ஜெயகாந்தன்- அருண்மொழி வர்மன்

சில விமர்சனங்கள் எனது மனதிற்கு மிக அண்மித்ததாக இருக்கும்.  விமர்சனத்தின் முழு உள்ளடக்கத்தை விளங்கும் அளவு அறிவும் அனுபவமும் இல்லை என்றாலும் , விமர்சனத்தில் வருகின்ற சில குறிப்புக்கள் எனது மன எண்ணங்களாகவும் இருக்கும். ஜெயகாந்தன் பற்றி முதன்முதலில் அறிந்த விதம் ஒரு கசப்பான அனுபவ பகிரவாகவே இருந்தது. அது தான் என்னை வாசிக்கவும் தூண்டியது.  அவரின் எழுத்துலக பின்னணியையும் சொந்த வாழ்க்கை பின்னணியையும் தேடவைத்தது. அவரின் சொற்பொழிவுகளையும் கறாரான விமர்சனங்களையும் ரசிக்க தொடங்கினேன். இன்று அருண்மொழி வர்மன் அண்ணாவின் ஜெயகாந்தன் பற்றிய பதிவை வாசித்த போதும் மனதிற்கு அண்மித்த பார்வைவையாக இருந்தது.
 
அருண்மொழி வர்மன் அண்ணாவின் ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை என்ற பதிவை வாசிக்க

ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை


 
ஜெயகாந்தன் பற்றிய ஆவண படத்தை பார்வையிட

தொடர்ந்து youtube இல் ஆவணப்படத்தை பார்க்கலாம்.

தமிழ் சிறுகதை முன்னோடிக்கு வாழ்த்துக்கள்.

இன்று எல்லோருமே சிறுகதை உலகத்திற்குள் நுழைந்து விட்டார்கள். எல்லோருமே சிறுகதைகளை எழுதவும் விமர்சிக்கவும் தொடங்கியிருகிறார்கள். சிறுகதைகள்  ஏதோ ஒரு வகையில் அனைவரையும் சென்றடைந்து விட்டது.  இதனால் சிறுகதைகள் சந்தையில் மலிந்து போய் விட்டது. தரமாக வருகின்ற சிலதும் கஞ்சலுடனே இல்லாமல் போகின்றன. இப்படியான துர்ப்பாக்கிய நிலை இன்றைய சிறுகதைகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதேபோல எப்போதும் ஊதுகின்ற சங்குபோல முன்னோடிகளை வாசிக்கவும் விமர்சிக்கவும் வாழ்த்தவும் மறந்து விடுகின்றோம்.
 
இன்று தமிழ் சிறுகதைகளின் முன்னோடியான சோ. விருதாசலம் என்கின்ற புதுமைப்பித்தன் பிறந்த நாள். தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த நாப்பதிரண்டு வருடங்களில் பதினைந்து வருடங்களே இலக்கிய பணியில் ஈடுபட்டார். வறுமையை கருவாக கொண்டே ஆரம்ப கால சிறுகதைகளை வீரியமாக எழுதினார்.மணிக்கொடியின் ஆசிரியாக இருந்தவர் அவரின் பெரும்பாலான கதைகளை மணிக்கொடியிலேயே பிரசுரம் செய்தார். நாற்பத்தி ஐந்து கதைகள் வாழும் காலத்தில் பிரசுரமாகியும் நூற்றி இரண்டு கதைகள் மொத்தமாக அவரின் இறப்புக்கு பின்னர் தொகுக்கப்பட்டும் உள்ளது.சிறந்த இலக்கிய விமர்சகராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்திருகின்றார்.
 
ஒரு சாதாரண விழுமிய குடும்பத்தின் வாழ்வியல் சிக்கல்கள் , மனிதர்களிடையே பரவியிருந்த மூட நம்பிக்கைகள் , என சிறுகதை கருக்களை அதிகமாக கையாண்டுள்ளார். அவரின் மிகச்சில கதைகளையே வசித்திருகின்ற படியால் விரிவாக எழுத முடியாமல் உள்ளது. விரைவில் புதுமைப்பித்தன் பற்றிய பதிவொன்று நீளமாக நிறைய தகவல்களுடன் பதிவிடுவேன்.
தமிழ் சிறுகதைகளின் முன்னோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
அவரின் சிருகதைகளை வாசித்துகொள்ள இந்த சுட்டி உதவும்
Click Here
 

எயிறு. – சிறுகதை

“அவன் கதவை தாழிட்டு கொண்டான்.” ,
என அந்த கதை முடிந்திருந்தது. நான் அதன் கடைசி முற்று புள்ளியை வெறித்துபார்த்துகொண்டு சில மணிநேரம் இருந்தேன். அந்த முற்றுபுள்ளியை தாண்டி அங்கால் ஏதும் எழுதப்பட்டிருக்க கூடாதா என்று மனதின் ஆழத்தில் பெரும் ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த சில மணி நேரங்களில் முற்றுப்புள்ளிக்கு அடுத்த வெற்றிடத்தில் சில ஈக்கள் வந்திருந்துவிட்டு போனது. எனக்கு அவற்றை கலைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. அவை எவற்றையாவது எழுதிவிட்டு செல்லாதா என்று தான் காத்திருக்க வைத்தது. இவ்வளவு நேரம் நான் எதற்காகவும் காத்திருந்ததில்லை. முதன் முதலாக என் காதலியை பார்க்க கோவிலுக்கு சென்றிருந்த போது ,அவள் வர சிறிது நேரம் தாமதமாகி விட்டது. அவள் அங்கு வந்த போது நான் அங்கிருந்து போயிருந்தேன். அவளை அவமதிப்பதாக அவளுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு காத்திருப்பு பிடிக்காது என்று அறிவுறுத்துவதர்க்காகவே நான் சென்றிருந்தேன். அதன் பின் அவள் சரியான நேரத்திற்கு வந்துவிடுவாள். நான் சில நேரங்களில் பிந்துவதுண்டு. அவள் அதை பொருட்படுத்தமாட்டாள். என்னைப் பார்த்து அவளின் சிவந்த மெல்லிய உதட்டால் ஓரப்புன்னகை செய்வாள். எனக்குள் இருக்கின்ற ஆண் என்ற கர்வம் இன்னும் ஒரு படி அதிகமாகிக்கொள்ளும்.
 
ஆனால் இப்போது அப்படி இல்லை. ஜன்னலூடாக வீசுகின்ற மெல்லிய காற்றில் மிதந்துவருகின்ற நுண்மையான தூசுகள்  அந்த முற்றுபுள்ளிக்கு அடுத்துள்ள வெற்றிடத்தை உரசும் போது எதையாவது எழுதக்கூடும் என்று அந்த வெற்றிடத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். வெற்றிடம் வெற்றிடமாகவே இருந்தது. நைலோனால் பின்னப்பட்ட சதுர சட்டக கதிரை என் இருப்பை அண்ட ஆரம்பித்தது. தலையும் தோளும் முதுகுத்தண்டின் மீது அனைத்து பாரத்தையும் வைப்பது போல இருந்தது. முதுகுப்பக்கம் மெல்லியதாக நெளியச்செய்தது. கழுத்தின் இரு மருங்கிலும் சுமக்க முடியாத சுமையை அள்ளிவைத்தது போல நொந்தது. இனி யாரும் அந்த வெற்றிடத்தில் எழுதிவிடப்போவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டு மெதுவாக அரை எழும்பல் செய்து கதிரையை சற்று பின்னே அரக்கி விட்டு முழுமையாக எழுந்துகொண்டேன். மாதக்கணக்கில் நித்திரை கொண்டு எழுந்தது போல உடம்பெல்லாம் இனம்தெரியாத வழியை உணர்ந்துகொண்டே இருந்தது. கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு வலது புறமும் இடது புறமும் மெதுவாக சாய்ந்து உடலை சோர்விலிருந்து மீட்டுக்கொள்ள அசைந்தேன். என்னை சுற்றி இருந்த எல்லோரும் என்னையே உற்றுநோக்கினார்கள். எல்லோரது கண்களும் என்னை ஏளனமாக பார்ப்பது போல இருந்தது. யாரும் இந்த புத்தகத்தை இதுவரையிலும் படித்ததில்லையா? இல்லை அவர்களுக்கு அந்த முற்றுப்புள்ளிக்கு அப்பால் இருந்த வெற்றிடத்தை நிரப்பிகொள்ளகூடியதாக இருந்ததா? அவர்களின் பார்வையை என்னைல் வேறுபிரித்து அறியமுடியவில்லை. ஆனால் அந்த கண்காணிப்பாளர், என்னை சாதரணமாகவே பார்த்தார். அதை பார்த்தபோது தான் மனதுக்குள் மெல்லிய இறகால் வருடியது போல இருந்தது. வயதாகிப்போன மின் விசிறிகள் எனக்கு மேலே என்னை ஆதரிப்பது போல சத்தங்களை இட்டன. எல்லோரது கண்களும் அவற்றின் மேல் திரும்பின. நான் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டேன். வேகமாக அந்த புத்தகத்தினை மூடி கையில் எடுத்துக்கொண்டேன். ஓரளவு பழைய தோல் உறையினை கொண்ட புத்தகம். எல்லா பக்கங்களும் மங்கிய மஞ்சள் தாள்கள். தட்டச்சில் அடிக்கப்பட்ட எழுத்துருக்கள். முதற்பக்கம் தொடங்கி எந்த பக்கத்திலும் படங்களே கிடையாது. ஏன் பக்க இலக்கம் கூட அச்சடிக்கப்படவில்லை. இருந்தும் அந்த புத்தகம் என்னை கவ்விகொண்டதிற்கு அதன் வாசனை ஒரு காரணமாக இருக்கலாம்.
 
நீங்கள் நூலகத்தில் எப்படி வாசிப்பிற்கு புத்தகங்களை எடுகின்றீர்கள் என்று எனக்குத்தெரியாது. என்னை புத்தகங்கள் தான் எடுத்துகொள்கின்ற்ன. நீண்ட ராக்கைகளின் அருகில் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு வாசனை என்னை ஈர்க்கும். அது ஒரு அறுசுவை உணவின் வாசனையோ அல்லது நாட்பட்ட அழுகிய உணவின் வாசனையோ இல்லை. அது ஒரு கவர்ச்சியின் வாசனை. நீ என்னை உன்விரல்களால் தீண்டவேண்டும் என்று ஒரு காதலி அழைக்கும் வாசனை. உன் கண்களால் என் மேல் மாலை தொடுக்க வேண்டும் என்று பூக்கள் அழைக்கும் வாசனை. அப்படியான ஒரு வாசனைதான் இந்த புத்தகத்தையும் ராக்கையில் இருந்து பிரிக்க வைத்தது. வாசகர்கள் சூழ்ந்திருந்த நூலக அறையில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் தனிமைபடுத்தப்பட்டுகொண்டிருந்தேன். புத்தகத்தை எடுத்த இடம் வந்து விட்டது. அருகில் இருந்த புத்தகங்களுக்கு வலிக்காமல் அதை உள்ளே அனுப்பினேன். மற்றவற்றை விட கொஞ்சம் கூடவே உள்ளே தள்ளினேன். யாரும் என்னோடு அந்த வெற்றிடத்திற்கு பயணித்துவிடக்கூடாதென்ற வஞ்சகத்தில். பெரும் நிசப்தத்திற்கு மத்தியில் அந்த மின் விசிறிகள் ஆர்பரித்துகொண்டிருந்தன.அதன் இரைச்சல் நான் வாசிக்கும் அவ்வளவு நேரமும் கேட்காதது மனதினை ஒருவகையில் சந்தோசப்படுத்தியது.
 
நூலகத்தை விட்டு தலையில் தொப்பியை போட்டுக்கொண்டு வீதிக்கு இறங்கி வீட்டிற்கு நடக்கத்தொடங்கினேன். அப்போது கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி வரும். எனது புத்தகப்பையை முதுகில் இறுக்கி கொழுவிக்கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். பின்னேர வகுப்பிற்காக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக தமக்குள்ள சிரித்தும் பேசியும் மகிழ்ந்தபடி சைக்கிளை உளக்கிக்கொண்டு என்னை முந்தி சென்றனர். அவர்கள் எனக்கு சமாந்தரமாய் வருவதிலிருந்து முடக்கில் திரும்புவது மட்டும் அவர்களையே பார்த்துகொண்டிருப்பேன். திரும்பியவுடன் இன்னொரு ஒத்த கூட்டம் எனக்கு சமாந்தரமாய் வந்துவிடும். எல்லா கூட்டத்திலும் அதிகளவாக பெண்களையே உற்று பார்ப்பேன். யாராவது மஞ்சள் கலந்த தூசின் நிறமாக இரட்டை ஜடை போட்டு சுடிதார் அணிந்து மிக சிறிய ஒட்டு போட்டு வைத்து இடக்கண் ஓரப்பார்வையுள்ள மங்களகரமான பெண் யாராவது அவர்களில் இருந்து விடக்கூடாதா என்ற எண்ணம் என்னை ஆட்டிபடைக்கும். நான் உற்றுபார்ப்பதை சில பெண்கள் அவர்களின் தோழியரிடம் சொல்லி சிரிப்பதையும் வேறு மிக சிலர் எனை முறைத்துவிட்டு செல்வதையும் நான் பொருட்படுத்துவது கிடையாது. உடனே திரும்பி பார்க்கும் அவர்களின் தோழியருக்கு அந்த லட்சணங்கள் இருகின்றதா என பார்த்துகொள்வேன். ஒரு முறை நான் உற்று பார்த்த சிவப்பு சுடிதார் அணிந்த பெண் அவளின் காதலனுடன் வந்து நடுவீதியில் என்னோடு வாக்குவாதப்பட்டு சென்றிருக்கிறான். எனது அம்மாவிற்கு வாக்குவாதம் பற்றி கூறியபோது முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு என்னை சமாதானப்படுத்தியிருகிறார். புத்தகங்களை போல எந்த பெண்ணும் என்னை தெரிவு செய்து கொள்ளவில்லை.
 
மாலை சூரியன் எனக்கு பின்னால் ஒளிந்து கொள்ள மஞ்சள் வெயில் நடுவில் என் கறுப்பு நிழல் விழுந்தது. எனது ஒவ்வொரு அடியும் நிழலை மிதித்து மிதித்துகொண்டே இருந்தது. அன்று, அந்த இரவில் அந்த கறுப்பு உருவத்தை இப்போது மிதிப்பது போல மிதித்திருந்தால் இன்று எந்த காதலனிடமும் பேச்சு வாங்கியிருக்க தேவையில்லை. எந்த பெண்ணையும் முடக்குவரை உற்றுபாத்திருக்க தேவை இல்லை. என் அம்மா முகத்தை சோகமாக வைத்திருந்திருக்க தேவை இல்லை.
 
நானும் அம்மாவும் தங்கச்சியும் இரவு ஒன்றாக இருந்து குசுனிக்குள் ரொட்டியும் சம்பலும் அம்மா சுட்டு தர நான் இரண்டு தங்கச்சி ஒன்று என்ற ஒழுங்கில் மாறி மாறி சாப்பிட்டுகொண்டிருந்தோம். இடைக்கிடை அம்மா என்தட்டில் இருந்த ரொட்டி துண்டை எடுத்து தன் பசியையும் போக்கிகொண்டார். பாடசாலையிலும் பின்னேர வகுப்பிலும் நடந்தவற்றை நான் அம்மாக்கு சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருந்தேன், தங்கச்சி அதை கவனமாக கேட்டுகொண்டிருந்தாள். அம்மாவின் சம்பல் கொஞ்சம் காரமாக இருக்கும். அதனால் மெல்லியதாக சம்பலுக்கு மேலே சீனி தூவித்தான் இருவரும் சாப்பிட்டோம்.அம்மா லாவகமாக சீனி இல்லாத சாம்பலின் பக்கத்தால் ரொட்டி துண்டை மடித்து உறைக்க உறைக்க சாப்பிட்டார். இருவரும் பெரிய ஆக்கள் ஆன பிறகு இப்படித்தான் சாப்பிடுவோம் என்றும் கூறினார்.
 
வெளியில் ஆட்டோ ஒன்று வந்து நிற்பது போல இருந்தது.வழமையாக இந்த நேரத்தில் பெரியப்பா குடும்பம் தான் எங்களை பார்க்க வருவார்கள்.அப்பாவை ஆமி கொண்டு போனதில் இருந்து அவரை சடலமாக குளத்திற்குள் எடுத்தது முதல் இன்று நானும் தங்கச்சியும் படிக்கின்ற செலவுவரை அவர்தான் பார்த்துகொள்கிறார்.அப்பா இறந்தபின்னர் அம்மா இருக்கின்ற காணிகளை விற்று குடும்பத்தைகொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்து பெரியப்பாவிடம் ஆலோசனை கேட்ட போது , அவர் அம்மாவை பேசி சொத்துகள் ஒரு காலத்தில் தங்கச்சிக்கு பயனாக இருக்கும் என்றும் தான் குடும்பத்தை பார்த்து கொள்கிறார் என்று விடாபிடியாக கூறினார். அன்றிலிருந்து எந்த முடிவேடுப்பதென்றாலும் பெரியப்பாவின் ஆலோசனை கட்டாயமாக இருக்கும். அவர் ஒரு கடும் பச்சை நிற ஆட்டோ வைத்திருக்கின்றார். அதில் தான் அவரும் அவரின் குடும்பமும் எங்களை பார்க்க வருவார்கள். பெரியப்பா கச்சேரியில் வேலை செய்வதாலும் வீட்டின் பின் தோட்டம் வைத்திருப்பதாலும் பெரும்பாலும் இரவில் தான் எங்களை பார்க்க வருவார்கள். ஆனால் இன்று புது விதமாக இருந்தது. வழமையாக அவர் தொலைபேசி அழைப்பொன்றை எமக்கு தந்துவிட்டே அவர்களின் வீட்டில் இருந்து கிளம்புவார்கள். ஆனால் இன்று அப்படி எந்த அழைப்பும் வரவில்லை. அம்மா சாதுவாக சந்தேகப்பட்டார். எதற்கும் ஒரு முறை பெரியப்பாவிற்கு எடுத்து விசாரிப்போம் என்று அழைப்பை ஏற்படுத்தினார்.மறுமுனையில் இருந்து பேசிய பெரியப்பாவிடம் விசாரித்த அம்மாக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்வீட்டில் இருப்பதாக சொன்னார். அம்மா அவரை கஷ்டபடுத்தாமல் அது எதிர் வீட்டிற்கு வந்திருந்த ஆட்டோ போலும் என்று கூறிவிட்டு வைத்தார். அம்மா உண்மையிலேயே அப்படிதான் நினைத்தார்.
 
கொஞ்ச நேரத்தில் எந்த சத்தமும் இல்லாமல் போனது, வழமையாக முன் விறாந்தையில் படுத்துக்கொள்ளும் மூவரும் சாமி அறைக்குள் படுத்துகொண்டோம். நான் பயத்தில் போர்வையை முகத்தை மூடும் வரை இழுத்து போர்த்திக்கொண்டு நித்திரை ஆகி விட்டேன்.
 
எழுந்து பார்த்த போது லேசாக தலை வலித்தது. கைகள் இரண்டும் விறைத்தது போலே இருந்தது. கட்டிலில் இருந்து இறங்கி கால்களை நிலத்தில் வைத்தபோது கால்களும் விறைதிருப்பதை உணர்ந்தேன். என் அருகில் இருந்த அம்மாவையோ தங்கசியையோ காணவில்லை. சில நேரங்களில் அதிகாலையிலே அவர் இருவரும் எழுந்து காலை வேலைகளை பார்க்கபோவது வழக்கம். ஆனால் மனது பதைபதைத்து கொண்டே இருந்தது. வெளியிலிருந்து எந்த சத்தத்தையும் கேட்கமுடியாமல் உள்ளே ரத்த ஓட்டம் சல சலப்பதை மட்டும் பெருவெளியில் சிறிய இரைச்சல் போல உணர்ந்தேன்.மெதுவாக விறாந்தைக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று பேர் தமக்குள்ள வாயசைத்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் ஓடியிருந்தது. இன்னும் கொஞ்சம் தள்ளி வர அம்மா தலைவிரித்தபடி ஒரு துணியால் மூடிய கட்டை போன்ற வடிவுடையத்தை அடித்து அழுதுகொண்டிருந்தார். என்னை கண்டவுடன்
 
“ தம்பீ …….” என்ற பலத்த சத்தத்தில் கதறிஒடி வந்தார். காதருகே அடுகுண்டைப்போட்டல் போல வெடித்து சிதறியது அடைப்பு. சுற்றியிருந்த சலசலப்பு என்னை நிலைகுலைய வைத்தது. அம்மா எழுந்து ஓடிவரும் போது அவர் அருகில் இருந்த உருவம் என்னை அடித்து போட்டது. மங்கியிருந்த கண்கள் ஒரு வேகத்தில் விளித்துகொண்டன. வெள்ளை துணி போர்த்தி என் தங்கச்சி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தாள். என் மூளைக்குள் பெரிய வண்டு போய் அரிப்பது போலவும் தாடைகள் இரண்டும் ஒன்றை ஒன்று முட்டி மோதி கால்கள் கைகள் எல்லாம் நடுங்க தொடங்கியது.தங்கச்சியின் அருகில் ஓடிசென்றேன். அம்மா என்கண்களை பொத்தி கொண்டார். இருந்தும் வலுகட்டாயமாக கைகளால் அவரின் கைகளை விலத்தி சாய்ந்திருந்த உயிரை பார்த்தேன். காதுகளின் நுனிகள் இரண்டும் பிய்ந்து , கழுத்தை அடையாளபடுத்த முடியாமல் சிவப்பை ரத்தம் உறைந்தும் அவளின் ரெட்டை சடை எல்லாம் ரத்தத்தில் தோய்ந்து போயும் அவரின் ஓரக்கண் என் என்னை, எப்போது தருவாய் என் கைவிசேசத்தை என்ற ஏக்கத்துடன் பார்த்தபடியும் தங்கச்சி விறைத்து போயிருந்தால்.
 
ஒரு சலவை இயந்திரத்துக்குள் மாட்டிக்கொண்ட பஞ்சைப்போல முட்பதருக்குள் சிக்கிக்கொண்ட மயிலிறைகைப் போல என் உடம்பெல்லாம் சுருட்டி வாரி போட்டது. தங்கச்சிக்கு அருகிலேயே எதுவும் பேசமால் அமர்ந்து விட்டேன். சுவரின் மூலையை வெறித்து பார்த்தபடி, இரவு அம்மா போட்டு விட்டு வர சொன்ன தாழ்பாள் அப்படியே குத்தனமாய் சுவரில். அதை சுற்றி யாரோ சிலர் குசு குசுத்துகொண்டு.
 
ஒரு அசாத்திய சக்தியுடன் என் நிழலை மிதித்து அடுத்த அடியை எடுத்து வைத்தேன்.
 
அந்த கதாசிரியர் அதற்கு பின்னும் ஏதாவது எழுதி இருக்க வேண்டும்.
 
“அவன் கதவை தாழிட்டு கொண்டான்”.

எளிமை சொல்லும் அனுபவங்கள் – அகளங்கன்

சொந்த வட்டார வழக்கில் ஒரு கதையை வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒன்றிப்பு ஆலாதியானது. அத்தோடு கதைக்களமும் சம்பவங்களும் கண்களின் முன்னே இருக்கும் போது கதைசொல்லி ஒரு வீதியினூடாக கதைமாந்தர்களை அழைத்துச் சென்றால் வாசகனின் மனம் அதன் கிளைவீதிகளை எல்லாம் நினைவுபடுத்திக்கொள்ளும். இது வீதிகளைப் போலவே சம்பவங்களுக்கும் பொருந்தும். ஒரு சில சம்பவங்களில் நாம் முதலாம் நிலையிலும் பல சம்பவங்களில் நாம் மூன்றாம் நிலையிலும் நின்று பாக்கின்ற வழக்கத்தை உடையவர்கள். முதலாம் நிலை கதை சொல்லியின் உணர்வு எப்போதும் மூன்றாம் நிலை வாசகனை எளிதாக அடைந்து விடுவதில்லை. இருந்தும் அதிகளவான எழுத்தாளர்கள் இந்த பிளவினை இல்லாது உணர்வுநிலை ஓட்டத்தை கதையில் ஏற்படுத்துவதற்கு கதைகள வட்டார வழக்கினை பயன்படுத்துகின்றனர். இந்த வட்டார வழக்கில் எழுதபடுகின்ற கதைளை இன்னொரு சாராரால் அணுக முடியாமல் போவது , ஒரு சில வட்டாரவழக்கு கதைகளின் வழுவே. இந்த நிலை பெரும்பாலும் இலங்கையில் இருக்கின்ற வட்டார வழக்கு கதைகளுக்கு ஏற்படுவதில்லை. ஈழத்தின் பேச்சு வழக்கு இலக்கண தமிழை அண்மித்ததாகவே இருக்கின்றது.
 
ஒரு கதையின் எளிமை அக்கதைக்கு சில நேரங்களில் பலமாகவும் சில நேரங்களில் பலவீனமாகவும் அமைந்துவிடுகின்றது.  இந்த எளிமை கதை கேட்பவருக்கு சௌகர்யமாக இருக்கிறது, இருந்தும் கதையினை வாசிப்பவருக்கு ? வாசகன் என்ற நிலையில் ஒரு சிறுகதை எளிமையாக இருபதனால் ஏற்படுகின்ற ஒன்றிப்பின்மை தவிர்க்க முடியாதது. ஒரு வேற்று களத்தை வாசகனுக்கு விபரிக்கும் போது அல்லது ஒரு மூன்றாம் நிலை வாழவியலை கூறும் போது எளிமையாக கூறல் என்ற நுட்பம் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். இருந்தும் அதே களத்தில் அதே வாழ்வியலில் வாழ்ந்த ஒருவர்க்கு அந்த கதை விரிக்கின்ற கோண பரிமாணங்கள் மிக பெரியவை. இதை வேற்று வாசகாரால் உணர்ந்துகொள்ள கடினமாக இருக்கும்.
 
வவுனியாவின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை அகளங்கள்(நா.தர்மராஜா) ஆவார். அவரது சிறுகதைகளின் தொகுப்பு முற்றத்துகரடி. அதிலுள்ள யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும் என்ற இருசிறுகதைகள் பற்றிய எனது பார்வையும் இவ்வாறான ஒன்றே. அவருக்கே உரிய மிக தெளிவான மொழிநடையும் எளிமையான கதைசொல்லலும் முற்றத்துக்கரடி முழுவதும் காணப்படுகின்றது. வவுனியாவின் இரு கிராமங்களை களமாகக் கொண்டு இரு வேறான பொருளாதார நிலையை உடைய மக்களின் கதைகள் தான்  யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும். யாழ்தேவி தாண்டிக்குளத்தில் வசிக்கின்ற ஒரு ஏழை சிறுவனையும் குடும்பத்தையும் பற்றியும் நாளைக்கும் பூ மலரும் நடுத்தர பொருளாதார நிலையை உடைய ஆசிரியரின் குடும்பத்தை பற்றியும் இருவருக்குமிடையேயான பொதுமையான போர் சூழல் பற்றியும் பேசுகின்றது.
 
யாழ்தேவி
 
விளிம்பு நிலை மனிதர்கள் என்பதற்கு செம்மையான உதாரணம் கூறக்கூடிய குடும்பம் ஒன்றிலிருந்து பாத்திரங்கள் வார்க்கபடுகின்றன. குடும்பத்தின் வறுமையாலும் அம்மாவின் இயலாமையாலும் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் பாடசாலைக்கும் செல்லகூடிய திறமையாக கற்க கூடிய ஒரு பத்து வயது சிறுவனின் ஒரு நாள் வாழ்கையை தான் யாழ்தேவி. போரின் நிலவுகையை விரும்பக்கூடிய தொழில் செய்கின்ற சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். அப்படியான மனநிலையில் உள்ள ஒருவனை தாய் , அவர்களது வாழ்வில் போரினால் உண்டான இழப்புகளை பற்றி கூறி போரின் கொடூரத்தை விவரிப்பதாக கதையை ஆசிரியர் முடித்துக்கொள்வார். ஒரு எளிமையான கதைகூறலின் ஊடாக இந்த உணர்வுநிலை பரிமாற்றத்தை நிகழ்த்தியிருப்பார்.
 
நாளைக்கும் பூ மலரும்
 
அதே ஒரு நாள் வாழ்க்கை , அதே போர்ச்சூழல் ஆனால் தனிமனித உணர்வு போராட்டம். நாளைக்கும் பூ மலரும் கதையின் மைய பாத்திரம் ஒரு ஆசிரியர். நான்கு குழந்தைகளுடனும் மனைவியுடனும் சாதாரண நடுத்தர குடும்பத்திற்குரிய வாழ்வியலை வாழுகின்றார். குண்டு வெடிப்பினால் உருவாகின்ற மன அலைச்சலே மேலோட்டமான கதை.ஆனால் அதில் கதாசிரியர்  உள்ளோட்டமாக சொல்லுகின்ற போரின் போக்கு முதலில் காப்பாற்றபட்டும் பின்னர் இறந்து போகின்ற நாய்க்குட்டியால் படிமபடுத்தபடுகின்றது.
 
நூலகம் இணையத்தளத்தினால் ஆவணபடுத்தப்பட்ட முற்றத்துக்கரடியை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
ஆசிரியரின் ஏனைய நூல்களை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

அசோகமித்திரன் – குறிப்புணர்தல் – தண்ணீர்.

சமகால எழுத்து வட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளில் இருந்து இலக்கியத்தை விரித்து எடுத்தல் என்ற செயற்பாடு சொற்பமாகவே நடைபெறுகின்றது. ஒரு இலக்கியத்தின் அடைவு மட்டம் எதைக்கொண்டு நிர்ணயிக்கபடுகின்றது என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. நான் இலக்கிய அடைவு மட்டம் என்பது எம் முன்னோடிகளின் படைப்புகளை எமது படைப்புக்கள் தாண்டும் போது ஏற்படுகின்றது என்பேன். தாண்டிய பின்னர் அதை அடுத்த தலைமுறை தாண்டும் போது இன்னொரு அடைவு மட்டம் எனவும் பின்னர் இன்னொன்றாகவும் காலம் காலமாக விரித்துக்கொண்டு போகவேண்டிய ஒன்றாக கருதுகின்றேன். இந்த எழுத்து மீறல்கள் அத்தியாவசியமானவையே. இது ஆரோக்கியமான எழுத்துலகம் உருவாகும் சாத்தியத்தை உண்டு பண்ணும். இலக்கிய வரம்புகள் என்று ஒன்று உள்ளதை யாரும் மறுத்துவிடமுடியாது. நாம் காலத்தை மீறிய படைப்புக்கள் என்று கருதுகின்ற படைப்புக்கள் எல்லாமே ஒருவகையில் ஏதோ ஒரு வகையில் இலக்கிய வரம்புக்குள் நின்று தன்னை வெளிப்படுத்தியதாகவே உள்ளது. ஒரு படைப்பை இன்னொன்று மீறிச்செல்லல் என்ற அடிப்படையில் எழுகின்ற படைப்புக்கள்  இலக்கிய அத்துமீறல்களுக்கு உள்ளாகின்றன.
 
படைப்பாளி தன் நோக்கத்தை வெளிபடுத்த பயன்படுத்தப் படுகின்ற எந்த இலக்கிய வடிவமும் வெறும் அனுபவங்களின் கோப்புக்களாகவோ அல்லது புனைவுகளின் சஞ்சாரமாகவோ அமைந்து விடுகின்றது.  இது ஒரு இலக்கிய மந்த நிலையே.இதை யாராலும் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை. அப்படி முயன்ற பலர் வேறு தளங்களை அடைந்தார்களே ஒழிய செம்மையான இலக்கியம் ஒன்றை வெளிக்கொண்டுவர முடியவில்லை. இந்த கட்டுரை எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் என்ற படைப்பை நாவல் என்ற வடிவத்திற்குள் கொண்டுவருவதில் உள்ள கருத்து வேற்றுமைகளை பற்றியது.
 
தண்ணீர் என்ற படைப்பு 1973 ஆம் ஆண்டு வெளியாகி 2005 இலும் மறுபதிப்பு செய்யப்பட்ட முக்கிய இலக்கிய படைப்பு. முன்னுரையிலேயே அசோகமித்திரன் இது தண்ணீர் என்ற பொருளைத்தாண்டி வாழ்கையின் நெருக்கடி என்ற விடயத்தை வெளிபடுத்தியுள்ளதாக கூறுகின்றார். முதல் பிரச்சனை அங்கிருந்தே ஆரம்பமாகின்றது.
வாழ்கையின் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் என்று அவர் விளிக்கின்ற துன்பம் , ஏமாற்றம் , கவலை , வாழ்கையை வாழமுடியாமல் சாகின்ற முடிவை ஏற்படுத்தும் தருணங்கள் என்பவை நாவலின் மேலோட்டமான தண்ணீர் பிரச்சனை என்ற படலத்தை தாண்டி வெளிவந்திருகின்றதா என்றால் இல்லை என்ற மனநிலையையே உருவாக்குகின்றது. இதற்கு மிக முக்கியமான காரணம் நாவலில் இருக்கின்ற இருமை தன்மை. ஒரு பக்கம் ஆழமான தண்ணீர் பிரச்சனை இன்னொருபக்கம் சாதாரண வாழ்க்கைக்கு உட்பட்டிருக்க கூடிய தங்கை அக்கா வாழ்கை இன்னல்கள், இவை இரண்டையும் பிணைந்து உருவாக்கபட்டிருகின்ற எழுத்தோட்டத்தில் தண்ணீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கொடுக்கின்ற ஆழமான விவாதங்களை மற்றைய பக்கம் கொடுக்க தவறுகின்றார். இதில் சமநிலை அல்லது உட்பொருள் மேலோங்குகின்ற தன்மை இல்லாமல் போகின்றபடியால் தண்ணீர் பிரச்சனையோடே கதை முழுதும் நகர்ந்து விடுகின்றது.
 
ஒரு நாவலுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு அதன் விரிவு. இவ்விரிவை பலவிதமாக பிரித்துகொள்ளலாம். கதைக்கரு விரிவு, கதைக்கள விரிவு, கதாமாந்தர்களின் விரிவு, சம்பவங்களின் விரிவு, என கூட்டி கொண்டே செல்லலாம். இந்த விரிவில் தான் ஒரு நாவல் தனது திடமான உருவினை பெறுகின்றது. இன்றைய இலக்கிய வாசகர்களால் மகத்தான இலக்கியம் என்று பேசக்கூடிய ருச்சியன் இலக்கியங்கள் இந்த விரிவினை மிக சரியாக கையாண்டிருப்பார்கள். இந்த விரிவு வாசகனுக்கு ஒவ்வொரு முறை வாசிப்பிலும் ஒவ்வொரு கோணத்தில் நாவலை அணுக வழிசெய்யும். ஒவ்வொரு வாசலாக திறந்து விடும். ஒரு பரந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த விரிவு வழிசெய்யும்.
 
தண்ணீரில் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை விரிவு என்ற வடிவமே இல்லாமல் ஒரு தேக்கமாகவே சென்றுகொண்டிருகிறது. நான்கு வீட்டிற்க்குள் இரண்டு தெருவுக்குள் ஆறு ஏழு கதா மாந்தர்களோடு கதை முற்று பெறுகின்றது. இந்த பௌதீக குறுக்கம் வாசகனையும் குறுக்கி விடுகின்றது.யமுனாவும் சாயாவும் டீச்சரும் மீண்டும் மீண்டும் ஒரே உணர்வலைகளுடன் வந்து ஒரு பாத்திர குறுக்கத்தை உள்ளாக்கிறார்கள். பாத்திர பெருக்கத்திற்கு ஏற்றவாறு கதையின் போக்கு அல்லது களம் அமைந்து கொள்ளவில்லை. டீச்சர் பற்றிய விவரணத்துக்குள் சென்ற அ.மி தனது கருவிற்கான உந்துதலை மட்டுமே அளிக்கும் வகையில் சம்பவங்களை கோர்த்து விட்டு விலகுகிறார். அதே போன்று யமுனாவும் சாயாவும் தங்கள் பாட்டி வீட்டிக்கு செல்லும் போதும் அதே விரிவின்மை தலை தூகுகின்றது. சாயாவின் கணவன் பிள்ளை என்ற உறவுகள் ஆகட்டும் யமுனாவின் கள்ள காதலன் என்ற உறவாகட்டும் மேலோட்டமாக வந்து போகின்ற ஆழமற்ற பாத்திர சித்தரிப்புகளாக காணப்படுகின்றனர்.அதே போன்று தான் தூய்மையற்ற தண்ணீர் சம்பந்தமான பிரச்சனையும் இன்ஸ்பெக்டர் பிரச்சனையும் எந்த நகர்வுகளுமே கதைக்குள் செலுத்த முடியாத தட்டையான கதை சொல்லலாக முடிந்து போகின்றது. கதையின் போக்கு கதையில் மடிப்புகளை உருவாக்கி வாசகரை திறக்க செய்ய முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.
 
இவை போன்று சில குறிப்பு பிழைகள் தண்ணீரில் இருக்கத்தான் செய்கிறது.

நீள்வட்ட இறப்பு.

எப்போதாவது நீங்கள்
இறந்திருகிறீர்களா?
ஒரு முறையாவது ?
மெல்லிய மழைத்துளி
கருங்கல்லில் பட்டுத் தெறிப்பதைப் போல
சிதறியிருகிறீர்களா ?
ஆழமான கடலின் அடியில்
யாரையாவது சந்திக்கபோகும் போது,
சில வேளைகளில் சந்தித்த பிறகு
எப்போதாவது
இறந்திருகிறீர்களா?

இறந்திருப்பீர்கள்
தெரியாமலே.
அவர்களின் கை குலுக்கல்கள்
புன்சிரிப்பு
நட்பான பார்வை
இதில் எதாவது
உங்களை கவர்ந்திருக்கலாம்.
உங்கள் தூக்கத்தை
அவர்கள் கெடுக்க விரும்பாமல்
மிக மெதுவாக
செய்திருக்கலாம்.
யாருமே உங்களை
எழுப்ப நினைத்திருக்க மாட்டார்கள்,
அவர்களும்
இதோ
இப்பொது
அந்த ஆழ் கடலின்
அடிக்கு அவர்களுக்கு நெருக்கமானவரை
சந்திக்க சென்றுகொண்டு இருப்பார்கள்.
அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்
“மெல்லிய மழைத்துளி
கருங்கல்லில் பட்டுத் தெறிப்பதைப் போல
சிதறியிருகிறீர்களா ?’’
அவர்கள் ஏளனமாக
சிரிப்பார்கள்.
உங்களால் பொறுக்கமுடியாமல் போகும்
நீங்கள் அடுத்த இறப்பிற்கு
தயாரகிக்கொண்டிருபீர்கள்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 07 – “நாட்டார் கதைகள்”

வழமை போல இலக்கியங்களுக்குள் ஒருவனாய் நின்று ஆராயாமல் ஒரு பார்வையாளனாக வடக்கு பிரதேசங்களில் உலவுகின்ற நாட்டுப்புற கதைகள் சம்பந்தமான இந்த கட்டுரையினை எழுதலாம் என்ற நோக்கம் தான் இந்த காலதாமதத்துக்கு ஒரு காரணம். எப்போதும்போல இலக்கிய வர்ணனைகளுடன் ஆராய்வதற்கு கதைகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதனால், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஆராய்தல் மிக பொருத்தமானதாக இருக்கும். இந்த கட்டுரையினை எழுதுவதற்காக கிட்டத்தட்ட நூற்று ஐம்பது கதைகளை வாசித்துள்ளேன். இணையத்தில் இருந்தும் சுற்றத்தில் இருந்தும் முக்கியமாக கலாநிதி கி. விசாகரூபன் எழுதிய ஈழத்து நாட்டுப்புறக் கதைகள் என்ற தொகுப்பிலிருந்து என்னால் பெருமளவான கதைகளை திரட்ட முடிந்தது.

கதைகள்- ஓர் அறிமுகம்

(mamtavn.files.wordpress.com)

இன்றிலிருந்து சுமார் 1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அனுமானிக்கப்படுகின்ற மனித இனம் வழி வழியாக கடந்து வந்த பாதையின் குறிப்புகளே கதைகள். இந்த குறிப்புகளின்  உண்மைத்தன்மை என்பதை மீறிய ஒரு பதிவு நுட்பம்தான் கதைகளின் கரு. சிறிய சிறிய விடயங்களில் தொடங்கி உலகின் மிகப்பெரிய வரலாற்றுத் தடங்கள் வரை எல்லாமுமே கதைகளின் கோப்புகள்தான். இன்று கிடைத்திருக்கின்ற வரலாற்று தடயங்களில் இருந்து உருவாகின்ற அனுமானங்கள் எல்லாமே கதைகள் தான். கல்லை உரசி பொறி துவக்கினானிலிருந்து கணனியில் பொறி கிளப்பினான் வரை எல்லாம் கதையின் பரிமாணங்கள் தான். ஒரு சம்பவமோ சில சம்பவ கோர்ப்புகளோ வெளிப்படும் போது அவை கதைகளாக மாற்றம் கொள்கின்றன. ஒரு காதாசிரியன் கதைகளை உருவாக்குகிறான் என்ற இன்றைய போக்கிலிருந்து சற்றே விலகி சாதாரண மாந்தர்கள் எல்லாருமே கதாசிரியர்கள் ஆகின்றார்கள் வரலாற்றில். பொதுவாகவே அனுபவங்கள் தான் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட்டுவருகின்ற கதைக்குறிப்புகளாக இருக்கின்றன. ஓர் உண்மைச்சம்பவமோ அல்லது புனைவோ அனுபவமாக கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த எச்சங்கள்தான் இன்றைய கதைகள்.

வடக்கின் நாட்டுப்புறக் கதைகள் – தெய்வீக கதைகள் ஒரு பார்வை

கதைகளுக்கு பிறப்பிடம் கிராமங்கள் தான். இதில் வேற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஏனென்றால் ஆதி வரலாறுகளில் கிராமங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. வடக்கின் புவியியல் அமைப்பு, விளிம்புகளில் கரையோரமாகவும் மத்திம பகுதிகளில் விளைநிலமாகவும் அடியில் காட்டு நிலமாகவும் இருந்திருக்கின்றது. இந்த நிலவியல் அடிப்படையிலேயே கதைகளும் அதன் போக்கை வகுத்துக்கொள்கின்றன. வெவ்வேறு நிலவியலில்  வாழுகின்ற மாந்தர்கள் அந்தந்த நிலவியலின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அந்த நிலவியல் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கின்றன. இந்த பயத்தின் குறியீடே அவர்களின் கதைகளில் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கின்றன.
கதை 01- வேளாங்கண்ணி மாதா

“……….. நடுக்கடலில் பெரிய புயல் வீசி கப்பல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க கப்பலில் இருந்த எல்லாரும் “மாதா” என அலறிக்கொண்டிருந்தனர். …………”

கதை 02- உக்கிர வைரவர்

“……..தண்ணி உக்கிரமாய் பாயத்தொடங்கியது. வர வர தண்ணீர் வேகமாக அடித்துகொண்டுவருவதைப்பார்க்க இவருக்கு ஐமிச்சம் ஆகிவிடுகிறது….. வேட்டி சால்வை எல்லாவற்றையும் மம்பட்டிக்கு சார்த்தி விட்டு ஓடி வந்துவிட்டார்…… “

இந்த பயத்தை ஏற்படுத்தும் ஊடகமாக இயற்கையே பயன்படுத்தப்பட்டது. இயற்கை கொள்கின்ற சீற்றம் அவர்களுக்கு தெய்வ குற்றமாகப் படுகின்றது. அந்த இடத்திலே ஏற்படுகின்ற உதவியை அவர்கள் தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட உதவியாகவும் அதன் பின்னரான சம்பவங்கள் அந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட குறீயீடுகளே என்ற நம்பிக்கை ஒவ்வொரு கதைகளிலும் பலமாக எதிரொலிக்கிறது.
கதை 03- லொரென்சியார் கோவில்

“…. தாமஸ் (ஐயம்பிள்ளை) லொரென்சியாரை பூசித்துவரும் காலத்தில் தீவாலய முன்றலில் நிறுவுவதற்கு கொடிமரம் இல்லையே என்று மனம் வருந்திய சில நாட்களில் பரவைக்கடலில் முப்பத்தைந்துஅடி உயரமான சவுக்கு மரம் ஒன்று வந்தடைந்தது ………”

பெரும்பாலான கதைகளின் பின்னணி அவ்வூர்களில் இருக்கின்ற கோவில்கள் தேவாலயங்கள் பற்றியே இருக்கின்றன. பக்தி என்ற பயத்தை மனிதர்களிடையே ஏற்படுத்துவதற்காக முன்னைநாள் அனுபவங்களை சொல்லுகின்ற பின்னணியை கதைகள் கொண்டிருக்கின்றன.

(pixabay.com)

கதைகளில் மையக் கருவாக இருக்கின்ற பக்தியினை உறுதிப்படுத்த புனைகின்ற சம்பவங்கள் அனைத்தும் தெய்வத்தை அலட்சியப் படுத்துகின்றதன் விளைவையோ அல்லது மிக இக்கட்டான சூழ்நிலையில் தெய்வத்தின் உதவியையோ காரணப்படுத்தி கூறப்படுகின்றன.
கதை 04 – காளியாச்சி

“………… பிறகு ஒரு நாள் ஒரு சோனக மனுசி அந்த அம்மன் கோவிலுக்கு முன்னால தலையை விரித்து அந்த முடியை கையால் கோரி விட்டுக்கொண்டு அம்மனை அலட்சியமாக பார்த்துவிட்டு போனாள். அப்படி பார்த்த மனுஷியின் தலை அப்படியே திரும்பி விட்டது…………..”

கதை 05 – அற்புத இளநீர்

“……….. அடுத்த நாள் அபிஷேகத்துக்கு பால் பழம் கொண்டு கோயிலுக்கு போனார்கள். கோயில் ஐயாவிடம் இளநீர் கிடைக்காததை எண்ணி வருந்த ஐயா தோட்டத்தில் போய் பார்க்குமாறு கூறி அனுப்பிவிடுகிறார். அங்கு சென்று பார்த்தபோது செவ்விளனி குலையாக காய்த்து கிடந்தது…….”

பக்தியோடு உள்ளூர சாதியமும் கதைகளில் ஓடுகின்றது. கீழ் சாதியினரை ஊர் மக்கள் வெறுப்பதாகவும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க மறுக்கின்ற அல்லது ஓதுகின்ற போக்கினையையும் எடுத்துக்காட்டுகின்றது.
கதை 05 – அற்புத இளநீர்

“….. பறையனுக்கு வீட்டில் இளநீர் இருந்தும் கொடுக்க மறுக்கின்றனர்……..”

கதை 06 – பாவம் கழித்தல்

” …….. அவர்கள் இந்த வளவுக்குள் வரக்கூடாது. மீறிவந்தால்உங்களையும்  அவர்கள் போலவே நினைத்துக்கொள்வேன். ……”

(pixabay.com)

சில கதைகள் மதப்பிரிவினை இருந்ததை கூறுகின்றன. மதங்களுக்கிடையே வன்முறை முற்றி இருப்பதை, அவர்கள் மற்றைய மதங்களை மதிக்காமல் இருப்பதையும் காட்டுகின்றது. இன்று வடக்கில் பேசாமல் ஒளிந்து காணப்படுகின்ற மதப்பிரிவினை ஒருகாலத்தில் பெரும் கலவரமாகலாம். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனித மனங்களுக்கிடையே காணப்படுகின்ற விரிசல் மிக வலிமை வாய்ந்தது. எவ்வளவுதான் நாம் ஒன்றாக இருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டாலும் புரிந்துணர்வு இல்லாமலே இந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் மூன்று சமய வணக்கஸ்தலங்களும் ஒன்றாக இருந்தாலும், கூடவே இருக்கின்ற மீன் இறைச்சி சந்தையின் நிலவுகை இன்றைய வவுனியா சூழலில் இருக்கின்ற மத, மன நல்லிணக்கத்தின் சிறந்த குறியீடு.
போர்த்துக்கேய ஒல்லாந்தர் ஆங்கிலேய கால கட்ட கதைகளின் போக்கு இன்னொருவிதமானது. இதில் கிறிஸ்தவ மத பின்னணியை கொண்ட புனைவுகளே அதிகமாக காணப்படும். அவர்களின் மத தாக்கம் அல்லது மத திணிப்பு கதைகளில் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமியர்களும் சரி இந்துக்களும் சரி எந்த பேதமுமின்றி கிறிஸ்தவர்களாகும் கதைகளே காணப்படுகின்றன. மேலை நாட்டவர் நீர் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்தமையால் கதைப்பின்னணி கடலோர வாழ்வியலை மையப்படுத்துகிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட தேவாலயங்கள் எல்லாமே இறைவனின் உதவிக்கு நன்றியாக கட்டப்பட்டிருக்கின்றன. மதம் மாற்றல் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்ட கதைகள் அந்த பருவ காலத்துக்குரியவை.
கதை 07 – சவேரியார் கோவில்

“……………..முஸ்லீம் யாத்திரைகள் யாவரும் சவேரியாரின் நாமத்தை கோஷித்த வண்ணமே வந்து அவரின் அடியை வணங்கினார்கள். நிலைமையை புரிந்துகொண்ட சவேரியார் ஜெசுவின் நாமத்தை உச்சரித்து குமாரனை உயிர்பித்தார். ………..”

கதை 08- லொரென்சியார் கோவில்

“…………ஐயம்பிள்ளையாரின் ஏற்கனவே இருந்த நாச்சிமார் கோவில் மறைய அவ்விடத்தில் கண்டெடுத்தல் கல்லை வைத்து லொரென்சியார் கோவில் அமைத்து வணங்கினார். நாச்சிமாரை வணங்கிய சமூகம் லொரென்சியாரை வணங்க தொடங்கியது…….”

(pixabay.com)

 
வெளிநாட்டவர்கள் மதத்தை வலுக்கட்டாயப்படுத்தி திணித்ததாக எந்த கதைகளுமே கூறவில்லை. மேலான சமயம் ஒன்றிக்கு தாமாக மாற்றப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. கோவில் அழிப்புக்கள் பல தாமாகவே மறைந்ததாகவும் அந்த இடத்திலே கிறிஸ்தவ தேவாலயங்கள் உருவானதாகவுமே வலிந்து கூறப்படுகின்றன.
வரலாற்றை மறைக்க புனையப்பட்ட வெறும் பொய்க்கதைகளாகவே இதை கருத முடிகின்றது. கதைகளில் பல இருவரோ அல்லது ஒருவருடனேயே முடிவடைந்து விடுகின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத நிகழ்வுகள் அங்கிருக்கும் ஆட்சிக்கோ நம்பிக்கைக்கோ ஏற்ப திரிபுபடுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். காலத்தின் நிலைமையோடு வழிபாடும் கடவுள்களின் சக்திகளும் அவர்களால் செய்யப்படுகின்ற அற்புதங்களும் வலுவைமாற்றிக்கொள்கின்றன. அந்த அந்த இடங்களில் வலுப்பெற்றிக்கின்ற சமயத்தினை பொருட்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன. இதிலிருந்து கதைகளில் உள்ள புனைவுத்தன்மை வெளிப்படுகின்றது. இவற்றினை ஒட்டுமொத்தமாக நோக்கும் பொருட்டு மிகத்தெளிவாக திரிபாக்கப்பட்ட கதைகளின் வடிவமாகவே தெய்வீக கதைகள் இன்று உலவுகின்றன என்பது ஓரளவு ஊர்ஜிதமாகின்றது.
இது சமய விருப்பு வெறுப்பு இன்றி எழுதப்பட்டது. கதைகளின் மீதான எனது தனிப்பார்வையிலேயே கட்டுரை ஆக்கப்பட்டுள்ளது. எந்த திணிப்புகளும் இதிலில்லை.
அடுத்த கட்டுரையில் சமூகம் சார்ந்த கதைகளையும் சமூக விழுமியங்கள் சார்ந்த கதைகளையும் அரசு ஆட்சி போன்றவை சம்பந்தமான கதைகளும் பற்றி ஆராயலாம்.

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி படர்ந்த மலைப்பிரதேசத்தின் ஊடாக கதை மாந்தர்கள் செல்லும் போது வாசர்கள் கண்களில் பனி படர்கின்றது. வெறுப்பின் உச்சத்தில் போய் மணிக்கட்டை அறுத்துகொள்ளும் போது கை நரம்புகள் எல்லாம் சிலிர்த்து போகின்றது. முதல் கடிதத்தை காதலிக்கு கொடுத்துவிட்டு ஒளிந்திருந்து  என்ன செய்கின்றாள் என்று பார்க்கும் போது கண்கள் படபடத்து கொள்கின்றன. கதை மாந்தர்கள் நகரும் இடமெல்லாம் நாமும் நகர்ந்து போகின்றோம். அவர்களின் உணர்வுகள் எங்களினுள்ளும் தொற்றிகொள்கின்றது. இந்த அனுபவம் தான் சிறுகதை. இதில் உண்டாகும் தருணங்கள் மகத்தானவை. கறுப்பு புள்ளி எழுத்துகளின் ஊடு இந்த பிரபஞ்ச அசைவுகளை எல்லாம் அனுபவித்து விடுகின்றோம்.
 
அப்படித்தான் நாய் வீட்டு ராஜரத்தினத்தின் வீட்டு ஒழுங்கையும். யாழ்பாணம் என்றில்லாமல் வடக்கின் எல்லா ஊர்களிலும் அப்படி ஒரு ராஜரத்தினமும் ஒழுங்கையும் இருந்துகொண்டிருகிறது. எங்கள் வீட்டின் எதிர் ஒழுங்கையிலும் அந்த ராஜரத்தினம் இருந்துகொண்டிருக்கின்றார். இந்த மனநிலை உருவாக்கம் மனதினில் ஆழப்பதிவதாக ஜூட் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது. சிறுகதை ஒன்றின் நீள் கால நிலைப்பு, அதில் பதியப்படுகின்ற கூறுகளின் கனத்திலேயே தங்கியிருகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்வியலின் தடயங்களை பெரிதளவில் இலக்கியங்களிலிருந்தே சேகரித்து கொள்கிறோம். அடுத்த சந்ததிக்கு அதை பாதுகாத்து கடத்த முயற்சி செய்கிறோம். இந்த செயன்முறைக்கு ஏதுவான இலக்கியங்களே மகத்தான இலக்கியங்கள். சிறுகதைகளையும் அந்த நோக்கோடு பார்க்கலாம். ஒரு சிறுகதையால் சமூகத்தில் மாற்றம் உருவாகிவிட முடியாது. சமகால அயல் எழுத்தாளர்களை அவர்களே அறிமுகப்படுத்தும் வரை நாமறியோம் என்னும் கீழ் நிலை சமூகத்தில் இருக்கும் போது சமூக மாற்றம் இயலாத ஒன்று. ஆனால் ஒரு சிறுகதையால் மனதில் மூலைகளில் கஞ்சலாய் கிடக்கின்ற அனுபவங்களை மீட்டி கொண்டுவந்து தரமுடியும். அந்த களத்தில் எம்மை அமர்த்தி ரசித்திகொள்ள முடியும். சிறுகதை என்ற கலை வடிவத்தின் வெற்றி அந்த பிணைப்பில் தான் இருகின்றது. ஜூட் இல் வருகின்ற கீர்த்தனாவும், சியாமளனும், தங்கராசும் எம்முள் இருகின்றவர்களே. வீதியில் செல்லும் போது அந்த வீதி முடிவு மட்டும் விடாமல் துரத்திக்கொண்டு வருகின்ற ஜூட்கள் எம்மத்தியில் இருகின்றனவையே. இந்த கதைமாந்தர் அன்னியோன்யம் கதையை மூளைக்கு வலிக்காமல் செலுத்த பெரும் உதவி புரிகின்றது.
 
கதையின் பின்னணி பெரும்பாலும் இரண்டாயிரத்து ஐந்து ஆறுகளில் இருந்திருக்க கூடும். போர் சுற்றிகொண்ட காலம். ஒரு சாதாரண எழுத்தாளான் பார்வையில் யாழ் நகர மக்கள் வாழ்வு வெறிச்சொடிப்போய் இருந்திருக்கும். புறவயமாக அவர்களின் இன்னல் நாட்கள் மனக்கசப்புகள் என போரின் மீதான கொடூரம் எழுத்துகளை எரித்துகொண்டிருக்கும். ஆனால் ஜூட் வேறுவிதமாக நகர்கின்றது. யாழில் வாழ்ந்த எழுத்தாளன் போரின் நடுவில் காணுற்ற கொண்டாட்டம் உவகையளிக்கின்றது. ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக்கிகொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை கூறுகின்றது. இயல்பற்ற அவர்களின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற சந்தோஷமான விடயங்களை கூறுகின்றது.
 

வெறுமையான பிளாஸ்டிக் சோடாப்போத்தலில் தண்ணீரை முழுவதும் நிரப்பிவிட்டு மூடியை இறுக்கிமூடி கேட்களின் அடியில் கட்டிவிடுவது யாழ்ப்பாண வீட்டார்களின் வழமை. கேட்டின் கறல்பிடித்த கம்பிகளை முகர்ந்துவிட்டு பின்னங்காலைத்தூக்கி உச்சா போகும் நாய்கள் நீர் நிரப்பிய போர்த்தல்களைக் கண்டவுடன் உச்சாபோவதில்லை. கேட்டினை முகர்ந்து அப்படியொரு எண்ணத்தில் அணுகுவதும் இல்லை. இந்த நூதன கண்டுபிடிப்பை யார் கண்டறிந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இன்றுவரை யாழ்ப்பாண வீடுகளில் நாய்கள் மதில்களிலும் வீட்டு கேட்களிலும் உச்சா போகாமல் தடுப்பதற்கு பயன்படுத்தும் பிரசித்திபெற்ற முறையாக இருந்துகொண்டிருகின்றது.  ஆரம்பத்தில் வீடுகளுக்கு ரோந்து செல்லும் இராணுவத்தினர் அந்த செட்டப்பைப் பார்த்து கொஞ்சம் சந்தேகப்பட்டனர். கீர்த்தனா வீட்டின் கேட்டிலும் இப்படிப் போர்த்தல்கள் கட்டப்பட்டிருகின்றது.

 

ராஜரத்தினத்தின் மனைவி யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலையில் இரவு பகல் சேவையாக மாறி மாறி தாதியாக சேவையாற்றிக்கொண்டிருப்பார். அவரிடம் வேண்டிக்கட்டும் நோயாளிகளின் பேச்சுக்கள் பிரசித்திபெற்றவை. வாய்பேச்சுக்கு இவரை மிஞ்சிக்கொள்ள எவரும் அந்தப்பிரிவில் இல்லாமல் இருந்தது. இவ பொல்லாத மனிசி, இந்த வாய்க்காரியோட மல்லுக்கட்டவேலாது என்று அடங்கிப்போபவர்களில் பெருவாரியான ஆண் தாதியரும் நோயாளிகளும் உள்ளடக்கம்.

 
யாழ் பற்றி கேள்வியுராத சில வாழ்வியலை அறியக்கொடியவாறு உள்ளது. இந்த தகவல் தளத்தினூடான சிறுகதையின் பயணிப்புதான் அதன் வலுவை கூட்டி கொள்ளும்.
 

சைக்கிளில் வருபவர்கள் தப்பிக்க உபயோகிக்கும் நுட்பம் துரத்தும் நாய்களின்மீது குறிபார்த்து காறித்துப்புவது. துப்பினால் யாழ்ப்பாணத்து ஊர் நாய்களுக்கு அறவே புடிக்காது 

 
 
நிதர்சனமான சிக்கலையும் அதன் பின்னாலான சம்பவகோர்ப்புக்களும் கதையின் தளத்தை மாற்றிவிடாமல் கொண்டு செல்ல வழிசெய்கின்றன. இன்றைய சிறுகதைகள் உலகில் பெருவாரியான கதைகள் மிருகங்கள் பறவைகள் என்ற உயிரின வட்டத்துக்குள் நின்று பேசுகின்றன. அதில் ஒன்றகாவே இந்த கதையில் இருந்து அழகியலை எடுத்துவிட்டால் எஞ்சும். கதையின் கருவுக்கு அதிக கவனம் செலுத்து இருக்கலாம் போல தோன்றுகிறது. யாழ் செம்மண் வீதிகளில் இருந்து லண்டனுக்கு மாறியபோது உண்டாகின்ற கதைப்பிளவு தள மாற்றத்தை சீராக ஏற்படுத்துவதில் சிக்கலை உண்டாகுகின்றது. ஜூட் இன் மறைவில் எழுத்தாளர் ஏற்படுத்தி இருக்ககூடிய கனம் யாழின் பெரும் சோகத்தை கொண்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதை மிக சாதாரணமாக கடந்து செல்கிறார்.
 
கதையின் நடுபகுதியில் வருகின்ற கீர்த்தனாவின் முன்னை நாள் அனுபவங்கள் தொய்வினை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதிலும் எழுத்தாளர் உருவாக்குகின்ற யாழ் பின்னேர வகுப்பின் பின்னரான மெல்லிய கூடல்கள் ரசிக்க வைக்கிறது.
மிகையில்லாமல் சாதாரண ஒரு வாழ்க்கையையும் வாழ்வியலையும் ரசிக்கும் படியாக , மிக முக்கியமாக யாழின் அழகியலை பதிகின்ற விதமாக ஜூட் என்ற சிறுகதை எல்லா வயதெல்லைக்கும் ஏற்புடையதாக எழுதப்பட்டுள்ளது. எந்த சலனமும் இல்லாமல் முற்று முழுதாக யாழையும் நாக்கில் எச்சில் வழிந்து கொண்டிருக்கும் ஜூட்களையும் அனோஜன் பாலகிருஷ்ணன் அவரின் தெளிவான விவரிப்புக்கள் மூலமும் கதை சொல்லல் மூலமும் வாசகனை அணுகியிருப்பது ஜூட் இன் வலிமையான இருப்பை உறுதிசெய்கின்றது.
ஜூட் சிறுகதையை வாசிக்க

ஜூட் – சிறுகதை

“வினோத நூலகம்” – சிறுகுறிப்பு

எந்த சிறுகதையை நான் வாசித்தபோதும் “வினோத நூலகம்” என்ற சிறுகதையை வாசித்ததில் கிடைத்த அனுபவம் அவை எதிலும் கிடைத்ததில்லை. ஜி. குப்புசாமி மொழி பெயர்ப்பில் கல்குதிரையின் கார்கால இதழ் ஆவணி புரட்டாசி 2016 இல் வெளிவந்த ஹாருகி முராகாமி இன் சிறுகதை தான் வினோத நூலகம். கதைக்கு விமர்சனம் என்றெல்லாம் எழுதமுடியாதஅளவு என்னுள் தாக்கம் செலுத்துகிறது இந்த புனைவு. ஒரு மிக சாதாரண நிகழ்ச்சியில் தொடங்கி வரிக்கு வரி விரிந்துகொண்டே போகின்ற புனைவுத்தன்மையில் மூழ்கிப்போய்விட்டேன். கதை எந்த பக்க நகர்வினை கொண்டு செல்கின்றது என்ற கேள்வி இன்னும் என்னுள் விதைத்த படியே இருக்கின்றது. மூன்று முறை வாசித்ததிலும் மூன்றுவிதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ரகசியமாக அதில் வருகின்ற எல்லா நிகழ்வுகளும் அதில் கொடுக்கப்படுகின்ற எல்லா உணவுகளும் அதிலே வினோதமாக சஞ்சாரம் செய்கின்ற கிழவரும் ஆட்டுத்தலை காவலரும் உருவை மாற்றிக்கொண்டே இருக்கின்ற நிலவாகவும் குருவியாகவும் மாறுகின்ற அழகிய பெண்ணும் என் மனதின் மூலைகளில் ஒளிந்துகொண்டிருக்கின்ற புதுவிதமான அழகியலை தூண்டுகின்றன.
விநோதநூலகம் என்ற சிறுகதையை வாசிக்க
https://brinthansite.wordpress.com/2017/04/16/விநோத-நூலகம்-ஹாருகி-முர/

விநோத நூலகம் – ஹாருகி முராகாமி தமிழில்: ஜி. குப்புசாமி

1
நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது.
எனது புதிய தோல் காலணிகள் சாம்பல் நிற லினோலியத் தரையில் எழுப்பிய கடகடப்பொலி, எனது இயல்பான காலோசையைவிட வலுவாக, கடுமையாகக் கேட்டது. ஒவ்வொருமுறை புதிய ஷுக்களை அணியும்போதும் அதன் ஒசைக்கு பழக்கப்படுத்திக்கொள்ள கொஞ்ச நாட்கள் ஆகின்றன.
விநியோக மேசையில் இதுவரை நான் பார்த்திராத ஒரு பெண், கனமான புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். எவ்வளவு அகலமான புத்தகம்! அவளைப் பார்க்கும்போது, புத்தகத்தின் வலது பக்கத்தை அவளுடைய வலது கண்ணாலும், இடது பக்கத்தை இடது கண்ணாலும் படித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.
“தொந்தரவுக்கு மன்னியுங்கள்,” என்றேன்.
புத்தகத்தை அடித்து மூடி மேசைமேல் வைத்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
கையில் வைத்திருந்த புத்தகங்களை அவளெதிரே வைத்துவிட்டு, “இவற்றைத் திருப்புவதற்காக வந்தேன்,” என்றேன். ஒரு புத்தகம் ‘நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவது எப்படி?’ இன்னொன்று ‘ஒரு மேய்ப்பனின் நினைவுக்குறிப்புகள்.’
நூலகப் புத்தகங்களைப் பிரித்து முதல் பக்கத்தில் திருப்பவேண்டிய தேதியை சரிபார்த்தாள். காலம் கடந்திருக்கவில்லை. எப்போதுமே சரியான நேரத்தில் திருப்பிவிடுவேன். எந்த வேலையையும் நான் தாமதப்படுத்துவதில்லை. அப்படித்தான் அம்மா என்னை பழக்கியிருக்கிறார். மேய்ப்பர்களும் அப்படித்தான் இருப்பார்கள். கால நேரத்தைப் பின்பற்றாவிட்டால் ஆடுகள் திசைமாறித் தொலைந்துவிடும்.
அட்டையில் ’திருப்பிக் கொடுக்கப்பட்டது’ என்று முத்திரையிட்டுவிட்டு, மூடிவைத்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
“இன்னும் சில புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்றேன்.
“நேராகப் போய் அந்தப் படிக்கட்டுகளில் கீழே இறங்கி வலதுபுறம் திரும்பு,” என்றாள் தலையை நிமிராமல். “அந்தத் தாழ்வாரத்தில் நேராகப் போனால் அறைஎண் 107 வரும். அங்கே போ.”
2
அந்தப் படிக்கட்டுகள் முடிவில்லாமல் இறங்கிக்கொண்டே இருந்தன. எவ்வளவு படிக்கட்டுகள்! இறுதியில் முடிவை அடைந்து வலப்பக்கம் திரும்பி, பாதி இருண்டிருந்த நடைவழியில் நடந்தேன். அவள் சொன்னதைப் போல அறைக்கதவு ஒன்றில் 107 என்றிருந்தது. இதுவரை இந்த நூலகத்துக்கு பலமுறை வந்திருக்கிறேன், ஆனால் இப்படி ஓர் அடித்தளம் இங்கே இருக்கும் என்று தெரியாது.
கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது. தாழ்வாரத்தில் அது மேலும் பயங்கரமாக எதிரொலிக்க, திருப்பி, திரும்பி ஓடிவிடலாமென்று யத்தனித்தேன். ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டேன். நான் அப்படி வளர்க்கப்படவில்லை. அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார், கதவைத் தட்டினால் அவர்கள் வந்து திறக்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று.
“உள்ளே வரலாம்” என்று உள்ளேயிருந்து குரல் கேட்டது அடங்கின, ஆனால் கூர்மையான குரல்.
கதவைத் திறந்தேன்.
அறையின் மத்தியில் ஒரு சிறிய பழைய மேசைக்குப் பின்னால் அந்தக் குள்ளமான கிழவர் உட்கார்ந்திருந்தார். முகத்தில் ஈ மொய்த்திருப்பதைப் போல சிறிய கரும்புள்ளிகள். வழுக்கைத் தலை. கனமான கண்ணாடி அணிந்திருந்தார். முழு வழுக்கை என்று சொல்ல முடியாமல் தலையின் பக்கவாட்டில் வெள்ளை முடிக்கற்றைகள் சுருள் சுருளாக ஒட்டிக்கொண்டிருந்தன. பெரிய காட்டுத்தீக்குப் பிறகான மலையைப் போலிருந்தது அவர் தலை.
“நல்வரவு, சிறுவனே,” என்றழைத்தார் கிழவர். “என்ன உதவி என்னிடமிருந்து வேண்டும்?”
“சில புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்றேன் பலவீனமான குரலில். நீங்கள் வேலையாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நான் பிறகு வருகிறேன் . . .”
“அபத்தம்!” என்று வெடித்தார். “இது என் வேலை. பிஸி எல்லாம் ஒன்றும் கிடையாது! சொல்லு, என்ன மாதிரியான புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? அவை எங்கே இருக்குமென்று இடத்தைக் காட்டுகிறேன்.”
சுவர் பேசும் விதமே வேடிக்கையாக இருப்பதாகத் தோன்றியது. அவர் முகமே முழு வினோதம். செவிமடல்களிலிருந்து நீளமான முடிகள் துருத்திக் கொண்டிருந்தன. காற்றுப்போன பலூனைப்போல முகவாய்க்குக் கீழே தோல் மடிப்புகள் தளர்ந்திருந்தன.
“நீ தேடிக்கொண்டிருப்பது என்னவென்று சரியாகச் சொல், என் இளம் நண்பனே.”
“ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் வரிவசூல் எப்படி செய்யப்பட்டது என்று தெரிந்துகொள்ள வேண்டும்,” என்றேன்.
கிழவரின் கண்கள் பளிச்சிட்டன. “ ஓ அப்படியா?” என்றார். “ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் வரிவசூல்! ஆச்சரியமூட்டும் ஆர்வம்தான் உனக்கு. இதுவரை யாரும் கேட்டதில்லை!”
3
அவர் சொன்னது என்னை நெளிய வைத்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆட்டமன் வரி வசூலைப் பற்றித் தெரிந்துகொள்வதில் எனக்கு அந்தளவுக்கு ஆர்வமெல்லாம் ஒன்றும் கிடையாது. பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று முளைத்த சிந்தனைதான் அது: ஆட்டமன்கள் எப்படி வரிவசூல் செய்திருப்பார்கள்? இப்படி ஒரு யோசனை. மிகவும் சின்னவனாக இருந்த காலத்திலிருந்தே அம்மா சொல்லி வந்திருக்கிறார், எதையாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நூலகத்துக்குச் சென்று தேடு.
“பரவாயில்லை,” என்றேன். “அதுவொன்றும் அவ்வளவு முக்கியம் இல்லை. சும்மா தெரிந்துகொள்ளலாமே என்றுதான் . . .” இந்த அமானுஷ்யமான சூழலிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வெளியேறிவிட வேண்டும் என்ற துடிப்பில் அங்கிருந்து இடத்தை காலி செய்யத் தயாரானேன்.
“என்ன விளையாடுகிறாயா?” கிழவர் இடைமறித்தார். “ஆட்டமன் சாம்ராஜ்ஜிய வரிவசூல் குறித்து நிறைய நூல்கள் எங்களிடம் இருக்கின்றன. நூலகத்தில் குறும்பு விளையாட்டு விளையாடலாம் என்ற எண்ணத்தோடு வந்திருக்றாயா? கிண்டலா உனக்கு?”
“இல்லை சார்,” நான் திக்கித் திணறினேன். “அது என் நோக்கம் அல்ல. யாரையும் கிண்டல் செய்வதற்காக வரவில்லை.”
“அப்படியானால் நல்ல பையனாக இங்கேயே காத்திரு.”
“சரி, சார்.”
கிழவர் நாற்காலியிலிருந்து எழுந்தார். கூனல் முதுகோடு, அறையில் பின்னால் இரும்புக்கதவைத் திறந்து மறைந்து போனார்.
அவர் திரும்பி வருவதற்காக அங்கேயே பத்து நிமிடங்களுக்கு நின்றிருந்தேன். விளக்கின் மேல்தட்டின் அடியில் குட்டியான கருவண்டுகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
கடைசியில் மூன்று கனமான புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு கிழவர் வந்தார். அவையெல்லாமே பயங்கரப் பழசானவை. புராதன காகித நெடி அறைக்குள் பரவியது.
கிழவர் பெருமிதத்தோடு, “உனக்கு விருந்துதான்,” என்றார். “ஆட்டமன் வரிவிதிப்பு முறைகள், ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள், ஆட்டமன்-துருக்கிய சாம்ராஜ்ஜியத்தில் எழுந்த வரி கலகமும் முறியடிப்பும். அபாரமான நூல்கள்தான், நீயே ஒப்புக்கொள்வாய்.”
பணிவுடன் “மிகவும் நன்றி,” என்றேன். புத்தகங்களை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தேன்.
“நில்!” என்றார் கிழவர் பின்னாலிருந்து. “இந்த மூன்று புத்தகங்களும் வெளியே கொண்டு செல்வதற்கானவை அல்ல. இந்த வளாகத்துக்குள்ளேயே வைத்து வாசிக்க வேண்டும்.”
4
ஆம். அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றின் முதுகிலும் ‘வளாகப் பயன்பாட்டுக்கு மட்டும்’ என்று சிவப்பு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.
“இவற்றை உள் அறையில் வைத்து வாசிக்க வேண்டும்,” என்றார் கிழவர்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். 5.20. “நூலகத்தின் வேலை நேரம் முடியப்போகிறதே. அம்மாவும் கவலைப்படுவார்கள். நான் போக வேண்டும்.”
கிழவரின் மயிரடர்ந்த புருவங்கள் நெரித்து ஒரே கோடாகின. “வேலைநேரம் முடிவதெல்லாம் பிரச்சனையே கிடையாது,” என்று முகம் சுளித்தார். “நான் சொல்வதைத்தான் செய்வார்கள்-இருக்கட்டும் என்று நான் சொன்னால் இருக்கட்டும்தான். கேள்வி என்னவென்றால், நான் செய்யும் உதவிக்கு உரிய மரியாதை தருகிறாயா இல்லையா என்பதுதான். இவ்வளவு கனமான புத்தகங்களை எதற்காக நான் சுமந்து வந்ததாக நினைக்கிறாய்? என் தேகப் பயிற்சிக்காகவா?”
“மன்னியுங்கள், உங்களைத் தொந்தரவு செய்வது என் நோக்கம் அல்ல. புத்தகங்களை வெளியே கொண்டு செல்லக் கூடாதென்று எனக்குத் தெரியாது.”
கிழவர் கொல்லென்று இருமி, கைக்குட்டையில் எதையோ கெட்டியாகத் துப்பினார். முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் வெறியோடு நடனமாடிக் கொண்டிருந்தன.
“உனக்கு என்ன தெரியும், தெரியாது என்பதைப்பற்றி அக்கறை இல்லை,” என்று சீறினார். “உன் வயதில் நான் இருந்தபோது இப்படியொரு வாய்ப்பு படிப்பதற்குக் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் இங்கே நீ நேரமாகிவிட்டது, சாப்பாட்டுக்கு தாமதமாகிவிடும் என்று சிணுங்கிக் கொண்டிருக்கிறாய். என்ன தைரியம் உனக்கு!”
“சரி, நான் இங்கேயே இருந்து படிக்கிறேன். ஆனால் வெறும் முப்பது நிமிடங்களுக்கு மட்டும்,” என்றேன். யாரிடமும் உறுதியாக முடியாது என்று சொல்வதில் நான் சமர்த்தன் இல்லை. “ஆனால் அதற்கு மேல் என்னால் தங்கியிருக்க முடியாது. நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.
கிழவரின் முகத்தில் இறுக்கம் சற்று தளர்ந்தது.
“ஆகவே, இங்கே தங்கி படிக்கிறாய்?”
“ஆம், ஆனால் முப்பது நிமிடங்களுக்கு மட்டும்.”
“சரி, இந்தப் பக்கமாக வா,” என்று கிழவர் தலையை அசைத்தார். உள் கதவுக்குப் பின்னால் இருட்டான நடைவழியில் ஒரேயொரு விளக்கு கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த ஏறக்குறைய இருட்டுக்குள் நுழைந்தோம்.
5
”என் பின்னால் வா,” என்றார் கிழவர். கொஞ்சதூரம் நடந்தவுடனேயே, நடைவழி இரண்டாகப் பிரிந்தது. கிழவர் வலப்பக்கம் திரும்பினார். அந்த வழியில் கொஞ்சதூரம் சென்றதும் இன்னொரு பிரிவு. இம்முறை இடதுபக்கம் திரும்பினார். அந்த நடைவழி இன்னும் செல்லச் செல்ல, இரண்டிரண்டாகப் பிரிந்து கொண்டே நீண்டுகொண்டிருக்க, கிழவர் சற்றும் தயங்காமல் வலமும் இடமுமாகத் திரும்பித் திரும்பி சென்று கொண்டேயிருந்தார். சில சமயங்களில் ஏதோ ஒரு கதவைத் திறந்து, முற்றிலும் வேறான இன்னொரு நடைவழிக்குள் நுழைந்தார்.
என் மனம் கலவரத்தில் இருந்தது. இது எல்லாமே அதீதமான விநோதம்தான். எங்கள் ஊர் நூலகத்திற்கு இப்படி ஒரு அடித்தளமும், அதில் இவ்வளவு விஸ்தார சிக்கலாக திருகுப்பாதைகளும் இருக்குமா? சாதாரணமாக பொது நூலகங்கள் எப்போதுமே பணப்பற்றாக்குளையில் இயங்குபவையாகவே இருக்கும். சின்னதாக ஒரு திருகுப்பாதையை அமைப்பது கூட அவர்களுக்கு கட்டுப்படியாகாது. இதைப்பற்றி கிழவரிடம் கேட்கலாமாவென்று யோசித்து, அவர் சத்தம் போடுவார் என்று பயந்து நிறுத்திக்கொண்டேன்.
கடைசியாக, இந்தப் பாதைப் பின்னால் ஒரு பெரிய இரும்புக் கதவில் முடிந்தது. கதவில் ‘வாசிப்பறை’ என்ற பலகை. அந்த வட்டாரமே நடுராத்திரியில் மயானம் போல படுநிசப்தத்தில் உறைந்திருந்தது.
கிழவர் பாக்கெட்டிலிருந்த கணகணவென்று ஒலிக்கும் ஒரு சாவிக் கொத்தை எடுத்து, இருப்பதிலேயே பெரிய, பழங்கால சாவியைத் தேர்ந்தெடுத்தார். சாவித்துளைக்குள் செருகிவிட்டு என்னைத் திரும்பி அர்த்த புஷ்டியோடு பார்த்தபடியே சாவியை வலப்புறமாகத் திருகினார். பூட்டு திறக்கும் சத்தம் பலமாக ஒலிக்க, கதவு நீளமாகக் கிறீச்சிட்டுக் கொண்டே திறந்தது.
“ம், ம், வந்தாகிவிட்டது,” என்றார் கிழவர். “உள்ளே போ.”
“உள்ளே வா?” என்று கேட்டேன்.
“ஆம், உள்ளேதான்.”
“கும்மிருட்டாக இருக்கிறதே?”
உள்ளே செல்ல மறுத்தேன். அண்டவெளியில் கருந்துளை ஒன்றை குத்தி வைத்திருப்பதைப்போல கதவுக்குப் பின்னால் இருட்டா இருந்தது.
6
கிழவர் என்னே நோக்கித் திரும்பி, நிமிர்ந்து முழு உயரத்துக்கு நின்றார். இப்போது திடீரென மிகவும் உயரமாக, பெரும் உருவத்தில் இருந்தார். அடர்ந்த புருவங்களுக்குக் கீழே அவர் கண்கள் கீழே அந்திக்கருக்கலில் வெள்ளாட்டின் கண்களைப் போல பளிச்சிட்டன.
“அற்பத்தனமான விஷயங்களுக்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து புலம்புகிற பயலா நீ?”
“இல்லை சார், நான் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால் இது எனக்கென்னவோ-”
“போதும் உன் மழலைப் பேச்சு,” என்று கிழவர் கததினார். “ஏதாவது சாக்கு போக்கு, சமாதானம் சொல்லிக்கொண்டு, மற்றவர்கள் அக்கறையோடு உதவும் செயல்களை அலட்சியப்படுத்துபவர்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது, தெரிந்துகொள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் உதவாக்கரைகள் என்பேன்.”
“தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். உள்ளே செல்கிறேன்.” நான் ஏன் இப்படி இருக்கிறேன்? உடன்படாத விஷயங்களுக்கு உடன்பட்டுப் போவதும், செய்ய விருப்பமில்லாத விஷயங்களை மற்றவர்களின் கட்டாயத்துக்காக செய்வதும் என்று நான் இப்படி இருக்கிறேன்?
“கதவுக்கு வலதுபக்கத்தில் ஒரு படிக்கட்டு இருக்கும். கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அதில் கீழே இறங்கிச்செல். ஜாக்கிரதை, விழுந்துவிடாதே.”
நான் முதலில் மெதுவாக அடியெடுத்துச் சென்றேன். பின்னாலிருந்த கதவை கிழவர் மூடினதும், மொத்தமும் கும்மிருட்டாகிப் போனது. அவர் பூட்டும் சத்தம் தெளிவாக, உரக்கக் கேட்டது.
“ஏன் கதவைப் பூட்டுகிறீர்கள்?”
“அதுதான் விதி. கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.”
நான் என்ன செய்ய முடியும்? படியில் இறங்கினேன். அடித்தளத்துக்கு அடியில் இன்னொரு அடித்தளமா? முடிவின்றி படிகள் இறங்கிக் கொண்டே பிரேஸில்தான் வந்து முடியுமோ என்று தோன்றியது. கைப்பிடி துருவேறி சொரசொரப்பாக இருந்தது. சுற்றிலும், ஒரேயொரு ஒளித்துணுக்கும் தென்படவில்லை.
இறுதியில் படிக்கட்டின் முடிவை அடைந்தோம். தூரத்தில் ஒரு வெளிச்ச மினுங்கல் தெரிந்தது. உண்மையில் மிகவும் மங்கலான வெளிச்சம்தான், ஆனாலும் வெகுநேர இருட்டுக்குப் பழகியிருந்த என் கண்களைக் கூசவைக்கும்படி இருந்தது. அறையின் பின்னாலிருந்து யாரோ அணுகி என் கையைப் பற்றினர். அவன் குள்ளமாக இருந்தான். ஆட்டுத்தோலை உடையாக போர்த்தியிருந்ததை பார்க்க முடிந்தது.
“ஹேய், உன் வருகைக்கு நன்றி.” என்றான் அந்த ஆட்டு மனிதன்.
“குட் ஆஃப்டர்நூன்” என்ற பதிலளித்தேன்.
7
அது உண்மையான ஆட்டுத்தோல்தான். அந்த ஆட்டு மனிதனின் உடம்போடு அது ஒவ்வொரு அங்குலத்திலும் முழுமையாகப் பொருந்தி மூடியிருந்தது. முகத்துக்கு மட்டும் திறப்பு இருந்தது. அதன் வழியே ஒரு ஜோடி நட்பார்ந்த கண்கள் எட்டிப்பார்த்தன. இந்த உடை அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ஆட்டுமனிதன் என்னை ஒரு கணம் உற்றுப்பார்த்துவிட்டு, என் கையில் வைத்திருந்த மூன்று புத்தகங்களுக்கு பார்வையை திருப்பினான்.
“கடவுளே! நீ இங்கே படிப்பதற்காகத்தான் வந்தாயா? நிஜமாகவா?”
“ஆம்,” என்றேன்.
“அதாவது, உண்மையாகவே, நிஜமாகவே இந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவா வந்தாய்?”
ஆட்டு மனிதன் பேசும் விதத்தில் ஏதோ விளங்க முடியாத விநோதமான தன்மை இருந்தது. எனக்கு பதிலளிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.
“ம், சொல்லு,” என்று கிழவர் மிரட்டினார். “நீ இங்கே படிப்பதற்காகத்தானே வந்தாய்? அது உண்மைதானே? அவனுக்கு நேராகப் பதிலைச் சொல்லு.”
“ஆம், நான் இங்கே படிப்பதற்காகத்தான் வந்தேன்,”
கிழவர் ஆட்டு மனிதனிடம், “நன்றாகக் கேட்டுக் கொண்டாயா?” என்று சீறினார்.
ஆட்டு மனிதன் தயங்கினான்: “ஆனால், ஐயா . . . இவன் மிகவும் சிறுவன் அல்லவா?”
“பேசாதே!” கிழவர் இடியென வெடித்தார். பின்னால் வைத்திருந்த பையிலிருந்து ஒரு பிரம்பை உருவியெடுத்து ஆட்டுமனிதனின் முகத்துக்கு குறுக்காக அடித்தார்.” வாசிப்பறைக்கு இவனை கூட்டிச்செல்!”
அந்த அடியில் ஆட்டு மனிதன் கலங்கி, என் கையைப் பற்றிக் கொண்டான். பிரம்பு அவனுடைய உதட்டுக்குப் பக்கத்தில் சிவப்பு வடுவை ஏற்படுத்தியிருந்தது. “சரி, போகலாம்.”
“எங்கே?”
“வாசிப்பறைக்கு. படிப்பதற்காகத்தானே வந்திருக்கிறாய்?”
ஆட்டுமனிதன் ஒரு குறுகலான நடைவழியாக கூட்டிச் சென்றான். கிழவர் எங்களுக்குப் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு வந்தார். ஆட்டு மனிதனின் பின்புறத்தில் குட்டையாக வால் ஒன்று பொருத்தப்பட்டு, ஒவ்வொரு தப்படிக்கும் பெண்டுலம் போல அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டு வந்தது.
நடைவழியின் முடிவை அடைந்ததும் ஆட்டுமனிதன், “ஆ, வந்து சேர்ந்தாகவிட்டது நண்பனே,” என்றான்.
“ஒரு நிமிடம் பொறுங்கள், இது என்ன சிறைக்கூடமா?” என்று பயத்துடன் கேட்டேன்.
“ஆம்,” என்றான்.
“சரியாகச் சொல்லிவிட்டாயே!” என்றார் கிழவர்.
8
“நீங்கள் இப்படிச் சொல்லவேயில்லை,” என்றேன் கிழவரிடம் இவ்வளவு தூரம் நான் வந்ததே நாம் வாசிப்பறைக்குச் செல்கிறோம் என்று நீங்கள் சொன்னதால்தான்.”
“நீ பிடிக்கப்பட்டிருக்கிறாய்,” என்றான் ஆட்டுமனிதன். கூடவே தலையையும் ஆட்டினான்.
“ஆம், உன் கண்ணைக்கட்டி தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன்,” என்றார் கிழவர்.
“நீங்கள் எப்படி . . .”
“பேசாதே, முட்டாளே,” என்று சீறியபடியே பையிலிருந்து பிரம்பை எடுத்து என் தலையை நோக்கி வீசினார். சட்டென்று பின்னால் நகர்ந்து கொண்டேன். முகத்துக்குக் குறுக்கே தழும்பு வரவழைத்துக் கொள்ள விரும்பவில்லை நான்.
“உள்ளே போ. மேலே எதுவும் பேசக்கூடாது. இந்த மூன்று புத்தகங்களையும் முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை படித்து மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும். இன்றிலிருந்து ஒருமாதம் கழித்து நானே உன்னை சோதித்துப்பார்ப்பேன். இந்த மூன்று புத்தகங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டாய் என்றால் உனக்கு விடுதலை.”
“இவ்வளவு பெரிய புத்தகங்களை மனப்பாடம் செய்வது சாத்தியமில்லை. என் அம்மாவும் என்னைக் காணவில்லையென்று ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள் . . .”
கிழவர் பல்லைக் கடித்தபடி, பிரம்பை உருவியெடுத்து வேகமாக வீசினார். நான் துள்ளிக்கொண்டு விலக, அடி ஆட்டுமனிதனின் முகத்தில் விழுந்தது. மிகவும் பலமான அடி. நான் தப்பித்துவிட்ட கோபத்தில் ஆட்டுமனிதனை மீண்டும் அடித்தார். குரூரம்.
“இவனை சிறையில் தள்ளு. இந்த வேலை உன்னுடையது,” கிழவர் உத்தவிட்டு அகன்றார்.
ஆட்டுமனிதனிடம்,” வலிக்கிறதா?” என்று கேட்டேன்.
“பரவாயில்லை. ஹேய், எனக்கு இதெல்லாம் பழக்கம்தான்.” என்றான். அவனைப் பார்த்தால் நன்றாகத்தான் தெரிந்தான்.
“எனக்குப் பிடிக்கவில்லைதான், ஆனாலும் உன்னை உள்ளே வைத்து பூட்டியாக வேண்டும்.”
“நான் முடியாது என்றால்? உள்ளே போக மறுத்தால்? என்ன ஆகும்?”
“அப்புறம் அவர் என்னை மேலும் பலமாக அடிப்பார்.” அந்த ஆட்டு மனிதனைப்பார்க்கப் பாவமாக இருந்தது. சிறைக்குள் சென்றேன். ஒரு சாதாரண படுக்கை, ஒரு மேஜை, கை அலம்புமிடம், கழிப்பறை எல்லாம் உள்ளேயே இருந்தது. கை கழுவுமிடத்துக்குப் பக்கத்தில் டூத் பிரஷ்ஷும், ஒரு கப்பும் இருந்தன. இரண்டுமே புதிதாகவோ, சுத்தமாகவோ தெரியவில்லை. ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருந்த பற்பசை எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆட்டுமனிதன் மேஜை விளக்கை போட்டு, நிறுத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.
“ஹேய், இங்கே பாரேன்,” என்னிடம் திரும்பி பல்லிளித்தான். “எல்லாமே நல்லாயிருக்கு இல்லே?”
9
“உனக்கு தினமும் மூன்றுவேளை உணவு எடுத்து வருவேன். மூன்று மணிக்கு சிற்றுண்டிக்காக டோநட் கேக்குகள் தருவேன். நானே சுட்டு எடுத்து வருவேன் மொரமொரப்போடு நல்ல சுவையில் இருக்கும்.”
புதிதாகச் சுட்ட டோநட்டுகள் என் அபிமான பண்டங்களில் ஒன்று.
“சரி, காலை நீட்டு.”
காலை நீட்டினேன்.
கட்டிலுக்கு அடியிலிருந்து கனமான இரும்பு குண்டையும் அதனோடு இணைந்திருந்த சங்கிலியையும் எடுத்தான். சங்கிலியை என் கணுக்காலில் சுற்றிப் பூட்டினான். சாவியை சட்டைப்பையில் போட்டுக் கொண்டான்.
“எனக்கு பயங்கரமாகக் குளிருகிறது,” என்றேன்.
“கவலைப்படாதே, பழகிவிடும்.”
“ஆட்டுமனிதரே, நான் உண்மையிலேயே இங்கு ஒரு முழு மாதத்துக்கு தங்கியிருக்க வேண்டமா?”
“ம்ம், அதுதான் கால அளவு.”
“ஆனால் இந்தப் புத்தகங்களை நான் முழுசாக மனப்பாடப்படுத்திவிட்டால் என்னை விடுவித்துவிடுவார், இல்லையா?”
“அப்படி நடக்குமென்று தோன்றவில்லை.”
“அப்படியானால் என்னை என்ன செய்வார்கள்?”
ஆட்டுமனிதன் தலையை ஒருபக்கமாக சாய்த்தான். “பையா அதையெல்லாம் கேட்காதே.”
“தயவுசெய்து சொல்லுங்கள். என் அம்மா வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்.”
“சரி, பையா. நேராகவே சொல்லிவிடுகிறேன். உன் உச்சந்தலையை வெட்டி, உன் மூளையை உறிஞ்சி சாப்பிட்டுவிடுவார்.”
விக்கித்து ஸ்தம்பித்தேன். நா எழவில்லை.
மெதுவாக சமாளித்துக்கொண்டு, “அதாவது . . . அதாவது, அந்தக் கிழவர் என் மூளையை சாப்பிடப் போகிறாரா?”
“ஆம், எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது, ஆனால் அப்படித்தான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது,” என்றான் ஆட்டுமனிதன் தயக்கத்தோடு.
10
படுக்கையில் சரிந்து உட்கார்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டேன். எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கவேண்டும்? நான் செய்த ஒரே தவறு இந்த நூலகத்துக்கு வந்து சில புத்தகங்களை எடுக்க வந்தது.
“கவலைப்படாதே,” என்று ஆட்டுமனிதன் என்னைத் தேற்றினான். “உனக்கு சாப்பாடு எடுத்து வருகிறேன். நல்ல சூடான உணவு எனக்கு ஆறுதல் அளிக்கும்.”
“ஐயா ஆட்டுமனிதரே, அந்தக் கிழவர் எதற்காக என் மூளையைச் சாப்பிட விரும்புகிறார்?”
“ஏனென்றால் அறிவு நிரம்பிய மூளைகள் உண்பதற்கு சுவையானவை, அதனால்தான் அவை மிகவும் ருசியாக, பாலேடுபோல இருக்கும். அதே நேரத்தில் ஒருவித மொரமொரப்போடும் இருக்கும்.”
“பிற்பாடு சாப்பிடலாம் என்பதற்காகத்தான் என்னை ஒரு மாதத்துக்கு மனப்பாடம் செய்யச் சொல்லியிருக்கிறாரா?”
“அதற்காகத்தான்.”
“என்னைப் பற்றி கொஞ்சம் யோசித்துப்பார். இது குரூரம் இல்லையா?”
“ஹேய், இதைப்போன்ற விஷயங்கள்தான் எல்லா இடங்களிலும் நூலகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே, தெரியாதா? அதாவது கிட்டத்தட்ட இதைப்போலவே.”
இந்தச் செய்தி என்னைத் துணுக்குற வைத்தது. “எல்லா நூலகங்களிலுமா?” என் குரல் திக்கியது.
“உனக்கு எல்லா அறிவுச்செல்வத்தையும் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்க என்னதான் ஆதாயம் கிடைக்கப் போகிறது?”
“அதற்காக வருபவர்களில் தலையைப் பிளந்து மூளையைச் சாப்பிடுவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அத்துமீறிய செயலல்லவா?”
ஆட்டுமனிதன் என்னை சோகமாகப் பார்த்தான். “உன்னுடைய துரதிருஷ்டம். அனுபவித்துதான் ஆகவேண்டும், வேறென்ன?”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
“இல்லை, அது நடக்காத காரியம். அதற்கு நான் உதவினால் என்னை கம்பளிப்பூச்சிகள் நிறைந்த ஒரு பெரிய ஜாடிக்குள் போட்டு அடைத்துவிடுவார். அது ஒரு மகாபெரிய ஜாடி. உள்ளே பல்லாயிரக்கணக்கான கம்பளிப்பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருக்கும். மூன்று நாட்களுக்கு அடைத்து வைத்திருப்பார்.”
“பயங்கரம்.”
“அதனால், உன்னைத் தப்பியோட வைக்க என்னால் முடியாது, புரிகிறதா பையா? மன்னித்துக்கொள்.”
11
அச்சிறிய சிறை அறையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு ஆட்டுமனிதன் அகன்றான். அந்தக் கடினமாக மெத்தையில் குப்புறப் படுத்துக்கொண்டு முழுசாக ஒரு மணி நேரத்துக்குத் தேம்பித்தேம்பி அழுதேன். கோதுமை உமியால் நிரப்பப்பட்டிருந்த அந்த நீலநிறத் தலையணை தொப்பலாக நனைந்தது. கணுக்காலில் கட்டப்பட்டிருந்த இரும்புக் குண்டு ஒரு டன் இருக்கும்போல கனத்தது.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக 6:30. அம்மா இரவு உணவை தயாரித்து முடித்துவிட்டு எனக்காகக் காத்துக்கொண்டிருப்பர். சமையலறைக்குள் குறுக்கம் நெடுக்குமாக கவலையோடு நடந்துகொண்டு நொடிக்கொருதரம் கடிகாரத்தை அவர் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பது மனக்கண்ணில் தோன்றியது. இன்னும் ஒருசில மணிநேரத்துக்கு நான் போகாவிட்டால் அவர் உடைந்து போய்விடுவார். அப்படிப்பட்ட அம்மாதான் அவர். எது நடந்தாலும் இருப்பதிலேயே மோசமானதை கற்பனை செய்துகொள்வார். இந்தக் கற்பனை வளர்ந்துகொண்டே போகும். ஒன்று எல்லாவற்றையும் கெடுதலாகவே முடியுமென்று நம்பிக் கொண்டிருப்பார், இல்லாவிட்டால் சோபாவில் அசையாமல் உட்கார்ந்து தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டிருப்பர்.
ஏழு மணிக்கு யாரோ கதவைத் தட்டினர். சுருக்கமான மெல்லிய தட்டல்.
“உள்ளே வரலாம்,” என்றேன்.
பூட்டில் சாவி திருகப்படுவது கேட்டது. ஒரு இளம்பெண் சின்ன தள்ளுவண்டியில் உணவு வகைகளை அடுக்கி தள்ளிக்கொண்டு வந்தாள். மிகவும் அழகான பெண். பார்க்கும்போதே கண்கள் கூசும் அளவுக்கு அதீத அழகு. என் வயதுதான் இருப்பாள். கழுத்து, மணிக்கட்டுகள், கணுக்கால்கள் எல்லாமே லோசாக இறுக்கினாலே உடைந்துவிடும் போலத் தோன்றினாள். அவளது நீண்ட நேரான கூந்தல் நகை இழைகளால் பின்னப்பட்டவைபோல மின்னின. என் முகத்தை ஒரு கணம் உற்றுப்பார்த்தாள். எதுவும் பேசாமல் வண்டியில் இருந்த உணவுப்பதார்த்தங்களை எடுத்து மேசையின் மேல் வைத்தாள். அவள் அழகில் ஸ்தம்பித்து, பேச்சிழந்து அமர்ந்திருந்தேன்.
உணவு வகைகள் உற்சாகம் எழுப்பக்கூடியனவாக இருந்தன. கடல் அர்ச்சின் சூப் கொதிக்கக் கொதிக்க இருந்தது. ஸ்பானிய மேக்கெரல் மீன் வறுவல் (துவர்ப்பு கிரீமோடு), எள்ளுவிதை தூவலோடு வெண்ணிற ஆஸ்பாரகஸ், பச்சடிக் கீரையும் வெள்ளரிக்காயும் சேர்ந்த கூட்டு, வெண்ணெயில் வறுத்த ரொட்டி. ஒரு பெரிய கிளாஸில் திராட்சைச் சாறு. எல்லாவற்றையும் அழகாக மேசையில் அடுக்கி வைத்துவிட்டு, என் பக்கம் திரும்பி, தன் கைகளினால் பேசினாள்: <<கண்ணீரைத் துடைத்துக்கொள். சாப்பிடத் தொடங்கு.>>
12
“உன்னால் பேசமுடியாதா?” என்று அவளிடம் கேட்டேன்.
<<இல்லை, என்னால் முடியாது. நான் சின்னவளாக இருந்தபோதே என் குரல்வளை அழிக்கப்பட்டுவிட்டது.>>
“அழிக்கப்பட்டதா?” என்று வியப்போடு கூவினேன். “யார் செய்தது?”
அவள் பதில் அளிக்காமல் இனிமையாகப் புன்னகைத்தாள். மிகவும் ஜகஜ்ஜோதியான புன்னகை அது. சுற்றியுள்ள காற்று அதில் ஜொலிப்பதைப் போலிருந்தது.
<<தயவுசெய்து புரிந்துகொள்,>> என்றாள். <<அந்த ஆட்டுமனிதன் கெட்டவர் அல்ல. இரக்கமனம் கொண்டவர். ஆனால் அந்தக் கிழவர்தான் அவரை பயமுறுத்தி வைத்திருக்கிறார்.>>
“புரிகிறது, ஆனாலும் . . .”
அவள் நெருங்கி வந்தாள். என் கை மீது அவள் கையை வைத்தாள். சிறிய, மிக மென்மையான கை. என் இதயம் இரண்டாக உடையப்போகிறது என்று நினைத்தேன்.
<<சூடாக இருக்கும்போதே சாப்பிட்டு வடு,>> என்றாள். <<சூடான உணவு சக்தி தரும்>>
தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறினாள். மே மாதக் காற்றைப்போல இலேசாக, வேகமாக வீசிவிட்டு மறைந்து போயிருந்தாள்.
உணவு சுவையாகவே இருந்தது. ஆனால் அவற்றில் பாதியைத்தான் சாப்பிடமுடிந்தது. நான் இப்போது வீட்டுக்குப் போகாவிட்டால், அம்மாவுக்கு கவலை அதிகமாகி இன்னொரு மனக்குலைவு ஏற்படும். நான் வளர்த்துவரும் என் பிரியமான கரும்பச்சை குருவிக்கு உணவளிக்க மறந்து போவார், அது பட்டினியில் செத்துப் போகும்.
இங்கிருந்து எப்படி தப்பிப்பது? கணுக்காலில் கனமான இரும்புக்குண்டு கட்டப்பட்டிருக்கிறது, கதவு பூட்டப்பட்டிருக்கிறது. எப்படியோ கதவைத் திறந்துவிட்டாலும்கூட, அந்தச் சிக்கலான திருகுவழிப் பாதையில் புகுந்து எப்படி வெளியே வருவது? பெருமூச்செறிந்தேன். மீண்டும் அழுகை வந்தது. படுக்கையில் சுருண்டு தேம்பியழுது கொண்டிருந்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. என்னைத் தேற்றிக்கொண்டு மிச்ச உணவை சாப்பிட்டு முடித்தேன்.
13
பேசாமல் மேசையில் அமர்ந்து படிக்கத் தொடங்குவதுதான் நான் செய்யக்கூடிய நல்ல விஷயமாக இருக்குமென்று முடிவெடுத்தேன். தப்பித்துச்செல்ல ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டுமானால், முதலில் என் எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவ வேண்டும். அதாவது அவரது உத்தரவுக்கு கீழ்படிந்து நடப்பதைப்போல காட்டிக்கொள்ள வேண்டும். அதுவொன்றும் அவ்வளவு கடினமாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது என்ன இருந்தாலும். நான் உத்தரவுகளுக்கு உடனடியாகக் கீழ்படியும் பையன்தானே.
‘ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள்’ஐ எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்தப்புத்தகம் துருக்கிய செம்மொழியில் எழுதப்பட்டிருந்தது; இருந்தாலும் விநோதமாக அதை என்னால் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு சொல்லும் என் ஞாபகத்தில் பதிந்து கொண்டே வந்தது. என்ன காரணத்துக்காகவோ, படிக்கும் எல்லாவற்றையும் என் மூளை உறிஞ்சிக்கொண்டே வந்தது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட, இடுப்பில் கொடுவாளோடு இஸ்தான்புல்லின் தெருக்களில் வரிவசூல் செய்கின்ற துருக்கிய வரித்தண்டலர் இபின் அர்மத் ஹஸீராக மாறினேன். காற்றில் பழவாசனையும், கோழிகளும், புகையிலையும் காபியும் கலந்த மணம் தேங்கிப்போன ஆறைப்போல நகரத்தின் மீது கனமாக போர்த்தியிருந்தது. வணிகர்கள் தெருவோரங்களில் அமர்ந்து பேரீச்சம் பழங்களையும், துருக்கிய ஆரஞ்சுப் பழங்களையும் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர். ஹஸீர் அமைதியான, அலட்டிக்கொள்ளாத இயல்பினன். அவனுக்கு மூன்று மனைவிகள், ஆறு பிள்ளைகள். என்னிடம் இருக்கும் வளர்ப்புக் குருவியைப் போலவே அவனிடமும் ஒரு பேசும் கிளி இருந்தது.
ஒன்பது மணி கழித்து சற்று நேரத்தில் ஆட்டுமனிதன் கதவைத் திறந்து கொண்டு கோக்காவும் பிஸ்கட்டுகளும் எடுத்து வந்தான்.
“பரவாயில்லையே, மாறிவிட்டாய்!” என்றான். “ஹேய், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கொஞ்சம் கோக்கா சூடாகக்குடி.”
புத்தகத்தை வைத்துவிட்டு கோக்காவையும் பிஸ்கட்டையும் எடுத்தேன்.
“ஆட்டுமனிதரே, கொஞ்சநேரத்துக்கு முன் ஒரு அழகான இளம்பெண் வந்தாளே, யார் அது?”
“என்னது? இன்னொருமுறை சொல்லு. அழகான பெண்ணா?”
“எனக்கு இரவு உணவு கொண்டு வந்தாளே-அவள்.”
ஆட்டுமனிதன் முகம் குழம்பியது. “விநோதம் உனக்கு இரவு உணவு நான்தானே எடுத்து வந்தேன்? நீ படுக்கையில் படுத்து தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தாய். நன்றாகப் பார், நான் அழகான பெண்ணா? நான் வெறும் ஆட்டுமனிதன்.
ஒருவேளை நான் கனவு கண்டு கொண்டிருந்தேனோ?
ஆனாலும் அடுத்தநாள் காலையிலேயே அந்த மர்மப்பெண் மீண்டும் வந்தாள். இம்முறை சாலட்டோடு டூ லௌஸ் சாசேஸ், ஸ்டஃப்டு ஸ்நாப்பர், முள்ளங்கி சாலட் பெரிய க்ரவாஸே ரொட்டி, தேன் கலந்த பிளாக் டீ. பார்க்கும்போதே பசியெடுத்தது.
<<நிதானமாக சாப்பிடு. மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும்>> அவள் கைகளினால் பேசினாள்.
“தயவுசெய்து நீ யார் என்று சொல்,” என்றேன்.
<<நான், நான்தான். வேறென்ன?>>
“ஆனால் அந்த ஆட்டுமனிதர் உன்னை ஒரு கற்பனைத் தோற்றம் என்கிறார். நீ என்ற ஒன்று இல்லவே இல்லையென்று-”
அந்தப் பெண் விரலை உயர்த்தி அவளுடைய மெல்லிய உதட்டின் மேல் வைத்தாள். உடனே மௌனமானேன்.
<<ஆட்டுமனிதனுக்கென்று ஓர் உலகம் இருக்கிறது. எனக்கென்று ஒன்று. உனக்கென்று ஒன்று. நான் சொல்வது சரியா?>>
“சரிதான்.”
<<ஆட்டுமனிதனின் உலகத்தில் நான் இருக்கவில்லை என்பதற்காக நான் இல்லவேயில்லை என்று சொல்லிவிட முடியாதல்லவா?>>
“புரிகிறது,” என்றேன். “நமது உலகங்கள்-உனது உலகம், எனது உலகம், ஆட்டுமனிதரின் உலகம், எல்லாமே ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. சில நேரங்களில் அவை ஒன்றின் மேல் மற்றொன்று கவிந்துகொள்கின்றன, சில நேரங்களில் தனித்திருக்கின்றன. இதுதானே நீ சொல்வது?”
அவள் சின்னதாக இருமுறை தலையசைத்தாள்.
நான் ஒன்றும் முழு மூடன் அல்ல. அந்தப் பெரிய கருப்புநாய் என்னைக் கடித்ததற்குப் பிறகு என் மனம் சற்றுக் குழம்பிவிட்டது. அதற்கப்புறம் முற்றிலுமாக சரியாகவே இல்லை.
அந்தப் பெண் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு மேசையில் நான் இரவு உணவை உண்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கைகள் முட்டிகளின் மீது அழகாக கோர்த்துக் கொண்டிருக்க, உதய ஞாயிறின் கதிர்களில் தோய்ந்தபடி அமர்ந்திருக்கும் கண்ணாடிச் சிலை போலத் தெரிந்தாள்.
15
“உனக்கு என் அம்மாவையும் என் வளர்ப்புக் குருவியையும் அறிமுகம் செய்தாக வேண்டும்,” என்றேன். “என் வளர்ப்புக்குருவி ரொம்ப கெட்டிக்காரக்குருவி. அழகாக இருக்கும்.”
அந்தப்பெண் தலையை லேசாக ஒரு பக்கம் சாய்த்தாள்.
“என் அம்மாவும் இனிமையானவர். ஆனால் என்னைப்பற்றி அதீதமாகக் கவலைப்படுவார். அதற்குக் காரணம் நான் சின்னவனாக இருந்தபோது ஒரு நாய் என்னைக் கடித்துவிட்டதுதான்.”
<<என்ன மாதிரியான நாய்?>>
“கருப்புநாய், அதன் கழுத்தில் நகைகள் பதித்த தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் கண்கள். கனமான கால்கள். அவை ஒவ்வொன்றிலும் ஆறு கூரான நகங்கள். அதன் காதுகள் முனையில் இரண்டாகப் பிளந்திருந்தன. வெயிலில் கன்றிப்போனதைப் போல மூக்கு நுனி செம்பழுப்பில் இருந்தது. உன்னை எப்போதாவது நாய் கடித்திருக்கிறதா?”
<<இல்லை, கடித்ததில்லை. சரி, நாயைப்பற்றி பேசாமல், சாப்பிட்டு முடி>>
பேச்சை நிறுத்திவிட்டு, சாப்பிட்டு முடித்தேன். தேன் கலந்த டீயை குடித்தேன். இலகுவாக, இனிமையாக உணரத் தொடங்கினேன்.
“இந்த இடத்திலிருந்து நான் தப்பித்தாக வேண்டும் என் அம்மா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். என் குருவிக்கு நான் தீனி போடாவிட்டால், சாப்பிடாமல் செத்துப் போகும்.”
<<என்னையும் உன்னோடு கூட்டிச் செல்கிறாயா?>>
“நிச்சயமாக. ஆனால் எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. இரும்பு குண்டை காலில் கட்டிவைத்திருக்கிறார்கள். வெளியே செல்லும் வழி வலைப்பின்னலாக இருக்கிறது. நான் தப்பிச் சென்றுவிட்டால் அந்தக் கிழவர், ஆட்டுமனிதருக்கு பயங்கரமான தண்டனை கொடுப்பார். என்னைத் தப்பவிட்டதற்காக.”
<<ஆட்டு மனிதனையும் நம்மோடு கூட்டிச் சென்றுவிடலாம் நாம் மூவரும் ஒன்றாகத் தப்பித்துவிடுவோம்.>>
“அவர் நம்மோடு சேர்ந்து கொள்வார் என்று நினைக்கிறாயா?”
அவள் பிரகாசமாகப் புன்னகைத்தாள்.
பின், முந்தைய நாளைப்போலவே சற்றே திறந்திருந்த கதவின் இடைவெளியில் லாவகமாகப் புகுந்து வெளியேறினாள்.
அவள் சின்னதாக இருமுறை தலையசைத்தாள்.
நான் ஒன்றும் முழு மூடன் அல்ல. அந்தப் பெரிய கருப்புநாய் என்னைக் கடித்ததற்குப் பிறகு என் மனம் சற்றுக் குழம்பிவிட்டுது. அதற்கப்புறம் முற்றிலுமாக சரியாகவே இல்லை.
அந்தப் பெண் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு மேசையில் நான் இரவு உணவை உண்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கைகள் முட்டிகளின் மீது அழகாக கோர்த்துக் கொண்டிருக்க, உதய ஞாயிறின் கதிர்களில் தோய்ந்தபடி அமர்ந்திருக்கும் கண்ணாடிச் சிலை போலத்தெரிந்தாள்.
15
“உனக்கு என் அம்மாவையும் என் வளர்ப்புக் குருவியையும் அறிமுகம் செய்தாக வேண்டும்,” என்றேன். “என் வளர்ப்புக் குருவி ரொம்ப கெட்டிக்காரக்குருவி அழகாக இருக்கும்.”
அந்தப்பெண் தலையை லேசாக ஒரு பக்கம் சாய்த்தாள்.
“என் அம்மாவும் இனிமையானவர். ஆனால் என்னைப் பற்றி அதீதமாகக் கவலைப்படுவார். அதற்குக் காரணம் நான் சின்னவனாக இருந்தபோது ஒரு நாய் என்னைக் கடித்துவிட்டதுதான்.”
<<என்ன மாதிரியான நாய்?>>
“கருப்புநாய். அதன் கழுத்தில் நகைகள் பதித்த தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் கண்கள். கனமான கால்கள். அவை ஒவ்வொன்றிலும் ஆறு கூரான நகங்கள். அதன் காதுகள் முனையில் இரண்டாகப் பிளந்திருந்தன. வெயிலில் கன்றிப்போனதைப் போல மூக்கு நுனி செம்பழுப்பில் இருந்தது. உன்னை எப்போதாவது நாய் கடித்திருக்கிறதா?”
<<இல்லை, கடித்ததில்லை. சரி, நாயைப்பற்றி பேசாமல், சாப்பிட்டு முடி.>>
பேச்சை நிறுத்திவிட்டு, சாப்பிட்டு முடித்தேன். தேன் கலந்த டீயை குடித்தேன். இலகுவாக, இனிமையாக உரைத் தொடங்கினேன்.
“இந்த இடத்திலிருந்து நான் தப்பித்தாக வேண்டும். என் அம்மா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். என் குருவிக்கு நான் தீனி போடாவிட்டால், சாப்பிடாமல் செத்துப் போகும்.”
<<என்னையும் உன்னோடு கூட்டிச் செல்கிறாயா?>>
“நிச்சயமாக ஆனால் எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. இரும்பு குண்டை காலில் கட்டிவைத்திருக்கிறார்கள். வெளியே செல்லும் வழி வலைப்பின்னலாக இருக்கிறது. நான் தப்பிச் சென்றுவிட்டால் அந்தக் கிழவர், ஆட்டுமனிதருக்கு பயங்கரமான தண்டனை கொடுப்பார். என்னைத் தப்பவிட்டதற்காக.”
<<ஆட்டுமனிதனையும் நம்மோடு கூட்டிச் சென்றுவிடலாம் நாம் மூவரும் ஒன்றாகத் தப்பித்துவிடுவோம்.>>
“அவர் நம்மோடு சேர்ந்துகொள்வார் என்று நினைக்கிறாயா?”
அவள் பிரகாசமாகப் புன்னகைத்தாள்.
பின், முந்தைய நாளைப்போலவே சற்றே திறந்திருந்த கதவின் இடைவெளியில் லாவகமாகப் புகுந்து வெளியேறினாள்.
16
மேசையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது பூட்டில் சாவியைத் திருகும் சத்தம் கேட்டது. ஆட்டுமனிதன் ஒரு தட்டில் டோநட்டுகள் லெமனேட் சகிதம் உள்ளே நுழைந்தான்.
“உன்னிடம் முன்பு வாக்களித்திருந்த டோநட்டுகள். அடுப்பிலிருந்து நேராக எடுத்து வருகிறேன்.”
“நன்றி, ஆட்டுமனிதர் அவர்களே.”
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஒரு டோநட்டை எடுத்துக் கடித்தேன். மேலே மொரமொப்பாகவும், உள்ளே மெத்தென்றும் அற்புதமான சுவையுடன் வாயிலிட்டவுடன் கரைந்தது.
“நான் சாப்பிட்டதிலேயே மிகவும் சுவையான டோநட் இதுதான்,” என்றேன்.
“இப்போதுதான் இவற்றை சுட்டு முடித்தேன். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து கவனத்துடன் செய்வேன்.”
“நீங்கள் மட்டும் டோநட் உணவகம் திறந்தால் அமோகமாக நடக்கும்,” என்றேன்.
“நானும் அதைப்பற்றி யோசித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கும், இல்லையா?”
“உங்களால் முடியும்.”
“ஆனால் யார் என்னுடைய கடைக்கு வருவார்கள்? நான் விநோதமாக உடையணிபவன். அப்புறம் என் பற்களைப்பார். சுத்தமாகப் பராமரிப்பதே கிடையாது.”
“நான் உங்களுக்கு உதவுகிறேன்,” என்றேன். டோநட்டுகளை நான் விற்கிறேன். வாடிக்கையாளர்களை நான் கவனித்துக் கொள்கிறேன். பண விவகாரங்களையும், விளம்பரம் தருவதையும்கூட நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் கடையின் பின்கட்டில் டோநட்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும். எப்படி பல் விளக்குவது என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.”
“ஆஹா, இது நல்ல யோசனை,” என்றான் ஆட்டுமனிதன்.
17
ஆட்டுமனிதன் கிளம்பிச் சென்றதும் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். முன்பைப்போலவே ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள் நூலின் ஆசிரியர் இபின் அர்மூத் ஹஸீராக மாறினேன். பகல் முழுக்க இஸ்தான்புல் வீதிகளில் வரிவசூல் செய்து கொண்டிருந்தேன். மாலையானதும் வீட்டுக்குத் திரும்பி எனது பேசும் கிளிக்கு உணவளித்தேன். இரவு வானில் மெல்லி கோடாக பிறைச்சந்திரன் மிதந்து கொண்டிருந்தது. தூரத்தில் யாரோ புல்லாங்குழல் வாசிப்பது கேட்டது. என்னுடைய ஆப்பிரிக்க வேலையாள் அறையில் ஊதுவத்தி ஏற்றி வைத்துவிட்டு, கொசுவிரட்டி போன்ற ஏதோவொன்றை வைத்து பூச்சிகளை வைத்து விரட்டிக் கொண்டிருந்தான்.
என் மூன்று மனைவிகளில் ஒருத்தியான அந்த மிக அழகான இளம்நங்கை எனக்காக படுக்கையறையில் காத்திருந்தாள். ஒவ்வோரிரவும் எனக்கு உணவு பரிமாறுவது அவள்தான்.
<<அழகான நிலா>> என்றாள். <<நாளை அமாவாசை. வானம் முழு இருட்டாக இருக்கும்.>>
“கிளிக்கு உணவளிக்க வேண்டும்,” என்றேன்.
<<கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீங்கள் கிளிக்கு உணவிட்டுவிடவில்லையா?>> என்று கேட்டாள்.
“நீ சொல்வது சரிதான். நான் உணவிட்டுவிட்டேன்,” என்றேன் இபின் அர்மூத் ஹஸீராகிய நான்.
அவளுடைய பட்டுமேனி பிறைநிலவொளியில் மின்னியது. நான் மெய்மறந்திருந்தேன்.
<<அழகான நிலா>>, அவள் திரும்பவும் சொன்னாள். <<அமாவாசை நமது தலைவிதியை மாற்றும்>>
“அப்படியானால் நல்லது,” என்றேன்.
18
குருட்டு டால்ஃபினைப்போல அமாவாசை இரவு மௌனமாக நெருங்கி வந்தது.
அன்று மாலை கிழவர் என்னைப் பார்ப்பதற்கு வந்தார். நான் புத்தகத்தில் சூழ்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அவரது மகிழ்ச்சியைக் கண்டு எனக்கும் மகிழ்ச்சி கூடியது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
தாடையைச் சொறிந்து கொண்டே, “உன்னைப் பாராட்ட வேண்டும்,” என்றார். “நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படித்துவந்திருக்கிறாய். நல்ல பையன்தான் நீ.” என்றேன். மற்றவர்கள் பாராட்டினாலும் எனக்குப் பிடிக்கும்.
“நீ எவ்வளவு வேகமாக இந்தப்புத்தகங்களை மனப்பாடம் செய்து முடிக்கிறாயோ, அவ்வளவு சீக்கிரமாக உனக்கு விடுதலை கிடைக்கம்,” என்றார். கிழவர் ஒரு விரலை உயர்த்திக்காட்டி, “புரிகிறதா?” என்றார்.
“ஆம்,” என்றேன்.
“வேறு ஏதாவது வேண்டுமா?”
“ஆம், என் அம்மாவும், என் வளர்ப்புக் குருவியும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்து சொல்வீர்களா? அதுதான் எனக்கிருக்கும் கவலை.”
கிழவர் முகத்தை சுளித்தார். “உலகம் தனக்கான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது, தெரிகிறதா?” என்றார். “ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைவுகள், ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் செல்கின்றனர். உன் அம்மாவும் அப்படியே, உன் குருவியும் அப்படியே. எல்லோருக்கும் அப்படியே. உலகம் தனக்கான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.”
அவர் என்ன சொல்கிறார் என்று புரியாவிட்டாலும், அவர் பேசி முடித்ததும் கீழ்படிந்து, “ஆம், ஐயா” என்றேன்.
19
கிழவர் கிளம்பிச்சென்ற சிறிதுநேரத்தில் அந்தப்பெண் வந்தாள். எப்போதும் போலவே, சற்றே திறந்த கதவின் பிறவு வழியே வழுக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்.
“இன்றிரவு அமாவாசை,” என்றேன்.
படுக்கையின் மீது மௌனமாக அமர்ந்தாள். மிகவும் சோர்வுற்றிருப்பவன் போல காணப்பட்டாள். அவளுடைய நிறம் மங்கிவிட்டிருந்தது. முழு உடலும் மெல்லீடாக மாறி, அவளுக்குப் பின்னால் இருந்த சுவர் ஊடுருவித் தெரிந்தது.
<<இது அமாவாசையால்தான்>> என்றாள். <<பல விஷயங்களை இந்தநாள் நம்மிடமிருந்து இழக்க வைத்து விடுகிறது.>>
“இதனால் என் கண்கள்தான் கூசுகின்றன,” என்றேன்.
அவள் என்னைப்பார்த்து அழகாகத் தலையை அசைத்தாள். <<நிலவு உன்னை பாதிப்பதில்லை. அதனால் உனக்கு எந்த சிக்கலும் வராது. நிச்சயமாக நீ தப்பிச் சென்றுவிடுவாய்.>>
“அப்படியானால் நீ?”
<<என்னைப்பற்றி கவலைப்படாதே. நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தப்பிக்க முடியுமாவென்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நான் பின்னால் வந்து சேர்ந்து கொள்வேன்.>>
“நீ இல்லாமல் திரும்பிச் செல்லும் வழியை நான் எப்படி கண்டுபிடிப்பேன்?”
அவள் பதில் அளிக்கவில்லை. பதிலாக அருகில் வந்து என் கன்னத்தில் சின்னதாக முத்தமிட்டாள். பின்னால் நழுவிச் சென்று, கதவுப் பிளவின் வழியே புகைபோல நுழைந்து வெளியேறினாள். ஸ்தம்பித்து, வெகுநேரம் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தேன். அந்த முத்தம் என்னை முற்றிலுமாக உலுக்கியெடுத்துவிட்டதில், எதையுமே தெளிவாக சிந்திக்க முடியாதிருந்தது. அதே நேரத்தில் என் கவலை அனைத்துமே கவலை தவிர்த்த கவலையாக மாறிவிட்டிருந்தது. குறிப்பாக கவலையென்ற ஒன்று இல்லாத எந்தக் கவலையும் இறுதியில் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத கவலையாகத்தான் ஆகிவிடுகிறது.
20
கொஞ்சநேரத்தில் ஆட்டுமனிதன் திரும்பிவந்தான். தட்டில் டோநட்டுகளை உயரமாக அடுக்கி வைத்திருந்தான்.
“ஹேய், என்ன விஷயம்? ரொம்பவும் சோர்வாகத் தெரிகிறாய். உடம்பு சரியில்லையா, என்ன?”
“இல்லை, யோசித்துக் கொண்டிருந்தேன்.”
“நான் கேள்விப்பட்டது நிஜமா? இன்றிரவு இங்கிருந்து தப்பிக்கப் போகிறாயாமே? நானும் கூட வந்துவிடட்டுமா?”
“தாராளமாக, நீங்களும் வரலாம். சரி, உங்களுக்கு யார் சொன்னது?”
“கொஞ்சநேரத்துக்கு முன்னால் தாழ்வாரத்தில் ஒரு பெண் கடந்துபோனாள். அவள்தான் சொன்னாள். நீங்கள் இருவரும் தப்பித்துப் போகப் போவதாகச் சொன்னாள். இந்த இடத்தில் இப்படி ஒரு அழகான பெண் இருப்பது இதுவரையில் எனக்குத் தெரியாது. அவள் உன் தோழியா?”
“அது . . . ம் ம் ம் . . .” என்று இழுத்தேன்.
“ஓஹோ . . . அய்யோ, என்ன அழகு அந்தப் பெண்! இப்படி ஒரு பெண் தோழியாகக் கிடைப்பது அதிருஷ்டம்தான்.”
“ஆட்டு மனிதரே, இங்கிருந்து நாம் தப்பிச்சென்றுவிட்டால், உங்களுக்கு இவளைப்போல எவ்வளவோ அழகான தோழிகள் கிடைப்பார்கள்.”
“ஆஹா, நினைக்கவே இனிக்கிறது. ஆனால் நமது தப்பிக்கும் முயற்சி மட்டும் தோல்வியடைந்துவிட்டால் நாம் இரண்டு பேரும் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரும்.”
“மோசமான விளைவு என்றால், பத்தாயிரம் கம்பளிப்பூச்சிகள் கொண்ட ஜாடியா?”
ஆட்டுமனிதன் சோகமாக, “ஆமாம், அவ்வளவு பெரிய ஜாடிதான் நமக்கு,” என்றான்.
பத்தாயிரம் கம்பளிப்பூச்சிகளோடு நானும் ஆட்டுமனிதனும் ஒரு ஜாடிக்குள் மூன்று நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சியை கற்பனை செய்து பார்த்தபோது முதுகுத்தண்டு சில்லிட்டது. ஆனாலும் சூடான டோநட்டுகளும், அந்தப்பெண் என் கன்னத்தில் பதித்த முத்தமும் பயத்தை கலைப்பனவாக இருந்தன. நான் மூன்று டோநட்டுகளும், ஆட்டுமனிதன் ஆறும் சாப்பிட்டோம்.
“வயிறு காலியாக இருந்தால் என்னால் ஒரு அடி நகர முடியாது,” என்றான் ஆட்டுமனிதன் மன்னிப்பு கேட்கும் தொனியில், வாயோரத்திலிருந்து சர்க்கரைத் துணுக்குகளை அவனுடைய தடித்த விரல்களால் துடைத்துக் கொண்டான்.
21
எங்கேயோ மணி ஒன்பது அடித்தது. ஆட்டுமனிதன் எழுந்து சட்டையின் கைப்பகுதியை பலமுறை தட்டி, உதறிக்கொண்டு ஆட்டு உடையை சரிப்படுத்திக்கொண்டான். நாங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. என் காலில் கட்டப்பட்டிருந்த இரும்புக்குண்டையும் சங்கிலியையும் கழற்றினான்.
அறையிலிருந்து வெளிவந்து மங்கலான இருட்டில் தாழ்வாரத்தில் நடந்தோம். வெறும் காலில் நடக்கும்போதுதான் அவசரத்தில் என் ஷுக்களை அறையிலேயே விட்டுவிட்டது உறைந்தது. அம்மா வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கப் போகிறார். அது மிக அருமையான, தோல் ஷு. பிறந்தநாள் பரிசாக அளித்திருந்தார். ஆனால் இதுவும் நல்லதுக்குத்தான். காலணி சத்தம் கிழவரை எழுப்பிவிட்டிருக்கும்.
அந்த உலோகத்தரையில் நடக்கும்போது என் காலணிகளைப் பற்றி யோசித்துக் கொண்டே வந்தேன். ஆட்டுமனிதன் வழிகாட்டியபடியே முன்னால் சென்றான். அவனைவிட நான் சற்று உயரம் என்பதால் நடக்கும்போது அவனுடைய இரண்டு காதுகளும் என் மூக்கிற்கு எதிரே மேலும் கீழும் குதித்துக்கொண்டே வந்தன.
“ஹே, ஆட்டு மனிதரே,” என்று கிசுகிசுப்பாக கூப்பிட்டேன்.
“என்ன?” அவனும் கிசுகிசுத்தான்.
“கிழவருக்கு காது நன்றாகக் கேட்குமா?”
“இன்று அமாவாசை என்பதால் அறைக்குள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார். ஆனால் எவ்வளவு கெட்டிக்கார ஆசாமி என்று உனக்கே இதற்குள் தெரிந்திருக்கும். ஷுக்களைப் பற்றி கவலைப்படாதே. எப்போது வேண்டுமானாலும் இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம். ஆனால் மூளையையோ, உயிரையோ வாங்கமுடியாது.”
“உண்மைதான் ஆட்டு மனிதரே.”
“இப்போது மட்டும் அவர் எழுந்து வந்து அந்தப் பிரம்புக்குச்சியோடு எதிரே நின்றாரென்றால், அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என்று அர்த்தம். அதன் பிறகு உனக்கு எந்த விதத்திலும் உபயோகரமாக இருக்கமாட்டேன். அவர் விளாச ஆரம்பித்துவிட்டால் நான் அவ்வளவுதான். உடனடியாக பரிபூர்ண அடிமையாகிவிடுவேன்.”
“அந்தப் பிரம்புக்கு அப்படி ஏதாவது விசேஷ சக்தி இருக்கிறதா என்ன?”
“சரியாகச் சொல்லிவிட்டாய்,” என்றான் ஆட்டு மனிதன் ஒரு கணம் யோசித்தான். “அது பார்ப்பதற்கு சாதாரணப் பிரம்பு போலத்தான் இருக்கிறது. ஆனால் என்னவோ தெரியவில்லை.”
22
“அந்தப் பிரம்பைக் கொண்டு உங்களை அடிக்க ஆரம்பித்தால், செயலிழந்து போய்விடுகிறீர்கள், அப்படித்தானே?
“அதேதான். அதனால் உன் ஷுக்களை மறந்துவிடு.”
“அதை நான் எப்போதோ மறந்துவிட்டேன்.”
அந்த நடைவழியில் இன்னும் சற்று தூரத்துக்கு எதுவும் பேசாமல் நடந்தோம்.
பின் திடீரென, “ஹே?” என்றான்.
“என்ன?”
“உன் ஷுக்களை மறந்துவிட்டாய்தானே?”
“ஆமாம், மறந்துவிட்டேன்,” என்றேன். அவனது கேள்வியினால், மறந்துபோன ஷுக்களின் ஞாபகம் மீண்டும் மனதில் புகுந்துகொண்டது.
படிக்கட்டுகள் சில்லிட்டு இருந்தன. ஏறும்போது கால்கள் வழுக்கின. கற்படிக்கட்டுகளின் விளிம்புகள் தொடர்ந்த பயன்பாட்டில் மழுங்கியிருந்தன. அவ்வப்போது பாதத்துக்கடியில் வண்டைப்போல ஏதோ மிதிபட்டுக் கொண்டேயிருந்தது. வெறும் காலோடு கும்மிருட்டில் நடப்பது பெரிய இம்சை. சிலநேரங்களில் காலில் மிதிபடுபவை மெத்தென்று இருந்தன. மிதிபட்டவுடனே ‘பச்சக்கென்று நசுங்கின. சில முறை நறநறவென்று நொறுங்கின. ‘அடச்சே, ஷுக்கள் அணிந்து வந்திருக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டேன்.
கடைசியில் படிக்கட்டுகளின் முடிவில் அந்த இரும்புக்கதவை அடைந்தோம். ஆட்டுமனிதன் சட்டைப்பையிலிருந்து பெரிய சாவிக்கொத்தை எடுத்தான்.
“சத்தமெழுப்பாமல் திறக்க வேண்டும். கிழவர் எழுந்து விடுவார்.”
“ஆமாம்,” என்றேன்.
அவன் ஒரு சாவியை பொருத்தி இடதுபுறமாகத் திருகினான். ‘கச்சங்க்’ என்று பலமாக சத்தம் எழுந்து, கதவு நீளமாக கிரீச்சிட்டபடியே திறந்தது. இதுவா சத்தமெழுப்பாமல் திறப்பது?
“இந்த இடத்திலிருந்து சிக்கலான வலைப்பாதை ஆரம்பித்துவிடும்,” என்றேன்.
“ஆம். இந்தத் திருகுவழி எனக்குக்கூட அதிகம் பரிச்சயம் இல்லை. பரவாயில்லை, சமாளிப்போம்.”
இதைக்கேட்டதும் எனக்குக் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. இதைப்போன்ற வலைப்பாதையில் செல்லும்போது சரியான பாதையில் திரும்பினோமாவென்று கடைசியில்தான் தெரியவரும். தப்பான பாதையில் திரும்பியிருந்தால், திரும்பி வந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு மிகவும் தாமதமாகிவிடும். வலைப்பாதைகளின் பிரச்சனை அதுதான்.
23
எதிர்பார்த்ததைப் போலவே, ஆட்டுமனிதன் பலமுறை தேர்ந்தெடுத்த வழியை புறக்கணித்து, திரும்பி வந்து வேறுவழிகளில் கூட்டிச் சென்றான். இருந்தாலும் எனக்கென்னவோ கடைசி வாசலை மெல்ல, மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வப்போது வழியில் நின்று விரலை சுவரின் மீது ஓட்டிப் பார்த்து, வாயில் வைத்து தீர்க்கமாக யோசித்தான். சிலமுறை கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்து, தரையில் காதை வைத்து கேட்டான். கொஞ்சதூரம் சென்றதும், கூரையில் வலை பின்னியிருந்த சிலந்திகளிடம் தாழ்ந்த குரலில் ஏதோ பேசினான். பல வழிகளாகப் பிரியும் முனைகளில் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு விநோதமான முறையை கையாண்டான். இருந்த இடத்திலேயே வேகமாக பம்பரமாக சுற்றிச் சுழன்றான். சட்டென்ற நின்று எதிரில் இருக்கும் வழியை தேர்ந்தெடுத்தான். அந்த திருகுப்பாதையின் வழியை இப்படித்தான் நினைவுக்கு கொண்டு வரமுடிவதாகச் சொன்னான். ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு இப்படிப்பட்ட உத்தியை எத்தனைபேர் கையாள்வார்கள்?
நேரமாகிக் கொண்டே சென்றது. விடியல் நெருங்கிக்கொண்டே வர, அமாவாசை இருட்டு மெதுவாகத் தளர்ந்து கொண்டிருந்தது. ஆட்டுமனிதனும் நானும் வேகவேகமாகச் சென்றோம் விடிவதற்குள் அடைந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் கிழவர் எழுந்து, தேடிக்கொண்டு வந்துவிடுவார்.
“நம்மால் முடியுமென்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன்.”
“ஆம் சுலபம்தான். இங்கிருந்து கொஞ்ச தூரம்தான்,”
அவனுக்கு இனிமேல் வழி நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். தீர்மானத்தோடு அப்படியும் இப்படியுமாகத் திரும்பித் திரும்பி, நிற்காமல் அந்த நடைவரியில் ஓடினோம். இறுதியில் கடைசி தாழ்வாரம் எதிரே வந்தது. அதன் முடிவில் இருந்த கதவு தெரிந்தது. கதவின் இடுக்கின் வழியே வெளிச்சம் கசிந்தது.
ஆட்டுமனிதன் பெருமையாக, “சொன்னேன், பார்த்தாயா?” என்றான். “வழியை சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.
இனி, அந்தக் கதவைத் திறந்துகொண்டு வெளியே போகவேண்டும். அப்புறம் உனக்கும் எனக்கும் விடுதலை,” என்றான்.
கதவைத்திறந்தான். கிழவர் அங்கே எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
24
அது நான் அவரை முதன்முதலாகப் பார்த்த அதே அறை. நூலகத்தின் அடித்தளத்தில் இருந்த அறை எண் 107. அவரது மேஜைக்குப் பின்னால் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
கிழவருக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய கருப்புநாய் உட்கார்ந்திருந்தது. பச்சை நிறக் கண்களும், நகைகள் பதித்த கழுத்துப் பட்டையும் கொண்டிருந்த நாய். தடிமனான கால்கள். ஒவ்வொரு பாதத்திலும் ஆறு கூர் நகங்கள். காதுகளின் முனைகளில் பிளவுண்டிருந்தது. மூக்கு செம்பழுப்பு நிறத்தில் கன்றிப்போயிருந்தது. பல வருடங்களுக்கு முன் என்னைக் கடித்த அதே நாய். என்னருமை வளர்ப்புக்குருவி அதன் பற்களுக்கிடையில் சிக்கியிருந்தது.
நான் வீறிட்டலறி பின்னால் சாய, ஆட்டுமனிதன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
“வெகு நேரமாகக் காத்துக்கொண்டே இருந்தோம். ஏன் இவ்வளவு நேரம்?” என்றார் கிழவர்.
“ஐயா, எல்லாவற்றையும் உங்களுக்கு விளக்குகிறேன்,” என்று ஆட்டுமனிதன் ஆரம்பித்தான்.
“பேசாதே, முட்டாளே, என்று கிழவர் வெடித்தார். பிரம்பை பின் பாக்கெட்டிலிருந்து உருவியெடுத்து மேஜையின் மேல் அடித்தார். நாய் தன் செவிகளை உயர்த்தி, விறைத்துக்கொண்டது. ஆட்டுமனிதன் வாயை மூடிக்கொண்டான். அறைக்குள் மரண அமைதி கவிந்தது.
“ சரி, உங்கள் ரெண்டுபேரையும் இப்போது எப்படி தீர்த்துக்கட்டுவது?” என்றார் கிழவர்.
“அமாவாசையென்று நீங்கள் நன்றாகத் தூங்கிவிடுவீர்கள் என்று நினைத்தோம்,” என்றேன் ஹீனமாக.
“நீ ரொம்ப கெட்டிக்காரன்தான்,” கிழவர் சீறினார். “இதைப்போன்ற தகவல்களை எங்கிருந்து பெற்றாய் என்று தெரியவில்லை. ஆனால் என்னை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. உச்சிவெயில் நேரத்தில் தர்பூசணிப் பழத்தைக் கண்டுபிடிப்பதைப் போல உங்கள் இரண்டுபேருடைய மனதையும் சுலபமாக என்னால் அறிந்துகொள்ள முடியும்.”
அறை என் கண்முன்னால் இருண்டது.
எனது அஜாக்கிரதை எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. என்னருமை வளர்ப்புக்குருவி கூட இதற்கு பலியாகியிருக்கிறது. எனது நல்ல ஷுக்களை தொலைத்துவிட்டேன். என் அம்மாவை இனி ஏறெடுத்தும் பார்க்க முடியாது.
“உன்னை என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?” கிழவர் பிரம்பை ஆட்டுமனிதனை நோக்கி நீட்டினார்.” உன்னை சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி பூரான்களுக்கு உணவாகப் போடப் போகிறேன்.”
ஆட்டுமனிதன் உடல் முழுக்க விதிர்விதிர்த்தபடி என் பின்னால் பதுங்கினான்.
25
கிழவர் என் பக்கம் திரும்பினார். “என் இளம் நண்பனே, உன்னை என்ன செய்வதாக உத்தேசம் தெரியுமா?” என்றார். “இந்த நாய்க்கு உன்னை தீனியாகப் போடப்போகிறேன். இது உன்னை உயிரோடு கிழித்து தின்னப்போகிறது. மெதுவாக, நிறுத்தி நிதானமாக சாகப்போகிறாய். வீறிட்டு கத்திக்கொண்டே சாகப் போகிறாய். ஆனால் உன் மூளை மட்டும் எனக்குச் சொந்தம். அந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் நீ படித்து முடித்திருந்தால் உன் மூளை நல்ல சுவையோடு இருந்திருக்கும். ஆனாலும் பரவாயில்லை. ஒரு துளி விடாமல் மொத்த மூளையையும் வழித்து சாப்பிட்டுவிடுவேன்.”
கிழவர் பற்களைக்காட்டி கோரமாக சிரித்தார். நாயின் பச்சைக்கண்கள் ஆர்வத்தில் பளிச்சிட்டன.
இதே நேரத்தில்தான், அந்த நாயின் பற்களுக்கிடையில் சிக்கியிருந்த குருவி அளவில் பெரிதாக வீங்கிக்கொண்டே வருவதை கவனித்தேன். ஒரு கோழியின் அளவுக்குப் பெருத்தும் நாயின் தாடைகள் காரின் ஜாக்கிபோல மேலும் மேலும் விரிந்து பிளந்து கொண்டிருந்தன. நாய் ஊளையிட முயற்சிக்கும்போதெ, அதன் வாய் முழுசாக கிழிக்கப்பட்டது. எலும்புகள் உடையும் சத்தம் கேட்டது. கிழவர் திடுக்கிட்டு, பிரம்பை உருவி குருவியின்மேல் வெறித்தனமாக அடிக்கத் தொடங்கினோம். ஆனால் குருவி தொடர்ந்து பெருத்துக் கொண்டே வந்தது. எருதின் அளவுக்குப் பெரிதாகியது. கிழவரை சுவரோடு சுவராக வைத்து அழுத்தியது. அச்சிறிய அறை முழுக்க வலுவான சிறகுகள் படபடக்கும் சத்தம் நிரம்பியது.
<<ஓடு. இதுதான் உனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு>> என்றது குருவி. இது அந்தப் பெண்ணின் குரல்.
“நீ எப்படி தப்பிப்பாய்?” என்றேன் பெண்ணாக இருந்த அக்குருவியிடம்.
<<என்னைப்பற்றிக் கவலைப்படாதே. நான் பின்னாலேயே வந்துவிடுவேன்>>
நான் தயங்கினேன்.
<<சீக்கிரம். இப்போது வேகமாக ஓடாவிட்டால், ஒருபோதும் தப்பிக்கவே முடியாது,>> என்றது பெண்ணாக இருந்த குருவி.
அவள் சொன்னபடியே செய்தேன். ஆட்டுமனிதனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அறையைவிட்டு ஓடினேன். திரும்பிப் பார்க்கவேயில்லை.
அது அதிகாலை நேரம். நூலகம் வெறிச்சோடியிருந்தது. படிகளைத் தாவி மையக்கூடத்தைக் கடந்து, வாசிப்பறையின் சன்னலை அடித்துத் திறந்து வெளியே குதித்தோம். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி பூங்காவை அடைந்து, புல்தரையில் தொப்பென்று விழுந்தோம். கண்களை மூடி, மூச்சிரைக்க அப்படியே கிடந்தோம். கொஞ்ச நேரத்துக்கு நான் கண்களையே திறக்கவில்லை.
கண்ணைத்திறந்தபோது, ஆட்டுமனிதனை காணவில்லை. எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தேன். அவன் பெயரை அடித்தொன்ணடையிலிருந்து கத்தி கூப்பிட்டேன். பதிலே இல்லை. காலைச் சூரியனின் முதற்கிரணங்கள் மரங்களின் இலைகளை ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தன. ஆட்டுமனிதன் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மறைந்துவிட்டிருந்தான். அதிகாலைப் பனி ஆவியாவதைப் போல.
26
வீட்டை அடைந்தபோது அம்மா எனக்காக உணவு மேஜையில் சூடான காலை உணவை தயாரித்து எனக்காக காத்துக்கொண்டிருந்தார். என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏன் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்கு வரவில்லை, கடந்த மூன்று நாட்கள் இரவு எங்கே தங்கினேன், எங்கே எனது ஷுக்கள்-ஒரு கேள்வியும் கேட்கவில்லை. திட்டவும் இல்லை. இது அம்மாவின் இயல்பே அல்ல.
என் வளர்ப்புக் குருவியைக் காணவில்லை. காலியான கூண்டுதான் இருந்தது. என்ன நடந்தது என்று நானும் கேட்கவில்லை. இந்த விஷயத்தை எடுக்காமல் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். அம்மாவைப் பார்க்க சற்று கருத்திருப்பதைப் போல இருந்தது. அவரைச் சுற்றி ஏதோ நிழல்கள் சூழ்ந்திருப்பதைப்போல. ஆனால் இது என் கற்பனையாகக்கூட இருக்கலாம்
அதற்குப்பிறகு அந்த நகர நூலகத்துக்கு நான் செல்லவேயில்லை. இந்த இடத்தை நிர்வகிக்கும் பெரிய மனிதர்களிடம் எனக்கு நடந்ததைப் பற்றியும், நூலகத்தின் அடித்தளத்துக் கீழே பாதாளச்சிறை இருப்பதைப்பற்றியும் நான் சொல்லியிருக்க வேண்டும் என்றே நினைத்தேன். இல்லாவிட்டால் நான் அனுபவித்ததைப் போல இன்னொரு குழந்தைக்கும் நடக்கலாம். ஆனாலும் அந்திக்கருக்கலில் அந்த நூலகக் கட்டிடத்தைப் பார்க்கும்போதே, என் கால்கள் அதை நோக்கி நகராமல் ஸ்தம்பித்துவிடும்.
அடித்தளத்தில் விட்டுவிட்டு வந்த அப்புதிய தோல் ஷுக்களைப்பற்றி அவ்வப்போது நினைப்பேன். உடனே அந்த ஆட்டுமனிதன், குரலில்லாத அந்த அழகிய பெண் ஞாபகங்கள் தொடர்ந்து வரும். அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இருட்டு.
அமாவாசை இரவைப்போல கும்மிருட்டு.