நடனத்திற்கு பிறகு – இரு தளங்களின் கூடல்.

அன்றாட வாழ்வில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் எம்மை சென்றடைகின்றன என்ற சிறிய கேள்விக்கான விடையின் பரப்பு மிகப்பெரியது.எந்த வாழ்வில் நாம் இருந்துகொண்டிருக்கிறோமோ அந்த வாழ்வியலில் உள்ள அக புறக் கூறுகள் எம்முள் செலுத்தக்கூடிய ஆதிக்கத்தின் அளவை ஆராய்தல் மிக முக்கியமானது. புறக்கூறுகளும் அத்தியாவசியமான ஒன்றே இருந்தும் அக்கூறுகள் செலுத்தக்கூடிய நுட்பமான நகர்வுகளை புறக்கூறுகள் நடத்திவிட முடியாது. மிகச் சிறிய நிகழ்வுகளில் இருந்து பெரும் படியான நிகழ்வுகள் வரை அதன் அகக்கூறுகள் கொண்டிருக்க கூடிய கனதியினை புறக்கூறுகள் கொண்டிருக்குமா என்பது சந்தேகம். இவ்வளவு கனதியான அகக்கூறுகள் எம்முள்ளே ஏற்படுத்துகின்ற உளவியல் மாற்றங்கள் பற்றி பேசுவதே நடனத்திற்கு பிறகு என்ற டால்ஸ்டாயின் சிறுகதை.
 
நாவல்களில் தனக்கான நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட டால்ஸ்டாயால் சிறுகதைகளில் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை, என்ற குறையை போதுமானவரை நிரப்பிக்கொள்வதற்கு சான்றாக இந்த சிறுகதையை குறிப்பிடலாம். இந்த கதை அவரின் சிறுவயது அனுபவத்தின் வெளிப்பாடாகவே அவரின் 75வது வயதில் எழுதப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாய் பெரும்பாலும் தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் குறிப்புகளாக்கி வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர். அவற்றிக்கு சிறு புனைவுகளை சேர்த்து நாவல்களாயும் சிறுகதைகளாயும் எழுதுகின்றவர். சுந்தர ராமசாமி குறிப்பிடுவார்,” பெரும்பாலான காலம் கடந்து வந்திருக்கின்ற எழுத்துக்கள் எல்லாமுமே அனுபவங்களின் குறிப்புகள் தான்.”  மற்றவை எல்லாம் மின்னல் போல பளிச்சிட்டு மறைந்துவிடும் , அனுபவங்கள் வானத்தை போல நீள அகலமற்ற நிலவுகையை உடையவை.
 
ஆழ்ந்த அனுபவமுள்ள எழுத்தாளனாக கருவினை விடய சித்தரிப்புக்கள் மூலம் அணுகுகின்ற யுக்தியை இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. நடனத்தின் பின் என்ன என்ற தேடலை உருவாக்குகின்ற காதல் கலந்த அக்கால சூழ  பின்னணியிலேயே கதையின் தளம் அமைகின்றது.
 
இந்த சிறுகதை இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளில் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. இரவிரவாக சந்தோசமாக ஆடப்பட்டு முடிந்த mazurka என்ற நடன இரவொன்றை பற்றியும் அடுத்தநாள் காலை வன்மையாக தாக்கப்பட்டு இராணுவத்தால் இழுத்துவருகின்ற தாத்திரியன் பற்றியும் வெவ்வேறு உணர்வு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பொதுவானவர்கள் கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் உம் முதல் நாள் இரவு அவருடன் நடனமாடிய வரிங்கா என்ற உயர்குலப்பெண்ணின் தந்தை ஆவார்கள். வரிங்காவின் தந்தையார் ராணுவத்திலே உயர்பதவிவகிக்கின்றவர். இவர்கள் இவரோடு முதல் நாள் இரவு வரிங்கா அடுத்தநாள் காலை தாத்திரியன் என நான்கு முக்கிய பாத்திர வார்ப்புகள் இருக்கின்றன.
 
முதல் நாள் இரவில் பிரமாண்ட விருந்துபசாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கூடவே mazurka என்ற போலந்தில் ஆரம்பமான ஆடற்கலையும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. அந்த விருந்து தான் கதைசொல்லிக்கும் வரிங்கா என்ற இளம் அழகிய மாதுக்குமான காதல் உருவாகிய புள்ளியாகும். அத்தனை வருட மொழி அனுபவமும் திரண்டு அந்த நடனத்தின் எழிலையும் இவான் வாசிலியேவிச் மற்றும் வரிங்காவின் காதலையும் கொண்டாடிக்கொண்டிருந்தது. அணுவணுவாக அங்க அசைவுகளையும் இருவருக்குமான ஒருங்கிணைப்பையும் ஒரு பூவின் இதழ் மேலே விழுகின்ற பனித்துளியினை போல வர்ணித்துக்கொண்டு செல்வார். காலம் ஆக ஆக இவான் வாசிலியேவிசின் காதல் ஆற்றாமை எழுகின்ற வீரியமும் இருவரும் நடனத்தின் முடிவில் பிரிந்து சென்றதும் இவான் வாசிலியேவிச் வரிங்காவை நினைத்து உழல்வதும் சொற்களோடு உணர்வுகளையும் கடத்திக்கொண்டு செல்கின்றது. இது ஒருபுறம் செல்ல இன்னொருபுறம் அதே இரவில் தந்தை மகளுக்கான உணர்வுகளை அதே பொறுமையுடன் டால்ஸ்டாய் விவரிக்கின்றார். தன் மகளின் விருப்பத்திற்கு இணங்க தனக்கு பொருத்தமில்லாத காலணியை அணிந்து கொள்ளும் தந்தையாக  காட்டப்படுகிறார். அந்த இரவை அதோடு முடித்து விடாமல் நீட்சியாக்கி இவான் வாசிலியேவிச் வீடு சென்று காதல் வழியால் துடிப்பதாகவும் காலை அவளை நேரில் சென்று சந்தித்தேஆக வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தி அடுத்த நாள் நிகழ்விற்கு நிகழ்வு கோர்ப்பை ஏற்படுத்துகிறார்.
 
முதல் நாளில் இருவேறு விதமாக காதல் என்ற மென்மையான உணர்வுநிலையை வெளிக்கொண்டுவந்த டால்ஸ்டாய் ஒரே இரவில் வாசகரின் உணர்வு போக்கை மாற்றி விடுகிறார். அன்பை உருகி கொட்டிக்கொண்டிருந்த எழுத்துக்கள் செந்தழல் போல கடுமையாகிப்போனது. காலையில் வரின்க்காவை பார்ப்பதற்க்கு வீதியில் இறங்கிய இவான் வாசிலியேவிச்க்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதுவரை ஒரு மிக சிறந்த தந்தையாக தெரிந்த வரிங்காவின் தந்தை ஒரு கொடூரமான ராணுவஅதிகாரியாக தெரிகின்றார். தாத்திரியனை ஈவுஇரக்கமின்றி தாக்குகின்ற அணியை வழிநடத்தும் கொடூரனாக காணப்படுகின்றார். அவ்விடங்களில் டால்ஸ்டாய் அன்றைய ரஸ்சியன் சமூகத்தினுள் விதைந்து கிடந்த சாதியத்தை எடுத்தாளுகிறார். உணர்வு ரீதியில் ஒரு தாத்திரியனுக்கும் உயர்குல இராணுவ அதிகாரிக்குமான முண்டல் இதில் பேசப்படுகின்றது. இதையெல்லாம் கண்ணுற்ற இவான் வாசிலியேவிச் தன் காதலை அதோடு முடித்து கொண்டு அரச வேலைக்கு இனி சேரப்போவதில்லை என்ற முடிவுடன் வீடு திரும்புகிறான். இதோடு கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் தன் அனுபவத்தை முடித்துகொள்கிறார்.
 
முதல் இரவில் பிரமாண்டமாகவும் ஆழமாகவும் ஆத்மாத்தமாகவும் கருதப்பட்ட காதல் இரண்டாம்நாளில் இடமற்றுப்போகின்றது. ஒரு ஆழமான உணர்வின் நிலவுகை நிரந்தரமானது இல்லை. சந்தர்ப்பங்கள் திசைதிருப்பக்கூடியன என்ற ஆழமான கருத்தியலை விதைக்கின்றது. வரிங்காவின் தந்தையின் உண்மை முகம் இராத்திரி விருந்தில் இருந்ததாகவும் அவரின் பணியே இந்த கடுகடுப்பான நிலைக்கு அவரை உருமாற்றியதாகவும் இவான் வாசிலியேவிச்நினைத்து அரசவேலையை வெறுத்திருக்கலாம். ஆனால் அவனின் தீராத காதல் தாகம் சில நொடிகளுக்குள் வற்றிப்போனதிற்கான காரணத்தை தேடிய வாசகரை கொண்டு செல்கிறது நடனத்திற்கு பிறகு. இவான் வாசிலியேவிச் ஏற்பட்ட உணர்வு நிலை போராட்டத்தில் மேலோங்கிய தடுப்புகள் அவன் ஆழமற்ற உணர்வுகளை உந்தி வெளியேற்றியிருக்க கூடும் என்றே எண்ண தோன்றுகின்றது. இப்படியான நுண்ணிய நகர்வுகளுடன் செல்வது தான் வாழ்க்கை என்ற யதார்த்தமான பார்வையையும் வாசகனுக்கு கூறிச்சென்றிருக்கின்றது.
 
After the dance ஐ ஆங்கிலத்தில் வாசிக்க
https://ebooks.adelaide.edu.au/t/tolstoy/leo/after_the_dance/

என் சில இரவுகளின் கள்வனுக்கு பிறந்தநாள்.

வாசிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பல எழுத்தாளர்கள் அவர்களின் ப்லோக்ஸ் மூலமாகவே அறிமுகமானார்கள். அவர்களில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர். வாசிக்க தொடங்கிய காலத்தில் யார் எவர் என்று இல்லாமல் எல்லோரையும் தின்றுகொண்டிருந்தேன். இன்றும் கூட. எஸ்.ரா இன் படைப்புக்களில் ஆரம்பத்தில் வாசிக்க தொடங்கியது அவரது சிறுகதைகள். அவரது சிறுகதைகள் வாசிக்க எளிதாகவும் , விளங்கிக்கொள்ள சிரமம் அற்றதாகவும் இருந்ததால் என்னை ஈர்த்துக்கொண்டது. அவரது ப்ளோகில் இருக்கின்ற பெரும்பாலான சிறுகதைகளை ஒரே இரவில் வாசித்து முடித்தேன். கதையின் கருவை வாசகனுக்கு விளித்துக்கூறுவதில் எஸ்.ரா மிக திறமையானவர். அப்போது உயிர்மெய் இதழில் வெளியான சீட்டாட்டம் என்ற சிறுகதை தான் எனக்கும் அவருக்குமான முதல் தொடர்பு. இதை அவரது ப்ளோகில் பிரசுரித்திருந்தார். அதற்கு பின்னரான இரவில் தான் அவரின் சிறுகதை உலகிற்குள் சஞ்சரித்திருந்தேன். நாக்கு வலிக்காமல் கண் நோகாமல் அனைத்தையும் வாசித்து முடித்தேன். எல்லா கதைகளிலும் எஸ்.ரா என்னும் கதைசொல்லி என்னூடே இருந்துகொண்டிருந்தார். அப்படி அன்னியோன்யமாக கதைகள் இருந்தன.

சில நாட்களிலேயே அவரது உரைகள் காணொளியாக பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தனது கதைகளை பற்றியும் சமகால எழுத்தாளர்கள் பற்றியும் உலக இலக்கியங்கள் பற்றியும் குறிப்பாக ரஸ்சியன் இலக்கியங்கள் பற்றியும் அவர் ஆற்றிய உரைகள் என்னுள் கருத்தியல் பலவற்றை உருவாக்கியது. மிக முக்கியமாக ரஸ்சியன் இலக்கியங்களை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் எஸ்.ரா . அவர் பரிந்துரைத்த அனைத்து கதைகளையும் நாவல்களையும் குறிப்பெடுத்துக்கொண்டு ஒன்றொன்றாய் வாசித்து முடித்தேன். அதன் பின்னராக அவரின் நாவல்களுக்குள் நுழைந்துகொண்டேன். ஆரம்பத்தில் யாமம் , உபபாண்டவம் ,ஏழு தலை நகரம் போன்றவற்றை வாசித்தேன். எதற்குமே நோகாமல் அவரின் நாவல்கள் இருந்தன. வாசிப்பில் களைப்பு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. அதனாலே தொடர்ந்து தேடத்தொடங்கினேன். கதாவிலாசம், துணையெழுத்து , அன்னா கரீனினா, தேசாந்திரி,என்றார் போர்ஹே கட்டுரைகள் போன்ற நாவல் கட்டுரை தொகுப்புகளை வாசித்தேன். லத்தீன் அமரிக்கா எழுத்தாளர்கள் பலரின் அறிமுகம் சாரு நிவேதிதாவால் கிடைத்திருந்தாலும் , அந்த இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்தவர் இவரே.
இன்று எஸ்.ராவை வாசிக்கும் போது எழுத்தின் மீள்மை தென்படுகிறது ( Repetitive Writing).தன்னை சார்ந்தோரை வலிந்து எழுதுகின்ற பழக்கம் இவருக்கு பின்னடைவே. இருந்தும் இன்றும் அவரின் எழுத்துக்கள் காயப்படுத்தாதவையாகவே இருப்பது ஆச்சரியமே. எஸ்.ரா என்னும் ஆளுமை என்னால் எந்நாளும் நினைவுகூறக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர். இன்று பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்கள்.

Home-2

ரிஷி வனம். – சிறுகதை

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்பிடியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலை படித்து முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன். வாகரை என்ற ஊரின் சுவாசம் ஆயிரத்து தொள்ளாயிரம்களிலேயே நின்று விட்டதாக பல்கலையில் இருக்கும் போது கிடைத்த சில புத்தகங்களில் இருந்து அறிந்து கொண்டேன். அந்த அறிதல் என்னுள் இனம்புரியாத வேட்கையை உருவாக்கியிருந்தது . அதுதானோ என்னமோ என்னை இப்போது இங்கு சடலமாய்ப்போன ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. சொந்தங்கள் என்று பாடசாலை பல்கலை நண்பர்கள் மட்டும் தான். அன்னை தெரேசா இல்லத்தில் நினைவு தெரிந்த நாளில் இருந்தேன். அது தான் என் வீடு , குடும்பம் எல்லாம். நான் பல்கலை அனுமதி பெற்ற போது என்னை மகனாய் வளர்த்த தாய் , ” நீ பிறந்த குழந்தையாக இருந்த போது எங்கள் இல்லத்திற்கு ஒரு எண்பது மதிக்கதக்க ஒரு ஆச்சியால் கைத்தாங்கலாக கொண்டுவரப்பட்டாய். அளவான உடல் வாகு உடையவனாயும் மா நிறத்திலும் இருந்தாய். உன்னை நிர்வாணமாகவே கொண்டுவந்திருந்தாள். உன்னில் தாய்ப்பால் வசமே வீசவில்லை. எங்களிடம் உன்னை ஒப்படைத்தவள் நீ வாகரைக்கு வந்து சேர்வாய் என்றுவிட்டு சென்றாள். நீ இப்படி……” என்று வாழ்த்து சொன்னார்.
பின்னரும் நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அன்றைய தினம் நூலகத்தில் வாசித்த அந்த குறிப்புகள் தான் என் வேட்கையை தூண்டியது. இதோ இப்போது செம்மண் பரவிய வாகரையை  நோக்கிய குறும் பாதை ஒன்றினூடாக நடந்து சென்றுகொண்டிருக்கிறேன். இரண்டு கிழமைக்கான உடைகள் , பொருட்கள் மற்றும் லியோ டால்ஸ்டாயின் Resurrection என்ற நாவல்   எல்லாம் பொதி செய்து முதுகில் ஒன்று கையில் ஒன்றாய் பைகளில் ஏந்திக்கொண்டு என் நீண்ட கேசம் வீசிய காற்றில் காதின் மடல்களை முத்தமிடுவதை உணர்ந்தவனாய் பின்னேரம் ஐந்து மட்டில் நடந்துகொண்டிருக்கிறேன். வானம் காவி கட்டிக்கொண்ட மாதிரி மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. இதனால் என் நடையை வேகமாக ஆக்கிக்கொண்டேன். காற்றும் அதிகமான பலத்துடன் வீசியதில் என் கேசம் ருத்த்ரதாண்டவம் புரியத்தொடங்கியது. வலது நீள் காற்சட்டை  பைக்குள் கையை விட்டு தலைப்பட்டியை எடுத்து கேசத்தின் தாண்டவத்தை அடக்கி கொண்டேன். நீள் பார்வையில் வீதியில் எந்த மனித நடமாட்டமும் இல்லை. காட்டு பூனையும் மர அணிலும் குருவிகளும் போடும் சத்தம் தலைப்பட்டியினை கடந்து காதை குளிர்ச்சியாக்கியது. இசையின் வேறொரு பரிமாணத்தில் சங்கமிப்பதாய் ஒரு உணர்வு மேலிட்டது.
எந்த முன்னறிவும் இல்லாமல் யார் எவர் ஊருக்குள் இருப்பார்கள் என்று தெரியாமல் மனிதர்கள் இருப்பார்களா என்றே தெரியாமல் , பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன் வாகரை செல்வதற்காக. யாரையும் விசாரிக்க மனத்திராணி இல்லாமல் பேருந்து பெயர்ப்பலகைகளாக தேடித் தேடி சுற்றினேன். கண்ணில் வாகரை என்ற பெயர் தென்படவே இல்லை. பேசாமல் திரும்பி விடலாம் என்றிருந்த போது தான் அந்த பெயர்ப்பலகை ” மண்ணுர் – வாகரை – தேனுக்கும் ” தென்பட்டது. அந்த நொடியே பேருந்துக்குள் தாவிக்கொண்டேன். ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டார் நடத்துனர். ஆனால் ரசீது தரவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. ஜன்னலோரம் இருந்து கொண்டு கண்ணயர்ந்தேன். அந்த சிறு பாதையின் அருகில் வைத்துதான் நடத்துனர் வாகரை வந்துவிட்டதாக என்னை உலுப்பிச்  சொன்னார்.
கடந்த இருபது நிமிடங்களாக நடந்து கொண்டே இருக்கிறேன், இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் நடப்பேன். இருள இருள மனதில் பயம் தொற்றிக்கொண்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பழகிப்போன பாதையும் காற்றுமாய் இருந்த உணர்வு பயத்தின் வலுவை குறைத்தது. நான் களைத்து விடவில்லை இருந்தும் வீசிய காற்று என்னை மோதி கடந்து செல்லும் போது என் சக்தியின் அனுவளவினை உறிஞ்சி செல்வதை உணர்ந்தேன். நீண்ட கோடு போன்ற பாதை முடிவிற்கு வந்து இடப்பக்கமாக வளைந்ததது. அடுத்த அடியினை இன்னும் பலமாக எடுத்து வளைவினில் திரும்பினேன். என்னால் என் கண்முன்னே விரிந்திருந்த காட்சியை நம்பமுடியாமல் இருக்கின்றது. வியப்பில் அடுத்த அடியினை வைக்க முடியாமல் , வைக்க சக்தி இல்லாமல் எல்லா சக்தியும் அந்த முடக்குடன் முடிந்து விட்டதாய் இருந்தது. முடக்கின் இடது கரையோரம் பெரிய நீளமான உருண்டை மர குற்றியை அடியாய்க்கொண்டு இரண்டு கப்புகளில் தாங்கியபடி ஒரு பெயர்ப்பலகை வாகரை என கறுப்பு சாயத்தால் எழுதப்பட்டிருந்தது. வாகரை என எழுதியிருந்த எழுத்துருவில் வடிவமே ஏதோ ஒருவகையான சோகத்தை விளித்துநின்றது. மேலும் நடக்க முடியாதவனாய் அந்த நீளமான உருண்டை மரக்குற்றியில் இருந்தேன். இருட்டு மேலும் மேலும் வலுப்பெற்றது. இனியும் இருந்தால் சரிவராது என்று எண்ணிக்கொண்டு நகரத்தொடங்கினேன். வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்களும் சோலைகளுமாய் காட்சியளித்தது. பழைய வடிவமைப்பில் கட்டப்பட்ட இரண்டு மாடிவீடுகளும் ஓலையால் வேயப்பட்ட மாட்டு குடில்களும் நாய்களும் , புறாக்களும் , கோழிகளுமாய் முற்றிலும் முந்தைய நூற்றாண்டின் நெடி வீசியவண்ணம் அமைந்திருந்தது.
முன்னால் கொட்டகை இறக்கி நன்றாக பழுத்த கதலி ,கப்பல் மற்றும் சீனி வாழைக்குலைகள் தொங்கவிடப்பட்டிருந்த கடை ஒன்றின் அருகில் செய்யப்பட்ட குந்தின் மேல் பைகளை வைத்து விட்டு கடைக்குள் சென்று என்னைப்  பற்றியும் வாகரையை நான் அறிந்திருந்த விதம் பற்றியும் விளக்கினேன். கடைக்காரர் அடர்த்தியான பூச்சு மீசையும் மழித்த தாடியும் சுருட்டை முடியுமாய் சரத்துடனும் பெனியனுடனும் என்னை நோக்கி திருதிரு என விழித்தார். அவர் முக பாவனையே எதுவுமே தெரியாதவர் என்பதை காட்டியது. அவர் இங்கிருந்து நான்காம் வீட்டை சுட்டி காட்டி அங்கே விசாரிக்குமாறு கூறினார். தான் கிராமம் வந்து சில காலம் தான் என்றும் அவர்கள் வம்சம் வம்சமாய் இங்கேயே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே நான் பைகளை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கி விட்டேன். அவர் காட்டிய வீடு வெகு தூரத்தில் இல்லை. நூறு காலடிகளில்  அடைந்து விட்டேன். சிறிய சிறிய மரகப்புகளால் நேர்த்தியாக ஒரு கோபுரம் போல அடுக்கப்பட்டிருந்தது அந்த வீட்டின் கதவு. இரவாகி இருந்தமையால் வெளியில் நின்றே உள்ளிருப்பவர்களை கூவினேன். முதல் கூவல் ……. இரண்டாம் கூவல் ……. மூன்றா……. வீட்டின் கதவு திறக்கப்படுவதை உள்ளிருந்து வந்த பிரகாசமான மின்குமிழ் வெளிச்சம் காட்டியது. ஒரு பெண் மெதுவாக நடந்து  வெளிக்காதவின் அருகில் வந்து விசாரித்தாள். வெளிச்சம் குன்றியிருந்தமையால் சரியாக அவளை இனம் காண முடியவில்லை. விவரத்தை விளம்பினேன்.
அவள் முகத்தில் புன்சிரிப்பு மலர்வதைப்போல் உணர்ந்தேன், அவள் என்னை வீட்டிட்குள் அழைத்து சென்றாள்.அவளின் வீடுதான் நான் அந்த வீதியில் கண்ணுற்ற ஒப்பீட்டளவில் சிறியது. நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்த வீட்டின் மேற்பக்கம் ஓட்டினால் அடுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிற பூச்சு கொஞ்சமும் அழுக்குறாமல் மழையால் தெறித்த செம்மண் தடங்கள் வெண்சுவற்றின் கீழ் விளிம்புகளில் கோலம் போட்டது மாதிரி தெறித்திருந்தது. என் உயரத்திற்கு ஏற்றாற்போல் மேல்முனை வளைந்த வாசலினூடாக அவளின் பின்னால் தாயை பின்தொடரும் குழந்தைபோல பின் தொடர்ந்தேன். நீண்ட செவ்வக வடிவ வரவேற்பறையில் அடுக்கப்பட்ட ஆறு கருங்காலி மரத்திலான கதிரைகளில் தனிக்கதிரை ஒன்றைக்காட்டி அமருமாறு பணிவாக வேண்டினாள்.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த அவளது முகம் கட்டித் தயிரைப்போல திட்டு திட்டாக வெளிறிப்போய் இருந்தது. உருண்டைக்கன்களும் வரம்புக்கு மீறிய இமைப்பரம்பலும் அவள் முகத்தை இன்னும் விகாரப்படுத்தியது. எல்லாவற்றிக்கும் மேலாக அவளது கறுத்த பொங்கிய உதடுகள் , சுருட்டு பிடித்து பிடித்தே வறண்டு போய் இருந்தது. இதெல்லாம் எனக்கு  வியப்பூட்டுவனவாக இல்லை. பைகளை கழட்டி இன்னொரு மரக்கதிரையில் வைத்துவிட்டு நான் அருகில் இருந்த கதிரையில் இருந்தேன் . அவள் என்னை  காத்திருக்குமாறு கூறிவிட்டு வீட்டின் அறை ஒன்றிற்குள் விரைந்தாள். கதவு திறக்கையில் அது சமையலறை என்பதை நான் ஊகித்திருந்தேன் . உடல் சோர்வுற்றிருந்த நான்  கால்களையும் கைகளையும் நீட்டி மூலி முறித்துக்கொண்டேன் . மனத்தால் உற்சாகமாக இருந்தாலும் உடலில் வலுவற்று போய் இமைகள் கண்களை மூடி என்னை தூக்கம் ஆட்கொண்டது. திடீர் என்று தூக்கத்தை அடித்துக்கலைத்தால் போல் தென் மேற்கு சுவரில் தொங்கியிருந்த ஒரு மூதாட்டியின் நினைவுப்படம் என் கண்களை கூசியது, அப்படத்திலிருந்து ஏதோ ஒரு ஒளிக்கீற்று என் உடல் முழுக்க பரவியது. அம்மூதாட்டி என்னை உற்று நோக்குவது போலவே காட்சியளித்தாள். இருந்தும் விரைவாக என்னை சுதாகரித்து கொண்டு பார்வையை நகர்த்தினேன். அந்த பெண் அம்மூதாட்டியின் பேத்தியாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.அந்த மூதாட்டியின் படத்துடன் இன்னும் பலரின் நினைவுப்படங்கள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்தின் வண்ணமும் அவர்கள் வாழ்ந்த காலத்தினை குறிப்பிட்டு காட்டின
சில நிமிடங்களிலேயே அந்த பெண் ஒரு வெள்ளி கோப்பையில் ஆவிபறக்க தேநீர் தந்தாள். இரண்டாவது வாய் கோப்பையில் வைக்க மீண்டும் இன்னொரு அறைக்குள் நுழைந்தாள். தேத்தண்ணீர் அவ்வளவு சுவையாக இருந்தமையால் அது என்ன அறை என்பதை ஆராய்ச்சிக்குட்படுத்தவில்லை. கொஞ்ச தேநீர் மீதமிருக்க அவள் கையில் ஒரு திறப்பு  கோர்வையுடன் வந்தாள். தேநீரை முடித்து விட்டு கதிரைக்கால் ஒன்றின் அருகில் வைத்து அவளை நோக்கினேன். அவள் ஒன்றும் பேசாமல் என் எதிரே இருந்த கதிரையில் வந்திருந்தாள்.  குரலில் கொஞ்சம் கவலை கூடியதாக இருக்க ,” இங்கேருங்கோ எசமானே , அந்த போட்டோவில இருக்கிறது எங்க ஆச்சி , அம்மாள்ட அம்மாள். எங்கம்மாள் அய்யாவோட ஊருக்கு போயிருக்குது.நான் மட்டுந்த்தான் இருக்கேன் இப்ப வீட்டுல, ” என்பதற்குள் நான், “எஜமானா? நானா ? ” என கூறினேன்.
” ஆமாங்க எசமான் , எங்க ஆத்தாளுக்கு ஆச்சியும் எனக்கு எங்க ஆத்தாளும் கத்துத்தந்த படி நீங்க தான் எங்க எசமான். உங்களுக்கு இங்கிட்டு ஒரு பெரிய விலாஸ் இருக்கு. கொஞ்ச தள்ளி.ஆச்சி காலத்தில இருந்து நாங்கதான் அத துடச்சு காத்துட்டு வாறம், ஒவ்வொரு நாளும் அங்க போயி நான் எல்லா சுமையும் செய்திட்டு வருவன். நீங்க வருவியல் எண்டு காலம் காலமா காத்திட்டு இருக்கம். வாங்க எசமான் போவம் ” என்று முடித்துக்கொண்டு எழுந்தாள். எழுந்தவள் திடுக்கிட்டு ” சேர் , மை நேம் இஸ் ………” என்று தன்னைப்பற்றி விபரித்தாள், அவள் கூறிய எதுவும் வியப்பளிக்கவில்லை , கூறிய விதம் தான் வியப்பளித்தது. முன் பேச்சுக்கும் பின் பேச்சுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி தெரிந்தது. எதையும் காட்டிகொள்ளாதவனாய் மனதிற்குள் சிந்தனை அலைகளை படர விட்டேன்.
“ஷால் வி கோ ? ” என்றாள்.
திடுக்கிட்ட நான் போலாமே என்ற பாவனையுடன் பைகளை எடுத்து மாட்டிக்கொண்டேன்.என்னிடம் இருந்த கைப்பையை வலோத்காரமாய் ஏந்திக்கொண்டாள்.அவளின் பேச்சில் இருந்த முரண் என்னை திகைக்க வைத்தது. இருந்தும் என் வீட்டைப்பார்க்க போகிறேன் என்ற எண்ணமே அதிகம் இருந்ததால் பெரிதாக நான் அதை பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
இருட்டில் வாகரை மறைந்து போய் இருந்தது. அழகிய பெண்ணின் நுதல் போன்று நிலா காட்சி அளித்தது. இடையே முகில் கூட்டம் மறைத்ததால் அவளின் நுதல் போன்று சிதைந்திருந்தது. அந்த வாழைக்குலை கடை சாத்தப்பட்டிருந்தது. தூரத்து மின் ஒளியில் தெரிந்த மரங்கள் எல்லாமே என்னை வரவேற்பது போல மெல்லிய காற்றுக்கு அதன் இலைகளையும் கொப்புகளையும் மெலிதாக ஆட்டிநின்றன. அவள் என் முன்னால் நடக்க தொடங்கினாள். நானும் கூடவே வீதியில் இறங்கி நடந்தேன். நடக்கும் போது வெளிச்சத்துக்காக அவள் ஒரு லாந்தரை எடுத்துக்கொண்டு வந்தாள். நான் எனது தொலைபேசியில் இருந்த விளக்கினை பிடித்துக்கொண்டு நேரத்தை உற்று பார்த்தேன். மணி எட்டை காட்டியது. லாந்தர் விளக்கின் ஆட்டத்தில் அவள் நிழல் அங்கேயும் இங்கேயுமாக ஆடிக்கொண்டிருந்தது. தொலைபேசி வெளிச்சத்தில் என் நிழல் சீராக பின்தொடர்ந்து.
இடையே அவளின் பெயரை விசாரித்தேன்.
” நூத்தாயி …..”
இதயம் நின்று போனது.
” அஞ்சலி… ”
திருத்திக்கொண்டாள் . மெதுவாக என்னை திரும்பி பார்த்து புன்முறுவல் செய்தாள். லாந்தரின் மங்கிய ஒளியில் அவளின் முகம் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை புலப்படுத்தியது. இருந்தும் அங்கு வீசிய காற்றும் அந்த நிலவொளியும் எனக்கு பழகிப்போன ஒரு சூழலை ஞாபகப்படுத்தியதால் எதையும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
கொஞ்ச தூரம் நடந்து போயிருப்போம். களைப்பு அதிகமானது. கால்களில் ஆணி குத்துவது போல குதிக்கால் எலும்பு குத்த தொடங்கியது. நான் தொலைபேசி வெளிச்சத்தில் சுற்றி இருக்கும் இயற்கையை ஆராய்ந்தபடியே நடந்தேன். எல்லா வீடுகளும் இருளில் தோய்ந்திருந்தது. எங்காவது ஒரு சில இடங்களில் மின்குமிழ் ஒளி தென்பட்டாலும் அதன் வீரியம் குன்றியதாகவே இருந்தது. நடந்தேன். நடந்தேன் . நடந்தோம் . நிறுத்திக்கொண்டாள். என்னை திரும்பி பார்த்து இருட்டி இருந்த ஒரு வெளியை நோக்கி சுட்டுவிரலை சுட்டினாள். லாந்தர் பலமிழந்து போய் இருந்ததால் , வெற்றிடத்தை நோக்கி தொலைபேசி வெளிச்சத்தை திசைதிருப்பினேன்.
வெளிச்சத்தை முன்னோக்கி பரப்பினேன். கறுத்த நிறத்தில் பொன்னிறமான வேலைப்பாடுகளுடன் இரண்டு என்னை சேர்த்தால்  உயரத்துக்கு அகன்ற கதவு. துருவோ , கறையோ சுத்தமாக இல்லை. கதவின் அடியில் நீண்ட செவ்வக அடி மட்டம் இடப்பட்டு கதைவை பிரிக்கும் பொன்னிற தகட்டில் மயில் உருவ வேலைப்பாடுகளுடன் ஓரளவு உயரமான சிறு சிறு கம்பிகள் கதவுக்கு மேல நீட்டி இருக்க அதன் முனைகளில் வேல் செதுக்கப்பட்டிருந்தது. கதவு இரண்டாக திறக்கும் பாட்டில் அமைக்கப்பட்டிருப்பதோடு பெரிய பழைய ஆனால் சீரியமாக பாதுகாக்கப்பட்ட பூட்டால் பூட்டப்படிருந்தது. ஒவ்வொரு பாதியின் நடுவிலும் நிறைந்து வழியும் நெற்குட செதுக்கல் காணப்பட்டது. அவள் என் பை தூக்கிய கையில் இருந்த திறப்பு கோவையை லாந்தரை  அருகில் வைத்துவிட்டு எடுத்து , பூட்டை திறந்தாள். லாந்தர் முழுமையாக அணைந்திருந்தது.
அவள் லாந்தரை எடுப்பாள் என்று வெளிச்சத்தை நிலம் நோக்கினேன், அவள் பொருட்படுத்தாமல் கதவை தள்ளி திறந்தாள். எந்தவித சத்தமும் இல்லால் மிக அமைதியாக கதவு தன்னை திறந்து கொண்டது. நான் லாந்தருக்கு விலகி கொடுத்து உள்ளே நடந்தேன்.
விலாசமான புற்தரை வாசலில் இருந்து ஆரம்பித்து நீண்டு சென்றது. இருளில் அங்கங்கே சிறிய சிறிய பன்னம் மரங்களும் ஓரிரண்டு பெரிய மரங்களும் முற்றத்தில் நின்றன. மங்கிய இருட்டு ஒளியில் மரங்களை இனம் காணமுடியாமல் இருந்தது. வாசலில் இருந்து சென்ற ஓரளவு பெரிய தரையைக்கொண்ட பாதையில் அவள் நடக்க தொடங்கினாள். நான் சுற்றமெல்லாம் வெளிச்சத்தை பரப்பி நிலத்தை ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தேன். அவள் ஓரிடத்தில் போய் நின்றாள். நான் வீட்டு வாசலை அடைந்து விட்டோம் என ஊகித்து கொண்டேன்.அவள் கையை சுவரில் தடவி கொண்டிருந்தாள். ஒரு வெளிச்சம் , இதை விட பிரகாசமான வெளிச்சத்தை என் வாழ்நாளில் உணர்த்ததே இல்லை. கண்கள் கூசத்தொடங்கின. அவளும் அதையே உணர்ந்திருக்க வேண்டும் கண்களை கசக்கி கொண்டாள் . மெதுவாக திறப்பு கோர்வையில் இருந்த மிகப்பெரிய திறப்பை கதவின் துளைக்குள் இருட்டு திருகினாள். அது ஒரு விற் கதவு. ஒரு செவ்வகமும் அரை வட்டமும் சேர்ந்த உருவம்,  அன்னத்தின் செதுக்கல்கள் அங்குமிங்குமாய் சிறியனவும் பெரியனவும் சேர்ந்து கலைக்கோவில் வாசல் போல தென்பட்டது. வாசலின் செவ்வக முடிவில் மாவிலைகள் போல செதுக்கப்பட்டிருந்த திரண்ட மரசெதுக்கல்கள் கொள்ளை அழகாக இருந்தன. பார்த்த மாத்திரத்தில் என் வம்சத்தை நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். கதவுகளில் ஒன்றை தள்ளி கொண்டு அவள் உள்நுழைந்தாள். அதிக ஆவலுடல் உள்ளே சென்றேன். வெளிவிளக்கின் வெளிச்சத்தில் வீட்டின் நடுப்பிரவாகம் மட்டும் தெரிந்தது. மேற்தளத்தில் செவ்வக வடிவ புகைப்படங்ள் மட்டும் மங்கியிருந்தன. செம்மஞ்சள் நிற கைப்பிடியை கொண்ட விளிம்புடைய மேற்தள தரை. மீண்டும் திடீரென வெளிச்சம்.  வீடு முழுக்க ஒளி சிதறியது. ஒரே சீரான நிரையில் பத்து கணக்கில் மின் குமிழ்கள், ஆடம்பரமானவை.
வீட்டின் பிரதான பாகத்தில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வீட்டை அந்த பேர் ஒளியில் நின்ற நிலையிலேயே ஒரு சுற்று சுற்றி பார்த்தேன். எல்லாமே அப்படியே இருந்தன, என் கனவு வீடு. இதே போல ஒன்றினைத்தான் கட்டவேண்டும் என்று பள்ளியில் படிக்கும் போது நண்பனுக்கு கீறிக்காட்டிய அதே அடுக்குகள். சிறிய கவலை மட்டும். எனது கனவு வீட்டில் எங்குமே கண்ணாடிகளால் ஜொலிக்கவிட்டிருந்தேன் ஆனால் இங்கே அவ்வாறில்லை. எல்லாமே சுவர்கள். அடைத்துவிடப்பட்டிருந்த யன்னல்கள். ஒரே ஒரு ஆளுயர கண்ணாடிமட்டும் இருந்தது. தென்பக்க மூலையோடு எட்டு அடுக்கு ராக்கையும் ஏழு அடிநீளமும் கொண்ட புஸ்தக அலுமாரி. அதன் நடுவில் தான் இந்த கண்ணாடி. என் விம்பத்தை அப்படியே தன்னுள் செதுக்கிக்கொண்டிருந்தது. அது கட்டாயம் பிரதிபலிப்பு இல்லை செதுக்கல்தான். நான் அதனருகே நகர என் சிலையும் என்னைநோக்கி வந்துகொண்டிருந்தது. கண்களில் உணர்வு வேட்கை உதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்கள் பிசைந்தபடி. கால்கள் விடுவிடுவென வேகமாக்கியது. மிக்காருகில் போனபோது அது என் விம்பம் தான் என உணர்ந்துகொண்டேன். அப்படியே அருகில் இருந்த ராக்கையில் உள்ள தோல் உறை போட்ட சதுர தடிமனான புஸ்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். தினசரி பாவனையில் இருக்கும் புஸ்தகம் போல அதன் முதல் தொடுகை உணர்த்தியது. திறந்து பார்த்தேன். Resurrection.
ஐ வில் பிரிங் தி டின்னர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அவளின் குரல் அசல் நகரத்து பெண்போல இருந்தது. விடுக்கென திரும்பாமல் மெதுவாக திரும்பி வேணாம் என்று சொல்லுவோம் என்று கண்ணாடி ஊடு அவளை பார்த்தேன் . செக்க சிவந்த அவள் உதடுகள் மெல்லிய புன்னகைத்துக்கொண்டு இருந்தது. இது வரை என்னோடு வந்த அவளா இவள்? காலையில் சூரியனை நோக்கி பூக்கும் பூப்போல என்னைநோக்கி பூத்தபடி அந்த அழகி நின்றுகொண்டிருந்தாள்.
யா சுவர் , பசிக்குது சீக்கிரம் வாங்க
கண்ணாடியை பார்த்தபடியே நின்றேன். அவள் மெதுவாக விலகி சென்றாள்.கதவை தாண்டும் வரை அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவள் போய் முடிந்துவிட்டாள். மங்கிய இருளில் அந்த பேரழகி இவ்வளவு அசிங்கமாக தெரிந்தாளே என்று இருட்டின் அமைதியை நொந்துகொண்டேன். இறக்கிய பைகளை அவள் ஒரு மேசையில் வைத்திருந்தாள். என் கையில்கிடந்த புஸ்தகத்துடன் அந்த மேசையைத்தாண்டி இருந்த நாட்காலியில் சாய்ந்து கொண்டேன். முள்ளந்தண்டு கிடையோடு அறுபது இருக்குமாறு சாய்வினை கொண்ட அந்த கதிரை சுற்றி வைரமான மரத்தாலும் நடுவில் தங்கநிற தொய்யாத இறுக்கமான பின்னலையும் கொண்டிருந்தது. உடற் களை என்னை ஆட்கொண்டது.
கண்களை மூடிக்கொண்டேன். கண்ணாடி உடைகின்ற சப்தம். நிலத்தில் எல்லாமே சிதறுண்டு தெறித்துக்கொண்டிருக்கும் சப்தம். அலறல் ஒலி. உடைந்த கண்ணாடி துகள்கள் எல்லாம் கால்களை கீறுவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழும்பி கண்ணாடியை நோக்கினேன். என்னை விறைத்து பார்த்தபடியே என் செதுக்கல். கதிரையில் இருந்து கைகளை ஓரங்களில் முண்டுகொடுத்து முள்ளந்தண்டை நிமிர்த்து எழும்பினேன். அடிமேல் அடிவைத்து கண்ணாடி அருகில் போய் என்கண்களை உற்று பார்த்தேன். அதில் ஓடியிருந்த வெறுமை பெரும் வறட்சி உள்ள வயலைப்போய் என்கண்களை ஆக்கிவிட்டிருந்தது. வாயால் ஆழ் சுவாசக்காற்றை கண்ணாடியில் படரவிட்டேன். கண்ணாடியில் என் விம்பம் மங்கிப்போயிருந்தது. கண்கள் மட்டும் அப்படியே. வெறித்தபடி. கண்களை கூர்ந்து உற்று நோக்கினேன்.
முகத்திலிருந்து சிறிய கூறிய பரு வருவதைப்போல கண்ணாடியில் இருந்து அந்த மாநிற தோற் துண்டு வெளிப்பட்டது. பயம் ஒரு புறம் இருக்க பழகிப்போன , நெருக்கமான காட்சிபோல இருந்தது. வெடுக்கென என்கண்களை பார்த்தேன். கண்ணெல்லாம் சாந்தம். வெள்ளை நிலாவில் கருந்துளை போல கண்கள் எதோ புரியாத உணர்வினால் என்னை பார்த்துக்கொண்டிருந்தன. என்கால்களில் ஏதோ முட்டுவது போல குளிர்ந்த நீரோடையில் கால்வைத்தது போல. கண்களை கீழே உருட்டினேன். வெண்ணிற பாதங்கள். குழந்தையின் விரல்கள் போல மெல்லிய பார்க்க மிருதுவான தோற்றம். பாதம் வெளியே வந்தது. கூடவே வெள்ளை மடிப்புகள். தூய்மையான வெள்ளை நிறம். கொஞ்சகொஞ்சமாக எல்லாமே. சர்வமும் வெளிப்பட்டது. அந்த மடிப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததில் எதையுமே கவனிக்கவில்லை. காற்றில் ஆடி என் முன்னங்கால்களை தொட்ட மடிப்புகள் மனதுள் சில முகில்களை உருவாக்கின. என் முன்னங்கால்கள் நிலத்தை பார்க்க குனிந்து கொண்டு துவண்டு கைகளை நெஞ்சுக்குள் மடித்து சுருட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடிய நினைவுகள். அந்த துணியில் கட்டப்பட்ட ஊஞ்சலில் இருக்கும்போது இருந்த அதே உணர்வு. அந்த சேலையின் வருடல்கள். என்னையறியாமல்
அம்மா
எந்த பதிலும் இல்லை. மீண்டும்
அம்மா
அவர் கைகள் என் மேலே பட்டிருந்ததை உணர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அம்மாவின் முகம் தான். இப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர் முகம் முழுக்க துணியால் சுற்றியிருந்தார். சுவாசிக்க மூக்கும் பார்க்க கண்களிரண்டும் மட்டுமே வெளியில் தெரிந்தன. முழுமையாக வெள்ளை நிற உடையையே அணிந்திருந்தார். முகத்தை சுற்றியிருந்த துணி கூட. அவரின் நீண்ட கேசம் கலைந்து போயிருந்தது. எந்த விசையோ தெரியவில்லை. உடனே என் தலைப்பட்டியை கழற்றி அவரின் கலைந்த கேசத்தை பின்னி கட்டிவிட்டேன். இதுவரைக்கும் பின்னி பார்த்ததுகூட கிடையாது. என் இரண்டு கண்களும் முன் முடியால் மூடியிருக்க அம்மா தன் கைகளால் என் கேசத்தை விலக்கி கண்களை பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குள் என் கையை மெதுவாக பிடித்துக்கொண்டு நடத்தி கொண்டு கதிரையை அடைந்தார். என்னை இருத்தி என்கால்களை மடியில் வைத்துக்கொண்டு அவர் கீழே அமர்ந்தார்.
என்னை பார்த்தபடியே கால்விரல் ஒவ்வொன்றாக மெடுக்கு உடைத்து கொண்டிருந்தார். நான் என் கேசத்தை கஷ்டப்படுத்தில் அமைதியாக்கி விட்டிருந்தேன். மெதுவாக என் பாதங்கள் ஈரமாவதை உணர்த்தவனாய் கைகளால் அம்மாவின் தலையை நிமிர்த்திக்கொண்டு அவரின் முகத்தை சுற்றியிருந்த வெள்ளைத்துணியை அகற்ற கைகளை கொண்டு சென்றேன். கண்ணீர் பட்ட இடமெல்லாம் ரத்த சிவப்பு நிறம் துணியில் ஊறியது. துணியை கழற்ற போவதை அறிந்த அம்மா என் கால்களை உதறிவிட்டு எழுந்து கண்ணாடியை நோக்கி ஓடினார். அம்மாவை பிடித்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை.
Resurrection இல் முதல் அத்தியாயம் முடிந்து போயிருந்தது.
என் பயணப்பைக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மூடியை திருகிக்கொண்டிருந்தேன். அந்த பெண் இராத்திரி உணவோடு அதே கறுத்த திரண்ட உதடோடு அசிங்கமாக புன்னகைத்தாள். என்னை நோக்கி வந்து முகத்தை சுற்றியிருந்த கறுப்பு துணியையும் முன் முடியையும் விலத்திவிட கைகளை நீட்டினாள். நான் வேகமாக , இன்னும் , இன்னும் அதிகமாக கண்ணாடியை நோக்கி ஓடினேன். கால்கள் எல்லாம் கண்ணாடி துகள்கள்.
வாகரை…..

குட்டை குடிநீர் – 01

உலகில் எந்த அணுவும் முயற்சி இன்றி இடம்பெயராது. சுய முயற்சியோ உந்துதலோ எதுவானாலும் சரி, முயற்சி என்ற சக்தி அங்கு பரிமாற்றப்படவேண்டும். இந்த சக்தி பரிமாற்றம் நிகழவில்லை என்றால் எந்த ஒரு விடயத்திலும் தேக்க நிலை ஏற்பட்டு விடும். ஒவ்வொன்றும் ஆங்காங்கே தேங்கிப்போனால்! தேக்கநிலை வாழ்வியல் உண்டாகும். பின்செல்லல் என்பதை விடுத்து தேங்கிநிற்றல் என்ற நிலை கருதுவோம். முன்னோ பின்னோ நகராத நிலை. பெரிய மைதானத்தில் கால்கள் அற்ற வெளியில் வைக்கப்பட்ட உதைப்பந்து போல. அதற்கும் கால்கள் இல்லாமல் உதைக்கவும் கால்கள் இல்லாத நிலை. இதை ஆராய்தல் காலக்கட்டயம். தேக்க நிலையின் விளைவுகள் கொடூரமானது. உங்கள் ஆளுமையையும் அடையாளங்களையும் இல்லாமலே ஒழித்து விடக்கூடிய வல்லமை நிறைந்தது. உங்கள் விம்பங்களை மங்கச்செய்து கண்ணாடிகளை கரும்பலகைகள் ஆக்கி அதன் மொழிகளை எழுதத்தொடங்கிவிடும் தேக்கங்கள். எழுத்தாளர்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
 
இன்றைய சூழ்நிலையில் எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதில்லை, எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை அவருக்கான மதிப்பு கிடைக்கப்பெறுவதில்லை என்று ஓயாமல் ஓலமிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஓலத்தின் பின்னணி அடுத்து நாமும் கவனிக்கப்படமாட்டோம் என்பது தான். என் அடையாளங்கள் யாரோ பத்து பேருடன் முடிவடைந்து போகப்போகிறது என்ற பயத்தில் தான். அந்த பத்து பேரை ஒரு நூறு பேருக்கு தெரியுமென்றால் அதில் நான் ஐந்து பேருக்கு தான் கடத்துப்பட்டிருப்பேன். இது தான் நிதர்சனம். காலம் காலமாக காக்கவேண்டிய இலக்கியங்கள் எல்லாம் இரண்டு தலைமுறைகளுடனேயே முடிந்து போகின்றது என்பது கவலை தான். இதை எல்லாம் எண்ணிக்கவலைப்படும் எழுத்தாளர்கள் இதற்காக என்ன வழி செய்தோம் என்று சிந்திக்கவேண்டிய நிலைமை கட்டாயமாகிறது.
இன்றைய நூறு பேரில் தொன்னூறுபேர் எழுத்தாளர்கள் தான். மற்றைய பத்துபேர் எழுத வாசிக்க தெரியாதவர்கள். இந்த தொன்னூறு பேரில் ஏன் ஒருவர்கூட மூன்றாம் தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை? ஏன் என்றால் தொன்னூறு பேரும் தொன்னூறு திசைகளில் இருக்கிறார்கள். யாரும் யாரையும் கவனிப்பதில்லை. அருகில் இருப்பவன் எழுதுகிறானா என்ற விழிப்புக்கூட இருக்காது. ஆனால் இருவரும் எழுதிக்கொண்டே இருப்பார்கள். இந்த இடத்தில் தான் தேக்க நிலை உருவாகின்றது. தேக்க நிலை எழுத்துக்களின் வலிமை மிக கொடியது. தன்னையும் அழித்து சுற்றத்தையும் அழித்துவிடும். நாங்கள் யாரையும் சிரத்தையுடன் வாசிப்பது கிடையாது. வாசித்தாலும் அதற்கான நேர் மறை விமர்சனங்களை முன்வைப்பது கிடையாது. எந்த சாராரும் இதே நிலைதான். கடுமையான , முகம்சுளிக்க வைக்கும் விமர்சனங்கள் தான் செதுக்கு உளிகள். அடுத்த இடம்பெயர்வுக்கான விசை அதிலிருந்து தான் பெறப்படுகின்றது. டால்ஸ்டாயும் செக்காவும் கார்கியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்வார்கள். அவர்களின் ஒவ்வொரு அடுத்த படைப்பும் இன்னும் செம்மையாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அடுத்த எழுத்தின் மீதான அதீதம் அவர்களை சூழ்ந்து கொண்டது. இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் இறந்த பின் மற்றோருவர் இறந்தவரின் படைப்பை அடுத்த தளத்திற்குக்கொண்டு சென்றார். இந்த ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய விமர்சனங்கள் எம்மத்தியில் அறவே இல்லை. இருக்கின்றவை கவனிப்பாரில்லாமல் ஆறு விமர்சகர்கள் காரசாரமாக விமர்சிக்க ஐந்து கேட்போர் தலையாட்டிவிட்டு போகும் துர்ப்பாக்கியநிலை மேலோங்கிவிட்டது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். எழுத்துக்கள் தேக்கநிலையை அடைத்துவிடக்கூடாது. கவனிப்போர் இல்லாத இலக்கியக்கூட்டங்கள் திருவிழாக்கள் ஆக்கப்படவேண்டும். எழுத்துக்கள் பாரபட்சம் இன்றி விமர்சிக்க படவேண்டும். விமர்சனங்கள் தான் தேக்கநிலை எழுத்துக்களை இல்லாமல் ஒழிக்கும். ஒரு எழுத்தாளன் வாழும் போது விமர்சிக்கப்படவேண்டும். இல்லாமல் போனபின்பு அர்ச்சிக்கப்படவேண்டும். அவரின் எழுத்துக்கள் காலமெல்லாம் கடத்தப்படவேண்டும்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 06 “கரகம்”

ஏன் இதையெல்லாம் பதிவிடுகிறோம்? புத்தகத்துக்கோ அல்லது திரைப்படத்துக்கோ மிஞ்சி போனால் சமூக நிலைமைக்கோ கட்டுரைகள் அல்லது விமர்சனங்கள் எழுதினால் நிறைய நாட்கள் நீடித்து நிற்கமுடியும், கூடவே மக்கள் மத்தியில் இஸ்திரமான ஒரு நிலையை அடையமுடியும். எத்தனை பேர் இதை வாசிப்பார்கள்? துடிப்பான சுவாரஸ்யமான தகவல்கள்தான் அதிக கவன ஈர்ப்பினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. சரி இது போன்ற தலைப்புகளில் எழுதுவதற்கு அனுபவமும் அடையாளமும் தேவையே, அங்கீகாரம் பெற்றவர்கள் எதை எழுதினாலும் அது கவனிக்கப்படுகிறதே, அங்கீகாரம் பெற்ற பிறகு எழுதிக்கொள்ளலாமே. இது போன்ற கருத்துக்களை நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் கொடுக்கலாமா இல்லையா என்ற மனநிலையில் இல்லை என்று சுதாகரித்து கொண்டு கிளம்பி விட்டேன்.
இன்றைய வடக்கு சூழலில் அருகிவருகின்ற ஒரு வழிபாட்டு முறை தான் கரகாட்டம். முன்னைய காலங்களில் பஞ்சம், தோற்று நோய், இயற்கை சீற்றங்களின் போது மாரியம்மனை வேண்டி வழிபட்ட ஆடலும் பாடலும் நிறைந்த வழிபாட்டு முறை தான் கரகாட்டம். இது தமிழ் மக்களுக்கே உரிய மிகப்பழைமையான நாட்டார் வழிபாட்டு ஆடற்கலை ஆகும். காலத்தினால் இது தொழிலுக்காக ஆடப்படுகின்ற கண்காட்சி ஆடல் முறையாக மாறிப்போனது. பணத்துக்காகவும் கேளிக்கைக்காகவும் ஆடப்படுகின்ற ஆடல் முறையாக இது மாறிப்போனது தமிழ் சமுகத்தின் இழிநிலையை காட்டுகின்றது. பயத்தால் புனிதமாக ஆடப்பட்ட கலையின் இன்றிய நிலை வருத்தத்திற்குரியதே. இருந்தும் சமகாலத்தில் கோயில் வழிபாட்டுடன் ஆடப்படும் கரகமும் நிலைத்தேயுள்ளது.பொதுவாக கரகம் ஆண்களுக்குரியதொன்றாகும். ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது.

ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது. (staticflickr.com)

கரத்தில் இருவகைகள் உள்ளன. ஒன்று சக்தி கரகம் மற்றையது ஆடு கரகம். முன்னையது தொன்மையானது பின்னையது தொழில்முறையானது. சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். இக்கரகம் இறை வழிபாட்டுடன் தொடர்புடையது. பக்தியின் விளைவாக எடுக்கப்படுகிறது. ஆடு கரகம் ஆண்கள் பெண்கள் என இருவகையினராலும் ஆடப்படுகிறது. இது தொழிலுக்காக எடுக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு செம்புகளும் ஆடுகரகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சக்தி கரத்தை அபிநயங்களை கூட்டியும் அம்பலமாகவும் கேளிக்கைக்காகவும் பணத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் மாற்றப்பட்டு ஊர் ஊராக ஆடு கரகம் ஆடப்படுகிறது.
வழிபாட்டுக்காக எடுக்கப்படும் காரகத்தினுள் புனித நீர் வைக்கப்படுகின்றது. உழவர்கள் ஏர்மங்கல விழாவின்போது இந்த புனித நீரையும், அதே போல பெண்கள் முளைப்பாலிகையையும், – முளைகள் உள்ள ஓடு, எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்வர். ஆண்கள் பக்தியுடன் எடுத்துச் செல்லும் புனிதநீர் அடங்கிய செம்பே கரகச்செம்பு என்றும் அதை எடுத்துச் செல்லும் உழவரை கரகக்காரர் என்றும் அழைப்பார்கள். இதே போன்ற செய்முறையில் கரகக்காரர்கள் ஒன்பது செம்புகளை எடுத்துச்செல்வார்கள்.

” ஒண்ணா கரகமடி எங்கள் முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி ” எனத்தொடங்கும் நாட்டார் பாடலில்
“ஒன்பதாம் கரகமடி எங்கள் முத்துமாரி
ஒலகம் செழிக்கவேணும் எங்க முத்துமாரி ” என முடிவுறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது வழிபாட்டு முறை என்றால் ஆடற்கரக முறை பல அடுக்குகளை கொண்டமைந்தது.
ஓரளவு தோதான அலுமினிய அல்லது கலப்புலோக செம்பு அல்லது குடம் தெரிவுசெய்யப்பட, அதனை சுற்றி பூக்களாலும் மாலைகளாலும் அலங்காரங்கள் செய்யப்படும். குடத்தினதோ செம்பினதோ வாயிலிருந்து கோபுரவடிவான- அதாவது கூம்பு வடிவ எழுப்பம் ஏற்றப்படும். அதை சுற்றி வண்ணங்களாலும் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு உச்சியில் பொம்மைக்கிளி சொருகப்படும்.

சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். (pinimg.com)

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர். ஆடுகரகம் எடுப்போர் குடம் முழுக்க மணலை நிரப்புவர். பௌதீகவியல் ரீதியில் சமநிலையை பேணுவதற்காக உள்ளடக்கம் செய்யப்படுவதாகவும், இந்து சமய ஐதீகங்களின் படி கரகச்செம்பை உடலாக உருவகித்தால் உள்ளடக்கம் உயிராக உருவகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கரகாட்டம் மூன்று நிலைகளை கொண்டது. தொடக்க நிலை, வேக நிலை மற்றும் அதிவேக நிலை என்பவை அவையாகும். ஊரவர் மத்தியில் கேளிக்கைக்கான நேரத்தினை ஏற்படுத்துவதற்காக கரகக்குழுவில் எல்லோரும் ஆயத்தம் அடையும் நிலையே தொடக்க நிலை.
கரகக் காரருடன் எல்லா வாத்தியங்களும் பொருந்த கரகக்காரர் தன்னை நேர்த்தியாக்கிக்கொண்டு கரகமும் உறுதிச்சமநிலையில் இருக்கின்றதா என சரிபார்த்துக்கொள்ளும் நிலை. நையாண்டி மேள இசையோடு எல்லா கூறுகளும் பொருந்துகின்ற ஒரு நிலையை அடையும் மட்டும் பக்கவாத்தியங்கள் கரகக்காரர்கள் என எல்லோரும் மெதுவாக அசைவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஒரு பெரிய சபாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவர்.
ஒருங்கிசைவு பெறப்பட்டவுடன் மெது மெதுவாக வாத்திய வேகத்தை அதிகரிக்க ஆட்டவேகமும் அதிகரித்துக் கொள்ளும். இது இது வேகநிலை. இதன் போது தாளசுதிக்கும் வாசிக்கும் இசைக்கும் ஏற்ப எவ்வித வேறுபாடும் தெரியாமல் கலைஞர்கள் ஆடுவர். இதனை சமநிலை என்றும் கூறுவார்கள். எல்லாம் பொருந்திய உச்சநிலையில் கரகாட்டம் அதிவேக நிலைக்கு செல்லும். ஒரு புயல் மைய்யம் கொண்டதுபோல கரகாட்டக்காரர் வலப்பக்கம் சுழன்று சுழன்று கரகம் கீழேவிழாமல் சமநிலையில்  இருக்கவும்  காண்போர் சமநிலை அற்று போகுமாறும் ஆடிக்கொண்டிருப்பர். தாளம் முறியாமலும் ஜாதிமுறியாமலும் முகமெது முதுகெது என அடையாளம் காணமுடிய படி சுழன்றுகொண்டிருப்பர்.

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர் (thenewsminute.com)

இப்பிடி ஓய்ந்த புயலில் மழையின் இடைவெளி சிரிப்பொலி போல கோமாளிகள் வந்து ஆடுவதுண்டு. இதன் நோக்கம் ஆட்டக்காரர் ஓய்வெடுப்பதாக இருக்கும். கோமாளி அவ்வூர் பேச்சுமொழியில் ஆபாசம் கலக்க நகைச்சுவையாக பேசுவான்.
கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும்.
காலில் மணிக்கச்சம் – ஆடுபவர் காலில் கட்டிக்கொள்ளும் சதங்கை, தலையில் செம்பை வைத்து தன் அங்கங்களில் சிக்கலான அசைவுகளை சிக்கலான இயக்கங்களை நடனக்காரன் மிகவும் நளினமாகவும் சாமர்தியமாகவும் வெளிப்படுத்திடுவார். இரண்டு நாதஸ்வரங்கள், ஓர் ஒத்து, தவில், தாளம், பம்பை, தமுக்கு போன்ற கருவிகளின் உதவியால் எழுப்பப்படும் நையாண்டி மேளம் என்ற ஒருவகை இசை இதற்கு பின்னணியாக திகழும், கரகமாடுபவன் தலையில் கரகத்துடன் நாத வேறுபாடுகளிற்கு  ஏற்ப தன் உடலின் பாவங்களை வெளிப்படுத்துவான். (சடகோபன் )
கரகாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அடிவைத்து மாறி மாறி வைப்பதுண்டு . இம்மாற்றம் களம் எனப்படும். கரகத்தில் உள்ளதற்கு மேற்பட்ட களக்கணக்குகள் உண்டு. இக்களம் நையாண்டி மேளத்தின் தாள கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது. எனவே நையாண்டி மேளம் இன்றியமையாததொன்றாகும். ( குணசேகரன் )
வல்வெட்டித்துறையில் ஊறணி என்ற இடத்தில் இந்திய வம்சாவழியினரால் இவ்வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனையோர் உடுக்கு நாதஸ்வரம் தவில் போன்றவற்றையே கையாளுகின்றனர். கரகம் ஆடுவதற்கென எந்த மேடை அமைப்பும் இல்லை. ஒரே ஒரு தளம் மட்டும் போதும். மக்களுக்குள் சென்று ஆடும் ஆடற்கரக வழக்கமும் உண்டு.

கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும். (tampabay.com)

கரகக் காரரின் உடையமைப்பு மிக அழகாக இருக்கும். முன்னைய காலத்தில் சட்டையும் பாவாடையும் தலையில் குடத்தை தாங்க குடுமியும் அணிந்து கொள்வர். இன்றைய காலத்தில் கீழே ஜீன்ஸ்-உம் மேலே முழங்கால் வரையே நீளுகின்ற மேற்சட்டையும் அணிவர். சில இடங்களில் திரைப்பட பாதிப்பில் பரத உடையும் அணிவதுண்டு.
கரகத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். கிழக்கு இராமநாதபுரத்தில் தஞ்சாவூரில் கரக செம்பு என்றும், திருநெல்வேலி மக்கள் கரகக்குடம் என்றும் கன்னியாகுமாரி மக்கள் கும்ப ஆட்டம் என்றும் இந்தியாவிலும் யாழிலும் கரகம், கரகாட்டம் என்று இருவகையாலும் மலை நாட்டில் செம்பாட்டம், கரக கூத்து என்றும் மட்டக்களப்பில் கரகம் என்றும் அழைப்பர்.
கரகத்தின் அடி நாதம் அற்றுப் போயிருந்தாலும் இன்றும் நிலைத்து நிற்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தோடு நடனங்கள் என்ற பகுதிக்கு விடைகொடுத்துக்கொண்டு வடக்கு நாட்டார் கதைகள் என்ற சுவாரஸ்யமான பகுதிக்குள் அடுத்த முறை செல்லலாம் என எண்ணுகிறேன். அடுத்த தலைப்புடன் சந்திக்கலாம்.

திருக்குறள் பக்கம் 12

இன்றைய சமூகம் இப்படி இருக்கலாம், இன்றைய அரசியலை இப்படி மாற்றலாம் , இன்றைய பொருளாதார முறைமைகளை இவ்வாறு சீர்செய்யலாம் , மனதை இதன் மூலம் தூய்மைப்படுத்தலாம் , இப்படித்தான் எழுதவேண்டும் , இதைத்தான் செய்ய வேண்டும் , இன்னும் இதை சேர்த்திருக்கலாம் என்று எண்ணற்ற கருத்துக்களை கொண்டோரை கொண்டமைந்தது தான் எமது சமூகம். பணக்காரன் ஏழை மத்தியஸ்தன் என்ற பேதமே இல்லாமல் எல்லோரும் ஆளுகின்ற சொத்துதான் இந்த இ னாவில் தொடங்கும் இம்சைகள். உலக அரசியலில் இருந்து ஆழ்மன சிருஷ்டிகள் வரை உள்ள பிரச்சனைகளுக்கும் நிதர்சனங்களுக்கும் எம்மவரிடம் மருந்து இருக்கும். உந்திவிட சொற்கள் இருக்கும். விசை இருக்காது.

எங்களை மாற்றிஅமைத்துக் கொள்ள அவர்களிடமும் எல்லா விதமான கருதுகோள்களும் இருக்கும். மிக வேகமான மிக இலகுவாக எங்கள் இலக்குகளை அடைய அவர்களிடம் சமன்பாடுகள் கொட்டிக்கிடக்கும். எம்மை புத்தனாக்கும் தத்துவாந்தங்கள் அவர்களிடம் விரிந்துபோய் இருக்கும். இது எல்லாமே சொற்களாய் காற்றிலும் காகிதத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
காற்றோ காகிதமோ சமன்பாடுகளைத்தான் சொல்லும், பிரதியீடுகளை அல்ல. உந்த விசை சொல்லில் இருக்கும் ஊதக்கூட முடியாத அவர்களின் சொற்களை கேட்டல் எளிது தீர்த்தல் கடிது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். ( குறள் 664 )
வாய்ச்சொல்லில் வலிதாவதெல்லாம் செயலில் நிறைவுறுவது எளிதல்ல.

தவிப்பு

என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது,
ஊரில் நீண்ட கடற்கரை இருந்தது,
உளக்கி உளக்கி
மண்ணை பதப்படுத்திக்கொள்கிறேன்,

எப்போதோ வரப்போகும்
பஞ்சத்திற்காய்.

காவி

சமர்ப்பணம் செய்யும் முன்பே
சாம்பலாகிப்போன
காகிதங்கள் ,
உச்சியில் இட்ட
குங்கும சிவப்பு ,

இருட்டில்
ஒழித்து வைக்க முயன்ற
எல்லாமே தீப்பற்றிகொள்கின்றன
குங்குமம் சாம்பலாக்கிக்கொண்டிருக்கின்றது

திருக்குறள் பக்கம் 11

இன்று ஆனந்த விகடனில் வந்திருந்த ஜெமோ எழுதிய அசோகமித்திரன் பற்றிய அனுபவ பகிர்வுபோன்றதொரு கட்டுரையை வாசித்தேன். எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஒரு மனிதன் இவ்வளவு அவா வைக்கமுடியுமா என்று என்னை அசோகமித்திரன் என்னும் ஆளுமை வியப்படைய செய்திருந்தார். இந்த அவா கொடிய வறுமையையும் கண்டுகொள்ளாமையையும் தாண்டி பயணித்திருந்ததை எண்ணும் போது இலக்கியத்தில் இன்புறல் என்பது எவ்வளவு இனிமை என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
” போறச்சே ….. நர்மதா பதிப்பகம் போய் ‘இன்று’ நாவல் ஒரு காப்பி வாங்கிட்டு போங்க . யாருமே வாங்கிறதில்லேன்னு ராமலிங்கம் வருத்தப்பட்டார்.” – அசோகமித்திரன் ஜெமோக்கு.

அமி மறைந்த நாள் அன்று “நிறங்கள் குருட்டுத்தனமுள்ளவை.” என பதிந்திருந்தேன்.அவரின் வண்ணங்கள் எதுவுமே பணத்தை பார்த்தவை அல்ல.
எழுத்தாளருக்கு என்று மட்டுமல்ல அனைத்து துறை சார் வல்லுனர்களும் அப்படித்தான். சமாந்தர ஊதியம் தரும் ஆதாயம் இல்லை என்றால் வாழ்வு துன்பியல் தான்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. ( குறள் -374 )
ஏதோ ஒரு வண்ணம் எஅதோ ஒரு குருட்டுத்தனம் உடையது தான்.

அடங்கிப்போகும் சலசலப்புகள் – கவிதா பாரதி

( 5.4.17 ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதா பாரதியின் கட்டுரைக்கான விமர்சனம்)
தலைப்பை பார்த்தவுடனேயே வாசித்துவிடவேண்டும் என்ற எண்ணம் உள்ளூறியது. “ஆண்பால் பெண்பால் அன்பால் ” என்று வெள்ளை , கறுப்பு , வெள்ளை என்ற வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது தலைப்பு. இந்த குறியீடு பெண்ணியத்தின் இருள்மையை நோக்கிய வழமையான கட்டுரை என்ற சலிப்பையும் ஏற்படுத்தவே செய்திருந்தது, பழக்கப்படாத எழுத்தாளர் வேறு – கவிதா பாரதி.
கதையையும் கருத்தையும் பின்னணியையும் தேக்க நிலை பெண்ணியத்தையும் அதன் தீர்வுகளையும் ஒரு சலனமற்ற நீரோட்டம் போல பின்னி பின்னி குழைத்து தந்திருக்கின்றார் கவிதா பாரதி. பாரதியையும் வள்ளுவனையும் உதாரணமாக ஆரம்பத்தில் எடுத்தாளப்படும் போது காலம் கடந்த இலக்கிய கட்டுரையோ என்றிருக்கும் போது அப்படியே சமகாலத்துக்குள் குதித்தது முகவுரை. மூத்த ஆண்மகனாக தன்னை சித்தரித்து கொள்ளும் சுய அனுபவக்கதையினூடு கட்டுரை விரிகின்றது. கிராமத்தில் காணப்படுகின்ற ஆண் பெண் சமத்துவமின்மை , ஒரு மூத்த ஆண்மகனை எப்படியெல்லாம் அல்லலுறச்செய்யும் என்ற நிதர்சன நோக்கு பாராட்டுக்குரியது. அந்த ஆணின் மனநிலை பிறழ்வுகள் என்பதை விட மனநிலை விரிவுகளை கூறும் இடங்களில் வாசகனின் தன்னிலை சார் உணர்வுகள் தூண்டப்படுகிறது. வாசிப்பில் என்னை படம்போட்டு கட்டிய உணர்வுநிலை தொடர்பை அது ஏற்படுத்தி இருந்தது.
பால்யத்தில் ஏற்படுகின்ற முதல் காதலையும் அதன் விறுவிறுப்பையும் பற்றிக்கொண்டு நகர்கின்ற கதையோட்டம் வழமையான காதல் கதைகள் கொடுக்கின்ற இழுவை நிலையை ஏற்படுத்தியது. இருந்தும் முடிவாக கூறவிழைந்த கரு மிக முக்கியமானது.
” காதலிக்கும் போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப்படுத்தினீங்க. அதுக்கு பிறகு அவன் வாழ்க்கையைத் தேடிப்போகும் போது அவனைக்கையை பிடிச்சு கூட்டிட்டு போகலேயே. தோற்றுப்போன மைதானத்துல அப்பிடியே விட்டுட்டுபோய்ட்டிங்களே ” என்று இறந்த நண்பனின் முன்னாள் காதலி அவளை சந்திக்கும் கதைசொல்லிக்கு கூறுவதை உலகத்துக்கு சில நுண்ணிய பொருட்செறிவுள்ள கருத்துக்களை விட்டு செல்கிறாள். இதில் வெளிப்படையான கருத்துக்களை விட உள்ளூர ஓடுகின்ற தன்னிலை நியாயப்படுத்தலும் நண்பர்கள் என்ற சக்தி தடப்பிறழ்வான நிலையை எதிர்கொள்ளும் பிழையான வழிப்படுத்தலுமே தென்படுகின்றது. துண்டாக ஒன்றை கூறுகின்ற படிம நிலையை அந்த கூற்று ஏற்படுத்துகிறது. தனிமையில் விளைகின்ற தூண்டுதலின்றிய எந்த உணர்வுக்கும் , சரியான தன்னிலை மருந்து கட்டாயம் இருக்கும் என்பதாகும்.
கதை சொல்லலில் ஏற்பட்ட சலிப்பை இந்த கரு ஓரளவு தாழ்த்திவிடுகிறது. காதலர்களை விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும் தன்மை ரசிக்கக்கூடியவாறு உள்ளது. பின்னால் அவள் கூறுகின்ற தன்னிலை நியாயப்படுத்தல்கள் இந்தியாவின் சமூக பின்னணியை காரணம் காட்டியும் பெண்மையின் விநோதங்களை காரணம் காட்டியும் தன்னை தப்பித்துக்கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டவை போல தென்படுகின்றது. தலைப்பை தாக்குகின்ற போக்கினை உண்டுபண்ணுகின்றன.
கதைசொல்லி அப்படியே தன்வயதினை குறைத்து கொண்டு அடுத்த அனுபவத்திற்குள் செல்லுகிறார். அதே வழமையான பேயோட்டும் கிராம பின்னணியில் கதை நகர்கிறது. கதை நகர்தலில் பாவிக்கப்படுகின்ற மொழியின் தன்மை வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான எந்த விரிசலையும் ஏற்படுத்தாமல் கூட்டிசெல்கின்றது.
” பிடிப்பவளாகவும் பிடிக்கப்பட்டவர்களாகவும் அவற்றை ஓட்டுபவர்களாகவும் பெண்களே இருந்தனர். ”
” சொல்லப்போனால் இன்றைய தேதியில் விரட்டப்படவேண்டிய பேய்கள் எல்லாம் வாழ்வது, கத்தியும் ஆசிட் பாட்டிலுமாக திரியும் ஆண்களின் உடல்களில் தான்.”
என்னதான் இருந்தாலும் இதில் பெண்களின் அடக்குமுறையிலிருந்து அவர்கள் மிகச் சரியாக மீள்வதாக கூறுகின்ற இடங்கள் உரசிப்பாக்க வேண்டியவை. இலங்கையில் ஏற்படுகின்ற பெண் தற்கொலைகள் எல்லாம் சரியான முடிவுகள் தானா என்று வாதம் உருவாக்குகின்ற போது எதிர்த்து ஆண் தற்கொலைகளை முன்வைப்பவர்கள் இரு பால் தற்கொலைக்கான பின்னணியை ஆராய்தல் உசிதமாகும்.
கட்டுரை ஒன்றின் உயிர்ப்பு புள்ளி தான் கட்டுரையின் தரத்தை தீர்மானிக்கும் என்பது எனது கருதுகோள். அந்த வகையில் இருவேறுபட்ட உணர்வுகளோடு ஒரே களத்தில் சலசலத்துக்கொண்டிருந்த இரு கோண பெண்ணிய நோக்கு போராட்டம் என்ற கடலுள் சேரும் போது அதன் சலசலப்பு அற்றுப்போய் , அது கொண்டுவந்த கருத்துக்குவியல்கள் சிதறடிக்கப்படுகின்றன. ஈழப்போரினை அனுதாப குறியீடாக்கி அதில் பள்ளி கொள்ளும் சமகால ஈன இலக்கிய பதிவுகளுள் பெண்ணிய போராட்டத்தை நிர்வகிக்கும் பெண் போரளிகளை மையப்படுத்திய நகர்வு கட்டுரையின் உயிர்ப்பு புள்ளியாக அமைந்துவிடுதல் சிறந்த கட்டுரைக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்துகிறது. முன் இரு கதைகளிலும் ஏற்பட்ட தொய்வு குறித்த விமர்சனத்திற்கு பதிலளிப்பது போல, முன் கதைகள் விறுவிறுப்பிற்காக எழுதப்பட்டவை அல்ல என்ற புரிதலை உருவாக்குகின்றன. காதல் , பற்றுதல் , போராட்டம் என மூன்று மனநிலை பதிவுகளையும் வரலாறுகளாக சுமந்துகொண்டு சமகாலத்துக்குள் நுழைகிறது நிறைவுரை.
சமகால போராட்டங்களுள் பெண்ணின் பங்கினை மரீனா போராட்டத்திலும் சாந்தன், பேரறிவாளன் , முருகன் மரணதண்டனை ரத்து சம்பந்தமாக கோயம்பேடு கல்லூரிமாணவிகள் போராட்டங்களை உதாரணப்படுத்தி உறுதிசெய்துகொள்கிறார். பெண்கள் இன்று இன்னும் போராட்டக்குணம் அதிகரித்தவர்களாக காட்டுகிறர். அப்படியே தலைகீழாக்கி பெண்ணின் பாதுகாப்புக்குள் ஒரு தந்தையாக தன மனநிலையை வெளிப்படுத்தி கட்டுரையை முடித்துக்கொள்கிறார்.
” இதே நேரம் திருவனந்தபுரத்தில் ஏதேனு ஒரு சாலையை கடக்கத் தயங்கும் என் மகளை , இதேபோல் பத்திரமாக அனுப்பிவைக்கும் ஒரு வாகன ஓட்டிக்கு செய்யும் பதில் மரியாதையாகவே இதை நான் கருதுகிறேன்.”
கூடவே அங்கங்கே இருக்கிற கவிதை வரிகள் என்பதை விட உணர்வெழுத்துக்கள். கட்டுரையின் போக்குக்கு இடையூறு தராத தகுதியான வரிகளை எழுத்தாளர் சேர்த்திருப்பது வாசிக்க பொருந்துதலாகின்றது. கப்டன் வானதி எழுதிய எழுதுங்களேன் என்ற கவிதை என்னை மிக பாதித்தது. அதிலும் இந்த வரி கூறும் துயரம் உச்சரிப்புகளை ஈரமாக்குகின்றன.
“ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வரமுடியவில்லை
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால் ”
கட்டுரையை முழுமையாக வாசித்த பிறகு கவிதா பாரதியின் எழுத்தின் மீதான பற்றுதல் உண்டாகிறது. வாசகனை வழிப்படுத்தி கருத்தை கொடுக்கும் பாணியை கைவரப்பெற்றிருக்கிறார். தொய்வுகள் அங்கங்கே தலைதூக்கினாலும் விடயப்பரப்பை சரியாக கையாண்ட விதம் அமர்த்திக்கொள்கிறது. நலமான விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய சிறு சிறு கருக்களை கட்டுரையெங்கும் சிதறவிடுகிறார்.சமத்துவ நிலை கட்டுரையாக இல்லாவிட்டாலும் பெண் என்ற தனி மனநிலை சித்திரமாக , அந்த தனி மனநிலை ஆழமான ஊடுருவல்கள் செய்ததில் கவிதா பாரதியின் ஆண்பால் பெண்பால் அன்பால் வாசிக்க சுவைக்கிறது.
04.04.2017