(1)
எனது பின்னேரங்களை அந்தப் பாறையின் கீழ் அடுக்குகளில் தான் கழிப்பேன். அகன்ற இறுக்கமான பிடிப்புகளுடன் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொண்டிருக்கும் அந்த பாறைகள் – அவ்வளவு நீளமானவை. மென்மையான துளைகளைக்கொண்ட வயல் மண்ணில் அந்தப்பாறைகள் எப்படி இவ்வளவு வீரியமாக பற்றிக்கொண்டிருக்கின்றன என்பது எனக்கு பெரும் வியப்பாக இருக்கும். சிறுவயதில் என் நண்பன் ஒருத்தன் – பாறை மண்ணில் இல்லை, மண்தான் பாறையில் இருக்கிறது என்றான். அது பெரும் புதிரை உடைத்தது போல இருந்தது. அவன் எம்மளவில் பெரும் விஞ்ஞானியாக பேசப்பட்டான். சூரியன் தெற்கே மறைகின்ற நேரத்தில் அந்த அடுக்குகளில் இருந்து, அதனைத் தொடர்ந்து தொப்பென்று வீழ்கின்ற நிலசட்டகத்தை ஒருமுறையாவது எட்டிப்பார்த்து ரசித்து வராவிட்டால் அன்றைய இரவில் மிகக் கொடிய வெறுமை என்னைத் தொற்றிக்கொள்ளும். வெறுமையில் உழன்று போய், கால்கள் விறைத்துக் கைகள் நடுங்கிப் பார்வை இருட்டி,என்னை அந்த இரவு பாடாய்ப்படுத்திவிடும். அந்த இரவின் நீட்சி ஒரு பெருவெளியின் நீளம் போல விரிந்துகொண்டே போகும். எந்தப்பக்கம் திரும்பி நடந்தாலும் ஒரே பக்கமாகவே நடப்பது போல இருக்கும். கடிகாரத்தை சில மணி நேரம் முந்தி விட்டுக் கட்டிலின் விளிம்பில் சுவரோடு போர்வையை போர்த்திக்கொண்டு எங்கிருந்தோ வருகின்ற வெளிச்சத்தில் ஒளிர்கின்ற கடிகாரத்தை விறைத்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.கடிகார இயந்திர இயக்கம், வழமையினை விட மெதுவானதாக இருக்கும். இரண்டு முட்களும் காந்தத்தின் இரண்டு முனைகள் போல ஒன்றோடு ஒன்று ஒட்டி நகர விரும்பாமல் ஊரும். கண்களை விளித்துக்கொண்டே தான் இருப்பேன். ஆனால் கனவிலும் சஞ்சாரம் செய்வேன். கனவையும் நினைவையும் என்னால் அப்போது சரியாகப் பிரித்தறிய முடியாத நிலையிலிருப்பேன். எல்லோரும் காலையில் எழுந்து விட்டப் பிறகு போர்வையைச் சுற்றி போட்டு விட்டு முகம் கழுவுவேன்.
அந்தப் பள்ளத்தை எல்லோரும் தற்கொலைப் பள்ளம் என்றே அழைப்பார்கள். நிறையக் காலமாக மனதின் அலைச்சல்களைத் தாங்க முடியாதவர்கள் அங்கே சென்று தற்கொலை செய்துவந்தார்கள். மாதத்தில் ஒருமுறையாவது அவ்விடத்தில் ஒரு பிணம் கிடக்கும். சுற்றி நாலைந்து பேர் நின்று ஒப்பாரி வைத்துக்கொண்டு நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிறிது நேரத்தில் அவ்விடம் பழைய நிலைக்குத் திரும்பி விடும். அங்கு போலீசார் நின்று விசாரணை செய்வதை நான் பார்த்ததே இல்லை. ஆனால் மிக அருகாமையில் ஒரு போலீஸ் நிலையம் உண்டு. எனது பாட்டி இப்படியான தற்கொலைகள் ஒரு சடங்கு என்பார். அதைச் சொல்லும் போது அவரின் கைகள் தானாக மேல்நோக்கி கும்பிடும். அவர் அதை தெய்வத்திற்க்கான பலியாகவே எண்ணினார். தாத்தா இதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஆண்கள் பெரும்பாலும் அவ்விடத்தில் தற்கொலை செய்வதில்லை. தாத்தா தற்கொலை பற்றி பாட்டியுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் மிகவும் கர்வமாகப் பேசுவார். புருவங்களை உயற்றி, இடையிடையே தனது பெரிய மீசையை முறுக்கி மிடுக்காக பேசுவார். காலத்தோடு மெல்ல மெல்ல தற்கொலைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சிறிது காலத்தில் தற்கொலைகள் அறவே இல்லாமல் போனது. அதன் பின்னர் கொஞ்ச காலம் யாரும் அவ்விடத்தில் பெரிதாக உலாவுவது கிடையாது. நாய்களும் பருந்துகளுமே அங்காங்கே தெரிந்தும்– மறைந்தும் கொண்டிருந்தன. நாட்செல்ல சனங்கள் குப்பைகளை மெதுவாக பள்ளத்திற்குள் எறியப் பழகிக் கொண்டனர். பின்னர் சிகரட் குடிப்பவர்கள் அவ்விடத்தை பயன்படுத்தினர். விளிம்பில் நின்று ஒருமுறை உள்ளெடுத்து ஊதித் தள்ளினால், புகை அகன்ற வெளியில் துமி துமியாக சென்று மறைந்து போகும். அவர்களின் துன்பமும் அப்படியே மறைந்து போய்விடுவதாக சிகரட் குடிப்பவர்கள் நினைக்கத்தொடங்கினார்கள். கொஞ்ச காலத்தில் அதுவும் மறைந்து போய் காற்று வாங்க வருபவர்களின் இடமாக மாறிப்போனது. கோபத்தில் வீட்டிலிருந்து பகட்டுக்காய் வெளியேறுவோர், அதிக வெக்கையை வீட்டிற்குள் உணர்வோர், நேரம் போக்க வழிதெரியாதோர் எனப் பலதரப்பட்டோரும் அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.என் அப்பா நாற்பதுகளில் சிகரட் குடிக்கப் போயிருக்கிறார். நான் இருபதுகளில் காற்று வாங்கப் போய்க்கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான் தற்கொலைப் பள்ளத்தின் கதை.
கண்கள் இரண்டையும் தெளிந்த நீரில் கழுவிட்டு கண்ணாடியில் முகம் பார்த்தேன். இரத்தத்தில் தோய்த்து எடுத்த உள்ளியைப்போல கண்கள் சிவந்திருந்தன. இரண்டு மூன்று முறை வாளிக்குள் உள்ள தண்ணீருக்குள் முகத்தை அமுக்கி, மூச்சை அடக்கி கண்களை வெட்டி வெட்டி திறந்தேன். ஓரளவு கண்களின் சிவப்பு குறைந்தவுடன் வேலைக்குச் செல்ல வேகமாக இயங்கினேன். கரும் புகை பரவ வண்டி கிளம்பியது. அப்போதெல்லாம் வேலைக்கு போவதென்றாலே பெரும்காரியம். பெரும்பாலும் மத்திம வயது ஆண்களை யாரும் வேலைக்கு அனுப்புவதில்லை. பெரும்பாலான மத்திம வயது ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். சமைத்தல், வீடு வாசல் கூட்டிக் கழுவுதல், துணி தோய்த்தல். இவை அனைத்தும் குறுகிய நேரத்துக்குள் முடிய மிகுதி நேரமெல்லாம் தூக்கம். இவற்றை என்னால் செய்யமுடியவில்லை. ஒரு துண்டு காணிக்குள் என் இளமை முடிந்து போவதை நான்விரும்பவில்லை. யுத்தம் தன் கூரிய பற்களால் எல்லோரையும் பலி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்– இது போன்ற சிந்தனைகள் அபத்தமானவை தான். இருந்தும் எனது விஞ்ஞானி நண்பன் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் எழுத்துப்பிழை திருத்தும் பணியில்– அவனின் சிபாரிசில் இணைந்து கொண்டேன். யாரிடமும் நான் என்ன வேலை பார்க்கிறேன், எங்கு வேலை பார்க்கிறேன் என்று சொல்லியதே கிடையாது. லீலாவிற்கும் தான்.
உப காதை
அன்று விடிந்தும் விடியாததுமாய் அலறி அழுகின்ற சத்தங்கள் கேட்டுகொண்டே இருந்தன. சத்தத்தின் வலிமை காதுப் பறைகள் இரண்டையும் கிழித்துவிடும் போல இருந்தது. லீலாவின் வீட்டிலிருந்து தான் வருகின்றது. அது லீலாவின் அம்மாவின் அலறல். அவளது அம்மாவின் குரல் விளையாட்டு பொம்மையின் குரலைப்போல தடித்திருக்கும். லீலாவினது அப்பிடியானது அல்ல. அவள் பேசுகின்ற வார்த்தைகள் மிக மென்மையாக காற்றின் இடைவெளிகளினூடாக கரைந்து போகும். அவளுடன் மணிக்கணக்கில் இருந்து பேசியதே இல்லை. சறத்தை சுற்றிக்கொண்டு நானும், அப்பாவும் வெளிக்கதவுக்கு அருகில் வந்தோம். லீலாவின் அம்மா மண் முற்றத்தில் தலைவிரி கோலமாய் இருந்து மண்ணை அள்ளி எற்றியெற்றி அழுதுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி நாலைந்து பேர் வாயில் கைவைதபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இதொன்றும் புதிதல்ல. எல்லாம் வயதானவர்கள். அவர்கள் சிறுவர்களாக இருந்த போது மாதம் ஒருமுறை பார்த்திருப்பார்கள். லீலாவின் அக்கா தற்கொலை பள்ளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துவிட்டார். தலை சிதறிப்போய் முக அடையாளமே இல்லாமல் பிணம் கிடந்தது. நானும் அப்பாவும் இடத்திற்கு போய் பார்க்க சில பெரியவர்கள் இறங்கி பிணத்தை சுற்றி துணியால் போர்த்தி வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஒரு மாதம் லீலா பாடசாலை வரவில்லை. அவள் அந்தக் காலங்களில் வீட்டை விட்டு வருவதும் கிடையாது. அப்போது பாடசாலையில் உயர்தரம் படித்தது நாமிருவர் மட்டுமே. அவர்கள் லீலாவின் அக்காவிற்கு அந்தியேட்டி கிரியையும் செய்யவில்லை. அவளின் அக்கா இறந்து இரண்டாம் மூன்றாம் மாதம் அப்பாவை இயக்கம் பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள். அன்றிலிருந்து இரண்டு கிழமைக்குள்ளேயே அம்மாவிற்கு புத்தி பேதலித்துப் போனது. நீண்ட காலத்திற்குப் பிறகு லீலாவின் அக்காவின் தற்கொலை தான் முதல் தற்கொலையாக இருந்தது. அதன் பின்னர் லீலாவின் வீடு இருண்டு போனது.
(11)
லீலா அவளின் வீட்டு வாசற்படியருகில் சிரித்த முகத்துடன் நின்றாள். அவளைத் தினமும் கடந்து செல்லும் போது கண்களாலே வழியனுப்பி வைப்பாள். அதில் துக்கம் நிறைந்திருக்கும். யாருமில்லா வீட்டில் புத்திபேதலித்த அம்மாவுடன் நித்தமும் வருந்துகின்ற அவள்– ஏக்கமுடன் உதடுகளால் மட்டும் எனக்காக புன்னகைப்பாள். அவசரமாக அவளைக் கடக்கும் போது கூட, அவளின் வீட்டு வாசலினூடாக தூரத்து சுவரில் தொங்குகின்ற மாலையிடப்பட்ட அக்காவின் புகைப்படமும் அதன் கீழே சாய்வு நாற்காலியில் தலைவிரிகோலமாய் சிறுபிள்ளை போல ஆடுகின்ற அவளின் அம்மாவின் உருவமும் என்னைக் கலங்கடித்துவிடும். லீலாவின் வீட்டு முற்றத்தில் இருக்கின்ற நாற்காலிகளில் இருந்து நானும் அவளும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவளின் அம்மா அழுவது சிரிப்பது தன்னோடு தானே பேசிக்கொள்வதும் அவளின் அப்பாவை நினைத்து சாப்பாடு பரிமாறுவதுமாக இருப்பார். ஆரம்பத்தில் லீலா என் கைகளை பற்றி அழ செய்தாள், நாட்ச்செல்ல அவளுக்குப் பழகிப்போனது.
அப்போதைய கால கட்டத்தில் பத்திரிகைத் தொழில் எளிதானதானதல்ல. யார் பக்கம் நின்றும் எதையும் எழுதிவிடமுடியாது. ஆமிப்பக்கம் நின்று நான்கு வரி போட்டு இயக்கப் பக்கம் நின்று நான்கு வரி போட்டு பின்னர் மக்கள் பக்கமும் நின்று நான்குவரி போட்டால் உண்மைச் செய்தியும் சம்பவமும் திரிந்து புது வடிவில் வந்துவிடும். அதையும் பத்திரிகை ஆசிரியர் தனது எழுத்துவித்தையால் இன்னொரு செய்தியாக்கிவிடுவார். பக்கம் பக்கமாக பொய்களையும் மழுப்பல்களையும் அச்சடித்தே காகிதங்களை வீணாக்கிக்கொண்டிருந்தோம். இத்தனை பொய்க்கும் எழுத்துப்பிழை பார்க்கும் அற்ப வேலை எனக்கு. ஒரு முறை தலைப்புச் செய்தியை இப்படி அச்சடித்து விட்டோம்.
“காகித விலை ஏற்றத்தால் நாளை முதல் பத்திரிகை அளவுக்குறுக்கம் செய்யபடுகிறது.”
அடுத்தநாள் காலை வேலைக்குச் சென்று பார்த்தால் இரண்டு இடங்களில் கிரினைட் எறிந்து தீய்ந்து போயிருந்தது. சில நாட்களின் பின்னர், முதலாவது இயக்கத்தால் எறியப்பட்டதாகவும் பின்னர் ஆமி தம் பங்கிற்கு மற்றொன்றை எறிந்ததாகவும் அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள். கிரினைட் எறிந்ததோடு பத்திரிகை வேலையை நிறுத்தி விடலாம் என்று முதலாளி முடிவு பண்ணியிருந்தார். ஆனால் அந்த இரவே அவர் வீட்டு சுவருக்கும் கிரினைட் எறியப்பட முடிவை மாற்றிக்கொண்டார். அன்று முதல் இருபது பக்க வார இதழ் முப்பது பக்கமாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு தரப்பிலிலும் மூன்று செய்திகள் அதிகமாக அச்சடித்து சமாளித்துக் கொண்டிருந்தோம். மொத்தத்தில் பத்திரிகை நடத்திக்கொண்டிருப்பது கிரினைட் பயத்தில் தான். மாவீரர் நாள் அன்று பத்திரிகை விசேடமாக அலங்கரிக்கவேண்டும் என்ற கோரிக்கையில் அதிகாமாக இரண்டு பக்கங்கள் மாவீரர்களுக்காக அச்சிடப்பட்டது. பத்திரிகை விநியோகிக்கும் வண்டி மாவீரர் நாள் அன்று காலை தீயில் கருகியிருந்தது. இப்படி எந்த நிலைப்பாடும் இல்லாமல் மொத்த பத்திரிகை தொழிலுக்கே அழுக்கு ஏற்படுத்தும் போக்கில் நான் வேலை செய்யும் பத்திரிகை செயற்பட்டுக்கொண்டிருந்தது.
(111)
தெளிவற்ற அவளின் முகத்திலிருந்த களங்கமற்ற புன்னகையைக் கடந்து பத்திரிகை அலுவலகத்தை அடைந்தேன்.எப்போதும் இல்லாதவாறு அன்றுதான் முதன் முதலாக தற்கொலைப் பள்ளம் சம்பந்தமாகவும் லீலாவின் அக்காவின் தற்கொலை சம்பந்தமாகவும் எழுதியிருக்கவேண்டும் என்று ஆசிரியரிடம் கூறினேன். அவருக்கு எல்லா விவரங்களும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் எதையுமே எழுதியிருக்கவில்லை. இனி எழுதப்போவதும் இல்லை என்ற முடிவில் நிச்சயமாக இருந்தார்.போர் சூழலில் இவ்வாறான சிறிய சம்பவங்கள் முக்கியத்துவம் இல்லாமல் போகின்றன, இது தகாத செய்தியென்று மூடி விட்டார்.
லீலாவின் வீட்டைத் தாண்டி ஒரு பத்துநிமிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்தால் தற்கொலைப்பள்ளம் வந்துவிடும்.சோர்வாக வேலையை முடித்துக்கொண்டு ,அவளின் அம்மாவின் விம்பங்கள் மனதின் அத்தனை மூலைகளிலும் தெறித்துக்கொண்டிருக்க அன்றைய நாளின் பின்னேரத்தை தற்கொலைப் பள்ளத்தின் பாறை இடுக்குகளில் சாய்ந்திருந்த வானத்து முகில்களை பார்த்துக்கொண்டிருந்தேன். முகில்கள் முன்னே நகர்வதும், காற்று திசை மாற பின்னே நகர்வதுமாக இருந்தன. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வருகின்ற இளம் பிஞ்சிலைகள் வேகமாக வீசிய காற்றில் சுழன்று வெளியில் அலைந்து அல்லல்ப்பட்டு பள்ளத்தினுள் விழுந்தன. இவற்றை எல்லாம் வியந்து பார்த்துக்கொண்டிருந்த விட்டு வீட்டிற்குத் தூங்கப் போனேன்.
இரவு இரண்டு மணியிருக்கும். ஜீப்களின் சத்தமும் வாகனங்களின் சத்தமும் நித்திரையைக் குழப்பிக்கொண்டு இருந்தன. கூடவே இரண்டொரு வெடிச்சத்தம் வேறு. முழுமையாக நித்தரை கலைந்து போனது. எனக்கு முன்னரே அம்மாவும் ,அவருக்கு முன்னரே அப்பாவும் எழுந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தம் சற்று உக்கிரமாக கேட்கத்தொடங்கியது. அது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து வருவதாகத் தெரியவில்லை. வானத்தின் மீது வெறுமையாகச் சுடுவது போல இருந்தது. இமை மடல்களில் பயம் பற்றிக்கொண்டது. மடல்கள் இரண்டும் கனக்கத்தொடங்கியது. ஒவ்வொரு கண் சிமிட்டலும் வலியை உண்டாக்கியது. பின்னர் காது மடல்கள், உதடு என்று மென்மையான பகுதிகள் ஒரு விதமான வலியை ஏற்படுத்தின. இயந்திரங்கள் மட்டும் இரவின் தூய்மையான காற்றினை கிழித்துக்கொண்டு, அவற்றின் மூர்க்கமான சொற்களின் மூலம் பேசிக்கொண்டிருந்தன. வாகனங்கள் வேகமாக அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருந்தன. இத்தனை வெளிப்படையான நடவடிக்கை என்றால் அது ஆமியினது தான் என்று அப்பா அடித்துகூறினார். இராத்திரி அந்த சலசலப்போடு முடிந்தது. காலையில் வெளியேசெல்ல அனைவருமே பயந்தோம். அப்பாவும் நானும் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்தோம், அம்மாவும் பாட்டியும் எங்களை பேசினார்கள். வானம் விடிந்திருக்கவில்லை. என்னதான் வெளிச்சமாக இருந்தாலும்; புகைபோல இருட்டு எங்களை சுற்றிக்கொண்டது. நாங்கள் கேற்றடிக்கு போக சந்திக்கடை சுகுமார் மாமா சறத்தை வண்டியில் இழுத்துக் கட்டிக்கொண்டு விறுவிறு என நடந்தார். அப்பா எதுவும் பேசாமல் அவரைத் தொடர்ந்து நடக்க நானும் பின்னால் நடந்தேன். சுகுமார் மாமா தற்கொலைப் பள்ளத்திற்க்குத் தான் நடக்கிறார் என்பதை நாமிருவரும் ஊகித்துகொண்டோம்.
பெரும்பாலும் எந்த வீட்டிலும் ஆட்களை வெளியே காணவில்லை. சிலர் தமக்குள்ள கிசுகிசுத்துப் பேசிக்கொண்டு, நாங்கள் செல்லும் பாதையிலேயே நடந்தார்கள். சில வீடுகளின் வாசற்படிகளில் வயதான ஆச்சிமார் தலையை சுவரில் சாய்த்தபடி மேல் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தூரத்திலேயே சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. பெரிய வாகனங்களின் சில் அடையாளங்கள் சேற்றுப் பாதையின் ஓரங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது. நெருங்க நெருங்க சன இரைச்சல் அதிகமாகிகொண்டிருந்தது. வருவதும் போவதுமாக சனங்கள் இருந்தார்கள். அங்கிருந்த பலரின் கண்கள் கண்ணீரால் முட்டியிருந்தது. அது இறப்பின் அறிகுறிதான். லீலாவின் அக்காவின் தற்கொலையில் கூட இத்தனை சனக்கூட்டம் இல்லை. எல்லோரும் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் எவருமே இல்லை. ஓரிரு கிழவிகள் மட்டுமே பெண்கள் பக்கம் நின்றார்கள். பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு அதைப்பார்க்கும் திராணியற்றவர்கள். இறப்பின் வாடை நாசிகளில் படரத் தொடங்கியது.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு போவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. யாருமே விரும்பி பார்த்துக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவராக தோளில் தொட்டு விலக்கும் போதும் அவர்களின் முகமும் கண்களும் வாயும் மூக்கும் சொக்குத் தசைகளும் கோபத்தாலும் கவலையாலும் வெளிப்படுத்தமுடியாத கலவையான உணர்ச்சிகளைக் காட்டின. அவர்களின் கண்கள் சிவப்பாக இருந்தன. அவர்களின் கால்கள் நிலையற்றுப்போய் இருந்தன. எவருமே தமக்கிடையே பேசிக்கொள்ளவில்லை. தமக்குத் தாமே பேசிக்கொண்டனர். எத்தனையோ தற்கொலைகளை கண்ட வயது போனவர்கள் கூட நொருங்கிப்போயிருந்தனர். எனக்கு முதல் சுகுமார் மாமாவும் அப்பாவும் எட்டிப் பார்த்துவிட்டு வர அவர்களின் முகத்தைப் பார்க்காமல் தற்கொலைப் பள்ளத்தை எட்டிப் பார்த்தேன்.
இரவில் கடிக்கின்ற நுளம்புகளைச் சிறுவர்கள் அடித்துக் கொன்று குவித்து வைப்பது போல, ஒரு குவியல் மனித நுளம்புகள் ரத்தசகதியில் ஊறிப்போயிருந்தன. உடம்பில் ஒரு துணிகூட இல்லால்– ஆண்கள் பெண்கள் என்று எந்த பேதமுமே இல்லாமல் சமத்துவமாய், முகங்களின் ஒவ்வொரு தசை நார்களிலும் காயங்களுடன் உடம்பின் ஏதோ ஒரு பாகத்தில் துளைத்த சன்னத்தின் துளையுடன், சீவி எடுக்கப்பட்ட காதுடன் மூக்குடன் விரல்களுடன் , தலைமுடிகள் பிடுக்கப்பட்டது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய்– பலர் ஏதோ சொல்லவந்ததைபோல ஆ வென்று வாயைத் திறந்தபடி நிசப்தமாக கிடந்தனர். கைகள் கால்களை இரண்டும் கட்டப்பட்டிருந்தன. சிலரின் ஒரு கை அவரின் ஒரு காலுடன் கட்டப்பட்டிருந்தது. ஓரிருவரின் கைகள் இன்னொருவரின் காலுடன் கட்டப்பட்டிருந்தன. ஒருத்தரின் கைகள் பின்னால் கட்டப்பட்டு கமக்கட்டு இடைகளுக்கூடாக விறகு செருகப்பட்டிருந்தது. இன்னொருத்தனின் கால்கள் இரண்டும் நேர்கோடு போல விரிந்திருந்தது. அவர்கள் எல்லோரும் ஒருவருக்குள் ஒருவர் செருகியிருந்தார். அதில் எவருமே நிர்வாணமாக இல்லை. அவர்களின் அந்தரங்கள் மறைப்பதற்கு இருக்கவில்லை. அரைகுறையாகவும் அடியோடும் சீவப்பட்டிருந்தன. பார்க்கின்ற எல்லோருமே நிர்வாணமாக நின்றோம். மறைக்கவேண்டியது எங்களின் நிர்வாணமாகவே இருந்தது. அவர்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எல்லோரினதும் இரத்தத்தின் வாடையும் ஒரு நாற்றமாகவே இருந்தது. அந்த நாற்றம் மூளைக்கு ஏறி ரத்த நாளம் ஒவ்வொன்றையும் விறைப்படையச் செய்தது. கிட்டத்தட்ட இருபது பேர் இருப்பார்கள். சரிக்குச் சரி பெண்கள். ஆண்களில் ஒரு சிலர் தாடியோடும் பலர் தாடி முளைக்காமலும் கிடந்தார்கள். பதினைந்து வயதிலிருந்து இருக்கலாம். ஒருத்தரின் முதுகுத் தோல் உரிக்கப்பட்டு ரத்தத்தில் ஊறி மெல்லிய சிவப்பாக இருந்தது. இன்னொருத்தியின் கையயொன்று கழுத்தின் பின்புறமாக சுற்றி முன்புறம் இழுக்கப்பட்டிருந்தது. சிலரின் ஒரு கண் குழிக்குள் இமை மடல் சென்றிருந்தது. ஆண்கள் பலரின் பின்பக்க தசைகளும் தோல்களும் அற்றுப்போயிருந்தது. பெருவிரல்கள் வாய்க்குள் திணிக்கப்பட்டு சிலர் கிடந்தார்கள்.
அவர்களின் உறவினர்கள் தலையை பாறையின் மீது முட்டி மோதி அழுதுகொண்டிருக்கிறார்கள். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருத்தன், வெறும் மேலுடன் கண்களில் கண்ணீர் வடிய பள்ளத்தை எட்டிப்பார்த்துக்கொண்டு நின்றான். அவனின் காற்சட்டையை ஒரு கையிலும் மயங்கிக் கிடக்கின்ற தாயின் கைகளை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு நடுவே கறுத்த பாவாடையும் நீல மேற்சட்டையும் போட்டிருந்த குழந்தை ஒன்று என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றது. அந்தப்பார்வை அவருடையது தான் – லீலாவின் அம்மாவினுடையது. முதுகில் தட்டி அப்பா வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
அன்றிலிருந்து மூன்று நாட்கள் பத்திரிகை அலுவலகத்திற்குச் செல்லவில்லை. நான்காம் நாள் சென்று அவலம் நடந்த தின பத்திரிகைத் தலைப்புச்செய்தியைப் பார்த்தேன்.
“சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகப் போகின்றன“