவி வசித்து வந்தார். வழமையான கதை போல இது ஒரு ஊரில் என்று தான் சொல்லாமல் சொல்லித் தொடங்குகிறது. வெகு சிரமப்பட்டு ஒவ்வொரு நாளும் மலையில் ஏறி, வட்ட குவளை ஒன்றிற்குள் தண்ணீர் நிறைய எடுத்து இன்னும் அதிக சிரமத்துடன் அடிவாரத்தில் சேமித்து குடித்து வந்தார். அதற்காக மலையின் அடிவாரத்தில் தண்ணீர் இல்லை என்பதில்லை. இந்தியத்துறவிக்கு அசுத்தமான தண்ணீர் குடிப்பதில் சம்மதமில்லை. வயது அதிகரிக்க அவருக்கு மலையில் ஏறுவதும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து சேமித்து வைப்பதும் இலகுவாகப்போனது. துறவியின் வயது தொன்னூறை அடையும் போது அவர் இருபது வயது சிறுவன் போல உற்ச்சாகமாக ஏறி இறங்கி வந்தார். சில காலத்தின் பின்பு மலை அடிவார குடிநீர் ஊற்றுக்கள் எல்லாம் மொத்தமாக அசுத்தமாகிப் போயின. அங்கு குடியானவர்கள் குடிக்க தண்ணீருக்காக மலை உச்சிக்கு ஏறவேண்டிய கட்டாயநிலை உண்டானது. அப்போது அந்த துறவி உயிரோடு இல்லை. கரடு முரடான மலைப்பாதையில் அவர் வழமையாக நடந்து சென்ற பாதை மட்டும் சீராகவும் நடக்க ஏதுவானதாகவும் இருந்தது.குடிமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி பிரயோசனம் அடைந்து கொண்டார்கள்.
இந்தக் கதையை கனவாக எப்போதும் காண்பேன். இருபதிற்கும் அதிகமான தரம். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காட்சி மனதில் பதிந்து கொள்ளும். அப்படித்தான் இந்த கதையின் புறவுருவத்தை உருவாக்கினேன். இந்தக் கனவின் ஒரு கட்டத்தில் அந்தத் துறவி மெதுவாக சிரிப்பது போல இருக்கும். அவர் தனது பாதத்தை உயர்த்தி காட்டும் போது, அது அத்தனை சிதைவுகளோடும் புண்களோடும் இருக்கும். அத்தோடு இன்னொரு கனவும் அதிகமாக வரும். இதையும் கொஞ்ச கொஞ்சமாகவே பொருத்தினேன். இரண்டு மூன்று மாடிகள் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன். சுற்றி மனிதர்கள் அவர்களின் தொழிலைப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் யாரின் அருகில் போனாலும் அவர் எனக்கு நெருக்கமான ஒருவரின் உருவமாக மாறி கத்தி ஒன்றினால் என்னை குத்த துரத்துவார். நான் மீண்டும் ஓடி ஏறி இறங்கி அவரிடம் இருந்து தப்பித்தேன் என்று நினைத்த அடுத்த கணமே அருகில் இருப்பவர் அவராக மாறி என்னைத் துரத்தத் தொடங்குவார். இது தொடர்ச்சியாக இடம்பெறும். இவையிரண்டும் எனக்கு அதிகமாக வருகின்ற கனவுகள்.

இசை – Rohingya – அனிதா

(1)
நேற்று புகையிரதப் பெட்டிக்குள் வியர்த்து விறுவிறுக்க ஏறி, தோளில் இருந்த பயணப்பையை மேலே வைத்துவிட்டு ; காலையிலிருந்து உடுத்தியிருந்த மேற்சட்டையையும் பெனியனையும் கழற்றி புதிய மேற்சட்டை ஒன்றை வேகமாக மாற்றினேன். அந்த பேட்டியில் பெரிதாக எவருமே இல்லை என்பதால் எனக்கு மாற்றுவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. சப்பாத்தைக் கழற்றி வைத்துவிட்டு, துணி ஒன்றினால் வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் கிளம்ப பத்து நிமிடத்திற்கு முதல், என்னைவிட ஆரவாரமாக வயது முதிர்ந்த பாட்டி, நடுத்தரவயதில் ஆண்கள் பெண்கள் யுவதிகள் சிறுவர்கள் என்று சுமார் பதினைந்து பேர்கொண்ட படை அத்தனை ஆசனங்களையும் நிரப்பியது. எனது ஆசன இலக்கம் பதினெட்டு, அருகில் பதினேழு. பதினேழும் அவர்கள் பதிவு செய்த ஆசனமே. ஆரவாரமாக அவர்களது பயணப்பைகளையும் கிட்டார் ஒன்றரையும் வேறு சில கைப்பைகளையும் ஒழுங்குபடுத்தி அடுக்கிவைத்தார்கள். அவர்கள் முகம் முழுக்க எதிர்பார்ப்பு இருந்தது; கவலையோடு. அவர்கள் யாரையோ எதிர்பார்த்தார்கள். கைத்தொலைபேசியை வேகமாக அழுத்தி காதில் வைப்பதும் பின்னர் தமக்குள்ள கதைப்பதுமாக இருந்தார்கள். கடைசியில் அவர்கள் எதிர்பார்த்த அந்த நபர் பெட்டிக்குள் ஏறினார். அவருக்கான ஆசனம் பதினேழு.
ஆரம்பத்தில் குலுக்கமாக அசையாத தொடங்கியது புகையிரதம். சிறிது நேரம் எவராலும் எதையும் செய்துகொள்ளமுடியவில்லை. அவ்வளவு குலுக்கம். கூடவே அருகில் இருந்த மலசலகூட கதவு திறக்கப்படும் போதெல்லாம் மூச்சை சூறையாடும் வெடுக்கு நாற்றம். இத்தனைக்கும் நடுவில் அமைதியாக தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்ற அழகான குடும்பம். அல்லது நண்பர்கள். அல்லது….
அருகில் இருந்த ஆச்சியிடம் பேச்சைக் கொடுத்தேன். அவர்கள் எங்கே போவதாக விசாரித்தேன். அவர்கூறிய எதுவுமே விளங்கவில்லை. காரணம் அவரது ஓட்டைப் பற்களாக இருக்கலாம். அல்லது என் மொழிக் குறைபாடாக இருக்கலாம். அவரது கண்களின் அசைவுகளில்,அது அவரின் முழுக்குடும்பம் என்றும் நிகழ்வு ஒன்றிக்கு எல்லோருமாகச் செல்கிறார்கள் என்றும் புரிந்துகொண்டேன். அவரின் தாமதம் பற்றி விசாரிக்க நினைத்திருந்தாலும், அவர் பேசுகின்ற சிங்களத்தின் வேகமான நடைக்கு ஈடுகொடுக்கமுடியாது என்று பேசாமலே இருந்துவிட்டேன். புகையிரத ஆட்டம் குறைய, அவர்களில் நடுத்தர வயதை உடைய ஒருத்தர் எழுந்து கைகளில் கிட்டாரை எடுத்துக்கொண்டு, அவர்களில் யுவதிகளும் குழந்தைகளும் இருக்கின்ற ஆசனங்களின் நடுவே போயிருந்தார். அவரைத் தொடர்ந்து, அந்த வீட்டின் எல்லோரும் பெட்டியின் முன் ஆசனங்களை அருகிலும் ஆசன கைகளிலும் இருந்தார்கள். இரண்டு சிறுவர்கள் கைகளில் றபான்களை எடுத்தார்கள். என்னருகில் இருந்த ஆச்சியும் எழுந்து அவர்கள் அருகில் சென்று, உள்ளே அமர்ந்து கொண்டார். அவர்கள் இருந்த ஆசனங்களில் அறுபது சதவீதம் இப்போது வெறிச்சோடிப்போனது. பெட்டி கலகலக்கத் தொடங்கியது.
அவர்கள் பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும் தொடங்கினார்கள். சிங்களத்தில் தான் பாடினார்கள். அவர்களில் கிட்டார் வைத்திருந்தவர் தன்னை மறந்து இசைத்துக்கொண்டிருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்தும், கண்களால் அன்பினைப் பரிமாறியும், இடையிடை மெல்லிய நடன அசைவுகளை ஆடியும் ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். யுவதிகளின் தடிமனான உதட்டு சாயம் பாடலுக்கு மிக குதூகலமாக அசைந்துகொண்டிருந்தது. அவர்கள் இசையின் மூலம் பேசிக்கொண்டார்கள். இசையை அவர்களின் சந்தோசத்தின் வெளிப்பாடாக கருதினார்கள். சில வார்த்தைகள் உச்சரிக்கப்படும் போது அனைவரும் ஒன்று சேர்ந்து தோள்களுக்கு மேல் கைகளைகளைப் போட்டு ஒற்றுமையை காட்டினார்கள். வேறு சில சொற்களுக்கு வானத்தை நோக்கி வணங்கியும், சிலவற்றுக்கு இயற்கையை ரசிப்பது போலவும் சைகைகள் செய்தார்கள். அங்கிருந்த யுவதிகளின் அழகிற்கு ஏற்ப அவர்களின் குரலோ இசையோ இருக்கவில்லை. ஆனாலும் அவற்றைத் தாண்டி அவர்களின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பெட்டிமுழுக்க பரவியது. ஜன்னல் ஓரத்தினூடாக வெளியே பார்த்தேன். அருகில் நீண்டு அகன்று விரிந்திருந்த மலை, அவர்களின் முன்னால் சிறிய நீர்க்குமிழ் போலத் தோன்றியது.
(2)
மியன்மாரில் நடக்கின்ற மனித அவலங்களை தினமும் காணக்கூடியதாக இருக்கின்றது. மனிதர்கள் மீது மனிதர்களே நடத்துகின்ற இழிவுக்கொடூரம் இது. புகைப்படங்களிலும் காணொளிகளிலும் அங்கங்கள் சிதைந்தும் உரு அற்றுப்போயும் குற்றுயிர் குறையுயிராக மனிதர்கள் சிதிலமடைவதைப் பார்க்கும் போது உலக நாடுகளும் பொது அமைப்புக்களும் இன்னும் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை. இனங்களுக்கிடையிலான பிரச்சனையாக இருந்தாலும் Aung San Suu Kyi கருத்துப்போல ஒரே இனக்குழுமத்தின் பிரச்சனையாக இருந்தாலும் பலியாவதும் முடமாவதும் மனித உயிர்களே. வன்முறை என்ற வழி எப்போது உலகில் கையாளத் தொடங்கப்பட்டதோ அப்போதே மனிதம் இறந்துபோனது. ஒரு கொடூர மனித அவலங்களின் அரங்கேறிய நாட்டிலிருந்து, இன்னொரு மனித அவலம் நடந்துகொண்டிருக்கின்ற தேசத்திற்கு என்ன கூறிவிடமுடியும்? எங்களுக்கு எப்படி முழு உலகமும் மௌனமாக பதில் செய்ததோ அதே போன்ற பதிலைத்தான் Rohingya மக்களும் எதிர்பார்க்க முடியும். கிராமங்களை தீவைப்பதும் அதனுள் குழந்தைகளை தூக்கி எறிவதும், வெட்டை வெளியில் கழுத்தறுப்பதும் கொடிய மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் கூட முடியாத ஒன்று.
400 ற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது இன்றைய நாளில் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய விடயம் இல்லை. இதை நான் இனஅழிப்பு என்றே சொல்லுவேன். மனிதர்கள் இறப்பது மட்டுமல்ல இனஅழிப்பு. 73000 ற்கு அதிகமானோர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் குழந்தைகள் போசனைக்குறைபாடான நிலையில் இருக்கின்றனர். இதெல்லாம் ஒரு இருபது ஆண்டுகள் பின்தங்கிய நிலையை அம்மக்களுக்கு ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் அடிப்படைகளை நிவர்த்தி செய்து, உலக போட்டிக்குள் நுழைய இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது எடுக்கும். வறுமை நோய் மக்கள் விரட்டும். வெறுமனே நான்கு ஐந்து நாட்கள் நடக்கின்ற பிரச்சனை அரை நூற்றாண்டு வாழ்வியலையே பாதிக்கும். இப்படியான பாதிப்புக்கள் ஒரு தேசத்தின் சிறுபான்மை மக்களுக்கு நிகழ்வதே பெரும் துயர்.
கடந்த வியாழக்கிழமை Nat நதியின் கரையில் இருபது மனித உடல்கள் எடுக்கப்பட்டன, அதில் பன்னிரண்டு குழந்தைகள். இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் புதைந்து போன நிகழ்வுகள் இன்னும் சில இனக்குழுமங்களுக்கு நடந்துகொண்டிருப்பது கவலைக்குரியது. வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்த பெண்ணொருவரின் பேட்டியை வாசித்தேன், அதில் அவர் மியன்மாரில் நிறைய சிறுபான்மை இனங்கள் இருந்தும் நாம் மட்டுமே அவர்களால் அதிகமாக வெறுக்கப்பட்டோம் என்கிறார். வங்கதேசத்தில் குவிக்கின்ற அகதிகள் பற்றிய கேள்விகள் அதிகமாகின்றன. எமது நாட்டின் போரில் அகதிகளாக தஞ்சமடைந்த மக்கள், தங்கள் சொந்தங்களின் நிலத்தில் அகதி முகாம்களில் பட்ட அவதியும் துன்பங்களும் கொடியது. அவர்களுக்கான வசதிகள் சரியான முறையில் கொடுக்கப்படாமையும் அதனுள் நடக்கின்ற அசிங்கமான அரசியல் நகர்வுகளும் மேலும் மேலும் அகதிகளின் நிலைமையை பிரச்சனைக்குள்ளாக்கும். சொந்த நாட்டின் உள்ளக அகதிகளுக்கே இந்த நிலைமை என்றால் இன்னொரு நாட்டில் தஞ்சம் கோரிக் போகின்ற Rohingya மக்களின் நிலைமை இன்னும் மோசமானதாகவே இருக்கும்.
Rohingya மக்களின் பிரச்சனை இன்னும் இன்னும் மௌனமாக்கப்படும் போது வீரியமடையக்கூடும். இதைவிட பலமான ஆதிக்கசக்திகள் Rohingya மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சர்வதேச ரீதியில் இதற்கான ஆயத்தங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும். இது முன்னர் எங்களுக்கும் இப்போது Rohingya மக்களுக்கும் இனி இன்னொரு இனக்குழுமத்திற்கும் நடக்கும். மனிதாபிமானம் இல்லாத உலகம் உருவாகி, அதன் ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறது.
(3)
NEET தேர்வும் அனிதாவின் மரணமும் இன்றைய கல்வி முறை குறித்த வெளிப்படுத்தல்களை எல்லா சாராருக்கும் தெரிவித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியா என்ற தேசத்திற்குள் இந்த சம்பவத்தை அடக்கிவிடாமல் நாமும் இதைப் பற்றிய விழிப்புணர்வை அடையவேண்டும். இலங்கை கல்வி முறை குறித்த பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், அதை அமுல்ப்படுத்துவதிலும் பரிசோதிப்பதிலும் அரசாங்கம் தயக்கம் தெரிவிப்பது பல மானவர்க்ளுக்கு கெடுதலாக அமைகின்றது. புள்ளிகள் மூலம் திறமையை வரையறுத்துக்கொள்ளும் கல்வி முறைமை எம்மைப்போன்ற சில நாடுகளிலேயே இன்னமும் அமுலில் இருக்கின்றது. இதனால் இன்னமும் பல மாணவர்கள் பல்கலைக்கழக தகுதியினை, அவர்களுக்கு குறித்த துறையில் புலமை பெற ஆற்றல் இருந்தும் இழக்கின்றனர். தனியார் பல்கலைக்கழங்கள் இருந்தும் அவர்கள் கேட்கின்ற தொகைப்பணத்தை கொடுத்து படித்து வெளியேறும் அளவு பொருளாதார வசதியினைக்கொண்டிராத திறமையான மாணவர்கள் முழுக்க முழுக்க புள்ளிகள் அடிப்படை தேர்வு முறையினை நம்பியிருக்கவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அதில் போராடி தோற்றுப்போகின்ற மாணவர்களின் நிலைமை என்ன? அவர்கள் தமது கனவுகளை புதைக்கொண்டு இன்னொரு வேலைக்கு போகின்ற அல்லது இன்னொரு துறையை தெரிகின்ற துர்ப்பாக்கிய நிலையை அடைகின்றார்கள்.
ஏற்கனவே இலங்கையில் SAITM இற்கு எதிராக போராடுகிறார்கள். SAITM இற்கு முதல் இப்படியாக தட்டிக்கழிக்கப்படுகின்ற மாணவர்களின் எதிர்காலம் பற்றிய நிலைப்பாடு என்ன? அசம்பாவிதங்கள் நடக்கின்ற போது தான் அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகின்றது. அனிதாவின் மரணம் ஒரு சம்பவமாக முடிந்துவிடாமல் கல்வி முறைமை பற்றிய பல கேள்விகளையும் கேள்விகள் சிறந்த கல்வி முறைமையையும் ஏற்படுத்தவேண்டும்.

மூன்று மௌனங்கள்.

தோள்ப் பையினை ஒரு தோள்மூட்டிலும் மற்றைய கையில் காகிதங்களுடனும் வேகமாக பன்னிரண்டாம் வாட் என்ற பெயர்ப்பலகையைத் தாண்டி நடந்துகொண்டிருந்தேன். நான் போகவேண்டிய இடம் பன்னிரண்டாம் வாட்டிற்கு எதிரில் அமைந்திருக்கின்றன மார்பு சோதிக்கும் நிலையம். காலை எட்டிலிருந்து மின்தூக்கிகளிலும் படிகளிலும் வரிசைகளிலும் நின்று வாடி வெறுத்துப்போயிருந்தேன். நேரம் இரண்டு முப்பதைத் தாண்டியிருக்க வேண்டும். பன்னிரண்டாம் வாட் – மருத்துவமனையின் தொங்கலில் இருக்கின்றது. அங்கிருந்த ஒரு தாதி வழி காட்டும் போது கையினை விரித்து நீட்டிய விதமே நீண்ட தூரத்தினை காட்டியது. காலையில் குடித்த தேநீர் செமித்து சிறு குடல்கள் அலறத் தொடங்கி வெகு நேரம் ஆகிவிட்டது. பெயர்ப்பலகையைத் தாண்டி நடைபாதையினூடு நுழைந்து நடந்து செல்ல கத்தியும் அழுதும் சத்தம் கேட்டது. என்னை அச்சத்தம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. காலை மருத்துவமனைக்குள் நுழையும் போதே அலறல் சத்தம் தான் வரவேற்றது. வெளிநோயாளர் பிரிவின் கீழ்தள வெளியிலிருந்து மேலே பார்க்க – அத்தனை மாடிகளிலும் இருந்து பெரும் கூட்டம் அலறலையும் சோகத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த ஓலத்திற்கு முன் இது ஒன்றும் பெரிய சத்தம் இல்லை. நேராக பன்னிரண்டாம் வாட்டை அடைந்தேன்.
தோற்றமே சிறுவர்களுக்கான பகுதி போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மூன்று மொழியிலும் ஏதோ சில வசனங்கள் கருத்துக்கள் எழுதியும் ஒட்டியும் இருந்தார்கள். அழுகைச் சத்தம் என்னை நெருங்கியது. வாட்டின் வெளிப்புறம் சிறைச்சாலை போல வெள்ளை கம்பிகள் போட்டு அடைத்த அறைகளை அவதானித்தேன். அதனுள் பெரும்பாலும் காலியான கட்டில்களே இருந்தன. இருந்த மூன்று அறைகளில் மூன்றாம் அறையில் கட்டில் மூலையை பிடித்த வண்ணம் ஒரு தாய் நின்று கொண்டிருந்தாள். அவர் ஒரு பிள்ளையின் தாய் என்பதை இனங்காண இலகுவாக இருந்தது. அழுகையின் சத்தமும் அந்த அறைக்குள் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. சிவப்பு நிற மேலங்கியும் நீல அரைக்காட்சட்டையும் போட்டுக்கொண்டு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் வெள்ளைக்கம்பிகளை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த அடுத்த கணமே அவனின் அம்மாவைத் தான் உற்றுப் பார்த்தேன். அவரின் கண்கள் காவிக்கொண்டிருந்த வெறுமை- அவரின் கைகள் கட்டிலின் நுனியை பிடித்திருந்த முறை – அவரின் பார்வை மகனை பார்க்காமல் வெளியே எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த விதம்- அனைத்தும் என்னுள் கலந்தன. சிறையின் கம்பிகளுக்குள் இருக்கின்ற ஒரு பறவையின் ஏக்கம் அவனின் தளர்ந்த பிடிப்பில் தெரிந்தது. எத்தனையோ முறை கெஞ்சியும் கொஞ்சமும் விலகிக்கொடுக்காத கம்பியிடமும் விலக்கிக்கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற தாதியிடமும், பேசுவதைப்போல அந்த அழுகை தெரிந்தது. அதுவரை இரைச்சலைப் போல தோன்றிய அவனின் அழுகை, அதன் பின்னர் உன்னதமான மொழியாக கேட்டது. அருகில் சென்று அவன் கிடந்த கம்பியின் அருகில் இருந்தேன். அவனின் கண்கள் இரண்டும் பொண்டிப் போய் இருந்தது. மூக்கு வழிந்து கொண்டிருந்தது. அவனிற்கு மூச்சு இரைத்தது. ஒரு கணம், ஒரே ஒரு கணம் அவன் என் கண்களை பார்த்தான். பின்னர் மெதுவாகத் திரும்பி அம்மாவைப் பார்த்தான். பின் தாதியை. அப்போது அவன் அழவில்லை. ஏதோ ஒன்றைக் கடத்தியிருக்கிறான். என்னை அவன் யாராக எண்ணியிருப்பான்? மருத்துவராக , தாதியாக , உறவினராக , தம்பியாக , பிள்ளையாக , மனைவியாக , கடவுளாக , எமனாக , கொள்ளைக்காரனாக எதுவாக? என்னால் அவனின் பார்வையையும் கணப்பொழுதில் அவன் கடத்திய மொழியையும் சற்றுக்கூட உணர முடியவில்லை.
அந்த தாதி என்னைப்பார்த்து சிரித்தார்.என்னால் அந்த கம்பிகளைத் திறந்த விடமுடியாது என்ற கர்வச் சிரிப்பு அது. பின்னர் தாதி என்னோடு கதைத்து, போகவேண்டிய இடத்தைக் காட்டினார். எல்லாம் முடித்து மருத்துவமனைக்கு வெளியில் வந்து நின்று ஒரு முறை யோசித்தேன், அவனின் அழுகை எதற்காக ? காலை அழுத உறவினர்களின் அழுகை எதற்காக?
அவன் எங்களைப் பார்த்து அழுகிறானா? அவனிற்கு- நாங்கள் சிறைக்கம்பிக்குள் இருப்பது போலத் தெரிகிறதா? எங்கள் வாழக்கையைப் பார்த்துத்தான் அழுகிறானா? எங்கள் அவலங்களை அவன் உணர்ந்துகொண்டு புலம்புகிறானா? அவன் என்னை மீட்கத் தான் அந்த பார்வையை பார்த்தானா? அந்த மௌனமான பார்வை என்னை நோக்கிய கருணையின் வடிவமா?
அழுத உறவினர்கள் எல்லோருமே இறந்தவர் இவ்வுலகைவிட்டு போய் விட்டார் என்று அழுகிறார்களா? இல்லை போய்விட்டாரே என்ற பொறாமையின் வடிவமா அந்த அழுகை ?
அந்த சிறுவனின் கண நேர மௌனமும் இறந்தவரின் நிரந்தர மௌனமும் எனக்குள் எதையோ ஒன்றை விதைத்துச் சென்று விட்டன.

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் – புதியசொல் – காற்றுவெளி

“புதிய சொல் – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்” – காற்றுவெளி இணையஇதழில் வெளியான எனது கட்டுரை.

ஈழத்து சிற்றிதழ்களின் சமகால போக்கு பற்றியும் சமீபத்திய புதிய சொல் பற்றியும் லண்டனில் இருந்து வெளிவருகின்ற காற்றுவெளி இணைய இதழில் எனது கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது இதழ் இந்தவருடம் ஜூலை மாதம் வெளிவந்திருக்கின்றது. இந்த இதழ் ஏப்ரல் – ஜூலை காலாண்டிதழ்.
 
சமகால இலக்கிய சூழல் என்கிற வரையறைக்குள் இருக்கின்ற சமூகத்தின் இயக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றது. சமகால ஈழத்து எழுத்தாளர்களின் செயற்திறன் எல்லை மிகக் குறுகியதாகவே இருக்கின்றது. அவர்களின் செயற்பாட்டு எல்லைக்கு வெளியே சென்று சாதாரண சமூகத்தினரிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்க முடியாமல் உள்ளது. படைப்பாளிகளையும் அவர்களின் வாசகர்களையும் தவிர ஏனையோருக்கு ஒரு இலக்கியப் பதிவு போய்ச்சேருவது மிக மந்தமாக இருக்கின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஏறத்தாள இதே நிலைதான். எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏதோ எழுத்தாளர்கள் அனைவரும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக எழுதிக்கொண்டு இருப்பது போல சாதாரண மக்கள் அவர்களை கடந்து செல்கின்றார்கள். இந்த மனநிலைக்கு வெகுஜன எழுத்துக்களும் ஒரு காரணம் ஆகும். மக்கள் இலக்கியத்தை பொழுதுபோக்கு ஊடகாம பார்கிறார்களே ஒழிய ஒரு அடையாளமாக பார்க்கவில்லை. மிகவும் நெருக்கமான பிணைப்புகளை ஏற்படுத்தியிருக்கும் சமூகவலை தளங்கள் இலக்கியத்தின் தரத்தை சீரழிக்கின்றன. எழுத்தாளர்கள் யார் கவிஞர்கள் யார் படைப்பாளி யார் என்ற பிரக்ஞையே இல்லாமல் எழுத்துகளின் குப்பைகளை கொண்டாடுகின்ற மந்தநிலை சமூகம் உருவாகிக்கொண்டு வருகின்றது. அதற்கு சமாந்தரமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் சிறந்த இலக்கியங்களை பரப்புகின்ற ஒரு சாராரும் இருந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களின் கவனிப்பும் நிலையும் பரிதாபத்திற்குரியது. இந்த கவனிப்பின்மை அவர்களை வணிக எழுத்துக்குள் உந்துவதாக அமைகின்றது.
அச்சு ஊடகங்களில் பத்திரிகை சமூகத்திற்கு கொடுக்கவேண்டிய அறிவுறுத்த வேண்டிய அறிவிக்க வேண்டிய எதையுமே சரிவர செய்யவில்லை. செய்திகளிலேயே உண்மைத்தன்மையை பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பியே சரிபார்க்கவேண்டிய இழிநிலையை பத்திரிகைகள் அடைந்துள்ளன.
இன்றைய சிற்றிதழ்களின் நிலையையும் கவனிக்க வேண்டும். அதிலும் ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் மிக குறுகிய வாசிப்பு வட்டத்தையே கொண்டிருக்கின்றன. நலிந்த வாசகர்களைக் கொண்டு ஒரு இலக்கிய சிற்றிதழை நடத்துவது என்பது மிகக் கடுமையான காரியம். இதனாலேயே பல சிற்றிதழ்கள் இன்றைய சமூகத்திலிருந்து வழக்கொழிந்து போயிருக்கின்றன. சிற்றிதழ்களின் உள்ளடக்கம் எப்போதுமே பெரும் சவாலான ஒன்றாக அமைந்துவிடுகின்றது. எவருக்கான இதழாக வடிவமைப்பது என்பது ஒரு பக்கம் இருக்க, இலக்கிய தரமான ஆக்கங்களை பெற்றுக்கொள்வது மிக கஷ்டமாக உள்ளது. வாசிப்பின் பரவலாக்கம் இன்மை தமிழில் ஒரு சாதாரண மனிதனின் எழுத்துகளில் நலிமையை உண்டாக்குகின்றது. இதனால் பரந்துபட்ட எழுத்தாளர் குழுமத்தையும் உருவாக்குவது முடியாத காரியம்.
அந்த வகையில் புதிய சொல்லில் தற்போதைய நிலைமை ஓரளவுக்கு ஈழத்து சிற்றிதழ் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் புதிய சொல்லின் செயற்பாட்டுக் குழு இளைஞர்களாக இருக்கின்றமை. அவர்களின் தீவிர பரப்பு நடவடிக்கைகள் புதிய சொல்லில் இருப்புக்கு வழி செய்கின்றது. அதே போல புதிய சொல்லில் வெளிவருகின்ற ஆக்கங்களின் புதுமைத்தன்மையும் ஒரு காரணம். என்னதான் புதுமைகளைச் செய்தாலும் வாசிப்பு வட்ட விஸ்தரிப்பு இன்றி நிலைக் கொண்டுவிடமுடியாது. பொழுதுபோக்கு இதழுக்கு ஏற்படுத்தக்கூடிய வாசிப்பு வட்டத்தின் அளவை ஒரு போதும் இலக்கிய சிற்றிதழ்கள் ஏற்படுத்திவிடமுடியாது. இது சம்பிரதாயம். ஆனால் வாசிப்பு ஊடகத்தை பரவலாக்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
 
எனக்கு புதிய சொல்லின் ஆசிரிய குழுமத்தை தெரிந்துகொள்வதற்கு முதலே புதிய சொல்லை தெரிந்தும் வாசித்தும் இருந்தது புதிய சொல்லில் வாசிப்பு விஸ்தரிப்பின் எழுச்சியான போக்கைக் காட்டியது. பல சிற்றிதழ்களை வற்புறுத்தித் திணித்தி அனுப்புகின்ற சூழலில் தனக்கென வாசகர் பரப்பை குறுகிய காலத்தில் புதிய சொல் ஏற்படுத்தியிருப்பது அவர்களின் வெற்றி. அதைத் தொடர்ந்து தக்கவைத்துகொண்டிருப்பது இலகுவானதல்ல. அதையும் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
 
புதிய சொல் 06
 
எப்போதுமே புதிய சொல்லில் அட்டைப்படம் ஆழ்ந்த குறியீட்டு மொழியிலேயே இருக்கும். இந்தமுறையும் நல்லையா சவேசனின் கைவண்ணத்தில் child art முறையில் அரசியல் – பாலியல் – வன்முறைகள் அடிப்படையில் வரையப்பட்டு பிரசுரிக்கப்ட்டிருக்கின்றன. ஆசிரியர் குறிப்பில் உரையாடல்களுக்கான தளத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து இலக்கிய வளர்ச்சிக்கான அழைப்பை தொடர்ந்து விடுத்துக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முன்னைய இரண்டொரு இதழ்களில் நான் கண்ட வாசக இலக்கிய வாத பிரதிவாதங்களை  இதில் காணாதது கவலையே. அதற்கான அழைப்பும் ஆசிரியர் குறிப்பில் விடுக்கபடுகின்றது.
 
புத்தகாயம் – இராகவன் ,துயர் மிகு இருள் – தீபன் சிவபாலன் , ஒழுங்குபடுத்தலின் வன்முறை – அருண்மொழிவர்மன் , Silence in the Courts அதிகாரத்தின் துஷ்பிரயோகம் – அத்தியா , காலங்களை கண்களில் நிரப்பியவன் – அனார் , மக்ரலின் அறுபதாயிரம் புறாக்கள் – யதார்த்தன் , சோலையூர் காண்பியக்காட்சி பற்றிய ஒரு பார்வை – தனுசியா , சல்வீனியா – தர்மு பிரசாத் , விளமீன் – ஜே கே , சாக வாய்க்காத நாட்கள் – நபீல் ,நான்கு காட்சிகள் ஒரு கவிதை – கேயல்.நப்லா , நட்சத்திரங்கள் சேகரிப்பவள் , கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள் – விருபா குமரேசன் , சினிமா வட்டங்களும் ஓர் இயக்கமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் , விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு – எஸ்.சத்தியதேவன் என கட்டுரைகளும் கவிதைகளும் சிறுகதைகளும் உள்ளடங்கலாக புதியசொல் 06 வெளிவந்துள்ளது.
 
 
இறுதி உள் மட்டையில் தொன்மையாத்திரை என்ற நிகழ்வு சம்பந்தமான புகைப்பட ஆவணப்படுத்தலும் சிறுகுறிப்பும் உள்ளது.
 
மற்றைய புதிய சொற்களுடன் ஒப்பிடும் போது இது பௌதீக அளவில் குறுக்கம் உடையதாக இருக்கின்றது கவலை அளிக்கின்றது. அத்தோடு இந்த இதழில் கட்டுரைப் பல்வகைமை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் கவலையே.
 
எல்லா இலக்கிய ஆர்வலர்களும் , சாதாரண மக்களும் புதிய சொல்லை வாசித்து அறிந்து பகிர்ந்து கொள்ளுதல் இதழின் வளர்ச்சி என்பதைத் தாண்டி ஈழத்தில் சிற்றிதழுக்கான அங்கீகாரத்தையும் அவர்களுக்கான சரியான தளத்தையும் அமைத்துக்கொடுக்கும் என நம்புக்கின்றேன்.
 
அதே போல இந்த இதழில் உள்ள கட்டுரைகள் அதன் மையம் அடிப்படையில் அடுத்தகட்ட விவாதத்திற்கு உரியவை. ஆசிரியர் குழு அதற்கான ஆவலுடன் இருப்பதும் தெரிகின்றது. வாசகர்கள் அவர்களின் வாதப்பொருளையும் வாதங்கள் பிரதிவாதங்களையும் முன்னகர்த்திச் செல்லவேண்டியது மேலும் அவர்களுக்கு ஊட்டம் அளிக்கும் என திடமாக நம்புகிறேன். எமது சமூகம் வாதங்களை இன்னமும் செய்யாமல் அமைதியாக இருப்பது எமது பிற்போக்கு தனத்தைக் காட்டுகிறது. அதிலும் இன்றைய சமூக வலைதளங்களில் ஏற்படுகின்ற அடிமட்ட வாதங்களில் பிரயோசனம் இல்லாமல் நிலைத்து வாதாடுவது, அதன் எல்லா பகுதிகளையும் அலசி தேர்ச்சி பெற்று நாட்கள் வாரங்கள் என்று வாதாடுவது கீழ்மையின் உச்சம். மிக பின்னடைவான இனமாக எங்களை பிரகடனப்படுத்த நாங்களே எடுக்கின்ற முயற்சிகள். ஆரோக்கியமான விவாதங்களில் அறுவரோ எழுவர் மட்டுமே நின்று வாதிடும் சந்தர்ப்பங்களை அதிகம் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் எமது சமூகத்தின் கருத்து பரவலாக்கத்தை மட்டுப் படுத்தும் காரணிகள். கருத்துப் பரிமாற்றமே இல்லாத ஒரு சந்ததியினர் அழிந்து போன வரலாறுகள் கூட எங்களை இன்னமும் திருத்தி விடவில்லை. பிரயோசனமான அறிவு சமூக அரசியல் விவாதங்கள் வளரவேண்டும். எல்லோரும் பங்கேற்க்கவேண்டும். இதுவே புதிய சொல்லின் ஆசிரியரின் உள்ளார்ந்த ஆசையாக இருக்கும் என நம்புகின்றேன்.
 
புதிய சொல் குழுமத்திற்கு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கிறேன்.
 

காற்றுவெளி இணையதளம் –  http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
 
இதழை மின்பிரதியாக பெற –  இங்கே சொடுகவும்.

ஹட்டன் குறிப்புக்கள்.

ஹட்டன் குறிப்புக்கள்- 1
இலக்கிய சந்திப்புக்கு முதன்னாள் இரவு பத்து மணியளவில் A9 வீதியில் பயணம் தொடங்கியது. ஹட்டன் கொட்டகலையில் தான் இலக்கிய சந்திப்பு என்று அறிவித்தல் வந்த போது, கொட்டகலையின் பெயர் என்னுடைய அப்பாவோடு மிகவும் நெருங்கியதாக இருந்தது, இதுவே அவரைச் சம்மதிக்க வைக்கவும் செய்தது. அப்பா படித்த ஆசிரியர் கலாசாலை கொட்டகலையில் தான் இருந்தது. கிளம்புவதற்கு முதலே அப்பாவின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான லெனின் மதிவானம் அவர்களுக்கு நான் வருவதாக அறிவித்திருந்தார். அவருக்கென தேனும் ஒடியலும் பத்திரப்படுத்தி தந்தார். இலக்கிய சந்திப்பிற்க்கு செல்லவேண்டும் என்ற மனநிலை யதார்த்தனின் சிறுகதை தொகுப்பின் அறிமுக நிகழ்வு நடகின்றது என்பதனாலேயே ஏற்பட்டது. அது சோபிக்காமல் குறுக்கப்பட்டது வேறு விடயம். இலக்கியத்தில் சோபித்தல் நீட்சி போன்ற அலங்காரங்களை எதிர்பார்க்க முடியாது தானே. பத்து பன்னிரண்டு பஸ்களுக்கு பின்னர் ஹட்டன் யாழ்ப்பாணம் பஸ் வந்தது. பஸ்ஸின் முன்னால் நின்றவர் ஏறுங்கள் ஏறுங்கள் என்றபோது எதையும் யோசிக்காமல் ஏற முனைந்தேன். எதற்கும் “ஹட்டன் தானே?”, “கொழும்பு” அப்படியே பின்னோக்கி கையினை அசைத்து அனுப்பிவிட்டு, சரியாக பன்னிரண்டாவது பஸ்ஸில் மிகுந்த கவனத்துடன் ஏறினேன். முன்னாலே கிரிசாந்த் இருந்து சிரிக்க, தூக்கமுடியாமல் பயணப் பையினை தூக்கிக்கொண்டு கடைசி ஆசனங்களை வந்து அடைந்தேன். தெரிந்த முகங்கள் பாதி தெரியாத முகங்கள் மீதியென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். தேனும் ஒடியலும் பத்திரமாக பயணப்பைக்குள் இருப்பதை உறுதி செய்யுமாறு, பாதுகாப்பாக வைத்தேன்.
ஹட்டன் குறிப்புக்கள்- 2
குளிரும் என்பதை தவிர ஹட்டன் பற்றிய எந்த சித்திரமும் என்னிடம் இல்லை. ஹட்டனில் இருந்து எட்டாம் ஒன்பதாம் ஆண்டுகளில் நவீன் என்ற நண்பன், என்னோடு வவுனியாவில் எங்கள் பாடசாலையில் படித்தான். இந்த பயணம் முழுவதிலும் அவனைப் பற்றிய எண்ணமே வரவில்லை. எழுதத் தொடங்கியபோது தான் நினைவில் பளிச்சிட்டான். அவனின் ஓரிரு வார்த்தை, முடியுமானால் ஒரு சிறு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கலாம். சந்தர்ப்பம் நழுவிப் போய்விட்டது. சிறிது நேரம், கிட்டத் தட்ட ஒரு ஐந்து நிமிடம்.- இறுதி ஆசனத்தில் இருந்து பின்னர் முன்னோக்கி இரண்டு ஆசனங்கள் தாண்டி, உறுதியாக எனது இருப்பிடத்தை தெரிந்து கொண்டேன். இடது பக்கம் கலைமுகம் இலக்கிய இதழின் பிரதம ஆசிரியரும் வலது புறம் அறிமுகம் இல்லாத ஒருவரும் இடையில் நானும் அந்த மூன்று ஆட்கள் ஆசனத்தில் இருந்தோம். கலைமுகம் ஆசிரியருடன் அறிமுகமான போது, மனதில் மெல்லிய குற்றவுணர்வு ஏற்பட்டது. கலைமுகத்தின் ஒரே ஒரு இதழை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். உண்மையில் வைத்திருக்கிறேன். இரெண்டொரு கட்டுரைகள் வாசித்த ஞாபகம். அவர் கடைசி இதழை வாசித்தீர்களா? எப்படி இருந்தது? என்று குழந்தைத் தனமாக கேட்டபோது இன்னும் குற்றவுணர்ச்சி அதிகமானது. சிறு மௌனத்தின் பின்னர், நான் வாசித்த ஒரே ஒரு இதழின் அட்டை வண்ணத்தை ஞாபகத்திலிருந்து சொல்ல, அவர் அதற்கு பின்னர் இரண்டு இதழ்கள் வெளிவந்து விட்டதாக சொன்னார். சமகால இலக்கிய அவதானிப்பு இருந்தும் அவற்றை தவற விட்டதும், அவர் அருகில் அதற்கு பின்னர் எப்படி இருப்பது என்றும் கவலை தொற்றியது. அவர் வவுனியாவிற்கு இரண்டையும் தான் அனுப்பவில்லை என்றபோது கவலை விலகியது. கூடவே, இன்றைய நாட்களில் கலைமுகம் முன்னையதை விட அதிகமாக விற்பதாகவும், வாசகர் பரப்பு கூடியிருப்பதாகவும் சொன்னார். நான் கொஞ்சம் பூரித்துப்போனேன். அவர் “ நீங்க எங்களுக்கு எழுதுங்களேன்” , பூரிப்பு இருமடங்காகியது. அவரிற்கு மீண்டும் ஒரு மௌனத்தால் விடையளித்தேன். இரண்டு மௌனங்களும் வேறு வேறானவை.
ஹட்டன் குறிப்புக்கள்-3
வலது பக்கம் இருந்தவருக்கும், அவரின் இருக்கைக்கு முன்னால் இருந்தவருக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. பிரச்சனை ஜன்னல் திறப்பது சம்பந்தமானது. இவர் திறப்பதும் அவர் மூடுவதும் பின்னர் இவர், அவர் என்று நடந்துகொண்டே இருந்தது. இதிலிருந்து அவர் இலக்கிய சந்திப்பிற்கு வந்திருக்க மாட்டார் என்பதை யூகித்துக் கொண்டேன். உண்மையும் அதுதான். அவர் பக்கம் இருந்த நியாயம், அவரிற்கு எப்போதும் துப்பிக்கொண்டே இருக்கவேண்டும். அதனால் ஜன்னல் திறந்திருக்கவேண்டும். முன்னால் இருந்தவர் பக்க நியாயம், என்னருகில் இருந்தவர் ஜன்னலை திறந்தே வைத்திருக்க சம்மதம், ஆனால் அவர் கணத்துக்கு கணம் ஜன்னலின் அளவை மாற்றிக் கொண்டே இருப்பது அசௌகரியம். யார் பாக்க நியாயம்? இதில் குழப்பம் ஏதும் இருக்காது. ஆனால் ஹட்டனில் இருந்து திரும்பி வரும்போது, 27ஆம் இலக்க ஆசனம் அதுவும் நடு ஆசனம் தான். யாருமே இருபுறமும் இல்லை. பயணப்பையை ஆசனத்தில் வைத்துவிட்டு, சூடாக வடையும் கிழங்கும் சாப்பிட இறங்கினேன். 7.20 இரவு, சரியாக பஸ் எடுத்துவிடுவார்கள் என்பதற்காக ஐந்து நிமிடம் முன்னரே வந்து சேர்ந்து விட்டேன். பெரிய இருக்கையின் கரையில் என்னைப்போல ஒன்றரை மடங்கு பெரிய உருவம் கொண்ட ஒருத்தர் இருந்தார். நான் நடுவில். கிட்டத்தட்ட இரண்டரை ஆசனங்கள் நிரம்பி விட்டநிலையில், மூன்றாமவர் யார் என்ற ஆவல் கூடியது. பயமும். சற்றுப் பெருத்தவர்கள் 29ஆம் இலக்க இடத்தை நோக்கி வரவும், அதைத் தாண்டிச்செல்லவும் பயம் வருவதும் கடப்பதாகவும் இருந்தது. பின் ஆசனத்தில் இருந்த சதீஸ் அண்ணா, என்னை மிகவும் கவனித்தவராய் எனது இன்னல்களை சிலாகித்துகொண்டு இருந்தார். ஒரு இருபது நிமிடங்கள் அந்த ஆசனத்தில் என் பயணப்பை மட்டமே இருந்தது. இப்போது இடத்திற்கான குழப்பம் அதிகமானது. அதில் இப்போது தேனோ ஓடியலோ இல்லை. அதற்கு பதிலாக சில புஸ்தகங்களே நிரம்பியிருந்தன.
ஹட்டன் குறிப்புக்கள்- 4
வலப்பக்கம் அறிமுகம் இல்லமே கடைசிவரை போனது. நான் அறிமுகம் செய்துகொள்ள விரும்பவில்லை. அவருக்கு அறிமுகம் செய்துகொள்ள நேரம் இல்லை. சொன்னது போல நிமிடத்திற்கு பத்து முறையாவது கடைசி துப்பிக்கொண்டே இருந்தார். ரபான் சத்தம் மெதுவாக கேட்க தொடங்குகிறது. வவுனியாவில் என்னையும் சதீஷ் அண்ணாவையும் ஏற்றும் வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாடல் கேளிக்கைகள் ஆரம்பம் ஆகியது. அதோ அந்தப் பறவை போல என சதீஸ் அண்ணா ஆரம்பிக்க கிரிசாந், யதார்த்தன், நண்பர்கள் என சேர்ந்துகொண்டனர். சிங்களப் பாட்டு பஸ்ஸில் ஒலிக்க அதற்கு மேலாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பழைய பாட்டுகளும் பின்னணி முணுமுணுப்புகளும் என்று பஸ் வேகத்தைக் கூட்டியது. சிறிது நேரத்திலேயே மதவாச்சியில் இரவு உணவுக்காக நிறுத்தியது. பின்னர் மீண்டும் கிளம்பிய பஸ்ஸில் பாடிய நினைவோ ரபான் சத்தம் கேட்ட நினைவோ இல்லை. நித்திரை கண்டியில் தான் முறிந்தது. மனமெல்லாம் குளிர்ந்து. அருகில் இருந்தவர் அப்போதும் துப்பிக்கொண்டு தான் இருந்தார். நித்திரை கொண்டாரா? இல்லையா? நித்திரையிலும் துப்புவாரா? அல்லது சேமித்து எழுந்தவுடன் துப்புவாரா? இல்லை துப்புவதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறாரா? கையில் புத்தகமோ அல்லது காதில் ஹெட்ஃபோன்கள் போட்டிருந்ததையோ அல்லது தொலைபேசியை நோன்டிக்கொண்டதையோ நான் காணவில்லை. கண்டியிலிருந்து பஸ் ஹட்டனுக்கு புறப்பட்டது. நித்திரை. கண்டியிலேயே மழை ஆரம்பித்திருந்தது. ஹட்டனில் தொடர்ந்தது. அதிகமாவே இருந்தது. பின்னர் வட்டவளை என்கிற கூடிய மழைவீழ்ச்சி உடைய நகரம் அருகில் இருப்பதை தெரிந்துகொண்டேன். பஸ்நிலையத்தில் இறங்கி மழைக்குள் புஸ்தக கட்டுகளை தூக்கிக்கொண்டு, சூடான தேநீருடன், போகவிருந்த இடத்திற்கு டால்பின் ஒன்றினுள் நெருக்கமாக போய்ச்சேர்ந்தோம். ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரில் டால்பின் நின்றது. டொல்பினுக்குள் நெருக்கமாக இருந்ததால் ஹட்டனின் புறச் சூழலை அவதானிக்க முடியாமலே போனது. இருந்தும் அப்பா கொடுத்து விட்ட தேனும் ஒடியலும் கவனாமாக இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக்கொண்டேன். ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றர்.
ஹட்டன் குறிப்புக்கள்- 5
‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரில் இறங்கும் போதும் மழை தூறலாக பெய்தது. புஸ்தக கட்டுகளையும் பயணப்பைகளையும் டொல்பினில் இருந்து இறக்கி வைத்தோம். முதன் முதலாக ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரை இரண்டு கண்களையும் அகல விரித்து பார்த்தேன். குழந்தைகள் building blocksஐ அடுக்கி விளையாடியது போன்ற நிலதோற்றத்தை ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரும் சூழலும் கொண்டிருந்தது. ஆரம்பத்திலேயே உணவகமும் பின்னர் அருகாமையால் இறங்குகின்ற படிகளற்ற பாதையும் முடிவில் ஒரு வீடும், திரும்பி மீண்டும் இறங்கும் போது எதிரே நீண்ட பெரிய இரண்டு மாடி மண்டபமும் சிறிய சமவெளியும் இறக்கத்தின் வலது பக்கம் தடிகளால் அந்தரத்தில் செய்யப்பட்ட கதைப்போர் கூடமும், அதற்கு எதிரே சீமெந்து பூசப்பட்ட மீன் தொட்டியும் அதற்குள் மீன்களும், இறங்கி சமதரையை அடைந்தது நீண்டு கூர்மையாக வளர்ந்த பெயர் தெரியாத மரம், அதைத் தாண்டி பறந்து விரிந்த பச்சை நிற சாயம் வீசப்பட்ட தேயிலை மலையும் சமதரைக்கும் மலைக்கும் இடையில் மஞ்சள் நீரோடும் கால்வாயும் தெரிந்தது. கால்வாய் நீரின் சத்தம் ஆக்ரோசமான மக்கள் கூட்டம் எதற்காகவோ போராடுவது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது. மஞ்சள் நீரோடும் கால்வாய் என்று என்னால் அவதானிக்கப்பட்டது, சிறிது நேரத்தின் பின் பலதரப்பட்ட பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. முக்கியமாக அதை ஒரு நதி என்றும் கண்ணுக்கு எட்டும் தூரத்தி தெரிகின்ற சிறிய நீர்வீழ்ச்சி போன்ற தோற்றமுடைய அமைப்பிலிருந்து இறங்கி வந்து பாய்கின்றது எனவும் பேசப்பட்டது. சில மணித்தியாலங்களிலேயே மஞ்சள் நீர் தெளிவானது. ஓட்டமும் குறைந்தது. கடைசி வரையும் நின்று விடவில்லை. சிலர் நீர்வீழ்ச்சி போன்ற தோற்றப்பாட்டை உடைய இடத்தில் குளித்ததாகவும், இன்னும் சிலர் அந்த நீரை அருந்தி (தெளிந்த பிறகு) அதை புகைப்படமும் எடுத்து முகப் புத்தகத்தில் போட்டதாகவும் அறிந்தேன். இதன் மூலம் இதை நதி என்று முடிவு எடுத்துவிடுவதா? அல்லது சிறிய கால்வாய் தானா? ஹட்டனின் வேறு எங்கும் சென்றிறாததால் அந்த அமைப்பு கடைசி வரையும் மர்மமாகவே இருந்தது. இப்போது கூகிள் மப்பில் தேடிய போது அங்கு கால்வாய் இருந்ததாகவோ நதி இருந்ததாகவோ எந்த அடையாளமும் இல்லை. ஆனால் street view இல் பார்க்கும் போது தெரிகின்றது. இன்னும் அந்த மஞ்சள் கால்வாய் மர்மம் தான்.

ஹட்டன் குறிப்புக்கள்-6
இரண்டு மாடி மண்டபம், சமதரை அடுத்து நீண்ட இரண்டுமாடி தங்குமிடம். எமக்கான அறைகள் தரப்பட்டன. மொத்தம் மூன்று அறைகளை பயன்படுத்த முடியும் என்றார்கள். கடைசியில் ஆறு ஏழு அறைகளை பயன்படுத்தினோம். ஒரு அறையில் நான்கு கட்டில்கள். இரண்டு கீழே இரண்டு அதற்கு மேலே. ஜன்னலைத் திறந்தால் இரண்டடி தூரத்தில், உண்மையில் அருகில் மஞ்சள் நீர்க் கால்வாய் ஓடியது. கால்வாயையும் இடையில் இருந்த இரண்டடி சீமெந்து நிலத்தையும் அவதானித்தபோது தான் அட்டைகள் பற்றிய ஞாபகம் வந்தது. மலையகப் பகுதிகளில் அட்டைகள் இருக்கும் என்பதை நான் எட்டாம் வகுப்பில் படித்தபோது சென்றிருந்த சுற்றுலா ஒன்றின் மூலமாகவே அறிந்திருந்தேன். நாங்கள் சென்ற பஸ்ஸிற்குள்ளேயே அட்டைகள் ஏறின. கீழ் கட்டிலில் படுத்தால் எவ்வளவு நேரம் ஆகும் ஏற என மேல் கட்டிலையே தெரிவு செய்தேன். பயணப்பையை இறக்கி வைத்துவிட்டு கொண்டு வந்த புஸ்தக கட்டுகளை அவிழ்த்து ஈரம் பற்றியுள்ளதா என பார்த்தோம். புதிய சொல்லும் மேடுசாவும் பிரெஞ்சு புரட்சியும் கவனமாக இருந்தது. தேனும் ஒடியலும் கூட. முதலாவதாகவே முந்நூரு ரூபாய் கொடுத்து மெடுசாவின் கண்கள் முன்னே நிறுத்தப்பட்ட காலத்தின் ஒரு பிரதியை வாங்கி வைத்துக்கொண்டேன். விடியற்காலை ஏழைத் தாண்டியிருந்தது. குளிர் மிதந்து வந்து உடலெல்லாம் சூழ்ந்தது. உண்மையில் இத்தனை புதிய அனுபவங்களுக்கிடையில் யார் எம்மை முதலில் வரவேற்றார்கள் யார் வழிகாட்டினார்கள் என்று எதையுமே கவனிக்கவில்லை. முதலிலேயே குளிக்கசென்று நீரினால் துடைத்துக்கொண்டு வந்த யதார்த்தன், இனி குளிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார். இறுதியாக நான் துவாயையும் சவர்க்காரத்தையும் தூக்கிக்கொண்டு மண்டப முடிவில் இருந்த குளியல்அறைக்குள் சென்றேன். குளியலறையும் கழிப்பறையும் மிகவும் சுத்தமாக இருந்தது. இருந்தும் என்ன பயன் குளிக்க வேண்டுமே! குளித்தேன். முதலில் குளிர்ந்து, பின்னரும் கூட.
ஹட்டன் குறிப்புக்கள்- 7
அங்கு எனக்கு வியர்க்கவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் உணவகத்துக்கு ஏறும் போதும் மூச்சு வாங்கியது. பலகீனமானவனாகத் தெரிந்தேன். உண்மையில் புதிதாக அந்த சாய்வில் ஏறுபவர்கள் எல்லோருமே பலகீனமானவர்கள். 9.30ற்கு நிகழ்வுகள் தொடங்கும் என்றிருந்தது. உணவகத்திற்கு சென்று தேநீரும் உணவும் சாப்பிடவேண்டி உச்சிக்கு சென்றோம். அங்கே அனோஜன் முன்கூட்டியே வந்திருந்தார். எல்லோரும் சேர்ந்துகொண்டோம். எழுத்தாளர் கருணாகரனும் அங்கிருந்தார். வேறு எவரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தேனும் ஒடியலும் கொடுக்கவேண்டி கொண்டுவந்த லெனின் மதிவானம் அவரையும் பார்த்ததில்லை. உண்மையில் அங்கு அவர் வந்திருக்கவில்லை. உணவுகளை முடித்துக்கொண்டு அருகில் இருந்த பல்கனி போன்ற இடத்தில் நின்று ஒரு சில புகைப்படங்களை DSLR இல் எடுத்துக்கொண்டோம். நாகரிகதிற்காக ஒரு சில என்றேன். எக்கச்சக்கமாக எடுத்துக்கொண்டோம். கிரிசாந்த் பல எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டு வந்தார். எல்லோரும் வெகு விரைவாக பழகிக்கொண்டோம். பலரை நான் அண்ணா என்ற விகுதியுடன் அழைத்ததை விரும்பாதவர்களாக இருந்தார்கள். பெயரைச் சொல்லியே அழைக்கலாம் என்றார்கள். நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அண்ணா என்றே அழைத்தேன். அரை மணி நேர இடைவெளிக்குள்ளேயே எல்லோரும் எல்லா இடங்களும் பழக்கத்திற்கு வந்தது. தெரியாத அனைவரும் தெரிந்தவர்கள் ஆகிப்போனார்கள். ஒரே ஒரு அறிமுகம் தான் தேவைப்படுகிறது, அந்நியர்கள் நம்மவர்கள் ஆகுவதற்கு. அத்தனை அறிமுகத்திலும் தேனிற்க்கும் ஒடியலுக்கும் வேலை வரவே இல்லை.
ஹட்டன் குறிப்புக்கள்- 8
வழமை போலவே பத்து மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பித்தது. இலக்கிய சந்திப்பின் வரலாறு சொல்லப்பட்டது. நான் கட்டடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அது மரத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. சுவர், மேற்றளம் என்று எல்லாமே மரத்தினால் ஆனது. வைரமான மரத்தினால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஹட்டனில் நிற்கின்ற மரங்கள் எல்லாம் வவுனியாவில் இருக்கின்ற மரங்களைப்போல மூன்று நான்கு மடங்கானவை. உயரத்திலும் தடிப்பிலும். மூங்கில் மரங்கள் இங்கிருக்கும் தென்னையைப் போல தடிப்பாக இருந்தன. மிகவும் பெரிய மரங்களின் ஆயுட்காலம் என்னவாக இருக்கும்? அதன் வளர்ச்சி வெயில் பிரதேசங்களைப்போன்றனவா? என்ற கேள்விகள் எழுந்தன. சுய அறிமுகம் தொடங்கியது. ஒரு வரிசையாக அறிமுகம் செய்து கொண்டுவந்தார்கள். முழுமையாக அறிமுகம் முடிந்தது. எனக்குள் சந்தேகங்கள் எழத்தொடங்கியது. கிழக்கிலங்கை முஸ்லிம்களைத் தவிர வேறு யாருமே தாங்கள் செய்யும் தொழிலை மதித்து அறிமுகப்படுத்தியதாகவே தெரியவில்லை. இது எழுத்தாளன் வறுமையானவன் என்ற அடையாளத்தை பலப்படுத்தவா? செய்கின்ற தொழிலை விடுத்து அறிமுகம் செய்திருக்கலாமே. எழுத்தாளனாகவோ, வாசகனாகவோ, நலன்விரும்பியாகவோ, இலக்கிய விமர்சகராகவோ தங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே. அவர்களின் படைப்புக்களின் பெயர்களைச் சொல்லி ஆரம்பித்திருக்கலாம். இப்படி எத்தனையோ வழியிருக்க தம்மை கீழ்மைப்படுத்தி அறிமுகம் செய்வதற்கான நோக்கம் என்ன? இதன் பின்னுள்ள மனநிலை எவ்வாறானது?

ஹட்டன் குறிப்புக்கள்- 9
சுயஅறிமுகம் நடந்துகொண்டிருந்தது. ரியாஸ் குரானாவும் அவரின் நண்பரும் வந்து எனக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார்கள். அப்போது எங்களைத் தாண்டி மைக் போயிருந்தது. பின்னர் ரியாஸுக்கு அறிமுகம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இப்போது மட்டும் தான் அவருக்கு உத்தியோகப்பூர்வமாக மைக் கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறன். முதன் முதலில் அன்று தான் ரியாஸ் குரானாவை நேரில் பார்கிறேன். வெள்ளை ஜீன்சும் கறுப்பு மஞ்சள் – என்று நினைக்கிறன், மேற்சட்டையும் அணிந்திருந்தார். அறிமுக கூட்டத்தில் யாரோ ஒருத்தனை வலுகட்டயாமாக இழுத்துவந்தால் அவனது முகபாவனை எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவரின் பாவனைகள். அறிமுகத்திலேயே தன்னைக் கலகக்காரன் போல அறிமுகம் செய்தார். எனது மனதிற்கு மிகுந்த கறாரான மனிதராக தெரிந்தார். எல்லா அறிமுகங்களிலேயும் என்னை வியக்க வைத்த அறிமுகம் குமாரதேவன் ஐயாவினுடையது. “ நீங்கள் எழுதும் புலி பூனை பற்றிய கதைகளையெல்லாம் வாசிக்கும் வாசகன், தான்” என்று பெருமிதமாக சொல்ல அரங்கமே பாராட்டியது. இறுதி நாளின் கடைசி மணிநேரங்களில் நாங்கள் இருக்கின்றோம். மேலே அரங்கில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான், சதீஷ் அண்ணா, கிரிசாந்த், யதார்த்தன், மகி, மதுரன், ஸ்டான்லி மற்றும் வாசுதேவன் என்று பிரான்சில் இருந்துவந்த புலம்பெயர் எழுத்தாளர் ஒருவரும் கறுப்பி என்கிற புனைபெயர் உடைய சுமதியும் புலம் பெயர் எழுத்துகள் பற்றியும் இன்னும் கொடுக்கப்படாத தேநீர் பற்றியும் பேசிக்கொண்டு மஞ்சள் நதியின் சுவர்களில் சாய்ந்துநின்றோம். பேச்சின் நடுவில் கிரிசாந்த் எம்மை நோக்கி வருவது போன்று இருந்தது. எப்போது விலகிப் போனார் ஏன் விலகிப்போனார் என்று எதுவும் தெரியவில்லை. சிரித்துக்கொண்டே குமாரதேவன் ஐயா காரசாரமாக தன் கருத்துகளை வைத்திருப்பதாக சொன்னார். அந்த சமயம் நிகழ்வின் முடிவில் கருத்துகள் கேட்கப்பட்டுகொண்டிருந்தன. அதைப் பற்றி மேலும் பேச இடம் கொடுக்காமல் மேலிருந்து கொடுக்குப் புன்னகையுடன் மேலிரண்டு பொத்தான்கள் கழன்ற மேற்சட்டையும் சாரமுமாய் குமாரதேவன் ஐயா இறங்கிவந்துகொண்டிருந்தார். எம்மோடு சேர்ந்து தான் கூறிய கருத்துகளின் உள்ளடக்கத்தைச் சொன்னார். ஆரம்பத்திலும் முடிவிலும் குமாரதேவன் ஐயா என்னைக் கவர்ந்தவராகவே இருந்தார். இப்போது அந்த கறை படிந்த முன் பற்கள் தெரிய சிரித்த கொடுப்பு சிரிப்பும் படிகளில் இருந்து இறங்கிய விதமும் அவரை சாமானியராக பார்க்கத் தூண்டவில்லை.
ஹட்டன் குறிப்புக்கள்- 10
அறிமுகம் முடிந்தது முதல் அரங்கில் பங்குபற்றுவோர் அழைக்கப்பட்டனர். நிகழ்வு தொடங்குவதற்கு முதலே விஜி,- அப்படித்தான் ஞாபகம் இருக்கிறது, தனக்கு 10 நிமிடங்கள் தருமாறு அவையை கேட்டுவாங்கிக்கொண்டு, புலம் பெயர் எழுத்தாளர்களின் அரங்க இருப்பு சம்பந்தமான முக்கியமான கேள்வியை முன்வைக்கப்போவதாக கூறினார். பின்னிருந்த ரியாஸ் முன்னால் வந்து அருகில் இருந்த மைக்கை எடுத்து பேசுவதற்க்கான சந்தர்பத்தை எதிர்பார்த்தவராக நின்றார். பின்னர் நடந்தவை விவாதத்திற்கு உரியவை. ரியாஸ் கதிரை ஒன்றை எடுத்து அந்த இடத்திலேயே இருந்தார். ஏற்பாட்டுக்குழுவும் கேள்வி எழுப்பியவரும் பேசிக்கொண்டு தமக்குள்ள சமாதானம் அடைந்து கொண்டார்கள். ரியாஸிற்கு பேச சந்தர்ப்பம் வழங்கவில்லை. நாளின் இறுதியில் இவற்றை எல்லாம் வைத்துகொள்வோம் என்று கருத்துவர நிகழ்வின் இறுதிக்கு விவாதங்கள் ஒத்திபோடப்பட்டது. எடுத்த கதிரையை மீண்டும் பழைய இடத்தில் வைத்துவிட்டு ரியாஸும் நண்பரும் வெளிநடப்பு செய்தார்கள். நான் சிறிது நேரம் நிகழ்வுகளை பார்த்துகொண்டிருந்தேன். என்னோடு சதீஸ் அண்ணாவும் குமாரதேவன் ஐயாவும் இருந்தார்கள். எங்களைச் சுற்றி உள்நாட்டவர் புலம்பெயர்ந்தவர் என்று நிறையப் பெயர் பார்த்துகொண்டிருந்தார்கள். அவைக்குள் தொப்பியும் பிரெஞ்சு தாடியும் சில்க் மேற்சட்டையும் ஜீன்சுமாக உயரமாக ஒருவர் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார். முதலாவது உரையும் அவருடையதே. அவர் தான் லெனின் மதிவானம் என்று அறிந்துகொண்டேன். சிறிது நேரத்தில் நான் அறைக்குள் சென்றேன். அறைக்குள் ஒரு பெரும் கோட்டமே நடந்து கொண்டிருந்தது. நான் அங்கு செய்த முதல் இலக்கிய சந்திப்பு அது தான்.

ஹட்டன் குறிப்புக்கள்- 11
ரியாஸ் குரானாவும் அவரின் தோழர் மிஹாத்தும் கூடவே எங்கள் நண்பர்களுமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்த ரியஸா இது என்பது போல இருந்தது. சிரிப்பும் கலகலப்புமாக இருந்தார்கள். ரியாஸ் தன் பக்க நியாயங்களைக் கூறிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பல்வேறு விடயங்களைப் பற்றி கதைத்தோம். மதிய உணவிற்கான நேரம் வந்தது. முதல் முப்பது பேரும் மேலே உணவகத்திற்கு சென்றிருந்தார்கள். அதனால் நாங்கள் காக்கவேண்டியதாக இருக்கும் என்று நண்பர் ஒருத்தர் கூறியபோது, ரியாஸ் தான் வைத்திருக்கும் இரண்டு பாசலையும் பங்கிடலாமே என்றார். பின்னர் உணவகத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து மேலிருக்கும் வீட்டிற்கு எல்லோருமாக சென்றோம். இருக்கின்ற இரண்டு பாசலை நாங்கள் கிட்டத்தட்ட பத்து பேர் அளவில் பிரித்துகொண்டோம். அங்கு சில சம்பாஷனைகள் நடைபெற்றன. அது தான் எங்களுக்கு இடையிலான கடைசி சந்திப்பாக அன்று இருந்தது. கடைசி நேரத்தில் ரியாஸ் பேச ஒரு நிமிடம் வேண்டிப் போராடியதாகவும் பின்னர் கோபித்துக்கொண்டு 5.30 மணி பஸ்சிற்கு போய்ச் சேர்ந்ததாகவும் அறிந்தேன். நாங்கள் இரண்டாவது முறை மதிய உணவை சாப்பிட வீட்டிற்கு மேலிருந்த உணவகத்திற்கு சென்றோம்.
ஹட்டன் குறிப்புக்கள்- 12
உணவகம் தான் இரண்டாவது இலக்கிய சந்திப்பின் களம். தொப்பியை இன்னும் கழற்றாமல் லெனின் தனியாக சாப்பிட்டுகொண்டிருந்தார். நான் உணவுவை போட்டுக்கொண்டு அவர் அருகில் போயிருந்து நான் பிரிந்தன் கணேசலிங்கம் என்றேன். அவர் அளவு கடந்த சந்தோசத்தோடு என்னைப் பார்த்தார். அவர் அப்போது உண்டு முடிக்கும் தருணத்தில் இருந்தார். இருந்தாலும் எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கி விசாரித்தார். என் அப்பாவிற்கும் அவருக்குமான பழைய கதைகளை பற்றிப் பேசினார். என்னைப்பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டார். மீண்டும் கட்டாயம் சந்திக்கவேண்டும் உரையாடவேண்டும் என்றார். எழுத்து கைகழுவ சென்றபோது பேசத் தொடங்கும் போது பிசைந்த சோறையும் இறைச்சி துண்டையும் சாப்பிடத் தொடங்கினேன். எல்லாம் முடிந்து இறங்கும் போது அவர் யாருடனோ கதைக்கொண்டிருக்க நான் அவை சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தேனையும் ஒடியலையும் எடுத்துக்கொண்டுவந்து அவருக்கு கொடுத்தேன். தன்மேல் தான் எதையும் கொண்டுவரவில்லையே என்று கவலைப்பட்டார். நான் அப்போது எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. பின்னேரம் அறையிலேயே இன்னொரு கலந்துரையாடல். புத்திதாக அறிமுகானவர். மலையகத்தின் இன்னல்களை சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் மலையக உணர்ச்சி தெரிந்தது. அவர் அதற்காக தன்னாலான முயற்சிகளைச் செய்வதாகவும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் ஆதங்கப்பட்டார். மலையகத் தமிழர்கள், அரசியல்வாதிகள், தொழிற்ச்சங்கங்கள், பாடசாலைகள் என்று பலதரப்பு சம்பந்தமாக பேசிக்கொண்டோம். எங்களுடன் லதீபன் அண்ணாவும் இணைந்திருந்தார்.
ஹட்டன் குறிப்புக்கள்- 13
அன்றைய நாளின் பின்னேரம் நானும் லதீபன் அண்ணாவும் மஞ்சள் நதியின் சுவரில் இருந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். பலத்தைப் பேசினோம். ஹட்டன் முழுக்க மப்பும் மந்தாரமாகவுமே இருந்தது. இப்போது மஞ்சள் நதி தெளிந்திருந்தது. இரவு காமன் கூத்து. கூத்தின் ஒரு பகுதி. மேலிருந்த வீட்டின் முற்றத்தில் எல்லோரும் இருக்கவும் நிற்கவும் இருட்டில் அந்த இடமே நிறைந்திருந்தது. அதற்கு சற்று முதல் தான் மூன்றாவது இலக்கிய சந்திப்பு இடம்பெற்றது. படிகளில் நானும் கிரிசாந்தும் வீட்டிற்கு ஏறிக்கொண்டிருக்கும் போது முன்னாள் ஏறிக்கொண்டிருப்பவர் தெளிவத்தை ஜோசப். படிகளை கவனமாக பார்த்துக்கொண்டு அருகில் இருந்த படிப்பிடிகளில் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஏறிக்கொண்டிருந்தார். படிப்பிடிகள் இடையில் முடிய அவரும் தடுக்குற்றார். பின்னால் ஏறிய நான் அவரைப் பிடித்துகொண்டு வீட்டின் முற்றத்திற்கு ஏற்றிச் சென்றேன். DSLR உடன் ஏறிய கிரிசாந்த் அண்ணாவைக்கொண்டு ஒரு புகைப்படம் இருவரும் எடுத்துகொண்டோம். தெளிவத்தை ஜோசப். காமன் கூத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பெருத்த கனமான உடைகளுடன் முகத்தில் பூச்சுகளும் தலையில் சவரியும் கைகளில் ஆயுதங்களும் என தங்களை தயார்படுத்தியிருந்தார்கள். நான்கு ஐந்து வயது சிறுவர்களும் அதில் நின்றார்கள், பிள்ளையாராகவும் முருகனாகவும். வாத்தியார் ஒருவர், பாட ஒருத்தர், தப்பிசைக்க மூவர், ஒத்தாசைக்கு சிலர். நாமெல்லோரும் சுற்றி நின்றோம். இருள் ஏற காமன் கூத்து தொடங்கியது. ஒவ்வொருத்தராக வந்து அறிமுகம் செய்துகொண்டார்கள். அவர்களின் முகம் முழுக்க சோகமும் கவலையும் தோய்ந்திருந்தது. கண்களில் வெளிச்சமே இல்லை. கூத்தும் சோகத்தின் அடையாளமாகவே இருந்தது. அவர்களின் உடலின் எந்தப்பாகமும் சக்தியுடன் ஆடியதாக தெரியவில்லை. பாடல்கள் இழுவையான சோகத்தில் இருந்தன. சிறுவர்கள் கூட சிரிக்கப் பார்க்கவில்லை. இருட்டுத் தான் காமன் கூத்தா? இது தான் மலையகக் குறியீடா? , தப்பு மட்டும் ஆவேசமாக இருந்தது. தோலில் சவுக்கு வீசுவதனால் பொறுக்கமுடியாமல் தப்பு போட்ட கூச்சலா அது? அது அமாவாசையின் இருந்திருக்க கூடும்.
ஹட்டன் குறிப்புக்கள்- 14
முதல் நாள் இரவின் இறுதிப் பொழுதுகளைக் கழிக்க நான், யதார்த்தன், கிரிசாந்த்,லதீபன், மகி, மதுரன் மற்றும் சுமதி ஆகியோர் ஈழத்து, புலம்பெயர் திரைப்படங்கள் சம்பந்தமாக மேலோட்டமாக கதைத்துக்கொண்டிருந்தோம். இடையில் ஈழத்து திரைப்படங்களின் அடையாளம் எது என்ற கேள்வி என்னால் முன்வைக்கப்பட அது பெரிய விவாதப் பொருளானது. இலேசான தூறலுடன் மழை தொடங்கியிருக்க நாங்கள் படிகளுக்கு அருகில் அந்தரத்தில் இருந்த கதைப்போர் கூடம் போன்ற தோற்றமுடைய திறந்த தளத்திற்கு சென்றோம். கதிரைகளை அடுக்கிவிட்டு எல்லோருமாக மீண்டும் வாதிக்கத் தொடங்கினோம். எங்களோடு ஒவ்வொருவராக இணைந்து கொள்ளத் தொடங்கினார்கள். எழுத்தாளர் ஜீவமுரளி, எழுத்தாளர் கருணாகரன் அண்ணா என்று ஒன்றொன்றாகக் கூடிக்கொண்டே போனார்கள். காரசாரமான கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன. பலதரப்பட்ட கருத்து வேற்றுமைகளும் நீண்டு அகண்ட கருத்துநிலை உரையாடல்களும் இடம்பெற்றன. எல்லோருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. இரண்டு மணித்தியாலங்கள் நீண்ட ஆரோக்கியமான உரையாடல் முடிவிற்கு வந்தது. எல்லோரும் தத்தம் இடங்களுக்கு கலைந்து சென்றனர். இது நாங்கள் தங்கியிருக்கும் கட்டடத்தின் முதல் அறை. கிட்டத்தட்ட இரவு பதினொன்று பன்னிரண்டு வரும். நான், கிரிசாந்த், லதீபன், குமணன், மகி என்று வழமையானவர்களுடன் ஒரு புதிய முகம் சேர்ந்திருந்தது. புதிய முகம் என்றில்லை. எமக்கான முதல் அறிமுகம் அது தான். தமிழ் ஆசிரியர் ராமர் எங்களோடு இருந்தார். அன்றைய நாளின் முதல் அரங்கில் அவர் உரையாற்றியிருக்கிறார். காமன் கூத்தில் பாடியும் நடித்தும் தப்பிசைத்தும் இருக்கிறார். முக ஒப்பனைகளால் அவர் தான் என்பதை ஊகிக்க முடியாமல் இருந்தது. பெரும்பாலானோர் உறங்கியிருக்க குமணனின் புல்லாங்குழல் இசையிலும் டொலக்கின் மெல்லிய உரசலுடனும் மலையக பாடல்களை ராமர் அண்ணா பாடிக்கொண்டிருந்தார். இருட்டின் நிசப்தத்தில் அந்த இசையும் வரிகளும் குளிர்ந்த காற்றோடு கலந்து மஞ்சள் நதியின் சலசலப்பில் கலந்து மறைந்தன. தூக்கம் தொற்றியது.
ஹட்டன் குறிப்புக்கள்- 15
இரண்டாம் நாள் அதே குளிருடன் தொடங்கியது. இந்த முறை குளிப்பதற்கு கருணாகரன் அண்ணா இருந்த அறையின் குளியலறையை பயன்படுத்திக்கொண்டேன். அங்கே சுடுநீர் வந்தது. காலை உணவுடன் விழாக்கள் ஆரம்பமாகியது. எப்போதுமே மனிதன் முதலாவதைத் தான் நினைவில் அதிகம் வைத்திருப்பான். இரண்டாவது அரையும் குறையும் தான். முதன்நாள் இருந்த சுவாரஸ்ய தன்மையும் புதிதான மனிதர்களுடன் பழகப் போகின்றோமே என்கிற ஆவலும் இரண்டாம் நாள் தணிந்திருந்தது. இரண்டாம் நாள்தான் புத்தக அறிமுக நிகழ்வுகளுக்கான நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது. புதிய சந்திப்புக்கள் என்று எதுவும் இல்லை. நாங்கள் தனியாகவோ குழுவாகவோ எதையும் வாதித்துக்கொள்ளவில்லை. இரண்டாம் நாள் செழிப்பு அற்றதாகவே இருந்தது. மதிய உணவை லெனின் மதிவானம் உடனேயே சாப்பிட்டேன். கூடவே சில நினைவுப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன். சந்திப்புக்களை நினைவு கூற புகைப்படங்கள் இப்போது அவசியமாகிப் போகின்றன. பின்னேரப் பொழுது, சிறிது சுவாரஸ்யமாகப் போனது. எங்களிடம் மிகச் சிறந்த பாடல் புத்தகம் கிடைத்தது. அதற்கு நானும் ஸ்டான்லியும் குமணனும் இசை அமைத்துப் பாடினோம். இசை என்பதை விட விதம் விதமாகப் பாடினோம் எனலாம். வெகு நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக பாடினேன். மஞ்சள் நதியின் சலசலப்புக்கூட அதை விட இனிமையாக இருந்ததை நான் அறிவேன்.
ஹட்டன் குறிப்புக்கள்- இறுதி
ஹட்டன் இலக்கிய சந்திப்பு தொடர்பான கடைசிக் குறிப்பு இதுவாகத் இருக்கும். ஆழமாக பேச இரண்டாம் நாள் எதையும் மிச்சம் வைத்திருக்கவில்லை. இரண்டு முறை நாங்கள் ஏமாற்றப்பட்டு மூன்றாம் முறை புத்தக அறிமுகம் செய்ய வாய்ப்புக்கிடைத்தது. நாங்கள் கேட்டிருக்காவிட்டால் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம். அவை சரிக்கு சரி அரைவாசியாக இருந்து. அவை அரைவாசியானதிற்கு பொருத்தமான காரணங்கள் நிறைய இருகின்றன. சோர்வுற்றிருந்த சபைக்கு தேவை விடுதலை, அறிமுகம் அல்ல. அறிமுகத்தை அனோஜன் செய்திருந்தார். முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய நான் முன் இருக்கைகளில் அமர்ந்தேன். அறிமுகம் தொடங்கி இருபது செக்கன்கள் ஒளிபரப்பாகியிருக்கும். தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலையில் இருந்து இரண்டு முறை கேட்ட உரையை மூன்றாம் முறையாகவும் கேட்டேன். முதலிரண்டு முறையும் பேசுவதற்கு முன்னாயத்தமாக என்னிடம் பேசிக்காட்டினார். 7.20 ற்கு பஸ் கிளம்பும் என்றார்கள். ஆறு மணியவிலேயே டோல்பினுக்குள் திணிக்கப்பட்டோம். இரண்டாம் நாளின் குளிர் மிக வேகமாக கடந்து சென்றது. முதல் சந்திப்பில் இருக்கின்ற மாயம் ஏனோ இரண்டாம் சந்திப்பில் இருப்பதேயில்லை.
 

“ நான் வாசித்த நாவல்கள் “ – எஸ்.ரா – சிறுகுறிப்பு

எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய மிகவும் முக்கியமான பல இலக்கிய உரைகள் இருக்கின்றன. எஸ்.ரா ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி முக்கியமான பேச்சாளரும் கூட. அவர் ஆற்றிய உலக இலக்கியங்கள் தொடர்பான உரைகள் பிரசித்திபெற்றவை. கிரேக்க நாடகங்களை பற்றி கிரேக்க நாடக புத்தக விழா ஒன்றில் பேசியபோது, அவரின் பரந்த அறிவை வியந்திருக்கிறேன். அப்படியான சிறந்த உரையொன்றை சமீபத்தில் புத்தக திருவிழாவின் போது ஆற்றியுள்ளார். “ நான் வாசித்த நாவல்கள் “ என்பதே தலைப்பு. ஆத்மார்த்தமான உரையாக இது அமைந்திருந்தது. நாவல்களின் முக்கியத்துவத்தையும், இன்னும் எழுதப்படாமல் இருக்கின்ற கருக்கள் பற்றியும், நாவல் வாசிப்பின் வீழ்ச்சி பற்றியும் ஈழத்து போர் இலக்கியங்கள் பற்றியும்  பேசியிருந்தார். எழுத்தாளன் என்ற உணர்வுடன் அவர் பேசிய வார்த்தைகள் அர்த்தம் மிக்கனவாக இருந்தன. சுதேசிய இலக்கியங்களின் அவசியம் பற்றிய ஆழமான கருத்தை முன்வைத்திருந்தார். ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு நிலமும் இலக்கியம் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றை எழுதவேண்டியவர்கள் வரலாற்றில் வாழ்பவர்களே என்ற அடிப்படை வாதம் அவரின் சில சொற்களில் தெரிந்தது. உலக மேடைகளில் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு எழுத்தாளனின் குரலாக அவரது உரை அமைந்திருந்தது.
 
உரையின் முழு வடிவம் Shuruthi TV யினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது ம் பேசியிருந்தார். எழுத்தாளன் என்ற உணர்வுடன் அவர் பேசிய வார்த்தைகள் அர்த்தம் மிக்கனவாக இருந்தன. சுதேசிய இலக்கியங்களின் அவசியம் பற்றிய ஆழமான கருத்தை முன்வைத்திருந்தார். ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு நிலமும் இலக்கியம் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றை எழுதவேண்டியவர்கள் வரலாற்றில் வாழ்பவர்களே என்ற அடிப்படை வாதம் அவரின் சில சொற்களில் தெரிந்தது. உலக மேடைகளில் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு எழுத்தாளனின் குரலாக அவரது உரை அமைந்திருந்தது.
 
உரையின் முழு வடிவம் Shuruthi TV யினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக இலக்கியத் தொடர் 3 – கரமசோவ் சகோதரர்கள் – THE BROTHERS KARAMAZOV-அறிதலும் புரிதலும்.

எமது இலக்கியங்களுக்கும் ருச்சியன் இலக்கியங்களும் மிக நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. உண்மையில் எமது இலக்கியங்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ருச்சியர்களின் மொழி கலாசாரம் பண்பாடு வாழ்க்கை முறைகள் எல்லாம் வேறு வேறானவை. அவர்களின் பௌதீக அமைவிடம் சுற்றுச் சூழல் என்று அனைத்துமே வித்தியாசமானவை. இருந்தும் ருச்சியர்களின் இலக்கியம் எமக்கு நுணுக்கமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அவை மானுடம் என்ற கருப்பொருளின் இயலாமையும் நிதர்சன வாழ்கையின் ஒவ்வொரு சூழ்ச்சியையும் பேசுவதே ஆகும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எமது வாழ்கையில் ஒரு முறையேனும் சந்தித்த நபர்களை ஞாபகப்படுத்திச்செல்லும். அந்த வகையில் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் வாழ்கையின் இருண்மை நிலையையும் இருண்மையால் ஏற்படுகின்ற பித்தநிலையையும் அதன் தொடர்ச்சியையும் அது சமூகத்தில் பிரதிபலிக்கின்ற எதிர்வினையையும் பேசுகின்றது.

கரமசோவ் சகோதரர்கள் – பிரதி பற்றி

(orig12.deviantart.net)

சுதேசமொழி வழக்கு எழுத்துகள் மிக முக்கியமானவை. ஒரு இனக் குழுமத்தின் வரலாற்று இருப்பு என்பது அவர்களின் இலக்கியங்களாலேயே சாத்தியமாகின்றது. இன்றைய இலக்கிய சூழலில் உலகத்தரமான படைப்புகள் என்று சொல்லக்கூடிய பெரும்பாலானவை ஏதோ ஒரு இனத்தின் வழக்கு நிலை கலாசார புனைவுகளாகவே காணப்படுகின்றன. அவை அவர்களின் சுதேச மொழியில் எழுதப்படுகின்ற போது மேலும் உயிர்ப்பு நிலையை அடைகின்றன. அவர்களின் அடையாளமாகவும் மாறுகின்றன.  கரமசோவ் சகோதரர்கள் அன்றைய பேச்சுவழக்கில் இருந்த ருச்சியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க் என்ற நபராலேயே சொல்லப்படுகின்றது. அவர் கதை நடக்கின்ற இடத்தில் வாழ்ந்த ஒருத்தர். தஸ்தாயெவ்ஸ்கி ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க்கின் குரலையே தன் குரலாக கொள்கிறார்.

ஒளியும் இருளும்.

ஒளியில்லாத இடமே இருள். யாரும் இருள் இல்லாத இடம் ஒளி என்பதில்லை. கரமசோவ் நாவல் இருளில் ஒளியினை விவாதிக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரங்கள் பலர் இருளிலேயே வாழ்பவர்களாக இருக்கின்றனர். நாவலின் பெரும் பகுதி இருண்மையாகவே இருக்கின்றது. தகப்பன் கரமசோவ் இருண்மையின் மொத்த வடிவம். பொய், காமம், சூழ்ச்சி, நடிப்பு, சுயநலம், பேராசை,சந்தேகம் என்று தீமையின் அனைத்து குணங்களையும் கொண்டவர். அவரின் வாழ்வின் நோக்கம் சந்தோசம் மட்டுமே. சந்தோசம் முழுக்க முழுக்க காமத்தால் கிடைக்கும் என்ற எண்ணத்தை தீவிரமாக கொண்டவர். அதே வழியில் அதைக் கடைப்பிடிப்பவர். குடும்ப நலம், சுற்றுச் சூழல் நலம் என்ற எதையுமே கணக்கில் கொள்ளாது சுயநலத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர். இதற்காக மகன்களை வெறுக்கவும் மனைவியரை கொடுமைப்படுத்தவும் செய்கிறார்.

(modernlib.com)

தகப்பன் கரமசொவிற்கு இரண்டு பதிவு மனைவியர், பல எச்ச மனைவியர். தஸ்தாயெவ்ஸ்கி பதிவு மனைவியரை உறுதியாகக் கூறக் காரணம் தகப்பன் கரமசொவின் வாழ்வில் இனி வருகின்ற எல்லா அத்தியாயங்களிலும் கூட இருக்கின்ற, அவருடன் பயணிக்கப்போகின்ற மூன்று மகன்மார்களைக் கொண்டே.
முதல் மனைவிக்கு பிறந்தவன் திமித்ரி. அவனை மித்யா என்றும் அழைப்பார்கள். இண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் இவான் மற்றும் அலக்ஸ்சி. திமிதிரியும் இவானும் தகப்பனின் சாயலில் ஐம்பது சதவீதம் உள்ளவர்கள். இருவருக்குமே காமத்தின் வேட்கை பலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தகப்பனின் இருண்ட புத்தியை பின்பற்றுகிறார்கள். அதற்காக தகப்பனையே எதிர்க்கவும் செய்கிறார்கள். காமம் தகப்பனுக்கும் இரண்டு மகன்மார்களுக்கும் இடையே பெரும் விரிசலைத் தருகிறது. இருண்மை தகப்பனில் இருந்து முதலிரண்டு மகன் மார்களுக்கும் தொடர்கிறது.
அலக்ஸ்சி அப்படிப்பட்டவன் இல்லை. கரமசோவின் குணங்களை ஏற்றுக்கொள்ளாதவன். பகுத்து அறியும் பண்பினைக் கொண்டவன். அதனாலேயே இருட்டின் மத்தியில் ஒளியாக தெரிகின்றான். ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவன். அன்பும் கருணையும் உதவும் மனப்பாங்கும் உண்மையான காதலையும் உடையவன். சிதறிக்கிடக்கும் குடும்பத்தை ஒன்றிணைக்க பாடுபடும் ஒருத்தன். நாவலில் வருகின்ற அத்தனை இருண்மைக்கும் தனியே நின்று ஒளி கொடுக்ககூடியவன்.

மதகுருவும் சமூக பார்வை பிறழ்வுகளும்.

தஸ்தாயெவ்ஸ்கி அலக்ஸ்சியை ஒரு ஒளிர்ந்த பாத்திரமாக உருவாக்குவதற்கு பயன்படுத்திய கருவி ஆன்மிகம் ஆகும். தஸ்தாயெவ்ஸ்கி வாதப்பொருளை இங்கிருந்தே தொடங்குகிறார். ஒரு மனிதன் இருண்மையில் இருந்து வெளிவர ஆன்மிகம்தான் ஒரே வழியா? ஆன்மீகத்தை நம்பாதவர்கள் இருண்மையில் இருந்து வெளிவர முடியாதா ?
 

(pinimg.com)

தஸ்தாயெவ்ஸ்கியை ஒரு நடுநிலையான மனிதன் என்பதிலிருந்து மதவாதி என்ற போர்வைக்குள் இழுத்து வாதிக்கமுடியும். கரமசோவ் சகோதரர்கள் கிறிஸ்தவ மதத்தின் பேசு பொருளாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஆரம்பத்தில் வலுக்கிறது. இதை தஸ்தாயெவ்ஸ்கி லாவகமாக இவான் கூறுகின்ற “இயேசு மீண்டும் அவதரித்தால்” என்ற கவிதையின் ஊடாக தகர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அலக்ஸ்சி, பாதர் சொசிமா என்ற மதகுருவின் வழிகாட்டலிலேயே வளர்ந்து வருகின்றார். தகப்பன் கரமசோவின் நேர் எதிர் வடிவம் பாதர் சொசிமா. அலக்ஸ்சியின் வாழ்கையை நெறிப்படுத்துவதில் மிகுந்த சிரத்தையுடன் இருந்தார். வயதானவுடன் அவர் இறந்து போக அவரின் உடல் பிரார்தனைக்காகவும், நோய்களை நீக்கும் வலிமை கொண்ட புனித பொருளாகவும் வைக்கப்படுகிறது. சில நாட்களியே உடல் வெடுக்கு அடிக்கத்தொடங்குகிறது. அதுவரை மக்களால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருத்தர் சடலத்திலிருந்து கெட்ட வாடை வருவதால் நிராகரிக்கப்படுகிறார். அவரின் ஆரம்ப ஆடம்பர வாழ்க்கை மீண்டும் ஒருமுறை மக்களிடையே வாதிக்கப்டுகிறது. ஒரு எளிய இயற்கை மாற்றம் மக்களின் மனதில் பிறழ்வுகளை உருவாக்கத் தொடங்குகிறது. தஸ்தாயெவ்ஸ்கி கூறுகின்ற நுட்பமான செய்திகளில் இதுவும் ஒன்று.

காதலும் நாவலும்.

நாவல் முழுக்க காமதிற்கான போராட்டமாக இருந்தாலும் காமத்தை தேடிக்கொள்ள காதலையே அணுகுகின்றார்கள். நாவலில் லிசாவின் பக்கங்கள் அறிமுகம் ஆகும் வரை தஸ்தாயெவ்ஸ்கி காதல் காமதிற்க்கான முன்னாயத்தம் போலவே குறிப்பிடுகின்றார். காதலின் எந்த அசைவும் காமத்திற்கானதே என்பதை வருகின்ற எல்லாப் பாத்திரங்கள் மூலமும் உறுதி செய்தபடியே நகர்ந்தார். லிசாவின் அறிமுகமும் லிசா அலக்ஸ்சி காதலும் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் புரிதலை காட்டுகின்றது. லிசா அங்கவீனமாக இருந்தாலும் அலக்ஸ்சி அவள் மீது கொண்ட காதல் உடலைத் தாண்டி உள்ளம் சார்ந்தது என நிரூபணம் செய்கிறார்.
இந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி பெரும்பாலான உண்மை விடயங்களை, ஒளிர்மை வாய்ந்த கருத்துகளை வாசகனுக்கு கொண்டுசேர்க்க பயன்படுத்திய உத்திகளில் இதுவும் ஒன்றாகும். தஸ்தாயெவ்ஸ்கி முதலில் ஒரு கருத்தைப் பற்றிய புறவயமான எண்ணக்கருக்களை ஏற்படுத்துகிறார். பின்னர் அவற்றின் மறை விம்பங்களை காட்டுகிறார். வாசகன் மறையான விம்பத்தை நெருங்கும் போது அதை லாவகமாக உடைத்து மெய் விம்பத்தை காட்டுகிறார். இந்த புரிதல் நுட்பம் வாசகனின் மனதில் ஆழமாக இரு வேறான எல்லைகளையும் காட்டிவிடுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் தொடர்ச்சி வாசகனை அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத நீண்ட பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.

(huisjenphilosophy.files.wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது மனித மனதின் இருண்மைகளுக்குள் பயணிப்பதை போன்றது, அந்தப் பயணத்தில் நாம் அடையும் வெளிச்சமும் தைரியமும் செவ்விலக்கியத்தின் உன்னதத்தைப் புரிந்து கொள்ள வைப்பதுடன் இந்த உலகில் நமது இருப்பின் அடையாளத்தையும், நோக்கத்தையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் உதவுகிறது, அவ்வகையில் கரமசோவ் சகோதரர்கள் அவசியம் வாசிக்கவும் ஆழ்ந்து விவாதிக்கப்படவும் வேண்டிய முக்கிய நாவலாகும். – எஸ். ராமகிருஷ்ணன்
Sparknotes  இலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வசனங்கள்.

“Listen: if everyone must suffer, in order to buy eternal harmony with their suffering, pray tell me what have children got to do with it? It’s quite incomprehensible why they should have to suffer, and why they should buy harmony with their suffering.”
Very different is the monastic way. Obedience, fasting, and prayer are laughed at, yet they alone constitute the way to real and true freedom: I cut away my superfluous and unnecessary needs, through obedience I humble and chasten my vain and proud will, and thereby, with God’s help, attain freedom of spirit, and with that, spiritual rejoicing!”
“But hesitation, anxiety, the struggle between belief and disbelief—all that is sometimes such a torment for a conscientious man like yourself, that it’s better to hang oneself. . . . I’m leading you alternately between belief and disbelief, and I have my own purpose in doing so. A new method, sir: when you’ve completely lost faith in me, then you’ll immediately start convincing me to my face that I am not a dream but a reality—I know you know; and then my goal will be achieved. And it is a noble goal. I will sow a just a tiny seed of faith in you, and from it an oak will grow—and such an oak that you, sitting in that oak, will want to join ‘the desert fathers and the blameless women’; because secretly you want that ver-ry, ver-ry much.. . .”

முடிப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன். கரமசோவ் சகோதர்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே இது. ஒரு குறுகிய கட்டுரையின் மூலமாக கரமசோவ் சகோதரர்களையோ தஸ்தாயெவ்ஸ்கியையோ விவரித்து விட முடியாது. இரண்டு முறை வாசித்து மூன்றாம் முறை வாசிக்கும் போது கூட புதிய பொருள்களை அறிந்துகொள்ளகூடியவாறு இருக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின் ஒவ்வொரு முடுக்குகளையும் தஸ்தாயெவ்ஸ்கி காட்டியவாறே கொண்டுசெல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி இருட்டில் இருந்து ஒளியை காண்பிக்கும் மாயவித்தைக்காரனாகவே ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகின்றார்.

பேரூந்து – மெடூசா – குறியீடு

(01)

காலையில் அந்தரப்பட்டு என்னைத் தயார் செய்து கொண்டு அப்பாவுடன் பேரூந்து நிலையத்திற்கு யாழ்பாணம் போவதற்காக சென்றேன். பேரூந்து நிலையம் போவதற்கு முதலே பேரூந்தை இடையில் மறித்து ஏறிக்கொண்டேன். ஏறும் கணமே நடத்துனரும் பேரூந்து படியில் நின்றவரும் ஏதோ பேசிக்கொண்டனர். நான் அதைப் பொருட்படுத்திகொள்ளாமல் என் பாட்டில் ஏறினேன். படியில் நின்ற இருபத்தைந்து மதிக்கத்தக்கவர் என்னை இறுதி ஆசனத்தில் அமரச் சொன்னார். ஏற்கனவே அதில் ஐந்து பேர் உறங்கியும் கலங்கியும் இருந்தார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த ஒருவரை தள்ளி இருக்கச் சொல்லி விட்டு குறுகிய இடத்தில் வளைந்து அமர்ந்தேன். இதற்குள் மேலோட்டமாக முன்னே எங்கும் ஆசனங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தேன். எதுவுமே தென்படவில்லை. குறுகிய இடத்திற்குள் நான் செருகிக்கொண்டேன். எனக்கு அருகில் ஒருத்தர் தன் மார்புகளைக் கைகளால் கட்டிக்கொண்டும் மற்ற அருகில் இருந்த ஒருவர் கைகளை தொடைகள் அருகில் வைத்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்கள். மார்புகளைக் கைகளால் கட்டிக்கொண்டு இருந்தவர் ஓரளவு பருத்திருந்தார். அவரின் பருமனை விடவும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்திருந்தார். கூடவே நித்திரை வேறு. இடக்கையின் முழங்கை என் மூட்டை இடித்துக் கொண்டிருக்க நான் மேற்ப்பக்கமாக சாதுவாக வளைந்தேன். அப்படியே மற்றப்பக்கம் இருந்தவரின் கைகள் அண்ட இடுப்புப் பக்கமாகவும் வளைந்து என் உடலின் மேற்ப்பக்கத்தை ஆங்கில எழுத்து S போல வளைத்து இருவருக்கும் வளைந்துகொடுத்தபடி நொந்துகொண்டிருந்தேன். என் நிலைமையை படியில் நின்றவர் அவதானித்துக்கொண்டே வந்தார். இத்தனை நடந்தும் எனக்கு பெரிய தாக்கம் எதுவும் மனதளவில் ஏற்படவில்லை. பேரூந்து ஓட்டத்தில் வழிகளில் நின்று ஏறிய நான்கு ஐந்து பேருக்கு படியில் நின்றவர் முன்னுக்கு ஆசனங்களை ஒதுக்கி கொடுத்துகொண்டிருப்பதைப் பார்க்கும் போது தான் மனித மனதின் இறுக்கமான தன்மை தானாக கவலையை ஏற்படுத்தியது.

(02)

 

யதார்த்தனின் சிறுகதைத் தொகுப்பு வெகு சீக்கிரம் வெளிவரப் போவது மகிழ்ச்சியான விடயமாகும். அவர்களின் குழுமத்தில் எனக்கு அனோஜன் அவர்களின் சதைகள் சிறுகதை தொகுப்பு கிடைத்திருந்தது. அதைத்தொடர்ந்து யதார்த்தனின் தொகுப்பும் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கின்ற 47வது இலக்கிய ஒன்றுகூடலில் வெளியிட்டு வைக்கபட இருக்கின்றது. இந்த ஒன்று கூடல் மலையகத்தில் கொட்டக்கலை என்ற இடத்தில் இம்மாத இறுதி தினங்களான 29 மற்றும் 30 இல் நடைபெறுகின்றது. யதார்த்தனைப் பொறுத்தவரையில் புனைவு அபுனைவு என இரண்டு தளத்திலும் இயங்கி வருகின்றவர். புனைவுகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய கதை சொல்லியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அவரின் அபுனைவுகளில் நான் மிக ரசித்து வாசித்ததும் அனேகமான தகவல்களைத் திரட்டிக்கொண்டதுமான படைப்பு இயற்கை மரபின் இருப்பு – குருவிக்காடு ஆகும். இது சமீபத்திய விவரணக் கட்டுரை. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” சிறுகதைத் தொகுப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

(03)

 

இன்று அ.மார்க்ஸ் இன் வலை தளத்தில் மணிமேகலையை ஒரு பௌத்த காப்பியமாகவும் பார்க்ககூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். எமது அடையாளங்கள் என்பவை எவை என்ற கேள்வி உள்ளூர எழுந்தது. நேற்று அருண்மொழிவர்மன் அவர்களுடன் பேசியதில் அவர் ஈழத்து தமிழர் என்பதையே தான் அடையாலகுறியீடாக பயன்படுத்துவதாகச் சொன்னார். இந்திய தமிழ் நாட்டு இதழ்களும் ஈழத்து தமிழர் என்பதையே எமக்கான குறியீடாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எமது சமூகத்தின் எழுத்தாளர்களையும் அதே வரையறைக்குள்ளேயே அறிமுகப்படுத்துகிறோம். இதுவரை காலமும் நடந்து முடிந்த யுத்தம் (என்று கூறப்படும்) முழுவதும் எமது அடையாளம் ஈழத்து தமிழர்கள் தான். ஈழம் என்ற சொல்லின் உள்ளடக்கம் பற்றிய கருத்து எதிர்ப்பு இருந்தாலும் அதை அடையாளப் படுத்தல் என்பது இப்போதைக்கு கட்டயமானதே. அ.மார்க்ஸ் ஐப்போல நின்று இறங்கி ஆராய்ந்து எமது வரலாற்றையும் தொன்மையையும் இலக்கியத்தின் மூலம் நிறுவிக்கொள்ளமுடியாது. எம்மிடம் வலிதான இலக்கிய ஆதாரப் பிரதிகள் எதுவுமே இல்லை. எமது ஆதிகால முன்னோர்கள் எமக்கான எழுத்துரு இலக்கியங்கள் எதையுமே உருவாக்கியிருக்கவில்லை. எமக்கிருக்கும் ஒரே ஆதாரம் தொல்பொருட்கள் தான். ஈழத்து தமிழர் என்ற அடையாளக் குறியீட்டை வலுப்படுத்தகூடிய ஒரே வழிமுறை தொல்பொருள் ஆய்வுகள். இதற்கு அரசாங்கமும் ஈழத்து தமிழர்களும் ஒத்துழைக்கவேண்டும். எமது அடையாளத்தை நாம் நிறுவ வேண்டிய காலம் வெகு விரைவில் வந்துவிடும். இது இருப்பு சார்ந்த அடிப்படைப் பிரச்சனை.